பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

குறுநாவல்: தங்ஙள் அமீர்

•E-mail• •Print• •PDF•

அஞ்சலி: எழுத்தாளர் சீர்காழி தாஜ் மறைவு! இனிய நண்பரை, உடன் பிறவாச் சகோதரரை இழந்தோம்!  இன்று மாலை முகநூலுக்குள் நுழைந்த என்னை துயரகரமான, அதிர்ச்சியினையூட்டிய செய்தியொன்று எதிர்கொண்டது. எழுத்தாளரும், இனிய நண்பரும், உடன் பிறவாச் சகோதரருமான சீர்காழி தாஜ் அவர்க- எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் மறைவினையொட்டி , பதிவுகள் இணைய இதழில் வெளியாகிய அவரது  'தங்ஙள் அமீர்'  குறுநாவலை மீள்பிரசுரம் செய்கிறோம் -

- புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அன்னிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்ஙள் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்ஙள் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர்  இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்ஙள் அமீரை'ப் பாவிப்பதும்தாம். இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை  விபரிக்கும் 'தங்ஙள் அமீர்' வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் 'மிதவை' (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ''தங்ஙள் அமீர்'. இக்குறுநாவலினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர். -வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்-


குறுநாவல்: தங்ஙள் அமீர் (பதிவுகள் - 23 April 2014)

"நேற்று 'அல் - முராஃபி'க்கு போனீங்களா?, போக்கரை சந்திச்சீங்களா?" - எங்க மேனேஜர் 'ஜெம்', எதிர்பக்கத்து கேபினிலிருந்து எழுப்பிய அந்தக் கேள்வி எனக்கானது. காலையில் அலுவலகம் போனவுடன், மேனேஜர் ரூமுக்கும், அக்கவுண்டண்ட் ரூமுக்கும் எதிரே, பக்கவாட்டுத் தடுப்பினுள் காணும் டீ டேபிளில், காஃபி உண்டாக்கி; நானும், ஸ்டோர்கீப்பர் ஜமாலும் குடிக்கத்தொடங்கிய போதுதான், ஜெம் அலுவலகம் வந்தார். இருக்கையில் அவர் அமர்ந்த நாழிக்கு அப்படி கேட்டதென்பது எனக்கு குழப்பத்தைத் தந்தது.

'அல் முராஃபி' ஒரு சூப்பர் மார்க்கெட். ரியாத் புறநகர்ப் பகுதியான 'அல் நசீம்'-ல் உள்ளது. அதன் பர்ச்சேஸ் மேனேஜர்தான் போக்கர்! அவனைப்பற்றிதான் கேட்கிறார். மலையாளியான அவன் பெயர் பக்கர் குஞ்சு. பக்கர் குஞ்சு, வழக்கில் போக்கராகிப் போனான். எங்க மேனேஜருக்கு அவன் கூட்டுக்காரனும்கூட. வியாபாரரீதியில் எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் தரக்கூடியவன். அதற்கு ஈடாக மாதம்தட்டாமல் நாங்கள் தரக்கூடிய அன்பளிப்பு கவர் கனமானது! சிரிப்பற்ற அவனது முகத்தில் சிரிப்பை வரவழைப்பது! அவனது எத்தனையோ சௌதி சம்பாத்திய சந்தோஷங்களில் இதுவும் ஒன்று.

இந்த வியாபார யுக்தியில் எங்க மேனேஜர் மொழி, மதம், நாடு கடந்து தன்நேர்மையை பறைசாற்றுபவர்! ரியாத்தில் எங்களோடு வியாபாரத் தொடர்பு கொண்டிருக்கும் அத்தனை 'போக்கர்'களுக்கும் பேசியது பேசியப்படிக்கு பர்செண்டேஜ் சுத்தமாய், ஒரே காலக்கணக்கில், எங்களது கவர் மகிழ்வித்துவிடும்! அவர்களும் தங்கள் பங்கிற்கு 'பேங்க் செக்' விசயத்தில் சொன்னதேதி மாறாமல் முழுத்தொகைக்கும் செக் தந்து, விசுவாசத்தை நிலைநாட்டுபவர்களாக இருந்தார்கள். அடுத்த டுத்த மாதத்திற்கான ஆர்டர்களை நாங்கள் வியக்கும் அளவில் அதிகத்திற்கும் தருவார்கள்! இந்த 'அதிகம்' உயர உயர கவரின் கனமும் கூடும் என்பதை அறிந்தவர்கள் அவர்கள்! எங்க மேனேஜருக்கு, இதன்பொருட்டு மேலிடத்தில் நல்லபெயர், கொசுறாய் திறமைசாலி என்னும் பட்டம்! 'பையர்'களின் ஆர்டர்கள் மாதாமாதம் கூடுவதும், அவர்களின் செக் சொன்னதேதிக்கு பிசகில்லாமல் பேங்கில் அது பணமாவதுமென்றால்... சும்மாவா?

போக்கரும் ஜெம்மும் தேர்ந்தவியாபாரிகள். வியாபாரத்தின் நுட்பங்கள் அனைத்தும் அவர்களுக்கு அத்துப்படி. இந்தநுட்ப கணக்கில் எங்க ஜெம் ஒருபடி மேல். வியாபாரப்பேச்சால் எதிராளியின் ஒருகண்ணை அவனால் மறைத்துவிட முடியுமென்றால், ஜெம்மால் இரண்டுகண்களையும் மறைத்துவிட முடியும்! தன் இஸ்ட நண்பனான போக்கரோடு, சில வாரங்களாக ஜெம்முக்கு சுமுகமில்லை. போக்கரிடமிருந்து வரவேண்டிய இம்மாதத்திற்கான ஆர்டர்கள் எதுவும் வரவில்லை. அவன் தந்த சென்றமாதத்திற்கான செக், பேங்கில் பணமாகவில்லை. வியாபாரபோக்கில் இந்தவகையான முரண்கள், ஓர்வகையான மறைமுக யுத்தம்!

உணவுப்பொருட்களை சப்ளைசெய்யும் எங்களது மொத்தவியாபாரத்தில், நியூஸிலாத்திலிருந்து இறக்குமதிசெய்யும் தேர்ந்த 'பால்பவுடர்' ஒன்று பிரதான இடத்தை வகித்தது. அதனை முன்வைத்துதான் நாங்கள் பிற உணவுப் பொருட்களை விற்பனை செய்துவந்தோம். அந்த அளவிற்கு விற்பனையில் அந்தப் பால்பவுடர் எங்களுக்கு அபாரமாக கைகொடுத்தது. சௌதி பூராவுக்கும் எங்க கம்பெனிதான் அதன் ஏஜென்ஸியை வைத்திருந்தது. ரியாத்தில் அதனை நாங்கள் அறிமுகப் படுத்திய தொடக்ககாலத்தில், வியாபாரிகளுக்கு அநியாயத்துக்கும் குறைந்தவிலையில் அதனை தந்தோம்! அப்படி தரச்சொல்லி, அதன்வழியே தங்களது மார் கெட்டை இறுக்கிப்பிடிக்கும் வழிமுறைகளை பால்பவுடர் கம்பெனி எங்களுக்கு பாடம்புகட்டியது. அதன் வியாபாரம் பரபரப்பாக சூடுபிடிக்கத் துவங்கிய கொஞ்ச காலத்திற்கெல்லாம், அதன் விலை படிப்படியாக மேலேறத்தொடங்கியது. இந்தப் 'படிப்படியான' விலையேற்றமும் அவர்களது புகட்டல்தான்! வியாபாரமென்பது வித்தைசார்ந்தது. சாணக்கியம் இல்லாத இடம்தான் எது?

எங்களது பால்பவுடர் விலையேறும்போதெல்லாம் அதுகுறித்து வியாபாரிகளுக்கு முன்கூட்டியே முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுவிடும். வியாபாரிகள் அத்த கையதருணங்களில் போதுமான அளவுக்குமேல் வாங்கிவைத்துக் கொள்வார்கள். புதிய விலையில்விற்று அதிகலாபமும் பார்ப்பார்கள். அத்தகைய தருணங்களில் நாங்களும் கூடுதலாகவே பால்பவுடரை தந்து, அவர்களின் எண்ணம் ஈடேற உதவுபவர்களாக இருப்போம். விலையேற்றத்தை ஒட்டிய எங்களின் சாணக்கியம் ஜெயிக்குமிடமே அதுதான்! நாங்கள் வியாபாரிகளை மகிழ்ந்தால்போதும். அவர்கள் மக்களை அசுவாசப்படுத்தி விடுவார்கள். லாபத்தை முன்நிறுத்தும் எந்த துறையுமே வாங்குபவர்களின் அசௌகரியத்தை 'திசைத்திருப்ப' முயலுமே தவிர, கஷ்ட திசை நோக்காது!

எங்கள் பால்பவுடரின் சமீபத்திய விலையேற்றத்தின் போது, அது குறித்து எல்லா வியாபாரிகளுக்கும் முன்கூட்டியே தகவல் செய்த மாதிரிக்கு போக்கருக்கும் தகவல் தரப்பட்டது. மாதம் இருநூறு கார்ட்டூன்கள் அளவில் எங்களது பால்பவுடரை வாங்கும் பேக்கர், இம்முறை அறநூறு கார்ட்டூன்கள் கேட்டான். ஒரு மாதத்திற்கு வாங்கும் அதே அளவிற்கான கார்ட்டூன்கள் மட்டுமே கூடுதலாகவும், பழைய விலைக்கும் தரயியலுமென்று ஜெம் சொல்லிவிட்டார். அதுதான் அவருக்கான தலைமை அலுவலகத்தின் உத்தரவாகவும் இருந்தது. நாங்கள் தரமுன்வந்த கூடுதலான இரநூறு கார்டூன்களை போக்கர் வேண்டாமென மறுத்து விட்டான். தான் பணிபுரியும் சூப்பர்மார்கெட்டுக்கு லாபம் ஈட்டிதரும் அவனது ஆர்வம் தடைப்பட்டு போனதில் அவனுக்கும்தான் எத்தனை வருத்தம்! எந்தவோர் நல்லெண்ணம் தடைப்படும்போது, அதன் ஆர்வலர்களுக்கு வருத்தம் மேலோங்கவே செய்யும். போக்கர் கூடுதலாக வருத்தம்கொண்டான்.

போக்கர் குஞ்சுக்கும் எங்க மேனேஜருக்குமான நட்பில், சிலவாரங்களாக லேசான வீக்கமிருந்தது. அது வியாபாரம் சார்ந்ததாக சொல்ல முடியாது. என்றாலும், அதுவே இப்போது வியாபாரத்தில் முட்டிக்கொண்டு நிற்கிறது. அதுதான், இந்த வீக்கத்திற்கே அடிப்படை. அவன்கேட்ட அறுநூறு கார்ட்டூன்களை தர இயலா விட்டாலும், ஐநூறு அளவில்தந்து அவனை திருப்திப் படுத்தியிருக்க முடியும். கூடுதல் கார்ட்டூன்களின் தேவைகுறித்து மேலிடத்தில் ஜெம் அழுந்த சொன்னால், அவர்கள் 'எஸ்' சொல்லியிருப்பார்கள். ஆனால், மேலிடத்தில் போக்கருக்காக ஜெம் கோரிக்கை எதையும்வைக்கவில்லை. நான் அனுமானித்தவரை தனிப்பட்ட வருத்தம்தான் இதில் பிரதானம். இப்பிரதானத்தின் பின்னேதான் 'தங்ஙள் அமீர்' வருகிறார்!

அல்-நசீம் ஏரியா பக்கமாக நேற்று நான் போயிருந்தபோது, அல் முராஃபிக்கு போகவில்லைதான். போக்கரை சந்திக்கவில்லைதான். அதற்கு காரணமிருந்தது. . அங்கே போகவேண்டாமென ஜெம்தான் நேற்றுகாலையில், வாய்மொழி உத்தரவாக என்னிடம்சொன்னார். இப்போது இப்படிகேட்கிறார்! அவரதுகேள்வியை காதில் வாங்கிய நான், குழம்பிய நிலையில் காஃபியை அப்படியே வைத்துவிட்டு, எதிரே இடதுபக்கமிருக்கும் அவரது கேபினுக்குள் நுழைந்தேன்.

"நேற்று 'அல் - முராஃபி'க்கு போனீங்களா?, போக்கரை சந்திச்சீங்களா?" என்று என்முகம் பார்த்து, எந்த சலனமுமில்லாமல் திரும்பவும் அதையே கேட்டார். அவரது கணீரின் அழுத்தம், கூடுதலாக குழப்பமடைய செய்தது. 'ஒரு சமயம், நேற்று நாம்தான் அவர் சொன்ன வாய்மொழி உத்தரவை சரியாக காதில் வாங்கி கொள்ளவில்லையோ?' நிச்சயமில்லை. நேற்றைக்கு என்னிடம் அவர்சொன்னது நிஜம்! வெளிப்படுத்த முடியாத தகிப்போடு, "நீங்கதானே ஸார், நேற்றைக்கு அங்கே போகவேண்டாம், போக்கரிடம் ஆர்டர் எதுவும் கேட்க வேண்டாமென சொன்னீங்க!" என்றேன். உடனே அவர், "நான் போக வேண்டாம் என்று சொன்னா, நீங்க போகாமயிருப்பதா?" என்றார். என்னிடம் அதற்குபதிலில்லை. இது கணிக்கயியலாத சாதுர்யம் கொண்ட கேள்வி! சராசரிகளுக்கு பிடிப்படாது. செஸ்போர்டை தலைகீழாக கவிழ்த்துபோட்டு காய்களை நகர்த்தச் சொல்லும் விளையாட்டு!

எங்க மேனேஜரோடு நான் எத்தனை நட்பாக இருந்தாலும், எங்களுக்கிடையே கண்களுக்கு தெரியாத கோடொன்று இருக்கவே செய்கிறது. அவரது கேள்விகள் எதனையும் சட்டென மறுத்துவிட முடியாது. என்றாலும், இப்ப அவர் என்னை பேச நிர்ப்பந்திக்கிறார். நான் மாட்டேன். சர்ச்சைக்குரிய எதுவும் சரிப்படாது. தகாது. அப்படி சர்ச்சித்தாலும், எப்படியும் கடைசியில் அவர்தான் ஜெயிப்பார்!

பேச்சற்று நின்றுகொண்டிருந்தேன். நிமிடங்கள் கழிந்துகொண்டிருந்தது. பிறகு அவர், இயல்பாக என்பெயரை விளித்து, "போக்கரை நான் பார்த்துகொள்கிறேன். அவனால் கவர் வாங்காமல் ஆகாது. இனியும்கூட நீங்கள் அங்கே போகவேண்டாம்." என்றவராக, அன்றைய காலைப் பொழுதின் சப்ளைக்கான 'இன்வாய்ஸ்' ஸுகளை தந்தார். மேலும், அது சம்மந்தப்பட்ட மேற்தகவல்களை சொன்னார். நானும், நிகழ்ந்த சம்பவத்தை முற்றாய் மறந்தமாதிரிக்கு, அவர் சொன்ன தகவல் களை கேட்டு கொண்டு, தலையாட்டியபடி வெளியானேன்.

என் வருகைக்காக ஆபிஸ் வராண்டாவில் சிரித்துகொண்டே தயாராக நின்றான் ஜமால். அவனை 'வா'வென அழைத்துகொண்டு, ஆபீஸைவிட்டு அவசரமாக வெளியானேன். முதலில் புகைக்கவேண்டும் என்கிற சிந்தை பரபரவென்று இருந்தது. கட்டிடத்தின்கீழே நிழல்பார்க்க நின்று, சிகரெட் பற்றவைத்து கொண்டேன். 'என்ன பொழப்புடா இது!?'வென தோன்றியது. புகைத்ததை கீழேபோட்டு மிதித்துவிட்டு. வேனிலேறி ஸ்டார்ட் செய்தேன். என்னைப் பார்த்து சிரித்தவனாக ஜமாலும் ஏறிகொண்டான். வேன், 'ஃபைஸலியா'விலுள்ள எங்களது 'வேர்ஹவுஸ்' பார்க்க விரைந்தது.

டிரைவ் செய்தபடிக்கு, பக்கத்தில் அமர்ந்திருந்த ஜமாலைப் பார்த்தேன். அவன் இன்னும் சிரிப்பு குறையாமல் இருந்தான். மேனேஜரின் சப்தம் கேட்டு, குழப்பி,  நான் விழித்ததைக் கண்டு, நமட்டுச் சிரிப்பு சிரிப்புபை தொடங்கியவன், இன்னும் நிறுத்தினானில்லை. மேனேஜர் ஜெம், நேற்று வாய்மொழி உத்தரவாக என்னி டம் சொன்னதையறிவான். அதனால்தான் ரசித்து சிரித்துகொண்டேயிருக்கிறான். அவனிடம், "பாருய்யா, உங்க மச்சான் எப்படியெல்லாம் உல்டாவா பேசுறாரு ன்ணு?" என்றேன். அவன் இப்போது வாய்விட்டு வேகமாக சிரித்தான். நாட்டில், ஜமால் என் மாவட்டத்துக்காரன். கீழத்தஞ்சை. ஆனாலும், இங்கே வந்தபின் தான் பழக்கம். உடன்பிறந்தவனாக பழகக்கூடியன். நான் எந்நேரமும் அவனை ஒருமையில் அழைப்பதையோ, சரளமாக அப்படி பேசுவதையோ, ஒருபோதும் தவறாக கருதாதவன்! இதற்கெல்லாம் நாட்டில் நான், ஏதோ புண்ணியம் செய்திருக்கவேண்டும்!

"உங்களுக்கு தெரியாதா பாய், அந்த ஆளு அப்படிதான். ஏட்டிக்குப் போட்டியாதான் பேசுவாரு. நாங்க எவ்வளவோ அனுபவிச்சாச்சு!" என்று அழுத்தம் தந்து சொன்னான். நிஜமாலுமே ஜெம் அப்படித்தானா? என்று எனக்கு தெரியாது. ஆனா, ஜமாலுக்கு எங்க மேனேஜர் சொந்த மச்சான் என்பது தெரியும். இவனது மூத்த தங்கையைதான் அவர் மணம்முடித்திருக்கிறார்!

சென்னைவாசியான ஜெம் குடும்பத்தினர், திருமண புரோக்கர் மூலம், ஜெம்மிற்கு கீழத்தஞ்சையில் பெண்தேடி, நடந்த திருமணமது. கல்யாணத்திற்கு நிற்கும் கீழத்தஞ்சைப் பெண்கள், சென்னைவாசிகளின் பார்வைக்கு பசு! போடப்படுவது புல்லோ, வைக்கோலோ எதுவொன்றென்றாலும் சத்தம் காட்டாது தின்று, முட்டாது பால்தந்து வியக்கவைக்கும் சாதுக்கள்! குடும்பத்திற்கு அடங்கிவொடுங்கி சேவகம்புரிகிற ஜாதி! சென்னைவாசிகளின் கணிப்பை நூறுசதம், மெய்ப்பிப்ப வர்கள்! அதிலும் குறிப்பாய், கீழ்த்தஞ்சை இஸ்லாமியப் பெண்கள் கூடுதல் சதம்பெற்று மெய்ப்பிப்பவர்கள்! இந்த அடங்கியொடுங்குதலை அவர்கள் பிறப்போடு கொண்டு வருபவர்கள்!

ஜெம் குடும்பத்தினரின் தேர்வும் சோடைபோகவில்லை. "அதேபார் நிஷா... வெள்ளைகாக்கை பறக்கிறது" யென, மனைவியிடம் ஜெம் சொல்லக் கூடுமெனில், குனிந்ததலை நிமிராமல் "ஆமாங்க!" என இரண்டுதரம் ஒப்புக்கொள்ளும் பெண்! புருஷன் சொல்லுக்கு, தன் தங்கை ஆமாம் போடும் துரிதம்கண்டு  மலைத்த வனாய், என்னிடம் ஒருமுறை அதனை விவரித்தபோது, 'அப்படியா!' யென வியந்தேன்! அதனை ஜீரணிக்க கஷ்டமாகவும் இருந்தது. இந்தக் காலத்திலும் இப்படியா? உலகம் பூராவும் பெண்கள், நீ நானென நவீன உலகில் நுழைந்து புதுமைப் பெண்ணாக மாறிட நின்றாலும், கீழத்தஞ்சை இஸ்லாமியப் பெண்கள் எக்காலத்தையும் ஒரே காலமாக கருதக் கூடியவர்கள்! பழமை கருணைக்காட்டியிருக்கிற விஸ்தீரணம் அவர்களுக்கு போதுமானது! இத்தனைக்கும் அந்தப்பெண் ஜெம்முக்கு இரண்டாம்தாரம்! படித்த பெண்வேறு!

நான் முதன்முதலாக அந்தப் பெண்ணை கண்டபோது, சின்னச்சின்ன இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாகவும், மகிழ்ச்சியாகவுமே இருந்தார்! இன்றைக்கும் அப்படித்தான் இருக்கிறார் என்கிற வகையில் எனக்கும் சந்தோஷம்தான்! ஜமால் இன்னொரு செய்தியையும் சொன்னான். அதனை ஜீரணிக்க இன்னும்  சிரம மாக இருந்தது. ஜெம், காதல்வயப்பட்டு செய்துகொண்ட 'முதல் திருமணம்', ஒரு கிருஸ்துவப் பெண்ணோடு என்றும், சென்னையைச் சேர்ந்த அப் பெண்ணால் தன் தங்கை அளவுக்கு தங்குதடையின்றி 'ஆமாம்' போட சிரமம்கொண்டதினால்தான், பிரிய நேர்ந்ததாம்! முகம்தெரியாத அப் பெண்மீது அனுதாபம் எழுந்தது. மனிதவாழ்வின் கோணல்கள் எதுதான் எளிதில் ஜீரணிக்கக் கூடியதாக இருக்கிறது? அந்த முதல் மனைவி, அவரோடு இன்றைக்கு இல்லையே தவிர,  அவள் பெற்றுதந்த ஓர் ஆண்மகன் இப்போது ஜெம்மிடம்தான்! அப்படியே ஜெம்மின் டிட்டோ!

அந்த மகன் குறித்து சிலசெய்திகள் அறிய வந்திருக்கிறேன். நேரில் அப்பையனை பார்த்தும் இருக்கிறேன். அவனைப்பற்றிச் சொல்ல சில செய்திகளும் உண்டு. பெயர் அகம்மத் ரஹ்மானி. வயது பன்னிரெண்டு. உடம்பு முடியாதவன். ஊனம். நான்குவயதில் வீல்சேர் வாசியாகி, பின்னர் அதனோடவே வாழத் தொடங்கி விட்டவன். எட்டு வயதுவரை இருந்த அவனது திடகாத்திரமான உடம்பும், தேஸேஜும் பின்னர் கரையத் தொடங்கி ரூபம் மங்க, தோல் மூடிய எலும்புகளின் கோர்வையாக ஆகிவிட்டவன். டாக்டர்கள் பலரும்பார்த்து, பல்வேறு சிகிச்சைகளுக்கு பையனை ஆட்படுத்தியும்,  தேறமுடியாது போன அவனது சுகவீனம் எவரின் நெஞ்சத்தையும் தைக்கும்! ஜெம்முக்கு, எந்நேரமும் மகன் குறித்து துயரமுண்டு. "என் பையன் ஒரு மெல்டிங்மேன்!" என்று துயரடர்ந்த மனதோடு என்னிடம் ஒருமுறை அவர் கோடிட்டு காமித்தபோது, அவருக்கு ஆறுதல் சொல்லத் தெரியாத கஷ்டத்திற்குள் தள்ளப்பட்டேன். தந்தையின் ஜீவனில் துயரத் தைப் பரப்பிவிட்டு பாட்டியின் பராமரிப்பில், சென்னைவீட்டில் இருக்கிறான்! பெற்ற குழந்தைகள் குறித்த சகலமான தொடர் தாக்கங்களால், காலங்களில் பெற்ற வர்கள் கொள்ளும் மனப் பதைப்புகள் பல ரகம். அதில், இதுவோர் ரகம்!

'அல் கமாலியா' ஃபுட்ஸ்டஃப்ஸ்'-ன் தலைமையகம் ரியாதல்ல, ’தமாம்’. ரியாத் கிளைதான். இங்கே புதியகிளை திறக்க முடிவானபோது, முதலில் திறமையான மேனேஜரை தேர்வு செய்யத் தொடங்கினார்கள். அப்படி தேர்வானவர்தான் ஜெமீல்மாலிக். தமாமைச் சுற்றிய பகுதிகளில், பல 'லேபர் கேம்ப்’புகளின் மேனே ஜராக ஜெம் பத்து வருடங்களுக்குமேல் பணியில் பெயர்போட்டவர்! எங்கள் கம்பெனியின் ஜெனரல் மேனேஜர் ஜெஃப்ரி ஒரு லெப்னானி. அவன் தமாமைச் சுற்றியுள்ள கேம்ப்புகளுக்கு பால்பவுடர் மற்றும் எங்களது இன்னுமான பிற பொருட்களுக்கு ஆர்டர் எடுக்கப் போகிறபோது, ஜெம்மை அவர் பணிபுரிகிற இடத்தில் வைத்து கண்டதில், அவரது திறமை அவனுக்கு ஈர்ப்பைத்தர, குறிவைத்து, கலந்துபேசி, ரியாத் பிராஞ்ஜின் மேனேஜராக அவரை தேர்வு செய்தான். ஜெமீல்மாலிக்கை கம்பெனியிலுள்ள எல்லோரும் 'ஜெம்' மென்றே அழைத்தார்கள்! அப்படி அழைப்பதை அவரும் விரும்பினார்! அதன்படிக்கு எனக்கும் அவர் 'ஜெம்'மாகிப் போனார்.

ரியாத்திற்கு வருவதற்கு முன் எனக்கும் ஜெமீல் மாலிக்கிற்குமான பழக்கம் இலேசானது. தமாம் புத்தகக் கடை ஒன்றில்வைத்து ஒருமுறை அவரிடம் நாலே நாலு வார்த்தைகள் பேசியிருப்பேன். பின்னர் எங்காவது காணும்போது 'ஹலோ' அவ்வளவுதான். இந்தச் சாதாரணப் பழக்கம் தந்த நட்பாலோ என்னவோ, பின் ஒருமுறை தமாம் கடைவீதியில் என்னை அவர் சந்தித்தபோது, நான் ரியாத் வர வேண்டுமென விரும்பினார். "புதிய ஃபுட்ஸ்டஃப்ஸ் கம்பெனி என்னை ரியாத் பிராஞ்ச்சு மேனேஜராக அழைத்திருக்கிறது. நானும் சம்மதம் சொல்லிவிட்டேன். என் மைத்துனன் ஜமாலோடு நீங்களும் என்னுடன் வருகிறீர்கள். நாம் மூவர்தான் முதலில் அங்கேபோகிறோம். என் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு தரணும்" என்று தன் அன்பை வெளிப்படுத்தினார். நானும் சம்மதம் சொன்னேன். அது நாள்வரை பணிசெய்த என் தமாம் கம்பெனியை முடித்துக் கொண்டு, ரியாத் வாழ்க்கைக்கு ஆயத்தமானேன்.

தமாமைச் சுற்றி அல்கோபர், துக்பா, டெஹரான், கத்தீஃப், ரஸ்தனூரா, அல்ஜுபைல், ஷஃபானா என்று வட்டமிட்ட எனக்கு ரியாத் புதுசு. பணக்கார அரபி களின் பவிசான பூமி! நகரின் பாதிக்கும் அதிகமான வெளியை பணம்படைத்த ராஜ வம்சத்தார்கள் கட்டிடங்கள் என்கிற பெயரில் நிரப்பி வைத்திருக்கிறார்கள்! கண்ணில்படுகிற வான்தொடும் கட்டிடங்கள் அத்தனையும் அவர்களுடையதுதான்! நகரின் மையத்தில், மேற்கு திசைபபார்க்க 'அல்-நஸ்ரியா' என்றோர் இடம். அந்த ஸ்தலம் பூராவும் மன்னர் பரம்பரை வாசிகளுக்கான குடியிருப்புப் பகுதி. அங்கே, ஒரு பங்களாவிலிருந்து இன்னொன்னுக்கு நடந்து கடப்பது சுலபமல்ல!

உலகில், அதிக வாகன நெரிசல்கொண்ட நகரங்களில் ஒன்றாக ரியாத்தை சொல்வார்கள். ஒவ்வொரு அரபியும் யானையைவிட பருமன்கொண்ட அமெரிக்க வாகனத்தை எண்ணிக்கையற்று வாங்கிவைத்திருந்தால், பின் எப்படி நெரிசலில்லாமல் போகும்? தங்களது வாரிசுகளுக்கு வண்ணத்திலொன்று என்கிற கணக்கில் தகப்பன் அரபி வாங்கித்தருவதை யாரும் குற்றம்காணமுடியாதுதான், அதற்காக பிறக்காத பிள்ளைகளுக்குமா அப்படி வாங்கி நிறுத்துவது!?

தலைநகர் பாதுகாப்புக்காக மன்னர்கால சிந்தனையில் அகழி மாதிரி, அத்தனை ஆழத்திற்கு, நகரைச்சுற்றி ரிங்ரோட் என்றும், எண்ணிக்கையில்லா  பாலங்க ளென்றும், மையடவுனுக்குள்ளே அண்டர்கிரவுண்ட் நெடுஞ்சாலைகளென்றும் பல நிறுவியிருந்தாலும் ஒலையா ரோட்டிலும், சித்தீன் ஸ்ட்ரீட்டிலும் எந்நேரமும் மணிக்கணக்கில் வாகனங்கள் ஊர்ந்துதான் கடந்தாகணும்! எங்ககம்பெனி முத்திரைகொண்ட பெரியவாகனத்தில் வியாபாரம்பொருட்டு அங்கெல்லாம் தினைக்கும் நான் வலம்வருவதை தவிர்க்க இயலாது. அத்தகைய நெரிசலான ரோடுகளில் என் வாகனத்தை ஓட்டியபடிக்கு ஊர்ந்து செல்வதென்பது மஹாகஷ்டம்! இடையி டையே சிக்னல், போலீஸ்! மினுக்கென்று கோபம்கொப்பளிக்க காலங்களில் வளர்ந்த என்னை, அநியாயத்திற்கு சாதுவாக்கிய சம்பவம் ஒன்று உண்டென்றால், அது, இங்கே நான் எதிர்கொண்ட வாகனநெரிசல்தான்! வாழ்தல்பொருட்டு வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் கொஞ்சமல்ல!

'மலாஸ்' ஏரியாவில் எங்களது ஆஃபீஸென்றால். தங்குமிடம் 'முரப்பா'! ஃபேமிலியோடு எங்க ஜெம் ஒரு ஃபிளாட்டில் தங்கினார். பக்கத்து பிளாட்டில் நானும் ஜமாலும். மூன்று ரூம்களைக் கொண்ட பெரிய ஃபிளாட்டில் எங்கள் இருவருக்கும் ஒரு ரூமே போதுமானதாகயிருந்தது. மீதமுள்ள ரூம்கள், இனிவரும் எங்கள் உதவியாளர்களுக்கானது. தங்குமிடத்திலிருந்து வலபுறமாக ஒன்றரை கிலோமீட்டர் போனால் 'பத்தா' கடைவீதி! ரியாத்தைச் சுற்றி எங்கெங்கோ உள்ள இந்தியர்கள், தங்களின் வெள்ளி விடுமுறையில் சங்கமிக்கும் விசேச ஸ்தலம்! பஞ்சம் பிழைக்கவந்த இந்தியக்கூலிகளின் சொந்தக் கதைகளையும், சோகக்கதை களையும் கேட்டுக்கேட்டே அங்குள்ள புதிய கட்டிடங்களும் இத்து, சிதிலமாக விழ, இடித்து புது புதிதாக கட்டங்கள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

ஜெம்மிற்கு கீழ் பணியாற்றத் தொடங்கிய ஒருவருடத்திற்கெல்லாம், அவர் எனக்கு பிடிபட்டு, பிடித்தும்போனார். இன்றைக்கு அவர் தந்த அதிர்வுகளையொத்த அதிர்வுகளை பலமுறை அவரிடமிருந்து பெற்றிருக்கிறேன். B.B.A. படிக்காமல், வியாபார யுக்திகளை கற்பதென்றால் சும்மாவா? ஜமால் சொல்கிற மாதிரியெ ல்லாம் அவர் இல்லை, அநியாயத்திற்கு குறைத்து மதிப்பிடுகிறான். அசாத்திய திறமைசாலியான அவரை, அவன் குறைத்து மதிப்பிட்டால் ஆச்சா? நாங்கள் எல்லாம் வேலை சம்பளம் என்று இருக்க, அவரும் அவரை ஒத்தவர்களும் இங்கே வேலை சம்பாத்தியம் என்று ஜெயிக்கிறவர்கள்! அவரால் இங்கே நான் பெற்ற விவேகமான அனுபவங்களுக்காகவே, இன்னும் அவரை மெச்சலாம். தகும்!

என்னுடைய பார்வையில் ஜெம் சறுக்கிய ஓர் நிகழ்வு உண்டென்றால் அது, மலையாள மந்திரீகவாதி தங்கலிடம்தான்! மீளமுடியாத சுகவீனத்தில் இருக்கும் தன் மகனின் நலன்பொருட்டு, அவரது சிந்தை அத்தருணத்தில் மழுங்கிவிட்டது. ஜெம்மின் நண்பரான பக்கர் குஞ்சுவால் அறிமுகப்படுத்தப்பட்ட மலையாள மாந்திரீ கவாதி தங்ஙள், "உங்கள் மகனின் சுகவீனத்தை கட்டாயம் நான் களைவேன். பையனுக்கு 'வப்பு' வைக்கப்பட்டிருக்கலாம். உங்களோடு உடனிருந்து பின்னர் பகைமை பாராட்டியவர் எவரோ ஒருவர் அப்படிச் செய்திருக்கவேண்டும். நிச்சயம் அந்தப் பையனை எழுந்து நடமாட வைக்கிறேன்!" அவர் மிக உறுதியாக கூறவும், "இது பொன்னுபோல நடக்கும் அண்ணே" என்று பக்கர் குஞ்சும் வழிமொழிந்தான். ஜெம் முழுமையாக நம்பினார்.  தங்கலின் ஆன்மீகத்  தோற்றம் யாரையும் நம்பாமல் விட்டும்விடாது.

இத்தனைக்கும், தங்ஙள் கூறிய சங்கதிகள் அத்தனையும் பக்கர்குஞ்சுவிடம், ஜெம் முன்பு கூறியிருந்ததுதான். இப்போது தங்ஙள் வழியே, ஜெம்மிடமே வந்து, அவரை வியக்கடித்தது! ஒருவேளை பக்கர் குஞ்சு தங்கலிடம் சொல்லியிருக்கக் கூடுமோ? என்று நினைத்தார், பின்னர் அப்படி இருக்காது, தங்கலை சந்தேகி ப்பது மகா பாவம் என்று தனக்குள் சமாதானமாகிப் போனார். இந்திய அளவில் பெயர் போட்ட, கண் எதிரே பொங்கிவழியும் ஓர் மாந்திரீக மகத்துவத்தை யார்தான் கேள்விக்கு ஊட்படுத்த முடியும்? ஒரு வெள்ளிக்கிழமை மாலைநேரம் பார்க்க, எங்கள் பிளாட்டிற்கு தங்ஙள் காலடியெடுத்து வைத்தார்! தன்மகன், அத்தருணமே பூரணசுகம் கொண்டுவிட்டதாய் சந்தோஷம் கொண்டார் ஜெம்! மகிழ்ச்சியோடு வந்த தங்ஙள், ஜமாலுக்கும் எனக்கும் பக்கத்து ரூம் மெட்டானார்!

கேரளத்து தங்ஙள்மார்களைப்பற்றி வாசித்திருக்கிறேன். காதுவழி செய்திகளாக பலதை கேள்விப்பட்டிருக்கிறேன். 'தங்ஙள் அமீர்' எங்கள் இருப்பிடம் வருவதற்கு முன், தங்ஙள் சமூகத்தாரில் யாதொரு தங்ஙளையும் நான் கண்டதில்லை.

தங்ஙள் என்பது கேரளத்தில் வாழும் இஸ்லாமிய தனவந்தக் குடும்பத்தினர் சிலருக்கான பட்டப்பெயர்! கேரளத்து அரசியலில் அவர்களது ஆதிக்கம் அதிகம்.  அவர்களுள் சிலர் மாந்திரீகத்தை பரம்பரைப் பணியாக கொண்டவர்கள். இந்திய முக்கியப் புள்ளிகளுக்கு தங்ஙள்மார்களது மந்திரீகத்தேவை அவ்வப்போது அவசியம் வேண்டியதாகப் போகிறது. தனக்குப் போட்டியாகவளரும் கம்பெனியை நசுக்கநினைக்கும் பெரும் கம்பெனிகளின் முதலாளிமார்களுக்கும், சினிமாவில் தன்னை முந்தும் புதிய ஹீரோவின் மார்கெட்டை முடக்க நினைக்கும் பழைய ஹீரோவின் அபிலாசையினை நிறைவேற்றித் தரவும், அரசியலில் முதலமைச்சர் நாற்காலியை குறிவைக்கும் மூத்த அரசியல்வாதிகளின் ஏக்கத்திற்கு ஆவண செய்யவும், விரும்பிய பெண்ணை அல்லது விரும்பிய ஆணை தன்கட்டுக்குள் வைக்கவும், திருமணம் மூலம் அடைய நினைக்கும் விரும்பிகளுக்கு அதனை கைகூடசெய்யவும், தங்ஙள்கள் இம்மண்ணிற்கு கட்டாயமாகி போகிறார்கள்!

ஓய்வுநேரப் பொழுதொன்றில், தங்ஙள் காட்டிய, அவரது பிரத்தியோக ஆல்பத்தைகண்டபோது, நானும் ஜமாலும் வியந்துபோனோம். யார்யாரெல்லாம் அவரை அழைத்து மரியாதை செய்திருக்கிறார்கள் என்பது ஃபோட்டோ சான்றுகளுடன் இருந்தது! தங்ஙளின் சேவை இவர்களுக்கெல்லாம் ஏதோ ஒருவகையில் உபயோ கப்பட்டிருக்கிறது. கண்ணுற்ற புகைப்படங்களில், இந்திராகாந்தி, ஜெயவர்த்தனே, மாநில அரசியலில் பெயர்பெற்ற சில அரசியல் தலைவர்கள், இந்தி நடிகர்கள் நடிகைகள், பெரும் தொழில் அதிபர்கள் என்று, அதில் பலருமுண்டு. தங்ஙளை அழைக்கும் அளவில், 'இவர்களுக்குமா பிரச்சனை..!?' என்கிற கேள்வியெழ வியப்புகள் மேலோங்கியது! பொதுவாக மாந்திரீகம் மாதிரியான அதீதங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால்தான் அத்தகைய வியப்பு என்னில் எழுந்ததென்று நினைக்கிறேன். மாந்திரீகத்தின் மீது மட்டுமல்ல, பேய்பிசாசுகளுக்குகூட நான் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அதற்கெல்லாம் அடிப் படையில், 'கேள்விகளற்ற தாராள நம்பிக்கைகள்' வேண்டும்! நான் அதில் ஆக சைஃபர்!

தங்ஙளை இங்கே அழைத்து வந்தபோது, என்னையும் ஜமாலையும் தனியே அழைத்த ஜெம், "சில வாரங்கள் அவர் இங்கே தங்கியிருப்பார், அவரது மனம் கோணாமல் நாங்கள் நடக்கவேண்டும், ஒருபோதும் மரியாதை குறைவாக நடந்து விடலாகாது." என்றெல்லாம்' தாழ்ந்த குரலில் சொன்னார். எங்கள் இருவரை யும் சேர்த்து அரபுநாடுகளில் வாழும் எந்தவொரு கீழத்தஞ்சைக்காரர்களுக்கு 'பணிவும் மரியாதையும்' இரண்டுகண்கள்! அவன் தனது எந்தவொரு கண்ணையும் யாருக்காகவும் எதற்காகவும் இழந்தான் என்கிற சரித்திரமே இல்லை!

அதே தாழ்ந்தகுரலில், "ஸார்.., இது தேவையா?" என்றேன். அருகில் நின்ற என்னை, பெயர்கூறி அழைத்து, "நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதை அறிவேன். இது பிரயோஜனமற்றது, கூடாததென சொல்ல வருகின்றீர்கள் இல்லையா? இது மட்டுமல்ல, என் மகனின் பிணி நீங்கி, அவன் நலம்பெற எந்தக் கோவிலில் போய் கும்பிடச்சொன்னாலும் கும்பிடத் தயங்கமாட்டேன்" என்றவர், "நீங்கள் அறியமாட்டீர்கள், என்மகனுக்காக எத்தனையோதரம் வேளாங்கண்ணி மாதாகோவிலுக்கு சென்று நான் பிராத்தனை செய்திருக்கிறேன் தெரியுமா?" என்றார். அவரது கண்கள், அவர் கொண்ட சொல்லொணா துயரத்தை கோடிட்டுக் காட்டியது. பதில்சொல்ல முடியவில்லை என்னால்.

'அவரது நம்பிக்கை'யின் விரல்நுனி அழுந்தப்பட ஏண்டா உரசினோம் என்றாகிப் போனது!' என்னை நான் நொந்தும் கொண்டவனாக, எப்படியாவது அவரிடம் சகஜம் பாராட்டி சமநிலைக்கு மீண்டும் அவரை கொண்டுவந்தால் போதுமென்றாகிவிட்ட, யோசித்த நொடியில் ஸாரி கேட்டவனாக, ஏதேதோ சகஜமாகப் பேசி, அவரை சமநிலைக்கு கொண்டுவந்து நிறுத்தினேன்!

முகம் மலர்ந்தவராக, தங்கலுக்கான நல்லசமையல் செய்துதருவதுபற்றி பேசத்தொடங்கினார். எதனையும் காதில் சரியே வாங்காமலேயே "நிச்சயமாக" என்றேன். 'ஓகே.' என்று விட்டு கிளம்பினார். இப்போது அவர் முகத்தில், என் மீதான பழைய நம்பிக்கையின் சாயல்! அது போதாதா எனக்கு!

ஜெம்மின் தலை மறையுமுன்னே,"ஏங்கபாய்... அந்த ஆளைப்பார்த்தா பித்துகுளி மாதிரிதெரியுது. அவருக்கு மரியாதை கொடுக்கனுமுன்ணு இவர் ஏன் நம்ம கிட்ட குதிக்கிறார்?" என்று தன் மச்சானை குத்திக்காட்டினான் ஜமால் கட்டமைக்கப்படும் புனிதங்களின் மீது, நான் அங்கீகரிக்கப்பட்ட மறுப்பாளன் என்றால், ஜமால் அங்கீகரிக்கப்படாத மறுப்பாளன்! எங்கள் இரண்டு பேர்களின் பராமரிப்பில்தான் இன்றைக்கு தொட்டு பவித்திரம் கலையாத தங்ஙள் பணிவிடைகள் பெறப்போகிறார்! சிலநேரம், காலம் இப்படிதான், எல்லோரோடும் ஏக நேரத்தில் விளையாடும்!

குழம்பிய நிலையில், ஜமால் என்னிடம் ஒன்றை கேட்டான்."ஏன்பாய், எங்க மச்சானின் மகன் மதராஸிலிருக்கிறான். அந்தப் பையனை தங்ஙளோ  பார்த்ததுமில்லை! இங்கிருந்து இவரெப்படி அவனுக்கு வைத்தியம் பார்க்கமுடியும்?" என்றான்.

அடுத்த பத்து நிமிஷத்திற்கு 'டெலிபதி'யைப் பற்றியும், 'இறையருள்' பெற்றவராக தங்ஙள் புகழ்படும் அவரது தொழில்மாட்சியைப் பற்றியும் விபரித்தேன். தலை யாட்டிக்கேட்டவன் கடைசியில் 'புரியலைபாய்' என்றுவிட்டான். நான் மட்டுமென்ன புரிந்து, அனுபவம் கொண்டா விவரிக்கிறேன்!? சொல்பனின் வேலை  நயம் பட சொல்வது. அப்படி நான் சொல்லியாகிவிட்டது. அவ்வளவுதான். அவனுக்குப் புரியவில்லை என்றால், புதிய விளக்கங்களுக்கு நான் எங்கே போவேன்?

தங்ஙள் வந்திருந்த முதல்நாள் இரவே, சமையலுக்கான 'ஸ்பெஷல்கள்' அடுப்பில் கொதிக்கத் துவங்கிவிட்டது. தவ்வாவில் பொன்னிற சப்பாத்தி. அதன் மேலே அசல்நெய் பூச்சு! சமையல் வாசனை தங்ஙளை அறையில் இருக்கவொட்டாமல் அடிக்க, நேரே கிச்சனுக்கே வந்துவிட்டார், சிக்கன்மசாலா கொதி பரப்பும் மணத்தையும், மட்டன் குருமா திரளும் தளுக்கையும் வியந்துபார்த்தார்! தனக்கு தமிழத்துச் சமையல் பிடிக்கும் என்றார். எங்கள் பக்கமுள்ள 'லால்பேட்டை மதரஸா'வில் ஆறுவருடங்கள் தங்கி, 'ஹாஃபி’ஸு'க்கு படித்ததாகசொன்னார். நான் சமைத்துக் கொண்டிருந்தபோது, ஜமால், சிரித்த முகத்தோடு சின்னச் சின்ன கேள்விகளால், தங்ஙள் பக்கச் செய்திகளை கறந்துகொண்டிருந்தான். இந்தத் திறமையான செயல்பாட்டிற்கு, அவன் 'டிப்ளமோ' ஏதேணும் படித்திருக்க வேண்டும்.  இதற்கெல்லாமா 'டிப்ளமோ படிப்பு' இருக்கும்? வாய்ப்பில்லைதான்! சென்னையில் வைத்து ஒரு பள்ளப்பட்டிக்காரனின் ரெடிமேட் கடையில் பத்து வருஷங்களுக்கு மேல் வேலைபார்த்து பாடம் கற்றவன் நானென சில நேரம் பெருமையாக சொல்லிக் கொள்வான்! முறையாகத்தான் கற்றிருக்கிறான்!

தங்ஙள் வந்து ஒருவாரத்திற்குள், அவர் பக்கத்துசெய்திகளை அறிய, நானும் ஜமாலும் ஆர்வமானோம். எங்களது ஆர்வத்துக்குபழுதில்லாது செய்திகள் கொத்து கொத்தாக கிடைக்கத் துவங்கின. இந்தச்செய்தி சேகரிப்பில் நாங்கள் காட்டிய சிரத்தையும் துரிதமும் அலாதியானது. ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலுள்ள உண்மைகளை கண்டறிய, கிடைத்த செய்திகளை தீர அலசலானோம். அதன்சாரத்தை மனதில் வரிசைக்கிரமமாய் இருத்திக்கொண்டே வந்தோம். நான்  வெளி வட்டத்தில் செய்திகளை சேகரித்தால், ஜமால் உள்வட்டத்தில், தன் தங்கையின் வழியே நிறைய சேகரித்து கொண்டுவந்து கொட்டினான். அவனது தங்கை, தானொரு கீழத்தஞ்சைப் பெண் என்பதை இப்பவும் ஒருமுறை நிரூபித்திருப்பதில் சிரிப்பெழுந்தது! தன் கணவர் வழியாகத்தான் அந்தப் பெண் இதனையெல்லாம் அறிந்திருக்க வேண்டும்! ஆக, ஜெம்மும் தங்ஙள் குறித்து செய்திகள் பல அறியவே செய்கிறார்! ஆனால் வெளிக்காட்டத்தான் அவரால் இயலாமல் போகிறது. பயம்!

ஓரளவில் தகவல்களை அறிந்தபின்னர், அவரைப் பார்க்கும்போதெல்லாம் என்னுள் ஓர்வித இரக்கம் சுரந்தது. பள்ளிப்பருவத்தில் எங்கள் வீட்டில், நான் தவறு செய்து விட்டு மாட்டிக்கொள்ளும் தருணங்களிலெல்லாம் என் பாட்டி என்னிடம் ஒன்றை அழுந்தச் சொல்லும். "தண்ணிக்குளே குசுவிட்டா தெரியாதுன்னு நினைச்சுடாதேடா..., அது எப்படியாவது தலைக்குமேலேவந்து காட்டிக்கொடுத்துடும் தெரிஞ்சுக்க" என்பார்கள். பாவம் தங்ஙள்!
*
தங்ஙள் அமீரின் இயற்பெயர் 'தாஹா இப்ராகிம் தங்ஙள்' கேரளமாநில காசர்கோட்டை தொட்டடுத்ததோர் குக்கிராமம். வயதில் மூத்தவரான அவரது மாந்திரீகக் கீர்த்திகளை முன்வைத்து, அவரது அபிமானிகளால் தந்த பட்டம்தான் 'அமீர்!' அமீர் என்றால் அரபியில் தலைவன்! தாஹா இப்ராகிம் தங்ஙளை, 'தங்ஙள் அமீர்' என்று அபிமானிகள் மரியாதையோடு அழைக்கத் தொடங்க, அதுவே நிலைத்தும் விட்டது.

சமீபத்தில் மகாராஷ்ட்டிரா சட்டசபைக்கு நடந்த பொதுத்தேர்தலில், அம்மாநிலத்தின் மூத்தஅரசியல் தலைவர் ஒருவர், 'தான் சார்ந்த தேசியக் கட்சி வெல்லவும், தனக்கு எம்.எல்.ஏ.களின் ஆதரவு கூடவும், முதலமைச்சர் நாற்காலி தனக்கே தகைக்கவும்' தங்ஙள் அமீரிடம் கோரிக்கை வைத்தார்! தங்ஙள், அவரது சாதக பாதகங்களை கணித்துவிட்டு, அதற்கு உறுதிகொடுத்தார். அடுத்தசில நாட்களிலேயே, பம்பாயின் மையத்திலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்ஙள் தங்கவைக்கப் பட்டார்.

அங்கிருந்தபடிக்கு, அந்த மூத்த அரசியல்தலைவரின் கோரிக்கைகள் ஜெயமாக மாந்திரீக வேலைப்பாடுகளை தொடங்கி நடத்தினார். ஜெயிக்குமா? என்கிற சந்தேகம் கொண்டிருந்த அரசியல்வாதியின் கட்சி, அதிக பெரும்பான்மையுடன் வென்றது! அவரது ஆதரவாளர்கள் ஒருவர் விடாமல் எல்லோரும் ஜெயித்து வாகைச் சூடினார்கள்! ஆனால்., சம்பந்தப்பட்ட மூத்த அரசியல்வாதி மட்டும் மயிரிழையில் தோற்றுப்போனார்!

அவரது கட்சிக்குள் தலையெடுத்த அரசியல் எதிரி ஒருவன், ஓர் கேரளத்து நம்பூதிரி மாந்திரீகரைக் கொண்டு, அவருக்கு எதிராக செய்த யாகம், தங்ஙளின் மாந்திரீகத்தை கொஞ்சம்போல முடக்கிவிட்டது! அப்படித்தான் சக அரசியல் தலைகள் காதோடு பேசிகொண்டார்கள். இதெல்லாம், தேர்தல் சார்ந்த வெளி உலகம் அறியாது, அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஓட்டு போடும் மஹாஜனங்கள், இந்தச் சூட்சமக் கூத்தை அறிந்தும்தான் என்ன செய்ய போகி றார்கள்?

சத்தம் காட்டாமல் நட்சத்திர விடுதியில் தன் ஜாகையை தங்ஙள் பரபரக்க காலிசெய்துகொண்டிருந்த போது, அவருக்கான 'பம்பாய் - பெங்களூர்' ஃபிளைட் டிக்கட்டுடன் முகம்மத் கஃபூர் அவரைவந்து சந்தித்தான். கஃபூர், பம்பாயிலுள்ள பிரபலமான 'டிராவல் ஒன்றின் மேனேஜிங் டைரக்டர். பூர்வீகம் கேரளா. தங்ஙளின் ஆத்மான அபிமானி. கபூருடன் ஓர் சௌதிக்காரனும் வந்திருந்தான்! 'தன்பெயர் அப்துல்லா அல்-ரவ்தான் என்றும். ஃபிரம்... ரியாத் என்றும், தன்னுடைய க்ளீனிங் கம்பெனிக்கு, கஃபூர்மூலம் 130 இந்திய லேபர்களை தேர்வுசெய்ய வந்திருக்கிறேன் என்றும்' தன்னை அவன் தங்ஙளிடம் அறிமுகப்படுத்தி கொண்டான். தங்ஙள் அவனிடம் இன்முகத்தோடு பேசினார். பின்னர், கஃபூர் தங்ஙளை தனியே அழைத்து சில சங்கதிகளை மெல்லிய குரலில் சொன்னான்.

"இந்த அரபி, என் பராமரிப்பில்தான் கடந்த பத்து நாட்களாக இருக்கிறான், ரொம்ப நல்லவன். 'கஞ்ஜுஸ்' கிடையாது" என்றுகூறிய கஃபூர், இன்னொரு செய்தியையும் தங்ஙளிடம் சொன்னான். "என் சொல்கேட்டு, அப்துல்லா அல்-ரவ் இப்போது ஒரு காரியமாய் உங்களை சந்திக்க வந்திருக்கிறான். அவன் திருமணம் ஆனவன். இப்போது இவன், ஒரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். அந்தப்பெண்ணும் முதல் கணவனிடம் இருந்து 'தலாக்' பெற்றவளாக இருந்து வருகிறாள். ரியாத்திற்கு அடுத்த நகரமான 'கஸீம்'மை சேர்ந்தவள் அவள்.பெயர் 'நூரா அஸ்மி'. அவள் வேறு யாருமல்ல. அவனுடைய மாமன் மகள்தான்! இளம்வயதிலிருந்தே அவளை விரும்பியிருக்கிறான். முதல் மனைவியாக அவளை அடைய நினைத்தும் நடக்கவில்லை. இப்போது அவன் முயல்கிறபோதும், சிலப் பிரச்சனைகள்! பின்னர், அவனே எல்லாவற்றையும் உங்களிடம் விபரமாக சொல்வான். இதனையெல்லாம் என்னிடம் ஒருவித ஆதங்கத்தோடு அந்த அரபி சொல்லிக்கொண்டிருந்த போது, எனக்கு உங்களின் நினைவுதான் எழுந்தது. உங்களது மகத்துவத்தை அவனிடம் எடுத்துச் சொல்லியதில் அவனுக்கு திருப்தி. இப்போது இங்கே அனது சம்மதத்தோடுதான் அவனை அழைத்துவந்தேன்."

தங்ஙள், தலையுயர்த்தி அந்த அரபியை பார்த்தார். நல்லவனாகத்தான் தெரிந்தான்!

"நீங்கள் சரிசொன்னால், அவன் கொண்டு வந்திருக்கிற விசாவொன்றில், அவனோடு உங்களை ரியாத்திற்கு ஓரிருநாளில் அனுப்பிவைக்கிறேன். இந்தச் சேவைக்காக ரூபாய் ஐந்து லட்சம் கேட்டு வாங்கி, உங்களது அக்கெளண்ட்டிலும் போட்டுவிடுகிறேன். சம்மதம்தானே சாப்? தட்டாமல் நீங்கள் சம்மதம் சொல்லணும்." என்றான் கஃபூர்.

தங்ஙளுக்கு கஃபூர் நம்பிக்கையானவன். அந்த மூத்த அரசியல்வாதி தந்த பெரியபணத்தை இவன் மூலமாகத்தான் ஊரிலுள்ள வீட்டுக்கு அனுப்பி சரி செய்தார். இப்போதைக்கு, கஃபூர் சொல்வதை ஏற்பது நல்லது. சூழ்நிலையும் அப்படிதான் இருக்கிறது. தான் தோற்றுப்போன வெறுப்பில், அந்த மூத்த அரசியல்வாதி, நம்மை எது வேண்டுமானாலும் செய்ய முனையலாம். இப்போதைக்கு பாதுகாப்பு மிக முக்கியம். நான் ஊருக்கு போவதைவிட, கொஞ்ச நாட்கள் இப்படி போய் தலைமறைவாக இருப்பதே சரி. மனதிற்குள் அவர் சௌதிபோக தயாரான நிலையில், வாய்பேச்சாக ஒரு கோரிக்கையை வைத்தார். "அங்கே போனால், நான் உம்ராவுக்கு சென்றுவர அப்துல்லா அல்-ரவ் ஏற்பாடுகளும் செய்து தரணும்." என்றார். அந்தக் கோரிக்கையினை கஃபூர் அரபியிடம் சிலாகித்து சொன்னான். சற்றும் யோசிக்காமல் 'ஜை...ன்' என்ற அப்துல்லா அல்-ரவ் முகம்மலர்ந்தான். அவனது இழையோடும் சிரிப்போடு, தங்ஙளும் கஃபூரும் முகம்மலர சங்கமித்தார் கள்! சிரிப்பு மனித இனத்தின் விசேசகவசம்! சபையில் மறைக்க நினைப்பவற்றை மிக எளிதாக அது காத்து தந்துவிடும்.

அப்துல்லா அல்-ரவ், தங்கலோடு ரியாத் இண்டர்நேஷனல் வந்து இறங்கும்வரை, தனது மாமன்மகள் நூராவைப்பற்றிய பால்யகால நினைவுகளை, அவளை முதலாவது மனைவியாக அடைய நினைத்த எண்ணத்தை, அது சிதைந்துபோனதை, அவளை இப்போது மணமுடிக்க எண்ணியபோது எழுந்த புதிய சிக்கலை என்று எல்லாவற்றையும் தங்கலிடம் சொல்லிக்கொண்டே வந்தான், ஏர்போர்ட்டிலிருந்து வெளியான போது, தங்ஙளை எதிர்பார்த்தும் வரவேற்கவுமாக ரியாத்தில் வாழும் கேரள இஸ்லாமிய குடும்பத்து ஆண்களும் பெண்களுமாக பலர் வந்திருந்தனர்! ரியாத்தில் இயங்கும் 'கேரள முஸ்லீம் நலசங்க' அமைப்பாளர்களுக்கு  கஃபூர் முன்கூட்டியே தகவல் தந்திருந்தான். இத்தனை கூடுதலான கூட்டத்திற்கு தங்ஙளின் பிரபல்யமும் இன்னொருகாரணம். தங்ஙளை வரவேற்க வந்த கூட்டத்தினரைக் கண்ட அப்துல்லா அல்-ரவ் வியந்து போனான்! 'நம்முடன் வந்திருக்கும் இந்த தங்ஙள் அத்தனைக்கு சிறப்பு கொண்டவரா!!?'

தங்ஙளை  தன் வீட்டின் மாடியிலுள்ள தனி ஃப்ளாட்டில், கூடுதல் மரியாதைகளோடு அப்துல்லா அல்-ரவ் தங்கவைத்தான். அடுத்த சிலநாட்களில், தான் ஏற்ற பணியினை துவங்கவிருப்பதாக அரபியிடம் அவர் சொன்னபோது, அவனுக்கு மஹா சந்தோஷம். ஆனாலும், தங்கலைக் காண தினமும் பத்துக்கும் குறையாத கேரள இஸ்லாமிய குடும்பத்தார்கள் வந்து போவதும், அவர்களின் மனக்குறைகளை நீண்டநேரம் தங்கலிடம் கூறியவண்ணமிருப்பதும் அவனுக்கு மண்டை பாரமாக இருந்தது. அக்கம்பக்கமுள்ள அவனது சக அரபி நண்பர்கள் இந்தியர்களின் வருகைகுறித்து கேட்கிறபோது அவனால் பதில் சொல்ல முடியவில்லை. எதுவேண்டுமானாலும் நடந்து தொலையட்டும், நூராவைமட்டும் சம்மதிக்கவைத்தால் போதும் என்று நினைத்தான்.

'நூரா... நூரா..' என்று அப்துல்லா அல்-ரவ் புலம்பிக்கொண்டுவரும் நேரங்களில், அதனைப்பொருட்படுத்தாமல் சில மாந்திரீக வித்தைகளை அவனிடம் செய்துக் காட்டிக்கொண்டிருந்தார் தங்ஙள்! மோதிரத்தையும் வரவழைத்துக் காட்டினார், இப்படி தங்ஙள் எதைச்செய்துக் காட்டினாலும், அவைகளிலெல்லாம் அவன் ஒட்டுதலையோ, சாதாரண வியப்பையோ கூட காட்டவில்லை. குறைந்தபட்சம் முகம் மலர்ந்திருக்கலாம், அதனையும் அவன் செய்தானில்லை! அந்தத் தருணங் களிலும், 'நூரா... நூராவென' அவள் நினைவாக அவன் புலம்பிக் கொண்டிருந்தது, தங்ஙளுக்குச்  சங்கடத்தை தந்தது. நேரம் வாய்க்கும் போதெல்லாம் சீக்கிரமே அவள் தனக்கு கிடைக்கவேண்டுமென அவன் அழுத்தம்கொடுத்து கொண்டிருந்ததும் இன்னும் சங்கடத்தை தந்தது. அவருக்கு இந்த முரண்போக்கான செயல் அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. தன்னிடம் நம்பிக்கை கொள்ளாத அவன், அவருக்கு ஆச்சரியமாகிப் போனான். ரியாத்தில் தனது மாந்திரீக மகிமை,  கேள்விக்குறியாகி கொண்டிருப்பதாக அவர் உணர்ந்தார்.

நம்பிக்கை கொள்ளும் மனம் கொஞ்சமுமில்லாத, இந்தத் தள்ளிப்போன அரபிக்கு, எப்படி தன்னால் தன் மகிமைகளை நிரூபணம் செய்யமுடியும்? என் நாட்டில் எத்தனைபேர்கள் என் பேச்சை நம்புகிறார்கள்! கேள்வியே எழுப்பாமல், மௌனம் செய்தவர்களாக பயபக்தியோடல்லவா ஒப்புக்கொள்கிறார்கள்! இவனும் அப் படி நம்பித்தொலைத்தால் அல்லவா நல்லது! தனிமையில் மீண்டும் மீண்டும் யோசிக்க, மனம்சோர்வுற்ற தங்ஙள் கோபப்படலானார். என்றாலும், ஏழுநாட்கள் நோன்பிருந்து, பின்னர் மாந்திரீகப் பணியை வீச்சாகத் தொடங்கினார்.

மாந்திரீகப் பணிக்கான அமர்வில் அவர் அமர்ந்தபோது, அவரது உடையலங்காரம் மாறியது. அது, அவரை தெய்வீகச் சுடராகக் காட்டியது! வழக்கமாக அவர் தலையில் கட்டியிருக்கும் பச்சைத் தலைப்பாகை இப்போது மிகப் பெரியதாகியிருந்தது! தலைப்பாகையின் பின்னால் நீண்டிருந்த குஞ்சத்தை தோள் வழியே முன்னுக்கு திருப்பிவிட்டிருந்தார். தலைப்பாகைக்கு ஏற்றவகையில் தாடியை கச்சிதமாக மழித்திருந்தார். அணிந்திருந்த வெள்ளை குர்தா, அவரது கணுக்காலுக்கு மேலே நின்றிருந்தது. ஒதுவெடுத்து, சாக்ஸ் அணிந்த கால்களோடு வெள்ளை விரிப்பில் அமர்ந்து, குரான் ஆயத்துகளை மனனமாக, ராகமிட்டு, கேட்போர் மன தை கவ்வும்விதம் இரவில் வெகுநேரம் ஓதினார்! அவர் அப்படி ஓதியதைக்கண்ட அப்துல்லா அல்-ரவ் ஆடிப்போனான். மூன்றுநாட்கள் நடந்தேறிய இந்நிகழ்வு க்குப் பிறகு, அடுத்தநாள் இரவில் மாந்திரீகத்திற்குறிய ஆயத்துகளை மௌனமாய் ஜபித்தவராக, செப்புத் தகட்டில் அதனைக் கிறுக்கி, வெள்ளிதாயத் தொன்றில் கிறுக்கிய தகட்டை அடக்கி, அரக்கிட்டு மூடினார்! அடுத்துவந்த வெள்ளிக்கிழமை இரவு, சாம்பிராணிப் புகையிட்டு, அந்தத் தாயத்தை அதில் காட்டி மீண்டும் சலிக்காமல் ஜபித்து முடித்து, அரபியின் இடுப்பில் தங்கலே கட்டிவிட்டார்.

தங்ஙள் அப்படி தாயத்து கட்டிய போது, அப்துல்லா அல்-ரவ்விற்கு அதிக கூச்சமும், கொஞ்சத்திற்கு நம்பிக்கையும் தந்தது.

அடுத்தக்கட்ட மாந்திரீகசெயல்பாட்டுக்கு நூராவின் தலைமுடியில் சிலவும், அவளது காலடி மண்ணும் வேண்டுமென அப்துல்லா அல்-ரவ்விடம் தங்ஙள் கூறவும், அது சாத்தியமில்லை என்றான் அவன். 'இல்லை, கட்டாயம் அது வேண்டும்' என்று தங்ஙள் சொல்ல, 'பார்க்கலாம் முயல்கிறேன்' என்றான். அது கிட்டும்வரை, தான் 'உம்ரா' போய் வருகிறேன் என்றார். மறுப்பேதும் கூறாமல் டிரைவரோடு கார் கொடுத்து, கைநிறைய பணமும்கொடுத்து, அவரை உம்ராவுக்கு அனுப்பி வைத்தான்! உம்ராவில், புனித ஸ்தலங்களில் தொழுது, தரிசிக்கமுடியும். அங்கே மனமுருக கையேந்தி ஆறுதல் கொள்ளமுடியும்! தங்ஙள் அங்கேபோனார், புனித ங்களை தரிசித்தார், தொழுதார், கையேந்தினார் என்பதெல்லாம் நடந்தது. ஆனால், ஆறுதல் கொண்டாரா?

*
உம்ரா போய் திரும்பும் வழியெல்லாம் அவருக்கு நூராவைப்பற்றிய சிந்தையே மேலோங்கியிருந்தது. அவளை அடையாமல் அப்துல்லா அல்-ரவ் தன்னை விடமாட்டான் போலிருக்கிறதே என்று குழம்பினார். ஊராக இருந்தால், சம்மந்தப்பட்டவனுக்கு தெரியாமல், யாராவது ஒரு விசயதாரியை அனுப்பி, அல்லதுதானே போயிருந்து அந்தப் பெண்ணிடம், அவன் கொண்டிருக்கிற காதலை உயர்வுபடுத்திப் பேசி, எப்படியாவது அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விடலாம். இங்கே அதற்கு வழியில்லையேயென மருவினார். இன்னொருபக்கம், நூராவை, அங்கேயுள்ள ஏதோவொரு இளவரசனின் மகன் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக வேறு சொல்கிறான். அந்த பிரீன்ஸ் குடும்பத்துக்கு விரோதமாக, நான் மாந்திரீகம் செய்வதாக, அவர்களுக்கு தெரியவந்தால், தன் தலை தப்பாதே! இத்தனை அலைக்கழிப்பை தரும் இந்த மாந்திரீகத்தை உடனே விட்டொழித்து தலைமுழுகவேண்டுமென நினைத்தார். தன் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக போற்றிதொடரும் இந்தத் தொழிலை விட்டுவிடுவது அத்தனை எளிதானதில்லையெனவும் அவருக்குதோன்றியது. தங்ஙள் தீர்வற்று யோசித்துக் கொண்டிருந்தார். யோசனை, எப்பவுமே மனிதனை சமவெளி குழப்பத்திலிருந்து மீட்டு, மலைமுகட்டில் கொண்டுசென்று நிறுத்திவிடும். 'அடி தவறினால் பாதாள மெனும் நிலை!' இதனை அறிந்துணர்ந்த தங்ஙள், யோசித்து கொண்டிருந்ததை சட்டென நிறுத்திகொண்டார்.

ரியாத் வந்தடைந்த தங்ஙள், ஓய்வாக வீட்டில் படுக்கலானார். உம்ரா பயணத்திலான அசதிகள் இருந்தும் அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை. பகல்வேளை, சாப்பாட்டு நேரம்! அவருக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை. வீட்டில் அப்போது அப்துல்லா அல்-ரவ் இல்லை. இருந்திருக்கும் பட்சம், நேரங்காலம் தெரியாமல் வந்து நின்று, நூராவென கழுத்தறுத்திருப்பான். வேறு சிந்தையே கிடையாது! இவனிடமிருந்து தப்பித்து ஊர் செல்வது சுலபமில்லையென நினைத்தார். 'சரி, எப்படிதான் இவனிடமிருந்து தப்பிப்பதாம்?' யோசிக்கத் தொடங்கினார். வழியொன்றும் புலப்படவில்லை. தனக்கு புலப்படாவிட்டாலென்ன? இந்நாட்டில் நீண்ட காலம்வசிக்கும் தனதுநாட்டைச் சேர்ந்த நண்பர்களிடம் கலந்தாலோசித்தால் தக்கவழி நிச்சயம் கிட்டாமலாபோகும்? அடைபட்ட சங்கடத்தின் கதவுகள் ஒவ்வொன்றாக திறவுபடுவதாக தோன்றியது! அப்படி திறந்த கதவின் வழியே கீற்றாய் வெளிச்சம் தெறிவதை அகத்தில் காண, அவர் ஆசுவாசம் கொண்டார்.

படுக்கையைவிட்டெழுந்து யோசித்தப்படியே பால்கனிக்கு வந்தார். தலைநகர் ரியாத் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வாகனங்கள் விரையும் இடைவிடாத இரைச்சல், புதிய கட்டிடக் கட்டுமானங்களின் ஓசை, சுட்டுத்தீய்க்கும் சூரியனின்மேவல், உச்சி வெய்யாலையும் பொருட்படுத்தாது ரோட்டில் நடந்து கொண்டிரு க்கும் பாவப்பட்ட இந்தியக் கூலிகள் என்று பலதையும் அவரது மானம் கண்டும், கேட்டும் உணர்ந்தும் அனுமானிக்க தொடங்கியது. திடுமென தங்கலுக்கு, 'கேரள முஸ்லீம் நலச் சங்கம்' நினைவுக்கு வந்தது. அதன் தலைவர் முஸ்தஃபா மொஹையதீன் ரொம்பவும் மரியாதை தெரிந்த மனிதர். பத்தா கடைவீதியில் அவரது, 'சௌத் இந்தியன் சாரீஸ்' இருக்கிறது. முஸ்தஃபா ஒருமுறை தங்ஙளை அழைத்துபோய் தன் கடையை காண்பித்திருக்கிறார். நாட்டுக்கு போகும் நம்ம வர்கள் அங்கே பொருட்கள் வாங்கும் வேகம் தங்ஙளுக்கு பிரமிப்பை தரக்கூடியதாக இருந்தது! பத்தா கடைவீதி இங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரம்தான். நடந்தே போய்விடலாம். யோசித்தநாழியில், தங்ஙள் ரூமை விட்டுப்புறப்பட்டார். மனதிற்குள் தகித்துகொண்டிருந்ததால், அவருக்கு சுட்டெரிக்கும் வெளி உறுத்த வில்லை!

கடைவாசலில் தங்ஙளின் தலை தெரிந்த நாழிக்கு, பரபரப்புடன் கல்லாவை விட்டெழுந்து வாசலுக்கு விரைந்தோடி வந்த முஸ்தஃபா, அவருக்கு சலாம் கூறி, உள்ளே அழைத்துபோனார். கடையில் பணியெடுக்கும் அத்தனைபேர்களும் தங்கலுக்கு சலாம் கூறினார்கள். முஸ்தஃபா, தங்ஙளை கல்லாவில் உட்காரவைத் தான். பக்கத்தில் கிடந்த இருக்கையொன்றில் உட்கார்ந்தும் உட்காராத நிலையில் முஸ்தஃபா இருக்கலானார்.தங்ஙளின் முகத்தை நேர்நோக்கிய அவர், பார்வையால் விசாரித்தார். தங்ஙள் மெல்லியகுரலில் ஒவ்வொன்றாக சொன்னார். கண்சிமிட்டாமல் அதனைக் கேட்ட முஸ்தஃபா, பணிவோடு கேட்ட ஒரேகேள்வி 'உங்க பாஸ்போர்ட் இப்போது யாரிடம் இருக்கிறது?' 'உம்ராவுக்கென்று அரபியிடம் வாங்கிய பாஸ்போர்ட் இப்போது தன்னிடமே இருக்கிறதென்றார். மொஹையதீன் முகத்தில் பிரகாசம். இனியொன்னும் பிரச்சனையில்லை என்றார் அவர். இப்போது தங்ஙள் முகத்தில் பிரகாசம்! அப்துல்லா அல்-ரவ்க்கு தங்ஙள் கேள்விக்குறியாகிப் போனார். உம்ரா போய்வந்த அவர், தன்னைச் சந்திக்காமல் 'எங்கோ போனதெப்படி?' குழம்பிய அவன், தங்ஙளைத் தேடத் துவங்கினான். 'செல்'யுகம் அன்றைக்கு சௌதியில் அறிமுகமாகாத காலம். தேடுவதை விட்டால் வேறு மார்க்கமில்லை. அவனுக்கு, அவர் காணாமல் போனதைவிட, காரியம்தான் முக்கியம்! 'நூராவின் மனதைமாற்றி, அவள் என்னை விரும்பும்படிக்கு செய்யாமல் அவர் எப்படி காணாபோகலாம்?'

முஸ்தஃபா மொஹையதீனின் இல்லத்தில் இரண்டு நாள் நிம்மதியாக உண்டு உறங்கிய தங்ஙள் அரபியின் தேடலைக் கேள்விப்பட்டு சங்கடப்பட்டார். கேரள முஸ்லீம் நலச் சங்கத்தை விசாரித்தப்படிக்கு, அதன் தலைவரான தன்னைத் தேடிக்கொண்டு, தனது கடைக்கே அவன் வந்துவிட்டதை முஸ்தஃபா விவரித்தார். 'தங்ஙள் இங்கே வரவில்லை' என்று நான்சொன்னதை அவன் நம்பாமல்தான் திரும்பினான் என்றார். மௌனமாக முஸ்தஃபாவின் முகத்தையே பார்த்தபடி இருந்தார் தங்ஙள்.

"தங்ஙள் சாப்.. நீங்கள் இனியிங்கே தங்குவதென்பது சரியாக இருக்காது, அவன் தேடிக்கொண்டு இங்கேயும் வர வாய்ப்பிருக்கிறது" என்று கூறி, தங்ஙளை தன் நண்பரான காதர்பாய் பிளாட்டில் தங்கவைத்தார். அரபியின் தேடல் தொடர்ந்தது.

மூன்று நான்கு இருப்பிட மாற்றத்திற்குப் பின்னால், ரியாத்தின் கிழக்குப் புறமாக, நகரைவிட்டும் தள்ளியிருக்கும் 'அல் நசீம்' -ல் உள்ள பக்கர் குஞ்சுவின் இருப்பிடத்திற்கு தங்ஙள் அனுப்பிவைக்கப்பட்டார். பக்கர் குஞ்சுவின் திறமைமீது சங்க அமைப்பிலுள்ள எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. தங்ஙள் கோரிக்கையை மிகச்சரியாகத் திட்டமிட்டு வெற்றிகரமாக செய்து முடிப்பவன் அவனென நம்பினார்கள். சரியான தேர்வுதான் அது! பக்கர் குஞ்சுவை நான் அறிவேன். அவன் திறமையின் வித்து! ஒரே நாளில் முளைத்து, வளர்ந்து, பூத்து காய்த்துவிடும் ரகம் சார்ந்த வித்து!

ரியாத்தில் வசிக்கும் வேறெந்த மலையாளிகளையும் விட தங்கலுக்கு பக்கர் குஞ்சு அதிக மரியாதை செய்பவனாக இருந்தான். அவரின் பாதுகாப்பு கருதி தனது குடியிருப்புக்கு சற்று தள்ளியுள்ள அவனது நண்பன் ஒருவனின் ஃப்ளாட்டில் அவரை தங்கவைத்தான். அந்த இடத்திற்கு அரபி அத்தனை சீக்கிரம் கண்டு சென்றுவிட முடியாதென்றே முதலில் தீர்மானம் கொண்டான்.

'தங்ஙளை,  அரபியின் குறுக்கீடில்லாமல் எப்படி இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதென்ற திட்டமொன்றைவகுத்தான். அவரை, 'நிச்சயம் ரியாத்திலிருந்து விமானம் ஏற்றுவது ஆகாது. இங்கிருந்து நாநூறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள தமாமிற்கு அனுப்பி, அங்கிருந்து டெஹரான் வழியேதான் ஊர் அனுப்பிவைக்க வேண்டும். அவர் ஊர்போகும் போது பெரியதொகை ஒன்றுக்கு ஏற்பாடு செய்து தரவேண்டும்!' என்றெல்லாம் அவனிடம் தீர்மானங்கள் உறுதிபட்டது! தங்கலின் பாஸ் போர்ட்டை சரி பார்த்தவகையில், அதன் காலக்கெடு முடிந்திருந்தது. அதனை இந்தியன் எம்பஸியில் சரிசெய்யவேண்டும். அதுவரை,தங்ஙள் தன்னையொட்டிய இடத்தில் தங்குவதையும்விடவும், வேறெந்த மலையாளிகளின் இடத்தில் தங்குவதைவிடவும், இன்னொரு பாதுகாப்பான இடத்தில் அவர் தங்கவைக்க வேண்டு மென நினைத்தான். அப்படி அவன் கூடுதலாக யோசித்த போது, அந்தயோசனை சென்று நின்றவிடம் ஜெம்! அவனது விரல் ஜெம்மின் ஆபிஸ் நம்பரை சுழற் றியது. எதிர்முனை 'ஹலோ' என்றது. பக்கர் குஞ்சு, 'அண்ணா' என்றான். பெருபாலும் மலையாளிகள் தமிழர்களை அண்ணாவென்றே விளிப்பது வழக்கம். அப்படி அவர்கள் அண்ணாவென விளிப்பது மரியாதை கொண்ட அழைப்பாக மட்டும் கருதிவிட முடியாது.

தங்கலின் கீர்த்திகளை ஜெம்மிடம் அதிகமும் சொன்னான் பக்கர் குஞ்சு. 'தன் பையனின் சுகவீனத்தையும் அவரால் களைய முடியுமா?' என்று ஜெம் மெல்ல கேட்கவும், அந்தக் கேள்வியைதான் வெகுநேரமாக எதிர்ப்பார்த்திருந்த மாதிரிக்கு, பக்கர் குஞ்சு ஊறுதிபட பேசத் துவங்கினான். "ஜெம். நோக்கிக்கோ ஐயாள் பொன்னுபோல மொவனின் நோவத்தனையும் களையும்" என்றான். தொடர்ந்து அவன் பேசியபோது, "தங்கலை உமது இருப்பிடத்திற்கு அழைத்துப் போய் பத்துநாள் வைத்து, பையனின் நோவு தீர ஏற்பாடுகளை செய்துகொள். இன்ஷாஅல்லா, பத்து நாளுக்குள்ளாகவே மொவன் உடல்நலத்தில் கொரைச்ச முன்னே ற்றம் காணும்!" என்றான். "தங்கலை, அரபி எதற்காக சௌதிக்கு அழைத்து வந்தான்?" மன ஐய்யப்பாடோடு ஒரு கேள்வியெழுப்பினார் ஜெம். அதற்கு பக்கர் குஞ்சு மழுப்பலான காரணத்தைக் கூறி சமாளித்தான். அப்துல்லா அல்-ரவ்வை 'வட்டென' கிண்டலடித்தான். தொடர்ந்தும், அதனையொட்டிய பிற கேள்விகளை ஜெம் கேட்கவில்லை. மகனின் நல்வாழ்வுக்கான தருணம் தொடங்கி விட்டதாகக் கருதத்தொடங்க, சந்தோஷத்தில் முழுகிப்போனார்!

நண்பனின் சொல் மீதான நம்பிக்கையில், அன்றைக்கே பக்கர் குஞ்சுவை அழைத்துக் கொண்டு தங்கலைச் சந்தித்தார். தங்கலின் தோற்றப் பொழிவு, பக்கர் குஞ்சுவின் சொல்லை உறுதிசெய்தது. தன் பையனின் சுகவீனத்தை ஜெம் சொல்லத் தொடங்கவும், மேலுமானதை தங்ஙள், சொல்லத் தொடங்கினார். ஜெம் தடுமாறிவிட, பக்கர் குஞ்சு சலனமில்லாமல் தங்கலைப் பார்த்து வியந்து கொண்டிருந்தான். பின்னர், ஜெம்மை தனியே அழைத்த பக்கர் குஞ்சு, சிகிச்சைக்கான தொகையை நிர்ணயம்செய்தான். இரண்டாயிரம் டாலருக்கு ஓகே ஆனது!

தங்கலை தனது இருப்பிடத்திற்கு அழைத்து போக இரண்டு நாள் ’டைம்’ கேட்டார் ஜெம். ஏன் என்றான் பக்கர். ஹெட்டாபிஸுக்கு தகவல் செய்துவிட்டு அழைத்துப் போவதுதான் நல்லதென்றார் ஜெம். பக்கர் குஞ்சு அதனை ஏற்றுகொண்டான்.

சொல்லியபடிக்கு இரண்டுநாட்கள் கழித்து அவரை இருப்பிடத்திற்கு அழைத்துவர ஆயத்தமானர். தங்கலை ஜெம்மின் காரில் அனுப்பிவைத்த பக்கர் குஞ்சு, தனிமையில் நின்று, தன்னைத்தானே மெச்சிக்கொண்டான். 'இத்தனை திறமைசாலியா நான்?' சாதனைகள் பலவற்றை விரல்சொடுக்கில் செய்து பழக்கப்பட்ட அவனுக்கு இது ஏனோ அத்தனைக்கு வியப்பளித்தது! தங்ஙள் இங்கு வந்து, எங்களோடு தங்க ஆரம்பித்து பத்துநாட்கள் கழிந்துவிட்டது. அவருக்கு, நானும் ஜமாலும் தரும் மரியாதை கொஞ்சமும் மாறாதிருந்தது. பணிவிடைகளுக்கும் குறைவில்லை. இப்போது தங்ஙள் எங்களுக்கு இனிமையான மனிதர்! நண்பரெனவும் சொல்லலாம். வீணே அவரிடம் எதுவும் பேசுவது கிடையாது. யதார்த்தமாக நான்பேசினாலே அது விவகாரமாக போய்விடுவதுண்டு! என் ராசி அப்படி! அதனால் நான், ஜாக்கிரதை மற்றும் கப்சிப்! ஆனால், ஜமாலின் ராசிவேறு! அவரிடம் அவன் சதா எதையாவது பேசிக்கொண்டேயிருப்பான். அவன் பேச்சு பெரும்பாலும் விவகாரமாகவே இருக்கும். தங்கலிடம் அவன் என்னபேசுகிறான், அதற்கு என்னஅர்த்தம் என்றெல்லாம் எனக்குதான் தெரியும். அவனது சூட்சமமான கேள்விகளால் அவரும் அறியாது அவரிடம் தெறித்துவிடும் பதில்களில் எனதிற்குள் நான் சிரித்துக் கொள்வேன்.

தங்கலுக்கு, ஜமாலின் பேச்சென்பது, 'இன்னசெண்ட் டாக்கிங்!' அவரது பார்வையில் அவன் சூதுவாதற்றவன்! ஒருவன் தனது விவகாரமான பேச்சுக்குப் பிறகும் இப்படியெல்லாம் சான்று பெறுகிறானென்றால், அதற்காக அவன் வரம்வாங்கி வந்திருக்க வேண்டும். ஜமால் வாங்கி வந்திருக்கிறான்! அதில் இரண்டு கருத்தி ல்லை! ஜமாலுக்கு இயற்கையாகவே குழந்தைத்தனமான முகம். நானே பலமுறை வியந்திருக்கிறேன்! சிலருக்கு பிறப்பு வழங்கும் கொடையது! மனிதர்களது பேச்சின் சூட்சுமம் கண்டறியும் 'மெஷின்' ஒன்றை மேலைநாடுகளால் நாளை கண்டுப்பிடிக்கப்பட்டு, அது, உபயோகத்திற்கு வரக்கூடுமென்றாலும், ஜமால் மாதிரியான ஆட்களிடம் அதன் திறன் பலிக்காது. சாஷ்டாங்கமாய் மண்டியிட்டுவிடும்.

தங்கலிடம் நான் அதிகம்பேசாமல், வாயை மூடிகொண்டிருப்பதும் சரியில்லைதான். ஏதாவது பேசினால்தான், அவரிடம் நான் நிறையநேரம் மௌனம் செய்வத ற்கும் அர்த்தமிருக்கும். அவர் என்னிடம் பேசும் போதும் அரைவார்த்தை, கால்வார்த்தையென்று பதில்கூறி,  மீதப்பேச்சை புன்னகையால் நிரப்புதல் என்பது நன்றாகவா இருக்கிறது?

ஆனால், அலுக்காமல் அதனைதான் நான் செய்துகொண்டிருக்கிறேன். அவரிடம் தாராளமாகப் பேசலாம்தான். பேச்சும் எனக்கு இஷ்டமானதுதான். நான் எது வொன்று குறித்தும் அவரிடம் கேட்டாலும், நான் கேட்பதைவிட்டும் இன்னொரு தலத்தில் தங்ஙள் பதில் சொல்கிறபோது, பலநேரம் ஏண்டா இவரிடம் கேள்வி யெழுப்பினோம் என்றாகிவிடுகிறது. நீங்கள் சொல்வது தவறென்று அவரிடம் நேரிடையாய் சொல்லுவது சரியாக வருமென்றும் தோன்றவில்லை. 'எதிரிடையான கருத்துக்களை நேரிடையாக பேசக் கூடாது' என்று ஒரு பெரியவர் என்னிடம் எப்பவோ சொன்ன சொலை சரியென இப்பவும் நம்புகிறவன் நான்.

தங்ஙள் ஒருமுறை, தனது ஸ்ரீலங்கா பயணத்தில் அதிபர் ஜெயவர்த்தனாவை சந்தித்ததுபற்றி சொல்லிக்கொண்டே போனார். உலக அரசியல் அரங்கில் ஸ்ரீலங்க அதிபர் ஜெயவர்தனா மீது எனக்கு தனிப்பட்ட கருத்தொன்று தீர்மானமாக இருந்தது. அன்றைய தினத்தில் உலகளவில் நீங்கள் வெறுக்கும் பத்து அரசியல் தலைவர்களின் பெயர்களை குறிப்பிடும்படி யாரேனும் என்னை கேட்டிருப்பார்களேயானால், நிச்சயம் ஜெயவர்த்தனாவின் பெயரையே முதலில் நான் எழுதியி ருப்பேன்.

ஜெயவர்தனாவை தங்ஙள் சிலாகித்து சொன்னநேரத்தில், "ஈழப் பிரச்சனைப் பற்றிய உங்களது கருத்தென்ன?" என்று அவரிடம் கேட்டேன். அவரும் தயக்கமற பதில் சொன்னார், "நீங்கள் இப்போது சௌதிக்கு பிழைக்க வந்திருக்கின்றீர்கள், இங்கே தங்கவும், வாழவும் ஏன் வசிக்கவும் செய்றீர்கள். அதன்பொருட்டு, இது உங்கதேசம் ஆகிவிடுமா? நீங்களும்தான் இந்நாட்டை என் தேசமென்று சொல்வீர்களா? அதற்காக போராடவும்கூட செய்வீர்களா? அப்படியே போராடினாலும் அது தகுமா?" என்றார். நான் அந்தப் பதிலைகேட்டு மனதிற்குள் கலகலவென்றும், வெளியில் கொஞ்சம் போலவும் சிரிதேனேதவிர, அவரை மறுக்க துளியும் முயலவில்லை. 'எதிரிடையான கருத்துக்களை நேரிடையாக பேசக் கூடாது!' நினைவில் உண்டு. கொஞ்சம் போல நான் சிரித்தசிரிப்பு அவருக்கு போதுமான ஒப்புதலாக போய்விட்டது. அதில் எனக்கும் நிரம்ப நிம்மதி. அதன்பிறகு அவரிடம் மறந்தும் கேள்வியெதனையும் எழுப்புவதேயில்லை. எனக்காகவும் சேர்க்க, தங்கலிடம் பேசுவதற்கும், பேச்சுமாதிரியே கேள்விகளை எழுப்புவதற்கும் ஜமால் ஒருவன் இருப்பது போதாதா?

இந்தப் பத்துநாட்களில், எங்க மேனேஜர், தங்கலின் இன்னொரு பக்கச் செய்திகள் கூடுதலாக அறிய வந்ததில் அதிர்ச்சி கொண்டிருந்தார். குறிப்பாக அப்துல்லா அல்-ரவ் தங்கலை தேடிக்கொண்டு அலைவதில் அவர் கொண்ட அதிச்சி அதிகம். அரபி, பெரும்பாலும் மலையாளிகளை தேடியே அலைவான் என்றும், நம் மைத் தேடிவர அவனுக்கு தோணாது என்றும் நேற்றுவரை தீர்மானமாக கருதினார். அவர் கருதியப்படிக்கு அவன் இங்கு வரவில்லைதான். கேரள முஸ்லீம் நலச்சங்கம் சார்ந்தவர்களையே அவன் தேடித் தேடி சுற்றிக் கொண்டிருந்தான். தமிழ்பேசும் இஸ்லாமியர் ஒருவரின் பராமரிப்பில் தங்ஙள் இருக்கக்கூடுமென்று அவனது உளவாளிக்கும் ஏனோஎட்டவில்லை! தங்கலைத் தேடிக்கொண்டு அரபி எங்கள்குடியிருப்புக்கு வரவில்லையே தவிர, கேரள முஸ்லீம் நலச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நாள் தவறாது இங்கு வந்தார்கள். தங்கலை கண்டுபேசியும் மகிழ்ந்தார்கள். விரைவில் அவரை நாட்டுக்கு அனுப்பிவைக்க இருக்கும் நல்ல செய்தி யினையும், அதற்கான ஆயத்தசெயல்பாட்டினையும் தங்கலிடம் சொல்லிபோனார்கள். வந்துபோகிறவர்கள் எல்லாம் 'தங்ஙள்அமீர்'க்கு, நல்லசெய்தி சொல்வதென் பது எனக்கு வேடிக்கையாக இருந்தது! யாருக்கு யார் நல்லச்செய்தி சொல்வது?

தினம் தினம் மாலை ஆறுமணிதொட்டு, எட்டுவரை ஜெம்மிம் வீட்டில், இடைவிடாது மாந்திரீகச் செயல்பாடுகள் நிகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் சென்னைக்கு டெலிபோன் போட்டு, "பையன் இப்போது எப்படியிருக்கிறான்? எழுந்து நிற்க முயற்சிக்கிறானா?" என்று கேட்டறிந்தபடி இருந்தார் ஜெம். எதிர் முனையின் பதில், "பையன் இப்போது தேவலாம் போலத்தான் இருக்கிறான், 'இன்ஷாஅல்லா' அவன் எழுந்து நிற்பான் என்று தோன்றுகிறது!" தினைக்கும் பதில் என்பது இப்படி ஒரே மாதிரியாகவே இருந்தது. எட்டுமணிக்கு ஜெம்மிடம் விடைபெற்றவராக தங்ஙள், எங்களது இருப்பிடத்திற்கு வருவார். பின்னர், ஒரு ஸ்பெஷல் சாயா. அடுத்து அவரது தினசரி செயல்பாடுகளில் ஒன்றான வாக்கிங்கிளம்பிவிடுவார். எங்கள் இருப்பிட கட்டிடத்துக்குபின்புறம் ஒரு ஹைவே ஓடுகிறது, அதில் இறங்கி, ஓரமாக நடக்கத் தொடங்கிவிடுவார். ஒன்பதுமணி வாக்கில்தான் திரும்புவார். பின்னர் எங்களோடு சாப்பிட்டுமகிழ்ந்து, உறங்கப் போய்விடுவார். ஏசி ரூமில் இழுத்து போத்திக்கொண்டு நன்றாக உறங்கவும் உறங்குவார்! உறக்கத்தை கொண்டு ஒருவரது நிம்மதியை கணக்கிட்டுவிடலாம் என்பார்கள். அந்தப்படி பார்த்தால், எங்களிடம் தங்க ஆரம்பித்த நாளிலிருந்து தங்ஙள் நிம்மதியாகதான் இருக்கிறார்!

இன்றைக்கு அவர் வாக்கிங் சென்றிருந்தபோது, அழைப்பு மணியடித்தது. ஜமால் போய் கதவைதிறந்தான். பின்னர் "பாய்.." என்று என்னை அழைத்தான். நான் போனபோது, பெருத்த உடல்வாகும் உயரமுமாக, மிரட்டும் அரேபி ஆடையலங்காரத்துடன் ஓர் அரபி நின்றான். சலாம்சொன்னான். பதில்சலாம் சொன்னேன். தன்னை 'அப்துல்லா அல்-ரவ்' என்று ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டு, "ரஃபிக், தங்ஙள் இருக்கிறாரா? யென கேட்டார். சற்றும் யோசிக்காமல் உடனே "அப்படியாரும் இங்கேயில்லை சேக்" என்றேன். சரியென்றுவிட்டு, சிறிதுநேரம் நின்றவனாக, இருப்பிடத்தை வட்டமிட்டுபார்த்தான். எங்க கம்பெனியின் வேன் எதிரே பார்க்கிங் கிரவுண்டில் நின்றது, அதில் எங்கள் தலைமை அலுவலகத்தின் டெலிபோன் நம்பர் பதிந்திருந்ததை கண்ட அவன், அருகில்போய், அதனை குறித்துகொண்டவனாய் தனது காரிலேறி புறப்பட்டான்.

எங்களது பதில் அவனுக்கு திருப்தியைதரவில்லை என்பதை நாங்கள் உணரவே செய்தோம். நிச்சயம் மீண்டும் வருவானென எனக்கு அப்போதே தீர்மானமாகி விட்டது. அவன் தலை மறைவானவுடன், எங்கமேனேஜர் பிளாட்டுக்குச் சென்று செய்தியைச் சொன்னோம். ஜெம் ஆடிப்போய்விட்டார். ஹெட்ஆபிஸுக்கு இது தெரியவந்தால், பிரச்சனையென நினைத்திருக்கலாம். உடனே அவர் பக்கர் குஞ்சுவை டெலிபோனில் அழைத்து செய்தியைச் சொன்னார். அதற்கு அவன், "அண்ணா ஒண்ணும் பேடியாகவேணாம். அவனொரு பிராந்து. அவன் வந்துபோனதில ஒரு சுக்குமில்ல பார்த்துக்கோ, மத்ததெல்லாம் நாளை ராவுல அண்ணா விடம் யான் பறையும். சரியா?, தங்கலை அதே ராவுல ஞான் கொண்டுபோகும் சரியா!" என்றான். "நாளை காலை எல்லா விபரங்களையும் சொல், இப்போது வந்து தங்கலை அழைத்துச் செல்" என்றார் ஜெம். அவரது கடுமை அவனை பாதித்திருக்கவேண்டும். பத்துநிமிடத்தில் தான் அங்கு வருவதாகச் சொன்னவன், அதன்படி வரவும்செய்தான். பக்கர் குஞ்சு முகத்தில் சந்தோஷமில்லை. திட்டமிட்ட செயல்பாடுகள் திடுமென நொடித்தால், சம்மந்தப்பட்டவனின் அகமகிழ்வு தொலையத்தான் செய்யும். அவன் வந்திறங்கி எங்களுக்கு சலாம் சொன்னதுகூட காதுகளில் சரியாகவிழவில்லை. அவனதுகுரல் அத்தனைக்கு உடைந்திருந்தது. உள்ளுக்குள்ளே நொறுங்கி போயிருக்கிறான். பாவம்!

பக்கர் குஞ்சு நேரே ஜெம்மின் பிளாட்டினுள் போய் ஏதேதோ பேசினான். அடுத்து தங்கலை பத்திரமான இடத்துக்கு கொண்டு போக யாரையோ வரசொல்லி விட்டு, எதிர்பார்த்தவனாக வெளியேவந்து எங்களோடு நின்றான். தங்ஙள் தனது வாக்கிங்கை முடித்துகொண்டு திரும்பினார். ஜெம் ஃபிளாட் முன்பாக நாங்கள் நிற்பதைகண்டு அவரும் நின்றார். பக்கர் குஞ்சு அவரை அழைத்துபோய் செய்திகளைச் சொன்னான். பக்கர் குஞ்சு எதிர்பார்த்த கார் வந்தது நின்றது. தங்ஙள், ஜெம் பிளாட்டினுள் போய் அவரிடம் சொல்லிவிட்டு வெளிவந்து, என்னிடமும் ஜமாலிடமும் "நான் பிறகு வருகிறேன்" என்றவராக சிரித்தபடியே காரிலேறும் தருணம், இன்னொரு கார் எங்கள் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து அப்துல்லா அல்-ரவ் இறங்கினான்.

தங்ஙள், வேறுவழியின்றி அரபியைப் பார்க்க நடந்தார். அப்துல்லா அல்-ரவ் அவருக்கு சலாம்சொன்னான். தங்கலும் பதிலுரைத்தார். பின்னர், தங்கலை தனியே அழைத்து போய், "உம்ராவிலிருந்து திரும்பிய பிறகு, ஏன் என்னைப்பார்க்க தவிர்க்கின்றீர்கள்?" என்று கேட்க, தனக்கு கடுமையான வயிற்றுவலி என்றார் தங்ஙள். நிஜத்தில், அந்த வலியால் அவர் அப்பப்ப அவஸ்தைப்படுவதை பிளாட்டில் வைத்து கண்டிருக்கிறோம். வலிபோக்க ஒருவேரை எங்களிடம் தந்து தனக்கு கஷாயம் வைத்துக்கொடு என கேட்பார். நாங்களும் அதன்படிக்கு வைத்து கொடுப்போம். சிறிது நேரத்தில் வலிநீங்கி நிம்மதியும் கொள்வார். அப்படி ஒருதரம் அவருக்கு கசாயம் வைத்து தந்தபோது ஜமால் சிரிக்காமல் கேட்டான், "ஏங்க ஹஜ்ரத் யாரேணும் உங்களுக்கு வப்பு வைத்திருப்பார்களோ?" 'ஜமால்...' என்று பெயர் கூறி அழைத்தவராக, தங்ஙள் வாய்விட்டு சிரித்தார். இதுவும் ஜமாலின் அப்பாவித்தனமான கேள்விகளில் ஒன்றாக தங்கலின் பிரத்தியோக லிஸ்டில் ஏறுமென்றாலும் வியப்பதற்கில்லை!

கவலைகொண்ட முகத்துடன் அப்துல்லா அல்-ரவ், பக்கத்திலுள்ள நட்சத்திர அந்தஸ்துகொண்ட மருத்துவமனையின் பெயரைகூறி, 'நாளை அங்கே போகலாம், நீங்கள் இங்கேயேயிருங்கள்' என்றுவிட்டு சென்றுவிட்டான். அப்துல்லா அல்-ரவ்வின் இந்த அணுகுமுறை, தங்கலைத் தவிர்த்து, எங்கள் எல்லோரையும் துணுக் குறச் செய்தது. 'அப்துல்லா அல்-ரவ் இத்தனைக்கு நல்லவனா!?" எங்களது மெல்லிய அதிர்ச்சியை யூகித்தவராக, கிட்டேவந்த தங்ஙள் சொன்னார், "ஐ யாளு வட்டாக்கும்... மஜ்னூன்!" என்றார்.
தங்ஙள், எங்களைவிட்டு ஹாஸ்பிட்டலுக்குபோய் இன்றோடு ஏழுநாட்கள் ஆகிவிட்டது. அங்கே அவருக்கு வயிற்றில் சிறிய ஆப்பரேஷன் என்றும், இப்போது நலமாக இருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன. 'Dr.Abdul Rahman Al Mishari Hospital' என்கிற அந்த நட்சத்திர ஹாஸ்பிட்டல், இங்கிருந்து டாக்ஸியில் பத்து நிமிட பயணதூரம்தான். நண்பர்கள் பலரும் அவரைப் போய் பார்த்துவந்தார்கள். தங்ஙள், தற்சமயம் அரபியின் பார்வையில் இருப்பதாக சொன்னார்கள்.

நானும் ஜமாலும் அவரை இன்று பகல் பார்க்கப் போனோம். நாங்கள் போனநேரம் வெளியாட்கள் பார்க்க முடியாத நேரம். திரும்பிவிட்டோம். அன்றிரவு எங்கள் இருப்பிடத்துக்கு பக்கர் குஞ்சு தங்கலை காரில் அழைத்து வந்தான். வந்தவுடன் தங்ஙள் எங்களிடம், "சாப்பிட என்னயிருக்கு?" என்றார். பகல் வைத்த மீன்கறியும், கீரைமசியலும் இருந்தது, இரண்டுமே அவருக்கு இஸ்டமானது. உடனே சூடுபடுத்தி சாப்பாட்டைபரிமாறினோம். ஹாஸ்பிட்டலில் இத்தனைநாளும் சாப்பிடமுடியாது சாப்பிட்டக் கொடுமையை அவர் சிரித்தப்படிக்கு சொன்னார். பின்னர், பக்கர் குஞ்சுடன் ஜெம்மின் பிளாட்டிற்கு சென்றார்.

டெஹரான் ஏர்போர்ட் வழியே தங்ஙள் இன்றைக்கு ஊர்போகும் செய்தியை நேற்றே எங்கமேனேஜர் அறிவார். தங்கலை பத்திரமாக அனுப்பிவைக்க வேண்டு மென்ற நல்லெண்ணம் கொண்டோரில் ஜெம்மும் ஒருவராகிப் போனதால் அவருக்கு இச்செய்தி காலத்தே கிடைத்திருந்தது! இப்பவும் பக்கர் குஞ்சு, சில புதிய செய்திகளை ஜெம்மிடம், தாழ்ந்தக் குரலில் விரிவாக விளக்கி கொண்டிருந்தான்.

தங்ஙள் சென்னை சென்றடைந்ததும், உங்கபையனுக்கு நேரில் வைத்தியம்பார்க்க இருக்கிறாரென்றும், சென்னையில் இறங்க அவர் முடிவு செய்திருப்பதே அதன் பொருட்டுதானென்றும், பையனின் பெயரால் அங்கே வைத்து ஐநூறு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க எண்ணம் கொண்டிருக்கிறார் என்றும் சொன்னான், ஜெம் சந்தோஷப்பட்டார். ரூமுக்குபோன ஜெம், இரண்டாயிரம் டாலர்களையும், அன்னதானத்திற்கென தனியே ஐநூறு டாலர்களுமாக, இரண்டாயிரத்து ஐநூறு டாலர்களை எடுத்துவந்தவர், பக்கர் குஞ்சுவை தனியே அழைத்துதந்தார். "யான் பின்னே ஈ டாலரெ, தங்ஙள் சாபுக்கு 'உண்டியலில்' அனுப்பித்தரும் என்று தனக்குதானே சொல்லிக் கொண்டவனாக அதனை தன் சட்டையின் உள்பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான். கடந்த ஒருவாரமாக தங்கலின் பயணம்பொரு ட்டு, கேரளா இஸ்லாமிய நலச்சங்கத்தை சேர்ந்த பெரியதலைகளிடம், பக்கர் குஞ்சு நடத்திய மெகாவசூல் செய்திகளில் துணுக்குற்ற ஜெம், அதனைநேற்று ஜமா லிடம் கூறி வியந்திருக்கிறார்! லகுவான நேரத்தை மிகச்சரியாய் காசாக்கத் தெரிந்தவனே அசல் வியாபாரியாக இருக்க முடியும்! பக்கர் குஞ்சு அசல் வியாபாரி என்பதில், அவனை அரிந்தவர்களுக்கு எப்பவுமே எள்ளலவு சந்தேகமும் எழாது.

இன்று இரவே தங்ஙள் நாட்டுக்குப் புறப்படயிருப்பதை அறியவந்த கேரள இஸ்லாமிய நலசங்கத்தின் முக்கியஸ்தர்கள், மூன்றுகார்களில் எங்கள் இருப்பிடத்திற்கு எதிரே உள்ள கார் பார்க்கிங்திடலில் குழுமிவிட்டார்கள். தங்ஙள் புறப்படும் தறுவாயில் எல்லோரையும் பார்க்க, சலாம் கூறிவிட்டு, உருக்கமாக ஒரு விசயத்தை ஜெம்மிடம் சொன்னார். "உங்க பையனுக்கு பார்க்கப்படும் மாந்திரீக சிகிச்சைத்தான் என்கடைசி சிகிச்சையாக இருக்கும். இனி என் வாழ்நாளில் யவருக்குமே சிகிச்சை பார்க்க போவதில்லை" ஆப்பரேஷன் செய்த இடத்திலிருந்து தெறித்த வலியோடு, தீர்மானமாக பேசினார். நானும் ஜமாலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டோம்! "பிரசவ வைராக்கியம் மாதிரி" என்றேன். ஜமால் புன்னகையோடு தலையாட்டினான். 'ஏன் இப்படியோர் முடிவு?' யென ஜெம் கேட்கக் கூடுமென்று நினைத்தேன். ஏனோ ஜெம் அதனை கேட்கவில்லை. பொதுவில் அங்கே குழுமியிருந்த அத்தனை பேர்களுக்கும் தங்கலின் 'ரியாத் சங்கடங்கள்' தெரிந்திருந்தபடியால் அவர்களும் அவரது தீர்மானத்தை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. மாறாய், அப்துல்லா அல்-ரவ்வை எரிச்சலோடு சபித்தார்கள்.

'தங்கலின் மனநோவு அரபியை சும்மாவிடாது. கொரைச்ச தெவசத்துல ஐயாளு பிராந்தா அலையும்!'

காரில், தங்கலோடு சென்ற பக்கர் குஞ்சு, ரியாதின் கிழக்கெல்லையில் உள்ள தன் ஸ்தலத்தில் இறங்கிக்கொண்டவனாக, டிக்கட்டையும் பாஸ்போர்ட்டையும் அவ ரிடம் தந்துவிட்டு, தங்கலின் உதவிக்கென பயணிக்க இருக்கும் நண்பர்கள் இருவரிடம், தங்கலை பத்திரமாக விமானம் ஏற்றிவிடும் வரையிலான கட்டளைகள் அத்தனையும் தெளிவாக எடுத்துரைத்தான். "இப்போதுமணி 8.30. அடுத்த நாலுமணிநேரத்தில் ஏர்போர்ட் போய்விடலாம். ராவுல மூணுமணிக்கு பிளைட்டிண்டே டிப்பார்ச்சர்! அங்கே ஏர்போட்டில் வேலைசெய்யும் நம்ம 'சத்தார்பாய்' உங்களை ஒண்ணரை மணிக்கெல்லாம் ஏர்போர்ட்வாயிலில் சந்திப்பார். நீக்கள் தங்கலை அவருடன் உள்ளே அனுப்பிவையுங்கள். நேரமானாலும் விமானம் கிளம்பும்வரை அங்கேயேயிருந்து பின்னர் ரியாத் திரும்பினால் மதி" என்றான். கடைசியாக தங்கலிடம் கை கொடுத்துவிட்டு, ஒரு பணகவரை அவரிடம் தந்து பத்திரமாக பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளச் சொன்னவன், மறக்காமல் தன் பேண்ட் பாக்கெட்டையும் தொட்டுப் பார்த்துக் கொண்டான். இடம் போதாமல் பிதுங்கிய டாலரை உள்ளே திணித்து அழுத்தி கொண்டபடி, "இன்ஷா அல்லா நாளை ராவுல ஒன்பதுமணி அளவில் சென்னைமீனம்பாக்கம் சென்றடைவீர்கள். உங்களை அழைத்துபோக, அகமதுகவுஸ்ன்னு ஒரு கூட்டுக்காரன் வருவான்.ஐஆளு க்கு தங்ஙள்சாபை தெரியும். ஹோட்டலில் ரூம் புக்செய்துண்டு. நம்ம அகமதுகவுஸ் மதராஸில கோடம்பாக்கம்! பெரிய சினிமாகாரனாக்கும்! ஏர்போர்ட்டைவிட்டு வெளிவரும்நேரம் எனக்கு போன்செய்யுங்கள்" என்று கூறிமுடித்தான். தலையசைத்து உத்தரவு பெற்றுகொண்ட தங்ஙள், சிரமப்பட்டு புன்முறுவல் செய்ய,, கார் கிளம்பியது. பாலைவன வயிற்றை கீறிவகுந்து போடப்பட்டிருக்கும் அந்தப் பிரமாண்ட ஹைவேயில் ஒளியை பாய்ச்சியப்படிக்கு கார் விரைந்தது. நேற்றுகாலை, அப்துல்லா அல்-ரவ், ஹாஸ்பிட்டலுக்கு வந்து தங்கலைச் சந்தித்து, "நாளைமாலை நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகலா என்றுவிட்டார்கள். ஹாஸ்பிட்டல் அக்கவுண்ட்டை கிளீயர் செய்துவிட்டேன்." என்றான். தங்ஙள் தலையசைத்தார். நாளை, தான் அல்-கஸிம் போக இருப்பதையும். நூராவின் தலைமுடி மற்றும் அவளது காலடி மண்ணையும் எடுத்துவர முயற்சி செய்யயிருப்பதையும் அவரிடம் சொன்னான். அதற்கும் தங்ஙள் தலையசைத்தார். ரியாத் திரும்ப இரண்டு நாட்கள் பிடிக்கும் என்றவன், வீட்டில் தங்கலை ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டு, கைச்செலவுக்கு பணமும் தந்தவனாய் சலாம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

அப்துல்லா அல்-ரவ், இரண்டுநாள் வெளியூர்பயணம் என்கிறசெய்தி, பக்கர் குஞ்சுவிற்கு உடனே தெரிவிக்கப்பட்டது. அவனும் இப்படியோர் சாதகமான நேரத் தைதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். பாஸ்போர்ட்டின் காலக்கெடு முடிந்திருந்ததை எம்பஸியில் கொடுத்து சரி செய்தாகிவிட்டது. ஊர் திரும்ப பொதுவில் பிரச்சனை ஏதுமில்லை. டெஹரான் ஏர்போர்ட்டை கடக்கணும். அதற்காக வேண்டி, அந்த ஏர்போர்ட்டில் பணியெடுக்கும் தன் நாட்டுக்காரரான சத்தாரிடம் முன்கூட்டியே சொல்லியாகிவிட்டது. மறுநாள் இரவு விமானத்திற்கு, 'டெஹரான்-மதராஸ்' டிக்கெட்டை பக்கர் குஞ்சு புக் செய்தான். ஹாஸ்பிட்டலில் இருந்து நேரே ஜெம் இருப்பிடம், அங்கிருந்து நேரே, தமாம் வழியே டெஹரான்! அப்துல்லா அல்-ராவ் அறியாமல் அவரை ஊர் அனுப்பிவைக்க பக்கர் குஞ்சு திறம் பட காய்களை நகர்த்தியிருந்தான்! அவனது திட்டச் செயல்பாடுகளின் ஸ்திரமும் துரிதமும் மாந்திரீகரான தங்கலையே வியக்கவைத்தது!

மதராஸ் போய் இறங்கி பக்கர் குஞ்சுவிற்கு, தங்ஙள் டெலிஃபோனில் பேசினார். தடங்கலற்ற தன் பயணத்தைச் சிலாகித்து சந்தோஷபட்டார். பக்கர் குஞ்சு, அச் செய்தியினை கேரள முஸ்லீம் நலசங்க நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தான். பின்னர் ஜெம்மிடமும் சொன்னான். தங்ஙள் தனக்கு போன் செய்து நேரடியாக செய்தியைச் சொல்லாததில் அவருக்கு கொஞ்சம் வருத்தம். அது நியாயமான வருத்தமும்கூட. இரண்டாயிரத்து ஐநூறு டாலருக்கு ஒரு வேல்யூ வேண்டாமா?

மதராஸ் வீட்டுக்கு போவதாகச் சொன்ன தங்ஙள், தன்னிடம் விபரம்கேட்டு பேசுவதுதானே முறை?  அப்ப அவர் என்வீட்டிற்கு போகலை! ஜெம்மின் வருத்தம் கிளைத்துகொண்டிருந்தது. சற்றைய நேரத்திற்கெல்லாம் அவ் வருத்தம் பக்கர் குஞ்சுமீது தாவியது. டெலிபோனில் பக்கர் குஞ்சுவிடம் தன் ஆதங்கத்தை கொட்டி னார். அவன் மௌன சாதுவாகிவிட்டான்! மதராஸ்போய் இறங்கிய தங்கலுக்கு எத்தனைவேலையோ? எந்த லட்சாதிபதி, எந்த கோடிஸ்வரியை அடைய அவர றியாமல் அவரை கடத்திக் கொண்டு போனானோ! எங்களது கட்டிடத்தையொட்டி, வடக்குபார்த்த மூலையில் ஒரு கருவேலமரம். நம் நாட்டு கருவேலனல்ல. இது வேறு ரகம்! வாகாய் நெடு நெடுன்னு வளர்ந்து, உயரத்தில் விஸ்தீரணமாய் தன் கிளை பரப்பி, அடுத்தவர்களுக்கு முள்ளுறுத்தல் தராத ரகம்! கீழே அதன் நிழல்படரும் பரப்பெல்லாம், மொட்டு மொட்டான பஞ்சு மாதிரியான மஞ்சள்பூவை உதிர்த்து, மனம் கொண்டவர்களை ஸ்தலம் மிதிக்க ஒட்டாது செய்துவிடும்! பௌர்ணமி முன்னிரவு நேரங்களில், கருவேலன் கிளைப் பரப்பியிருக்கும் விஸ்தீரணத்தின் அடர்ந்த சல்லடைப் பரப்புகளை ஊடுருவி, நிலத்தில்பாயும் சின்னச்சின்ன நிலா வட்டமும், கிளைகளின் நிழல்கோடு களும், மஞ்சப்பூ வெல்வெட் ஸ்தலத்தை இருள் சாயல்கொண்ட பிரமாண்ட நவீனச் சித்திரமாகிவிடும்!

இன்று பௌர்ணமி! மணிஏழு. நானும் ஜமாலும் அந்த ஸ்தலத்தையொட்டிய பிளாட்பாரத்தில் நின்றபடி, இருப்பிடத்திற்கு எதிரேயுள்ள கார் பார்க்கிங் திடலில், வரவிருக்கும் வி.ஐ.பி. ஒருவரின் கார் வரவை எதிர்பார்த்திருந்தோம்.

இந்தப்பக்கம் காலடியில் மனதையள்ளும் சித்திரம்! அந்தப்பக்கம் வி.ஐ.பி. யின் வருகை! நிமிடங்கள் இனம் புரியாத உந்தலில் நகர்ந்து கொண்டிருந்தது. வரும் வி.ஐ.பி. வேறு யாருமல்ல அப்துல்லா அல்-ரவ்தான்! அவன் இப்போது இங்கே நட்போடுவருவதும், ஜெம்மிடம், இன்றுமாலை அவன் டெலிபோனில் உரையா டியதும் புரியாத புதிர்! அவனது இந்த மாற்றமான அணுகுமுறை ரொம்ப யோசிக்க வைத்தது. எப்படி அவன், இப்படி இந்தக் கருவேலமரம் கணக்கா உயர்ந்து, முள்ளுறுத்தா ரகமானான்!? தங்ஙள் இவனிடம் சொல்லாமல் இந்தியா போய்விட்டது அறிந்தும்?

இன்று, வழக்கம்போல பகல் மூன்றுமணிக்கு அலுவலகம்போனதும், நான் வேனில் இருந்தபடிக்கு, மாலைநேர சப்ளைகளுக்கான இன்வாய்ஸுகளை வாங்கிவர ஜமாலை மேலே அனுப்பிவைத்தேன். போனவன் வழக்கத்தைவிட கூடுதல் நேரம் கழித்தே வந்தான். "ஏய்யா லேட்?" இரண்டே இரண்டு இன்வாய்ஸ்களை   தந்தவனாக வேனிலேறிய ஜமால். "பாய் தெரியுமா சேதி? அப்துல்லா அல்-ரவ்விடம் நம்ம ஆளு டெலிபோனில் பேசிக்கொண்டிருக்கிறார்! தங்கலை, கேரள முஸ்லிம் நலச்சங்கத்தார்கள் பதுக்கிவைத்து பாதுகாத்ததையும், நேற்றிரவு அச் சங்கத்தை சேர்ந்தவர்கள் அவரை டெஹரான் வழியே இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததையும், பிரச்சனை எதுவுமறியாது; இடைப்பட்ட நாட்களில், தங்கலை அழைத்து, இங்கே தங்கவைத்து, மகனுக்கு மாந்திரீகம் பார்த்ததாகவும், சொல்லிக் கொண்டிருக்கிறார்! இன்று இரவு ஏழுமணிக்கு வேறு அவனை வரச்சொல்லியிருக்கிறார்!" ஜமால் சொன்னதைகேட்டு எனக்கு குழப்பமேமிஞ்சியது. "அப்படியா?" யென அவனிடம் மீண்டும்மீண்டும் கேட்டவனாக, டிரைவ் செய்துகொண்டிருந்தேன். எப்படி கணித்தாலும், ஜெம்மின் இந்த 'உண்மை விளிம்பித்தனம்' எனக்குப் பிடிப்படவில்லை!

தங்ஙள், மதராஸ்போய் இறங்கி அவருக்கு நேரடியாக டெலிபோன்செய்யவில்லை என்பதிலான வருத்தம், இப்படி அவரை உண்மை விளிம்பியாக மாற்றியிருக் கும் என நான் நம்பவில்லை. அவரது தேர்ந்த வியாபாரசாதுர்த்தியத்தை பின்புலமாககொண்டு கணிக்கலாமென்றால், அது அத்தனைக்கு எளிதில்லை! வியாபார மகாத்மியங்கள் அப்படி! அதில் சந்துப் பொந்துகள் ஏராளம்!

அப்துல்லா அல்-ரவ்விடம் பணியெடுக்கும் இந்தியர்களுக்கான லேபர்கேம்ப் ஒன்று, ரியாத்தின் மேற்கெல்லைப் பார்க்க, மக்கா ரோட்டிலிருக்கிறது. மிகப்பெரிய கேம்ப்! அதற்கு, எங்களது பால்பவுடரை சப்ளைசெய்ய ஜெம் கருதியிருக்கலாம். அதன்பொருட்டு, அவனிடம் சினேகம் பாராட்ட சாதகமாக பேசியிருக்கலாம்! இந்த என் யூகம். சரியென்றுப் பட்டாலும், அதற்காக அவர் இத்தனைக்கு 'உண்மை விளிம்பி' அவதாரம் என்பது அதிகம்! எத்தனைக்கு அனுமானித்தாலும், கணிப்பு எங்கோ இடித்தது.

"உன் மச்சான், ஏனாம் இன்றைக்குப் பார்த்து அதனையெல்லாம் சொல்லணும்?" ஜமாலிடம் கேட்டேன். "அது ஏன்ணு முழுசா புரியலைபாய்! அரபி கஸீமிலி ருந்து காலையில வந்திருக்கான். வீட்டில் தங்கலை காணோம். வழக்கத்தைமீறி பரபரப்பா அவரை தேடியிருக்கான். அவரு கிடைக்கல. அப்புறமா கேரள முஸ்லிம் நலசங்கத்தை விசாரிச்சிருக்கான், அவர்கள் 'தெரியாதென' கையை விரிச்சிருக்கானுங்க, பிறகு நம்ம டமாம்ஹெட் ஆபிஸுக்கு அவன் போன்செய்து, 'உங்க ரியாத் ஆளுங்களோடு பேசனுமுன்ணு' தொல்லை படுத்தியிருக்கான். ஜெனரல்மேனேஜர், நம்ம ஆளுக்கிட்ட அரபி நம்பரைகொடுத்து பேசசொல்லியிரு க்கார். தவிர்க்கமுடியாமல் இவரும்பேசியிருக்கார். ஆனா, என் மச்சான் ஏன் பல உண்மைகளை அரபியிடம், கொட்டினாரென புரியலை பாய்!" என்றான். "சரி, அதான் எல்லாத்தையும் சொல்லிட்டாரில? பின்னே ஏன், அவனை இங்கே வரச் சொல்லியிருக்கார்?" கேட்டேன். "தங்கலுக்கான செய்தி ஒண்ணு இருக்காம், அதை நேரில்வந்து சொல்றதா சொன்னானாம். இவரும் வாவென சொல்லியிருக்காராம்! நம்மை கார் பார்க்கிங் திடலில் அவனை எதிர்பார்த்துநின்று, அழைத்து வரவும் சொல்லியிருக்கிறார்!" என்றான்.

பின்னர் திடுமென நினைத்து கொண்டவனாக, "இன்னொரு செய்தியை உங்ககிட்ட சொல்ல விட்டுட்டேன் பாய்." என்றான். என்ன என்பது போல் அவனது முகத்தை நோக்கினேன்.

"மதியம் என்மச்சான் அரபிகிட்டே பேசிக் கொண்டிருக்கிறபோது, இன்வாஸ்களை பெற்றுவர அக்கெளண்ட்டெண்ட் இஜிப்ஷியனிடம் பேசிக்கொண்டு நின்றேன். அப்போ அவன்கேட்டான், 'தங்ஙள் இந்தியாவுக்கு போய்விட்டாரா?' என்று. நானும் 'ம்..' என்றேன். 'தங்கலுக்கு கொடுத்ததென்று மூவாயிரம் டாலர் கணக்காகி விட்டபடியால், தங்ஙள் ஊர் போய்விட்டதை கன்ஃபார்ம் செய்துகொள்ள' கேட்டதாக சொன்னான். செய்தி புதிதாகயிருந்ததால் குழம்பிப் போனேன். என் குழம்பதை கண்ட அவன், 'ரியாத் பிரான்ஞின் சேல்ஸ் அதிகரிக்க, ஒரு இந்திய மந்திரீகவாதியை கொண்டு மந்திரீம் செய்யப்போவதாக ஜெம் ஹெட்டாபீஸில் பர்மிஸன் வாங்கியது உனக்குதெரியாதா?' என்றான். நான் சுதாரித்துக்கொண்டு 'தெரியும்' என்றவனாக இன்வாஸ்களை வாங்கிக்கொண்டு வந்து விட்டேன்!" என்றான். நான் சிரித்துகொண்டேன். இதெல்லாம் ஜெம்முக்கு சாதாரணம்! அவரது வியாபார நுட்பத்தை தயவு தாட்சணியமற்று நாலாபக்கமும் பயன்படுத்தக் கூடியவர்தான்!

அவர் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்திலிருந்துதானே, அவர் எடுத்துகொள்கிறார்! அதற்கு வேண்டி, ஹெட்டாபீஸுக்கு ஏதோவொரு காரணம் சொல்கிறார்! அவ்வளவுதான்! இதில் எனக்கு எந்தவொரு மனதாங்கலும் எப்பொழும் எழுந்ததில்லை. ஆனால், ஜமாலுக்கு உண்டு. 'அவருக்காக உழைக்கும் நம்மையும் அவர் கவனிக்க வேண்டாமா?' என்பான்.

அப்துல்லா அல்-ரவ், இன்றைக்கு இங்கு வருவதின் சஸ்பென்ஸ் இன்னும் பிடிப்படாத நிலையில், வேலையை முடித்துவிட்டு இருப்பிடம் திரும்பிய நாங்கள், சீக்கிரமாக குளித்து விட்டு, அவனது வருகையில் ஆர்வமானோம். தங்கலுக்கு அப்படியென்ன விசேஷ தகவலை வந்திங்கே சொல்லப்போகிறானாம்!? 'என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை, தங்ஙள் ரியாத்தைவிட்டு ஊர்போய் சேர்ந்தப் பிறகும் கூட, இன்னும் அவர் எங்களைச் சுற்றிச்சுற்றி வலம்வந்தவராகவே இருக்கிறார்!
அப்துல்லா அல்-ரவ்வின் கார், எங்களருகில் வந்துநின்றது. கார் கண்ணாடியையிறக்கி, சாலாம் சொல்லிவிட்டு, பார்க்கிங் திடலில் கொண்டுபோய் காரை நிறுத்தி யவர், சிரித்தபடியே எங்களிடம் வந்து கேட்டார், "வேர் ஈஸ் தங்ஙள்?" நாங்களும் சிரித்தபடிக்கு அப்பாவியாக "தெரியாது" என்றோம். அவன் சிரிப்பு குறையா மல், "ஓ.கே., வேர் ஈஸ் மிஸ்டர்.ஜெம்?" என்றான். "எஸ்... பிளீஸ்" என்று அவனை மேனேஜரின் பிளாட்டுக்கு அழைத்துபோனோம். ஜெம் அப்போதுதான்  வெளியிலிருந்து வந்து கோட்டைக் கழட்டாமல் அமர்ந்திருந்தார். அரபி வாசலில் நிற்கும் செய்தியைச் சொன்னதும், உடனே வெளிவந்தவர், அவனுக்கு சலாம் கூறி, கை குலுக்கி, அரபியன் ஸ்டைலில் அவனோடு முத்தமிட்டுக் கொண்டவராக, வீட்டினுள் அழைத்துப் போனார். இருவரும் நெடுங்காலப் பழக்கம் கொண் டவர்கள் போன்று பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர். தன் இருப்பிடம் வந்தமை குறித்து ஜெம் அவனுக்கு நன்றி சொல்லி சிரித்தார். அரபியும் சிரித்தான். இருவரின் சிரிப்பும் அடங்கி ஓய நேரம் பிடித்தது. ஜெம், அவனுடைய லேபர் கேம்ப் பற்றி பேச்சைத் தொடங்கினார்.

எத்தனை பேர்கள் அங்கே இருக்கின்றார்கள் எனபதைப்பற்றி கேட்டுகொண்டேவந்தவர், 'உங்களது லேபர் கேம்ப்பிற்கு எங்களது பால்பவுடரை நீங்கள் டிரை பண்ணிப் பார்க்கலாமே' என வியாபார நிமிர்த்தமாக, பேச்சை ஆரம்பித்தார். 'அது குறித்து நிச்சயம்பேசுவோம்' என்றான் அப்துல்லா அல்-ரவ். எங்க மேனேஜ ரின் சரளமான ஆங்கிலத்துக்கு ஈடாக, அவனும் பிசிறில்லாமல் ஆங்கிலத்திலேயே பேசினான்.

பால்பவுடர் வியாபார நிமித்தமான பேச்சை ஜெம் தொடங்கிய போது, எனக்கு சிரிப்பு வந்தது. நம்ம கணக்கு தப்பவில்லை என்று நினைத்துக் கொண்டேன். இடையே என்னையும் ஜமாலையும் பார்த்து, ஜெம் ஜாடைகாட்டினார். அவரது விரல்நுணி அசைவுகளின் அர்த்தங்களையும் கற்று தேர்ந்தவர்கள் நாங்கள்!  உடனே உள்ளேபோய் அவரது மனைவி தயாராக வைத்திருந்த குக்கீஸ் பிளேட்டை கொண்டுவந்து அரபி முன்னிருந்த 'டீபாயில்' வைத்தோம். அடுத்து ஸ்வீட் வாட்டர் பாட்டில், கிளாஸ்! சற்று நேரம் எடுத்து டீ! அப்துல்லா அல்-ரவ் எங்களைப் பார்த்து இப்பவும் சிரித்தவனாக, "ரஃபீக்... வேரிஸ் தங்ஙள்?" இப்போது, நாங்கள் பதிலேதும் கூறாமல் புன்னகைத்து, அவன் சிரிப்பை அவனுக்கே தந்தவர்களாக, உள்ளே நகர்ந்தோம். ஆனால், எங்கள் காதுகளை மட்டும் அங்கே  விட்டபடிக்கு.

ஜெம்மின் முகம்பார்த்து, நேருக்குநேர் அவரை அப்துல்லா அல்-ரவ் புகழ்ந்தான். உள்ளிருந்தபடிக்கு சப்தம் காட்டாது சிரித்தோம். எங்களைப் பார்த்து அவரது மனைவியும் சிரித்தது. அரபி, உணர்ச்சி வயப்பட்டவனாக தங்கலை 'கிரேட்' என்றான். 'அவரது மலையாள நண்பர்கள்தான் அவர் மனதை சலனப் படுத்திவிட் டார்கள்' என்றான். 'எஸ் எஸ்' என்றவராக ஜெம் தலையாட்டிக் கொண்டிருந்தார். நான் ஊரில் இல்லாதபோது, தங்கலை அவர்கள் இந்தியா அனுப்பி வைத்தது தவறு என்றான். ஜெம் அதற்கு கூடுதல் அழுத்தம்தந்து 'எஸ்' சொன்னார். திரும்பவும் தங்கலை 'கிரேட்' என்றவன், டீயை எடுத்து அருந்தியவனாக, "ரியாத்தி ற்கு தங்கலை ஏன் அழைத்து வந்தேனென்று தெரியுமா ஜெம்?" என்றான்.

ஜெம் புன்னகைத்தவராக 'தெரியும்' என்று தலையாட்டினார்.

"'எஸ் ஜெம், யூ ஆர் ரைட், என் நூரா எனக்கு வேண்டிதான், அது கைக்கூடத்தான், உதவிக்குதான் அவரை அழைத்துவந்தேன். என் இளம்பிராயத்திலிருந்தே அவள் மீது எனக்கு அப்படியொரு காதல்! என் முதல்மனைவியாக அவளை அடைய நினைத்தேன். அது நடக்கவில்லை. ஆனாலும், அவள் மீதான காதல் என்னிடம் அத்துப் போகவில்லை. அவளுக்கு திருமனம் ஆனபோதே அவளை நான் மறந்திருக்கவேண்டும். அது முடியலை ஜெம்." என்றான்.

மீண்டும் டீயை எடுத்து குடித்துவிட்டு அப்துல்லா அல்-ரவ் பேச துவங்கினான், "நூராவை மனைவியாக அடையநினைத்த தருணத்தில், அதற்குரிய ஆயத்தத் தோடே இருந்தேன். அவளுக்காக, நான் கட்டிய பங்களா அவளை மாதிரியே அழகானது! இப்பவும் அது யாரும் உபயோகப்படுத்தாது இருக்கிறது! அவளை அன்றைக்கு அடையமுடியாது போனபோது, நான் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டேன் என்றாலும், அந்தப் பங்களாவை நான் உபயோகப்படுத்த வில்லை! நூராவோடுவாழ கட்டியதல்லவா அது! அதில் காணும் அத்தனை விலைமதிப்பற்றப் பொருட்களும் என்னை மாதிரியே அவளது வருகைக்காக காத்தி ருக்க விட்டுவிட்டேன். இது அத்தனையும் என் மாமா அறிவார். என் நூராவும் அறிவாள். அறிந்து என்னசெய்ய ஜெம்?"

ஜெம், நெளியத் துவங்கினார். அவனது சங்கடமான ஒரு தலைக்காதலை, அதற்கு அவன் தரும் அழுத்தத்தை அவர் அறியவிரும்பவில்லை என்று தோணியது. இப்படி அசூயைபார்க்காமல் மூன்றாம்நபரிடம் தன்னை கவிழ்த்துக் கொட்டுவேன் என்று ஒருவன்நின்றால் எப்படி? இதுவொரு மாதிரியான பைத்திய லட்சணம் கொண்ட மனநிலை! அவனது மாமன் மகள் நூரா, இவனைத் தவிர்த்தது ஒதுக்கியதிலும், தங்ஙள் இவனிடமிருந்து தப்பித்தோடியதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

அவனது செய்திகளிடமிருந்து தப்பிக்கும் விதமாக, ஜெம் பேச்சை மாற்றினார், "யா ஷேக், அன்றைக்கு நூரா யாரை திருமணம் செய்துகொண்டாள்?" "அவள், அவளது ஊரான கஸீமில்வாழ்ந்த பிரபலமான ஃபுட்பால் விளையாட்டுக்காரன் ஒருவனைவிரும்பி, மூன்றாம் மனைவியாகிப் போனாள்! எங்கநாட்டு 'ஃபுட்பால் கிரேஸி'யை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்! அந்த விளையாட்டின்மீது அவளுக்கு அப்படியொரு ஈர்ப்பிருந்திருக்கிறது. எதனையும் யோசிக்காமல் அவனை திருமணம் செய்துகொண்டாள். அவள் விரும்பி நடந்த திருமணம் அது!"

இடையில் சற்று பேச்சை நிறுத்தி, கண்களில்துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டவனாய், அப்துல்லா அல்-ரவ் தொடர்ந்தான், "அவளை திருமணம் செய்து கொள்ள இருந்த ஆர்வத்தில், அன்றைக்கு அதிகத்திற்கும் உழைத்தேன் ஜெம்! லாபத்தை இறைவன் எனக்கு கொட்டிக் கொடுத்துக் கொண்டேயிருந்தான். இன் றைக்கு ரியாத்தில் எனது கிளினிங் காண்ட்ராக்ட் கம்பெனிதான் மிகப் பெரிசு! ஜித்தா, மக்கா, மதினாவிலும் இதன் கிளைகள் இருக்கிறது! இது தவிர, சௌதி முழுமைக்குமான 'Sony' ஏஜென்ஸி என்னிடம்தான் இருக்கிறது! எது இருந்து என்னசெய்ய? என் நூரா எனக்கு அப்போ கிடைக்காமல்தானே போய்விட்டாள்! என்றாலும், இறைவன் என் பக்கம்தான் இருந்தான்! ஆறுமாதத்திற்கு முன், அந்த ஆட்டக்காரனிடமிருந்து நூரா மணவிலக்குபெற்றாள். அதுவறிந்து என்னிடம் மகிழ்ச்சி துளிர்விட, இரண்டு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் நூராவை அடையும் முயற்சிகளில் இறங்கினேன். இப்போதேனும் அவளை திருமணம் செய்து கொண்டே தீருவது என்கிற எண்ணம் நாளுக்குநாள் என்னுள் வலுபெற தொடங்கியது. பம்பாய் போகுமுன் என் மாமாவிடம், நூராவை திருமணம் செய்து கொள்கிற என் விருப்பத்தை முறைப்படிக்கு தெரிவித்தேன். 'பொறுபார்க்கலாம்' என்றுவிட்டு சிரித்தார், தவிர, சம்மதம் சொல்லவில்லை."

"நூராவை நெடுங்காலமாக விரும்புகின்றீர்கள். அந்தப் பெண்ணுக்காக பேலஸ்கூட கட்டி வைத்திருக்கின்றீர்கள். உங்கள் அந்தஸ்த்துக்கும் குறைவில்லை. இப் போது நீங்களொரு மில்லியனர்! பிறகு ஏன் உங்கள் மாமா சம்மதம் சொல்வதில் இத்தனை தயக்கம்?" நான் வியந்து துணுக்குறும் அளவுக்கு, ஜெம் அவனிடம் மிகச் சரியாகவே கேட்டார்.

அப்துல்லா அல்-ரவ் எச்சிலைவிழுங்கியவராக, மெல்லப் பேசத் துவங்கினான். கஸீம் பக்கமுள்ள, 'பிரின்ஸ்' வம்சத்து பையனொருவன், நூரா அழகை கேள்விப் பட்டு, தன் நாலாம்மனைவியாக அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினானாம். தகவல் அறியவந்த என் மாமா, அதனை விரும்பவும் செய்தார்.அவரு க்கு வேறுவழியுமில்லை. பிரின்ஸ் வம்சத்துக்காரர்களின் கோரிக்கையை எவரும் தவிர்க்கமுடியாது. அது கூடவும்கூடாது. அதனாலேயே, அதனை எதிர்ப்பார்த்த வராக எனக்கு அவர் சம்மதம் சொல்லவில்லை." என்றான்.

"ஓ...." ஜெம் நீட்டி முழங்கி, அவனுக்கான அனுதாபத்தை வெளிப்படுத்தினார்!

"எஸ்.. ஜெம், அதன் பிறகுதான் நான் ரொம்பவும் குழம்பிப்போனேன். இப்போதும் எனக்கவள் கிடைக்காமல் போய்விடுவாளோ என்கிற பயம் கூடுதலாகிப் போனது. அதன்பொருட்டுதான் தங்கலின் உதவி கட்டாயம் என்றானது. அவரை, ஒரு நண்பன் உதவியோடு பம்பாயி வைத்து, சம்மதிக்கசெய்து அழைத்தும் வந்தேன். தங்கலும் எனக்காக மிகுந்த ஈடுபாடுகளோடு காரியம் ஆற்றினார். 'நூராவின் மனம் என்னை நாடவும், பிரின்ஸ் வம்சத்து விருப்பம்  அறுபடவும்' அவர் பலஇரவுகள் கண்விழித்து மாந்திரீகம் செய்ததை நான் அறிவேன். என் இடுப்பில் அவர்கட்டிய தாயத்தின் சக்தியை, அத்தருணத்தில் நான் முழுமையாக  உணராது போனாலும் சிலநாட்களிலேயே முழுமையாக உணர்ந்தேன். அந்தத் தாயத்துதான் எத்தனை சக்திவாய்ந்தது! அவர்தான் எத்தனை சக்தி வாய்ந்தவர்!"
அப்துல்லா அல்-ரவ் கொஞ்சநேரத்திற்கு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். கிளாஸ் டம்ளரில் ஜெம் தந்த தண்ணீரை அருந்தியவராக, "நேற்றும் அதற்கு முந்தியநாளும் நான் கஸீம் போயிருந்ததை ஜெம் அறிந்திருக்கக்கூடும். அடுத்தகட்ட மாந்திரீகம் பொருட்டு, தங்ஙள் என்னிடம் நூராவின் தலைமுடி சிலவும், அவளது காலடிமண் கொஞ்சமும் கேட்டிருருந்தார். எப்படியாவது அதனை கொண்டுவர வேண்டும் என்கிற நோக்கத்துடன் அங்கு சென்றிருந்தேன்.என் மாமா வீட்டிற்கு நான் சென்ற போது, சற்றும் எதிர்பாராதவிதமாக, மாமாவும், நூராவும் என்னை வரவேற்றார்கள். சகஜமாக பேசவும்செய்தார்கள். முந்தியப் பொழுதெ ல்லாம் நான் கஸீம்சென்று அவர்களை காண்கிறபோது, கிட்டாத வரவேற்பு அது! அந்தநிமிடங்களில் தங்ஙள்தான் என்கண்முன் தோன்றினார்! இடுப்பில் அவர் கட்டிய தாயத்தை தொட்டுப்பார்த்தேன்! இத்தனை மகிமையா அதற்கு? யோசித்துகொண்டிருந்த போது, இன்னொன்றும் நடந்தது ஜெம்!"

சும்மாவேணும் வியந்தவராக காட்டிகொண்டு " ஆஹா... அப்படியா?" என்றார் ஜெம்.

"என் மாமா என்னை தனியே அழைத்துப் போய், "நூரா உனக்குத்தான் என்றார். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல்போனது. கண்களில் கண்ணீர் வந்து விட்டது. இறைவனுக்கு நன்றி கூறியவனாக, தங்கலுக்கும் நன்றிசொல்லி நெகிழ்ந்தேன். அன்று மாலை கஸீம் கடைவீதிக்கு நூராவை அழைத்துபோய், அவள் விரும்பிய ஆபரணங்களையும், ஆடைகளையும் வாங்கிக் கொடுத்தேன். திருமணத்திற்கான 'மஹராக' பெரிய தொகை ஒன்றை செக் எழுதி என் மாமாவிடம் பணிவுடன் தந்துநின்று, நூராவுக்கும் எனக்குமான திருமணத்தை உறுதிசெய்துவிட்டு வந்திருக்கிறேன் ஜெம்!"

மிகுந்த உற்சாகம்கொண்டு உரத்தக்குரலில் வாழ்த்திய ஜெம், "யா சேக், நூராவை மணக்கவிரும்பிய அந்த பிரின்ஸ் என்னவானான்? தொடர்ந்தும் அவன் முயல வில்லையா என்ன?" மீண்டும் எங்க ஜெம்மின் சரியானதோர் கேள்வி!

அப்துல்லா அல்-ரவ் பலமாகச் சிரித்தான், சிரித்துவிட்டுசொன்னான், "அதான் முன்னமேயே சொன்னேனே! அவன் பிரின்ஸாக இருக்கலாம், இறைவன் என் பக்கம்தான் என்று! தங்ஙள், எனக்கு தாயத்துகட்டிய அதே நாளில்தான் அந்தப் பிரின்ஸ் 'துனிஸியா'வில் ஒரு மாடல் அழகியை திருமணம் முடித்திருக்கிறான். இப்போ கஸீம் போயிருந்தபோதுதான் இச்செய்தியை அறியவந்தேன்" என்றான்.

எங்க மேனேஜர் கலகலவென சிரித்தபடி, அப்துல்லா அல்-ரவ்விற்கு கைகொடுத்து, மீண்டும் ஒருமுறை வாழ்த்து சொன்னார். ஒரு பெரிய வியாபாரம் படியப் போகிறதென்று மனதில் தோன்றினால்தான் எங்க மேனேஜர் இத்தனை தாராள சிரிப்பைச் செலவிடுவார். அவர் கணக்கு தப்பியதேயில்லை. ஒரு பெரிய ஆர்டர் கிட்டிவிடும் என்று என் பட்சியும் சொன்னது. சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருந்த அப்துல்லா அல்-ரவ், இன்னொரு கப் டீ கேட்டான். அவனது ஆர்வ மான பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அவனுக்கு டீ எடுத்துபோன நான், அப்துல்லா அல்-ரவ்வை நேர் பார்த்து வாழ்த்து சொன்னேன். அவன் சிரித்துகொண்டே என்னை தட்டிக் கொடுத்தான்.

அங்கே எல்லோருக்கும் அவன் சார்ந்த இறுக்கம் தளர்ந்த மாதிரி இருந்தது. தனது இடது கரத்தை திருப்பி மணியைப் பார்த்தவனாக, அப்துல்லா அல்-ரவ் சொன்னான், "எனக்கு இன்னொரு வேலை இருக்கிறது.  போயாகணும்; ஜெம், நான் கஸீமிலிருந்து எத்தனை மகிழ்ச்சியில் வந்திருப்பேன் என்பதை இப்போது உங்களால் உணர முடியுமென நினைக்கிறேன். தங்கலிடம் கஸீம் செய்திகளை சொல்லவும்தான் நான் எத்தனை ஆர்வம்கொண்டிருப்பேன்! சரியான தருணத்தில் தங்ஙள் இங்கே இல்லாதுபோனதில் நான் கொண்ட தவிப்புகள் கொஞ்சமல்ல! அதனால்தான் என்னவோ அத்தனை செய்திகளையும் ஜெம்மிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்! என்னிடம் எல்லா உண்மைகளையும் நீங்கள் டெலிஃபோனில் சொல்லவில்லை என்றால், தங்கலை இன்னும் நான் தேடியவனாகவே இருந்திருப்பேன். அவரை நேரில் பார்த்து நன்றி கூறி மரியாதை செய்யவேண்டு மென கஸீமிலிருந்தே நினைத்துகொண்டு வந்தவன் நான்! ஓ.கே. மிஸ்டர் ஜெம், தங்கலுக்கான என் நன்றியாக, கொஞ்சம் பணம்தருகிறேன். அதனை அவருக்கு அனுப்பிவைத்து விடுங்கள்" என்று கூறியபடி, தன் ஹேண்ட்பேக்கிலிருந்து ஆயிரம் ரியால் நோட்டுக்கத்தை ஒன்றை எடுத்து ஜெம்மிடம் தந்தான். கலகலவென சிரித்தபடி ஜெம், அந்தப் பணத்தை தன் கோட் உள்பாக்கெட்டில் திணித்துகொண்டப்படி, "இதனை 'உண்டியலில்' நாளை நான் தங்கலுக்கு அனுப்பிவைப்பேன்" என கூறி கொண்டே, மீண்டும் கோர்ட் உள்பாக்கெட்டை அலட்சியமாக தொட்டும் பார்த்துக்கொண்டார்.

ஜெம்மிடம், அவர் அறியாமல் நான் பயிலும் .'B.B.A' -வில், இன்றைக்கு - இப்போது - முக்கியமான பாடம் ஒன்று பயின்றதாக உணர்ந்தேன். நிகழ்வுகளை மனதில் வரிசைகிரமமாக குறித்தும் வைத்துக் கொண்டேன்.

"சந்தோஷம் ஜெம்" என்று சிரித்தப்படிக்கு எழுந்தவன், மீண்டும் அமர்ந்து, பேக்கை திறந்து, செக் புக்கை எடுத்து, செக் ஸ்லீப் ஒன்றினைக் கிழித்து, அதில் கையெழுத்துமிட்டு, பணம் பூர்த்திசெய்யப்படாத செக் ஸ்லீபை எங்க மேனேஜரிடம் தந்தான். 'எதற்கு இதுவென?' முகம் பூத்த ஜெம், கண்களால் கேட்டார்! "நூற்றிஐம்பது மில்க் பவுடர் கார்ட்டூன்களுக்கான தொகையை நிரப்பிக்கொள்ளச் சொன்னவனாக, கேம்ப் இருக்குமிடத்தின் விபரம் சொல்லத் தொடங்கினான். அப்துல்லா அல்-ரவ்விடம், 'கேம்பை நான் அறிவேன்' என்றேன். 'ஓ.கே.' என்றவனாக எல்லோரிடமும் விடைபெற்றபடி காரை நோக்கி விரைந்தான். நானும் ஜமாலும் மரியாதை நிமித்தமாக அவனோடு சென்று, கார் கதவை திறந்துவிட்டப்படி வழியனுப்ப நின்றோம். காரிலேறி அமர்ந்தவன், எங்கள் இருவரையும் அழைத்து, ஆயிரம் ரியால் நோட்டு இரண்டை தந்து, "ஐயாம் ஹாப்பி ரபீக்" என்றவனாக சிரித்தான். ரூராவோடு கல்யாணம் எனும் சந்தோஷம் அவன் மேனியெல்லாம் புரண்டு மினுத்தது! அதனைப் பெற்றுக்கொண்ட நாங்கள், நன்றி கூறியவர்களாக கையசைக்க, அவன் கார் புறப்பட்டது.

கார் பார்க்கிங் ஏரியாவில் நானும் ஜமாலும், 'அப்பாடா'வென ஓய்ந்து நின்றபடிக்கு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம். தலைக்கு மேலே நிலவு, பௌர்ணமியாக ஜொலித்தது! அந்த ஏரியாவே ஒளியால் நிரம்பிமிளிர்ந்தது. ஜெம் பிளாட்டின் வாசலில் பளீச்சென்று அப்படியோர் ஒளி! எங்கள் கைகளில் இருந்த ரியாலை பேண்ட்பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக்கொண்டவர்களாக, தங்கலின் மாந்திரீககீர்த்தியை மெச்சியபடிக்கும், வியந்தபடிக்கும் முகம் கொள்ளாத சிரிப்போடு எதிரே நடந்தோம்.

நன்றி : தாஜ் | •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

நன்றி: பதிவுகள்.காம் 23 April 2014

http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2075:2014-04-23-09-43-08&catid=49:2013-02-12-01-41-17&Itemid=63

 

 

•Last Updated on ••Tuesday•, 22 •January• 2019 01:38••  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.39 MB
Application afterInitialise: 0.023 seconds, 2.37 MB
Application afterRoute: 0.029 seconds, 3.12 MB
Application afterDispatch: 0.096 seconds, 6.41 MB
Application afterRender: 0.178 seconds, 7.61 MB

•Memory Usage•

8048728

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '5psklmo6hod2376juq458vmas7'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1714600122' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '5psklmo6hod2376juq458vmas7'
  4. INSERT INTO `jos_session` ( `session_id`,`time`,`username`,`gid`,`guest`,`client_id` )
      VALUES ( '5psklmo6hod2376juq458vmas7','1714601022','','0','1','0' )
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 0)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 4919
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-05-01 22:03:42' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-05-01 22:03:42' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='4919'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 10
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-05-01 22:03:42' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-05-01 22:03:42' )
      ORDER BY a.ordering
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 0 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 0
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 0
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-05-01 22:03:42' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-05-01 22:03:42' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- சீர்காழி தாஜ் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- சீர்காழி தாஜ் -=- சீர்காழி தாஜ் -