பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

தேவகாந்தன் பக்கம்

தொடர் நாவல்: கலிங்கு (2006 -5)

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


5

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

அன்று குணாளன் வரும்போதே திரும்புவதற்கான வேகத்தையும் அவனது நடை கொண்டிருந்ததை சங்கவி கண்டாள். சம்பூரிலே ஆகஸ்டு 28, 2006இல் புலிகளுக்கும் அரச படைகளுக்குமிடையில் பயங்கரமான சண்டை தொடங்கியிருந்தது. புலிகளின் கையிலிருந்த சம்பூர் எப்போதுமே திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு எறிகணை வீச்சால் ஆபத்தை விளைக்கக்கூடிய வாகுவில் அமைந்திருந்ததை அவர்கள் கண்டிருந்தார்கள்.  மாவிலாறு வெற்றியின் பின் சம்பூரைக் கைப்பற்ற மும்முனைத் தாக்குதலில் இறங்கியிருந்தன இலங்கை அரச படைகள். யுத்தம் தொடங்கி ஆறுநாட்களாகியும் வெற்றி தோல்வியற்ற சமச்சீரில் போர் தொடர்ந்துகொண்டிருந்தது. ஒருபோது பாச்சனூரிலுள்ள புலிகளின் காப்பரணை அரச படைகள் தகர்த்துவிட்டதாக தகவல் வந்தது. இறுதியில் சம்பூரை செப்ரெம்பர் 4இல் கைப்பற்றி இலங்கை ராணுவம் அங்கே நிறுதிட்டமாய் முகாமமைத்தது.

வன்னியில் அதனாலான நிலைகுலைவு வெளியாய்த் தெரிந்தது. மேற்கொண்டு வாகரைமேலான தாக்குதலுக்கு ராணுவம் ஆயத்தம் செய்வதான செய்தியறிந்த மக்கள் குலைந்துபோயிருந்தனர். வன்னியில் அதன் தாக்கங்கள் எல்லைகளில் இயக்க எல்லைக் காவலர்களின் மரணங்களாக விளைந்துகொண்டிருந்தன. அம்பகாமம் காட்டுக்குள்ளாக வந்துகொண்டிருந்த ஆறு விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் சடுதியான தாக்குதலில் பிணங்களாக வீழ்த்தப்பட்டமை, மூன்று நான்கு நாட்களின் முன்னர் போராளிகள் செல்லிடம் வந்து சேராத தகவலில் தேடுதல் நடத்தியபோது தெரிய வந்தது. முதல்நாள்தான் அவர்களது வித்துடலின் விதைப்பு  முறிப்பு மாவீரர் துயிலுமில்லத்தில் சகல இயக்க மரியாதைகளுடனும் நடைபெற்றது.  இவ்வாறான  நேரத்தில், குணாளன்  மறுபடி கிளம்புவானாகில்,  கிளம்புகிற நேரத்தில் எதுவும் கேட்கப்படாதென அவன் சொல்லியிருந்தானெனினும், அவளால்  விட்டுவிட முடியாது. முகம் கழுவி உடுப்பை மாற்றிக்கொண்டு அவன் அவசரமாகத் திரும்ப தயாரானான்.

•Last Updated on ••Wednesday•, 20 •January• 2021 22:59•• •Read more...•
 

‘ஃபனி போய்’: நாவலும் சினிமாவும்

•E-mail• •Print• •PDF•

‘ஃபனி போய்’: நாவலும் சினிமாவும்எழுத்தாளர் தேவகாந்தன்கடந்த டிசம்பர் 04 2020இல் CBC Gem இல் தீபா மேத்தாவின் ‘ஃபனி போய்’ சினிமாவின் கனடா தழுவிய காட்சிப்படுத்தல் நிகழ்ந்தது. நான் பார்த்தேன். ஆயினும் கணினியில் பார்த்ததில் அது போதுமான விகாசம் கிடைத்திருக்கவில்லை. அதனால் மீண்டும் Shyam Selvadurai யின் Funny Boy நாவலுக்குள்ளும் சினிமாவுக்குள்ளும் புகுந்து வெளியேறினேன்.

நாவலினூடு சினிமாப் பிரதியின் பிரவேசம் அவ்வளவு அவசியமில்லையென முன்பெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் பிரச்னை எழுந்துள்ள இந்தச் சூழ்நிலைக்கு அது அவசியமென்று பட்டது. ஏனெனில் ஒரு நாவலை சினிமா ஆக்குவதென்பது தழுவி எழுதுதல், அதன் பாதிப்பில் எழுதுதல், அதன் பிடித்த ஒரு பகுதியை மய்யமாக்கி மற்றவற்றை தான் புதிதாய்ப் புனைந்தேற்றல் என பல வழிகளும் தளங்களும் கொண்டது. ஆக, சினிமா நாவலை எவ்வளவு தூரம் சுவீகரித்துள்ளது என்பது சினிமாவின் ஆன்ம தரிசனத்தின் ஒரு நிலையை அறிய உதவியாயிருக்கும். ஆயினும் நாவலின் சுவீகரிப்பு எவ்வளவாயிருந்தாலும் அதன் கணிப்பு சினிமாவின் தன்மைகளைக் கொண்டே அமையவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கூடா. அதைக் கணிக்க சினிமாபற்றிய அலகுகள் தனியாகவே உள்ளன.

என் வாசிப்பும் காட்சியும் முடிந்து நான் திரும்புவதற்குள் தமிழ்ப் புலத்திலும். ஆங்கில பத்திரிகை உலகத்திலும், பிற ஊடகங்களூடாகவும் முடிந்தளவு வலிமையாக துருவ முரண் எல்லைகளில் அச் சினிமாபற்றிய அபிப்பிராயங்கள் சொல்லப்பட்டு விட்டிருந்தன.

‘ஷ்யாம் செல்வதுரையின் அர்த்தபூர்வமான தளங்களும், தீபா மேத்தாவின் அவற்றின் காட்சிப்படுத்தல்களும் மிக வலிமையாக சினிமாவில் வெளிப்பட்டுள்ளன’ என்பதான Andrew Parker இன் The Gate இல் வெளியான விமர்சன அபிப்பிராயம் மிக முக்கியமானதென்கிறார்கள் திரை விமர்சகர்கள். அது பின்னால் வந்த விமர்சனங்களை நெறிப்படுத்தியது என்ற குற்றச்சாட்டும் உடனடியாகச் சொல்லப்பட்டது. Los Angeles Times இன் Tracy Brown, National Post இன் Chris Knight, The Global and Mail இன் Tina Hassannia வின் கருத்துக்களும் ‘ஃபனி போய்’ சினிமாவை நிறுதிட்டமாக உயர்த்தி வைத்தியிருக்கின்றன. போதாததற்கு TIFFஇன் ஆண்டின் சிறந்த பத்து படங்களுள் ஒன்றாக இது தேர்வாகியும்விட்டது.

எப்போதும் துருவ முரண்களின் அபிப்பிராயங்கள்போலவே நடுநிலைக் கருத்து வெளிப்படுத்துகைகளிலும் ஒருவரின் அரசியல் பொருணிலை பண்பாட்டுக் கூறுகள் உள்ளன என்பது ரோலன் பார்த்தின் பின்அமைப்பியல் வாதம். இரு துருவ நிலைகளும், நடுநிலையும்கூட, அரசியல் காரணப் புலங்கள் கொண்டவை.

•Last Updated on ••Tuesday•, 29 •December• 2020 23:52•• •Read more...•
 

தொடர் நாவல்: கலிங்கு (2006 -4)

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


4

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

தயாநிதி உள்ளே எதற்கோ பிள்ளைகளோடு கத்திக்கொண்டிருப்பது நாகாத்தைக்கு கேட்டது. கலாவதியைத்தான் கொஞ்சநேரமாகக் காணவில்லை. கிணற்றடியில் கப்பிச் சத்தம்  ஒலிக்க,  கிணற்றடியில் நிற்கலாமென எண்ணிக்கொண்டாள்.  திண்ணையில் வந்தமரும் போதே நாகி வெற்றிலைப் பெட்டியையும் கொண்டுதான் வந்திருந்தாள். பெட்டியுள் கிடந்த வாடிய வெற்றிலையை எடுத்து துடைத்து பதனமாக வைத்துக்கொண்டு பாக்குவெட்டியும் பாக்கும் எடுத்தாள். வலது கையில் சாய்த்துப் பிடித்திருந்த பாக்குவெட்டி, கோலிய இடது கையில் பாக்குப் பிளவுகளைச் சீவி விழுத்திக் கொண்டிருக்கையில், மனம் அமுக்கத்திலிருந்து விடுபட்டு விரியத் துடித்துக்கொண்டிருந்தது. அவசரமாக வெற்றிலையை எடுத்து, சுண்ணாம்புக் காரல்களைக்  டப்பாவிலிருந்து கொட்டி, பாக்கும் சேர்த்துச் சுருட்டி வாயில் அதக்கினாள். வெடித்து அழுவதற்குள் அதை அவள் செய்தே ஆகவேண்டியிருந்தது. யோசிப்புக்கான சில குடும்ப விஷயங்கள் சிலகாலமாக அவளது மனத்திலே படைபோட்டு இருந்திருந்தவேளையில், சம்பூரில்  புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்குமிடையிலான யுத்தம் தொடங்கி அதைப் பின்போடும்படி செய்துவிட்டது. அது கிழக்கிலேதானே, வன்னிக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாமென நினைத்த சிலரைப்போல அவளாலும் நினைத்திருக்க முடியவில்லை. அது அவளது குடும்பத்தோடும் சம்பந்தப்பட்டது. அப்போது தமிழீழத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்துப் பேரோடும் சம்பந்தப்பட்டது. விரும்பியும் விரும்பாமலும். அதனால்தான் மறுபடி எல்லாவற்றையும் மனப் படையுள் போட்டுவிட்டு வேறு திசைகளில் கவனத்தைத் திருப்பினாள். இரண்டு நாட்கள் கூலிவேலைக்கும்  போய்வந்தாள். குடும்பத்துள் நிகழும் விஷயங்கள்  மெல்ல அறியவந்தபோது அவளை  நடுங்கவே வைத்துவிட்டன. அதன் பின்னால் கலாவுடன் நடந்த சம்வாதம் மேலும் அவளை  உடைத்துவிட்டிருந்தது. பிடிவாதமாய் இனிமேலும் தன் இறுகிய மௌனத்தைத் தொடர்வது சாதுர்யமாய் அவளுக்குத் தென்படவில்லை. அவள் யோசித்தாகவேண்டும். அவதானமாக. இல்லாவிட்டால் குதிர்ந்திருக்கும் பிரச்னைகளை அவளால் தன் வழியில் இழுத்து அடக்கமுடியாது போய்விடும். ஏறுமாறாக நடக்கக்கூடிய கலாபோன்றவர்களின் விஷயங்களில் அது இன்னுமின்னும் முக்கியமானது.

கடைவாய் புண்ணாகிவிட்டிருந்ததில் இனி வெற்றிலை சப்புவதில்லையென்ற முடிவோடு, வெற்றிலைப் பெட்டியைக் கொண்டுபோய் அறை மூலையுள் போட்டுவிட்டு இரண்டு நாட்களாக அதன் நினைப்பையே மறந்துதிரிந்தாள். பிறகு வாய் சுணையெடுத்து எதையாவது செய்யென உழைந்துகொண்டிருக்க, இரண்டு வெறும் பாக்குப் பிளவுகளை  வாயில்போட்டு நன்னிக்கொண்டு திரிந்தாள்.  ஆனால் இனி அப்படியிருக்க  சாத்தியமில்லை. சமீபகாலமான  கலாவின் நடவடிக்கைகள் குறித்து அவளுக்கு அவ்வப்போது ஐமிச்சங்கள் எழுந்துகொண்டுதானிருந்தன. தாயாகியதாலேயே அந்த விஷயங்களை மகளிடம் கேட்கமுடியாமலும், அதனாலேயே அதை அவளிடம் நிர்ப்பந்தமாய்க் கேட்கவேண்டியவளுமாய் இழுபறிப்பட்ட பிறகு, நான்கு நாட்களுக்கு முதல் படலையைத் திறந்துவிட்டு கலா ஏமிலாந்தியபடி அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருக்கையில் தானே அவள் கிட்டப்போய், ‘நானும் அப்பப்ப கண்டிருக்கிறன். ஆர், கலா, அந்தப் பெடியன்? உன்னோட நல்ல பழக்கம்போலயிருக்கு?’ என தன்மையாய்க் கேட்டாள். ‘கிளிநொச்சி ஆஸ்பத்திரியில கண்டு பழக்கமம்மா’ என்று சொல்லிவிட்டு முகத்தை அப்பால் வெட்டித் திருப்பி ‘அவ்வளவுதான். இனியொண்டும் கேட்டு நச்சரிக்காதயுங்கோ’ என்பதை கலாவதி உணர்த்திவிட்டாள். அவள் மெய் சொல்லவில்லையென்று நாகிக்குத் தெரிந்தது. பெடியனின் பேச்சு மட்டக்கிளப்பு வழக்கிலிருக்கையில், கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் சந்தித்ததாய்ச் சொன்னது அவளின் மனத்தில் ஐயுறவைக் கிளப்பியது. அதற்குச் சாத்தியமிருந்தும் ஐயுறவு ஏற்படுவதை நாகியால் தடுக்கமுடியவில்லை.  நாகி திரும்பிவிட்டாள். அது ஒன்றேயாயிருந்தால் அந்தளவில் அவள் விட்டிருக்கக்கூடும். முதல் நாள் காலையில் ஆட்டுக்கொட்டில் பக்கமாய் அடக்கியடக்கி ஓங்காளித்துக் கேட்டது. குடலை வெறுமையாக்குகிற அத்தகைய ஓங்காளிப்பை, ஒவ்வாமையும் சமிபாடின்மையும் போன்ற காரணங்களில் வருகிற ஓங்களிப்பிலிருந்து அனுபவம் கண்டுபிடித்துவிடும். கள்ளனைப் பிடிக்கப்போல் பாய்ந்தோடாமல், மெல்ல எழுந்து  நாகி போகிறவரையில், கலாவதி கிணற்றடிக்குப் போய்விட்டாள். நாகி கிணற்றடிக்குப் போனாள்.

•Last Updated on ••Friday•, 11 •December• 2020 11:23•• •Read more...•
 

தொடர் நாவல்: கலிங்கு (2006 -3)

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


3

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

அன்று காலை அவிழ்ந்து தாழ விரிந்திருந்த கூந்தலை அள்ளி குடும்பி போட்டபடி அறையிலிருந்து தயாநிதி வெளியே வந்தபோது, கலாவதி கிணற்றடியில் ஒரு நிழல்போல நின்றிருந்தது தெரிந்தது. நிழலின் திடமற்றவையாக செயல்களும். நாகி அடுக்களையிலிருப்பது, அடுப்பிலிருந்து கணகணத்து எழும் நீலப் புகை கூரையினூடாகவும், மட்டை வரிச்சுகளுக்கூடாகவும் பிதுக்கித் தள்ளிக்கொண்டிருப்பதில் அறியமுடிந்தது.

அவள் படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வரும்போதே, கலாவதி வழக்கமாக படுக்குமிடத்தில் பார்வையை உன்னித்திருந்தாள். படுத்திருந்ததின் மெல்லிய அடையாளங்களே தென்பட்டன. கலாவதி இரவு நெடுநேரம் அங்கே படுத்திருக்கவில்லையான எண்ணம் அவளது மனத்தில் ஊன்றியது. அவளிடம் கேட்கவேண்டும் எச்சரிக்கையாகவென எண்ணிக்கொண்டாள். இல்லாவிட்டால் கரடிக்குட்டிபோல் பாய்ந்துவிடுவாள்.  அப்போது வெளிக் காட்சிகளும் மனத்தை சஞ்சலம் செய்பவையாயே தோன்றிக்கொண்டிருந்தன. தயாநிதிக்கு குழப்பமாக இருந்தது. வீதியில் இயல்பான ஜன நடமாட்டம் ஆரம்பித்திருந்தது. ஆனால் நடமாடியவர்கள்தான் இயல்பில்லாமல் இருப்பதாகத் தோன்றியது. ஏறக்குறைய இரண்டு வருஷங்களுக்கு முன், 2004இல், கிழக்கில் எழுந்திருந்த இயக்கப் பிரச்னைக் காலத்தைப் போன்றதாகவே அது பெரும் அவலத்தோடும் இருந்ததாய்ப் பட்டது. அந்த 2004இன் ஒரு காலையை சோம்பலோடு மனத்தில் விரித்தெடுத்தாள் தயாநிதி.

•Last Updated on ••Friday•, 11 •December• 2020 09:52•• •Read more...•
 

தொடர் நாவல்: கலிங்கு (2006 -2)

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


2

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

மேங்களால் மூடுண்டு கிடந்தது சந்திரன். மெல்லிய வெளிச்சம் ஊடுருவியிருந்த அந்த இரவில் பெருமர இலைகளும் கலைக்காத நிசப்தம் செறிந்திருந்தது. பவனம் அசைவறுத்திருந்து அமுக்கமாய்த் திணிந்திருந்தது. தென்கிழக்கிலிருந்து பரந்துவந்த கரிய மேகங்கள் துவைக்கப்போட்ட துணிக் கும்பல்போல் திணிந்து கிடந்தபடி மெதுவாக வடதிசைநோக்கி ஊர்ந்துகொண்டிருந்தன.

இரவு எப்போதும்  கிளர்ச்சி தருவதாக  இருந்து வந்திருந்தது கலாவதிக்கு. சின்ன வயதிலிருந்தே அந்தப் பிரியம்.  இதுதான் காரணமென்று  எதைச் சொல்ல?

எத்தனையோ இரவுகளை, எத்தனையோ காரணங்களுக்காக அவள் தூங்காமல் கழித்திருக்கிறாள். அவை அவளது பகலின் வலிகளையும் வதைகளையும் ஆற்றுவனவாக,  மறக்கப் பண்ணுவனவாக இருந்தன. தூக்கத்தை இடறிய அப்பாவின்  தடவல்களும், கொஞ்சல்களும் அவளுக்கு இரவில்தானே கிடைத்தன? இரண்டு குண்டிகளையும் அடக்கக்கூடிய பெரிய மரக் கை அவருக்கு. நீட்டுநீட்டான விரல்களும். பகலில் அடித்த அதே கையாலேயே  அடிபட்ட இடங்களை அவர் சொஸ்தம் செய்கிறபோது பயமும் சுகமுமான கலவையில் அவள் கண்மூடிக் கிடந்திருக்கிறாள். வளர்ந்த பிறகான அவளின் சுகக் கனவுகளின் மூலமாய் அவையே இருந்திருக்க முடியும். அதை பகுத்துணரும் தேவையும் நேரமும் எப்போதும் அவளுக்குப் பொருந்திவரவில்லை. அதை அவள் எண்ணியதேயில்லை என்பதுதான் அதிலுள்ள சூட்சுமம்.

பகலைவிட இருண்ட பூமியே அவளுக்கு ரசிக்கும்படியாக என்றும் இருந்துவந்தது. நட்சத்திரங்களும், மேகங்களும், சிலபோது சந்திரனும், நிறைந்து விழுந்திருக்கும்  நிசப்தப் பின்னணியில், அத்தனை அழகானவையாகத் தோன்றியிருந்தன. அவளை  நினைவுகளின் தடத்தில் மிகஇலகுவாக அவை நடத்திச்சென்றன. அது அவளது சுயத்துக்குமட்டுமான உலகமாக இருந்துவந்தது. அன்றைய இரவு அவை எல்லாவற்றையும்விட வித்தியாசமானது. அன்று அவள் ஒரு காத்திருப்பில் ஏக்கமும் ஏமாற்றமும் பொங்கிப் பெருகப் பெருக விழித்திருக்கிறாள்.

•Last Updated on ••Saturday•, 26 •September• 2020 07:37•• •Read more...•
 

தொடர் நாவல்: கலிங்கு (2006 -1)

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் ஒன்று!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

காலையின் காற்று வன்னியில் வித்தியாசமானது. அது மென்குளிரோடு  பசுமையின் ஒரு மணத்தையும், நெல்லிழைகளின் ஒரு மணத்தையும் கொண்டிருக்கும். கதிரெறிந்த நெல்லின் மணம் காற்றிலேறும் விந்தையை சங்கவி பல வேளைகளில் எண்ணியிருக்கிறாள். தூக்கம் கலைந்து அவள் கண்விழித்தபோது, அந்த மென்காற்றின் இழைவில் அவள்  பரவசம்கொள்ளும் கந்தம் விரவியிருந்தது.

அதை உணர்ந்தாளாயினும், கடந்த சில நாட்களாக நினைவுகளின் ஆக்கிரமிப்பால் கிளர்ந்திருந்த குதூகலமற்ற மனநிலை, அதை அனுபவிக்க முடியாதபடி  அவளை ஆக்கிவிட்டது. பரஞ்சோதி  அடுக்களைக்கு பக்கத்திலுள்ள வாழையடியிலிருந்து சட்டி பானைகளைத் தேய்த்துக்கொண்டிருப்பதை விரியத் திறந்திருந்த முன் கதவினூடாக கூடத்துள் கிடந்திருந்தபடியே கண்டுகொண்டிருந்தாள். அன்று சமையல் நடக்குமோ இல்லையோ, அங்கே அவளிருக்கிற காலைகளில் அது நியமம். எண்ணெய் உண்டோ இல்லையோ மாலையில் கைவிளக்கைத் துடைத்து திரிக் கருக்கலை நசுக்கியென என்றும் மாறாத அனுட்டானம் இருப்பதை ஒத்தது அது. விறகடுப்பில் வைக்கிற சருவப் பானையை சாம்பல், மண்ணென்று  போட்டு எப்படித் தேய்த்தாலும்  படிந்திருந்த கறுப்பு போய்விடவா போகிறது? சங்கவி சொல்ல நினைத்தாள். அதற்கே அலுப்புப்பட்டவளாய்  குழந்தையை அணைத்தபடி பேசாமல் படுத்துக்கொண்டிருந்தாள்.

குழந்தைக்கு மறுபுறத்தில் குணாளன் படுத்தவிடம் வெறுமையாகக் கிடந்தது. ஏற்கனவே வெளியே சென்றுவிட்டானா, அறைக்குள்ளே வெளிக்கிட்டபடி நிற்கிறானாவென்று அவளுக்குத் தெரியவில்லை. அப்போது கேற்றடியில் சைக்கிள் ஒன்று கடகடத்தபடி வந்து நின்றது கேட்டது. அதற்காகவே காத்திருந்தவன்போல் அறைக்குள்ளிருந்து அவசரமாய் வெளியே வந்த குணாளன் பாய்ந்தோடினான். சிறிதுநேரத்தில் சைக்கிள் மறுபடி கடகடத்தது. சங்கவி சரிந்து படுத்திருந்த நிலையிலேயே தலையை நிமிர்த்த தெரிந்தது, குணாளன் சைக்கிளில் ஏறி போய்க்கொண்டிருப்பது.

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:30•• •Read more...•
 

தொடர் நாவல்: கலிங்கு (2003 - 16)

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் பதினாறு!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

முதல் நாள் மதியத்திலிருந்து  செல்விக்கு உடல் நலமில்லாதிருந்தது. இரவில் வெகுநேரம்வரை காய்ச்சலில் அனுங்கிக்கொண்டு கிடந்தவளோடு தூங்காமல் விழித்திருந்தாள் நிலா. காலையில் அவளுக்கு காய்ச்சல் விட்டிருந்தது. என்றாலும் உடம்பு சுகமாயிருந்தால் பத்து மணிக்கு மேலே வந்தால்போதுமென்று செல்வநிதிக்கும் நிலாவுக்கும் கூறிவிட்டு, சரணையும் உதவிக்கு மறித்துவிட்டு மற்றவர்களோடு காண்டீபன் சந்தைக்குப் போயிருந்தான்.

“இன்னுமொருக்கா மன்னார் போய்வந்தாத்தான் காய்ச்சல் செல்வியைவிட்டு போகும்போல. இல்லாட்டி இப்பிடித்தான் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கப் போகுது” என்ற நிலாவின் வேடிக்கையில் சிரித்துக்கொண்டுதான் மூவரும் பத்து மணியளவில் புறப்பட்டிருந்தனர்.

ஐப்பசி தொடங்கியிருந்தும் மாரி வராத காலமாயிருந்தது அது. சுள்ளிட வெய்யில் அடித்துக்கொண்டிருந்தது. இன்னும் சூரியன் சாய்ந்தே நின்றிருந்ததில் வாதரவத்தை வெளியை அடையும்வரை வெய்யிலின் தாக்கம் இருக்கவில்லை.

பகலில் குண்டு குழிகளைத் தாண்டி சுலபத்தில் சைக்கிளை மிதிக்க முடிந்திருந்தது அவர்களால். ராணுவ தடையரண்களையும், வெளிகளையும், கோயில்களையும் தாண்டி சாவகச்சேரி மகளிர் கல்லூரியையும் கடந்தாயிற்று. தபால் கந்தோரைக் கடந்து வர சாவகச்சேரி ராணுவ சோதனை தடையரண் வந்தது. முன்னாலிருக்கிற ஏ9 பாதையில் ஏறிவிட்டால் அடுத்த நூறு மீற்றர் தொலைவில் இருந்தது சாவகச்சேரி சந்தைத் தொகுதிக் கட்டிடம்.

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:22•• •Read more...•
 

தொடர் நாவல்: கலிங்கு (2003 - 15)

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் பதினைந்து!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

அந்த வருஷங்களில் உள்ளிருந்த ஆத்மாவும் சற்று குளிர்ச்சி அடைந்திருந்தது பரஞ்சோதிக்கு. ஆங்காங்கே இடம்பெற்ற யுத்த நிறுத்த மீறல்கள் சிறீலங்கா யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் புகார்களாய்க் குவிந்திருந்தன. அவை ஐந்நூறுக்கும் அதிகமென ஒரு கணக்கு சொல்லிற்று.  இருந்தும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவொன்றின் இருப்பே நிம்மதி  தரும் அம்சமாய் பலர் மனத்திலும் இருந்திருந்தது. நோர்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறுபது பேர் அதில் அங்கத்துவம் வகித்தமை அதன்மீதான நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தியிருந்தது.  பரஞ்சோதியின் ஆறுதல் அங்கேயிருந்து பிறப்பெடுத்திருந்தது. இரண்டாயிரத்தில் ஏற்பட்ட தென்மராட்சி யுத்தத்தில் கனகாம்பிகைக் குளத்துக்கு பரஞ்சோதி ஓடிவந்து மூன்று மாதங்களுக்குள்ளாக, ஒரு சைக்கிள்கார பெட்டையின் தொடர்பை நூலாக வைத்துக்கொண்டு ஒரு சிலந்தியைப்போல கிடுகிடென ஓடி இயக்கத்தில் சேர்ந்திருந்தாள் அவளது மகள் சங்கவி. வீட்டிலே தாய் தகப்பனின் நேரடி ஒப்புதல் இல்லாமல் இயக்கத்தில் சேர முடியாதென்ற ஒரு நிபந்தனையை இயக்கம் இன்னும் ஏன் யோசிக்கவில்லையென அன்று அழுது அரற்றினாள் அவள். அப்படி எத்தனை தாய்கள், தந்தைகள் தங்கள் பிள்ளைகளைத் தேடியும், அவர்களின் வயதுக் குறைவை முன்னிறுத்தி இயக்கத்திலிருந்து விடுவிக்கக் கோரியும் கிளிநொச்சியில் அலைந்துகொண்டு இருக்கிறார்கள்? இரண்டு தடவைகள் ஒரு தாய்க்கும், ஒரு பெற்றோருக்கும் அவளே இரண்டு நாட்கள் தன் வீட்டிலே புகலிடம் அளித்திருந்தாள். அ

அவளே அவ்வாறாகத் துடித்திருந்ததில் அந்த பாசத்தின் மொழியை அவள் வெகு இலகுவில் புரிந்தாள். ஒரு தாய், ‘ஒரு பிள்ளையில அவனுக்கு சரியான ஆசை இருந்திது. எவ்வளவு அடாத்தாய் நிண்டு அதை மறக்கப் பண்ணினன்? இப்பிடி வருமெண்டு தெரிஞ்சிருந்தா அவன்ர மனத்தை அண்டைக்கு நோகடிக்காமல் விட்டிருப்பனே. அவளுக்காண்டியாச்சும் இயக்கத்தில சேராமல் விட்டிருப்பானெல்லே?’ என்று அழுதரற்றினாள். அது கொன்றவள் வைத்த ஒப்பாரி.

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:22•• •Read more...•
 

தொடர் நாவல்: கலிங்கு (2003 - 14 )

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் பதினான்கு!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

கிழக்கிலும் தெற்கிலுமிருந்து வனம் முனகிய சத்தங்கள் காற்றில் ஏறிவந்து மேலே நகராமல் அங்கேயே மடிந்துகொண்டிருந்தன. பிறந்ததுமே சூரியனைநோக்கித் தாவிய அஞ்சனை குமாரன்போல், முதுவேனில் வைகாசியிலேயே உச்சம் பெற்றிருந்தது. அதன் ஒரு துளி நழுவி விழுந்து இரவு வெம்மையானது. வேனில் பருக்களில் அது நசநசப்புச் செய்து, நகங்களின் சொறிதலுக்காய் அரித்துக்கொண்டிருந்தது.

கூடியிருந்த மனிதர்களின் கவனம் அதில் அவ்வளவு சிதறியதாய்த்  தெரியவில்லை. அவர்கள் பார்வையில் கதைசொல்லும் முள்ளிக் கிழவி இருந்துகொண்டிருந்தாள்.

அவளுக்கு இன்னும் தன் கதைநேரம் தொடங்க நேரமிருந்தது. காம்பு கிள்ளிய வெற்றிலைக்கு இன்னும் சுண்ணாம்பு தடவி அவள் முடித்திருக்கவில்லை. அதன் பிறகும் சில கைங்கரியங்கள் உண்டு.
அதுவரை சபை காத்திருக்கும்.

அன்னமுத்துவும், செல்லத்தங்கமும், சரஸ்வதியும், ஆனாக் கிழவனும், அருளம்பலமும், நடராசனும், நாகேந்திரனும், நாகாத்தையும், கலாவதியும், கணநாதனும் இன்னும் பல குழந்தைகளுமான பத்து பன்னிரண்டு பேர் கொண்ட சபை அது.
நெருங்கி அமர்ந்திருந்ததில் குடும்பங்கள் குலைந்திருந்தன. யார் யாரின் புருஷன், யார் யாரின் மனைவி, எவர்கள் எவர்களது பிள்ளைகளெனத் தெரியாதிருந்தது. அருளம்பலத்தின் மனைவியைத் தட்டி நாகேந்திரன் ஒருபோது கொஞ்சம் புகையிலை கேட்டான். அவள் ஒரு துண்டை நீட்டி கிள்ளியெடுக்கச் சொன்னாள். அவன் கிள்ளியெடுத்ததை நல்லவேளையாக அருளம்பலம் காணாதிருந்தான். சபை குழம்பக்கூடிய ஒரு காரணம் அவ்வாறாக மறைந்துபோனது.

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:23•• •Read more...•
 

தொடர் நாவல்: கலிங்கு (2003 - 13 )

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் பதின்மூன்று!

எழுத்தாளர் தேவகாந்தன்

தேவகாந்தனின் 'கலிங்கு'கருமேகங்களை இழுத்து மூடி, வானம் மறுபடி தன்னை மறைத்தாயிற்று. இருட்டு நேரத்துக்கு முன்னாகவே பூமியைத் தழுவியிருந்தது. மழை வரலாம். குளிர் காற்றும், மேக அசைவுக் குறிகளும் அதைச் சொல்லிக்கொண்டிருந்தன. வெளியே விறாந்தையில் கிடந்திருந்த கம்பி முறிந்த குடையை எடுத்துக்கொண்டு குசுமவதி கடைக்குப் புறப்பட்டாள்.

உக்கு புறப்படுவதற்குப்போல மதியத்தில் ஒரு இடைவெளியை மழை விட்டுவைத்திருந்தது. சந்தோஷமாக அவனை அனுப்பிவைத்தாள் குசுமவதி. சந்திப்போமென்று அப்போது சொல்லியிருந்தாலும், இனி எப்பவென்ற கேள்வி இருவரிடத்திலும் ஒரு சோகச் சுமையாய் இருந்திருந்தது. எவர் நினைப்பதுபோலும் காலம் சீராக இயங்கிக்கொண்டு இருக்கவில்லை.

யயானியையும், சிரானியையும் அவள் அப்போது  கூடவர அழைக்கவில்லை. அவளுக்குள் அவர்கள்பற்றி ஒரு குறையிருந்தது. அது கோபம்தான். கோபமென்று சொல்லமுடியாத அளவுள்ள கோபம். ‘பேசாமலிருந்து படியுங்கோ, கடைக்குப் போயிட்டு வாறேன்.’ குசுமவதி போய்விட்டாள்.

அது ஏனென்று பிள்ளைகளுக்கும் தெரிந்திருந்தது.

முதல்நாள் அதிகாலையில் நடந்த அந்தச் சம்பவத்தை யயானி நினைத்துப் பார்த்தாள்.

கொழும்புக்குப் போவதற்கு முன்னால், பக்கத்து வீட்டு ஹேமாவின் தாயாரை  இரண்டு நாட்கள் வீட்டிலே வந்து தங்கிநிற்க குசுமவதி கேட்டிருந்தாள். குசுமவதி புறப்பட்ட அடுத்த நாள் மாலையில்  யயானிக்கும் சிரானிக்கும் திடீரென சண்டையாகிப் போனது. ‘என்ன சத்தம் அது?’ என ஹேமா அன்ரியின் தாயாரின் உறுக்கலில் சண்டையை அவர்கள் நிறுத்திக்கொண்டாலும், கடுகடுக்க முகங்களை வைத்துக்கொண்டு கனநேரம் இருந்தார்கள்.

நேரமாக ஆக அது தீவிரமிழந்து  இருவருக்கும் பின்னர் ராசியாகிப் போனது. விழுந்த நோவுடன் சிரானியும் சம்பவத்தை மறந்து நோவு மட்டும் நினைத்திருந்தாள். அப்போது அந்தச் சம்பவத்தை தாயாரிடம் சொல்லவேண்டாமென யயானி  தங்கையிடம் கெஞ்சினாள்.

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:23•• •Read more...•
 

தொடர் நாவல்: கலிங்கு (2003 - 12)

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் பன்னிரண்டு!

தேவகாந்தனின் 'கலிங்கு'

எழுத்தாளர் தேவகாந்தன்

ஏழு அறைகள், இரண்டு கூடங்கள், இரண்டு சமையலறைகள் கொண்ட அப்பெருவீடு அப்போது தன்னதாய் இல்லையென்ற நினைவில், பெரியம்மாவின் பூட்டிய வீட்டுத் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார் கே.பி.எம்.முதலி. அவருக்குள் திட்டம் உருவாகிக்கொண்டு இருந்தது.

பொழுது பட்டுவர ஊர் அடைந்து வந்தது. நெடுநேரத்தின் பின் இருட்டு விழுந்து இறுகியிருந்ததை உணர்ந்தார். மனத்தில் விரிந்த எண்ணத்தைச் செயற்படுத்த இறுதியாக ஒருமுறை அந்த வீடு செல்லத் துணிந்தவராய் எழுந்து சென்றார். தோளில் கொளுவும் ஒரு பையில் இரண்டு லோங்ஸ், இரண்டு சேர்ட், ஒரு துவாயென்று எடுத்துவைத்தார். இன்னொரு பையில் தன்னிடமிருந்த பத்திரங்கள், சேர்டிபிகேற், அடையாள அட்டை, வங்கிப் புத்தகம் முதலியனவற்றை எடுத்து வைத்தார். குளித்துவிட்டு வந்து ஒரு கறுப்பு லோங்ஸ், ஒரு கறுப்புச் சட்டையை எடுத்து அணிந்தார்.

திட்டமாய்ச் சுமத்தப்பட்ட துக்கத்தினோடும் அவமானத்தினோடும் வீட்டை விட்டு வெளியேறினார்.

வெள்ளைப் பூனை அவர் காணாவண்ணம் அவரைப் பின்தொடர்ந்தது.

இருளில் இருளாக கறுப்பு உடையில் அவர் ஊர் இகந்து சென்றதை யாரும் மறுநாள் வரை அறியவில்லை. அதை எதிர்பார்த்திருந்த மங்களம்கூட.

சகுந்தலைதான் காலையின் சப்தம், சலனமறுத்திருந்த வீட்டை அவதானித்துவிட்டு தாயாரிடம் சொன்னாள். ‘சந்தடியைக் காணேல்ல, அம்மா. வெளிக்கிட்டுட்டார்போல.’

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:23•• •Read more...•
 

தொடர் நாவல்: கலிங்கு (2003 - 11)

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் பதினொன்று!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

மனிதன் தன் மனத்தின் ஒவ்வொரு இண்டு இடுக்கிலும்  இருளையும், ரகசியங்களையும் பொதுக்கி வைத்திருக்கிறான். அதுபோலவே ஒரு நகரமும். வவுனியா நகரும் வெளிச்சத்தால் விலக்க முடியாத இருளையும், ரகசியங்களையும்  கொண்டிருந்தது. அந்த இரவுகளை சாமிக்குத் தெரியும். கடந்த இருபது வருஷ காலத்தின் அந்த இருள், அதற்கு முன்பிருந்த இருள்களைவிட வித்தியாசமானது. அதனுள் பயங்கரங்களும் இருந்திருந்தன. ஒரு வீட்டின் கதவைத் தட்டித் திறந்து, குறியைச் சரியாக இலக்கு வைத்து படபடவென குண்டுகளை இறக்கிவிட்டு, எந்த அவசரமுமின்றிப் போகிற சீருடை மனிதர்கள் அந்த இரவுகளில்தான் உயிர் பெறுகிறார்கள். திறந்த கதவுகளுக்கூடாக குறிவைத்த இரையை இழுத்துப்போய் சப்பித் துப்பிவிட்டு போகிறவர்களும் உலவிவந்த இருள் அதுதான். சீருடைகளுமே பலவிதங்களில் இருந்த விசித்திரமான காலப் பகுதி அது.

ரகசியங்களைக் காவிய மனிதரும், ரகசியங்களைக் கண்டறியும் மனிதர்போல், அங்கே திரிந்தபடி இருந்தனர். அவர்களது அந்த ரகசியங்களில், மிதமாயிருந்த போர் உறுமி எழுவதாயிருந்தது. சமாதானத்தை அதன் புதைகுழிவரை கொண்டுவந்து தள்ளி மூடும் உக்கிரம் கொண்டதாயும் அது காணப்பட்டது. பயணிகளின் இடையறுந்த பயணங்கள் மறுபடி தொடருமென்பதற்கு எந்த உத்தரவாதமும் அப்போது இருந்திருக்கவில்லை. சாமி எல்லாம் கண்டும், அறிந்தும் கொண்டுதான் இருந்தார்.

இரவுகள் அவ்வாறானவையெனில் அதில் கொழும்பு இரவு, கண்டி இரவு, வவுனியா இரவு, மட்டக்கிளப்பு இரவு, யாழ்ப்பாண இரவென என்ன பிரிவினை இருக்கமுடியும்?

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:23•• •Read more...•
 

தொடர் நாவல்: கலிங்கு (2003 - 10)

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் பத்து!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

ஆறரை மணிக்கு அவர்களுக்கு அனுராதபுரம் செல்ல கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ரயில் இருந்தது. பன்னிரண்டு மணியளவில் போய்ச் சேர்ந்துவிடும். அந்த நேரத்துக்கு அங்கிருந்து வவுனியாவுக்கு பஸ் இருக்கிறது. எப்படியும் அதிகாலை நான்கு மணிக்குள் வவுனியா போய்ச் சேர்ந்துவிடலாம். அவர்கள் அவசரமாக சாப்பாட்டை முடித்துக்கொண்டு ரயில் நிலையத்தை அடைந்தனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு கொஞ்சக் காலமே ஆகியிருந்தும் யுத்த காலத்தைவிட அது அழகாகவே இருந்தது. அதன் அழகு மக்களின் மனத்திலிருந்து ஊற்றெடுக்கிறது. அவதியும் அச்சமும் பெருமளவு இல்லாத அக்காலத்தின் அழகு அவர்களது மனங்களின் அமைதியில் பதிந்திருந்தது.

பயணத்தில் எவ்வளவோ செய்திகளைச் சொல்லவும் கேட்கவும் வேண்டியிருந்தும், மௌனமாயே பெரும்பாலும் வந்துகொண்டிருந்தாள் குசுமவதி. அவளது நினைவுகள் செறிந்த முகத்தைக் கண்டு அதற்கு இடைஞ்சல் செய்யாதபடி அருகே இருந்துகொண்டிருந்தான் உக்கு.

ஊரைவிட்டு ஓட நேர்ந்தது அவளின் துர்பாக்கியம். வளர்ந்து வேலைக்குச் செல்லும் அவசியம் ஏற்படும்வரை, அடுத்த ஊர் மண்ணை அறியாதிருந்தவள் குசுமவதி. அவளுக்கு ஊரே எல்லாமாக இருந்தது. சோலையாய், நதியாய், மலையாய், குளமாய், பறவையாய் எதனையும் அது கொண்டிருந்தது. அவளுக்குக் காதலைக் கிளர்த்தியதிலும் அதற்கு பெரும் பங்குண்டு. அது இல்லாவிட்டால் அந்தக் காதல் கனிய இன்னும் நாளெடுத்திருக்கலாம். அது இல்லாவிட்டால் யயானி எட்டு மாதத்தில் பிறந்த பிள்ளையென ஊர் மக்கள் அதிசயப்படாமலும் இருந்திருக்கக்கூடும்.

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:23•• •Read more...•
 

தொடர் நாவல்: கலிங்கு (2003 - 9)

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் ஒன்பது!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

கொழும்பில் நடைபெறவிருந்த அந்த நிகழ்ச்சிபற்றிய தகவலை பழைய பத்திரிகைகளில் அவர் கண்டிருந்தார். அதற்கான சில சிங்கள இனவாத அமைப்புகளின் எதிர்க்குரலை ஒரு சிங்கள பத்திரிகையில் வாசித்தபோது, அந்நிகழ்ச்சி அவரை ஆர்வப்படுத்தியது. முந்திய ஆண்டு அந்நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடந்தபோது, அவ்வளவு பெரிய ஆர்வம் ஏற்படாததோடு, சென்று காணும் வசதியும் அவர் அற்றிருந்தார். தனிப்பட்ட மனநிலைக் காரணம்தான். திறம்பும் தன் மனநிலையோடும் போராடும் மனிதராக அவர் இருந்திருந்தார். அதனால் நினைத்தார் செய்தார் என்றமாதிரித்தான் அவரால் இயங்க முடியும்.

கொழும்பில் நடைபெறவிருந்த அந்த நிகழ்ச்சியைச் சென்று காணும் உந்துதல் ஏற்பட்டதும், கையிலுள்ள பணம் பிரயாணத்துக்கு போதுமாவென பார்த்தார். போதுமாயிருக்க புறப்பட்டுவிட்டார்.

ஓமந்தையில் அவரது முகத்தையும் அந்தச் சிரிப்பையும் கண்டபிறகு, புலிகளின் சோதனை நிலையத்தில், ராணுவ சோதனை நிலையத்திலும்தான், அவரைத் தடுத்துநிறுத்தும் திறன் எவருக்கும் இருக்காது. பாஸ் எடுப்பதற்கு வன்னியில் கொஞ்சம் அலைய நேர்ந்தது சாமிக்கு. பிரதீபன் அங்கே இல்லாதவகையில் அவருக்கு அதுவும் முடியுமாகிப்போனது. அவர் கஷ்டமென்று அதிகமும் உணர்ந்த அம்சம் ‘பாஸ்’ எடுப்பது மட்டுமாகவே இருந்தது.

விழாவின் ஐப்பசி 29, 2003 நாள் காலையில் விஹாரமாதேவி பூங்காவின் இனிய குளிர் செறிந்த காற்றை நெஞ்சு நிறைய சுவாசித்தபடி வாசலில் நின்று, எதிரே விழாக்கோலம் கொண்டிருந்த கொழும்பு மாநகரசபை மண்டபத்தைப் பார்த்தபடியிருந்தார் சாமி.

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:24•• •Read more...•
 

தொடர் நாவல்: கலிங்கு (2003 - 8)

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் எட்டு!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்அன்றைக்கும் மரத்திலேறி விழித்தபடியிருக்க எழுதியிருந்த விதியை எண்ணி தனக்குள்ளாய்ச் சிரித்தபடி, சூழலை நோக்கினான் உக்கு பண்டார. குளத்தின் மறுபக்கத்தில் பெண்கள் சிலர் இருளினுள்ளே நீராடிக்கொண்டிருப்பதைத் தெரிந்தான். அவர்களுக்கும் நீளக் கூந்தல் இருக்குமா, அவர்களும் கூந்தலால் மேலை மூடிக்கொண்டுதான் குளிப்பார்களாவென எண்ணமெழுந்தது. மெல்ல மெல்லமாய் அவர்களின் சத்தமும், நீரின் சளசளப்பும் தேய்ந்து ஒடுங்கின. சிறிதுநேரத்தில் குடியிருப்பில் சந்தடி அதிகரித்தது. யார் யாரையோ கூவியழைக்கும் சத்தமும் எழுந்தது. சூள்கள் கொளுத்திய உருவங்கள் அங்கிங்காய் நடந்துகொண்டிருந்தன. அதைப் பார்த்துக்கொண்டிருந்த வேளை, இருளாய் ஓருருவம் அவனைநோக்கி வந்தது. ‘உஸ்’ஸென்ற எச்சரிக்கையொலியோடு, சற்றும் எதிர்பாராதபடி அவனது கையைப்பற்றி இழுத்து தன் பின்னே வரப் பணித்தது. குளத்தில் நீராடக் கண்டிருந்த அதே கறுத்தப் பெண்தான். அவன் அச்சப்பட அல்லது யோசிக்க ஏதுமிருக்கவில்லை. அவளது கண்களிலும் முகத்திலும் அவன்மீதான பரிதாபம் மெல்லியதாய்த் தெரிந்தது. அவன் பையை எடுத்துக்கொண்டு பின்தொடர்ந்தான்.

கூடாரமாய் கிளைகளைப் பரத்தியிருந்த மரங்களின் கீழாக, நிழல் அசைவதுபோன்றும் தெரிந்துவிடாத அவதானத்துடன் அவள் நடந்தாள். பாதங்களை ஒரு பூனைபோல் மெல்ல ஓசையெழாது பதித்தாள். அதுபோலவே அவனும் நடந்தான். தனித்துப்போல் தூரத்திலிருந்த அவளது குடிசைக்குள் நுழைந்ததும் அவள் வாசலிலிருந்த படங்கை இழுத்து வெளியிலிருந்து பார்வை நுழையாத தடுப்பை இட்டாள். அடுப்பின் தணலில் சிவந்து வந்தது குடிசையின் உள்.

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:24•• •Read more...•
 

தொடர் நாவல் : கலிங்கு (2003 – 7)

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் ஏழு!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்பிரச்னையின் தீர்வுக்கான தேடுதல் தன் எதிரே கொண்டுவந்து நிறுத்திய முடிவினைக் கண்டபோது கோர்ப்ரல் உக்கு பண்டார மனம் திடுக்குற்றான். அந்த அதிர்ச்சியில் உடம்பே அதிர்ந்ததுபோல் உணர்ந்தான். நாளும் நாளும் வெகுக்கும் தன் மன வதையிலிருந்தான மீட்சிக்கு வேறு வழியே கிடையாதாவென அயர்ச்சியடைந்தான். அவன் மேலும் யோசிக்க முனைந்தான். வேறு எந்த வழியும் சாத்தியமாகாது என்பதைவிட, அதற்கு அந்த ஒரேயொரு வாசல்தான் இருந்ததென்பதையே அவன் அறுதியாகக் கண்டான். அவனுக்குள் தயக்கம் எழுந்தது. அது அவனது வாழ்முறையையே தலைகீழாக மாற்றிப்போட்டுவிடும். அம்மா, தங்கை, அக்காவின் வாழ்க்கையை நிலைகுலைத்துவிடும். ஆயினும் அதுமட்டுமே வழியெனில், அவன் அதை செய்யத்தான் வேண்டும்.எந்தவொரு மலையடிவாரத்திலோ, வனத்தின் அடர்வினுள்ளோ, சரித்திரப் பழமை வாய்ந்த ஆலயம் தூபி விஹாரையென்ற எந்த இருள்வினுள்ளுமோ தன்னை மறைத்து காலத்தைக் கழிப்பதொன்றும் எண்ணுகிற அளவு சுலபமானதில்லை. ஆனால் அவன் அதையே செய்யவேண்டியவனாய் இருந்தான்.

விடுதலைப் புலிகளுடன் வடக்கிலோ கிழக்கிலோவான எந்தவொரு பாரிய யுத்தத்தின் போதும் ராணுவத்திலிருந்து ஓடிக்கொண்டுதான் இருந்தார்கள். அவ்வாறாக ஓடியவர்களின் தொகையை ஒரு கணக்கு இருபத்தையாயிரமென்று சொல்லியது. சாதாரண ராணுவத்தினராக அவர்கள் இருந்தார்களென்ற ஓர் அம்சம் அதிலுண்டு. பெரும்பாலும் யுத்த பயங்கரங்களும், உயிரச்சங்களும்  அவர்களை அவ்வாறு செய்ய தூண்டியிருக்கக்கூடும். ஆனால் அவன் அவையல்லாத வேறொரு காரணத்தில் ஓடப்போகிறான். ராணுவச் செயற்பாடுகளின் மேலான ஒரு நீதிவிசாரணை அந்த முடிவை அவனுக்குத் தீர்ப்பாக்கியிருந்தது.

அந்த அவனது காரணத்தை வைத்து, உண்மையில் ராணுவமே ‘நீ ஓடிவிடு’ என அவனுக்குச் சொல்லவேண்டும். அவன் அங்கே இருந்தால், பௌத்த நாட்டின் கட்டுப்பாடும், ஒழுக்கமுமான படையென சொல்லியபடியிருக்கும் அரச சாட்சியங்களை அவன் நொருங்கிப் போகச் செய்துவிடுவான்.

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:24•• •Read more...•
 

தொடர் நாவல் : கலிங்கு (2003 – 6)

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் ஆறு!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்இருண்டும் போக்குவரத்தற்றும் கிடந்த வீதியைக் கடந்து, சாமி தங்கியிருந்த வீட்டின் கேற்றை ஓசையின்றித் திறந்து, ஒரு பூனையின் சாதுர்யத்தோடு நிலா அவரை நெருங்கி, அந்தக் கண்களின் கிறக்கத்தைக் கண்டபடி நின்ற சிறிதுநேரத்தில், அதை மெல்லிய ஒலியலைகளால் கலைக்க முடியுமா என்பதைப் பார்க்கப்போல, “சாமிஐயா!” என்றழைத்தாள். சாமி திடுக்கிட்டு குரல் திசையில் சடாரெனத் திரும்பினார். “நீயாடி, மகளே! வா… வா…!” என்று சுதாரித்தார் சாமி. அப்போதும் திடுக்காட்டத்தின் அதிர்வுகள் அவரது கண்களிலும் முகத்திலும் இருந்திருந்தன.

“ஒழிக்காமல் சொல்லுங்கோ, எத்தினை காலமாய் உங்களிட்ட இந்த எழிய பழக்கமிருக்கு?” என்றபடி வெளிச்சத்துக்கு தன்னைக் கொண்டுவந்தாள் நிலா.

இவள் பிரதீபனில்லையென்ற திண்ணம் சாமியிடமிருந்தது. அப்படியிருந்தாலும் இது அவர்களது எல்லைக்குட்பட்ட பிரதேசமில்லையென்ற தெளிவும் இருந்தது. மேலும் நிலாவும் அவர்மீதான அன்பின் அக்கறை வழிய நின்றுகொண்டிருந்தாள். அவர் அவளிடம் சொல்லலாம். “கனகாலமாய். என்ர வீட்டைவிட்டு, ஊரைவிட்டு வெளிக்கிட்டாப் பிறகு. ஆயிரத்து தொளாயிரத்து எண்பது... எண்பத்தொண்டில.”

அவரையே கண்டபடி நின்றுகொண்டிருந்தாள் நிலா. “விட்டிடுங்கோ. அது உங்களையே மாத்தியிடும். உங்கட எல்லா நல்ல குணங்களையும் அழிச்சிடும். உங்கட பேரையே கெடுத்திடும்.”

கடகடவெனச் சிரிக்கவேண்டும் போலிருந்தது சாமிக்கு. அவரது அதனிடமான தஞ்சம், அவள் சொன்ன அந்த அம்சங்களை தன்னில் தக்கவைக்கவே என்பது அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. “மரங்கள் சும்மாயிருந்தாலும் காற்று அதுகளை விடுறேல்லயெண்டு சொல்லுவினம். அந்தக் கதைதான் இது. நினைவுகள அடக்கிக்கொண்டு வாழுறவன் நான். அப்பிடியான என்னை, அந்த நினைவுகள் எப்பிடியோ தாங்களாய்க் கிளம்பி வந்து இம்சை பண்ணத் துவங்கியிடுதுகள். அதுகள கலைஞ்சுபோக, அடக்கிவைக்க எப்பவும் தெண்டிக்கிறன். அதால அப்பப்ப இது எனக்கு தேவையாயிடுது. இயல்பான ஒரு சமூகத்துக்குள்ள தனி மனிசனாய் நான் படுற அவலம் என்ர வாழ்க்கை. வெட்டிக்கொள்ளாட்டியும், ஒட்டிக்கொண்டும் வாழேலாமலிருக்கு. அந்த இடைநிலையைச் சாத்தியமாக்கிற மருந்து எனக்கு இதுதான்.”

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:24•• •Read more...•
 

தொடர் நாவல் : கலிங்கு (2003 – 5)

•E-mail• •Print• •PDF•

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் ஐந்து

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்வெள்ளவத்தை பிள்ளையார் கோவிலடியில் அந்த மனிதரைக் கண்டார் சாமி. குனிந்தபடி நடந்துகொண்டிருந்தவரை இருவர் தாண்டிப் போகையில் பக்கப்பாட்டில் விழுந்த பார்வையில்தான் பரிச்சயத்தின் கீறு அவரில் சிரசுதயம் காட்டியது. பக்கத்தில் அவரைவிட உயரமாகவும், தடித்துமிருந்தவன் அவரது மகன் கணேசகுமாராய் இருக்கக்கூடும். சாமிக்கு அதை திண்ணமாய் அறியும் ஆர்வம் ஏற்பட்டது. தன்னை அவர் புறக்கணித்ததுபோல் போனதுதான் சாமியின் மனத்தை அதிகமும் தூண்டியதாய்ப் பட்டது. கறுப்பு உடையோடும், நீண்ட தலைமயிர் தாடியோடுமுள்ள சாமியை அவரால் சுலபமாக அடையாளம் கண்டிருக்கமுடியும். கைமாற்றுக் கேட்டு மறுத்த அந்தக் கோபத்தை இன்னும் அந்த மனிதர் கொண்டிருப்பது சாத்தியமா? அந்த மனிதரே சவரம் செய்யாத முகத்தோடும், சபரிமலைக்குப் போகவோ போய்வந்தவர்போலவோ நான்கு முழ காவி வேட்டியும் கறுப்புச் சட்டையுமணிந்து செருப்பற்ற கால்களுடன் போய்க்கொண்டிருந்தார். அந்த ஐயப்ப பக்த தோற்றத்துக்கான குணங்களோடு அவர் பத்தாண்டுகளுக்கு முன்னால் லொட்ஜிலே சாமிக்கு அறிமுகமாகியபொழுதில் இருந்தவரேயில்லை. ஆனால் பரிச்சயத்தின் கீற்றை சாமியால் லேசுவில் புறக்கணிக்க முடியாதிருந்தது.

சாமி எட்டி நடக்க முயன்றார். முன்னால் சென்றவரும் அவசரத்தில்போல் வேகமாகவே நடந்துகொண்டிருந்தார். ஏதாவதொரு பாதசாரிகள் பாதையைக் கடக்குமிடத்தில் சிவப்பு விளக்கு விழுந்திருந்தால் அவர் காத்துநிற்கவே நேரும், பிடித்துவிடலாம்.
வெள்ளவத்தை சந்தை, அடுத்து வந்த கொழும்பு தமிழ்ச் சங்கம் தெருவென அவர்கள் வேகமாக தாண்டிச் சென்று கொண்டிருந்தனர். சிவப்பு விளக்கு மாறுவதற்காக சாமிதான் ஒரு இடத்திலே காக்கவேண்டி நேர்ந்தது.

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:24•• •Read more...•
 

தொடர் நாவல்: கலிங்கு (2003 - 4)

•E-mail• •Print• •PDF•

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் நான்கு

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்வரும் வழியெங்கும் அவர்களுக்குள் பேச்சு குறைந்திருந்தது. தன் விஷயம் தெரிந்த தங்கைக்கு, இடறிய கல்லே சிவலிங்கமாகியதுபோல் தன் அழிவிலிருந்தும் விரிந்துள்ள தன் எதிர்கால மனோரதங்ளை தெளிவாக எடுத்துக் கூறிவிட்டதில், வித்தியாவிடத்தில் விழுந்திருந்த திருப்தி அவளது உரையாடலுக்கான எழுச்சியை அமுக்கிவிட்டிருந்தது. நிலாவினது மனநிலை வேறொன்றாகவிருந்தது. அதுவரையிருந்த அக்காவாக இல்லாமல் வித்தியா ஒரு பிரமாண்டமான வடிவத்தை அவளுள் எடுத்திருந்தாள். அக்காவிடம் அப்போதுள்ள அந்த பொறுமை, நிதானம், தீர ஆலோசித்தலெல்லாம் அந்தவொரு சனிக்கிழமைச் சம்பவத்தின் பின்னால் உருவானவையென்பதை நினைக்க அவளுக்கு ஆச்சரியமாகவிருந்தது. அவ்வளவொரு சிதைப்பின் பின்னால் தன்னை அழித்துக்கொள்பவர்களாய், தன் சித்தத்தை கலங்க விடுபவர்களாகத்தான் அதிகமானவர்கள் இருந்திருக்கிறார்கள். வித்தியாவோ ஒரு புதிய அவதாரம் எடுத்திருந்தாள்.

வித்தியா முன்னர் எப்பொழுதும் அவ்வாறு இருந்தவளேயில்லை. அவள் அவசரக்காரியாக இருந்தாள். எப்போதும் சிடுசிடுவென்ற முசுறுக் குணமுள்ளவளாய் இருந்தாள். தன்னைத் தவிர பிறரெவரிலும் அவள் பற்றோ பாசமோ கொண்டிராதவளாயும், சுயநலமியாயும் இருந்தாள். நிலா அக்காவை ஒருமையிலும் பெயர்சொல்லியும் விளிப்பது சின்ன வயதுக் காலத்திலிருந்தே தொடங்கியிருந்தது. அவர்கள் எது காரணம் கொண்டாவது கைச் சண்டைகளில் ஈடுபட்டபோது, உயரமும் ஆகிருதியுமுள்ள வித்தியாவிடம் அடிபட்ட நிலா, அவளை போடீ… மூதேவி… குண்டுவள்ளி... என்றெல்லாம் திட்டுவாள். அதற்கும் வித்தியா அடிப்பாள். அவள் லேசுவில் அடங்குவதில்லை. அவர்கள் தகராறு பட்டபோதும் குசுகுசுவென்று அம்மாவுக்கோ அப்பாவுக்கோ கேட்காமல் சத்தமடக்கியே வாதிட்டார்கள், திட்டினார்கள், அடிபட்டார்கள். அப்பா அப்போதுதான் அவ்வளவு சாந்தம். வாத்தியார் வேலை செய்யும்போது தேவையாயிருந்த சாந்தம், ஓய்வெடுத்த பிறகுதான் வந்திருக்கிறதென்று அம்மா சிரித்துக்கொண்டே சொல்வாள். முன்பானால் அசுரன்மாதிரித்தான் அப்பா. அம்மாவும் அடிபட்டவள். முகம், மூக்கு என்று பார்க்காது கண்மூடித்தனமாக விளாசுவார். அந்தப் பயம் அவர்கள் எல்லோருக்குமே இருந்தது.

அந்த அக்காதான் தன்னில் விழுந்த ஓர் அவமானத்தை தனக்குள்ளான ஒரு சமரில் வென்றுகொண்டிருக்கிறாள். தன்மேல் புரியப்படவிருந்த பலாத்காரத்தையே ஒரு முன்னறிவிப்பில்லாத காமக் கூட்டமாய் அவள் மாற்றியது, தன்னைக் காத்தலின் உபாயமாகவே இருந்திருக்கிறது. பாலியல் வல்லுறவிலுள்ள சிதைப்பு, மானம் சார்ந்த பிரக்ஞையைவிட பலபேரிடத்தில் வலி சார்ந்ததுதான். ஶ்ரீமல்லுடனான வித்தியாவின் உறவிலுள்ள சில கூறுகள் நிலாவுக்கு ஒப்பில்லையெனினும், அவளது மனநிலையின் அந்தப் புத்துருவாக்கத்தில் பெருமையும் மகிழ்ச்சியுமே பட்டாள். அவ்வாறான நினைவுகளால் நிலாவிடத்திலும் பேச்சு அடங்கியிருந்தது.

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:25•• •Read more...•
 

தொடர் நாவல் : கலிங்கு (2003 – 3)

•E-mail• •Print• •PDF•

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. நாவல் 'கலிங்'கை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


2
தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்வீதிக்கு எதிர்ப்புறத்தில் தள்ளியிருந்த பழைய வீட்டு விறாந்தையில் கைவிளக்கு எரிந்துகொண்டு இருப்பதைக் கண்டாள் நிலா. கடந்த இரண்டு மூன்று நாட்களாக இல்லாதிருந்த சாமி திரும்பி வந்துவிட்டாரெனத் தெரிந்தது. ஏனோ சாமியை சிறிதுகாலப் பழக்கத்திலேயே அவளுக்குப் பிடித்துப்போய் இருந்தது. அவர் உண்மையில் சாமியல்ல என்பதிலிருந்து அந்தப் பிடிப்பு அவளில் விழுந்தது. அவர் பிரதானமாய் சொல்பவராய் அல்ல, கேட்பவராய் இருந்தது அவளை மிகவும் கவர்ந்தது. சிலமுறைகளெனினும் அவரோடு நிறையப்  பேசியிருக்கிறாள் அவள். அந்த முதல் சந்திப்பை அவளால் எப்போதும் பசுமையாக நினைவுகொள்ள முடியும். சிரித்த பழக்கத்தில் அவரோடு அவள் நிகழ்த்தியிருந்த அந்தச் சம்பாஷணையே அவரை அவளுக்கு போதுமானவளவு இனம் காட்டியிருந்தது. அதுவொரு சனிக்கிழமை மாலை. பொழுதுபடுகிற நேரம். வழக்கம்போல் வீதி அடங்கிவிட்டிருந்தது. நிலா தர்மினியிடம் சொல்லிக்கொண்டு சாமி வீடு சென்றிருந்தாள்.  அப்போது அவர் ஒரு தூர பயணத்துக்குப்போல் ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்.  கேட்டதற்கு, மறுநாள் காலை கொழும்பு போகவிருப்பதாகச் சொன்னார். அவள் ஆச்சரியமாக ஏனென வினவினாள். அதற்கு சாமி, ‘பென்சன் எடுக்கப் போறன்’ என்றார்.

‘என்ன பென்சன்? எதாவது கவர்ண்மென்ற் வேலை செய்தியளா?’ என்ற அவளது ஆச்சரியத்திற்கு தன் இடைக்காலக் கதையை பதிலாக்கினார் சாமி. ‘இதெல்லாம் நான் ஒருதருக்கும் சொல்லுறேல்ல. என்னை உமக்கும் தெரியவேணுமெல்லோ... அதால சொல்லுறன். அறுவத்திலயிருந்து எழுவத்தேழு மட்டும் சேர்வயர் டிப்பார்ட்மென்ரில உத்தியோகமாய் இருந்தன். நல்ல வேலை. நல்ல சம்பளம். கிழக்கிலயும் தெற்கிலயும் எங்கயும்… நான் வேலைசெய்தன். என்ர வேலையே உல்லாசப் பயணம் செய்யிற வேலைமாதிரி இருந்திது. அது ஒரு அருமையான காலம்!’

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:25•• •Read more...•
 

தொடர் நாவல் : கலிங்கு (2003 – 2)

•E-mail• •Print• •PDF•

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. நாவல் 'கலிங்'கை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


3

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்இன்னும் விடிந்திராத ஒரு பொழுதில் நிலா கண்விழித்தாள். அப்பா கூடத்து அகல வாங்கில் படுத்துத் தூங்கியபடி. அம்மா வாளியில் தண்ணீர் தூக்கிக்கொண்டு உள்ளே போனபடியிருந்தாள். அவளுடைய நாள் ஆரம்பித்துவிட்டது. அம்மாபோல சிலரையே அவள் தெரிந்திருந்தாள். யாரோடும் நின்றோ இருந்தோ அவள் பேசுவதுகூட ஒரு சம்பிரதாயத்திலும் தேவையிலுமே. கால்களிலே சில்லுகளைக் கட்டிக்கொண்டான ஒரு விசையிருந்தது அவளில். அவளுக்கு பொழுதுபோக்கும் வேலைதான். வீடு கூட்டுதல், துணி துவைத்தல், சமையல் ஆகிய அன்றாட வேலைகள் முடிந்த பின்பு, வளவில் எதையாவது செய்துகொண்டிருப்பது அவளது பொழுதுபோக்குத்தான். மறவன்புலவிலிருந்து, ரிவிரச நடவடிக்கையில் ஓடநேர்ந்தபோது சாவகச்சேரி கற்குழியில் யாருடைய வீட்டிலோ தங்கிவிட்டு, ‘சண்டை முடிஞ்சுது, வாருங்கோ வீட்டை போகலாம்’என்று நாலாம் நாளே புறப்பட்டவள் அவள். அவளே முதலில் மீள்குடியேற்றத்துக்கு வெளிக்கிட்ட ஆளாயும் இருந்திருக்கலாம். கற்குழி வீட்டில் அவளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை அவள் மீண்டும் சென்று பார்த்து நலன் உசாவி வந்திருப்பாளென்று நிலா எண்ணவில்லை. அதற்கு முந்திய ஒப்பறேஷன் லிபறேஷன் காலத்தில் ஜனங்கள் கூண்டோடு இடம்பெயர்ந்து வந்தபோது, அவர்களுக்கு புகல் மறுக்கவும் அவள் செய்ததில்லை. இரண்டு வேளைகள் அலுக்காமல், புறணிவிடாமல் அவித்துப் போட்டுக்கொண்டே இருந்தாள். போனவர்களில் யாரும் பின்னால் வந்து அவளையும் நலன் விசாரித்ததில்லைத்தான். அம்மா கொஞ்சம் படித்திருக்கிறாளென்று, அவளுக்கு எழுத, வாசிக்க தெரியுமென்பதிலிருந்து நிலாவுக்கு ஒரு ஊகம் இருந்தது. அதைக்கூட அவள் பயன்படுத்தி நிலா கண்டதில்லை. வாசிப்பின் வெகு தொலைவில் அம்மா நின்றிருந்தாள். அது அப்பாவின் எப்போதும் வாசிப்பு என்ற பழக்கத்துக்கு நேர் எதிரானது. என்றாலும் வீட்டை அந்தளவு கச்சிதத்தில் நடத்தியதற்கு வாசிப்பு,  பொழுதுபோக்கு என எதுவுமில்லாமல் கால்களில் சில்லுகளைக் கட்டித் திரியும் அம்மாவாலேயே சாத்தியமானதென்பதையும் நிலா உணராமலில்லை.

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:26•• •Read more...•
 

தொடர் நாவல் : கலிங்கு (2003 – 1)

•E-mail• •Print• •PDF•

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. நாவல் 'கலிங்'கை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com/


2003

1.
தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்கடைகள் அடைக்கப்படத் தொடங்கின. சாவகச்சேரி நகரம் பெரும்பாலும் வெறிதாகியிருந்தது. கடைக்காரரும் வீடு செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்தனர். பக்க வாசல்களையெல்லாம் மூடி, இறுதியாக முதன்மை வாசலையும் பூட்டிக்கொண்டு காண்டீபனும் எழிலனும்  வர, வெளியே அவர்களுக்காக காத்திருந்த பெண்களும் ஆண்களுமான ஆறேழு பேர்கள்கொண்ட அச்சிறு குழு சைக்கிள்களை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டது. சூரியன் மேற்கில் சரிந்து சரிந்து போய் முடிவாக கச்சாய்க் கடலுள் அமுங்கியது.

ஶ்ரீவள்ளிச் சந்திக்கு வரும்போதுதான் நிலா கண்டாள், தான் மற்றவர்களிடமிருந்து சிறிது பின்தங்கிவிட்டதை. வேகமாக சைக்கிளை உழக்கினாள். ஒருபோது கல்லூரி போய்வந்த அந்த வீதிகளில் அவளுக்கு எப்போதும் அவ்வாறு ஆகிப்போகிறது. சந்தியிலிருந்து இரண்டு காணிகளுக்கப்பால் ராணுவ முகாமிருந்தது. அதைக் கடந்து போகையில் முட்கம்பிகளுள்ளே இருந்த மணல் மூட்டை அடுக்குக் காவலரணிலிருந்து பாய்ந்து வந்து சுள்ளிடச் செய்யும் ஒரு பார்வையின் நெருப்புக் கதிர்ளை எப்போதும் அவள் உணர்ந்துகொண்டிருந்தாள். அந்த உணர்வு அப்போதும் எழுந்தது.

புத்தூரில் சந்திக்குக் கிட்ட அவர்கள் தங்கியிருந்த வீட்டை அடைவதற்குள் அவள் மேலும் இரண்டு ராணுவ முகாம்களை கடக்கவேண்டும். ஆனால் அந்த இடத்தில்தான் அந்த நெருப்பு விழிகளின் வெங்கதிர் அவள்மீது பாய்ந்துகொண்டிருந்தது. இயக்கம் குத்தகைக்கு எடுத்திருந்த தென்மராட்சி சந்தைக் கட்டிடத் தொகுதியில் வேலைசெய்ய ஆறேழு வாரங்களாக அங்கே வந்துகொண்டிருக்கும் நிலாவுக்கு, கடந்த சில நாட்களாகத்தான் அந்த அனுபவம் ஏற்பட்டிருந்தது. ஒருவேளை முன்பும் வேறிடத்திலிருந்து அந்தக் கண்கள் அவளை அவ்வாறு பார்த்துக்கொண்டு இருந்திருக்கலாம். அவள் கண்டதில்லை. முகத்தையோ, நெஞ்சையோகூட அல்ல, அவளது கறுப்பு லோங்ஸையும், வெளியே விட்டிருந்த வெள்ளைச் சேர்ட்டையும், அதன்மேல் கட்டியிருந்த பட்டியையுமே  அவை குறிப்பாய்த் தாக்கின. அவற்றின் பஸ்மத்தில் அவள் நிர்வாணியாய் வீதியில் போவது காணும் கொடூர வேட்கைபோல் இருந்தது அது. காண்டீபனிடம் இரண்டு நாட்களுக்கு முன்னால் சொன்னபோது அவன் சிரித்தான்.

•Last Updated on ••Wednesday•, 09 •September• 2020 01:26•• •Read more...•
 

தொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு

•E-mail• •Print• •PDF•

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. நாவல் 'கலிங்'கை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com/


கலிங்கு

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்1973ஆம் ஆண்டின் மார்கழி மாதத்து ஒரு வெள்ளிக்கிழமை மாலையாக இருந்தது அது. வழக்கம்போல் நேரத்தோடு விழுந்திருந்தது இருள். வெளியை மெல்லிய கரும்புகார் திரையிட்டிருந்தது. அவன் யாழ் பேருந்து  நிலையத்தைச் சேர்ந்தவளவில்  ஏழு  மணியே ஆகியிருந்தும், அது ஓர் அசாதாரண நாளின் தன்மை  கொண்டிருப்பதை  ஆச்சரியமாக  கண்டுகொண்டே  அந்த தூர பயண பேருந்து நிறுத்தும்  இடத்தில் நின்றுகொண்டிருந்தான். அந்தச் சூழல் மேலும் மேலும் திணிந்து வருவதாய் அவனுக்குத் தோன்றியது. மின் விளக்குகள் அன்றைக்கு அதிசயமாய் மங்கலாக எரிந்து கொண்டிருந்ததாயும், பஸ் நிலையம் மட்டுப்பட்ட ஜன நடமாட்டமுள்ளதாயும்  பட ஆரம்பித்தது.  கடைகளும் அடைபடத் தொடங்கியதைக் கண்டவன் குழப்பத்தோடு  காத்திருந்தான். ஏழரை மணிக்குப் புறப்பட்டிருக்கவேண்டிய பேருந்து ஒன்பது மணியாகியும் வரவில்லை. அலுவலகத்தில் சென்று விசாரிக்கலாமென  அந்த வரிசையில் ஒருவர் சத்தமாய் எண்ணியது கேட்டது. சிறிதுநேரத்தில், இனி ஒன்பதரைக் கடைசி

பஸ்தானாமென்ற குரலொன்று எழுந்தது. ‘அதாவது வந்தால் சரி’யென யாரோ சொன்னதில், எழுந்திருந்த  சலசலப்பு  குறைந்து மறுபடி அமைதி  இறுகிவந்தது. ஏன் அந்த இறுக்கம்? ஏன் அந்த அசாதாரண நிலைமை? அவை கொண்டிருக்கும் செய்தி சாதாரணமானதில்லையோ?  அவன் மேலும் குழம்பியபடி நின்றிருந்தான். வீட்டில் தனியே தங்கியுள்ள மனைவி, பிள்ளைகளை எண்ணி அவனது மனம் குமைந்துகொண்டிருந்தது. ஒரு மாரியின் இருளும், இருளின் வெளியும் அந்த மண்ணைப் பூர்வீகமாய்க் கொண்டிராத எவரையுமே பெரும்பாலும் சஞ்சலப்பட வைத்துவிடக் கூடியது. அவனும் அவனது மனைவியும் தென்மராட்சியில் கண்டு வளர்ந்த மாரி இரவுகள் வேறுமாதிரியானவை. கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று ஓடிவர ஊரில் ஒரு குடியேனும் பக்கத்தில் குரலெட்டும் தூரத்திலே  இருந்தது.  அந்த மண்ணின்  வாழ்தகைமை  அதிகமும் அதில் இருந்ததை அவன் முன்பும் எண்ணியிருக்கிறான்.  அவர்கள் அப்போது குடியிருக்கும் அந்த பரந்தன் கால் ஏக்கர் திட்டக் குடியிருப்பு, கூப்பிடு தொலைவுக்கு வெறுமையையும்,  சூன்யத்தையுமே  இருள்வெளியில் கொண்டிருந்தது. அதில் தக அமைந்து வாழத் தொடங்குவதற்கு, அவனுகில்லாவிட்டாலும் அவளுக்கு, இன்னும் சிறிதுகாலம் எடுக்கும்.

•Last Updated on ••Monday•, 15 •June• 2020 00:44•• •Read more...•
 

துக்கமும் இருண்மையும் கொண்டமைந்த காலத்தின் ‘பெருவலி’

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் தேவகாந்தன்காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2017 டிசம்பரில் சுகுமாரனின் ‘பெருவலி’ நாவல்  வெளிவந்த காலப்  பகுதியிலேயே நூல் கையில் கிடைத்திருந்தும் அதை வாசிக்கத் தொடங்குவதற்கு நானெடுத்த  கால நீட்சியின் கழிவிரக்கத்தோடேயே  அதை அண்மையில் வாசித்து முடித்தேன்.

இந்திய சரித்திரத்தில்   மாபெரும் நிகழ்வுகளைக்கொண்டது  மொகலாய அரசர்களின் ஆட்சிக் காலம். அதில் பதினேழாம் நூற்றாண்டு மிகவும் தனித்துவமானது. மிக ஆழமாய் இன்றெனினும் அக் காலப் பகுதியின் சரித்திரம் வாசகனின் அறிதலில் தவறியிருக்க வாய்ப்பில்லை.  வெகுஜன வாசிப்பில்  பெரிதும் பேசப்பட்ட அனார்க்கலி – சலீம் காதல் அக்பர் கால சரித்திரத்தின் முக்கிய நிகழ்வாகவும் கொண்டாடப்பட்டது.  தீவிர வாசகர்களின் கவனத்தையும் அக்பர் காலம் வேறு காரணங்களில் வெகுவாக ஈர்த்திருந்தது. அக்பர் காலம் தொடங்கி ஜஹாங்கீர், ஷாஜகான் ஈறாக ஐந்து பேரரசர்களின் ஆட்சிபற்றிய விதந்துரைப்பில்லாத மொகலாய சரித்திரம் அதுகாலவரை எழுதப்பட்டிருக்கவில்லை; கதைகளும் தோன்றியிருக்கவில்லை. அத்தகு காலக் களத்தில் கதை விரித்த நாவல் ‘பெருவலி’.

இரண்டு பாகங்களாய் 167 பக்கங்களில் அமைந்த  இந் நாவலின் முதலாம் பாகம் ஷாஜகானின் ஆட்சியை மய்யப்படுத்தியது. அன்றைய அரசியல் நிலபரம் விளக்கமாகும்படி அக்பர் முதற்கொண்டு தொடர்ந்த பேரரசர்களின் ஆட்சியும், வாழ்வும்பற்றி அளவான விவரிப்பை நாவல் கொண்டிருப்பினும்,  அது ஷாஜகான் – மும்தாஜின் முதிர் காதலுக்கு குறிப்பாய் அழுத்தம் தந்திருக்கும்.

தக்காணத்து அரசதிகாரியாயிருந்த   ஷாஜகான் (அப்போது குர்ரம்) பதவியிலிருந்து நீக்கப்பட்டு அங்கேயே நிஜாம்சாஹியென்ற இடத்தில் தங்கவைக்கப்படுகிறார். அரசியல் சதுரங்கத்தின் காய் நகர்த்தல்களுடன் கதை அங்கிருந்துதான் ஹிஜ்ரா பானிபட்டின் பார்வையிலிருந்து  ஆரம்பிக்கிறது. கதைசொல்லியும் அவ்வப்போது அவனை இடைவெட்டி கதையை நகர்த்திச் செல்வார். எவரது பார்வையிலிருந்து கதை விரிகிறதென்ற மயக்கம் வாசகனுக்குத் தோன்றாதபடி கதையை நகர்த்தும் படைப்பாளியின் சாதுர்யம் சிறப்பு. நாவலில் ஒரு மீள்பார்வை நிகழ்கிறபோதுதான் இந்த கதைசொல்லிகளின் மாற்றம்கூட வாசகனுக்குப் புலனாகிறது.

•Last Updated on ••Friday•, 08 •November• 2019 09:25•• •Read more...•
 

ந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ குறித்து… படைப்பு – படைப்பாளி – வாசகனாதிய தளங்களில் கிளர்த்தும் வினாக்களும் விடைகளும்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் தேவகாந்தன்ந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ சென்ற ஆண்டு (ஏப்ரல் 2018) வெளிவந்திருக்கிறது. இதுபற்றி மிகுந்த வாத பிரதிவாதங்கள் ஓர் இலக்கியச் செயற்பாடுள்ள சமூகத்தில் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் இலங்கைத் தமிழ்ச் சூழலில் குளத்திடை போட்ட கல்லான நிலைமைதான் வழக்கம்போல் பிரதிக்கு ஏற்பட்டிருக்கிறது. பத்திரிகை சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் இத் தொகுப்பு மிகுந்த அவதானிப்பில் தோன்றிய வினாக்களுக்கு கண்டடைந்த விடைகளை மிகச் சுருக்கமாகவும், இறுக்கமாகவும் சொல்வதோடு, விடையாக எதையும் சொல்லாத இடங்களிலும் வினாக்களை எழுப்பிய அளவில் திருப்திகொண்டு தம்மை அமைத்திருக்கின்றன.  

பத்தொன்பது சிறு கட்டுரைகளின் தொகுப்பான இச் சிறு நூல் கொள்ளும் விகாசம் பெரிது. இதுபற்றி கவனம் கொள்கையில் முதலில் இதன் முன்னுரைபற்றிப் பேசவேண்டும். கட்டுரைகள் சொன்னவற்றை மிகச் சரியாக எடைபோட்டு அவற்றின் குறை நிறைகளைச் சுட்டி அதுவொரு வாசக திசைகாட்டியாக பொருத்தமாகச் செயற்பட்டிருக்கிறது. ஒரு முன்னுரையாகவன்றி நூலின் திறனாய்வாகவே அது உருக்கொண்டிருக்கிறது. அந்தளவு ஓர் கனதியான முன்னுரையை தாங்கக்கூடிய வலிமை ந.மயூரரூபனின் கட்டுரைகளுக்கு இருக்குமாவென, அதை முதலில் வாசிக்கையில், என்னில் ஐயுறவெழுந்தது. கட்டுரைகளை வாசித்த பின்னால் இது ‘காகத்தின் தலையில் பனம்பழத்தை வைத்த கதை’யாக இல்லையென்பதைத் தெரியமுடிந்தது.

இந்த பத்தொன்பது கட்டுரைகளை நோக்குகையில் படைப்பு – படைப்பாளி – வாசகன் ஆகிய தளங்களில் தனித்தனியாகவும், பின் ஒட்டுமொத்தமாகவும் ‘புனைவின் நிழல்’ தன் கருத்தை முன்வைத்திருப்பதாகக் கொள்ளமுடியும்.

இப் பிரதி முன்வைக்கும் கருத்துச் சாராததும் நூலாக்கம் சம்பந்தப்பட்டதுமான இரண்டு அம்சங்களை முதலில் குறிப்பிடுவது நல்லது எனத் தோன்றுகிறது. ஒன்று, தெளிவற்றதும் தீவிரமற்றதுமான சில கட்டுரைகளை, குறிப்பாக ‘ஆண்குறியாலான அதிகாரம்: காலம் கலங்கி மடியும் மந்திரம்’ என்பதுபோன்றவற்றை தொகுப்பில் சேர்க்காது விட்டிருக்கலாம். அவை பொருள் மயக்கமும் தெளிவின்மையும் கொண்டிருக்கின்றன. ஏனைய கட்டுரைகளோடு ஒப்பிடுகையில் அவை வலிமை குறைந்தவையும். அடுத்து, நிறுத்தக் குறியீடுகள் தேவையற்ற இடங்களிலும், அதிகமான இடங்களில் தவறான பிரயோகத்திலும் வருவதைத் தவிர்த்திருக்கலாம். இதனால் பொருள் கோடலின் இடைஞ்சல் வாசிப்பின் வேகத்தையும் சுகத்தையும் தடுக்காது இருந்திருக்கும்.  

இக் கட்டுரைகள் பலவிடங்களில் இயங்கியல், அமைப்பியல் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன. இயங்கியல் என்ற வார்த்தையை இயங்குமுறை எனக் குறிக்கவேண்டுமிடங்களிலும் பயன்படுத்துவதால் விளக்கக் குறைவு ஏற்பட்டு வாசகனை மலைக்க வைக்கின்றது. அவை கவனிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் பேச்சு வழக்கில் பயன்படும் அமைப்பியல் என்ற பதம் (சிலர் அமைப்பியலெனவே எழுத்திலும் பயன்படுத்துகின்றனர்) இன்று எழுத்திலும் அவ்வாறே பயன்படுத்தப் படுவதில்லையென்பது ஆய்வுலகில் அறிய வந்துள்ள விபரம். அது அமைப்பு மையவாதமெனவே படுகின்றது (பார்க்க: ‘அமைப்பு மையவாதமும் பின்அமைப்பயிலும்’, க.பூரணச்சந்திரன்). இது முக்கியமான அம்சமில்லையெனினும் வாசக தெளிவுக்காக இதுவும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம்.

•Last Updated on ••Wednesday•, 18 •September• 2019 06:37•• •Read more...•
 

‘நம்பிக்கை இன்னும் இருக்கிறது’! புதியவன் இராசையாவின் 'ஒற்றைப்பனைமரம்' , பா.அ.ஜயகரனின் 'Insight’ நாடகம் பற்றிய மதிப்பீடுகள்!

•E-mail• •Print• •PDF•

கிளைப் பனைமரம்

எழுத்தாளர் தேவகாந்தன்கடந்த ஜுன் 14, 2019இல் புதியவன் இராசையாவின் ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படத்தை ரொறன்ரோவில் பார்க்க முடிந்திருந்தது. புகலிட மற்றும் இலங்கைச் சூழலில் குறும்பட ஆக்கங்கள்போல் முழுநீள திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்திருப்பது நல்ல சகுனமேயாகும். ஆனாலும் நம்பிக்கை தருகிற விதமான பெறுபேறுகள் கிடைக்கவில்லைப்போன்ற தோற்றமே காணக்கிடக்கிறது. அசோக ஹெந்தகம, பிரசன்ன விதானகெ போன்ற சிங்கள நெறியாளர்களது படங்களுக்கு நிகரானவளவுகூட  இவை உயர்ந்து செல்லவில்லை. இதில் உலகத் தரமென்பது கனவுக்கு எட்டாத்  தூரமாகவே இருக்கிறது. இந்த உண்மையை மறுப்பதில் பிரயோசனமில்லை. இதை நேரில் முகங்கொள்வதே செய்யத் தகுந்தது. ஆனாலும் ‘ஒற்றைப் பனைமர’த்தில் அதன் பிரதியாக்க மேன்மையை ஒரு பார்வையாளனாய் என்னால் வியக்க முடிகிறது. ஆயின், ‘ஒற்றைப் பனைமரம்’ அடையவேண்டிய உயரத்தை ஏன் அடையாமல் போனது என்ற கேள்வியும் அதனடியாகவே எனக்குள் முளைக்கிறது. பல கேள்விகளில் இது ஒன்று. ஆனாலும் முக்கியமான கேள்வி.

இத் திரைப்படம்  பார்வையாளனுக்கு எதுவுமே இல்லையென்பது நியாயமற்ற கூற்று. ஆனால் அது அடைந்திருக்க வேண்டிய உச்சம் தவிர்ந்திருக்கிறதென்பதும் நிஜம். அப்போதும்கூட முப்பத்தேழு உலக படவிழாக்களில் பங்குபெற்று பன்னிரண்டு விருதுகளை அது பெற்றிருக்கிறதான ஒரு தகவல் கண்டேன். American Filmatic Arts Awards இன் சிறந்த பரீட்சார்த்த பிறநாட்டு திரைப்பட வரிசையில் அந்தப் பரிசு கிடைத்திருக்கிறது. நல்லது. இது அவர்களது பார்வை. எனது பார்வை வேறு. ஆயினும் அது நம்பிக்கை தரும் புகலிட திரைப்படமாக இருக்கிறதென்பதையும் இந்த இடத்தில் நான் வலியுறுத்தவேண்டும்.

ஆரம்பத்திலேயே குறைந்தளவு மூலதன வசதியோடு தொடங்கிய இத் திரைப்பட முயற்சியில்  தான் பல தயாரிப்பு இடைஞ்சல்களை எதிர்கொள்ள நேர்ந்ததென ரொறன்ரோவில் திரைப்படம் முடிய  இடம்பெற்ற கலந்துரையாடலில் புதியவன் இராசையா  தெரிவித்திருந்ததை நினைத்துக்கொள்ளவேண்டும். அது ஏற்கப்படக் கூடியதுதான். ஆனாலும் மிகக் குறைந்தளவு பட்ஜெட்டில் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது வாங்கி உலகின் சிறந்த சினிமா விமர்சகர்களால் பாராட்டுப்பெற்ற  திரைப்படங்களை நாம் மறந்துவிடக் கூடாது.

இத் திரைப்படத்தில்  தவிர்த்திருக்கக்கூடிய பல தவறுகள் போஸ்ற் புரொடக்‌ஷனில்தான் நிகழ்ந்துள்ளன. என் ஆதங்கத்தைக் கிளர்த்துவன அவைதான். குறிப்பாக எழுத்துக்கு முன்பாக வரும் சுமார் ஏழு நிமிஷ கடைசி யுத்தக் காட்சிகள் அவசியமற்றவை. அந்த நிகழ்வுகளை உடனடிப் பின்னால் வரும் காட்சிகள்மூலம் பார்வையாளன் சினிமாவிலிருந்தே உள்வாங்கியிருப்பான்.

தானே தன் சக பெண் போராளியை  அவளின் வேண்டுகோளின்படியே எனினும் சுட்டுக் கொல்லநேரும் அவலம் கதாநாயகியின் மனநிலையில் ஏற்படுத்தும் பாதிப்பை அவளது மனது பிளந்தெழும் வேறு பொழுதுகளில் ஒரு பின்னோட்ட துண்டுக் காட்சியாகக் காட்ட நிறையவே வாய்ப்பு இருந்தது. அதன்மூலம் திரைப்படம் மேலும் தன்னை இறுக்கிக்கொள்ள வழி ஏற்பட்டிருக்கும். படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் அதைத் தவறவிட்டிருக்கிறார்.

•Last Updated on ••Friday•, 05 •July• 2019 08:53•• •Read more...•
 

விளிம்பு நிலை மக்களது அவலத்தின் கலாபூ ர்வமான விவரிப்புகள்: இமையத்தின் படைப்புகள் குறித்து..

•E-mail• •Print• •PDF•

புஎழுத்தாளர் தேவகாந்தன்னைவுசார்ந்த எழுத்துக்களில் நாவல், குறுநாவல், நெடுங்கதை, சிறுகதை ஆகிய நவீன இலக்கியத்தின் ஆரம்ப கால பகுப்புகள் இன்று அவ்வளவு வீச்சான ப ரிசோதனையில் இல்லை. நாவல், சிறுகதை என்கிற இரண்டு கூறுகளில்  இன்றைய வாசிப்பின் தளம் இவற்றை பொதுவாக உள்ளடக்கிவிடுகிறது. ஆக, ஒரு படைப்பாளியின் எழுத்துக்களை விமர்சிக்க வரும் இன்றைய ஒரு விமர்சகனுக்கு நிச்சயமாக இவற்றின் பகுப்புபற்றி ஆரம்பத்திலேயே ஒரு சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. தமிழ் எழுத்துலகில் நன்கறியப்பட்ட இமையத்தின் படைப்புகள்பற்றிய ஒரு அறிமுக வியாசம்கூட  இச் சிக்கலை எதிர்கொண்டே தீரும்.

பதிப்பக பகுப்புகளின் ஊடாகவன்றி தனியான ஒரு பகுப்பில் தன் பயணத்தை  மேற்கொள்வது இந்தவகையில்  சிரமமாகுமென்ற புரிதலுடன்தான் இவ்வாண்டு (2019) கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் இமையத்தின் படைப்புகள் பற்றி ஒரு அறிமுக வியாசத்தை இங்கு பதிவாக்க   முனைகிறேன்.

இமையத்தின் கோவேறு கழுதைகள் ( நாவல்-1994), ஆறுமுகம் (நாவல்- 1999), மண்பாரம் (சிறுகதைகள்- 2004), செடல் (நாவல்- 2006), வீடியோ மாரியம்மன் (சிறுகதைகள்- 2008), கொலைச் சேவல் (சிறுகதைகள்- 2013), பெத்தவன் (கதை - 2013), சாவு சோறு (சிறுகதைகள்- 2014), எங் கதெ (நாவல்- 2015), நறுமணம் (சிறுகதைகள்- 2016), செல்லாத பணம் (நாவல்- 2018), நன்மாறன் கோட்டைக் கதை (சிறுகதைகள்- 2019) ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. இமையத்தின் புதிய படைப்புகளையும் பழைய படைப்புகளின் மீள்வாசிப்பையும் செய்தபோதுதான் அவரது எழுத்தின் வீச்சை, கலாபூர்வமான நடையின் வசீகரத்தைக் காண முடிந்திருந்தது.  அவரது கருத்தியலை சரியாக இனங்கண்டு முன்வைக்க முனைகிற அதே வேளையில், அந்த நடையின் வசீகரத்தையும்  ஓரளவேனும் பதிவாக்க இவ்வியாசத்தில் நான் முயல்வேன்.

அம்பேத்கர் நூற்றாண்டுடன் தமிழகத்தில் வீச்சுப்பெற்று தலித் இலக்கியம் தன் செல்நெறியில் வளர்ந்துசென்ற வேளையில், அதுபற்றிய காரசாரமான விவாதங்கள் தமிழ்ப்பரப்பில் உருவாகின. அது மராட்டியத்திற்கும் கன்னடத்திற்கும் உரியதானதுபோன்ற தோரணையில், உச்சாலியா, மற்றும் உபார ஆகிய நூல்களை நினைவில் வைத்து, பேச்சுக்கள் எழுந்தன. அதேவேளையில் அது தமிழக  முற்போக்கு அணியினர்க்கும் பெரிய உவப்பானதாக இருக்கவில்லை எனத் தெரிந்தது. ஆனால் அது அழகரசன்,  என்.டி.ராஜ்குமார், பாமா, விழி.பா.இதயவேந்தன், சிவகாமி,  அன்பாதவன், ராஜ்கௌதமன் போன்றவர்களின்  எழுத்துக்கள்  அதை வலுவாக புனைவு மற்றும் கருத்தியல் தளங்களில் தன்னை நிறுவிக்கொண்டது. தி.க.சிவசங்கரபோன்ற முற்போக்காளர்கள்கூட தலித்திலக்கியத்திற்கு ஆதரவாக குரகொடுத்தனர். தலித் இலக்கியம்பற்றி அவ்வேளையில் தி.க.சி. இலக்கு சஞ்சிகையில் எழுதிய கட்டுரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இமையத்தின் முதல் நாவலான ‘கோவேறு கழுதைகள்’ விளிம்பு நிலை மக்களின் கதையைப் பேசியதானாலும், தலித் கருதுகோள் சார்ந்தும், அதன் சித்தாந்தம் சார்ந்துமான எழுத்துமுறையை முன்வைக்கவில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மறுதலையில் விமர்சகர் வெ.சாமிநாதன் அந்நாவலை வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்ததை இச் சந்தர்ப்பத்தில் நினைத்துகொள்ளல் தகும். ஆக, சாதீயம் காரணமாய் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்முறையை, அக் காலகட்டத்தில் வெளிவந்த இமையத்தின்  ‘கோவேறு கழுதைகள்’ நாவல் வெளிப்படுத்தியிருந்தாலும், தலித்திய பாதையில் நடந்துசெல்ல முயலவில்லை. அது சமூக அக்கறை கொண்டவர்களுக்கு வியப்பாகவிருந்தது.

•Last Updated on ••Friday•, 24 •May• 2019 06:33•• •Read more...•
 

தேவகாந்தனின் 'கதாகாலம்' – மற்றொரு மகாபாரத மறுவாசிப்பு

•E-mail• •Print• •PDF•

- கேரளத்தின் துஞ்சன்பறம்பில் 2018 டிசம்பர் 21-23 நடந்த மகாபாரத சர்வதேச மகாநாட்டில்  கவிஞர்  சோ.பத்மநாதன் ஆற்றிய உரை. -

தேவகாந்தனின் 'கதாகாலம்'-   கவிஞர் சோ.பத்மநாதன்  -மகாபாரதம் என்பது என்ன? வியாசரால் சம்ஸ்கிருத மொழியில் சொல்லப்பட்ட ஃ எழுதப்பட்ட ஒரு கதை. அரசுரிமை பற்றி தாயாதிகளிடையே எழுந்த தகராறு கொடிய போராய் விளைந்து பேரழிவில் முடிந்ததை இக்கதை கூறுகிறது.  கி.மு  1000 அளவில் இன்றைய தில்லிக்கு  அண்மையில் இருந்த அஸ்தினாபுரமே இக்கதைக்குக் களம். பல நூற்றாண்டுகளாக உபகண்டத்தின் பல பகுதிகளில் வாய்மொழியாக வழங்கியதாதலின், என்ன தான் வரலாற்றடிப்படை இருந்தாலும், மகாபாரதம் புனைவாகவே எம்மை வந்தடைந்துள்ளது எனக் கொள்வது தவறாகாது.

பாரதக் கதையைச் சொன்னவர்கள் சூதர்கள்.  இக்கதை சொல்லிகள் சொன்னவை 'ஜெய கதைகள்' எனப்பட்டன.  சைவசம்பாயனர், உக்கிரசிரவஸ் முதலிய புகழ்பெற்ற கதை சொல்லிகளோடு பேரறியாக் கதை சொல்லிகள் பலர் நாடுமுழுவதும் திரிந்து பாமர மக்களுக்குப் பாரதக் கதை சொன்னார்கள்.

தன் தந்தை பரீக்ஷித்து பாம்பு தீண்டி இறந்ததால், பாம்பினத்தையே பழிவாங்குதற்காக, ஜனமேஜயன் ஒரு ஸர்ப்பயாகம் செய்யத் தொடங்குகிறான்.  அவனுக்கு வைசம்பாயனர் பாரதக் கதையைச் சொல்கிறார்.

மகாபாரதம் வாய்மொழி மரபுவழி வந்து பிற்காலத்தில் எழுத்துருவம் பெற்றது என்பது வெளிப்படை. கதை சொல்லியான வியாசர் (கிருஷ்ண துவைவபாயனர்) ஒரு கதாபாத்திரமாகவும் வருகிறார்.

மகாபாரதத்தைத் தமிழ் செய்யும் முயற்சிகள் மிகப்பழைய காலத்திலிருந்து நடைபெற்று வந்துள்ளன. 'மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்பது கி.பி 7ஆம் நூற்றாண்டுக்குரிய சின்னமனூர்ச் செப்பேடு.  9ஆம் நூற்றாண்டில் எழுந்த பெருந்தேவனாருடைய பாரதவெண்பா – முழமையானதாய் இல்லாதபோதும் - தமிழில் கிடைக்கும் மகாபாரதங்களுள் காலத்தால் முந்தியது.

வில்லிபாரதம் என வழங்கும் வில்லிபுத்தூராழ்வார் பாரதம் 15ஆம் நூற்றாண்டில் வந்தது.  செய்யுள்களால் அமைந்த இந்நூலை அச்சுவாகனமேற்றியவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர்.

மகாபாரதத்தின் நாயகியாகிய பாஞ்சாலி (திரௌபதி)யை மையப்படுத்தி சூதாட்டத்தில் அவள் பணயமாக வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதையும் அவள் சபதத்தையும் ஐந்து சருக்கங்களில், எளிய நடையில் ஒரு நவீன காவியமாகப் பாடியவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார்.  பாஞ்சாலிக்கு நேர்ந்த அடிமை வாழ்வையும் அவமானத்தையும் அந்நியர் ஆட்சியில் பாரதநாட்டுக்கு நேர்ந்த இழிநிலையாக, பூடகமாகச் சுட்டி, தேசவிடுதலைக் குரலாக தன் படைப்பை ஆக்கியது பாரதியின் சாதனை எனலாம்.

மகாபாரதத்தை மீளக்கூறும் முயற்சிகள் நெடுங்காலமாக நடைபெற்று வந்துள்ளன.  என் பார்வைப் பரப்புக்கெட்டியவற்றுள் மிகப் பழைய மீள்கூறல் ஐராவதி கார்வேயினுடையது (1967) இது மராத்தியில் எழுதப்பட்டது.  அமெரிக்காவின் பென்ஸில்வேனிய பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்ட காலத்தில் (1969) இப்பெண்மணி 'யுகாந்தா' என்னும் தலைப்பில் இதை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பின்னர் மேலும் பல மொழிகளிலும் இது மொழிபெயர்க்கப்பட்டது.

திரௌபதி பாண்டவர் ஐவருக்கும் மனைவியாவது வேண்டும் என்றே செய்யப்பட்டதல்ல என்றும், குந்தி உள்ளே இருக்க வெளியே பாண்டவரும் நிற்க, 'அம்மா, ஒரு கனி கொண்டு வந்தோம்!' என்று யுதிஷ்ரன் சொன்னான் என்றும், 'நீங்கள் ஐவரும் அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்' என்று குந்தி சொன்னதாகவும், தாயின் கட்டளையைப் பாண்டவர்கள் நிறைவேற்றியதாகவும், காலம் காலமாகக் கதை சொல்லப்பட்டு வந்தது.  இதைப் புறந்தள்ளி, பாண்டவர்களை ஒற்றுமையாக வைத்திருப்பதற்காக, குந்தி செய்த சூழ்ச்சியாக இதை கார்வே காட்டுகிறார். 'தன் மக்கள் மூவரை மட்டுமன்றி மாத்ரியின் மக்களையும் பிரிக்க முடியாதபடி குந்தி பிணைத்தாள்'

திருதராஷ்டிரன் பாண்டவர்களையும் குந்தியையும் வாரணாவதம் அனுப்புகிறான்.  அரக்கு மாளிகையில் வைத்து அவர்களை எரிக்க, புரோசனன் என்றொருவன் ஏற்பாடு செய்யப்படுகிறான்.  இச்சதியை முன்கூட்டியே அறிந்த விதுரன், யுதிஷ்டிரனை எச்சரித்ததுமன்றி, அவர்கள் தப்பும் மார்க்கத்தையும் சொல்லி இருந்தான்.  வாரணாவதத்தில் வசித்த காலத்தில், தன்னோடு நெருக்கமாகப் பழகிய ஒரு வேட்டுவப் பெண்ணுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் உணவும் மதுவும் கொடுத்து உறங்கச் செய்தபின், சுருங்கை வழியே குந்தியும் பிள்ளைகளும் தப்பிச் செல்ல, வேட்டுவப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அரக்கு மாளிகையில் எரிந்து ஒழிந்தனர்.

•Last Updated on ••Monday•, 22 •April• 2019 20:37•• •Read more...•
 

'தனிமனித அவலத்தின் நினைவுகள் கூட்டு மனநிலையில் வடுவாக மாறுகின்றன.' பா.அகிலனின் 'அம்மை' கவிதை நூலை முன்வைத்து…

•E-mail• •Print• •PDF•

'தனிமனித அவலத்தின் நினைவுகள் கூட்டு மனநிலையில் வடுவாக மாறுகின்றன.' பா.அகிலனின் 'அம்மை' கவிதை நூலை முன்வைத்து…  தேவகாந்தன்மறைந்த கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்மூலம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பா.அகிலனது கவிதைகளுடனான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்தே 'பதுங்கு குழி நாட்கள்' தொகுப்புக்குள்ளான என் பிரவேசம் இருந்தது. அவரது அடுத்த கவிதைத் தொகுப்பு 'சரமகவிகள்' வெளிவந்தபோது, மேலும் அவரது கவிதைகளை அறிவதற்கான தரவுகளுடன் நான் இருந்திருந்தேன். 'அம்மை' தொகுப்பு வெளிவந்தபொழுது அவருடன் நேரடி அறிமுகமே உண்டாகியிருந்தது. கவிதைகளின் அகத்துள்ளும் அகலத்துள்ளும் சென்று தேட இது இன்னும் வாய்ப்பாக அமைந்தது.  

'அம்மை' தொகுப்பை புரட்டியதுமே என் மனத்தில் ஞாபகமானது சோ.ப.வின் 'தென்னிலங்கைக் கவிதைகள்' மொழிபெயர்ப்பு நூலுக்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதியிருந்த 22 பக்க முன்னுரை. 'அம்மை'யிலும் கீதா சுகுமாரனின் அதைவிட நீண்ட பின்னுரையொன்று இடம்பெற்றிருக்கிறது. பா.அகிலனின் மூன்று கவிதைத் தொகுப்புகளினையும் உள்ளடக்கி பல தளங்களினூடாகவும் அலசிய ஆய்வு அது. எனினும் பின்னுரையின் தேவை பின்னாலேதான் ஏற்படுகிறது. அப்போது 'அம்மை' கவிதைகள் குறித்து வாசகன் இன்னும் கூடுதல் வெளிச்சம் பெறுகிறான்.

ஈழக் கவிதையாக வரலாற்றின் அடுக்கில் வைத்தும், இதிலிருந்து கிளைத்த புலம்பெயர் கவிதையென்ற புதிய வகையினத்துடன் ஒப்பவைத்தும், தமிழ்க் கவிதையானதால் தமிழக கவிதைகளுடனும் 'அம்மை' நோக்கப்படலாம். அது 'அம்மை'பற்றிய அகல்விரிவான ஒரு பார்வையைத் தருமென்பது மெய்யே. ஆனாலும் கவிதையென்ற ஒற்றைத் தளத்தில் இது அடையக்கூடிய பேறுகள் முக்கியமானவை. அதனால் இவ்வொப்பீடுகளின் கவனிப்பு அகன்றுவிடாதவாறு கவிதையின் நயம் காண்பதே எனது எண்ணம்.

நாற்பத்திரண்டு கவிதைகளைக்கொண்ட 'அம்மை' இருபத்தொன்பது கவிதைகளைக் கொண்ட 'காணாமற் போனாள்' என்றாகவும், மீதி பதின்மூன்று கவிதைகள் 'மழை'யென்றாகவும் அமைவுபெற்றிருக்கின்றது. ஆயினும் துல்லியமாய் வித்தியாசப்படும் பொருள்களைப் பேசுகிற கவிதைகளை இவை கொண்டில்லை. ஒரே விஷயத்தை அடிநாதமாய்க்கொண்டு வெவ்வேறு கதிகளிலும் ஆழங்களிலும் பேசுகிறவையாகவே அவை பெரும்பாலும் இருக்கின்றன. வேறுவேறு உணர்ச்சிகளைப் பேசுகிற கவிதைகளை தொகுப்பு உள்ளடக்கியிருப்பினும் அவை 'மழை'யென்கிற இரண்டாம் பகுதியிலேயே அதிகமாயும் உள்ளன. இந்த இரண்டு வகைக் கவிதைகளுக்கிடையிலும் கவிதைநிலை சார்ந்த வித்தியாசம் இருக்கவே செய்கிறது. அது அவை வெளிப்படுத்தும் கருத்துக்களின் காரணத்தாலாகும்.

தனதும், பிறரதுமான போர்க்கால அனுபவங்களிலிருந்து சுழித்தெழுந்த இத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் ஊற்று மன உடல்ரீதியாக அடைந்த அவலங்களினதும் வடுக்களினதும் மய்யத்திலிருந்தே பீரிட்டெழுகிறது. கைகால்கள் போன்ற பொறிகள் மட்டுமில்லை, புலன்களும்கூட இழக்கப்பட்டன. மிகக்கொடூரமான மனித அவலம் சம்பவித்தது. ஆனால் அந்த அவல உணர்வுகள் மீளுதல் சாத்தியமற்ற நிர்கதியின் இருளாய் உறைவடைந்து மேலும் பகுக்கக்கூடிய திண்மமாய் 'அம்மை' கவிதைகளில் மாற்றம் பெறுகின்றன.  

போர்க்கால அவலங்களில் அமிழ்ந்துகிடந்து அவற்றின் உடலியற் துன்பங்களையும், மனோவியல் பாதிப்புகளையும் பொதுவில் பேசுகிற நிலையொன்று இருக்கிறது. இது வெளிப்படையானது. இன்னொன்று, தன்னை அவலத்தின் பின்னால் மறைந்திருந்துகொண்டு குரல்மட்டும் கொடுத்துக்கொள்கிற ஒரு நிலை.

•Last Updated on ••Friday•, 14 •September• 2018 22:12•• •Read more...•
 

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

•E-mail• •Print• •PDF•

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்தேவகாந்தன்2016இல் காலச்சுவடு வெளியீடாக வந்த 'நட்ராஜ் மகராஜ்' தீவிர வாசகர்களின் கவனத்தைப் பெற்ற நாவல்களில் ஒன்றாக அப்போது இருந்தது. அதன் வாசிப்பும் வாசிப்பின் மேலான விமர்சனங்களும் இன்னும் ஓயவில்லையென்றே படுகிறது அல்லது இன்னும் ஓய்ந்துவிடக்கூடாத அவசியத்தோடு இருக்கிறது. 

முதல் தடவை 2016லேயே நாவலை வாசித்திருந்தபோதும், 319 பக்கங்களினூடாகவும் உள்ளோடியிருந்து தன்னை வெளிப்படக் காட்டாதிருந்த அந்த ஒற்றைச் சரடை என்னால் காணக்கூடவில்லை. நாவலிலிருந்து ஒரு இழையை இழுக்கிறபோது அது கழன்று ஒரு துண்டாக வந்து விழுந்துவிடுவதாய் இருந்தது. இன்னொரு இழையை இழுக்கிறபோதும் நிலைமை அவ்வாறாகவே இருந்துவிட்டது. இழைகள் வெளியே வந்து விழுந்திருந்தாலும் மறுபடி புதிதாக அந்த இடத்தில் அவை முளைத்துக்கொண்டே இருந்துவிட்டன. அது தவிர்க்கவியலாதது. ஏனெனில் அதுவும் நாவலின் பாகமாகவே இருந்தது. அதனால் 319 பக்கங்களினூடாகவும் இழைந்தோடிய இழையை என்னால் காணவே முடியாது போய்விட்டது. அது எனக்கு ஒரு அதிசயமாகவே இருந்தது. 

என்னில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நூல் குறித்தும் நான் நண்பர்களுடன் உரையாடாமலோ எழுத்தில் பதிவிடாமலோ இருந்ததில்லை. ஆனால் மனத்துள் பாதிப்பை ஏற்படுத்திய 'நட்ராஜ் மகராஜ்'பற்றி எதையும் செய்ய முடியாமல் நான் வெறிதே விட்டிருந்தேன். அதையொரு சவாலாக எடுத்துக்கொண்டு இரண்டாம் முறையாகவும் நாவலுள் பிரவேசித்தேன். அதன் வாசிப்பு எனக்கு அலுத்திருக்கவில்லை. சரியான இழை அப்போது தட்டுப்பட்டதுபோலிருந்தது. ஆனால் எனது 'கலிங்கு' நாவல் என் முழு கவனத்தையும் நேரத்தையும் தனக்காகக் கேட்டுக்கொண்டிருந்ததில் நான் இதற்கான நேரமொதுக்க முடியாதுபோய்விட்டேன். இப்போது சாவகாசமான நிலையில் ஒரு மூன்றாவது வாசிப்பைச் செய்தபோது அந்த 319 பக்கங்களிலும் உள்ளோடியிருந்த இழையை என்னால் கண்டடைய முடிந்தது. அது உண்மையில் பல இழைகள் சேர முறுக்கப்பட்ட ஒரு கயிறே.

நவீன யுகத்தின் அவசரங்களும் அவசங்களும் பதினெட்டு வருஷங்களுக்கு முந்தியிருந்த அந்த இருபதாம் நூற்றாண்டுபோலக்கூட இல்லாமல் வெகுவான மாற்றங்களை அடைந்திருக்கிறது. அது மனிதனில் விழுத்தியிருக்கும் அவாக்கள் விரக்திகள் பேதலிப்புகள் யாவும் மனித மனநிலையின் மாறுபாடும் பிறழ்ச்சியுமாய் எதிர்வினை செய்கின்றன. அவ்வாறான மனநிலை கொண்ட மனிதர்கள் வாழ்வியலில் மிக இயல்பாக எங்கும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதை மிக இலகுவாக டிப்றெஷன் எனக் கூறிவிட்டு, அந்த மனநிலையோடேயே நம்மோடு உறவுகொண்டுள்ள பலரை நாம் கவனித்திருக்க முடியும். அல்லது அவ்வாறான மனநிலையுடையவர்களாக அவர்கள் நம்மைக் கணித்திருக்கக் கூடும். அவதி மனங்களின் மனநிலையென்பது பயித்தியத்தின் ஒரு ஆரம்பக் கூறுதான். மருத்துவம் இன்றிக்கூட இந்த மனநிலையாளர் இயல்பான வாழ்க்கைக்குத் தகுதியானவர்களாக இருக்கமுடியும். ஏதோவொரு பொழுதிலும் ஏதோவொரு வகையிலும் அவரவரும் உணர்ந்திருக்கக்கூடிய இந்த மனநிலை சமூகத்துக்கில்லாவிடினும் அவருக்கே தீங்கானதென்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அது அவரை அழுத்தும் விஷயத்தின் அளவும் விசையும் சார்ந்ததாகவிருக்கும்.

•Last Updated on ••Monday•, 27 •August• 2018 14:55•• •Read more...•
 

'மொழிபெயர்ப்பெனத் தெரியாதபடி கவிதைகளுள் ஆழ வாசகனால் முடிந்திருந்தது'. 'தென்னாசியக் கவிதைகள்' குறித்து…

•E-mail• •Print• •PDF•

'மொழிபெயர்ப்பெனத் தெரியாதபடி கவிதைகளுள் ஆழ வாசகனால் முடிந்திருந்தது'.  'தென்னாசியக் கவிதைகள்' குறித்து…தேவகாந்தன்கவிஞர் சோ.பத்மநாதனின் தொகுப்பிலும் மொழிபெயர்ப்பிலும் வெளிவந்துள்ள 'தென்னாசியக் கவிதைகள்' என்ற இந்த நூலே அகண்ட பிராந்தியம் சம்பந்தமாக வெளிவந்த முதல் தமிழ் நூலாக இருக்கமுடியுமெனத் தோன்றுகிறது. அந்த வகையில் இதுபற்றி சரியான ஒரு மதிப்பீட்டைக் கொள்ளுதல் தொடர்ந்தேர்ச்சியான இதுபோன்ற முயற்சிகளுக்கு ஒழுங்கமைந்த வழிகாட்டியாக இருக்கமுடியும்.

SAARC என சுருக்கமாக அழைக்கப்படும் South Asian Association for Regional Corporation என்ற இந்த அமைப்பு 1985ஆம் ஆண்டளவில் தோற்றுவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, பூட்டான், நேப்பாளம், மாலைதீவுகள், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் தலைமையகம் நேப்பாளின் காத்மண்டுவில் இருக்கிறது. வர்த்தகத்துக்கான முன்னுரிமைகளைக் கருத்தில்கொண்ட அமைப்பாகத் தொடங்கப்பட்டாலும், அதற்கும் மேலான இணக்கப்பாடுகளை இலக்கியமூடாக உள்வாங்கும்படியாக ஆரம்ப காலம்தொட்டே இதன் நடைமுறைகள் இருந்துவருகின்றன. அதன்படி தென்னாசிய நாடுகளின் ஆளுமைக்கான விருது உட்பட இலக்கியச் சாதனைக்கும் மற்றும் இளைஞர் சாதனைக்குமான விருதுகள் வழங்கலுமென திட்டங்கள் பலவற்றை இது தன்னகத்தே கொண்டிருக்கிறது. இவற்றில் 25000 டொலர் மதிப்பான தென்னாசிய நாடுகளின் ஆளுமை விருதானது முதல் தடவைக்குப் பின்னால் எப்போதும் வழங்கப்படவில்லை. ஆனால் இலக்கியச் சாதனை விருதுகள் தொடர்ந்து வழங்கப்பட்டே வருகின்றன. மகாஸ்வேதாதேவி, மார்க் ரலி, சுமன் பொக்றெல் மற்றும் சீதாகாந்த் மஹாபத்ர உட்பட பல தெற்காசியாவின் முக்கிய இலக்கியவாதிகள் இப்பரிசினைப் பெற்றிருக்கிறார்கள். 

சார்க் நாடுகளின் கவிஞர்களது ஒன்றுகூடல்களில் வாசிக்கப்பெற்ற கவிதைகளிலிருந்து 'தென்னாசியக் கவிதைகள்' என்ற இந்நூல் தொகுக்கப்பெற்றிருக்கிறது. இந்தி, வங்காளம், தெலுங்கு, மலையாளம் ஆகிய இந்திய மொழிக் கவிதைகளுடன் சிங்களம், நேப்பாளம் ஆகிய மொழிகளின் கவிதைகளும் இவற்றின் ஆங்கிலவாக்கத்திலிருந்து மொழிபெயர்ப்பு ஆகியிருக்கின்றன. நேரடியாக தமிழிலிருந்து தேரப்பட்ட ஒன்பது கவிதைகளுட்பட அறுபத்தைந்து கவிஞர்களின் எண்பத்தேழு கவிதைகள் இத்தொகுப்பிலுண்டு. ஒட்டுமொத்தமான எண்பத்தேழு கவிதைகள் மேலுமான ஒரு கண்ணோட்டத்தைச் செய்திருந்தாலும், முப்பத்தைந்து கவிதைகளின் தேர்விலிருந்து நல்ல கவிதைகளாக பதினேழு கவிதைகளையும் சிறந்த கவிதைகளாக இரண்டினையும்கொண்டு இந்த நூலின் விசாரணையைத் தொடங்கவிருக்கிறேன். 

மூன்றாம் உலகநாடுகளென பொருளாதார அரசியல்ரீதியில் பொதுவாகக் குறிக்கப்பெற்ற நாடுகளின் வறுமை, வேலையின்மை, வாழ்க்கைத் தரம், சுகாதார விருத்தியின்மை ஆகியன ஒரே தரத்தனவாகத்தான் இருக்கின்றன. அந்தவகையில் தென்னாசிய அமைப்பைச் சேர்ந்த இந்த நாடுகளின் தரமும் பெரிதான வித்தியாசங்கள் அற்றவையே. ஆயினும் இவை ஒவ்வொன்றினுள்ளும் உள்ளோட்டமாய் இவற்றின் தனித்துவமான உணர்வுகள் இருந்துகொண்டிருக்கின்றன என்ற உண்மையையும் நாம் உதாசீனம் செய்துவிட முடியாது. அவற்றை இங்கே முழுமையாகக் காணமுனைவது அனுசிதமான செயற்பாடு. அதனால் ஒட்டுமொத்தமான இவற்றின் உணர்வுகளை மய்யப்படுத்திக்கொண்டு, அவற்றின் அடிப்படையில் கவிதைகளில் எழும் குரல்களின் தேடல்களையும், திசைகளையும் கணிப்பதோடு கவிதைரீதியிலான இவற்றின் மதிப்பீட்டு முயற்சியையும் செய்வதே இங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

இன்றைக்கு வளர்முக நாடுக (Developing Countries) ளென இவை குறிக்கப்படுவதாலேயே இவை பின்தங்கிய நாடுகளென அழைக்கப்பட்ட காலத்து தரத்திலிருந்து பெருமளவில் வேறுபட்டுப்போகவில்லை. இங்கே முக்கியமாகவும் முதன்மையாகவும் சட்டத்தின் ஆட்சி வலுப்பட்டிருக்கவில்லை என்பதில் நம் கவனத்தைக் குவிக்க முனைந்தால், அதிலிருந்து தொடர்புடைய பல விஷயங்களும் தாமாகவே மேலே எழுந்துவிடும். இந்த நாடுகளில் ஜனநாயக உரிமைகளின் பயில்வினையும், பத்திரிகைத் துறையின் சுயாதீனத்திற்கு விளையும் இடைஞ்சல்களையும் இங்கிருந்தே புரிந்துகொள்ள முடியும்.

•Last Updated on ••Monday•, 30 •July• 2018 22:18•• •Read more...•
 

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள் மீதான ஒரு விசாரணை

•E-mail• •Print• •PDF•

கென்றிக் இப்சென்தேவகாந்தன்மனவெளி கலையாற்றுக் குழுவினரின் 19வது அரங்காடல் சென்ற ஜுன் 30இல் ப்ளாட்டோ மார்க்கம் அரங்கில் இரண்டு காட்சிகளாக நிகழ்ந்து முடிந்திருக்கிறது. கடந்த காலங்களைப்போல் பல்துறைகளாகவும் பல வகைகளாகவும் மேடையேற்றப்பட்ட அரங்க நிகழ்வுகளாகவன்றி இம்முறை ஒற்றை நாடகத்தில் நிகழ்வினை அடக்கியிருக்கிறார்கள். முந்திய அரங்குகள் ஏதோ அளவிலும் வகையிலும் மண்ணின் அரசியல் சமூகப் பின்புல அளிக்கைகளாக இருந்தவேளை, இம்முறை கலைத் தன்மையை முதன்மைப்படுத்தி நடிப்பு உடையலங்காரம் காட்சியமைப்பு உரையாடல்கள் என ஒரு பிரமாண்டம் தோன்றக்கூடிய வண்ணம் ஒரு முழு நீள நாடகம் மேடையேற்றப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களின் மிகுந்த அபிமானத்தைப் பெற்றிருந்ததோடு, நாடக அபிமானிகளின் பார்வையிலும் நிறைவைத் தந்த நாடகமாக அது இருந்ததை மறுப்பதற்கில்லை. 

இந்த நாடகத்தை மேடையேற்றுவதற்கு ஒரு துணிச்சல் தேவை. அது நிறையவே மனவெளிக்காரருக்கு இருந்திருக்கிறது. ஒன்றேகால் நூற்றாண்டுகளுக்கு முற்படச் சம்பவிக்கும் நிகழ்வுகளை, அக்காலகட்டத்து மக்களின் வாழ்வியலை, பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துவிட்ட புதியவொரு தலைமுறையினருக்கு மத்தியில் நிகழ்த்திக் காட்டுவதானது எதிரோட்டத்தில் நீந்த முனைவதற்கு நிகரானது. 

அதற்குக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, நாடகம் Tragedy \ Comedy என எந்த வகையினுள்ளும் விமர்சகர்களால் வகைப்படுத்த முடியாதிருந்தமை. பின்னால் இது Tragic Comedyயாக வகைப்படுத்தப்பட்டாலும் முந்திய பதிவிலிருந்த ஆழம் புதிய பகுப்பைக் கண்டுகொள்ளவில்லை. இரண்டு, காட்சி மாற்றமின்றி ஓரங்க நாடகம்போல் அமைந்த நிகழ்வின் காலநீட்சி. மூன்று, நவீன மேடை நாடகத்தின் எந்தவிதமான தொழில்நுட்ப அறிமுறையும் (ஒலிவாங்கிகள் அமைக்கப்பட்டிருந்த விதமுட்பட) பின்பற்றப்படாமை. ஒளி ஒலி மூலமாக காலநிலை (நாடக நிகழ்வுகளின் காலம் ஒரு கிறிஸ்துமஸ்சுக்கு முன் தினத்திலிருந்து புதுவருஷம்வரையான காலமாகும். அது நிறைந்த பனிப் பொழிவையும், குளிர் உறைவையும் கொண்டது), பகல் இரவு ஆகியன நாடகத்தில் பதிவாக முயற்சி எடுக்கப்படவேயில்லை. இந்நிலையில் பார்வையாளர் அலுத்துப்போகாதபடி நிகழ்வை நகர்த்துவதென்பது சாமான்யமான விஷயமில்லை. இருந்தும்தான் இரண்டு மணி ஐம்பது நிமிஷங்களை எடுத்திருந்த நாடகத்தின் நீட்சியில் சலிப்பே ஏற்பட்டிருக்கவில்லை. 

பாத்திரங்களுக்கான தேர்விலிருந்து உடையமைப்பு ஊடாக இசையமைப்புவரை நாடகத்தில் வெகுகவனம் செலுத்தப்பட்டிருந்ததுதான். ஆனால் இவை ஒரு அரங்காற்றுகையை மேலெழுந்தவாரியாகப் பார்ப்பதின் அம்சங்களாகும். நிறைவான அளிக்கையிலிருந்து முழுநிறைவான அளிக்கையாவதை இடறிய அம்சங்கள் எவையென விசாரிப்பதே விமர்சனத்திற்கு நியாயம்செய்யும். இனிவரும் காலங்களின் புதிய புதிய முன்னெடுப்புகளுக்கு துணைசெய்வதாகவும் அது அமையமுடியும். 

பாத்திரங்கள் ஒவ்வொன்றினது உரையாடல் மொழியிலும் தனித்துவம் தெரிந்திருந்தது. நோறாவும், டாக்டர் றாங்க்கும், கிறிஸ்ரினாவும், நில்ஸ் குறொக்ஸ்ராட்டும், ரொர்வால்ட் ஹெல்மரும் மூலப்பிரதியைப்போலவே மொழியாக்கப் பிரதியின் உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார்கள். அதன் சரளமும், பாத்திரங்களின் குணசித்திரங்களை மீறவோ குறையவோ செய்யாத அர்த்த பரிமாணம் கொண்ட வரிகளின்மூலம் துணியமுடிகிறது.

•Last Updated on ••Tuesday•, 17 •July• 2018 14:06•• •Read more...•
 

வாசிப்புக்குச் சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…

•E-mail• •Print• •PDF•

வாசிப்புக்கு சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…தேவகாந்தன்2016 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூல்பற்றி எழுதவேண்டுமென்று எந்த எண்ணமும் தோன்றியிருக்கவில்லை, இதை வாசிக்க ஆரம்பித்தபொழுதில். அது பழக்கமும் இல்லை. வாசித்து முடிந்த பிறகு எழுத மனம் உந்தினால்தான் உண்டு. சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை இரண்டரைத் தடவையாக வாசித்த பிறகு இன்றைக்கு எழுத மனம் ஏற்பட்டிருக்கிறது. ஒருமுறை வாசித்து மூடிவைத்துவிட்டு நான்கைந்து நாட்கள் கழிய புத்தகத்தை தொடர முயன்றபோது முடியாமல்போனது. பக்கங்களை பின்னோக்கி நகர்த்தியபோதும் தொடுப்பை பிடிக்க முடியவில்லை. மீண்டும் வாசித்தேன். வாசிப்பில் அலுப்புத் தோன்றவில்லை. புதியதான தோற்றம். அது மீண்டும் மீண்டும் தன் ரகசியங்களைக் கட்டவிழ்த்துக்கொண்டே இருந்தது. சுகம் எச்சமாய் வந்தது. அதுவே இப்பிரதியின் அறுதியான பலன். ‘விடம்பன’த்துக்கு அடையாளமொன்று தேவைதான். அவ்வகையில் இதை நாவலென்று கொள்ளமுடியும். இதன் முன்னுரையில் சுகுமாரன் வகைப்படுத்துவதுபோல் picaresque வகையாகவும் எடுத்துக்கொள்ளலாம். Picaresque வகையினத்தின் பல்வேறு அம்சங்களுள் ஒன்றிரண்டு பண்புகளையே அது இறுக்கமாகப் பற்றிக்கொண்டு செல்கிறது. பிக்காறெஸ்க் நாவலில் அல்லது உலுத்த வகை நாவலில் தன்னிலைக் கதைசொல்லும் பண்பை இது எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிடுகிறது.

ஜேர்மன் மொழியில் 1959இல் வெளிவந்து 1961இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான குந்தர் கிராஸின் The Tin Drum இவ்வகை நாவலுக்கு ஆரம்ப கால முன்னுதாரணமென்று சொல்லப்பட்டாலும், அந்த அமைவில் ‘விடம்பனம்’ செல்லவில்லை. ஆனாலும் அந்த வகையினத்தில் தவிர வேறில் இதைச் சேர்க்கவும் முடியாது. பெரும்பாலும் நீண்ட வசனங்களைக்கொண்டு அமைந்திருக்கிறது பிரதி. சல்மான் ருஷ்டியினதைப்போன்ற நீள வசனங்கள். வாசிப்பை மெல்ல நகர்த்துகிற அம்சம் இதுவேயெனினும், இதில் மனம் லயித்துவிடுகிறதைச்  சொல்லுகிறபோது, சில நீண்ட வசனங்கள் இடறச் செய்வதையும் சேர்த்தேதான் குறிப்பிடவேண்டும். பாத்திரங்கள் சில நெஞ்சில் நிறுதிட்டமாய்ப் பதிந்துவிடுகின்றன. அவளும் இவளும் என வரும் இரு பெண்பாத்திரங்களான ராணி மார்க்கும், ஆடுதன் ராணியும் அவற்றில் தலையாயவை. அவளா இவளா என்று எழுவாயைக் கண்டறிய முடியாத குழப்பம், கவனம் சிதறினால் வாசகனில் விழுந்துவிடுவதைத் தவிர்க்க முடியாதிருக்கும். இது திட்டமாய் அமைக்கப்படவில்லை என்பதை மீறியும், இவ்வகைக் கதை சொல்லலுக்கு இதுவே உகந்த முறையென்று எண்ணுமளவிற்குத்தான் இருக்கிறது. புனைவுப் பாத்திரங்களான ஆடுதன் ராணியும், ராணி மார்க்கும், மணிமொழியும், தமிழ்வாணனும், காத்தானும், மூக்காயியும், சின்னக் கட்டாரியும்போலவே கருங்கண்ணியும், ஜிம்மியும்கூட மனத்தில் பதிகிற விதமாகவே நாவல் நடந்திருக்கிறது. அவ்வப்போது குறுக்கீடு செய்யும் அம்மாஞ்சிப் பாத்திரத்தைக்கூட, அதன் குணவியல்புகளிலிருந்து மங்கலாகவேனும் ஒரு உருவத்தை வாசகனால் கற்பிதம் பண்ணமுடிகிறது. அம்மாஞ்சி பாத்திரத்தின் சிந்தனையின் வரன்முறையான வளர்ச்சி  நாவலின் தவிர்க்கவியலாப் பக்கங்களாகின்றன. அதனாலேயே ஒரு மங்கலான உருவத்தோடேனும் பாத்திரம் மனத்தில் இருக்கச் செய்கிறது. எனில் இதில் எந்தவொரு தனிப் பாத்திரமும் கதையை நகர்த்தவில்லையென்பது பிரதானமானது. தொடர்ந்தேர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கதையொன்றுடன் நாவல் வந்திருக்கவில்லை. ஆயினும் இதில் ஒரு கதை இருக்கவே செய்கிறது. ஆனால் அந்தக் கதை மய்யமழிந்து கிடப்பதுதான் பிரதியின் விசேஷம்.

•Last Updated on ••Friday•, 30 •June• 2017 11:13•• •Read more...•
 

கலகம் விளைத்து வந்த நாவல்: நீ.பி.அருளானந்தனின் ‘இந்த வனத்துக்குள்’பற்றி…

•E-mail• •Print• •PDF•

 -தேவகாந்தன்-   ஈழத்து நாவல் இலக்கியம் தன்னளவிலான முயற்சிக்கும் சிந்தனைக்குமேற்ப இலக்கியப் பாதையில் முன்னேறிச் சென்றுகொண்டிருப்பினும் அது தன்மேல் பூட்டப்பட்ட விலங்குகளையும் சுமந்துகொண்டேதான் செல்கிறதென்று ஒரு விமர்சகனால் சொல்லமுடியும். இலகு யதார்த்தப் போக்கில் மூழ்கி கருத்துநிலையால் தன்னைச் சுற்றி முன்னேற்றத்தின் சகல சாத்தியங்களையும் சிரமமாக்கிக்கொண்டேதான் அது நடந்திருக்கிறதென்பது கசப்பானதெனினும் உண்மையானது.

ஆரம்ப காலங்களில் மரபு சார்ந்து நடந்த ஈழத்து தமிழ் இலக்கியம் பின்னால் முற்போக்குப் பாதையில் திரும்பிய வேளையிலும் நவீனத்துவத்துக்கான ஒரு மொழியையும் நடையையும் பார்வையையும் கண்டடைந்து தொடர்ந்துசெல்ல முடியாமற்போனமை துர்ப்பாக்கியமே. அதனுடைய முன்னேற்றமென்பது அளந்து அளந்து வைக்கப்பட்டதாக ஆயிற்று. யதார்த்தத்திற்குப் பின்னால் நவீன யதார்த்தம் தோன்றியதென்பதையோ பின்நவீனத்துவப் போக்கு பரீட்சிக்கப்பெற்றதென்றோ அதன் வழி இலக்கியம் மொழியால் நடத்தப்படுகிறதென்பதையோ அது இன்றைவரைக்கும் புரிந்ததாய்ச் சொல்லிவிட முடியாதே இருக்கிறது. தலித் இலக்கியத்துக்கான முன்னோடி எழுத்துக்களை ஈழத்து இலக்கியம் தந்திருந்தபோதும் பெருமைப்படக்கூடிய புனைவிலக்கியமொன்றை அது தரமுடியாதிருந்ததின் காரணம் இங்கே இருக்கிறதெனக் கொள்வதில் தவறில்லை.

தமிழகத்தில் முதல் தமிழ் நாவலான வேதநாயகம்பிள்ளையின் ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ 1879இல் தோன்றியதெனில்  ஈழத்து முதல் தமிழ் நாவலான சித்திலெவ்வை மரைக்காரின் ‘அசன்பேயுடைய சரித்திரம்’ 1885இல் தோன்றிற்றென்பது விமர்சகர் யாவர்க்கும் ஒப்பமுடிந்த முடிவு. எனில் ஈழத்து முதல் தமிழ் நாவல் தோன்றி இன்றைக்கு ஒன்றேகால் நூற்றாண்டுக்கு சிறிது மேலேயாகியிருக்கிறது. இந்த நீண்ட கால வரலாற்றில் எடுபொருள் குறித்த தன்மையால் எஸ்.பொ.வின் ‘தீ’யும் புதிய களநிலை குறித்த தன்மையால் பாலமனோகரனின் ‘நிலக்கிளி’யும் தெளிவத்தை யோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’யும் பேசப்பட்டாலும் மொழியமைப்பின் வசீகரத்தாலும் வலுவான உரையாடல்களாலும் இறுகியதும் வேறுபட்டதுமான நடையினாலும் மங்களநாயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இருதயம்’ தீவிர வாசகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தைப் பெற்றிருந்தது. இதுவே இந்நீண்ட வரலாற்றுப் புலத்தில் ஈழத்து இலக்கியத்தின் சாதனையெனச் சொல்லக்கூடியதாக இருந்தது. இந்நிலையில் அண்மையில் வெளிவந்திருக்கும் நீ.பி.அருளானந்தனின் ‘இந்த வனத்துக்குள்’ நாவல் இதுவரையிருந்த ஈழத்து தமிழ் இலக்கியத்தின் மொண்ணைத்தனத்தினை நொருக்கிப்போடும் மொழி நடை உரையாடல் மற்றும் பொருள் சார்ந்த வி~யங்களின் வல்லபத்தோடு வெளிவந்திருப்பதை அதன் திசைமாற்ற முன்னறிவிப்புக் குரலாக நான் காண்கிறேன். இருந்தும் ஈழத்திலேயே இது பெருங்கவனம் பெற்றிராதது ஆச்சரியகரமானது.

•Last Updated on ••Sunday•, 10 •April• 2016 23:30•• •Read more...•
 

நினைவேற்றம் 6

•E-mail• •Print• •PDF•

 -தேவகாந்தன்-   அறுவடை முடிந்துவிட்டால் வயல்வெளியில் ‘கிளிக்கோடு’ விளையாட்டு தொடங்கிவிடும். பள்ளி முடிந்து வீடு வந்த பின்னால் வயலுக்குச் செல்வதை தவிர்க்கவே முடிவதில்லையயயய. விளையாடாவிட்டாலும் பார்த்துக்கொண்டு இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. சூழ்நிலைமைக்கும் நேரத்துக்கும் தக விளையாடப் போவதற்கு முன்பாகவோ பின்னாகவோ நான் வசந்தாக்கா வீட்டுக்குப் போய் வந்துகொண்டேயிருந்தேன் அந்நாட்களில். சிரிக்கச் சிரிக்கவும் பேசுவதோடு, மிக நகைச்சுவையான வி~யங்களைச் சொல்லும்போது  அவ்வப்போது என் தோளைத் தொட்டுத்தழுவி வசந்தாக்கா பேசுவாள். என்னோடு மட்டும்தான் அவள் அப்படிப் பேசுவதாக நான் நம்பிக்கொண்டிருந்தேன். அதில் இனம்புரியாத ஒரு இன்பத்தையும் நான் அடைந்துகொண்டிருந்தேன். பெரும்பாலும் அவளோடு நான் பேசாத நாட்கள் அதனாலேயே மிக அரிதாக இருந்தன.

ஒரு நாள் வசந்தாக்கா வீட்டுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய எனக்கு சிறிதுநேரத்தில்தான் திடுக்கிட்டாற்போல சந்தேகமாகிற்று, அன்று வீட்டுக்குத் திரும்பிவந்து திண்ணையிலே நான் எனது பாட்டா செருப்பை கழற்றிவிட்டேனாவென்று. அப்படியானால் எங்கோ மறந்துபோய்  விட்டிருக்கிறேன். எங்கே? வயல்வெளி விளையாட்டிடத்தில் மறுபடி போட்டுக்கொண்டது ஞாபகம் வந்தது. அல்லது அவ்வாறான ஒரு ஞாபகத்தை நான் வலிந்து உருவாக்கிக்கொண்டேன். அப்படியானால் வசந்தாக்கா வீட்டு படிக்கட்டில்தான் விட்டிருக்கவேண்டும். அதை மறுநாள்கூட நான் எடுத்துவிடலாம். ஆனால் அங்கேதான் விட்டேன் என்றும் நூறு சதவிகிதம் துணிய முடியாமல் இருந்தது. உடனேயே வசந்தாக்கா வீட்டுக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடினேன்.

•Last Updated on ••Sunday•, 02 •August• 2015 18:46•• •Read more...•
 

நினைவேற்றம் 5

•E-mail• •Print• •PDF•

 -தேவகாந்தன்-   மாரிகாலத்தில் ஒரு அதிகாலை நேரம் முதல்நாளிரவில் வீசிய காற்றுக்கு முற்றம் முழுக்க இறைந்துகிடந்த பூவரசின் பழுத்த மஞ்சள் இலைகளை அம்மா பெருக்கிக்கொண்டிருக்கää விறாந்தையில் தூக்கம் இன்னும் கலைந்துவிடாத சோம்பேறித்தனத்துடன் படுக்கைப் போர்;வையை இன்னும் மேலிலே சுற்றியபடி எந்த விடுப்புமற்ற அந்தச் செயற்பாட்டில் கண் பதித்து அமர்ந்திருந்தேன். பூவரசமிலைகளின் பல்வேறு தர மஞ்சள்கள் தவிர என் கவனத்தைக் கவர அங்கே வேறெந்த அம்சமும் இருந்திருக்கவில்லை.

“மழை வரப்போகுதுபோல கிடக்கு. எழும்பிப் போய் முகத்தைக் கழுவியிட்டு வா” என்று அம்மா எனக்குச் சொல்லுகிறாள். தூக்கம் கலைந்தாலும் சோம்பல் கலைந்துவிடாத நான்ää “போறனம்மா” என்று சொல்லிக்கொண்டே இன்னும் அந்த இடத்தைவிட்டு அகலாமல்.வெளியே செல்;ல புறப்பட்டு தெருவில் வந்த ஒருவர் அம்மாவுடன் படலையில் நின்று பேசுகிறார். போகும்போது சொல்கிறார்ää ‘கெதியாய் கூட்டி முடியுங்கோ. பருத்துறைக்கடல் இரையிறது கேக்குதெல்லே? நல்ல மழைதான் வரப்போகுது’ என்று. அம்மாவின் கூட்டுகைச் சத்தம் நின்றிருந்த அந்தப் பொழுதில் நான் கேட்கிறேன்ää காற்றின் அசைவு தவிர்ந்து வேறு சத்தமற்றிருந்த அவ்வெளியில் கடலின் உறுமலை.

பருத்தித்துறைக்கும் சாவகச்சேரிக்குமிடையில் பன்னிரண்டு மைல்கள். எங்கள் வீட்டிலிருந்து பத்து மைல்களாவது இருக்கும். அந்தளவு தூரத்திலிருந்து இரையும் கடலின் சத்தம் இவ்வளவு தூரத்துக்கு கடந்துவந்திருக்குமெனில்ää ஆயிரம் தரைவைக் கடல்களைவிடவுமே அது பிரமாண்டமாய் இருக்கவேண்டும்! சாவகச்சேரியில் தரவைக்கடல் பார்த்திருக்கிறேன். அதுபோல் கைதடியிலும் நாவற்குழியிலும் எழுந்திருந்த பாலங்களுக்குக் கீழால் விரிந்திருந்த தரைவையில் அலையசைந்த நீர்ப் பெரும்பரப்பையும் பார்த்திருக்கிறேன். அவை சப்தமெழுப்பியதே இல்லை. ஆனால் கண்டிராத கடல் பத்துக் கட்டை தூரத்திலிருந்து எழுப்புகிற சப்தம் இங்கே கேட்கிறது! கடலின் பிரமாண்டம் காண அன்றைக்கேதான் என் மனத்துள் ஆசை விழுந்திருக்கவேண்டும்.

•Last Updated on ••Monday•, 06 •July• 2015 21:06•• •Read more...•
 

பதினேழாவது அரங்காடல் - 2015

•E-mail• •Print• •PDF•

17வது அரங்காடல் - 2015 -தேவகாந்தன்-   மனவெளி அரங்க அளிக்கைக் குழுவினரின் பதினேழாவது அரங்காடல் நிகழ்வு சித்திரை 17,2015இல் வழக்கம்போல் மார்க்கம் தியேட்டரில் நடந்து முடிந்திருக்கிறது. ஐந்து அளிக்கைகள்,சுமார் நான்கு மணிநேரத்தில்; பல்வேறு உணர்வுத் தெறிப்புகளை பார்வையாளரிடத்தில் பதித்துப் போயிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும்பற்றிய விமர்சனமல்ல இக்கட்டுரை. ஒவ்வொரு அளிக்கையும் முடிவுற்ற கணத்தில் மனத்தில் எஞ்சிய உணர்வோட்டம் எது காரணமாய் ஏற்பட்டதென்ற நினைவோட்டத்தின் பதிவுமட்டுமே. மாலை 06.03க்கு தொடங்கிய இரண்டாம் காட்சியின் முதல் நிகழ்வு யாழினி ஜோதிலிங்கத்தின் ‘நீலம்’ என்பதாக இருந்தது. பிரதியின் சொல்லடர்த்தியும்,காட்சிப் படிமங்களும் காரணமாய்,முதல் அளிக்கையாக அது நிகழ்வில் அமர்த்தப்பட்ட ஒழுங்குக்காய் அமைப்பாளர்களுக்கான பார்வையாளனின் பாராட்டைக் கோரியிருந்தது. ஒரு களைப்புற்ற மனம் கனதியான பிரதியொன்றைத் தொடரும் சிரமம் இதனால் தவிர்க்கப்பட்டது. ஒரு இசை நாடகத்தின் பரிமாணத்தின் பல கூறுகளை இது தன்னகத்தே அடக்கியிருந்தது என்பது நிஜம். தீவிர அளிக்கையென்பது அதன் அசைவுகளால் மட்டுமல்ல,ஒலியும்,ஒளியுமாகிய தொழில்நுட்ப உத்திகளின்  உதவியுடன்,காட்சிப்படுத்தலின் இடையீடுறா நீட்சியின் அமைவையும் கொண்டதாய் நவீன அரங்க அளிக்கையின் அனுபவம் தமிழ்ச் சூழலில் முக்கியத்துவமும்,முதிர்ச்சியும் பெற்றுவருவதன் அடையாளமாய் இருந்தது ‘நீலம்’.

•Last Updated on ••Thursday•, 30 •April• 2015 01:14•• •Read more...•
 

நினைவேற்றம் 4

•E-mail• •Print• •PDF•

 -தேவகாந்தன்-   ஐயாவின் மரணத்துக்குப் பிறகு எனக்கு மிச்சமாகிப் போனவை அவரது நினைவும்,அவர் பாவித்த ஒரு பழைய சைக்கிளும்தான். முன்பே சைக்கிள் எடுத்து ஓடித்திரிய வீட்டிலே எனக்குக் கட்டுப்பாடிருந்தது. இப்போது அம்மா பெரும்பாலும் தன் சோகத்துள் இருந்த நிலையில் நான் கட்டறுத்தவனாய் திசையெங்கும் அலைந்து திரிந்தேன்.  இப்பவோ அப்பவோ ஒருபொழுதில் என் குடும்பத்தாருடன் காரிலும்,பஸ்ஸிலுமாய் நான் கலகலத்துச் சென்ற பாதைகளின் காடும்,வயலும்,வெளியும் பேசிய மௌனத்தின் சுவை என் அலைவின் தனிமையில் எனக்குச் சுகிப்பாயிற்று. மாலையின் மஞ்சள் வெளிச்சங்களில் மட்டுமில்லை,நிலாவின் மென்னொளி இரவுகளும்கூட என் அலைதல் காலமாயிற்று. கதைகளிலும்,கட்டுரைகளிலும் வாசித்து ரசித்த நிலக் காட்சிகளின் நிதர்சனம் மேலும்மேலுமாக இயற்கையின்மீதான என் ருசியினை ஏற்றிற்று. பள்ளிப் பாடங்கள் தவிர்ந்த புத்தக வாசிப்பும்,பள்ளிக்குச் செல்லாமலே மேற்கொண்ட ஊர் அலைவும் எனக்குள் ஒரு புதிய உலகத்தைத் திறந்தபோதும்,அதை சரியாகப் புரிந்துகொள்ள முடியாதவனாகத்தான் நான் இருந்தேனென்று நினைக்கிறேன். ஒரு இலக்கு நோக்கியல்லாமல் வெறும் அலைதலாக அது இருந்தது. அப்படியேதாவது பலன் அதிலிருக்குமாயிருந்தாலும் அதன் பேறு உடனடியாக அறுவடைக்குச் சாத்தியமாவதுமல்ல. பன்னிரண்டு வயதில் ஒரு செல்நெறியை நான் உணர்ந்து உள்வாங்கிவிட முடியாது. அதற்கான காலம் வரவேண்டியிருந்தது.

•Last Updated on ••Wednesday•, 22 •April• 2015 22:07•• •Read more...•
 

நினைவேற்றம்: முனை 3

•E-mail• •Print• •PDF•

 -தேவகாந்தன்-   பனி  புகட்டினால், மழையிலே நனைந்தால், வெய்யில் பட்டால், தூசிக்குள் நின்றால் என எதற்குமே தும்மல் வந்து, தடிமனாக்கி, காய்ச்சலும் இருமலும் பிடித்துவிடுகிற ஒரு நோஞ்சான் பிள்ளையாகவே என் சின்ன வயது இருந்திருக்கிறது. இது காரணமாகவே அண்டை அயல் வீடுகளிலே போய் விளையாட நான் அனுமதிக்கப்படவில்லை என் பெற்றோரால். சாதிபற்றிய காரணம் பெரும்பாலும் இரண்டாம் மூன்றாம் தரத்ததாகவே இருந்தது. பாடசாலை மெய்வல்லுநர்ப் போட்டிகளில் பங்குகொள்வது அது தேடிச் சென்று பங்குபற்றுகிற சூழ்நிலையில் அமையாததில் அதற்கு நான் அனுமதிக்கப்பட்டேன். இருந்தும் பத்து வயதுவரை என்னால் பெரிதாக எதனையும் செய்யமுடியவில்லை, இந்த வருத்தக்கார உடம்பு இருந்த காரணத்தால்.

இந்தா, இந்தமுறை விளையாட்டுப் போட்டியில் யூனியர் பிரிவில் சம்பியன் ஆகாவிட்டாலும், இவனுக்கு எப்படியும் நூறு யார் ஓட்டத்திலோ, நீளம் பாய்தலிலோ முதலாம் அல்லது இரண்டாம் பரிசுகள் கிடைத்துவிடும் என்றிருக்கிற நிலையில், விளையாட்டுப் போட்டியிலன்று நான் சுகவீனமாகி எழும்பமுடியாது கிடந்த சம்பவங்கள்தான் என் வாழ்வில் அதிகமும் நேர்ந்திருக்கின்றன.

•Last Updated on ••Thursday•, 04 •December• 2014 22:36•• •Read more...•
 

நினைவேற்றம் முனை 2

•E-mail• •Print• •PDF•

 -தேவகாந்தன்-   ஒரு காலத்தில் எங்கள் கிராமத்தில் குழைக்கடைச் சந்தியென்றொரு இடமிருந்தது. மாரி தொடங்கியதும் குழைக் கடை தொடங்கும். கடையென்றால் விற்கிறதல்ல, வாங்குகிற கடை. தென்மராட்சி குழைக்காடு என்று சொல்லப்படுவதற்கேற்ப நெடுமரங்களும், வேலிமரங்களுமாய் குழை செறிந்து நிழல் விழுந்த பூமியாகவே இருந்தது. வடமராட்சியின் செழிப்பான விவசாயத்துக்காக யூரியாபோன்ற இரசாயன பசளையினங்கள் இல்லாத அக் காலத்தில் பசளையாகப் பாவிப்பதற்கு பனையோலையும், எருவும், குப்பையும் வீடுவீடாகச் சென்று வாங்கியதுபோல, அங்கிருந்து வந்து குழையும் வாங்கினார்கள். குழை வாங்குவற்கான மத்திய ஸ்தானம்தான் குழைக்கடை.

நெடுவாகக் கிடந்த பருத்தித்துறை வீதியை அம்பலந்துறை வயலிலிருந்து தொடங்கி கல்வயலின் அருகுவரை சென்றிருந்த மணலொழுங்கை ஊடறுத்துக்கிடந்த சந்தியில், முதிர்ந்த ஒரு ஆலமரத்தின் கீழே அது கூடியது. கட்டுக்கட்டாக பூவரசு, சீமைக்கிளுவை, வேம்பு, பாவெட்டை, அன்னமுன்னா, கிலுகிலுப்பை, மஞ்சவுண்ணாவென்று வீட்டுமரக் குழைகளும், கொய்யா, கிஞ்ஞா ஆகிய காட்டுமரக் குழைகளும் மரங்கள் மொட்டையடிக்கப்பட்டு கட்டுக்கட்டாகக் கட்டி அங்கே கொண்டுவரப்பட்டு காலை ஒன்பது பத்து மணிவரை நடைபெறும் அக் கடையிலே விற்பனையாகின.

•Last Updated on ••Saturday•, 01 •November• 2014 23:02•• •Read more...•
 

மரணித்த பின்னும் ஜீவித்திருத்தல் என்பது

•E-mail• •Print• •PDF•

2014 செப்டெம்பர் 10இல் நிகழ்ந்த நிர்மலதா -தேவகாந்தன்-   1971 ஆவணி 31இல் பிறந்த நிர்மலதா என்கிற ஒரு பெண்ணின் மரணம், செப்டெம்பர் 10, 2014இல் நிகழ்ந்தது. எல்லோர்வரையிலும் நாள்தோறும் யுத்தங்களினாலும், பட்டினியாலும், நோயினாலும் சம்பவிக்கும் லட்சோப லட்சம் மரணங்கள்;போல் இதுவும் ஒன்றாயினும், அவளது தந்தைக்கு அது அவனது சொந்த மரணமேபோல் சுயத்தின் இழப்பாயிற்று.தாய் தந்தையர், கணவன் மனைவி, சகோதரங்கள், மேலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடையேகூட இவ்வளவு பாதிப்போடு ஒரு மரணம் நிகழ்ந்திருக்க முடியும். அன்பினது ஆழமான வேரூன்றல் என்பதிலிருந்து இந்தப் பாதிப்பு கூடியும் குறைந்துமாய் விளைகிறது. ஒரு நெருங்கிய உறவின் மரணத்தில் கண்ணீரே சிந்தாமல், ஒரு வாய்ச் சொல் அரற்றிப் புலம்பாமல் நொருங்கிப்போனவர்கள் இருக்கிறார்கள். போலவே, அழுது விழுந்து புரண்டு கதறிய பின், சுடலையிலிருந்து அல்லது மின்தகன ‘தோட்ட’த்தினின்று திரும்பிய நாளின் பொழுது விடிந்ததிலிருந்து காதலும் காமமும் இலௌகீகத் தேடல்களுமாய் பிரிவுகளை மறந்துபோனவர்களும் நிறையவே யதார்த்தத்தில் உண்டு.  தந்தையானவன் உடைந்து நொறுங்கியது பெற்ற மகளென்ற பாசத்தில் மட்டும் உருவானதில்லை. தான் தவறவிட்ட அடைவுகளை அவளே தன் சுயபலத்தில் நிறைவேற்றிக்கொண்டிருந்தாள் என்பதனாலுமாகும்.

•Last Updated on ••Monday•, 06 •October• 2014 23:06•• •Read more...•
 

நினைவேற்றம்: முனை 1

•E-mail• •Print• •PDF•

முனை 1

 -தேவகாந்தன்-   நீண்டு நெடும் பாம்பாய்க் கிடக்கிறது மக்கித் தெரு. சோளகம் சருகுகளை உருட்டிச் சென்றுவிட்ட கான்கள், புல்களும் புதர்களும் காய்ந்து சுருங்கிய நிலையில், வெறுமையாய்க் கிடக்கின்றன. காற்றினால் அகற்றப்பட முடியாது எஞ்சிப்போன சுள்ளிகளும் தடிகளும், பிறகொருநாள் கோடை பிறந்துவிட்ட அந்தப் பருவகாலத்தில்  தீ வைத்துச் சாம்பலாக்கப்படலாம். மாரியில் வெட்டப்பட்ட வேலி மரங்களில் பசுமை செறித்து வளர்ந்திருந்த இலைகளில் மக்கி அப்பி பழுப்பாய்த் தோன்றுகின்றது. கோடையினை அக் கிராமத்தின் வெறித்த பருவமாய் உணர்விலெழுப்ப, மக்கித் தெரு இணைத்து மேற்கிலும் கிழக்கிலுமாய்க் கிடந்த வயல்வெளிகளின் தரிசு மட்டுமில்லை, வயல்வெளிகளில் ஒழுங்கைகளில் தம்பாட்டுக்கு  காய்ந்த புல் சருகுகளில் தம் பசியாற்ற அவிழ்த்துவிடப்பட்டிருந்த ஆடுகள் மாடுகளின் அலைவும் மட்டுமில்லை, தெருக்கள் ஒழுங்கைகளில் அரிதுபற்றிப் போன மனித நடமாட்டமும், இன்னும் அடுக்களைகளின் கூரைகளைத் துளைத்துக்கொண்டு அடுப்புப் புகை மேற்கிளம்பாத  அசைவிறுக்கமும்கூட பொருந்திய காட்சிகளாக இருந்தன.  யாழ்ப்பாணம் கிடுகு வேலிக் கலாசாரத்தைக் கொண்டிருந்தாய்ச் சொல்லப்படுகிறது. அதை நிரூபிப்பதற்கான அச்சொட்டான காலமாகவிருந்தது அது. அதை அண்ணளவாக ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளின் ஆரம்பகாலம் என்கலாம்.  கிடுகு வேலிக் கலாசாரமென்பது மாற்றங்களை உட்புக விடாததும், மரபின் இறுக்கங்களைத் தளர விடாததுமான வாழ்நிலைமையை முப்புற வேலிகளைக்கொண்டு உறுதியாக்கி அங்கே கட்டப்பட்டிருந்தது.

•Last Updated on ••Sunday•, 20 •April• 2014 22:30•• •Read more...•
 

நினைவேற்றம்

•E-mail• •Print• •PDF•

 -தேவகாந்தன்-   (முன்மொழிவு: கதி மாற்றமற்ற காலத்தின் சீரான நகர்ச்சியில் சந்தோஷங்களுடனும், துக்கங்களுடனுமான மனித வாழ்க்கைமட்டும்தான் ஊர்வதாகவோ பறப்பதாகவோ தோற்றம் காட்டி நிற்கிறது. வாழ்வை வாழ்வதற்கும், கழிப்பதற்குமான எல்லைக்கோடுகள் வேறுவேறானவையாகவே இருக்கின்றன. வாழ்ந்தேனா, கழித்தேனா என்ற கேள்விகளுக்கப்பால் எல்லைக்கோடுகளின் விதித்தல்பற்றியே நிறைய நான் சிந்தித்திருக்கிறேன். பதில் கிடைத்த அப்போதும்  எல்லைக்கோடுகள் தாண்டமுடியாதவையாகவே இருந்திருக்கின்றன. இவை பல வேளைகளில் விண்டுரைக்க முடியாத விரக்தியின் உச்சம்நோக்கி என்னை நகர்த்தியிருக்கின்றன. மன விரக்திகள் மிக மோசமாக அழுத்துகிறபோது  சமூகத்தின்மீதான கோபமாகவும், அதன் பிரதிநிதிகளாய் நின்று வாதித்து என்னை உபாதிக்கும் குடும்பத்தினருடனான ஒட்டுவிடுதலாகவும் அது பரிணமித்து என்னை எங்கோ எங்கோ தொலைத்துவிடுகிற சந்தர்ப்பங்கள் எனக்குப் பல்வேறு தடவைகளில் நேர்ந்திருக்கின்றன. அச்சந்தர்ப்பங்களிலும் கவுதமனுக்கு ஒரு திரிமாபோல, எனக்கு ரோஸ்களும், தயாவதிகளும், எமிகளும் இருக்கவே செய்திருக்கிறார்கள். இத்தகு கணங்கள் மிகப் பெருமைப்பட முடியாதவையாக இருந்தபோதும், என் வாழ்வின் ஒரு பகுதியாக எனக்கு இவற்றில் அக்கறையுண்டு. ஆயினும், இவை என் யோசிப்பின் காலப் பரப்பு அடக்காத விஷயங்கள். இலங்கையிலோ, தமிழகத்திலோ என்னைத் தொலைத்துவிடுவதற்கான நிலைமைகள் முதிர்ந்தபோது மிக அநாயாசமாக அவற்றைச் செய்துவிட என்னால் முடிந்திருக்கிறது. ஆனால் அவ்வாறான நிலைமைகள் என் புதிய நாடான கனடாவில் விளைந்த சமயங்களில் காலநிலையும், தொடர்பூடகச் சாதனங்களும் காரணமாய் செயற்படுத்தவியலாத நிலை உருவாயிற்று. அண்மையில் அவ்வாறான ஒரு மனவழுத்தம் திரண்ட சமயத்தில் ஒரு விச்சிராந்திபோல் வானும், நிலவும், சூரியனும், நட்சத்திரங்களும், மண்ணும், மரங்களும்கூட பார்வையில் படமுடியாத நிலக்கீழ் வீட்டிலிருந்து, கடந்த பத்தாண்டுகளில் மிக அதிகவளவிலான பனிப் பொழிவாலும், குளிர் அடர்த்தியாலும், உறைபனியாலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு பருவகால செறிநிலையில் என் அவத்தை குறையும்படியாக என் வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அதீத முயற்சியில் ஈடுபட முயன்றிருந்தேன். யோசிக்க யோசிக்க எனக்கு விடைகளுக்குப் பதிலாக புதிர்களே கிளர்ந்தெழுந்ததாய்த் தோன்றியது. இல்லறத்தில் துறவறத்தையும், துறவறத்தில் இல்லறத்தையும் மாறுகொள வாழ்ந்த வாழ்வு ஒரு வெறுமையாய் வந்து என்னைக் கவிந்தது. திட்டமிடாவிட்டாலும்  வித்தியாசங்களூடாக இழுத்துக்கொண்டு செல்லப்பட்ட வாழ்க்கையில் இது தவிர்க்கப்பட முடியாதது என்றே ஆரம்பத்தில் கணித்தேன்.

•Last Updated on ••Monday•, 17 •February• 2014 20:36•• •Read more...•
 

நூல் மதிப்புரை: சினிமா - சட்டகமும் சாளரமும்

•E-mail• •Print• •PDF•

 -தேவகாந்தன்-   (ஆவணி 31, 2013 சனிக்கிழமை கனடா சுயாதீன திரைப்பட இயக்கியத்தினால் பட்டறை, மற்றும் கலந்துரையாடல் என ஒரு முழுநாள் நிகழ்வாக மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் சொர்ணவேல் அவர்கள் பங்கேற்ற அமைவில் வாசிக்கப்பட்ட பேச்சு உரைவடிவத்தின் உரைக்கட்டு வடிவம் இது.) ஒரு மாறுதலுக்காக மட்டுமன்றி, இந்தமாதிரியான ஒரு அலசல்தான் இந்த நூலிலுள்ள விஷயங்களின் தாற்பரியங்களை விளங்கிக்கொள்ளும் சுலபத்திற்கு வாய்ப்பானது என்று கருதுகிற வகையில், இந்த முறையில் இந்நூல் பற்றிய என் கருத்துக்களைத் தொகுத்தளிக்க விழைகின்றேன். ஐசன்ஸ்டெயினிற்கும் மார்க்கருக்கும் நடுவிலுள்ள அளவிலாத் தூரத்தில் சஞ்சரிக்கும் மார்க்சின் ஆவி, உலகமயமாதலுக்குப் பின்னும் நம்மை ஆட்டுவிக்கும் என்ற மார்க்சிய அடிப்படைக் கூறான இருமை எதிர்வைக் கட்டவிழ்த்த தெரிதாவின் கூற்றில் உண்மை இருக்கின்றது’ என்று கடைசிப் பக்கத்தில் வரும் வசனங்களோடு இந்த நூல் முடிவடைகின்றது. முடிவிலிருந்தே ஆரம்பிக்கலாம்.

•Last Updated on ••Monday•, 02 •September• 2013 23:08•• •Read more...•
 

‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக ‘யோசிப்பும் வாசிப்பும்’ பகுதியில் வந்த வ.ந.கிரிதரனின் எதிர்வினைக்கான எனது பதில்மறுப்பு…

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் தேவகாந்தன்வணக்கம், கிரிதரன். ‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக நீங்கள் எழுதிய எதிர்வினையை ‘பதிவுக’ளில் பார்த்தேன். பொதுவாக உரைக்கட்டுசார் விடயங்களுக்கான எதிர்வினைகள் வருவது ஆரோக்கியமானது என்பதே எனது கருத்தாக என்றும் இருந்துவருகின்றது. அது குறித்து என்வரையில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் எதிர்வினையாக மட்டுமே அது இருந்திருந்திருந்தால் அதற்கு இவ்வாறான ஒரு பதில்மறுப்பு என்னளவில் அவசியமில்லாமலே இருந்திருக்கும். ஆனால் நீங்கள் சுமத்தியது ஒரு குற்றச்சாட்டு அல்லவா? என் வாசிப்பின் மீதான உங்களது அவநம்பிக்கையை என்மேல் சுமத்திய ஒரு குற்றச்சாட்டாகவே அதை என்னால் பார்க்க முடிகிறது. அக் குற்றச்சாட்டின் பதில்மறுப்பிற்காக உரைக்கட்டினைவிட கடித வடிவம் சிலாக்கியமாகப்பட்டதில் இவ்வாறு எழுத நேர்ந்திருக்கிறது. என் வாசிப்பின் போதாமையை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள், கிரிதரன்?

•Last Updated on ••Monday•, 02 •September• 2013 22:58•• •Read more...•
 

புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்: ஓர் ஒப்புநோக்கு

•E-mail• •Print• •PDF•

பகுதி ஒன்று

எழுத்தாளர் தேவகாந்தன்(இது அக்டோபர் 06 2012இல் தேடகம் சார்பில் நடைபெற்ற மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் என்ற கருத்திலான இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாள் நிகழ்வின் முதல் அமர்வில் வாசிக்கப்பட்ட உரைக்கட்டு. இதன் போதாமையை. விடுபடல்களை முன்னரே நான் கண்டிருந்தேன். ஆனாலும் இத்துறையில் மேலும் விரிவான தேடல்களுக்கும். பதிவுகளுக்கும் உதவக்கூடுமென்ற வகையில் அவ்வுரைக்கட்டை இங்கே வெளிப்படுத்த விரும்பினேன். - தேவகாந்தன் -)   புலம்பெயர் இலக்கியம் என்ற விடயத்தில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ், சிங்கள, ஆங்கில இலக்கியம் என்ற கூறுகளும், ஈழத்து இலக்கியம் என்ற பகுப்பில் ஈழத்து தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக இலக்கியம் என்ற கூறுகளும் இத் தலைப்பிலான ஓர் உரைக்கட்டில் தலையிடும் தவிர்க்கமுடியாமை இயல்பாகவே எழும். அவ்வாறு அது எழுந்தாக வேண்டும். அதுவே சரியான பார்வையாக இருக்க முடியும்.  புலம்பெயர் தமிழிலக்கியம் என்ற வடிவத்திலும் ஈழத்தவரின் ஆக்கங்களை மட்டும் கருதும் போக்கு  நிச்சயமாக தவிர்க்கப்பட்டாக வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து வந்து வேற்று நாடுகளில் வதிவோரின் தமிழ்ப் படைப்புகளையும் புகலிடத் தமிழிலக்கியமாகவே கொள்ளவேண்டும் என்ற கருத்தினையும் இவ்வுரைக்கட்டு கருத்திலெடுத்திருக்கிறது. இல்லாவிட்டால் பிரான்சில் வதியும் நாகரத்தினம் கிரு~;ணா, இங்கிலாந்தில் வதியும் யமுனா ராஜேந்திரன், கனடாவில் வதியும் சு.கி.ஜெயகரன், ஐக்கிய அமெரிக்காவில் வதியும் காஞ்சனா தாமோதரன் ஆகியோரது ஆக்கங்களை எந்தவகையான வகைமைக்குள்ளும் கொண்டுவந்துவிட முடியாதுபோய்விடும்.

•Last Updated on ••Monday•, 02 •September• 2013 22:58•• •Read more...•
 

பால் நிலைப் பிறழ்வு குறித்தான கீழை, மேலைத் தேய கலை இலக்கியங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் தேவகாந்தன்(பாலின் நிலைமாற்றத்தினை பாலின மாற்றம் என்பதா, பால்நிலைப் பிறழ்வென்பதா என இக் கட்டுரை 05.05.2012இல் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு 39இல் வாசிக்கப்பட்டபோது ஒரு பிரச்சினை தோன்றியது. பால்நிலை மாற்றம் என்று குறிப்பிடுவதே சரியென்று, இலக்கியச் சந்திப்பு வாசிப்பின் பின் நான் யோசித்திருந்தாலும், மீண்டும் மீண்டுமான என் யோசிப்பில் அலியென்பது ஒரு பிறழ்வெனவே தோன்றியது. ஆண் அல்லது பெண் ஆகவேண்டியது இரண்டுமல்லாததாக ஆவது ஒரு பிறழ்வுதான். ஆனால் ஆண் அலி, பெண் அலி தம்மைப் பெண்ணாக மாற்றிக்கொள்வதை மாற்றம் எனக் குறிப்பிடல் சரியாகலாம். எனவே தொடர்ந்தும் பிறழ்வு என்ற சொல்லையே இக் கட்டுரையில் நான் பாவித்திருக்கிறேன். சில இடங்களில் வரநேர்ந்திருக்கும் மாற்றம் என்ற சொல்லை நான் வலிந்து மாற்ற முயற்சி செய்யவில்லை.) பால் நிலைப் பிறழ்வு குறித்தும், பாலியல் சார்ந்த பகுப்புகள் குறித்தும், கலவி நிலைகளும் அதுபற்றிய விளக்கங்கள் பற்றியும் சிந்திக்க முனையும் ஒருவருக்கு, அவைபற்றிய முதல்நிலைத் தகவல்களைத் தருபவை கீழைத் தேய எழுத்துக்களாகவே இருக்கின்றமை வெளிப்படையானது.

•Last Updated on ••Monday•, 02 •September• 2013 23:00•• •Read more...•
 

சயந்தனின் ‘ஆறாவடு’ மீதான ஓர் அரசியல், இலக்கியக் கண்ணோட்டம்

•E-mail• •Print• •PDF•

‘ஆறாவடு” நூல் குறித்த பிரஸ்தாபம் ஈழத்து வாசகர் மத்தியில், முகப் புத்தகப் பக்கங்களில் இவ்வாண்டு தை முதலே இருந்துகொண்டிருந்திருப்பினும், அதை அண்மையில்தான் வாசித்து முடித்தேன். நூலின் பின்னட்டையிலுள்ள படைப்பாளியின் போட்டோவிலிருந்தும், லண்டன் தீபம் தொலைக்காட்சியில் அவருடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடலிலிருந்தும்  அவரது வயதைக் கணிப்பிடக்கூடியதாக இருந்தது. இது முக்கியம். ஏனெனில் நூல் தெரிவிக்கும் வெளியில் படைப்பாளியின் அனுபவ நிஜத்தை அதிலிருந்தேதான் வாசகன் கணிக்கவேண்டியிருக்கிறது. நிகழ்வுகளில் அதிவிஷேடத்தனங்கள் இல்லாதிருந்த நிலையில் களத்தில் நின்றிராதிருந்தும் நிகழ்வுகளை இணையம், பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் கவனித்திருக்கக்கூடிய ஒருவராலும் இந்தமாதிரி ஒரு கதையை மிகச் சுலபமாகப் புனைந்துவிட்டிருக்க முடியும்.  -தேவகாந்தன்-   ‘ஆறாவடு” நூல் குறித்த பிரஸ்தாபம் ஈழத்து வாசகர் மத்தியில், முகப் புத்தகப் பக்கங்களில் இவ்வாண்டு தை முதலே இருந்து கொண்டிருந்திருப்பினும், அதை அண்மையில்தான் வாசித்து முடித்தேன். நூலின் பின்னட்டையிலுள்ள படைப்பாளியின் போட்டோவிலிருந்தும், லண்டன் தீபம் தொலைக்காட்சியில் அவருடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடலிலிருந்தும்  அவரது வயதைக் கணிப்பிடக்கூடியதாக இருந்தது. இது முக்கியம். ஏனெனில் நூல் தெரிவிக்கும் வெளியில் படைப்பாளியின் அனுபவ நிஜத்தை அதிலிருந்தேதான் வாசகன் கணிக்கவேண்டியிருக்கிறது. நிகழ்வுகளில் அதிவிஷேடத்தனங்கள் இல்லாதிருந்த நிலையில் களத்தில் நின்றிராதிருந்தும் நிகழ்வுகளை இணையம், பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் கவனித்திருக்கக்கூடிய ஒருவராலும் இந்தமாதிரி ஒரு கதையை மிகச் சுலபமாகப் புனைந்துவிட்டிருக்க முடியும். இந்நூல் ஒரு புனைவு என்ற தளத்திலிருந்தான நோக்குகைக்கு இத் தகவல்கள் ஒன்றுகூட அவசியமானவையில்லை. ஆனால் முகப் புத்தகத்தில் பெரிய ஆரவாரம் நடந்துகொண்டு இருந்தவகையில் இதுவும், இத்துடன் வேறுபல செய்திகளும் வேண்டியேயிருந்தன. தன்னைத் தானே முன்னிலைப்படுத்திக்கொண்டு படைப்பே பேசவெளிக்கிட்டது போன்ற நிலை படைப்பின்மீதான சந்தேகத்தை எவரொருவரிலும் கிளர்த்தமுடியும். அதுவே இந்தப் பிரதி விளைந்தது. இந்நிலையில் வெளியிலிருந்து வந்த தகவல்கள் தவிர்ந்து அவர்பற்றி வேறெதையும் அறிந்துகொள்ளும் சாத்தியமெதுவும் நூலில் கிடைக்காததும், தொலைக்காட்சி உரையாடலில் இல்லாததும் இதை எழுதுவதற்கான தாமதத்தை ஏற்படுத்தியது.

•Last Updated on ••Monday•, 02 •September• 2013 22:57•• •Read more...•
 

கதாகாலம் வலைப்பதிவிலிருந்து:சிமோன் டி போவுவா’வின் The Blood of others

•E-mail• •Print• •PDF•

The Blood of othersதேவகாந்தன்[வலைப்பதிவுகளிலிருந்து அவ்வப்போது ஆக்கங்கள் ஒரு பதிவுக்காகப் பிரசுரமாகின்றன. அந்த வகையில் எழுத்தாளர் தேவகாந்தனின் இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள்]  இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாவல் இலக்கியத்தின் பின்பாதியினது போக்கினை நிர்ணயித்த முக்கியமான நாவலாகக் கருதப்படும் சிமோன் டி போவுவாவின் ‘அடுத்தவர் குருதி’ (The Blood of others) என்ற தத்துவார்த்த நாவலை அண்மையில்தான் வாசித்தேன். சிமோன் டி போவுவாவின் The Second Sex என்ற இரண்டு தொகுப்பு பெண்ணியச் சிந்தனைபற்றிய முக்கியமான நூலோடு சில காலத்துக்கு முன்னரே தொடர்பு ஏற்பட்டிருந்தபோதும், அவரது படைப்பிலக்கிய நூல்கள்பற்றித் தெரிந்திருந்த நிலையில்கூட, அவரது நாவல்களுள் பிரவேசிப்பதற்கான பெரிய ஆர்வமேதும் என்னிடம் எழுந்திடவில்லை.

•Last Updated on ••Monday•, 02 •September• 2013 23:02•• •Read more...•
 

காலம் என்பது…

•E-mail• •Print• •PDF•

தேவகாந்தன்காலம் என்பதுதான் என்ன என்ற ஒரு கேள்வி, சிலகாலமாகவே என் நினைவுள் நுழைந்து விடை தேடி நின்றுகொண்டிருந்தது. அண்மையில் நிகழ்ந்த தமிழக எழுத்தாளர் பிரபஞ்சனுடனான ஒரு சந்திப்பில் கலந்துகொண்டதற்குப் பின்னர் அந்தக் கேள்வி இன்னும் வலுவடைந்துள்ளதாகவே தோன்றுகிறது. ‘காலமென்பது கறங்குபோல் திரிந்து கீழது மேலாய், மேலது கீழாய்ப் புரட்டும் ஒரு மகாசக்தி’யென இலக்கியங்களில் படித்ததுண்டு. இது வரலாற்றுக் கண்கொண்டு நோக்கப்பட்ட காலமெனச் சொல்லலாம். இன்னும், ஆரூடகாரனின் நாவில் குதிபோடும் ‘தம்பிக்கு காலம் இப்ப நல்லாயில்லை…’ அல்லது ‘காலம் நல்லாயிருக்கு’ என்ற வாசகங்களில் விதியென்ற மாயத்தின் பாய்ச்சலைக் காணமுடியும். காலத்துக்குத்தான் தமிழில் புதிராய், மாயமாய், விளக்கமாய், செறிவாயென எத்தனை அர்த்தங்கள்!

•Last Updated on ••Monday•, 02 •September• 2013 22:59•• •Read more...•
 



'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.028 seconds, 2.41 MB
Application afterRoute: 0.036 seconds, 3.15 MB
Application afterDispatch: 0.369 seconds, 11.82 MB
Application afterRender: 0.457 seconds, 13.19 MB

•Memory Usage•

13900024

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '0h2au84p8f9bf6c42qim7b8bb2'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1716016735' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '0h2au84p8f9bf6c42qim7b8bb2'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1716017635',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:10:{s:15:\"session.counter\";i:4;s:19:\"session.timer.start\";i:1716017632;s:18:\"session.timer.last\";i:1716017632;s:17:\"session.timer.now\";i:1716017633;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:19:\"com_mailto.formtime\";i:1716017632;s:13:\"session.token\";s:32:\"2e20ff05abf637da1d98e93362c44ec1\";s:16:\"com_mailto.links\";a:23:{s:40:\"cfc04f39374bf698ddf041fcba03a3443e0057e3\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3879:2017-05-06-10-04-43&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"a1ecde7712412d14b3a5dbcb19a905edce177fb6\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3373:2016-06-11-12-09-09&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"3a32dd6f8b982758db8c9eabe5e1acaa61f352fb\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3120:2016-01-24-03-27-23&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"52d2982502b7d6d88d56b38af1759f55639c6e87\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2996:2015-11-27-04-08-50&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"9388613b1c442c6315514d7bf5f6ff5f38d962d0\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2458:2014-11-30-02-35-13&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"0234f7a4b08cf04386589eabbff7593bf4cd97f8\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1438:2013-04-06-03-14-58&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"a07f35615c82e05e3b1f889aee0387e9f04f9323\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1412:2013-03-23-22-42-14&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"50a66a3340d7ad3b0951d3cf543d2fbf2b7bdd56\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1374:2013-03-09-07-04-34&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"54339fa4eb148526abf37f87dc87c780349531cc\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1334:2013-02-13-11-41-07&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"96789b4beea072a7c17e71c57aa964020359ad7c\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1221:2012-12-14-21-39-27&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"75de45cd43eedaaecd23f818930607ada38f791f\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1219:2012-12-13-05-28-43&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"77ab72a983b6b2f7335ce29ec5e1e3ca97e1a283\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:124:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1218:-2-a-3&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"56fb4f1bcb09b62c08b9d3cc8a72b5f46192f97b\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1216:-1&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"12d791e26c88fba3dd02c8db584a31bf16bec03e\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1179:2012-11-16-07-36-29&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"3f50135bd1ec62767119f7828f436e1b6712d24f\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1121:2012-10-20-05-44-21&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"6ec848b9a496e9ee6cf5b2bba5db91459540071e\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1119:2012-10-19-04-41-03&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"dc51fe848353fe7a47b90f6721c55e082d1aaa7a\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=772:2012-05-02-03-55-58&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"aa1b5ebf716508067d667e0b8847970360399207\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=771:2012-05-02-03-48-25&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"beb9b81672e1a86da6c30212b45fd4d872ec44b2\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=580:2012-01-12-02-41-18&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"317020279bb8b5e5bf5b7528f7fb527539f69337\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=477:2011-11-14-17-01-02&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"d28ddaaf5c34d7a5f9ad85a129a42c8860c8c1c2\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=234:2011-06-23-18-51-13&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"3da7546993860d1610bd9e26a7e9600065bd951c\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=144:2011-05-01-22-33-41&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}s:40:\"072f8bd044100faf1b078c7202f06e75f1593f8a\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=100:2011-04-04-00-22-03&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716017632;}}}'
      WHERE session_id='0h2au84p8f9bf6c42qim7b8bb2'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 74)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT c.*, s.id AS sectionid, s.title AS sectiontitle, CASE WHEN CHAR_LENGTH(c.alias) THEN CONCAT_WS(":", c.id, c.alias) ELSE c.id END AS slug
      FROM jos_categories AS c
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = c.SECTION
      WHERE c.id = 57
      LIMIT 0, 1
  11. SELECT cc.title AS category, a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON a.catid = cc.id
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE 1
      AND a.access <= 0
      AND a.catid = 57
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-05-18 07:33:55' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-05-18 07:33:55' )
      ORDER BY  a.created DESC,  a.created DESC
      LIMIT 0, 1500
  12. SELECT cc.title AS category, a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON a.catid = cc.id
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE 1
      AND a.access <= 0
      AND a.catid = 57
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-05-18 07:33:55' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-05-18 07:33:55' )
      ORDER BY  a.created DESC,  a.created DESC
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 74 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 74
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 56
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-05-18 07:33:55' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-05-18 07:33:55' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

 - தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 -தேவகாந்தன்-   	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-   கவிஞர் சோ.பத்மநாதன்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- -தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேவகாந்தன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்    -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேவகாந்தன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
தேவகாந்தன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- தேவகாந்தன் -= - தேவகாந்தன் -
-தேவகாந்தன்-= -தேவகாந்தன்-   
-   கவிஞர் சோ.பத்மநாதன்  -=-   கவிஞர் சோ.பத்மநாதன்  -
- -தேவகாந்தன் -=- -தேவகாந்தன் -
- தேவகாந்தன் -=- தேவகாந்தன் -
- தேவகாந்தன் -=- தேவகாந்தன் - 
-தேவகாந்தன்=-தேவகாந்தன்
-தேவகாந்தன்    -=-தேவகாந்தன்    -
-தேவகாந்தன் -=-தேவகாந்தன் -
-தேவகாந்தன்-=-தேவகாந்தன்-
தேவகாந்தன்=தேவகாந்தன்