••Sunday•, 14 •February• 2021 00:23•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
”அண்ணா! இஞ்சை வந்து பார் அம்மாவை...” வரதலிங்கத்தின் காதிற்குள் கிசுகிசுத்தான் சதாநேசன். இருவரும் பூனை போல கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்து, அம்மாவின் அறையை நோக்கிச் சென்றார்கள்., மறைவாக நின்று அம்மாவை எட்டிப் பார்த்தார்கள்.
அம்மா படுக்கையில் அமர்ந்தவாறு, வரதலிங்கம் சுவிஷில் இருந்து கொண்டுவந்த ஆடைகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் பஞ்சு போன்ற பாதங்கள் கட்டிலிலிருந்து நீண்டு அந்தரத்தில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தன. மனம் எங்கோ லயித்திருக்க, உதடுகள் மெல்லச் சிரிப்பதும் மூடுவதுமாக இருந்தன.
அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக இன்று காலைதான் வரதலிங்கமும் மனைவியும் சுவிஷிலிருந்து வந்திருந்தார்கள். வரதலிங்கம் ஒரு பக்திப்பழம். தனது கற்பித்தல் தவிர்ந்த நேரங்களில் - சுவிஷ் கோவில் ஒன்றில், அங்கீகரிக்கபடாத மந்திரங்கள் தெரியாத, மடைப்பள்ளி ஐயராக இருக்கின்றான். அவன் அம்மாவிற்காக சுவிஷில் இருந்து விலையுயர்ந்த ஆடைகளை வாங்கியிருந்தான். அம்மா வெள்ளை ஆடைகளை அணிவதில்லை. அதே நேரத்தில் மயிர்க்கூச்செறியும் ஆடைகளையும் தெரிவு செய்வதில்லை. மெல்லிய வர்ணங்கள்தான் அவர் விருப்பம். இதை ஏற்கனவே அறிந்திருந்த வரதலிங்கத்தின் மனைவி, அவருக்குப் பொருத்தமான ஆடைகளை வாங்கி வந்து அசத்தியிருந்தாள். வரதலிங்கத்திற்கும் சதாநேசனுக்கும் பின்னாலே நின்று தலையை நீட்டி மடக்கி அம்மாவை எட்டிப் பார்த்ததில் அவளுக்கு மூச்சிரைத்தது. உயரம் கட்டை என்பதால் துள்ளித்துள்ளி ஓசை எழுப்பியபடி அந்த அதிசயக் காட்சியைப் பார்த்தாள். அவளின் தொங்கலைப் பார்த்த இருவருக்கும் சிரிப்பு வர, அடக்க முடியாமல் போய்விட்டது. அதுவே அம்மாவின் செய்கைக்கு முற்றுபுள்ளி வைத்தது. நிமிர்ந்து அவர்களைப் பார்த்தார் அம்மா.
“அம்மா! நாளைக்கு நீங்கள் ஒரு ஸ்பீச் குடுக்க வேணும்” என்றான் சதாநேசன்.
“எடப் போடா நீ…” என்றார் அம்மா.
“எண்பதாவது பிறந்த நாள் அம்மா… சும்மாவே! எவ்வளவு காசு செலவழிச்சு, ஹோல் எடுத்து, தடல்புடலாச் செய்யுறம். அம்மாவின் பிறந்தநாளுக்காக பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டிலிருந்து வருகினம். நீங்கள் உங்கட வித்துவத்தைக் காட்டவேணும் அம்மா“ என்று சதாநேசன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
•Last Updated on ••Sunday•, 14 •February• 2021 00:27••
•Read more...•
••Sunday•, 31 •January• 2021 20:46•
??- - ஶ்ரீராம் விக்னேஷ் -??
சிறுகதை
கீழ்வரும் சங்கப் பாடலிலிருந்து தற்போதய காலத்துக்கொப்ப பிறந்த சிறுகதை: தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை, அத் தலைவியின் தோழியர் கேட்கும்படி இதனைக் கூறியது. கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்பழன வாளை கதூஉம் ஊரன்,எம் இல் பெருமொழி கூறித், தம் இல்கையும் காலும் தூக்கத் தூக்கும்ஆடிப் பாவை போல,மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே. - குறுந்தொகை 8, ஆலங்குடி வங்கனார் -
பொருள்:வயலில் உள்ள மரத்திலிருந்து விளைந்து விழும் இனிய பழத்தை குளத்தில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணும் நாட்டவன், என்னுடைய வீட்டில் என்னைப் பெருமைப்படுத்தும் சொற்களைக் கூறுவான். ஆனால் தன்னுடைய வீட்டில், முன் நின்றார் தம் கையையும் காலையும் தூக்கத் தூக்க, தானும் கையையும் காலையும் தூக்குகின்ற, கண்ணாடியில் தோன்றுகின்ற நிழல் பாவையைப் போல், தன்னுடைய மனைவிக்கு, அவள் விரும்பியவற்றைச் செய்வான்.
“பாருங்க மேடம்…… உங்களைத்தான்…. உங்களைத்தான்……”
திரும்பினேன்.
”அபரஞ்சி….. ”
இறந்து போனதாக கருதப்பட்ட என்னுயிர்த் தோழி.
“ரஞ்சி……………” என்னை மறந்து சத்தமிட்டேன்.
அங்கே –
சொகுசுக் கார் ஒன்றில் மிகவும் தோரணையாக தனியொருத்தியாக அவள்.
நாற்பது கடந்த நிலையிலும், முப்பதாகவே பிரகாசிக்கின்றாள். குடுகுடுப்பைக் காரர்கள் போல விடாமல் பேசும் தன்மை அவளது முத்திரை.
கொழும்பு சர்வதேச விமானத்தளம்.
•Last Updated on ••Monday•, 01 •February• 2021 06:24••
•Read more...•
••Sunday•, 31 •January• 2021 10:06•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
இந்த நாட்டில் இரவில் வானில் நட்சத்திரங்களைப் பார்க்க முடியாது.தவிர பகலில் முகில்கள் வரையும் பல்வேறான அழகிய தோற்றங்களைப் பார்க்க முடியும்.இருள் பிரியாத காலைவேளையில் மணி,இடையிடையே வானில் முகில்களின் அழகையும் பார்த்தவாறு அவசரமில்லாமல் நடந்து வந்து கொண்டிருந்தான்.சில நாட்களாக முன்னால் நடந்து போற அண்ணர்,பார்த்தாலேயே தெரியும்,ஈழத்தமிழர் என்று.அணியிற ஆடையிலே துப்பரவாக அக்கறை இல்லை.தோய்த்து தூய்மையாய் அணிந்தாலே போதும் என்ற மாதிரி சிறு கசங்கலுடன் சேர்ட்,காற்சட்டைக்குள் விடாது பறக்க விச்ராந்தியாக கை விரலில் ஒரு சிகரட் புகைய ...யாராய் இருக்கும்?மணிக்கு அறியும் ஆவல் கிளரவேச் செய்தது.அவன் இன்னும் சிறிய தூரம் நடக்க வேண்டும்.அவர் ஓடுற சிற்றூர்ந்து கராஜ்ஜுக்குள் நுழைந்தார்.ஓடு பாதையிலும்,பக்கத்திலிருந்த சிறு காணித்துண்டிலும் இறுக்கமாக சில சிற்றூர்ந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.இவனுடைய கராஜ்ஜுக்கு பெரிய வளவு இருந்தது.தவிர இருபதுக்கு மேலே ...நிற்பது வழக்கம்.
இவர் சிற்றூர்ந்து ஓட்டுனர் ,தெரிகிறது.இவன் ஓரே இடத்திலேயே நீண்ட காலமாக எடுத்து ஓடுறதாலே மற்றவற்றுக்குள் போய் பார்த்திருக்கவில்லை.அவன் வரும் பேருந்திலே சிலவேளை வருவார். முதலிலும் வந்திறங்கி இருப்பார்.விறு விறு நடை.அடிக்கடி ஒரு சிகரட் புகைகிறது.சங்கிலியாக புகைப் பிடிப்பவரா?நடக்கவிட்டு பின்னால் துரத்தி வருகிறான். ஒரு நாளும் எட்டி நடைப் போட்டு அவருடன் கதைத்ததில்லை.நடைப் பயிற்சி நடை பெறுகிறது.அவனுக்கு உடல்ப் பயிற்சி தேவை என வேளைக்கே இறங்கி நடக்கிறான்.தவற விட்ட போது அவர் விடுப்பில் நின்றிருக்கலாம்.நடந்த பிறகு ஓடுறது புத்துணர்ச்சியாக இருக்கிறது.நம்ப மாட்டீர்கள்.இப்படி இரண்டு,மூன்று மாசங்கள் ஓடி விட்டன.வாழ்க்கையில் தான் எத்தனைப்பாடங்கள்?உயர் வகுப்பைப் போல பாடங்களைக் குறைத்து விட வேண்டும் தான்.தலையில்.... கொதிக்கிற பிரச்சனைகளை இலேசிலே இறக்கி வைக்க முடியிறதில்லை.நிதானமும் வேண்டும் என்று நடக்கிறான்.வேலை முடிந்த பிறகும் இரவில் தூங்கி ஒரு விழிப்பு வருகிற போது பத்மாசனமும் போட்டு கையில் சிறிய றபர் உருண்டைகளை வைத்து 'சாந்தி,சாந்தி"என உருவும் போடுறான் .சிந்தனைகள் ஒழுங்காய் வர போராட வேண்டியிருக்கிறது.
•Last Updated on ••Monday•, 01 •February• 2021 06:25••
•Read more...•
••Wednesday•, 27 •January• 2021 11:14•
??- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -??
சிறுகதை
சிவா தனது மனைவி கலாவின் சின்னம்மா தேவராணியை அன்று பினனேரம் சென்று பார்ப்பதாக முடிவு கட்டிய விடயம் அவனது நண்பன் ஒருத்தனின் எதிர்பாராத வருகையால் தடைபட்டுக் கொண்டிருக்கிறது.
வந்திருந்த நண்பனுக்குத் தேனீர் கொண்டு வந்த கலாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைச் சிவா அவதானித்தபோது தர்மசங்கடமாகவிருக்கிறது.கலா, இலங்கைக்கு விடுதலைக்கு வரத்திட்டமிட்ட உடனேயே இந்தத் தடவையாவது தனது சின்னம்மாவைப் போய்ப் பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தனது கணவனிடம் மிகவும் அழுத்தமாகச் சொல்லி விட்டாள்.
சிவா தனது குடும்பத்துடன் நீண்ட நாளைக்குப் பின் லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்திருக்கிறான். தனது இளவயதில் சின்னம்மா தன்னை அன்புடன் பார்த்துக் கொண்டதை, கலா பல தடவைகள் அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். தங்கள் தகப்பன் லண்டனுக்கு வந்த காலத்தில் தங்களுடன் வாழ்ந்த தனது சின்னம்மா கலாவின் இளவயது ஞாபகங்களுடன் இணைந்திருப்பது சிவாவுக்குத் தெரியும்.
கலாவின் தாய் ஒரு ஆசிரியை, அப்போது தங்களைத் தங்கள் சின்னம்மா தனது குழந்தைகள் மாதிரிப் பராமரித்த விடயத்தைக் கலா சிவாவுக்குச் சொல்லும்போது அவள் கண்களின் நீர் கட்டும்.
கலா, இலங்கையின் போர் காலத்தில் பிறந்து வளர்ந்தவள். சாதாரண வாழ்க்கைமுறை தெரியாத அசாதாரண வாழக்கையுடன் வளர்ந்த தமிழ்க் குழந்தைகளில் ஒருத்தி.
இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை ஒட்டு மொத்தமாக வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் ஊசலாடிக்கொண்டிருந்த கால கட்டமது.போருக்காகப் பல இளவயதுத் தமிழ்க்; குழந்தைகளின் எதிர்காலம் சூறையாடப்பட்ட கொடிய நேரமது. உலகம் புரியாத வயதில், எதிரியுடன் போராட துப்பாக்கி தூக்கி இறப்பதை விட அன்னிய நாட்டில் கடினவேலை செய்து பிழைக்க ஓடிவந்தவர்கள் பலர்.
•Last Updated on ••Wednesday•, 27 •January• 2021 11:35••
•Read more...•
••Monday•, 11 •January• 2021 21:44•
??- ஸ்ரீரஞ்சனி -??
சிறுகதை
“சங்கர், நீங்க தனியத்தானே இருக்கிறீங்க, உங்களோடை ஒருத்தரும் இல்லைத்தானே?”
“ஓம், நான் தனியத்தான் இருக்கிறன்”
“என்ரை பெயர் ஜோசேப். நான் ஒரு லோயர், சட்ட உதவி நிலையத்திலிருந்து கதைக்கிறன். குடிச்சிட்டு வாகனம் ஓடினதெண்டும் மனைவியைத் தாக்கினதெண்டும் உங்களிலை குற்றம்சாட்டப்பட்டிருக்கு …”
“குடிச்சதெண்டு என்னைப் பொலிஸ் பிடிக்கேல்லை, அப்பிடி நான் குடிக்கவுமில்லை”
“சரி, நானும் யூனிவேசிற்றிலை இருக்கேக்கே குடிச்சிட்டு வாகனமோட்டியிருக்கிறன்தான். அது பிரச்சினையில்லை. ஆனா, பிழையை ஒத்துக் கொள்ளவேணும்… சரி, அதைப் பத்திப் பிறகு உங்கடை லோயரோடை கதையுங்கோ. இப்ப உங்கடை உரிமையள் என்னெண்டு சொல்லத்தான் நான் கோல் பண்ணினான்.”
“ஓ, ஓகே”
“பொலிஸ் உங்களிட்டை என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாதேங்கோ, நீங்க சொல்றதை உங்களுக்கெதிராக அவை கோட்டிலை பாவிக்கேலும். அவை என்னத்தைக் கேட்டாலும், லோயர் கதைக்கவேண்டாமெண்டு சொன்னவர், லோயர் கதைக்கவேண்டாமெண்டு சொன்னவர் எண்டு திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருங்கோ, சரியோ!”
“ஓ, ஓகே”
“ஆனா அவை ஏதாவது செய்யச் சொல்லி உங்களைக் கேட்டால் நீங்க செய்யோணும். அதுக்கு மறுப்புச்சொல்லேலாது. உதாரணத்துக்கு உங்கடை ரத்தத்திலை இருக்கிற அற்கோலின்ரை அளவைப் பாக்கிறதுக்கா ஊதச்சொல்லி அவை உங்களைக் கேட்கக்கூடும்.”
•Last Updated on ••Monday•, 11 •January• 2021 21:46••
•Read more...•
••Wednesday•, 06 •January• 2021 13:26•
??- குரு அரவிந்தன் -??
சிறுகதை
‘நிலா, நிலா..!’ வாசலில் நின்று குரல் கொடுத்தாள் ரதி.
குரல் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்த நிலா, பக்கத்து தெருவில் வசிக்கும் ரதி வாசலில் நிற்பதைக் கண்டாள். இரண்டோ மூன்று முறை கோயிலில் சந்தித்ததால் சினேகிதமாகியிருந்தாள்.
‘என்ன ரதியக்கா? உள்ளே வாங்கோ!’
‘நாய் குரைக்குது, கடிக்குமா?’
‘இல்லையக்கா, கட்டியிருக்குது, தெரியாதவையைக் கண்டால் குரைக்கும், அவ்வளவுதான்!’ ரதி கேற்ரைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாள். ‘குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்லுவினம்..!’ ‘நீங்கள் இதை சொல்லுறீங்க, போனகிழமை அவர் பயணத்தால வீட்டை வரேக்கையும் அவரை வாசல்ல கண்டிட்டு, யாரோ என்று நினைத்துக் குரைக்கத் தொடங்கி விட்டுது..!’
பெரிய காணியின் நடுவே கட்டப்பட்ட பெரியகல்வீடு பார்ப்தற்கு அழகாக இருந்தது. வீட்டின் இரு பக்கமும் சோலை போல வாழை, மா, பலா என்று பழமரங்களால் நிறைந்திருந்தது. முன்பக்கத்தில் பல வர்ணங்களில் அழகான ரோஜாக்கள், செவ்வரத்தைகள், நந்தியாவட்டை என்று பூச்செடிகள் அழகாகப் பூத்திருந்தன. குழாய்க் கிணற்றுத் தண்ணீர்த்தாங்கியும் உயரமாகத் தெரிந்தது.
நாயைக் கட்டிப் போட்டிருந்ததால், பயமில்லாமல் அணில்கள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. தேனருந்தத் தேனீக்கள் ரீங்காரமிட்டுப் பொருத்தமான பூக்களைத் தேடிக்கொண்டிருந்தன. பழங்களைத் தேடிக் குருவிகள் கிளைகளில் தாவிக்கொண்டிருந்தன. ஆளிருந்தும் ஆளரவம் இல்லாத வீடுபோல காட்சி தந்தது.
•Last Updated on ••Wednesday•, 06 •January• 2021 13:37••
•Read more...•
••Monday•, 04 •January• 2021 22:03•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
காலை. காங்கேசன்துறை வீதி கலகலப்பாகத் தொடங்கிவிட்டது. துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் குச்சொழுங்கை வழியாக வந்த கிருஷ்ணவேணி கோவிலை நோக்கிச் சென்றாள். பாதணிகளை வீதியிலே கழற்றிவிட்டு நின்றபடியே கும்பிட்டுக் கொண்டாள். கோபுரத்தின் உச்சிவரை நிமிர்ந்தன அவள் கண்கள். அவளைக் கடந்து போவோர் அவளை ஒருகணம் திருப்பிப் பார்க்கின்றனர். திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுதான். மெல்லிய உயர்ந்த தேகம் கொண்ட அவள், இறுக வரிந்த மயில்நீல வர்ணச் சேலையில் தங்க விக்கிரகம் போல ஜொலிக்கின்றாள். நெற்றியில் திருநீற்றின் குறியும் பொட்டும், மல்லிகை மொட்டுகள் பிரிந்து மணம் கமிழ்க்கும் மாலையுமாக – பார்ப்பவர்கள் அவளையும் சேர்த்துக் கும்பிடத் தோன்றும். தினமும் அப்படித்தான் அவள் வேலைக்குப் போய் வருவாள். யாழ்ப்பாண நகரில் தனியார் கொம்பனி ஒன்றில் இலிகிதராக வேலை செய்கின்றாள்.
பின்னர் வீதியை இருமருங்கும் பார்த்துவிட்டு, குறுக்காக வீதியைக் கடந்து எதிரே இருக்கும் பஸ் ஸ்ராண்டை நோக்கிச் சென்றாள். அங்கே அவளது தோழி இந்திரா நின்றுகொண்டிருந்தாள். அனேகமான வேளைகளில் இருவரும் ஒன்றாகத்தான் வேலைக்குப் போய் வருவார்கள். தகரத்திலான பஸ் ஸ்ராண்டிற்குள் காலை இளம் வெய்யில் அட்டகாசம் போட்டது. இருவரும் உள்ளே போய் அமர்ந்து கொண்டார்கள்.
கலகலப்பாகப் பேசும் இந்திரா இன்று அமசடக்காக இருக்கின்றாள். முகம் கூடக் கறுத்துப் போய் இருந்தது. கவலையுடன் கிருஷ்ணவேணியைப் பார்த்தாள். மெதுவாக நகர்ந்து அவள் தோள் மீது தலை சாய்த்தாள். காதிற்குள் ஏதோ ரகசியம் சொல்லிவிட்டு, தயக்கத்துடன் மொபைல்போனைத் திறந்து சில படங்களைத் தட்டிக் காண்பித்தாள்.
அகிலன் ஒரு பெண்ணுடன் நெருங்கியிருக்கும் சில புகைப்படங்கள்.
அகிலன் தற்போது அவுஸ்திரேலியாவில் அல்லவா இருக்கின்றான்!
நெஞ்சு திக்கென்றது கிருஷ்ணவேணிக்கு. திகைப்பில் படீரென அவளையுமறியாமல் மொபைல்போனைத் தட்டிவிட்டாள். பத்திரகாளியாட்டம் எழுந்தாள். தொங்கல் நடையில் வீதிக்குக் குறுக்காகப் பாய்ந்தாள். வாகனமொன்று கிரீச்சிட்டு அவளை மருவிக்கொண்டு ஓடியது. சத்தம் கேட்டு வீதியில் நின்றவர்கள் தலையில் கையை வைத்தார்கள்.
•Last Updated on ••Monday•, 04 •January• 2021 22:05••
•Read more...•
••Monday•, 04 •January• 2021 21:43•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
அவன் இயக்கத்தில் சேர்ந்த பிறகு பல்வேறு அனுபவங்களைப் பெறுவது ஆச்சரியமாக.... இருக்கிறது. மாலை நேரம்.இருள் மெல்ல, மெல்ல மங்கலாகக் கவியத் தொடங்கி இருந்தது. வீதிப்புறத்தில் சிறிய தொலைவிலிருந்து " குக் கூ ,குக் கூ ! " குயில் கூவும் குரல் கேட்டது. குயில் கூவுதாக்கும் என சீலன் நினைத்துக் கொண்டான்." என்ன ஒரு கூவல் ! ,இது , ஒரு சிறுமி ஒருத்தி குயிலைப் போலக் கூவுகிறாள். நல்ல குரல் வளம். இவளைக் கண்டுப் பிடித்து சினிமாப்பாடல்களை பாட பழக்கினால் கலக்குவாள்"என்றார் அம்மா. அம்மா,அராலிப் பள்ளிக்கூடத்தில் படிப்பிக்கிற மங்களம் ஆசிரியை .அவனும் அந்த பள்ளிக்கூடத்திலே தான் பத்தாம் வகுப்பைக் குறைத்து ஒன்பதாம் வகுப்பாக்கி இருந்த புதிய கல்வித் திட்டத்தில் படித்திருந்தான்.பிறகு எங்கெங்கோ...?அதை பிறகுப் பார்ப்போம்.சும்மா சொல்லக் கூடாது. குயிலே தோற்று விடும்.அந்த மாதிரிக் கூவல் .அவன் உடனேயே வெளியே ஓடிப் போய் வீதியில் பார்த்தான்.அது மண் ஒழுங்கை,சிறிது சென்ற பிறகு ,மற்ற ஒழுங்கையை அடைந்து விடும்.சந்தியில் குடி நீர்க்குழாய் இருக்கிறது. அது சற்றுத் தொலைவு. இருள் கூட கூடி விட்டிருந்தது. சென்று வலது,இடது பார்த்து கண்டுப் பிடிப்பது சிரமம். சிறுமி என்பதால் கூவி விட்டு ஓடி இருப்பாள். அது சரி ! ,குரல் சிறுமியின் குரல் ? என்பதை எப்படி கண்டு பிடித்தார்?.ஆச்சரியம் தான்.பெரிசுகளிற்கு இந்த விளையாட்டு சரி வராது.
தொடர்ந்து பலநாட்கள் தொடர்ச்சி ...என்றில்லை, அந்தக் கூவல்கள் இருள் பின்னணியில் கேட்டுக் கொண்டே இருந்தன. கண்டு பிடிப்பது சுலபமாக இருக்கவில்லை. அம்மாவிற்கு நிருபர் மூளை, அந்தக் குயிற்காரி யார் என்பதைக் கண்டு பிடித்து விட்டார்." ரீச்சர் ,இவள் நல்லாய்க் கூவுவாள்" எனச் சுகந்தியை அவள் தோழி சொல்லிக் காட்டிக் கொடுத்து விட்டாள். கறுத்த சிறுமி, கறுப்பென்றால் அதிகம் கலரைச் சேர்த்து விடாதீர்கள். "நீயா ,அந்தக் குயில்"என அம்மா, அவளை ஆச்சரியத்துடன் அழைத்து விசாரித்தார். அம்மாவை எல்லாச் சின்னப்பிள்ளைகளிற்கு மட்டுமில்லை பெரிய மாணவர்களிற்கும் நன்கு பிடிக்கும்.அம்மா, படிப்பிக்க வந்த நாளே, பேருந்திலிருந்து உள்ளே நன்கு தள்ளி இருக்கிற பள்ளிக்கூடத்திற்கு நடந்துச் செல்கிற போது, சிறுவர்களிற்கு யார் எனத் தெரியாது கிராமத்திற்கு வந்திருக்கிற புதியவராக இருக்க வேண்டும் என நினைத்த உதயன், தனது நண்பர்க்குழாமுடன் ஒரு மதகிலிருந்து கடந்து போக "மெல்லப் போ, மெல்லப் போ மெல்லிடை என்னவாகும்.."எனப் பாடினான்.
•Last Updated on ••Sunday•, 31 •January• 2021 10:11••
•Read more...•
••Monday•, 28 •December• 2020 22:29•
??- குரு அரவிந்தன் -??
சிறுகதை
‘அண்ணி வந்து சாப்பிடுங்களேன்..!’
‘இல்லை நிலா எனக்குப் பசிக்கலை..!’
‘இரண்டு நாளாய் நானும் பார்க்கிறேன், மதியம் ஒரு சாப்பாட்டோட நீங்க இருக்கிறீங்க ஏன் அண்ணி?’
‘எங்க ஊர்க் கோயில் உற்சவம் நடக்குது அதுதான் விரதம் இருக்கிறேன்..!’ என்றாள் சுபா.
‘சரி, காலையில சாப்பிடாட்டி விரதம் என்று எடுத்துக்கலாம் அதுக்காக நீங்க இரவிலும் சாப்பிடாமல் இருக்கணுமா?’
சுபா சிரித்துச் சமாளிக்கப் பார்த்தாள்.
‘டயற்ரிங் என்று சொல்லப் போறீங்களா..? அளவாய், அழகாயிருக்கிறீங்க, என்னுடைய கண்ணே பட்டிடும் போல இருக்கு, இதைவிட மெலிஞ்சால் வடிவாயிருக்காது அண்ணி, ஏன் சாப்பிறதில்லை?’
சுபா எதுவும் சொல்லாது மௌனமானாள்.
‘அண்ணா ஏதாவது சொன்னானா, சொல்லுங்கண்ணி..?’
சுபா சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டுக் கேட்டாள்,
‘உங்கண்ணா சாப்பிடாமல் பட்டினி இருப்பாரா?’
‘அவரா, பசிதாங்கவே மாட்டார்..! ஒரு நேரம் சாப்பாடு தாமதமானாலே கொதிச்சுப் போயிடுவாரே’
•Last Updated on ••Monday•, 28 •December• 2020 22:34••
•Read more...•
••Monday•, 30 •November• 2020 22:14•
??- குரு அரவிந்தன் -??
சிறுகதை
மகப்பேறு மருத்துவமனைப் படுக்கையில் அரைகுறை மயக்கத்தில் இருந்த நிருவிடம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ்.
குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தவள், ‘செல்லக்குட்டி கண்ணா’ என்று குழந்தையின் கன்னத்தில் மெதுவாக முத்தம் ஒன்றைப் பதித்து விட்டுக் குழந்தையை அணைத்து முகம் புதைத்து விசும்பத் தொடங்கினாள்.
‘அம்மா குழந்தையைக் கொடுங்க நான் வெச்சிருக்கிறேன்’ என்றாள் இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தாதி.
‘நோ.. நோ.. இவன் அவரோட செல்லக் கண்ணன், அவர் வரும்வரை நான்தான் கவனமாய் வெச்சிருப்பேன்’ ஒரு மனநோயாளிபோல வீரிட்டவள், மறுகணம் குழந்தையைத் தனக்குள் இறுகவணைத்தபடி மௌனமானாள். பொதுவாகப் பிரசவம் முடிந்ததும் சில தாய்மார் இப்படியான ‘போஸ்ட்பாட்டும்’ மனநோயால் பாதிக்கப்படுவதுண்டு என்பதைத் தாதி அறிந்தேயிருந்தாள்.
‘என்னம்மா, என்னாச்சு..?’ என்ற தாதியின் ஆதரவான கேள்விக்கு, வேதனை தாங்காது உடைந்து போயிருந்தவள், அப்படியே கொட்டித் தீர்த்தாள்.
என்றுமில்லாதவாறு அதிகாலையில் செல்போன் சிணுங்கிது.
படுக்கையில் இருந்தபடியே திரும்பிப் பார்த்தேன். அவருடைய செல்போன்தான் அழைத்தது. அவரோ அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரது தூக்கத்தைக் கெடுக்காமல் செல்போனை எடுத்துப் பார்த்தேன். மருத்துவமனையில் இருந்துதான் அந்த அழைப்பு வந்திருந்தது.
•Last Updated on ••Monday•, 30 •November• 2020 22:16••
•Read more...•
••Monday•, 23 •November• 2020 00:46•
??- தேவகாந்தன் -??
சிறுகதை
அதுவரை பக்கத்திலிருந்த நண்பன் முருகவேல் சிறிதுநேரத்திற்கு முன்னர்தான் டான் தொலைக்காட்சியில் செய்தி பார்க்கவென உள்ளே எழுந்துபோனான். அவனுக்குமே அந்த உந்துதல் எழுந்தது. பின் ஏதோவொரு சலிப்பில் பேசாமல் இருந்துகொண்டான்.
பகலிலே அந்த இடத்தில் தோன்றியிருக்கக்கூடிய அவசங்கள், வெளிச்சம் படராது இருள் விழுந்த முற்றத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவனிடத்தில் அப்போது எழுந்திருக்கவில்லை. உருவத்தை இருட்டில் கரைத்துவிட்டு இருப்பதுபோல் ஓர் நிறைவு.
அவன் வானெறிந்த நட்சத்திரங்களும், அதன் மேலலைந்த மேகங்களும் கவனமின்றிக் கண்டபடி இருந்தான். திடீரென கோவில் வளவு மரக்கூடலிலிருந்து ஒரு சாக்குருவி அலறியடித்துப் பறந்தது. அவனது உடம்பு அந்தத் திடீர் சத்தத்தில் லேசாக ஆடியது. கடந்த சில தினங்களாக அவ்வாறுதான் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு இருக்கின்ற ஒரு ஆத்துமம் அந்தமாதிரித்தான் எந்தவொரு திடீர்ச் சத்தத்திலும் சந்தடியிலும் திடுக்காட்டம் அடையுமோ?
கீழ் வான் மூலையிருளினுள் சாக்குருவியின் கதறல் போய் மறைய, சூழல் அவதானத்துக்கு வந்தது. சிறிதுநேரத்தில் தெருவில் நிலந்தீற்றிய காலடிச் சத்தம் அவன் கேட்டான். அது மெலிந்து மெலிந்து வந்து வேலிக்கு வெளியே ஓரிடத்தில் சடுதியாய் நின்றதும் தெரிந்தது.
வேலியின் கீழ்ப் பகுதியிலுள்ள முட்கம்பி வரிகளுக்கு மேலாக பக்கப்பாட்டில் தகரங்கள் அடித்திருந்தன. போன மாரியின் கடும் காற்றுக்கு அதில் நட்டிருந்த காட்டுக்கட்டை சரிந்து தகர இணைப்பு ஊடு விட்டிருந்த இடத்தில்தான் காலடி அரவம் அடங்கியிருந்தது. அவனுக்கு எழுந்து உள்ளே போய்விடுகிற அவதி. ஆனாலும் இருளில் இன்னும் நம்பிக்கைவைத்து அவன் விநாடிகளை விழுங்கிக்கொண்டிருந்தான்.
•Last Updated on ••Tuesday•, 24 •November• 2020 11:00••
•Read more...•
••Sunday•, 22 •November• 2020 14:43•
?? - குரு அரவிந்தன் -??
சிறுகதை
அமீரா தூக்கத்தில் வீரிட்டபடி எழுந்தாள்.
‘என்னம்மா என்னாச்சு கனவு கண்டியா?’ அருகே படுத்திருந்த தாய் அவளை அணைத்து ஆறதல் சொன்னாள்.
‘டாட் சொன்ன சொல்லைக் காப்பாற்ற இல்லையேம்மா’ என்று சொல்லி விம்மி விம்மி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் தூங்க வைத்தாலும் மெலோடியால் தூங்க முடியவில்லை. மகளை மட்டுமல்ல, தன்னையும் ஏமாற்றி விட்ட துயரத்தில் குலுங்கிக் குலுங்கி அழுதாள். வேகமாக நடந்து முடிந்த எல்லாமே ஒரு கனவு போல அவளது கண்ணுக்குள் நிழலாடியது.
19-3-2020 – நியூயோர்க் நகரம்.
வேலைக்கு வரும்போதே அவன் இருமிக்கொண்டுதான் வந்தான். இவனுடன் ஒன்றாக வேலை செய்பவன் நேற்றும் இருமிக்கொண்டு இருந்ததை இவனால் சகிக்க முடியவில்லை. இன்று அவனுக்குச் சாதுவான ஜுரமும் இருந்தது. ‘இந்தா பார் வேலை வேலை என்று அலையாதே, சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம், புரியுதா..? பேசாமல் இரண்டு நாள் ஓய்வெடுத்துக் கொள், நான் சமாளிக்கிறேன்’ என்று சொல்லி அவனைக் கட்டாயப் படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
சாதாரண புளு ஜுரம் என்று நினைத்துதான் அவனை ஓய்வெடுக்கச் சொல்லியிருந்தான். அவசரமாகச் செய்து முடிக்க வேண்டிய வேலை என்று முதலாளி ஏற்கனவே சொல்லி அனுப்பி இருந்ததால், இவன் கட்டாயம் வேலைக்குப் போகவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தன்னை ஆளாகிக் கொண்டான். 25 வருட தொழில் அனுபவம் இவனுக்கு இருந்தது. தொழில் நிமிர்த்தம் ரொலாண்டோ சிலநாட்களாக அரேன்ஞ்கவுண்டியில் இருந்து நியூயோர்க் மான்ஹற்ரன் நகரத்தில் உள்ள மருத்துவமனைக்குத் தொலைதொடர்பு சாதனங்களை பழுதுபார்ப்பதற்காகச் சென்று வந்தான்.
•Last Updated on ••Monday•, 30 •November• 2020 22:15••
•Read more...•
••Tuesday•, 27 •October• 2020 23:45•
??- ஶ்ரீரஞ்சனி -??
சிறுகதை
என்ர நெஞ்சில தலைவைச்சுப்படுத்திருந்த சுமி இன்னும் விசும்பிக்கொண்டிருந்தாள். ஒரு கையால அவளின்ர தலையக் கோதினபடியும், மற்றக் கையால அவளை அணைச்சபடியும் அவளருகில நான் படுத்திருந்தன். எனக்கும் அழுகைவந்தது. மனசு படபடத்தது. திரைச்சீலைகள் அங்குமிங்குமா ஆடிக்கொண்டிருந்துது.
“சொறி குட்டி, அம்மா அடிச்சிருக்கக்கூடாது, கத்தியிருக்கக்கூடாது… சொறியடா கண்ணா, இனி அம்மா இப்பிடியெல்லாம் செய்யமாட்டன்… அழாதையடா குஞ்சு…” மிகக் கனிவுடனும் குற்றவுணர்வுடனும் திரும்பவும் சொன்னன்.
“எனக்குச் சரியாய் தண்ணி விடாய்ச்சதம்மா. அதுதான் பைப்பைக் கண்டோனை …”
“ஓமடா, எனக்கு விளங்குது. ஆனா என்ன நடந்தாலும் எனக்கது தெரியோணும். அம்மாக்கு என்னத்தை எண்டாலும் சொல்லலாமெண்ட துணிவு உனக்கிருக்கோணும்.”
சுமி தலையை ஆட்டினபடி என்னை இறுகக் கட்டிக்கொண்டாள்.
“ம்ம், ஓகே, புத்தகம் வாசிப்பமா குட்டி? பிள்ளையின்ரை சின்னக் காலாலை ஓடிப்போய் விருப்பமான ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வாடா.”
ரொபேட் மஞ்சின் ‘லுக் அற் மீ’ வாசித்து முடிந்ததும் பழையபடி அவள் கலகலப்பானாள். பிள்ளைகளின் சிறப்பே இதுதான். மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாயிருந்துது.
“குட் நைற் சுவீட்டி,” அவளின்ர நெத்தியில முத்தமிட்ட நான் அவளை வடிவாய்ப் போத்திவிட்டு அந்த அறையைவிட்டு வெளியேறினன்.
•Last Updated on ••Tuesday•, 27 •October• 2020 23:53••
•Read more...•
••Friday•, 23 •October• 2020 22:35•
??- முனைவர் அரங்க.மணிமாறன் -??
சிறுகதை
“வாட் நான்சென்ஸ்! உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு மிருதுளா? என்று மனைவியிடம் கொந்தளித்தான் கணவன் வருண்.
“ஏன் இப்படி கோபப்படுறீங்க? கொஞ்சம் அவசரபடாம, கோபப்படாம, பொறுமையா யோசிச்சிப்பாருங்க”.
“இல்ல மிருதுளா நான் கோபப்படவும் இல்ல, அவசரபடவும் இல்ல! நான் ரொம்ப கூலதான் இருக்கேன். ஆனா நீ சொல்லற விஷயம் கொஞ்சமாவது நியாமா? சரிபடுமா? நடக்குமான்னு நீயே யோசிச்சிப்பாரு!”
“வெளியில யாராவது கேள்விபட்டாக்கூட, நம்பள பத்தி என்ன நெனப்பாங்க? ரொம்ப கேவலமா பேசுவாங்க! என்னை பத்தியும், உன்ன பத்தியும் என்ன நெனப்பாங்கன்னு கொஞ்சமாவது யோசிச்சிப் பாத்தியா? நீ என்ன சமாதானம் சொன்னாலும் நியாயம் சொன்னாலும் என்னால ஏத்துக்கவே முடியாது!”
“ஏங்க நாம வாழறது, நமக்காகத்தாங்க. ஊரு உலகத்துக்காக இல்ல! நாலு பேரு என்ன சொல்லுவாங்க நாலு பேரு என்ன நெனப்பாங்கன்னு, அதையே யோசிச்சி பயந்துகிட்டிருந்தா நம்ம வாழ்க்கைய நிம்மதியா வாழ முடியாது. இத மட்டும் உறுதியா நெனச்சிக்குங்க! "
"அதில்ல மிருதுளா, இது நீயோ நானோ மட்டும் சம்பந்தபட்ட விஷயமில்லையே? சம்பந்தபட்ட ரெண்டு பேரின் விருப்பமும் முக்கியமில்லையா? "
"ஆமா நீங்க சொல்லறத முழுசா ஏத்துக்கிறேன்! ஆனா நாமதான் அவங்களுக்கும் சொல்லி புரியவைக்கணும்."
"சினிமாத்தனமா இருக்கு மிருதுளா நீ சொல்லறது. சினிமாவுல வேணும்னா நீ சொல்லற மாதிரி நடக்கலாம். சினிமாதானே அது கற்பனையில எடுக்கறதால வேணா ஏத்துக்குவாங்க. அதையே நிஜத்துல நடத்துனா, எள்ளி நகையாடுவாங்க. சும்மாவா சொன்னாங்க, உலை வாய மூடுனாலும் மூடலாம், ஊர்வாய மூட முடியாதுன்னு!"
•Last Updated on ••Friday•, 23 •October• 2020 23:06••
•Read more...•
••Friday•, 23 •October• 2020 21:11•
??- யோகன் (கன்பரா) -??
சிறுகதை
எட்டு மணியாகி விட்டது. இன்னும் அரியம் என்று அவர் கூப்பிடும் அவர் மனைவி அரியமலர் எழுந்திருக்கவில்லை.. யன்னல் திரையை விலக்கி வெய்யில் வந்து விட்டதா என்று பார்த்துவிட்டு உள்ளே போக திரும்பியபோதுதான் சுந்தரம்பிள்ளைக்கு கார்ப்பெட்டில் விழுந்துகிடந்த போட்டொ எதேச்சையாக கண்ணில் பட்டது. கண்ணாடி குறுக்காக உடைந்துபிரேமும் படமும் மட்டும் தப்பியது..
அரியத்துக்குத் சொல்லாமல் கண்ணாடித் துண்டுகளை குப்பைத் தொட்டிக்குள்; போட்டுவிட்டு படத்தையும் பிரேமையும் அலுமாரிக்கு மேலே வைத்தார். கண்ணாடிப் படம்உடைந்தால் வீட்டுக்கு கூடாது என்பாள் அரியம். தமிழ்ப் படங்களில் வருமல்லவா? பூவை பறித்து வந்து சாமிப் படத்தில் வைக்க அது கீழே விழும்!. அல்லது எங்கிருந்தோ வீட்டுக்குள் வரும் காற்றினால் விளக்கு ஒன்று அணையும்! இதுவும் அந்தக் கேஸ்தானோ ? பிள்ளைக்கு மனம் பதறியது. கொஞ்ச நாட்களாக ஒன்று மாறி ஒன்றாக வருத்தப் படுக்கையில் கிடக்கும் அரியத்துக்குத்தான் எதேனும் நடந்துவிடுமோ.? போட்டோ உடைந்ததை அரியத்துக்குச் சொல்லக்கூடாது. சொன்னால் யோசித்து இன்னும் வருத்தம்கூடிவிடும். அவரது அறை அரியத்தின் அறையைப் பார்த்தபடி நேர் எதிரே இருந்தது. "அரியம் அரியம் " கூப்பிட்டவாறேஅரியத்தின் அறைக்குள் செல்ல யுகலிப்டஸ் மணம் பரவிய நீராவி மூக்கினுள் அடித்தது. இரவெல்லாம் இருமிக்கொண்டிருந்து காலையில்தான் அயர்ந்து தூங்குகிறாள். கையுடன் கொண்டு வந்த அவர் தயாரித்த ஓட்ஸ் கஞ்சியையும் தேநீரையும் அரியத்தின் கட்டிலுக்குப் பக்கத்திலுள்ள சிறிய ஸ்டூலில் வைத்து விட்டு அவளை எழுப்பாமல் திரும்பினார். அறை யின் மூலையில் இரு கதிரைகளும் ஸ்டூலும் மேலே கரம் போட்டில் காய்கள் சிதறிக் கிடந்தன. வரவேற்பறையில் கிடந்த கரம் போட்டை உள்ளே அரியத்தின் அறைக்குள் கொண்டு வைத்திருந்தார்.
•Last Updated on ••Friday•, 23 •October• 2020 21:48••
•Read more...•
••Tuesday•, 13 •October• 2020 09:45•
??- முருகபூபதி -??
சிறுகதை
“ வீடு திரும்பியதிலிருந்து என்ன யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்…? “ வீட்டின் விட்டத்தை பார்த்துக்கொண்டு திக்பிரமையுடன் இருந்த என்னை மனைவி பின்புறமாக வந்து தோளில் தட்டினாள்.
“ ஒன்றுமில்லை “ தொடர்ந்தும் மௌனமாக கைத்தொலைபேசியில் வாட்ஸ் அப் அலைப்பறைகளை பார்க்கின்றேன். எனது இளைய மகள் என்னை அநாவசியமாக இதற்குள் இழுத்துவிட்டாள்.
தொடர்புக்கு மாத்திரம் இதுவரை காலமும் பாவித்த கைத்தொலைபேசியில் உலகமே அடங்கிவிட்டது. தினமும் காலை எழுந்ததும், வாட்ஸ் அப்பில் வரும் வேடிக்கைகளுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி என்று ஒற்றை வரியில் பதில் கொடுக்காதுவிட்டாலும் , ஏன்..? எதற்கு..? என்று விசாரிப்பதற்கும் ஒரு பெரிய வட்டம் உருவாகிவிட்டது.
அந்த ஒற்றைவரிக்கு மேல் எதனையும் நான் எழுதுவதும் இல்லை. இன்று வெளியே நடைப்பயற்சிக்கு சென்றபோது அறிந்த தகவல் உண்மையா..? கண்ட காட்சி பொய்யா… ? அவ்வாறாயின் நேற்று நான் அந்த எலிஸபெத்துடன் பேசியது வெறும் பிரமைதானா..?
கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் எதிரொலியாக மனப்பிராந்தியும் வருமோ. வீட்டுக்குள் அதிக நேரம் அடங்கியிருப்பதனாலும், சமூக இடைவெளி பேணவேண்டி நேர்ந்தமையாலும் குடும்பங்களுக்குள் பிரச்சினைகள் கூடியிருப்பதாகவும், சில சிக்கல்கள் விவாகரத்து வரையும் சென்றுவிட்டதாகவும், மன அழுத்தம் சமூகத்தில் கூடிவிட்டதாகவும் சொல்கிறார்களே..?
•Last Updated on ••Tuesday•, 13 •October• 2020 09:47••
•Read more...•
••Tuesday•, 06 •October• 2020 02:42•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
“நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்?” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை உலுப்புவது போல உலுப்பிவிட்டுச் சிரித்தார் தவராசா.
புளியம்பழங்கள் ஒன்றும் உதிர்ந்து விழவில்லை. மாறாக வெறித்த பார்வையுடன் தவராசாவை உற்று நோக்கினான் நிர்மலன்.
“நிர்மலன்… குளிச்சுப்போட்டு சாப்பிட வாரும். வெளிக்கிட்ட நேரத்திலையிருந்து நல்ல சாப்பாடும் சாப்பிட்டிருக்கமாட்டீர்” என்றார் தவராசாவின் மனைவி ஈஸ்வரி.
நிர்மலன் இலங்கையிலிருந்து ஒன்பது மணி நேரம் வான் பறப்பை மேற்கொண்டு, தனது திருமணத்திற்காக அவுஸ்திரேலியா வந்து சேர்ந்திருக்கின்றான். இலங்கையில் நிர்மலனிற்கு அம்மாவும் அக்காவும் இருக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவில் உறவினர் என்று சொல்லிக் கொள்வதற்கு தவராசாவையும் ஈஸ்வரியையும் தவிர வேறு ஒருவரும் அவனுக்கு இல்லை. ஈஸ்வரி நிர்மலனின் அம்மா வழி உறவு. அவர்கள் இருவரும் தான் நிர்மலனின் திருமணத்திற்கான பெற்றோர்கள். இந்தக் கலியாணத்தை சரிவரப் பொருத்தியவர்கள்.
சாப்பாடு பரிமாறும் போது பொரித்த கோழிக்காலையும், அவித்த முட்டையையும் எடுத்து நிர்மலினின் சாப்பாட்டிற்குள் புதைத்து வைத்துவிட்டு, “உம்… இனிச் சொல்லு” என்றார் ஈஸ்வரி.
நிர்மலன் சாப்பாட்டைப் பார்த்தான். தீக்கோழி தலையை மணலிற்குள் புதைத்து உடம்பை வெளியே நீட்டுவது போல, கோழிக்காலின் ஒருபகுதி வெளியே நீண்டிருந்தது. முன்னே எதிராகவிருந்த ஆசனங்களில் ஆணும் பெண்ணுமாக, ஈஸ்வரியின் இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள். வயதில் மிகவும் சிறியவர்களான அவர்கள் நிர்மலனின் முகத்தையும் கோழிக்காலையும் மாறிமாறிப் பார்த்தபடி இருந்தார்கள்.
•Last Updated on ••Tuesday•, 06 •October• 2020 02:44••
•Read more...•
••Tuesday•, 29 •September• 2020 10:46•
??- இரகமத்துல்ல ( மெல்பன் – ஆஸ்திரேலியா ) -??
சிறுகதை
இவ்ளோ நாள் எங்கே இருந்தீங்க ப்ரோ?"...
"டீக்கடைல பாஸ், அதே டீக்கடை பெஞ்சுலதான்..."
அது ஒரு பிரபல திரைப்படத்தின் வெற்றி விழா. பல பெரிய புள்ளிகள் இணைந்திருக்கும் வட்டம். அதில், நான்... இப்படத்தின் வசனங்கள் எழுதிய இளம் வசனகர்த்தா. வரிசையாக பல கலைஞர்கள் பரிசு பெற்ற பின், என் முறை வந்து, நானும் பரிசு பெற்று, சில வார்த்தைகள் பேசிய பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளன், அவன் வாங்கும் சம்பளத்திற்கு என்னிடம் கேட்ட கேள்விக்கு பதில்தான், நீங்கள் மேலே படித்தது.
கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு முன் சென்னை வந்தேன். சொந்த ஊரில் நண்பர் ஒருவரின் அறிமுகத்தில் தமிழ் சினிமாவின் கோட்டையாம் "கோடம்பாக்கத்தில்" ஒரு குறுக்கு சந்தில் மேன்ஷன் மாதிரியும் இல்லாமல் வீடு மாதிரியும் இல்லாமல் இருந்த ஒரு பழைய கட்டிடத்தில், புறாக்கூண்டு அறைகளில், என்னை மாதிரியே கனவுகளை சுமந்து வந்திருந்த படைப்பாளிகளில் ஒருவனாக தஞ்சம் புகுந்தேன். தூங்கும் நேரம் போக, சந்து முனையில் இருந்த காஜா பாயின் "டீக்கடை"தான் எங்களுக்கு சகலமும். டீக்கடைதான் என்றாலும் பீடி, சிகரெட்டு, கடலை மிட்டாய், வாழைப்பழம் என்று சிறிய பெட்டிக்கடைதான் அது. ஆனால் காஜா பாயின் டீதான் பிரசித்தம்.
காஜா பாய்... இன்றைய தேதிக்கு சுமார் 60, 63 வயது மதிக்கத்தக்க உருவம். ஆனால் 45 வயதுக்குரிய சுறுசுறுப்புடன் கூடிய திடகாத்திரம். தலையில் தொழுகை தொப்பியுடன், முண்டா பனியனும், கட்டம் போட்ட கைலியும்தான் அவரின் அடையாளம். மனைவி இறந்து விட்டார், ஒரு பையன், ஒரு பெண். இருவரும் நன்றாக படிப்பார்கள் என்று மட்டும் சொல்லுவார். நடக்கும் தூரத்தில் சொந்தமாக சின்னதாய் ஒரு வீடு. அவ்வளவுதான் தெரியும். பிள்ளைகள் கடைக்கு வருவது வெகு அரிது. எப்போது சாப்பிடுவார், தூங்குவார் என்றே தெரியாது. பெரும்பாலான நேரம் டீக்கடையில்தான் இருப்பார். அவ்வப்போது கூட்டம் குறைவாக இருக்கும்போது கடையை விட்டு வெளியே வந்து பத்தடி தள்ளி சென்று, பீடி பற்ற வைத்து இரண்டு அல்லது மூன்று இழுப்பு இழுத்து விட்டு, பீடியை கையால் அணைத்து, கடையில் உள்ள குப்பை தொட்டியில் கொண்டு வந்து போடுவார். செய்யும் எல்லா செயல்களிலும் அவ்வளவு சுத்தம் பார்ப்பார். பீடி இழுத்துவிட்டு வந்தால் கட்டாயம் டீக்கு போட வைத்திருக்கும் ஏலக்காய்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்.
•Last Updated on ••Tuesday•, 29 •September• 2020 17:59••
•Read more...•
••Sunday•, 20 •September• 2020 11:08•
??- முருகபூபதி -??
சிறுகதை
“ அப்பா… உங்களது மெயிலுக்கு ஒரு தகவல் இணைத்துள்ளேன். “ என்றாள் மூத்த மகள்.
நான் வெளியே புல்வெட்டிக்கொண்டிருந்தபோது மகளின் அழைப்பு எனது பொக்கட்டில் இருந்த கைத்தொலைபேசியில் சிணுங்கியவாறு வந்தது.
புல்வெட்டும் இயந்திரத்தை நிறுத்திவிட்டு, “ என்ன தகவல்…? “ எனக்கேட்டேன்.
“ நாளைக்கு மகள் ஜானுவின் பிறந்த தினம். யாரும் வரமுடியாது. ஐந்து மைல்களுக்கு அப்பால் எவரும் நகரமுடியாது. கம்பியூட்டரின் முன்னால் அமர்ந்து ஸும் ஊடாக சந்தித்துப்பேசி பிறந்த தினத்தை கொண்டாடவிருக்கிறோம். நீங்கள் நாளை ஃபிரீயாக இருப்பீங்கதானே…? “
“ நான், பேத்தியை மிகவும் மிஸ்பண்ணுகிறேன். அவளை மட்டுமல்ல, எனது எல்லாப்பேரக்குழந்தைகளையும் மிஸ்பண்ணிக்கொண்டிருக்கிறேன். என்றைக்குத்தான் இந்தக் கொரோனா போய்த்தொலையுமோ தெரியாது. ஆறு ஏழு மாதமாகிவிட்டது குழந்தைகளைப்பார்த்து “ சொல்லும்போது எனக்கு தொண்டை அடைத்தது.
கண்கள் கலங்கின. சிரமப்பட்டு அடக்கினேன்.
“ என்னப்பா செய்யிறது. நானும் அவரும்கூட வீட்டிலிருந்துதான் ஒன்லைனில் வேலைசெய்கிறோம். ஆளுக்கொரு அறையை எடுத்துக்கொண்டு, காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரையும் அசையமுடியாத வேலை. பிள்ளைகள் இருவருக்கும் தெரியும்தானே…? அவர்களுக்கும் படிப்பு வீட்டிலிருந்துதான். ஒன்லைன் ஸ்டடி. அவர்களையும் கவனித்துக்கொள்ளவேண்டும். வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. “ மகள் மறுமுனையிலிருந்து அலுத்துக்கொண்டாள்.
எனது இளைய மகளுக்கும் இளைய மகனுக்கும் மற்றும் சில உறவினர்களுக்கும் தகவல் சொல்லவேண்டும், நாளை ஸ்கைப் ஸுமில் பேசுவோம் எனச்சொல்லிவிட்டு, மூத்த மகள் இணைப்பினை துண்டித்துக்கொண்டாள்.
•Last Updated on ••Sunday•, 20 •September• 2020 11:14••
•Read more...•
••Monday•, 07 •September• 2020 21:54•
??- ஶ்ரீரஞ்சனி -??
சிறுகதை
ஜன்னல் கண்ணாடிக்கூடாக வெளியே வெறிச்சுப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். மேப்பிள் மரத்தில் ஒரு சில அரும்புகள் துளிர்விட்டுக்கொண்டிருந்தன. அங்கும் இங்குமா சில பறவைகள் பாடிக்கொண்டிருந்தன. ஆனால் தெரு மட்டும் வெறிச்சோடிப் போயிருந்தது. தேடிப்பிடித்தால் காணக்கூடியளவில் மிகச் சிலர் ஆளுக்கு ஆள் வெகுதொலைவில் முகமூடிகளுடன் வேகமாக நடந்துகொண்டிருந்தனர். பக்கத்திலிருந்த பூங்காவில் அணில்கள் மட்டும் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தன. குளிரோ, வெய்யிலோ எதுவானாலும் ரிம் ஹோட்டன்ஸ் கோப்பி வாங்குவதற்காகக் காத்திருக்கும் கார்களையும் மனிதர்களையும் அவன் பார்த்து நீண்ட நாட்களாகியிருந்தது.
மேசைமேல் ஏற்றப்பட்டிருந்த கதிரைகளும், கலகலத்திருக்கும் அந்தவிடத்தில் இருந்த மயான அமைதியும் அவனுக்குப் பூதாகரமாகத் தெரிந்தன. இந்த அமைதி, இந்த வேலை, கனடாவுக்கு மனைவி சாந்தியின் வரவு … என அவன் வாழ்வுடன் தொடர்பான அனைத்துமே பதிலற்ற கேள்விகளாக மெதுமெதுவாக விசுவரூபமெடுத்துக் கொண்டிருந்தன.
‘கெதியிலை புரோமோசனுக்கு அப்பிளை பண்ணோணும். அப்பத்தான் சாந்தி வரேக்கே சிலவுக்குக் கட்டுபடியாகுமெண்டு நினைச்சுக்கொண்டிருக்க, ம்ம், சத்தமில்லாமல் நான் யுத்தம்செய்வன் எண்டு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற இந்தக் கொரோனா வந்து நிலைமையை அடியோடு மாத்திப்போட்டுது, சீ…’
அவன் மனசுக்குள் பொங்கிய விரக்தியை, தொற்று வராமல் இருக்கிறதே பெரியவிஷயமென்ற அறிவு சமாதானப்படுத்த முயன்றபோது, மாற்றக்கூடியவற்றை மாற்றக்கூடிய வல்லமையையும் மாற்றமுடியாதவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனவலிமையையும் வளர்த்துக்கொள் என எங்கோ வாசித்த ஒரு வாசகம் அவன் நினைவுக்கு வந்து அவன் இதயத்தை ஆதரவுடன் தடவிக்கொடுத்தது.
•Last Updated on ••Monday•, 07 •September• 2020 22:20••
•Read more...•
••Monday•, 07 •September• 2020 08:14•
??- குரு அரவிந்தன் -??
சிறுகதை
(செல்போன்கள் பாவனைக்கு வரமுன்பு கனடாவில் நடந்த ஒரு சம்பவம் சிறுகதையாக்கப்பட்டது)
வாசலில் அழைப்பு மணி கேட்டது. கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். எட்டு வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் வாசலில் நின்றான். முகத்தில் ஒரு துடிப்புத் தெரிந்தது.
‘நைக்கி’ ரீ சேட், நைக்கி சூ, நைக்கி காப். எல்லாமே நைக்கி மயம். தொப்பியின் முன் பக்கத்தைத் திருப்பி பின் பக்கமாகப் போட்டிருந்தான்.
‘ஜெஸ்........மே ஐ ஹெல்ப் யூ’ என்றேன்.
‘ஹாய்!...... அங்கிள், ஐ யாம் கிறிஸ்தோஃபர். வீ....ஆ.... கோயிங் டு....பி...யுவ நெய்பேர்ஸ்’.
என்று அறிமுகம் செய்து சைகையால் அடுத்த வீட்டைக் காட்டினான். வெளியே எட்டிப் பார்த்தேன். அடுத்த வீட்டிற்கு முன்னால் வண்டியில் இருந்து வீட்டுத் தளபாடங்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.
‘ஹாய்....ஐ...ஆம்....சிவா...கிளாட்யு மீட்யூ, யூ ஆர் வெல்க்கம்’
‘டாட்..!’ இங்கிருந்தே குரல் கொடுத்தான் கிறிஸ்தோஃபர்.
முப்பத்தைந்து வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார்.
‘மீட் மை டாட்,... டாட் ஹீ ஸ் மிஸ்டர் சிவா!’ என்றான் கிறிஸ்தோஃபர்.
‘ஹாய்’ என்று நீட்டிய கையைக் குலுக்கினேன்.
•Last Updated on ••Monday•, 07 •September• 2020 08:16••
•Read more...•
••Friday•, 04 •September• 2020 23:26•
??- முருகபூபதி??
சிறுகதை
அம்மா மீண்டும் அவளது திருமணப்பேச்சை ஆரம்பித்தமையால் அன்றைய காலைப்பொழுது அந்த வீட்டில் கோபத்துடன் விடிந்தது. இருவருக்கும் கோபம்.
அம்மா தனது கோபத்தை சமையலறையில் காண்பித்தார். அவள் குளியலறையில் காண்பித்தாள்.
சாப்பாட்டு மேசையில் மெதுவாக வைக்கவேண்டிய கண்ணாடிப்பாத்திரம் வெடிப்பு கண்டது. குளியலறை பிளாஸ்ரிக் வாளி தண்ணீரோடு சரிந்தது.
அவள் வேலைக்குப்புறப்படும் வேளையில், தனது திருமணப்பேச்சை எடுக்க வேண்டாம் என்று எத்தனை தடவை அம்மாவிடம் சொன்னாலும் அம்மாவின் பெற்றமனம் பித்துத்தான்.
அம்மா, மகள் பிரபாலினிக்கான மதிய உணவைத்தயாரித்து எவர்சில்வர் கரியரில் வைத்து மூடி, அருகே ஒரு சிறிய தண்ணீர்போத்தலும் வைத்தார்.
" இன்றைக்கு அவர்கள் வருகிறார்கள். நீ நல்லதொரு முடிவாகச்சொல்லவேண்டும். சாதகப் பொருத்தம் நன்றாக இருக்கிறது. எவ்வளவு காலத்திற்கு இப்படியே இருக்கப்போகிறாய்...? "
" ஏய்... மிஸிஸ் குசலாம்பிகை வேல்முருகு... உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா...?"
பிரபாலினிக்கு அம்மாவிடத்தில் நேசம் அதிகரித்தாலும் கோபம் அதிகரித்தாலும் இவ்வாறு ஒருமையில்தான் அழைப்பாள். அம்மா என அழைப்பது அபூர்வம்.
மகள் இயல்பு தெரிந்தமையால் எந்தச்சலனமும் இன்றி, நேசத்தையும் கோபத்தையும் பெற்றமனம் சகித்து தாங்கிக்கொள்கிறது.
பிரபாலினி காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்.
அவளுக்கு அம்மா பேசும் வரன்கள் விருப்பமில்லை.
கைநீட்டி அடிக்காத, தாழ்வுச்சிக்கல் இல்லாத கணவன் வேண்டும். தன்னோடு நட்பாக இணக்கமாக உறவாடவேண்டும். இந்த விதிமுறைகளுக்குட்படும் துணையைத்தான் அவள் தேடுகிறாள். அந்தத் தெரிவுக்குள் இதுவரையில் எவரும் வரவில்லை.
•Last Updated on ••Friday•, 04 •September• 2020 23:29••
•Read more...•
••Sunday•, 23 •August• 2020 10:18•
??- எஸ்.அகஸ்தியர் -??
சிறுகதை
திருமணமாகி ஒரு நாள் கழிந்துவிட்டது. மலர்மணிக்கு இப்பவும் அந்த அந்த நினைவு நெஞ்சை அறுத்து வருகிறது. அதை நினைக்கிறபோது அவள் தேகம் குலுங்கித் தவளைச் சதையாட்டம் நுளுந்திற்று. நெஞ்சில் மின்னல் அடிக்கிற ஒரு திடுக்காட்டம்.
அதை எப்படிப் புரட்டினாலும் மனசு அதுக்கு ஒப்புதில்லை.
முகத்தில் தடவிய பூசல் மா பூஞ்சாணம் பிடித்த விறுத்தத்தில் தெரிகிறது. கண்ணாடி எதிரே நின்று தன்னைப் பார்த்ததும் தனக்கே முகம் சுழித்துக் கொண்டாள்.
அப்படிச் சுழித்ததை நினைக்க, சடலத்தை நாணம் எகிறிக் குருகிற்று. நெஞ்சுப் பூரிப்பு உடனே அடங்கி மரித்தது. அப்பவும் சொண்டுக்குள் வந்த சிரிப்பு பூ மடல் விரிகிற மாதிரி அருக்கூட்டி வெடித்தது.
அந்தச் சொண்டுச் சிரிப்பும் நத்தைக் கணியம் ‘டக்’கென்று சுருங்கிற்று. சுருங்கின வாய்ச்சொண்டில் ஒரு ரஸ நுளம்பல் தேங்கிற்று. நுளம்பின சொண்டுகள் அப்பால் வறண்டு கொண்டன.
அழகே சாகிறதாக மறுவிநாடி அவளுக்கு ஒரு நினைவு சுமை வைத்து, அதுவும் அவள் கமண்டலத்தில் ஏறிற்று. அவள் பச்சோந்தி மனசு தாமரைத் தண்ணீராகக் குண்டுகட்டி நெஞ்சிற் துன்ன, சடலம் தும்பு சூர்த்திற்று. பூ விழுகிற மாதிரிக் கை போட்டு கன்னத்தில் தடவிக்கொண்டாள். தடவின விரல்களில் எலும்பிச்சங்கோது கணியம் நெய்யிட்ட சொக்கை பாம்பு வழுப்பாய் உணர்த்திற்று.
‘ஆஹ்’
இருதயச் சோணத்தில் ஊசி ஏறின வாதை. அவள் கண்ணைக் கிழித்து அது கண்ணீராய் ஊனித்தது.
‘மனசால தொட்டு ஒருதனை நினைச்சிட்டு, அடுத்தவனோட உறவு வைச்சுக் கொள்றது நெறி தவறின வேலை’ என்று மகேஸ்வரி ‘குத்தி’ச் சொன்னதுக்கு, ‘அப்பிடிப் பாத்தா, அடுத்தவனோட உறவு வைச்சுக் கொள்ள முன்னம் மனசால எவனையும் தனக்குள் நினையாத ஒரு பொம்புளை ஆரடி இந்த உலகத்தில் இருக்கிறாள் காட்டடி? யெண்டு கேட்டு அவள் வாயை உடனே அடைச்சிருந்தால் அப்பவே ஒரு முற்றுக் கண்டிருக்கலாம்’ என்று இப்ப தன்னுள்; எண்ணி வருந்திக்கொண்டாள். ‘இது பெண் புத்தி’ என்று புறுபுறுத்த வாய்க்குள், ‘எண்டாலும் மகேஸ்வரியை மறுக்காக் கண்டால் அதுக்குத் தக்க பதில் இக்கலாம்’ என்று திருப்திப்பட்டுக் கொண்ட மலர்மணி, அப்பால் அந்தத் தென்பும் அற்றுச் சாம்பினாள்.
•Last Updated on ••Wednesday•, 02 •December• 2020 13:27••
•Read more...•
••Saturday•, 15 •August• 2020 20:09•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
"முதலில் இந்தத் தலைமுறைகளை (முறை கிறை பார்க்கிற மரபுகளை ) ஒழிக்கணும்"சாந்தன் உள்ளுக்குள் குமுறினான்.அவன் ஏற்கனவே . இவற்றை இனம் கண்டு தான் இருந்தான். இருந்தாலும் எந்த ஒரு மாறுதலையும் அதில் ஏற்படுத்தி விட முடியவில்லை. ஆசிரியையின் பையன் என்ற பிம்பம் வேறு அவனை சுயமாக வாழ விடவில்லை என்று தோன்றுகிறது. அவன் அதை விடுதலைக்கு தாரை வார்க்கப் படட்டும் என்றே செயல்பட்டிருக்கிறான். அதில் ஏற்பட்ட சிந்தனைகள் அவனை மூடி காலம் முழுதும் கரைந்து விடும் என்று நினைத்திருந்தான். மாறி விட்டது.
சென்ற வாரம் தொலைபேசி அழைப்பில் பேசிய கணேஸ் ,"நான் ஒவ்வொரு நாளும் திருக்குறளில் ஒரு அதிகாரத்தைப் படிக்க தொடங்கி இருக்கிறேன்"என்றான். திருக்குறளில்,' அனைத்தும் இருக்கின்றன'என்பதை அவனும் கேள்விப் பட்டேயிருக்கிறான். இன்னமும் வாசிக்கிறதில் இறங்கவில்லை."நிலையாமை என்ற அதிகாரத்தை கணனி யூ டியூப்பில் திறந்து கேட்கத் தொடங்கினான். வாசிக்கப் பஞ்சிபடுறதை இப்படி கேட்கிறதும் பழக்கமாகி வருகிறது. அந்த ஒரு அதிகாரத்திலேயே வாழ்வை முழுதுமே அறிந்து விடலாம் தான். மனம் கேவிக் கொண்டேயிருக்கிறது. ஆனால்,அதில் அறத்தை அழுத்திச் சொல்லுறது…. மனத்தை ஆற்றவில்லை.
•Last Updated on ••Saturday•, 15 •August• 2020 20:13••
•Read more...•
••Monday•, 27 •July• 2020 00:50•
??- முல்லைஅமுதன் -??
சிறுகதை
அப்பாவின் முகத்தில் எப்படி முழிப்பது?
பயத்தினால் கண்கள் இருண்டது.
'இண்டைக்கும் அடிவிழப்போகுது'
மாமி முந்தி அடிவிழாமல் தடுத்தவ.அவவும் உயிரோட இல்லை.அம்மா பாவம்..அப்பாவின் கோபத்திற்கு முன்னால் அவளால் ஒன்றும் செய்யமுடியாது.
அப்பாவும் கோபம் வந்தால் சப்பாத்துக் காலால்,தன் இடுப்பு பெல்ட்டைக் கழற்றி அதுவும் இல்லாட்டி கிடைக்கிற பொருளால் ஓங்கி விளாசுவார்.கோபம் வரும்போது என்ன செய்வதென்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
முன்பொருமுறை கூட வின்ஸரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரவும்,சந்தியில் திரும்பிய பஸ்ஸுக்குள்ளிருந்த அப்பா காணவும் சரியாக இருந்தது..வீட்டுக்குப் போக 'ஒரே சமா தான்'
அடியில் முதுகு வலித்தது.அவரின் கோபம்நியாயமானதுதான் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.பாடசாலைக்குப் போய் முதலாம் பாடம் முடிய ரிஜிஸ்தரில் பெயர் வந்தேன் மிஸ் சொன்னாப்பிறகு மெதுவாய் கன்ரீனுக்குப் போறமாதிரிப் போய் முன் தயார்நிலையில் இருந்த சைக்கிளில் காலைக்காட்சிக்குப் போய்விடுவோம்.தெரிந்தால் வீட்டில் அடிவிழும்..ஹெட்மாஸ்டரிடம் வாங்கிக் கட்டவேண்டிவரும். பெற்றோரைக் கூட்டைவரச் சொல்வதில்லை.கொண்டுபோய் அங்கு சேர்த்த மாமாவும் அங்குதான் உலோகவேலை கற்பித்துகொண்டிருந்ததால் அவர் குற்றச்சாட்டைக் கையிலெடுத்தபடி வீட்டை வந்துவிடுவார்.
•Last Updated on ••Monday•, 27 •July• 2020 00:57••
•Read more...•
••Wednesday•, 08 •July• 2020 14:14•
??- முனைவர் இரா.சி.சுந்தரமயில், இணைப்பேராசிரியர், துறைத்தலைவர் (பொ.), தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, பீளமேடு, கோயம்புத்தூர் - ??
சிறுகதை
ஒரு வாரத்திற்கு முன்பு அப்பாவின் அலைபேசியிலிருந்து வந்த ஒற்றை வரி ஓராயிரம் முறை கமலக்கண்ணனின் காதுகளில் ஒலித்து மீண்டிருக்கும்.
வேக வேகமாக ஒட்டமும் நடையுமாக பதட்டத்துடன் விமான நிலையத்திற்குள் நுழைந்தான். சிறிது தாமதித்திருந்தாலும் விமானம் அவனைப் புறம் தள்ளிவிட்டுப் பறந்திருக்கும் இறந்துபோன அறிவுநம்பியின் ஆன்மா பயணிக்கும் உயரம் நோக்கி. நல்லவேளையாக வேகத்துடன் செயல்பட்டதால் விமானத்தில் இடம்பிடித்தான். எது எப்படியோ அப்பாவின் சடலத்தையாவது பார்க்க முடியுமா?. அறிவுநம்பியின் முதுகைப்போல் கேள்விக்குறிதான் மிச்சம். இருக்கையில் ஏறி அமர்ந்துகொண்டான். பெருமூச்சின் சத்தம் அருகில் இருப்பவரைத் திரும்பிப்பார்க்க வைத்தது. சீட்பெல்ட்டை அணிந்து கொண்டு கண்மூடினான். எண்ணங்கள் விழித்துக்கொண்டன.
* கால்க்கிலோ தக்காளியும் கொஞ்சம் மல்லித்தழையும் கொடு குமாரு."
"இதோ தர்றேன் சார்"
" ........................"
"கேரட்டு, கத்திரிக்கா, தேங்கா எல்லாம் இப்பத்தான் வந்து எறங்கியிருக்கு. தரட்டுங்களா சார்."
கேரட்டைக் கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டே "ம்ம்... சரி ரெண்டு கேரட்டும் ஒரு தேங்காயும் கொடு" என்றார் அறிவுநம்பி.
"அது என்னங்க சார் ரெண்டு கேரட்டு. ஒன்னு கால்க்கிலோ கேளுங்க இல்ல அரக்கிலோ கேளுங்க. இல்லேன்னா அப்பா, அம்மா, புள்ளன்னு தலைக்கு ஒன்னு மூனா வாங்குங்க சார். ஒன்னத்துக்கும் இல்லாம ரெண்டு கேட்கறீங்க."
வாய்ஜாலத்தை விற்று வருமானத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தான் காய்க்கடைக்காரன் குமார்.
•Last Updated on ••Wednesday•, 08 •July• 2020 14:25••
•Read more...•
••Wednesday•, 08 •July• 2020 13:56•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
நியூசிலாந்திற்குப் புதிதாக வந்த நேரம். ஓக்லாந்தில் மெடோபாங் என்னுமிடத்தில் இருந்தோம். குளிர் காலம். எங்குமே பனிப்புகாரும் மழைத்தூறலுமாக இயற்கை. வெய்யில் தெறிக்கும் போதெல்லாம் வீதியிலே பொற்காசுகள் கொட்டிக் கிடப்பது போல் மினுங்கி மினுங்கி மயக்கும். வேலை வில்லட்டியில்லாமல், சென்ரர்லிங் தந்த காசை செலவழித்துக்கொண்டு, வேலைகளுக்கு மனுப் போடுவதும், புதிதாக ‘எதைப் படிக்கலாம்’ என ஆராய்ச்சியில் ஈடுபடுவதுமாகப் பொழுதுகள் கரைந்தன.
காலை உணவருந்திவிட்டு, பிள்ளைகளை பிறாமிற்குள் தள்ளிக்கொண்டு அருகே உள்ள பூங்காவில் சந்திப்போம். குளிருக்கு உடுப்பு மாத்துவது என்பது ஒரு ஓரங்க நாடகம். பூங்காவில் குறைஞ்சது ஒவ்வொருநாளும் ஆறேழு குடும்பத்தினரைச் சந்திக்கலாம். சூரியன் மதியம் என்று சொல்லும் வரைக்கும் பலதும் பத்தும் கதைப்போம். பிள்ளைகள் ஊஞ்சல் சறுக்கீஸ் என்று விளையாடுவார்கள். மகிழ்ச்சியான பொழுதுகள்.
அங்கேதான் முதன்முதலில் முரளிதரன் குடும்பத்தினரையும் சந்தித்தோம். அவர்களின் மகனும், எங்களின் மகனும் அங்கே ஒன்றாய் விளையாடுவார்கள். ஜனனி---முரளியின் மனைவி---அப்போது கர்ப்பிணி. ஏழு மாதங்கள் எனச் சொன்ன ஞாபகம். அவர்கள் வெலிங்டன் என்னுமிடத்தில் இரண்டு வருடங்கள் இருந்துவிட்டு, முரளிதரனுக்கு அங்கு வேலை கிடைக்காததால் ஓக்லாந்திற்கு வந்திருந்தார்கள். ஜனனி ஏதோ ஒரு ஐ.ரி கொம்பனியில் பகுதி நேர வேலை செய்ததாகச் சொன்னாள். எனது மனைவிக்கு ஜனனியை மிகவும் பிடித்துப் போனது. அப்புறம் தினமும் அவர்களுடன் சந்திப்பு, போதாக்குறைக்கு தொலைபேசி உரையாடல்கள். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாக்கள், விருந்துபசாரங்கள்.
ஜனனி குழந்தை பெறுவதற்காக கிறீன்லேன் என்னுமிடத்திலுள்ள வைத்தியசாலைக்குச் சென்றிருந்தாள். அப்போது உச்சக்கட்ட குளிர்காலம் என்பதால் சிறிது நேரம் அவர்களுடன் நின்றுவிட்டுத் திரும்பிவிட்டோம். முரளி மகனையும் வைத்துக் கொண்டு வைத்தியசாலையில் தங்கிவிட்டான். முரளி தனது அம்மா வெலிங்டனில் தனது தங்கையுடன் இருப்பதாகவும், இன்னும் சில தினங்களில் ஓக்லாந்து வந்துவிடுவார் எனவும் சொன்னான்.
•Last Updated on ••Wednesday•, 08 •July• 2020 14:38••
•Read more...•
••Saturday•, 20 •June• 2020 17:04•
??- முல்லை அமுதன் -??
சிறுகதை
அவள் அப்படிக் கேட்டுவிட்டாள் என்பதற்காக மனைவியிடம் சொல்லியிருக்கக்கூடாது.அதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ?ஒருபெண் கேட்டதை இவளிடம் சொல்லி என்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் புரட்டிவிடப்போகிறதோ தெரியவில்லை.'
மனதுள் புழுங்கினான்.
மணியமென்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சுதந்திரபுரத்தில் பலசரக்குக் கடை வைத்திருப்பவன்..அவனின் மனைவி சுகந்தியைத் திருமணம் செய்து ஐந்துவருடங்கள் ஆகிவிட்டது.எனினும் குழந்தைகளில்லை.ஆனாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்துவந்தனர். ஊரிலும் அவர்களுக்கு நல்லபெயர்.
கடைக்கு பலரும் வந்து போவார்கள்.
சிறுசிறு பொருட்களைவாங்க வருபவர்கள்..உதவி கேட்டு வருபவர்கள்..ஒசிப்பேப்பர் வாசிக்கவருபவர்கள்...சுகத்தியுடன் அரட்டை அடைக்க வருபவர்கள்..எப்போதும் கடை கலகலப்பாகவே இருக்கும். கடையை மூடியபின்பே வீட்டிற்குப் போவதால் கடைக்குப் பின் புறமாகவே மதிய உணவை சமைத்துச் சாப்பிடுவார்கள்.
'எதற்கு வீடு..?அதை விற்றுவிட்டு கடையைக் கொஞ்சம் பெருப்பிக்கலாமே' சுப்பையா அண்ணரின் ஆலோசனையை முற்றாக இருவரும் மறுதலித்தனர்.
'இன்றைக்கு கடை நல்ல வருமானம் தருகிறது. அதற்காக வீட்டை விற்று கடையைப் பெருப்பிக்கும் எண்ணத்தால் ஒருவேளை கடை நடத்தமுடியாமல் போனால் வீடாவது மிஞ்சுமே? கடைசிக் காலத்திலாதாவது எங்களுக்கு இருக்கட்டுமே.. வீடு என்ற ஒன்று குடும்பத்திற்கு வேMகாணும்'
•Last Updated on ••Saturday•, 20 •June• 2020 17:26••
•Read more...•
••Tuesday•, 16 •June• 2020 16:35•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
யாழ்ப்பாணத்தில் கிராமங்கள் தோறும் தடித்த கண்ணாடியிலான சுவர்கள் சமூகங்கக்கிடையில் கிடக்கின்றன.விடுதலைப் போராட்டத்தின் நசிவுக்கும் அது தான் ஒருவேளை காரணமாக இருக்குமோ?ஒவ்வொருவருமே கண்ணாடிக்குள்ளால் நிகழ்கிற அவலங்கள் ,அழுகுரல்களை எல்லாம் பார்க்கிறார்கள்.அறிகிறார்கள் தான்.ஆனால் காதில் விழாத செய்திகளைப் போல பார்த்து, பார்த்து கடந்து போய் விடுகிறார்கள். அரசியலமைப்பு தான் எல்லாவித மக்களையும் இணைக்கிறதைச் செய்கிறது.தமிழர் தரப்பில் உள்ள அரசியலமைப்புகளிற்கு உரிமைகள் இல்லை,அதிகாரம் இல்லை...என வே பலவீனப்பட்டுக் கிடப்பதால்,அவை வீச்சம் கொண்டு இயங்க திணறுகின்றன. அங்கங்கே இணைப்புகள் இல்லாமல் கிடப்பவையையில் பாசி,பங்கசு, பக்றிரியாக்கள் பற்றிக் கொள்வது போல,மனிதர்களின் பல்வேறு குணங்களால் விளையும் முறுகல் இழைகள் மலிந்து தொடர்பாடலில் விலகல்களை ஏற்படுத்தி விடுகின்றன.பிறகென்ன சாதித் தன்மைகள் தொடர்ந்து வாழும். மேம்படுத்துவதற்கான,அல்லது ஐக்கியப்படுத்துவதற்கான செயற்பாடுகள் இல்லாததால்...முன்னேற்றம் காணப்படுவதில்லை."தனிமனிதன் திருந்தினால் சமூகம் திருந்தி விடும்"என்கிறீர்களா?அது ஒரு கால்வீதம் தான் !
அரசியல் கட்டமைப்புகள் தாம் முக்கால்வாசியை சீர்படுத்துபவன.இலங்கையில் தமிழர்கள் ஒன்றுபட்டால்,சிங்களம் தமிழ்ப்பகுதிகளைக் கைப்பற்ற முடியாது.எனவே தான் "இனப்பிரச்சனையா"அப்படி ஒன்றே இல்லை"கொழும்பில் ஒற்றுமையாய் வசிக்கவில்லையா,அப்படி இங்கையும் இருக்க முடியாதா?"கொழும்பில் எத்தனை தமிழர் துரத்தியடிப்புகளும், அழிப்புகளும் நிகழ்ந்திருக்கின்றன?.இந்த வினா, விடைகள்....?,கொழும்பில் என கதை அளக்கிறவர்கள் ,அப்படி ஒன்றே நிகழவில்லை என்பது போல கடந்து போய் விடுகிறார்கள் .அவர்கள் வாரிசுகள், "எம் அப்பன், அம்மே எவ்வழி, அவ்வழியே யாமே ! " என மாலைக்கண்னுடன் பயணிக்கிறார்கள்.இதில் சிங்கள அரசியல்ப் பிரிவுவை. மட்டுமே குற்றம் சாட்ட ப்படுகிறது.வெளிவட்டத்தில் இருக்கிற எல்லா சிங்கள மக்க ளையும் அல்ல.
•Last Updated on ••Tuesday•, 16 •June• 2020 16:49••
•Read more...•
••Monday•, 15 •June• 2020 01:26•
?? - செ.டானியல் ஜீவா -??
சிறுகதை
அம்மா பரலோக மாதாக் கோயிலுக்குப் பின்னேரம் ஆறுமணியளவில் போயிற்று வந்து எங்கள் வீட்டின் படிக்கட்டில் உட்கார்ந்து இருந்தாள். நான் அப்போது தான் பின்னேரக் கடனை கடற்கரையில் கழித்து விட்டு கடலிலேயே கழுவி விட்டு வீட்டிற்கு வந்து படிப்பதற்கு ஆயத்தப்படுத்தினேன். அம்மாவை உற்றுப் பார்த்தேன். கண்கள் அழுது வீங்கியிருந்தது. நேற்று முன் தினம் தான் நாங்கள் புதிதாக சிறகு வலை பின்னி இன்று மதியம்தான் பரவைக் கடலில் பாய்ந்து போட்டு வந்த அப்பா களைத்ததுப் போய் விறாந்தையில் தூங்கிக்கொண்டிருந்தார். அவருடைய மூச்சொலி காற்றில் கலந்து எங்கும் பரவியது. தூங்கிக் கொண்டிருந்தாலும் அவருடைய உடல் போர் வீரர்கள் போல் கம்பீரமாக இருந்தது.
அம்மாவின் முகம் எப்போதும் என் மனதில் ஓரத்தில் தெளிவாகத் தெரியும். கறுத்த தலைமுடியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளை முடி படர்ந்திருக்கும். இரண்டு காதின் ஓரமாகவும் சில முடிகள் கீழ் நோக்கிச் சுருண்டும் நெளிந்தும் கிடக்கும்.
மளையாளப் படமான செம்மீனில் வரும் செம்பன்குஞ்சுவின் மனைவி சக்கி போலவே தோற்றமும், உடையும் அணிந்து வீட்டில் இருப்பார். எங்க ஊரில் அப்படி யாரையும் நான் கண்டதில்லை. ஆனால் வெளியில் செல்லும் போது வழமையான சாறியும், சட்டையுடனுமே செல்வார். அம்மா என்னைப் பார்த்து அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
•Last Updated on ••Monday•, 15 •June• 2020 01:44••
•Read more...•
••Friday•, 05 •June• 2020 14:21•
??- கடல்புத்திரன்-??
சிறுகதை
யார் இவர்கள் ? , உறவுச் சங்கியில் இருப்பவர்கள் என்று தெரியும்.அவனுக்கு அடுத்த கீழ் வகுப்பில் படித்தவர்வர்கள்.ஆனந்தி ,விதுரன்.இருவருமே இரட்டையர்களாக இருப்பார்களோ ?, உருவ ஒற்றுமையில் அச்சாகவிருந்தார்கள் ,தவிர ஒரே வகுப்பிலே வேற படிக்கிறார்கள்.பள்ளிக்கூடத்திலே, சின்ன வகுப்பு மாணவர்கள் எல்லாரையுமே திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டு தானிருந்தார்கள். மாநிறத்தில் கூடிக் குறையிற ,ஓரிருவர் கறுப்பாகக் கூட திகழ்கிற நிலையிலே பால் போல வெள்ளைப் பிள்ளைகளாக அவர்கள் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏன் பார்க்க மாட்டார்கள்? பிஸ்கட் பிரேக் நேரத்தில்,மணி அடிக்கிற வரைக்கும் எல்லாரும் ஓடியாடி விளையாடிக் கொண்டே இருப்பார்கள்.அண்ணா, அக்கா படித்த வகுப்புகளையும் அச்சயத்தில் எட்டிப் பார்த்து விட்டு வருபவன் முருகவேல் . மற்ற சிறுவர்களிற்கும் அந்த பையித்தியம் இருந்ததுவெள்ளி பார்க்கிறது, விடுப்பு கேட்கிறதெல்லாம் சின்ன வயசிலிருந்தே முளை விடுற சமாச்சாரங்கள் தான். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.அதுவும், பெண்கள் முகம் துலக்கமாகவே பளிச்செனக் காட்டிக் கொடுத்து விடும்.சந்தோசம்,அழுகை எல்லாம் அவர்களிடமிருந்து பிரவாகிப்பதால் பெரியவர், சிறியவர் எல்லோரும் அவர்களுடனே அன்புடன் பேசுறது,சொக்கிலேற்றுகள் ...கொண்டு வந்தால் முதலில் கொடுப்பதெல்லாம் நிகழ்கிறது.பெடியள் முகம் ,கடும் போக்கான சிங்களத் தலைவர்களைப் போல இல்லா விட்டாலும் அமுத்தலாத் தனம் போன்ற மாசுகள் இருக்கவேச் செய்கின்றது. முருகுவே,தங்கச்சியின் தலையில் குட்டி விட்டு,கையிலிருக்கிறதை பறித்துக் கொண்டு ஓடி இருக்கிறான்.பிறகு ,அவள் விக்கி,விக்கி அழுகிறதைப் பார்க்கப் பொறுக்க முடியாமல் கொடுத்தும் விட்டிருக்கிறான். ஆனால்,அந்த குணங்கள் இவர்கள் மத்தில் இருக்கின்றன.
வவுனியா மகாவித்தியாலக் கட்டிடங்கள் ஒவ்வொரு கோணத்தில் நீளப்பாட்டுக்கு, கிடைப்பாட்டுக்கு,என கட்டப்பட்டிருந்தன.கோணப்பாட்டிலே இல்லை. ஆனால், ஒவ்வொன்றுமே நீள,நீள கட்டிடங்கள்.அதிபரின் கட்டிடத்திலிருந்து வாறவர்கள் , ஆய்வுக்கூடக் கட்டிட மூலையால் திரும்பி கீழே இருக்கிற ஒன்றிலே இருந்து நாலு வரைக்கும் வகுப்புகள் இருக்கிற கிடையாக விருக்கிற கட்டிடத்திற்கு வருவார்கள்.
•Last Updated on ••Friday•, 19 •June• 2020 00:30••
•Read more...•
••Tuesday•, 26 •May• 2020 08:35•
??- வ.ஐ.ச. ஜெயபாலன் -??
சிறுகதை
- 'அஞ்சலி' (இலங்கை) சஞ்சிகையின் ஆகஸ்ட் 1971 இதழில் வெளியான கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் 'ஒரு வரலாறு ஆரம்பமாகின்றது' நல்லதொரு சிறுகதை. நெடுந்தீவில் வாழும் மீனவர்களைப்பற்றிய கதை. அவர்களுக்கிடையில் நிலவும் உட்பிரிவுகள், அதனாலேற்படும் வறட்டுக் கெளரவப்பிரச்சினைகள், கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இயற்கை ஏற்படுத்தும் இருப்பிடப் பிரச்சினைகள் , தொழிலாளர் & முதலாளி முரண்பாடுகள் , கூளக்கடாய்ப் பறவை, இராவணன் மீசை, கத்தாளைச் செடிகள் என எனப் பலவற்றை விபரிக்கும் மண் வாசனை மிகுந்த சிறுகதை. - பதிவுகள் -
பனங்கூடலுக்கு மேற்புறமாக ஒரு நாரை பறந்து வந்தது. அந்த நாரையின் இறக்கைக்கள் மெதுவாகவே அசைந்ததில், அது களைப்படைந்திருக்கிறதென்பதும் விரைவில் எங்காவது ஒரு பனை மரத்தில் இறங்கித் தரிக்கும் என்பதும் ஊகிக்கக்கூடியதாக இருந்தது.
பனங்காணி கடற்கரையில் மணல் புட்டி ஒன்றில் நின்று அந்த நாரையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அருளப்பன்.
“என்ன மச்சான் ஆகாயத்தை பார்த்துக் கொண்டு நிற்கிறாய்..."
“இல்ல, ஒரு கூளக் கிடாய் பறந்து போகுது அங்காரன்...”
“இப்பதான் இந்தியாப் பக்கம் கிடந்து பறந்திருக்கிறார்...
எங்கவண்டாலும் பனை வட்டில குந்துவார்...இல்லையே மச்சான்...”
“உம்...”
“மச்சான் வாடா...வாடி முதலாளியின்ர துவக்கை கேட்டா தருவார் வேண்டிக் கொண்டு போய் வெடி வைப்போம்...இப்ப எங்கயும் ஒரு பனை வட்டில குந்துவார்...”
“கறுமம்...நான் வரவில்லை...நீ போறதண்டா போ....” “நீ போனாப் போதும் மச்சான்...”
“இந்தச் சந்தியாபோனா எப்படியும் சுடுவான், பங்கு வேணுமண்டா வா...” “சந்தியா வானத்தை மீண்டும் ஆராய்ந்தான், நாரை மெல்லக் கீழே இறங்கி மாயனத்திற்கு அண்மையில் நின்ற ஒற்றை பனைமரமொன்றில் அமர்ந்தது"
“குந்தீற்றார்... .” கத்தியபடி வாடியை நோக்கி ஓடினான் சந்தியா. அவனது கால்களுள் பட்டு நசுங்கும் இளம் கோரைப் புற்களை பச்சா தாபத்துடன் பார்த்துப் பெரு மூச்சு விட்டான் அருளப்பு.
** ** **
கோடை காலத்தில் மணற் கிணத்தடி, மாரி காலத்தில் பனங்காணி என்று மாறி மாறி மூட்டை முடிச்சுக்களுடன் நெடுந்தீவில் கிழக்கும் மேற்குமாக இடம்பெயரும் நாடோடி வாழ்க்கைதான் மீனவர்களது வாழ்க்கை. காற்று மாறும் பருவங்களில் அவர்கள் காற்றொதுக்கான கரைகளை நாடி இடம் பெயருவார்கள்.
•Last Updated on ••Tuesday•, 26 •May• 2020 09:03••
•Read more...•
••Wednesday•, 20 •May• 2020 08:04•
??- முருகபூபதி-??
சிறுகதை
பேத்திக்கு ஆறுவயதாகிறது. பாடசாலைக்குப்போகிறாள். அங்கு ஆங்கில மொழிக்கல்வி. இதுதவிர வாராந்தம் மேலும் மூன்று இடங்களில் படிக்கவும் பயிற்சிக்கும் செல்கிறாள்.
அவை: தமிழ்ப்பள்ளி, நீச்சல் பயிற்சி, பரதநாட்டிய பயிற்சி. அனைத்துக்கும் உற்சாகமாக சென்று வருகிறாள். குடியுரிமை அவுஸ்திரேலியாவில். அதனால் ஆங்கில மொழிக்கல்வி. தாய்மொழி தமிழ்., தமிழை மறந்துவிடக்கூடாது என்பதற்காக பெற்றோரின் கட்டாயத்தில் வாராந்தம் ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் இயங்கும் தமிழ்ப்பள்ளிக்கு செல்கிறாள்.
இங்கு பிள்ளைகளுக்கு நீச்சலும் தெரிந்திருக்கவேண்டும். அவள் செல்லும் பிரதான பாடசாலையில் விளையாட்டு, தேகப்பயிற்சியுடன் நீந்தவும் கற்றுக்கொடுக்கிறார்கள். இது தவிர வீட்டிலிருந்தும் பிரதி சனிக்கிழமை தோறும் வேறு ஒரு இடத்தில் அவள் தகப்பன், அதுதான் எனது மருமகன் நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச்செல்கிறார்
எனது மகளின் அதாவது எனது பேத்தியின் தாயின் இந்திய சிநேகிதி ஒருத்தியின் மகளும் நடன பயிற்சிக்கு செல்வதைப்பார்த்து எனது பேத்தியும் அங்கு செல்ல விரும்பினாள்.
நடனத்தில் இருக்கும் ஆர்வத்தைக்காட்டிலும் தாயின் சிநேகிதியின் மகளுடன் வார விடுமுறையில் நடனம் ஆடுவதற்கு பேத்திக்கு ஆர்வம் அதிகம்.
இவ்வளவுக்கும் மத்தியில் பிரதி வெள்ளிதோறும் மகள் வீட்டுக்குச்செல்லும்போது எனது மனைவியும் உடன்வருவதால், பேத்தியுடன் கொஞ்சி சிரித்து மகிழ்ந்து அவளுடன் பொழுதை போக்குவோம்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையும் சரியாக எட்டு மணிக்கு பேத்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துவிடும். எனது மகள், தனது கைத்தொலைபேசியில் Appa என்ற பெயருடன் எனது கைத்தொலைபேசி இலக்கங்களை பதிவுசெய்து வைத்திருக்கிறாள்.
•Last Updated on ••Wednesday•, 20 •May• 2020 08:12••
•Read more...•
••Saturday•, 09 •May• 2020 10:24•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
வவுனியாவில், பத்து வருசங்களிற்கு மேலே , பணி புரிந்ததில் பார்வதி ஆசிரியைக்கு அலுப்பு ஏற்பட்டிருருந்தது .'ஒரு மாறுதல் தேவை’ என நினைத்தார். கல்விக்கந்தோரில் இவரின் அப்பாவிற்கு தெரிந்தவரான மகாலிங்கம் , இராசையா போன்ற அதிகாரிகள் இருந்தார்கள். மகாவித்தியாலயதிற்கு அண்மித்தே கல்விக் கந்தோரும் இருந்தது, அதிபரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு நேரிலே சென்று விண்ணப்பத்தை கையளித்தார். யாழ்ப்பாணம் தான் விருப்பப் பிரதேசமாக இருந்தது. இங்கே வருவதற்கு முதல் அங்கே தான்...சிறு வயதில் பணியைத் தொடங்கி இருந்தவர். கல்யாணம் முடித்த பிறகு கொஞ்சம் தள்ளி இருந்தால்... என்ன, என்று வவுனியாவைத் தெரிய ...அம்மாவிற்கு என்னம் காரணங்கள் ? அவருடைய மகன் திலீபனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அன்று, தெரியிற வயசுமில்லை ,பன்னிரெண்டு, பதின்மூன்று என்ற..பிஞ்சுப்பருவம் ! ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விருட்ச விருப்பம் ? அதிபரிடம் ஏற்கனவே கதைத்திருந்தார். எப்பவுமே உடம்பை ஒரு வித ஆட்டத்துடன் கதைக்கிற சத்குருநாதன், அரசியல் மேடைகளில் பிரச்சார பீரங்கியாக ...போக வேண்டியவர், அதிபராகி அரசியலில் சம்பாதிக்க முடியாத ‘நல்லவர்’ என்ற பெயரை ஆசிரியர் ,மாணவர் மத்தியில் சம்பாதித்து விட்டிருக்கிறார். நிச்சியமாக அவர் கதைப்புத்தகம் வாசிக்கிற ஒரு இலக்கியவாதியாகவும் இருக்கவே வேண்டும் ! ஒருவேளை , மனுசர் ஆங்கிலத்தில் படிக்கிறாரோ ?. கனகாலமாக அதிபராக வீற்றிருக்கிறார் . புரிந்து கொள்ளக் கூடியவர், வயதில் பெரியவர் ."தங்கச்சி, உதவி ஏதாவது செய்ய வேண்டுமா? " எனக் கேட்டார். " இல்லை சேர், தெரிந்தவர்கள் இருவர் அங்கே இருக்கிறார்கள் " என்று பள்ளிக்கூட நேரத்தில் அனுமதிப் பெற்றுச் சென்றார் .
•Last Updated on ••Saturday•, 09 •May• 2020 10:41••
•Read more...•
••Monday•, 20 •April• 2020 08:15•
??- முனைவர்கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை ,அறிவியல்கல்லூரி,கோவை -??
சிறுகதை
கணுக்காலின் மேற் கெண்டையில் முதிர்வின் வலைப்போர்த்தியக் கால் தோலில், புடைத்திருந்த நரம்பில் குருதி பெருக, எக்கி பரண்மேல் எதையோ துழாவினாள் 'செள்ளி'. அவளின் எழுபது வயதை எப்பொழுதுமே முப்பதாக காட்சிப்படுத்தும் உடல்திறம் இன்றும் இவளுடன் நீண்டிருந்தது. வயதின் முதிர்வினை அண்டவிடாது மாயம் செய்யும் அவளை கண்டு வியக்காதவர்கள் அவ்வூரில் யாருமில்லை. இன்னும் சுருக்கமடையாத உள்ளத்தாலும், குழந்தைகளுக்கான கைதேர்ந்த நாட்டு மருத்துவத்தாலும் அவள் அவ்வூரில் விசலமடைந்து கொண்டே இருந்தாள். கைகளால் துழாவி துழாவித்தேட அவளுக்கு அது கிடைத்தப்பாடில்லை.
சலித்துக்கொண்டே அடுக்களையில் இருக்கும் முக்காலியை எடுத்துவந்து அதன்மேல் ஏறி தேடினாள். அதன்மேல் ஏறி எட்டிப்பார்த்தாள். பரணின் பாதிவரை மட்டுமே காட்சிப்பட, மேலும் தொடர்ந்த முயற்சியில் கண்விழிப்படலம் நோவுற அவளின் தேடல் தொடர்ந்தது. அவளின் செவிகளோ கடும் வயிற்றுப்போக்கால் அவதியுறும் அவளின் பதினோரு மாதப் பெயர்த்தி 'மணியின்' நலிவு ஓலத்தை கூர்மையாக கேட்டுக்கொண்டே தன் மனிதில் நோவினைச் சேர்த்துக்கொண்டிருந்தாள். 'ஈரமாசியே! ஈரமாசியே!' என்று தன் குலத்தெய்வத்தின் பெயரினை முனங்கியப்படியே அவளின் தேடல் தீவிரமாகத் தொடர்ந்தது.
•Last Updated on ••Monday•, 20 •April• 2020 08:21••
•Read more...•
••Wednesday•, 08 •April• 2020 08:43•
??- எழுதியவர்: கடல்புத்திரன் -??
சிறுகதை
பல்கணியில் நின்ற சதாசிவம்,சுருட்டின் புகையை ஆசை தீர இழுத்து அனுபவித்தார்.தொண்டை கமறியது.வட்டம்,வட்டமாக புகையை விடுறதில் எல்லாம் இறங்கவில்லை.பக்கத்து வீட்டுக்காரர் வயதான சீனர்.அவருடைய மகன் ,மகள்...என கூட்டுக் குடும்பத்துடன் இருக்கிறார். அவர் வீட்டை விட்டுப் போறது தெரிந்தது.பார்க்கிற்குத் தான் போறார் .இவர், போகிற பிரகலாதன் பார்க்கிற்கு காலையிலே மற்ற சீனர்களும் வந்து … காற்றைக் கையால் வெட்டி,வெட்டி பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பார்கள்
அவருடைய மனைவி ,எப்பவோ இறந்திருக்க வேண்டும்.வயசை சொல்ல முடியாது. எழுபத்தஞ்சு ... . இருக்கலாம். பாரியாருடன் திரிகிற இவர்களைப் பார்த்து நட்பாக சிரிக்கிறவர். இவர்களுக்கு தான் என்னவோ அவர்களுடன் .. சேர்ந்து சரியா ய் பழகத் தெரியவில்லை .
சிறைக்குள் இருக்கிறது போன்றது தானே வெளிநாட்டு. வாழ்க்கை. ஆனால் திறந்த வெளிச்…. சாலை போன்ற வசதி இருக்கிறது. எதிர்படுற போது புன்னகைக்கிறது. இவருடைய சுருட்டுப் புகை சமயத்தில் அவர்களுடைய வீட்டுப் பக்கம் போய் விடும். அதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்வதில்லை. சுருட்டுக்கிழம், அனுபவிக்கிறது அற்ப சந்தோசம், அதைப் போய் குழப்புவானேன்…? என பிள்ளைகளும் விட்டு விட்டார்கள்.
பெரியவர் இவர்க்கு யாலுயாய் இருப்பது தான் முக்கியக் காரணம்.பிள்ளைகளும் விளங்கிக் கொள்ள மாட்டார்களா, என்ன !
இவரும், அன்னமும் மகளோட தான் இருக்கிறார்கள்.ஒரே பேத்தி,சித்திரா ..கொஞ்சம் வளர்ந்து விட்டாள். சிலவேளை இவர்களோட பார்க்கிற்கு வருவாள். ரேவதியும், கமலும் சரியான உழைக்கிற மெசின்கள். வேற என்ன சொல்றது?, அவர்களும் கிழவர்களாகினால் தான் பார்க்கின் அருமை தெரியும். இப்ப நண்பிகள், நண்பர் வீட்ட ..என விசிட் பண்ணுகிறார்கள் .பார்க்கிற்கெல்லாம் வருவதில்லை.
சீனரின் பிள்ளைகளும் கூடத் தான் அந்த அழகான பார்க்கிற்கு வருவதில்லை. இந்த நாட்டுக் கலாசாரப்படி நைட் கிளப்புகளிற்குப் போகிறார்களோ?
•Last Updated on ••Saturday•, 09 •May• 2020 10:41••
•Read more...•
••Friday•, 27 •March• 2020 17:12•
??- செ.டானியல் ஜீவா -??
சிறுகதை
வானம் இலவம் பஞ்சுக் கூட்டத்தால் நிறைந்து கிடந்தது. சுற்றிலும் ஆள் அரவமற்ற தனிமையின் சூழலை உணர்ந்தேன். மனம் ஒரு நிலையற்றுத் தாவித்தாவி அலைந்தது. ஏனோ என் நினைவுகள் எங்க ஊர் கடற்கரையை நோக்கி நகர்ந்தது. கொடியில் காயப்போட்ட ஆச்சியின் சேலையைப்போல் பரவைக்கடல் பரந்து விரிந்து உறக்கமற்று என்னைப்போல் கிடந்தது.
சிந்தையில் ஏதேதோ நினைவுகள் வந்து மனதை அலைக்களித்தது. கடந்துவிட்ட என் வாழ்க்கையில் வந்துபோன உறவுகளின் நினைவுகள் ஏக்கத்தைச் சுமந்தும், ஒருசில வலிகளைச் சுமந்தும் இதயத்தை வருடிச் சென்றன. அந்த நினைவுகளில் நட்புக்கு முதலிடம் இருந்தது. காதலுக்கும் அதில் இடம் இருந்தது. என் காதல் ஒருதலைக் காதலானதால் மனதுக்குள் புதைந்தே கிடந்தது. தமிழனின் வாழ்வை புரட்டிப்போட்ட ஈழப்போர், என் வாழ்க்கையின் திசையையும் மாற்றியது. நெருக்கடியான நேரத்தில் என் கூடவே இருந்த நண்பன் ‘எமில்’ என் நினைவுக் கண்ணில் வந்து வட்டமிட்டான்.
என் நண்பன் எமிலுக்கும், மேரிக்கும் இடையில் காதல் தொடங்கிய காலகட்டம். முதலில் காதலைச் சொன்னது மேரிதான். ஆனால் எமில் அதை உடனும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் மறுப்புக்குக் காரணம் இருந்தது. சின்ன வயதிலிருந்தே தன்னை எடுத்துவளர்த்த வீட்டிற்கு மருமகனாகப் போவது அவனுக்கு உறுத்தலாக இருந்தது. ஆனால், மேரி தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சியால் அவனைத் தன் வழிக்கே கொண்டு வந்துவிட்டாள். அவளுடைய விடாப்பிடியான அன்பு அவனை ஆட்கொண்டது. எமில் காதலை ஏற்றுக்கொண்டதிலிருந்தே மேரிக்கு அவன்மேலிருந்த பிரியம் முன்னைவிட பலமடங்காகியது.
மேரியின் அப்பா சூசையப்பர் நல்ல உயரமானவர். சிவலையாக இருப்பார். அவருடைய முகம் மேலிருந்து கீழாக ஒடுங்கி ஏசுவின் முகம் போல் இருக்கும் .மேரியின் அம்மாவைக் காதலித்தே திருமணம் செய்தவர். சாதுவானவர், கபடமற்றவர் என்று ஊரில் பலர் அவரைப் பற்றிப் பேசிக் கொள்வார்கள். அவர் கதைக்கும் பொழுது அவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். மனைவி, பிள்ளைகள் மீது தீராத அன்பு கொண்டவர். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கடையொன்றில் வேலை செய்கிறார். அவரது மீசையைப் பார்த்து “அப்பா உங்கட மீசை பாரதியின் மீசை போல இருக்கிறது” என்று கிண்டல் செய்வாள் மேரி.
•Last Updated on ••Monday•, 15 •June• 2020 01:30••
•Read more...•
••Monday•, 23 •March• 2020 21:53•
?? - வசந்ததீபன் (போடிநாயக்கனூர், தேனி மாவட்டம்) -??
சிறுகதை
அவன் மெளனமாக அமர்ந்திருந்திருந்தான்.சுற்றிலும் நண்பர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
"அதற்கு சொந்தக்காரர் நீங்களா..? நம்ப முடியல்லையே..."
"வேறொருத்தர..சொல்றாங்களே..? அதுவும் இறந்து போன..புகழ்பெற்ற .. சினிமா மெட்டில்..அரசியல் கலந்து..தேர்தல் களங்களில்..அரசியல் மேடைகளில்.. பாடும் பாடகர் பெயரை குறிப்பிடுகிறார்களே..?"
"உண்மையா..இல்லை..புகழ்ச்சிக்காக நீங்கள் இட்டுக்கட்டியதா...?"
"இன்னைக்கி..இந்த மாதிரி ..சொல்லிக்கிட்டு..நிறையப் பேர்..கோர்ட்..வழக்குக்குன்னு...நாட்ல..நிறைய நிகழ்வுகள்..அன்றாடம் நடந்துக்கிட்டிருக்கு..."
இன்னும் சிலர் அவனை சொல் என்ற மொன்னையான கத்தியால் கீறி தங்களின் அடிமன இச்சைகளை தீர்த்துக் கொண்டிருந்தனர்.
எல்லாவற்றையும் சிறு புன்னகையில் சுவீகரித்துக் கொண்டிருந்த அவன் முப்பது வருடங்களுக்கு முன் தன் கல்லூரிக் காலத்திற்குள் பயணித்தான்.
கூழாங்காறு என்ற கூவலிங்க ஆற்றின் தென்கரையில்..புளியமரங்கள் சூழ்ந்து அந்த கல்லூரி இருந்தது. மேற்கில் மேற்குத்தொடர்ச்சி மலையும்,தெற்கில் தனித்து நின்ற குன்றின் மேல் சிவன் கோவிலும், மானாவாரி புழுதிக்காடுகளுமாக அதன் எல்லைகள் இருந்தன.
ஆறு மிகப் பெரிதானதாய் இல்லாமல் நீரோடை போல இருக்கும். அதன் இருகரைகளிலும் தென்னந்தோப்புகள்..பார்ப்பதற்கு..மிக அழகான சோலைவனம் போல் காட்சியளிக்கும்.
"நண்பா..நண்பா..என யாரோ தன்னைத் தொட்டு உலுக்கிய போது தான் அவன் இயல்பு நிலைக்குத் திரும்பினான் அவன்.
எதிரே கோபமும் சீற்றமும் நிரம்பித் ததும்பும் முகங்களோடிருக்கும் நண்பர்களைக் கண்டதும் அவனுக்குள் பதட்டம் பரவியது.
அவசரமாக பேசத் தொடங்கினான்," மன்னியுங்கள் நண்பர்களே..உங்களின் கேள்விகள் என்னை..பழைய காலத்திற்குள் இழுத்துக் கொண்டு போய் விட்டது..அதான்..நான்..என்னை மறந்த நிலைக்குள் இருந்து விட்டேன்..மற்றபடி உங்களின் கேள்விகளை அலட்சியப் படுத்திட நான் முனையவில்லை..மன்னியுங்கள்.."
•Last Updated on ••Monday•, 23 •March• 2020 21:56••
•Read more...•
••Thursday•, 05 •March• 2020 09:01•
??-கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
- குவீன்ஸ்லாந்து தமிழ்மன்றம் நடத்திய `அவுஸ்திரேலியா – பலகதைகள்’ சிறுகதைப்போட்டியில் முதல் இடம் பெற்றது (2019) -
பல்கலைக்கழகத்தின் கிழக்குப்புறப் படிக்கட்டுகளின் ஒரு அந்தத்தில், புத்தகங்களைப் பரப்பியபடி காத்திருந்தாள் கரோலின். கரோலின் அவுஸ்திரேலியா நாட்டு வெள்ளை இனத்துப் பெண். மருத்துவம் பயில்வதில் மூன்றாம் ஆண்டில் இருந்தாள்.
அடோனி அவளைக் கடந்து போகும் தருணங்களில் தன் வசம் இழந்து விடுவாள். புத்தகத்தைச் சற்றுக் கீழ் இறக்கி, மாரளவில் பிடித்துக்கொண்டு, கடைக்கண்ணால் ஒருதடவை அவனைப் பார்ப்பாள். ‘ஏதாவது கதையேன்’ என்பது போன்று அந்தப் பார்வை இருக்கும். அடோனி ஒரு அபொறியினல், திருடப்பட்ட தலைமுறையைச் சார்ந்தவன். மேற்கு அவுஸ்திரேலியாவில் இருந்து படிப்பதற்காக மெல்பேர்ண் வந்திருந்தான்.
இப்படித்தான், அன்று அடோனி அவளைக் கடந்து செல்கையில், திடீரென கரோலின் தன் இருப்பை விட்டு எழுந்து நின்று புன்னகைத்தாள். எத்தனை நாள் தான் கடைக்கண்ணால் வெட்டுவது? அடோனி பயந்தே போய்விட்டான். பளிங்குக்கண்கள், மெல்லிய கீற்றுப் போன்ற புருவங்கள், கூரிய நாசி, காற்றிலாடும் பறவையின் மெல்லிய பொன்நிற இறகுகளாகக் கூந்தல், பரிதிவட்டம் போன்றதொரு ஓலைத்தொப்பி. ஏதோ ஒரு பெயர் தெரியாத சென்றின் நறுமணம் ஒன்று அவளிடமிருந்து பிரிந்து வந்து அவனைச் சூழ்ந்து கொண்டது. இவை எல்லாமுமாகச் சேர்ந்து அவனைப் பொறி போல அப்பிக் கொண்டது. அதுவே அவர்களின் மூச்சு முட்டும் தூரத்திற்குள்ளான முதல் அறிமுகம்.
“ஹலோ” பட்டெனப் பேசும் ஆசாமி கரோலின். அப்பாவி என எழுதி ஒட்டியிருக்கும் தன் அகன்ற விழிகளால் அடோனி அவளை முழுசிப் பார்த்தான். போய்விட்டான்.
பூர்வீகக்குடிகளும், அவர்களுக்குப் பிறந்த கலப்பினத்தவரும் படிப்பதற்கு வருவதே குறைவு. அடோனி மருத்துவம் படிக்க வந்தது பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. அவுஸ்திரேலியாவில் பூர்வீகக்குடிகளின் உடல் ஆரோக்கியம் ஏனையவர்களைக் காட்டிலும் குறைவாக இருந்ததும், அவர்கள் இள வயதிலேயே மரணமடைந்து வருவதையும் பள்ளியில் படிக்கும்போது அடோனி அறிந்திருந்தான். அதுவே அவனை மருத்துவம் படிக்கத் தூண்டியிருக்கலாம்.
•Last Updated on ••Wednesday•, 08 •July• 2020 14:04••
•Read more...•
••Wednesday•, 26 •February• 2020 10:02•
??- முருகபூபதி -??
சிறுகதை
பேரின்பத்தார் என்ற பேரின்பநாயகத்திற்கு தற்போது அந்த பொதுத்தொண்டின் மீது வெறுப்பு வந்துவிட்டது. அவர் சில பொதுப்பணிகளில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டர். ஆனால், குறிப்பிட்ட அந்தத் தொண்டின் மீதுதான் அவருக்கு மனக்குறை வந்துவிட்டது. அக்குறை வயிற்றில் அல்சர் வருமளவுக்கு மன அழுத்தம் கொடுத்துவிட்டது.
இரவில் தூக்கமும் அல்சரினால் அடிக்கடி கலைந்துவிடும். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மும்மொழியிலும் எழுதவும் பேசவும் மொழிபெயர்க்கவும் நல்ல ஆற்றல் உள்ளவர்.
ஊரில் வசதிபடைத்தவர்கள் இறந்துவிட்டால், பத்திரிகை, வானொலிக்கு மரண அறிவித்தல் எழுதிக்கொடுப்பது முதல், அந்தியேட்டி வரும் வேளையில் கல்வெட்டு எழுதிக்கொடுப்பதும் அவரது வேதனம் ஏதும் இல்லாத தொண்டு.
எண்பதுக்குப்பின்னர் அவரது ஊரைச்சேர்ந்தவர்கள், கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து சென்று வதிவிடம் பெற்று - எவரேனும் அங்கே இறந்துவிட்டால், பேரின்பத்தாரைத்தான் தொடர்புகொள்வார்கள்.
தேமதுரத் தமிழோசை அங்கெல்லாம் பரவினாலும், இந்த கல்வெட்டு கலாசாரத்தையும் தம்மோடு எடுத்துச்சென்ற ஈழத்து தமிழர்களுக்கு எவ்வாறு கல்வெட்டு எழுதுவது என்பதை அங்கே யாரும் பயிற்றுவிக்கவில்லையோ..? என்று தனது மனைவியிடம் அடிக்கடி சொல்லி வருந்துபவர்.
கடல் கடந்து சென்ற பலரது மரணச்சடங்குகளை ஊரிலிருந்து ஸ்கைப்பிலும், தபாலில் வந்த இறுவட்டிலிருந்தும் பார்த்திருப்பவர்.
•Last Updated on ••Wednesday•, 26 •February• 2020 10:04••
•Read more...•
••Saturday•, 22 •February• 2020 11:25•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
[ இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'அமெரிக்கா' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட 'பனையும் பனியும்' சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. முதலில் தாயகம் (கனடா) பத்திரிகையில் 'ஒரு மாட்டுப்பிரச்சினை' என்னும் தலைப்புடன் வெளியாகியது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பானது (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) இலண்டலிலிருந்து வெளியாகும் 'தமிழ் டைம்ஸ்' ஆங்கில இதழில் வெளியாகியுள்ளது. ]
ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட்' 'சென்ற்கிளயர்' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித 'டென்ஷ'னுமின்றிப் பின்னால் 'ஹோர்ன்' அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'ஹோர்ன்' அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. 'நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை' இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். 'நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்' என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும் அவன் சிந்தித்துக் கொள்வான்.
'ஓல்ட்வெஸ்டன்' றோட்டைக் கடந்து 'கீல் இண்டர்செக்ஷ'னையும் கடந்து கார் விரைந்தது. இடப்புறத்தில் 'கனடாபக்கர்ஸி'ன் 'ஸ்லோட்டர்' ஹவுஸ்' பெரியதொரு இடத்தைப் பிடித்துப் ப்டர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளைத் துண்டு போடும் பெரியதொரு கசாப்புக்கூடம்.
பொன்னையா இயற்கையிலேயே சிறிது கருணை வாய்ந்தவன். ஏனைய உயிர்களின்மேல் அன்பு வைக்க நினைப்பவன். ஊரிலை இருக்கும் மட்டும் சுத்த சைவம்தான். இங்கு வந்ததும் கொஞ்சங்கொஞ்சமாக மாறி விட்டான். 'இங்கத்தைய கிளைமட்டிற்கு இதையும் சாப்பிடாட்டி மனுஷன் செத்துத் துலைக்க வேண்டியதுதான்'. திடீரென் ஊர்ந்து கொண்டிருந்த 'டிரபிக்' தடைப்பட்டது. பொன்னையா மணியைப் பார்த்தான். நேரம் பதினொன்றையும் தாண்டி விட்டிருந்தது. பஞ்சாப்காரன் பத்து மணிக்கே வரச்சொல்லியிருந்தான். பொன்னையாவிற்குத் தெரிந்த ஓரளவு நாணயமான கராஜ் அந்தப் பஞ்சாப்காரனின் கராஜ்தான். ஸ்டியரிங்கில் மெல்லியதொரு உதறல் நேற்றிலிருந்து. அதனைக் காட்டத்தான் பொன்னையா விரைந்து கொண்டிருந்தான். 'நேரங் கெட்ட நேரத்திலை இதென்ன டிரபிக் புளக்..' இவ்விதம் எண்ணியபடி டிரபிக் தடைப்பட்டதற்குக் காரணம் என்னவாகயிருக்குமென் எதிரே நோக்கினான்.
•Last Updated on ••Thursday•, 23 •April• 2020 14:36••
•Read more...•
••Thursday•, 13 •February• 2020 12:38•
?? - குரு அரவிந்தன் -??
சிறுகதை
அவன் உள்ளே வரும்போது ஹாலில் அவள் தனியே டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள்.
யார் இந்தப் பெண்? தங்கையின் சினேகிதியாக இருக்குமோ?
அவன் அவளைக் கவனிக்காதது போலக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவளைக் கடந்து தனது அறைக்குச் சென்றான்.
தங்கைக்கு இப்படி ஒரு அழகான சினேகிதி இருப்பது கூட அவனுக்கு இதுவரை தெரியாமற் போச்சே என்று வருத்தப்பட்டான்.
அவளைப் பார்த்த உடனேயே அவன் மனத்தில் என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வு ஏற்படுவதை உணர்ந்தான். எத்தனையோ பதுமவயதுப் பெண்களைப் பார்த்திருக்கிறான், பழகியிருக்கிறான் ஆனால் சட்டென்று இப்படி ஒரு உணர்வு அவனுக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.
அவளைப் பார்த்ததும், இரசாயண மாற்றங்கள் சட்டென்று தனது உடம்பில் ஏற்பட்டதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைத்துப்பார்த்தான். எப்படியாவது மீண்டும் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்க்க வேண்டும் போலவும், அவளோடு ஒருமுறையாவது பேசிவிட வேண்டும் என்பது போன்று வெறித்தனமான அந்த உணர்வு அவனுக்குள் அலை மோதிக் கொண்டிருந்தது.
தனது அறைக்குள் சென்று, அறைக்குள் இருந்தபடியே அவளைப் பார்க்கக் கூடியதாக அறைக்கதவை கொஞ்சமாகத் திறந்து வைத்தான். அவள் இவன் இருந்த அறைப்பக்கம் திரும்பிய போதெல்லாம் இங்கிருந்தே அவளது முகத்தை உன்னிப்பாய்க் கவனித்தான்.
•Last Updated on ••Monday•, 24 •February• 2020 10:41••
•Read more...•
••Friday•, 07 •February• 2020 12:42•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- இச்சிறுகதை அமரர் எழுத்தாளர் குகதாசன் இதழாசிரியராகவிருந்த சமயம் வெளியான யாழ் இந்துக்கல்லூரிச் (கனடா) சங்கம் வெளியிட்ட 'கலையரசி' மலருக்காக எழுதப்பட்ட சிறுகதை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. சிறுகதைகள்.காம் இணையத்தளத்திலும் இடம் பெற்றுள்ளது.-
யன்னலினூடு தெரிந்த அதிகாலை வானத்தைப் பார்த்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். மெல்லிய இருட்போர்வையின் அரவணைப்பில் சுகம் கண்டுகொண்டிருந்த பூமிப் பெண்ணிற்கு உறக்கத்தை விட்டெழுவதற்கு இன்னும் மனம் வராமல் அப்படியே படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருப்பது போல் பட்டது. விடிவெள்ளி பிரகாசத்துடன் விடிவை கட்டியம் கூறி வரவேற்றுக் கொண்டிருந்தது. ஊரில் இருந்த மட்டும் அவரிற்கு மிகவும் பிடித்தமானவை அதிகாலையில் எழுந்து கல்லுண்டாய் வெளியினூடாக நடந்து வருவதும், விடிவெள்ளியின் அழகில் மெய் மறப்பதும் தான்."மாஸ்ட்டர், மாஸ்ட்டர்" என்று எவ்வளவு பெரிய பெருமை அவரிற்கு."படிப்பிற்கு மாஸ்ட்டரின் பிள்ளைகளைக் கேட்டுத்தான்" என்று கதைப்பார்கள்.'வர மாட்டேன், வர மாட்டேன்' என்றிருந்தவரை மகன் தான் வற்புறுத்தி கனடா வரவழைத்திருந்தான். வந்து ஒரு வருடத்திற்குள்ளேயே அவரிற்கு வாழ்க்கை போதும் போதுமென்றாகி விட்டது. நான்கு சுவர்களிற்குள்ளேயே வாழக்கை அதிகமாகக் கழிகின்றது. இயற்கையை இரசித்து ஆனந்தமாகப் பறந்து கொண்டிருந்த பறவையைப் பிடித்துக் கூட்டினுள் அடைத்து வைத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அவர் நிலை.
ஊரில் நிலவிய அந்த சமூக வாழ்வியற் தொடர்புகள் இங்கு அற்றுத் தான் போய் விட்டன. அங்கு...பொழுது விடிவதிலும் ஒரு அழகு. பொழுது சாய்வதிலும் ஒரு அழகு.இரவெல்லாம் நட்சத்திரப் படுதாவாகக் காட்சியளிக்கும் விண்ணைப் பார்ப்பதிலுள்ள இன்பத்தைப் போன்றதொரு இன்பமுண்டோ? மின்மினிப் பூச்சிகளும் இரவுக்கால நத்துக்களின் விட்டு விட்டுக் கேட்கும் ஓசைகளும் இன்னும் காதில் கேட்கின்றன. மழை பெய்வதென்றால் சுப்ரமணிய வாத்தியாரிற்கு மிகவும் பிடித்ததொரு நிகழ்வு. 'திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தோம்' போடுமந்த மழையிருக்கிறதே...'வெட்டியிடிக்கும் மின்னலும்' 'கொட்டியிடிக்கும் மேகமும்' 'விண்ணைக் குடையும் காற்றும்'...வானமே கரை புரண்டு பெய்யும் அந்த மழையின் அழகே தனி அழகு. இங்கு பொழுது புலர்வதும் தெரிவதில்லை. பொழுது சாய்வதும் தெரிவதில்லை. மழை பெய்வதும் இன்பத்தினைத் தருவதில்லை. மூளியாகக் காட்சியளிக்கும் நகரத்து இரவு வானம் இழந்து விட்ட இனபத்தினை நினைவு படுத்தி சோகிக்க வைக்கும். நாள் முழுக்க நாலு பேருடன் கதைத்துக் கொண்டிருந்தவரிற்கு கனடா வாழ்க்கை நான்கு சுவரிற்குள் நரகமாக விளங்கியது. எந்த நேரமும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தவரிற்கு ஓய்ந்து கிடப்பது கொடிதாகவிருந்தது. 'திக்குத் தெரியாத கட்டடக் காட்டினுள்' வந்து சிக்கி விட்டோமோவென்று பட்டது. அதே சமயம் மகனை நினைத்தாலும் கவலையாகத் தானிருந்தது.
•Last Updated on ••Friday•, 07 •February• 2020 12:49••
•Read more...•
••Thursday•, 06 •February• 2020 00:41•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நு¡லகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காழியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.
" என்ன தூக்கக் கலக்கமா " என்றேன்.
" இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு" என்று கூறிச் சென்றான்.
சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.
"என்ன அடிக்கடி இங்கு நூல்கள் திருட்டுப் போகின்றனவா?" என்றேன்.
அதற்கவன் "இந்தப் பாடசாலைக் குழந்தைகள் பொல்லாததுகள். கணினிப் புத்தகங்களிலுள்ள சிடிகளை திருடிச் சென்று விடுவார்கள். சரியான தொல்லை. ஆனால்.." என்றான்.
"என்ன ஆனால்..?" என்றேன்.
"ஆனால்.. நானும் ஒருகாலத்தில் கலிபோர்னியாவில் இதையெல்லாம் செய்து திரிந்தவன் தான்" என்றான்.
"என்ன நீ கலிபோரினியாவிலிருந்தவனா?"
" ஆமாம் மனிதனே! அது ஒரு பெரிய கதை. அது சரி நீ எந்த நாட்டவன்.?"
•Last Updated on ••Thursday•, 06 •February• 2020 00:49••
•Read more...•
••Wednesday•, 29 •January• 2020 08:50•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- தாயகம் (கனடா) சஞ்சிகையில் முதலில் வெளியான சிறுகதை. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் பிரசுரமானது. ஸ்நேகா (தமிழகம்) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. -
கடந்த ஒரு மணிநேரமாக இவன் நடந்துகொண்டிருக்கின்றான். யார் இவன் என்கின்றீர்களா? வேறு யாருமில்லை. இவன்தான். இவன் இவனேதான். அவன் அவனேதான் என்று சொல்வதில்லையா? அது போல்தான். இவனும்இவனேதான். இவனிற்குக் கொஞ்சநாட்களாகவே ஒரு சந்தேகம். என்னவென்று கேட்கின்றீர்களா? வேறொன்றுமில்லை. வழக்கமாக நம்நாட்டு வேதாந்திகளிற்கு வரும் சந்தேகங்களில் முக்கியமானதொன்றுதான். 'நான் யார்.நானென்றால் நான் யார்? இது தான் இவனது சந்தேகம். அதற்கு முன்னால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அது என்ன? அதுதான் இவன் நடந்து கொண்டிருக்கின்ற பாதை, 'நான் கடந்து வந்த பாதை' என்றிருக் கின்றதே அது போல் தான் இவன் கடந்து கொண்டிருக்கின்ற இந்தப் பாதையும். இவன் சிறுவனாகயிருந்தபோது இந்தப் பாதையைப் பற்றி இவன் படித்திருக்கின்றான். இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றது. இவனிற்குப்புவியியல் கற்பித்த ஆசிரியையின் ஞாபகம் கூட இருக்கின்றது. இவ்வளவுஞாபகசக்திமிக்க இவனிற்கு இவனைப் பற்றி மட்டும் அப்படியெப்படி சந்தேகம் வரலாம் என்கின்றீர்களா? பொறுங்கள்! சற்றே பொறுங்கள். அதற்கு முன் இவன் கடந்து செல்கின்ற பாதையைப் பற்றிச்சிறிது பார்ப்போம்.
•Last Updated on ••Wednesday•, 29 •January• 2020 11:07••
•Read more...•
••Monday•, 20 •January• 2020 10:14•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- முதலில் தாயகம் சஞ்சிகையில் (கனடா) வெளியான சிறுகதை. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் வெளியானது. தமிழகத்திலிருந்து ஸ்நேகா (தமிழகம்)- மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. இது பற்றி எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்கள் தொகுப்புக்கான அணிந்துரையில் 'சுண்டெலி ஒன்றின் மூலம் உயிர்வாழ்வின் மனித அடித்தள இருத்தலியலின் தாற்பரியத்தைக் கூற முயன்றுள்ளார்.' என்று கூறியிருக்கின்றார். -
"...இந்தப் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருமே தனது வாழ்நாளில் இயலுமானமட்டும் முயன்றுதான் பார்க்கின்றது சுண்டெலியைப் போல் ஏன் என்னைப் போல் என்றும் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். நாட்டில் பிரச்சினை மூண்டுவிட்டதென்று சொந்த மண்ணைவிட்டு வந்ததிலிருந்து இன்றுவரை எத்தனை வழிகளில் எத்தனை முயற்சிகள். ஒன்று சரி வந்தால் இன்னுமொரு முயற்சி. ஒன்று பிழைத்து விட்டாலும் இன்னுமொரு முயற்சி. எத்தனை அதிசயமான பிரமாண்டமான பிரபஞ்சம். புதிர்கள் நிறைந்த பிரபஞ்சம்..."
கரப்பான் தொல்லையைத் தாங்க முடியவில்லை. எல்லா வழிகளிலும் முயன்று பார்த்தாகி விட்டது. சீனாக்காரனின் 'சாக்' தொடக்கம் முயலாத வழிகளில்லை. வெற்றி கரப்பான் பூச்சிக்குத்தான். பேசாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு 'அப்பார்ட்மென்ற்' விட்டு 'அப்பார்ட்மென்ற்' மாறினால் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதைதான். கரப்பான் பூச்சிகளிற்குப் பதில் சுண்டெலிகளின் தொல்லை. கனடாவில் கட்டடங்கள்தான் உயர்ந்தனவே தவிர எலிகளல்ல. கொழுத்துக் கொழுத்து உருண்டு திரிந்த ஊர் எலிகளைப் பார்த்த எனக்கு இந்தச் சுண்டெலிகள் புதுமையாகத் தெரிந்தன. நாட்டுக்கு நாடு மண்ணுக்கு மண் உயிர்கள் பல்வேறு வடிவங்களில் உருமாறி வாழத்தான் செய்கின்றன.
•Last Updated on ••Monday•, 20 •January• 2020 10:24••
•Read more...•
••Thursday•, 16 •January• 2020 10:34•
??-வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- இச்சிறுகதை முதலில் உயிர்நிழல் (பிரான்ஸ்) சஞ்சிகையில் வெளியாகியது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியது. -
யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். 'பேப்' வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த 'யமேய்க்க' மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளயர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். 'பேப்' வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். 'சிறு இந்தியா' , 'சிறு இத்தாலி'..இப்படி பல பகுதிகள்.
அது ஒரு மாலை நேரம். மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்த சமயம். இலேசாக மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் யன்னலினூடாக எதிரே விரிந்திருந்த உலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.
'யன்னல்'. அன்னியர் வருகையால் தமிழிற்குக் கிடைத்த இன்னுமொரு சொல். 'சப்பாத்து' 'அலுகோசு' போல் போர்த்துக்கேயரின் வருகை பதித்து விட்டுச் சென்றதொரு சொல் 'யன்னல்'. 'யன்னல்' யன்னலாக நிலைத்து நின்று விட்டது. 'சாளர'த்தை விட எனக்கு 'யன்னல்' என்ற சொல்லே பிடித்து விட்டிருந்தது. 'மின்ன'லிற்கு எதுகையாக நன்கு அமைந்த சொல் யன்னல். யன்னல் என்ற பெயரிற்கு ஒரு மகிமை இருக்கத்தான் செய்கிறது. உலகப் பணக்காரனை உருவாக்கியதும் ஒரு 'யன்னல'ல்லவா! யன்னலின் மறைவில் உலகை ரசிக்கலாம் இணையத்தில். இங்கும் தான். திரும்பிப் பார்த்தாலொழிய யார்தான் கண்டு பிடிக்கக்கூடும்? தனித்தமிழ் தனித்தமிழென்று சொல்லி நின்றிருந்தால் தமிழ் நல்லதொரு சொல்லினை இழந்திருக்கும். வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்போம். வந்தாரை வரவேற்று உபசரிப்பது தமிழ்ப் பண்பென்று புளகாங்கிதம் அடைகின்றோம். வந்த சொல்லினை வரவேற்று உள்வாங்குவம் மொழி தமிழ் மொழி என்று இறும்பூதெய்வதிலென்ன தயக்கம்?
•Last Updated on ••Thursday•, 16 •January• 2020 11:23••
•Read more...•
••Monday•, 13 •January• 2020 10:34•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
“ பணத் தாள்கள், சில மனிதர்களை மாற்றி விடுகின்றன, என்னையல்ல”இப்படி நினைப்பவன் இராசாத்தி . அவனை,” பிறர் , பொக்கற்றிலிருந்து எடுப்பது குற்றம் போல,நிலத்திலிருந்தும் எடுக்கிறதும் குற்றம் தானே?”…என்ற சிந்தனை கலைத்துக் கொண்டே இருக்கிறது.
வீதியில் கிடக்கிற போது ,வெறுமனே கிடக்கிறதே என்று அதனை கடந்தும் போகவும் முடிகிறதா, முடியிறதில்லையே?.”. கனம் கோர்ட்டார் அவர்களே, இலங்கைப் பயங்கரவாதச் சட்டத்தில் எவை,எவையெல்லாம் குற்றங்கள்?அஸ்கிரியப் பீட தேரர்களிடம் கேட்டு, கேட்டுச் தீராத சந்தேகங்களை….எல்லாம் எங்கே தீர்த்துக் கொள்வது.? என்ற அவசரத்தில் ,கழுத்தும் வாங்கி," அட ,கழுத்திலேயும் ஒரு நோ !
இலங்கை அரச அதிபர்கள்,சொந்த மூளை கழற்றி ,இரவலைப் பொறுத்தி ...நீண்ட நாள்களாகி விட்டன.அந்த மூளையோ துருப் பிடித்து,துருப் பிடித்து,இனப்படுகொலை வரைப் படத்தை பிரதி எடுத்து, கட்டளைகளை பிறப்பிக்கத் தொடங்கி ,புத்தரிசத்தைத் தொலைத்தும் கனகாலமாகி விட்டன.
"எந்தக் காலத்திற்லும் பயங்கரவாதச் சட்டங்களையும் ,அவசரகாலச் சட்டங்களையும் ...அகற்றி விடாதீர்கள். அவை தான் ...அத்திவாரங்களே!" அசரீரிகள் அவர்களுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. காலடியில் கிடக்கும் அற்பர்களிற்கு விளங்கிறதோ, இல்லையோ," அந்தக் கொள்கைகளில் கால் வைத்தவர்களிற்கெல்லாம் அது மீற முடியாத கட்டாய விதி !". இலங்கை அதிபர்கள் ,"என்னால்,இவர்களை மீறி எதையுமே செய்ய முடியிறதில்லையே” என்று கதறுகிறார்கள்.
•Last Updated on ••Monday•, 13 •January• 2020 10:45••
•Read more...•
••Wednesday•, 08 •January• 2020 10:19•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- புகலிட வாழ்பனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட எனது சிறுகதைகள் இவை. புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த ஒருவர் அடையும் பல்வகை அனுபவங்களை விபரிப்பவை இவை. இவை பதிவுகள் இணைய இதழில் 'வ.நகிரிதரனின் புகலிடச் சிறுகதைகள்' என்னும் தலைப்பில் தொடர்ச்சியாகப் பிரசுரமாகும் - வ.ந.கி -
கி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து , சொர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற, ஒரு காலத்தில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனியாக விளங்கிய, 'சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட, தீவான இன்று ஸ்ரீலங்கா என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தீவில் அவதரித்தான். அவன் அவதரித்தபொழுது அவனுக்கொன்றும் இவ்விதம் அவனது வாழ்க்கை பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் அலைக்கழியுமென்று தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் தீவின் தொடர்ச்சியான அரசியல் நிலைகள் அவனைப் புலம்பெயர வைத்து விட்டன. இன்று அவன் வட அமெரிக்காவின் முக்கியமானதொரு நாடான கனடாவின் குடிமகன். இது அவனைப்பற்றிய சுருக்கமான வரலாறு. என்புருக்குமொரு அதிகாலைப் பொழுது. அவன் வேலை செல்வதற்காக போக்குவரத்து வாகனத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். அருகிலொரு வெள்ளையின நடுத்தர வயதினன் அவனுக்குத் துணியாக. அவர்களிருவரையும்தவிர வேறு யாருமே அச்சமயத்தில் அங்கிருக்கவில்லை. நிலவிய மெளனத்தினைக் கலைத்தவனாக அந்த வெள்ளையினத்தவன் அவர்களிருவருக்கிமிடையிலான உரையாடலினைத் தொடங்கினான்:
"இன்று வழமைக்கு மாறாகக் குளிர் மிக அதிகம்!"
இங்கு ஒருவரையொருவர் சந்திக்கும்பொழுது அதிகமாகக் காலநிலையினைப் பற்றி அல்லது 'ஹாக்கி' அல்லது 'பேஸ் பால்' விளையாட்டு பற்றியுமே அதிகமாக உரையாடிக் கொள்வார்கள். வருடம் முழுவதும் மாறி மாறிக் காலநிலையினைக் குறை கூறல் பொதுவானதொரு விடயம்.
•Last Updated on ••Wednesday•, 08 •January• 2020 10:47••
•Read more...•
••Monday•, 30 •December• 2019 14:30•
??- ஸ்ரீராம் விக்னேஷ், வீரவநல்லூர் (தமிழகத்து நெல்லை மாவட்டம்) -??
சிறுகதை
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்திலேறி அதிலே தொங்கிக்கொண்டிருந்த உடலைக் கீழே தள்ளிய கதைபோல, ராதாவுடன் மூன்று தடவைகள் பேசியும் மனதுக்கு ஒவ்வாமல், நான்காவது தடவையாக மீண்டும் என் மொபைல்போனை எடுத்தேன்.
எனது நம்பரைப் பார்த்ததும், மிகவும் கடுப்பானாள் அவள்.
“சரியாப் போச்சு…. உருப்பட்ட மாதிரித்தான்…. யேப்பா…. நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்…. ஏதோ சின்ன வயசிலயிருந்து நாம ரண்டு பேரும் ஒண்ணாவே படிச்சோம், வளந்தோமேங்கிறதுக்காக, என் கேசைக் கொண்டுவந்து ஒங்கிட்ட குடுத்தேன்…. உன்னயவிட பெரிய லாயர்மார் இருந்துங்கூட, ஒன்னோட ஆர்கியூமெண்டில நம்பிக்கை வெச்சுத்தான் இந்தக் கேசைத் தந்தேன்…. ஆனா, நீ அப்பப்ப புத்திமாறிப் போயி, செட்டில்மெண்டாய் ஆகிடுன்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டு வர்ரே…. நீ வக்கீல் வேலைக்கு வர்ரதை விட்டு, பேசாம கல்யாண தரகர் வேலைக்கு போயிருக்கலாமில்ல…. சீ….”
வெறுத்துப்போய் பேசினாள் ராதா.
நான் கோபப்படவில்லை. எனக்கு அவள்மீது அனுதாபமே நிறைந்து நின்றது.
காரணம் : எனது பால்யகால பள்ளித் தோழி அவள். பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் நான் அவளுக்கு வழித்துணையாய் சென்று வருவேன். அன்று அரும்பிய பாசம்….. இன்றும் தொடர்கிறது
நான் விடவில்லை. தொடர்ந்தேன்.
“ராதா…. இனிமேலைக்கு நான் இதைப்பத்தி பேசப்போறதில்லை.. ஏன்னா, உனக்கே தெரியும்…. இன்னிக்கு உன் கேஸ் பைனல் ஆகப் போறது…. உனக்கும் பொன்னரசுவுக்கும் டைவர்ஸ் கிளியராகப் போவுது…. நான் ஒரு வக்கீலா இருந்து, இந்தக் கேசை உனக்காக ஆஜராகி நடத்தினது வாஸ்தவம்தான்…. ஆனா, உள்ளூர என் மனசாட்சியோ ஒரு குடும்பத்தைப் பிரிக்க உதவுறமாதிரி உறுத்திக்கிட்டிருக்கு…. இப்பகூட ஒண்ணும் கெட்டுப் போகல்லை…. உன்கூட சேந்து வாழுறதாயும், இனி எந்தத் தப்புமே பண்ணமாட்டேன்னும் பொன்னரசு கோர்ட்டில அழுதது எனக்கே சங்கடமாயிருந்திச்சு…. அதனாலதான் சொல்றேன்…. நீ செட்டில்மெண்ட் ஆகிப் போறதாயிருந்தா இதை ஒரு கடைசி சந்தர்ப்பமா எடுத்துக்க…. இதை நான் உன்னோட லாயராக சொல்ல வரல்லை…. உன்னோட பால்ய சிநேகிதனா சொல்றேன்…. மூணு வயசில உனக்கும் ஒரு குழந்தை இருக்கு…. ஆம்பிளை துணை இல்லாம அதை வளக்கவோ, இல்ல ஒரு பாதுகாப்பா வாழவோ முடியும்னு எப்பிடி நெனைக்கிறே….”
•Last Updated on ••Monday•, 30 •December• 2019 14:35••
•Read more...•
••Sunday•, 29 •December• 2019 02:58•
??- ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா -??
சிறுகதை
உதிர்தலும் ஓர் அழகுதான்.
அவளுக்குள் எழுந்த அந்த ரசனை, நா. முத்துகுமாரின் ‘மலர் மட்டுமா அழகு, விழும் இலை கூட ஒரு அழகு’ என்ற பாடல்வரிகளை அவளுக்கு நினைவுபடுத்தியது. இலைகளை உதிர்க்கத் தயாராகியிருந்த அந்த மரங்களின் கிளைகளின் இடுக்குகளுக்கிடையே ஊடறுத்துச் சென்ற சூரியஒளிக் கீற்றுக்கள், ஓவியன் ஒருவன் கவனமாகப் பார்த்துப்பார்த்து வர்ணமிட்டதுபோலத் தோற்றமளித்த அந்த இலைகளுக்கு மேலும் அழகுசேர்த்தன. காற்றில் சலசலத்த இலைகளில் சில காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அண்ணாந்து பார்த்த அவளின் முகத்தை மெல்லத் தொட்டுப் போயின. ஒரு கணம், அவளின் மனம் ஒரு குழந்தையைப்போல ஆர்ப்பரித்துக்கொண்டது.
மரங்களின் கீழே குவிந்திருந்த இலைகளின்மேல் மெதுவாகக் காலடிவைத்து, அவை சரசரக்க அவள் நடந்தாள். விழுந்திருக்கும் இலைகளைக் கூட்டிக்குவிப்பதும் பின் அவற்றின் மேலேறிக் குதிப்பதும், விதம் விதமான வடிவங்களில் உள்ள இலைகளைச் சேகரிப்பதுமாக அம்மாவுடன் அந்தக் காலத்தில் அவள் விளையாடிய விளையாட்டுக்கள் அவளின் நினைவுக்கு வந்தன. அப்படியே சின்னப் பிள்ளையாக, அம்மாவின் ஒரு குட்டித் தேவதையாக, உறவுகளில் எந்தச் சிக்கலுமில்லாத ஒரு சிறுமியாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாகவிருந்திருக்கும், நினைப்பில் அவள் கண்கள் கசிந்தன.
இயற்கை எப்போதுமே அழகானதுதான். பருவகாலத்து மாற்றங்களை ஆவலுடன் வரவேற்பதும், அவற்றுக்குள் அமிழ்ந்து குதூகலிப்பதும், பருவத்துக்கேற்ற வகையில் விளையாடுவதும்கூட எவ்வளவு இனிமையானவையாக இருக்கின்றன. ஆனால், அதே உதிர்தல்கள், விலகல்கள், விரிசல்கள் வாழ்க்கையில் ஏற்படும்போதுமட்டும் அவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாமல் மனசு மிகவும் வலிக்கிறது. ஒவ்வொரு புதுத்தளிரையும், ஒவ்வொரு புதுஅரும்பையும் பார்க்கும்போது உருவாகும் பரவசமும் சிலிர்ப்பும், உறவுகள் உருவாகும்போது இன்னும் அதிகமாகவே வந்து மனதை நிறைத்துவிடுகிறது, ஆனால், அதே உறவுகள் விலகும்போது மட்டும் அதே லயிப்புடன் பார்க்கமுடிவதில்லை என்ற ஒப்பீடு அவளின் கண்களை மீளவும் நனைத்தது.
மகிழ்ச்சிதரும் ஆரவாரிப்பும், இழப்புத்தரும் வேதனையுமின்றி, Giver என்ற நாவலில் வரும் மனிதர்களைப்போல உணர்ச்சி என்றே ஒன்றில்லாமல் வெறுமன கடமையை மட்டும் செய்துகொண்டு வாழமுடிந்தால், இந்த உலகத்தில் பல பிரச்சினைகள் குறைந்துவிடும் … பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளியேறியது.
“அன்பு செய்யுங்கள், அன்பே தெய்வம், அன்பு செய்வது பலவீனமல்ல, அன்பை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள் … எல்லாமே கேட்க நல்லாத்தானிருக்கு. ஆனா எதிர்பாப்பில்லாமல் அன்புவைக்கிறது எண்டது … ம், ஐயோ என்னாலை முடியாதப்பா. உதவிசெய்யிறது வேறை, அன்பு வைக்கிறதெண்டது வேறை … சரி, அன்பு எண்டது சுயநலமும் கலந்ததுதான், இருக்கட்டுமே, எனக்கெண்டு நேரமொதுக்கேலாத, என்ரை உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காத அன்பு ஒண்டும் எனக்கு வேண்டாம்,” வாய் விட்டே அவள் சொல்லிக்கொண்டாள்.
“குளிர்வர முதல் மரங்களெல்லாம் தங்கடை இலையளை உதிர்க்கிறதும் சுயநலத்திலைதானே. இலையளை வைச்சிருந்தா தாங்க பிழைக்கேலாது எண்டுதானே அதுகளை உதிர்க்குதுகள். பின்னையென்ன, சீ பாவம் அந்த இலையள் குளிரிலை கருகிப் போடுமெண்டு நினைச்சே அதுகளை உதிர்க்குதுகள் … உறவுகளும் ஒரு வகையான addictionதான் எண்டு பிரேம் அண்டைக்குச் சொல்லேக்கே அவனும் இப்பிடித்தான் நினைச்சிருப்பான். என்னோடை தொடர்புகளை அவன் குறைச்சது அவனையும் அவன் முக்கியமெண்டு நினைக்கிற உறவையும் காப்பாத்துற ஒரு முயற்சியாத்தானிருக்கும்…” அவளின் உள்மனம் அவளுடன் பேசியது.
•Last Updated on ••Sunday•, 29 •December• 2019 03:07••
•Read more...•
••Thursday•, 12 •December• 2019 09:29•
??- சுருளிதுரை, பரவை,மதுரை -??
சிறுகதை
வண்டி மேற்காமா கிளம்ப, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் எனக் கண்டக்டர் கூவிக் கொண்டு இருக்க, டிரைவர் ஆக்ஸ் லேட்டரை லேசாக அழுத்திக் கொண்டே இருக்க வண்டி புறப்படுவது போல... உறுமிக்கொண்டு இருக்கு, “ஒட்டன் சத்திரம், தாராபுரம் இருந்தா ஏறு, இடையிலே... எங்கயும் நிக்காது... பைப்பாஸ் வழியா போறது...” எனக்கத்திக்கொண்டே இருந்தார்.
“டைம்பாஸ் கதைப்புத்தகம் சார், அஞ்சு இருபது ரூபா சார், அஞ்சு இருபது ரூவா... எந்தப் புத்தகத்த வேணும்னாலும் எடுத்துக்கிடலாம்... சார் டைம்பாஸ் புத்தகம் சார்...” கூவிக்கிட்டே ஒவ்வொரு பஸ்ஸாக ஏறி இறங்கினான்...
“என்ன இவன் பழைய புத்தகத்துக்கு விலைச் சொல்லுறானே ஒன்னும் புரியலயே...” 60 வயது நிரம்பிய பெரிய மனுஷன் புலம்பிக்கிட்டே “காலம் மாறிப்போச்சு...”
“மாதுளை கிலோ எம்பது, எம்பது”
“வெள்ளரிக்கா பாக்கெட் பத்து ரூபாய்...”
“டக்! டக்! வேர்கடலை, வேர்கடலை...” எனக் கூவிக்கொண்டே தள்ளு வண்டியில் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் இயல்பான பரபரப்புடன் இருந்தது...
“சார் திருப்பூர், திருப்பூர் பைப்பாஸ்...”
“அக்கா மல்லிப்பூ மல்லிப்பூ. நூறு பத்துரூபா, ஒரு முழம் இருபது அக்கா. வாங்கிக்கக்கா...”
சாயங்கால மஞ்சள் வெயில் அடிக்க, மஞ்சள் நிற சேலையில் நாற்பது வயது மதிக்கதக்க நல்ல வாசனையோ இன்னும் இளமை நீங்காத முதுமை தொடாத நிலையில் பின்பக்க படியில் வேகமாக துள்ளிக் குதித்து ஏறி கடைசி சீட்டுக்கு முந்திய சீட்டில் வந்து அமர்ந்தாள், பஸ் மெல்ல ஊர்ந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது... குரு தியேட்டர் திரும்பி... வைகைப்பாலம் கடந்து பாத்திமா கல்லூரி சாலையைப் பிடித்து போய்க் கொண்டு இருந்தது...
“டிக்கெட்... டிக்கெட்... எடுங்க” எனக் கேட்டுக்கிட்டு வர.. இதுவரை புரிந்தும் புரியாமலும் இருந்த புதுப்பாடலைப் போட்டதில் டிக்கெட் கேட்டவுக ஊர் சரியா கேட்காம மாத்திக் கொடுக்க... “மலைப்பாக, பாட்டச் சத்தமா வேற வச்சு... பாட்ட கேட்க முடியல... ஏங்க சத்தத்தை கொஞ்சம் குறைக்கச் சொல்லுங்க...”
•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 09:35••
•Read more...•
••Friday•, 15 •November• 2019 08:52•
??- தேவகி கருணாகரன் (சிட்னி அவுஸ்திரேலியா) -??
சிறுகதை
என்னுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சேர்ந்து எனது எண்பதாவது பிறந்த நாளை அமோகமாக சிட்னியில் கொண்டாடினார்கள். என் மூத்த பேத்தி மாதுமையும் மூத்த பேரன் கபிலனும் கேக் வெட்டியபபின் என்னைப் பற்றி சிறு சொற்பொழிவு ஆற்றி என்னையும் எல்லோரையும் மகிழ்வித்தார்கள்.
பேரன் கபிலன், “அப்பம்மாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த பூமியில் எண்பது வருடங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் அப்பம்மா, இது மிக நீண்டகாலம் ஒரு சாதனை எனச் சொல்லலாம். 1938 இல் இந்த உலகைச் சுற்றி வர நாலு நாள் எடுத்தது. அந்தக் கால கட்டத்திலே ஒருவரின் வருடாந்தச் சம்பளம் $1700 ஆக இருந்தது. அவுஸ்திரேலியாவில் ஒரு கட்டிப் பாண் ஒன்பது சதம், நீங்கள் பிறந்த வருடத்திலே தான் சவுதி அரேபியாவில் எண்ணை கண்டுபிடிக்கப்பட்டது. நம்புகிறீர்களோ இல்லையோ அது சர்வாதிகாரர்களின் காலம், சகாப்தம். ஸ்டாலின், முசலோனி, ஹிட்லர் ஆகியோர் அதிகாரத்தில் இருந்த காலம். இப்படிச் சரித்திர முக்கியத்துவமான காலத்தில் பிறந்திருக்கிறீர்கள். பேரப் பிள்ளைகளான எங்களுக்கு பெருமையாகவிருக்கிறது. அதுமட்டுமா, ஹிட்டலர் யூத மக்களை கொடுமைப் படுத்தியகாலமும் அதுதான்.” எனக்கூறியதோடு தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது பள்ளி விடுதலை நாட்களில் என்னோடு கழித்த இன்பமான நினைவுகளைப் பகிர்ந்து என்னையும் எல்லோரையும் மகிழ்வித்தான்.
இந்தச் சொற்பொழிவு என்னை பின்னோக்கி சிந்திக்க வைத்தது. என் நினைவு தெரிந்த நாள் முதல் இந்த எண்பது வயது வரை கண்ட மாற்றங்களோ ஆயிரம் ஆயிரம். அந்த நினைவுகள் என் நெஞ்சினிலே திரும்பி எழ மனதிலே சொல்லமுடியாத ஏக்கமும் தாபமும் எழுந்தது.
இரண்டாவது மகா யுத்தம் தொடங்குவதற்கு மூன்று வருடங்களுக்கு முன், ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தி எட்டில், தாய் தந்தையருக்கு எட்டாவது குழந்தையாக இந்தப் பூமியில், கொக்குவில் கிராமத்தில் இருந்த எனது பாட்டா பாட்டி வீட்டில் பிறந்தேன். எனக்கு சிந்தாமணி எனப் பெயரும் வைத்தார்கள். எனக்கு ஆறு வயதாக இருக்கும் போது, ஏன் எனக்கு இந்த பழங் காலத்துப் பெயரை சூட்டினீர்கள் என பெற்றோரிடம் கேட்டதற்கு, ஐம் பெருங் காப்பியங்களில் ஒன்றான சிந்தாமணி சினிமாப் படமாக 1937 ஆம் ஆண்டில் வெளிவந்து மக்களிடையே புகழ் பெற்றிருந்தது, அம்மாவிற்கும் அந்தப் பெயர் பிடித்திருந்ததால், அந்தப் பெயரை எனக்கு வைத்தார்களாம்.
•Last Updated on ••Friday•, 15 •November• 2019 09:14••
•Read more...•
••Monday•, 11 •November• 2019 08:19•
?? - சுப்ரபாரதிமணியன் -??
சிறுகதை
குப்பென்று வீசிய முகப்பவுடர் வாசம் தன் பக்கத்தில் அதே இருக்கையின் ஒரு பகுதியில் உட்கார்ந்திருப்பவளிடமிருந்து ஊடாடியதை உணர்ந்தான் அவன்..காலி இருக்கையில் யாரோ பெண் உட்கார்கிறார் என்பது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. யார் என்று கூர்ந்து பார்ப்பது நாகரீகமாக இருக்காது என்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பி வெளிக்காட்சியைப் பார்த்தான், குமரன் நினைவு மண்டபத்தைக் கடந்து பேருந்து அண்ணாவையும் பெரியாரையும் ஒருங்கே காட்டியபடி நகர்ந்தது. அதீத பவுடர் வாசமும் இன்னொரு உடம்பு வெகு அருகிலிருப்பதும் உடம்பைக்கிளர்ச்சி கொள்ளச்செய்தது அவனுக்கு.
பாலம் ஏறும் போது பேருந்துத் திரும்பியதில் அவளின் உடம்பு அவனுடன் நெருங்கி வந்த போது கிளர்ச்சியாக இருந்தது. அந்த முகத்தைக் கூர்ந்து கவனித்தான் . முகச்சவரம் செய்யப்பட்டு பவுடர் இடும்போது தன் முகம் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது. இன்னும் கூர்ந்து கவனிப்பதை அவளும் பார்த்தாள்.
அது திருநங்கையாக இருந்தது. அவன் உடம்பின் கிளர்ச்சி சற்றே அடங்குவதாக இருந்தது. ஆனால் அந்த உடம்பின் நெருக்கமும் உடம்பு வாசனையும் அவனுக்குப் பிடித்திருந்தது. நெருக்கமாக்கிக் கொண்டான்.
நெருப்பரிச்சல் பகுதியில் திருநங்கைகள் அதிகம் இருப்பதைக் கவனித்திருக்கிறான். பிச்சையெடுக்கிற போது அவர்களின் அதட்டல் மிகையாக இருந்திருக்கிறது, பிச்சை கிடைக்காத போது உடம்ப்பின் பாகங்களைக் காட்டியும் உடலை பகிரங்கப்படுத்தியும் செய்யும் சேஷ்டைகளோ பிரதிபலிப்புகளோ அவனை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.பிச்சை கேட்டு கொடுக்காத ஒருவனைத் தொடர் வண்டிப்பெட்டியிலிருந்து தள்ளிக் கொன்ற சம்பவம் சமீபத்தில் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
பெரிய கட்டிடங்கள் மின்விளக்குகளை பொருத்திக்கொண்டு தங்களை அழகாக்கிக் கொண்டிருந்தன. பேருந்தின் வேக இயக்கத்தில் அவள் வெகு நெருக்கமாக தன் உடம்பைப் பொருத்திக் கொள்வது தெரிந்த்து.. அவனுக்கும் இசைவாக இருப்பது போல் இருந்தான்.பயணம் ரொம்பதூரம் தொடர வேண்டும் என நினைத்தான்.
•Last Updated on ••Monday•, 11 •November• 2019 08:50••
•Read more...•
••Friday•, 08 •November• 2019 00:03•
??- ஸ்ரீராம் விக்னேஷ் (வீரவநல்லூர்., நெல்லை, தமிழகம்) -??
சிறுகதை
எனக்கு நல்லா நினைவிருக்கு….., இருவத்தஞ்சு வரியமாகுது…. தைப்பொங்கல் கழிஞ்சு மற்றநாள் மாட்டுப்பொங்கல் அண்டைக்குத்தான் எங்கடை அன்னக்குட்டியும் பிறந்தது.
“அன்னக்குட்டி…….”
ஓமோம்…. நான் அப்படித்தான் கூப்பிடுவேன்.
அன்னக்குட்டியிலையிருந்து நான் பத்து வயது மூப்பு. என்னோடை கூடப்பிறந்த பொம்பிளைபிள்ளையள் ஒருத்தரும் இல்லையே எண்டதாலையும் , அது என்ரை அம்மம்மா யாழ்ப்பாணத்திலையிருந்து ஆசையாய் வாங்கி அனுப்பிவிட்ட மாட்டின்ரை முதல் பசுக்கண்டு எண்டதாலையும், அன்னலச்சுமி எண்ட அவ பேரை வைச்சோம். என்னைப் பொறுத்தமட்டிலை, அன்னக்குட்டி எங்கடை குடும்பத்திலை ஒருத்தி. என்ரை தங்கச்சி…..!
“அன்னக்குட்டி ….. அண்ணை பள்ளிக்குடம் போட்டு வாறன்…. நீ அம்மாட்டை பால்குடிச்சிட்டு நல்லபிள்ளையா பேசாமல் இருக்கவேணும் தெரியுமோ….. துள்ளிப்பாஞ்சு விளையாடுறோமே எண்டு நினைச்சுக்கொண்டு கிணத்தடிப்பக்கம் போவுடாதை…. சரியோ…. கிணத்துக்கை ஒரு கிழவன் இருக்குது…. உன்னைப் பிடிச்சுப்போடும்….”
பள்ளிக்குடம் போகத் துவங்கிறத்துக்கு முதலெல்லாம், என்ரை அம்மாவும் இப்பிடித்தான் என்னட்டையும் அடிக்கடி சொல்லிச் சொல்லி வெருட்டிறவ…. நானும் அதுமாதிரிச் சொல்லிக்கில்லி வெருட்டி வைக்காட்டா, உது சும்மா கிடக்காது கண்டியளோ….
பள்ளிக்கூடத்தில இருக்கையுக்கையும் அன்னக்குட்டியின்ரை நினைவுதான்…..
வீட்டுக்கு வந்தாலும், நேரா கொட்டிலுக்குப் போய், பத்து நிமிசமாவது அன்னக்குட்டியோடை கதைச்சுப்போட்டுப் போனாத்தான் எனக்குப் பத்தியப்படும்….
•Last Updated on ••Friday•, 08 •November• 2019 00:06••
•Read more...•
••Tuesday•, 08 •October• 2019 23:03•
??- யோகராணி கணேசன் -??
சிறுகதை
பொறியியல் கல்லூரியில் உயிர்வேதியியல் பிரிவில் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்த காலமது. என்னை விட ஏழு எட்டு வயது குறைவானவர்களுடனான கல்விப்பயணம். அதிகளவிலான நோர்வேஜியர்களையும் ஒரு சில வெளி நாட்டவர்களையும் கொண்டிருந்த அந்தப் பிரிவில் இலங்கையர்கள் என்று சொல்வதற்கு என்னோடு இன்னுமொரு இளம் மாணவி மட்டுமே.
இரசாயனவியல் தொழில்நுட்பம் என்னும் பாடம் தொடர்பாக ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்காக ஒரு மதுபானங்கள், குளிர்பானங்கள் தயாரிக்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றிற்கு சென்றிருந்தோம். எங்களுக்கு விரிவுரையாளராக இருந்தவர் பின்லாந்து நாட்டைச்சேர்ந்த ஒரு பெண்மணி. இரசாயனவியலில் முதுகலைமானிப்பட்டம் பெற்றவர். எல்லோரும் வரவேற்பறையில் எங்கள் வருகையை பதிவு செய்துவிட்டு காத்திருந்தோம். சரியாக குறிக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு உயர்ந்த சற்று தடித்த தோற்றமுடைய மனிதர் அங்கு வந்தார். கைகுலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நாங்கள் தொழிற்சாலையைப் பார்வையிடுவதற்காக அந்த மனிதரை பின்தொடர்ந்து சென்றோம்.
ஒவ்வொரு கட்டங் கட்டமாக பார்வையிட்டோம். மாணவரின் கேள்விகளுக்கும், விரிவுரையாளரின் வினாக்களுக்கும் மிக சாதாரணமாக விளக்கம் கொடுத்தார் அந்த மனிதர். கணினியின்( computer )துணைகொண்டு தொழிற்சாலை இயந்திரங்களை ஒவ்வொரு படிவத்திற்கும் நகர்த்துவதையும்,கண்காணிப்பதையும் ( process technical ) அவதானிப்பதே எங்களுடைய நோக்கமாக இருந்தது. இங்கு 1500 இற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள். இடையிடையே பேசிக்கொண்டதில் அந்த மனிதர்தான் அந்த நிறுவனத்தின் நிர்வாகி என்று தெரியவந்தது.
•Last Updated on ••Tuesday•, 08 •October• 2019 23:08••
•Read more...•
••Thursday•, 26 •September• 2019 09:37•
??- நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -??
சிறுகதை
எனக்குப் பிடிக்கல்லை. உனக்கு கதை எழுத வரவில்லை. அப்படி எழுதிறதில்லை. அதெல்லாம் பழைய முறை. அதிக விளக்கம் தேவையில்லை. வர்ணிப்புக்களும் வேண்டாம். பொறு ஒரு கதை எழதி ரைப் செய்து கொண்டிருக்கிறன். விரைவில் அனுப்பி விடுவேன். அதைப்பார். அதைப்பார்த்திட்டு என்ன மாதிரி எண்டு சொல்லு. கவிதைகள் எழுதுவது நல்லாயிருக்கு ஆனால் சிறுகதை... அந்தரப்படாதை நல்லா வாசி நல்ல புத்தகங்களை வாசி. சும்மா வாசிக்கிறதில்லை. நல்லாக உள்வாங்கிää அதுக்குள்ள போய்த்திளைத்துää ரசித்து வாசிக்கவேண்டும். இவைகள் அவனின் அறிவுரை.
நல்ல காலம் இவர் ஆசிரியத்தொழில் பார்க்கவில்லை. நறுக்காக நேருக்குநேர் பிழைகளைச் சுட்டிக்காட்டுகிறார். இப்படி மாணவர்களை வழிநடத்தினால் மனமுறிந்து தொடர்ந்து கல்வி கற்பதை விட்டுவிட்டு வேறு ஏதாவது தொழில்தான் பார்த்திருப்பார்கள்.
ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான அறிவும்ää அனுபவத் திரட்டுக்களும்ää கற்பிக்கும் பாடத்தில் பூரண தீர்க்கமான சிந்தனையும் நிறைந்திருக்க வேண்டும் என்று அறிந்திருந்தாள். மாணவர்களின் மனது பாதிக்காவண்ணம் கல்வியைப்; புகட்டுவதில் கையாளும் பல்வேறு முறைகளை பரீட்சித்த காலங்கள் அவள் கண்முன் கரைபுரண்டு ஓடிவிட்டன.
நேருக்கு நேர் சுட்டிக் காட்டும்போது மனதிருத்தித் திருந்தும் பக்குவமும் பெற்றிருந்தாள்.
எவ்வளவு நல்ல குணம் அவனுக்கு. மறைவின்றிக் கூறுவது. நேருக்கு நேரே ஆளைத்தெரியாத போதே அவனின் எழுத்தில் ஒரு கவர்ச்சி. வீட்டிற்கு வந்த ஒரு கடிதம் தான். ஆனால் அவளின் பெயர் குறிப்பிட்டும் வரவில்லை. சம்பிரதாயத்திற்குச் சரி. பரவாயில்லை. அவள் அந்தக் கடிதத்தினைப் பத்திரப்படுத்தி ‘பைலில்’ இன்னும் வைத்திருக்கிறாள். கடிதத்தில் எழுதிய விடயங்கள் அல்ல அதனை எழுதிய முறை. கடிதம் எழுதுவதற்கும் கலை வேண்டும் என எண்ணிக் கொண்டாள். ஆருக்குத் தெரியும்? இலங்கையில் எங்கெங்கோ இருந்த நாங்கள் பிரான்ஸ்ää இங்கிலாந்து என்று வந்து வாழ்வோம் என்றுää அதுவும் அவனும் இங்கிலாந்துக்கு வந்து எங்கட வீட்டுக்கு வருவான் என்று.
அவனின் சிறுகதையும் வந்தது. அவள் இழைத்துää ரசித்து வாசித்து அதில் அவனைக் கண்டாள்.
அவனோடு பழகும்போது இப்படித்தான் இருப்பான் எனக் கற்பனை செய்தாளோ அப்படியேதான் இருக்கிறான். மாற்றமில்லை. சிரிää சிரி என்று தனக்குள் சிரித்துக்கொண்டாள். கதை நல்லம். அனுபவத் திரட்டுக்கள் செறிந்து இருந்தது. கடந்த காலம்ää நிகழ்காலம்ää எதிர்காலத்திற்கு அறிவுரை கூட இருந்தன. இதுதான் சமூகமாற்றத்துக்கான இலக்கியம். எந்த ஒரு இலக்கியமும் வாசகனைச் சிந்திக்கத் தூண்டியது என்றால் அந்தப் படைப்பாளிக்கு வெற்றி என்று அவளின் அப்பா அடிக்கடி கூறுவார்.
கதையை வாசித்து முடிந்ததும் அளவில்லாத சந்தோஷம் அவளுக்கு. தான் சிறுகதை எழுதியது மாதிரி. அவனோடு கனக்க கதைக்க வேண்டும்போல இருக்கு. அது எப்படி? கருத்துக்கள் கட்டாயம் பரிமாற வேண்டும். அவனோடு கதைத்தால் கனக்க விடயங்களை அறியலாம். அறிவை வளர்க்கலாம். மனிதர்கள் எல்லாம் தெரிந்திருக்கவேண்டும். ‘உம்’ என்று சும்மா இருக்கக்கூடாது. மனிதர்களின் தேடலின் வெற்றியே இன்றைய உலகின் நவீன வாழ்க்கை.
•Last Updated on ••Thursday•, 26 •September• 2019 09:40••
•Read more...•
••Thursday•, 26 •September• 2019 09:32•
??- கடல்புத்திரன் (ந.பாலமுரளி) -??
சிறுகதை
அன்றைய நாள், இப்படி அகோரமாக முடியும் என யார் தான் நினைத்திருப்பார்கள் ?
உயிரை உறைய வைக்கும் பலவித ஆடவர்களின் கூக்குரல்களைக் கேட்ட அயலவர்கள் வேலணையில் சற்று தள்ளி உள்ளே இருந்த முல்லை இயக்க காம்பிலிருந்த பெடியள்களிடம் பதற்றமாக சொல்லிய போது...சரிவர விளங்கவில்லை. "ஐய்யோ,போய்க் காப்பாற்றுங்கள் ,பிசாசுகள்,மண்டைதீவுக் கடற்கரையில் படுகொலை செய்கிறார்கள்,கெதியாய் போங்கள்"எனக் கூறிய போது அவசரமாக ஆயுதங்களுடன் தாகுதல்க் குழு வானில் விரைந்தது.பின்னால் சைக்கிளில்,மோட்டார் சைக்கிளிலும் மேலும் உதவிக்காக சில தோழர்களும் பறந்தார்கள்.
காம் பொறுப்பாளர் செல்வன் எல்லாரையும் அனுப்பி விட்டு வோக்கியில் சங்கேத முறையில் வரும் செய்திகளுக்காக காத்திருந்தான்.காம்பையும் தயார் நிலைக்குட் படுத்தி இருந்தான்.தாக்குதலுக்கு உள்ளாகலாம்,எதிர் கொள்ளலாம்,பின் வாங்க வேண்டியும் நேரலாம். எதிர்வு கூற முடியாத நிலை.
கிட்ட நெருங்கிற போது சிங்களச் சொற்கள் காற்றிலே மிதந்து வந்தன.ஆட்கள் நடமாட்டம் தூரத்தே தெரிந்தது. யோசிக்க நேரமில்லை.அந்த திசையில் கொல்லைக்குப் போன சனம் ஏதும் இருக்குமா...என எல்லாம் பார்க்க முடியவில்லை.ஆட்களைப் பார்த்து வேட்டுகளை தீர்த்தார்கள். "வந்திட்டாங்கள்"என சிங்களத்தில் கத்திக் கொண்டு இரண்டு ,மூன்று விசைப் படகளில் ஏறிப் பறந்தார்கள்.யாராவது காயப்பட்டார்களா?இல்லையா என்பது இவர்களுக்கு தெரியவில்லை.
கிட்ட நெருங்கிப் பார்த்த போது பெடியள்கள் சிலருக்கே தலை கிறுகிறுத்தன."புளுதியில் எறிவதற்கா இந்தத் தமிழனை படைத்திருக்கிறான்"பார்த்தனுக்கு மனம் வெகுவாக புளுங்கியது.பார்த்த மாத்திரத்திலே இன்னொரு 'குமுதினிக் கொலை'அவனுக்கு ஒரு நொடியில் புரிந்தது.ஒரு தொகை பேரினர்.யாராவது ஒரிருவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கலாம்.அவன் பாசம் வைத்திருக்கிற கடைசித் தம்பி குகன் வயசிலே நாலைந்து பேர்கள்,அவன் வயதில் பெரும்பாலானவர்,அப்பு வயசில் கூட ஒருவர்.
எல்லாருக்கும் தினவெடுத்த கடல் தோள்கள் ,எந்த வயசிலும் உடலில் உரமேறி போய்க் கொண்டிருக்கிற கடற் குழந்தைகள் .வெட்டு,கொத்துக்கள் ஒன்றா,இரண்டா...?சே, என்ன மாதிரி எல்லாம் கிழித்திருக்கிறார்கள்,என்ன ஜென்மங்கள் இவர்கள்??. உலகில் உள்ள எல்லா பயங்கர தொன்மங்களையும் இறக்குமதியாக்கி, அவர்களின் வழிகாட்டலில் சிங்களவன் செய்கிறானா? இல்லை,வந்தவன் செய்கிறானா? என புரியாமலே.....தமிழர்களை சர்வ அசாதாரணமாகவே சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவன் இந்த உடம்பைப் பெறுவதற்காக இவர்களில் நான் பிறந்திருக்கக் கூடாதா?என்று சிறு வயதில் எவ்வளவு ஏங்கி இருக்கிறான்.இவன் மனதில் என்றைக்கும் கடலுக்கு பெரும் இடம் உண்டு.
•Last Updated on ••Thursday•, 03 •October• 2019 23:25••
•Read more...•
••Friday•, 13 •September• 2019 06:56•
??- முல்லை அமுதன் -??
சிறுகதை
அப்பா என்றில்லை..யாவர்க்கும் பொதுவான குணம்தான்.அப்பா என்பதினால் அதிகமாய் கவனத்தில் கொள்கிறோம். அவ்வளவே. காலை, மாலை, இரவு என மாறுகின்ற பொழுதுகளுடன் நாமும் நகர்ந்துகொண்டிருக்கிறோம்.
தன்னம்பிக்கை மிக்கவர் அப்பா.வாழ்வின் சகல அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டவர்.
ஒருநாள் மாலைநேரம் இரத்தம் சொட்டச் சொட்ட பரிதவித்துவந்தது பூனை.. விறாந்தை முழுக்க ரத்தம்.
அப்படியே அனைத்துத் தூக்கிப்பிடிக்க அம்மா துணியால் துடைத்துவிட்டு இன்னொரு துணியால் இரத்தம் வந்த பகுதியை கட்டிவிட்டால்.வலியால் பூனை துடித்தது.
அம்மா அப்பாவைத் திரும்பிப்பார்த்தாள்.
'உடைஞ்சு போச்சு எண்டு தெரியும்..அதைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போறதுக்கு பொருட்காட்சிக்கு வைக்கபோற மாதிரி...'
அப்பா எதுவும் பேசவில்லை.
அந்தக் கண்ணாடியை தனது பதினைந்தாவது வயதில் தனது முதல் உழைப்பில் வாங்கியதாக பெருமையாகச்சொல்வார்.
முகச்சவரம் செய்வதற்கு சலூனுக்குப் போனதில்லை.முகச்சவரம் செய்யும் கருவிக்குள் பிளேட்டைப்பொருத்தி முகச்சவரம் ச்ய்வார்..அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்...
எங்களுக்கும் பழகிப்போயிற்று..அறைக்குள் கண்ணாடி இருந்தாலும் பவுடர் போடவும்,பொட்டுச் சரியோ எனப்பார்க்கவும் அம்மாவும் தங்கைகளும் முண்ணனியில் நிற்பார்கள்.நானும் தலையைச் சீவவும்,பவுடர் போடவும் தான் என்றாலும், அவ்வப்போது வளர்கிற தாடியை பார்த்து உள்ளுக்குள் குதூகலிக்கவும் அந்தக் கண்ணாடியின் உதவி தேவைப்பட்டது.
அடுக்களையிலிருந்து அம்மா தங்கைகளைக் கூப்பிட்டாலும், ம் ..ம் என்று வெகுநேரம் கண்ணாடியின் முன்னால் நிற்பதைக் காண அம்மாவிற்கு கோபமாக வரும்.விறகுக்கட்டையுடன் வர அம்மா.. என்றபடி அறைக்குள் நுழைந்துவிடுவார்கள்.
•Last Updated on ••Friday•, 13 •September• 2019 07:01••
•Read more...•
••Sunday•, 25 •August• 2019 03:37•
??- எஸ். அகஸ்தியர் -??
சிறுகதை
பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் (29.8.1926 – 08.12.1995) பிறந்தநாளை நினைவு கூரும் முகமாக அவர் எழுதிய இச்சிறுகதையை அனுப்பி வைத்தவர் எழுத்தாளர் நவயோதி யோகரட்ணம்.
... அவள் வயிற்றுப் பிள்ளைக்காரி. புருஷன் தோட்டக் கூலி. படி உயர்வு கேட்டு ‘ஸ்ரைக்’ செய்த வேளை பொலீஸ் படை நடத்திய துப்பாக்கி வேட்டையில் ஒரு காலை இழந்து போனான். கூலி கூட்டாத தோட்டச் சொந்தக்காறன் கால் இழந்தவனைக் கட்டி அழுவானா? அவன் சீட்டுக் கிழித்து விட்டான்....
கண்டி நகரத்து மெயின் வீதியை அண்டிய கட்டுக்கலைத் தோட்டத்து மலைச்சாரலின் கீழே செங்குத்தாக விழுகிறது ஒரு பள்ளத்தாக்கு. அதை மருவி ஒரு மண்டபம்.
அதுதான் விநாயகமூர்த்தி எழுந்தருளிய திருக்கோயில்.
கிழக்கு முக வாசல்; மேற்கால் இடக் கை மடப்பள்ளி. ‘பெரிய புள்ளி’களின் பாத்தியத்தையும் அதற்கு உண்டு. ‘பக்கத்தேயுள்ள இந்து சபையின் கடாட்சத்தால்தான் அது உயிர் வாழ்கிறது’ என்று வெளியூரில் பேச்சு. வருஷந்தோறும் வருகிற விழாக்களுக்கு அதுவே நெய்வேத்திய ஸ்தலம். தனவான்களுக்கு நோய் நொடி கண்டால் அங்கு விசேஷ அன்னதானங்களும் உண்டு. அரிசிப் பஞ்சமிருந்தும் இப்படி அன்னதானங்களுக்கு ஈடுகொடுக்கிற சூத்திரம் விநாயக மூர்த்திக்கே வெளிச்சம். ஆனால், அவரோ வாய் விடாச்சாதி. கேட்பானேன்? பிச்சைப் பட்டாளங்களுக்குக் காலகதியில் அதுவோர் அன்ன சத்திரமாகவே விளங்கியது.
தூர ஒரு மேட்டுத் திடல். அந்த மேட்டுத் திடலில் ஏலவே இடம் பிடித்துக் ‘குடித்தனம்’ நடத்துகிற தோட்டிகளுடன், அன்று வெள்ளியும் வெறு வயிறுமாக வந்து சேர்ந்தாள் மூக்காயி.
அவன் வயிற்றுப் பிள்ளைக்காரி. புருஷன் தோட்டக் கூலி. புடி உயர்வு கேட்டு ‘ஸ்ரைக்’ செய்த வேளை பொலிஸ் படை நடத்திய துப்பாக்கி வேட்டையில் ஒரு காலை இழந்து போனான். கூலி கூட்டாத தோட்டத்துச் சொந்தக்காறன் கால் இழந்தவனைக் கட்டி அழுவானா? அவன் சீட்டுக் கிழித்து விட்டான். சங்கம் அவனுக்காகப் போராடியது. என்றாலும், சங்கத்துக்கும் தெரியாமல் எங்காவது கோயில் குளத்தை அண்டி வயிறு வளர்க்கலாம் என்ற தீர்மானத்துடன் குழந்தை குட்டிகளோடு நகரத்தைத் தேடி வந்தாயிற்று. கடைசியாக இந்த விநாயமூர்த்தி மேட்டுத்திடல்தான் கைகொடுத்தது.
இந்த புதுக் குடித்தனத்தைக் கண்ட சிறுவர்கள் ‘கிலு முலு’த்துக்கொண்டு சூழ்ந்து கொண்டார்கள். தங்கள் நிர்வாண கோலத்தைப் பற்றிய கூச்சம் அவர்களுக்குத் தட்டியபோதும், அந்தப் புதுத் தம்பதியை விடுப்புப் பார்க்கவே ஆசை, சிறுவர்களின் தாய்மார்கள் தங்கள் பணிவிடைகளை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு வந்த தம்பதியோடு அளாவத் தொடங்கினார்கள்.
‘எங்கிட்டால வர்றீங்க?’ என்று கேட்டாள் ஆத்தா.
‘மடக்கும்பரத் தோட்டத்திலேந்து வரோம்’ என்றாள் மூக்காயி.
‘அம்மாடி. பெறுமாத வயித்துக்காரியாச்சே. அந்தால அக்கம் பக்கமா எடங் கெடைக்கலியா?’
‘ஒழைக்கிறவங்களே லயங்கள்லே அடைஞ்சிட்டிருக்கப்போ, ஒழைச்சுக்க வக்கில்லாத நம்பளுக்கு எடங்கெடைக்குங்களா?’
•Last Updated on ••Sunday•, 25 •August• 2019 03:47••
•Read more...•
••Thursday•, 15 •August• 2019 06:49•
??- முல்லைஅமுதன் -??
சிறுகதை
இந்த வாடகை அறைக்கு வந்து இன்றுடன் ஒரு வருடமாகிவிட்டது.
'அப்பாடா'
பல நாட்கள் பலரிடமும் சொல்லிவைத்து கிடைத்த அறைக்கு வந்து சிலநாட்களிலேயே பிடித்துப்போய்விட்டது என்பதை விட பழகிக்கொள்ள மனிதர்கள் கிடைத்ததும் மகிழ்வைத் தந்ததென்றுதான் சொல்லவேண்டும். சாப்பாட்டுடன் அறைக்குமாக கிழமை வாடகையாகத் தரவேண்டும் என்பதே பேச்சு. எனினும் அவ்வப்போது கிழமை தவறியும் விடுகிறது.ஊருக்குப் பணம் அனுப்பவேண்டும்...அம்மாவின் அறுவைச் சிகிச்சைக்கு, அப்பாவின் ஆஸ்துமாவிற்கு மருந்தெடுக்க... கல்லூரிக்குப் போகமிதிவண்டி வாங்க பிரியப்பட்ட தங்கைக்கு...இன்னும் இன்னும் தேவைகள் அதிகமாகவே மனதை அரிக்கும்..இரவு வேலை..பகலில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பகுதிநேரவேலை என தும்படிக்கவேண்டியிருந்தது...சம்மலமும் வரத் தாமதமாகும்.சண்டைபோடவும் முடியாத இக்கட்டு..இவற்றையெல்லம் அறிந்து எனக்கென விட்டுக்கொடுத்து சமாளித்தபடி ...வாடகை கேட்டு நெருக்கடி தராமல் இருக்கும்படியான வீட்டுக்காரர்...மணியண்ணை..கம்பீரம் என்று சொல்லமுடியாவிட்டாலும் மனிதன் என்கிற உயிர்க்கூட்டைச் சுமந்தவாறு தானுண்டு தன்வேலையுண்டு என்றிருப்பவர்.அவரின் மனைவியோ எப்போதும் அலைபேசியை நோண்டியபடியே இருப்பவள்.சமைத்தபடியே காதுக்குள் அலைபேசியை செலுத்தி...தலையை ஒருக்கழித்தபடி பேசிக்கொண்டுப்பார்..கை அலுவலில் இருக்கும்...உடுப்புத் தோய்க்கும்போதும் யாருடனாவது பேசிக்கொண்டிருப்பார்...கலகலப்பானவர்.
'தம்பி சாப்பிட்டியே..கறி பிடிச்சுதோ?..'
'ஓமோம்' தலையசைப்பேன்..
மணியண்ணை கொடுப்புக்குள் சிரித்தபடி நகர்வார்.
மனைவியின் சாப்பாட்டின் ருசி அவருக்குத்தான் தெரியும்.
குறை சொல்லும்படியாக இல்லை..
நன்றாகத் தான் அவர் சமைப்பார்.
'அக்கா'
'கடைப்பக்கம் போறன்..என்ன வேணும்?..'
சிலவற்றைச் சொல்லுவார்..சில சமயங்களில் வேண்டாம் என்பார்..
•Last Updated on ••Friday•, 08 •November• 2019 00:05••
•Read more...•
••Sunday•, 11 •August• 2019 19:24•
??-ஸ்ரீராம் விக்னேஷ் - (எ) - இரத்தினசிங்கம் விக்னேஸ்வரன் – (தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், வீரவ நல்லூர் ) -??
சிறுகதை
- "கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ,சர்வதேச அளவிலான சிறுகதைப் போட்டி - 2019 ல் இந்தச் சிறுகதை, மூன்றாவது பரிசு பெற்று, உலக அரங்கில் எழுத்தாளன் என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இதற்காக மாண்புடை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்துக்கு என் மனம் நிறை நன்றி! நன்றி!" - ஸ்ரீராம் விக்னேஷ்
பத்திரிகைத்துறையில் எனது பதினெட்டு ஆண்டுகால அனுபவத்தில், ஓய்வுபெற்ற தமிழாசிரியர் திரு.கங்காதரன் போன்ற ஒரு விமர்சகரைப் பார்த்ததேயில்லை. சொல்லப்போனால், எனது பள்ளிக் காலத்திலிருந்து, பல்கலைக்கழக நாட்களிலும், பின் பத்திரிகை நிருபராகப் பணிபுரிந்த வேளையிலும், தொடர்ந்து அவரது விமர்சனங்களை அவ்வப்போ, பல பத்திரிகைகளில் படித்திருக்கின்றேன். ஆனால், தற்போது.... மூன்று ஆண்டுகளாகப், பொறுப்பாசிரியராய் நான் சென்னையிலே பணியாற்றும் “சிறகுப்பேனா” வாரப்பத்திரிகைக்கு அவரிடமிருந்து விமர்சனங்கள் அடிக்கடி வந்துகொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில்தான், அவரைப்பற்றிய விபரங்களை என்னால் அறியமுடிந்தது.
கங்காதரனுக்கு வயது எழுபது. மனைவியை இழந்தவர். திருநெல்வேலி மாவட்டம் – வீரவ நல்லூரில் ; மகன், மருமகள், பேத்தி என்ற உறவுகளுடன் வாழும் அவர், தனது மாதாந்த ஓய்வூதியப் பணத்திலே பாதிக்குமேல், தன்னுடைய இலக்கியப் பசிக்குத் தீனிபோடுவதில் செலவு செய்கின்றார். உள்ளூர் நூலகத்துப் புரவலர்களில் ஒருவராக இருக்கின்றார். அஞ்சல் அட்டை, அஞ்சல் உறை, மற்றும் தபால் தலை, ஆகியன வாங்கி வைத்துவிட்டு, பத்திரிகைகளுக்கும், அதிலே எழுதும் படைப்பாளிகளுக்கும் என, மாறிமாறித் தனது மனப்பூர்வமான பாராட்டுக்கள், கண்டனங்கள், சுயகருத்துக்கள் ஆகியவற்றை எழுதி அனுப்புகிறார். தமிழ் சம்பந்தமான மாநாடுகள், விழாக்கள் எங்காயினும் அங்கிருப்பார். நாலாவது தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்தபோது, அங்குசென்றவர் சிங்களப் போலீசின் தாக்குதலுக்குள்ளாகிப், பட்ட காயங்களைக் காட்டி, “வீரமண்ணில் கிடைத்த விழுப்புண்” என்று இப்போதும் பெருமை பேசுகின்றார்.
“சிறகுப்பேனா”வில், “மெய்க்கீர்த்தி” என்னும் புனைபெயரில், நான் எழுதிவரும், “அவள் ஒரு காவல்தெய்வம்” என்னும் தொடரில், இதுவரை வெளிவந்த நாற்பத்தி ஆறு தொடருக்கும், தவறாது விமர்சனக் கடிதங்கள் எழுதியிருந்தார். பேச்சளவிலேதான் அவை கடிதங்கள். ஒவ்வொன்றும் திறனாய்வுத் தீபங்கள். “யார் சார் அந்த மெய்க்கீர்த்தி? அவரை நேரிலே பார்க்கவேண்டும்போல இருக்கின்றது....” அடிக்கடி கேட்டு எழுதுவார்.
கதையின் நாயகி சுமித்ரா. வயது இருபத்தெட்டு. உறவினர் யாருமில்லை. எட்டு வயதில் பெற்றோரை இழந்து, “அநாதை” ஆகியவள். குழந்தைகளைக் கடத்தி விற்கும் கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டு, பம்பாயில் விற்கப்படுகின்றாள். ஆனால், அங்கிருந்து தப்பி, குழந்தையற்ற பணக்காரத் தம்பதிகள் ஒன்றால், தத்தெடுக்கப்படுகின்றாள். காலப்போக்கில், சுமித்ராவின் சுவீகாரப் பெற்றோரும் காலமாக, அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசான அவள், அவற்றையெல்லாம் விற்றுவிட்டு ஊருக்கே வந்து, “அநாதை ஆசிரமம்” ஒன்றை நிறுவுகின்றாள். கணிசமான அளவு குழந்தைகள் – முதியோர்கள் சேருகின்றனர்.
•Last Updated on ••Sunday•, 11 •August• 2019 22:03••
•Read more...•
••Friday•, 19 •July• 2019 21:05•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2018 இல் முதற் பரிசு பெற்ற சிறுகதை கே.எஸ்.சுதாகரின் 'பாம்பும் ஏணியும்'. நடுவர் குழு தோழர்கள் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர்.உதயசங்கர் அவர்களை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது. - பதிவுகள் -
சனசந்தடியான நாற்சந்தி. சந்தியிலிருந்து தெற்குப்புறமாக நாலைந்து கடைகள் தாண்டினால் ‘பிறின்சஸ் றெஸ்ரோரன்’ வரும். சுமாரான கடை. ஜனகன் பெரும்பாலான நாட்களில் தனக்குத் தேவையான உணவை அங்குதான் எடுத்துச் செல்வான்.
’பிறின்சஸ்’ என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அங்கு யாரும் வேலை செய்வதாகத் தெரியவில்லை. ஒரு வயது முதிர்ந்தவர் திருநீற்றுப்பூச்சுடன் பக்திப்பாடல்களை முணுமுணுத்தபடி கல்லாவில் இருப்பார். அவரின் மனைவியும், கூடமாட எடுபிடி வேலை செய்யும் ஒரு பையனும் அங்கே இருப்பார்கள். சமையல் அறைக்குள் யார் யாரெல்லாம் இருப்பார்கள்?
சமீப நாட்களாக குசினிக்குள் வேலை செய்யும் ஒருவர், மறைவாக ஒழித்து நின்று ஜனகனைப் பார்க்கின்றார். ஜனகனும் அதை அறிவான். கண்களைப் பார்த்தால் பெண்போல இருக்கின்றாள். ஒருபோதும் நேரில் கண்டதில்லை.
ஜனகன் கம்பீரமான உயர்ந்த இளைஞன். கூரிய மூக்கு. அளவாக வெட்டப்பட்ட மீசை. ஸ்ரைல் கண்ணாடி. பார்த்த மாத்திரத்தில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தோற்றம். எப்போதும் அயன் செய்யப்பட்டு மடிப்புக் குலையாத ஆடை. சமயத்தில் தருணத்திற்கேற்றபடி நகைச்சுவையை அள்ளி வீசுவான். கல்லாவில் இருக்கும் முதியவருடன் அடிக்கடி பேச்சுக் கொடுப்பான்.கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமா.
இன்று காலை கடையில் அலுவலை முடித்துக் கொண்டு வெளியேறுகையில் அவனுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. கசக்கி எறியப்பட்ட கடதாசித் துண்டு ஒன்று அவன் கால் முன்னே வந்து விழுந்தது.
குப்பைக்கூடைக்குள் அதை எறியப்போனவன், ஏதோ ஒரு யோசனை வந்ததில் அதை பிரித்துப் பார்த்தான்.
“நீங்கள் தனியாகவா இருக்கின்றீர்கள்?” என அதில் எழுதி இருந்தது.
ஜனகனின் மனம் குழம்பியது. குரங்கு போலக் கும்மியடித்தது. அன்று அவனால் ஒழுங்காக வேலை செய்யமுடியவில்லை. வீட்டிற்கு வந்தால் உறங்க முடியவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது? பெண்ணை நேரில் பார்க்காமல் எப்படி?
•Last Updated on ••Friday•, 19 •July• 2019 21:20••
•Read more...•
••Saturday•, 06 •July• 2019 00:36•
??- ஸ்ரீராம் விக்னேஷ், (தமிழகத்து நெல்லை) வீரவநல்லூர் –??
சிறுகதை
“ நாட்டில நடக்கிற தப்புகளையெல்லாம் என்னால முடிஞ்சவரைக்கும் தடுக்கணும்…. சம்மந்தப்பட்டவங்களைப் புடிச்சு சட்டத்துக்கு முன்னால நிக்கவெச்சுத் தண்டிக்கணும்…. இந்த ஒரே நோக்கத்துக்காகத்தான் நான் இந்தப் போலீஸ் வேலையை விரும்புறேனே தவிர, வேற எந்த நோக்கமும் எனக்குக் கிடையாது ஐயா….” பணிவோடு பேசினேன் நான்.
என் பேச்சுக்குள் பொதிந்து கிடந்த கம்பீரத்தையும், எதிர்காலத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கப் போவதுபோல, அதன்மேல் தெரிந்த களையையும், அன்பழகன் ஐயா உள்ளூர எடைபோடுவதை என்னால் உணர முடிகின்றது. அறுபது வயதைக் கடந்துவிட்டபோதும், இன்னமும் துடியாட்டமாய் செயல்படும் அன்பழகன் ஐயா முகத்திலே இலேசானதோர் புன்னகை தெரிந்தது.
“இந்த பாருப்பா…. என் வயசில பாதிக்கும் கம்மியானவன் நீ…. அத்தோட ஒலகத்தைப்பத்தி எம்புட்டு தெரிஞ்சுகிட்டிருக்கியோ எனக்கு தெரியாது…. கடமை, நேர்மை அப்பிடி இப்பிடீன்னு சொல்லிக்கிட்டு, இந்த உத்தியோகத்துக்கு போறவங்க ரொம்பப்பேரு, நாளைக்கு நாலு காசைக் காணுறப்போ, கையை அழுக்கு ஆக்கிடுராங்க…. நீ அப்பிடிச் செய்வேன்னு நான் சொல்ல வரல்ல…. நீயா விரும்பாவிட்டாலும், நீ இருக்கக்கூடிய சூழ்நிலை உன்னய செய்ய வெச்சிடும்….”
சூழ்நிலையின் நிதர்சனத்தை எண்ணி நொந்தபடி பேசினார்.
“ ஐயா…. நீங்க சொல்றது எனக்குப் புரியாமலில்லை…. அதே டயிம் அடுத்தவங்க கடமையில நான் குறுக்கை போகப்போறதும் இல்லை…. என் கடமையில யாரையும் கிராஸ்பண்ண விடப்போறதும் இல்லை…. மிஞ்சிப்போனா என்ன பண்ணிடுவாங்க…. தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திப்புடுவோம்னு மெரட்டுவாங்க…. மாத்திட்டுப் போகட்டுமே…. அதுக்குமேல என்ன பண்ணுவாங்க…. வெசத்தையா வெச்சுடுவாங்க…. அப்பிடீன்னாலும் பரவாயில்ல….”
என் பேச்சிலே தெரிந்த உறுதி, அன்பழகன் ஐயாவை சிறிது அதிர வைத்தது. தொடர்ந்து அவரது பேச்சிலே சிறிது கோபம் தெரிந்தது.
“ஏ…. என்னப்பா பேசுறே…. கொஞ்சம் நல்ல வார்த்தையாய் பேசுப்பா….”
நான் தொடர்ந்தேன்.
•Last Updated on ••Saturday•, 06 •July• 2019 00:38••
•Read more...•
••Monday•, 27 •May• 2019 08:34•
?? - ஸ்ரீராம் விக்னேஷ்…., வீரவநல்லூர்….( நெல்லை மாவட்டம்.) -??
சிறுகதை
- கவிஞர் தமிழ்க்கனல், கவிஞர் இளசை அருணா ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு, நவம்பர் - 2004 ல், எட்டயபுரம் – பாரதியார் மணிமண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்ட, “கரிசல் காட்டுக் கதைகள்” சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்த சிறுகதை இது.) -
பெளர்ணமி நிலவின் ஆக்கிரமிப்பு மீண்டும் ஒரு பகலை உருவாக்கியிருந்தது. பனிக்காலத் தொடக்கத்தின் மெல்லிய வருடலினால், உடம்பை இலேசாக நெளித்துக்கொண்டேன்.
என்னைத் தோளில் சுமந்தபடி நடந்துகொண்டிருந்த தாத்தாவின் கம்பீரம் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தது.
தெற்கே இரண்டு மைலுக்கப்பால், ரயில் பாதையில் புகையைக் கக்கிக்கொண்டு குமுறிச் செல்லும் “கூட்ஸ்” வண்டியின் ஒலி தெளிவாகக் கேட்டது.
“பேராண்டி…. மணி ரண்டு ஆயிடுச்சுல…. சினிமா முடிஞ்ச உடனே கிளம்பியிருக்கணும்…. ரொட்டிக்கடைக்குப் போனதால லேட்டாயிடிச்சு…. சரி…. சரி…. நல்லா கெட்டியா உக்காந்துக்க…. தூங்கிக் கீங்கி விழுந்துடாதல…. இன்னும் சத்துநேரத்தில வீடு வந்திடும்…. சரியா…..”
“ நான் ஒண்ணும் தூங்கல்ல தாத்தா….” பதில் கூறினேன் நான்.
இலேசாகத் திமிறினார் தாத்தா. அவர் பேச்சிலே சிறிது கோபம் அடுத்து வெளிவந்தது.
“என்னலே…. தாத்தா, பூத்தாண்ணுகிட்டு…. பேராண்டியிண்ணு கூப்பிடச் சொல்லிக்கிட்டு வர்றேன்…. நீ என்னமோ ஓம்புட்டு இஷ்டத்துக்கு இழுத்து உட்டுக்கிட்டே போறே…. சொல்லுலே….”
“சரிலே…. பேராண்டீ………………..” சத்தமாகச் சொன்னேன் நான்.
“கெக்கெக்கே….” என்று தனது பொக்கை வாயால் சிரித்துக்கொண்டார் தாத்தா. தன்னோடு சரிக்குச் சரியாக நான் பேசுவதில் அவர் கண்ட இன்பம் என்னவோ!
“பேராண்டி…. எனக்கொரு சந்தேகம்….” மெதுவாகக் கேட்டேன்.
தாத்தா உற்சாகமானார்.
“கேளுல…. கேளு…. என்னா சந்தேகம்…. எப்ப உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்னு கேக்கப்போறியா…. இருலே…. தாத்தா மொதல்ல ஒண்ணு கட்டிக்கிட்டு, அப்புறமா உனக்கு ஒண்ணு கட்டி வெக்கிறேன்….”
சொல்லிவிட்டு மீண்டும் “கெக்கெக்கே….” சிரிப்பு தாத்தாவுக்கு.
மீண்டும் நெளிந்தேன் நான். பதிலடி கொடுக்க நினைத்தேன்.
“எதுக்கு பேராண்டி ஆளுக்கு ஒண்ணு…. பேசாம நாம ரண்டுபேருமா ஒரு பொண்ணையே கட்டிக்குவோம்….”
தாத்தாவுக்கு பெரிய குஷி. அவர் சிரித்த சிரிப்பின் குலுக்கலால் என் அடிவயிறு கலங்கியது.
எனக்கு சிறிது கோபம். பேசாமல் இருந்தேன் நான். தாத்தா என்னை உலுக்கினார்.
“பேராண்டி…. என்னலே உம்முண்ணு இருக்கே…. நீ கேக்கவந்த விசயத்தை மறந்திட்டியா…. சரிசரி…. இப்ப கேளு….”
“இப்ப உம்பேரு என்ன உண்டோ…. அதே பேருதான் எனக்கும் வச்சிருக்கு…. இல்லியா…. அது ஏன்….?”
•Last Updated on ••Saturday•, 15 •June• 2019 20:12••
•Read more...•
••Wednesday•, 22 •May• 2019 08:22•
?? எழுதியவர்: கடல்புத்திரன்??
சிறுகதை
பெரும்பாலானவர்கள் தம் காருக்கு லஸ்மி,சித்தினி..என்றெல்லாம் செல்லப் பெயர் சூட்டி கண்மணி எனக் கொண்டாடுவார்கள். அதற்கு என்னம் காயம் பட்டால் தலைகீழாய் பதற்றம் தொற்றிக் கொள்ளும்."கட்டல்ட் சீரா"காரை முந்தி வேலைசெய்த ...தளத்தில் கணேஸ்,"டேய் ,சுப்பர் காராடா,மச்சாள், அவ்வளவு பெரிய பிழை இல்லாமல் கனநாளைக்கு ஓடுவாள், ஓட்டம் அந்த மாதிரி இருக்குமடா"என்று ஒவ்வொரு நாளும் அவளைப் பற்றி புகழ்ந்து, புகழ்ந்து... தள்ளிக் கொண்டிருப்பான், ஓடிக் கொண்டிருந்த யப்பான் காரையும் பின்னால் ஒருவன் வந்து இடிக்க, சொன்னால் நம்ப மாட்டீர்கள் ,அதன் செசியே சிறிது வளைந்து விட்டது. பின்னால் இடித்தவனில் பிழை. மூன்றாந் தரக் காப்புறுதி தான், இவனிலே பிழை என்றால், ஐய்யா, தலையிலே கையை வைத்துக் கொண்டு ... இருக்க வேண்டியது தான்.
அதை விட அதிசயம் அடிபட்ட பிறகும் கார் ஓடியது தான். யப்பான் கார் , கால் கை போனாலும் ஓடுற கார் .
அதனாலே அதற்கு மவுசும் அதிகம்.ஆனால் அவனுக்கு வெறுத்து விட்டது. பதிவு மையத்தில் புகாரை பதித்து விட்டு, காப்புறுதிக்காரனுக்கு தெரிவிக்க, அவன் அடிபட்டுத் திருத்துற கார் கராஜ் ஒன்றிட விலாசத்தைத் தெரிவித்தான். "அங்கே கொண்டு போய் விடு"என்றான். பிறகும், அவனுக்கு சார்ப்பாகவே நடக்கிறது."செசி வளைந்ததால் கழிக்க வேண்டியது தான்"கராஜ்காரன் தெரிவிக்க, "நட்ட ஈடாக 2000 டொலர்கள் தர முடியும்,என்ன சொல்றே"என காப்புறுதிக்காரன் ,ரிம் கொட்டேனில் வந்து சந்தித்துக் கதைத்தான்.இந்தியன்.சுழியன்கள் என்று இந்த நிறுவனமும் இவர்களையே இப்படியான விசயங்களிற்கு அனுப்புகிறார்கள்."அவ்வளவு தான் தர முடியும்.அது தான் அதனுடைய பெறுமதி "என்றான்.காரையே அவன் 1500 டொலருக்குத் தான் வாங்கியவன்."சரி" என்றான். செக்கை எழுதி யே கொண்டு வந்திருக்கிறான். உடனேயே தந்தான், குடித்த கோப்பிக்கும் அவனே காசைக் கொடுத்திருந்தான்.
பிறகென்ன தேடி அலைந்து இந்த கட்டலஸ் சீரா, பழைய காரை 2000 டொலருக்கு வாங்கி இருந்தான். இந்தக் காரின் தயாரிப்பை இப்ப நிறுத்தி விட்டார்கள். காரை, புகழ்வதை கணேஸ் மட்டும் நிறுத்தவே இல்லை. காரில் ஓட்டத்திலே பிழை இல்லை தான் . அதாவது எஞ்சின் நல்லது. ஆனால்,எரிபொருள் ஓடுற குழாய்கள் மாற்ற வேண்டி வந்தது. எரிபொருள் தாங்கியில் ஓட்டை விழுந்து அதையும் மாற்றியது. நிறுத்தியில் மாற்றும்.முக்கிய பகுதியை விட மற்றப் பகுதிகள் எல்லாத்திற்கும் கராஜ்காரனுக்கு 200 டொலர் படிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான். காரை வைத்திருக்கிறவர்கள் அதைப் பற்றிய அறிவையும் காட்டாயம் கொண்டிருக்க வேண்டும். ஊரிலே என்றால் பழுதான பகுதியை வெட்டி எறிந்து விட்டு ,கராஜ் ஆள் தானே கூட தயாரித்து ஒட்டி அந்த மாதிரி ஓட வைத்து விடுவான். இங்கே,மீள உயிர்ப்பிக்கிற பகுதிகள் மலிவு சிலவேளை முழு தொகுதியையே மாற்றுவார்கள். ஆனால்,தொட்டதுக்கும் 200 டொலர் அழ வேண்டி வரும் ஊரிலே செலவும் குறைவு.
இப்ப பேவிய்யூ வீதியிலே வேலைக்குப் போய்க் கொண்டிருந்த போது பின் பக்க இடது ரயரிலே காற்றுப் போய் விட்டது.
•Last Updated on ••Wednesday•, 22 •May• 2019 08:29••
•Read more...•
••Saturday•, 11 •May• 2019 08:10•
??- ஸ்ரீராம்விக்னேஷ், (வீரவ நல்லூர், நெல்லை மாவட்டம்) -??
சிறுகதை
அதிகாலை ஐந்துமணி. அறையின் கதவு தட்டப்படும் சத்தம். எரிச்சலாக இருந்தது.
சட்டைகூட போடாமல், பெனியனுடன்சென்று கதவைத் திறந்தேன்.
அங்கே… அறிமுகமில்லாத ஒரு சிறுவன்.
“யாரப்பாநீ…. காலங்காத்தால வந்து கதவைத்தட்டி உசிரைவாங்குறே… எதுக்கு…? ’’
கொட்டாவி விட்டபடி கேட்டேன்.
தெருவில் பால்க்காரர்களின் சைக்கிள் ’பெல்’ ஒலி…. இட்லிக்கடையில் ஒலிக்கும் பக்திப்பாடல்….. ஆகியன வைகறையை வரவேற்றன.
அந்தச்சிறுவன், என்னை ஏறஇறங்க நோக்கினான். வலக்கரம் நெற்றிக்குச்சென்றது. ‘’சலாம்’’ போட்டான்.
“வணக்கம்சார்…. எம்பேரு சுப்புறுமணியன்… வயசுபன்னிரண்டு… எல்லாரும்என்னய “சுப்புறு”ண்ணு கூப்பிடுவாங்க… வீடுவீடாய்ப் போயி அவங்கசொல்ற வேலைய செஞ்சு குடுப்பேன்….”
பேச்சினில் பணிவு. பார்வையில்கம்பீரம். “மனக் கேமரா” வில் அவனைக் “கிளிக்” செய்தேன்.
தொடர்ந்து அவனே பேசினான்.
“ நேத்து பகல்பூராவும் நீங்க வீடுதேடி அலைஞ்சதும்., பூசாரி அருணாசலம்ஐயா தயவால சாயந்தரம்போல இந்த “ரூம் “ கெடைச்சதும்… வரையில எனக்குத்தெரியும்….”
நான் குறுக்கிட்டேன்.
“சரி..சரி… இப்பநீ எதுக்குவந்தே… சொல்லிட்டுக் கெழம்பு ”
“தப்பா நெனைக்காதீங்க…. பஞ்சாயத்துநல்லீல தண்ணிவருது…. குடமோ, பானையோ இருந்தாக் குடுங்க…. சத்தே நேரமானா கூட்டம்ஜாஸ்தியாகிடும்…. “பணிவாக வந்தது அவன் குரல்.
நேற்று மதியமே பூசாரி அருணாசலம் அண்ணாச்சி கூறியிருந்தார்., “ தண்ணிபுடிக்கக் குடம் ஒண்ணு வாங்கிக்க….”
அப்போது வாங்குவதற்கு மறந்துவிட்டேன். இப்போது இந்தச் சிறுவன் முன்னே தலை சொறிந்தேன்.
“ இல்லைப்பா…. நான் குடமெதுவும் வாங்கிக்கல்ல….. இண்ணைக்கு வாங்கிக்கிறேன்…. நாளையிலயிருந்து தண்ணிபுடிச்சுக் குடு……”
பதிலை எதிர்பாராமல், கதவை அடைத்தேன். தூக்கம் உலுக்கி எடுத்தது.
•Last Updated on ••Monday•, 27 •May• 2019 08:35••
•Read more...•
••Saturday•, 06 •April• 2019 23:33•
??- இராஜேஸ்வரி பாலசுப்பிரணியம் -??
சிறுகதை
லண்டன் 2019-
அது ஒரு அழகான காலைநேரம். லண்டனில் வசந்தகாலம் முடிந்து விட்டது.சாடையான இளம் குளிர்காற்றின் தழுவலில் தோட்டத்து செடி கொடிகள் இணைந்து சிலிர்த்துக் கொண்டிருந்தன.பழுத்துக் கொண்டிருக்கும் தக்காளிகள் காலைச்சூரியனின் இளம் சூட்டில் பளபளத்தன. வேலியில் படர்ந்து பூத்துக் கிடந்த சிறுமல்லிகையின் மணம் மனத்திற்கு இதமளித்தது. வசந்த காலம் முடியப்போகிறது. தோட்டத்தில் போட்டிருந்த மரக்கறிவகைகள் தங்கள் சேவையைமுடித்த திருப்தியுடன் கொஞ்சம் கொஞ்சமாக வாடத் தொடங்கி விட்டன. ஒரு சில மாதங்களுக்கு முன் விதைத்த சிறு பயிர்கள் முளைத்து வளர்ந்து அதைச் செய்தவளுக்குப் பல விதமான பரிசுகளைக் காய்களென்றும் பழங்களென்றும் கொடுத்துவிட்டு கால மாற்றத்தில் தளர்ந்து,முதிர்ந்து தங்கள் வாழ்க்யை முடித்துக் கொண்டிருக்கின்றன.
'நானும் அப்படியா? இந்த செடி கொடிகள் தங்களை இந்தப் பூமியில் விதைக்கச் சொல்லி யாரையும் கேட்கவில்லை, எனது திருப்திக்கு எனது தேவைக்கு விதைத்தேன், பாதுகாத்தேன், இன்று அந்த விதையின் பல பரிமாணங்களை ஒரு பாதுகாவலன் மாதிரிப் பார்த்தக் கொண்டிருக்கிறேன்' வாடித் தளர்ந்து கொண்டிருக்கும் திராட்சையிலைகளைத் தடவியபடி யோசித்துக் கொண்ட போது அவள் மனம் சட்டென்று அவளைப் பற்றிக் கேள்வி கேட்டது.
'வாழ்க்கை என்ற வெற்றுக் கானல் நீரோட்;டத்தில் நானும் இப்படித்தானா? என்னைப் போன்ற பல பெண்களும் இப்படித்தானா, சுயமாக எதுவும் செய்ய முடியாத வெற்றுவிதைத் தொடர்களா,கானல் நீரோட்டத்தில் வெறும் பிம்பங்களா? ஞானேஸ்வரி தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள்ளிருந்து அவள் கணவரின் குரல் சத்தமாக அவளையழைத்தது.
'ஞானேஸ்வரி. யாரோ கதவைத் தட்டுகினம்'. அவர் மிகவும் சத்தமாக அவளையழைக்கிறார்.
அவளின் கணவருக்குப் பல வருத்தங்கள். பெரிதாக நடந்து திரிய முடியாது. அவள் ஒரு இயந்திரம்.அவர் அழைத்த குரலுக்கு அசைந்து திரியும் ஒரு நடமாடும் மனித இயந்திரம்.
அவள் தோட்டத்திலிருந்து வீட்டுக்குச் சென்று கதவைத் திறந்தாள்.
ஞானேஸ்வரி தனக்கு முன்னால் நிமிர்ந்து நின்றிருந்த ஆங்கிலேயப் பெண்மணியை ஏற இறங்கப் பார்த்தாள். அன்று திங்கட் கிழமை.வெளியில் பாடசாலை போகும் குழந்தைகள், வேலைக்குப்போகும் மாந்தர்கள் என்று தெருவில் பல சந்தடிகள். வந்து நின்ற ஆங்கிலேயப் பெண்மணி,' ஹலோ எனது பெயர் மேரி டானியல், உள்ளூராட்சியின் முதியோர் நலவிடயங்களைச் சார்ந்த விசாரணைப் பிரிவிலிருந்து வருகிறேன். நீங்கள் திருமதி அருளம்பலம் ஞானேஸ்வரிதானே?'.
அவள் ஒரு அழகிய பெண். குரலும் மிகவும் இனிமையாகவும் கனிவாகவுமிருந்தது. முதியோர்களின் பராமரிப்புக்கென்றே பிறந்த அன்பான முகத்தில் ஒரு அழகிய சிறு புன்முறுவல் தவழ்ந்துகொண்டிருந்தது.
•Last Updated on ••Tuesday•, 16 •April• 2019 02:37••
•Read more...•
••Saturday•, 16 •March• 2019 01:17•
??- எஸ் அகஸ்தியர் -??
சிறுகதை
- எழுத்தாளர் அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8. அதனையொட்டி அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம் அனுப்பிய சிறுகதை. மின்னஞ்சல்களுக்குள் மறைந்து தவறிவிட்டதை இன்று கண்டுணர்ந்தோம். -பதிவுகள் -
இவன் தற்காலத்து நாகரிகப் பையன். ஆனால், யாழ்ப்பாண வைதீகப் பிடிப்பு இறுக்கம். சமய ஆசாரங்கள், விளையாட்டு வினோதங்கள், கோயில் திருவிழாக்கள் என்று நிகழ்ந்தால் நாட்டுப் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக இவன் கண்ட அரசியல் ஞானம். இளம் சந்ததியான இவனுக்கும் பழம் முத்துப் பாட்டியே ஞானக்குரு.
‘இந்தா ரண்டரையாகுது....’
சுரேஷ் மனசுள் லேசான கீத சுகம் நீவிற்று. சோர்ந்த உடல் சுரீரித்து, சடுதி உற்சாகம் கொண்டது. இடது கை விளிம்புச் சட்டை கிளப்பி ‘வார்ச்’ பார்க்க, முகத்தில் குதூகல மையல் பம்மிய ஆனந்த பரவசம்.
‘இன்னும் அஞ்சு நிமிசம் இருக்கு’
‘சேவையர் சூட்’ அவன் கையில் அவசரகோலமாகியது. ‘ஹங்கரில்’ கொழுவினான். ‘பாத்றூம் பேஷன் பைப்’ திறந்து சாடையாக முகம் அலம்பி, துவாய் எடுத்துப் பறதியாகத் துடைத்த பின், ‘சிவில் சேட்’, ‘ஜக்கற்’, ‘சூஷ்’ மாட்டினான்.
‘இனி வெளிக்கிடுவம்’
அடுக்குப் பண்ண, ‘பத்ரோன்’ இவன் எதிரே ருத்திரசர்மன் மாதிரி ‘றெஸ்ரோறன்’ சாலைக்கு வெளியே நிற்கின்றான்.
அவன் முகத்தில் மலர்ச்சி ததும்பும் சிரிப்புக் கவியவில்லை. கண்களில் அக்கினி கக்கிற மின்னல். சாந்தமான முகபாவம் தேங்கிய போதும், ‘விறுமசத்தி’ சாடை பத்ரோன் முகம் ‘சப்’பென்று இருக்கிறது.
தன்னுள் சுரேஷ் ‘கறுமுறு’த்தான் :
‘உவன் பத்ரோன் நெடுகலும் உப்பிடித்தான்’
பரவச நிலை குலைந்து நிற்கையில் நெஞ்சு நீவி ஒரு பெருமூச்சு. இவனை மீறிக் குதறிப் போயிற்று.
‘வெளிக்கிட்டாச்சு, மெல்லமா நடையைக் கட்டுவம்’
மனசு கிளர்த்திற்று : ஓர் இடறல்.
‘பொன்ஸர்’ சொல்லுவமா, விடுவமா?’ புருவம் நெருட, கண நேர யோசினை. பத்ரோன் பார்வை ‘இதமாக’த் தோணுவதாயில்லை.
•Last Updated on ••Saturday•, 16 •March• 2019 01:22••
•Read more...•
••Monday•, 18 •February• 2019 06:39•
?? - ஆபிதீன் -??
சிறுகதை
* சமர்ப்பணம் : மறைந்த உயிர் நண்பர் தாஜுக்கு
பறப்பதற்குத் தயாராக இருக்கும் ஒற்றை இறக்கையுள்ள விமானத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? எங்கள் ஊரில் சில வீடுகளில் இருக்கிறது - மொட்டை மாடி மேல். 'கப்பக்கார வூடு' என்றால் முறைப்படி கப்பல்தானே இருக்க வேண்டும். இல்லை, அந்தக் காலத்தில் சைக்கூன் சிங்கப்பூர் என்று போய் பெரும்பணம் சம்பாதித்த சில சபராளிகள் அப்படித்தான் சும்மா விமானங்களை பெருமைக்காக வீட்டின் மேல் நிறுத்தினார்கள். முழுக்க முழுக்க சிமெண்ட்டால் கட்டப்பட்ட சிறு விமானங்கள்! எந்த நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் முஸ்லீம்கள் நிகழ்த்தவில்லையென்று யார் சொன்னது? இப்போது உள்ள பரம்பரைக்கு அதற்கு பெயிண்ட் அடிக்கக்கூட முடியாததில் விமானங்களுக்கு ரோஷம் வந்து ஒரு பக்க இறக்கைகளை ஒடித்துக் கொண்டு விட்டன. புதிதாக அரபுநாடு போய் திரும்ப வரும் கப்பவூட்டுத் தம்பிகள், கஞ்சத்தனமாக தங்கள் வீட்டு நிலைப்படியிலோ புதிதாக வாங்கிய பைக்கிலோ அல்லது வேனிலோ 'இது அல்லாஹ்வின் அருட்கொடை' என்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதைப் பார்த்துத் திகைத்துப்போய் முடமாகிவிட்டன என்றும் சொல்லலாம்.
கப்பக்கார வீடு... கட்ட வெளக்கமாறானாலும் கப்ப வெளக்கமாறு...
எல்லாமே கப்பல் சம்பந்தப்பட்டது. இந்த மாலிமார், மரைக்காயர் எல்லாம் என்ன? கப்பல் சம்பந்தப்பட்ட பெயர்கள்தான். அதற்காக ரஜூலா கப்பலில் கக்கூஸ் கழுவிக் கொண்டிருந்த என் பெரிய மாமாவும், கப்பலே பார்க்காமல் விமானத்தில் கத்தாருக்குப் போன என் சின்ன மச்சானும் தன் பெயரை 'நகுதா' (கப்பல் கேப்டன்) என்று இன்னும் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது! போதாதற்கு ஊர் அவுலியா வேறு மூழ்கவிருந்த ஒரு கப்பலைக் காப்பாற்றித் தொலைத்தார்கள். அவர்களின் கந்தூரியில் , பல வகை டிசைன் கப்பல்கள் - சோகப்பட்டினத்திலிருந்து நாங்கூர் வரை - 7 கி.மீ தூரம் ரோட்டிலேயே வந்து , ஊரெல்லாம் சுற்றும். சில ரயில்கள் , விமானங்கள் கூட ரோட்டில் ஓடுவதுண்டு. எல்லாம் அவுலியாவின் மகிமை !
கப்பக்கார வூட்டு ஆண்பிள்ளைகளை 'கப்பவூட்டுத் தம்பி' என்று செல்லமாக அழைக்கும் ஊர் அது . கப்பவூட்டு பெரியதம்பி; நடுத்தம்பி ; சின்னதம்பி ; தம்பி... அவரின் 'தம்பி'...
சிராஜுதீனும் என்னைப் போல ஒரு கப்ப வூட்டுத் தம்பிதான். ஆனால் பக்கத்து ஊர். உட்டச்சேரி என்ற உண்மையான பெயரை எழுதினால் அடிக்க வந்துவிடுவார்கள் என்பதால் வேண்டாம்.
சிராஜின் உற்சாகம் எனக்கும் ஒரு நாள் தொற்றியது. துபாய் வந்ததிலிருந்து 'ஒரு நல்ல செய்தி' என்று அன்றுதான் சொல்கிறார்.
'எழுதுறதை வுட்டுப்புட்டீங்களோ ?' - வெடைத்தேன். சந்தோஷமாக இருக்கும்போது நாம் உண்மையை சொன்னாலும் அது வேடிக்கையாகவே எடுத்துக் கொள்வார்கள். நான் சொன்னது பொய். சிராஜ் நன்றாகவே எழுதுவார்.
'இல்லே.. அதைவிட சந்தோஷம். ரூமுக்கு ராத்திரி வர்றீங்க. கொண்டாடுறோம்!'. போனை வைத்து விட்டார். அர்த்தம் என்ன என்ன என்று படித்தவரைக் கேட்க வைக்கும் அவரது கவிதைகளின் சஸ்பென்ஸ் மாதிரி இருந்தது. அது எனக்கும் பிடித்திருந்தது. சொட்டுச் சொட்டாக வடித்தாலும் அல்லது 'சர்'ரென்று ஊற்றினாலும் நீரா, உருகும் பனிக்கட்டியா என்று புரியாத வெண் மயக்கம்தான். இருந்தாலும் என்ன, அவரை எனக்குப் பிடிக்கும். அதிகாரம் செய்யும் அன்பு அவருடையது. எங்கே பார்த்தாலும் 'எப்படி இருக்கிறீங்க?' என்று மணிக்கட்டை அவர் அழுத்தும் அழுத்தில் என் நரம்புகள் முழுக்கப் பாயும் அன்பெனும் இரத்தம்...
•Last Updated on ••Monday•, 18 •February• 2019 06:42••
•Read more...•
••Thursday•, 14 •February• 2019 00:59•
?? - குரு அரவிந்தன் -??
சிறுகதை
நான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன்.
‘ஏன் வலிக்கவில்லை?’
‘என்கிட்ட வேண்டாம்’ என்பது போல் அவள் என்னை முறைத்தபடி நகர்ந்தாள். நல்ல காலம் கன்னத்தில் அறையவில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வை கன்னத்தில் அறைந்தது போல இருந்தாலும் ஏனோ எனக்கு அது வலிக்காத ஒருவித சுகத்தைத் தந்தது.
நான் என்னை மறந்து அவளைப் பார்த்தபடியே நின்றதை அவள் கவனித்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த முறைப்போ என்று நினைத்தேன். நாகரிகம் கருதி நான் அவளை அப்படி வைத்தகண் வாங்காது ஒரேயடியாகப் பார்த்திருக்கக்கூடாது என என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் என்ன செய்வது, பொம்மைகளுக்கு நடுவே பொம்மைபோல நின்ற, பிரமிக்கத்தக்க அவளது அழகுதான் என்னை அப்படி வெறித்துப் பார்க்க வைத்தது.
உள்ளக கணக்குப் பரிசோதனைக்காக நாங்கள் அந்த நிறுவனத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு. எங்களுக்காகத் தனியாக ஒரு தடுப்பறையை அவர்கள் ஒதுக்கித் தந்திருந்தார்கள். ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் என்பதால் முன்பக்கத்தில் கண்ணாடி யன்னல்கள் ஓரமாக அழகான ஆடைகள் அணிந்த அலங்காரப் பொம்மைகளை வைத்திருந்தார்கள்.
அந்தப் பொம்மைகளுக்கு நடுவேதான், ஆடை மாற்றிக் கொண்டிருந்த அவள் தற்செயலாக எனது கண்ணில் பட்டாள். புதியவளாக இருக்கலாம், அவளும் ஒரு அழகிய பொம்மைபோலக் கண்ணாடி யன்னலுக்கு வெளியே எதையோ பார்த்துக் கொண்டு நின்றதால், முதலில் நான் அதில் கவனம் செலுத்தவில்லை. அவள் அசைந்த போதுதான் அவள் நிஜம் என்பதைப் புரிந்து கொண்டேன். புதிதாக அவர்கள் அறிமுகப் படுத்தும் ஆடைகளை இப்படித்தான் அடிக்கடி பொம்மைகளுக்கு மாற்றிக் காட்சிக்கு வைப்பார்கள். அன்று அதைத்தான் அவள் செய்து கொண்டிருந்தாள், அதாவது அலங்காரப் பொம்மைகளுக்கு ஆடை மாற்றிக் கொண்டிருந்தாள்.
அவளது அழகை நான் ரசித்தேன். இவ்வளவு கொள்ளை அழகை எங்கிருந்து இவள் பெற்றாள்? சொற்ப நேரம் பார்த்த அவளது அசைவுகள் ஒவ்வொன்றும் எனது மனத்திரையில் பதிந்து என் உணர்வுகளைத் தூண்டி எனக்குள் என்னவோ செய்தது. அன்று மதியம் உணவருந்திய பின் ஓய்வெடுக்கும் அறையில் நாங்கள் சற்று நேரம் கரம் விளையாடினோம். தண்ணீர் எடுப்பதற்கு தற்செயலாக உள்ளே வந்தவள், அருகே வந்து எங்கள் ஆட்டத்தைப் பார்த்து ரசித்தாள்.
‘ஹாய். ஐயாம் தீபா’ என்று ஆங்கிலத்தில் தன்னை அறிமுகம் செய்தவள், ‘நானும் உங்களோடு விளையாட்டில் பங்குபற்றலாமா?’ என்று கேட்டாள். ‘கோலக் குயிலோசை உனது குரலினிமையடீ!’ சட்டென்று பாரதியின் கவிதை வரிகள் ஞபகம் வந்தது. இவளுடைய நடையுடை பாவனையைப் பார்த்தபோது பாரதியின் புதுமைப் பெண்ணாக இவளும் இருப்பாளோ என்று எண்ணத்தோன்றியது.
•Last Updated on ••Thursday•, 14 •February• 2019 01:04••
•Read more...•
••Saturday•, 26 •January• 2019 00:27•
??- முனைவர் ஆ.சந்திரன் , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், வேலூர் -??
சிறுகதை
நிலத்தின் நீர் வேட்கை முற்றிலும் பூர்த்தியானதைப் பசுமையின் கரங்கள் வானத்திற்குத் தெரிவித்துக்கொண்டிருந்தன. நைட் வாச்மேன் வேலைக்குப் போய்த்திரும்பிய சோர்வைப் போக்கிக்கொள்ள போர்வைகள் சூரியக்குளியல் மூழ்கின. மாலைச் சூரியன் நீச்சல் பழக கடலை நோக்கி விரைந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பதறிய தலைவிக்கு அன்றை இரவு யுகத்தின் எல்லையாக நீண்டது. அது அவளுக்கு ஒரு முடிவை எடுக்க போதுமான இடைவெளியைத் தந்திருந்தது. அதனால் சூரிய உதயம் அவளுக்கு இனிய பொழுதாய் இருந்தது.
திருமணத்திற்குப் பிறகு வீட்டைவிட்டுத் தனியாகப் போவது இதுதான் முதல் முறை என்றாலும், அவளுக்கு அதைப் பற்றிய சிந்தனை ஏதும் அப்போது ஏற்படவில்லை. கதிரவனின் சூட்டை இலவசமாக வாங்கிக்கொண்டிருந்த தரையின் மேற்பரப்பு அவளைப் பரிசோதிக்க ஆரம்பித்தது. அவற்றின் சோதனைகளைப் பற்றிச் சிந்திக்கவிடாமல் செய்தன பிரிந்து சென்ற காதலனின் நினைவுகள்.
அவளுடைய நடையின் வேகம் தளர ஆரம்பித்தது. நீண்டதூரம் நடந்த களைப்பும் சூரியனின் வெக்கையும் அவளுடைய பெண்மையை உணர்த்தி பயமுருத்திப் பார்த்தன என்றாலும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
தென்னை மர நிழலில் அழையாத விருந்தாளியாய் அவள் அடைக்கலம் புகுந்த போது சூரியன் பூமியை தொண்ணூறு டிகிரி கோணத்தில் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையின் உக்கிரத்திற்கு மரத்தடியில் நிழலுக்கு ஒதுங்கியவர்களின் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையே முதன்மைச் சாட்சியங்களாய் இருந்தன.
அடிவயிற்றைத் தடவிய விரல்களின் பூரிப்பை முகம் வெளிக்காட்ட நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். தென்றலின் ஸ்பரிசம் அவளைத் தீண்டும் தருணங்களில் மட்டும் வெயிலின் சோர்வு ஓய்வு கொண்டது.
நூடுல்ஸ்க்கு வெள்ளையடித்தது போன்ற தலையைக் கொண்ட பெண்ணின் கண்கள் நிழலுக்கு ஒதுங்கிய தலைவியை ஸ்கேன் செய்துகொண்டிருந்தன. வயதிற்கு மீறித்தெரிந்த அழகினைப் பெருமூச்சுடன் கூடிய அவளுடைய பார்வைத் தோலுத்துக் காட்டியது. அதை முதல் பார்வையிலேயே புரிந்துகொண்ட தலைவி, தன்னுடைய பார்வையை மரத்தின் நிழலில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த எறும்பின் மீது திருப்பினாள். அப்போதும் அவளுடைய கைகள் அடிவயிற்றைத் தடவியவாறே இருந்தன.
இளமைத் தோற்றமுடன் காணப்பட்ட முதியவள் இவ்வாறு சொன்னாள் இளம்பெண்ணைப் பார்த்து. “இந்த வெக்கையில் தனியாய் எங்கே போகிறாய் பெண்ணே! துணைக்கு யாரையாவது அழைத்து வந்திருக்கக் கூடாதா?........” என்று.
•Last Updated on ••Saturday•, 26 •January• 2019 00:34••
•Read more...•
••Tuesday•, 22 •January• 2019 01:39•
??- சீர்காழி தாஜ் -??
சிறுகதை
எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் மறைவினையொட்டி , பதிவுகள் இணைய இதழில் வெளியாகிய அவரது சிறுகதையான 'பால்ய விவாஹம்' மீள்பிரசுரமாகின்றது -
- எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், பல்வேறு விடயங்கள் பற்றிய கருத்துகள் பலவற்றை உங்களில் பலர் இணையத்தில் வலைப்பூக்களில், இணைய இதழ்களில் (பதிவுகள் உட்பட), முகநூலில் படித்திருக்கலாம். எனக்கு அவரது எழுத்தில் பிடித்த விடயங்களிலொன்று அவரது நடை. ஒருவித நகைச்சுவை ததும்பும் எள்ளல் நடை. அடுத்தது அவரது சிந்தனைப்போக்கு. ஒரு விடயத்தைப் பற்றி பல்வேறு திக்குகளில் படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிந்திப்பது. இன்னுமொரு முக்கியமான விடயத்திலும் அவரை எனக்குப் பிடிக்கும். பாசாங்குத்தனமற்ற, வெளிப்படையான , தற்பெருமையற்ற ஆளுமை. அவரது எழுத்தில் காணப்படும் இன்னுமொரு விடயம்: கூர்ந்து அவதானித்தல். தன்னைச் சுற்றிவரும் உலகில் நடைபெறும் செயல்களை, உறவுகளை. நிலவும் வாழ்வியற் போக்குகளை இவற்றையெல்லாம் மிகவும் கூர்ந்து அவதானிப்பது அவரது இன்னுமொரு திறமையான பண்பு. 'பால்ய விவாஹம்' என்ற அவரது இந்தச் சிறுகதையின் தலைப்பினைப் பார்ததும் 'பால்ய விவாகம்' பற்றிய விமர்சனமாக இருக்குமோ என்று எண்ணி வாசித்தால் இந்தச் சிறுகதையில் விரிந்த உலகு என்னைப் பிரமிக்க வைத்தது.
ஒரு சிறுவனுக்கு காய்க்காத வீட்டு வளவு மா மரத்துடன் நடைபெறும் பால்ய விவாஹம் பற்றியதே கதையின் மையக்கருத்து. அந்தச் சிறுவனே கதை சொல்லியும்; அவனது பெயரும் தாஜ் என்றிருப்பது கதையின் நடையில் ஒருவித சுயசரிதத் தன்மையினைப் படர விடுகிறது. ஆனால் அவர், தாஜ், தனது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் பின்னிய சிறுகதையாகத்தான் இதனைக் கொள்ளவேண்டும். அவ்விதம் மரத்துடனான திருமணம் அந்த மரத்தைக் காய்க்க வைக்குமென்ற கருத்தொன்றும் அந்தச் சிறுவன் வாழும் சீர்காழி இஸ்லாமிய சமூகத்தில் நிலவுகின்ற விடயத்தை இச்சிறுகதை வெளிப்படுத்துகின்றது. இதனைக் குழந்தைப் பேறில்லாது வாடும் பெண்களுக்கும் குறியீடாகக் கருத முடியும். இந்த கருத்தினூடு விரியும் கதையில் வரும் பாட்டி பாத்திரம் மிகவும் இயல்பான அனைவர் வாழ்வில் வந்துபோகும் பாத்திரம். உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றது. இது தவிர இந்தச் சிறுகதையில் சீர்காழியில் வாழும் இஸ்லாமிய மக்களிடையே நிலவும் பேச்சுத்தமிழை வாசிப்பில் நாம் அறிந்துகொள்கின்றோம். அத்துடன் அச்சமுதாயத்தின் வாழ்வில கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றியெல்லாம் இச்சிறுகதையினூடு அறிந்துகொள்கின்றோம். இது தவிர சுற்றியுள்ள இயற்கை பற்றிய அழகான வர்ணனையும் கதையில் விரவிக் கிடக்கின்றது. தாஜ் அவர்களின் இச்சிறுகதையான 'பால்ய விவாஹம்' சிறுகதை இதுவரை நான் வாசித்த அவரது சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை. உங்களையும் நிச்சயம் கவர்ந்திழுக்கும். வாசித்துப் பாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள் -
சிறுகதை: பால்ய விவாஹம் - சீர்காழி தாஜ்
இன்று வியாழக்கிழமை. நாளை வெள்ளி! ‘பள்ளி’ கிடையாது. கண்விழித்தவுடன் தோன்றிய முதல்நினைவே சந்தோஷம் தந்தது. நாளைக்கு காலை ஏழு, ஏழரை வரை துங்கலாம். எட்டும் தூங்கலாம். என்னை எழுப்ப என் அம்மா நிலையாய் நிற்கும்தான். ‘இத்தனை நேரம் தூங்குறானேன்னு…!’ பாட்டி விடாது. “பிள்ளை நல்லா தூங்கட்டும்டீ….” என சொல்வார்களே தவிர, எழுப்ப சம்மதிக்க மாட்டார்கள். ஆனால், பள்ளி இருக்கும் நாள்தோறும், என் பாட்டிதான் என்னை எழுப்பி விடும். அஞ்சேகால் விட்டா… அஞ்சரை! கொல்லை நடைக்கு போய் கிணற்றடியில் ‘கைகால்’ அலம்பிவிட்டு, பல்விளக்கச் சொல்லும். தூக்கம் கலையாது எழுந்து போய், கொல்லைக் கதவை திறப்பேன். திறந்த நாழிக்கு, கோழிகளின் அதன் குஞ்சுகளின் கெக்கரிப்பு, தூக்கக் கலக்கத்தை விரட்டும். இந்தக் கெக்கரிப்புதான் தினம்தினம் நான் கேட்கும் முதல் இசை! கொல்லைத் தாழ்வாரத்தின் கிழக்குப்பக்க மூலையில், கள்ளிப்பலகையிலான, கம்பி வலையிட்ட கோழிப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கோழிகளையும் குஞ்சுகளையும் பார்க்க ஆவலெழும்! இன்னும் தீரவிடியாத, அந்த இருட்டில், அதுகள் எதுவும் சரியா தெரியாது. சப்தம் மட்டும்தான் ஆறுதல். தாழ்வாரத்திலிருந்து படியிறங்கி, இடதுபுறம் திரும்பி, பத்து தப்படி வைத்தால், சின்ன கிணறு. அதைச்சுற்றி சிமெண்ட்தளம்! கிணற்றை குனிஞ்சுப் பார்க்க மாட்டேன். பயம். பார்த்தாலும், தண்ணீர் தெரியாது. இருட்டுத்தான் கிடக்கும்! கொஞ்சத்துக்கு விடியல் கண்டுவிட்டதென்றாலும், எங்க வீட்டுக்கொல்லை இன்னும் இருட்டுதான்!
•Last Updated on ••Tuesday•, 22 •January• 2019 01:41••
•Read more...•
••Tuesday•, 22 •January• 2019 01:32•
??- சீர்காழி தாஜ் - ??
சிறுகதை
- எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் மறைவினையொட்டி , பதிவுகள் இணைய இதழில் வெளியாகிய அவரது 'தங்ஙள் அமீர்' குறுநாவலை மீள்பிரசுரம் செய்கிறோம் -
- புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அன்னிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்ஙள் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்ஙள் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்ஙள் அமீரை'ப் பாவிப்பதும்தாம். இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை விபரிக்கும் 'தங்ஙள் அமீர்' வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் 'மிதவை' (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ''தங்ஙள் அமீர்'. இக்குறுநாவலினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர். -வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்-
குறுநாவல்: தங்ஙள் அமீர் (பதிவுகள் - 23 April 2014)
"நேற்று 'அல் - முராஃபி'க்கு போனீங்களா?, போக்கரை சந்திச்சீங்களா?" - எங்க மேனேஜர் 'ஜெம்', எதிர்பக்கத்து கேபினிலிருந்து எழுப்பிய அந்தக் கேள்வி எனக்கானது. காலையில் அலுவலகம் போனவுடன், மேனேஜர் ரூமுக்கும், அக்கவுண்டண்ட் ரூமுக்கும் எதிரே, பக்கவாட்டுத் தடுப்பினுள் காணும் டீ டேபிளில், காஃபி உண்டாக்கி; நானும், ஸ்டோர்கீப்பர் ஜமாலும் குடிக்கத்தொடங்கிய போதுதான், ஜெம் அலுவலகம் வந்தார். இருக்கையில் அவர் அமர்ந்த நாழிக்கு அப்படி கேட்டதென்பது எனக்கு குழப்பத்தைத் தந்தது.
'அல் முராஃபி' ஒரு சூப்பர் மார்க்கெட். ரியாத் புறநகர்ப் பகுதியான 'அல் நசீம்'-ல் உள்ளது. அதன் பர்ச்சேஸ் மேனேஜர்தான் போக்கர்! அவனைப்பற்றிதான் கேட்கிறார். மலையாளியான அவன் பெயர் பக்கர் குஞ்சு. பக்கர் குஞ்சு, வழக்கில் போக்கராகிப் போனான். எங்க மேனேஜருக்கு அவன் கூட்டுக்காரனும்கூட. வியாபாரரீதியில் எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் தரக்கூடியவன். அதற்கு ஈடாக மாதம்தட்டாமல் நாங்கள் தரக்கூடிய அன்பளிப்பு கவர் கனமானது! சிரிப்பற்ற அவனது முகத்தில் சிரிப்பை வரவழைப்பது! அவனது எத்தனையோ சௌதி சம்பாத்திய சந்தோஷங்களில் இதுவும் ஒன்று.
•Last Updated on ••Tuesday•, 22 •January• 2019 01:38••
•Read more...•
••Thursday•, 13 •December• 2018 00:25•
??- -ஸ்ரீராம் விக்னேஷ் (நெல்லை.,வீரவநல்லூர் --??
சிறுகதை
- இடங்கள்,காலங்கள்,அடிப்படைச் சம்பவங்கள் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு ஆக்கப்பட்ட, கற்பனைப் படைப்பு. -
1.
1973ம், 1974ம் வருட, 9ம்,10ம் வகுப்புகள் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் -
நான் தங்கியிருந்த “யாழ்.மத்திய கல்லூரி”யின் விடுதியும், அதாவது “ஹாஸ்ட” லும் ஊரோடொத்து உறங்கிக்கொண்டிருந்தது. மாடியிலுள்ள மண்டபத்தில்தான் எனது பெட்டி படுக்கைகளும், கட்டிலும் இருந்தன. நல்ல சொகுசான கட்டிலாக இருந்தும், இன்னும் தூக்கமே வரவில்லை.
எங்கள் விடுதிக்குத் தெற்கேயிருந்த, முதலாம் குறுக்குத்தெருப் பக்கமாக எங்கோ ஒரு மூலையில் நாய்கள் குரைத்துச் சத்தமிட்டுக்கொண்டிருந்தன.
தலையணைக்கு கீழே வைத்திருந்த ஒளிப்பேழையை, அதாவது “ டார்ச்லைட்”டை எடுத்து, பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த சகமாணவன் மூர்த்தியைக் கவனித்தேன். வாயைப் பிளந்தபடி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான்.
சுவர்க் கடிகாரத்தை நோக்கினேன். அது ஏற்கனவே நேற்று மாலை ஐந்து மணிக்கே உறங்கிவிட்டது.
என்னிடமும் கைக்கடிகாரம் கிடையாது. அதிகாலை ஐந்து மணிக்கு விடுதிக் காவலர், அதாவது, ஹாஸ்டல் வாச்மேன் மணி அடிக்கும்வரை விடுதிக்குள் மின்விளக்கு, அதாவது லைட்டு போடக்கூடாது என்பது விடுதி நிர்வாகத்தின் கண்டிப்பான உத்தரவு. எனினும், மணியோ நான்கை அண்மித்துவிட்டால் குளியலறை, அதாவது, பாத்ரூம் சென்று நிம்மதியாகக் குளிக்கலாம். மற்றவர்களும் எழுந்துவிட்டால், போட்டி போட்டுத்தான் குளிக்கும் நிலை வரும்.
எங்கள் விடுதிக்கு - வடக்கே, சமீபமாகத்தான் மணிக்கூண்டுக் கோபுரம் எழுந்தருளியுள்ளது. நேரத்தைக் கவனித்தேன். எதிர்பார்த்தபடி நிலைமை சாதகமாகவே இருந்தது. ஆமாம்: மணி நான்கு.
“தமிழன் என்று சொல்லடா…. தலை நிமிர்ந்து நில்லடா….” என்று சொன்னவர், தலை நிமிர்ந்தாரோ இல்லையோ…. ஆனால், அந்த மணிக்கூண்டுக் கோபுரம் மட்டும் தலை நிமிர்ந்து நின்றது.
என் பார்வையின் கோணத்தை சற்று இடதுபுறம் திருப்பினேன். இந்தியாவிற்கு ஒரு தாஜ்மகால் கிடைத்தது போன்று, இலங்கையின் – முக்கியமாக யாழ்ப்பாணத்தின் தாஜ்மஹாலாக, சரஸ்வதியின் ஆலயமான யாழ். நூலகம்…. ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகமாக பிரகாசித்துக்கொண்டிருந்தது.
விடிந்தால் வெள்ளிக்கிழமை. இன்னும் ஒரு மணி நேரத்தில், காவலாளி மணியடித்துவிடுவார். காலையில், சக இந்து மாணவர்களோடு நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு போகவேண்டும். அதுவும், நடந்தே சென்றுவருவோம். எட்டுமணிக்கெல்லாம் விடுதிக்கு வந்து சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்புவோம்.
•Last Updated on ••Thursday•, 13 •December• 2018 07:41••
•Read more...•
••Friday•, 07 •December• 2018 07:57•
??- முனைவர் ஆ.சந்திரன் -??
சிறுகதை
கிணற்றில் புதிதாய் வளர்ந்த மரத்தை அந்த ஊர் மக்கள் வந்து அதிசயமாகப் பார்த்தார்கள் என்றாலும், தங்களுடைய அவசரமான கடமைகளில் முழ்கியதால் அதை யாரும் பெருசாகக் கண்டுகொள்ளவில்லை. கையில் தடியுடன் தள்ளாடி வந்த ஒரு பாட்டி பாறையின் மீது படர்ந்திருந்த பச்சைப் பாம்புகள் போல் படர்ந்திருந்த கொடிகளை வணங்கிவிட்டு மெல்ல நடந்து சென்றவர் சரித்திரப் புகழ் மிக்க கோயிலில் இருந்த தெய்வத்தை வணங்கிச் சென்றார். அது அந்த ஊரில் இருந்த சிலருக்கு ஒருவித பதட்டத்தை அளித்தது. இது ஒரு பழைய கதை. இந்த விசயம் அந்த ஊரில் இருந்த சிலருக்கு மட்டுமே தெரியும் என்பதும் தனிக்கதை.
மெல்ல மெல்ல அவ்வாறான பல கதைகள் அந்த ஊரில் உள்ள மக்களின் நினைவுகளில் இருந்து காணாமல் போய்க்கொண்டிருந்தன.
ஊருணியாக இருந்த அந்த கிணற்றில் முதன் முதலில் யார் தம் வீட்டின் குப்பைகளைக் கொட்டினார்கள் என்பதே அப்போது யாருக்கும் நினைவில் இல்லை.
அப்போது நாட்டில் ஒரே கலவரம் நிலவியது. அந்தக் கலவரத்தில் அதுவரை அணிந்திருந்த வெள்ளை வேட்டிச் சட்டைகள் எல்லாம் குருதி படிந்து தன் வெண்மையைப் பறிகொடுத்தன.
கலவரத்தில் ஒருவன் இருளரக்கனைக் கண்டதாகக் கூறினான்.
அவன் பெயர் நிக்கிலாக்கி.
அவனது உரையாடலைச் செவிமடுக்க யாருக்கும் நேரம் கிடைக்கவில்லை.
உண்மையைக் கூற வேண்டுமென்றால் அவன் சொல்வது யாருடைய மூலைக்கும் எட்டவில்லை.
ஆனாலும் யாராவது ஒருத்தர் நான் சொல்லுவதைக் கேட்டுவிடுவார்களா?
நான் பார்த்துக்கொண்டிருக்கும் இருளரக்கனை அவர்களுக்கும் காட்டிவிட முடியாதா? என்று அவனுக்கு ஒரு நப்பாசை.
அதனால் அவன் தொடர்ந்து அவனைப்பற்றி மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
என்றாவது ஒருநாள் எல்லா மக்களும் இருளரக்கனையும் அவனது கூட்டாளிகளையும் கண்டுகொள்வார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு மெல்ல வர ஆரம்பித்தது.
அப்போது நிக்கிலாக்கி ஒரு படி மேல் சென்று கொண்டிருந்தான்.
யார் இந்த இருளரக்கன்? அவன் எங்கிருந்து வந்தான்?. எவ்வளவு காலமாய் இந்த ஊரை சூறையாடிக்கொண்டிருக்கிறான் என்று அவன் முன் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருந்தான்.
•Last Updated on ••Friday•, 07 •December• 2018 07:59••
•Read more...•
••Sunday•, 14 •October• 2018 21:53•
??- பொன் குலேந்திரன் (கனடா) -??
சிறுகதை
யாழ்ப்பாணத்தில் இருந்து நல்லூரூடாக பருத்திதுறைக்கு போகும் வீதியில் 8கி மீ தூரத்தில் கல்வியங்காடு.கிராமம் உள்ளது ஒரு காலத்தில் கள்ளிக்காடாக் இருந்த 700 ஏக்கர் கொண்டதாக ஒருந்த இக கிராமத்தின் பெயர் , காலப் போக்கில் மருவி கல்வியன்காடு ஆயிற்று . இக்கிராமத்தின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவது விவசாயமாகும். கால்நடைச் செல்வங்களாக கறவைப் பசுக்களும், ஆடுகளும் இகிரமத்தில் வளர்க்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் பரராஜசேகர மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த போது கல்வியங்காடு அம்மன்னனின் அவைப் பிரதிநிதியான சூரியமூர்த்தி தம்பிரானின் ஆட்சிப் பொறுப்பின் கீழ் அமைந்தது எனக் கல்வியங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது.. கல்வியங்காடு சந்தைக்கு அருகே பல வருடங்களாக பலசரக்கு கடை நடத்துபவர் இராசையா அவரின் மகன் சிவகாந்தன் (காந்தன்) 8 கி மீ தூரம் நடந்து சென்று வண்ணார்பன்னையில் உள்ள யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றான். அவ்வளவு தூரம் நடந்து சென்று கல்வி பயில அந்தக் கல்லூரியை தெரிந்து எடுக்க வேண்டிய காரணம், . காந்தனின் தாய் மாமன் சிவலிங்கம் (சிவா) அந்த கல்லூரியில் படித்து,. அதன் பின் கொழும்பு பல்கலைக் கழகம் சென்று படித்து பொறியாளரானவர்
கொழும்பில் உள்ள வோக்கர்ஸ்(Walkers) தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்தார் . தன்னைப் போல் தன். மருமகனும் அக்கல்லூரியில் படித்து பொறியாளராக வரவேண்டும் என்பது அவர் விருப்பம் அதன் விளைவே காந்தன் என்ற சிவகாந்தன் மூன்று கிலோ நிறை உள்ள புத்கங்களை சுமந்து கொண்டு, வியர்வை சிந்த கல்லூரிக்கு படிக்கச் செல்வது அவனுக்கு கிடைத்த தண்டனை . கோப்பாயில் இருந்து வரும் அவனோடு படிக்கும் அவனின் இரு நண்பர்கள் சொந்தத்தில் சைக்கில் வைத்திருந்தார்கள். அவர்கள் ஒரு போதும் காந்தனை தங்களோடு சைக்கிளில் கல்லூரிக்கு வரும்படி கேட்டதில்லை.
யாழ்ப்பாணம், ஒரு விவசாய மாவட்டம். மற்றும் ஒரு பெரிய நடுத்தர மக்கள் தொகை ஆகியவை, பாரம்பரிய சைக்கில் கலாச்சாரத்தி லிருந்து ஒரு மோட்டார் சைக்கில் கலாச்சாரத்துக்கு , மாறியுள்ளது . யாழ்ப்பாண மக்களை சோம்பேறியாக்குவதற்கு புலம்பெயர்ந்தோரரே காரணம் என ஊடகங்கள் குற்றம் சாட்டின. சில பல்கலைக்கழக மாணவர்கள் தமது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில், மோட்டார்-பைக் மூலம் தனது வளாகத்திற்கு செல்கிறார். 1983 இல் உள்நாட்டுப் போரில் வெற்றிபெறுவதற்கு முன், ஒவ்வொரு வீட்டிற்கும் அநேகமாக ராலே பிராண்ட் சைக்கிள் பின்னுக்கு கரியரும், முன்னுக்கு ஒரு பாஸ்கட்டும் இரவில் வெலிங்டன் தியேட்டரில் இரண்டாம் ஷோ போக்குவரத்துக்கு தேவையான வடிவமாக இருந்தது , ஒரு கிராமத்திற்கு சராசரியாக ஒரு மோட்டார்-பைக்கைக் கொண்டது. வடக்கில் மோதல் கணிசமான பகுதியில் சிறிய அல்லது எரிபொருள் இல்லாமல், குடியிருப்பாளர்கள் எல்லா இடங்களிலும் பயணம் செய்ய சைக்கிள்களைப் பயன்படுத்தினர். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கிளிநோச்சிகு பலர் சைக்கிளில் பயணித்தனர். அதே நேரத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் தமது தினசரி போக்குவரத்துக்காக சைக்கிள்களையும் பயன்படுத்தினர். யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர் . பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தில் 32 கி மீ தூரத்தில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சைக்கிளில் சென்றார். . உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், ஒவ்வொரு வீட்டிலும் யாழ்ப்பாணத்தில் சராசரியாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இன்று வரை யாழ்ப்பாணத்தில் சுமார் 7௦௦௦0 மோட்டார் பைக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் 20% க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு மோட்டார் பைக்கை வைத்திருக்கிறார்கள்.. முன்னதாக ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்தில் ஒப்பிடும்போது எரிபொருள் நுகர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாண மக்கள் அன்றாடம் பொருளாதார ரீதியாகவும் பணக்காரர்களாகவும் பணியாற்றியுள்ளனர், அத்தியாவசியமான விடயங்களில் தமது பணத்தை செலவழித்துள்ளனர். இன்று யாழ்ப்பாண இளைஞர்கள் கனடா . அவுஸ்த்ரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் ஈழத்து புலம்பெயர்ந்தோரிடம் இருந்து சும்மா வரும் பணத்தில் வாழ்கின்றனர், மற்றும் சோம்பேறியாகி பொதை மருந்துக்கு அடிமையாகி பாலியல் வன்முறை செய்து வருகின்றனர். குற்ற செயலைப் புரிந்து விட்டு சில மாபியா குழுக்கள் விரைவில் தப்பி ஓட பெரும் உதவியாக மோட்டார் சைக்கில் இருக்கிறது என்பது பலரின் கருத்து
•Last Updated on ••Sunday•, 14 •October• 2018 21:56••
•Read more...•
••Sunday•, 14 •October• 2018 21:46•
??- - அண்டனூர் சுரா, புதுக்கோட்டை , தமிழ்நாடு - -??
சிறுகதை
பயணிகளின் கைகளில் பதினொறாம் விரலாக ஆண்ட்ராய்டு முளைத்திருந்தது. அவர்கள் முகநூல், வாட்ச்அப் இரண்டில் ஒன்றில் மூழ்கி தன்னைத் தானே கரைத்துகொள்வதாக இருந்தார்கள். பலரின் முகநூல் , வாட்ச்அப் புரோபைல் படமாக ஆஷிபா என்கிற காஷ்மீர் சிறுமியிருந்தாள்.
பலரின் கட்டை விரல்கள் ஆண்ட்ராய்டு திரையை கீழிருந்து மேல் நோக்கித் தள்ளுவதாக இருந்தது. ஒரு ஆணின் கட்டளைக்கு பயந்தோடும் பெண்ணைப்போல திரை கீழிருந்து மேல் நோக்கி ஓடியிருந்தது. ஓடிய அத்தனை வேகத்திலும் ஆஷிபாவின் முகம் மட்டும் தனித்து தெரிந்தது. கத்தரிப்பூ ஆடையில் ஆங்காங்கே மஞ்சள் நிறம் தெறிக்க ஆஷிபா தரையில் குப்புறக் கிடந்தாள். அது வெறும் புகைப்படம்தான் என்றாலும் அப்படம் பலரையும் இரங்க வைக்கவும், கோபமூட்டவும் செய்திருந்தது.
ஆஷிபா சிரித்த முகமாக இருந்தாள். பால்வடியும் முகம். கன்னங்கள் இரண்டும் தங்கக்கின்னங்களாக இருந்தன. உதடு நிறையும் சிரிப்பு. ரோஜா இதழ் சருமம். ஒன்றிரண்டு பேர் ஆஷிபாவை திரையில் நிறுத்தி பார்த்தவண்ணமிருந்தனர். சிலர் ‘ இச்...’ கொட்டிக்கொண்டார்கள்.
ஒருவரின் கையில் தினசரி இருந்தது. அதை நீள்வாக்கில் மடித்து ஆஷிபா முகம் தெரியும்படியாக வைத்துக்கொண்டு அவள் குறித்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருந்தார். ஒரு பெரியவர் தினசரியை எட்டிப்பார்த்துவிட்டு சொன்னார் ‘ ஏன்தான் இவள் குதிரையை தனி ஒருவளாக நின்று மேய்த்தாளோ...?’. அவருக்கானப் பதில் பின் இருக்கையிலிருந்து வந்தது. அப்பதிலைச் சொன்னவர் ஒரு பெண்ணாக இருந்தார் ‘ ஏன் மேய்த்தாலாம்..., அப்பன் பாக்கெட்டை நிரப்பத்தான்...’
முன்னவர் பின்னவரைத் திரும்பிப்பார்த்தார். ‘ என்ன இருந்தாலும் அவள் பெண். குழந்தை வேறு இல்லையா...?. காலம் கெட்டுக்கிடக்குது. ஒரு பெண், அதுவும் சிறுமி ஒத்தையாளாக குதிரை மேய்க்கப் போயிருக்க வேண்டியதில்லை என்கிறேன்...’
‘அதுக்காகப் போகிற இடமெல்லாம் பொம்பளைப்பிள்ள யாரையேனும் துணைக்கு அழைச்சிக்கிட்டேவா போகமுடியும்...’
‘ பின்னே வேண்டாமா...?’
‘ இப்ப இவ செத்து குழிக்கு போயிருக்காள், அவளுக்குத் துணையா யாரை அனுப்பி வைக்கிறதாம்..? ம்.....’ அவள் கேட்டக் கேள்விக்கு பெரியவரிடம் பதில் இருந்திருக்கவில்லை. கைகளைப் பிசைந்தபடி நின்றுகொண்டிருந்தார்.
•Last Updated on ••Sunday•, 14 •October• 2018 21:49••
•Read more...•
••Tuesday•, 28 •August• 2018 14:49•
??-ஸ்ரீராம் விக்னேஷ்- (வீரவ நல்லூர், நெல்லை மாவட்டம்)??
சிறுகதை
- தமிழகத்தில் வெளிவரும் பிரபல “தினமலர்” பத்திரிகையின் நிறுவனர் - அமரர். டி.வி.ராமசுப்பையர்அவர்களது, நினைவு தினத்தை முன்னிட்டு, வருடாந்தம் நடத்தப்படும், “அமரர்.டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டி” வரிசையில், 1999ம் ஆண்டு, முதற் பரிசாக ரூ.7500 பெற்றுத் தந்த சிறுகதை இது. - ஸ்ரீராம் விக்னேஷ் -
“பாருப்பா, மனுசன் அம்பது வயசாகியும்,என்னமாதிரி பறந்து பறந்து நியூஸ் கவர்பண்ராரு….ரிப்போட்டர்ன்னா இப்பிடித்தான் இருக்கணும்….”
சீப் எடிட்டர் சீனிவாசன், தன் நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டதாக சப்-எடிட்டர் சாரங்கபாணி எனக்குச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்ட சம்பவம் நடந்து மூன்று மாதமாகிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நானும்,சாரங்கபாணியும் ஒன்றாகத்தான் இந்த தினசரிப் பத்திரிகையில் நிருபராகச் சேர்ந்தோம். எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கெல்லாம், ஒன்றாகவே சென்று செய்திகள் தொகுத்திருக்கின்றோம்.
அவரது எம்.ஏ., பட்டப்படிப்பும், எனது எஸ்.எஸ்.எல்.சி.யும் நாளடைவில் எங்கள் இருவரின் தொழில்ரீதியான அந்தஸ்தில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, அன்றய நட்பு இன்றும் நீடிக்கத்தான் செய்கிறது.
இருந்தும், கடந்த இரண்டு மாதமாக நிருபர் பணியில் நான் இல்லை.
நான் என்னதான் தவறு செய்துவிட்டேன்? எனது தவறாக அவர்களின் கண்ணிலே பட்டது என்ன?
மாற்றுப் பத்திரிகையொன்றில், பணிபுரியும் மனோகரனோடு பேசுவதும், பழகுவதும்தான்.
அந்த மனோகரன் எங்கள் பத்திரிகையில் சிலகாலம் பணி செய்தவர்.என்னைவிட பதினைந்து வயது இளையவர்.முன்னேறத் துடிக்கும் இளைஞர். அதைவிட, பத்திரிகைத்துறையில் எனது சீடரும் கூட.
இந்தச் சந்திப்பும், வார்த்தைப் பரிமாறல்களும் அடிக்கடி நடப்பதுதான்.
சமீபத்தில் ஒருதடவை மனோகரன் என்னைச் சந்தித்தபோது என்னிடம் கேட்டார்;
“சார்…. ஒரு வித்தியாசமான பேட்டி எடுத்திருக்கிறேன்….பிரிண்டிங்குக்கு குடுக்கிறத்துக்கு முன்னால ஒருதடவை உங்ககிட்ட காட்டி, உங்க ஒப்பீனியனைக் கேட்டு, கரெக்ஷன் பண்ணிட்டு குடுக்கலாம்னு நினைக்கிறேன் சார்…. லைட்டா கொஞ்சம் பாக்கிறீங்களா….”
வஞ்சகமில்லாத பேச்சுவார்த்தையில் குழந்தைத்தனம். நான் பக்குவமாகச் சொன்னேன்.
•Last Updated on ••Tuesday•, 28 •August• 2018 15:05••
•Read more...•
••Wednesday•, 01 •August• 2018 21:54•
?? - கடல்புத்திரன் -??
சிறுகதை
இங்கே வந்தவர்களில், இந்த இருபது வருசங்களில் எத்தனை பேர்கள் கழன்று போய் விட்டார்கள்..இப்ப, இவனும்? நினைக்க, நினைக்க மனசு. கனக்கிறது.
வந்த புதிதில் தேவன் வேலை செய்து கொண்டிருந்த உணவகத்திலேயே இவனும் வலது காலையை எடுத்து வைத்து "வேலைக்கு ஆட்கள் எடுக்கிறீர்களா?"என்று கேட்டுச் சேர்ந்திருந்தான் .உணவகத்தின் இயக்குனர் 'பில்' நல்லவர் ,கறுப்பினத்தவர் ! , கறுப்பர்களும் ஈழத் தமிழர்கள் போல. அடக்குமுறை களில் சதா சீரழிந்தவர்கள்.அவருக்கு ஈழத்தமிழர் மீது அனுதாபம்அந்த மாதிரி இருந்தது. .அவனின் சமூக எண்,மற்றும் வதியும் விலாசம்,தொலைபேசி எண் முதலானவற்றைக் குறித்து வைத்து ஒரு -ஃபைலைத் திறந்து அவனை வேலையில் சேர்த்து விட்டிருந்தார்,
“நாளையிலிருந்து நீ வேலைக்கு வரலாம், என்ன சொல்கிறாய் "என்று சிரித்தார்.அன்றைக்கே சேர்த்திருக்கலாம்.அவன் உச்சியைப் பிளக்கிற வெய்யில் சென்றது. தோல் எரிய, .களைச்சுப் போன முகத்துடன் இருந்தான். சுத்தம் முக்கியம்.அன்றன்றைக்கு வெளுத்த வெள்ளை சேட்,வெள்ளைக் நீள் கால்சாராய்க்கு மாறிக் கொண்டு, தலை மயிருக்கு நெட் தொப்பி போட்டுக் கொண்டு தான் வேலையை தொடங்குவார்கள். நண்பகல் வேளை வேர்வையில் குளித்திருந்தான் .ஃபிரஸ்ஸாக தொடங்க வேண்டும் என்று நினைத்தாரோ?
அடுத்த நாள் தான் அவனுக்குத் தெரிந்தது நுழைந்திருப்பது குட்டி யாழ்ப்பாணம் என்பது.எல்லாருமே கிட்டாரடியில் சேர்ந்தே, பிறகு பல்வேறு சமையல் பிரிவுகளிற்கு தரம் உயர்த்தப்பட்டு வேலை செய்துகொண்டிருப்பவர்கள்.தேவனுக்கு கோழிகளை நீளக் கம்பிகளில் கொளுவி 'அவனி'ல் செருகி ,வெந்ததும், மெசின் மணி அடிக்க,எடுத்து பிளாஸ்டிக் கூடையில் கொட்டுற 'குக்' வேலை. வெக்கையிலே அவனும் கூட கிடந்து வெந்து கொண்டிருந்தான்.
தேவனுக்கு சிரிச்ச முகம்.தோழமையுடன் கதைக்கிறதால்.அவனை பார்த்தவுடனேயே பிடித்து விட்டிருந்தது.
'கிட்டார'டியில் இருந்த சூரி அவனுக்கு வேலையை கற்றுக் கொடுத்தான். சிறிய வண்டிலில். மேல்,கீழ் தட்டுகளில் வைத்துள்ள பிளாஸ்டிக் கூடைகளில் ,வந்தவர்கள் சாப்பிட்டு விட்டுப் போகிற ...தட்டுக்க ளை,கிளாஸ்களை வெவ்வேறாக எடுத்து மெசினடிக்கு ஓட்டி வர வேண்டும்.
•Last Updated on ••Thursday•, 02 •August• 2018 00:10••
•Read more...•
••Monday•, 16 •July• 2018 10:37•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
நீண்ட நாட்களின் பின் நண்பனைச் சந்தித்தேன். வழக்கத்துக்கு மாறாக மகிழ்ச்சியுடனிருந்தான். இவனைக் கண்டதும் எனக்குப் பழைய ஞாபகங்கள் சில எழுந்தன. பதின்ம வயதினில் இவனொருத்தியின் மேல் காதல் மிகுந்திருந்தான். அதை அவளுக்கும் தெரியப்படுத்தியிருந்தான். அவளோ அதைத்தூக்கி எறிந்துவிட்டுச் சென்று விட்டாள். ஆனால் அவள் மீதான காதலை மட்டும் இவன் விடவேயில்லை. அவளையே நினைத்துக்கொண்டிருந்தான். எப்பொழுதும் அவனுடன் கதைக்கும்போதும் உரையாடலில் நிச்சயம் அவளது பெயரும் வரும். நீண்ட காலமாக அவளைப்பற்றிய தகவல்கள் கிடைக்காததால் அவன் பல்வேறு நினைவுகளில் மூழ்கியிருந்தான். யுத்தபூமியில் அவள் இன்னும் இருக்கின்றாளா என்றும் சந்தேகப்பட்டான். இந்நிலையில் யுத்தம் முடிந்தபின்னர் ஒரு சமயம் இவன் அவளை முகநூலில் சந்தித்தான். அவள் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றான். அவளுடன் தொடர்பு கொண்டான். அவள் குடும்பம், பிள்ளைகள் என்று நன்றாக இருப்பதை அறிந்து உண்மையில் மகிழ்ச்சி கொண்டான். அதனைக்காணும் சமயங்களெல்லாம் கூறுவான். இளமையில்அவளது காதல்தான் கிடைக்கவில்லையென்றாலும் முதுமையில் அவளது நட்பு கிடைத்தது தன் பாக்கியமே என்றான்.
அவனைப்பற்றி இவ்வளவு நினைவுகளும் மீண்டும் நினைவிலாடின. "என்னடா இந்தப்பக்கம். எப்படியிருக்கிறாய்?' என்றேன்.
"எனக்கென்ன குறை. நல்லாத்தானிருக்கிறன்" என்றவன் தான் எழுதி வைத்திருந்த கவிதையொன்றினைத் தந்தான். வாசித்துப் பார்த்தேன். 'சந்திப்பு' என்னும் பெயரில் எழுதப்பட்டிருந்த சிறு கவிதை அது.
•Last Updated on ••Monday•, 16 •July• 2018 14:47••
•Read more...•
••Saturday•, 07 •July• 2018 21:53•
?? - வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- "வேதாளம் சொன்ன 'சாட்' கதை" என்னுமிந்தச் சிறுகதை திண்ணை ஆகஸ்ட் 12, 2001 இதழில் வெளியான எனது சிறுகதை. நானே மறந்திருந்த இச்சிறுகதை அண்மையில் என் கூகுள் தேடலில் மீண்டும் வந்தகப்பட்டுக்கொண்டது. முனைவர் வெங்கட்ரமணனின் 'திண்ணைச் சிறுகதைகள் தேர்விலொரு சிறுகதையாக' அத்தேடலில் என்னை மீண்டும் வந்தடைந்த சிறுகதையிது. -
முற்றும் மனந்தளராத விக்கிரமன் வழக்கம் போல் முருங்கையிலேறி வேதாளத்துடன் இறங்கிய பொழுது, எள்ளி நகைத்த வேதாளம் அவனைப் பார்த்துப் பின் வருமாறு கூறத் தொடங்கியது.
‘ விக்கிரமா! நான் ஒரு கதை கூறப் போகின்றேன். இது சைபர் உலகு பற்றியதொரு கதை. இதற்கான கேள்விக்குாிய பதிலைத் தொிந்திருந்தும் நீ கூறாது விட்டாயானால் உன் தலை வெடித்துச் சிதறி சுக்கு நூறாகி விடும். ‘ இவ்விதம் ஆரம்பித்த வேதாளம் தன் கதையினைக் கூற ஆரம்பித்தது.
ராமநாதன் அன்று மிகவும் ஜாலியான மனோநிலையில் இருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் மனைவி பானுமதி வேலைக்குப் போய்விடுவாள். அவள் செய்வது ‘கிரேவ்யார்ட் சிவ்ட் ‘. நள்ளிரவிலிருந்து காலை வரை கனடாவின் பிரபல வங்கியொன்றின் தகவல் மையத்தில் வேலை. ராமநாதன் ஜாலியான மனோநிலையில் இருந்ததற்குக் காரணமிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் ‘சாட் ‘டில் ஒரு சிநேகிதி அகப்பட்டிருந்தாள். இதுதான் அவன் முதன் முறையாக ஒரு பெண்ணுடன் சாட் செய்வது. கடந்த இரண்டு நாட்களாக ஒருவிதமான கிளூகிளுப்பு. புது மாப்பிள்ளை போன்ற உற்சாகம். அவனில் தொிந்த மாற்றத்தை பானுமதியும் கவனித்துக் கொண்டிருந்தாள்.ஆனால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பானுமதி வேலைக்கு இறங்குவதற்கு ஆயத்தமானாள்.
‘என்னங்க, அப்ப நான் போயிட்டு வரட்டா ‘
‘ம்.. ‘ ராமநாதன் கணினியை ‘ஆன் ‘ பண்ணினான்.
‘என்ன நான் சொல்லுவது காதில் விழுகிறதா ? ‘ பானுமதியின் குரலில் சிறிது கடுமை தொிந்தது.
‘குழந்தை கட்டிலோரத்திலை படுத்திருக்கு..பார்த்துக் கொள்ளுங்க…பால் கரைத்து வைத்திருக்கிறேன். அழுதாலெடுத்துக் குடுங்கோ.. ‘
‘ம்.. ‘
‘ உணவெல்லாம் வெளியிலை இருக்கு. சாப்பிட்டதும் ஃபிரிட்ஜிற்குள் வைத்து விடுங்கோ..என்ன ? ‘
‘டோண்ட் வொரி ஐ வில் மனேஜ் இட்.. நீர் போய் வாரும் ‘
‘இப்பிடித்தான் எப்பவும் சொல்லுவீங்க..விடிய வந்தால் எல்லாம் வெளியிலை கிடக்கும்.. எத்தனை தரம் கொட்டியாச்சு..கொஞ்சமாவது கவனம் இருக்குதாயென்ன ? ‘
•Last Updated on ••Saturday•, 07 •July• 2018 22:02••
•Read more...•
••Thursday•, 28 •June• 2018 05:59•
?? -ஸ்ரீராம் விக்னேஷ் -??
சிறுகதை
பஸ்சுக்குள் நான் ஏறி உட்காரவும், பஸ் புறப்படவும் சரியாக இருந்தது. நேரத்தைக் கவனித்தேன். அதிகாலை ஐந்து மணி. முல்லைக்குடிக்குச் சென்றடையும்போது, பகல் பத்துமணி ஆகிவிடும்.
உள்ளத்திலே ஒரு படபடப்பு.
சென்ற வாரம் ஊரிலிருந்து திரும்பும்போது, அப்பாவிடம் வழிக்குவழி சொல்லிவிட்டு வந்தேன்.
“பெரியப்பா வீட்டு ஆளுங்ககூட எந்தப் பிரச்சினையும் வேணாம்பா…..”
வந்து ஒரு வாரந்தான் ஆகின்றது. அதற்குள் நேற்று மீண்டும் தகராறு. அதிகாலை மூன்று மணிக்கு பாலுமாமா போன்பண்ணுகின்றார்.
நேற்றிரவு பதினொரு மணிபோல அப்பாவும், கூட நாலைந்து பேரும், கையில் ஆளுக்கொரு வீச்சரிவாள் எடுத்துக்கொண்டு பெரியப்பா இடத்துக்குப் போக, அங்கே அவர்களின் கையிலும் வீச்சரிவாள்….!
பெரியநங்கை ஏரிக்கரையில் விளையாடியிருக்கின்றார்கள்.
நல்லவேளை, உயிர்ச் சேதம் எதுவுமில்லை. படுகாயங்களுடன் முல்லைக்குடி ஆஸ்பத்திரியில் அனைவருமே அட்மிட்.
முல்லைக்குடியிலுள்ள “பெரிய நங்கை ஏரி” எங்களது குடும்பச் சொத்து.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை, எனது அப்பாவின் சந்ததியர்கள் நிலக்கிழார்களாக இருந்திருக்கின்றார்களாம்.
முல்லைக்குடி கிராமத்தின் முக்கால்பங்கினுக்கு மேல்பட்ட நிலங்கள் எங்களுக்கே சொந்தமாக இருந்தன.
வருடந்தோறும் மாரிகாலத்தில் ஏற்படுகின்ற அடைமழை காரணமாக முல்லைக்குடி குளத்திலே ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கால் முதலில் பாதிக்கப்படுவது எங்கள் வயல்களே.
இதனைத் தடுக்கவும், கோடைகாலத்துப் பாசனத் தேவைகள் கருதியும், சுமார் முப்பது ஏக்கர் பரப்பளவில், என் அப்பாவின் பாட்டியார் “பெரிய நங்கை” அவர்களின் காலத்தில், உருவாக்கப்பட்டதுதான் இந்த “பெரியநங்கை ஏரி”.
அவரின் ஒரே மகன்தான் எனது தாத்தா.
என் தாத்தாவுக்குத் திருமணமாகி, என் அப்பா பிறந்த பின்புதான் - தாத்தா பற்றிய ஒரு உண்மை தெரியவந்தது.
•Last Updated on ••Thursday•, 28 •June• 2018 06:04••
•Read more...•
••Thursday•, 22 •February• 2018 07:56•
?? - பொன் குலேந்திரன் – கனடா -??
சிறுகதை
இலங்கையில் “உடப்பு “என்றவுடன் நம் நினைவில் வந்து நிற்பது தீக்குளிப்பு திருவிழா, வில்லுப்பாட்டு, கரகாட்டம். கும்மி, கரை வலை இழுக்கும்போது மீனவர்கள் ஒத்து பாடும் அம்பா பாடலுமே . கரப்பந்தாட்டத்துக்கும் அக்கிராமம் பிரசித்தமானது.. தென்னிந்தியாவை முஸ்லீம்கள் ஆட்சிசெய்தபோது , 16ம் நூற்றாண்டில் மதுரை மங்கம்மாவுக்கும் இராமநாதபுரம் ராசாவுக்குமிடையே போர் மூண்ட நேரம் மதமாற்றத்துக்கு பயந்து 18 குடும்பங்கள் 12 வள்ளங்களில் புலம் பெயர்ந்து, நன்நீர் தேடி. கற்பிட்டி. உடப்பு ஆனவாசல் முதல் கலாஓய வரை குடியேறினர் இவர்கள் வீரமிக்க திடகாத்திரமான மக்கள். மன்னாருக்கும் புத்தளத்துக்கும் இடைப்பட்ட பகுதி ஒரு காலத்தில் செழித்து திகழ்ந்தது. தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய இவர்கள் தங்கள் குல தெய்வம் ஸ்ரீ திரௌபதையம்மனுக்கு கோயில் அமைத்து வழிபட்டனர். மீன் பிடித்தலும் முத்துக்குளித்தலும் இவர்கள் தொழில் .. இக்கிராமத்தை சுற்றி பௌத்தர்களும், கத்தொலிக்ர்களும், இஸ்லாமியர்களும் வாழும் பல சிங்கள கிராமங்கள் உண்டு , வடமேல் மாகாணத்தில், கொழும்பு புத்தளம் வீதியில் பத்துளு ஓயாச்சந்தியிலிருந்து வடமேற்காக 4 மைல் தூரத்தில் இந்து சமுத்திரத்தின் கரையோரத்தில் உடப்பு கிராமம் அமைந்துள்ளது. ஏறக்குறைய 4000 தமிழ் குடும்பங்கள் இவ்வூரில் வாழ்கின்றன. இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலானோர் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள். இவ்வூரின் தெற்கே குறுமண்கழி என்ற கடலுடன் தொடர்பற்ற உப்புநீர் நிறைந்த அளமும் . கிழக்கே ஒல்லாந்தரின் வெட்டுவாய்க்காலும் , வடக்கே இவ்வூரார் வாழும் ஆண்டிமுனைக் கிராமமும் , மேற்கே இந்து சமுத்திரமும் காணப்படும். கொழும்பையும் புத்தளத்தையும் இணைக்கும் நீர்பாதையாக ஒல்லாந்தரின் வெட்டுவாய்க்கால் அமைந்துள்ளது. முற்காலத்தில் சரியான பாதைபோக்குவரத்து இல்லாத காரணத்தால் இவ்வாய்க்கால் வர்த்தகப் பொருட்கள் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது. ஊருக்கு ஒரு மைல் தூரத்தில் உள்ள ஆண்டிமுனையில், கடற்கரையோரத்துக்கு அன்மையில் நன்னீர் ஊற்றுகளும் குளிக்கும் கிணறுகளுமுண்டு. இவ்வூருக்கு அண்மையில் உள்ள பத்துளு ஓயாவென்ற ஆற்றின் முனையில் உள்ள மண்ணை நீக்க உடைப்பு ஏற்படுத்தி ஆற்றின் வெள்ள நீர் கடலுக்குபாச்சுவதன் மூலம் புத்தளம் முதல் ஆனைவிழுந்தாவ பிரதேசங்கள் வரையுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றப்படகின்றன. ஆற்றின் முனையில் உள்ள உடைப்பே பின் மருவி உடப்பாகியதென்பது பலர் கருத்து.
பழந் தமிழரின் தொன்மையான கலைகளுள் வில்லுப்பாட்டு. இந்தக் கிராம மக்களின் பிரதான இசைக் கலைகளில் ஓன்று வில்லைப் பிரதான இசைக் கருவியாகவும்,உடுக்கை, குடம், தாளம், கட்டைஹார்மோனியம் போன்றவற்றைத் துணைக் கருவிகளாகவும் கொண்டு இசைக்கப்படுவது வில்லுப்பாட்டு. அதோடு அக்கிராம பெண்கள் நாட்டுப் பாடல்கள் பாடுவதில் சிறந்தவர்கள். பொதுவாகப் புராண இதிகாசக் கதைகளும் கட்டபொம்மன் கதை, காந்தி மகான் கதை, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.கதை,பாரதி கதைகளும் வில்லுப் பாட்டாகப் பாடப் படுவதுண்டு. தெம்மாங்கு முதலான நாட்டுப்புறப் பாடல் மெட்டுக்களும் கூத்துப் பாடல் மெட்டுக்களும் வில்லிசையிற் கையாளவதில் பெரியதம்பி சோமஸ்கந்தர் உடப்பு கிராமத்தில் புகழ் பெற்றவர். அவருக்கு ஆசான் அவருடைய தந்தை பெரியதம்பி. கந்தர் என்று ஊர் வாசிகலாள் அழைக்கபடும் சோமஸ்கந்தர் அரச சேவையில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1950 இல் ஆசிரிய நியமனம் பெற்று கொழும்பில் தங்கியிருந்து பணியாற்றிய காலத்தில் திரைப்படநடிகரும் வில்லிசையாளருமாகிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் தொடர்பு இவருக்குக் கிட்டியது. நாடக உத்திகளையும் வில்லிசை நுட்பங்களையும் கலைவாணிரிடமிருந்து கற்றுக்கொண்ட கோவில்களில் வில்லிசை நிகழ்ச்சியை நடத்தினார்
•Last Updated on ••Thursday•, 22 •February• 2018 08:05••
•Read more...•
••Friday•, 16 •February• 2018 08:56•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- இச்சிறுகதை ஏற்கனவே 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. தற்போது எனது முகநூல் நண்பரும், பல தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்தவருமான எழுத்தாளர் ஜி.ஜி..சரத் ஆனந்த அவர்கள் இச்சிறுகதையினையும் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ளார். இதுபற்றிய தகவலை அவர் அறியத்தந்திருந்தார். இதற்காக அவருக்கு எனது நன்றி. -
அதிகம் நடமாட்டமில்லாமலிருந்தது அந்த 'பார்'. வியாழன் வெள்ளியென்றால் களை கட்டி விடும். திங்களென்றபடியால் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஓரிருவர்களேயிருந்தார்கள். 'சிக்கன் விங்ஸ்'உம் 'பட்வைசர்' பியரையும் கொண்டுவரும்படி 'வெயிட்டரிடம்' கூறிவிட்டுச் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன். நினைவெல்லாம் வசுந்தராவே வந்து வந்து சிரித்துக் கொண்டிருந்தாள். என் பால்ய காலத்திலிருந்து என் உயிருடன் ஒன்றாகக் கலந்து தொடர்ந்திருந்த பந்தம். இருபது வருடத் தீவிரக் காதல். எனக்குத் தெரிந்த முகவன் ஒருவன் மூலம் அண்மையில் தான் கனடா அழைத்திருந்தேன். அவ்விதம் அழைத்ததற்காகத் தற்போது கவலைப் பட்டேன். அவளது வாழ்க்கையை மட்டுமல்ல என் வாழ்க்கையையுமே சீரழித்து விட்டேனா? இவ்வளவு நாள் பொறுத்திருந்தவன் இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்கக் கூடாதா? எனக்குக் கனடா நாட்டு நிரந்தரக் குடியுரிமை கிடைத்ததும் முறையாக அவளை அழைத்திருக்கலாமே. ஒரு விதத்தில் அவளுக்கேற்பட்ட இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமாக இருந்து விட்டேனே. இது போன்ற பல சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தேன். ஆனால் எனக்கு இவ்விதம் ஏற்படுமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லையே.
அந்த முகவன் திருமணமானவன். பார்த்தால் மரியாதை வரும்படியான தோற்றம். அதனை நம்பி ஏமாந்து விட்டேன். வசுந்தராவின் பயணத்தில் வழியில் சிங்கப்பூரில் மட்டும் தான் ஒரு தரிப்பிடம். தனது மனைவியென்று அவளை அவன் அழைத்து வருவதாகத் திட்டம். பொதுவாக இவ்விதம் பெண்களை அழைத்து வரும் சில முகவர்கள் சூழலைப் பயன்படுத்தி, ஒன்றாகத் தங்கும் விடுதிகளில் வைத்துப் பல பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகக் கதைகள் பல கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் எனக்கே இவ்விதமேற்படுமென்று நான் நினைத்துப் பார்த்தேயிருக்கவில்லை. கனடா வந்ததும் வசுந்தரா கூறியதும் என்னால் நம்பவே முடியவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்திருக்கின்றார்கள். அருந்தும் பானத்தில் அவன் போதை மருந்தொன்றினைக் கலந்து கொடுத்து இவள் மேல் பாலியல் வல்லுறவு வைத்திருக்கின்றான். மறுநாள் தான் இவளுக்கே தெரிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல. இவள் விரும்பினால் இவளைத் தொடர்ந்து 'வைத்திருப்பதாக'க் கூடக் கூறியிருக்கின்றான். இவன் இது போல் ஏற்கனவே வேறு சில பெண்களுடனும் இவ்விதம் நடந்திருக்கின்றான். அவர்களிலொருத்தி இங்கு புகார் செய்து தற்போது சிறையிலிருக்கின்றான்.
இப்போது என் முன் உள்ள பிரச்சினை......வசுந்தராவை ஏற்பதா இல்லையா என்பது தான். ஐந்து வயதிலிருந்தே இவளை எனக்குத் தெரியும். ஒன்றாகப் பாடசாலை சென்று, படித்து, வளர்ந்து உறவாடியவர்கள். இவளில்லாமல் என்னாலொரு வாழ்வையே நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால்...இவளது இன்றைய நிலை என் மனதில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தி விட்டதென்னவோ உண்மைதான். தத்துவம் வேறு நடைமுறை வேறு என்பதை உணர வைத்தது இவளுக்கேற்பட்ட இந்தச் சம்பவம். பார்க்கப் போனால் தவறு இவளுடையதல்லவே. ஒரு விதத்தில் நானும் காரணமாகவல்லவா இருந்து விட்டேன்....
'நண்பனே. நான் உன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளலாமா?"
•Last Updated on ••Monday•, 16 •December• 2019 00:59••
•Read more...•
••Thursday•, 15 •February• 2018 17:57•
?? சுதாராஜ் -??
சிறுகதை
மயிலண்ணையைக் காணவில்லை!
இதிலேதான் படுத்திருந்தார்… விறாந்தையில்! படுத்த பாய் விரித்தபடி கிடக்கிறது. ஆளைக் காணோம்! எங்கே போயிருப்பார்… இந்த இரவு நேரத்தில்?
விறாந்தையில் எனது படுக்கையிற் கிடந்தவாறே விழிகளாற் துளாவி முற்றத்தைப் பார்த்தேன். வெளியே இருளில் மறைந்து மறைந்து ஓர் உருவம் அசைவதுபோலத் தெரிகிறது. அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார் மயிலண்ணை?
நல்ல உன்னிப்பாகக் கவனித்தேன். அட, அது மயிலண்ணையில்லை… மங்கலான நிலா வெளிச்சத்தில் காற்றில் அசையும் செடிகளின் நிழல்கள் யாரோ அசைவதைப் போலத் தோற்றமளிக்கிறது!
வாசற்படியில் நாய் படுத்திருக்கிறதா என எட்டிப் பார்த்தேன். வீட்டிலிருந்து யாராவது இரவில் வெளியே இறங்கிப் போனால் நாயும் பிறகாலே போய்விடும். திரும்ப வந்து அவர்கள் படுத்த பிறகுதான் அதுவும் படியிலே படுத்துக்கொள்ளும். நாய் அங்கேதான் கிடக்கிறது. அப்படியானால் மயிலண்ணை வெளியேயும் போகவில்லை. உள்ளேயும் இல்லையென்றால் ஆளுக்கு என்ன நடந்தது?
அம்மாவை எழுப்பி விஷயத்தைச் சொல்லலாமா என எண்ணினேன். அம்மா எவ்வித அங்க அசைவுகளுமின்றி ஒரு பக்கம் சரிந்த வாக்கில்… நல்ல உறக்கம் போலிருக்கிறது. எத்தனை நாட்கள் கெட்ட உறக்கமோ?
'தம்பி உன்னை நினைச்சு நினைச்சு ராவு ராவாய் நித்திரையில்லையடா!"
'சும்மா கனக்க யோசிச்சு மண்டையைப் போட்டு உடைக்காதையுங்கோ… நான் அரசாங்க உத்தியோகக்காரன் எண்டு அத்தாட்சி காட்டினால் பிடிக்கமாட்டாங்கள்."
அம்மாவின் ஆறுதலுக்காக இப்படிச் சொல்லுவேன். சிறிய அரச உத்தியோகத்துக்காக கிளிநொச்சி வந்தவன் நான். மிகுதி நேரத்தில் விவசாயத்தில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் கிளிநொச்சியிலே காணி வேண்டி வீடு கட்டி ஸ்திரமானவன்.
'நல்ல கதை பேசுகிறாய்… உன்ரை வயசில எத்தனை பெடியளை.. அவங்களும் அரசாங்க உத்தியோகக்காறர்தானே… பிடிச்சுக்கொண்டு போனவங்கள்.. பிறகு என்ன கதி எண்டு இன்னும் தெரியாது!"
நடுச் சாமங்களிலும் இருள் அகலாத விடியப்புற நேரங்களிலும் தேடுதல்வேட்டை நடக்கிறது. இதனால் அம்மாவுக்கு உறக்கமில்லை. என் வயசு நல்ல பதமான வயசு! அம்மா எனக்காக கண்களில் எண்ணெயை ஊற்றிக் காத்திருப்பாள். படலைப் பக்கம் போய் ஏதாவது அசுகை தென்படுகிறதா என்று பார்த்திருப்பாள். நான் உறங்கும் பொழுதெல்லாம் அவள் விழித்திருப்பாள்.
இதனால் அம்மாவின் நித்திரையைக் குழப்ப மனம் வரவில்லை. இன்னும் சற்று நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம்… மயிலண்ணையின் கதி என்னவென்று.
மயிலண்ணை எனக்கு நெடுநாட் பழக்கமுடையவரல்ல.
•Last Updated on ••Thursday•, 15 •February• 2018 17:59••
•Read more...•
••Friday•, 29 •December• 2017 08:39•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
பொன்னம்பி அவனிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தான்."நீ (அரசியல்)அமைப்பிலே வேலை செய்யாமல் வெளியிலே போய் பயிற்சி எடுக்கணும் என்று அவசரப்படுகிறாய்.உனக்குத் தெரியுமா, இங்கே(தளத்திலே) வேலை செய்வது தான் முக்கியமானது,ஒரு காலத்தில் உணர்வாய்!"என்றான். இதையெல்லாம் நின்று நிதானிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை..
.மனோவும் ,சதிஸும் ...கிராமத்திலிருந்து பயிற்சிற்குச் சென்ற பிறகு இவனுக்கு மன அலைகள் அடிப்பது அதிகமாகியிருந்தன.
.மனோ,அவனுடன் சிறு வயதிலிருந்து படித்த நல்ல நண்பன்.சதாசிவம் வாத்தியாரின் பல பிள்ளைகளில் ஒருத்தன். ரமேஸினுடைய அம்மாவும் அங்கே படிப்பிக்கிற சந்திரா ஆசிரியை தான். சதிஸ் கிராமத்தில் இருந்து வட்டுக்கோட்டையில் படித்திருக்கிறவன். மனோவிற்கு நண்பன். எனவே இவனுக்கும் பழக்கம் . பிறகு, வேற வேற பள்ளிக்கூடங்களிற்கு படிக்கப் போய் ....இப்ப காலமும் நிறைய மாறி… விட்டிருக்கிறது சதீஸ் பட்டப்படிப்புக்கு தெரிவாகி பல்கலைக்கழகத்தில் . படிக்கிறவன்.
முதல் நாள் அமைப்புத் தோழர்களான பொன்னம்பியும், ரகுவும் வந்திருந்தவர்களின் புனை பெயரின் கீழ் (விபரங்களை) சிறு குறிப்புக்களை திரட்டிக் கொண்டிருந்தார்கள். பொன்னம்பிக்கு இவனை ஏனோ பிடித்திருந்தது. நண்பனாகி ...இந்த கேள்வியை எழுப்புகிறான்.
இவனுக்கு எப்படி ஒரு விடுதலை அமைப்பு இயங்கிறது என்பதே தெரியாதவன். ‘போராளிகள்’ ஆயுதம் தூக்கியவர்கள் எண்ணமே அவன் மனதில் இருக்கிறது. எனவே, விடுதலையைப்பற்றி தெரிவதற்காகவும் இங்கே வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறான். இப்ப, விடுதலை விசயங்கள் தெரியாத மாதிரி….,அப்ப, படிக்கிற காலத்திலே விளையாட்டின் அவசியமும் அவனுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. கிராமப் பள்ளிக்கூடம் என்பதால் மாற்றாந் தாயின் பிள்ளைகள் போன்ற புறக்கணிப்புக்கள் அதிகம், ஆசிரியர்கள் பற்றாக்குறைகள், சுகாதாரம்,கணிதம், விஞ்ஞானம்... என எடுக்கிறவரான லிங்கம் மாஸ்ரர் தமிழ்ப்பாடம் எடுக்கிறார் (இவர் பத்திரிகையில் எழுதுறவர் என்பதால்,அதிபர், ஒருமாதிரி அவரை பப்பாவில் ஏற்றி, மடக்கிப் பேசி... சாதித்து விட்டார்). உடற் பயிற்சிக்கென ஒரு ஆசிரியர் இல்லை. எனவே, அங்கே மற்றைய கிராமப் பள்ளிக்கூடங்களைப் போல கால்பந்து,கிரிகெட்(கொக் போலில் வேறு விளையாட வேண்டும்,நினைத்துப் பார்க்கவே வேண்டாம்),எல்லே.. என …விளையாட்டுக் குழுக்கள் (டீம்கள்)ஒன்றிரண்டு கூட எழவில்லை. இருந்திருந்தால் மாணவர்கள் அதில் பங்கு பற்றியிருப்பார்கள். இவற்றை விட சாரணர்,பொலிஸ், ஆமிக் கடேஸ் என அமைப்புகளும் இருக்கின்றன. கிராமங்கள் அவற்றைக் கனவில் தான் பார்க்க வேண்டும். இவற்றை விட இலக்கியக்குழுக்கள் என கலை விழாக்களை நடத்துறவையும் இருக்கின்றன. நகரத்தினரை விட கிராமத்தவர்களில் கதைப்புத்தகங்கள் வாசிக்கிற பழக்கம் குறையுறதுக்கும் இதுவும் காரணம்.
•Last Updated on ••Friday•, 29 •December• 2017 08:44••
•Read more...•
••Wednesday•, 13 •December• 2017 19:23•
??- சுதாராஜ் -??
சிறுகதை
பஸ் வந்து நின்றது. இந்த பஸ்ஸில் ஏறுவதா விடுவதா என்பதுதான் இவரது பிரச்சினை. இது இவர் போகவேண்டிய பஸ்தான். ஆமர்வீதிச் சந்தியிலிருந்து தெகிவளை வரை போகவேண்டும். அதற்கான சில பஸ்கள் ஏற்கனவே வந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு போய்விட்டன. இவர் எதிலும் ஏறவில்லை. பஸ்ஸில் நெருக்கடிகூட இல்லை. இவர் குழம்பிப் போய் நின்றார். இப்போது வந்து நிற்கிற இந்த பஸ்ஸில் ஏறுவதா வேண்டாமா?
சனிக்கிழமையாதலால் மதியம் ஒருமணியுடன் வேலை நேரம் முடிந்து விட்டது. பசி வயிற்றைப் பிடுங்கியது. ஏனைய நாட்களில் மனைவி அதிகாலையிலேயே சமைத்து ஸ்கூலுக்குப் போகும் பிள்ளைகளுக்கும் கொடுத்து> இவருக்கும் சாப்பாட்டுப் பார்சலைத் தந்துவிடுவாள். சனிக்கிழமைகளில் அதிகாலைச் சமையலுக்கு ஓய்வு. வீட்டுக்குப் போய்ச் சேர இரண்டு இரண்டரைக்கு மேலாகிவிடும். அங்கு இங்கு என்று நிற்காமல் விறு விறுவென பஸ் நிறுத்;தம்வரை நடந்தார்.
வெயில் தலையைச் சுட்டெரித்தது. இவருக்குத் தலைமுடி குறைவு. தலையைத் தொட்டு தடவிக்கொண்டு நடந்து வந்தார். தெரிந்தவர்கள் ஓரிருவர் தென்பட்டாலும் நிற்காது அவர்களுக்கு ஒரு முகஸ்துதிச் சிரிப்பை மட்டும் காட்டிக்கொண்டு வந்தார். இந்தவிதமான சிரிப்பு அவரிடம் எப்போதும் ரெடியாக இருக்கும்.
எல்லோருக்கும் அவசரம். தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ யாராயிருந்தாலும் வீதியின் இரு மருங்கும் ஏதோ ஒரு வேகத்தில் போய்க்கொண்டேயிருந்தார்கள். வாகனங்கள் என்றால் அதைவிட மோசம். அவை யாரையும் பொருட்படுத்தாமல் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக ஓடிக் கொண்டிருந்தன. அவர்கள் அவற்றையும் பொருட்படுத்தாமல் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் வீதிக்குக் குறுக்காகப் போகிறார்கள். என்ன அவசரமென்றாலும் இவர் மஞ்சள் கோடு போட்டிருக்கும் இடத்தில் நின்று பார்த்து வாகனங்களற்ற வேளையிற்தான் வீதியைக் கடந்து மறுபக்கம் போவார். அப்படி எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுள்ள மனுசன்தான் இவர். இன்றைக்கு ஏன் இப்படி…?
பஸ் நிறுத்தத்துக்கு வந்து பேஸைக் கையிலெடுத்தபோதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. என்ன தேவையேற்பட்டாலும் பஸ்ஸிற்குரிய காசை வேறாக வைத்திருப்பார். இன்று அந்த வழக்கம் தவறிவிட்டது. பேஸில் பத்து ரூபா மட்டும் இருந்தது. தெகிவளைவரை போவதற்கு இது போதாது.
இந்த நிலைமைக்கு அந்தப் பெண்தான் காரணமோ?
•Last Updated on ••Wednesday•, 13 •December• 2017 19:25••
•Read more...•
••Monday•, 11 •December• 2017 18:52•
?? - எஸ். அகஸ்தியர் -??
சிறுகதை
அதிகாரத்துவம் கல்வித் தரத்தை ஒரே மட்டத்தில் அமைத்தபோது. அதன் ‘தரப்புள்ளி’களில் ‘குல்லா’ மாட்டி. ‘இனப்பாகுபாடு’ வைத்த, தமிழ் மாணவர் சிரங்களையே கொய்கின்ற ‘தரப்படுத்தல்’ வாளை வீசியபோது, அது தன் இனத்துக்கு விட்ட சவாலெனக் கருதி, இவன்போல் சக மாணவ உலகமே கெம்பியது.
மேசை கொள்ளாமல் சிதறுண்டு கிடக்கிற புத்தகங்கள் - கொப்பிகள் - நோட்ஸ் தாள்களை ஒழுங்கு பண்ணி அழகாக வரிசைப் படுத்தவும் அவன் மனசு ஏவுகிறதில்லை – நேரமில்லை.
ஒரே கரிசனையோடு வாசிப்பு.
புத்தகம் விரித்தால், ‘போல்ட்பென்’ எடுத்தால் அததிலேயே ஆழ்ந்துவிடுகிற போக்கு.
‘எலாம்’ வைத்த மணிக்கூடு ‘கிணிங்’கிட்டால் புரைகிற தேகம் எப்பன் சிலும்பும். நிலை குலைந்து தலை நிமிர்த்தும்போது மணிக்கூட்டை நுணாவின கண்கள் சாடையாக அறையை மேயும்.
சுருட்டி மூலைப்பாடத்தே கிடக்கிற பாய் கும்பகர்ணனை நினைவு படுத்தி வெருட்டும் - அசையான்.
அத்தோடு நேர சூசிப்படி அடுத்த கொப்பி – புத்தகம் எடுபடும் -விரிபடும்.
எரிகிற விளக்கு அணைகிற சாயல் மண்டி வருகிற இருளாக உணர்த்துகிறபோதுதான், அம்மா, லாம்புக்கு எண்ணெய் விட்டுக் கொளுத்தித் தாங்கோ என்ற குரல் கீறலாகக் கமறி வரும்.
படிக்கவென்று குந்தினால் ஒரே இருக்கை – கதிரை புண்டுவிட்டது. அதன் கவனிப்பும் இல்லை. பிரப்ப நார் பிய்ந்து சிலும்பாகிக் குழிபாவிய நிலையிலும் குறாவி இருந்து ஒரே வாசிப்பு – வைராக்கியத்தோடு.
முழு விஸ்வாசத்தோடு தன்னை மாய்த்து என்னைப் படிப்பிக்கிற அம்மாவுக்கு – பெண் பிறவிகளுக்கு நான்தான் ஒரு ஆறுதல்’.
எப்பவும் அவன் மனசில் ஒரு குடைவு.
மைந்தன் படிப்பில் மூழ்குகிற கோலத்தை, அவள் - தாயானவள், கதவை நீக்கிவிட்டு வயிறு குதற – நெஞ்சு புரைய, ஒரு தவிப்போடு கண்ணூனிப் பார்ப்பான்.
அவளை மீறி எழும் பெரும்மூச்சு இதயத்துள் கழித்து அடங்கும். சிலவேளை கொட்டாவியோடு கண்ணீர் சிதறும்.
அவள் இடையறாது சொல்லிக்கொள்வாள்.
மூண்டு பெண் குஞ்சுக்க இது ஒரு ஆண் தவ்வல். அஞ்செழுத்தும் தேப்பன்தான். மேலைக்கு நல்லாப் படிச்சு ஒரு ‘ஆளா வந்திட்டுதெண்டா - இதை ஒரு ‘ஆளாக்கி’ப்போட்டனெண்டா, நிம்மதியாக கண்மூடியிடுவன்.
ஆதங்கம் அந்தரிப்பாக அவள் நெஞ்சு குதிக்கும்.
எந்த நேரமும் - நெடுக, நெடுக இப்படித்தான்.
‘இந்த முறை கட்டாயம் ‘கம்பசு’க்கு எடுபடுவன்’ என்ற திட மனம் அவன் நெஞ்சில் வஜ்ஜிரம் பாய்ச்சியிருக்கிறது.
•Last Updated on ••Monday•, 11 •December• 2017 18:58••
•Read more...•
••Saturday•, 04 •November• 2017 13:06•
??- சுதாராஜ் -??
சிறுகதை
மூச்சு வாங்க வாங்க சைக்கிள் பெடலை மிதித்தார். விரைவாக வீட்டுக்குப் போகவேண்டும். வயதான மனைவியின் நினைவுகள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. நோய் நிலைமை எப்படியோ…. ஏதாவது சாப்பிட்டிருப்பாளோ! மருமகள் ஏதோ ஒரு வழி பார்த்து சாப்பாடு கொடுத்திருப்பாள் எனச் சமாதானமடைய முயன்றார். அடுத்த கணமே துணுக்குறும் மனசு. பாவம்.. அவள்தான் என்ன செய்வாள்? தன் மூன்று குஞ்சுகளின் வயிற்றுப் பாட்டையும் பார்க்கமுடியாமல்.. தானும் மெலிந்து எலும்பும் தோலுமாகப் போனாள். பிள்ளைகளின் பட்டினியைத் தாங்காமால் அவள் அடிக்கடி சொல்வதும் நினைவில் வந்தது.
'நாங்கள்தான் பெரியாக்கள் எப்படியாவது கிடக்கலாம்! சின்னஞ்சிறுசுகள் என்ன செய்யும்?"
எவ்வளவு இலகுவாகச் சொல்லியாயிற்று. பெரிய ஆட்கள் எப்படியாவது கிடக்கலாம் என்று! எப்படிக் கிடப்பது? சைக்கிள் பெடலை மிதிக்க மிதிக்க இழைக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி வரை போய்த் திரும்புவதற்குள் பதினைந்து.. இருபது மைல் வரை அலைந்திருக்கிறார். அப்புவுக்கு எழுபத்திரண்டு வயதானாலும் தளராதிருந்த மேனி. வேலை செய்து இறுகிய உடம்பு. இப்போது ஆட்டம் காண்கிறது. ஊட்டச்சத்து இல்லை. அன்றாடம் ஒருவேளை சாப்பிடக் கிடைப்பதே பெரிய புண்ணியம். பசி மயக்கம் கால்களுக்கு நடுக்கத்தைக் கொடுக்கிறது. தலை சுற்றுகிறது. எதிலாவது சற்றுப் பிடித்துக்கொண்டு நிற்கவேண்டும். இளைப்பாற வேண்டும். 'ஏதாவது பாத்துக்கொண்டு வாறன்!" எனக் காலையில் புறப்பட்டு வந்தவருக்கு ஒரு இடத்திலும் பணம் புரளவில்லை. மனைவியின் நோய் பரிகாரம் செய்யப்படாமல் நாளுக்கு ஒரு வியாதியாகப் பரிமாணம் எடுக்கிறது. மூச்செடுக்கக் கஷ்டப்படுகிறாள். நெஞ்சுவலி.. இருக்க, எழும்ப யாராவது பிடித்துவிடவேண்டியுள்ளது. மிக முயன்று ஒவ்வொரு அடியாக அளந்து வைப்பதுபோலத்தான் நடக்கமுடிகிறது. இப்படியே விட்டால் என்ன செய்யுமோ என அவருக்குப் பயமாக இருக்கிறது. ஒருவேளை தன்னைவிட்டு அவள் போயே போய்விடுவாளோ? நல்ல ஸ்பெஷலிஸ்ட் டொக்டரிடம் அவளைக் காட்டவேண்டும். மருந்து எடுக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும்! பல இடங்களிலும் அலைந்து.. இறுதி முயற்சியாக, தான் வேலை செய்யும் தோட்டக்காரரிடம் போனார்.
'என்ன அப்பு.. இந்த நேரம்?"
விஷயத்தைச் சொன்னார்.
'ஒரு நூறு ரூபாய் தந்தியளெண்டால் பிறகு வேலை செய்யிறதிலை கழிச்சுவிடலாம்!"
•Last Updated on ••Wednesday•, 13 •December• 2017 19:24••
•Read more...•
••Wednesday•, 04 •October• 2017 16:49•
??- சுதாராஜ் -??
சிறுகதை
லிஃப்ட் இல்லாத மாடிப்படிகளில் ஏறி மூன்றாவது தட்டுக்கு வந்து கோலிங் பெல்லை ஒலித்தபோது வழக்கம்போல அப்பாதான் கதவைத் திறந்தார். இதை அவளுக்காக மனமுவந்து செய்யும் ஒரு உதவிபோல இதற்காகவே காத்துக்கொண்டிருப்பவர்போல பெல் ஒலித்த மாத்திரத்திலேயே கதவைத் திறந்து கண்களால் இரக்கமாகச் சிரித்துக்கொண்டு தோன்றுவார். அவருக்கு இதயத்திலிருந்து சுரந்து வரும் இந்த இரக்கத்தை தவிர வேறு எதையும் தரமுடியவில்லை. குடும்பத்தில் மூத்தவளாகப் பிறந்த இந்தப் பெண் நாற்பது வயதாகியும் இன்னும் ஒருத்தனுக்கு வாழ்க்கைப்படாமல் தன் குடும்பத்துக்காக உழைத்துப் போடுகிறாளே என அப்பா இரக்கப்படுவது போலிருக்கும்.
அலுவலகத்தில் நாள்முழுவதும் காய்ந்த அலுப்பு… பஸ் நெரிசல்களில் நசுங்கிய சினம்… மாடிப்படிகளில் ஏறிவந்த களைப்பு எல்லாம் அப்பாவின் முகத்திலுள்ள கருணையைக் கண்டதும் பறந்துவிடும். அவர் முகதரிசனத்தைப் பெற்றுக்கொண்டே வீட்டினுள் நுழையும்போது ஒரு புத்துணர்சி கிடைக்கும்.
உள்ளே வந்ததும் கதவை ஓசைப்படாது சாத்திவிட்டு வந்து அப்பா கதிரையில் அமர்ந்துகொள்வார். நாள் முழுவதும் அந்தக் கதிரையே அவருக்குத் தஞ்சம். அதனால்தான் அதற்கு ‘அப்பாவின் கதிரை’ எனப் பெயர் வந்தது. வெளிக்கேட்காது அடங்கிப்போகும் குரலில் அடிக்கடி செருமுவார். யாருடனும் பேசுவது குறைவு. அப்படி இருந்தவாறே எத்தனை விடயங்களுக்காகக் கவலைப்படுகிறாரோ? வரிசையாகப் பெற்றெடுத்த ஐந்து பெண்களுக்கும் உரிய காலத்தில் கல்யாணம் செய்துவைக்க முடியவில்லையே என்ற கவலையில் தோய்ந்து… அவரது முகம் எப்போதும் மன்னிப்புக் கோருவது போன்றதொரு பாவனையில் மாறிப்போய்விட்டது.
அறையுட் சென்று மேஜையிற் கைப்பையைப் போட்டாள். செருப்பை ஒரு பக்கம் கழற்றிவிட்டு கட்டிலில் நீட்டி நிமிர்ந்து படுத்தாள். அது டபிள் பெட். இரவில் அந்தக் கட்டிலில் தங்கைகளில் ஒருத்தி சேர்ந்து பகிர்ந்துகொள்வாள்.
அம்பிகா பக்கத்தில் படுத்தாளென்றால் தொல்லைதான். உறக்கம் வரும்வரை அலுப்புக் கொடுப்பாள். வயதுக்குரிய பக்குவம் இல்லாதவள்போல சிறு பிள்ளைமாதிரி விளையாடும் பெண். இந்த வயதிலும் விளையாட்டும் வேடிக்கையும் இவளுக்கு வேண்டியிருக்கிறது. இப் பூவுலகில் முப்பத்தைந்து வருடங்களைக் கழித்த பெருமை இவளுக்கு உண்டு. அப்பாவுக்கு மூன்றாவது செல்வம்.
•Last Updated on ••Wednesday•, 04 •October• 2017 17:02••
•Read more...•
••Friday•, 22 •September• 2017 17:34•
??- எழுதியவர்: கடல்புத்திரன் -??
சிறுகதை
மழை தூறிக் கொண்டிருந்தது. காரில்,வானில் வந்த சகோதரங்களும்,சப்வேய்யில் ஏறி ,விரைவு பேருந்து எடுத்த வதனாவின் சினேகிதி சந்திரா, அவர் கணவர் தில்லையும்...என ‘பியரன் சர்வ தேச விமான நிலைய’த்திற்கு வந்தவர்கள், நேரத்தைப் போக்காட்ட …. கதைத்துக் கொண்டு கொண்டிருந்தார்கள். லண்டனிலிருந்து வதனாக் குடும்பம் கோடை விடுமுறையைக் கழிக்க கல்கறி நகரத்திற்கு பறக்கிறது.அந்த விமானம் கல்கறிக்கு நேரடியாகப் போகவில்லை. அவர்களை பியர்சனில் இறக்கி ,வேற விமானத்தில் மாற விட்டுப் போகிறது.
விமானம் ஏற்கனவே இறங்கி விட்டதை மேலே தெரிகிற ‘கணனி’த் திரை காண்பிக்கிறது.
பொதிகளை இறக்கிற போதான சுங்க சோதிப்பு போதுமானது தான்,ஆனால் திரும்ப ஏற்றுறதிற்கும் நடைபெறுகிறது.உள்ளே இருக்கிற போது முகநூலில் தொடர்பு கொள்ள முடியாது...போல… பிரச்சனைகள் இருக்க வேண்டும். அலை பேசி,மடிக்கணனிகளை 'டேர்ன் ஓவ்' பண்ண வைத்திருப்பார்களோ? பிறகு, 5 மணி நேரத்திலே அடுத்த விமானம் எடுக்க இருக்கிறார்கள். அடுத்த விமானம் எடுக்க இரண்டு மணி நேரத்திற்கு முதலும் உள்ளே சென்று விட வேண்டும் அந்த இடைப்பட்ட நேரத்திலேயே சந்திக்கவே ஆவலுடன் வருகிறார்கள். ..அந்த நேரமும் சுருங்கிறது என்ற கவலை.
ஒரு மணி நேரமும் பறந்து விட்டது. இன்னுமா...விடவில்லை? என கிருபா சலிக்கிறார்.பொறுமை இழப்பு சிறிது எட்டிப் பார்க்கிறது.
“இப்ப, இவர்களிற்கு இருக்கிற பயத்தாலே 2 மணி நேரம் எடுத்து தான் விடுகிறார்கள்" என தில்லை அனுபவத்தில் முணுமுணுக்கிறார்.
அவர்கள் வாகன தரிப்பு நிலையத்தில் நிறுத்தி விட்டு பயணிகள் விமானம் ஏறுகின்ற பகுதியியாலேயே வந்த போது, நிறைய இடத்தை கயிறுகள் கட்டிய 'லைன்'கள் பிடித்துக் கொண்டிருந்தன. பயங்கரவாதிகளின் கை ஓங்கி விட்டது போல ….பாதுகாப்புச் சோதனைகள். ‘இது ஒரு சர்வ தேச விமான நிலையமா?என நொடிச் சந்தேகம் கூட வருகிறது. தீமையிலும் ஒரு... நன்மை, அதனால் பொதிகளின் நிறைகள் குறைந்தது விமானத்திற்கு நல்லம் தான். உள்ளே , முந்திய மாதிரி அன்பளிப்புக் கடைகள் இல்லாதையும், உணவகங்கள் பல காணாமல் போனதையும், ஒரே ஒரு 'ரிம் ஹோற்றன்' கோப்பிக் கடை மட்டும் பாம்புக் கீயூவோடு இருப்பதையும் பார்த்து வந்தார்கள்.
•Last Updated on ••Saturday•, 23 •September• 2017 05:36••
•Read more...•
••Friday•, 15 •September• 2017 17:59•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
புரட்டாதி மாதம். சிட்னியில் குளிர் குறையத் தொடங்கிவிட்டது. மாலை நேரம். துவாரகன் தனது நண்பி லோறாவுடன் நியூமன் என்ற நோயாளியை சந்திக்கப் போயிருந்தான்.
துவாரகனும் லோறாவும் மருத்துவபீட இறுதிவருட மாணவர்கள். பேராசிரியர் நெயில் றொபின்ஷன் பாடமொன்றின்---long integrated population medicine (IPM)--- ஒப்படைக்காக மாணவர்களைப் பல குளுக்களாகப் பிரித்திருந்தார். . Choronic diseases – asthma, cancer, diabetes, heart diseases - சம்பந்தமான நோயாளர்களை, வருடத்திற்கு குறைந்தபட்சம் பன்னிரண்டு தடவைகள் நேரில் சந்திக்க வேண்டும். நோயாளியுடன் கலந்துரையாடி குறிப்புகள் எடுக்க வேண்டும்.
இவர்கள் குழுவில் ஜொனதான், அன்டி நூஜ்ஜின், கான், ஜெசிக்கா, லோறா, ஜுவான் என மொத்தம் ஏழு பேர்கள் இருந்தார்கள். விரிவுரைகள் இல்லாத மாலை நேரங்களில் துவாரகனும் லோறாவும் நியூமனை சந்திப்பது வழக்கம்.
பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருந்தது. காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக் கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். அவருக்கு ஒரு எழுபது வயது இருக்கலாம். அந்த முதியவரின் ஒத்துழைப்பு இவர்களுக்கு வியப்பைத் தந்தது. எல்லா நோயாளிகளும் இந்தத் திட்டத்திற்கு உதவிபுரிய முன்வருவதில்லை. நோயின் உக்கிரத்துடன் போராடிக்கொண்டிருக்கும் அவர்கள் தம் எதிர்கால சந்ததியினர் வளமாக வாழ செய்யும் ஒரு சேவை இது. கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். வேலிக்கரையோரமாக அப்பிள், பீச்சஸ் எலுமிச்சை மரங்கள். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவர்களுக்கான கதிரைகளும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் இருக்கும்.
இன்று நியூமனைக் காணவில்லை. மூன்று கதிரைகள் போடப்பட்டிருந்தன. இவர்கள் தயங்கியபடியே மேசைக்குக் கிட்டப் போய் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மேசையில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. கதவு திறந்து கொண்டது.
நியூமன் வெளியே வந்தார். கம்பீரமான ஆடையுடன் ஒரு கனவான் போலக் காட்சி தந்தார். இவர்களுக்காகவே ஜன்னலிற்குள்லால் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார் போலும்.
•Last Updated on ••Friday•, 15 •September• 2017 18:01••
•Read more...•
••Friday•, 15 •September• 2017 17:55•
??- சுதாராஜ் -??
சிறுகதை
காத்திருத்தல் என்பது அவனைப் பொறுத்தவரை பொறுக்க முடியாத விஷயம். ஆனால் சில வேளைகளில் மனதைச் சோதிப்பதுபோல தவிர்க்க முடியாத காத்திருத்தல்கள் ஏற்பட்டுவிடுகின்றன. அப்பொழுதெல்லாம் தனது அப்போதைய தேவையை மறந்து இயற்கையோடு ஒன்றிப்போய் மனதை இதப்படுத்திக்கொள்வான். மதியம் கொழும்பிலிருந்து கிளம்புகிற புகையிரதம் மழை காரணத்தினாற்போலும் வழக்கத்தைவிடத் தாமதமாகவே அனுராதபுரம் வந்து சேர்ந்தது. அதுவரை காத்திருந்தவர்கள் சொற்பநேர இடத்துக்காக முண்டியடித்து இடித்துக்கொண்டு ஏறினார்கள். அந்த அமளி முடிந்தபிறகு அவன் ஏறினான். இருக்க இடமில்லாததால் நின்றான். வெளியே மழை பெய்துகொண்டிருந்தாலும் சனவெக்கையில் வியர்க்கத் தொடங்கியது. வடக்கிலிருந்து கொழும்பு செல்கிற புகையிரதமும் தாமதமாகவே வருகிறதாம். ‘குறோங்சிங்’கிற்காக இது காத்திருக்கவேண்டும். வியர்வையையும் சனவெக்கையையும் சகித்துக்கொள்கிற ஆற்றலில்லாதவனாய் இறங்கி மேடைக்கு வந்தான்.
மழையைக் கண்டு சுவரோரமாக ஒதுங்கியிருக்கிற மனிதர்களின் அடக்கத்தையும் றெயினிலிருந்து குதித்து தண்ணீர் எடுப்பதற்காக போத்தலோடு ஓடுகிற சிலரையும் பார்துக்கொண்டு நின்றான். பின்னர் தற்செயலாகத் திரும்பியபொழுது புகையிரதத்துள்ளிருந்து அவள் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டான். ஓர் அழகிய ரோசாமலரைப் போல அவளது முகம் தோற்றமளித்தது. அப்படி ஒரு கவிதையை ரசிப்பதுபோல அவளைக் கற்பனைக்குட்படுத்திப் பார்த்தான். அவன் கவனிப்பதைக் கண்டதும் அவள் பார்வையைத் திருப்பினாள். அவள் தன்னை நெடுநேரமாகவே பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள் என நினைத்தான். தனது பார்வை அவள் பக்கம் திரும்பியபோது திடுக்குற்றவள்போல சட்டென மறுபக்கம் திரும்பியதற்கு அதுதான் காரணமாயிருக்கலாம். எதற்காக அப்படிப் பார்த்திருக்கவேண்டும் என எண்ணியபொழுது ஒருவேளை மீண்டும் பார்ப்பாளோ என்ற சபலமும் தோன்றியது. அவள் திரும்பவும் பார்த்தாள். தான் இன்னும் அவளையே பார்த்துக்கொண்டிருக்கும் ரகசியத்தை அவள் அறியக்கூடாது என அவசரமாக வேறு பக்கம் திரும்பினான்.
மழையில் நனைந்துகொண்டு நிற்கிற செம்மறியாட்டைப்போல புகையிரதம் சூடு சுரணையில்லாமல் நிற்கிறது. மழை நீர் அதன் மேல் விழுந்து சிறிய பூச்சிகளைப்போலத் தெறித்துப் பறக்கிறது. பூட்டப்பட்ட கண்ணாடியில் முத்துமணிகளாக உருள்கிறது… தூரத்தே உரத்துப் பெய்துகொண்டு ஒரே புகைமூட்டமாகத் தெரிகிறது. ஆவியாக மேலே செல்கிற நீர் ஒரு ஷவரைத் திறந்துவிட விழுகிற தூறல்களாகக் கொட்டும் அழகை வியப்பவன்போல் வானத்தையே பார்த்துக்கொண்டு நின்றான்.
•Last Updated on ••Friday•, 15 •September• 2017 17:56••
•Read more...•
••Tuesday•, 29 •August• 2017 14:19•
??- சுதாராஜ் -??
சிறுகதை
'ஆனைவாழை குலை போட்டிருக்கு!"
வீட்டுக்கு வந்து பயணக்களைப்பு ஆற அமர முதலே இந்தச் செய்தியை மனைவி சொன்னாள். அதைக் கேட்டதும் 'அட! அப்படியா..” என்றொரு சந்தோஷம் மனதிற்குள் தோன்றினாலும் நிதானமாக நின்று உடைகளை மாற்றினான்.
'கேட்டுதே? ஆனைவாழையெல்லே குலை போட்டிருக்கு எண்டு சொல்லுறன்!”
'ஓம்! ஓம்! பாப்பம்.." என அவன் மனைவியைப் பார்த்துச் சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
'ஓமடா தம்பி!... நல்ல பெரிய குலை..!" என அம்மா சொன்னாள்.
'ஆனைவாழை பெரிசாத்தான் குலைபோடும்.." என முற்றும் தெரிந்தவன்போல அவன் கூறினான். ஆனால் ஆனைவாழை பெரிசாகவா சிறிசாகவா குலை போடும் என்பது அவனுக்குத் தெரியாது. ஆனை வாழைப்பழம் பெரிசாக இருப்பதால் ஆனைவாழைக்குலையும் பெரிசாக இருக்குமென ஊகித்திருந்தான். அல்லது ஏன்தான் அந்த வாழைக்கு ஆனைவாழை எனப் பெயர் வந்தது என்பதும் புரியவில்லை.
சிறு பிராயத்தில் பாடசாலையின் ஒரு விடுமுறைக் காலத்தில் அப்பாவோடு கொழும்பு கண்டி போன்ற வெளியூர்களுக்குச் சுற்றுலா போயிருந்தபோதுதான் முதலில் ஆனை வாழையைப்பற்றி அறிந்துகொண்டான். அப்போது சாப்பாட்டுக் கடையொன்றில் சாப்பிடப் போயிருந்தபொழுது வாழைப்பழம் கொண்டு வரும்படி அப்பா ஓடர் கொடுத்தார். வெயிட்டர் ஒரு தட்டில் வாழைப்பழச் சீப்பைக் கொண்டுவந்து வைத்தான். அவன் அதைப் பார்த்துவிட்டு “பழுக்கயில்ல.. காய்..!” என்றான்.
'இல்லை… அது நல்ல பழம்!" என்றார் அப்பார்.
•Last Updated on ••Tuesday•, 29 •August• 2017 14:21••
•Read more...•
••Friday•, 18 •August• 2017 15:01•
??- பல்லக்கு -??
சிறுகதை
எம தர்ம ராஜனின் வாகனமான எருமையின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் திடீரென்று சிகப்பு வெளிச்சத்துடன் எச்சரிக்கை சமிக்கைச் செய்தது. அசவர வேலையாக போய்க் கொண்டிருந்த எம தர்மன் “என்ன !? யாரது ,என்னாயிற்று ” எனப் பதட்டமாக கேட்டார்.
அம்மணிகள் பேசவும், கேட்கவும் ,அவசர சமிக்கைச் செய்யவும் வடிவமைக்கப் பட்டிருந்தது.
மறுமுனையில் ,சித்ரகுப்தன் “தலைவா! நம் கணிணி நிலயத்தை எவரோ 'ஹாக்' செய்துவிட்டார்கள்! ”
“'ஹாக்' ..!? அப்படி என்றால் ? ,விவரமாக சொல்லுங்கள்” எனக் கேட்டார்
“எவரோ நம் கணிணியில் இருந்த சில கணக்கு பையில்களை களவாண்டு விட்டார்கள்!”
“அப்படியா! எந்த கணக்கு !! ” என அதிர்ந்துக் கேட்டார்.
“பாவ புண்ணிய கணக்கு பையில் களவாடப்பட்டது. இந்தந்த செயலுக்கு இவ்வளவு புண்ணியம், பாவம் என அளவு கணக்கு இருந்தது அல்லவா!? அது..”
“ஓ..ஓ !! அது முக்கியமான கணக்கு ஆயிற்றே ! அதை கொண்டு தானே ஒவ்வொரு மானிடருக்குமான மொத்த கணக்கு ரிப்போர்ட் ,மும்மூர்த்திகளுக்கும் நாம் அனுப்புகிறோம். இதை திரும்பப் பெற வழி இருக்கிறதா என கணிணி துறையினரிடம் கேட்டீர்களா?”
“நம் கணிணி துறை ,அசட்டு நம்பிக்கையில் அதற்கு 'பேக்-அப்' எடுக்கவில்லையாம் ..ஆகையால் 'ரி-கவர்' செய்ய முடியாது எனச் சொல்லி விட்டார்கள் !”
“சரி , அப்படியானால் இதை மூம்மூர்த்திகளுக்கும் உடனே தெரியப் படுத்துங்கள் ,சித்ரகுப்தன்..”
உடனே மூம்மூர்த்திகளோடு அசவர கூட்டம் கூட்டப்பட்டது.
•Last Updated on ••Tuesday•, 22 •August• 2017 04:26••
•Read more...•
••Saturday•, 12 •August• 2017 12:27•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- தாயகம் (கனடா), சுவடுகள் (நோர்வே) ஆகிய சஞ்சிகைகளில் வெளியான சிறுகதைகள் இவை. எனது 'அமெரிக்கா' தொகுப்பிலும் அடங்கியுள்ளன. இவற்றில் சுவடுகள் (நோர்வே) சஞ்சிகையில் வெளியான 'பொந்துப்பறவைகள்' சிறுகதை. சிங்கப்பூர் கல்வி அமைச்சு பாடசாலை மாணவர்களுக்கான தமிழ்ப்பாடக் கல்வித்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. - வ.ந.கி -
எனது கதைகள் வ.ந.கிரிதரன் -- அமெரிக்கா தொகுப்புக்கான என்னுரை. -
எமது புலம் பெயர்ந்த சூழலில் ஏற்படும் நிலைமைகளையும், அதேசமயம் எமது நாட்டுப் பிரச்சனைகளை மையமாக வைத்தும் என் படைப்புக்கள் எழுந்துள்ளன. இன்றைய புலம்பெயர்ந்த எமது தமிழ்த் தலைமுறையைப் பொறுத்தவரையில், புலம் பெயர்ந்த நாட்டுச் சூழலிற்கும், புலத்தின் நினைவுகளிற்குமிடையில் அகப்பட்டு ஒரு வித திரிசங்கு வாழ்க்கை நடத்தும் தலைமுறை. இத்தலைமுறையினரில் நானும் ஒருவன் என்ற வகையில் எனது படைப்புகளில் புலத்தின் பிரச்சனைகளையும், புலம் பெயர்ந்த நாட்டுச் சூழலின் நிலைமை களையும் சித்தரிப்பதை என்னால் தவிர்க்க முடியாது. நிறப்பிரச்சனை யென்பது புலம் பெயர்ந்து வாழும் குழலின் முக்கியமான பிரச்சனை. புலம் பெயர்ந்த ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை. நாளைய எம் தலைமுறையும் இதற்கு விதிவிலக்கல்ல. எமது படைப்புக்கள் இப்பிரச்சினையை வெளிப்படுத்தும் அதேசமயம் புதிய சூழலின் ஏனைய பிரச்சனைகளையும், ஆராய வேண்டும். பூர்வீக இந்தியர்களின் பிரச்சினை, இந்நாட்டுப் பொருளாதாரச் சூழலால் உருவாகும் நிர்ப்பந்தங்கள், வாழ்வில், அவற்றாலேற்படும் தாக்கங்கள், பெண்களின் நிலைமை, புதிய சூழல் நம்மவர் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள், அனுபவங்கள்இவற்றையெல்லாம் நாம் எம் படைப்புகளில் வெளிப்படுத்த வேண்டும். அதேசமயம் நாட்டுப்பிரச்சனை காரணமாக ஓடிவந்தவர்கள் நாங்கள். அப்பிரச்சனையை மீண்டும் மீண்டும் கூறுவதென்பது தவறானதல்ல, தவிர்க்க முடியாததும் கூட.
அண்மைக் காலமாக எம்மவர்களில் சிலர் ‘புலம் பெயர்த்த எழுத்தாளரின் படைப்புக்கள் தொடர்ந்தும் பிறந்த நாட்டுப் பிரச்சனைகளை, விரக்தியையே புலப்படுத்தி வருகின்றன. இவர்கள் புகுந்த நாட்டுச் குழலை மையமாக வைத்துப் படைப்புக்களை உருவாக்க வேண்டும்' என்ற கருத்துப்பட கூறி, எழுதிவருகின்றார்கள். இவர்களது கருத்துப்படி புகுந்தநாட்டுச்சூழலை வைத்து எழுதுவதுதான் இலக்கியத்தரமானதாக அமையுமென்ற நோக்கமும் இழையோடுகின்றது. இவர்களெல்லாம் ஒன்றை உணரவேண்டும். தரமான படைப் பென்பது எதனைப் பற்றியதாகவும் இருக்கலாம்.இரண்டாம்உலக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யூத எழுத்தாளர்களின் படைப்புகளில் சிறந்த படைப்புக்கள் அவர்களது சொந்த நாட்டுப் பிரச்சனையை மையமாக, வைத்து எழுந்தவையே. உதாரணமாக போலந்து யூத இனத்தைச் சேர்ந்து ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் Painted Birds என்ற மிகப் பிரபலமான நாவலைக் குறிப்பிடலாம். 1991 இல் தற்கொலை செய்து கொண்ட கொஸின்ஸ்கியின் படைப்புக்கள் பிரச்சனைக்குரியவை. நிறமூட்டப் பட்ட பறவைகள்' (Painted Birds) நாவலில், யூதச் சிறுவனாக யுத்தச் சூழலில், நான்காண்டுகளாக கிழக்கு ஐரோப்பியநாடுகளில் அலைந்து திரிந்த தனது சொந்த அனுபவங்களையே கொளின்ஸ்கி விபரிக்கின்றான். இன்று இந்தப்படைப்பு: ஆங்கில இலக்கியத்தின் முக்கிய படைப்புக்களில் ஒன்றாக விளங்குகின்றது. இதனை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். கொஸின்ஸ்கியால் அவர்மேல் அவரது சொந்த நாட்டு அரசியல்நிலைமை ஏற்படுத்திய பாதிப்பை மறக்கமுடியவில்லை, அதனைப்படைக்காமல் இருக்கவும் முடியவில்லை.
•Last Updated on ••Friday•, 24 •November• 2017 14:34••
•Read more...•
••Tuesday•, 08 •August• 2017 07:07•
?? - வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- இச்சிறுகதை முதலில் தேடல் (கனடா) சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மற்றும் மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளியான 'அமெரிக்கா'த் தொகுப்பிலும் இச்சிறுகதை பிரசுரமாகியுள்ளது. -
ஜெயகாந்தனின் ரிஷிமூலத்தில் வரும் ராஜாராமனைப் போல்தாடி மீசை வளர்த்திருந்தான். கால்களில் ஒன்றினைச் சப்பணமிட்ட நிலையிலும் மற்றதை உயர்த்தி மடக்கி முழங்காலினை வலது கையினால் பற்றியிருந்தான். இடதுகையை பின்புறமாக நிலத்தில் ஊன்றியிருந்தான். முடிநீண்டு வளர்ந்து கிடந்தது, வாயினில் பாதித்துண்டு சிகரட் புகைந்த படியிருந்தது. கண்களில் மட்டும் ஒரு விதமான ஒளி வீச்சு விரவிக் கிடந்தது. மான் தோலில் அமர்ந்திருக்கும் சாமியாரைப் போல மான் ஹோலின் மேல் அமர்ந்திருந்தவனின் தோற்றமிருந்தது. இவன் நடைபாதை நாயகர்களிலொருவனென்றால் நான் ஒரு நடைபாதை வியாபாரி. "கொட் டோக்" (Hot Dog) விற்பது என் தொழில். வடக்கில்'தொலைவில் ஒண்டாரியோ பாராளுமன்றக் கட்டடம் தெரிந்தது. எமக்குப் பின்புறமாக புகழ்பெற்ற குழந்தைகளிற்கான வைத்தியநிலையம், 'சிக்கிட்ஸ்'ஹாஸ்பிடல் அமைந்து கிடந்தது சிறிது நேரம் சாமியார் ஒண்டாரியோ பாராளுமன்றத்தையே பார்த்தபடியிருந்தான். பிறகு சிரித்தான். 'ஏன் சிரிக்கிறாய்' என்றேன் 'பார்த்தாயா காலத்தின் கூத்தை. '
'காலத்தின் கூத்தா...' 'காலத்தின் கூத்தில்லாமல் வேறென்ன'
சிறிது நேரம் ஆகாயத்தைப் பார்த்தான், அதில் முழுமதியை ரசித்தான்.
நேரத்துடனேயே இருட்டத் தொடங்கிவிட்டது. இன்னமும் மாநகரத்தின் பரபரப்பு குறையவில்லை. ஆளுக்கு ஆள் அரக்கப் பரக்க நடந்துகொண்டிருந்தார்கள். இதற்கிடையில், எனக்கும் ஒரு சில 'கஸ்டமர்'கள் வந்தார்கள். எனது வாடிக்கையாளர்களில் ஒருவனான நைஜீரியா டாக்ஸி டிரைவர் டாக்ஸியை வீதியோரம்நிறுத்திவிட்டு வந்தான்.
'ஹாய். எப்படியிருக்கிறாய் 'சீவ் (Chief)' வென்றேன்.
'பிரிட்டி குட் மான். நீஎப்படி' யென்றான்.
'எனக்கென்ன. நான் எப்பொழுதுமே ஓ.கே.தான்' என்று விட்டுச் சிரித்தான். அருகிலிருந்த சாமியும் சிரித்தான்.
•Last Updated on ••Friday•, 24 •November• 2017 14:12••
•Read more...•
••Thursday•, 03 •August• 2017 21:36•
??- சுதாராஜ் -??
சிறுகதை
இது ஒரு துப்பறியும் கதையோ மர்மக் கதையோ அல்ல என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். எனினும் இந்தக் கதை இப்படித்தான் தொடங்குகிறது..
நட்ட நடு நிசி!
வாசற் கதவடியில் தடபுட என ஓசைகள்! அதன் பின் யார் யாரோ அழைக்கும் குரல்கள்!
வீட்டிற்குள் நின்றபடியே யன்னலூடு பார்த்தேன். கேற்றிற்கு வெளியே ஐந்தாறு பேர் நிற்பது வீதி வெளிச்சத்தில் தெரிந்தது. முன் பின் தெரியாத முகங்கள். மோட்டார் சைக்கிளில் இருந்தபடியே கூப்பிட்டார்கள். ஒருவன் கேற்றைத் திறப்பதற்கு முனைகிறான். கேற் பூட்டப்பட்டிருக்கிறது.
முன் மின் விளக்குகளைப் போட்டேன். மனதுக்குள் சற்றுத் தயக்கம். துணைவியை (மனைவி) எழுப்பலாமா என்று யோசித்தேன். (மனைவி இப்படியான நேரங்களில் துணைவி ஆகிவிடுகிறாள்!) இந்த நேரம் கெட்ட நேரத்தில் வந்து கூப்பிடுகிறார்களே.. யாரோ? எவரோ? எதற்கு வந்தார்களோ?
போவதா? விடுவதா?
விடாது அழைத்துக்கொண்டிருந்தார்கள்.
'கொஞ்சம் பொறுங்க…! வாறன்!"
இந்தக் குரலை அவர்களுக்கு எந்த மொழியில் வெளிப்படுத்துவது என்று தெரியாமலிருந்தது. சிங்களமா? தமிழா? வந்தவர்களின் சொந்தமொழி எதுவாயிருக்கும்?
வீட்டுக் கதவைத் திறந்தேன்.. தயக்கத்துடன்தான். எனினும் நான் இன்னும் அவர்கள் முன்னே போவதற்குத் தயாரில்லை. மனைவியின் முகத்தைப் பார்த்தேன்.. 'ஆட்கள் ஆரெண்டு தெரியாது… போகவேண்டாம்.." கையைப் பிடித்து இழுத்தாள்.
•Last Updated on ••Thursday•, 03 •August• 2017 21:40••
•Read more...•
••Sunday•, 30 •July• 2017 05:54•
??- சிங்கள மொழியில் - அஜித் பெரகும் திஸாநாயக } தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் -??
சிறுகதை
நயனா வீட்டுக்குள் நுழையும்போது அது சகதிக் குவியலாகக் கிடந்தது. அவள் எப்போதும் பெருக்கித் துடைத்து தூய்மையாக வைத்திருந்த பளிங்குத் தரையானது, கோப்பி நிற அழுக்குச் சேறு படிந்து சேற்று வயல்வெளி போல ஆகியிருந்தது. வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த சோபா கதிரையின் இருக்கைகள் சேற்றிலும் தண்ணீரிலும் ஊறிப் போயிருந்தன. பிளாஸ்டிக் கதிரைகள், புகைப்படங்கள், அலங்காரப் பொருட்கள் எல்லாம் மிதந்து சென்று ஆங்காங்கே ஒதுங்கியிருந்தன. சுவரில் கழுத்தளவு உயரத்தில் மஞ்சள் நிற நீரின் அடையாளம் படிந்திருந்தது.
அறையிலிருந்த அலுமாரியைத் திறந்து பார்த்தவளின் நெஞ்சம் அதிர்ந்து போனது. சேலைகள், சட்டைகள், பிள்ளைகளின் ஆடைகள் அனைத்திலிருந்தும் அழுக்குத் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அலுமாரியின் இழுப்பறையைத் திறந்து பார்த்தாள். முக்கியமான பத்திரங்கள் அனைத்துமே நனைந்து போயிருந்தன. அவற்றுக்கிடையே தங்க நகைகளை அடகு வைத்தமை சம்பந்தமான முக்கியமான காகிதங்களும் அடங்கியிருப்பது நினைவுக்கு வந்து அவளது கை தானாகவே கழுத்தை நோக்கிச் சென்றது.
அவள் கட்டிலின் மீது அமர்ந்து கொண்டாள். அதிலும் ஈரத்தை உணர்ந்தவள் உடனே எழுந்து நின்றாள். எழுந்ததுமே கட்டில் ஒரு புறமாக சாய்ந்து கொண்டது. அட்டைப் பலகைகளால் செய்யப்பட்ட அதை மீண்டும் பாவிப்பது சாத்தியமில்லை. அது இப்போது நனைந்து ஊறி பப்படத்தைப் போல உப்பிப் போய்விட்டிருந்தது. வீட்டுச் சாதனங்களை வாங்குவதற்காகப் பெற்றுக் கொண்ட கடனைக் கூட இன்னும் செலுத்தி முடிக்கவில்லை.
பிள்ளைகளின் அறை முழுவதும் புத்தகங்களும், கொப்பிகளும் பரந்து கிடந்தன. அவற்றின் மேலே அடுக்கடுக்காக சேறும் சகதியும் படிந்திருந்தன. கறுப்பு நிற அழுக்குச் சேற்றிலிருந்து மூக்கைத் துளைக்கும் நாற்றம் கிளம்பியதால் அவள் மூக்கைப் பொத்திக் கொண்டாள். அழுக்காகி, சகதி படிந்து அறையின் மத்தியில் வீழ்ந்து கிடந்த மகளின் பொம்மையொன்றைக் கண்டதும், அண்மையில் இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொல்லப்பட்ட குழந்தையொன்றின் சடலம் நினைவுக்கு வந்தது. அவளுக்கு வெள்ள நிவாரண முகாமில் விட்டுவந்த மகள் நினைவில் வந்தாள்.
•Last Updated on ••Sunday•, 30 •July• 2017 06:04••
•Read more...•
••Friday•, 28 •July• 2017 08:48•
??- எம் எம் நெளஷாத் , இலங்கை -??
சிறுகதை
டாக்டரின் பெயர் யுக்ஸியி. அந்தப் பெயர் யாருக்கும் தெரியாது. எல்லோரும் அவரை தங்கப் புத்தகம் என்று செல்லமாக அழைத்தார்கள். தங்கத்திற்கு நிகரான நற்குணங்களை அவர் கொண்டிருந்தார் என்பதற்காகத் தான் அவருக்கு அந்தப் பெயரைச் சூடியிருந்தார்கள் என்றால் அது தவறு. யுக்ஸியின் மேசையிலே தங்க நிறத்தில் பைண்டு செய்யப்பட்ட ஒரு புத்தகம் இருந்தது. பார்ப்போரின் கண்ணைக் கவரும் விதத்தில் அசல் தங்கப்பாளம் போல் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது அந்தப் புத்தகம். அந்தப் புத்தகத்தை அழகிய கண்ணாடிப் பேழையிலே பத்திரப்படுத்தி வைத்திருந்த குறும்புக்காரான அவர் கண்ணாடிப் பேழை மீது ‘இது தங்கம்’ என்று செதுக்கியும் விட்டார். அதன் பிறகு தங்கப் புத்தகமாகி விட்டார் யுக்ஸியி.
புதியவர்கள் யாரும் அந்தப் பேழையைச் சுட்டிக்காட்டி ‘இது என்ன டாக்டர்?’ என்று கேட்டு விட்டால் போதும் ‘அது தங்கம் தொடாதீர்கள்’ என்று சீரியசாகச் சொல்லுவார் யுக்ஸியி. சுவாரஷ்யம் என்னவென்றால் சிகிச்சைக்காக வந்த திருடனொருத்தன் அந்தப் புத்தகத்தை உண்மையிலே தங்கமென நம்பி களவாடிப் போனான். ஒருசில நாட்களில் ‘மன்னிக்கவும்’ என்ற கடித்தோடு புத்தகப்பேழை திரும்பி வந்து விட்டது.
சிறிய அந்தப் புத்தகம் Hutchison’s clinical methods என்ற ஆங்கில மருத்துவ நூல் ஆகும். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இந்நூலின் பெறுமதி நன்றாகத் தெரியும். நோயாளியொருவரோடு எப்படி உரையாடுவது, நோய் அறிகுறிகள், நோய் திருஷ்டாந்தத்தை எப்படி அறிந்து கொள்வது, வயிற்றை, கால்களை, இதயத்தை, நுரையீரலை, தலையை, தோலை எப்படிப் பரிசோதிப்பது என்று அந்நூலில் விலாவாரியாகப் போட்டிருப்பார்கள். அந்நூலிலுள்ள தாற்பரியங்களைக்; கற்றுத் தேறாமல் யாரும் டாக்டராகி விடமுடியாது. அற்புதமான அப்புத்தகம் யுக்ஸியி மருத்துவக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்தபோது செய்த சாதனைகளுக்காக கிடைத்ததா என்றால் அப்படி இல்லை.
யுக்ஸியி ஓய்வாக இருக்கும் வேளையில் படிக்கும்போது செய்த முட்டாள் தனங்களை நினைத்து தன்னுடைய தலையிலே தானே குட்டிக் கொள்வார்; சிலவேளை குபீரென்று சிரித்தும் விடுவார். அப்படிச் செய்த முட்டாள்தனத்திற்கு கிடைத்த பரிசுதான் அந்தத் தங்க பைண்டு தங்க புத்தகம்.
•Last Updated on ••Friday•, 28 •July• 2017 08:49••
•Read more...•
••Sunday•, 23 •July• 2017 23:49•
??- முல்லைஅமுதன் -??
சிறுகதை
அவசரமாக நிலக்கீழ் தொடரூந்திலிருந்து இறங்கி படைகளில் ஏறினேன்.
'பின்னேரம் வேலைக்கும் போகவேணும்'
'அதுக்குள்ள எத்தனை அலைபேசி வந்திருக்குமோ தெரியாது'.
சனக்கூட்டம் அதிகமாக இருந்தது.
எல்லோரின் முகத்திலும் அதே அவசரம்...
சிலர் கைகளில் அன்றைய தினசரி...புத்தகம்,சிறிய அல்லது பெரிய கைப்பை..அதை விட அலைபேசியை நோண்டியபடி வருவதும் போவதுமாய் இருந்தனர்.
இரண்டு மூன்று எனப் படிகளில் காலை வைத்துவிட்டேன்.
கடகடவென்று மேலிருந்து வந்தவன் இடித்துவிட்டு ஏதும் நடவாதது போல கீழிறங்கினான்.
எதுவுமே அவனிடமிருந்து வரவில்லை...இடித்ததற்கான சமாதானம் அவனிடமிருந்து இல்லவே இல்லை.
தடுமாறியபடி என்னை நிதானப்படுத்தி திரும்பிப் பார்த்தேன்.
எதிர்பார்க்கவில்லை...
கோபப்பட்டான்.
'உன்னில தான் பிழை' என்பது பார்த்தான்.
சரி..அவசரமாக்கும்..போகட்டும்' என்று என்னையே சமாதானப்படுத்திருக்கலாம்.
•Last Updated on ••Sunday•, 23 •July• 2017 23:50••
•Read more...•
••Wednesday•, 19 •July• 2017 11:30•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
எல்லாருக்குமே நேரான படிப்பு அமைவதில்லை. உயர்வகுப்பு வெறும் அனுபவங்களைக் காவியதோடு முடிந்து விட, கொக்குவில் தொழினுட்பக்கல்லூரியில் புதிதாக படம்பயில்வரைஞர் வகுப்பில் படிக்க குலேந்திரன் தெரிவாகி இருந்தான். முதல் நாள் பஸ்ஸில் வந்திருக்கலாம். ஓட்டைச் சைக்கிளில் உழக்கி வேர்க்க விறுவிறுக்க வந்திருந்தான். உடம்பு சூடாக இருந்ததது. ஓபிசில் இருக்கிற கிளார்க், "வகுப்பு மாடியில் இருக்கிறது" என சொல்ல மேலேற காற்றும் வீச இதமாக இருக்கிறது. உடம்பில் ஓடி மறையிற குளிரை அனுபவித்தான். "முருகா, இந்த வகுப்பாவது ஒரு வேலைக்குரிய தகமையை பெற வைப்பாயா?" என வேண்டிக் கொண்டு கலகலவென இருக்கிற வகுப்பினுள் நுழைந்தான்.
அவனைக் கண்டு விட்ட சந்திரன் "ஹாய்! குலேந்திரன்" என்று அவனிடம் வந்தான். இவனுக்கும் ஆச்சரியத்தால் கண்கள் விரிகின்றன. சந்திரனை சிறு வயதிலிருந்தே தெரியும். அப்ப, இவனும், அவனும் குட்டியர்கள். அவ்வளவாக பழகியதில்லை, ஆனால் தெரியும் ஆச்சி வீட்டிற்கு அயலிலே இருந்தவர்கள். அவனுக்கு 2 அண்ணரும், ஒரு தங்கச்சியும். சின்னண்ணன் இவனுடைய அண்ணருடன் ஒரே வகுப்பில் படிக்கிறவன். பெரியவர், இவனின் மாமாவின் (அம்மாட கடைசித் தம்பி) நண்பர். அவர்களுடைய அப்பர் கொழும்பிலே பிரபல கம்பெனி ஒன்றிலே நல்ல பதவியிலே இருந்தார்.. இப்ப அவரும் காலமாகி விட்டார் என்பது தெரியும்.
ஆச்சி வீட்டிலே, காலம் சென்ற சுந்தரி சின்னம்மாவின் பிள்ளைகளும் இருந்தார்கள், இவனை விட மூத்தவர்களும்; அக்கா, அண்ணாவின் வயசு மட்டத்தவர்கள், அவர்கள் தான் இவர்களை மேய்க்கிறவர்கள். அக்காவும், அண்ணாவும் அங்கே இருந்தே இந்து, மகளிர் கல்லுரிகளில் படித்துக் கொண்டிருந்தார்கள். சனி, ஞாயிறுகளில் சிலசமயம் தான் கிராமத்து வீட்டுக்கு வருவார்கள். அம்மாவோடு இவனோ, தங்கச்சிகளில் ஒருவரோ அடிக்கடி ஆச்சி வீட்ட விசிட் பண்ணுவார்கள் . வருடாந்த பள்ளி விடுமுறையில் ஓரேயடியாய் சென்று ஒன்று, இரண்டு கிழமை என்று ஆச்சி வீட்டிலே வந்து தங்கி விடுவார்கள். அப்பா, அவ்வளவாய் அங்கே வருவதில்லை.
•Last Updated on ••Wednesday•, 19 •July• 2017 11:38••
•Read more...•
••Thursday•, 06 •July• 2017 08:52•
?? -வ.ந.கிரிதரன் - ??
சிறுகதை
நான் -வ.ந.கிரிதரன் - எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானவை. 'சொந்தக்காரன்' கணையாழி சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் (2000) வெளியானது. 'வீட்டைக் கட்டிப்பார்' ஜீவநதி (இலங்கை) சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் வெளியானது. ஏனையவை இசங்கமம், மானசரோவர், தாயகம் (கனடா) மற்றும் தேடல் (கனடா) ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. 'யன்னல்' உயிர்நிழல் (பாரிஸ்) சஞ்சிகையில் வெளியானது. மேலும் சில சிறுகதைகள் மான்ஹோல் (தேடல் - கனடா), , பொந்துப்பறவைகள் (சுவடுகள் - நோர்வே), 'பூர்வீக இந்தியன்' (தாயகம்) ஆகிய சிறுகதைகளும் புகலிட அனுபவங்களைப் பேசுபவை. அவை கை வசம் தட்டச்சுச் செய்யப்பட்ட நிலையில் இல்லாததால் இங்கு சேர்க்கப்படவில்லை. 'சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை' ஞானம் (இலங்கை) சஞ்சிகையின் புலம்பெயர்தமிழர் சிறப்பிதழ் மற்றும் திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியுள்ளது. இவற்றில் பல சிறுகதைகள் ஈழநாடு (கனடா), சுதந்திரன் (கனடா) மற்றும் வைகறை (கனடா) ஆகியவற்றில் மீள்பிரசுரமாகியுமுள்ளன. மணிவாணன் என்னும் புனைபெயரிலும் புகலிட அனுபவங்களை மையமாக வைத்துச் சிறுகதைகள் சில எழுதியிருக்கின்றேன். அவையும் கைவசம் தட்டச்சு செய்த நிலையில் இல்லாத காரணத்தால் இங்கு சேர்க்கப்படவில்லை. புகலிட அனுபவங்களை மையமாக வைத்து இரு நாவல்களும் எழுதியுள்ளேன். 'அமெரிக்கா' ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும், 'குடிவரவாளன் ' ஓவியா பதிப்பக வெளியீடாகவும் வெளியாகியுள்ளன. இவற்றைப்பற்றித் தமிழகப்பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யபட்டுள்ளன. ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தொகுக்கப்பட்ட சிறுகதைகள் விபரங்கள் வருமாறு:
•Last Updated on ••Friday•, 24 •November• 2017 14:09••
•Read more...•
••Thursday•, 06 •July• 2017 08:42•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
நான் - வ.ந.கிரிதரன் - எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானவை. 'சொந்தக்காரன்' கணையாழி சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் (2000) வெளியானது. 'வீட்டைக் கட்டிப்பார்' ஜீவநதி (இலங்கை) சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் வெளியானது. ஏனையவை இசங்கமம், மானசரோவர், தாயகம் (கனடா) மற்றும் தேடல் (கனடா) ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. 'யன்னல்' உயிர்நிழல் (பாரிஸ்) சஞ்சிகையில் வெளியானது. மேலும் சில சிறுகதைகள் மான்ஹோல் (தேடல் - கனடா), , பொந்துப்பறவைகள் (சுவடுகள் - நோர்வே), 'பூர்வீக இந்தியன்' (தாயகம்) ஆகிய சிறுகதைகளும் புகலிட அனுபவங்களைப் பேசுபவை. அவை கை வசம் தட்டச்சுச் செய்யப்பட்ட நிலையில் இல்லாததால் இங்கு சேர்க்கப்படவில்லை. 'சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை' ஞானம் (இலங்கை) சஞ்சிகையின் புலம்பெயர்தமிழர் சிறப்பிதழ் மற்றும் திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியுள்ளது. இவற்றில் பல சிறுகதைகள் ஈழநாடு (கனடா), சுதந்திரன் (கனடா) மற்றும் வைகறை (கனடா) ஆகியவற்றில் மீள்பிரசுரமாகியுமுள்ளன. மணிவாணன் என்னும் புனைபெயரிலும் புகலிட அனுபவங்களை மையமாக வைத்துச் சிறுகதைகள் சில எழுதியிருக்கின்றேன். அவையும் கைவசம் தட்டச்சு செய்த நிலையில் இல்லாத காரணத்தால் இங்கு சேர்க்கப்படவில்லை. புகலிட அனுபவங்களை மையமாக வைத்து இரு நாவல்களும் எழுதியுள்ளேன். 'அமெரிக்கா' ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும், 'குடிவரவாளன் ' ஓவியா பதிப்பக வெளியீடாகவும் வெளியாகியுள்ளன. இவற்றைப்பற்றித் தமிழகப்பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யபட்டுள்ளன. ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தொகுக்கப்பட்ட சிறுகதைகள் விபரங்கள் வருமாறு:
•Last Updated on ••Saturday•, 17 •March• 2018 12:34••
•Read more...•
••Tuesday•, 20 •June• 2017 23:21•
??- சுப்ரபாரதிமணியன் - ??
சிறுகதை
காலை வானம் வெளிறிப் போயிருந்தது. நிலவு எங்கோ சென்று தொலைந்து போய்விட்டிருந்தது. மேகங்களின் கூட்டணி ராட்சத உருவங்களைக் கலைத்துப் போட்டுப் போனது. இப்படி காலை நேரத்து வானத்தை வேடிக்கை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது முத்து லட்சுமிக்கு.புறாக்கூண்டை விட்டு ரெண்டு நாள் விடுமுறை என்று பெனாசிர் சொல்லியிருந்தாள். புறாக்கூண்டு இப்படி நெருக்கமாக இருக்குமா. அலைந்து திரிய இடமில்லாமல் போய் விடலாம். ஆனால் நின்று கொண்டுத் தூங்குவதற்கு இடம் கிடைத்து விடும். புறாகூண்டு வீடு என்பதற்கு பதிலாக லைன் வீடு என்று சுலபமாகச் சொல்லிவிடலாம் என்று முத்துலட்சுமி நினைப்பாள்.
பெனாசிர் ஊருக்குப் போகிறாள். காலைப் பயணம் சுலபமாக இருக்கும் என்பதால் கிளம்பிவிட்டாள். பனிரண்டு மணி நேரப் பயணம். அவசரமாய் வரச் சொல்லி தகவல் வந்திருந்தது. சின்ன சீட்டு ஒன்று எடுத்த பணமும் பெனாசீர் கைவசம் இருந்தது.
“என்னமோ ரகசியம் மாதிரி வா. வான்னு கூப்புடறாங்க. அப்பா, அம்மா யாராச்சுக்கும் உடம்பு செரியில்லாமப் போயிருக்கும்.”
“இல்லே வேற விசேசம்ன்னு இருக்கலாமில்லே”
“அப்பிடி ஒன்றும் தெரியலெ”
“ஊருக்குப் போன தெரிஞ்சிடப் போகுது”
ரேஷன் கடைக்குப் போய் அவமானப்பட்டதைப் பற்றி சற்று உரக்கவே பேசி சண்டை இட வேண்டும் என்று நினைத்திருந்தாள் முத்துலட்சுமி. ஆனால் இரவில் தாமதமாக வந்த அவள் ஊருக்குப் போகவிருப்பதைச் சொன்னபின் அதைப்பற்றி விரிவாய் பேசவில்லை.ரேஷன் கடையில் பார்வையில் பட்ட அந்த இளைஞனை அவனின் புது உடையை முன்னிட்டு வெறித்துப் பார்த்திருக்கக் கூடாது என்று பட்டது. முத்து லட்சுமிக்கு, அவன் ஜீன்ஸ் கீழ் உடையில் கிழிசல்கள் இருந்தன. சட்டையிலும் ஓட்டைகள் இருந்தன. காதில் கடுக்கன் போட்டிருந்தான். தலையில் இருந்த கறுத்த மயிர்களைப் பிரித்தெடுத்தமாதிரி பிரவுன் வர்ணம் போடப்பட்டிருந்தது.
•Last Updated on ••Tuesday•, 20 •June• 2017 23:24••
•Read more...•
••Thursday•, 01 •June• 2017 00:30•
??- சுப்ரபாரதிமணியன் -??
சிறுகதை
பழையனூரில் மூன்று பேருந்து நிறுத்தங்கள் உLLanண்டு. எதிலும் நிழலில் நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிழல் குடையோ மறைப்புகளோ இல்லை. வெய்யிலானாலும் மழையானாலும் ஏதாவது மரத்தடி கிடைத்தால் பாக்யம் என்பது போல் தவிப்பார்கள் சுடுமணலில் கால்களை வைத்தவர்கள் போல் தள்ளாடுவார்கள். ஆண்கள் ஏதாவது தேநீர் கடையில் போய் தேனீர் குடித்து விட்டு கொஞ்சம் நேரம் உட்கார அனுமதி கிடைக்கும். பெண்கள் என்றால் தெருதான். தெருவில்தான் நிற்கவேண்டும். வெயிலில் காயவேண்டும் .
முதல் பேருந்து நிறுத்தம் பழைய பழையனூர் . பத்து பேர் கொண்ட கும்பல் பூவரச மரத்தடியில் இருந்தது. நூறு நாள் திட்ட வேலைக்கு போகிறவர்களை அங்கு வரச் சொல்லியிருந்தான் சூப்பர்வைசர் மங்கள கிருஷ்ணன். வாய்க்கால் மேடு பகுதிக்கு போக வேண்டியிருக்கும் என்று சொல்லியிருந்தான். அருணாதேவி அந்தக் கும்பலில் அன்று சேர்ந்திருந்தாள்.
எங்கு வேலைக்குச் சென்றாலும் அதிகபட்சம் மூன்று மாதங்கள் செய்வாள். அப்புறம் வேலை இடம் மாற்ற புது இடம் தேடுவாள்.முன்பு வேலை செய்த இடங்களில் ஆண்களின் தொல்லை பற்றி சொல்வாள்.
" பார்க்கற பார்வை...சேலையிலிருந்து ஆரம்பிச்சு மெதுவா கேக்கறது. சாப்பாட்டு பொட்டலம் வாங்கித் தந்துன்னு ஆரம்பிச்சு மொக்கை போடுவானுக..."
" நீ என்ன அவ்வளவு பெரிய அழகியா அருணா..."
" இங்க இருக்கறவங்களெ விட அழகுதா..."
" செரி... செரி... பேரழகியா நெனச்சக்காதே"
•Last Updated on ••Thursday•, 01 •June• 2017 00:32••
•Read more...•
••Wednesday•, 31 •May• 2017 07:16•
??- முல்லைஅமுதன் -??
சிறுகதை
அவன் இறங்கி நடந்தான்.
இரண்டுவாரங்களுக்கு முன்பே அனுமதி கேட்டிருந்தான்.
பதினெட்டாம் திகதி நிகழ்வொன்றிருக்கிறது.. போகவேணும்..
முகத்தைப் பார்க்காமலேயே முதலாளியின் மனதைப் படம் பிடித்தான்.
லீவு?
பதில் இல்லை..
தராவிட்டால் வேலை அம்போதான்.. பரவாயில்லை.. நினைத்தான்.
நேற்றிரவு வேலை முடிய சொல்லிவந்தான்.
'நாளை வரமாட்டன்...முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்கு போறன்'
அதே மௌனம்.
அவரும் அகதியாய் வந்தவர்தான்.
•Read more...•
••Wednesday•, 31 •May• 2017 07:07•
?? - கடல்புத்திரன் -??
சிறுகதை
முன்பெல்லாம் நகரக்காவலர், அவர்களின் உபபிரிவான பார்க்கிங் ஒபிசர் … மட்டுமில்லை, நகரசபையும் கூட தன்பங்கிற்கு டிக்கற் வழங்குவதற்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருதிருந்தது. ‘பொது மக்களின் வாகன நிறுத்ததிலும் நிறுத்தக் கூடாது . பட்ட காலே படும் போல , அதற்கும் டிக்கெட் கிடைத்துக் கொண்டிருக்கும். சில "டாக்ஸி" கம்பனிகள் ஏற்கனவே, சிறிது பாரம் கூடிய கணனியைப் பொறுத்தி, அவசர ,அவசிய விபரங்களை வழங்குவதற்கு மட்டும் ரேடியோவை பயன்படுத்திக் கொண்டிருந்தன. ‘ஜி.பி.எஸ் கருவி’ விற்பனைக்கு வந்த பிறகு,வீதிகள் விபரங்கள் அடங்கிய பெரிய வரை புத்தகத்தைக் வைத்திருக்கிறதும் ஓட்டிகளிடம் குறைந்து விட்டன. சாந்தன், இன்னமும் ...புத்தகமும் வைத்திருக்கிறவர்களில் ஒருத்தன்.
நகரசபை, வர்த்தக மையங்களில் இரண்டு அல்லது மூன்று "டாக்ஸி"கள் நிறுத்தும் தரிப்புகளையே பெரும்பாலும் ஏற்படுத்தி வைத்திருந்தனர்.அவற்றில் கொண்டு போய் நிறுத்த எல்லா "டாக்ஸி"களும் போட்டி போட்டால்.. எப்படி.?அதற்கு மேலே ..நிறுத்தினால்,வீதிச்சட்டத்தை மீறிய குற்றம். "டாக்ஸி"க் கம்பனிகள், சட்டை செய்யாமல் . சேவையை செய்வதற்கு தமக்கென பிறிம்பான சட்டங்களை, விதிமுறைகளை தயாரித்து வைத்திருந்தன.அவை நகரம் ஏற்படுத்திய சட்ட முறைகளோடு அவ்வளவாக ஒத்து போகவில்லை.வீதிச்சட்டத்தை மீறினால் பொலிஸ் டிக்கற்றை தருவான்.அவர்களுடைய தயாரிப்புபே மீறல்கள். நீயாச்சு, நகரகாவலராயிற்று.."என விட்டேந்தியாகவே விட்டிருந்தார்கள்.
பார்கிங் டிக்கற்றுக்கள் வைப்பதில் கண்கொத்திப் பாம்பாக நடக்கிற பொலிஸ்,பார்சல்(பொதிகள்) பெறுவதற்கு நிறுத்தினால் கூட டிக்கற் வைக்கிறவர்களாக இழிந்து போய் இருந்தார்கள். ஓட்டிகள் வழக்கை சட்டமன்றத்திற்கு கொண்டு போகலாம். போவார்கள்.ஆனால்,அடிப்படையில் பொலிஸும், நீதிமன்றமும் ஒரே கூட்டம் தான்.நகரத்தை காப்பாற்றுவதாகக் கூறி பொலிஸ் ,பொதுமக்களைச் சுடுகிறது.அதற்கு ஏதோதோ காரணங்களை எல்லாம் அடுக்கிறார்கள்.. எந்த பொலிஸ்காரர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்?. அதே கதை தான். (சட்டமன்றுக்கு) போவதால் கட்டவேண்டிய தொகை சிறிதளவு குறையும்.அவ்வளவு தான்
•Last Updated on ••Wednesday•, 31 •May• 2017 07:11••
•Read more...•
••Wednesday•, 03 •May• 2017 06:21•
??சுதாராஜ்??
சிறுகதை
புது வருடப்பிறப்புக்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன என்பது அவருக்குப் பயமாயிருந்தது. இன்னும் மூன்று கிழமைகளே இருக்கும் நிலையில் நாட்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போகப் போகப் பயம் அதிகரித்துக்கொண்டிருந்தது. எப்படிச் சமாளிக்கப்போகிறேனோ என்ற முளுசாட்டம். பிள்ளைகளுக்கு புத்தாடை உடுதுணிகள் வாங்கவேண்டும். ஐந்து பேருக்கும் வாங்குவதானால் எவ்வளவு தேவைப்படும்? அதற்கு எங்கே போவது?
போன வருடத்தைப்போல இந்த வருடமும் கடத்திவிடமுடியாது போலிருந்தது. மூத்த மகன் பிரகாஸ் ஏற்கனவே அவருக்குச் சொல்லிவிட்டான்.
'அப்பா…! எனக்கு இந்தமுறை வருடப்பிறப்புக்கு நீல சேர்ட் வாங்கித் தாங்கோ…! ஸ்கூலுக்கும் போடக்கூடியதாய் இருக்கும்!"
வருடப்பிறப்பு என்பது ஒரு சாட்டுத்தான். பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்குப் போடுவதற்கு உடை தேவைப்படுகிறது. மனைவி சரசுகூட அவருக்கு அவ்வப்போது சொல்லுவதுண்டு.
'ஒரு ஆமான உடுப்பில்லாமல் அதுகள் எப்படி ஸ்கூலுக்குப் போறது?"
அவர் அப்போது மனைவியைச் சினந்து பேசுவார்.
'என்ன சரசு?... நிலைமை தெரியாதமாதிரி கதைக்கிறீர்…என்னை என்ன செய்யச் சொல்லுறீர்?"
அவளுக்கு நிலைமை தெரியும் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவளும்தான் என்ன செய்வாள்? வேறு யாருக்குப் போய் முறையிடுவாள்? எனினும் அப்படிச் சத்தம் போட்டால் அவள் திரும்பவும் அந்தக் கதையை எடுக்கமாட்டாள்.
•Last Updated on ••Wednesday•, 03 •May• 2017 06:26••
•Read more...•
••Sunday•, 16 •April• 2017 07:19•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
ரவிராஜ் வீடு ஒன்றை வாங்கினான். மனைவி பவித்திராவிற்கு வீடு நன்றாகப் பிடித்துக் கொண்டது. உரிமையாளர் வீட்டைச் சுற்றிக் காட்டினார். வீட்டைப் பற்றி விலாவாரியாகச் சொன்னார். ஒரு குடும்பத்தைத் தவிர, அயலவர்களைப் பற்றி பெருமையாகச் சொன்னார். இவர்களுக்கு எதிர்ப்புறமாக இருந்த வீட்டுக்காரர்களில் அவருக்கு திருப்தி இருக்கவில்லை. அவர்களைப் பற்றி மேலெழுந்தவாரியாக சில குறைபாடுகளைச் சொன்னார்கள். மனைவி விவாகரத்துப் பெற்றவள். மூன்று பெண்பிள்ளைகள். குப்பைக்குடும்பம். கூத்துக்குடும்பம். இவை போதாதா அந்தக் குடும்பத்துடன் பழகுவதா இல்லையா என மூடிவு செய்ய? ரவிராஜ் குடும்பத்தினர் அவர்களுடன் பழகுவதில்லை என முடிவு செய்தனர்.
வீட்டிற்குப் போன முதல்நாள் மாலை நேரம் – பக்கத்து வீட்டுப் பெண்பிள்ளை---ஏழோ எட்டோ படிக்கக்கூடும்--- தனது நண்பி ஒருத்தியுடன் வந்து வீட்டின் கதவைத் தட்டினாள். அவள் தன் மார்புடன் இரண்டு பந்துகளை அணைத்திருந்தாள். மகனை தங்களுடன் விளையாட அனுப்பும்படி கேட்டாள். மகன் படிக்கப் போய்விட்டதாக பொய் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள் பவித்திரா.
அந்த வீட்டில் இரவு முழுவதும் திருவிழா போல விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். எந்நேரமும் கார்கள்---கார் என்று சொல்லமுடியாது வாகனங்கள்---வருவதும் போவதுமாக நிறைந்திருக்கும். அதே போல எல்லாவிதமான மனிதர்களும் வந்து போவார்கள். அந்த வீட்டிற்கு புல்லு வெட்டுபவனின் கார் பெட்டியுடன் சிலவேளைகளில் இரவும் தரித்து நிற்கும். வந்து போகும் பெண்களில் அனேகமானவர்கள் இளமையாக இருக்கின்றார்கள்..
•Last Updated on ••Sunday•, 16 •April• 2017 07:21••
•Read more...•
••Friday•, 17 •March• 2017 00:05•
??- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -??
சிறுகதை
'நாங்கள் லண்டனுக்கு கப்பலால்தான் பயணம் செய்து வந்தோம். கறிக்குப் போடுகிற மிளகாய்த்தூள், சமைக்கிறதுக்கு கருவாடு, கோப்பி போன்ற சாமான்களை யாழ்ப்பாணத்திலிருந்துதான் கொண்டு வருவோம். அப்படிக் கொண்டு வந்தால்தான் எங்கட சாப்பாட்டை கொஞ்சம் சுவைபடச் சாப்பிடலாம். இலங்கையிலிருந்து மேற்படிப்புக்கென்று வருகிறவர்கள் எல்லோரும்; கட்டிக் காவிக் கொண்டுதான் வருவோம். யாழ்ப்பாணத்தை இறக்குமதி செய்தது போலல்லவோ இப்போது லண்டனில் எல்லாப் பொருட்களும் இருக்குது.
என்னுடைய பிள்ளைகள் லண்டனில் படித்துப் பட்டம் பெற்றார்கள். ஆனால் திருமணம் என்பதில் நாட்டம் கொள்ளாது இருந்துவிட்டார்கள். இப்ப துயர உணர்வில் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள். திருமணத்தை விரும்பாது சுதந்திரமாக வாழவேண்டும் என்று தனிமையில் வாழ்கின்றவர்களும் இருக்கிறார்கள். வெளிநாட்டவர்களில் மோகங்கொண்டு கல்யாணம் செய்தவர்களும் உண்டு. சிலர் சிறப்பாக இருக்கிறார்கள். சிலரின் வாழ்க்கை இடையில் முறிந்தும், சீர்கெட்டுப்போயும்; இருக்குது. நவீன உலகில் திருமண வாழ்வும் புதுப்புது உருவம் பெற்றுக்கொண்டுதான் வருகின்றது. என்ன இருந்தாலும் என்ர பிள்ளைகள் தனித்து வாழ்வது என் சிந்தனையை எந்த நேரமும் அரித்துக்கொண்டுதான்; இருக்குது’ என்று இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்ரி எப்போதும் தான் படிக்க வந்த பெருமையையும்;, தனது பிள்ளைகளின் கவலையையும் கூறிக்;கொண்டே இருப்பார்.
ஷாலினியுடன் அன்ரியின்; ஆதங்கத்தைக் கதைத்துக் கொண்டிருந்தேன். திருமணங்கள் பற்றித் திரும்பியது பேச்சு.
இலங்கையில் பெற்றோர் விருப்பத்தின்படி திருமணம் முடித்து வந்தவள் ஷாலினி. லண்டனில் பிறந்து வளர்ந்தவர்தான் மாப்பிள்ளை. தற்போது ஷாலினி லண்டனில் தனியார் வைத்தியசாலையில் தாதியாக வேலை பார்க்கிறாள். பட்டப்படிப்பிற்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டும் இருக்கின்றாள் ஷாலினி.
•Last Updated on ••Friday•, 17 •March• 2017 00:10••
•Read more...•
••Tuesday•, 07 •March• 2017 22:50•
??- சுதாராஜ் - ??
சிறுகதை
காலையில் விழித்தெழுந்ததும் கபினை விட்டு வெளியே வந்து சூரியன் எந்தப் பக்கத்தில் உதித்திருக்கிறான் என்று பார்த்தான். அவனுக்கு சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். ஊரிலென்றால் கிழக்குமுகம் பார்த்த வீடு. காலையில் முன் விறாந்தையில் நின்று பார்த்தால்.. காற்றிலசையும் தென்னோலைகளுக்கு ஊடாக பளிச் பளிச் என சூரியன் தோன்றிக்கொண்டு வருவான். அப்போதெல்லாம் அப்பா தலைக்கு மேலாக கையை உயர்த்தி சூரிய நமஸ்காரம் செய்யும்போது பார்க்க அவனுக்கு வேடிக்கையாயிருக்கும். இப்போது மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்திருக்கும் தனிமையில் அவனுக்கும் கடவுள் வணக்கமும் பிரார்த்தனையும் தேவைப்படுகிறது.
கப்பலுக்கு வேலைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. சிறீலங்காவில் யுத்த காலத்தில் வேலைகளேதுமின்றி கஷ்டமும் கடனும் பட்டு வாழ்ந்த வாழ்க்கை வேணாமென்று போயிருந்தது. அதையெல்லாம் நிவர்த்திக்கமுடியாதா என்ற நைப்பாசையிற்தான் கப்பலில் வேலைக்கு வந்து சேர்ந்தான். ஒரு வருடம் வேலை செய்துவிட்டு ஊரோடு போய்ச் சேர்ந்துவிடலாம் என்றுதான் ஓர் உத்தேசம் இருந்தது. வருடங்கள் கடந்துகொண்டிருக்கின்றன... அவனது கடன் பிரச்சினைகள் தீர்ந்தபாடுமில்லை... வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபாடுமில்லை.
கப்பற்தளத்தின் பின் பக்கமாக வந்து நின்று வானத்தைப் பார்த்தான். கப்பலில் பயணிக்கும்போது திசைகள் மாறிவிடுகிறது. முதல் நாள் பயணித்த திசை, காலையில் விழிக்கும்போது மாறியிருக்கும்.. கப்பல் வேறு ஒரு திசையில் போய்க்கொண்டிருக்கும். ஒரே திசையில் பயணித்தாலும் பாகைக் கணக்கிலேனும் பக்கங்கள் மாறிவிடும். கடலலைகளில் கப்பல் அசையும்போது சூரியனும் வானத்தில் ஏய்த்து விளையாடுவதுபோலிருக்கும். கருமேகங்களுக்குள்ளிருந்து சூரியன் வெளிப்படும்போது தோன்றும் ஒளிர்வு மனதில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தும். கைகளை உயர்த்தி வணங்கும்போது அவனுக்குக் கண்கள் கலங்கியது. அது, அந்த சூரிய ஜோதியின் தாக்கத்தினாலும் மனைவி பிள்ளைகளை நினைத்த பிரிவாற்றாமையாலும் கிளர்ந்த ஓர் உணர்ச்சி வசமாயிருக்கலாம். அவன் மௌனமாகிப்போனான். அப்படியே கண்களை மூடி மனசு தியானித்தது. இது வழக்கமான சங்கதிதான். கப்பல் வாழ்வில் ஒவ்வொரு காலையும் கண் கலங்கலுடன்தான் புலர்கிறது.
•Last Updated on ••Tuesday•, 07 •March• 2017 22:51••
•Read more...•
••Monday•, 20 •February• 2017 23:55•
??- ராஉல் டேவிட் | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -??
சிறுகதை
அந்தச் சம்பவம் நடைபெறும்போது கட்டன்ஹா - டொம்பூலா தம்பதி, இஸாக் ஆற்றுக்கும், உலம்பு மலைக்குமிடைப்பட்ட செழிப்பான நிலப் பகுதியில் எழில் வாய்ந்த கிராமமான டுங்காவில் வசித்து வந்தனர். நரைத்த தலைமயிரையும் நீண்ட அனுபவங்களையும் கொண்ட, அப் பிரதேசத்தில் பிரசவம் பார்க்கும் முதியவளான நெகும்மின் உதவியோடு அந்தக் குடும்பத்துக்கு குழந்தைகள் மூவர் இணைந்தனர்.
அவர்களுக்கு வேண்டிய அனைத்துமே பரிபூரணமாக இருந்ததால், கட்டன்ஹாவோ டொம்பூலாவோ குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குச் சொந்தமான பல ஹெக்ரயர்கள் விசாலமான விவசாய நிலத்தில் நல்ல அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. விலங்குப் பண்ணையிலிருந்தும் நல்லதொரு வருமானம் கிடைத்தது.
1937 வரைக்கும் அவர்கள் மிகவும் மகிழ்வாக வாழ்ந்தனர். 1937 இல் திடீரென நடந்த ஒரு சம்பவத்தின் பலனாக அவர்களது அமைதியும் சந்தோஷமும் நிறைந்த உலகம் சிதறிப் போனது. அடிமைகளாக வேலை செய்விக்க மனிதர்களைப் பிடித்துப் போகும் சமயத்தில் கட்டன்ஹாவும் சிக்கிக் கொண்டான்.
இவ்வாறாக மனிதர்களைப் பிடித்து அடிமை வேலைகளுக்காகக் கொண்டு செல்வதென்பது தேச மக்களுக்கு பெருந் துயரத்தைத் தருமொன்றாக இருந்ததோடு, ஓரோர் குடும்பத்தின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. வரிகளைக் கட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு மாற்றம் செய்வது ஆகியன மக்களை இவ்வாறு பிடித்துச் செல்வதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. எனினும் உண்மையில் இவ்வாறான ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவது சாந்தோம், ப்ரின்ஸஸ் தீவுகளில் அடிமை வேலைகளுக்காக ஆட்களைப் பெற்றுக் கொள்வதற்கேயாகும்.
•Last Updated on ••Tuesday•, 21 •February• 2017 00:02••
•Read more...•
••Monday•, 20 •February• 2017 23:55•
??- ராஉல் டேவிட் | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -??
சிறுகதை
அந்தச் சம்பவம் நடைபெறும்போது கட்டன்ஹா - டொம்பூலா தம்பதி, இஸாக் ஆற்றுக்கும், உலம்பு மலைக்குமிடைப்பட்ட செழிப்பான நிலப் பகுதியில் எழில் வாய்ந்த கிராமமான டுங்காவில் வசித்து வந்தனர். நரைத்த தலைமயிரையும் நீண்ட அனுபவங்களையும் கொண்ட, அப் பிரதேசத்தில் பிரசவம் பார்க்கும் முதியவளான நெகும்மின் உதவியோடு அந்தக் குடும்பத்துக்கு குழந்தைகள் மூவர் இணைந்தனர்.
அவர்களுக்கு வேண்டிய அனைத்துமே பரிபூரணமாக இருந்ததால், கட்டன்ஹாவோ டொம்பூலாவோ குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குச் சொந்தமான பல ஹெக்ரயர்கள் விசாலமான விவசாய நிலத்தில் நல்ல அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. விலங்குப் பண்ணையிலிருந்தும் நல்லதொரு வருமானம் கிடைத்தது.
1937 வரைக்கும் அவர்கள் மிகவும் மகிழ்வாக வாழ்ந்தனர். 1937 இல் திடீரென நடந்த ஒரு சம்பவத்தின் பலனாக அவர்களது அமைதியும் சந்தோஷமும் நிறைந்த உலகம் சிதறிப் போனது. அடிமைகளாக வேலை செய்விக்க மனிதர்களைப் பிடித்துப் போகும் சமயத்தில் கட்டன்ஹாவும் சிக்கிக் கொண்டான்.
இவ்வாறாக மனிதர்களைப் பிடித்து அடிமை வேலைகளுக்காகக் கொண்டு செல்வதென்பது தேச மக்களுக்கு பெருந் துயரத்தைத் தருமொன்றாக இருந்ததோடு, ஓரோர் குடும்பத்தின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. வரிகளைக் கட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு மாற்றம் செய்வது ஆகியன மக்களை இவ்வாறு பிடித்துச் செல்வதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. எனினும் உண்மையில் இவ்வாறான ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவது சாந்தோம், ப்ரின்ஸஸ் தீவுகளில் அடிமை வேலைகளுக்காக ஆட்களைப் பெற்றுக் கொள்வதற்கேயாகும்.
•Last Updated on ••Tuesday•, 21 •February• 2017 00:02••
•Read more...•
••Wednesday•, 25 •January• 2017 20:26•
??- முல்லை அமுதன் - ??
சிறுகதை
'அப்பா!'
கூப்பிட்ட தொனி கோபமா அல்லது அப்பாவின் இயலாமை மீதான கழிவிரக்கமா?
மௌனமாக திரும்பினேன்.
விழிகளை அகலத்திறந்து அவளைப் பார்க்கையில்.. என் கேள்வியின் அர்த்தம் பார்வையில் தெரிந்திருக்கவேண்டும்.
சொன்னாள்.
'ஏனப்பா..உங்களைப் போல நானும் எழுத வேண்டும்..என்னை என் பாட்டில் விட்டுவிடுங்களேன்'
அதற்கு..?
அருகில் வந்து அமர்ந்தேன்.அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள். சொல்லட்டுமே.
அவளின் குரல் வரட்டுமே.
எத்தனை நாள் பூட்டிவைத்திருக்கும் கேள்வியும் அது எனில் கேட்டுவிட்டுப்போகட்டுமே.
•Last Updated on ••Wednesday•, 25 •January• 2017 20:32••
•Read more...•
••Tuesday•, 01 •November• 2016 18:38•
??-கே.எஸ்.சுதாகர் ??
சிறுகதை
இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற நடுக்கம் அல்ல அது. எதிராக வந்து கொண்டிருக்கும் ஐந்து ராக்கிங் பூதங்களைக் கண்டுவிட்ட பயப்பீதி அது.
”பெயர்களை ஒவ்வொருத்தராகச் சொல்லுங்கள்!”
“பரமேஸ்வரி, கெளசி, பல்லவி, தாரினி”
இந்த விளையாட்டு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றது.
“பல்லவி மாத்திரம் இதிலை நிக்கலாம். மற்ற மூண்டு பேரும் எங்களோடை வாருங்கள்” சொல்லிவிட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்த பூதங்களில் நான்கு போயின.
கருணா மாத்திரம் பல்லவியுடன் நின்றான். சந்தித்த முதல்நாளே கருணாவின் கண் அவள்மீது பட்டுவிட்டது.
ஹந்தான மலைச்சாரலில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளிக்கற்றைகள் பல்லவியின் மீது படர முகம் ஜோராக ஜொலித்தது. சினிமாப்படங்களில் வருவது போல தென்றல் அவள் கேசங்களைச் சிலிர்க்க வைத்தது. பல்லவி குள்ள உருவம் என்றாலும் அழகுராணிதான். இரட்டைப்பின்னலை முன்னாலே தூக்கி வாகாக வீசியிருப்பாள். அதில் கருணாவின் மனம் ஏறி இருந்து ஊஞ்சல் ஆடும்.
“என்னைத் திருமணம் செய்வாயா?” நிஜத்தைப் பகிடியாகத் திரித்து கேள்வியாக்கித் தூது விட்டான் கருணா.
•Last Updated on ••Tuesday•, 01 •November• 2016 18:45••
•Read more...•
••Friday•, 14 •October• 2016 17:41•
??- வே.ம.அருச்சுணன் – மலேசியா -??
சிறுகதை
மாலை வேளையில் அது. கோவில் அலுவலகத்தில் தலைவரும் செயலாளரும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தீபாவளி விருந்து நிகழ்வு பற்றி தீவிர ஆலோசனை செய்கின்றனர்.
“காளி...இந்த ஆண்டு நம்ம ‘கம்போங் மிஸ்கின்’ கோவில்ல தீபாவளி விருந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பா நடத்திடனும்னு நினைக்கிறேன்.... நீ என்னப்பா சொல்ற?” மீசையை முறுக்கியபடி தலைவர் மாயாண்டி கேட்கிறார்.
“புதுசா நான் என்ன சொல்லப் போறேன் தலைவரே? பல வருசமா தீபாவளி விருந்து நிகழ்ச்சிய நடத்தி வரோம். இந்தப் புறம்போக்கு நிலத்துல வாழ்ற ஏழை மக்கள் வருசத்துல ஒரு நாளாவது சந்தோசமா ஆட்டுக் கறியோடு வயிறாறச் சாப்பிடனும். சந்தோசமா ஆடி பாடி மகிழனும். நாம கோயில் கட்டிப் பத்து வருசமாச்சு. அதனால, இந்தப் பத்தாமாண்டு கோவில் திருவிழாவில பத்துக்கிடாக்களை வெட்டி நம்ம முனியாண்டி சாமிக்குப் படையல் போட்டு அமர்க்களப்படுத்திடனும் தலைவரே.இதுதான் என்னோட ஆசை” கோவில் செயலாளர் காளி பெரிய எதிர்பார்ப்புடன் கூறுகிறான்.
“பத்தில்ல காளி.... இருபது கிடாக்கள வெட்டி நம்ம கம்பம் மட்டுமல்லாம...சுற்று வட்டாரத்துல இருக்கிற ஏழைபாளைகளுக்கெல்லாம் பெரிய அளவில பத்தாமாண்டுக் கோவில் திருவிழாவையும் தீபாவளி விருந்தையும் தடபுடலா விருந்து வெச்சு அசத்திடுவோம் அசத்தி.....!” தலைவர் மாயாண்டி உற்சாகமாகப் பேசுகிறார்.
“இந்த வட்டாரத்தில, இதுவரையிலும் யாரும் நடத்திடாத அளவில மிக விமர்சியா தீபாவளி விருந்தை நடத்திக் காட்டுவோம் காளி” மீசையை வேகமாக முறுக்கிவிடுகிறார் தலைவர்.
“தலைவரே....உங்கப் புண்ணியத்தாலே வருசா வருசம் கோவில்ல தீபாவளி விருந்துல சுவையான ஆட்டுக் கறியோட வயிறாரச் சோறு சாப்பிட முடியுது. என் புருசன் இறந்த பிறகு நான் ஒண்டியா.... உழைச்சு சின்னஞ்சிறுசுகளா இருக்கிற என்னோட ஐந்து புள்ளைங்களக் காப்பாற்ற பாடு இருக்கே அந்த முனியாண்டி சாமிக்குத்தான் தெரியும்.நீங்க மவராசனா இருக்கனும் சாமி”
•Read more...•
••Saturday•, 08 •October• 2016 23:32•
??- அகணி சுரேஸ் -??
சிறுகதை
சிக்காகோ ஓ ஹரே சர்வதேச விமானநிலையத்தில் இருந்து காலை 10:40க்குப் புறப்பட்ட அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானம் ரொறன்ரோ நோக்கி;ப் பறந்து கொண்டிருந்தது.
“முப்பத்தாறு வருடங்களுக்குப் பிறகு எனது நண்பன் குமாரினை சந்திக்கப் போறேன் என்று நினைக்க மகிழ்ச்சியாகவும், மிகவும் நெருங்கிப் பழகிய நண்பன் ஒருவனுடன் கடந்த முப்பத்தாறு வருடங்களாக எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்திட்டன் என்று நினைக்க குற்ற உணர்வும் என் மனதைப் போட்டு உறுத்துது” என்று புலம்பிக் கொண்டு விமானத்தில் இருக்கையில் இருந்தவாறு தனது இளமைக்கால நினைவுகளை மனதில் மீளோட்டம் செய்து கொண்டிருந்தான் சுதன். அவனோடு பயணம் செய்து கொண்டிருந்த மனைவி ரேகா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். விமானத்தின் பறப்பு வேகத்தையும் மேவிய வேகத்துடன் கடந்த கால நினைவுகள் சுதனின் மனதில் அலையலையாக எழுந்தன……………
யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரித் தொகுதியில் அமைந்து எண்ணற்ற கலைத்துறை மாணவர்களையும் ஒருசில விஞ்ஞான மாணவர்களையும் பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் அனுப்பி வரும் சாதனையால் சாவகச்சேரி இந்துக்கல்லூரி என்று எல்லோராலும் நன்கு அறியப்பட்ட ஒரு முதன்மைநிலைக் கல்லூரியாக விளங்கும் கல்லூரியில் தரம் நான்கு முதல் சாதாரண தரம் வரை ஒன்றாகப் படித்தவர்கள் சுதனும், குமாரும். அவர்களின் வீடுகள் கல்லூரியிலிருந்து எதிர்த்திசைகளில் பத்து மைல் தூர இடைவெளியில் இருந்தபோதும் கல்லூரியில் இணைபிரியா நண்பர்களாக இருந்தார்கள்.
சாதாரணதரக் கல்விக்குப் பின்னர் உயர்தரத்தில் சுதன் உயிரியல் துறைக்கும், குமார் கணிதத்துறைக்கும் சென்று படிக்க வேண்டியிருந்ததால் எற்பட்ட பிரிவினைக் கூட ஏற்றுக்கொள்ளமுடியாது இருவரும் திண்டாடியவர்கள். உயர்தர வகுப்பிலும் இரசாயன பாடத்துக்குச் சுதனின் வழிகாட்டலும், பௌதீகப் பாடத்திற்கு குமாரின் வழிகாட்டலும் பெற்றுக் கொண்டு இருவரும் தத்தமது துறைகளில் சிறப்பாகப் படித்தார்கள்.
உயர்தரப் பரீட்சையில் சுதன் கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கும், குமார் பேராதனைப் பொறியியல் துறைக்கும் அனுமதி பெற்றார்கள். பல்கலைக்கழகம் செல்வதற்காகக் காத்திருந்த காலத்தில் சாவகச்சேரியில் புகழ்பெற்ற ஆங்கில ஆசிரியரான சிரோன்மணி ஆசிரியரிடம் பிரத்தியேகமாகச் சென்று ஆங்கிலம் படித்தார்கள். இவர்களைப் போன்று பல்கலைக்கழக அனுமதி பெற்ற பல மாணவர்களும் அந்த வகுப்புக்கு வந்திருந்தார்கள். ஆங்கிலம் கற்பதற்கு மேலாக அங்கு வந்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் நட்பை ஏற்படுத்திப் பழகி வந்தார்கள்.
•Last Updated on ••Saturday•, 08 •October• 2016 23:36••
•Read more...•
••Tuesday•, 04 •October• 2016 18:51•
??- இரா.சி.சுந்தரமயில் -??
சிறுகதை
அப்பா வழக்கம் போல 5 மணிக்கு எழுந்து கடன் முடித்து, குளித்து, ஸ்லோகம் சொல்லிக் கொண்டே வேஷ்டி உடுத்தி, நெற்றியில் பட்டையிட்டு, பொட்டு வைத்து, காவித்துண்டை பெல்ட்டுப் பட்டையாகக் கட்டிக்கொண்டு 6 மணிக்கு கோயிலுக்குச் சென்றவர் சரியாக ஒருமணி நேரம் கழித்துத் தான் வீடு திரும்புவார்.
போகும் போது “மலர், கனகா எழுந்திரிங்க. பொம்பளப் பிள்ளைங்களுக்கு ஆறு மணிக்கு மேல என்ன தூக்கம்?” என்று குரல் கொடுத்துவிட்டுத்தான் சென்றார். என்றாலும் கூட இருவரும் அப்பாவின் காலடி சத்தம் கேட்டுப் பாய், தலையணைகளை சுருட்டிக் கொண்டு படுத்திருந்த சுவடு தெரியாமல் எழுந்து ஆளுக்கொரு திக்காக ஓடினார்கள்.
“கனகா . . . . . கனகா . . . . .” “என்னப்பா”. குளியலறைக்குள்ளிருந்து குரல் கொடுத்தாள் கனகா,
“மலர் . . . . . மலர் . . . . .”
"இந்தா வந்துட்டேம்பா…” படித்துக்கொண்டிருந்தவளைப் போல பாவணை செய்து கொண்டிருந்த மலர் புத்தகமும் கையுமாக அப்பாவின் முன் வந்து நின்றாள்.
“படிச்சிட்டுருக்கியா. சரிசரி அம்மா எங்கன்னு சொல்லிட்டுப் போ”
“அம்மா அடுப்படில உங்களுக்கு இட்லி ஊத்திட்டிருக்காங்கப்பா”.
“உங்கப்பன் தலையைக் கண்டதும் தானே உங்கம்மா அடுப்படியில கால வைப்பா” என்று மலரிடம் திட்டிவிட்டு தன்னுடைய எழுத்து வேலையைத் தொடர்ந்தார் அப்பா. பத்து நிமிடம் கூட கழிந்திருக்காது அடுப்படியைப்பார்த்துக் குரல் கொடுத்தார்.
•Last Updated on ••Tuesday•, 04 •October• 2016 18:59••
•Read more...•
••Tuesday•, 06 •September• 2016 19:03•
??- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை -??
சிறுகதை
பிணத்தை மடியில் வைத்துக் கொண்டு, அதனைக் கொஞ்சுவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருக்க முடியும்? புஷ்பமாலா தனது கால்கள் விறைத்திருப்பது போல உணர்ந்தாள். காலை நீட்டவும் முடியாது, வேறு விதமாக உட்காரவும் முடியாது என்பதால் மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். உடுத்திருந்த அசுத்தமான சீத்தைத் துணி அவளை அக் குழந்தைக்குத் தாயாகக் காட்டியது. காலையில் வரும்போது குடித்த வெறும் தேனீருக்குப் பிறகு எதுவும் கிடையாது. மத்தியானப் பொழுதுக்கு வெயில் ஏறியிருந்தது. பசித்தது. ஏஜண்ட்காரன் எதையாவது சாப்பிடக் கொண்டுவருவான் என்ற மெல்லிய நம்பிக்கை மனதுக்குள் ஓடியது. ஆனால் நிச்சயமில்லை. விகாரையைத் தரிசிக்க வரும் யாராவது புண்ணியவான்கள் அவள் மேலோ அந்தக் குழந்தையின் மீதோ ஏதேனும் பரிதாபப்பட்டு உணவாக எதுவும் போட்டுவிட்டுப் போனால்தான் உண்டு. விரித்து வைத்திருந்த வெள்ளைத் துணியில் சில்லறைகள், பத்து, இருபது ரூபாய் நோட்டுக்கள் சேர்ந்திருக்கின்றனதான். அவற்றை எடுத்துக் கொண்டு போய் ஏதாவது வாங்கி வந்து உண்ணும் நப்பாசையும் உள்ளுக்குள் எழுந்தது. சாத்தியமில்லை. ஏஜண்ட்காரன் எங்கிருந்தாவது நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பான். அவனது பார்வையைத் தாண்டிப் போய் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு தைரியமில்லை. போன வாரம் இப்படித்தான். பணம் ஏதாவது ஒளித்து வைத்திருக்கிறாளா என குமாரியின் ஆடையை அவிழ்த்துப் பார்த்தார்கள். அவளால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. என்ன செய்ய முடியும்? வீரு வீரென்று பிரம்பால் அடிவாங்குவதை விடவும் 'பாருய்யா பாரு..எங்கேயும் எதுவும் மறைச்சு வைக்கல' என்று கத்தி அவளே உடுப்பை அவிழ்த்துக் காண்பித்தாள். அன்று முழுக்க அவள் எதுவும் சாப்பிடவில்லை. அழுது கொண்டே இருந்தாள்.
பிணத்தின் மீது இலையான்கள் மொய்த்துக் கொண்டே இருந்தன. அது பிணம் என்பது இலையான்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டிருக்கிறது. இலையான்களால் எப்படியும் ஒரு பிணத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இலையான்களால் மட்டுமல்ல. பிண வாடையை மோப்பம் பிடித்துத் தேடி வரும் நாய், பூனைகள் கூட பிணத்தை அடையாளம் கண்டு இழுத்துப் போக முயற்சிக்கும். அதனால்தான் புஷ்பமாலா பிணத்தைத் தனது மடியை விட்டு இறக்கவும் இல்லை. அங்கு இங்கென நகரவும் இல்லை. காசு போட்டுச் செல்லும் எவராலும் கூட அது பிணம்தான் என இன்னும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவர்கள் சந்தேகப்படக் கூட இல்லை. வெறுமனே அசுத்தமான ஆடைகளைப் பார்த்துக் கொண்டு அசூசை பட்டுக்கொண்டு தூரத்திலிருந்து காசை விட்டெறிந்துவிட்டுச் செல்கிறார்கள். எவனாவது கண்டுபிடித்து விட்டால் அவளும் அவளது கூட்டமும் சிறையில் கம்பியெண்ண வேண்டியதுதான். அவள் இதற்கு முன்பும் சிறைக்குப் போயிருக்கிறாள். அப்பொழுது அவள் சிறுமி. கஞ்சா வைத்திருந்ததற்காக அவளது அப்பாவைக் கைது செய்து கொண்டு போயிருந்தார்கள். அம்மாவுடன் அவள் அப்பாவைப் பார்க்கப் போயிருக்கிறாள். பொலிஸார் அடித்து அப்பா செத்துப் போனதால் அப்பாவைப் பிணமாகத்தான் வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். புஷ்பமாலாவுக்கு எல்லாம் நன்றாக நினைவிருக்கிறது. அவளுக்கு அதுதான் பிரச்சினை. எதுவும் மறந்து தொலைய மாட்டேனென்கிறது. சின்னச் சின்ன விஷயங்கள் கூட நினைவிருக்கிறது. அவளும் பல விஷயங்களை மறந்துவிட தீராது முயற்சிக்கிறாள். ஒருபோதும் முடியவேயில்லை. முக்கியமாக மாதந்தோறும் அவளது வீட்டில் கிடக்கும் பிணங்கள். பல நாட்கள் இரவுகளில் அவள் தூங்காமல் விழித்திருந்திருக்கிறாள். என்னதான் அவர்களின் வாயில் அலறிவிடாமல் இருக்க பழந்துணியைத் திணித்து அடைத்திருந்த போதிலும் அவர்கள் வாய்க்குள்ளேயே கதறும் சப்தம் அவளது கனவில் கூடக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
•Last Updated on ••Tuesday•, 06 •September• 2016 19:04••
•Read more...•
••Thursday•, 01 •September• 2016 17:07•
??- எஸ். அகஸ்தியர் -??
சிறுகதை
- எழுத்தாளர் அகஸ்தியரின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29. அவர் நினைவாக அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைந்த அகஸ்தியரின் சிறுகதை 'வட்டி' அவர் நினைவாகப்பிரசுரமாகின்றது. - பதிவுகள் -
‘தாரு வூட்டில? கதவைப் பூட்டிக்கிட்டிருக்கீங்கலே, எந்திரிச்சு வெளியே வாங்கலேன்?’
பாத்திமாதான் வந்து கரிக்கிறாள். காலங் காத்தால வேறு யார் இப்படி வருவது? ‘நான் கூப்புட்டுக்கிட்டே இருக்கேன். ஓத்தரும் பேசாம அப்புடியே அமுங்கிப் பேயித்திருக்கீங்கலே. அது என்னில தாண்டியம்மா குத்தம்...நான் சும்மா இரிக்கிய ஏலாம எண்ணிக் குடுத்துப்போட்டு இப்ப நாயா அலஞ்சு திரியிறனல்ல..? வூடு தேடியாந்து கூப்பிட்டாக்கா வந்து ஏனென்னும் கேட்கிறதாக் காங்கலியே? ஏய், தாரு வீட்டில, எந்திரிக்சு வெளியால வாங்கலேன்...’ பலகைக் கதவு திறபடுகிறது, வீட்டுப்பெண் மொட்டாக்குடன் வெளியே வந்தாள். ‘ஏன்ரியும்மா இம்மட்டு நேரமா உள்ளுக்க என்ன செஞ்சுக்கிட்டிருந்தீங்க. செல்லம் பொழிஞ்சிக்கிட்டிருந்தீங்கலா?’ ‘கோவிச்சசுக்காதையுங்க ராத்தா. புள்ளைங்கள வூட்டுல உட்டுட்டுக் கக்கூசுக்குப் பேயித்திற்று இப்பதான் வந்தன்’ பாத்திமாவுக்கு மனசு கொஞ்சம் இளகிற்று. ஆனாலும், அதுவே பின் கொதித்து வேறு உருவெடுத்துச் சாடியது. ‘ஏன். ‘அதெ’ இன்னும் கொண்ணாந்து குடுக்காம இரிக்கீங்க, எத்தனை தரமா அதுக்காவ நடக்கிறது?’
•Last Updated on ••Thursday•, 01 •September• 2016 17:21••
•Read more...•
••Tuesday•, 09 •August• 2016 23:25•
??- பரதன் நவரத்தினம் -??
சிறுகதை
யாழ்ப்பாணம் .காலை ஏழு மணியளவில் கோண்டாவில் இருபாலை வீதியில் பச்சை பசேல் என்ற தொட்டவெளிக்குள் இருக்கும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு மொட்டார் சயிக்கில் வந்து நிற்கின்றது . முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்த அபிராமி விளக்குமாற்றை போட்டுவிட்டு வீட்டிக்குள் வந்து ,
“அப்பா ஊரெழு இராசையா மாஸ்டரின் மகன் வந்திருக்கின்றார்" .
நம்பி என்ற பெயர் வாயில் வராமல் இராசையா மாஸ்டரின் மகன் என்று மகள் அவரை அழைப்பது வசந்தனுக்கு தெரியும் .
காலையில் சனம் வந்து வரிசையில் குவிய முதல் போனால் தான் நல்ல ஆட்டு இறைச்சி வாங்கலாம் என்று வெளிக்கிட்டுகொண்டிருந்த வசந்தன் "என்ன இந்த நேரம் நம்பி வந்திருக்கின்றான் " என்று மனதில் நினைத்தபடி வெளியே வருகின்றான் .
“நம்பி ,என்னடா இந்த நேரம் ? “
“உமா மகேஸ்வரன் எல்லோ ராத்திரி செத்துபோனார் "
“அட, சுகமில்லாமல் இருக்கின்றார் என்று போன மாதம் போய் ஆளைப்பார்த்தேன் , கொஞ்ச நாளாக வருத்தமாகத்தான் இருந்தார்"
“நான் உனக்கு தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சன் .பின்னேரம் என்ரை வீட்டை வா, ஒண்டடியாக தெல்லிப்பழைக்கு போகலாம் "
“உனக்கு எப்ப நியுஸ் வந்தது "
“தம்பி போன் பண்ணினவன் .அரச மரியாதையுடன் அடக்கம் செய்யும் பிளான் இருக்காம்.பிரபாவையும் கூட்டிக்கொண்டு வாறாராம்"
“உன்ரை தம்பிக்குத்தான் அவரை பிடிக்காதே ,இப்ப மாகாண முதல்வர் எண்டபடியால் அரச மரியாதை செய்ய போறார் போல"
“ஓமடாப்பா , சும்மா பழைய கதைகளை இப்ப கிளறாமல் அஞ்சு மணிபோல வா , பார்த்துக்கொண்டு நிற்பன் என்ன "
•Last Updated on ••Tuesday•, 09 •August• 2016 23:52••
•Read more...•
••Saturday•, 09 •July• 2016 21:53•
?? - நேதாஜிதாசன் - ??
சிறுகதை
- இந்த கதை போர்ஹேவின் அல்முட்டாசின் ஒர் அணுகுமுறை எனும் சிறுகதையின் வடிவத்தை தழுவி எழுதப்பட்டது. -
நாயின் தலை குதிரையின் உடலை உடைய விலங்குகளை பற்றி யோசித்திருக்கிறீர்களா ?
நேற்று ஒன்றை பார்த்தேன் அமேஸ் காடுகளில்.அதை பற்றி எழுதியே ஆகவேண்டும் என தோன்றியது . நல்ல கறுமையான முகம்.எச்சில் வடியும் நாக்கு.அந்த நாக்கை எப்போதும் சூழ்ந்திருக்கும் காற்று. அதன் உடலை பார்த்தால் ஏற்கனவே நான் பார்த்த மனிதத்தலை குதிரை உடல் உடையவர்கள் நினைவுக்கு வந்தனர். ஏற்கனவே போர்ஹே நீலப்புலியை பற்றி சொல்லியிருந்தார். என்னுடைய நெருங்கிய நண்பரான காஃப்கா மனிதன் பூச்சியானதை சொன்னதும் நினைவுக்கு வந்தது . கனவு பதிப்பகத்தில் சமீபத்தில் தான் "புனைவாக்கத்தின் நனவு - காபெக்தன் " எழுதிய புத்தகம் நினைவுக்கு வந்தது.
அதில் காபெக்தன் இவ்வாறு எழுதுகிறார்.அந்த கட்டுரையின் முக்கியமான பத்தி,
"புனைவில் இருந்து புனைவை உருவாக்கியவன் கற்றுக்கொள்கிறான். யூத இனவதை முகாம்களின் ஒவ்வொரு கட்டமைப்பிலும் யூதர்களை அழிக்க நினைத்தவரின் வார்த்தைகள் செங்கற்களுக்கு பதிலாக உள்ளது. புனைவின் மிருகங்களை எதிர்த்து ஒரு நாள் நாம் போராட வேண்டியிருக்கும். இந்த கட்டுரையை காபெக்தன் ஆன நான் ஏற்கனவே அலஸ்காவின் அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளேன் .புனைவின் மிருகங்களால் பலியானோரின் எண்ணிக்கை ஏழாயிரம் என இனஸ்கோவின் அறிக்கை சொல்கிறது."
•Last Updated on ••Saturday•, 09 •July• 2016 22:13••
•Read more...•
••Monday•, 04 •July• 2016 18:24•
?? - கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது.
செய்தி இதுதான். |காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.| ●
எத்தகைய இருட்டடிப்பு இது!
இதைப் பலரும் அறிவார்கள். இருப்பினும் அதன் வலி எங்கள் ஐவருக்கும் மட்டுமே உரியது. ஐவர் என்று இங்கே நான் குறிப்பிடுவது---குலேந்திரன் ஆகிய நான், சீனத்துப்பெண் சியாங் சை, யுவானஸ் மற்றும் வியட்நாமியர்கள் பிங் பொங் ஹாவ், துஜி.
அந்தச் சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ●
ஒரு கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சகல வளங்களையும்---இஞ்சின் முதற்கொண்டு உதிரிப்பாகங்கள் வரை---கொண்டுள்ளது எமது உற்பத்தி நிறுவனம். இஞ்சின் (இயந்திரம்), ‘பொடி ஷொப்’ (காரின் உருவத்தைத் தயாரித்தல்), பெயின்ற் (காரின் உருவத்திற்கு வர்ணம் அடித்தல்), அசெம்பிளி (இயந்திரங்களைப் பொருத்துதல்) என்பவை தொழிற்சாலையின் பிரதான பிரிவுகள். தவிர இன்னும் பல சிறிய பிரிவுகளும் உண்டு.
இந்தப் பிரிவுகளுக்கிடையே வருடாவருடம் ‘குவாலிற்றி சேர்க்கிள்’ என்ற தொழின்முறை சார்ந்த போட்டி நடைபெறுவதுண்டு. ஏறக்குறைய முப்பது குழுக்கள் வரையில் போட்டியில் பங்குபற்றும்.
•Last Updated on ••Monday•, 04 •July• 2016 18:26••
•Read more...•
••Friday•, 01 •July• 2016 06:04•
??- நேதாஜிதாசன் -??
சிறுகதை
இதுவரை அவன் நூறு வாழ்ந்து முடிந்த உடல்களை புதைத்து எரித்திருப்பான். இந்த கணக்கில் கூட பிழையிருக்கலாம். அடிக்கடி சில அநாதைப் பிணங்கள் உடல் குத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான பணங்களுடன் அவன் வேலையிழக்காமல் வாழ்க்கையில்லாமல் இருக்க வந்திருக்கும். அவன் தந்தையை கூட கண்ணீர் ததும்ப புதைத்திருக்கிறான் . அவன் தாய் அவன் பிறந்த போதே மயானத்திற்கு சென்றுவிட்டாள். தன் தாயை தந்தை புதைக்கும்போது சுடுகாட்டு மண்ணில் ஒரு நாளிதழின் மீது முழு கடவுளாக தவழ்ந்திருக்கிறான்.
அப்படி ஆரம்பித்தது மயானத்திற்கும் அவனுக்கும் ஆன உறவு. இப்போது அவன் தன்னுடைய தந்தை வயதில் தன் குலத்தொழிலை தொடர்ந்து கொண்டிருக்கிறான்.இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அவனால் ஏதோ மற்றவர்களை போல வாழ முடியவில்லை. அவனிடம் பணம் அடிக்கடி புரளும் ஆனாலும் இன்று தான் உண்டு தன் நிழல் உண்டு என இருக்கும் அவனால் இன்றுவரை ஆண்-பெண் உறவின் ரகசியங்களை உணர்ந்து கொள்ள முடியவில்லை.
அவனுக்கு அவ்வளவு வயதாகியும் அந்த வாய்ப்பு வாய்க்கவில்லை. அவன் தனியாக இருக்கும் போது அவனுக்கு இருக்கும் ஒரே பேச்சுத்துணை ராசி என பெயர் வைக்கப்பட்ட அந்த முரட்டு கறுப்பு நிற நாயும், என்னை யார் அடக்க என இருநூறு கைகளுடன் பரந்துவிரிந்து ஆகாயத்தில் எதையோ தேடும் மனித பிணச்சாம்பல்கள் ஊறிய சத்து மணலில் முளைத்து தன் வயதுடைய பெரிய வேப்பமரமும் தான்.
வேலையுள்ள நேரங்களில் ராசி அவனுடன் வந்துவிடும் . அவன் வந்திருக்கும் வாழ்ந்து முடித்தவரின் உறவினர்களிடம் எதுவுமே பேசுவதில்லை . அந்த சமயங்களில் அவன் பேசுவதெல்லாம் நான்கு கால் ராசியுடன் தான்.வேலை முடிந்தபின் நான்கு கால் ராசி மயானத்தை விட்டு ஓடிவிடும் .அது எங்கு போகும் என்று யாருக்கும் தெரியாது .இரவு நேரங்களில் அந்த வேப்பமரத்திற்கு கீழே ஒரு மரக்கட்டில் போட்டு படுத்துக்கொள்வான். இப்படி அவனுடைய வாழ்க்கை ரயில் போல போய்கொண்டிருந்தது. அன்றைய நாளும் வழக்கம் போலத்தான் விடிந்தது. ஆனால் ஒரு இனம்புரியாத சிந்தனைகள் அவனை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தன. தன்னை அறியாமல் கண் கலங்கியது அடிக்கடி. வழக்கம் போல அவனால் நடந்து கொள்ள முடியவில்லை. என்றுமில்லாமல் அன்று இரண்டு வேலைகள் வந்தும் அவனது நெருங்கிய நான்கு கால் ராசி வரவில்லை. ஏதோ இது அவனை மேலும் குழப்பமடைய செய்தது.
•Last Updated on ••Friday•, 01 •July• 2016 06:07••
•Read more...•
••Saturday•, 18 •June• 2016 18:17•
?? - நேதாஜிதாசன் -??
சிறுகதை
அவனை பற்றி நிறைய சொல்லலாம் ஆனால் இப்போது சொல்லாகப் போகும் அவனை பற்றி பேசுவதில் என்னவாகி விடப்போகிறது என்கிறார்கள் அவனுடைய உறவினர்கள் .சிலரோ அவனுடைய வாழ்க்கையின் கடந்தகால புத்தகத்தில் சில பக்கங்களுக்கு உரிமையாளர்கள் போல மனதின் ஆழத்தில் கிடப்பவையை ஒரு கோர்வையாக மாற்றி ஒலியாக கொட்ட முயல்கின்றனர் . இதற்கிடையில் அவனுடைய நினைவுகளில், வார்த்தைகளில் சிக்கிக்கொண்டவனாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்கு வெளியே நின்று கொண்டிருந்தேன்.தன்னாலே என் உடல் நினைவில் இருந்து குறிப்பெடுக்க ஆரம்பித்திருந்தது. அப்போது என் நினைவில் அவன் சொன்ன மர்மமான வார்த்தைகள் வேப்பமர இலைகளாக உதிர தொடங்கியிருந்தன. "எல்லோருக்கும் சுவாசிக்கும் வியாதி. எனக்கு இந்த வியாதியின் உச்சக்கட்டம்.எப்போது வேண்டுமானாலும் இந்த வியாதி குணமாகலாம் .இதற்காக பல நினைவுகளை மருந்தாக சாப்பிட்டுகொண்டு இருக்கிறேன்" என பெரம்பலூரின் மர்மமான மலைகளின் மேல் ஏறிக்கொண்டிருக்கும் போது காரணமே இல்லாமல் சொன்னது நினைவுக்கு வந்தது.
அடிக்கடி என்னிடம் அவன் ஏதோ வித்தியாசமான கனவுகள் வருவதாக சொல்வான்.தன்னுடைய ஒவ்வொரு கனவின் முடிவிலும் தான் இறந்து போவதாக சொல்வான்.எனக்கு அவன் பொய் சொல்கிறான் என்றே எண்ண தோன்றியது.ஏனெனில் அவனுடைய கனவில் நடக்கும் சம்பவங்கள் இங்கு நடக்கக்கூட துளியளவு கூட வாய்ப்பில்லை.
இது அவனை பற்றிய கதை தான்.என்னுடைய அறையில் சக நண்பர்களை போல இருந்தவன் அவன் . ஆனால் செயல்களிலும் பேச்சிலும் அவன் சாதாரண மனிதர்களை போல அல்ல. ஆனால் அவன் மனிதன் தான். லத்தின் அமெரிக்க மாய யதார்த்த கதைகளில் வருவதை போல பல கண்களும், பல கால்களும் அவனுக்கு இல்லை.இந்த லத்தின் அமெரிக்க இலக்கியங்களை பற்றி கூட அவன் வழியாகவே அறிந்துகொண்டேன் . அவன் தன்னை வித்தியாசமானவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைபட்டுக்கொள்வான்.
மார்க்வெஸ் எனக்கு பிடித்த படைப்பாளி ஆனது அவனால் தான்.அவனுடன் ஒரே அறையில் பல அனுபவங்களை பேசி வாழ்ந்த தருணங்களை நினைத்து பார்க்கையில் இன்னும் அந்த விசித்திரமான நிகழ்வுகள் கண் முன்னே நிகழ்ந்தவாறு தோன்றும்.அவனுக்கு தனக்கு வைக்கப்பட்ட பெயர் கூட பிடிக்காது என்று தான் தோன்றும். ஏனெனில் எப்போதும் ஒரு நாளுக்கு ஒரு முறை ஐ அம் சிசிபஸ், ஐ அம் போர்ஹே, ஐ அம் காம்யூ என்று பெரிய பெரிய ஆளுமைகளின் பெயரை சொல்லிக்கொண்டு சுற்றுவான்.
•Last Updated on ••Saturday•, 18 •June• 2016 18:35••
•Read more...•
••Monday•, 13 •June• 2016 23:17•
??- சுதாராஜ் -??
சிறுகதை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் விடிகிறது.
எப்போது வெளிக்கும் என்று வாசற்பக்கமே பார்த்துக்கொண்டு கிடப்பாள் அம்மா. சில இரவுகள் நேரத்தைக் கடத்திக்கொண்டு போவதுண்டு. நித்திரையின்றிப் புரள்வதைவிட எழுந்து உட்காரவேண்டும்போலிருக்கும். அல்லது ஹோலுக்குள்ளேயே இங்குமங்கும் நடக்கலாம். ஆனால், சாமத்தில் எழுந்து நடந்து திரிந்தால் மகன் ஏசுவான்.
“என்னம்மா இது?... ராவிருட்டியில?.... பிள்ளையள் பயப்பிடப்போகுது…. படுங்கோ!”
அம்மாவுக்கு வயது போய்விட்டது. கிழவி. யார் என்ன சொன்னாலும் கேட்கத்தான் வேண்டும்.
குளிரடித்தது. போர்வைக்குள் உறக்கத்தை இழுத்து மூடிக்கொண்டு படுப்பதற்கு அம்மா மிகவும் பிரயத்தனப்பட்டாள். விழிப்பு போர்வையை விலக்கி விலக்கி வெளியே வர எத்தனித்தது. யன்னல்களைப் பூட்டிவைத்தாலும் குளிர்காற்று ஹோலுக்குள் இலகுவாகப் புகுந்துவிடுகிறது. சிறிய வீடு. இரண்டு சிறிய அறைகள். ஒரு அறையில் பேரப்பிள்ளைகள் படுக்கிறார்கள். மற்றதில் மகனும் மருமகளும். அதனால் அம்மாவின் படுக்கை ஹோலுக்கே வந்துவிட்டது.
உறக்கத்துக்கும் விழிப்புக்குமிடையிலான இழுபறியில் ஓரளவு கண்தூங்கும் வேளையிற்தான் அந்தக் குருவியின் குரல் கேட்கும். நிலம் விடியாத அதிகாலையிலேயே வந்திருந்து பாடும் குருவி! வெளியே கிளை பரப்பி நிற்கும் மரத்துக்கு நாள் தவறாது வந்துவிடும். ஒவ்வொரு கிளையாக தத்தித் தத்தி அமர்ந்து பாடும் தொனி, அது தன் துணையைத் தேடி ஏங்குவதுபோலிருக்கும்.
யன்னலூடு சற்று வெளிப்புத் தெரிந்தது
அம்மா ஒரு கையை நிலத்திலூன்றி மறு கையால் பக்கத்திலிருந்த கதிரையைப் பிடித்தவாறு மெல்ல எழுந்தாள். படுக்கையை ஒரு பக்கமாக எடுத்து வைத்தாள். பின்னர் சுவரோரமாக இருக்கும் தனது கதிரையிற் போய் அமர்ந்து கொண்டாள்.
•Last Updated on ••Monday•, 13 •June• 2016 23:25••
•Read more...•
••Monday•, 23 •May• 2016 23:54•
??- சுதாராஜ்-??
சிறுகதை
ஓர் ஆண் எவ்வாறான தேவைகளுக்கெல்லாம் (அல்லது சேவைகளுக்கு) லாயக்கானவன் என்பது சில சந்தர்ப்பங்களில் வேடிக்கைக்குரிய விஷயமாயிருக்கிறது. ஆண் என்பவன் ஆணாக மட்டுமன்றி மனைவிக்குக் கணவனாகவும், பிள்ளைக்கு அப்பாவாகவும் இருக்கிறான். சரி, அப்பாவின் கதைக்குப் பிறகு வரலாம். உங்களை இப்போது நேரடியாக கதை மையத்துக்குக் கொண்டுபோக வேண்டியிருக்கிறது. கொழும்பிலுள்ள அந்த வைத்தியசாலையின் குறிப்பிட்ட ‘வார்ட்’டிற்குப் போய்ச் சேர்ந்தபோது மாலை ஐந்து மணியாகியிருந்தது. வெளியார், நோயாளரைப் பார்வையிடும் நேரமாகையால் பரபரப்பாகவும், கலகலப்பாகவும் இருந்தது. (பொதுவாக வைத்தியசாலைகளில் நோயாளரைப் பார்வையிடும் நேரங்கள் கலகலப்பாகிவிடுகின்றன என்பதும் என்னவோ உண்மைதான்) நான் வைத்தியசாலைக்கு எந்த நோயாளரையும் பார்ப்பதற்காகப் போயிருக்கவில்லை. என் மகனை அந்த வார்ட்டில் அட்மிட் பண்ணவேண்டியிருந்தது. பத்து வயது மகன். முதல் நாள் இரவிலிருந்து வயிற்று நோவினால் துடித்துச் சோர்ந்துபோயிருந்தான். பிள்ளையின் வேதனையைத் தாங்கமுடியாது அவனைவிட நான் அதிகம் சோர்ந்துபோயிருந்தேன். அரச வைத்தியசாலையாயினும் அதன் தோற்றம் ஆச்சரியப்படும்வகையில் தூய்மையாயிருந்தது. மருந்து மணங்கள் இல்லை. குழந்தைகளுக்கான அந்த வார்ட் பலவிதமான விளையாட்டுப் பொம்மைகளால் நிறைந்திருந்தது. குழந்தைகள் பலர் தம் நோய் மறந்து, விளையாட்டுப் பொருட்களில் ஈடுபாடு கொண்டிருந்தனர்.
நான் என் மகனின் முகத்தைப் பார்த்தேன். மலர்ச்சியான ஒரு புன்முறுவல் அவனிடத்தில் தோன்றியது. அவனது மகிழ்ச்சிக்கு விளையாட்டுப் பொருட்கள் மட்டுமல்ல, ஆஸ்பத்திரியின் தூய்மையான தோற்றமும் ஒரு காரணம் என்பது எனக்குத் தெரியும்.
முதல் நாள் இரவு ஒன்பது மணியைப்போல் வயிற்றைக் கைகளால் அழுத்திகொண்டு அழத்தொடங்கினான். அடி வயிற்றில் வலி. முதலுதவியாக பனடோல் கொடுத்துப் பார்த்தோம். மனைவி, வேறு விதமான கை வைத்தியங்களையும் செய்து பார்த்தாள். அதற்கும் கேட்கவில்லை. படுக்கையில் சுருண்டு துடித்துக்கொண்டிருந்தான் மகன். பதினொரு மணியளவில் அண்மையில் இருந்த வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றேன்.
•Last Updated on ••Monday•, 13 •June• 2016 23:21••
•Read more...•
••Tuesday•, 03 •May• 2016 19:59•
?? -பேராசிரியர் கோபன் மகாதேவா-??
சிறுகதை
'மிஸிஸ் கொஞ்சம்' என்பது எங்கள் பெண்கள் திலகத்துக்கு நான் நாளாந்தப் பாவனைக்காகச் சூட்டிக் கொண்ட ஜனரஞ்சிதமான பெயர். ஒரு நாட்டின் பொருளாதார மந்திரியாக இருந்திருக்க வேண்டியவர். அதை, நான் மட்டுமே சொல்லவில்லை. அவரே இருந்து இருந்திட்டு எனக்கும், தன் மக்கள், நண்பர் எல்லாருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் (கிடைக்காவிடின் அவரே சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியும் கொண்டு) அதை நேரில் சொல்லி அல்லது சொல்லாமற் சொல்லி ஞாபகமூட்டத் தவறியதில்லை. ஏதோ ஒரு உலக நாட்டின் துரதிஷ்டகரமான இழப்பு ― அதாவது இந்தப் பொருளாதார நிபுணி, நாங்கள் முற் பிறவிகளில் செய்த நற்பயனால் எமக்குக் கிடைத்திருக்கிறார்.
ஒருநாள் எம்வீட்டுக்குக் கரு, தயா என்னும் ஒரு சோடி இலக்கிய நண்பர்களை இரவுச் சாப்பாட்டுக்கு நானும் மிஸிஸ் கொஞ்சமும் அழைத்திருந்தோம். அவர்களும் இலங்கையில் பிறந்த இங்கிலாந்து வாசிகள் என்ற படியால் பழங்கால அனுபவங்களை மீளாய்வு செய்து ஆனந்தமாக அவ் இரவைக் கழிக்கலாம் என்னும் நோக்குடன், உறைப்பான கோழி இறைச்சிக் கறியும் குழம்பும், முட்டைப் பொரியலும் கீரைப் பிட்டும் சமைப்பது என முடிவு செய்யப் பட்டது. குசினித் தட்டுகளிலிருந்த பிட்டு மாச்-சரைகளை எடுத்து அளவுச்-சுண்டினுள் போட்டு மதிப்பிட்டால், மூன்றரைப் பேருக்குப் போதும், ஆனால் நாலு பேருக்குக் காணாது என்ற நிலை. என்ன, ஒரு கொஞ்சம் தானே குறைவு, எங்களில் ஒருவர் அன்றைய வீட்டுக்காரர் என்ற முறையில் கொஞ்சம் குறைச்சுச் சாப்பிடுவது என்ற முடிவும் எடுக்கப் பட்டது. ஆனால் எம் இருவரில் யார் கொஞ்சம், கொஞ்சமாய் உண்பது? என்பது மட்டும் பேசப் படவில்லை.
அடுத்து, கறித்தூள், மிளகாய்த் தூள்களின் நிலை ஆராயப் பட்டது. கறித்தூள், கொஞ்சம் மட்டும் பாவிப்பது என்றும், உறைப்புக் கறியே எம் நோக்கமென்ற படியால், மிளகாய் தூளில் கொஞ்சம் கூடப் போடுவதென்றும் எம் ஒருமித்த முடிவு. இந்த எம் திட்டத்தின் படி சமையல் இனிதே நடந்தேறியது.
•Last Updated on ••Tuesday•, 03 •May• 2016 20:00••
•Read more...•
••Monday•, 04 •April• 2016 23:05•
??-பேராசிரியர் கோபன் மகாதேவா--??
சிறுகதை
'தம்பி, இது நல்ல விறுத்தம். பாக்கிறதுக்குத் திறமாய் இருக்குது. இப்பிடி ஒண்டை இந்தப் பக்கத்திலை, நானெண்டால் ஒரு நாளும் காணேல்லை. இதுக்கு என்ன பேர், தம்பி?' 'இதை வொக்சோல் வெலொக்ஸ் எண்டு சொல்லறது, பெரியையா!' 'நல்ல விசாலமான கார் தான், ஒரு சப்பறம் மாதிரி. கண்ணைப் பறிச்சுக் கொண்டு மினுங்குது. அதோடை, கதவைத் திறந்த உடனை சடார் எண்டு மூக்குக்கை வந்து அடிக்கிற இந்த வாசனையையும் நான் வேறை ஒரு வண்டிலிலும் காணேல்லைத் தம்பி . . . அங்கை! ஏதோ தூசி மாதிரி இருக்குது. துடையும்!' 'ஓம் பெரியையா. இதைப் புதிசாய்த் தானே வாங்கின நான். அது தான் பளிச்செண்டு மினுங்குது, நல்லாய் மணக்குது.' 'இங்கையும் வைச்சு ஓடுறாங்கள், இரண்டு கசவாரங்கள். முந்தி உனக்கு கார் பழக்க மறுத்த மருதங்குளத்துச் சின்னராசன்ரை ஒசுட்டின் ஏ-போட்டியும், கண்சிமிட்டிக் கதிரவேலன்ரை படான் போட்டும், உன்ரை இந்த வொசுக்கோல் காரிட்டைப் பிச்சை எடுக்க வேணும் தம்பி. உன்ரை இந்தக் கார் எந்த ஊரிலை தம்பி செய்தது?' 'இதுகும் அவையின்ரை போட்டு, ஏ-போட்டி, மொறிசைப் போலை இங்கிலாந்திலை தான், பெரியையா.' 'அதுதானே நானும் பாத்தன். இங்கிலீசக் காறர், அவங்கள் வெள்ளையங்கள் எல்லே. எப்பிடியும் கெட்டிக்காறர் தான்!' 'ஓம் பெரியையா, அவையிட்டை நாங்கள் படிக்கிறதுக்கு எத்தினையோ விசயம் இருக்குது தான். எண்டாலும் நாங்களும் முன்னேறி வாறம் தானே? நாங்களும் இப்ப இப்ப நல்ல வடிவான கட்டிடங்கள், பாலங்கள், பெரிய தார் றோட்டுகள் எல்லாம், கொழும்பிலையும் மற்றஇடங்களிலையும் கட்டுறம் தானே?' 'அது சரி ராசா. அது தானே உன்னைக் கோபாலுத் தம்பியும் நானும் எஞ்சினியருக்குப் படிக்க வைச்ச நாங்கள், உன்ரை கொம்மா செத்தாப்போலை. உனக்குத் தெரியுமோ தெரியாது, கோபாலு வருத்தமாய் யாழ்ப்பாணம் திரும்பி வர முன்னம், குருநாகல், குளியாப்பிட்டியா, தண்டகமுவவிலை எட்டுக் கடையள் எல்லாம் வித்துப் போட்டுக் கொந்துறாத்து வேலை செய்ததெல்லே, புத்தளம், சிலாபம் பகுதியிலை. அப்ப கோபாலு சந்திச்ச ஆகப் பெரிய உத்தியோகத்தர், ஒரு எஞ்சினியர் தான். அது தான், அவரைப் போலை உன்iயும் படிப்பிக்க வேணுமெண்டு . . . . . இப்ப சரி. தூசி போட்டுது. '
•Last Updated on ••Monday•, 04 •April• 2016 23:08••
•Read more...•
••Thursday•, 31 •March• 2016 21:28•
??- நேதாஜிதாசன் -??
சிறுகதை
நான் அந்த விடுதிக்கு வந்து சில மாதங்கள் இருக்கும்.இன்னும் இந்த முப்பது நாட்களை கடந்தால் ஒரு வருடம் ஆகிவிடும்.நான் புதுவருடத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தேன்.
என்னை எல்லோரும் பொதுவாக சித்தர் என்றே அழைப்பர்.ஆனால் என் உண்மை பெயர் குமார்.பெயரை சூட்டியவர்கள் இன்று இல்லை அதனால் என்னவோ சமூகம் எனக்கு சித்தன் என பெயரிட்டிருந்தது.
என்னை சித்தன் என அழைப்பதால் நான் ஒன்றும் கவலைபட்டதும் இல்லை.எழுத்தை தொழிலாக கொண்டவன் நான்.இதுவரை என்னுடைய கவிதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும் பிரசுரமாகியிருக்கின்றன. சிலவற்றின் சன்மானம் என்னை அடைந்தும் பலவற்றின் சன்மானம் இன்னும் வந்தடையாமலுமுள்ள நிலை. நான் அதைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை.நான் அதை எடிட்டர்கள் நல்வாழ்வுக்கு என தியாகம் செய்துவிடுவேன்.
அவ்வப்போது நான் பாடுவது உண்டு.எனக்கு வீணையும் வாசிக்க தெரியும்.இதனால் எனக்கு ஒரு சில வயதான ரசிகர்கள் உள்ளனர். நான் வெகுதூர பயணத்தில் இருக்கும்போது சாலையின் ஓரத்தில் பாட ஆரம்பித்துவிடுவேன் நின்றுகொண்டே.சில்லறைகள் பல கொட்டும்.நோட்டுகள் சில விழும்.இது நான் எழுதி சம்பாதித்ததைவிட அதிகமாக இருந்தது.
நானும் மனிதன் தானே என நிருபிக்க ஒரு பெண்ணை காதலித்தேன்.அவள் பெயர் மாதவி.அவளுக்கு இப்போது இரு ஆண் குழந்தைகள்.நிச்சயம் நான் ஒரு துரதிருஷ்டசாலி.என் காதலியின் கல்யாணம் என் மனதின் முன்பே நடந்தேறியது.அன்றிலிருந்து தெரிந்தது நான் மனிதன் அல்ல.நாம் சிரிப்பதும்,சந்தோஷப்படுவது வீண் என.அவளின் கல்யாண நாளில் இருந்தே நான் என் மகிழ்ச்சியுடன் விவகாரத்து பெற்றிருந்தேன்.
வரவர என் தொழிலும் வீழ்ச்சி தான்.அனைத்து பத்திரிக்கைகளிலும் இருந்து உங்கள் படைப்பு நிராகரிக்கப்படுகிறது என்றே பதில் வந்தது.வேறு வழியில்லாமல் சிற்றிதழ்களுக்கு அனுப்பி பார்த்தேன்.ஒன்றும் நடக்கவில்லை.அவர்கள் அனைவரும் பெயர் பிரபலமானதா என்று பார்த்தார்களே ஒழிய படைப்பை பார்க்கவில்லை.
தரமான இலக்கியம் பிரசுரமான காலம் போய் நவீனத்துவம் என்ற பெயரின் பெயரில் நகைச்சுவை இலக்கியமும்,தனிநபர் விமர்சனமும் பத்திரிக்கைகளை கோலோச்சின.எனக்கு அந்த மாதிரியெல்லாம் எழுத தெரியாது.எனக்கு தெரிந்தது எல்லாம் ஜெயகாந்தனும்,நகுலனும்,பிரமிளும்,மெளனியும்,சுந்தர ராமசாமியும் ,ஆத்மாநாமும் தான்.இதனால் என்னவோ என் படைப்புக்கள் நிராகரிக்கப்பட்டது என்றே எனக்கு பொருள்கொள்ள தோன்றியது.
•Last Updated on ••Thursday•, 31 •March• 2016 21:45••
•Read more...•
••Monday•, 28 •March• 2016 19:57•
??- மூலம் : கமலாதாஸ். | மலையாளம் வழிஆங்கிலம் : மெர்லின்ஜார்ஜ். தமிழில் : இர.மணிமேகலை - ??
சிறுகதை
நவீன முறையில் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு அலுவலக நண்பர்களுக்கு நன்றி கூறியபின் இரவு நேரத்தில் வீடு திரும்பிய அவனை நாம் ‘அச்சா’வென்று அழைக்கலாம்.என்ன காரணமெனில் நகரத்திலுள்ள மூன்று குழந்தைகளுக்குத்தான் அவனது மதிப்புத்தெரியும். அந்தக்குழந்தைகள் அவனை ‘அச்சா’வென்று அழைப்பார்கள். பஸ்ஸில் அறிமுகமாகாத புதியவர்கள் மத்தியில் அமர்ந்துகொண்டு அவன் அந்த நாளின் ஒவ்வொரு கணத்தினூடாகவும் பயணித்தான். அந்நாளின் ஒவ்வொரு நிகழ்வையும் நினைத்துப்பார்த்தான்.காலை நேரத்தில் எழுந்ததிலிருந்தே அவளது குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. “உன்னி அப்படியே படுக்கையில் உருண்டுகிட்டே இருக்க முடியுமா? இன்னிக்கு திங்கட்கிழமை இல்ல?” அவள் அவளது மூத்த மகனை எழுப்ப முயன்றாள். அழுக்குப்படிந்து கசங்கிய வெள்ளைச்சேலையைக் கட்டிக்கொண்டு சமையலறையில் வேலையைத்தொடங்கினாள். ஒரு பெரிய கப்பில் அவனுக்குக் காபி கொண்டுவந்தாள். அதன் பின்... என்னவெல்லாம் நடந்தது.மறக்கவே முடியாத சொற்களை ஏதாவது அவள் பேசினாளா?.எவ்வளவுதான் நினைவுக்குக் கொண்டு வந்தாலும் அதன் பின் அவள் சொன்னதாக எதுவும் நினைவில்லை.அந்த வார்த்தைகள் தான் எண்ணத்தில் அலைமோதுகின்றன. “உன்னி அப்படியே படுக்கையில் உருண்டுகிட்டே இருக்க முடியுமா? இன்னிக்கு திங்கட்கிழமை இல்ல?” அவன் அந்த வாக்கியத்தை ஒரு மந்திரத்தைப்போல உச்சரித்தான். அந்த வார்த்தைகளை மறந்துவிட்டால் அவனது இழப்பு திடீரென விஸ்வரூபம் எடுத்து தாங்க முடியாததாகிவிடும். அலுவலகம் கிளம்பும்போது குழந்தைகளும் அவனுடன் வந்தார்கள். குழந்தைகளுக்குப் பள்ளியில் சாப்பிட உணவு தயாரித்துக் கொடுத்திருந்தாள் அவள். அவளது வலதுகரத்தில் குங்குமப்பூத் துகள்கள் எஞ்சியிருந்தன. அதன்பின் அலுவலகத்தில் ஒருமுறைகூட அவளை நினைக்கவில்லை.
•Last Updated on ••Monday•, 28 •March• 2016 20:04••
•Read more...•
••Sunday•, 14 •February• 2016 01:38•
??- குரு அரவிந்தன் -??
சிறுகதை
அவளுடைய அந்தச் சிரிப்பில் ஏதோ ஒரு வித கவர்ச்சி இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால் அது என்னை ஒரு கணம் நிலை குலைய வைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்னை மறந்து அவளைப் பார்த்தேன். அவளோ ஒரு கண்ணசைவோடு என்னைக் கடந்து மெதுவாகச் சென்றாள். அதுவே எனக்குள் ஏதோ நுழைந்து விட்ட உணர்வை ஏற்படுத்தி என்னைக் குளிரவைத்தது. அவள் என்னை அசட்டை செய்தாளா அல்லது என்னை ஏங்க வைத்தாளா என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. வீட்டிற்கு வந்து படுக்கைக்குச் சென்ற போதும் அவள் நிiவாகவே இருந்தது. அவளது புன்னகையும், கண்ணசைவும் அடிக்கடி மனக்கண் முன்னே வந்து போனது. அந்தக் கணம்தான் அவள் நினைவாக என்னை ஏங்க வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது.
உண்மைதான், அவள் என்னை ஏங்க வைத்திருக்கிறாள் என்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. நானுண்டு என்பாடுண்டு என்று தான் இது வரை காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். இன்று மட்டும் ஏன் இந்த மயக்கம் என்பது தெரியவில்லை. ஒருவேளை பிறந்த மண்ணின் வாசனை என்னை எதிலும் ஈடுபாடு கொள்ள விடாமல் இதுவரை தடுத்து வைத்திருந்திருக்கலாம். அல்லது எனது பெற்றோர் அடிக்கடி தந்த போதனை என்னைப் பெண்கள் பக்கம் திரும்பாமல் தடுத்திருக்கலாம். ஆனாலும் காலவோட்டத்தில் எனது பதுமவயதைப் பல்லைக் கடித்துக் கொண்டு எப்படியோ ஓட்டியாகி விட்டது.
இனியும் இந்த உடம்பும் மனசும் பொறுமையாக இருக்குமா என்பதில் எனக்குள் சந்தேகம் இருந்தது. புலம் பொயர்ந்த இந்த மண்ணின் சூழ்நிலை அடிக்கடி மனதைச் சஞ்சலப் படுத்தியது. மதில் மேல் பூனைபோல இதுவரை தவிப்போடு இருந்த மனசு மறுபக்கம் தாவிக் குதித்துவிடு என்று அடிக்கடி ஆசை காட்டியது. வீட்டிலும், உறவுகளிடமும் ஒரு முகத்தைக் காட்டி, வெளியே மற்றவர்களிடம் மறு முகத்தைக் காட்டி எத்தனை நாட்கள்தான் ஆசைகளை எல்லாம் துறந்தவன் போல, இப்படி நடிப்பது. என் வயதை ஒத்தவர்களைப் பார்க்கும் போது, இயற்கையின் தேடலுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டேயிருந்தது.
•Last Updated on ••Sunday•, 14 •February• 2016 01:41••
•Read more...•
••Saturday•, 06 •February• 2016 20:11•
??- பேராசிரியர் கோபன் மகாதேவா -??
சிறுகதை
இன்று சடுதியாக என் சுண்டெலிக்கு வலிப்பு! நேற்று மட்டும் நன்றாய்த் தான் இருந்தது. புதுமெருகூட்டப்பட்ட என் பழையகவிதைகளில் ஐந்தைக் கணினியில் தட்டெழுதிப் பிரசுரத்துக்கு அனுப்பிவிட்டே படுக்கச் சென்றேன். இன்று காலையில் நான் வழக்கமாக மேயும் இணையத் தளங்கள் மூன்றையும் தேடிப் பிடித்து ஈழத் தமிழர் உரிமைப்போரின் கடைசியான திருப்பு முனைகள் என்னவென்று அறிந்த பின்னர் என் எழுத்து வேலையை ஆரம்பிப்போம் என எண்ணிக் கணினியின் தொடங்கு குமிழ்களை அழுத்தினேன். கணினியும் விழித்து என்னைப் பார்த்துச் சிரித்துக் காலை வணக்கம் சொல்லி இன்முகத்துடன் வரவேற்றது.
ஒரு வினாடிகூட விரயம் செய்ய விரும்பாது, கணினியின் உள்ளே செல்ல எண்ணி, காத்திருந்த விநாயகரின் வாகனத்தை அதன் புறமுதுகின் முன்பக்க இடது முனையில் முதல்விரலால் அழுத்தி, முன்னே தள்ளினேன். சுண்டெலி அசைந்தது. ஆனால் கணினி, சிரித்த முகத்துடன் உறைந்தே காணப்பட்டது. சுண்டெலியைத் தலைகீழாகத் தூக்கி அதன் தொப்புளிலே எரிந்து சிகப்புநிற வெளிச்சம் வீசும் வட்டம் அணைந்து இருந்ததைக் கவனித்தேன். என் சுண்டெலி லேஸர்க் கதிர்ச் சத்திரசிகிச்சை பெற்றால்தான் இனி விழித்தெழுந்து இயங்கக் கூடும் என உணர்ந்தேன். அது என் சில தினங்களையும் பணப் பவுண்டுகளையும் ஏப்பம் விடக்கூடும் எனவும் சிந்தித்தேன். என் சட்டைப் பைக்குள் இருந்த உள்ளங்கைத் தொலைபேசியின் சிறு பொத்தான்களை மெதுவாக மாறிமாறி அழுத்தி ஹரோவிலிருந்த பீசீ-உலகக் கடையுடன் பேசினேன்.
என் சுண்டெலியை நான் குப்பைக்குள் வீசிவிட்டு வந்தால், அதை உயிர்ப்பிக்க வேண்டிய அதே பதினைந்து பவுண்டுக்கு ஒரு புதிய சுண்டெலியை விற்பதாக வலை விரித்தனர். நான் சிந்தித்தேன்:
இந்தச் சிணுங்கு மூஞ்சிச் சுண்டெலிக்குப் பதினைந்து பவுண்டுகள் ஏன்? இது இன்றைய ரகத்து லேஸர்ச் சுண்டெலி என்ற படியாலேயே! இது என் மேசைக் கணினியுடன் சேர்த்து வியாபாரப் பேரத்தில் கிடைத்தது.
•Last Updated on ••Saturday•, 06 •February• 2016 20:35••
•Read more...•
••Saturday•, 30 •January• 2016 19:23•
??- பெஸீ ஹெட் (தென்னாபிரிக்க நாட்டுச் சிறுகதை) |தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை) -??
சிறுகதை
எழுத்தாளர் பற்றி: பெஸீ ஹெட் Bessie Head
தென்னாபிரிக்க பெண் எழுத்தாளரான பெஸீ ஹெட் 1937 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ஆறாம் திகதி பிறந்தவர். விருதுகள் பல பெற்ற பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புக்களையும் எழுதியுள்ள இவர் இன்றும் கூட ஆளுமை மிக்க எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 1950 களின் பின்னர் ஆசிரியையாகவும், 'ட்ரம்' எனும் சஞ்சிகையில் ஊடகவியலாளராகவும் கடமையாற்றிய இவர், அரசியல் நிலவரங்களின் காரணமாக 1964 ஆம் ஆண்டு பொஸ்த்வானாவிற்கு ஒரு அகதியாக புலம்பெயர்ந்தார். அங்கு 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி காலமான பெஸீ ஹெட்டின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பான 'The Collector of Treasures' எனும் தொகுப்பிலுள்ள 'Hunting' எனும் சிறுகதை இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. --மொ.பெ.
சிறுகதை: வேட்டை!
ஜூலை மாதம் வேட்டைக்குரிய மாதம். பல காரணங்களுக்காக அக் காலநிலை வேட்டைக்கேற்ற பல அனுகூலங்களைக் கொண்டிருக்கிறது. ஜூன் மாத அறுவடைக் காலமானது அத் தறுவாயில் முடிந்திருக்கும் என்பதால் எல்லோரிடமுமே சோளம் இருக்கும். அச் சோளத்தோடு கலந்து சுவையான உணவாகக் கொள்ள ஏதேனும் தேவைப்படும். சாதாரணமாக இக் காலத்தில், அவ் வருடத்திற்கான மழை வீழ்ச்சி பெய்யுமெனில் கொடிய மிருகங்களைக் காணக் கிடைக்கும்.
பன்னிரண்டு மாதங்களிலும் மிக அதிகளவில் குளிரான மாதம் ஜூலை மாதம் என்பதனால் இறைச்சியைக் காய வைக்கையில் ஏனைய மாதங்களில் போல கெட்டுப் போகவோ புளுத்துப் போகவோ மாட்டாது. எனவே ஜூலை மாதத்தில் அனேக ஆண்கள் ஊரை விட்டுக் கிளம்பி விடுவார்கள். சிலர் வாரக் கணக்கிலும், சிலர் ஒரு மாதம் தாண்டியும் கூட ஊரைத் தாண்டி வெளியே இருப்பர். அவர்கள் அடர்ந்த வனாந்தரத்துக்குச் சென்று மிகக் கடினமாக வாழ்க்கையைக் கழிப்பர். மரங்களிலிருந்து கிளைகளை வெட்டியெடுத்து முக்கோண வடிவத்தில் நட்டு அதன் மேல் புற்களை கூரையாகப் பரப்பி கூடாரங்களையோ குடிசைகளையோ உருவாக்கிக் கொள்வர். இரவு நேரங்களில் ஓய்வெடுக்கவும் குளிரிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் அதற்குள் புகுந்துகொள்வர். சிங்கங்கள் நடமாடும் பகுதியொன்றுக்கு அவர்கள் வேட்டைக்காக வந்திருப்பின் சிங்கங்களை அச்சுருத்துவதற்காக தமது குடிசைக்கருகில் தீ மூட்டி விசாலமானதாக எரிய விட்டிருப்பர்.
•Last Updated on ••Saturday•, 30 •January• 2016 19:34••
•Read more...•
••Saturday•, 30 •January• 2016 05:58•
??- பரதன் நவரத்தினம் -??
சிறுகதை
1
திரு திருமதி செல்வன் அடுத்த வீடு பார்க்க தொடங்கிவிட்டார்கள்.
கையில் ஒரு சூட்கேசுடன் கனடா வந்து இறங்கிய செல்வனுக்கும் மனைவிக்கும் முதல் இருப்பிடம் நண்பனின் நிலக்கீழ் அறைதான் .சில மாதங்களில் செல்வனுக்கு ஒரு மரத்தொழிற்சாலையில் வேலை கிடைத்துவிட்டது . மனைவி நித்தியா கணக்கியல் படிக்க பாடசாலை செல்ல தொடங்கியிருந்தார் . கையில் கொஞ்சம் காசு சேர சூரியஒளி படாத அந்த இடத்தை விட்டு ஒரு அப்பார்மென்ட் எடுத்தது போய்விட்டார்கள் .
நித்தியாவிற்கு வங்கியில் வேலை கிடைத்துவிட்டது ,செல்வனுக்கு வருமானமும் சற்று அதிகரிக்க சொந்தமாக வீடு வாங்கும் ஆசை வந்து நித்தியா வேலை செய்யும் வங்கிக்கு அருகில் மூன்று அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டை வாங்கிவிட்டார்கள் .
இருவருக்கும் நிரந்தர வேலை ,நல்ல சம்பளம் ,இரண்டு கார்கள் ,மூத்தமகனுக்கு ஏழு வயது,இளைய மகளுக்கு நாலு வயது . இனி இதைவிட பெரியதொரு வீடு தேவை என்று தீர்மானித்து அடுத்த வீடு தேடும் படலம் ஆரம்பித்துவிட்டது .இம்முறை இன்னொருவரின் வீட்டை வாங்காமல் புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றை வாங்குவது என்று தீர்மானித்து எந்த இடத்தில் வாங்குவது ,எந்த வீடு கட்டும் நிறுவனத்திடம் கட்டக்கொடுப்பது என்ற ஆராய்ச்சியில் இருவரும் இறங்கிவிட்டார்கள் .
•Last Updated on ••Saturday•, 30 •January• 2016 06:04••
•Read more...•
••Saturday•, 30 •January• 2016 05:25•
??- பரதன் நவரத்தினம் -??
சிறுகதை
1.
"தம்பி அவசரம் ஒருக்கா இந்த வார விடுமுறை வீட்டிற்கு வா " கடிதத்தை வாசித்த பின் அதை மேசை மீது போட்ட மணிவண்ணன் அம்மா ஏன் அவசரமாக வரசொல்லி எழுதியிருகின்றார் என்ற அந்த வரி மட்டும் மனதை குடைந்துகொண்டிருந்தது .
என்னவாக இருக்கும் ?
"பெண் பார்த்திருகின்றேன் வந்து பார் என்பாரோ ,இவன் வரகுணன் படிக்கின்றான் இல்லை, உன்னை பார்க்கவேண்டும் போலிருந்தது"
அம்மா அடிக்கடி கடிதம் எழுதுவதில்லை அப்படி எழுதினாலும் சுகம் கேட்பதும் இப்படியான விடயங்களும் தான் அதில் இருக்கும் .
இரண்டு வருடங்களுக்கு முதலும் இப்படி ஒரு கடிதம் வந்தது, அடித்து பிடித்து மணிவண்ணன் வீட்டிற்கு ஓடினால்
“உன்ரை தம்பி இவன் வரகுணன் இனி ஒன்பதாம் வகுப்பு. அவனை கலைப்பிரிவில் விட்டு விட்டார்கள் வெளியில் விடயம் தெரிய வரமுதல் ஒருக்கா போய் பாடசாலை அதிபரை சந்தித்து அவனை விஞ்ஞானபிரிவிற்கு மாத்திபோட்டுவா. " என்கின்றார்.
•Last Updated on ••Saturday•, 30 •January• 2016 06:02••
•Read more...•
••Tuesday•, 12 •January• 2016 23:56•
??- எழுதியவர்: கடல்புத்திரன் -??
சிறுகதை
தில்லை,மதியத்திற்கு சாப்பிட சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் அடைட்ட உணவுப் பொட்டலம்,சப்வேயில் வாசிக்கிறதுக்காக இரவலாக எடுத்த நூலகப் புத்தகம், கொஞ்சம் சில்லறை தாள்களுடன் உள்ள இடுப்பிலே கட்டிக் கொள்கிற தோல்ப்பை... எல்லாத்தையும் உள்ளடக்கிய துணிப்பையை கழுத்தில் மாட்டிக் கொண்டு,கையிலே கையுறை,தலையிலே குளிரைத் தாங்கும் தொப்பி,கழுத்தைச் சுற்றிய கறுப்பு நிற மப்ளர் ...சகிதம் விறு விறு என இருள் பிரியாத அந்த காலை நேரம் நடந்து கொண்டிருந்தான். அந்த துணிப் பையை சப்வேயில் அல்லது வேறெங்கேயும் தவற விட்டால் 'பெ.. பெ'என விழிக்கக் கூடாது! என்பதற்காக 5 டொலர் தாளை எடுத்து கால்ச்சட்டையின் பிற்பொக்கற்றிலும் வைத்துக் கொள்கிறவன்.வேலையால் வருகிற போது வீதியில் கோப்பிக் கப்பை நீட்டிக் கொண்டு அங்காங்கே இருக்கிறவர்களில் இப்படி தவற விட்டவர்கள் சிலரும் இருக்கலாம் என்பது அவன் நினைப்பு .
“நாள், மாசம் போறதே தெரியிதில்லை.ஆனால், டாக்சி ஓடின பிறகு உடம்பு உலைச்சலாக இருக்கிறதடா” ராதாவிடம் சொன்ன போது,ஊரிலே தோழனாக இருந்தவன். இங்கேயும் தோழன் தான்."டேய்,நான் சம்மரிலே சைக்கிளிலே வாரது ஏன்?வேலை ஒன்றும் உடற்பயிற்சி கிடையாது, அதற்கென்று புறிம்பா செய்யவேண்டும்.ஊரிலே நெடுக சைக்கிளிலே திரியிறதிலே உடற் பயிற்சி நடக்கிறதே ...தெரியிறதில்லை. இங்கே பணத்தை குறியாய் வைத்து வேலையை செய்கிறோம். ‘ பயிற்சியே’ வலியை பலன்ஸ் பண்ணுறது. இது பலருக்கு தெரியாதபடியால் கொஞ்ச வயசிலே செத்துப் போறாங்கள் .கிடைக்கிற நேரத்தில் ஓடு அல்லது நட, நல்லதடா! "என்கிறான்.
கையிலே கிடக்கிற பையை என்ன செய்வது? அது தான் எடுத்து கழுத்திலே மாட்டியிருக்கிறான்.நகரக்காவலரின் கார் ஒன்று வீதியில் அவனை கடக்கையிலே, ஒரு மாதிரியாப் பார்த்துக் கொண்டு போனது. இவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம் தான்.கறுப்பு வெள்ளை தான் தோலிலே இருக்கிறதே! மெல்லிய குளிர்காற்று வீச கைகளை ஸ்சுவிங் பண்ணி நடக்க நல்லாய் தான் இருக்கிறது. அவனும் ராஜகுமாரன் தான்.நகரமே இன்னும் விடியவில்லை.வீதி ஒரிருவரைத்தவிர அமைதியாய் கிடந்தது.சப்வே கிடங்குள் படிகளில் இறங்கினான்.சப்வே என்கிற சிறிய ரயில் வர 3 நிமிசம் ஆகும் என மேலே தொங்கிற தொலக்காட்சிப் பெட்டியில் காட்டியது.அதிலே வந்து கொண்டிருந்த சிறிய சதுரத்தில் பேசுற செய்தியையும்,கீழே எழுத்தில் போற செய்தியையும் கவனித்தான்."ரஸ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது..."என்று போய்க் கொண்டிருந்தது. சிறிய திருப்பம்!இனி சிரியாப் போரில் உண்மைச் செய்திகள் கொஞ்சம் வெளியே வரலாம்.சிறிலங்கா துயரம் போய்,இப்ப சிரியாத் துயரம்.இந்த நாடு பெருந்தன்மையுடன் பெருமளவு சிரியா அகதிகளை ஏற்கிறது. எங்களையும் இப்படித் தான் ஏற்றது.
•Last Updated on ••Wednesday•, 13 •January• 2016 18:23••
•Read more...•
••Wednesday•, 23 •December• 2015 21:22•
?? - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -??
சிறுகதை
அந்த மோதிரத்துக்கு கெட்ட செய்திகளை மட்டும் ஈர்த்துக் கொண்டுவரும் சக்தி இருக்கிறதோ என்று அவன் ஐயப்பட்டது அன்று உறுதியாகிவிட்டது. அந்த மோதிரத்தை விரலில் மாட்டிய நாளிலிருந்து தினம் ஏதேனுமொரு கெட்ட தகவல் வந்துகொண்டே இருந்தது. அணிந்த முதல்நாள் வந்த தகவல் மிகவும் மோசமானது. அவன் தங்கிப் படித்து வந்த வீட்டு அத்தை கிணற்றில் விழுந்து தவறிப்போயிருந்தாள். அன்றிலிருந்து தினம் வரும் ஏதேனுமொரு தகவலாவது அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டே இருந்தது. முதலில் அவன் அந்த மோதிரத்தை இது குறித்துச் சந்தேகப்படவில்லை. அதுவும் சாதுவான பிராணியொன்றின் உறக்கத்தைப் போல அவனது மோதிரவிரலில் மௌனமாக அழகு காட்டிக் கொண்டிருந்தது.
அவனுக்கு ஆபரணங்கள் மேல் எவ்விதமான ஈர்ப்புமில்லை. அவனது தாய், பரம்பரைப் பொக்கிஷமாக வந்த அந்த மோதிரத்தைப் பாதுகாத்து வைத்திருந்து அவனுக்கு இருபத்து மூன்றாம் வயது பிறந்தபொழுதில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி அதனை அவனது வலதுகை மோதிரவிரலில் அணிவித்து, பின் அவனுக்கு முதலாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு சரியாக இருபத்து மூன்று வயது பிறக்கும்போது அதனை அணிவித்து விடவேண்டுமென்றும் அதுவரையில் எக்காரணத்தைக் கொண்டும் அதனைக் கழற்றக் கூடாதெனவும் ஆணையிட்டு, நெற்றியில் முத்தமிட்டாள். அவனுக்கு தூக்கக் கலக்கத்தில் எதுவும் புரியவில்லை. அடுத்தநாள் காலையிலும் அம்மா அதனையே சொன்னாள். காரணம் கேட்டதற்குப் பதில் சொல்ல அவளுக்குத் தெரியவில்லை. அவளது அப்பா அப்படிச் சொல்லித்தான் அதனை அவளது இருபத்து மூன்றாவது வயதில் அவளுக்கு அணிவித்ததாகச் சொன்னாள். அவனும் அம்மோதிரத்தை இதற்கு முன்னால் அவளது விரல்களில் பார்த்திருக்கிறான். அவளுக்கென இருந்த ஒரே மோதிரமும் அவன் வசமானதில் கைவிரல்கள் மூளியாகிப் போனது அவளுக்கு.
அது சற்று அகலமானதும் பாரமானதுமான வெள்ளி மோதிரம். நடுவில் ஒரே அளவான சற்றுப் பெரிய இரு கறுப்பு வைரங்களும் ஓரங்களில் எட்டு சிறு சிறு வெள்ளை வைரங்களும் பதிக்கப்பட்டிருந்த அழகிய மோதிரம். வெளிச்சம் படும் போதெல்லாம் பளீரென மின்னுமதன் பட்டையான இருபுறங்களிலும் கூட சின்னச் சின்னதாக அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதிலிருக்கும் கற்களை விற்றிருந்தால் கூட ஒரு நல்ல வீட்டை விலைக்கு வாங்குமளவிற்குப் பணம் கிடைத்திருக்கக் கூடும். இப்பொழுது வரையில் வாடகை வீட்டிலேயே வசித்து வரும் அம்மாவுக்கும் இந்த எண்ணம் தோன்றியிருக்கும். ஆனால் என்ன கஷ்டம் வந்த பொழுதிலும் அவள் அதனை விற்கவோ, அடகுவைக்கவோ ஒருபோதும் துணியவில்லை. அவனது இருபத்து மூன்று வயது வரும் வரையில் விரல்களிலிருந்து அவள் அதனைக் கழற்றக்கூட இல்லை.
•Last Updated on ••Wednesday•, 23 •December• 2015 21:25••
•Read more...•
••Tuesday•, 22 •December• 2015 07:13•
??- குரு அரவிந்தன் -??
சிறுகதை
- ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக குடும்பத் தலைவனை இழந்து நிர்க்கதியாய் இருப்பவர்களுக்கு உதவும் நல்ல நோக்கத்தோடு செயற்படும் அன்பு நெறிக்காகப் புனையப்பட்ட சிறுகதை -
சீதா..! யாரோ வாசலில் கூப்பிடும் சத்தம் கேட்டது.
அவள் கனவிலிருந்து வெளிவந்து கண் விழித்துப் பார்த்தாள். தட்டிக்குள்ளால் நுழைந்த வெளிச்சம் கண்ணுக்குள் பட்டுத் தெறித்ததிலிருந்து விடிந்து போயிருப்பது தெரிந்தது.
‘யாராய் இருக்கும்..?’ நெஞ்சில் ஒருவித பய உணர்வு சட்டென்று தேங்கி நின்றது.
மீண்டும் அதே குரல் கேட்டது. கவனமாகக் காது கொடுத்துக் கேட்டாள், பெண் குரல், பக்கத்து வீட்டு ரேவதி மாமியின் குரலாகத்தான் இருக்கும் என்ற நினைப்போடு அவசரமாக எழுந்து சோம்பல் முறித்து, கூந்தலை அள்ளி முடிந்து கொண்டாள்.
இப்போதுதெல்லாம் முன்புபோலப் பயப்பட வேண்டியதில்லை. நாட்டில் நடப்பதைப் பார்த்தால், ஆட்சி மாறினாலும் அதிகாரம் மாறாமலே இருப்பது போன்ற ஒருவித பிரேமை தோன்றலாம். ஆனாலும் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. முன்பெல்லாம் யாராவது அழைத்தாலே பயம் பிடித்துக் கொள்ளும். வாசல்வரை வந்து அழைத்துச் சென்றால், அப்புறம் பிணமாகத்தான் வீடு வரவேண்டும். இல்லாவிடால் தொலைந்து போனவர்களின் பட்டியலில் இடம் பெறவேண்டும். எதுவாக இருந்தாலும் முடிவு என்னவென்பதை வந்தவர்களே தீர்;மானிப்பார்கள். எஞ்சியிருக்கும் நீங்கள்தான் அந்த இழப்பின் வலியைக் காலமெல்லாம் சுமக்க வேண்டிவரும்.
இவளது கணவனையும் ஒரு நாள் அதிகாலையில் இப்படித்தான் வெளியே வரும்படி அழைத்துக், கூட்டிச் சென்றார்கள். அப்புறம் கணவனுக்கு என்ன நடந்தது, இருக்கிறானா இல்லையா என்றுகூட இதுவரை தெரியவில்லை. சித்திரவதை முகாமுக்கு அவனைக் கொண்டு சென்றதாகவும் கதைகள் அடிபட்டன. ஒரே நாளில் அவளது தலைவிதி மாற்றப்பட்டிருந்தது. கைக்குழந்தையோடு தனித்துப் போன அவளது வாழ்க்கை இதுவரை அர்த்தமற்றதாய் போயிருந்தது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இதுவரை காலமும் அவள் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. குழந்தைக்காகவாவது வாழவேண்டும் என்று அவள் உறவுகளால் நிர்பந்திக்கப் பட்டாள். வருமானத்திற்கு எங்கே போவது, அதுவே பெரிய தொரு கேள்விக்குறியாய், பூதாகரமாக கண்முன்னால் பயம் காட்டியது. யுத்த சூழலில் யாரும் வலிய வந்து உதவுவதற்கு முன்வரவில்லை. தெரியாத வேலை என்றாலும், இன்னும் ஒரு உயிர் வாழவேண்டுமே என்ற ஆதங்கத்தோடு அடுத்த நேரக் கஞ்சிக்காகக் கூலி வேலைக்கும் சென்றாள். ஆனாலும் என்னதான் மறக்க நினைத்தாலும், அவளது கணவனை அன்று அழைத்துச் சென்ற அந்த வெள்ளைவான் மட்டும், யமதர்மனின் எருமைமாடுபோல, அவள் கண்ணுக்குள் அடிக்கடி நிழலாடிக் கொண்டே இருந்தது.
•Last Updated on ••Tuesday•, 22 •December• 2015 07:16••
•Read more...•
••Wednesday•, 09 •December• 2015 06:47•
??- ஜெயந்தி சங்கர் -??
சிறுகதை
ஜெயந்தி சங்கர் ஜெயந்தி சங்கர் 20 ஆண்டுகளாக எழுதுகிறார். 7 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள் உள்ளிட்ட 27 நூல்கள் எழுதியுள்ளார். ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது, கரிகாலன் விருது, கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு, ncbh தனுஷ்கோடி ராமசாமி நினைவுப் பரிசு, திருப்பூர் வெற்றிப்பேரவைப் பரிசு,திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் பரிசு கு. சின்னப்ப பாரதி இலக்கிய விருது, நல்லி - திசையெட்டும் (மொழியாக்க) இலக்கிய விருது, அரிமா சக்தி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 'பின் சீட்', 'திரைகடலோடி', 'முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும்', ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகள் முறையே 2008, 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் சிங்கப்பூர் (short list) இலக்கிய விருதுக்குத் தேர்வாகின. ஆங்கிலத்தில் இவர் எழுதிய ‘Read Singapore’ என்ற சிறுகதை ‘Best New Singaporean Short Stories – volume 1 தொகுப்பில் இடம் பெற்றதுடன், ரஷ்யமொழியாக்கமும் செய்யப் பெற்று To Go To S'pore. Contemporary Writing from Singapore. தொகுப்பு நூலில் இடம் பெற்றது . தற்போது தமிழ் முரசில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார். சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாகச் சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விட நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றைச் சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஸ்ரீலங்கா, மலேசியா போன்ற நாடுகளில் எண்ணற்ற சிறுகதைகள் கட்டுரைகள் பிரசுரமாகி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன
தட்டியவுடன் எனக்குக் கதவைத் திறந்து விட்ட மெலிஸா ஒன்றுமே சொல்லாமல் விட்ட இடத்தைப் பிடித்துக் கொள்ளும் முனைப்புடன் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டதைப் பார்த்த போது தான் கொஞ்ச நேரமாகவே அவள் அவ்விடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வீடு எளிய கலைநேர்த்தியுடனான அலங்காரத்துடன் இருந்தது. கூடத்தின் ஒரு மூலையில் மெலிஸாவும் இன்னொரு மூலையில் பென்னும் ஆளுக்கொரு முக்காலியின் மீது உட்கார்ந்திருந்தார்கள். அவளது கன்னத்தில் பளபளத்த உலர்ந்த கண்ணீர் எனக்குள் எந்தப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. பென் அழுது கொண்டிருந்தது தான் எனக்கு ஆச்சரியமாவும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருந்தது. இருபத்திரண்டு வயது ஆண் ஒருவனால் இப்படி நெகிழ்ந்து அழக்கூட முடியுமா என்று என் வாழ்வில் முதன்முறையாக அதிசயித்தேன். அவனது கண்கள் சிவந்து வீங்கியிருந்தன. என் எண்ணைத்தைப் படித்தவனைப்போலத் தன் முகத்தை என் பார்வையிலிருந்து லேசாக மறைத்துக் கொள்ளும் நோக்க்கில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டான். அப்படி என்ன தான் பிரச்சனை இவர்களுக்குள்?
•Last Updated on ••Wednesday•, 09 •December• 2015 07:02••
•Read more...•
••Saturday•, 05 •December• 2015 06:20•
??- நவஜோதி ஜோகரட்னம்., லண்டன். ??
சிறுகதை
சொந்தமென்றும், உறவென்றும், இலக்கியமென்றும், கலையுலகென்றும் மறைந்துகொண்டிருப்போரின் நினைவுகள் மனதைப் பம்பரமாக்கி, காலம் என்ற ககன வெளியில் சிதைத்தெறியும் துயரில் நான். நிம்மதி தேடி அலைகிறது மனம். நிற்பதுவும் நடப்பதுவும் வெறும் தோற்ற மயக்கங்களோ என்று சிந்தனை சிலிர்க்கிறது. வீட்டில் நடந்துபோன துயர் அனுபவங்களும் மேலும் துயர் சோபையைக் கூட்டுகிறது. ஏன் சிந்தனை அலையைக் குறிக்கிட்டு தொலைபேசி அழைப்பு அலறிக்கொண்டிருக்கிறது. மீண்டும் நிதர்சன உலகில் நான். இன்னுமொரு தொலைபேசி அழைப்பு. ஒரே கதையைத் திரும்பத் திரும்ப சொல்லப்போகும் அழைப்பு மணி அது. இன்னுமொரு திகிலில் கதையைக் கொண்டு சேர்க்கப் போகிறதா அந்த அழைப்பு மணி. அழைக்காத விருந்தாளியாக ஒலிக்கிறது அந்த அழைப்பு மணி. அழைப்பிற்கு பதில் சொல்லாமல் விடலாமோ என்று நினைத்தேன். அது நாகரீகமில்லை என்று மனதில் பட்டது.
‘ஹலோ’ என்றேன்
‘நான் சந்திரமதி கதைக்கிறேன்’
ஓ சந்ரமதியா? நெடுநாளாhகிவிட்டது. என்ன விடயம்?
‘எனக்கொரு உதவி செய்ய வேணும் மாதங்கி. உங்களுக்கு லண்டனில் இருக்கிற நல்ல சமூகசேவையாளர்கள் என்று பலரையும் தெரியும்தானே! ஆங்கிலம் நல்லாகக் கதைக்கக்கூடிய ஒரு பொம்பிளை ஒருவரை அறிமுகஞ் செய்து தருவீங்களோ?’ ‘ஏன் உங்களுக்கு கணவர் பிள்ளைகள் இருக்கிறார்கள் தானே! உதவி செய்ய மாட்டார்களோ?’
‘எல்லோரும் இருக்கிறார்கள்தான். ஆனால்.’
மிக மோசமான துயரத்தின் மௌனத்தில் நிரம்பிய விசும்பல் அவளது பதிலில் ஒலித்தது.
•Last Updated on ••Saturday•, 05 •December• 2015 06:24••
•Read more...•
••Thursday•, 03 •December• 2015 06:50•
?? - பேராசிரியர் கோபன் மகாதேவா -??
சிறுகதை
இடம்: தமிழீழம் தென்மராட்சி கைதடி-நுணாவில் என்னும் கிராமம். காலம்: 1960களின் முற்பகுதி. தன் கணவரின் எட்டுச் செலவு நடந்த சனி பிற்பகல், உணவுப் பந்தியில் அமர்ந்திருந்த எல்லோருக்கும் நாகமுத்து தன் கையால் ஏதுமொன்று பரிமாற வேண்டும் என நாண்டு நின்று, எல்லோரும் சாப்பிட்டு முடியும் நேரத்தை அவதானித்து, ஓர் ஓலைப் பெட்டியில் உழுந்து வடைகளை எடுத்துச் சென்று தனது வளையல்கள் கழற்றியிருந்த வலக்கையால் ஒவவொன்றாக வாழை இலைகளின் நடுவில் மெதுவாக வைத்துக் கொண்டு வரிசை வரிசையாக ஒவ்வொருவரையும் பார்த்து ஒருவாறு புன்னகித்தபடி சென்றாள். நடையில் அவள் தடுமாறியதை எவரும் கவனிக்கவில்லை. வெற்றியர் இறந்தது புதன்கிழமை. அவருக்குக் கடுமையாக்கிய நாள் தொடங்கி, அவள் அவரருகேயே இரவுபகலாகக் காணப்பட்டாள். எனவே மகள் இரத்தினமும் சிறுமிகளாகிய இரு பேத்தியரும் அடுக்களை வேலைகளின் பொறுப்பை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் புதன்கிழமையில் இருந்து, எட்டுச் செலவுச் சனி மட்டும், இனத்த வெளிப்-பெண்கள் சிலர் காலை வந்து இரவுமட்டும் ஒத்தாசை செய்தனர். அவளுக்கும் சிலர் உணவு பரிமாறிக் கொடுத்தனர். ஆனால் உண்மையில் அவளை இருந்து உண்ணவைக்க முடியவில்லை. ஏதோ, தினம் தினம் அடுத்த நாள் உயிர் வாழவே அவள் சிறிது புசித்து வந்தாள் என்பது பல நாட்களுக்குப் பின்னரே ஊகிக்க முடிந்தது. வியாழன், வெள்ளி, சனி, அவள் வீட்டுக்கு வந்த எல்லோருடனும், அழுதழுது கூடப் பேசவே தெண்டித்தாள். சமையல் வேலைகளுக்கு வேண்டிய சாமான்கள் இருக்கும் இடங்களை எல்லாம் உடனே காட்டி உதவினாள். பகலில் படுத்து இளைப்பாறத் தெண்டிக்க வில்லை. அதற்கு அவளின் கடமையுணரச்சி விடவில்லை. தன் மகள், மகனுடனும் மூன்று மருமகன் மாருடனும் பாசத்துடன் பேசி, பேரப் பிள்ளைகளைக் கட்டி முத்தமிட்டு ஆறுதல் கூறினாள். சனிக்கிழமை காலையிலேயே எட்டுச் செலவையும் துடக்குக் கழிவையும் ஐயரை அழைத்துச் செய்வித்து, மதிய போசனம் முடிந்தவுடன் பந்தலையும் இறக்கி, குடும்பத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தால் தாம் ஞாயிறு காலை வெளிக்கிட்டு கொழும்பு திரும்பலாம் என மருமகன்மார் துரையும் தில்லையும் தெண்டித்தனர். ஆனால் ஐயர், புதனன்று நாலு மணிக்கே பிரேதம் சுடலை சென்ற படியால் சனியன்று நாலுக்குப் பின்னரே தன் துடக்குக் கழிவுப் பூசை தொடங்க முடியும் என்றதால், இன்னொரு நாள் சுணக்கம் ஏற்பட்டது. எனவே, இருவரும் கூடிய லீவுகளைக் கோரித் தந்திகளை அனுப்பி, நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற தத்துவத்தைப் பின்பற்றினர். சனிக்கிழமை மாலை ஏழுக்கு எல்லாம் இனத்தார் தம்தமது வீடுகளுக்குச் சென்று விட்டனர். உடனே அவள் மகன் (பள்ளிக்கூடப் பரிசோதகர்) கந்தசாமியைத் தன் கணவரின் முன்-அறைக்குள் கூப்பிட்டு வெற்றியர் எவருக்கும் ஏதும் கடன்வகையில் கொடுக்க வேண்டுமா என ஆராய்ந்தாள். இது நடக்கும் போது வேறு ஏதோ வேலையாக அங்கு சென்ற துரையர், வெற்றியர் கடன் ஒன்றும் விட்டு வைக்க இல்லை என அறிந்து, அவள் விட்ட ஆறுதற் பெருமூச்சைக் கவனிக்கத் தவற வில்லை.
•Last Updated on ••Thursday•, 03 •December• 2015 06:57••
•Read more...•
••Tuesday•, 01 •December• 2015 20:57•
??- பொ.கருணாகரமூர்த்தி - ??
சிறுகதை
எமது 15 வருஷ கனடியவாழ்வின் அருஞ்சேமிப்பில் இந்தவீட்டை நோபிள் ரியல் எஸ்டேட்ஸ் என்கிற ஒரு குழுமத்தின் அனுசரணையுடன்தான் வாங்கினோம். இங்கே வீடுகளைவாங்கும் தமிழர்கள் அநேகமாகச் செய்வதைப்போலவே நாங்களும் இவ்வீட்டை நிலவறைகள் உள்ள வீடாகத்தேர்வுசெய்தோம். ஆனாலொன்று எப்படி ஒரு அடுக்ககத்தின் உச்சிமாடத்தில் கூரைமுகடுகளுக்குள் அமைந்த வீடுகளை குடியிருப்பாளர்கள் தவிர்த்துக்கொள்வார்களோ, அதேபோல் இந்த நிலங்கீழமைந்த வீடுகளும் குடியிருப்பாளர்களின் முதல் விருப்புக்குரியவையல்ல. நிலங்கீழ்வீட்டையும் யாருக்காவது வாடகைக்கு விட்டால் அவர்கள் தரக்கூடிய வாடகையும் எமது மாதாந்த தவணைத்தொகையைச் செலுத்துவதற்கு உதவும் என்பதே இவ்வீட்டைத் தேர்வுசெய்ததின் சூக்குமம். நிலவறைகள் என்றால் நீங்கள் கிட்டங்கி மாதிரிகளையோ, அலுவலகங்களில் இருக்கும் பொருட்களை வைப்பதற்கான களஞ்சியவறைகளையோ உருவகப்படுத்திவிடக்கூடாது. அவையும் வதியுமறை, படுக்கையறை, குளிப்பறை, கழிப்பறை எல்லாவற்றுடனும்கூடியதும் மானுஷர் வதிவதற்கேற்றமான (பேஸ்மென்ட்ஸ்) மனைகள்தான்.
இவ்வகைமனைகளைக் குடியிருப்பாளர்கள் தேர்வுசெய்யாமைக்கு காரணங்களும் இல்லாமலில்லை. பனிவீழ்ச்சியும், நீண்ட குளிர்காலங்களுமுள்ள நாடுகளில் ஏனைய வீடுகளை விடவும் இவ்வீடுகளை குளிர் மிகையாகத் தாக்கும், அதனால் கணப்புகளுக்கான மின்சாரம்/எரிவாயுச்செலவுகளும் சற்றுக்கூடுதலாகவே இருக்கும். இன்னும் கடவுளர்கள்தான் மலைகளில் குளிர் அதிகமாகியோ, கொஞ்சம் பணிஓய்வுகொள்வோமென்றோ, இல்லை ரொறொன்டோ தேவதைகளைக் கொஞ்சம் அணுக்கத்தில் பார்த்து ஒத்திவிட்டுப்போகலாமென்றோ இவ்வகை மனைகளுக்கு வெளியே வந்திறங்கி நின்றாலும் அம்மனைவாசிகளுக்கு அவர்களின் தரிசனம் கிட்டாது. அஃதாவது நேரடியான சூரியஒளிக்கதிர்கள் இவ்வகை மனைகளுக்குள் கடவுள்களில் பட்டுத்தான் தெறித்துவந்தாலும் பாயாது. ஒரேயொரு பொருண்மிய அநுகூலம் என்னவென்றால் அவற்றின் மலிவான வாடகைதான். 100 ச.மீட்டர்கள் விஸ்தீரணமான சாதாவீட்டொன்றுக்கு வாடகை 1000 டாலர்கள் என்றால் இதுபோன்றவற்றை 500, 600 க்குள் தேற்றிவிடலாம். ஆதலால் இவ்வகை வீடுகளிலும் கணிசமான மக்கள் வதிவதும் லௌகீக, மற்றும் வர்க்க நியதியே.
•Last Updated on ••Tuesday•, 01 •December• 2015 21:06••
•Read more...•
••Tuesday•, 01 •December• 2015 20:42•
??- குரு அரவிந்தன் -??
சிறுகதை
(அவள் கசக்கப்பட்ட மலராய் அலங்கோலமாய் கட்டிலில் மயங்கிக் கிடந்தாள். மார்பகம் நனைந்திருந்தது. ‘அம்மா’ என்று அவள் அப்போது எழுப்பிய அந்த அவலக் குரல் கூட குழந்தையின் அழுகைக்குள் புதைந்து போயிற்று...')
அதிகாலையின் மங்கிய இருட்டில் பனிக்குளிரைக் கிழித்துக் கொண்டு அருகே உள்ள பௌத்த விஹாரையிலிருந்து ஒலிபெருக்கியில் 'பிரித்" ஓதும் சத்தம் அந்த இராணுவ மருத்துவமனைக்குள் எதிரொலித்தது.
புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி..!
அந்த மருத்துவ மனையில் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த பண்டா ‘நான் ஒரு நல்ல பௌத்தனா?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். ‘இல்லை’ என்ற அவனது மனச்சாட்சியின் பதில் அவன் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. ‘நான் ஏன் இப்படிச் சாக்கடைப் புழுவாய் மாறினேன்? நாட்டுப்பற்றா? மதவெறியா? இல்லை மொழிவெறியா?’
எதுவுமே இல்லை! குடும்பத்தின் வறுமை தான் அவனை இராணுவத்தில் தொழில் புரிய இழுத்து வந்தது என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்குப் பள்ளிப் படிப்பு அதிகம் வரவில்லை. அவனது கட்டுமஸ்தான உடம்பிற்கு இந்தத் தொழில் ஒன்றுதான் அந்த நேரம் ஏற்றதாக இருந்தது. எனவே தான் வேறுவழியில்லாமல் இராணுவத்தில் சேர்ந்தான். அவன் இராணுவத்தில் சேர்ந்த காலத்தில் தினமும் பயிற்சி செய்வதுஇ சாப்பிடுவதுஇ தூங்குவதுஇ போன்றவை தான் இராணுவத்தின் தொழிலாக இருந்தது. எப்போதாவது எங்கேயாவது மழை வெள்ளமென்றால் அங்கே போய் மக்களுக்கு உதவி செய்வார்கள். அவ்வளவுதான். எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் இப்படித்தான் அவனது இராணுவ வாழ்க்கை ஆரம்பமானது.
•Last Updated on ••Tuesday•, 01 •December• 2015 21:08••
•Read more...•
••Monday•, 23 •November• 2015 00:01•
??- சுதாராஜ் -??
சிறுகதை
அவள் அங்கு எப்போது வந்தாள் என்பது யாருக்கும் தெரியாது. எப்படி வந்தாள் என்றும் தெரியாது. தானாகவே வந்தாளா அல்லது யாராவது கொண்டுவந்து சேர்த்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. அவள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவள், எதற்காக அங்கு வந்து சேர்ந்தாள் என்றுகூட யாரும் அறிய முற்பட்டதில்லை.
அங்கு நிர்மாணிக்கப்படும் அந்தப் பெரிய கட்டடத்தொகுதியை ஒட்டியே அவளது குடிமனை இருந்தது. கட்டுமானத்திற் பணிபுரியும் பல தொழிலாளர்கள் மதியச் சாப்பாட்டிற்காக அங்குதான் வருவார்கள். அவள் முகம் சுளிக்காது எல்லோருக்கும் சமைத்துப் போடுவாள். மதியச் சாப்பாடு மட்டும்தான் அவள் தருகிறாளா அல்லது இரவுப் போசனமும் கொள்ளமுடியுமா என்பதற்கும் சரியான விளக்கம் இல்லை. அதை அவள்; ஒரு சேவையாகக் கருதிச் செய்கிறாளா அல்லது தன் ஜீவனோபாயத்திற்காகவா என்பதும் தெளிவில்லாமலிருந்தது. அதுபற்றி யாரும் அலட்டிக்கொண்டதில்லை. சாப்பாடு கிடைக்கிறது.. அதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்?
அந்தக் கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கின என்று தெரியவில்லை. அது இனி எப்போது முடிவுறும்; என்பதையும் ஊகிக்கமுடியாதிருந்தது. அங்கு எண்ணற்ற தொகையினர் பணி புரிந்தார்கள். சிலரது பணிக்காலம் முடிந்து விலகிப் போவதும், புதியவர்கள் வந்து சேர்வதும் நடைமுறையிலிருந்தது. வேலையில் ஈடுபட்டிருக்கும்போதே சிலர் இறந்தும்போயிருக்கிறார்கள். இறப்பதற்கு ஒரு காரணமா தேவைப்படுகிறது? விபத்துக்கள் நேரலாம்.. அல்லது கொல்லப்படலாம்.. அதெல்லாம் சகஜமான சங்கதிதானே?
அங்கு இளைஞனொருவன் புதிதாக வந்து சேர்ந்தான். மேற்பார்வையாளனாகவோ பொறியியலாளனாகவோ ஒரு பதவிக்கு நியமனம் பெற்று வந்திருந்தான். பெரிய பதவிக்கு வந்தவன் உயர்மட்ட செல்வாக்கு உள்ளவனாகத்தானிருப்பான் என ஏனையவர்கள் கருதினார்கள். அதனால் அவனுக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செய்வதற்குத் தங்களுக்குள் போட்டி போட்டார்கள். தன்னை யாரென்று அறியாத அவர்களது செய்கை அவனுக்கு அவர்கள்மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது.
•Last Updated on ••Monday•, 23 •November• 2015 07:47••
•Read more...•
••Tuesday•, 17 •November• 2015 21:17•
??- சுதாராஜ் -??
சிறுகதை
கேட்டுக்கேள்வியில்லாமல் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். அப்போது நான் வீட்டு முன் விறாந்தையிலிருந்தேன். மதியச் சாப்பாட்டின் பின்னர் சற்று ஓய்வாக சாய்வுக் கதிரையில் அமர்வது வழக்கம். அதை ஓய்வு என்றும் சொல்ல முடியாது. யோசனை... கவிழ்ந்துகொண்டிருக்கும் கப்பலை எப்படி மீட்டெடுப்பது என்ற யோசனை..!
யோசனை தடைப்பட.. வருபவன் யாராக இருக்கும் என்று எண்ணம் ஓடியது. முன்பின் அறிமுகமானவன் போலத் தெரியவில்லை. மெலிந்த தேகம். கறுப்பு லோங்சும் வெள்ளை சேர்ட்டும் அணிந்திருந்தான். யாராவது சலுகை விலையில் பொருட்களை விற்பவர்களாக இருக்குமோ? ஆனால் அவனது கையில் ஏதும் பொருட்களுமில்லை.. களுத்துப்பட்டியுமில்லை! நடையில் ஒரு அவசரம் தெரிந்தது.. விறுவிறு என வந்தான். பார்த்துக் கொண்டிருக்கும்போதே வீட்டுக்குள்ளும் நுளைந்தான்.
நானுண்டு என் பாடுண்டு என்றிருந்த என்னைப் பார்த்து உறுக்குவதுபோலக் கேட்டான்…
“நீங்கதானே சுந்தரபாண்டியன்?” (அதுதான் எனது பெயர்)
ஒருவேளை ஊரிலிருந்து வருகிற யாராகவோ இருக்கலாம். இப்படி வருகிற யாரிடமாவது அம்மா கடிதமோ கற்கண்டோ கொடுத்துவிடுவாள். ஒரே ஒரு கடிதத்தைத் தருவதற்காக இவ்வளவு தூரம் வந்தவனுக்கு ஆத்திரம் ஏற்படுவது இயல்புதான். பயணக் களைப்பாயிருக்கும்.. அதுதான் எரிந்து விழுகிறான். நான் அவனைச் சமாதானப்படுத்தினேன்.. “அவசரப்படாமல் இதிலை இருங்கோ..தம்பி..! (கதிரையைக் காட்டியவாறே..) மத்தியானம் சாப்பிட்டிட்டீங்களோ..?”
ஆளுக்குப் பசிபோலிருக்கிறது.. எரிச்சலுக்கு அதுவும் ஒரு காரணம்தான். அவனது முகத்தோற்றமே அதைக் காட்டியது. எனினும் அவனுக்குச் சாப்பாடு போடும் உத்தேசம் எனக்கு இல்லை! சும்மா அப்படிக் கேட்டு அவனது சூட்டைக் கொஞ்சம் குறைக்கலாமே என்ற நோக்கம்தான்.
“நான் இங்க சாப்பிட வரயில்ல..” - வெடித்துப் பேசினான்.
“தம்பி.. நீங்கள்.. ஆர்..? எனக்குத் தெரியயில்ல.. எங்கயிருந்து வாறீங்கள்?
“காட்டிலையிருந்து..!”
•Last Updated on ••Tuesday•, 17 •November• 2015 21:22••
•Read more...•
••Monday•, 16 •November• 2015 22:11•
??- பரதன் நவரத்தினம் -??
சிறுகதை
'ஹலோ "
"குலன் இருக்கிறாரா?"
"கதைக்கிறன்"
"குலன் நான் இங்க பிரேம்" ...
"பிரேம்" ?
"பெல்ஜியம் பிரேம் ".
"சொல்லும் பிரேம் எப்படி இருக்கின்றீர் ? இப்பவும் பிரசல்ஸ் தானே " ?
"பிரேசெல்சில் இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு கிராமத்திற்கு இடம் மாறிவிட்டேன் ,இப்ப கனடாவில் தான் நிற்கின்றேன் .சின்ன உதவி ஒன்று தேவை .யாரிடம் கேட்கலாம் என்ற போது உம்மிட நினைவுதான் வந்தது அது தான் போன் அடித்தேன்".
'எப்படி தொலைபேசி இலக்கம் கிடைத்தது ,என்ன விஷயம் சொல்லும் ?"
"சும்மா கூகிளில் உமது பெயரை போடவே தொலை பேசி இலக்கம் வந்துவிட்டது .நான் டொராண்டோ ஹில்டனில் நிற்கின்றேன் .நேரில் வந்து சந்தித்து கதைத்தால் நன்றாக இருக்கும் ".
"ஏதும் பெரிய பிரச்சனையோ ?"
•Last Updated on ••Wednesday•, 18 •November• 2015 21:12••
•Read more...•
••Wednesday•, 23 •September• 2015 20:58•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
- வீரகேசரி நிறுவனம் ஒருமுறை இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவாகக்குறுநாவல் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் 87/88 காலகட்டமென்று நினைக்கின்றேன். என்னிடம் அது பற்றியுள்ள போட்டோ பிரதியில் திகதி விடுபட்டுப்போயுள்ளதால் அது பற்றி உடனடியாக நிச்சயமாகக்கூற முடியாதுள்ளது. அந்தபோட்டிக்கு அனுப்பப்பட்ட கதையிது. சிறுகதையாகக்கணிக்கப்பட்டு பிரசுரத்திற்குரியதாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையிது. நடுவர்களாக சிற்பி சரவணபவன் ,செங்கை ஆழியான் மற்றும் செம்பியன் செல்வன் ஆகியோரிருந்தனர். அக்காலகட்டத்து மனநிலையினைப் பிரதிபலிக்கும் எழுத்தென்பதால் ஒரு பதிவுக்காக இச்சிறுகதை பிரசுரமாகின்றது. -
1.
வெளியிலோ இலேசாகத்தூறிக்கொண்டிருந்த மழை பெருக்கத்தொடங்கிவிட்டிருந்தது. புழுதி படர்ந்த செம்மண் சாலைகளிலிருந்து மழைத்தூறல் பட்டதால் செம்பாட்டுமண்ணின் மணம் பரவத்தொடங்கிவிட்டிருந்தது. கோவைப்பழங்களைப்போட்டி போட்டு தின்றபடியிருந்த கிளிகள் மழை பெருப்பதைக்கண்டவுடன் நனைந்த இறகுகளை ஒருமுறை சிலிர்த்துவிட்டு , விண்ணில் வட்டமடித்துவிட்டு, உறைவிடங்களை நாடிப்பறக்கத்தொடங்கின. எங்கோ தொலைவில் பயணிகள் பஸ்ஸொன்று குலுக்கலுடன் இரைந்து செல்லுமோசை காற்றில் மெல்லவந்து காதில் நுழைந்தது. திடீரென அமைதியாகவிருந்த வானம் ஒருமுறை மின்னிவிட்டுப் பயங்கரமாக அதிர்ந்தது. மழை பொத்துக்கொண்டு வரப்போகின்றது. மழைக்காலம் தொடங்கி விட்டது. மழை தொடங்கி விட்டாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். வயிரமென நிற்கும் பாலைகள், கருங்காலிகள், முதிரைகள் கூட ஒருவித நெகிழ்வுடன் நெகிழ்ந்து நிற்கையில் , மர அணில்களோ ஒருவித எக்களிப்புடன் மாரியை வரவேற்று, கொப்புகளில் தாவித்திரியும். மணிப்புறாக்கள், சிட்டுகள், குக்குறுபான்கள்,மாம்பழத்திகள், காடைகள், கவுதாரிகள், காட்டுக்கோழிகள், ஆலாக்கள், ஊருலாத்திகள், கொண்டை விரிச்சான்கள், மயில்கள், கொக்குகள்,நாரைகள்.. பறவைகள் யாவுமே புத்துணர்வுடன் மாரியை வரவேற்றுப்பாடித்திரிகையில் ... கட்டுமீறிப்பாய்ந்து பொங்கித்ததும்பும் குளங்கள், விரால் பிடிப்பதற்காக மீனவர்களுடன் போட்டிபோடும் வெங்கணாந்திப்பாம்புகள் உண்ட அசதியில் தவிக்கும் காட்சிகள்.. மரக்கொப்புகளில் வானரங்களுக்குப் போட்டியாகத்தாவிக்குளங்களில் பாயும் சிறுவர்கள்... மாரி என்றாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். சொதசொதவென்று சகதியும், இலைகளுமாகக் கிடக்கும் காட்டுப்பிரதேசங்களில் மெல்லப்பதுங்கிப்பாயும் முயல்கள், அசைவற்று நிற்கும் உடும்புகள், கொப்புகளோடு கொப்புகளாக ஆடும் கண்ணாடி விரியன்கள்... இம்மண்ணினழகே தனிதான்.
மழையுடன் போட்டி போட்டபடி 'ஓ..வ்..வ்..'வென்று காற்று வேறு பெரிதாக அடிக்கத்தொடங்கிவிட்டிருந்தது. வானம் இருண்டுபோய் கன்னங்கரேலென்று பெரும் பிரளயமே வந்து விடுவது போன்றதொரு தோற்றத்தில் அந்தப்பிரதேசம் மூழ்கிக்கிடக்கின்றது.
•Last Updated on ••Thursday•, 24 •September• 2015 03:05••
•Read more...•
••Saturday•, 12 •September• 2015 20:01•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
நடேசன்,பள்ளி விடுமுறையிலே வளர்ந்த பிள்ளைகளுடன் இந்த முறை 'டொராண்டோ'வைப் பார்க்க வந்திருக்கிறான். விஜயன் வீட்டிலே,அவனுடைய அண்ணன் ரவியும், அவன் இரு பிள்ளைகளும், அக்கா ரதியும் (அவள் மகன் கதிர்,"அம்மா நாளைக்கு வேலையிலே தூங்க வழிய நேரிடும் "என இறக்கி விட்டுப் போய்யிருக்கிறான்) பால்ய வயதில் குடும்பத்தில் ஒருத்தனாக அயலிலே இருந்த… யூரோப்பிலிருந்து வந்திருக்கிற நடேசனை சுமார் 25,30 வருசத்திற்குப் பிறகு சந்திக்க வந்திருக்கிறார்கள் .
அவன் தரப்பில் ,மனைவி... தரப்பில் சில உறவினர்கள் இங்கே இருக்கிறார்கள் தான்.யூரோப்பை விட வெளிநாடுகள் என்ன பெரிதாக வித்தியாசமாக இருக்கப் போகிறது என.. தாயகமான ஈழமாநிலத்தையே முக்கியமாக பார்க்க வேண்டியவர்கள் என அழைத்துச் செல்கிறவன். ‘இறுதி யுத்தம்’ என சிறிலங்காவில் மனிதப் படுகொலைகள் மோசமாக நடந்த போது எல்லா நாடுகளிலும் அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. வல்லரசு நாடுகள் பாகிஸ்தானில் காலூன்றியது போல சிறிலங்காவிலும் காலூன்றி விட்டன.நிறைகூடிய குண்டுகள், வகை தொகையின்றி சிதறி வெடிக்கும் குண்டுகளை எல்லாம் சிறிலங்காபடையினர் சரிவர கையாளுமா? என்பதே சந்தேகம், சிறிலங்கா அரசின் அனுமதியில்லாமல் கூட,தன்னிச்சையாகவும் ,போடப்பட்டே இந்த மனிதப் பேரவலம் நடந்தன. ஈழத்ததமிழர்கள் மேலும் அதே பாலஸ்தீனர்களின் தலைவிதி கவிந்து விட்டது.
பெரியநாடுகளே போரை நடத்தியது போன்ற தோற்றம். நைஜிரியா அரசாங்கமே 'பொக்ககராம் போராட்டக்குழுவிற்கு அமெரிக்காவை ஆயுதங்கள் விற்க வேண்டாம்'என கூறுகிறது.சிறிலங்காவிடம் 'கொத்துக் குண்டுகளை பாவிக்கும்படி,அமெரிக்கா கூறியதை விக்கிலீக்ஸ் 'லீக்' பண்ணியிருக்கிறது. அமெரிக்காவின் வியாபாரமே இரண்டு பக்கமும் ஆயுதங்கள் விற்பது தானே..போல இருக்கிறது. இரண்டு உலகப் போர்களிலும் அதிகளவு வியாபாரம் பார்த்தது அமெரிக்கா என்றே சொல்லப்படுகிறது.
•Last Updated on ••Saturday•, 12 •September• 2015 20:04••
•Read more...•
••Saturday•, 08 •August• 2015 22:55•
??- ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா -??
சிறுகதை
வீடியோக் கமெராவின் மிகையான வெளிச்சத்திலும் அதிலிருந்து வரும் வெப்பத்திலும் என்னுடைய முகம் வியர்க்கிறது, கண்கள் கூசுகின்றன. வீடியோக் கமெராக்காரரினதும், படமெடுப்பவரினதும் அறிவுறுத்தல்களுக்குத் தக்கதாகத் திரும்பித் திரும்பி அலுத்துப் போய்விட்டது.
“நிரோ வடிவாச் சிரியும் பாப்பம். உதென்ன சிரிப்பு,” இது மாமியின் விமர்சனம். எனக்கு அழ வேணும் போல் இருக்கிறது. பிறகெப்படி நெடுகப் பொய்யுக்குச் சிரிக்கிறது? அதை விட சிரிக்கிறதாய் பாசாங்கு பண்ணிப் பண்ணி வாய் ஒரு பக்கம் நோகிறது.
“பெரிய ஹோல், குறைஞ்சது முன்னூறு பேர், பூ ஊஞ்சல்…, உதுகளைக் கேட்கக் கேட்க எனக்கு குமட்டுது. பிளீஸ் அம்மா எனக்கு உது ஒண்டும் வேண்டாம்,”
“நிரோ, நீ எங்களுக்கு ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளை. உன்ரை கலியாண வீட்டைப் பாக்க நாங்கள் இருப்பமோ இல்லையோ... அதைவிட நீ ஆரை, எப்படிக் கலியாணம் கட்டுவியோ ஆருக்குத் தெரியும். இதை எங்கடை ஆசைக்குச் செய்து பாக்க வேணும். அதோடை எல்லோரும் செய்யேக்கை நாங்கள் செய்யாட்டி அது எங்களுக்கு மரியாதை இல்லை,”
“இயற்கையிலை நடக்கிற ஒரு விஷயத்தை ஏன் இப்படிப் பெரிசுபடுத்திறியள், எல்லாரும் தான் சாமத்தியப்படுகினம்; உங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கேல்லைத் தானே.”
•Last Updated on ••Saturday•, 08 •August• 2015 23:05••
•Read more...•
••Monday•, 03 •August• 2015 05:43•
??- நடேசன் -??
சிறுகதை
கடல் சூழ்ந்த மல்லிகைத்தீவில் வடமேல் பருவக்காற்றால் மழை மேகங்கள் கருக்கட்டி இடியுடன் பயங்கரமான மழையும் பெய்தது.மக்களுக்கு மழைக்காலம் எப்பொழுதும் ஆனந்தமானது. பத்துமாதம் எரிக்கும் கோடை, இரண்டு மாதங்கள் விராடதேசத்தில் ஒளிந்த பாண்டவர்களாக தலைமறைவாகும். வற்றிய குளங்கள், நிலம் தெரியும் கிணறுகள், புழுதி சிந்தும் நிலங்கள் எல்லாம் நெடுநாளாக தாகத்துடன் பாலைவனத்தை கடந்துவந்த வழிப்போக்கனைப்போல் நீர் வேண்டிக் காத்திருந்தன.
வங்காள விரிகுடாவில் காற்றமுக்கம் என்று வானொலியில் கேட்டபோது அசட்டையாக இருந்துவிட்டார்கள். மழை, வேறு இடங்களுக்கு காற்றால் எடுத்து செல்லப்படுவதை பலவருடங்களாக அறிந்தவர்கள் அவர்கள். ஏற்கனவே கடந்த இருவருடங்கள் திருமணவீட்டு பன்னீராக மாரிகாலம் ஊரைக் கடந்து சென்று விட்டது.
அதிகாலையில் மேற்கு வானில் தொலைதூரத்தில் கருமேகம் தோன்றி கடல் நீரை குழாய்போட்டு இழுத்தபோது, இது மழைக்கான அறிகுறி என நினைத்தாலும் எதுவும் செய்ய நேரமில்லை. மழை பொய்த்தால் கூரைகளை மேய்வதற்கு தவறியவர்கள். பிடித்த மீன்களை உப்புபோட்டு மதியம் காயவைக்கலாம் என்றிருந்த மீனவர்கள் சுதாரித்தாலும் எதுவும் செய்யமுடியவில்லை.
மதியத்தில் வந்த மழை விடாமல் பெய்தது.
ஊரில் எல்லோருக்கும் ஆனந்தம் பெருகியது. கடந்த இரண்டு வருடங்கள் நல்ல மழையில்லாமல் பயிர்கள் வைக்காதவர்களில் சில அவசரக்காரர்கள், இந்த வருடம் பயிரிடமுடியும் என்ற சந்தோசத்தில் தரிசான தோட்டங்களிலும் மற்றும் வீட்டுக்கு பின்புறத்திலும் நனைந்தபடி மாலையில் மண்வெட்டியால் நிலத்தை கொத்தத் தொடங்கினர். பெய்த மழையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
•Last Updated on ••Monday•, 03 •August• 2015 05:49••
•Read more...•
••Saturday•, 25 •July• 2015 05:29•
??- குரு அரவிந்தன் -??
சிறுகதை
' என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண் முன்னாலேயே…’
இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது.
அது கொழும்பு துறைமுகம்…
ஒவ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது நங்கூரி என்ற பெயர் பெரிதாக அந்தக் கப்பலில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்ததை அவதானித்தேன். 1983ம் ஆண்டு யூலை மாதம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவில் இருந்து நல்லெண்ண விஜயத்தில் வந்திருந்தது. நீண்ட நாட்களின்பின் சிரித்த முகத்தோடு ‘வாங்க வாங்க’ என்று கப்பலின் வாசலில் நின்றவர்கள் எங்களை அன்போடு வரவேற்றார்கள். அவர்களின் சிரித்த முகத்தையும், அந்த அன்பான உபசரிப்பையும் பார்த்ததும் மருண்டு போயிருந்த எங்கள் மனசுக்குச் சற்று ஆறதலாக இருந்தது மட்டுமல்ல, பாதுகாப்பான ஒரு இடத்திற்கு வந்துவிட்ட நிம்மதியும் அந்தக் கணமே ஏற்பட்டது. சொந்த மண்ணிலேயே அகதியாக்கப்பட்ட துரதிர்ஷ்டத்தை நினைத்தபடி அருகே நின்ற அக்காவின் முகத்தைப் பார்த்தேன், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாய் ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்ற கவலை அவள் முகத்தில் படர்ந்து கிடந்தது. கடந்த ஒரு வாரமாக நடந்த கலவரத்தின் பாதிப்பால், உயிர் தப்பினால் போதும் என்ற பயத்தில் அக்காவின் பாதியுயிரே போயிருந்தது. கப்பலின் கீழ்த்தளத்தில் வரிசையாக இருந்த படுக்கைகளில் அக்காவிற்கு ஒரு படுக்கையை ஏற்பாடு செய்து கொடுத்து, நிம்மதியாகப் படுக்கச் சொன்னேன். தூக்கமில்லாத இரவுகளாலோ என்னவோ படுத்த உடனேயே அக்கா அயர்ந்து தூங்கிவிட்டாள்.
•Last Updated on ••Saturday•, 25 •July• 2015 05:53••
•Read more...•
••Friday•, 24 •July• 2015 05:13•
??பேராசிரியர் கோபன் மகாதேவா??
சிறுகதை
இருபதாம் நூற்றாண்டின் மத்திய இரு தசாப்பத்தங்களின் காலம். ஈழத்தின் கைதடி-நுணாவில் கிராமத்தில் யாழ்-கண்டி நெடுஞ்சாலையின் எட்டாங் கட்டையடியில் ஒரு வீதியோரக் கல்வீடு. ஊரார் அதை வெற்றிப் பரியாரியார் வீடென அழைப்பர்.
அவர் ஒரு பிரபலமான சித்த ஆயுள்வேத வைத்தியர். பெயர், இராமநாதர் அப்பா வெற்றிவேலு. மனைவி, கந்தர் வேலாயுதர் நாகமுத்து. மக்கள் இருவர். மகன் கந்தசாமி. மகள் இரத்தினம். இவர்களுடன் தன்மனைவியை 1938-இல் இழந்த கோபாலரும்; மகன்மார் தில்லை, துரை, சின்னத்துரை என வீட்டில் அழைக்கும் பையன்களும் வாழ்ந்தனர். கோபாலர், நாகமுத்துவின் அண்ணர். அவரின் மனைவி (இறந்த பொன்னம்மா) வெற்றியரின் தங்கை. இரு மாற்றுச்-சடங்குகளின் மூலம் எண்மரும் பிறப்பிலேயே இனத்தவர்கள். ஒன்றாகப் பல ஆண்டு வாழ்ந்து வந்தனர்.
வெற்றியர் தன்னுடைய றலி சைக்கிள் வண்டியில் உழக்கிச் சென்று சாவகச்சேரி நகரத்தின் பழைய சந்தையில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து வாரத்தில் ழூன்று நாட்கள் முற்பகலில் தன் வைத்தியத் தொழிலை நடத்தி வந்தார். சந்தையில் தன் மதிய உணவை அருந்தி விட்டுப் பிற்பகலில் இடைஇடைக் கிராமங்களில் வதியும் வீட்டு-நோயாளிகளைப் பார்த்துத் தன்னுடன் என்றும் எடுத்துச் செல்லும் மருந்துப் பெட்டியிலிருந்து மருந்தும் கொடுத்து ஆலோசனையும் வழங்கி விட்டுப் பின்னேரம் ஆறுமணிக்கு எல்லாம் வீடு திரும்பி விடுவார். கடுமையான நோயாளிகள், இருவர் இருவராக அவர் வீட்டில் தங்கி வாரக் கணக்கில் வைத்தியம் பெறுவதும் உண்டு. தன் நடை-மருந்துகளுக்கு மட்டும் நியாயமாகப் பணம் முன்னரே கேட்டுப் பெறுவார். தன் பெட்டிப்-பேதி மருந்துகள், பயணம், ஆலோசனை முதலிய சேவைகளுக்கு நோயாளர் தாமாக விரும்பிக் கொடுப்பதையே பெற்றுக் கொள்வார். அத்துடன் வீட்டில் ஒரு பசு, இரு எருதுகள், ஒரு மாட்டு-வண்டிலுடன், குடும்பத்து வயல், தோட்டங்கள், ஒரு மரக்-கடை, சிலநேரம் புகையிலை வியாபாரம் எல்லாம் செய்வார். அவ்வூர் கிராமசபையின் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தினர். மேலும் தன் செலவிலேயே கைதடிநுணாவில்-மட்டுவில்தெற்கு கிராமங்களுக்கு ஒரு ஆரம்ப பள்ளியை நிறுவி, நடாத்தியும் வந்தார். இந்த எல்லா வேலைகளுக்கும் வீட்டில் உள்ள எல்லோரும் நாளாந்தம் இரவுபகலாக உதவிசெய்து வந்தனர். கோபாலர் மட்டும், அவ்விரு கிராமங்களுக்கென ஒரு கூட்டுறவுச் சங்கத்தை நிறுவி நடாத்தி வந்து, காலை சென்று இரவு திரும்பி, தங்கை கொடுக்கும் உணவை அருந்திப் படுத்துவந்து, தன் மனைவி பிரிந்த ஆறாம் ஆண்டில் கசநோயால் இறந்துவிட்டார்.
•Last Updated on ••Friday•, 24 •July• 2015 05:16••
•Read more...•
••Friday•, 24 •July• 2015 05:09•
??- தமிழினி ஜெயக்குமரன் -??
சிறுகதை
அது ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்று நான்காம் ஆண்டு புரட்டாதி மாதம் முதல் வாரமாயிருந்தது. கிளாலிக் கடல் நீரேரியின் கரையில், அவளைச் சுமந்து வந்த படகு தரை தட்டிய போது பின்னிரவாகியிருந்தது. ‘ஊ…ஊ’ வென்று இரைந்தபடி தேகத்தின் மயிர்க் கால்களையும் கடந்து ஊசியாக உள்ளிறங்கியது கனத்த குளிர் காற்று.
அவள் அணிந்திருந்த மெலிதான நூல் சேலையின் முந்தானையால் தலையையும் உடம்பையும் இழுத்து மூடியிருந்தாள். எலும்புக்கு தோல் போர்த்தியது போன்றிருந்த அந்த உடம்பு ‘கிடு கிடு’ வென நடுங்கிக் கொண்டேயிருந்தது.
குச்சிகளைப் போல நீண்டிருந்த கைகளால் படகின் விளிம்பை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தாள். என்றுமில்லாதவாறு அவளது நெஞ்சுக் கூட்டுக்குள் இன்று ‘படக்.. படக்’ அதிகமாக அடித்துக் கொள்வது போலிருந்தது.
இருள் கலைந்திராத அந்த விடிகாலைப் பொழுதில் தனது சுருங்கிப்போன கண்களை மேலும் இடுக்கிப் பூஞ்சியவாறு கரையிறங்கப் போகும் நிலத்தின் அசுமாத்தங்களை ஆவலோடு நோட்டமிடத் தொடங்கினாள் பாக்கியம்மா.
அது ஒரு ‘புளுஸ்டார்’ வகை மீன்பிடிப்படகாக இருந்தது. அதிலே பொருத்தப்பட்டிருந்த பதினெட்டு குதிரை வலுக்கொண்ட என்ஜினின் இயக்கத்தை நிறுத்திய படகோட்டிகள் இருவரும் ‘சளக்’ ‘சளக்’ என சத்தமெழும்படியாக தண்ணீருக்குள் குதித்து இறங்கினார்கள்.
•Last Updated on ••Friday•, 24 •July• 2015 05:20••
•Read more...•
••Tuesday•, 07 •July• 2015 23:48•
??– தமிழினி ஜெயக்குமாரன் -??
சிறுகதை
‘மலரினி ஓடிக் கொண்டிருந்தாள். வேகமாக மிக மிக வேகமாக. பூமி அவளது கால்களுக்கு கீழே ஒரு மின்சார ரயிலின் வேகத்தில் பின்னோக்கி நகர்வதைப் போலிருந்தது. நிலத்தைத் தொட்டும் தொடாமலும் உதைத்தெழும்பும் ஒரு மானின் லாவகத்துடன் அவளது கால்கள் அசைந்து கொண்டிருந்தன. பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டு காட்டுப் பாதைகளையும் கட்டாந்தரைகளையும் கடந்து காற்றிலே பறக்கும் வேகக் குதிரையாகயாகவே மாறிவிட்டிருந்தாள் அவள்.
ஆஹா… எத்தனை இனிமையானதொரு அனுபவம் என எண்ணுவதற்குள்ளாகவே அவளது உடல் பாரமாகக் கனப்பதைப் போலிந்தது. ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாதபடி பெரும் பாராங்கல்லொன்றுடன் இறுக்கப் பிணைத்து கட்டி விட்டதைப் போல… “ஆ….ஐயோ…அம்மா” உடம்பு முழுவதையும் கொத்திக் கூறு போடுமாப் போல மரணவலி கிளர்ந்து எழும்பியது. கண்களைத் திறக்க முடியாதபடி இமைகள் ஒட்டிக் கொண்டுவிட்டன போல அந்தரிப்பாயிருந்தது. நாசி நிறையக் குளிர்ந்த காற்றை உள்ளிழுத்து கொஞ்சமாவது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றவளுக்கு ‘குப்’ பென்று நுரையீரல் வரை நிறைந்த இரத்த வெடில் நாற்றம் அடி வயிற்றில் குமட்டியது.
“இங்க ஒரு பிள்ளை சத்தியெடுக்கிறா என்னண்டு கவனியுங்கோ”
“அவாக்கு இப்பத்தான் மயக்கம் தெளிஞ்சிருக்குது”
“தங்கச்சி… இப்ப உங்களுக்கு என்ன செய்யுது, அப்பிடியே ரிலாக்ஸா படுத்திருங்கோ. உங்களுக்கு பெரிசா ஒரு பிரச்சனையுமில்லை, கையை ஆட்டிப் போடாதேங்கோ மருந்து ஏறிக் கொண்டிருக்குது.” கழுத்தில் ஸ்டெதஸ்கோப் கொழுவியிருந்த போராளிப் பெண் அவளது தலையை இதமாக தடவி விட்டார். அவளுக்கு சட்டென அந்தக் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. நெஞ்சு விம்மலெடுத்துக்குலுங்கியது.
•Last Updated on ••Tuesday•, 07 •July• 2015 23:56••
•Read more...•
••Monday•, 06 •July• 2015 21:11•
??- ’அநாமிகா’ (லதா ராமகிருஷ்ணன்) -??
சிறுகதை
”ஏறிக்கொள்ளுங்கள்” என்றவனுக்கு நன்றி கூறியவாறே மூட்டை முடிச்சோடு முண்டியடிக்க முயன்றும் முயலாமலுமாய் உள்ளே ஏறி பதினான்காம் எண் இருக்கைப் பக்கம் போனபோது அங்கே ஏற்கெனவே ஒருவர் தொந்தியும் தொப்பையுமாகப் பொருந்தியமர்ந்திருந்தார்.
“ஸார், இது என்னுடைய இடம்.”
“மன்னிக்கவும், இது என்னுடையது.”
அவரவருடைய இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் உலகிலேயே அதிசிரமமான காரியமாக இருக்கும் என்று தோன்றியது. ’அவரவர் இடம்’ என்பதிலும் அவரவருக்கு விதிக்கப்பட்ட இடங்கள், வாய்த்த இடங்கள், அவரவர் விரும்பிய இடங்கள் என்று எத்தனை பிரிவுகள்…. விதிக்கப்பட்டதற்கும் வாய்த்ததற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு ‘நிச்சயம் ஏதோ வேறுபாடு இருக்கிறது’ என்பதாக மனம் இடக்காகக் கூறியது. அப்படி வேறுபாடு இருக்கும் பட்சத்தில் விதிக்கப்பட்டதும் சரி, வாய்த்ததும் சரி, விரும்பிய – விரும்பாத என்பதாக வேறு சிலவாகவும் கிளை பிரியும்…..
“என்ன ஸார், அங்ஙனேயே நிக்கிறீங்க? இந்த வண்டி தானே நீங்க?”
“ஆமாம், ஆனா இவர் என் இடத்தைத் தன்னுடையதுன்னு சொல்றார்.”
”அதெப்படி? என் இடத்தை நீங்கள் தான் உங்களுடையதென்று சொல்கிறீர்கள்.” உட்கார்ந்திருந்தவர் விறைப்பாகக் கூறினார்.
“அட, யார் இடம் யாருக்கு சாசுவதம் சார்…. அதுவும், ஒரு ஆறு மணி நேரத்துக்குப் போய் எதுக்கு இத்தனை எடக்குமுடக்குப் பேச்சு?” சலிப்பாகத் தத்துவத்தைச் சிதறவிட்டபடியே நடத்துனர் வந்துபார்த்து என் பயணச்சீட்டை ‘டபுள் செக்’ செய்வதற்காய் ஓட்டுநர் இருக்கைப்பக்கம் அமர்ந்திருந்தவரிடம் கொண்டு சென்றார்.
•Last Updated on ••Monday•, 06 •July• 2015 22:24••
•Read more...•
••Thursday•, 25 •June• 2015 19:43•
??- கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -??
சிறுகதை
மாலையானாலே என்ன அடைமழை இது ! என்று சிங்கப்பூரர்களில் பலரும் சலித்துக் கொள்ளுமளவுக்கு இன்று நிலைமை இல்லை.. கருத்த மேகங்களின் சில்லென்று குளிர்ந்த காற்று, ,எப்போது வேண்டுமானாலும் பெய்து விடுவோம் ,என்று பயம் காட்டும் கண்ணாமூச்சி ஆட்டம் இன்று காணாமல் போயிருந்தது. உண்மையிலேயே வானம் பொய்த்துவிட்டது. தினமும் சோவென்று கொட்டிகொண்டிருக்கும் டிசம்பர் மாதத்து அடைமழை போன இடம் தெரியவில்லை. பளீரென்ற மஞ்சள் தகடாய் வானம் அழகு காட்டிக்கொண்டிருந்தது.
அடுத்தமாதம் இமயமலைக்குப் போகும் ஒரு குழுவோடு பயணம் என்பதால், தினமும் நடைப்பயிற்சிக்கு இப்பொழுதே பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. டெல்லிவரை விமானம், அடுத்து, வாகனப்பயணம் தான் என்றாலும் ஆங்காங்கே சிறுசிறு மலைகள்,குன்றுகளின் மேலுள்ள கடவுள்கள தரிசிக்க இந்நடைப்பயிற்சி அத்தியாவசியம் என்று ஏற்பாட்டாளர் வலியுறுத்தியிராவிட்டால், ஒருபோதும் இந்த அப்பியாசத்துக்கு ராஜசேகர் முன் வந்திருக்க மாட்டான். புக்கித்தீமா காட்டில் நடைப்பயிற்சி தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது.ஆனால் இன்றைய நடையின் சுகம் இதுவரை அவன் அனுபவித்தறியாதது . நடக்க நடக்க அவ்வளவு சுகமாக இருந்தது. காற்று என்னமோ கட்டின மனைவியாய், அவனைத் தழுவித் தழுவி மிருதுவாய் உடலுக்குள் ஊடுருவிய சுகத்துக்கு மனசெல்லாம் பஞ்சுப்பட்டாய் பறந்து கொண்டிருந்தது? இரண்டு கைகளையும் நீட்டியபடியே காற்றை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.பரவசத்தில் கிளுகிளுவென்று நெஞ்சின் ரோமக்கால் கூட சிலிர்த்துப்போனது.காற்றுக்கு ஏது வேலி? காற்றை கட்டியணைக்க முடியுமா என்றெல்லாம் அவனால் யோசிக்க முடியவில்லை. காற்று அவனது அனைத்து உணர்வுகளையும் அப்படிக் கவ்வி பிடித்திருந்தது.
•Last Updated on ••Thursday•, 25 •June• 2015 19:59••
•Read more...•
••Monday•, 22 •June• 2015 17:15•
??- ’அநாமிகா’ (லதா ராமகிருஷ்ணன்) -??
சிறுகதை
”டியர் மிஸ். சுதா – பாரதி பாடல்கள் சிலவற்றைக் குறித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதவேண்டியிருக்கிறது. அருங்காட்சியக இயக்குநருக்கு இத்துடன் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறேன். அவர்களிடத்தில் பாரதி பாடல்களின் மூலப்பிரதிகள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். அவருடைய தனிப்பாடல்கள் சிலவற்றை அவர் கையெழுத்தில் உள்ளது உள்ளபடி ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்தனுப்பி உதவ முடியுமா? சிரமத்திற்கு மன்னிக்கவும்.”
_ நேர்மையான எழுத்தாளர் என்று, எழுத்தின் மூலம் அறிந்து, முதியவராகவும், விழித்திறன் குறைந்துகொண்டே வரும் நிலையில் இருப்பவராகவும் உள்ளதை அறிந்து, என்னாலான எழுத்துதவி செய்வதாய் அறிமுகமாகி, பரிச்சய நிலையைக் கடந்த பிறகும் உதவியை அதிகாரமாகக் கேட்கும் உரிமையெடுத்துக்கொள்ளாத உயரிய பண்பு; எத்தனை நெருங்கியவராயிருந்தாலும் ‘take it for granted’ ‘ஆக நடத்தாமலிருக்கும் பெருந்தன்மை எத்தனை பேரிடம் இருக்கிறது? விரல் விட்டு எண்ணிவிடலாம்… அந்தப் பெரிய மனிதரிடம் இருந்தது. உண்மையிலேயே பெரிய மனிதர்தான் நான்கு மாடிகள் மரப்படிகளில் கால்கடுக்க ஏறி, கடிதத்தைக் காட்டி, அனுமதி பெற்று, பாரதியின் கவிதைகளடங்கிய நோட்டுப்புத்தகத்தை வாங்கிப் பார்த்து, தேவைப்பட்ட கவிதைகளைச் சுட்டிக்காட்டி, ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்துத் தரச் சொல்லி, அவற்றை வாங்கிக்கொண்டுவந்த கையோடு தபாலில் பத்திரமாக அனுப்பிவைத்து…. தவறாமல் நன்றிக்கடிதம் வந்தது. குட்டிக் குட்டி எறும்புகள் வரிசை தவறாமல் சீராகச் செல்வதைப் போன்று அடித்தல் திருத்தல் அற்ற கையெழுத்து! ஆனால், சென்னை வந்த சமயம் அந்த மூலப்பிரதிகளைத் தானும் பார்க்கவேண்டுமென முதுமை மூச்சுவாங்கச் செய்ய, ஆமைவேகத்தில் நகரும் உடம்போடு அந்த மனிதர் என்னுடன் கைத்தடியோடு கிளம்பியபோது எரிச்சலும் கோபமும் ஏற்பட்டது.
•Last Updated on ••Monday•, 22 •June• 2015 18:30••
•Read more...•
••Sunday•, 07 •June• 2015 21:52•
??- ‘அநாமிகா’ -??
சிறுகதை
கற்றது கையளவு; கல்லாதது கடலளவு…. பழமொழி சரியா, தவறா – இந்தக் கேள்வி அவசியமா, அனாவசியமா – அவசியம் அனாவசியமெல்லாம் highly relative terms….. எனவே, இந்த ஆராய்ச்சிக்குள் இப்பொழுது நுழையவேண்டாம்….. பின், எப்பொழுது? எப்பொழுது இப்பொழுது….? இப்பொழுது எப்பொழுது…. இப்பொழுது இப்போது – எது ‘அதிக’ சரி….? எப்போது, எப்போதும்…. ஒரு ‘ம்’இல் எத்தனை அர்த்தமாற்றம்….
ஹா! நினைவுக்கு வந்துவிட்டது. ஒரு பிறவிகளிலான பல பிறவிகளாய் நீண்டுபோகும் வாழ்க்கையில் நாலாம் வயது நிகழ்வுகள் இந்த நாற்பத்திநாலாம் வயதின் நினைவில் மீண்டும் தட்டுப்படுவதேயில்லை என்றாலும் நேற்று முன் தினம் நடந்ததுகூட நினைவிலிருந்து நழுவப் பார்ப்பது உண்மையிலேயே கொடுமைதான். ‘கொடுமை’ என்ற வார்த்தையை விட ‘வன்முறை’ கூடுதல் சிறப்புவாய்ந்ததாக இருக்கக்கூடுமோ….. கூடலாம்…. ஆம் என்றால், எடைக்கல் எது? அளப்பவர் யார்? குறைவின், கூடுதலில் நிர்ணயகர்த்தா அல்லது அவர்களின் பன்மை யார் யார்….? சே, அங்கே நிர்ணயிக்கப்பட்டதுபோல், உண்மையிலேயே பேதையாக இருந்தால் ( மனதில் அடிக்கடி ஒரு ‘குதிரைவால்’ பின்னல் போட்ட குட்டிப்பெண் அரங்கேறியவாறு இருப்பதுண்டு என்றாலும்) அது நிச்சயம் ஒரு blessing in disguise ஆகத்தான் இருக்கும் என்று படுகிறது.
•Last Updated on ••Monday•, 08 •June• 2015 05:33••
•Read more...•
••Friday•, 05 •June• 2015 22:49•
?? - கடல்புத்திரன் -??
சிறுகதை
குமரனோடு படித்து,எ.லெவல் படிக்க வேறு பள்ளிக்கூடம் சென்று விட்ட செல்வனின் அக்கா, பஸ்ஸிற்கு நிற்கின்ற போது, மீன் சந்தைக்கு அம்மாவோடு போகின்ற போது,தெய்வம் கொழுப்பு மெத்திப் போச்சுது போல மோட்டர் சைக்கிள்ளை அவளுக்கு கிட்டவாக விட்டு எதையாவது சொல்லி தனகுகிறான். இதை கொஞ்ச நாளாய்க் குமரன் கவனித்துக் கொண்டே வருகிறான்.
தெய்வம்,ஒரு பிரபலமான சண்டியனின் தொகை வாரிசுகளில் ஒருத்தன்.ஏற்கனவே திருமணமாகி ஆசைக்கு என்றும் ,ஆஸ்திக்கு என்றும் பிள்ளைகள் இருக்கிற போதிலும், பக்கத்துக் கிராமத்திலிருந்து இன்னொருத்தி மேலும் , காதல் வயப்பட்டு ,கிளப்பிக் கொண்டு வந்து மல்லிகை கிராமத்தின் ஒருவனாக வாழ்கிறவன். அவளும் காதல் வயப்பட்டு அவனோடு வந்வள் தான். இவன் ஒன்றும் பெரிய ரவுடி கிடையாது.சகோதரர் மத்தியிலே இவன் ஒருத்தன் தான் ஒ.லெவல் வரைக்கும் படித்தவன் கூட.அப்பன் வட்டிக்கு காசு கொடுக்கிறவன்,வாகனம் பழக்குகிறவன் ..என பல தொழில்களை வைத்திருக்கிறவன்.அதில் ஒன்றிலே இவனும் வேலை பார்க்க காலையிலே மோட்டர் சைக்கிளிலில் நகரத்திற்குப் போய் விடுவான்.
•Last Updated on ••Friday•, 05 •June• 2015 23:26••
•Read more...•
••Tuesday•, 02 •June• 2015 17:03•
??-கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -??
சிறுகதை
திடீரென்று மருத்துவர் சுவா அவளை அழைத்தது ஆச்சரியமாக இருந்தது . வெளியிலென்றால் அவரது அப்பாயிண்ட்மெண்டுக்கு காத்திருக்கவேண்டும். ஆனால் இன்று அவர் வரும் நாள் என்றறிந்தும் இவள் அலட்டிக் கொள்ளாமலிருந்ததற்குக் காரணமிருந்தது. . இப்பொழுது புறப்பட்டால் தான் சுலமானைப் போய் பார்த்து சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்துவிட்டு, இவள் ஜோகூர் சுங்கச்சாவடிக்கு போய், அங்கிருந்து சிங்கப்பூருக்குப் போக சரியாக இருக்கும்.
மருத்துவர் சுவா இந்த திருமணத்துக்கு முழு ஆதரவு தரவில்லை. இது மருத்துவமனை அல்ல. காப்பகம் தான். என்றாலும் இந்த வியாதிக்கு சட்டென்று ஒரு முடிவுக்கும் வர இயலாததற்கான காரணத்தை மருத்துவர் இவளுக்கு விளக்கியாயிற்று.அதற்கு இம்மியும் மாற்றுக் குறையாது சுமித்ரா, தன்னுடைய கருத்தின் நியாயம் பற்றி, அதைவிட எதிர்பார்ப்போடு விளக்கினாள்
“ சோ, திருமணம் இன்னும் ஒரு வாரத்திலா? “ .மருத்துவரின் புன்னகை ஏனோ இவளுக்கு ரசிக்கவில்லை. ..கடந்த பத்தாண்டுகளாக இந்த காப்பகத்துக்கு வரும் இவளுக்கும் மருத்துவர் சுவாவுக்கும் நல்ல நட்பு இருந்தது. ஆனால் இப்போது சில நாட்களாக அப்படியில்லை.
•Last Updated on ••Thursday•, 25 •June• 2015 20:00••
•Read more...•
••Thursday•, 21 •May• 2015 02:05•
??- தமிழினி ஜெயக்குமாரன் -??
சிறுகதை
- தமிழினி ஜெயக்குமாரன் தன் கடந்த கால போராட்ட அனுபவங்களை மையமாக வைத்து அண்மைக்காலமாக எழுதும் கவிதைகளினூடு ஈழத்தமிழ் இலக்கிய உலகினுள் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். இவரது இச்சிறுகதையான 'மழைக்கால இரவு' இவரது எழுத்துச்சிறப்பினை எடுத்துரைக்கும் அதே சமயம் அனுபவங்களைப் பதிவு செய்யுமோர் ஆவணமாகவும் விளங்குகின்றது. இந்தச் சிறுகதையில் எம்மைக் கவர்ந்த முக்கியமான அம்சங்களாகப் பின்வருவனவற்றைக்கூறுவோம்: நெஞ்சையள்ளும் எழுத்து நடை, போராளிகளின் போர்க்காலச்செயற்பாடுகளை விரிவாக அதே சமயம் அவர்களது இயல்பான அந்நேரத்து உணர்வுகளுடன் எந்தவிதப்பிரச்சார வாடையுமற்று விபரித்திருத்தல், இக்கதையில் தெரியும் மானுட நேயப்பண்பு (குறிப்பாகக்கீழுள்ள பகுதியைச் சுட்டிக்காட்டலாம்: 'அன்றையபோரில் ஈடுபட்டு மரித்துப் போன இராணுவத்தினரதும், போராளிகளினதும் சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு கிடந்ததை என் கண்களால் கண்டேன். பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதுவுமே அப்போது அந்த முகங்களில் தென்படவில்லை. உயிர் போகும் தருணத்தின் கடைசி வலி மட்டும் அந்த முகங்களில் எஞ்சியிருந்தது. 'ஒருவருக்கொருவர் முரண்பட்டு அழிந்து போனவர்களின் உடல்களைப்பற்றிய கதை சொல்லியின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பகுதி. இக்கதையின் முக்கியமானதோர் அம்சமாக இதனைக் கருதலாம்), மற்றும் போராளிகளின் போர்க்காலச்செயற்பாடுகளை ஆவணப்படுத்தல். தமிழினி ஜெயக்குமாரன் தன் படைப்புகளினூடு முக்கியமான படைப்பாளிகளிலொருவராக உருவாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்தில் இவரிடமிருந்து மேலும் பல படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகு எதிர்பார்க்கின்றது. வாழ்த்துகிறோம். - பதிவுகள் -
அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிருந்தது. “க்குயிங்” “க்குயிங்” என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் காதைக் கிழித்துக் கொண்டு பறந்தன. முன்னணிக் கள முனையில் இடை விடாமல் உறுமிக் கொண்டிருந்த கனரக ஆயுதங்களின் வீரியம் கூடிய ரவைகள் திடீர் திடீரென பக்கத்திலுள்ள பூவரசு வேலிகளையும் பனை மரங்களையும் பிய்த்தெறிந்தன. எறிகணைகள் விழுந்து சிதறும் இடங்களில் கிணறுகளை விடவும் வேகமாகத் தண்ணீர் குமிழி அடித்துக் கொண்டு ஊற்றெடுத்தது. பச்சை இலை குழைகள் கருகும் வாசனையும், கந்தகப் புகை மணமும், இரத்த வாடையும் சேர்ந்து வாந்தி வருமாப்பொல ஒரு கிறுதி மயக்கம் தள்ளாட்டியது.
அன்று அதிகாலை ஒன்றரை மணிக்கு மூண்ட யுத்தம் முழு நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது. உலங்கு வானூர்திகள் மாறி மாறி வந்து தாக்குதல் நடத்திக் கொண்டேயிருந்தன. போர் விமானங்களும் குண்டுகள் முடிய முடிய நிரப்பிக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருந்தன. அப்போது நேரம் நண்பகலைக் கடந்துவிட்டிருக்க வேண்டும். ஆண்டுக் கணக்காக பயிரிடப் பட்டிருக்காத பரந்த வயல் வெளி புல்லுப் பற்றையெழும்பிக் கிடந்தது. செப்பனிடப்படாமல் மெலிந்துபோய்க்கிடந்த வயல் வரம்புகளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அந்த வயல் வரம்புகளின் தேய்ந்த விளிம்புகளோடு ஒண்டியபடி எனது அணி தற்பாதுகாப்புக்காக நிலையெடுத்திருந்தது.
•Last Updated on ••Tuesday•, 26 •May• 2015 05:07••
•Read more...•
••Wednesday•, 06 •May• 2015 21:42•
??- மூலம்: அஹ்மத் ஈஸொப் | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -??
சிறுகதை
அஹ்மத் ஈஸொப் (Ahmed Essop) -
1931 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த இவர், தனது மூன்று வயதில் பெற்றோர் தென்னாபிரிக்காவில் குடியேறியதன் காரணமாக அங்கு வளர்ந்தவராவார். 1956 இல் தென்னாபிரிக்கப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ததோடு, தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1986 ஆம் ஆண்டு தனது ஆசிரியத் தொழிலைக் கைவிட்ட இவர் தொடர்ந்து முழுநேர எழுத்தாளரானார். இவரது படைப்புக்களில் அநேகமானவை, தென்னாபிரிக்க சமூகத்தில் இந்தியர்கள் எதிர்கொள்ள நேரும் சவால்களை விபரிப்பவையாகும். 1959 ஆம் ஆண்டு தொடக்கம் பல தொகுப்புக்களை வெளியிட்டுள்ள இவர், தனது முதலாவது சிறுகதைத் தொகுதியான The Hajji and Other Stories எனும் தொகுப்புக்கு 1979 ஆம் ஆண்டு 'ஒலிவ் ஷ்ரெய்னர் (Olive Schreiner) பரிசினை வென்றுள்ளார்.-
"எனக்கு பந்து விளையாடத் தேவைப்பட்டால், அவங்களுக்கும் தேவைப்படும். எனக்கு கழிப்பறைக்குப் போகத் தேவைப்பட்டால் அவங்களுக்கும் போகத் தேவைப்படும். அவங்க எல்லாவிதத்திலுமே சுயநலவாதிகள். எனது சித்தியும், அப்பாவும் அறைக்குள்ளே புகுந்து கதவை மூடிக் கொண்டிருப்பாங்க. சில நாட்கள்ல நாள் முழுவதுமே அப்படித்தான் இருப்பாங்க. அவங்க என்ன செய்றாங்கன்னு எனக்குத் தெரியாது. வீட்டில சாப்பிடவும் எதுவுமிருக்காது. அப்படி எதுவும் இருந்தாலும் நாங்கதான் சமைக்க வேணும். பிறகு அவங்க ரெண்டு பேரும் அறைக்குள்ளிருந்து வெளியே வந்து நாங்க சமைச்சு வச்ச சாப்பாடு எல்லாத்தையும் விழுங்கித் தள்ளுவாங்க."
•Last Updated on ••Wednesday•, 06 •May• 2015 22:04••
•Read more...•
••Tuesday•, 05 •May• 2015 19:28•
??-- செ.டானியல் ஜீவா -??
சிறுகதை
“எனக்கொரு நண்பன் உண்டு, அவன் தனக்கேன வாழாத் தலைவன்!” என்ற கிறிஸ்தவப் பாடல் சின்ன வயதிலிருந்தே எனக்கு பிடித்தமான ஒன்று. இந்தப் பாடலின் வரிகளை என் நண்பன் குமாரைக் காணும் போது அவ்வப்போது எடுத்து விடுவேன். அதை நான் பாடும் போதெல்லாம் அவன் பதிலுக்கு என்னை கேலியும் கிண்டலும் செய்வதோடு, என்னைப் பார்த்து ‘பன்னாடை பன்னாடை’ என்று திட்டவும் செய்வான்.
குமாருக்கு நாற்பத்திரண்டு வயதிருக்கும். பொது நிறமும், நல்ல உடல் கட்டோடு உயரமாகவும் இருப்பான். ரொம்பவும் கறாரானவன் போல் தன்னைக் காட்டிக்கொள்வான். நெஞ்சில் அடர்ந்து கிடக்கும் கறுத்த முடியெல்லாம் வெளியில் தெரியும்படியாக சேர்ட்டின் மேற்பக்கப் பட்டனைத் திறந்துவிட்டபடியே எப்போதும் வலம் வருவான். எதிரில் வரும் பெண்களெல்லாம் தனக்காக அலைகிறார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. நினைப்பதோடு நின்று விடமால் நண்பர்களுக்கெல்லாம் அதையே சொல்லித் திரிவான். சிலவேளைகளில் நெஞ்சை நிமித்தியபடி எவருக்கும் அஞ்சாதவன்போல் மிதப்போடு அலைவான். ஆனால் எதுவுமே உருப்படியாக அவன் செய்ததே இல்லை.
•Last Updated on ••Tuesday•, 05 •May• 2015 19:55••
•Read more...•
••Saturday•, 28 •March• 2015 18:22•
??- கனகலதா (சிங்கப்பூர்) -??
சிறுகதை
[ அண்மையில் நீர்கொழும்பில் வெளியிடப்பட்ட நெய்தல் இலக்கியத்தொகுப்பில் வெளியான சிறுகதை அரசமரம். இதனை எழுதிய செல்வி கனகலதா நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவி. தற்பொழுது சிங்கப்பூரில் ஊடகவியலாளராக பணியாற்றுகின்றார். இவரது கவிதை, சிறுகதைத்தொகுதிகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இவரது படைப்புகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன - முருகபூபதி --.. ]
முதலில் சில கணங்கள் என்ன பேசுவது என்று மலருக்குத் தெரியவில்லை. முதல்நாள் பேராசிரியரின் உரையைக் கேட்டதிலிருந்து அவர் மீது மலருக்கு அளவுகடந்த மரியாதை உண்டாகி இருந்தது. அவரிடம் மேலும் பேசும் ஆர்வத்தில் அவரது பரபரப்பான அட்டவணையில் எங்களுக்குச் சிறிது நேரம் ஒதுக்கக்கேட்டிருந்தோம். காலையில் என்ன சாப்பிட்டீர்கள்...? இன்றைய உங்களது திட்டம் என்ன...? அண்மையில் என்ன வாசித்தீர்கள் ...? என்று மெல்ல உரையாடலைத் தொடங்கி இயல்பான நிலையில் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த மலர் திடீரென்று கேட்டார்
“இந்த அரச மரம் உங்களைச் சங்கடப்படுத்தவில்லையா...?”
ஒரு கட்டில் - அதைச் சுற்றி மூன்றடி இடைவெளி நாற்காலியுடன் கூடிய குட்டி மேசை மிகச் சிறிய குளியல் -கழிவறை - பொருட்கள் வைக்க ஒரு சிறு அலுமாரியுடன் இருந்த அந்த அறையை மூன்று ஸ்டார் ஹோட்டல் தகுதியுடையதாக்கிக்கொண்டிருந்தது வாசலைப் பார்த்திருந்த சற்றுப் பெரிய ஒற்றைச் சன்னல்.
சன்னலை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது அரச மரம். அறைக்குள் நுழைபவர் பார்வை நேர் கோட்டில் சென்றால் அந்த மரத்தில்தான் நிலைகுத்தும்.
•Last Updated on ••Saturday•, 28 •March• 2015 19:00••
•Read more...•
••Saturday•, 21 •March• 2015 22:56•
??- கே.எஸ்.சுதாகர் (ஆஸ்திரேலியா) -??
சிறுகதை
அமலனை மேலும் கீழும் பார்த்த மனேஜர், அவன் அந்த வேலைக்குப் பொருத்தமற்றவன் என்பதை உறுதி செய்துகொண்டார். நேர்முகப் பரீட்சைக்காக அந்தத் தொழிற்சாலைக்குப் புறப்படும்போதே அமலனுக்கும் அது தெரிந்திருந்தது. அமலன் ஒரு கணித விரிவுரையாளன். இலங்கையில் இருக்கும்போது பாடவிதானக்குழுவிலும் அங்கம் வகித்திருந்தான்.
பூர்வாங்க உரையாடல்கள் முடிவடைந்ததும் மனேஜர் அமலனை ஒரு அறைக்குக் கூட்டிச் சென்றார். அந்த அறைக்குள் ஒரு வாட்டசாட்டமான இளைஞன் ஒரு இயந்திரத்துடன் போராடிக் கொண்டிருந்தான். அவனுக்கு உதவியாக இரண்டு முதியவர்கள் நின்றிருந்தார்கள். அங்கு நுழையும்போதே அமலனின் கண்கள் அடுத்த அறையில் உள்ளவர்களைத்தான் நோட்டமிட்டன. அந்த அறைக்குள் இளம்பெண்கள் நிறைந்திருந்தார்கள். ‘கொன்வேயர்’ ஒன்றில் வரிசையாக போத்தல்கள் வந்து கொண்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், அவை மந்திரத்தால் கண்டுண்டவை போல நின்றன. அந்தப் போத்தல்களுக்குள் இரசாயனக்கலவை நிரம்பின. நிரம்பியவுடன் அந்தப்பெண்கள், அந்தப் போத்தல்களை எடுத்து பெட்டியொன்றில் அடிக்கி வைத்தார்கள். அவனது கண்கள் அங்கே சென்றதை மனேஜர் கண்டுகொண்டார். உடனே அவன் தன் கவனமெல்லாவற்றையும் அவர்மீது திருப்பினான்.
•Last Updated on ••Saturday•, 21 •March• 2015 23:02••
•Read more...•
••Wednesday•, 18 •March• 2015 20:07•
??- - காஸே மொட்ஸிசி | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -??
சிறுகதை
எழுத்தாளர் காஸே மொட்ஸிசி: கரோபோ மோசெஸ் மொட்ஸிசி (Karobo Moses Motsisi ) என்ற இயற்பெயரைக் கொண்ட காஸே மொட்ஸிசி தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். 1932 ஆம் ஆண்டு, ஜோஹன்னர்ஸ்பர்கில் பிறந்த இவர், அங்கேயே கல்வி கற்று பின்னர் சிறிது காலம் தென்னாபிரிக்காவின் கௌதெங்க் மாகாணத்திலுள்ள ப்ரிடோரியா எனும் நகரத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். அத்தோடு 'ட்ரம் (Drum) இதழில் ஊடகவியலாளராகப் பணியாற்றியதோடு ட்ரம் (Drum), த கிளாசிக் (The Classic), த வேர்ல்ட் (The World) ஆகிய இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார். 1977 ஆம் ஆண்டு, தனது 45 ஆவது வயதில் காலமான இவரது படைப்புக்களையெல்லாம் ஒன்று சேர்த்து 'ராவன்' பதிப்பகமானது, 1978 ஆம் ஆண்டு 'காஸே & கோ (Casey & Co)' எனும் முழுத் தொகுப்பாக வெளியிட்டுள்ளது.
களவாக மதுபானக் கடையொன்றை நடத்தி வந்த எஸ்தர் ஒரு விபச்சாரியாகவும் இருந்தாள். அவளது மகன் போய்-போய் இடது காலில் ஒரு குறையுடனே பிறந்திருந்தான். ஆயினும் கூட, பத்து வயதாகும்போதே தனது வாழ்க்கையைக் கொண்டு செல்ல போய்-போய் பணம் உழைக்க ஆரம்பித்திருந்தான். அவன், நகரத்தில் பத்திரிகை விற்பதில் ஈடுபட்டிருந்தான். தேனீயைப் போல பணத்தை சேமித்து ஒளித்து வைத்திருந்த அவனுக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு நீளக் காற்சட்டையும், காற்றுப் புகாத பல வர்ண ஆடைகளையும் வாங்கிக் கொள்ள முடிந்தது. நீண்ட காற்சட்டையும், பல வர்ணங்களிலான மேற்சட்டையும் உடுத்து, ஊன்றுகோலின் துணையுடன் நடமாடும் அவனுக்கு, தான் ஒரு வளர்ந்த மனிதனாகியிருப்பது போன்ற உணர்வு தோன்றியது.
•Last Updated on ••Wednesday•, 18 •March• 2015 20:15••
•Read more...•
••Thursday•, 12 •March• 2015 20:09•
??- சுதாராஜ் -??
சிறுகதை
காலையில் வழக்கம்போலக் கத்திரிச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சத் தொடங்கினேன். பாம்பு தலையை அசைத்தசைத்து வருவதுபோல தண்ணீர் வாய்க்காலில் வந்துகொண்டிருந்தது. கால்களை எடுத்து வைக்கும்பொழுது “க்ளக்“ எனக் கவ்விப் பிடித்தது. தண்ணீரை இன்னொரு பாத்திக்கு மாற்றியதும் ஏதோ ஓடியது போன்ற அரவம் கேட்டது. சற்று விலகிக் குனிந்து கண்களைக் கூர்ந்து பார்த்தேன். ஒரு அடிமரத்துடன் பதுங்கிக் கொண்டு… முயல்குட்டி!
இவ்வளவு சிறிய குட்டியாக நான் இதற்கு முன் முயலைக் கண்டதில்லை. நண்பன் தில்லையின் வீட்டில் முயல் வளர்க்கிறார்கள். கொழு கொழு எனத் திரட்சியாகப் பெருத்து வளர்ந்த முயல்கள் கம்பிவலையால் அடைக்கப்பட்ட கூட்டுக்குள் விடப்பட்டிருக்கும். கட்டித் தொங்கவிடப்பட்ட இலை குழைகளை எவ்வித லயிப்பும் இல்லாமல் அவை கடிக்கும். அண்மையிற் போய் வலையினூடகப் பார்த்தால்கூடச் சற்றும் வெருட்சியடையாமல் குழையை நறுக்கித் தின்றுகொண்டிருக்கும்.
அந்த முயல்களைப்போல பால் வெள்ளையாகவோ கறுப்பாகவோ இல்லாமல் இந்த குட்டி மண்நிறமும் சாம்பல் கறுப்பும் சேர்ந்த ஒரு நரைத்த நிறமாக இருந்தது. அதனாலேயே அவற்றைவிட வடிவாகவும் இயற்கையோடு ஒன்றிப்போன மாதிரியும் இருந்தது. காய்ந்த இலைச் சருகுகளுள்ளும் மண் பொந்துகளுள்ளும் ஒளிந்து பிற மிருகங்களிடமிருந்து தப்புவதற்காக காட்டு முயல்கள் அந்நிறத்தைக் கொண்டிருக்கின்றன போலும்.
•Last Updated on ••Thursday•, 12 •March• 2015 20:15••
•Read more...•
••Saturday•, 21 •February• 2015 20:25•
??--பேராசிரியர் கோபன் மகாதேவா--??
சிறுகதை
மங்காமல் ஒளிவீசும் மணிகள்போன்று எங்கள், தொல் தமிழீழ மானிப்பாயின் தங்கரத்தினம் என்னும் குணத்தின் குன்று தாய்க்குலத்தார் பலர்போற்றும் தலைமைமாது அங்காங்கு பந்துக்கள் அகதிகளாய் அலைக்கழிந்து வாய்க்கரிசி போடுதற்கும் பங்காகப் பாடையினைச் சுமப்பதற்கும் பக்கத்தில் இல்லாமல் தனித்துச் சென்றாள்.
ஊரில் எவருக்குமே அவள் தங்கமாமி. எனக்கும் தான். நான் அவளின் ஒரே மகளை மணம் முடித்தேன். எப்போதும் பகிடியுடன் சிரித்த முகம். ஒரு மாதிரியான வஞ்சகமில்லாத கேலிச்சிரிப்பு என்றும் சொல்லலாம். தங்கமும் குடும்பத்தில், நான்கு சகோதரர்களுடன் ஒரே மகள். அவருக்கும், என்னுடைய மனையாளுடன் நான்கு ஆண்பிள்ளைகள்.
மானிப்பாயில் மரியாதையாக வாழ்ந்துவந்த குடும்பம். மாமிக்கு, எட்டு வாரங்களின் முன் பிறந்த குழந்தையிலிருந்து எண்பது தொண்ணூறு வயதினர் வரையில் எல்லோரும் நண்பர்களே. இப்படியான ஒரு ஆத்மா, குடும்பத்தினர் ஒருவருமே கிட்டடியில் இல்லாமல், அநாதை போல, நோயினில் நினைவின்றிப் பிரிந்துசென்றது. ஏன்? எப்படி? வாழ்வெல்லாம் எல்லோரிடமும் அந்த அசாதாரணத் தாயார் நல்லெண்ணமும் நற்பெயரும் தேடியது இதற்காகத்தானா?
•Last Updated on ••Saturday•, 21 •February• 2015 20:31••
•Read more...•
••Friday•, 13 •February• 2015 23:02•
?? - குரு அரவிந்தன் -??
சிறுகதை
எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குமா என்று நினைத்துப் பார்த்தேன். திரும்பத் திரும்ப அவளையே பார்க்கத் தூண்டிய மனசு அவளைச் சுற்றிச் சுற்றியே வந்தது. மனசும் ஒரு தேனீ போலத்தான் இருக்குமோ என்ற நினைத்தேன். மொட்டாக இருந்தால் உதாசீனம் செய்வதும், மலரப் போகிறது என்று தெரிந்தல் சுற்றிச் சுற்றி வருவதும், மலர்ந்து விட்டால் தேனை அருந்தி விட்டு விலகிச் செல்வதும் தேனிக்குக் கைவந்த கலையாக இருக்கலாம்.
இதுவரை எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கின்றேன் ஆனால் இப்படியொரு ஈர்ப்பு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. சினிமாப் படங்களில் சில நடிகைகளைப் பார்க்கும் போதெல்லாம் மனசு கொஞ்சம் சஞ்சலப்படுவது உண்மைதான். நிழற் காட்சிபோல மறுகணம் அது மாயமாய் மறைந்துவிடும். ஆனால் இது என்ன மாயம், இன்று எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
கனவுலகில் இருந்து நான் மீண்ட போது அவள் மறைந்து போயிருந்தாள். அவளை இன்னுமொரு முறையாவது பார்க்க வேண்டும் என்று மனசு ஏங்கியது. இந்தக் கூட்டத்தில் அவளை எங்கே தேடுவது? தென்றலாய் வந்தவள் சட்டென்று என் மனதில் சூறாவளியை ஏன் ஏற்படுத்தினாள்? என் தவிப்பு என்னவென்று அவளுக்குப் புரியப் போவதில்லை, ஆனாலும் மனசு எதற்கோ தவித்தது.
•Last Updated on ••Friday•, 13 •February• 2015 23:05••
•Read more...•
••Sunday•, 01 •February• 2015 21:05•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
தேடல் ஆண்டு விழாக் கூட்டத்தில்,எதிர்பாராமல் அவனோடு படித்த சந்திரனை பல வருசங்களுக்குப் பிறகுச் சந்தித்தான். மனம் உவகை கொள்கிறது."எப்படியப்பா இருக்கிறாய்?"இந்த இடைவெளியில், இலக்கியவாதியாய் மாறியிருக்கிறான்.பத்திரிகைகளில் அவன் கட்டுரைகளை ...வாசிக்கிறவன் தான்.வானொலிகளில் கூட சில்லையூர் செல்வராசன் போன்ற குரலுடன் நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறான். கோபாலுடைய அம்மா அவனுடைய ரசிகை.இதைப் போல குலத்திட அம்மாவும் தன்னுடைய 'ரசிகை''என்று சொன்னதாகச் சொன்னான். ‘கண்ணுக்குத் தெரியாத ஒரு பாலம் கட்டப்படுறதில் ஒரு பெருமிதம் தெரிந்தது. புலம்பெயர் நாடுகளில் எல்லாரையும் எல்லாரும் சந்தித்துக் கொண்டா… இருக்கிறார்கள். அதற்கும் என்று ஒரு நேரம் வர வேண்டியிருக்கிறது.
"உனக்குத் தெரியுமா?எங்கட வகுப்புத் தோழர்கள் ...வருசா வருசம் ஒரு நாள் சந்திக்கிறவர்கள்.இந்த முறை குணா தீடீரென கார்ட்டடாக் வந்து செத்துப் போனதால் தள்ளி வைத்திருக்கிறார்கள் "என்றான். ‘
•Last Updated on ••Friday•, 05 •June• 2015 23:07••
•Read more...•
••Sunday•, 01 •February• 2015 03:06•
??- சுதாராஜ் -??
சிறுகதை
உங்களைப் பயமுறுத்துவதற்காக இந்தக் கதையை எழுதவில்லை. உண்மையிலேயே பாம்பு வந்தது. அந்தப் பாம்பு வந்தது எங்கள் வீட்டுக்கல்ல. ஜசீலா அன்ரியின் வீட்டுக்கு. எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறமாக மூன்றாவதாக உள்ளது ஜசீலா அன்ரியின் வீடு. இரவு ஒன்பது மணியைப்போல எனது அறையில் சற்று ஆற அமர்ந்திருந்தேன். அப்போதுதான் மனைவி ஓடிவந்து கூறினாள்.
'ஜசீலா அன்ரி வீட்டுக்குள்ள ஒரு பாம்பு வந்திருக்கு.. உங்கள வரட்டாம்!"
எட்டு பத்து வயதுமான எனது பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்த புத்தகங்களை அந்தப்படியே போட்டுவிட்டு ஓடத் தொடங்கினார்கள். ஜசீலா அன்ரியின் வீடு நோக்கித்தான். அவர்களுக்கு இது விளையாட்டாயிருந்தது. (அதிலும் சின்னவன், ஒரு நாள் வீதி ஓரத்தில் போன குட்டிப் பாம்பு ஒன்றை வாலிற் பிடித்துத் தூக்கிவந்தான். 'அப்பா நல்ல வடிவான குட்டிப் பாம்பு. பார்த்தீங்களா?" என்று! அந்தக் குட்டியும் என்ன நினைத்ததோ அவனைக் கடித்துப் பதம் பார்க்கவும் இல்லை.)
•Last Updated on ••Sunday•, 01 •February• 2015 03:07••
•Read more...•
••Wednesday•, 28 •January• 2015 20:38•
??- யாஸுனாரி காவாபாட்டா (பரிசு நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர்) | ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன் -??
சிறுகதை
தன்னுடைய மனைவியோடும், குழந்தையோடும் அவன் அந்த மலை வெப்ப நீரூற்றுக்கு வந்துசேர்ந் திருந்தான். அது ஒரு பிரபல வெப்ப நீரூற்று. மனிதர்களிடம் பாலுணர்வையும் பிள்ளைப்பேற்றுத் திறனையும் பெருக்குவதாகக் கூறப்பட்டது. அதன் ஊற்று அசாதாரண வெப்பம் வாய்க்கப் பெற்றிருந்தது. எனவே, அது பெண்களுக்கு நிச்சயம் நல்லது செய்யும் என்பதில் சந்தேகமில்லை. அதோடு கூட, அருகாமையிலிருந்த குறிப்பிட்ட தேவதாரு மரமொன்றும், பாறையொன்றும் அங்கு வந்து குளிப்பவர்களுக்குக் குழந்தைப் பேற்றைத் தரும் என்ற மூடநம்பிக்கையும் அங்கு நிலவி வந்தது.
ஜப்பானிய அரிசி பானத்தில் காணப்படும் கசடில் பதப்படுத்தப்பட்டு ஊறுகாயாக்கப்பட்ட வெள்ளரித்துண்டத்தைப் போலிருந்த முகத்தையுடைய சவரத் தொழிலாளி ஒருவன் அவனுக்கு சவரம் செய்துகொண்டிருந்த போது அவன் அந்த தேவதாரு மரத்தைப் பற்றி விசாரித்தான். (இந்தக் கதையைப் பதிவு செய்யும்போது பெண் குலத்தின் நற்பெயரைக் காப்பதில் கவனமாக இருக்கவேண்டும் நான்).
“நான் சிறுவனாக இருந்தபோது, பெண்களைப் பார்க்கவேண்டும்போல் எப்போதும் தோன்றிக் கொண்டேயிருக்கும். அவர்கள் அந்த தேவதாரு மரத்தைச் சுற்றித் தங்களைப் பிணைத்துக் கொள்வதைப் பார்ப்பதற்காய் விடியலுக்கு முன்பே எழுந்துவிடுவோம். எப்படியோ, குழந்தை வேண்டும் பெண்கள் பைத்தியம் பிடித்தவர்களாய் நடந்துகொள்கிறார்கள்.”
•Last Updated on ••Wednesday•, 28 •January• 2015 20:59••
•Read more...•
••Saturday•, 03 •January• 2015 21:43•
??- எஸ். கிருஸ்ணமூர்த்தி , அவுஸ்திரேலியா -??
சிறுகதை
விடிந்தால் புது வருடம். நாளை பிறக்க விருக்கும் இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டைவரவேற்று எல்லா இணையத்தளங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு கொண்டிருந்தன. சலசலப்புத்தமிழ் இணையம் வேல்அன்பனது கதையொன்று இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டு புது வருச சிறப்பு மலரில் வருகின்றது என பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் வேல்அன்பன் கடைசியாக தமிழ் மீடியாக்கு அனுப்பிய படைப்பு என கட்டம் போட்டுச் செய்தி வெளியிட்டது. கடந்த ஒருவாரமாக தமிழ் ஊடகங்களில் மெதுவாக வந்த கசிந்த செய்தி இப்போது காட்டுத்தீயைப் போன்று எல்லா இணையத்திலும் பரவியுள்ளது. ஒருவாரமாக வேல்அன்பனைக் காணவில்லை. அவரை எந்த மீடியாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வழமையாக அவர் தொடர்பு கொள்ளும் முக்கிய சில மீடியாக்களும் அவர் ஓரு வாரமாக தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என அறிவித்துள்ளன. அதைவிட அவர் தனது சொந்த இணையத்தளத்தில் தினசரி பதிவேற்றம் செய்வார். அதிலும் ஒரு வாரமாக எதுவும் பதிவேறவில்லை.
•Last Updated on ••Saturday•, 03 •January• 2015 21:46••
•Read more...•
••Saturday•, 03 •January• 2015 21:19•
??- சுதாராஜ் -??
சிறுகதை
அப்போது அப்பாவிடம் ஒரு துவக்கு இருந்தது. துவக்குகளைப் பற்றிய பரிச்சயம் யாழ்ப்பாணத்தில் பெரிதாக ஏற்படாதிருந்த காலம் அது. அரசாங்கத்திலிருந்து உரிய முறையில் லைசன்ஸ் பெற்றவர்கள்தான் துவக்கு வைத்திருக்கலாம். அவ்வாறு அந்த வட்டாரத்திலேயே அப்பாவிடம் மட்டும்தான் துவக்கு இருந்தது. வீட்டினுள் அவனது கைக்கு எட்டாத உயரமாக சுவரில் துவக்கு மாட்டி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அது அப்பாவுக்கு எட்டும் உயரம். அதற்காகவென்றே சுவரில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு பெரிய ஆணிகளில்… ஒன்றில் அதன் விசைப்பகுதியைக் கொழுவி, சற்று உயரமாக உள்ள மற்ற ஆணியில் சுடு குழாயைப் பொறுக்க வைத்துவிட்டால்.. துவக்கு எடுப்பாகத் தோற்றமளித்துக்கொண்டிருக்கும். அறையின் ஜன்னல் திறந்திருந்தால் வெளிவிறாந்தையில் நின்றே துவக்கைக் காணலாம்.
விளையாட வரும் நண்பர்களைக் கூட்டிவந்து, அவன் ஜன்னலூடாகத் துவக்கைக் காட்டுவான். வகுப்பிலுள்ள சக மாணவர்களையும் இதற்காகவென்றே விளையாட வருமாறு வீட்டுக்கு அழைத்து வருவான். அவர்கள் கண்கள் ஆச்சரியத்தில் விரிய… ‘அட அது உண்மைதான்!’ எனப் பார்த்திருப்பார்கள். வீட்டிலிருக்கும் துவக்கைப் பற்றி அவன் நண்பர்களிடம் பல கதைகளை அளந்திருக்கிறான். இலக்குத் தவறாமல் சரியாகச் சுடும் லாவகம் பற்றி விளக்கமளித்திருக்கிறான். ‘இந்தப் பெரிய துவக்கை எப்படி நீ தூக்குவாய்?’ எனப் பிரமிப்புடன் அவர்கள் கேட்பார்கள். ‘அது அப்படித்தான்..!’ எனச் சமாளித்துவிடுவான். எப்படிச் சுடுவது என அப்பா தனது நண்பர்களுக்கு விளக்கும்போது கவனித்திருக்கிறான். ‘விசையைத் தட்டி வெடி தீரும்போது ஒரு எதிர்த் தாக்கம் இருக்கும். அப்போது கை தழும்பி இலக்குத் தவற வாய்ப்புண்டு. அதனால் துவக்கின் பிடிப் பகுதியை வாகாக தோள்மூட்டில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்’ என அப்பா தன் நண்பர்களுக்குக் கொடுத்த பயிற்சியை எல்லாம் அவன் தனது நண்பர்களுக்கு எடுத்துவிடுவான்.
•Last Updated on ••Saturday•, 03 •January• 2015 21:23••
•Read more...•
••Thursday•, 01 •January• 2015 22:11•
??- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -??
சிறுகதை
தூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள். இரு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் ஓங்கிக் குத்தினார்கள். கனவில் வந்திருந்த குதிரைப்படைகள் அடி தாங்காது அலறித் திசைக்கொன்றாகத் தெறித்தோடின. புலனுணர்ந்து பதறித் துடித்து விழித்துப் பார்த்தபொழுது மகன் வயிற்றுப்பேரன் அவர் வயிற்றிலமர்ந்து தன் இரண்டரை வயதுப் பிஞ்சுக் கைகளால் அவரது நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தான். 'அச்சு அச்சு' எனத் தன் அக்காவைப் பற்றி ஏதோ குற்றம் சொல்லவிழைந்தான்.
அவசரமாக விழித்ததில் பரபரத்து அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார். தூக்கத்தில் சிவந்த கண்களை அப்படியும் இப்படியுமாக உருட்டினார். குழந்தை பயந்துபோனது. அவரது தொப்பை வயிற்றை நனைத்தபடி அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகை கேட்டு எட்டிப் பார்த்த அதன் அம்மா திண்ணைக்கு ஓடிவந்து பாயில் காற்றாடப் படுத்திருந்த மாமனாரின் வயிற்றில் அமர்ந்திருந்த குழந்தையைக் கடிந்தவாறே அள்ளித் தூக்கிக் கொண்டாள். சமையலறையில் வேலையாக இருந்திருக்கவேண்டும். உடுத்திருந்த புடவை இழுத்துச் செருகப்பட்டிருக்க, உடலிலும் துணியிலும் அரிசி மாவு வெள்ளை படிந்திருந்தது.
குழந்தையைப் பார்த்துக் கொள்ளாமல் என்ன செய்கிறாயென்பது போன்ற ஏதோவொரு வசவு வெளியே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி ஏவப்படுவது மெலிதாகக் கேட்டது. மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு தினமும் இப்படி திண்ணையில் காற்றாடச் சாய்ந்துகொள்வது அவரது வழமைதான். இன்று சற்று நேரத்துடன் விழித்துக் கொண்டுவிட்டார். குழந்தை வந்து குழப்பாமல் விட்டிருந்தால் இன்னும் நன்றாகத் தூங்கியிருக்கலாம். மூத்திர வீச்சம் நாசிக்கு எட்டத் தொடங்கியது. எழுந்து ஒரு கை ஊன்றி பாயிலேயே அமர்ந்து கொண்டார். துவைத்துக் காய்த்தெடுத்த வெள்ளை சாரமொன்றை மருமகள் கொண்டு வந்து அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் வைத்து உடை மாற்றிக் கொள்ளச் சொல்லி நகர்ந்தாள்.
•Last Updated on ••Friday•, 05 •June• 2015 05:48••
•Read more...•
••Friday•, 26 •December• 2014 22:53•
??– கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
இது எமது தபால்பெட்டிக்கு வந்திருந்த நாலாவது அநாமதேயக் கடிதம். கடந்த இரண்டு வாரங்களில் இதேமாதிரியான மூன்று கடிதங்கள் வந்திருந்தன. "I buy houses, gas or no gas, call Tim." - கடிதத்தில் இருந்தது இவ்வளவுந்தான். இதுபோன்ற கடிதங்கள் இனிமேலும் வரலாம். யார் இந்த ரிம்? இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அந்தக்கடிதங்களை எடுத்துக் கொண்டு ரவுனிற்குப் போனேன். ரவுன் எனது வீட்டிலிருந்து பத்துநிமிடங்கள் கார் ஓடும் தூரத்தில் உள்ளது. றியல் எஸ்டேட் (Real Estate) திறந்திருக்கக்கூடும். நகரம் கேளிக்கையில் நிரம்பி வழிகின்றது. மேர்க்கியூரி ஹோட்டலின் கோலாகலமான வெளிச்சத்தில் மனிதர்களின் நடமாட்டம் தெரிகிறது. சாப்பாட்டுக் கடைகளிற்குள் மக்கள் நிதானமாகவிருந்து சாப்பிட்டுக் கொண்டும் மது அருந்திக் கொண்டும் இருக்கின்றார்கள். கிளப்பிலிருந்து ஜாஸ் மிதந்து வருகிறது. மூடப்பட்டிருந்த றியல் எஸ்டேட் கடையின் கண்ணாடிக்குள்ளால் தெரியும் விளம்பரங்களைப் பார்த்து சத்தமிட்டுக் கதைத்தபடி சிலர் நிற்கின்றார்கள். அவர்கள் சண்டையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக நான் திரும்பிக் கொண்டேன். இந்த விஷயத்தை அப்பா ஒருமாதத்திற்கு முன்பாகவே அறிந்து கொண்டார் என்றுதான் நினைக்கின்றேன். அன்று...
•Last Updated on ••Friday•, 26 •December• 2014 22:57••
•Read more...•
••Monday•, 15 •December• 2014 20:35•
??- எஸ். அகஸ்தியர் -??
சிறுகதை
[ பிரபல முற்போக்கு எழுத்தாளர் அமரர் எஸ். அகஸ்தியரின் 19 ஆவது ஆண்டு நினைவையொட்டி - 08.12.2014 - அவரது ‘எவளுக்கும் தாயாக’ என்ற நூலிலிருந்து இச்சிறுகதை பிரசுரமாகிறது. - பதிவுகள்-]
நக நுனி சாடை, பிறை நிலா, ஒரு வெண் கீறு பாவி, மேக வெளி நாடி மின்வரி போட, செக்கல் கருகி இருள் அடர்ந்து கவிகிறது. பூமி முற்றாக மயான கோலம். அதிர் வேட்டுக்கள் வானமடங்க வெடித்து, நிலமதிரச் சிதறி, அவன் மனக்கண்ணுள் மின்னித் தெரிகின்றன. கைம்பெண் போல் தன்னை அவள் காட்டிக் கொள்வதில்லை. புருஷன் சம்பளம் பென்சனாக வருகிறது. ஒரே ஆண்பிள்ளை. இரண்டு இளங் குமர்கள். பிள்ளைகள் மூவரும் சதா படிப்பில் மூழ்கியபடி. பிள்ளைகளுக்கான படிப்புச் செலவுக்கே ‘பென்சன்’ போதாது. ஆக, அவள் மாடு, ஆடு, கோழி, கன்று, காலி, சீட்டு, சித்தாயம் என்றெல்லாம் மாய்ந்தாள். எதுக்கும் ஈடு கொடுக்கிற வலிச்சல் தேகம்.
‘தம்பியை எப்பிடியும் நல்லாப் படிப்பிச்சு ஒரு கரை காணவேணும்’ என்ற ஆசை, நாளாக அவளை எலும்பாக்கியது. ‘எலும்புருக்கியாக்கும்’ என்று நடைமருந்து பாவிக்கிறாள். ‘உவ்வளவு கஷ்டத்துக்க பெட்டையளைப் படிப்பிக்க வேணுமேர் பொடியனைப் படிப்பிச்சு ஆளாக்கினால் அவன் உன்னையும் தங்கச்சிமாரையும் பாக்கமாட்டானோ?’ என்று அயலட்டை சிலேடையாகச் சொல்லும். அசட்டை பண்ணி விடுவாள்.
•Last Updated on ••Monday•, 15 •December• 2014 22:18••
•Read more...•
••Wednesday•, 10 •December• 2014 23:54•
??- குரு அரவிந்தன் -??
சிறுகதை
அம்மா தனித்துப் போயிருந்தாள். இடம் பெயர்ந்தபோது பக்கத்து வீட்டு பரிமளம் அன்ரியுடன்தான் அம்மாவும் சென்றதாகச் சொன்னார்கள். பரிமளம் அன்ரிக்கு அம்மா மீது ஒரு வகை பாசம் இருந்தது. அவர்கள் கடைசியாகச் சாவகச்சேரியில் தங்கியிருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. அப்படி என்றால் சாவகச்சேரி வரைக்கும் அம்மா நடந்துதான் போயிருப்பாளா? விமானக் குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் என்று தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்த போது தான் அம்மா காணாமல் போயிருந்தாள். உறவுகளைப் பிரிந்து திக்குத் திக்காய் எல்லோரும் ஓடிப்போயிருந்தனர். தெரிந்த இடமெல்லாம் அம்மாவைத் தேடிப் பார்க்கச் சொல்லியிருந்தேன். யாராவது வயது போன பெண்கள் அனாதையாக இறந்து போயிருந்தால் கூட அவர்களைப் பற்றி எல்லாம் விசாரித்திருந்தேன். கனடாவில் இருந்து கொண்டு பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பால் இருக்கும் எனது நாட்டில் அம்மாவைத் தேடுவதென்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.
அப்போதிருந்த நாட்டுச் சூழ்நிலை காரணமாக என்னால் அங்கு செல்ல முடியாமல் இருந்தது. தேவையில்லாத பிரச்சனைக்குள் ஒருமுறை மாட்டித் தப்பிவந்த எனக்கு அம்மாவைத் தேடி அங்கு செல்லவே பயமாயிருந்தது. எந்தவித நல்ல தகவலும் அம்மாவைப் பற்றி இதுவரை கிடைக்கவில்லை. அம்மா உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பது தான் இப்போதய எனது எதிர்பார்ப்பாகவும், துடிப்பாகவும் இருந்தது. அம்மா கடைசியாகப் போட்ட கடிதத்தில் கூட தன்னைப் பற்றிச் சொல்லாமல், ‘ராசா, பிரச்சனைகளுக்குள் அகப்படாமல், கவனமாய் இருராசா’ என்று என்னைப் பற்றித்தான் விசாரித்திருந்தாள். கடந்த காலத்தை நினைத்தபோது, எதுவும் நடக்கலாம் என்ற அம்மாவின் பயம் நியாயமானதாகவே இருந்தது.
•Last Updated on ••Wednesday•, 10 •December• 2014 23:56••
•Read more...•
••Tuesday•, 04 •November• 2014 21:52•
??- சுதாராஜ் -??
சிறுகதை
சாதாரண… இரண்டு சில்லு, ஓர் இருக்கை, பெடல் போன்ற அம்சங்களைக் கொண்ட சைக்கிள்தான்! இருக்கையிலேறி அமர்ந்து பெடலை மிதித்து உளக்கினால் ஜம்மென்று போகும்.. செலவில்லாத பிரயாணம்.. பாரமில்லாத வாகனம். ஒரு கையினால் உருட்டலாம். ரெயில்வே கடவை பூட்டியிருந்தால் அலாக்காகத் தூக்கிக்கொண்டு புகுந்து மறுபக்கம் போய்விடலாம். அவனுக்கு ஒரு சைக்கிள் வேண்ட வேண்டுமென்ற ஆசை நீண்ட காலமாகவே இருந்தது. சுமார் எட்டு, ஒன்பது வருடமாக என்று சொல்லலாம். அதை ஆசை என்றும் சொல்லமுடியாது… நோக்கம்... ஒரு விருப்பம், அல்லது…. ஒரு இலட்சியம் என்று சொல்லலாமோ? அவனுக்கு ஒரு சைக்கிள் தேவைப்பட்டது. அதனால் சைக்கிள் வேண்டுகிற எண்ணம் இருந்தது. அதே எண்ணம் கை கூடாமலே இழுபட்டுக்கொண்டிருந்தாலும்… அவனும் அந்த எண்ணத்தைக் கைவிடுவதாய் இல்லை. ஏனெனில் கட்டாயமாக அவனுக்கு ஒரு சைக்கிள் தேவைப்பட்டது.
அவன் வேலைக்குப் பஸ்சிலேதான் போவான். எட்டு வருடங்களுக்கு முன்னர் ஐம்பது சதமாக இருந்த பஸ் கட்டணம் இப்பொழுது இரண்டு ரூபா நாற்பது சதமாக உயர்ந்திருக்கிறது. அப்பொழுதே மாதத்திற்கு முப்பது ரூபா பஸ் கட்டணமாக அழவேண்டியிருந்ததால்… ‘ஒரு சைக்கிள் வேண்டிவிட்டால்.. ஏழு மைல் தொலைவிலுள்ள தொழிற்சாலைக்கு சைக்கிளிலேயே போய்விடலாம்” என நினைப்பான். இப்பொழுது கிட்டத்தட்ட நூற்றைம்பது ரூபா பஸ்சிற்குச் செலவாகிறது. ஆறுமாத பஸ் செலவை மிச்சம் பிடித்தாலே சுமாரான ஒரு சைக்கிள் வாங்கிவிடலாம். ஆனால் அதை எப்படி மிச்சம் பிடிப்பது என்பதுதான் பிரச்சினை.
•Last Updated on ••Tuesday•, 04 •November• 2014 21:54••
•Read more...•
••Sunday•, 02 •November• 2014 18:41•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
என்னுடைய வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் யூன் மாதமளவில் ஒரு எலி தவறாமல் வந்து போகும். யூன் மாதம் இங்கே குளிர் காலம். எலியைப் பற்றி பல எழுத்தாளர்கள் கவிதை கதைகளைப் படைத்திருந்தாலும், சிறுவயதில் படித்த ‘The Pied Piper’ என்ற கதைதான் ஞாபகத்திற்கு வருகின்றது. சங்ககால இலக்கியங்களில் எலியைப்பற்றி யாரும் எழுதியிருக்கின்றார்களோ தெரியவில்லை. குட்டி எலி. அதன் உடம்பு நடுவிரல் நீளம் இருக்கும். அவருக்கு எங்கள் வீடு மிகவும் பிடித்திருக்கவேண்டும். நாங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் அவர் சுறுசுறுப்பாகிவிடுவார். வீடு முழுவதும் ஓடித் திரிந்து இம்சை செய்வதுடன் குறுணிக்குறுனிப் புளுக்கைகளை எங்குமே வீசிவிடுவார். அதன் தொல்லையோ தாங்க முடிவதில்லை. குளிர் காலம் அதன் இனப்பெருக்க காலம் என்றாலும்கூட – ’ஒரு’ எலி என்ற கணக்கு எனக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. கடந்த மூன்று வருடங்களாக வந்து போகும் எலி, போன வருஷத்துடன் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் நடக்கவில்லை. இந்த வருடமும் வந்துவிட்டது. நேற்று நள்ளிரவு ஒரு சத்தம். மெதுவாக நித்திரையில் இருந்து எழுந்து பார்த்தபோது, ஹோலிற்குள் ஒரு ‘சிப்ஸ் பைக்கற்’ நகர்ந்து கொண்டிருந்தது. ஆளரவம் கேட்டு பாய்ந்து ஓடினார் எலிப்பிள்ளையார்.
•Last Updated on ••Sunday•, 02 •November• 2014 18:45••
•Read more...•
••Saturday•, 04 •October• 2014 20:31•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
தமிழ்க்கிராமங்களில் பொதுவாக வாடகைவீடு பெறுவது சிரமான காரியம். அருமையாகப் படித்தவர்கள், கொழும்புக்கு வேலை கிடைத்துப் போற போது, சிலவேளை தம் குடும்பத்தையும் கூட்டிச் சென்றால், அவர்கள் இருந்த வீடு காலியாகும். நடுத்தர வருவாய்யைக் கொண்டவர்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள். பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த மத்திய அரசு, இன பேதத்தை பாராட்டுற போது எம்மவர்களிற்கு அங்கே பாதுகாப்பு இருக்கவில்லை. கலவரங்களில் 'கரியான ..அனுபவங்கள் தானே தொடர்கதையாய் தொடர்கின்றன. தவிர, சொந்த வீடு ,நிலம் இல்லாதவர்கள் இங்கும் இருக்கவே செய்கிறார்கள். பலர், தங்கு வேலைக்குப் போய் வருவது போலவே கொழும்புக்கும் போய் வருகிறார்கள்.
சித்ரா ரீச்சர் வவுனியாவில் பத்து வருசமாக ஆசிரியையாய் குப்பை கொட்டி அலுத்து விட அவருக்கு ஒரு மாற்றம் தேவையாக இருந்தது. சொந்தப் பகுதியில் ஏதாவது கிராமத்து பள்ளிக்கூடத்திற்கு மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்த கிராமத்திலே .. வேலை கிடைத்திருக்கிறது. நகரத்தில்,. வசிக்கிற பெரியண்ணை வீட்டிலிருந்தே போய் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு கிராமமே பரிச்சம் இல்லாதது. வீடு’ எல்லாம் பார்க்க அந்த இந்துக்கல்லூரியில் படிப்பிக்கிற ஆசிரியர்களையே… நாடினார்.
•Last Updated on ••Saturday•, 04 •October• 2014 20:53••
•Read more...•
••Friday•, 12 •September• 2014 22:53•
??- இந்து (ஜேர்மனி) -??
சிறுகதை
1.
குளிர்காலம்போய் வெயில் வந்தவுடனே ஒரு சந்தோஷம்.ஒரு உஷார். எனக்குள்ளே இரண்டு மடங்கு உஷார். அவனை நினைக்கும்போதெல்லாம் அவனைக்காணவேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் மனதிற்குள் நெருக்கு நெருக்கு என்றிருக்கும். இருட்டுறதுக்கு முன்னர் போனால்தான் முழுமையான ஒரு சந்திப்பை உருவாக்கமுடியும். அவனை ஒருதனமேனும் ஏற இறங்க ஆசைதீர பார்க்கமுடியும். அவனை நினைக்க உற்சாகமாக இருந்தது. தினமும் மாலையில் காலாற நடந்து செல்லும் அதேபாதையில் தடம் பதிக்கின்றேன்.என்னைத்தினமும் சந்திக்கும் அந்த உயிர் கோடையில் ஆரம்பத்தில் மீண்டும் உயிர்பெற்றிருந்தது. என் வாழ்வில் எத்தனை உறவுகள் வந்தது.இவன் மட்டும் எப்படி என் உறவோடு கலந்தான்? எனக்கும் இவனுக்குமுள்ள உறவுதானென்ன? எந்த உறவில் இவன் உறவைச்சேர்ப்பது? தொப்புள்கொடி உறவிலா? இரத்தஉறவிலா? அம்மாவழிச் சொந்தத்திலா? இல்லை அப்பாவழி பந்தத்திலா? 'யார்இவன்? இத்தனை சொந்தங்களையும் மீறிய அர்த்தமுள்ள, ஆதரவான, ஆச்சரியமான, உணர்வுபூர்வமான சொந்தமானவன். இதே உறவு ஊரிலும்எ மக்கிருந்தது. இதனால்தான் இவனைப்பார்க்கும்போதெல்லாம் அதே நினைவு. ஊரில் இருந்த அதே உறவின் சாயல் இவனிலும் இருக்கப்போய்த்தான் இவ்வுயிரையும் ஒரு நாளைக்கு ஒருக்காத்தன்னும் காணவேணும்போல மனம் கிடந்துதுடிக்கும். இவனைக்கண்டாலோ பழசுகள் மனசை வந்து ஒரு தட்டுத்தட்டும்.
•Last Updated on ••Friday•, 12 •September• 2014 23:05••
•Read more...•
••Wednesday•, 03 •September• 2014 18:56•
??- சுதாராஜ் -??
சிறுகதை
அதிகாலையிற்தான் அந்தக் கனவு வந்தது. கனவில் மனைவி வந்தாள். கமலநாதனுக்குத் திடுக்குற்று விழிப்பு ஏற்பட்டது. பொதுவாக, மனைவி என்பது பலருக்குத் திடுக்குறல் ஏற்படுத்தும் விஷயம்தான். ஆனால் இது அந்த மாதிரியான திடுக்குறல் அல்ல. சற்று வித்தியாசமான, சற்று பரவசம் கலந்த திடுக்குறல் என்று சொல்லலாம். விழிப்பு வந்ததும் எழுந்து கட்டிலில் அமர்ந்தான். தான் வீட்டிற்தான் இருக்கிறேனா அல்லது கப்பலிற் தன் கபினுக்குள்ளா என உணர்வுக்குத் தட்டுப்படாமல் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்து விழித்தான். கப்பலில் ஜெனரேட்டரின் இரைச்சல் அப்போதுதான் காதுக்கு எட்டுவதுபோலிருந்தது. அட, நீயெங்கோ நானெங்கோ என்ற சலிப்புடன் மீண்டும் படுக்கையில் விழுந்தான். மறுபக்கம் திரும்பித் தலையணையை அணைத்துக்கொண்டு கண்களை மூடினான். கனவில் மூழ்கிவிட ஆசையாயிருந்தது. கனவில் மனைவி மிக அழகாகவும் இளமையாகவும் தோன்றினாள். மென்மையாகவும் இனிமையாகவும் பேசினாள். கனவுகள் எப்போதுமே இப்படித்தான் போலும். மனசு விரும்புவதை படம் பிடித்து காட்டுகின்றன. ‘தொட்டதெற்கெல்லாம்’ கூச்சமைடைந்தாள். ‘சும்மா இருங்கோ’ எனப் பொய்க்கோபத்துடன் கையில் ஒரு அடியும் போட்டாள். அவ்வளவுதான். அத்தோடு விழிப்பு வந்துவிட்டது.
•Last Updated on ••Wednesday•, 03 •September• 2014 19:00••
•Read more...•
••Wednesday•, 03 •September• 2014 18:37•
??-பேராசிரியர் கோபன் மகாதேவா -??
சிறுகதை
அந்தத் தமிழர், காலை ஒன்பதிற்குப் படுக்கையை விட்டெழுந்து கழிவறைக்குச் சென்று தன் சலம் பாய்ச்சிய பின், வழக்கம் போல் அன்று சவரம் செய்வதிலிருந்து தப்பலாமா எனக் கண்ணாடியில் பார்த்தார். ஒரு மில்லிமீற்றர் நீளத்தில் அவரின் நாடியிலிருந்து கீழே தூங்கிய நரை வளர்த்தி, கோதுமை-மா இடியப்பம் பிழியும் போது வரும் வெள்ளைப் புழு-வால் போல் தோன்றிற்று. அதை இன்னும் ஒருநாள் இருக்க விடமுடியுமென முடிவெடுத்த மறுகணம், வளரும் புழுக்களுக்கும் தான் போட்டிருந்த சட்டையின் கழுத்து-வெட்டுக்கும் மத்தியில், நெஞ்சின் மேற்பக்கம் ஒரு பெரிய கரிய இலையான் போல் ஏதோ ஒன்று ஒட்டிக் கொண்டு இருப்பதைக் கண்டார். சாவகாசமாக அதை நுள்ளிப் பிடுங்கிக் கண்ணால் பார்த்து, நுகர்ந்தும் பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்த வாசனைகளில் ஒன்று! நல்லதான எதையும் எறிந்து வீணாக்க மாட்டாதார், அதைத் தன் வாயினுள் போட்டு நாக்கில் வைத்துத் துழாவித் தாலாட்டி அன்புடன் மெல்லமாகக் கடித்து அதை மிகமிகச் சுவைத்து உண்டார். அதன் பின்னர் பல்விளக்கி முகம் கழுவித் தன் காலை உணவைத் தயாரிக்கக் குசினிக்குச் சென்று ஓரத்தில் இருந்த சிற்றலை மின்னடுப்பின் கதவைத் திறந்து எதையோ உள்வைத்தார்.
•Last Updated on ••Wednesday•, 03 •September• 2014 19:21••
•Read more...•
••Saturday•, 16 •August• 2014 23:42•
??-கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -??
சிறுகதை
பலத்த காற்று வீசும்போதே ஈரப்பதத்தையும் சேர்த்தே வீசியது கண் சிமிட்டும் நேரத்துக்குள் சடசடவென்று மழை பிடித்துக்கொண்டது.திசை மறித்த இக்கட்டின் சீற்றமாய் அலறிக்கொண்டு வந்த மழையைத் துளைத்துக்கொண்டே மழையோடு மழையாய் வேக வேகமாக நடக்கும்போதே குடை சரிந்து சாய்ந்தது. ஆவேசத்தோடு குடையைத் துக்கி எறிந்த ராமலிங்கம் இன்னும் துரிதமாக நடையைப் போட்டான். ஒரு டேக்சியை நிறுத்தத் தோன்றவில்லை. டேக்சியில் ஏறினால் பத்தே நிமிடங்களில் போய்விடலாம் தான். ஆனால் திமிறத்திமிற முகத்தில் வந்து விழும் மழை நீரோடு ,கண்ணிலிருந்து விழுந்த உப்புநீரும் சட்டையை நனைக்க, ராமலிங்கம் வெறி பிடித்தாற்போல் நடந்து கொண்டிருந்தான். அலமலந்து சொல்லிக்கொள்ள வாய்விட்டு ஆற்றிக் கொள்ள ஒருபற்றுக்கோடு கூட இல்லாமல், காற்றை இரண்டு கைகளாலும் அளைந்து வீசிக்கொண்டே, ஏய், என்று ஓங்கிக் கத்தினான். எரி நட்சத்திரமொன்று, இருள் கிழித்த ஒளியாய் பளீரென்று, மின்னலும் இடியுமாய் கிடுகிடுக்க வானம் ஓவென்று கிழிந்து ஊற்றியது.அவள் மட்டும் இப்போது எதிரில் இருந்தால் அப்படியே அந்த இடுப்பிலேயே ஓங்கி மிதிக்க வேண்டும் போல் சண்டாளமாய் வந்தது கோபம்
•Last Updated on ••Tuesday•, 19 •August• 2014 16:48••
•Read more...•
••Saturday•, 09 •August• 2014 22:32•
??எழுதியவர்: மு.வெங்கடசுப்பிரமணியன்??
சிறுகதை
மு.வெங்கடசுப்ரமணியன் 10.05.1956இல் பிறந்தவர். பிறக்கும்போதே ஒரு கண்ணில் மட்டுமே பார்வைத்திறன் கொண்டவராய் பிறந்தவர் பின் படிப்படியாக அடுத்த கண்ணிலும் பார்வையை இழந்துவந்தார். ‘ரெட்டினிட்டிஸ் பிக்மெண்ட்டோஸா’ எனப்படும் விழித்திரை பாதிப்பின் காரணமாக, மறு கண்ணிலும் முழுமையாக பார்வை பறிபோயிற்று.அப்பொழுது அவருக்கு வயது பதிமூன்று. மற்றவர்களின் உதவியையே எதிர்பார்த்துக்கொண்டிராமல் சுயமாக வாழ வேண்டும் என்ற ஆர்வமும், உறுதியும் அந்த இளம் வயதிலேயே வெங்கடசுப்பிரமணியனின் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டன. குடும்பத் தாரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் அவருக்கு இருந்தது. தாயார் நாளேடுகள் முதல் இதிகாசங்கள் வரை படித்துக்காண்பிப்பாராம். தந்தை ஆங்கிலம் போதித்தார். உடன்பிறந்தவர்களும் இவருக்கு இப்போதுமே பக்கபலமாக இருந்துவந்தனர். 1986ஆம் வருடம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருவை யாறு அரசர் தமிழ் மற்றும் இசைக்கல்லூரியில் மிருதங்கம் பட்டயப் படிப்பில், விதிவிலக்கின் அடிப்படையில் தனது 29ஆம் வயதில் சேர்ந்தார் வெங்கடசுப்பிர மணியன். இவர் ஒருவர் தான் மாணாக்கர்களில் பார்வையிழந்தவர். ஆரம்பத்தில் இவரை ஒருமாதிரிப் பார்த்த சக மாணவர்கள் நாளாக ஆக இவரை மூத்த சகோதரனைப்போல் நடத்தத் தொடங்கினார்கள். அவர்கள் 8ஆம் வகுப்பு படித்தவர்களே. ஆனால், அவர்கள் வெங்கடசுப்ரமணியனின் கல்வி தொடர பெரிதும் உதவினார்கள். அவருக்கு ஆர்வமாகப் படித்துக்காட்டினார்கள். பள்ளிக் கல்வியையும் முடித்தார் வெங்கடசுப்ரமணியன். மிருதங்கம் கற்கத் தொடங்கியவர் இறுதியில் இந்திய இசையில் கீழ்/மேல் நிலைகளில் தேறினார். 1991இல் டி.டி.ஸி முடித்தார்(இசையாசிரியர் பயிற்சி). 1995இல் வெங்கடசுப்ரமணியனின் மனைவியாக மனம்விரும்பி முன்வந்தவர் சூரியா. பார்வையுள்ளவர். இன்றளவும் வெங்கடசுபரமணியத்தின் வலதுகர மாகத் திகழ்ந்துவருகிறார்!
•Last Updated on ••Saturday•, 09 •August• 2014 22:48••
•Read more...•
••Friday•, 01 •August• 2014 22:36•
?? - சுதாராஜ் -??
சிறுகதை
“வெளிக்கிடுங்கோ போவம்!” என அப்பா அவசரப்படித்தினார்.
இதை அவர் நூறாவது தடவையாகச் சொல்கிறார் என்று சொல்லலாம். அம்மா அதற்குக் காது கொடுத்தமாதிரித் தெரியவில்லை. சுவரோடு சாய்ந்திருந்த என்னிடம் “எழும்படி…போ!… அடுப்பை மூட்டு!” என்றாள். தம்பி அழுதுகொண்டிருந்தான். அவனுக்குப் பால்மா கரைப்பதற்குச் சுடுத்தண்ணீர் தேவை. அதற்காகத்தான் அடுப்பை மூட்டச் சொன்னாள். நான் எவ்வளவு முயன்றும் அடுப்பு மூளாது புகைந்து கொண்டிருந்தது. அம்மா என் காதை பிடித்துத் திருகி இழுத்தாள். “இஞ்சாலை விட்டிட்டுப் போ!.. ஏழு வயசாகுது இன்னும் அடுப்படி வேலை செய்யத் தெரியாது!” எனத் திட்டினாள். பிறகு தானே அடுப்பை மூட்டப் போனாள். ஷெல் அடிச்சத்தம் கேட்க, விறாந்தையில் இருந்த தம்பி வீரிட்டுக் குளறினான். அம்மா விறாந்தைக்கு ஓடினாள். இரவு முழுவதும் யாரும் உறங்கவில்லை. ஆமி மூவ் பண்ணி வருகிறதாம் சனங்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் ஆரவாரம் ரோட்டில். குண்டுச்சத்தங்கள்.. அப்பா ரோட்டுக்கு ஓடுவதும் வீட்டுக்கு வருவதுமாக ஒரு நிலையின்றித் தவித்துக்கொண்டிருந்தார். “எல்லாச் சனங்களும் வெளிக்கிட்டிட்டுதுகள். நாங்கள் மட்டும் இருக்கிறம்…. வெளிக்கிடுங்கோ போவம்!” என அடிக்கடி சொன்னார்.
•Last Updated on ••Friday•, 01 •August• 2014 22:39••
•Read more...•
••Sunday•, 13 •July• 2014 20:12•
??- சுதாராஜ் -??
சிறுகதை
நேட்டோ விமானங்கள் குண்டு வீசியபோது இரவு பதினொரு மணிக்கு மேலிருக்கும். நான் அப்போது இன்னும் தூங்கியிருக்கவில்லை. சட்டென எழுந்து அறைக்கு வெளியே பல்கணிக்கு ஓடிவந்தேன். அறை, கட்டடத்தின் ஆறாவது மாடியில் அமைந்திருந்ததால் வெளியே வெகுதூரம்வரை பார்க்கக்கூடியதாயிருக்கும். குண்டுச்சத்தம் கேட்டதும் ஓடிவந்து வெளியே பார்க்கும் மிரட்சி எதேச்சையாகவே நிகழ்ந்துவிடுகிறது. குண்டுத் தாக்குதல் மிக அண்மையான இடங்களில் நடந்திருக்குமோ.. சத்தமும் கட்டடத்தின் அதிர்வும் அந்தமாதிரி இருந்ததே என்ற பதற்ற உணர்வுதான் காரணம். நேட்டோ படையினரின் குண்டு வீச்சுக்களும்.. அவற்றைத் தொடர்ந்து லிபிய அரசப் படையினரின் வான் நோக்கிய விமான எதிர்ப்பு வேட்டுக்களின் சத்தங்களும் சில இரவுகளாகத் திரிப்போலி நகரின் இரவுகளைக் கலக்கிக் கொண்டிருந்தன.
என் அறைக் கதவு அவசர கதியிற் தட்டப்பட்டது.
அழைப்பொலியை விசைக்காமல் இப்படி நாலு வீடுகளை எழுப்புவதுபோலப் படபடப்புடன் கதவைத் தட்டுவது யாராக இருக்கும் என்று எனக்குத் தெரியும். கதவின் கொளுக்கியை விடுவித்துத் திறப்பதற்கு முற்படும்போதே, அதைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுளைந்தார்கள்.. பிரியசாந்தவும் சந்திரசேனவும். நான் பணியாற்றும் கம்பனியின் ஊழியர்களான இவர்களும் இதே கட்டடத்தின் இன்னொரு அறையிற் தங்கியிருந்தார்கள். விமானக் குண்டுவீச்சு தொடங்கிய நாளிலிருந்து குழம்பிப்போயிருந்தார்கள். கடந்த சில நாட்களாக, ‘இலங்கைக்குப் போகவேண்டும்.. அதற்கு ஒழுங்கு செய்யுங்கள்..’ என நச்சரித்துக்கொண்டிருந்தார்கள். யுத்தம் உக்கிரமடைந்து வான்வழி தடைவலயமாக்கப்பட்டிருக்கும் கட்டம் இது. லிபியாவிலிருந்து நினைத்தவுடன் இலங்கைக்குப் போவதென்பது இயலுமான காரியமல்ல என்பது இவர்களுக்கும் தெரிந்திருந்தது. எனினும் ஒவ்வொரு குண்டு வீச்சின்போதும் எனது அறைக்கே வந்துவிடுகிறார்கள்.
•Last Updated on ••Sunday•, 13 •July• 2014 20:21••
•Read more...•
••Saturday•, 21 •June• 2014 23:16•
??- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -??
சிறுகதை
‘அறிவு, என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’
‘ஏன் என்ன பிரச்சினை?’
‘அப்ப உனக்கு போன்’ எடுக்கக்கூடாதோ?’
‘தேவையில்லை என்று சொல்லி அடித்து ‘போன்’ றிசீவரை வைக்கவேணும்போல் இருந்தது அவளுக்கு. நெஞ்சுக்குள்ள இனம் தெரியாத கவலை,
யோசனை, எல்லாம் தான் அவளுக்கு. என்ன ஒவ்வொருநாளும் ‘போன்’ செய்து நடக்கிற செய்திகள் எல்லாம் சொல்ல வேண்டும். அதுதான்
அவளுக்குக் கோபம் ஏறியிட்டுது போல இருக்கு.
‘யாருக்கு ‘போன்’ எடுத்தனீங்க?’ அவள் கேட்டாள்.
•Last Updated on ••Saturday•, 21 •June• 2014 23:21••
•Read more...•
••Wednesday•, 04 •June• 2014 20:48•
??- கசான் கனாபனி ( பாலஸ்தீன எழுத்தாளர் ); தமிழில்-ரா.பாலகிருஷ்ணன் -??
சிறுகதை
ஜப்பாவிலிருந்து ஆக்ரிக்கு நாங்கள் புறப்படத் துவங்கும் நிலையில் எங்கள் புறப்பாடு ஏதும் துயர் கொண்டதாயில்லை. விழாக்காலங்களில் மற்றவர்கள் எவ்வாறு அயல் ஊருக்கு ஒவ்வொரு ஆண்டும் செல்வரோ, அவ்வாறே நாங்களும் செல்ல நினைத்தோம். ஆக்ரியிலும் எமது நாட்கள் நன்கு கழிந்தன. எவ்விதச் சம்பவங்களுமின்றி. எனக்கு இந்நாட்கள் பிரியமானவை. ஏனெனில் நான் அந்நாட்களில் பள்ளி செல்ல வேண்டியிருந்ததில்லை, சூழல் எதுவாயினும், ஆக்ரியில் அன்றிரவு நிகழ்ந்த பெருந்தாக்குதலைத் தொடர்ந்து பின் நிகழ்ந்தவைகள் வேறொன்றை உணர்த்தின. அவ்விரவு கசப்பாக, கொடூரமாகக் கழிந்தது; ஆண்கள் சோர்வுற, பெண்கள் ஆழ்ந்து பிரார்த்தனை செய்ய என, நீ, நான் நம் வயதொத்தவர்கள் இந்நிகழ்வுகளை உணர்ந்து கொள்ளும் அளவு முதிர்ச்சியற்றவர்களெனினும் ஆதி அந்தம் என எதுவும் விளங்கவில்லை எனினும்- உண்மை மெதுவாக துலங்க ஆரம்பித்தது. காலையில், யூதர்கள் பின்வாங்கும் நிலையில் அவர்கள் எரிச்சலுடன் மிரட்டல் விடுத்தவாறு இருந்தபோது-- ஒருபெரிய லாரி ஒன்று எங்கள் வீட்டின் முன் வந்து நின்றது.. படுக்கைகளின் ஒரு சிறு தொகுப்பு இங்கும் அங்கும் விரைவாக, எரிச்சலுடன் எறியப்பட்டது. நான் வீட்டில் பழஞ்சுவர் ஒன்றின் மீது வியந்து நின்று கண்ட நிலையில் உனது தாய், அத்தை மற்றும் குழந்தைகள் லாரியில் ஏறிக் கொண்டிருப்பதைக் கண்டேன். உன்னுடைய தந்தை ,உன்னை, உனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை பொருட்கள் மீது உள்ளெறிந்தவாரிருந்தார். உனது தந்தை என்னைப் பற்றி ஓட்டுநரின் மேற்புறம் காணப்பட்ட பலகைக்கு மேலாக உயர்த்தினர்; அங்கு எனது சகோதரன் ‘ரியாத்’ அமைதியாக அமர்ந்திருந்தான். நான் ஒரிடத்தில் அமைதியாக அமரும் முன் லாரி நகரத் தொடங்கியது. அன்பிற்குரிய ஆக்ரி, ராஸ் நாகுராவிற்கு செல்லும் சாலை எம்மை அழைத்துச் சென்ற வழியில் வாகனம் கிளம்பியதும் கண்களிலிருந்தும் மறையத் துவங்கியது.
•Last Updated on ••Wednesday•, 04 •June• 2014 20:53••
•Read more...•
••Monday•, 02 •June• 2014 23:13•
??- சுதாராஜ் -??
சிறுகதை
தாமரா வீட்டை விட்டுப் போய் பத்து நாட்களாகிறது! இன்றைக்கு வருவாளோ.. இன்றைக்கு வருவாளோ, என எண்ணி ஏமாந்த பொழுதுகளைப் போலவே இன்றைய நாளும் போய் விடுமோ என்ற ஏக்கம் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. சோகம் அவனைக் குப்புறப் போட்டு அழுத்தியது. படுக்கையிலிருந்து எழவும் மனதில்லை. அழவேண்டும் போன்றதொரு உணர்வு தொண்டையை அடைத்துக்கொண்டிருக்கிறது. அழுகை எதற்காக? தாமராவுக்காகவா? தாமரா வீட்டை விட்டுப் போன நாளிலிருந்து அவனுக்கு, தான் தனிமைப்பட்டுப்போனது போன்றதொரு விரக்தி மனதை எரித்துக்கொண்டிருந்தது. தன் உணர்வுகளை அவள் புரிந்து கொள்ளவில்லையே என மனம் வெதும்புகிறது. அப்படி அலட்சியப்படுத்தினால் அதற்கு அழுகை ஏன்? தாமரா தனக்கு யார்? என்ன உறவு? உறவு ஏதுமில்லையெனில் ஒன்றுமே இல்லையென்றாகிவிடுமா? அவனுக்குப் புரியவில்லை. எனினும் அழுகை தேவைப்படுகிறது. எதற்காகவோ என்று காரணம் தெளிவாகாவிடினும் அழுது தீர்க்கவேண்டும் போலிருக்கிறது.
•Last Updated on ••Monday•, 02 •June• 2014 23:17••
•Read more...•
••Sunday•, 01 •June• 2014 18:26•
??- நடேசன் -??
சிறுகதை
ஆண் இளைஞனாக இருக்கும் காலத்தில் தனது காமத்தின் வீரியத்தால் தனக்குரிய பெண்ணை வசப்படுத்தி வைத்திருக்கலாம் என நினைக்கிறான். மத்திய வயதில் பணத்தால் அது முடியும் என மனம் சொல்லுகிறது வயதான காலத்தில் பிள்ளைகள், குடும்பம் என்பன பெண்களை கட்டுக்குள் வைத்திருக்கும் என அவன் தீர்மானிக்கிறான். இப்படியான ஆண்களின் சிந்தனையைத் தாண்டிச்செல்லும்; அன்னா கரினாக்கள் ரஷ்யாவில் மட்டுமல்ல இலங்கையின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு எண்பதாம் ஆண்டுகளில் கிடைத்தது. அந்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது. மருத்துவர்களுக்கு மட்டுமே இறந்த மனிதர்களின் உடலை வெட்டி உள்ளுறுப்புகளை கூறாக்கி பார்க்கும் அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அது மனதிற்கு உவப்பானதாக இருக்காது. பலரால் கண் திறந்து பார்க்கவும் முடியாதது .
தென்னிலங்கையின் சிறிய நகரம் ஒன்றில் அரசாங்க மருத்துவராக இருந்த நண்பன் குமாரின் வீட்டில் சிலகாலம் இருந்தபோது அவன் இறந்த உடலைக் கூறுபோடும்போது பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் ஏற்பட்டது. அது ஒரு விவசாயிகள் வாழும் சிறிய நகரம். நகரத்தைச் சுற்றி பதினைந்து கிலோமீட்டர் சுற்றி உள்ள கிராமங்களுக்கு இந்த நகரமே இதயம். மருத்துவமனை, மருத்துவர் குடியிருப்பு, இரயில்வே நிலையம் மற்றும் கடைகள் இருப்பதனால் அந்த நகரத்திற்கு விவசாயிகள் தங்களின் நாளாந்த தேவைகளின் நிமித்தம் அங்கு வருவார்கள். அந்த நகரத்தில்; நான் மிருக மருத்தவராக இருந்த காலத்தில் அங்கு குமார் அரசாங்க வைத்தியசாலையில் மருத்துவராக இருந்தான். ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் நாம் நண்பர்களாக இருந்ததால் எமது நட்பு அங்கும் நீடித்தது.
•Last Updated on ••Sunday•, 01 •June• 2014 18:41••
•Read more...•
••Monday•, 21 •April• 2014 18:27•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
கீதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது.அடக்க முயன்றால்.முடியவில்லை.கலங்கிய கண்களுடன்,வேலை செய்வதை விட்டு,எழும்பி நின்று பயிர்களைப் பார்த்தாள்.பச்சை விரித்தாற் போல்,பரந்து கிடந்தது.பூக்கிறதுக்கு காலம் இருக்கிறது.மற்ற தோழிகளிற்கு,பெரிய விவசாய அறிவில்லாவிட்டாலும்,பயிரின் கீழேயுள்ள மண்ணை சிறிது கொத்தி தூர்த்தும்,ஏதாவது விருந்தாளியான களைப் பூண்டின் பகுதி தெரிந்தால் வேருடன் பிடுங்கி,இடுப்பில் செருகியுள்ள சொப்பிங் பையில் போட்டுக் கொண்டுமிருந்தார்கள்.அவள் இடுப்பிலும் ஒரு பை தொங்கிறது . அவளைப் போன்ற சோகம் அவர்களுக்கில்லை.இருந்தாலும்,அவளுடன் அனுதாபத்துடனே பழகிறார்கள்.அவளால் தான் ‘தனித்த’ நிலையிலிருந்து விடுபட முடியவிலை. வீடும்,அவளைப் போலவே கிடக்கிறது.'உற்சாகமாகவிருக்க வேண்டும்,நம்பிக்கைகளுடன் இருக்க வேண்டும்,இன்று புதிதாய் பிறந்தோம் என்ற பாரதிக்கவிதை வரியை எடுத்து அலம்பிற அப்பாவிற்குக் கூட நாடி விழுந்து விட்டது.
•Last Updated on ••Monday•, 21 •April• 2014 18:29••
•Read more...•
••Monday•, 21 •April• 2014 18:15•
??- சுதாராஜ் -??
சிறுகதை
'நைட் ஸிஃப்ட்" வேலை முடிந்து பஸ் எடுத்து வீட்டுக்கு வந்து சேர எட்டு மணியாகிவிட்டது. நித்தியும் கோபாலும் ஏற்கனவே புறப்பட்டுவிட்டார்கள் என்பதை பூட்டியிருந்த கதவு காட்டியது. இப்படி சில நாட்களில் அவர்களுக்கு பொறுப்புணர்வு மிகுதியானதுபோல் நேரத்துடன் வேலைக்குப் போய்விடும் அற்புதம் நடப்பதுண்டு. கதவைத் திறந்து வீட்டுக்குள் போனதும் தனிமையை மறக்க ரேடியோவை 'ஓன்" பண்ணினேன். 'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…" என அது பாடியது. இரவு வேலைக்குப் போகிறவர்களெல்லாம் தூக்கம் கெட்டு கடமையே கண்ணாக இருப்பார்களாக்கும் என அது அப்பாவித்தனமாக எண்ணிக்கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு இப்போது உறங்க முடியாது. சமையல் வேலை காத்துக்கொண்டிருக்கிறது. உத்தியோக நிமித்தம் இந்த நகரத்துக்கு வந்து தங்குமிட வசதி கருதி ஒன்று சேர்ந்தவர்கள் நாங்கள். நகரத்தையண்டிய பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடியேறியிருந்தோம். நித்தியானந்தன் கிராம அபிவிருத்தி அலுவலராக வேலை பார்க்கிறவன். கோபாலச்சந்திரன் ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி. தொழிற்சாலை ஒன்றில் 'ஸிஃப்ட் என்ஜினியரா"கக் கடமையாற்றுகிறவன் நான். அன்றாடம் வேலைக்குப் போவது, வருவது, சாப்பாட்டுக் கடைகளில் போய் எதையாவது வயிற்றுப்பாட்டுக்குப் போட்டுவிட்டு வந்து அறைகளில் ஒதுங்குவது என்று எங்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. உப்புச் சப்பில்லாத இந்த வாழ்க்கைக்கு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாமே எனக் கருதி 'நாங்களே சமைக்கிற" திட்டத்தை ஆரம்பித்தோம். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. மூவருமே திருமண வயதில் (திருமணத்தை எதிர்பார்த்து) காத்திருக்கும் இளைஞர்கள். வந்து வாய்க்கப்போகிற மனைவிக்குச் செய்யவேண்டிய பணிவிடைகள் பற்றிய பயம் (அல்லது ஆர்வம்) உள்@ர எங்களுக்கு இருந்தது. விளையாட்டாகவேனும் சமையற் கலையைக் கற்றுத் தேர்ந்துவிடலாமே என்ற ஆசைதான்.
•Last Updated on ••Monday•, 21 •April• 2014 18:19••
•Read more...•
••Monday•, 21 •April• 2014 18:05•
??- வே.ம. அருச்சுணன் (மலேசியா) -??
சிறுகதை
கைபேசி ஒலிக்கிறது!
எடுத்துப் பார்க்கிறேன். அறிமுகமான எண்தான்!
பள்ளி முதல்வர் நாஷான் பேசுகிறார்.
நான் குழப்பமடைகிறேன்.
மன உளைச்சல். நேரத்திலேயே வீடு திரும்புகிறேன்.
“என்னங்க....சீக்கிரமா திரும்பிட்டிங்க?”
“வதனி......சந்துரு எங்கே.....?”
•Last Updated on ••Monday•, 21 •April• 2014 18:07••
•Read more...•
••Sunday•, 13 •April• 2014 18:42•
??- இணுவை சக்திதாசன், டென்மார்க் -??
சிறுகதை
தூக்கத்திலிருந்து விழித்த ... மீனா அதிர்ந்துபோனாள். ! கலைந்து போய்கிடந்த ... அவளது சேலைத்தலைப்பினூடாக ... தன் மார்பகங்களை ரசித்தபடி மேயும். காமக்கண்களை கண்டவுடனேயே அவளது நித்திரை பாதியிலேயே பறந்து போனது. பக்கத்தில் கிடந்த தன் மகன் செவ்வேளைப் பார்த்தாள். அவனையும் காணவில்லை என்றவுடன், 'திக்' கென்றது அவளது நெஞ்சு. காயங்களுடன் ... முனகிக்கொண்டிருக்கும் ஒரு சிலரைத் தவிர, மிகுதிப்பேர் நல்ல நித்திரை என்பதற்கு அந்த மண்டபத்தில் போட்டிபோட்டு கேட்கும். குறட்டைச்சத்தங்கள் ... சாட்சியாக இருந்தது. மீனா படுக்கையை விட்டெழுந்து . . தன் மகனைத் தேடி வெளியே ஓடினாள். வழமையாகவே ... அடிக்கடி அவன் போயிருக்கும் இடம்தான் இப்பவும் அவன் போயிருந்தது. அந்த அகதிமுகாமின் பின்பக்கத்தின் முட்கம்பி வேலியருகில் ஏதோ .. பறிகொடுத்தவன் போல குந்தியிருந்ததை கண்ட மீனா துடித்தே போனாள். முட்கம்பி வேலியையே .. வெறித்து பார்த்துக்கொண்டிருந்த, செவ்வேளின் கன்னம் இரண்டிலும் அடிக்கடி வழிந்தோடி துடைப்பாரின்றி .. காய்ந்துவிட்ட கண்ணீர் சுவடுகள்.அவனின் சோகத்தை புடம்போட்டு காட்டியது.!
•Last Updated on ••Sunday•, 13 •April• 2014 18:50••
•Read more...•
••Sunday•, 13 •April• 2014 18:07•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
சந்திரனுக்கு அன்று ஜாதகத்தில் ‘புது மாதிரியான அனுபவங்கள் கிடைக்கும்’ என எழுதியிருக்க வேண்டும்.சில கிரகங்கள் உச்சத்தில் ...இருந்திருக்கலாம். “கோட்டை கட்டி விடாதே தம்பி,அவை அனுபவங்கள் மட்டும் தான்,அனுபவிக்கிறது இல்லை !”அவனுடைய ராசி அவனுக்கு தெரியாதா, என்ன நக்கலாக ஒரு 'உட்குரல்'?சிரித்துக் கொண்டான். விடிந்தும் விடியாத பனிக்காலைப் பொழுதில் (சிறிது இருட்டாக இருந்தது), காலை 7.00 மணி போல ரேடியோ ஓடரைப் பெற்றவன், காரின் டிக்கி திறந்திருப்பது போல தோன்ற, இறங்கிப் போனான். அந்த இருட்டில் நிலத்தில் ஒரு ‘10 டொலர் பிளாஸ்டிக் தாள்’ கிடக்கிறது தெரிந்தது. அந்த 'கெண்டக்கி சிக்கின் ஃபாஸ்ட்பூட்' கடையின் பார்க்கிங் பகுதியிலே காலையிலே எல்லா டாக்சிகளும் அடையிறது வழக்கம். அதிக பனி பொழிந்து கொண்டு இருந்தாலும் '7.00 மணிக்குப் பிறகு பார்க் பண்ணக் கூடாது'என்ற நகரசபையின் வீதிப் பலகையைக் காட்டி காவலர்கள் அபராத டிக்கற்றுக்களைத் தந்து அரியண்டம் தருவார்கள்.இயற்கை அனர்த்தங்கள் நிகழ்வதால் நகர அரசுக்கு நிறைய செலவுகள் ஏற்படுகின்றன. அந்த துண்டு விழுகைகளை சீராக்குவதற்காக இரக்கமற்ற முறையில் காவலர்களைக் கடமையைச் செய்ய வைக்கிறார்கள். அதற்காக, அம்புகளாக, ரொபோவாகவா நடக்க வேண்டும்! நடக்கிறார்களே.
•Last Updated on ••Sunday•, 13 •April• 2014 19:13••
•Read more...•
••Wednesday•, 02 •April• 2014 22:30•
??- வே.ம.அருச்சுணன் (மலேசியா) -??
சிறுகதை
முறையாகச் சங்கீதம் கற்று, தாளம் தப்பாமல் பாடாவிட்டாலும் கேள்வி ஞானத்தால் ஏதோ தனக்குத் தெரிந்த தாலாட்டுப் பாடல்களைப் பாடுகிறார் பார்வதி.அரைமணிநேரம் இதமாகத் தொட்டிலை ஆட்டியபின்னரே ஒன்றரை வயதே நிரம்பிய பேரன் இன்பன் அமைதியாகத் தூங்கத் தொடங்குகிறான். தன்னை மறந்து உறங்கும் பேரனின் அழகை இரசித்தவாறு சோபாவில் அமர்கிறார். ஐம்பத்தெட்டு வயதை அவர் கடந்திருந்தாலும் வீட்டுவேலைகளைச் சளைக்காமல் தான் ஒருவரே செய்துவிடும் சுறுசுறுப்பு அவர் வயதையும் மறைத்திருந்தது.ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தமிழ் நூல்கள் மற்றும் உள்ளுர் மாத,வார இதழ்களை வாசிக்கும் வழக்கத்திற்கும் மாறாகத் தொலைக்காட்சியில் ஒலியேறிக் கொண்டிருந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கும் மனைவியைக் கண்டு வியப்புறுகிறார் கணவர் ரெங்கன். வெளியே சென்று வீடு திரும்பிய அவர் குளித்து உடைமாற்றம் செய்து கொண்டு மீண்டும் வரவேற்பு அறையில் நுழைந்த அவர், மனைவியின் அருகிலுள்ள இருக்கையில் அமர்கிறார்.
•Last Updated on ••Thursday•, 03 •April• 2014 17:34••
•Read more...•
••Wednesday•, 02 •April• 2014 22:10•
??- சுதாராஜ் -??
சிறுகதை
குழந்தை மீண்டும் அழத் தொடங்கியது. வீரிட்ட அழுகை. இரவு முழுவதும் இதே கதைதான். அப்பன் எழுந்து வெளியே வந்தான். அப்பன் அவனது இயற்பெயர். குழந்தையின் அப்பனும் அவன்தான். பொழுது ஏற்கனவே விடிந்துகொண்டிருந்தது. நேரத்தோடு எழுந்த சில காகங்கள் முற்றத்திற்கு வந்திருந்து விடுப்புப் பார்த்தன. இரவு குழந்தை ஒவ்வொரு முறை அழுதபோதும் அப்பனின் நித்திரையும் குழம்பியது. அதனால் பொழுது விடியும் அசுகையே தெரியாமற் கிடந்திருக்கிறான். சிறியதொரு வாங்குபோல தொழிற்படும் மரக்கட்டையில் ஆறப்போட்டுக்கொண்டு அமர்ந்தான். அதையும் வெட்டி அடுப்புக்கு வைக்காதவரையிற் சரிதான். சேவலொன்று பொழுது விடிந்துவிட்ட செய்தியை இப்போதுதான் வந்து (அறை) கூவல் விடுத்தது. அப்பன் இருக்கும் கோலத்தை நான்கு கோணத்திலும் நின்று திரும்பித் திரும்பிப் பார்த்தது. "கவலைகளை ஒருபக்கம் போட்டுவிட்டு எழுந்திரு!" என இன்னொருமுறை கூவியது. சேவல் யாரோ ஒரு வீட்டுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அயலிலுள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று இப்படிச் சம்பளமில்லாத உத்தியோகம் செய்யும் சேவையுணர்வைப் பார்;த்தால் அப்பனுக்கும் ஓர் உற்சாகம் தோன்றியது. ஆனால் அந்தக் கணநேர உற்சாகத்தையும் அழுத்தும் எந்தப் பக்கம் போகலாம் என்று புரியாத கவலைகள். வீடு வாசலை விட்டு உடுத்த உடுப்போடு ஓடிவந்த கவலைகளை ஒருபக்கம் போட்டுவிடலாம். தனக்குச் சொந்தமில்லாத இருப்பிடத்தில் அகதி எனும் பட்டத்துடன் சீவிப்பது.. வயிற்றுப்பாட்டுக்கு அவ்வப்போது நிவாரணம் என்ற பெயரில் மற்றவர் கையை எதிர்பார்த்து நிற்பது.. அதையும் விட்டால் வேறு வழி இல்லாதிருப்பது போன்ற கவலைகளை எங்கே போடுவது?
•Last Updated on ••Wednesday•, 02 •April• 2014 22:27••
•Read more...•
••Monday•, 24 •March• 2014 03:27•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவனுக்கான கதிரையும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் வாசிப்புக்காக இருக்கும். இன்று நியூமனைக் காணவில்லை. மனோகரனுக்கான கதிரை போடப்பட்டிருந்தது. தயங்கியபடியே அதற்கண்மையில் போய் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தான். வீட்டுக்கதவு திறந்து கொண்டது. நியூமன் வெளியே வந்தார். இவனுக்காகவே ஜன்னலிற்குள்லால் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார் போலும்.
"அமருங்கள். சீக்கிரம் வந்து விடுகின்றேன்" சொல்லிக்கொண்டே மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார் நியூமன்.
•Last Updated on ••Monday•, 24 •March• 2014 03:32••
•Read more...•
••Thursday•, 06 •March• 2014 23:06•
??- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -??
சிறுகதை
9.2.2014.- எண்ணங்களாலும், கற்பனைகளினாலும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல பெண்கள் அந்த இனிய நினைவுகள் கானல் நீராகும்போது ஏமாந்து துன்பத்தில் மூழ்கிவிடுகிறார்கள். புதிதாக நாட்டுக்கு வந்த புஸ்பா மூலையில் உள்ள கதிரையில் முழுசியபடி உட்கார்ந்து மூளையைப் பிசைந்துகொண்டிருந்தாள். கதவின் மணியோசை கேட்டது. அந்தச் சிறிய அறையினுள் குமைந்திருந்து பேசிக்ககொண்டிருந்த நண்பர்களைக் ‘கொஞ்சம் அமைதியாக இருந்து கதையுங்கோ’ என்று மகேந்திரன் கேட்டுக்கொண்டான். அகதியாக ஆரம்பத்தில் வந்து அடியுண்டு எழும்பியவாதான் இந்த மகேந்திரன்;. நமது நாட்டில் இருந்து அரசியல் தஞ்சம்கோரி வருபவர்களுக்கு இடவசதி, சாப்பாடு, விசா பெறுவதற்கான ஆலோசனைகள்; என்று அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யும் மனம் படைத்தவர். பிரான்சின் தலைநகரான பாரீசில் உள்ள ‘றெஸ்ரோரன்ட்’ ஒன்றில் வேலை செய்பவர். அங்கு பலவிதமான வேலை வாய்ப்புக்கள் வரும்போது அவற்றில் அகதியாக வரும் இளைஞர்களை ஈடுபடுத்தும் செல்வாக்கு மிக்கவர். பிரெஞ்சு முதலாளிகள் மத்தியில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் நேர்மையாக வேலை செய்யக்கூடியவர்கள், கடின உழைப்பாளிகள் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது.
•Last Updated on ••Thursday•, 06 •March• 2014 23:13••
•Read more...•
••Monday•, 03 •February• 2014 21:36•
??- சுதாராஜ் -??
சிறுகதை
இருள் கசியத் தொடங்கும் மாலை ஆறுமணிப் பொழுதில் அந்த வீதியில் வந்துகொண்டிருந்தேன். முக்கிய நகரங்களைத் தொடுக்கும் பிரதான வீதிதான் அது. எனினும் சன நடமாட்டம் குறைவாயிருந்தது. நகரத்திலிருந்து எட்டுக் கட்டை தொலைவிலிருந்த அந்தப் பகுதியில் குடிமனைகளும் குறைவு. அடுத்த நகரம் சுமார் நாற்பது கிலோமீட்டருக்கு அப்பாலிருந்தது. நாட்டில் சுமுக நிலையற்ற காலம் அது. இருள்வதற்கு முன்னரே மக்கள் வீடுகளுள் அடங்கிப்போய்விடுவதற்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். இன்னும் வெட்டப்படாத காட்டு மரங்களும் பற்றை புதர்களும் இரு மருங்கும் கொண்ட வீதியில், இந்தத் தனிமை வேளையில் எனது ஐம்பது சீசீ ஸ்கூட்டரில் பயணித்து வருவது சற்றுத் திரில்லாகக்கூட இருந்தது. முகத்திலடிக்கும் குளிர் காற்றின் சுகத்துடன் பறந்து செல்லும் ஒரு குருவியாக நான். ஆனால் வீதியில் மூச்சிரைக்கும் வேகத்தில் அவ்வப்போது வரும் வாகனங்கள் இந்த அனுபவிப்பைக் கெடுத்துவிடும்.
•Last Updated on ••Monday•, 03 •February• 2014 21:43••
•Read more...•
••Monday•, 03 •February• 2014 21:26•
??- பசுந்திரா சசி (U.K.) -??
சிறுகதை
" பிச்சை எடுக்கிறதுக்காகவே பிள்ளையை பெறுவது , பிறகு - பேத்தி ,பேத்தி - எண்டு சொல்லித்திரியிறது 'பேத்தியின்ர அப்பாவும் நான் தான் ! 'எண்டு சொல் வேண்டியது தானே...." என எரிந்து கொண்டு பெருமாள் கோயில் படி ஏறினார் ஒரு நடுத்தர வயது பெண் – அந்த பிச்சைக்காற முதியவருக்கு இது ஒன்றும் புதிதில்லை . சேற்றில் தோய்த்தெடுத்த கோலத்தில் இருந்தாலும் பார்ப்பதற்கு அழகான சிலை போல் ஒரு கையில் பிள்ளையும் மறு கையில் பிச்சைத்தட்டும் ஏந்திய படி இருக்கும் மகளையும் , மனம் கல்லாகி மரத்துப் போய் எதற்கும் பதிலோ இல்லை கேள்வியோ கேட்காத அவரையும் இப்படி ஊரார் எள்ளி நகை யாடுவது இன்று நேற்று அல்ல இரண்டு வருடத்திற்கு மேலாக நடக்கிறது . 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொழுத்துவோம் ' என்ற பாரதியின் கூற்றுக்கு 'மாதர் தம்மை (தாமே ) இழிவு செய்யும் மடமையைகொழுத்துவோம் ' . என்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் விபரிப்பை எண்ணி மனதில் நகைத்தபடி . தாடியை தடவிக் கொண்டு அனேகமாக காதலிக்காக காத்திருந்த அந்த இளைஞனை நோக்கி நடந்தார் பேச்சு வேண்டிய பிச்சைக்காற முதியவர் . யாழ் மாநகரிலே பிரசித்திவாய்ந்த கோயில்களில் பெருமாள் கோயிலும் ஒன்று . அழகான சுற்றுசூழலில் இருக்கும் இந்த கோயிலில் தினமும் பூசைகள் தவறாது நடைபெறும் . இவ் ஆலயம் அதிக பக்தர்கள் சூழும் இடம் என்பதால் காதலர்கள் முதல் வியாபார நிலையங்கள் வரை ஏன் பிச்சைக்காறர்களுக்கு கூட பஞ்சமில்லை .
•Last Updated on ••Monday•, 03 •February• 2014 21:34••
•Read more...•
••Sunday•, 12 •January• 2014 21:51•
??- சுதாராஜ் -??
சிறுகதை
நான் மனைவியைத் தேடி வீட்டிற்குள் சென்றபோது அவள் குளிப்பை முடித்து, அழகான சேலையில்… சுவாமி தரிசித்து, ப+ச்சூடி, குங்குமப் பொட்டிட்டுப் புனிதமாகத் தோன்றினாள்.
“இந்த வீட்டுக்குக் குடிவந்த நாளிலிருந்து இப்பதான் என்ர மனம் நிறைஞ்சிருக்கு!” என்றேன்.
அவள் நாணம் மேலிட, “எப்பிடி வெளிக்கிட்டாலும் உங்களுக்கு ஏதாவது குறைதானே…? சரி, சரி! இப்பவாவது இந்தத் திருவாய் மலர்ந்தது போதும்!” எனத் தனது மகிழ்ச்சியை மனக்குறை போல வெளிப்படுத்தினாள்.
“நான் அதைச் சொல்லயில்லை..!”
“குருவிப்பிள்ளையள் கூடு கட்டுகினம்!”
“உண்மையாவா?” ஆச்சரியம் அவள் முகத்தில் மலர்ந்தது.
•Last Updated on ••Sunday•, 12 •January• 2014 21:54••
•Read more...•
••Sunday•, 12 •January• 2014 21:45•
?? - நடேசன் -??
சிறுகதை
குவான்ரஸ் விமானத்தின் எக்கணமி வகுப்பு இருக்கைகள் நெருக்கமாக இருந்தன. யன்னலருகே அவனது இருக்கையின் கைப்பிடியை உயர்த்திவிட்டு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த சேராவோடு மேலும் நெருக்கமாக சாய்ந்தான் ஆனந்தன். அவளது உடலின் நெருக்கம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தி உடலின் உள்ளே இரசாயன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கிளர்ச்சி மதுவின் போதைபோல் மேலும் மேலும் அவனுக்கு தேவையாக இருந்தது. அவனது போதை கொண்ட மனம் விமானத்தின் வேகத்துக்கு மேலாக ஆகாயவெளியில் இறக்கைகட்டிப் பறந்தது. இரத்த நாடிகளில் வேகமாக ஓடும் குருதியின் ஓட்டத்தை நாடித் துடிப்பில் கை வைத்து பார்த்துக் கொண்டான். அவனது இதயத்தின் துடிப்பு பல மடங்கு அதிகமானதால் அவசரத்தில் உள்ளே இருந்து வெளிவர துடிக்கும் சிறுவன் கதவைத் தட்டுவது போல் நெஞ்சாங் கூடு அதிர்ந்தது. சேரா குளிருக்காக போரத்தியிருந்த மண்ணிற கம்பிளி போர்வையின் ஊடாக அவளது கைகளின் மணிக்கட்டுப் பகுதியை பிடித்தபோது கழுத்தை திருப்பி மெதுவாக என்ன என்பது போல் சிரித்தாள்.
•Last Updated on ••Sunday•, 12 •January• 2014 21:47••
•Read more...•
••Saturday•, 11 •January• 2014 21:03•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
என்ன எழுதலாம்?..சாந்தனுக்கு எதுவும் தோன்றுவதாய் தெரியவில்லை.ஒரு சிறுகதையை எழுதி நாளாந்தம் வருகிற பலகணி பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டால் ,அதில் வெளிவருவதற்கான சாத்தியமும் இருக்கிறது தான். அதன் ஆசிரியர் ஜேம்ஸ், சில அலம்பல்களை வெட்டி எடிட் பண்ணி, சனிக்கிழமை வாரமலரில் போட்டு விடுவார்.அவருடைய முதல் கதை பிரசுரமான போது அவரிமிருந்து சிறு கடிதமும் வந்திருந்தது."இளம் எழுத்தாளரே (உச்சி குளிர்ந்து விட்டது) தொடர்ந்து எழுதும். உம்முடைய எழுத்தில் ஒரு கதை ஒளிந்து கிடக்கிறது"என்று எழுதியிருந்தார். 'கதை' கிடையாவிட்டால் மெளனம்! இவர் புரிந்து கொள்வார். இவர் அதை மீள வாசித்து திருத்தம் செய்து செப்பனிட்டு மீள ஒரு தடவை எழுதுவார்.அதை 2 நாள் விட்டு எடுத்து வாசிக்கிற போது சிலவேளை அவருக்கு திருப்தி இல்லாமலும் இருக்கும்.அதை திருத்தி, செருக..அது புதிய பாதையில் பயணிக்கும்.அப்படி அவர் ஒரு கதையை 5 தடவைகள் கூட எழுதியிருக்கிறார்.அதற்குப் பிறகு யோசியாது பலகணிக்கு அனுப்பி விடுவார். ஜேம்ஸுற்கு தான் சித்திரவதை. அப்படி இருந்த 3 கதைகளை சேர்த்து ஒரு நாவல் போல அனுப்பினார். பலகணியில் தொடராக வந்து விட்டது.
•Last Updated on ••Sunday•, 12 •January• 2014 21:45••
•Read more...•
••Saturday•, 11 •January• 2014 20:38•
??- கமலாதேவி அரவிந்தன், மலேசியா -??
சிறுகதை
தண்ணீர், தண்ணீர், தண்ணீர், என கண்களைச் சுழற்றிய எல்லா திசைகளிலிருந்தும்,தண்ணீரே உலக நாயகியாய் ஓங்கரிக்க, காற்று ஊழியாய் வீசியடித்தது. தண்ணென்ற ஜல சமுத்திரத்தில் விர்ரென்று போய்க்கொண்டிருந்தது கப்பல். சுருண்டு கிடந்தாள் நாணிக்குட்டி. கப்பல் பயணத்தில் இவளைப் போலவே பலருக்கும் தலைசுற்றலும் வாந்தியும் படுத்தி எடுத்துக் கொண்டுதான் இருந்தது. என்றாலும் ஆண்களில் சிலர் அனுமதி வாங்கி கப்பலின் மேல்பரப்பில் போய் நின்று கொண்டு ஒருநோக்கு ஜலசமுத்திரத்தை பார்த்துவிட்டே வந்தார்கள். குஞ்ஞு குட்டன் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தான்..அப்படி உற்சாகமாக இருந்தது.பின் என்ன ? பச்சை நரம்பு புடைத்த வீர்யம் மிக்க தரவாட்டு நாயராக்கும். இல்லையென்றால் வேறொருவனுக்கு மணம் நிச்சயிக்கப்பட்ட நாணிக்குட்டியை, ராவோடு ராவாக இழுத்துக்கொண்டு ஓடிவரும் துணிச்சல் எவனுக்கு வரும் ? என்னமாய் பெண் இவள்.? குடும்பப் பகை காரணமாக , சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று தெரிந்தும்கூட ,பெண் கொடுக்க மறுத்த” பூவில’ தரவாட்டுக்கே மூக்கறுபட்ட அவமானத்தை கொடுக்கவும் நடு முதுகு நிமிர்வு வேண்டாமா ? இத்தனைக்கும் ”என்னோடு சிங்கப்பூரிக்கு வரியா,” என்று கேட்டது கூட ஒரு முரட்டு வேகத்தில் தான். மறுபேச்சில்லாமல் வெட்கப்பட்டுச் சிவந்தவள் அவன் நீட்டிய கையைப் பற்றிக்கொண்டாள். ஆச்சரியம் தான்! இவளுக்கும் என் மீது இவ்வளவு ஆசையிருந்ததா ?
•Last Updated on ••Saturday•, 11 •January• 2014 20:40••
•Read more...•
••Sunday•, 17 •November• 2013 00:02•
??- தாஜ் (சீர்காழி)-??
சிறுகதை
- எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், பல்வேறு விடயங்கள் பற்றிய கருத்துகள் பலவற்றை உங்களில் பலர் இணையத்தில் வலைப்பூக்களில், இணைய இதழ்களில் (பதிவுகள் உட்பட), முகநூலில் படித்திருக்கலாம். எனக்கு அவரது எழுத்தில் பிடித்த விடயங்களிலொன்று அவரது நடை. ஒருவித நகைச்சுவை ததும்பும் எள்ளல் நடை. அடுத்தது அவரது சிந்தனைப்போக்கு. ஒரு விடயத்தைப் பற்றி பல்வேறு திக்குகளில் படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிந்திப்பது. இன்னுமொரு முக்கியமான விடயத்திலும் அவரை எனக்குப் பிடிக்கும். பாசாங்குத்தனமற்ற, வெளிப்படையான , தற்பெருமையற்ற ஆளுமை. அவரது எழுத்தில் காணப்படும் இன்னுமொரு விடயம்: கூர்ந்து அவதானித்தல். தன்னைச் சுற்றிவரும் உலகில் நடைபெறும் செயல்களை, உறவுகளை. நிலவும் வாழ்வியற் போக்குகளை இவற்றையெல்லாம் மிகவும் கூர்ந்து அவதானிப்பது அவரது இன்னுமொரு திறமையான பண்பு. 'பால்ய விவாஹம்' என்ற அவரது இந்தச் சிறுகதையின் தலைப்பினைப் பார்ததும் 'பால்ய விவாகம்' பற்றிய விமர்சனமாக இருக்குமோ என்று எண்ணி வாசித்தால் இந்தச் சிறுகதையில் விரிந்த உலகு என்னைப் பிரமிக்க வைத்தது.
•Last Updated on ••Monday•, 18 •November• 2013 21:09••
•Read more...•
••Monday•, 04 •November• 2013 19:44•
??- அரு.நலவேந்தன் -??
சிறுகதை
அவன் உரையாடலுக்குப் பிறகு கிளர்ச்சி உடலில் பரவியது.என் பற்கள் கீழ்உதட்டைக் கவ்விக்கொண்டன. பனிக்காற்று ஈர உடலுடன் ஊடுருவிய சுகம் அவனது சொற்கள்.எத்தனை முறை முயற்சித்தும் கிடைக்காத அந்தத் தருணம் இன்றோடு நிறை வேறிவிடும்.அவன் சொன்ன விதிகள் மனம் மறந்து தெளிவுற்றது. விரல்களால் கண்ணைப் பிசைந்து கொண்டு பக்கத்தில் பார்வைச் சிதறவிட்டேன். அவனது சரிரம் மறைந்து கொண்டும் கடிகாரம் சுறுசுறுப்புக் கொண்டும் இருந்தது.
•Last Updated on ••Monday•, 04 •November• 2013 19:57••
•Read more...•
••Thursday•, 12 •September• 2013 19:44•
??- மூலம்: ஏ.ஜி. அத்தார் / தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -??
சிறுகதை
நான் இந்தியக் காவலரனைக் கடந்து வேகமாக நடந்து சென்றேன். அது மத்தியான நேரம். எவரும் தென்படவில்லை. சிலவேளை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறில்லையெனில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நடுப்பகலில் எந்தவொரு மனித ஜீவராசியும் தேசத்தின் எல்லையைக் கடந்து செல்வரென அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். வியர்வை வழிய நான் புகையிரதமொன்றைப் போல வேகமாக ஓடினேன். எனது சகோதரனின் முகம் எனது கண்ணெதிரே தோன்றுகிறது. அவரது நிலைமை படுமோசமானதென தகவல் தந்தவர் கூறியிருந்தார். நீலம் ஆற்றங்கரையில் தனது இல்லத்தில் வசிக்கும் அவனுக்கு தனதென்று சொல்லக் கூடிய எவரும் அங்கில்லை. நான் ஆற்றங்கரையில் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் வசித்து வந்தேன். எனது சகோதரன் ஆற்றின் எதிர்ப்புறத்தில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான கரையில் வசித்து வந்தான். 'அவர் சுயநினைவற்ற நிலையிலும் உங்கள் பெயரையே கூறிக் கொண்டிருக்கிறார்' என தகவல் தந்தவர் கூறியிருந்தார். அவ்வாறான தகவலொன்று கிடைத்த பின்னர் நான் அமைதியாக இருப்பது எவ்வாறு? எவ்வாறாயினும் ஒரே இரத்தத்தில் உண்டான பந்தம் இது.
•Last Updated on ••Thursday•, 12 •September• 2013 19:58••
•Read more...•
••Thursday•, 12 •September• 2013 18:58•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
'சாமக்கோழி கூவுது!,சாமக்கோழி என்ன கூவுறது?, சேவல் தானே கூவும்!, 'கோழி'என்கிறார்களே!, பிழையாய் சொல்றதும் ஒரு ஃபாசனா?ஏன்.. குழப்பமில்லாமல் நேராய் சொல்கிறார்களில்லை. எங்களுக்கோ சொந்த மொழி! இந்த தமிழ் மொழி'யை வேற ஒருத்தன் கற்க வாறான் என்றால், எங்களையே குழப்புற மொழியாக வைத்திருந்தால்,அவன் தலையை பிய்க்க மாட்டானா? அறிவு ரீதீயாக பொருந்தாமலும் கிடக்கிறதே. ஆனால்,'சாமச்சேவல்' என்பதில் ஒரு பொருந்தாமையும் இருக்கிறதாகப்படுகிறது. எங்க'பண்டிதர்களை என்ன செய்யலாம்?'என்ற ஆத்திரத்தோடு சைக்கிளை மிதித்தான். இலக்கணச் சுத்தமாக எந்த மொழியைக் கற்கப் போனாலும் இப்படி இடரப் பட வேண்டி இருக்குமோ? மொழியும்,சுதந்திரமும் உடலும் உயிரும் போன்றது, மொழி எளிமை நல்லதில்லையா?,இந்த சுதந்திரத்திற்காக தானே போராடுகிறோம்.
•Last Updated on ••Thursday•, 12 •September• 2013 21:14••
•Read more...•
••Tuesday•, 10 •September• 2013 21:42•
??- சிதனா - மலேசியா -??
சிறுகதை
“ஏய்... என்னப்பா நீ..? இன்னக்கி இருக்கிறவங்க நாளைக்கி இருப்போமானு எந்த “கேரண்டி”யும் இல்ல...! இதுல என்ன சண்டையும் ... உயிர் போற வரைக்கும் மூஞ்சில முழிக்க மாட்டேங்கற பகையும்...? எதையும்...மனசுலேயே வச்சிருந்தாத்தானே மன்னிப்புன்னு ஒரு சங்கதிய வேற நடுவுல இழுத்து விட்டுக்கிட்டு அலையனும்....அத... அத... அப்பப்ப மறந்திருவோமே..” எப்போதோ, யாரிடமோ, எந்த சந்தர்ப்பத்திலோ.. சொன்னது, இப்படி ஒரு ரூபம் கொண்டு, எதிர்வரும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும். “எனக்கு நீங்க அண்ணன் மொறையா வேணும்..” எதிரே வந்து நின்று கொண்டு புன் முறுவல் பூக்கிறது அவன் விதி! “சொல்றது போல செய்யறது அவ்வளவு சுலபம் இல்லடா செல்லம்...” என்று அவன் மனதே எள்ளி நகையாட, வந்தவனை ஏறிட்டான்! இவனை வார்த்தெடுத்தபின், அதே அச்சில், பிரம்மன் அவனையும் வார்த்திருக்க வேண்டும்! எத்தனையோ ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருக்கும் முகம்தான். புதியவன் ஒன்றும் இல்லை; பக்கத்து கம்பம்தான்! ஆனால், என்றுமில்லா திருநாளாக இன்று மட்டும் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? அதுவும் உறவு முறையெல்லாம் சொல்லிக்கொண்டு!
•Last Updated on ••Tuesday•, 10 •September• 2013 21:51••
•Read more...•
••Thursday•, 29 •August• 2013 22:58•
??- கமலாதேவி அரவிந்தன் -??
சிறுகதை
விடிந்தால் பயணம். வீடெல்லாம் மாய்ந்து மாய்ந்து தேடியாகி விட்டது. கிடைப்பேனா என்று ஆலவட்டம் போட்டது அந்த புத்தகம். வீட்டிலுள்ள நூல்நிலைய அடுக்குகளின் மூலை முடுக்கெல்லாம் கூட தேடியாயிற்று. காணவே இல்லை. அண்மையில் எக்ஸ்போவில் நூலக வாரியம் நடத்திய புத்தக விற்பனையில் சுமக்க முடியாமல் சுமந்து வாங்கிக்கொண்டு வந்த புத்தகக்குவியலில்,பொன் போல் பார்த்துப்பார்த்து தெரிவுசெய்த புத்தகங்கள் எல்லாமே இருந்தன. ஆனால் இந்த பூம்பட்டு புத்தகம் மட்டும் எங்கே போனது என்று தெரியவில்லை. .சுமிக்கு எரிச்சல், கோபம், எல்லாமே தன் மீதுதான். எதிலுமே பொறுப்பில்லை, எதிலுமே கவனமில்லை, என்ன குணமிது ? கணவர் மாதவனின் திட்டுதல் கூட தப்பில்லையோ ? கவலையும் பரபரப்புமாய் லக்கேஜுடன் சாங்கி விமான நிலையத்தில் நின்ற போதும் சுமிக்கு, தோள் பையில் அந்தர்தியானமாகிப்போன புத்தகம் கொண்டுவரமுடியாமல் போன ஏக்கம் தான். அந்த கவலையோடே கணவரைப் பார்த்தபோது மாதவனுக்கு சிரிப்பு வந்தது. இவளைத் தெரியாதாக்கும்.! என்னமோ சந்திர மண்டலத்துக்குப்போவதுபோல் படபடப்பும் , கண்ணீர் விடுதலும். இந்தா இருக்கும் கேரளா . கண்மூடி கண் திறப்பதற்குள் விமான நிலையத்தில் போய் இறங்குவாள். மாநாட்டாளர்களை வரவேற்பதற்காகவே வந்து நிற்கும் காரில் ஏறிப்போக வேண்டியதுதான். அரங்க வளாகத்துக்குள் போய் விட்டால் பிறகு, இவள்தான் சுமி என்று யாராவது சொல்லமுடியுமா? உலகமே சாஹித்யம், சர்வமும் இலக்கியம் என மெய்ம்மறந்து நிற்பவளாயிற்றே ? அரைக்கண் உறக்கத்தில், ஏதோ ஊர்ந்திடும் தொடுகை உணர்ச்சியில் பதறிக்கொண்டு கண் விழித்தால், இருக்கை வாரை ஞாபகப்படுத்துகிறாள் விமானப் பணிப்பெண் . அப்போதுதான் ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பதே நினைவில் உறைத்தது. அட, அதற்குள் கேரளா வந்து விட்டதா? தூக்கக் கலக்கத்தினின்று முற்று முழுதாய் விடுபட்டு விட்டாள். குளித்து, ஜெபித்து,நாமம் சொல்லி, வெளியே வந்தால் மழைச்சாரல் இன்னும் விடவில்லை.
•Last Updated on ••Thursday•, 29 •August• 2013 23:06••
•Read more...•
••Friday•, 05 •July• 2013 20:30•
??ஆசிரியர்:டெஸ்மோண்ட் எல். கார்மாவ்பலாங் [ தமிழில்: சுப்ரபாரதிமணியன் ]??
சிறுகதை
- டெஸ்மோண்ட் எல். கார்மான்பலாங் கவிஞர், நாட்டுப்புற கதைகளை எழுதுபவர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் காசி மற்றும் ஆங்கிலத்திலும் இரண்டு மொழியிலும் எழுதுகிறார். ஷில்லாங்கிங்,கின் வடகிழக்கு ஹில் பல்கலைக்கழகத்தின் வாழ்வியல் மற்றும் கலாச்சார படிப்பினையின் படிப்பவராக உள்ளார். - திரு.கே.வின் மனதில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தன. காரின் ஜன்னலில் தன் பார்வையை பதித்துக் கொண்டு, தெருவில் வரிசையாக இருந்த வீடுகளை பார்த்துக் கொண்டே வந்தார். மக்கள், தனியாக செல்பவர்கள், தோழமை முக பாவத்துடன் இருப்பவர்கள், சிலர் சாலையில் நடந்து கொண்டு, சிலர் கார்களில், தன் கண்களின் முன்னால் நடந்து செல்பவர்களைப் போல் தன் வாழ்க்கையில் நடந்து விஷயங்கள் திரைபோல் ஓடின. நிம்மதியில்லாமல். தன்னுடைய சொகுசான காரில், மெதுமெதுப்பான இருக்கையில் சௌகரியமில்லாமல் முணு முணுத்தபடியே அமர்ந்திருந்தார். வாகன ஓட்டுனர், அவரை நன்கு புரிந்து கொண்டவர் போல் வண்டியின் வேகத்தை குறைத்து, 'என்ன, சார்?' எனக் கேட்டார். 'ஒன்றுமில்லை' என பதிலளித்த திரு.கே- மநதிரிசபையில் இரண்டரை ஆண்டுகளாக அமைச்சராக உள்ளார். 'பெண் நாய்' என திட்டினார். இஸபெல்லால் எப்படி இதை செய்யமுடிந்தது. என்னுடைய நிலைமை அவன் உணரவில்லையா? ஒருவேளை அதனால் நடந்தால் என்ன ஆகும்... கடவுளே நினைத்துக் கூட பார்க்க முடியாது! மணல் வெளியில் மென்மையாக அந்தக் கார் சென்று கொண்டிருக்கையில் திரு.கே பின்னோக்கி கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். மதிக்கப்பட்ட தலைமையாசிரியராக அவர் பணியாற்றிய பள்ளி இருந்த கிராமத்தின் அந்தப் பகுதி எம்.எல்.ஏ 5வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் சமயத்தில் மட்டுமே நினைவு கூர்வார். திரு.கே- பக்கத்து கிராத்தைச் சேர்த்ததுடிப்பான மற்றும் கடின உழைப்பாளி, வலிமையான கைகளையும் எப்போதும் புன்னகையையும், கொண்ட இளைஞன்.
•Last Updated on ••Friday•, 05 •July• 2013 20:42••
•Read more...•
••Monday•, 01 •July• 2013 20:53•
??- கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -??
சிறுகதை
மின்சார விசைப்படகிலிருந்து ஒரு துள்ளு துள்ளிக்குதித்து கீழே இறங்கியபோது பீய்ச்சித்தெறித்த தண்ணீர்த்திவலையில் ,கால்முட்டிவரை நனைந்துவிட்டது. நேரம் இன்னும் புலரவில்லை.என்றாலும் ஈர பேண்டுடன் பிரயாணப்பையைத் துக்கிக்கொண்டு நடப்பது கொஞ்சம் சிரமாகத்தான் இருந்தது. இருள் பிரியாத இந்த நேரத்திலும், சில்வண்டுகளா இல்லை,ட்வீட்டிப் பறவைகளா ,என்று அனுமானிக்க முடியாத அந்த கிறீச்சிடல் ரீங்காரம் சிவநேசனை மிகவும் கவர்ந்தது. சுற்றிலும் கடல்சூழ் இந்த தீவில் தான் ஸ்வாமிஜியும், அவரது தொண்டரடிப் பரிவாரங்களும் வாழ்கிறார்கள் என்பது பற்றிய ஆச்சரியங்களையெல்லாம் கடந்துதான் சிவா இங்கு வந்திருக்கிறான். ஒவ்வொரு முறை ஸ்வாமிஜி மலேசியாவுக்கு வரும்போதும் தனி தரிசனத்துக்கு நிறையவே சிரமப்பட்டிருக்கிறான். பகீரதப்ரயத்னத்துக்குப் பிறகு அவரது பிரத்யேக தொண்டரடியிடம் ,ஸ்பெஷல் பாஸ் எனும் கரிசனத்தில் திருமுகம் காணச்சென்றபோதும் சிவநேசனால் ஒன்றுமே மனம் விட்டுப்பேச முடியவில்லை. அப்பொழுதும் சுற்றி அவரது நிழல்போல் அணுக்கத்தொண்டர்கள் நிரம்பியிருக்க சிவ நேசனுக்கு பேசுவதற்கு எதுவுமே இல்லாமல் இருந்தது. ஸ்வாமிஜி, என்று மட்டுமே நாத்தழுதழுக்க ஆசி பெற்றுக்கொண்டு திரும்பிவிடுவான். ஸ்வாமிஜி ஏழைகளுக்கு நிரம்ப உதவுபவர். பள்ளிக்கூடங்கள் கட்டியிருக்கிறார். மருத்துவமனை கட்டியிருக்கிறார்.இந்த உலகில் பிறந்த யாருமே அனாதையில்லை, என்பதாலேயே அனாதை இல்லம் என்ற பெயரைத்தவிர்த்து,”ஸ்வாமிஜி இல்லம்” என்ற பேரில் நிறைய குழந்தைகள் தங்கிப்படிக்க இலவச விடுதி, கல்விசாலை என, அவர் சேவை செய்யாத துறையே இல்லை. உலகின் பல நாடுகளில் அவரது கீர்த்தி பரவியிருந்தது.இதனாலேயே உலகம் முழுக்க பரிசுத்த தொண்டர்கள் இவருக்கு நிரம்பியிருந்தார்கள். அவர்களில் ஒருவராகத் தன்னை நினைப்பதே சிவநேசனுக்கு பெருமையாக இருந்தது.என்ன பேறு பெற்றிருந்தால் இவர் வாழுங்காலத்தில் தானும் ஜனித்திருக்கிறோம் என்பதே அவ்வப்போதைய அவனது பரவசமாக இருந்தது. ஆனால் அவனுக்கு வாழ்க்கைப்பட்ட மலர்விழியின் கேள்வி வேறாயிருந்தது.
•Last Updated on ••Monday•, 01 •July• 2013 21:08••
•Read more...•
••Sunday•, 19 •May• 2013 23:02•
??-எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -??
சிறுகதை
ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடிய வேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள். செல்விக்கு நீண்ட பின்னல். முழங்கால் வரை நீண்ட பின்னல். எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள். மருத்துவத் தாதிப் பயிற்சிக்கென வந்திருந்த பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மழைக்காலக் காலைப்பொழுதில் அவள் செய்திகொண்டு வந்தபொழுது அப் பின்னலும் முடிச்சும் தூக்குக் கயிறு போலத்தான் தோன்றியது. எந்தப் பெண் எனத் தெரியவில்லை. வெளியூர்ப் பெண். ஆனாலும் இந்த வீதியில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணாகவே இருப்பாள். அருகிலிருந்த நகரத்தின் மையத்திலிருந்த மருத்துவத் தாதிகள் பயிற்சி நிலையத்தில் பயிலச் சேர்பவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த விடுதியில் இறுதி ஆண்டுகளில் தங்கிப் பயிலவேண்டுமென்பது ஒரு விதிமுறை. அந்த விதிக்கமையவோ, அல்லது தங்கிப் படிக்க வேறு வசதியான இடம் அந்த நகரத்தில் அமையாததாலோ பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த எல்லா இறுதியாண்டு மாணவிகளும் அங்கு வந்து தங்கியிருந்தனர்.
•Read more...•
••Thursday•, 16 •May• 2013 18:08•
??- அகில் -??
சிறுகதை
கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதம். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது…..? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் இரண்டு இளவட்டங்கள் நெருக்கமாய் அமர்ந்து, கைகளைப் பிணைத்தபடி உலகையே மறந்து இருக்கின்றனர். அந்த மரத்திற்குக் கீழ் அமர்ந்திருக்கும் சீனநாட்டுச் சோடி ஒவ்வொருநாளும் இதே நேரத்திற்கு இங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள். அந்த வயது முதிர்ந்த ஆப்கான் கிழவனும், மொட்டாக்கணிந்த அவன் மனைவியும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். என்ன சந்தோசமான வாழ்க்கை! திருப்தி எல்லா முகங்களிலும் பிரதிபலிக்கின்றன. எல்லோரும் சந்தோசமாய்…. நிம்மதியாய்….. மகிழ்ச்சியாய்…..நான் மட்டும்……?
•Last Updated on ••Thursday•, 16 •May• 2013 18:13••
•Read more...•
••Tuesday•, 23 •April• 2013 19:51•
??- வே.ம.அருச்சுணன் (மலேசியா) -??
சிறுகதை
“வெள்ளம் ஏறிடுச்சாம்.....! வெள்ளம் ஏறிடுச்சாம்......!”
“வெள்ளம்.......எங்க ஏறிடுச்சு? விவரமா........சொல்லு மணியம்....!”
“வேற எங்க ஜீவா ....! நம்ம...... தமிழ்ப்பள்ளியிலதான்.....வெள்ளம் ஏறிடுச்சாம்....!”
“ நேத்துப் பேஞ்ச செம மழைல.......வெள்ளம் ஏறாம இருக்குமா.....?”
தாழ்வு பகுதியிலே அமைந்திருந்த அப்பள்ளி மழைக்காலங்களில் வகுப்பறைகளில் தண்ணீர் ஏறிவிடுவது வழக்கமான ஒன்றுதான்.கடந்த இருபது வருடங்களாக அப்பள்ளி வெள்ளப் பிரச்னையால் நொந்து நூலாகிப் போனது! பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் மணியமும் செயலாளர் ஜீவாவும் பள்ளிக்கு விரைகின்றனர். இவர்களுக்கு முன்னதாகவே தலைமையாசிரியர் இராமநாதன்,தன் அலுவலகத்தில் ஏறிப்போயிருந்த வெள்ள நீரை ‘பிளாஸ்டிக்’ வாளியில் அள்ளி வெளியில் ஊற்றிக்கொண்டு இருந்தார். பள்ளி ஆசிரியர்கள் சிலரும் அவருக்கு உதவுகின்றனர். பள்ளிப் பணியாளர்கள் மற்ற வகுப்புகளில் ஏறிப்போயிருந்த நீரைச் சிரமப்பட்டு இறைத்துக் கொண்டிருந்தனர்! பல மணி நேர போராட்டத்தின் எதிரொலியை களைத்துப்போன அவர்களின் முகங்கள் தெளிவுபடுத்திக்கொண்டிருந்தன!
•Last Updated on ••Tuesday•, 23 •April• 2013 19:57••
•Read more...•
••Monday•, 15 •April• 2013 17:48•
?? -எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -??
சிறுகதை
பௌர்ணமி நாளின் முன்னிரவுப் பொழுதொன்றில் காற்று வரத் திறந்திருந்த யன்னல் பிடித்தமான மெல்லிசைப் பாடலொன்றினை ஏந்தி வந்து தனித்திருந்த அறையினை நிறைக்கத் தொடங்கிய இக்கணத்தில் உன்னை நினைத்துக் கொள்வது கூட மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. உன்னைக் காற்று ஏந்தி வருகிறதா? மெல்லிசையின் ராகங்களுக்குள் நீ மறைந்து வந்து குதிக்கிறாயா ? பௌர்ணமியின் ஒளிக் கீற்றுக்கள் உன் உருவம் தாங்கி வருகிறதா போன்ற மாயக் கேள்விகளுக்கு என்னிடத்தில் விடைகளில்லை. என்னைப் போல இவையெல்லாவற்றையும் ரசிக்கும் மனம் கொண்ட நீ, என்னுள்ளிருக்கும் நீ, உன்னை நினைக்க வைக்கிறாய். பசுமை மிகுந்த சோலையொன்றின் மத்தியில் நீர் மிதந்து வழியுமொரு கிணற்றினைச் சூழ உள்ள தரையும் கூட ஈரலிப்பைக் காட்டுவதைப் போல உன் அன்பின் ஈரத்தில் கசியுமென் விழிகளை இந்த மாடியின் சாளரத்துக்கப்பாலுள்ள வெளிகளில் அலையவிடுகிறேன். தாயொருத்தி சிறுகுழந்தையை மிகுந்த அன்பைத் தாங்கித் தன் மார்போடு அணைத்தபடி வீதியினோரமாக நடந்து போகிறாள். ஒரு ஆண், தந்தையாக இருக்கக் கூடும், பூலோகம் முழுதையும் சுற்றிப் பார்க்கவைக்கும் பாசத்தை ஏந்தியபடி நடை பயிலக் கற்றுக் கொண்டிருக்குமொரு குழந்தைக்கு, நடக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். சூரியனை இரவில் கொண்டு வரும் நகரத்தின் ஒளிவிளக்குகள், புதிதாகப் பிறந்த தன் குட்டியைக் கழுத்தில் கவ்வி வேற்றிடம் மாற்றுமொரு பூனை, இப்பொழுதுதான் மொட்டவிழ்த்து வாசனை அனுப்பும் இரவுராணிப் பூ, நிஷ்டை கலைந்த கலவரத்தில் எங்கோ கீச்சிடுமொரு ஒற்றைப் பட்சி... இன்னுமின்னும்... அனைத்தும் உன் நினைவுகளையே சுமந்துவருகின்றன.
•Last Updated on ••Monday•, 15 •April• 2013 17:57••
•Read more...•
••Tuesday•, 09 •April• 2013 02:55•
??- கடல்புத்திரன் - ??
சிறுகதை
வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது.உப்பளத்தில் விளைந்த உப்பைப் போல எங்கும் வெண்பஞ்சுப் பனிப்படுக்கை நிலத்தை மூடியிருந்தது.வீதியில் சளக்குப் புளக்கென ஒரே சகதித் தோற்றம்."ஒ!, "இந்த பனிப் புயலில் வாகனங்கள் நகர முடியாது.எங்கே உப்பு போட்டிருக்கப் போறார்கள்? பிறகென்ன, …சலிப்படைந்தான், வாகனத்தை சறுக்கிக் கொண்டு தான் ஓட்ட வேண்டும். தன் ஒரு வயசு மகளை தூக்கிய போது மனதில் மாற்றம் நிகழ்ந்தது. ' பனியை மனம் அழகாக கூட ரசிக்கிறது .
"பேபி,பார் எவ்வளவு பனி! "என்று காட்டினான்.
பேபி,நீ பார்க்கிற முதல் பனிப் புயல்"என்று காட்ட அது சிரிக்கிறது. என்ர செல்லம்,இத்தாலியில் பிறந்திருந்தாலும் சிரிக்கும் தான்..ஆனால், வேலைத்தளத்தில் வேலை பார்க்கிற அந்த ஈழத் தமிழன்ர பேர்?, அது என்ன?..அவனுக்கு எப்பவுமே ஞாபகம் வருவதில்லை. டிங்கரோ.., கங்கரோ..? என்னவோ, அவன், அளப்பானே 'அட , சிறிலங்காவில் பாதி நிலமேஅவர்களிட நாடாம்! வடக்கு, கிழக்கு எனக் கிடக்கிற பெரிய மாகாணங்களை தமிழ் மன்னர்கள் ஆண்டவர்களாம்.தமிழ் நாடாகத் தான் இருந்ததாம். பேபி, அங்கே பிறந்திருந்தால்… சிரிக்காது தான். அது வெப்பநாடு, கலாச்சாரம் ஜீன் எல்லாமே வேற, வேற! ஒரினம், இன்னொரு இனத்தை அடிமை கொள்ள முயல்கிற நாடு அது!எப்படி இருந்தாலும் … ஆசியரின் உருவ வளர்ச்சியும் சிறிது குறைவு தான். இங்கே ஒரு வயசிலே செய்யிறதெல்லாம் அங்கே இரண்டு வயசிலே தான் செய்கிறது.
•Last Updated on ••Tuesday•, 09 •April• 2013 02:59••
•Read more...•
••Wednesday•, 06 •March• 2013 00:32•
??அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை: வெள்ளி வீதி. கலாநிதி அப்துல் எய்த் தாவூது; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை??
சிறுகதை
அவள் கட்டிலில் அங்குமிங்கும் புரண்டபடி படுத்துக் கிடந்தாள். வீடு அடர்ந்த இருளில் மூழ்கிப் போயிருந்தது. அவளது கணவன் கடைத் திண்ணையிலிருந்து இன்னும் திரும்பி வரவில்லை. அவன் வரும்வரைக்கும் கதவைத் திறந்து வைக்க மறந்து போனது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் மனதுக்குள் ஒரு முறை திட்டித் தீர்த்தாள். அவளது அன்றாட வேலைகளுக்கு முடிவேதுமற்றதாயிருந்தது. விறகு சேகரித்து வருவது, தண்ணீர் கொண்டு வருவது, மில்லுக்கு தானியங்களைக் கொண்டு சென்று, அரைத்துக் கொண்டு வந்து சமைப்பது, ஐந்து பிள்ளைகளையும் பராமரிப்பது என அவளது கணவனது வேலைகளுக்கும் மேலதிகமாக அவளால் செய்ய வேண்டியிருந்தது. அவள் கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அவன் எவ்வாறான மனிதனொருவன்? இல்லாவிட்டால் கணவனொருவன்? அவனுக்கு கடைத்திண்ணை வீட்டைப் போல ஆகிவிட்டிருந்தது. அவன் தனது பகல் முழுவதையும், இரவில் பெரும்பகுதியையும் கடைத் திண்ணையில்தான் கழிக்கிறான். வீட்டுக்கு வருவதென்பது உறங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் மட்டும்தான். அவள் அவனை மறந்துவிட முயற்சித்தாள். ஆனாலும் இரவில் கனவுகளுக்கிடையில் அவன் அவளது மனதில் வந்து ஓய்ந்திருந்தான்.
•Last Updated on ••Wednesday•, 06 •March• 2013 00:56••
•Read more...•
••Wednesday•, 13 •February• 2013 21:00•
?? - குரு அரவிந்தன் -??
சிறுகதை
- நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது, மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது. சரியா பிழையா தெரியவில்லை. -
எழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். ஆனால் இவள் தலையை ஒரே சீராக வேகமாக அசைத்துக் கொண்டு உதட்டுக்கு அலங்காரம் செய்ததால் அவளது அந்தச் செய்கை என்னை அவளது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஏதாவது பாட்டைப் போட்டுவிட்டு அதற்கேற்பத் தலையசைக்கின்றாள் என்பது புரிந்தது. இளமை ஒருபக்கம் அவளிடம் துள்ளி விளையாட, அவள் சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருந்தில் என்னை அவள் கவர்ந்திருந்தாள். பச்சை விளக்கு எரியவே நான் வண்டியை முன்நோக்கி ஓட்டிச் சென்றேன். அடுத்த பச்சை விளக்கைத் தண்டும் போது சட்டென்று மஞ்சள் விளக்கு எரிந்தது. கடந்து மறுபக்கம் போய்விடலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் முன்னால் சென்ற வண்டிகள் ஏதோகாரணத்தால் மெதுவாக நகரத் தொடங்கவே எனது வண்டி பாதுகாப்புக் கோட்டைக் கடக்கும்போது சிகப்பு விளக்கு எரியத் தொடங்கிவிட்டது. பொதுவாக வீதியைக் கடக்கும்போது இப்படியாக நடப்பதுண்டு என்பதால் ஏதோ கற்பனையில் இருந்த நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு சிகப்பு விளக்கில் தெருவைக் கடந்ததற்காகத் தண்டப்பணம் கொடுக்கும்படி தபாலில் அறிவிப்பு வந்தது.
•Last Updated on ••Wednesday•, 13 •February• 2013 21:09••
•Read more...•
••Monday•, 04 •February• 2013 21:53•
??- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.-??
சிறுகதை
நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் 'என்னடா இது?' என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். 'பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா?' என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும்? நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன். சில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக உதித்துவிடுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோரிடமும் பதில்கள் இருப்பதில்லை. சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும். அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை. அவ்வாறு இயலாமல் போனவர்கள் மௌனம் காக்கிறார்கள். இல்லாவிடில் சிரிக்கிறார்கள் அல்லது அழுகிறார்கள். வேறு ஏதேனும் சொல்லிச் சமாளிப்பவர்களும் இருக்கிறார்களெனினும் அந்தக் கேள்விக்கு அந்த மழுப்பல் உண்மையான பதிலென ஆகிவிடுவதில்லை.
•Last Updated on ••Monday•, 04 •February• 2013 21:58••
•Read more...•
••Monday•, 21 •January• 2013 21:37•
??- கமலாதேவி அரவிந்தன் - ??
சிறுகதை
"சின்னாங்கு இல்லேலா! அல்லாம்மா வேணாம்லா! பின் நவீனத்துவம்னா என்னாலா! சாந்த லெட்சுமிக்குத் தத்தாவ்லா!”
”இந்த தாமானுக்குப் போக எப்படியும் முக்கால் மணி நேரமாவது ஆகும். 120 ரிங்கிட்டுக்குக் குறையாது.” டேக்சி ஓட்டுநர் சொல்ல ,முப்பந்தைந்து ஆண்டுகட்கு முன்பு படித்த மலாய்மொழியில் உரையாடுவது ஸ்வேதாவுக்கு இன்பமாகத்தான் இருந்தது. ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் காருக்குள் குளிர்சாதன வசதி இல்லாததால் சரீரமெங்கும் வியர்த்துக்கொட்டியது. கழுத்தைச்சுற்றிப் போட்டிருந்த துப்பட்டாவைக் கழற்றி கையில் பிடித்து விசிறிப் பார்த்தாள்.இட்லிப்பானையாய் வெந்துகொண்டிருந்த உஷ்ணத்துக்கு முன்னே அது பெப்பே காட்டியது. கார்க்கண்ணாடிக்கதவை திறந்தாலாவது சற்றே வெப்பம் தணியாதா, என்று திறந்தபோது வெயிலின் உக்கிரத்தில் சரேலென்று உள்ளே நுழைந்த காற்று கூட அனலாய் தகித்தது. என்ன வந்தாலும் சந்திக்காமல் போவதில்லை, எனும் வைராக்கியத்தோடு வந்திருந்ததால், இந்த முக்கால் மணிநேர தகிப்பை சகித்தே ஆகவேண்டும். ஆயாசமாக இருந்தது. எந்த நேரத்தில் இந்த பணியை ஏற்றுக்கொண்டோம் , என்று அப்படி பரிதவிப்பாக இருந்தது.இதுவரை சந்தித்த அனுபவங்களை மீண்டுமொரு முறை நினைத்துப் பார்க்கவும் மனசு கசந்தது.
•Last Updated on ••Monday•, 21 •January• 2013 21:49••
•Read more...•
••Thursday•, 17 •January• 2013 20:57•
??- கடல்புத்திரன் -??
சிறுகதை
பாரதி கலவன் பாடசாலை"என்ற மரப்பலகை,வளவின் வாயிற் பகுதியில் மழை,வெய்யிலில் காய்ந்து பெயின்ற்ரில் சில புள்ளிகள் உதிர்ந்து நின்றது.நகுலன்,நண்பன் மதியுடன் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தான். "டேய் கெதியாய் போவோம்,பெல் அடிக்கப் போறதடா"என்று மதி துரிதப் படுத்தினான். 2..3.கிலோ மீற்றர் தூர சுற்று வட்டாரத்தில் குடியிருப்புக்களைக் கொண்ட கிராமம் அது!செட்டியார் பகுதியில் நகுலன் இருப்பவன்.ஒரு கிலோ மீற்றர் தூரம் தள்ளிய சந்தையடியில் மதி.வரும் போது கூட்டிக் கொண்டு வருவான்.நட்பு வேரிட்டதால் மதியும் காத்திருப்பான். அவர்களுடைய 8ம் வகுப்பில் 15...20 பேர்களாக பெண்கள் இருந்தார்கள்.எல்லா வகுப்புகளிலும் சராசரியாக அப்படித் தான் இருந்தார்கள்.ஆண்கள் தம் மத்தியில் நட்புடன் பழகினார்கள் தவிர பெண்களை அவ்வளவாகக் கவனிப்பதில்லை. வெள்ளை நாரை போல ஒல்லிக்குச்சியாக சாரதா,கொஞ்சம் அளவாக சதை போட்ட புவனா,சிரிச்சா அழகாகத் தான் தெரிவாள்.குறுகுறுவென அளவெடுக்கிற மாதிரி பார்த்து ஏதாவது சொல்லி பெடியளை சினமேற்றி விடுற சியாமளா,ஓரே ஆண்டில் பிறந்திருந்தாலும் மாதத்தில் மூத்தவளாக இருப்பாள் போல தோன்றியது.சின்னப் பெட்டைகளாக ராசாத்தி,பவானி,சரசு..பெரும் கூட்டம் தான்.
•Last Updated on ••Thursday•, 17 •January• 2013 20:59••
•Read more...•
••Thursday•, 17 •January• 2013 20:51•
??- முஷாரஃப் முதுநபீன் (முஷாஃபி) - இலங்கை -??
சிறுகதை
அன்று கல்லூரியின 'பெயார்வெல் டே'. நண்பர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தனர். எல்லோர் கையிலும் ஒரு 'ஆட்டோகிராப்' இருந்தது. ஒரே படபடப்புடன் காணப்பட்டாள் சைந்தவி. அவளின் கண்களோ ஆகாஷைத் தேடியது. ஆகாஷ் சைந்தவிக்கு ரொம்ப நெருக்கமானவன். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையில் ரொம்ப பெரிய இடைவெளி இருக்கும். ஆகாஷை தூரத்தில பார்த்தாளே சைந்தவி குஷியாகிவிடுவாள். கூடவே பதற்றமும் தொற்றிக் கொள்ளும். ஒரே கல்லூரி என்ற படியால் ஆகாஷும் சைந்தவியும் அதிகம் சந்தித்திருக்கி;றார்கள். பேசியும் இருக்கிறார்கள். எல்லாமே சாதாரன பேச்சுக்கள். கல்லூரி தொடங்குவது பற்றி... பாடத்திற்கு வர முடியாமை பற்றி... பாடக் குறிப்புகளை கை மாற்றிக் கொள்வது பற்றி... நண்பர்களின் சுகவீனம் பற்றி.. இப்படி நிறைய 'பற்றி' கள் பற்றிப் பேசியிருக்கிறார்கள். சைந்தவிக்கு, ஆகாஷ் மீது நிறையவே நேசம் இருந்தது. இது சக மாணவர்கள் இவர்களிருவரையும் இணைத்துப் பேசியதால் உண்டானதாக இருக்கலாம். இன்னொரு புறம் இவர்களிருவருக்குள்ளும் அது இல்லாமல் எப்படி சக மாணவர்கள் இணைத்துப் பேச முடியும் என்ற கேள்வியும் நியாயமானது. நெருப்பில்லாமல் புகையுமா என்ன? ஆகாஷும் சைந்தவியுடன் விஷேடமாகவே பழகுவான். மெல்லிய புன்னகை, காருண்யப் பார்வை, அமைதியான பேச்சு என அவனது ஒவ்வொரு நகர்வும் சைந்தவிக்குள் காதலை நங்கூரமிட்டு உட்கார வைத்திருந்தது. இவர்கள் இருவரும் தங்கள் நேசத்தைச் சொல்லவில்லையாயினும் இவர்களது கண்கள் சந்திக்கும் போதெல்லாம் காதல் மொழியில்தான் பேசிக் கொண்டன. கண்களுக்கு இருக்கும் நேர்மை பெரும்பாலும் உதடுகளுக்கிருந்ததில்லை.
•Last Updated on ••Thursday•, 17 •January• 2013 20:58••
•Read more...•
••Tuesday•, 01 •January• 2013 22:03•
??- வே.ம.அருச்சுணன் – மலேசியா ??
சிறுகதை
"கண்ணா....! போன வருசம் என்னைக் கவுத்த மாதிரி இந்த வருசமும் கவுத்திடாதே!”
“எடுத்தேன் கவுத்தேனு பேசுறது சரி இல்ல கோபி. !”
“உன்னோட வாயில இருந்து ‘கவுத்தேனு’ என்ற வார்த்தை உன்னை அறியாமலேயே வந்துடுச்சுப் பாத்தியா.......!”
“கெட்டவன் என்றைக்கும் கெட்டவனாதான் இருக்கனுமா என்ன?”
“மனிதனா இருந்தா நீ சொல்ற மாதிரி திருந்த வாய்ப்பு இருக்கு. ஆனா, நரி குணம் கொண்ட நீ திருந்தி மனிதனா வாழ்வதற்குச் சான்சே இல்ல!”
•Last Updated on ••Friday•, 04 •January• 2013 08:01••
•Read more...•
••Thursday•, 22 •November• 2012 20:32•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
[ யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'ஜீவநதி' சஞ்சிகையின் கனடாச் சிறப்பிதழில் வெளிவந்த சிறுகதை. புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பமொன்றின் வீடு வாங்கிய அனுபவத்தை விபரிக்கும் கதையிது. ]
என் பெயர் கனகசபை. நான் ஒரு ஈழத்துத் தமிழ் அகதி. கனடாக் குடிமகன். கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து அகதியாகக் கனடா வந்து கடந்த இருபது வருடங்களாகக் கன்டாவின் முக்கிய நகரான டொராண்டோவில் மனைவி, குழந்தைகளென்று வசித்து வருகின்றேன். நான் எனது வீடு வாங்கிய அனுபவத்தை உங்களுடன் இப்பொழுது பகிர்ந்து கொள்ளப்போகின்றேன். இதில் நான் உங்களது அபிப்பிராயத்தைக் கேட்கப்போவதில்லை. ஆனால் மனப்பாரத்தை இறக்கி வைத்தால் ஓரளவுக்கு ஆறுதல்தானே. அதுதான் கூறலாமென்று நினைக்கின்றேன். மக்கள் ஊரில் அகதிகளாக அலைகின்றார்கள். சொந்த மண்ணிழந்து வாழ்கின்றார்கள். இந்த நிலையில் 'இவர் பெரிய மசிரு. வீடு வாங்கின கதையினைக் கூற வந்திட்டாராக்குமென்று' நினைக்கிறீர்கள் போலை. இருந்தாலும் என் கதையினைக் கூறாவிட்டால் என் மண்டையே வெடித்துவிடும் போலையிருப்பதால் அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அது தவிர என் அனுபவம் ஒரு சிலருக்குப் படிப்பினையாகவிருக்குமல்லவா? என் வீடு வாங்கிய அனுபவத்தை மட்டும் வைத்து வீடு வாங்குவதுபற்றி ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவம். என் அனுபவம் இது. மேலே படியுங்கள்.
•Last Updated on ••Thursday•, 22 •November• 2012 20:59••
•Read more...•
••Sunday•, 11 •November• 2012 22:44•
??- வே.ம.அருச்சுணன் -??
சிறுகதை
நீண்ட தூரம் கடலில் நீந்திய பின் ஓய்வுக்காக அமர்வது போல், பூவிழி கடும் போராட்டத்துக்குப் பின் வெற்றிகரமாகத் தன் படிப்பை முடித்தவள், ‘அப்பாடா…. எல்லா சிரமங்களும் இன்றோடு முடிந்துவிட்டன!’ என்று தனக்குள் கூறியவாறு பெருமூச்சு ஒன்றை வேகமாக விடுகிறாள்! பரந்து விரிந்த இவ்வுலகில்,தான் மட்டுமே எதையோ ஒன்றைப் பெரியதாகச் சாதித்து விட்டதாக எண்ணி அவள் பெருமிதம் கொள்கிறாள். அவளது சாதனைக்குப் பின்னால் பலரது உழைப்பும் உதவியும் பெருமளவில் அடங்கியுள்ளன என்ற பேருண்மையை அசை போட்டுப் பார்க்க ஒரு கணம் மறந்து விடுகிறாள்! கிள்ளான், பட்டணத்திலிருந்து நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்குச் செல்லும் நெடுஞ்சாலை ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மிட்லண்ஸ் தோட்டத்தில்தான் பூவிழியின் குடும்பம் வாழ்ந்து வந்தது.அத்தோட்டக் குழும மருத்துவமனையில்தான் பூவிழியைப் பெற்றெடுத்தார் தாயார் பொன்னம்மாள். தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆறாமாண்டு வரை பூவிழி கல்வி கற்ற பின் கிள்ளான் பட்டணத்தில் இடை நிலைப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தாள்.
•Last Updated on ••Sunday•, 11 •November• 2012 22:58••
•Read more...•
••Wednesday•, 07 •November• 2012 22:46•
?? ஆசி கந்தராஜா (ஆஸ்திரேலியா) -??
சிறுகதை
ஹறூத்; என் அலுவலக அறைக்கு வந்தபொழுது மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டான். 'மிக நல்ல செய்தி சேர்..., கேள்விப்பட்டீர்களா...?' என்றான் பரபரப்புடன். அவசரமாக நடந்து வந்த களைப்பில் மேல்மூச்சுவாங்க, இணையத்தளத்தில் தான் வாசித்த தகவலைச் சொல்லி, அதற்குச் சாட்சியாக தனது 'ஐபாட்' அலைபேசியிலுள்ள 'இணைய' செய்தியையும் காண்பித்தான். 'இலட்சக் கணக்கான ஆர்மேனிய மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை இனப்படுகொலையென்றும் (Genocide) அதனை மறுப்பது குற்றச் செயல் என்றும் கூறும் சட்டமூலத்தை, அன்று காலை (22 டிசம்பர் 2011) பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கிகரித்துள்ளது. இதற்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்ய, துருக்கி தன்னுடைய தூதுவரை பாரீஸிலிருந்து மீள அழைத்துக் கொண்டுள்ளது...' என அந்தச் செய்தி தொடர்ந்தது.
•Last Updated on ••Friday•, 09 •November• 2012 17:11••
•Read more...•
••Wednesday•, 07 •November• 2012 22:06•
?? - நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -??
சிறுகதை
மனித மூளை என்றும் தீவிரமாக யோசித்துப் பழையன தவிர்த்துப் புதியன காணும் படலத்தில் ஓடிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். அதிலும் தமிழர் தரம் ஒரு படி மேலேன்று கூறுவர். இந்த வகையில் ஒரு முக்கிய தீர்மானம் எடுப்பதற்காக புத்திசீவிகளான தமிழர் ஒன்று கூடி, அவைத் தலைவராக ஒருவரை நியமித்து, அவர் அத்தீர்மானத்தைச் சபையோர்முன் பின்வருமாறு சமர்பித்தார். “அன்பர்களே! தமிழர்களாகிய எங்கள் வாழ்வியலில் இன்றெல்லாம் பல சிக்கல்கள் நிறைந்துள்ளன. அதனால் நாம் நினைத்தவாறு ஒன்றும் செய்ய முடியாத நிலை எழுந்துள்ளது. நாம் போடும் திட்டமெல்லாம் நிறைவாக்கமுன் எம் இறப்பு முந்திவந்து யாவையும் குலைத்து விடுகின்றது. எங்கள் தேட்டம் எல்லாவற்றையும் சீராக ஒழுங்கு செய்வதற்கு அவகாசம் கிடைப்பதில்லை. எங்கள் பிள்ளைகள், மனைவியர் ஆகியவர்களுடன் நீடூழி வாழலாம் என்பது தவிடு பொடியாகி அவர்களையும் நடுத் தெருவில் விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. பிள்ளைகளுக்கும் திருமணம் நடாத்தாது தவிக்க விட்டுச் செல்கின்றோம். நாம் வட்டிக்குக் கொடுத்த பணமும் கைநழுவிப் போகின்றது. இவ்வண்ணம் பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பலன் ஏதும் கிடையாது. இதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அதுதான் எங்கள் இறப்பு நாள், திகதி, மாதம், ஆண்டு ஆகியன எங்களுக்கு முன்கூட்டியே தெரியவேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இயமராசனுக்கு மனுக்களை அனுப்பவேண்டும். இதற்குரிய உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். வணக்கம.;” என்று கூறி அமர்ந்து விட்டார்.
•Last Updated on ••Wednesday•, 07 •November• 2012 22:34••
•Read more...•
••Thursday•, 01 •November• 2012 17:34•
??- அ.செ.முருகானந்தன் -??
சிறுகதை
1
இறைப்பு ஆரம்பமாயிற்று. ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. 'ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி' என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள். இந்த அமளியில் பக்கத்தே பூவசரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது. ஒரு மணி கழிந்தது. இருள் சிரித்தது. கீழ்வானம் வர்ணஜாலம் காட்டிற்று. 'கச்சேரி' ஸ்வரம் இறங்கி உள்ளே உள்ளே போய்க்கொண்டிருந்தது. காலை இளந் தென்றலில் புகையிலைக் கன்றுகள் சிலுசிலுத்தன. பசுமை சொட்டிக்கொண்டிருந்த அவற்றின் இலைகள் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாகவிருந்தன. ஏறி இறங்கிச் சோர்ந்து போனவர்களுக்கு இந்தக் காட்சி ஒருவகை உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் அளித்தது.
•Last Updated on ••Thursday•, 01 •November• 2012 21:25••
•Read more...•
••Saturday•, 20 •October• 2012 18:52•
??- கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -??
சிறுகதை
மருத்துவமனை வளாகம் முழுக்க, முடிச்சு முடிச்சாக ,ஜனங்கள் நின்று கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். துக்கமும் அவமானமும் ஒருபக்கம் என்றால், அதிர்ச்சியின் ஆகாத்தியம் இன்னொரு பக்கம். மூத்த மகன் சரவணனால் பேசவே முடியவில்லை. சரவணனுக்கு இந்த 52 வயசுக்குப் பொருத்தமாக மண்டை முழுக்க சஹாராப்பாலைவனமாக பளபளத்துக்கொண்டிருந்தது. இரண்டாமவர் வீரராகவனுக்கும் வழுக்கை இல்லையென்றாலும் கூட,அவரது தலையும் பொல்லென்று சுத்தமாய் நரை முடிதான்,. இவர்களுக்கே பேரன் பேத்தி பிறந்துவிட்டார்கள். அப்படியிருக்க இந்த கிழவன், கொள்ளுத் தாத்தாவாய் ,லட்சணமாய், வாழவேண்டிய , இல்லை, , ஒரு மூலையிலாவது முடங்க்கிடக்கவேண்டிய வயசில் போய், இப்படி ஒரு காரியத்தை செய்துட்டாரே? கொஞ்சமாவது பெற்ற பிள்ளைகளோட மான அவமானத்தைப்பற்றி யோசிச்சாரா? கோபப்படுவதா? நெஞ்சிலறைந்து கொண்டு அழுவதா? ? “என்று இரண்டும் கெட்டான் நிலையில் நிலைகுலைந்துபோய் நின்றிருந்த மகன்களை, நெருங்கிய உறவினரான ராஜு மாமாதான் தட்டிக்கொடுத்து , ஒவ்வொரு காரியங்களையும் பொறுப்பாக, செய்ய வைத்தார்.இதில் சனிப்பொணம் தனியாகப்போகக்கூடாது என்று, கூடவே அதற்கான பரிகாரத்தையும் செய்யவைத்தே,பெரியசாமித் தாத்தாவை, மண்டாய் சுடுகாட்டில், மின்தகனத்துக்கு கொண்டு போனார்கள். அதுவரை தாங்கிக்கொண்டு நின்ற பெரியவர் சரவணனால் அதற்குமேலும் தாங்கமுடியவில்லை.
•Last Updated on ••Saturday•, 20 •October• 2012 18:58••
•Read more...•
••Friday•, 19 •October• 2012 21:26•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
[உயிர் நிழல் ஆகஸ்ட் 2000 இதழில் வெளியான சிறுகதை. பதிவுகள், திண்ணை இணைய இதழ்களிலும் பின்னர் மீள்பிரசுரமானது. -பதிவுகள்.] யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் இரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். 'பேப்' வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த 'யமேய்க்க' மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளையர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். 'பேப்' வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். 'சிறு இந்தியா' , 'சிறு இத்தாலி'..இப்படி பல பகுதிகள். அது ஒரு மாலை நேரம். மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்த சமயம். இலேசாக மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் யன்னலினூடாக எதிரே விரிந்திருந்த உலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.
•Last Updated on ••Friday•, 19 •October• 2012 21:35••
•Read more...•
••Thursday•, 18 •October• 2012 19:52•
??- ஆபிதீன் -??
சிறுகதை
[பதிவுகளில் அன்று வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்யப்படும். அந்த வகையில் இந்தச் சிறுகதையும் மீள் பிரசுரமாகின்றது. - பதிவுகள்-]
தொடையில் ஓங்கி ஒரு அடி..!
வலியில் , வஹாப் - என் தம்பி - எழுப்பிய சத்தம் மனதை அறுத்தது. இது வலி என்றோ அது எந்த இடத்திலென்றோ அல்லது அடித்தது தன் லாத்தாதான் என்றோ அவன் உணர்வானா ? பார்வை , எப்போதும் வானத்தை மறைக்கும் முற்றத்துப் பந்தலின் ஏதாவது ஒரு மூங்கிலில் பட்டு நிதானமில்லாமல் அலைய, எச்சில் வடிகிற கோணல் வாயில் மொய்க்கும் ஈக்களை விரட்டத் தெம்பில்லாத தன் திருகிய கைகைளைத் தொட்டியில் அடித்துக் கொண்டு இருப்பவன் அவன். தொட்டியின் கம்பிகளைச் சுற்றிப் பிணைந்துள்ள அவன் சூம்பிப் போன கால்களுக்கு என்ன தெரியுமோ அதுதான் அவன் மூளைக்கும் தெரியும். மூளை இருக்கிறதா ? உடலின் எந்த பாகங்களுக்கும் வித்யாஸம் தெரியாத ஒரு பிறவியை குழந்தையென்று சொல்வது பொருந்துமா ? இப்போது அவன் பேண்டிருக்கும் மலத்தின் நாற்றம் கூட அவனுக்குத் தெரியவில்லையே...
•Last Updated on ••Thursday•, 18 •October• 2012 20:03••
•Read more...•
••Thursday•, 18 •October• 2012 19:38•
??- சாந்தினி வரதராஐன் (ஜேர்மனி ) -??
சிறுகதை
[பதிவுகளில் அன்று வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்யப்படும். அந்த வகையில் இந்தச் சிறுகதையும் மீள் பிரசுரமாகின்றது. - பதிவுகள்-]
வானத்தில் முகில் கூட்டங்கள் நிற்பதும் நடப்பதுமாக எதையோ தேடி ஒடியபடி என் நினைவுகளும் அதுபோல்தான். என் கையைவிட்டு மட்டும் தொலைந்துபோன அற்புதமான அந்த நினைவுகள் என்னுள் எப்போதும் படர்ந்தபடி. அம்மா அடிக்கடி கூறுவா உன்னால ஒருவேலையும் முழுசா செய்ய முடியாது.எந்த வேலையை தொட்டாலும் அரைகுறைதான். அதைபடிக்கவேணும் இதை படிக்கவேணு மென்று எல்லாவற்றையும் தொட்டு பார்த்ததோட சரி. நேற்று இந்த ஒன்று கூடலுக்கு போய்வந்ததிலிருந்து என் எண்ணங்களும் அங்கேயும் இங்கேயும் தொட்டுக்கொண்டே இருக்கின்றது.
•Last Updated on ••Thursday•, 18 •October• 2012 20:04••
•Read more...•
••Thursday•, 18 •October• 2012 19:26•
??- 'சித்தார்த்த "சே" குவேரா' -??
சிறுகதை
[பதிவுகளில் அன்று வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்யப்படும். அந்த வகையில் இந்தச் சிறுகதையும் மீள் பிரசுரமாகின்றது. - பதிவுகள்-]
நாட்பட்ட உந்துதல் தாளமுடியாமலேதான் வரைபலகையையும் தூரிகையையும் எடுத்தான். உந்துதல் என்றால்,ஒருநாள் இருநாள் உந்துதல் அல்ல. கிட்டத்தட்ட ஏழு வருட உந்துதல். இன்றைக்கு உச்சியிலும் மறுநாள் கிடப்பிலும் என்று காண்புகட்கேற்ப, நினைவில் நுரைத்து வடியும் உந்துதல். வீடுகூட்டும் தும்புக்கட்டைகூட, அந்தச் சீனத்து எழுத்தோவியனின் தூரிகையோட்டத்தை எழுப்புவதுண்டு. சொல்லப்போனால், ஒழுக்கிலே இலயித்து நகரும் நதியும்கூட.
•Last Updated on ••Thursday•, 18 •October• 2012 20:04••
•Read more...•
••Wednesday•, 26 •September• 2012 17:25•
??எழுதியவர்: கடல்புத்திரன்??
சிறுகதை
ராதா,வாகனத்தில் கண்ணுக்கு நேரடியாக சூரிய ஒளி வருவதை தடுப்பதற்காக உள்ள மேல்பகுதி மட்டையை இழுத்து விட்டான். கைத்தோலில் படும் வெய்யில் பூதக்கண்ணாடியினூடாக வருகிற மாதிரி சுடுகிறது. 'டாக்ஸி'யில் இருக்கிற ஓட்டி 'ஒவனு'க்குள் இருக்கிற மாதிரி துன்பப்பட வேண்டியிருக்கிறது.பின்னால் இருக்கிறவர்களுக்கு ஒருவித சொகுசுப் பயணம். 'டாக்ஸி' விரைவு வீதியில் விரைந்து கொண்டிருந்தது.'பிளக்பெரி' வந்த பிறகு பயணியின் தொண தொண அலட்டல்கள் எல்லாம் இல்லை. எங்கட பிரச்சனையே தீறவில்லை. இவர்களூக்கு எங்கட அரசியலும் தெரியாது.அதை அறிவதிலும் அக்கறை காட்டுவதில்லை . இவன் தனக்கென கீறின வட்டத்தை விட்டு வெளிய போவதில்லை. இந்த நிலையில் இவன்ட வியாபாரமும் பிரச்சனையும், எமக்கு மட்டும் எதற்கு? எங்களுடையது போல சமூக வாழ்க்கை இவனுக்கு இல்லை. அக்கறைப் படுவது என்றால் வியாபார வலை தொடர்புகளோடு மட்டும் தான்.
•Last Updated on ••Wednesday•, 26 •September• 2012 17:49••
•Read more...•
••Wednesday•, 15 •August• 2012 18:31•
??- கே.எஸ்.சுதாகர்??
சிறுகதை
கிராமம் அசாத்திய அமைதியில் இருந்தது. பறவைகளின் சத்தம் மாத்திரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியக்கற்றைகள் ஏற்கனவே படரத் தொடங்கிவிட்டன. "தம்பி குகன்... வீடியோக்கமராவிலை நேரத்தையும் திகதியையும் செற் பண்ணும். கணேஷ் அவுஸ்திரேலியாவிற்கு போகேக்கை வீடியோக்கொப்பி கொண்டு போக வேணும்" மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே பாலன்மாமா தன்னுடன் வந்த குகனுக்குச் சொன்னார். பாலன்மாமா - திருவள்ளுவர் தாடி ; இழுத்து இழுத்து நடக்கும் விசிறினால்போன்ற நடை. பார்ப்பதற்கு வினோதமாக இருப்பார். குகனை எனக்கு முன்னாளில் அறிமுகமில்லை. உமாசுதன், நான் புலம்பெயர்ந்து 16 வருடங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களில் மிகவும் வேண்டப்பட்டவன். நேரம் : காலை 9.20, திகதி : 25.05.2011 நாங்கள் நாலுபேரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தோம். டச்சு றோட்டில் இருந்த உருப்படியான ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் மோட்டார் சைக்கிளை வைத்துப் பூட்டிவிட்டு நடக்கத் தொடங்கினோம். இரண்டு பெரிய தண்ணீர்ப் போத்தல்கள், இரண்டு லீட்டர் கோக் போத்தல்கள் இரண்டு மற்றும் நான்கு பேருக்குமான மதியச்சாப்பாடு, கத்திகள் பொல்லுகள் சகிதம் எங்கள் பிரயாணம் ஆரம்பமானது. ஏதோ அமேசன் நதிக்கரைக் காட்டுக்குள் நுழைகின்ற பிரயாணம் போல, 21 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்திற்குப் போகும் பயணம். கிராமம் இத்தனை வருடங்கள் உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து, தற்போது மீளக்குடியேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
•Last Updated on ••Wednesday•, 15 •August• 2012 18:53••
•Read more...•
••Sunday•, 01 •July• 2012 17:58•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். காரணம் இதன் விலைதான் தான். முப்பத்தைந்து கனடியன் டொலர்கள். சென்ற முறை சாப்டர்ஸ்ஸிற்குக் கூட்டிப் போனபோது இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவதாகத் தான் கூட்டிப் போனார். ஆனால் வழக்கம் போல் இறுதியில் கையை விரித்து விட்டார். "உனக்கம்மா இந்த ஒரு புத்தகத்திற்குப் பதிலாக இரண்டு "துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்" (The unfortunate events) புத்தகங்களை வாங்கித் தருகிறேன்" என்று வாங்கித் தந்து விட்டார். லெமொனி சினிக்கெட்டின் "துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்" தொடரும் எனக்கு மிகவும் விருப்பமான தொடர் தான். இந்ததொடரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் மிஸ் எலிஸபெத். எனது கிளாஸ் டீச்சர். தாய் தகப்பனில்லாத வயலட், கிளாஸ், குழந்தை சனியை பொல்லாத ஓலாவ் படுத்தும் பாடிருக்கிறதே. பாவம் அவர்கள். அவர்களது அப்பா அம்மாவை இந்தப் பொல்லாத ஓலாவ்தான் கொன்று விட்டான். இப்பொழுது இவர்களின் சொத்தினை அடைவதற்கும் முயன்று கொண்டிருக்கின்றான். திரு. போ (Mr.Poe) மட்டுமில்லையென்றால் இவர்களது பாடு இன்னும் அதிகத் துன்பம் நிறைந்ததாகவிருந்திருக்கும்.
•Last Updated on ••Wednesday•, 04 •July• 2012 18:54••
•Read more...•
••Saturday•, 23 •June• 2012 18:33•
??- கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -??
சிறுகதை
ராமக்காவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
"பிரியாணி சோறு இம்புட்டு ருசியாக்கூட இருக்குமா? ஊரிலேன்னா பேருக்கு ஒருகறித்துண்டும், ஒரு துண்டு எலுமிச்சிக்காயும் கடிச்சுக்கிட்டு சாப்புட்ட அனுபவம்தான். ஆனா இங்கேனா எவ்ளோ சோறு,! எம்மாம் பெரிய கோழித்துண்டு, அட, இதுதான் லெக்பீஸா? நிறைய கொழம்பு, இன்னும் வெள்ளிரிக்காயும், அன்னாசியும் போட்ட, இனிப்பும் புளிப்புமான மேங்கறி, அப்புறம் தயிரில ஊறவச்ச என்னமோ ஒரு அயிட்டம், யப்பா, இன்னா ருசி, இன்னா ருசி, நாக்கெல்லாம் தேனா சொக்கிப்போச்சு போ!"
ராமக்காவைப் போலவே தான், ஊரிலிருந்து வந்திருந்த மத்த பொண்ணுங்களுக்கும் கூட, சாப்புட்டு முடிச்ச உடனேயே முகத்தில அப்படியொருபிரகாசம்.
•Last Updated on ••Saturday•, 23 •June• 2012 18:47••
•Read more...•
••Thursday•, 21 •June• 2012 21:52•
??- ஜெயந்தி சங்கர் -??
சிறுகதை
“பேசாம தற்கொல பண்ணிக்லாம்னு தோணுது, மிஸிஸ் வாங்”, என்று முனகினார். சட்டென்று என் மூளை ஸ்தம்பித்தே விட்டது. உடம்பு சரியில்லையோ. எழுபதைக் கடந்த ஒரு மூதாட்டியின் வாயிலிருந்து இப்படியான சொல் வருவதென்றால்? என்ன சொன்னார் என்றே புரியாதபடி முதலில் மிகுந்த மென்குரலில் முனகினார். இரண்டாவது தடவை சற்றே குரலை உயர்த்திச் சொன்ன போது தான் எனக்கு சொற்களே புரிந்தன. கைபேசியில் மின்னிய இலக்கத்திலிருந்து தான் கூப்பிட்டது ஃபாதிமா என்றே தெரிந்தது. நான்கு மகள்களும் ஒரு மகனும் இருந்த போதிலும் பல்லாண்டுகளாகத் தனியே இருந்தார்கள் அவரும் அலியும். அதை நினைத்து மறுகுவதே அவர்கள் அனுபவிக்கும் ஆகக் கொடிய துயரம். இரண்டு மணிநேரமாகச் சூழலை மறந்து மூழ்கியிருந்த முக்கியக் கோப்பிலிருந்து என் கவனம் முற்றிலும் விலகியிருந்தது.
•Last Updated on ••Thursday•, 21 •June• 2012 21:59••
•Read more...•
••Thursday•, 14 •June• 2012 22:47•
??- வ.ந.கிரிதரன் ??
சிறுகதை
- எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்திய அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டி 2009இல் வட அமெரிக்காவுக்கான விருதினைப் பெற்ற சிறுகதை! -
கி.பி.2700 ஆம் ஆண்டிலொருநாள்.... ...
தமிழகத்தின் சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச் சிறைச்சாலையில் தனக்குரிய அறையினுள் பாஸ்கரன் அமர்ந்திருந்தான். சிறைக்காவலர்களற்ற திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கைதிகளின் உடல்களிலும் அவர்களது அடையாளங்கள் பற்றிய அனைத்துத் தகவ்ல்களுடன் கூடிய சிலிக்கான் சில்லுகள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம், GPS தொழில் நுட்பத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பிறிதோரிடத்தில் அமைந்திருந்த சிறைச்சாலைத் தலைமைச் செயலகத்திலிருந்து அவதானிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். செவ்வாய்க் கிரகம், சந்திரன் போன்ற கிரகங்களெல்லாம் புதிய புதிய காலனிகளால் நிறைந்து விட்டிருந்தன. சூரிய மண்டலத்தில் பல்வேறு விண்வெளிக் காலனிகள் உருவாக்கப் பட்டிருந்தன. பூவுலகின் பல்வேறு நாடுகளும் மானுடர்களென்ற ரீதியில் ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். ஒரு கிரகம்! அதன் மக்கள் நாம்! என்று பக்குவப்பட்டிருந்த மானுடர்கள் பூவுலகு மக்கள் கூட்டமைப்பு என்று ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். நாடுகளுக்கிடையில் பயணிப்பதற்குக் கடவுச் சீட்டு, விசா போன்ற எதுவுமே தேவையாகவிருக்கவில்லை. நாடுகள், தேசிய இனங்கள், தேசிய பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு நாடுகளும் தத்தமது வெளிநாட்டுக் கொள்கையினை வகுத்திருந்த காலம் எப்போழுதோ இப்பூமியில் மலையேறிவிட்டிருந்தது. இன்று விண்வெளித் தொழில் நுட்பம் மிகவும் முன்னேறி விட்டிருந்ததொரு நிலையில் வேற்றுக் கிரக வாசிகள், உயிரினங்களிலிருந்து இப்பூமிக்கான பாதுகாப்பு என்னும் அடிப்படையில் பூவுலகின் பாதுகாப்பு தீர்மானிக்கப்பட்டது. இத்தகையதொரு சூழல் நிலவும் காலகட்டமொன்றில்தான் இவ்விதம் திறந்தவெளிச் சிறைச்சாலையொன்றில் அமர்ந்திருந்தான் இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரன். அவனது சிந்தனையெல்லாம் அடுத்த நாளைப் பற்றியதாகவேயிருந்தது. செய்யாத குற்றத்திற்காக அவனுக்கு மரணதண்டணை விதிக்கப் பட்டிருந்தது. சந்தர்ப்ப சாட்சியங்கள் சதி செய்து விட்டன.
•Last Updated on ••Friday•, 15 •June• 2012 05:19••
•Read more...•
••Thursday•, 07 •June• 2012 19:14•
??- லெ. முருகபூபதி -??
சிறுகதை
“ சேர்... வவுனியா வந்திட்டுது.” சாரதி அருகில் அரைத்தூக்கத்திலிருந்த மூர்த்தியை தட்டி எழுப்பினான். அதிகாலை கொழும்பிலிருந்து புறப்படும்போது, ‘எப்படியும் காலை ஒன்பது மணிக்குள் வவுனியாவை வந்தடைந்துவிடலாம்’ என்று சொன்ன சாரதி சொன்னபடி நிரூபித்தும்விட்டான். அந்த வாகனத்தையும் சாரதியையும் வெள்ளவத்தையில் அறிமுகப்படுத்திய நண்பனுக்கு மனதிற்குள் நன்றி சொல்லிக்கொண்டார் மூர்த்தி. போர் முடிந்து இரண்டுவருடங்களின் பின்னர் இலங்கை வந்திருந்த மூர்த்திக்கு இலங்கையில் பார்ப்பதற்கு சொந்தபந்தங்கள் என்று குறிப்பிடும்படியாக எவரும் இல்லை. பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு நாட்டில் புகலிடம்பெற்று, கடைகள் நடத்தலாம். சங்கங்களில் இணைந்திருக்கலாம். கோயில்கள் கட்டியிருக்கலாம். கடன் அட்டை மோசடிகளிலும் ஈடுபட்டிருக்கலாம். எழுத்தாளர்கள் ஆகியிருக்கலாம்.... அவர்களைப் பற்றிவரும் மின்னஞ்சல் தகவல்களும் தொலைபேசி அலட்டல்களும் மூர்த்திக்கு முக்கியத்துவமற்றுப்போய்விட்டன.
•Last Updated on ••Thursday•, 07 •June• 2012 19:48••
•Read more...•
••Wednesday•, 30 •May• 2012 14:09•
??- மூலம்: ரூ ஜீஜுவன் தமிழில்: ஜெயந்தி சங்கர்??
சிறுகதை
இலையுதிர்காலம் 1946. குவாமிங்தாங் படைகளுக்கெதிராக ஒரு சிறு தாக்குதல் நடத்துவதென்று எங்கள் கடலோரப் போர்ப் படையின் தலைவர் முடிவெடுத்ததுமே, போர்ப்படைப் பிரிவினருக்கு உதவவென்று எங்கள் நாடகக் குழுவிலிருந்து சிலர் அனுப்பப் பட்டனர். நான் பெண் என்பதாலோ என்னவோ, முதலுதவிப் பிரிவில் என்னை நியமிக்க தளபதி இறுதிக் கட்டம் வரை காத்திருந்தார். அன்றைக்கு மழை பொழிந்திருந்தது. வானம் வெறித்திருந்தும் கூட சாலைகள் இன்னமும் வழுக்கலாகவே இருந்தன. இருபுறமும் பயிர்கள் பசுமையாகவும் புதியதாகவும் வெயிலில் மின்னின. காற்றில் ஈரம் கலந்திருந்தது. எதிரிகளின் தொடர் குண்டு வெடிப்புகள் மட்டும் இல்லாவிட்டால், கிராமத் திருவிழாவுக்குப் போகும் வழி போல் உணர்ந்திருப்போம். முன்னால் நடந்தான் தூதுவன். எங்கள் இருவருக்குமிடையில் ஒரு டஜன் கஜதூரம் இருக்கும்படி பார்த்துக் கொண்டான். என் கால்கள் கன்னிப் போயிருந்ததால், எவ்வளவு முயன்றும் என்னால் அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது. கொஞ்சம் நிற்கச் சொன்னால், என்னைக் கோழையென தீர்மானிப்பானோ என்ற பயம். தனியாக என்னால் முகாமைக் கண்டுபிடிக்கவும் முடியாது. என்னை எரிச்சலூட்டினான்.
•Last Updated on ••Wednesday•, 30 •May• 2012 14:12••
•Read more...•
••Tuesday•, 22 •May• 2012 01:35•
??- ஜெயந்தி சங்கர் -??
சிறுகதை
ரயில் செம்பவாங் ரயில்நிலையத்தில் நின்றபோது தான் அந்தச் சீனன் ஏறினான். காலில் அணிந்திருந்த சப்பாத்து மட்டும் தான் மிகவும் பழையதாக தூக்கியெறிய வேண்டிய நிலையில் இருந்தது. தோளில் தொங்கிய பழுப்புநிறத் துணிப்பை புதியதாகப் பளிச்சென்றிருக்க, மொட்டையடித்து ஒரே வாரமாகியிருந்தது போன்ற அரை அங்குலக் கேசமும், புதியதும் இல்லாத மிகப் பழையதுமில்லாத அவனது உடைகளும் கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகத் தான் அவனைப் பார்க்கும் யாருக்கும் தோன்றுமே தவிர வித்தியாசமாக எதுவுமே இல்லை அவனிடம். வீட்டில் அணிவது போன்ற எளிய அரைக்கால் சட்டையும் காலர் இல்லாத வெள்ளை டீ சட்டையும் வாழ்வில் ஒருமுறை கூட தீவை விட்டு கடல்கடக்காத உள்ளூர்வாசி தான் என்று எடுத்துக் காட்டின. உள்ளே நுழையும் போது, கூட்டமே இல்லாத மதிய நேரத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறிய தேவையில்லாத அவனுடைய அவசரமும் பரபரப்பும் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ‘டிரெயின் டோர்ஸ் க்ளோஸிங்,.. கிக் கிக் கிக்க்கிகிக்,..’
•Last Updated on ••Tuesday•, 22 •May• 2012 01:57••
•Read more...•
••Saturday•, 12 •May• 2012 04:42•
?? - நடேசன் -??
சிறுகதை
நாய் மற்றும் பூனைகளை மனிதர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் போது அவைகளும் தங்களது ஏஜமானர்கள் போல் தங்களது வாழும் இடங்களை அடையாளப்படுத்தி எல்லைகளை வகுத்துக்கொள்ளும். அவற்றின் எல்லைக்கோடுகள் வேலிகளாலோ மதி;ல்களாலோ அல்லது முள்ளுக்கம்பி வேலியினாலோ அமைவதில்லை. நமது கண்களுக்கு அந்த எல்லைக்கோடுகள் தெரியாது. தங்களது குதத்தின் பின் பகுதியில் இருந்து சுரக்கும் இரசாயன திரவத்தால் அவை தமது இடத்தை அடையாளப்படுத்திக்கொள்ளும். அத்துடன் வேறு ஏதாவது மிருகங்கள் தங்களது இடத்திற்கு வந்திருந்தால் அவைகளால் இலகுவில் அதனை உணர்ந்து கொள்ளும் வல்லமையும் கொண்டவை. ஊனுண்ணும் மிருகங்கள் காட்டில் இப்படி அடையாளம் செய்து கொண்டு தங்கள் பிரதேசத்தை பாதுகாக்கும். புலிகள், சிங்கங்கள் காட்டில் வாழும் போது இந்த அடையாளங்கள் அவற்றின் குட்டிகளையும் குடும்பங்களையும் பாதுகாக்கும் கோட்டை கொத்தளமாக இருக்கிறது. நாய்கள் பதினைந்தாயிரம் வருடங்களாகவும் பூனைகள் கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்களாகவும் மனிதர்களோடு வாழத் தொடங்கினாலும் அவற்றின் வனவாழ்க்கையின் இசைவுகள் பல இன்னமும் இருக்கின்றன.
•Last Updated on ••Saturday•, 12 •May• 2012 04:49••
•Read more...•
••Saturday•, 28 •April• 2012 17:18•
??- கமலாதேவி அரவிந்தன் -??
சிறுகதை
கைகள் கட்டவிழ்க்கப்பட்டிருந்தாலும், பின்புறம் மடிந்த கைகளுடன் குந்த வைத்த நிலையில் அமர்ந்திருந்த செங்கோடனுக்கு உடம்பெல்லாம் அப்படி அதிர்ந்து கொண்டிருந்தது. யாரையும் நிமிர்ந்து பார்க்கவே அவனுக்கு கூசியது. அப்படி துக்கத்திலும் அவமானத்திலும் உறைந்து போயிருந்தான். நினைக்க நினைக்க ரோமக்கால் சிலிர்த்து, முக்கால் ஜடமாக, முழுமூடனைவிடக் கேவலமாகத் தன்னை உணர்ந்தவனுக்கு அழுகை கூட மரத்துப்போயிருந்தது. என்னென்ன கற்பனைக்கோட்டையில் ஆசை ஆசையாய் சிங்கப்பூருக்கு வந்தான். தான் பிறந்து வளர்ந்த மண், தான் பன்னிரண்டு வயதுவரை படித்த மண், என எட்டு ஆண்டுகட்குப்பிறகு சிங்கப்பூருக்கு வந்தவனுக்கு சிங்கப்பூர் விமான நிலையத்தில் கிட்டிய அதிர்ச்சி அவன் சற்றும் எதிர்பாராதது.செல்லில் இருந்த மற்ற மூவரும் செங்கோடனை அணுகி விசாரிக்க முற்பட்டபோது இவனின் கடுத்த மெளனமே அவர்களை வெருட்டியது,” ஹ்ம்ம், என்னமோ இவனுக்குத்தான் துக்கமாம், சரிதான் போடா, அவனவன் பாடு அவனவனுக்கு.‘
•Last Updated on ••Saturday•, 28 •April• 2012 17:24••
•Read more...•
••Monday•, 02 •April• 2012 17:37•
??- குரு அரவிந்தன் -??
சிறுகதை
ஒருவருடைய பெயரை வைத்துக் கொண்டு அவருடைய காலத்தைக் கணிக்க முடியுமா என்று சில சமயங்களில் நீங்கள் யோசிக்கலாம். முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஒரு காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரேவிதமான முடிவுள்ள பெயர்களைத்தான் பெற்றோர் சூடினார்களோ தெரியவில்லை, அப்படியான தமிழ்ப் பெயர்களை வேறு பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களிடம் அதிகம் கேள்விப்பட்டதில்லை. கந்தையா, பொன்னையா, செல்லையா, சின்னையா, இராசையா, முருகையா, அழகையா என்று இப்படியான எல்லாப் பெயர்களும் யகர வரிசையில் முடிவதாகவும், பொன்னுத்துரை, சின்னத்துரை, செல்லத்துரை, கண்ணுத்துரை, ராசதுரை, அருமைத்துரை என்று துரையில் முடிவதாகவும் இருந்தன. வேறு ஒரு காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு சிவலிங்கம், கனகலிங்கம், இராமலிங்கம், யோகலிங்கம், சந்திரலிங்கம், கணேசலிங்கம்; என்றும், கொஞ்சக் காலம் கழித்துப் பிறந்தவர்களுக்கு சிவராசா, தவராசா, நடராசா, வரதராசா, ஜெயராசா, குணராசா, யோகராசா என்று எல்லாமே ராசாவில் முடியும் பெயர்களாயும் இருந்தன. பெண்களுக்கும் இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, யோகேஸ்வரி, சிவனேஸ்வரி என்று பெயர்கள் இருந்தன. இப்படியான பெயர்களை வைத்துக் கொண்டே ஆணும்சரி, பெண்ணும்சரி அவர்கள் எந்த காலகட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், வயதைக் கேட்காமலே குத்து மதிப்பாக அவர்களின் வயது என்னவாக இருக்கும் என்றும் ஓரளவு எங்களால் கணிக்க முடிந்தது.
•Last Updated on ••Monday•, 02 •April• 2012 17:46••
•Read more...•
••Thursday•, 15 •March• 2012 20:41•
??- ஜீவன் கந்தையா -??
சிறுகதை
யாத்ரா மார்க்கம் - 1
நடுகல் [பதிவுகள் இணைய இதழில் ஜீவன் கந்தையா (மைக்கல்) யாத்ரா மார்க்கம் என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன.- பதிவுகள்-]
‘வார்த்தைகளின் சப்தங்கள் அதற்குள்ளேயே மடிந்து விடுகின்றன. எழுதுங்கள் பேனாமுனையின் உரசலாவது கேட்கட்டும்’.
இப்படி ஒரு கவிதையில் ஆத்மாநாம் ஆதங்கப்படுகிறார். வார்த்தைகள் காற்றிலேறிக் கரைந்துபோய்விடும். சில கிளைகளேறி பரந்துவிடும். எழுதுவது எப்போதாவது ஒரு வாசகனுக்காவது பயன்படத்தான் செய்யும். வாசகன் அந்த எழுத்தின் அபத்தத்தை, அல்லது காத்திரத்தை உணரவும், பகிரவும் கூடும். நான் இந்தப் பக்கங்களை இவ்வகைப் பகிர்தலின் பொருட்டே எழுதத் துணிந்தேன்.
•Last Updated on ••Thursday•, 18 •October• 2012 20:07••
•Read more...•
••Tuesday•, 13 •March• 2012 17:04•
??- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -??
சிறுகதை
- சர்வதேச ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசினை வென்ற சிறுகதை -
நிவேதாவிற்கு, எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும் மிகுந்த பேராசையுடனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் இதனை எழுத வேண்டியிருக்கிறது. இதை எழுதும் இக்கணத்தினாலான என் மனநிலையை என்னால் உனக்கான இவ்வெழுத்தில் வடிக்க முடியவில்லை. ஆனால் ஏதேனும் உனக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் மட்டும் உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது. எழுத்தின் முதுகினில் அத்தனை பாரங்களையும் இறக்கிவைக்க வேண்டுமெனவும் தோன்றுகிறது. எத்தனையோ எழுதுகிறேன்.ஆனால் உனக்கு எழுத முடியவில்லை. முடியவில்லை என்பதனை விடவும் இயலவில்லை என்ற சொல்லே சாலச் சிறந்தது. பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் நாம் பிரிந்தோம். இப்பொழுது நீ எங்கே, எப்படியிருக்கிறாயெனத் தெரியவில்லை. ஆனால் எப்பொழுதுமே என் மனதின் மையப்புள்ளியில் சிம்மாசனமிட்டு உட்காந்தவாறு என்னை ஆண்டுகொண்டே இருக்கிறாய் இன்னும்.
•Last Updated on ••Tuesday•, 13 •March• 2012 17:08••
•Read more...•
••Friday•, 09 •March• 2012 02:14•
?? கடல்புத்திரன்??
சிறுகதை
நெருங்கியவர்களுக்கு 'சா' நிகழ்கிற போதே ஒவ்வொருவருக்கும் தம் வாழ்வை ஒரு தடவை அலசிப் பார்க்கிறது நடக்கிறது போலும் .. என்று தயாளனுக்குப் பட்டது. சாவிலே போய்… நல்ல சா,கெட்ட சாவு இல்லைதான். எவராலுமே வாழ்க்கை வட்டத்தில் அனைத்து நிலைகளிலுமே நிறைவாய் வாழ்ந்திட முடிவதில்லை. ஒரு தடவை அதிருஸ்டம் அடித்தால், அடுத்து வருவது எதிர் மாறாக துயருறுவதாக இருந்து விடுகிறது. அதில் பிள்ளைச் செல்வம் பெற்றவர்களாக இருந்தாலும் சரி, அற்றவர்களாக இருந்தாலும் சரி 'சா' எல்லாரையும் ஒரு கணம் அசைத்தே விடுகிறது. பல கேள்விகளையும் எழுப்புகிறது. பதிலை தேடி அலைவது அவரவர் விருப்பம்.பதில்கள் கிடைக்கிறதா.. இல்லையா? இரை மீட்டலால் அந்த நாட்களுக்கே போய் விடுகிறோம். அவன் உள்ளக் கட லும் அசைவுற்று அலைகளை பிரவாகிக்கத் தொடங்கின. 'சா' இல்லத்தில் பார்வைக்கு வைத்திருந்த கதிரண்ணையின் உடலை தரிசிக்க வந்திருந்தான்.கறுப்பு நிறம்.சாந்தம் தவழ வெள்ளைப் படுக்கைப் பெட்டியில் படுத்திருந்தார்.இனி அவருக்கு எந்த கவலையும் இல்லை.இப்பவும் சினிமா நடிகர் முத்துராமனைப் போலவே இருந்தார். அப்படி ஒரு சாயல்.தயாளனின் அம்மாவிற்கு அடுத்ததாக பிறந்த சகோதரர்.இவரை விட அம்மாவிற்கு ஒரு அண்ணை,இரண்டு தங்கச்சிமார்,இன்னொரு தம்பி.. இருந்தார்கள் .
•Last Updated on ••Friday•, 09 •March• 2012 02:44••
•Read more...•
••Saturday•, 21 •January• 2012 18:43•
??- நாகரத்தினம் கிருஷ்ணா -??
சிறுகதை
பிச்சைகாரர்கள் என சொல்கிறபோது மனது ஏற்படுத்தும் பிம்பங்கள் கிழிந்த அல்லது அழுக்கேறிய உடைகள், கலைந்த தலை, துர்நாற்றமென்ற பொதுப்பண்புகளைக் கொண்டவை. ஆனால் பிச்சை எடுப்பதற்கான அவசியமேதும் இல்லாததுபோலத்தான் அவளுடைய தோற்றமிருக்கிறது. உடல் வனப்பிலும், முகத்தைத் திருத்திக்கொள்வதிலும் அக்கறை கொள்ளாதவள் என்பதைத் தவிர பெரிதாக குறைசொல்ல ஒன்றுமில்லை: செம்பட்டை நிறத்தில் நீண்டிருந்த தலைமயிர் அருவிபோல முதுகில் விழுந்திருக்கிறது. மையிட்ட பெரிய பூனைக் கண்கள். காற்று அலைமோதுகிறபோதெல்லாம் கால்களில் ஒட்டிக்கொள்வதும் படபடப்பதுமாய் தாள்வரை வழியவழிய மிட்டாய் நிறத்தில் ஒரு பூபோட்ட பாவாடை, இறுக்கமாக ஒரு சோளி - நாடோடிப்பெண்.
•Last Updated on ••Saturday•, 21 •January• 2012 18:47••
•Read more...•
••Saturday•, 21 •January• 2012 18:03•
??கடல்புத்திரன்??
சிறுகதை
சரஸ்வதி, அவசர அவசரமாக வெளிக்கிட்டு.. அம்மா வைத்த சாப்பாட்டுப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். வீட்டையும் ஒரு தரம் திரும்பிப் பார்த்தாள். வாசற்கதவின் வலத்தூணின் தலைப் பகுதியில் 'மருது இல்லம்' என எழுதப்பட்டிருந்தது. புதிதாய் அந்த வீட்டைக் கட்டிய போது, அம்மா தெரிவு செய்த பெயர். 'மருது இல்லம்' என எவர் கேட்டாலும், கூட்டி வந்து அவள் வீட்டருகே விட்டு விடுவார்கள். கிராமத்திலேயே, அந்த வீட்டுக்கு மட்டுமே 'பெயர்' இருந்தது.
•Last Updated on ••Saturday•, 21 •January• 2012 18:42••
•Read more...•
••Sunday•, 01 •January• 2012 20:54•
??ரெ.கார்த்திகேசு , கே.எஸ்.சுதாகர் , பாஸ்டன் பாலாஜி , நாகரத்தினம் கிருஷ்ணா , செழியன், நாகரத்தினம் கிருஷ்ணா , புதியமாதவி, றஞ்சனி, ராகவன் தம்பி??
சிறுகதை
'பதிவுகளி'ல் வெளிவந்த சிறுகதைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன். இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் , சிறுகதைகளுட்பட , இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் - பதிவுகள்-
•Last Updated on ••Thursday•, 18 •October• 2012 19:00••
•Read more...•
••Monday•, 26 •December• 2011 20:26•
??- பாவண்ணன், டானியல் ஜீவா , சந்திரவதனா செல்வகுமாரன் , சி. ஜெயபாரதன் , பிரியா, வ.ந.கிரிதரன் , பாரதி , குரு அரவிந்தன் , திலகபாமா , துஸ்யந்தி பாஸ்கரன், சுமதி ரூபன், சாரங்கா தயாநந்தன், வேதா மஹாலஷ்மி??
சிறுகதை
-'பதிவுகளி'ல் வெளிவந்த சிறுகதைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன். இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் , சிறுகதைகளுட்பட , இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் - பதிவுகள்-
•Last Updated on ••Thursday•, 18 •October• 2012 18:57••
•Read more...•
••Sunday•, 25 •December• 2011 19:25•
??-ஆல்பர்ட்,விச்கான்சின் (அமெரிக்கா) - ??
சிறுகதை
அந்தச் சாக்கடை முடைநாற்றத்தில் இவர்கள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறார்களோ? வானமே கூரை!பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுச் சுவர்தான் ஒரே சுவர்; நான்கு பக்கச் சுவரெல்லாம் இந்தக் குடித்தனத்துக்கு கிடையாது. அந்தச் சுவரில் எப்படியோ போட்ட கள்ளத்தனமான துளையில் ஒரு குச்சியைச் செருகி பழைய கந்தல் சாக்கை ஒட்டுப்போட்டு தைத்து முன் பக்கம் நடப்பட்ட இரண்டு குச்சிகளில் இணைத்துக் கட்டியிருப்பதுதான் அவர்களுக்குரிய இடம் என்பதைத் தெரிவிக்கும் அடையாளம்! இப்போது ஓரளவுக்கு உங்களுக்கு இது யாருக்குச் சொந்தமான குடித்தனம் என்று யூகித்திருப்பீர்கள்.
•Last Updated on ••Sunday•, 25 •December• 2011 19:43••
•Read more...•
••Monday•, 19 •December• 2011 23:12•
??ஆசி கந்தராஜா??
சிறுகதை
-1-
டிஸ்கோ பண்டா, பேர்ளின் சுரங்கவண்டி நிலைய வாங்கொன்றில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் நிறை வெறியில் சில்வா! டிஸ்கோ பண்டாவின் வாயிலிருந்தும் அல்ககோல் நெடி வீசியது. அவன் போதையில் தடுமாறவில்லை. நிதானமாகவே புகையை உள்ளுக்கு இளுத்து வளையம் வளையமாக வெளியே ஊதிக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரதும் வாழ்க்கை தடம்மாறி, தள்ளாட்டத்துடன் உருண்டு கொண்டிருப்பதை அவர்களுடைய தோற்றங்கள் வெளிப்படுத்தின. இருவரும் ஒரு காலத்தில் என்னுடன் படித்த கலாசாலை மாணவர்கள். ஜேர்மனியில் படித்த காலத்திலே டிஸ்கோ பண்டா எனக்கு அறிமுகமானான். ஜேர்மனி, கிழக்கும் மேற்குமாக இரண்டு நாடுகளாகப் பிரிந்திருந்த காலத்தில் இது நடந்தது. பண்டா அப்போது கிழக்கு ஜேர்மன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான். இடையில் ஒரு வரலாற்றுக் குறிப்பு! 1949 ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி தொடக்கம், 1989 நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிவரை நாலு தசாப்தங்கள் ஜேர்மனியின் கிழக்குப்பகுதி, கம்யூனிச ஆட்சியின்கீழ், ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்ற பெயருடன் விளங்கிற்று. அந்தக் காலங்களில், வளர்முக நாடுகளிலுள்ள கம்யூனிசக் கட்சிகள,; தங்கள் ஆதரவாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசுகள் வழங்கி கம்யூனிச நாடுகளுக்கு அனுப்பிவைத்தன.
•Last Updated on ••Monday•, 19 •December• 2011 23:32••
•Read more...•
••Thursday•, 15 •December• 2011 22:52•
??- திலகபாமா, நாகரத்தினம் கிருஷ்ணா , நாகூர் ரூமி , ஜெயந்தி சங்கர் , ரோஸாவசந்த், சுமதி ரூபன் , அ.முத்துலிங்கம் ??
சிறுகதை
-'பதிவுகளி'ல் வெளிவந்த சிறுகதைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன். இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் , சிறுகதைகளுட்பட , இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் - பதிவுகள்-
•Last Updated on ••Thursday•, 18 •October• 2012 18:56••
•Read more...•
••Tuesday•, 22 •November• 2011 22:39•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
கஸ்டப்பட்டு உழைக்கும் பணத்தை, தட்டிப் பறிப்பதற்கு என்று ஒரு கூட்டம் இங்கு அலைந்து திரிகின்றது. இந்திரன் மிகவும் கடின உழைப்பாளி. இரண்டு வேலைகளுக்குப் போகின்றார். பகலில் முழு நேர வேலை. இரவில் பகுதி நேர வேலை. உழைக்கும் பணத்தை நாட்டுக்கு அனுப்புகின்றார். வீட்டுக்கு அனுப்புகின்றார். அத்தோடு தனது குடும்பத்தை மிகவும் நன்றாகவே கவனித்துக் கொள்கின்றார். வாழ்க்கையின் பெரும்பாலான நாட்கள் அவருக்கு தூக்கக் கலக்கத்திலேயே கழிகின்றது.
•Last Updated on ••Tuesday•, 22 •November• 2011 22:44••
•Read more...•
••Tuesday•, 01 •November• 2011 17:33•
??சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி) , ஆதவன் தீட்சண்யா (தமிழ்நாடு) , அலர்மேல் மங்கை (அமெரிக்கா). ??
சிறுகதை
•Last Updated on ••Wednesday•, 11 •September• 2013 23:12••
•Read more...•
••Tuesday•, 01 •November• 2011 05:33•
??- அன்டன் செகாவ்; தமிழில்: மணிமேகலை (கோவை, தமிழ்நாடு)??
சிறுகதை
[கதாசிரியர் பற்றி: மணிமேகலை சதீஷ்குமார் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியின் தமிழ்ப் பிரிவில் உதவிப் பேராசிரியராகப் பணி புரிகின்றார். அவர் மொழிபெயர்த்த (ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து) அன்டன் செகாவ்வின் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்றான இச்சிறுகதை மகனை இழந்த குதிரையோட்டி ஒருவரின் துயரத்தினை விபரிப்பது.] அது ஒரு மங்கலான மாலை நேரம். அப்பொழுதுதான் ஏற்றப்பட்டிருந்த தெரு விளக்குகளைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது ஈரமான பனி. வீடுகளின் மேற்பகுதியிலும் குதிரைகளின் பின்புறத்திலும் மெல்லிய பனி அடுக்குகள் படர்ந்திருந்தன. அந்தப் பகுதி மக்களின் தோள்களையும் தொப்பிகளையுங் கூடப் பனிப்படலம் விட்டு வைக்கவில்லை. குதிரை வண்டியோட்டி ஐயோனா பொட்டாப்பாவ் வெளுத்திருந்தார். அவர் பார்ப்பதற்கு ஒரு பேயைப் போலிருந்தார். ஒரு மனித உடலை எவ்வளவுக்கெவ்வளவு வளைக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு தன் உடலை வளைத்திருந்தார் ஐயோனா. அவர் தன் பெட்டியின் மீது அமர்ந்திருந்தார். அவரிடம் எந்த அசைவும் இல்லை. பனிக்குவியலே அவர்மீது நிறைந்தாலும் அதை அசைத்து உதிர்த்து விடத் தேவையில்லை என்பது போல் அமர்ந்திருந்தார். அவருடைய சிறிய குதிரையும் வெண்மையாயிருந்தது.
•Last Updated on ••Tuesday•, 01 •November• 2011 06:04••
•Read more...•
••Tuesday•, 25 •October• 2011 20:06•
??- மூதூர் மொகமட் ராபி (இலங்கை) -??
சிறுகதை
திடீரென தூக்கம் கலைந்து விட்டது எனக்கு. வீட்டுக்குள்ளே ஒரே புழுக்கமாக இருப்பதால் நாங்கள் எல்லோருமே எங்கள் வீட்டு மொட்டை மாடியில்தான் உறங்குவது வழமை. சிறிது நேரமானதும் வாப்பா என்னையும் தம்பிகளையும் தூக்கம் கலைந்து விடாமல் வீட்டினுள்ளே படுக்ககையறையினுள் கிடத்தி விடுவார். ஆனால் இப்போது ஒருவரையும் காணவில்லை. அவர்களைத் தேடியபோதுதான் சட்டென என்னருகில் படுத்திருக்கும் எனது செல்ல அர்னப்பின் நினைவு வந்தது. எங்கே போயிருப்பான்? ஒருவேளை வீட்டுக்குள் இறங்கி விட்டானோ? உச்சி வானிலே ஒட்டியிருந்த பிறை நிலாவின் சிறு வெளிச்சத்தில் ஒரு மூலையில் ஏதோ ஒன்று அசைவது போல... ஓ! அது.. அர்னப்தான் மாடிப்படியில் இறங்கித் துள்ளித் துள்ளி ஓடுகிறான்.
•Last Updated on ••Tuesday•, 25 •October• 2011 20:35••
•Read more...•
••Friday•, 14 •October• 2011 21:30•
??- வ.ந.கிரிதரன் -??
சிறுகதை
[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகள் இவை. இவற்றில் சில கனடாவிலிருந்து வெளியான 'வைகறை' மற்றும் வெளிவரும் 'சுதந்திரன்', ஈழநாடு' ஆகிய பத்திரிகைகளில் மீள்பிரசுரமானவை. ஒரு பதிவுக்காக ஒருங்குறி எழுத்தில் இங்கு மீள்பிரசுரமாகின்றன. இதில் பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும் சில இழந்த மண்ணைப் பற்றிப் பேசுபவை. - ஆசிரியர், பதிவுகள்]
•Last Updated on ••Thursday•, 02 •January• 2020 12:08••
•Read more...•
••Wednesday•, 28 •September• 2011 16:54•
??பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)??
சிறுகதை
என்னைக்கும் அப்படிப் பார்த்ததே இல்லை. குனிஞ்ச தலையோடுதான் காலடி வீட்ல படும். நேரா சமையக்கட்டுதான்.அங்கே வச்சிருக்கிற காசைப்பார்த்ததும் இன்னைக்கு என்ன சமைக்கிறதுங்கிறது முடிவாயிடும். மொவத்துல ஒரு அப்பாவிக் களையிருக்கும். சிரிச்ச மொவத்தோடு வீட்டுக்குள் வருவதும் போவதும் நடக்கும். ஒரு அலுப்புமில்லாம சலிப்புமில்லாம வேலைசெய்யிற ஜீவன்தான் பாக்கியம். எவ்வளவுதான் வருத்தமிருக்கட்டுமே அதை மொவத்தில காட்டுனதேயில்லை. நானும் பாத்ததுமில்ல. முனு வருசமா பார்த்துக்கிட்டுதானே இருக்கேன்.
•Last Updated on ••Wednesday•, 28 •September• 2011 20:03••
•Read more...•
••Wednesday•, 28 •September• 2011 16:26•
??நடேசன்(அவுஸ்திரேலியா)??
சிறுகதை
“உலகம் சுருஙகிவிட்டது” என்று எல்லோரும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அதை ஜெனிவாவுக்கு வந்தால் இலகுவாக புரிந்து கொள்ளமுடியும். பூகோளத்தில் உள்ள சகல நாட்டை சேர்ந்தவர்களும் வந்து போவார்கள். அந்த நாடுகளுக்கு பொதுவான நிறுவனங்கள் இந்த ஜெனிவா நகரில் இருப்பதால் எப்பொழுதும் மகாநாடுகள் கருத்தரங்குகள் என நடைபெறுவதால் ஹோட்டல்கள் எல்லாம் நிரம்பியே வழியும். வெளிநாட்டவர்கள் தொகை உள்நாட்வர்களுக்கு சமமானது. இப்படியான ஜெனிவாவில் ஐந்து நாட்கள் ஒரு ஹோட்டலில் தங்கி நாலு இரவுகள் அந்த ஹோட்டலின் உணவை அருந்தினார் சோலர் ரெக்னோலஜி பொறியிலாளர் சம்பந்தமூர்த்தி. அவரது நாக்குக்கு திருப்தியில்லை.
•Last Updated on ••Wednesday•, 28 •September• 2011 17:04••
•Read more...•
••Thursday•, 08 •September• 2011 20:31•
??- கமலாதேவி அரவிந்தன்-??
சிறுகதை
கோப்பையைத் தூக்கிப்பிடித்து, மேலே அண்ணாந்து காப்பி குடிக்க முயன்றதில் இந்த முறையும் தோல்விதான். பழக்கமின்மையால் காப்பி சிதறி, டீ ஷர்ட்டெல்லாம் நனைந்து வேறு உடை மாற்ற அறைக்குள் ஓடும் பூங்கொடியைப் பார்க்கப் பார்க்க, தனலெட்சுமிக்குப் பற்றிக் கொண்டு வந்தது கோபம். என்னாச்சு இந்தப் பெண்ணுக்கு? கொஞ்ச நாட்களாகவே மகள் அடிக்கும் லூட்டி, சில சமயங்களில் எரிச்சலைக் கூடக் கொடுத்தது. காப்பியை உறிஞ்சி, மிடறு மிடறாய்க் குடிப்பது தான் பூங்கொடிக்குப் பிடிக்கும். அப்படி ரசித்துக் குடிப்பது பார்க்க என்னமோ தியானம் போல் இருக்கும். அப்படி மெய்ம் மறந்து காப்பி குடிக்கும் பெண் இப்ப கொஞ்ச நாட்களாய் தான் இப்படி அண்ணாந்து குடிக்கிறாள். வெறும் தண்ணீரை[ பச்சைத்தண்ணீரை ]அப்படி குடிப்பதில் சிரமமில்லை. ஆனால் சூடு காப்பியையும், அப்படி சர்க்கஸ் வேலையாய் குடிக்க முற்பட்டு, பிறகு உடையெல்லாம் சிதறி, அசடு வழிய அறைக்குள் ஓடுவதைப் பார்க்கும் போது தான்,கோபம் வருகிறது.
•Last Updated on ••Thursday•, 08 •September• 2011 20:44••
•Read more...•
••Wednesday•, 07 •September• 2011 18:10•
?? கடல்புத்திரன்??
சிறுகதை
பெண்கள் மாத்திரமில்லை, ஆண்களும் ... தம்மவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். ஆனால்,அவர்களுடையது போல ஆழமான போக்குடையதில்லை. விமலுக்கு சுரேசின் தலை வாருதல் கண்ணைக் குத்துகிறது. மாலையில் கூட அப்படியே குலையாமல் இருந்து.. விமலைப் பார்த்து ஒரு நக்கல் பார்வை பார்க்கிறது. 'நான் என்ன நேரத்தில் பிறந்து தொலைத்தேனோ.. எனக்கு எல்லாமே தலைகீழ்!'அவனும் வீட்டிலே இருந்து வெளீக்கிடுகிற போது நீரைத் தெளித்து வாரித் தான் பார்க்கிறான். சைக்கிளில் ஏறி உழக்க,ஈரம் காய்ய.. பிடிவாதமாக பரட்டையாக நிற்கிறது.அவனுக்கு தேங்காய் எண்ணெய்யும் நீரும் சரியாய் கலக்கிற பக்குவம் பிடிபடவில்லை.அதோடு வேர்க்கிறதும் அதிகம்.அதிக எண்ணெய் தடவி வலிச்சு இழுத்தான் என்றால் கடிக்கிறது.உடம்பு மெசினும் நல்லாய் இல்லை.'தோல்வி தனை எழுதட்டும் வரலாறு'ரகம்.சலிச்சுக் கொள்வான்.
•Last Updated on ••Wednesday•, 07 •September• 2011 18:54••
•Read more...•
••Tuesday•, 06 •September• 2011 16:10•
??நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்)??
சிறுகதை
துரும்பு ஒன்று காற்றிலே பறக்கும்போது அது ஏன் பறக்குது என்பது ஞானிக்குத் தெரியுமாம். அவர்கள் சகுனங்களை அறிவார்களாம். பிறர் வார்த்தைகளிலிருந்து அவர்கள் உள்ளத்தை அறிவார்களாம். முகச்சாடைகளிலிருந்து அவர்கள் சுபாவத்தை அறிவார்களாம் என்றுதான் அறிந்திருக்கிறேன். ஆனால் சாதாரண மனிதர்களாகிய எமக்கு இவை முடியாமற் போகின்றது. திருமணமாகி ஐந்து வருடங்களாகக்; காத்திருந்து கிடைத்த அழகான அருமை மகள். அக்குழந்தை மார்பில் வாய் புதைந்து கொடுத்த வலிகள் இன்னும் மாறாது எடையற்ற மலர்களாக அந்தத் தாயுள் விரிவதுண்டு. இப்போது வயது ஒன்பது ஆரம்பித்திருக்கிறது அக்குழந்தைக்கு. பாடசாலைக்கு கூட்டிச்செல்வது மட்டுமல்ல, சனிக்கிழமைகளில் இங்குள்ள தமிழ் பாடசாலைகளில் பரதநாட்டியம், வீணை போன்ற கலைகளையும் தன் குழந்தைக்கு கற்றுக் கொடுப்பதற்காக ஓய்வின்றி அலைந்துகொண்டிருப்பவள் அந்தத்தாய்.
•Last Updated on ••Wednesday•, 07 •September• 2011 17:45••
•Read more...•
••Tuesday•, 26 •July• 2011 18:57•
??வ.ந.கிரிதரன்??
சிறுகதை
1.ஸ்கார்பரோ நூலகக் கிளையொன்றில் பன்மொழிப் பிரிவினில் தமிழ் நூல்களைத் தேடிக்கொண்டிருந்த பானுமதியின் கவனத்தை “பானு” என்ற வியப்புடன் கூடிய ஆண் குரலொன்று கலைத்துவிடவே குரல் வந்த திசையினை நோக்கித் திரும்பினாள். அவளால் நம்பவே முடியவேயில்லை. எதிரிலிருந்தவன் சேகரனேதான். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவனை அவள் சந்திக்கின்றாள். குறைந்தது இருபத்தைந்து வருடங்களாகவாவதிருக்கும். காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடி விட்டது. நாட்டு நிலைமை காரணமாகப் புலம்பெயர்ந்து வந்தது நேற்றுத்தான் போலிருக்கிறது. அதற்குள் இத்தனை வருடங்கள் கழிந்தோடி விட்டனவா! வியப்பு நீங்காதவளாக அவனை நோக்கிச் சில கணங்கள் பேச்சற்று நின்றாள் பானுமதி.
•Last Updated on ••Tuesday•, 26 •July• 2011 19:11••
•Read more...•
••Friday•, 22 •July• 2011 18:12•
??- கே.எஸ்.சுதாகர் -??
சிறுகதை
- அட சாந்தன்! நீங்கள் எப்ப ஒஸ்ரேலியா வந்தனியள்?
- ஆர் குமரனோ? நாங்கள் இஞ்சை வந்து ஒண்டரை வருஷமாப் போச்சு. எப்பிடி உன்ரை பாடுகள் போகுது? நீ வெளிக்கிட்டு ஒரு பத்துப் பதின்மூண்டு வருஷம் இருக்கும் என்ன?
- பரவாயில்லை சாந்தன். இப்ப நாங்கள் ‘டிலகேயிலை’ இருக்கிறம். நீங்கள்?
- நாங்கள் ‘அல்ற்ரோனா’விலை.
•Last Updated on ••Friday•, 22 •July• 2011 18:25••
•Read more...•
••Wednesday•, 20 •July• 2011 15:16•
??நாகூர் ரூமி ??
சிறுகதை
[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த சிறுகதைகள் சில ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அவ்வப்போது பதிவுகள் இதழில் வெளியான படைப்புகள் இவ்விதம் மீள்பிரசுரம் செய்யப்படும். - பதிவுகள்] மூன்றாவது நாளாக சிவநேசன் வீட்டுக்கு தூரமாகிப் போயிருந்தான். முதல் நாள் நடந்தது இன்னும் பிசுபிசுவென மனம் பூரா ஒட்டிக்கொண்டிருந்தது. ஆபீஸ¤க்குக் கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தான். கொடியில் வெறுப்போடு அதற்கு முதல் நாள் கழட்டி எறியப்பட்ட குழாயை எடுத்து, லுங்கியைத் தூக்கி தன் வலது காலை அதன் வலது காலுக்குள் செலுத்த முயன்று கொண்டிருந்த போதுதான் அது நடந்தது. அடி வயிற்றில் திடீரென்று ஒரு இடி. ஒன்றும் புரியவில்லை. அது அடிவயிறென்றே முதலில் அவன் நினைக்கவில்லை. வலது பக்க இடுப்புப் பகுதியில் வலிப்பதாகத்தான் நினைத்தான்.
•Last Updated on ••Wednesday•, 20 •July• 2011 15:34••
•Read more...•
••Monday•, 18 •July• 2011 20:11•
??மார்கரெட் லாரன்சு (கனடா) ; தமிழில்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர் ??
சிறுகதை
[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த சிறுகதைகள் சில ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அவ்வப்போது பதிவுகள் இதழில் வெளியான படைப்புகள் இவ்விதம் மீள்பிரசுரம் செய்யப்படும். - பதிவுகள்]
நீங்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. நாம் சந்திக்க மாட்டோம். உங்கள் வயது எனக்குத் தெரியாது. என் வயதினராக இருப்பீர்களென நினைக்கிறேன். எனக்கு நாற்பத்தோரு வயதாகிறது. உங்களுக்கு எவ்வளவு குழந்தைகளிருக்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு பிள்ளைகளிருக்கிறார்கள். என் மகளுக்கு பதினைந்து வயதாகிறது.என் மகனுக்கு பன்னிரண்டு வயசாகிறது. உங்களுக்கும் பன்னிரண்டு வயதில் ஒரு மகனிருக்கிறான். என் மகன் கானாவில் பிறந்தான். அப்போது மருத்துவர் அருகிலில்லை. நான் நலமாக இருந்தாலும் டாக்டருக்கு அதிக வேலைகள் இருந்ததாலும், ஒரு மருத்துவச்சி தான் என்னை கவனித்துக் கொண்டாள். அவள் ஒரு கானிய குடும்பத் தலைவி. நான்கு குழந்தைகளுக்குத் தாய். எனவே எந்த மருத்துவருக்கும் அவருக்குத் தெரிந்த அளவு தெரிந்திருக்க நியாயமில்லை. நேரம் செல்லச் செல்ல அவர் எனக்கு உறுதியளித்தார். "இது ஒரு ஆண் குழந்தையாகத் தானிருக்கும். ஒரு ஆனால் தான் இவ்வளவு பிடிவாதமாக இருக்க முடியும்". நான் வலியால் துடித்த போது அந்த பெண்மணி நான் பிடித்துக் கொள்ள தனது கைகளை நீட்டினாள். அந்தக் கைகள் மட்டுமே வாழ்வின் கடைசி நம்பிக்கைச் சின்னங்களாக நினைத்து நான் பற்றிக் கொண்டேன். "இதோ விரைவில் முடிந்து விடும். நான் உன்னிடம் பொய் செல்வேனா. இதோ பார். எனக்குத் தெரியும். நானும் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறேன்," என்று கூறினார்.
•Last Updated on ••Monday•, 18 •July• 2011 20:29••
•Read more...•
••Tuesday•, 05 •July• 2011 16:58•
??நடேசன்??
சிறுகதை
அந்த வீட்டின் படுக்கையறையுள் நுழைந்ததும் பெரிய புயல் வீசியபடி இருப்பதை உணர்ந்தேன். மெதுவாக ஆரம்பித்து பின் பலமாக வீசிய அந்தப் புயலால் சிறிது நேரத்தில் நிலத்தில் தூக்கி வீசப்பட்டேன். தரையில் இருந்து மெதுவாக என்னை சுதாகரித்தபடி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து என்னை ஆசுவசப்படுத்திக் கொண்டேன். சில நிமிட நேரத்துக்கு பின் எழுந்து கண்ணாடி யன்னலை மெதுவாக மேலே உயர்த்த முயன்றேன். உயர்த்த முடியவில்லை. மிகுந்த பலத்தோடு உயர்த்தியபோது மீண்டும் வெளியில் இருந்து வீசிய புயல் காற்று என்னை அடித்து வீழ்த்தியது. நான்; எழுந்து வெளியே கூடத்திற்கு வந்து புத்தக அலுமாரியில் இருந்து இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேற நினைத்த போது அந்த புத்தக அலுமாரி நிலத்தில் விழுந்து புத்தகங்கள் தரையில் சிதறின. ஒன்றும் தேவையில்லை என வேகமாக வெளியே வந்து எனது சுவாசத்தை பலமாக உள்ளே இழுத்து விட்டு இது பேய்பிடித்த வீடு என நினைத்துக்கொண்டு திரும்பிப் பாராமல் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து நடந்தேன்.’
•Last Updated on ••Tuesday•, 05 •July• 2011 17:15••
•Read more...•
••Wednesday•, 22 •June• 2011 15:37•
??திலகபாமா??
சிறுகதை
அன்புள்ள நிஷாந்த், நீ நலமாயில்லை அல்லது நலமாயிருப்பதாய் நம்புவதாய் எழுதிய கடிதத்திலிருந்து எனது பதில் துவங்குகின்றது. உன் எழுத்துக்கள் நடுங்குவதைக் கண்ணுற்ற நான் அதைத் தவிர்க்கவே இக்கடித்தை எழுதுகின்றேன். எல்லாரும் குழந்தைகளை யசோதைக்கு கண்ணன்போல் கடவுளே வாய்த்தாலும் நாகரீகத்திற்கு துல்லிய இயந்திரமாய் பழக்கிய காலத்தில் நான் உனை காடுகளை முகரவும் தூரத்து ஆபத்தில் காலடிச் சுவட்டை வாசிக்கவும் காற்றில் மிதந்து வந்த தேனின் வாசத்தைப் பற்றிக் கொண்டு பூக்களிடம் சேகரிக்கவும் கற்பித்தவள் சிங்கங்களின் தேசம் முயல்களின் தேசம் என மற்றவர்கள் பிரித்து வைத்த காலகட்டத்தில் நெருக்கடியில் வாழ்ந்து கொண்டு ஒவ்வொன்றின் ஒவ்வொருவரின் பெறுமானமும் பெருமதிப்பும் வேறு வேறானவை அதற்கான புரிதலே வாழ்க்கை எனவும் சொல்ல முயற்சித்தவள். இன்று நீ காடுகளின் இளவரசனாய் பதினாறாம் வயதில் முடி சூடுவதை கண்டு மகிழ்ந்தவள். பால் வேறுபாடுகளற்று பழக முடிந்தவன், பால் வேறுபாடுகளோடு வாழ நேரும் சந்தர்ப்பங்களைப் போதிக்க வேண்டிய தேவை வந்த போது எனை விட நீ அதிர்ந்தாய் ஆம் பதினாறு வயதில் மீண்டும் பள்ளியில் பெண்களோடு உனது படிப்பு காலங்கள் அமைந்த போது நான் கவலைப் படவில்லை. ஏனெனில் ஆண் பெண் வேறு பாடுகளற்று எப்பவும் நேசிக்க கற்றுத் தந்திருந்ததாக நம்பியிருந்தேன். ஆம் நீயும் அதுவரை அப்படித்தானிருந்தாய். உனது 12 வயது அத்தை மகன் அத்தையை பேருந்தில் இன்னொரு ஆண் பக்கத்தில் உட்காருவதை தவிர்க்கச் சொன்ன போது , நீயும் நானும் எனது நண்பர்களும் பயணிக்க நேர்ந்த சம்பவத்தை நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை.
•Last Updated on ••Wednesday•, 22 •June• 2011 15:46••
•Read more...•
••Wednesday•, 22 •June• 2011 15:12•
??- ஆபிதீன் -??
சிறுகதை
['பதிவுகள்' இணைய இதழில் அன்று பல்வேறு எழுத்துருக்களில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது தமிழ் ஒருங்குறியில் மீள்பிரசுரமாகும்.. அந்த வகையில் இம்முறை வெளியாகும் ஆக்கம் எழுத்தாளர் ஆபிதீனின் நெடுங்கதையான 'ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும்' - பதிவுகள்]
வாப்பா தன் கடைசி காலத்தில் அணிந்திருந்த மோதிரம் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றிற்று. (உலகத்தில் வேற விஷயமே இல்லை , பாருங்கள்!) மோதிரத்தை எங்கே வாங்கினார்கள் , யாரிடம் கொடுத்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்களா என்பதற்காக அவர்களின் டைரி ஒன்றை புரட்டினேன். வருடா வருடம் எழுதும் டைரி அல்ல அது. கிழிந்துபோன வாழ்க்கை மொத்தத்திற்கும் ஒன்று. ஊரில் பால் பண்ணை வைத்து சொந்தக்காரர்களால் ஏமாந்தது, நாகப்பட்டினத்திற்கு கப்பலில் வந்து இறங்கிய காலத்தில் திமிர் பிடித்த கஸ்டம்ஸ்காரன் போட்ட டூட்டி, பினாங்கில் வாங்கிய தொப்பித் துணி சாயம் போயிருந்தது , பூட்டியா ஆயிஷாம்மா கனவில் சொன்ன சில செய்திகள் பின் உண்மையாகிப் போனது, குணங்குடியப்பாவின் எக்காலக்கண்ணி ஒரிரண்டு, கையானம் காய்ச்சுவது எப்படி?, நான் பிறந்தபோது அசல் சீனாக்காரன் சாயலில் இருந்தது, 'கடவுள் மனது வைத்தால் கழுதை கூட குஸ்தி போடும்' என்ற கனைப்புகள் என்று பலதும் அதில் இருக்கும். மோதிரம் பற்றி மட்டும் இல்லை. 'கமர் பஸ்தா ஹோனா' என்று தலைப்பிட்டு , எந்த ஆலிம்ஷாவோ பேசியதை பேசியதுபோலவே எழுதி அடிக்கோடிட்டும் வைத்திருந்த 786வது பாரா மட்டும் என்னைக் கவர்ந்தது. 'மாக்கான் வருவான்' என்று பிள்ளைகளுக்கு - நாலு வருடத்திற்கு ஒருமுறை ஊர் வந்து- பூச்சாண்டி காட்டிய வாப்பா பயந்ததின் அடையாளங்களில் ஒன்று.
•Last Updated on ••Thursday•, 18 •October• 2012 20:06••
•Read more...•
••Tuesday•, 26 •April• 2011 17:44•
??- கே.எஸ்.சுதாகர் (ஆஸ்திரேலியா) -??
சிறுகதை
உண்மையில் நேற்றைய தினமே குழந்தை பிறந்திருக்க வேண்டும். ஒரு நாள் பிந்தி விட்டது. இரவு பகலாக விழித்திருந்ததில் செல்வாவிற்கு இந்தக் அதிகாலை வேளையிலும் அசதியாக இருந்தது. வைத்தியசாலைக்குப் போவதற்கு ஆயத்தமாகக் காரை வீட்டு முகப்பினிலே நிறுத்தியிருந்தான் அவன்.
"சாந்தினி வெளிக்கிடுவம் என்ன!"
சாந்தினி பயந்தபடியே படுக்கைக்கும் கழிவறைக்குமாக, தனது பென்னாம் பெரிய வயிற்றையும் தூக்கிக் கொண்டு நடை பயின்று கொண்டிருந்தாள். செல்வாவிற்கு அவளைப் பார்க்கக் கவலையாக இருந்தது. சாந்தினி வெளிக்கிடுவதற்கு அரைமணி நேரமாவது எடுக்கும் என்று நினைத்தவாறே ரெலிவிஷனிற்கு முன்னால் அமர்ந்தான் செல்வா. நேற்றைய தினம் 'சிற்றியில்' நடந்த ஊர்வலமொன்று செய்தியினூடாகப் போய்க் கொண்டிருந்தது. புதிதாக நாட்டினுள் வருபவர்களுக்கு எதிராக, சுலோகங்களைத் தாங்கியவாறு மெளரி இன மக்களும் வெள்ளையினத்தவர்களுமாகப் போய்க் கொண்டிருந்தனர்.
•Last Updated on ••Tuesday•, 26 •April• 2011 17:58••
•Read more...•
••Tuesday•, 26 •April• 2011 17:05•
??கடல்புத்திரன் ??
சிறுகதை
வந்தான் வரத்தானாக மல்லிகைப்பூக் கிராமத்திற்கு போது எனக்கு 13 வயசு.8ம் வகுப்பில் படிக்கிற மாணவன். திருமதி சுப்பிரமணியம்-என்னுடைய அம்மா- சுகாதாரம் படிப்பித்தார். எல்லா வகுப்புகளுக்கும் அவரே சுகாதார ஆசிரியை.அதே போலவே கணிதம்,விஞ்ஞானம்,ஆங்கிலம் எடுத்த ஆசிரியர்களும் எல்லா வகுப்புகளுக்கும் அவர்களே படிப்பித்தார்கள்.10ம் வரையில் இருந்த எங்க பாடசாலையில்,எல்லா தரத்திலும் ஓரு வகுப்பு மட்டுமே இருந்தது.எ,பி,சி...என பல பிரிவுகள் அவற்றில் இருக்கவில்லை.கிராமம் வேற எப்படி இருக்கும்.ஒரு வகுப்பில் 35- 40 பேர்கள்...என்று இருப்போம்.அதில் அரைவாசிப் பேர்கள் பெண்கள். சொல்ல மறந்து விட்டேன்.வள்ளுவர்,காந்தி, பாரதி..என எல்லாருக்கும் ஒவ்வொருப் பட்டப் பேர்களும் இருந்தன. ஆங்கில ஆசிரியருக்கு , 'குஞ்சியப்பு'என பேர் வைக்கப் பட்டிருந்தது.கனகலிங்கம் என அழகான பேர் அவருக்கு இருக்கிறது.அயன் பண்ணின நீள்காற்சட்டையும்,சேர்ட்டும் அணிந்து வாரவர்.ஆனால்,ஒய்வு நேரங்களில் ..சதா வெத்திலை சப்பிக் கொண்டிருப்பார்.வெத்திலைக் குஞ்சியப்பு என்பது தான் முழுமையான பட்டப்பேர்.ஸ்டைலாக இருக்கிற அவர், அப்படி இருப்பதற்கு ஏதும் விவசாயப் பின்ணணி இருக்க வேண்டும்.வெத்திலைப் பழக்கம் பொதுவாக அவர்களுடையது.நுனிப்புல் மேய்கிறவர் தானே மாணவர்கள்.எனவே தான் வாய்யிலே வந்தபேரை அவருக்கு வைத்து விட்டார்கள்.
•Last Updated on ••Tuesday•, 26 •April• 2011 17:26••
•Read more...•
••Tuesday•, 26 •April• 2011 16:51•
??- நடேசன் (ஆஸ்திரேலியா) -??
சிறுகதை
காலை எட்டு மணியளவில் ஜெனிவாவில் ஒரு குறுக்குத் தெருவில் சம்பந்த மூர்த்தி நின்றுகொண்டிருந்தார். அந்தத் தெருவின் ஒரு மூலையில் ரூரிஸ்ட் ஆபீஸ் இருந்தது. அங்கே நின்றால் ‘நீங்கள் அல்ப்ஸ் மலைகளுக்கு செல்லும் வாகனத்தை பிடிக்கலாம்’; என ஏற்கனவே பஸ் ஸ்ராண்டில் இருந்த பெண் அரைகுறை ஆங்கிலத்தில் கூறி இருந்தாள். பிரான்ஸ்சும் ஆங்கிலமும் கலந்த அந்த பதிலில் சம்பந்த மூர்த்தி; முடிந்தவரை ஆங்கிலத்தை பிரித்து எடுத்து புரிந்து கொண்டு தெருவைக் கண்டு பிடித்தது தன்னை ஒரு சாதனையாளனாக தனக்குள் மெச்சிக்கொண்டார். அவர் மட்டும்தான் அந்த இடத்தில் தனியாக நின்றுகொண்டிருந்தார். அந்த இடத்துக்கு முன்பாக உள்ள இத்தாலிய ரெஸ்ரோரண்டில் இரண்டு பெரிய மீசையுள்ளவர்கள் காலை உணவுக்காக கதவுகளை திறந்து கதிரைகளை தூக்கி அடுக்கிக் கொண்டிருந்தாரர்கள். அவர்களிடம் சென்று பேச முயற்சித்தாலும் அங்கும் சம்பந்த மூர்த்தியின் ஆங்கிலம் அவருக்கு கை கொடுத்தவில்லை.
•Last Updated on ••Tuesday•, 26 •April• 2011 17:03••
•Read more...•
••Tuesday•, 26 •April• 2011 16:45•
??- கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் -??
சிறுகதை
வியர்வையில் ஊறிய டீ ஷர்ட்டும், மெது ஓட்டத்துக்கான ஜோகிங் ட்ரேக் கால்சராயுமாய், கல்சீட்டில் வந்தமர்ந்த சசிரேகாவுக்கு மூச்சு வாங்கியது. நியாயப்படி ஜோகிங் செய்பவர்கள் பாதியிலேயே இப்படி வந்தமர்வதில்லை. மூன்று ரவுண்டு ஓடிவிட்டுதான் சசிரேகாவும் வந்து அமர்ந்தாள். அதற்குமேல் மெது ஓட்டமல்ல, நடைகூட கஷ்டமாக இருந்தது,. பேசாமல் அமர்ந்து பார்க்கில் ஓடிக்கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். ஆண் ,பெண் ,பேதமில்லாமல் மனிதர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். அந்த காட்சியும் கூட கொஞ்ச நேரத்துக்குமேல் உவப்பாயில்லை. எதிர்சாரியிலிருந்த உடல் பயிற்சி தளத்தில் கண்களை ஓட்டினாள். அந்த திறந்த வெளிச்சாலையில், இளைஞர்களும், வயதானவர்களும், கைகால்களை அசைத்தும் வளைத்தும், உடல்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
•Last Updated on ••Tuesday•, 26 •April• 2011 17:05••
•Read more...•
••Friday•, 01 •April• 2011 00:00•
??- ராம்ப்ரசாத் ( சென்னை ) - ??
சிறுகதை
வானம் பிரகாசமாக இருந்தது. அத்தனை வெயில். வெம்மை அதிகமாயிருந்ததாலோ என்னவோ ஒட்டுமொத்த சனமும் கிடைத்த நிழல்களில் பதுங்கிக் கொள்ள, அதையும் தாண்டி சிலர் வேகமாக பைக்குகளிலும், கார்களிலும் இடமும் வலமுமாக கடந்து போய்க்கொண்டிருந்தனர். கார்களில் சொல்வோர் பாடு பரவாயில்லை. ஏசி இருக்கும். பாவம், நடைராஜாக்கள் பாடி திண்டாட்டம்தான் என்று நினைத்துக்கொண்டே அன்னை பொறியியல் கல்லூரிக்கெதிரே இருந்த நிழற்குடையில் நின்றிருந்தார் வேதம்.
அவரைப் பற்றிய மேல்விவரங்கள் கொஞ்சம். அவர் ஒரு போலீஸ் அதிகாரி. வயது 42. உயரம் ஐந்தரை அடிக்கும் மேல். வாட்டசாட்டமான உடல்வாகு. கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர். அவர் அப்போது நின்றிருந்த இடத்துக்கு பக்கத்தில் தான் அவருக்கு வீடு. மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுத்தான் ஆபீஸ் செல்வார். சாப்பிடும் நேரம் வரை, டிரைவர் ஜீப்பை பெட்ரோல் போல எடுத்துசெல்வார். சாப்பிட்டவுடன், வேதம் மெயின் ரோட்டிலுள்ள அந்த பேருந்து நிலைய நிழற்குடையில் காத்திருக்க, ஜீப் வந்ததும் ஏறிக்கொள்வார். இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு. அப்படி அவர் அன்று காத்திருக்கையில் தான் அதை கவனித்தார்.
•Last Updated on ••Friday•, 01 •April• 2011 16:20••
•Read more...•
••Friday•, 01 •April• 2011 00:00•
??கே.எஸ்.சுதாகர்??
சிறுகதை
கதை ஒன்று. களம் : இலங்கை
படார்' என்றொரு சத்தம். நான் விழித்துக் கொண்டேன். இரவுப்பொழுதாகையால் அந்தச் சத்தம் பெரிதாகக் கேட்டது. எத்தனை மணியாக இருக்கலாம்?
அப்பா வழக்கமாக நேரத்திற்கு (நாலரை ஐந்து மணியளவில்) எழும்பி சுவாமி கும்பிடத் தொடங்கி விடுவார்.
"அது என்ன சத்தம்?" படுக்கையிலிருந்தபடியே அப்பாவும் கேட்டார். எல்லாரும் எழுந்து கொண்டோம். விளக்கைப் போட்டோம். ஆளாளுக்கு ஒவ்வொரு அறையாகத் தேடுதல் செய்தோம். ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பா மணிக்கூட்டைப் பார்த்தார். மணி மூன்று பதினைந்து.
•Last Updated on ••Friday•, 01 •April• 2011 16:20••
•Read more...•
••Monday•, 28 •February• 2011 16:48•
??குரு அரவிந்தன்??
சிறுகதை
மின்னல் அடித்ததுபோல எல்லாமே சட்டென்று நடந்துவிட்டது. அதிர்ச்சியில் இருந்து நான் மட்டுமல்ல, அவளும் மீளவில்லை என்பதை அவளது அந்தப் பிடி உணர்த்தியது. ஏவ்வளவு லாவகமாய் அவள் என்னைக்கடந்து சட்டென்று திரும்பி பின்பக்கமாய் வந்து என்னை இறுக்கி அணைத்தாள் என்பது எனக்கே வியப்பாக இருந்தது. தன்னைப் பாதுகாக்க என்னை முன்னால் தள்ளி நிறுத்தினாளோ, அல்லது எனது ஆண்மையில் அவளுக்கு இருந்த அதீத நம்பிக்கைதான் காரணமோ தெரியவில்லை, எதுவாய் இருந்தால் என்ன, என்னை நம்பிச் சரணடைந்தவளைக் காக்கவேண்டியது எனது பொறுப்பு என்பதை உணர்ந்து அவளுக்கு அடைக்கலம் கொடுத்தேன்.
•Last Updated on ••Monday•, 07 •March• 2011 16:41••
•Read more...•
|