பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

வெங்கட் சாமிநாதன் பக்கம்

நினைவுகளின் தடத்தில் - 16 & 17

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -- அமரர்  கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -


நினைவுகளின் தடத்தில் - 16!

என் உபநயனத்திற்காக உடையாளூருக்குச் சென்றது தான் என் நினைவிலிருக்கும் முதல் தடவை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த நினைவுகளுக்குச் சென்று எழுத முனைந்ததும் அங்கு பார்த்த காட்சிகளையும் மனிதர்களையும் நினைவு கொண்டபோது, அதற்கும் முந்தி ஒரு தடவை உடையாளூருக்கு நான் சென்றிருக்கவேண்டும், ஆனால் அது எப்போது என்பது தான் நினைவில் இல்லாது போயிற்று. இருப்பினும் நினைவிலிருந்து மறைந்து கொண்டிருக்கும் அந்த பழைய உடையாளூரின் மனிதர்களையும் காட்சிகளையும் நினைவில் தங்கி மேலெழுந்த சிலவற்றையாவது எழுத முடிந்திருக்கிறது. ஆனால் அப்படி ஒன்றும் உடையாளூர் பெரும் மாற்றங்களை அடைந்திருக்கவில்லை. மின் சாரம் இல்லை. மாலையில் மங்கிய ஒரே ஒரு தெருவிளக்கைத்தவிர உடையாளூர் இருளில் தான் ஆழ்ந்திருந்தது. பள்ளிகள் இல்லை. ஒரு நாட்டு வைத்தியரைத் தவிர வேறு எதற்கும் வலங்கிமானுக்குத் தான் போகவேண்டியிருந்தது. தபால் அலுவலகம் கிடையாது. மாலையில் இருட்டத் தொடங்கியதும் எல்லா வீடுகளிலும் எல்லோரும் சாப்பிட்டு உறங்கப் போய்விடுவார்கள். அது பற்றி நினைக்கும் போதெல்லாம் உ.வே.சா. தன் 19-ம் நூற்றாண்டு பின் பாதி தமிழ் நாடு பற்றி எழுதி வைத்துள்ளவை தான் நினைவுக்கு வந்தன. உடையாளூர் தான் அந்த 19-ம் நூற்றாண்டுப் பின் பாதியிலேயே தங்கி விட்டதான தோற்றம் தந்ததே ஒழிய மூன்று மைல்கள் தள்ளி வலங்கைமானுக்கோ, அல்லது வேறு திசையில் மூன்று ஆறுகள் தாண்டி ஐந்து அல்லது ஆறு மைல்கள் கடந்தால் கும்பகோணத்துக்கோ சென்றால் காணும் காட்சி வேறாகத் தான் இருக்கும். ஆனால், 19-ம் நூற்றாண்டுப்பின் பாதியிலேயே உறைந்து விட்ட உடையாளூரும் அதன் வாழ்க்கையும் இப்போது நினைத்துப் பார்க்க ஒரு ரம்மியமான நினைவுகளாகத் தான் கண் முன் திரையோடிச் செல்கின்றன.

உப நயனம் முடிந்து நிலக்கோட்டை திரும்பியது ஒன்றும் நினைவில் இல்லை. ஆனால் இந்த உடையாளூர் பயணம் நினைவுக்கு வந்ததே, அந்த ரயில் பிரயாணம், அதை மகிழ்ச்சியுடன் நினைவுக்குக் கொணர்ந்த மதுரைக்கு 9-ம் வகுப்பு படிக்கச் சென்ற பஸ் பிரயாணம். 30 மைல் பஸ்ஸில் பயணம் என்றால் அது ஒன்றும் சாதாரண விஷயமாக அன்று எனக்குப் படவில்லை. ஆனால் மனித மனதின் விந்தைகள், இப்போது அந்த பிரயாணத்தை 32 மைல் தூரத்தையோ, அது எடுத்துக்கொண்டிருக்கக்கூடும் ஒன்றரை நேர அனுபவத்தையோ என்னால் நினைவு கொள்ள முடியவில்லை. எனக்கு அந்த பிரயாணத்தில் இப்போது நினைவுக்கு வருவது, மதுரை எல்லையை அடைந்ததும், பஸ் நிறுத்தப்பட்டது. சாலையில் ஒரே கூட்டமாக இருந்தது. யாரோ ஒருவர் டிரைவரிடம் வந்து பஸ் அந்த வழியில் மேலே செல்லவியலாது என்றும், டவுனுக்குள்ளே ஆங்காங்கே ரகளையாக இருப்பதாகவும், வண்டியை வேறு வழியில் தான் திருப்பிக் கொண்டு போகவேண்டும் என்றும் சொல்ல வண்டி திருப்பப்பட்டது. நாங்கள் மதுரை போய்ச் சேர்ந்தோம் தான். ஆனால் மதுரை அமைதியாக இல்லை. ஆங்காங்கே அவ்வப்போது காங்கிரஸ் காரர்களின் கூட்டம், ஊர்வலம் என்று ஏதோ அன்றாட அமைதி கலைந்துகொண்டிருந்தது.

•Last Updated on ••Saturday•, 19 •September• 2020 10:19•• •Read more...•
 

நினைவுகளின் தடத்தில் - 12, 13, 14 & 15

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -- அமரர்  கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -


நினைவுகளின் தடத்தில் - 12

மாமாவிடம் ட்யூஷன் படிக்க வந்தவர்கள், ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். எங்கள் பள்ளியின் இறுதி வகுப்பாகிய எட்டாம் வகுப்புக்கு தேர்வை அரசு நடத்தும் பொதுப் பரிட்சையே தீர்மானிக்கும் என்ற காரணத்தால் ட்யூஷன் படிக்க வந்து சேர்ந்தவர்கள் அவர்கள். இரவு இரண்டு மணிநேரம் படிப்பார்கள். இது ஒரு மூன்று நான்கு மாதங்களுக்கே நடக்கும். பெற்றோர்களுக்கு தம் பையன்கள் எப்படியாவது கவர்ன்மெண்ட் பரிச்சையில் பாஸ் செய்யவேண்டும். பள்ளிப் பரிட்சையாக இருந்தால் கவலை இல்லை. ஒரு வருஷத்திற்கு இரண்டு வருஷன் ஒரு வகுப்பில் படித்துவிட்டுப் போகட்டும் கவலை இல்லை. பெரும்பாலானவர்கள் பக்கத்துப் பட்டி தொட்டிகளிலிருந்து வருபவர்கள். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரகள். உள்ளூர் பையன்களோ, சிறு வியாபாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வத்தலக்குண்டுக்கு அனுப்பி ஹைஸ்கூலில் சேர்த்து அவன் படித்து என்ன கிழிக்கப்போகிறான். உள்ளூர்ப் படிப்பே போதும் என்று நினைப்பவர்கள். ஆனாலும் பாஸ் செய்து விடவேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள். இந்த மூணு நாலு மாச ட்யூஷனை வைத்துக்கொண்டு மாமா படும் அவஸ்தை மிக பரிதாபமானது. இப்போது நினைத்துப் பார்க்கும் போது தான் அதன் பரிதாபம் மனதில் படுகிறது. என் ஞாபகத்தில் ட்யூஷன் சம்பளம் மாதம் ஒரு ரூபாய். அதை மாமா வாங்கப் பட்ட பாடு பெரும்பாடாக இருக்கும்.

•Last Updated on ••Monday•, 10 •July• 2017 21:54•• •Read more...•
 

நினைவுகளின் தடத்தில் (8, 9, 10, &11)!

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -- அமரர்  கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -


 

நினைவுகளின் தடத்தில் - (8)

அடுத்த நாள் காலையில் பரிட்சை. அப்போது இரவு மணி ஏழோ ஏதோ இருக்கும். படித்துக் கொண்டிருந்தவன் புத்தகத்தை மூடிவைத்து விட்டு சத்திரத்திற்கு உடனே ஒடிப்போய் தண்டபாணி தேசிகர் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் தனக்கு இருந்த பிரேமையைப் பற்றியும் அவரது வயலின் வாசிப்பில் தான் உருகியது பற்றியும் சொல்வதைக் கேட்க ராத்திரி பத்து பதினோரு மணி வரை அங்கேயே உட்கார்ந்திருப்பது எனக்கு மிக அவசியமாகியிருந்திருக்கிறது. இது சரியில்லை என்று எனக்கு படவில்லை. "படிடா, நாளைக்கு பரிட்சை" என்று திட்ட அப்பாவோ, மாமாவோ, யாரும் இல்லை அங்கு எனக்கு. நான் எது சரி, எனக்கு எது பிடித்தது என்று நினைத்தேனோ அதைச் செய்ய எனக்கு சுதந்திரம் இருந்தது, அதை அனுபவிப்பதில் சந்தோஷம் இருந்தது. பரிட்சையில் தோற்றிருந்தால் என்ன ஆயிருக்கும், என்ன நினைத்திருப்பேன் என்று சொல்லத் தெரியவில்லை. அந்த மாதிரி தேர்வுகள் என் மனத்தில் ஓடியது என்றும் சொல்வதற்கில்லை.

நிலக்கோட்டையில் கிடைத்த நேரத்தில் எல்லாம் மாமா கல்யாணத்திற்கு அழைத்து வந்திருந்த சங்கீத வித்வான்கள் தங்கியிருந்த கூடத்திற்குச் சென்று அவர்கள் பேச்சையும் அரட்டையையும் கேட்டுக்கொண்டும், சாயந்திரம் கல்யாண பந்தலுக்குச் சென்று அவர்கள் பாடுவதையோ வாசிப்பதையோ இரவு வெகு நேரம் வரை கேட்டுக் கொண்டிருந்ததும் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் அளித்தன. அவர்கள் பேசியது புரிந்ததா, சங்கீதம் எனக்கு ஏதும் தெரியுமா ரசிக்க என்பதெல்லாம் விஷயமே இல்லை. அப்படிப் பொழுது போக்குவது, விசித்திரமாகவும், புதிதாகவும் சந்தோஷம் தருவதாகவும் இவையெல்லாம் இருந்தன, அன்றாட வண்டிச் சகடை உருளலிருந்து வேறு பட்ட ஒன்று கிடைத்ததில் சந்தோஷம்.

•Last Updated on ••Monday•, 10 •July• 2017 21:52•• •Read more...•
 

நினைவுகளின் தடத்தில் (6 & 7)!

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -- அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -


நினைவுகளின் தடத்தில் (6)!'

சந்தோஷம் யாருக்கு என்ன காரணங்களால் கிடைக்கிறது என்று அவ்வளவு சுலபமாக சொல்லி விடமுடிகிறதில்லை. நேற்று ஒரு ·ப்ரென்சு படம் பார்த்தேன். தான் செய்யாத, ஆனால் தான் இருக்க நடந்து விட்ட ஒரு குற்றத்திற்காக கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு தாய் என்னேரமும் வெறிச்சிட்ட முகமாகவே காணப்பட்டாலும் ஒரு சில கணங்களில் அவள் முகத்திலும் புன்னகையைப் பார்க்க முடிகிறது. அவள் வசமாக கை ரேகை சாட்சியத்தோடு சிறையில் அகப்பட்டுக் கிடக்கிறாள். அவள் குற்றமற்றவள் என்று தன்னைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டாலும், அவளுக்கு விடுதலை என்பதே சாத்தியமில்லை. இருப்பினும் அவள் முகம் மலரும் கணங்களும் அவளுக்குக் கிடைத்துவிடுகின்றன. நாம் எல்லோரும் அறிந்த ஒரு அரசியல் தலைவருக்கு எத்தனையோ ஆயிரம் கோடிகள் சொத்து குவிந்து கொண்டே இருக்கிறது. இன்னமும் பணம் எல்லா வழிகளிலும் சொத்து சேர்த்துக்கொண்டே தான் இருக்கிறார். ஆனாலும், அவரைக் கவலைகள் அரித்துக்கொண்டே இருக்கின்றன. அங்கங்கள் ஒவ்வொன்றாக செயல் இழந்து வருகின்றன. திட்டமிடும் மூளையைத் தவிர. காலையில் இரண்டோ மூன்றோ இட்டிலிக்கு மேல் அவரால் சாப்பிட முடிவதில்லை. மான் கறியும் முயல்கறியும் ஆரவாரத்தோடு சாப்பிட்டவர் தான். இருப்பினும், அலுப்பில்லாமல், வெறும் சொத்து சேர்த்துக் கொண்டே போவதில் அவருக்கு சந்தோஷம் கிடைத்து விடுகிறது.

என்னைக் குழந்தைப் பருவத்திலிருந்து 14 வயது வரை வளர்த்துப் படிக்க வைத்த மாமாவை நினைத்துப் பார்க்கிறேன். அந்த வறுமை இப்போது நினைக்கக் கூட பயங்கரமானது. அவருடைய சம்பாத்தியமான 25 ரூபாய் 4 அணா வில் வீட்டு வாடகை ஆறு ரூபாய் போக மீத பணத்தில், நாங்கள் ஆறு பேர் கொண்ட குடும்பத்தை எப்படி சமாளித்தார் என்பதல்ல விஷயம், சமாளிக்க முடிந்ததில்லை. ஆனாலும் அவர் என் அப்பாவுக்கு, "என்னால் முடியவில்லை, பையனை அனுப்புகிறேன்" என்று ஒரு கார்டு போட்டவரில்லை. என்னைப் பார்த்து அலுத்துக் கொண்டவரில்லை. யாரும் எந்த சமயத்திலும் அந்த வீட்டில், நான் ஒரு உபரி ஜீவன் என்று நினைத்ததில்லை; உணர்ந்ததில்லை முதலில்.

•Last Updated on ••Saturday•, 14 •May• 2016 19:43•• •Read more...•
 

நினைவுகளின் தடத்தில் - (3, 4 & 5)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -- அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -


நினைவுகளின் தடத்தில் - (3)

நான் நிலக்கோட்டையில் பாட்டியுடனும் மாமாவுடனும் இல்லாதிருந்தால், அப்பாவும் அம்மாவும் இருக்கும் உடையாளூர் கிராமத்திலியே இருந்திருந்தால், என் விருப்பங்களும், ரசனையும் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன். எனக்கு விருப்பமானது என்பது ஏதும் உள்ளிருந்து சதா கொதித்துக் கொண்டு இருக்கும் மூடியை உதறித் தள்ளிக்கொண்டு வெளியே பீறிடும் ஏதும் ஆன்மீக, கலைப் பசி என்கிற சமாச்சாரங்கள் ஏதும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். விதவைப் பாட்டிக்கு புராணப்படங்களே தஞ்சம் எனவாகிப் போனதும், வீட்டுக்கு நேர் எதிரே ரோட்டுக்கு அந்தப் புறம் சினிமாக் கொட்டகை என்று ஆகிப் போனதும் சந்தர்ப்பங்கள் தான். நிலக்கோட்டையில் தங்கியிருந்த வீடு ஊருக்குள்ளே இருந்திருந்தால் பாட்டிக்கு இதெல்லாம் சாத்தியமாகியிராது. எனக்கும் அந்த சந்தர்ப்பங்கள் கொசுராகக் கிடைத்திராது. பாட்டிக்கு இது புண்ணியம் சம்பாதிக்கும் நவீன மார்க்கமாகிப் போனது. எனக்கு விளையாடுவது போல, சோளக்கொல்லியில் புகுந்து சோளக் கொண்டை திருடித் தின்பது போல, கல்லெறிந்து மாங்காய் அடித்துத் தின்பது போல, வேறு ஒருவிதமான பொழுது போக்கு. இப்போது என் சொந்த கிராமம் என்றும், நான் பிறந்த இடம் என்றும் சொல்லிக்கொள்ளும், (அது பிறந்த இடமும் இல்லை, சொந்தமும் இல்லை) உடையாளூரில் இருந்திருந்தால், சினிமா, நாடகம், சோளக்கொண்டை திருடித் தின்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், முதலில் ஊடையாளூரில் அப்போதிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தாண்டி மேற்சென்றிருப்பேனா என்பதே சந்தேகம். என் பாட்டிக்கு நான் பிரியமாகிப் போனது, தன் பேரப்பிள்ளையைத் தானே வளர்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் என் நிலக்கோட்டை வாசத் திற்குக் காரணமாகிப் போயின. பாட்டி ஆசைப்பட்டது இருக்கட்டும், அம்மாவுக்கு எப்படி தன் முதல் குழந்தையை அதன் இரண்டு வயதில் விட்டுப் பிரிய மனம் வந்தது என்று சில சமயம் யோசிப்பேன். பதில் கிடைக்காது. அத்தோடு அந்தக் கேள்வி மறைந்து விடும்.

•Last Updated on ••Tuesday•, 26 •January• 2016 06:41•• •Read more...•
 

நினைவுகளின் தடத்தில் (2)!

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -- அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழில் மீள்பிரசுரமாகும். - திவுகள் -


எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே, நான் பாட்டியை விதவைக் கோலத்தில் தான் பார்த்திருக்கிறேன். அப்படித்தான் பாட்டி இருப்பாள், அது தான் பாட்டி என்று எனக்குள் நினைத்திருப்பேன். ஏதும் வேறு விதமாக, ஏன் பாட்டி இத்தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்போது அது பற்றி என் சிந்தனைகள் சென்றதில்லை. பின்னாட்களில், கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு, பாட்டியின் வைதவ்ய கோலம் மிகப் பெரிய சோகமாக நினைப்புகளில் கவிழும். அவ்வப்போது பாட்டி தன் மனம் நொந்து போன வேளைகளில் தனக்குள் சொல்லிக்கொள்வாள். தனக்கு விதிக்கப்பட்ட விதியை எண்ணி, இப்போது வாழும் வறுமையை எண்ணி. 'ஒண்ணா ரெண்டா, ஒண்ணொணா குழிலேண்ணாடா போட்டேன்" என்று சொல்லிச் சொல்லி புலம்புவாள், மாய்ந்து போவாள். மாமாவுக்கு அடுத்து என் அம்மா, பின் ஒரு பெரிய இடைவெளி. கடைசிகுழந்தை என் சின்ன மாமா. என் அம்மாவுக்கும் சின்ன மாமாவுக்கு இடையே பிறந்த குழந்தைகள் குழந்தைகளாகவே இறந்து விட்டன. அதைத் தான் நினைத்து நினைத்து பாட்டி புலம்பிக் கொண்டிருப்பாள். மாமா கும்பகோணம் காலேஜில் FA பரிட்சை எழுதப் போயிருக்கிறார். தாத்தா இங்கு சுவாமி மலையில் இறந்து விட்டார்,. உடனே கூட்டிக்கொண்டு வா என்று காலேஜுக்கு ஆள் அனுப்பி, மாமா வந்தவர் தான். பின் படிப்பைத் தொடரும் வசதி இல்லை. இதெல்லாம் பாட்டி அவ்வப்போது தன் விதியை நொந்து புலம்பும் போது சொன்ன விவரங்கள். படிப்பை நிறுத்திய பிறகு, குடும்பம் எப்படி நடந்தது, ஆசிரியப் பயிற்சி மாமா பெற்றது எங்கே, எப்படி, என்பதெல்லாம் தெரியாது. தாத்தாவின் மறைவிற்குப் பிறகு குடும்பம் எப்படி நடந்தது என்பதும் தெரியவில்லை. மறைந்த தாத்தாவுக்கு உடன் பிறந்தவர்கள் ஆணோ, பெண்ணோ யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. விவரம் தெரிந்த பிறகு, உமையாள்புரம், பாபுராஜபுரம், சுவாமி மலை என்று அடுத்தடுத்து இருக்கும் ஊர்களில், தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஒன்று விட்ட சகோதரர்கள், சகோதரிகள் என்று தான் இருந்தார்கள். அவரவர் குடும்பம், வாழ்க்கை அவரவர்க்கு என்றாகியிருக்க வேண்டும். மாமா பிறந்த வருடம் 1910. அவர் FA பரிட்சை எழுதிக் கொண்டிருந்த போது தாத்தா இறந்தார் என்றால், அனேகமாக அது 1927-28 வருட வாக்கில் இருக்க வேண்டும்.

•Last Updated on ••Saturday•, 19 •December• 2015 19:57•• •Read more...•
 

நினைவுகளின் தடத்தில் (1)

•E-mail• •Print• •PDF•

- அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழில் மீள்பிரசுரமாகும். - திவுகள் -

- வெங்கட் சாமிநாதன் -என் மிகப் பழைய ஆரம்ப ஞாபகங்கள் சில அடிமனதில் பதிவானவை அவ்வப்போது மேலெழுந்து நினைவில் நிழலாடிச் செல்லும். இப்போது அவற்றை எழுத்தில் பதியத் தோன்றுகிறது. அப்போது எனக்கு இரண்டரை அல்லது மூன்று வயதிருக்கலாம். அந்த வீட்டில் பாட்டியை நன்கு நினைவிருக்கிறது. மாமாவையும் நன்கு நினைவிருக்கிறது. கொல்லைப்புறம் இருக்கும் கிணற்றிலிருந்துதான் தண்ணீர் எடுத்து வரவேண்டும். பாட்டி குடத்துடன் கிணற்றுக்குச் செல்வாள். குடத்தில் தண்ணீர் நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டு திரும்பும் போது நான் பாட்டியை முந்திக்கொண்டு வீட்டுக்கு ஒடுவேன். இது ஒரு நினைவோட்டம்.

பின் மங்கலாக மனத்தில் திரையோடும் ஒரு துண்டுக் காட்சி. குரங்கு ஒன்று என்னைத் துரத்துகிறது. ஒரு பெரிய உயர்ந்த மண்டபத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு என்னை மிரட்டுகிறது. வெகு வருடங்களாக இந்த மாதிரி ஒரு காட்சி என்னில் அவ்வப்போது திரையோடினாலும், அந்த மாதிரி ஓரிடத்தில் நான் இருந்ததாகவே நினைவில் இல்லை. என்னவோ என் மனதுக்குள் கற்பனை செய்து கொண்டிருக்கிறேனோ என்று நினைத்துக்கொள்வேன். ஆனாலும், அந்த மண்டபம், குரங்கு மிரட்டுவது எல்லாம் அவ்வப்போது, சிறுவயது ஞாபகங்கள் வரும்போது, இக்காட்சியும் உடன் வந்து மறையும். பின் ஒரு முறை பழனிக்குப் போயிருந்தேன், என் சின்ன மாமா பெண்ணின் கல்யாணத்திற்காக. பத்து வருடங்களுக்கு முன். அப்போது தான் நான் பழனிக்கு முதன் முறையாகச் செல்கிறேன். நிலக்கோட்டையிலிருந்து அப்படி ஒன்றும் வெகு தூரத்தில் இல்லை பழனி. அருகில் இருந்த போதிலும், என் மாமா தீவிர முருக பக்தர் என்ற போதிலும், பழனி சென்றதில்லை அது வரை. அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், கல்யாணத்திற்குப் பழனி சென்றவன் கோவிலைப் பார்க்கச் சென்ற போது அடிவாரக் கோயிலின் முகப்பு மண்டபம், என் சிறு வயதிலிருந்து திரையோடிக்கொண்டிருக்கும் மண்டபம் போலவே இருந்தது. சிறு வயதில் குரங்கு என்னைப் பார்த்து மிரட்டியது இங்கு தானோ? ஒரு வேளை மாமா என்னையும் அழைத்துக் கொண்டு பழனி வந்திருப்பாரோ? இருக்கலாம். என்னவோ தெரியவில்லை. ஆனால் அந்த அடிவார முகப்பு மண்டபத்தைப் பார்த்ததும், சட்டென சிறுவயதிலிருந்து இன்று வரை அவ்வப்போது நிழலாடிச் செல்லும் நினைவு, இப்போது கண்முன் பிரத்யட்சமாகியுள்ளது போன்று ஒரு திகைப்பு. எப்படியும் விளக்கவோ, விளங்கிக் கொள்ளவோ முடியாத dejavu -க்கள்.

•Last Updated on ••Saturday•, 19 •December• 2015 19:53•• •Read more...•
 

இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே ராமானுஜம் வெங்கட் சாமிநாதனுடனோர் உரையாடல்.

•E-mail• •Print• •PDF•

[ 'பதிவுகள்' இணைய இதழுக்கு கலை, இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் 18.10.2015 அன்று அனுப்பிய இறுதிக்கட்டுரையிது. இதன் முடிவில் தொடரும் என்றிருந்தாலும் திரு.வெ.சா.வின் மறைவு காரணமாக இக்கட்டுரை தொடராது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். - பதிவுகள்-]

- வெங்கட் சாமிநாதன் --  1983 – ல் முல்லைத் தீவில் பிறந்த ஜெயபிரகாஷ்  கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் கல்வி கற்று, அந்த  கல்லூரியிலேயே நாடகம் அரங்கியல் துறையில் ஆசிரியராகப் பணியாற்றுபவர். கடந்த இரண்டு வருஷங்களாக பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் ஒரு முதுநிலை பட்ட ஆய்வாளராக இருக்கிறார்.. நடிகர். பரதமும் கற்று பட்டம் பெற்றவர். இந்திரா பார்த்த சாரதியின் இராமானுஜர் நாடகத்தில் ராமானுஜராக நடித்தவர். பின் வரும் பேட்டி இரண்டு நிலைகளில் நிகழ்ந்தது. முதலில் பங்களூரில் நேரில் பேட்டி கண்டும் பின் பாண்டிச்சேரியிலிருந்து எழுதி அனுப்பிய கேள்விகளுக்கு எழுதித் தந்த பதில்களுமாக ஒன்றிணைந்தது. -

வெங்கட் சாமிநாதன்: எனக்கு இப்போது வயது  82.  முடிந்து, இரண்டு மாதங்களுக்கு முன் தான் 83- ம் வயதுக்கு  காலடி எடுத்து வைத்திருக்கிறேன்.  இதில் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலம் மிகக் கொஞ்சம்.  பள்ளிப் படிப்பு முடிந்ததுமே, 16-ம் வயதில் தமிழ் நாட்டுக்கு வெளியே வந்துவிட்டேன். வேலை தேடி. பிழைக்க வேண்டும் மூத்த பிள்ளை, குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஆக, என்னை உருவாக்கியது தமிழ் நாட்டுக்கு வெளியே எனக்குக் கிடைத்த அனுபவங்கள் தான். அவற்றை நான் உள்வாங்கியதும், எதிர்கொண்டதுமான உறவு தான். ஆக, பொது வாழ்க்கையில் காலடி வைத்து என் மனதுக்குப் பட்ட கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்தது, ஒரு பெரியவர் தன் பத்திரிகையில் எனக்கு இடம் கொடுத்ததால் வந்த வினை, இது தொடங்கியது  1959 – லிருந்து. அன்றிலிருந்தே, கிட்டத்தட்ட ஐம்பது ஐம்பத்தைந்து வருட காலமாக, .   நிறைய  அடிபட்டிருக்கிறேன்.  எனக்கு சில  விசயங்களில்  ஈடுபாடும்  ஒரு  தெளிவும்  இயல்பான  அக்கறையும்    இருந்தது – அந்த விழிப்பும் தெளிவும் தோன்றத் தொடங்கியது  தில்லியில் வாழத் தொடங்கிய 1956 லிருந்து.  என் இருபத்து மூன்றாவது வயதிலிருந்து. . சின்ன வயதிலேயே நான்  தமிழ் நாட்டை விட்டு  வெளியில் வந்து விட்டதினால், தமிழ் நாட்டில் அந்த வாய்ப்பு  எனக்குக்  கிடைக்க  இல்லை.  ஏதோ தமிழ் நாட்டிலேயே இருந்திருந்தால் அது கிடைத்திருக்கும் என்பது போல் இது தொனிக்கிறது. இல்லை. தமிழ் நாட்டில் தொடர்ந்திருந்தால், ஒரு வேளை நான் மாறியிருக்க மாட்டேன்.எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக இருந்திருப்பேன். அத்தோடு ஒரு உதாரணத்துக்கு, ரஜனிசாரின் காபாலி பட ரிலீஸ் அன்றைக்கு அவர் ஃப்ளெக்ஸ் போர்ட் விளம்பரத்துக்கு நடக்கும் பாலாபிஷேகம் பார்த்து மெய்சிலிர்த்து நின்றிருப்பேன். அல்லது, மேடையில் கொலு வீற்றிருக்கும் கலைஞரை நோக்கி, அவரது பராசக்தி படத்திலேயே, அன்றே தான் கண்ட சினிமா தொழில் நுட்பங்களைக் கண்டு வியந்ததையெல்லாம் உலக நாயகன் விவரிக்க மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்த கலைஞரும் சபையில் நிறைந்திருக்கும் ரசிகப் பெருமக்களூம்  அடைந்த புளகாங்கிதமும் பரவசமும் என்னையும் தொற்றி, மெய்மறக்கச் செய்திருக்கும். . அல்லது  ஒரு வேளை  வெறுப்புற்று  தலை தெறிக்க எங்காவது ஓடியுமிருக்கலாம்.  தெரியாது.  இப்படி எத்தனையோ விஷயங்கள். ஆக, இந்த இரண்டுவித கிறுக்குகளில் ஏதோ ஒன்றாக இருந்திருப்பேன். நிதான புத்தியோடு மாத்திரம் வளர்ந்திருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது.

•Last Updated on ••Wednesday•, 21 •October• 2015 20:36•• •Read more...•
 

சாதேவி – நம்மிடையே வாழும் கன்னடத்தமிழ் உலகம்!

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகம், சிறுகதைத் தொகுப்பு ஒன்று படிக்கக்கிடைத்ததில் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சந்தோஷம் என்று சொன்னது பின்னர் இதைப்பற்றி எழுதிச்செல்லும் போது எனக்கு கொஞ்சம் சிக்கலான காரியமாக ஆகப்போகிறது. ஆனாலும் எழுதியதை அழிக்க விரும்பவில்லை. சந்தோஷம் என்று சொன்னது உண்மை.

சந்தோஷம் திறமையாக எழுதும் ஒரு சிறு கதைக்காரரைக் கண்டு கொண்டதில்.. ஆமாம், கண்டு கொண்டதுதான். இதுதான் அவரது முதல் தொகுப்;பு. நன்றாக எழுதியிருக்கிறாரே தவிர அவர் அதிகம் அலட்டிக்கொண்டவராகவோ,  தமிழ்ச் சிறுகதை வானில் ஒரு புதிய நக்ஷத்திரம் உதயமாகி விட்டதாகவோ ஏதும் பேச்சில்லை. சில காலமாக தெரிந்த ;பெயர்தான். இணையத்திலும் புத்தக ;பிரசுரத்திலும் சம்பந்தப்பட்ட பெயராக, எழுத்தாளராக அல்ல. தன்னைப் பற்றி அப்படி அவர் அறிவித்துக் கொண்டதில்லை. எனக்குத் தெரிந்து யாரும் அவரை ஒரு சிறுகதைக்காரராக பிரஸ்தாபிக்க வில்லை. ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. அதுவும் தமிழ் நாட்டில். இங்கு தெருவுக்குத் தெரு கவிஞர்கள் ஜனத்தொகை கொஞ்சம் அதிகம். சிறுகதைக்காரர்கள் கணிசமாக இருந்தாலும் கொஞ்சம் குறைவு தான்.

இக்கதைத் தொகுப்பில் 34 கதைகள் இருக்கின்றன. இதில் தரப்பட்டுள்ள  இக்கதைகள் 2003 லிருந்து 2013 வரை எழுதி அவர் தன் ப்ளாகில் வெளியிட்டுக்கொண்டவை.  இந்த விவரத்தை இத்தொகுப்பிலிருந்து தான் நான் தெரிந்து கொள்கிறேன். அவ்வப்போது தன் கவிதைகள், சினிமா விமர்சனங்கள் என அவர் தன் ப்ளாகில் எழுதிக்கொண்டிருந்தாலும், அவரையும் அவரது ப்ளாக் பற்றியும் நான் மிக தாமதமாகத் தான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.  ஒரு சிலவற்றைப் படித்துமிருக்கிறேன். எதுவும் ஒரளவு கணிசமான எண்ணிக்கையில் ஒட்டு மொத்தமாகக் கையில் கிட்டுமானால் தான், எழுத்தின் பின் இருக்கும் ஆளுமையைப் பற்றியும். அந்த எழுத்து நமக்கு பரிச்சயப்படுத்தும் உலகு பற்றி ஏதும் சித்திரமும் பதிவும் நமக்குக் கிடைக்கும்.

•Last Updated on ••Tuesday•, 06 •October• 2015 22:10•• •Read more...•
 

வானம்பாடிகளும் ஞானியும் (2)....

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -இப்போது ஞானி வானம்பாடிகள், அவர்கள் கவிதைகள், அவர்களை ஒன்றிணைத்து செயல்பட தான் முனைந்தது, அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள்,  வானம்பாடி இதழ் கொண்டு வரும் முன் அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள், வானம்பாடி இதழில் அவர்கள் வெளிப்படுத்திய கவிதைகளின் பண்புகள், தான் அவர்களிடம் எதிரார்த்த ஒன்றுபட்ட கருத்தாக்கமும், அவர்களது செயல்பாடுகளும் என்று எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து வானம்பாடி இதழும் இயக்கமாக தான் அதைச் செயல்படுத்த விழைந்ததும், இடையே அவர்களுக்கிடையே எழுந்த முரண்பாடுகள், பின்னர் வானம்பாடி இதழ் செயல்பட முடியாது போனதும் , இன்று சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அது பற்றிய அவரது  சிந்தனைகள் எல்லாம் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள், கடிதங்களை எல்லாம் தொகுத்து அளித்திருக்கிறார், படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. வெளியில் சொல்லப்பட்டதும்,சொல்லிக்கொண்டதும்  தன் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களுமாக நம் முன் அவை விரியும்போது, இவற்றினிடையே ஞானியின் மாறிவரும் அபிப்ராயங்களையும் மாறாது அவர் வலியுறுத்தும் பார்வைகளையும் பார்க்க முடிகிறது.

ஞானி தன் அளவுக்கு தனக்கு உண்மையாகத்தான் இருக்கிறார். அவ்வப்போது அவர் தன் சக கவிஞர்களைப் பற்றியும் அவ்வப்போது தன் மாறி வரும் அபிப்ராயங்களையும் சொல்லிச்  சொல்லும் போது , எல்லோரும் கூட்டாக செயல்படும்போது சில விஷயங்கள் மனதுக்கு ஒத்து வராவிட்டாலும் பாராட்டாது கூட்டுச் செயல்பாட்டிலேயே கவனம் செலுத்தும் காரணத்தாலா, இல்லை, பின்னர் எல்லாம் சரியாகிவிடும், மார்க்ஸிஸம் தான் இந்த முரண்களைச் சரி செய்துவிடும்  சர்வரோக நிவாரணி என்ற நம்பிக்கையா, எதுவென்று ஏதும் புரிவதில்லை. ஆனால் இந்த முரண்களை யெல்லாம் தானே முன் வந்து முன் வைக்கும்போது, அவரை நாம் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார் என்று கருத முடிவதில்லை. எனினும் ஒவ்வொரு கூட்டு இயக்கத்தின் பின்னும், கூட்டாக செயல்பட வருபவர்களின் அவரவரது உள்நோக்கங்களும், எதிர்பார்ப்புகளும், பலவாக வேறுபடும் போது, அது அவருக்குத் தெரிந்த போதிலும் அதை மார்க்ஸிஸம் சரி செய்துவிடும் என்று அவர் நம்பினாலும் அந்த முரண்களும் தனி நபர் ஆசைகளும்  இல்லாமலாகி விடுவதில்லை. அவரவர் கவித்வ மகுடமும், ஒருமித்த செயல்பாட்டில் கிடைக்கும் பிராபல்யமும் இல்லாமலாக்கி விடுவதில்லை. அவரவர் தனியாகவும் சரி, கூட்டாகவும் சரி, தம் பிம்பத்தை வளர்த்துக் கொள்வதிலேயே கருத்தாக இருப்பார்கள் போலும். போலும் என்ன?. அது தான்

•Last Updated on ••Tuesday•, 22 •September• 2015 22:20•• •Read more...•
 

வானம்பாடிகளும் ஞானியும் (1)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -வானம்பாடி என்ற பெயரில் ஒரு கவிதை இதழ் எனக்கு 1970 களின் ஆரமப வருடங்களில் வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை என்று வீடு மாறிக் கொண்டிருந்த நிர்பந்தத்தில் இருந்த எனக்கு வீடு தேடி வந்து அறிமுகமானது. அன்று என் இருப்பிடம் என்னவென்று அறிந்த யாரோ ஒரு அன்பரின் சிபாரிசில். முழுக்க முழுக்க கவிதைக்கெனவே வெளியாகும் இலவச இதழ் என்று சொல்லப்பட்டது. அதில் கவிதை எழுதி கவிஞர்களாக அறிமுகப்படுத்தப்பட்ட யாரையும் நான் அதற்கு முன் அறிந்தவன் இல்லை. அதன் வெளியீடும் அதில் தெரியவந்த கவிஞர்களும் தம்முள் தெரியப்படுத்திக் கொண்ட நமக்கும் உரத்த குரலில் அறியப்படுத்திய ஒரு முகம், மொழி இருந்தது. ஒர் உரத்த போர்க்குரல். பழக்கப்பட்ட இடது சாரி கோஷக் குரல். தாமரை, ஆராய்ச்சி, போன்ற இன்னம் சில் கம்யூனிஸ்ட் அல்லது முற்போக்கு இதழ்களில், காணும் முகம் மொழி அது. எனக்கு அந்த குரலும், அது கொண்ட வடிவமும் வேடிக்கையாகத் தான் இருந்தது. இடது சாரிகளின் இன்னொரு இலக்கிய முனை போலும் என்று முதல் இதழிலிருந்தே தோன்றிற்று. எவ்வளவு சுறுசுறுப்பாக முனைப்புடன் இவர்கள் எல்லா முனைகளிலும் செயல்படுகிறார்கள் என்று வியப்பாக இருந்தது. அதிலும் விடு தேடி இலவசமாக, துண்டு பிரசுரம் வினியோகிப்பது போல! ஆனால், ஒன்றிரண்டு கற்கள் அப்பளத்தில். வானம் பாடி கவிஞர்கள் எழுத்து பத்திரிகையின் புதுக் கவிதை இயக்கத்தால் பாதிக்கப்பட்டு அது தந்த சுதந்திரத்தில் வானில் தம் இஷ்டத்துக்கு பறக்க முனைந்து விட்டவர்களாகத் தோன்றினர். அப்படி ஒரு பிரகடனம், ஏதும் அவர்கள் பத்திரிகையில் இல்லை என்றாலும், அவர்கள் கவிதைகள் சொல்லாமலே அப்படித்தான் சாட்சியம் தந்தன. இவ்வளவுக்கும் அதன் கவிஞர்கள தமிழ் புலமை பெற்ற தமிழ் ஆசிரியர்கள். தமிழ் யாப்பு தெரியாததால் புதுக்கவிதை எழுதத் தொடங்கியவர்கள் புதுக்கவிதைக் காரர்களை கேலி செய்த காலத்தில் தமிழ்ப் புலவரகள், புதுக்கவிதை எழுதுவதா? அதிலும் தமது இடதுசாரி சிந்தனைக்கு குரல் கொடுக்க?. இடது சாரிகள் என்று இவர்கள் தம்மைச் சொல்லிக் கொள்ளவில்லைதான்.. ஆனாலும் இடது சாரிகளின் இலக்கிய முனை, கமிஸாரான, சிதம்பர ரகுநாதனும், நா.வானமாமலையும் இலங்கையிலிருந்து இன்னொரு கமிஸார் கலாநிதி க. கைலாசபதி போன்ற பெருந்தலைகள் புதுக்கவிதைக்கு எதிராக காரசாரமாக பிரசாரம் செய்துகொண்டிருந்தார்கள். அப்படி இருக்க வானம்பாடிகள் இடது சாரி உரத்த குரலுக்கு புதுக்கவிதையை தேர்வதா? கட்டுப்பாடுகள் நிறைந்த இடது சாரிகள் கூடாரத்திலிருந்து இப்படி ஒரு எதிர் முனைப் புரட்சியா? ஆச்சரியமாக இருந்தது.

•Last Updated on ••Tuesday•, 15 •September• 2015 06:39•• •Read more...•
 

இசை – தமிழ் மரபு (3)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தமிழர்களின் படைப்பு மேதைமை இசையிலும் நடனத்திலுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பக்தி சகாப்தத்தின் இலக்கிய மேதைமை கம்பனில் தன் உச்சத்தை அடைந்து பின் சரிவடையத் தொடங்கி, 16  - ம் நூற்றாண்டுக்குப்பின் கிட்டத்தட்ட வறண்டு போனது அம்மேதைமை இசையிலும், நடனத்திலும் தன் கவனத்தை முழுவதுமாய் திருப்பியது,  இதற்குப் பின் தமிழ் நாடு இவ்விரண்டு துறைகளிலும் கற்பனை, மேதைமை இரண்டிலும் மிகச் சிறந்து மலர்ந்தது. பல்லவர்களும் சோழர்களும் கோவில்களை தமிழர் வாழ்க்கையின் உட்கருவாய் மாற்றியதில் அவர்களது நடவடிக்கைகள் கோவிலைச் சுற்றியே இருந்தன .விஜயநகர சாம்ராஜ்யமும் அவர்களுக்குக் கீழ்ப்பட்ட நாயக்கர்களும் இத்தகைய அமைப்புகளை ஒருங்கிணைத்து அவற்றை இன்னும் வலுப்படுத்தினர். இத்தகைய நிகழ்வுகள் வடக்கில் பழங்காலத்தில் குப்தர்களின் காலத்துக்குப் பின் எப்போதும் காணப்படவில்லை, அது தேய்ந்து போன நினைவுகளாயிற்று., உயிர்ப்புள்ள நிஜம் அல்ல. தெற்குக்கு அதன் சரித்திரம் முழுவதிலும் நீடித்து இருந்த ஒரு விஷயம் அதன் அறுபடாத மரபு, அம்மரபின் மேல் அது கட்டி எழுப்பிக் கொண்டு போக முடிந்தது,  அதற்கு சாதகமாக இருந்தது   வட இந்தியாவை ஒப்பிட்டு நோக்கும் போது, இங்கு நிலவிய அமைதி. கோவிலிலிருந்து பிரவாஹித்த பாடகர்களின், நாட்டிய கலைஞர்களின்  இனிமையான இசை மற்றும் லயத்துடனான தாள ச்ப்தங்கள்  அப்பிரதேசம் முழுவதுமே எதிரொலித்தது. நாயக்கர்களுக்குப் பின்வந்த மராத்தா மன்னர்களும் இன்னும்  அதிக அளவில் இம்மரபைத் தொடர்ந்தனர். சாலைகளிலும், கோவில்களின் நடைபாதைகளிலும் நிரம்பியிருந்த இசைக்கு  பாமர மக்களும் (hoi polloi), நூற்றாண்டுகள் பலவாகத் தொடர்ந்து நிலவும் இத்தகைய சூழலில் இதற்கு அன்னியப்பட்ட பாமர மக்கள் இருந்திருப்பாராயின், அப்பாமர மக்களும் இச்சுழலில் மூழ்கி மகிழ்ந்தனர். . கோவில் திருவிழாக்களின்போது வாரக்கணக்கில் பாட்டுக் கச்சேரிகளும் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன, வருடம் முழுவதும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன, தெருக்களில் ஊர்வலமாய் நாகஸ்வர இசையும், நடனமும் நிகழ்த்தப்பட்டன. திருமணங்களிலோ அல்லது செல்வந்தர் வீட்டு விசேஷங்களிலோ நடந்த பாட்டுக் கச்சேரிகளும் நடன கச்சேரிகளும் எல்லோருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. விடியலுக்கு முன்பாடகர்கள் கூட்டமாய் தேவாரமும்,  பிரபந்தமும், தியாகராஜ கிருதிகளும் பாடிக்கொண்டு போகும் காலைப் பொழுதுகளில் சாலைகள் விழித்தன. சங்ககாலத்தில் பாணர்களும் பொருணர்களும், பக்தி சகாப்த நூற்றாண்டுகளில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இதைத்தான் செய்தனர்.

•Last Updated on ••Saturday•, 29 •August• 2015 20:18•• •Read more...•
 

இசை: தமிழ் மரபு (2)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -இந்திய இசைச்சரட்டின் இந்த முனையைப் பற்றியவர்கள், என ஆந்திரத்தில் தோன்றிய தல்பாக்கம் அண்ணமாச்சாரியார்,  பத்ராசலம் ராமதாஸர், நாராயண தீர்த்தர், கர்நாடகத்தில் புரந்தரதாசர் போன்றவராவர் இந்துஸ்தானி சங்கீதம் பாரசீக, அராபிய இசைகளின் தாக்கத்துக்குட்பட்டு வேறு வளர்ச்சிப் பாதையில் சென்றுவிட்டது. மேல் ஸ்தாயிகளை எட்டுவதில் இஸ்லாமியர்களின் பிரமிக்கவைக்கும் சாதனைகளுடன் த்ருபத் உள்ளே நுழைந்து பிரபந்தங்களை வெளியேற்றியது. கர்நாடக இசையில் கீர்த்தனங்கள்/ கிருதிகள் பிரபந்தத்தின் இடத்தை எடுத்துக்கொண்டன. வடக்கின் பிரபந்தங்களின் எச்ச சொச்சங்களைத் தேடிப்போனால் கிழக்கை நோக்கி ஜெயதேவர், வித்யாபதி, ஞானதாசர், சைதன்யர், துக்காராம், ஞானதேவர், நாமதேவர், ஏக்நாத் மற்றும் நர்ஸிமேத்தா, சங்கர தேவர் அல்லது மாதவ தேவர் போன்றவர்களிடையே போகவேண்டும், இஸ்லாமியப் படையெடுப்புக்களுக்கும் ஆக்கிரமிப்புக்கும் உட்பட்டிருந்த கங்கைச் சமவெளியில் அப்படி யாரும் நமக்குக் கிடைக்க இல்லை.  ஆழ்வார்களும், நாயன்மார்களும் தெற்கில் பல நூற்றாண்டுகளுக்கு முன்புசெய்ததை கங்கைச் சமவெளியில் திரும்பச் செய்வதற்கு தெற்கிலிருந்து மதுராவுக்கு இடம்பெயர்ந்த வல்லபாச்சாரியாரின் வருகை வரை காத்திருக்க வேண்டியிருந்தது.  வல்லபாச்சாரியாருக்குப் பிறகே பக்தி இயக்கம் வடக்கில் சூடுபிடிக்க ஆரம்பித்தது – ராஜஸ்தான், மஹாராஷ்டிரம் மதுரா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மக்களின் மொழியில் இசை பிரவாஹிக்க ஆரம்பித்தது. பரதரிலிருந்து சாரங்கதேவர் வரையில் எவரும் இந்திய இசையில் இன்று காணப்படும் இந்துஸ்தானி ,கர்நாடக இசை எனும் பிரிவுகளைப் பற்றிப் பேசவில்லை. ஏனெனில் இப்பிரிவுகள் அப்போது இருக்கவில்லை,  பின்பு தான் வந்தன. .துணைக்கண்டம் முழுவதிலும்  ஒரே இசைமரபுதான் இருந்தது. இசை அளவைகளை (scale)  ஏழுஸ்வரங்களாகவும், 12 ஸ்வர ஸ்தானங்களாகவும், அவற்றை மீண்டும் கால்தொனிகளாகவும் பிரிப்பது என சாரங்கதேவர் நிறுவியது அனைத்தும் இளங்கோவுக்குத் தெரிந்திருந்தது, இவை ஒரு சாதாரண தரத்திலுள்ள கர்நாடக இசைப்பாடகரின்  நிகழ்ச்சியில் கூடப் பார்க்கலாம். ஆனால் ஸ்வரங்களுக்கு இடையே உள்ள துல்லிய ஒலி அலைகளை (microtones) கணக்கில் எடுத்துக்கொள்ளாத இந்துஸ்தானி கலைஞரின் பாட்டில் இவற்றைப் பார்க்க முடியாது.  மீண்டும் ராமானுஜ ஐயங்காரின் வார்த்தைகளில், 

•Last Updated on ••Tuesday•, 18 •August• 2015 22:27•• •Read more...•
 

இசை: தமிழ்மரபு (1)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -இசையில் ஒரு தனித்வமான தமிழ் மரபைப் பற்றிப் பேசுவது கடினம். மிக பழம் காலத்திலிருந்து தமிழ் இசையின் சரித்திரத்தை தேடிப் செல்வோமானால் ,நமக்குக் கிட்டும் இலக்கியச்சான்றுகள் அதைத் தமிழ் இனம் மற்றும் பண்பாட்டின் விளைபொருளாகக்  காட்டும் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் அதே சமயம் அது ஒரு பரந்த பெரிதான அகில இந்திய (Pan-Indian)மரபின் ஒரு பகுதியாகவும்  இருப்பதைப்  பார்ப்போம் அப்படிப் பார்க்கையில் அதில் முழுதுமாய் தமிழ் மரபு சார்ந்தது மட்டுமே எனச் சொல்லக் கூடியதாய் தனித்வம் கொண்டது என எதுவும் இருக்காது.  விரைவாய் சரித்திரத்தின் பிரவாஹத்தில் பயணித்து  இன்று வரையில் வருவோமானால்,  பல கால கட்டங்களில், அம்மரபு திராவிடத் தென்னகம் முழுவதுமே பரவியிருந்த போதிலும் அதில் தமிழர்களின் பங்களிப்பே அதிகம் பரவலாக இருப்பதைப் பார்க்கலாம். அப்படியிருக்கையில், எங்கிருந்து தொடங்குவது? புரந்தரதாசரிடமிருந்தா?  

1484 – ம் –வருடம் அவர் பூனா மாவட்டத்தின் புரந்தர்கர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் , அவரது கீதங்கள் கன்னடத்தில் இருந்தன. இசையில் இன்று வழக்கத்தில் இருக்கும் கர்நாடக மரபின் தொடக்கங்களை  ஆராய்ந்து பார்த்தால், அதன் நீட்சியில், வரலாற்றின் ஆரம்ப இழைகள்  புரந்தரதாசரிடமிருந்து தொடங்குவதைக் காணலாம். ஆம், அது இந்துஸ்தானி பத்ததியிலிருந்து தனிப்பட்டுக் காணும் ஒவ்வொரு அம்சத்திலும், கர்நாடக பத்ததியின் தந்தை அவர் என்றே சொல்லவேண்டும். கர்நாடக சங்கீதக் கல்வியின் பாடத்திட்டம், சொல்லிக் கொடுக்கும் முறை, முதல் நிலையில் அதன் தொடக்கமான சரளி வரிசை,  ஜண்டை வரிசை, ஸ்வரப் பயிற்சி என்பதுபோல் இவை அனைத்துமே புரந்தரதாசரின் ஆக்கங்கள் தான் .இந்துஸ்தானி சங்கீதம் போலல்லாது கர்நாடக சங்கீதம் கீர்த்தனைகளை சார்ந்ததாக இருப்பதால், கிருதி அல்லது கீர்த்தனை ஒரு ராகத்தின் சொல் வடிவமாகி, ராகத்தின் பாவமும் லட்சணமும் கிருதிகள் மூலமே பாதுகாக்கப்பட்டு சிஷ்யர்களுக்கு கொடுக்கப்படுகிறது (துல்லியமான விஞ்ஞான ரீதியான இசைக்குறியீடுகள் இல்லாத காரணத்தால், இசையை கற்பித்தல் காலம் காலமாக வாய் வழியாகவே குருகுல முறையில் நடந்து வந்துள்ளது) – இவை அனைத்துக்கும்  கர்நாடக சங்கீதம் புரந்தரதாசருக்குக் கடமைப்பட்டுள்ளது. ஒரு கன்னடக் காரரான அவருக்கு, தமிழ்மரபின் சூழலில் என்ன பங்கு உள்ளது? இதை அறிய சரித்திர பிரவாஹத்தில் முன்னும் பின்னும் போகவேண்டும். பின்னோக்கிப் போகையில், புரந்தரதாசர் தமிழ் இலக்கிய சரித்திரத்தின் (கி.பி.100 – 200) சங்ககால “பாணர்” ‘பொருணர்” மரபில் வருகிறார் என்பதைக் காணமுடியும். அம்மரபு தமிழ்ப் பண்பாட்டின் தனித்த விளைபொருள் .வீடுகளில் பொங்கி வழிந்து, ஒவ்வொரு சாலையிலும், நாட்டின் பரந்த விஸ்தாரத்தில் வழிந்தோடி இறுதியில் அரசரின் மாளிகையில் உச்சத்தை அடைந்த தமிழ்க் கவிதை மற்றும் இசையின் ஒப்பற்ற இணைவு (இவ்வரிசை முறையைத் தலைகீழாகச் சொல்வோமானால் அதுவும் சரியாகத்தான் இருக்கும்).

•Last Updated on ••Tuesday•, 18 •August• 2015 22:00•• •Read more...•
 

இசை : தமிழ் மரபு

•E-mail• •Print• •PDF•

ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்

- வெங்கட் சாமிநாதன் -இது எண்பதுகளின் தொடக்கத்திலோ அல்லது நடுவிலோ எப்போதோ எழுதப் பட்டது. சரியாகச் சொல்ல இது வெளியான பத்திரிகை இப்போது தேடிக் கிடைத்த பாடில்லை. எந்த அலுவலகத்தில் உட்கார்ந்து எழுதியது, அதற்கு முன்னும் பின்னுமான நினைவிருக்கும் நிகழ்வுகளை வைத்துக் கொண்டு உத்தேசமாக, எண்பதுகளின் இடைவருடங்கல் என்று சொல்ல வேண்டும். எழுதியது ஆங்கிலத்தில். கேட்டது ஒரு ஹிந்தி இதழ். மத்திய அரசின் இதழ். ஆஜ்கல் என்று நினைக்கிறேன். ஹிந்தியில் மொழிபெயர்த்து பாதியாக சுருக்கி வெளியிட்டார்கள். அந்தப் பத்திரிகையின் பிரதியைத் தான் குறிப்பிட்டேன் கிடைக்கவில்லை.  பின் வருடங்களில் ஜே. ஸ்ரீராமன் என்னும் பத்திரிகையாளருக்கு என்னைப் பிடித்துப் போயிற்று. நான் என்ன எழுதினாலும் அவர் தான் துணை ஆசிரியராக இருக்கும் அருணா ஆஸ்ஃப் அலி தொடங்கி நடத்தி வந்த Patriot என்னும் தினப் பத்திரிகையில் ஞாயிறு பதிப்பில் நடுப்பக்கத்து கட்டுரையாகப் பிரசுரித்து விடுவார். அவரைச் சந்திக்கும் போது அங்கு Arts சம்பந்தப்பட்டவற்றைக் கவனிப்பவருடன்  (பெயர் மறந்துவிட்டது) பழக்கமேற்பட்டது. அவர் ஆசிரியத்வம் ஏற்றிருந்த LINK வாரப் பத்திரிகையில் சாமிநாதன் என்ன எழுதினாலும் போடலாம். வாங்கிவா? என்று அங்கு ரிப்போர்ட்டராக இருந்த நண்பர் வெங்கட் ராமனிடம் சொல்லி அனுப்பி, நிஜமாகவே நான் என்ன எழுதினாலும் அதில் பிரசுரமாயிற்று.( யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றி எழுதிய கட்டுரையின் முன்னுரையிலும் இதை எழுதியிருக்கிறேன். எனக்கு நடக்கும் நல்ல விஷயங்களை சமயம் கிடைக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை சொன்னால் நல்லது. தப்பில்லை) சரி இவ்வளவு நடக்கிறதே என்று Music – the Tamil Tradition என்று ஆஜ்கல் பத்திரிகைக்கு எழுதிய ஆங்கிலக் கட்டுரையையும் கொடுத்தேன். அது பிரசுரமாயிற்று. கடைசி மூன்றில் ஒரு பகுதி மாத்திரம். அது இன்றைய நிலையைச் சொல்வது. இரண்டு பகுதிகளாக இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில். (Patriot, Sunday 8.5.88 /15.5.88) என்னதான் சாமிநாதனைப் பிடித்திருந்தாலும் ஒரு தினசரி எவ்வளவு தான் இடம் கொடுக்க முடியும்? எனக்குத் தெரிந்து சென்னை ஹிந்து பத்திரிகை தான் கிருஷ்ணமேனன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் கஷ்மீர் பற்றிய தீர்மானம் குறித்த நேரத்தில் பாஸாகாமல் தடுக்க மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருந்தார். அந்த பேச்சு முழுதையும் மூன்று/நான்கு பக்கங்களுக்கோ என்னவோ ஹிந்துவில் பிரசுரமாயிற்று.  அப்போது கின்னஸ் வொர்ல்டு ரிகார்டெல்லாம் இருந்ததோ என்னவோ. இருந்திருந்தால் இதுவரை மீறப்படாத சாதனையாக அது இருந்திருக்கும். அதன் பிறகு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் அந்த கட்டுரை அது எழுதப்பட்ட முழுமையில், ஆங்கிலத்தில் இருந்தது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ( உஷா வைத்தியநாதனின் தயவினாலும் பொறுமையினாலும்) பிரசுரமாகிறது.

•Last Updated on ••Tuesday•, 18 •August• 2015 22:01•• •Read more...•
 

காலவெளி: விட்டல்ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்

•E-mail• •Print• •PDF•

காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்   - வெங்கட் சாமிநாதன் -- வெங்கட் சாமிநாதன் -கால வெளி என்ற தலைப்பில் விட்டல்ராவிடமிருந்து ஒரு நாவல். நாவல் அல்ல, ஒரு சொல்லாடல். புனைவு அல்ல. ஒரு உண்மை நிகழ்வின் மீது சற்று புனைவும் பூசிய பதிவு. விட்டல் ராவ் நமக்குத் தெரிந்த ஒரு நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர்.  அவர் தாய் மொழி கன்னடமேயானாலும், அவரது எழுத்து வாழ்க்கை தமிழில் தான் , அவர் எழுத்துக்கள் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சுயசரிதமாக விரியும். குணத்தவை. நிறைந்த ஆழ்ந்த படிப்பாளி. மிகவும் பரந்த படிப்பாளியும் கூட.. அவரது ஈடுபாடுகள் நாடகம், சினிமா, சரித்திரம், ஒவியம் என பல தளங்களில் விரிந்தவை. கன்னட நாடக ஆரம்ப சரித்திரம் என்றே சொல்லத் தக்க விரிவில், ஒரு நாவல் எனவும் தந்துள்ளார். இதற்கான அவரது தூண்டுதல் அவரது சகோதரி கன்னட நாடகங்களில் பக்கு பெற்றது தான். அது ஆரம்ப கட்டங்களில். அந்த ஈடுபாடு அவரைத் தமிழ் சினிமாவிலும் பரந்த ஆழ்ந்த தொடர்பு கொள்ளச் செய்துள்ளது. அது பரவலாக, தென்னிந்திய, இந்திய, உலக சினிமா என்றும் விரிவதைச் சாத்தியமாக்கியிருக்கின்றது. தமிழ் சினிமா பற்றியும் கன்னட சினிமா பற்றியும், கனமான புத்தகங்கள் எழுதியுள்ளார். நமது பெயரும் புகழும் பெற்ற சினிமா தலைகளை விட உயர்ந்த தளத்தில் எழுதப்பட்டவை அவை. இவையெல்லாம் தகவல் சேகரிப்பு என்ற புள்ளியில் நிற்பதல்ல. ஆழ்ந்த அழகியல் உணர்வு என்றும், ஓரளவு, ஒரு சீரிய பார்வையாளன் கிரஹிக்கும் அளவு தொழில் நுட்ப அறிவும் கூடியது என்றும் விரிந்து நீண்டுள்ளது. அவரது புகைப்பட பயிற்சியும் இதற்கு அடித்தளத்தில் இருந்து உதவியிருக்கக் கூடும். அவரது கலை உணர்வு எல்லாவற்றுக்கு அடி நாதமாக இருந்திருக்கிறது என்றும் சொல்ல வேண்டும். தான் சென்ற இடங்கள், படித்தறிந்த வரலாறு இவற்றிலிருந்து அவர் தனதாக்கிக் கொண்டுள்ள சிற்ப ஓவிய, கட்டிட வரலாறு எல்லாம், இவை அத்தனையும் அவரை, இன்றைய தமிழ் எழுத்துலகில் தனிப்பட்ட ஒரு வியக்தியாக, கலை உலகின் எல்லா பரிமாணங்களிலும் தன் அனுபவத்தைப் பதிபவராக நமக்குத் தந்துள்ளது.

•Last Updated on ••Thursday•, 23 •July• 2015 21:12•• •Read more...•
 

கடைசிப் பகுதி - தெருக்கூத்து

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -இத்தகைய உயிரோட்டமுள்ள, தனித்தன்மையுடைய  ஒரு நாடக மரபு  கவனிக்கப்படாமல் விட்டுவிடப்பட்டுட்ள்ளது ஒரு துரதிருஷ்டவசமான விஷயம். உண்மையில் அனைத்து நாட்டார் கலைகளுக்கும் இதே கதிதான், அவற்றில் பலவும் மறக்கப்படும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. தெருக்கூத்து போன்ற சில ஆங்காங்கே சில இடங்களில் இன்னும் பிழைத்திருக்கின்றன. அவை கலை வெளிப்பாடு களாக, நாடகம் அல்லது நடன வடிவம் என்று கருதப்படுவதினால் அல்ல, சடங்குகளாக அவை பிழைத்திருக்கின்றன. இந்த வடிவங்கள் அவர்களுடைய இனத்தில்/ சமூகத்தில் அவ்வூர் தெய்வங்களுக்கான சடங்குகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதால் அவற்றை விழாமல் தாங்கி, அவற்றை ரசிப்பவர்கள் கிராமப்புறத்து மக்கள் திரள் தான். இவ்வாறு கோவில் சடங்குகளுடன் பிணைக்கப்படாத நாட்டார்கலைகள் கீழ்நிலைப்பட்ட கேளிக்கைகளாகக் கருதப்படுவதால் அழிந்துபோய்க் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பண்பாட்டு மேட்டுக்குடிகள் (cultural elite?) செவ்வியல் கலைகளுடன் மட்டுமே சம்பந்தமுடையவர்களாக இருக்கிறார்கள், நகரப்புறத்து மக்களின் ஆர்வமோ நவீனமான கலைகளுக்கு அப்பால் போவதில்லை. தெருக்கூத்திலிருந்து அதனிடத்தில் மேடை நாடகம் (Proscenium theater) ஒரு கண்ணைமயக்கும் நவீன நாடக வடிவமாகப் பிறந்தபின் இந்தப் போக்கு வளர்ந்து வருகிறது. நாட்டார்கலைகள் அனைத்துமே வெளிப்பாட்டில் தன்னிச்சையான வெளிப்பாடு பெறும் இயல்புடையவை, அவை எழுத்து வடிவத்தைச் சார்ந்திருப்பதில்லை, அப்படி எழுதி வைக்கப்பட்டுளவைக்கும் அவற்றை நிலைத்திருக்கச் செய்யும் வகையிலான இலக்கிய மதிப்பு கிடையாது. குறவஞ்சியின் தோற்றம் நாட்டார் கலையில்தான் இருந்தது ஆனால் அதற்கு ஒரு இலக்கிய மதிப்புள்ள எழுத்து வடிவம் கிடைத்ததும், அது செவ்வியல் கலையாக உயர்த்தப்பட்டது. மேலே பார்த்தது போல தெருக்கூத்தில் இலக்கியமான வில்லிப்புத்தூராரின் பாரதம் பிரசங்கியின் கதாகாலட்சேபத்திற்கு மட்டுமே உபயோகப் படுத்தப்படுகிறது, கூத்தில் உபயோகப்படுத்தப்படும் உரைநடை வசனங்களுக்கு இலக்கிய மதிப்பு எதுவும் இல்லை. தெருக்கூத்தின் கலையம்சம் அதன் நாடக வெளிப்பாட்டிலிருந்து வருவது (உடலசைவுகள் மற்றும் அதன் காட்சி சம்பந்தப்பட்ட விஷயங்கள்) அதில் உபயோகிக்கப்படும்  பேச்சினால் அல்ல, அது எழுதப்பட்டதா யிருந்தாலும் சரி அல்லது தன்னிச்சையாய் கற்பித்துப் பேசப்படுவ தாயினும் சரி. இது தோற்றத்திலிருந்தே நாட்டார்கலைகள் அனைத்துக்கும் பொதுவானது.

•Last Updated on ••Wednesday•, 15 •July• 2015 16:29•• •Read more...•
 

தெருக்கூத்து ( 3)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -இவையத்தனையும் முதலில் சொல்லிவிட்டு, இப்பொழுது நாம் கூத்தின் முதல் நாளின் அரங்கேற்றத்துக்குத் திரும்பப் போவோம், அதாவது திருவிழாவின் 10வது நாள்.அன்றையச் சம்பவம் திரௌபதியின் திருமணம்.பாஞ்சால மன்னனின் அரண்மனையில் நடக்கும் சுயம்வரத்தில் ஆரம்பிக்கிறது நாடகம்.அரசர் வில்லை எடுத்து வர ஆணையிடும் கட்டத்தில் மேடையில் நாடகம் நின்று போகிறது.இதற்குள் நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. மல்லர்கள் போல் வேடமணிந்த சில நடிகர்கள் (பழந்தமிழ் இலக்கியத்தில் பேசப்படும் போர்வீரர்கள்/ மல்யுத்தக்காரர்கள் இவர்கள்) கோவிலுக்குச் சென்று 30 அடிக்கு 40 அடி நீளத்தில் மூங்கிலால் செய்யப்பட்டு பூஜை செய்வித்து புனிதப்படுத்தப்பட்ட ஒரு வில்லை எடுத்து வருகிறார்கள். கிராமத்து மக்களும் பறை மற்றும் சிலம்பு ஒலிக்க இவர்களுடன் வருகிறர்கள். ஆங்கில எழுத்து F  போன்ற ஒரு மரச் சாதனமும் வருகிறது. ஒரு வில்லில் மரத்தாலான ஒரு மீனுடன் ஒரு சின்னச் சக்கரம் உள்ளது. அந்த வில்லைத்தான் அங்கு கூடியுள்ள மன்னர்கள் எடுக்க முயற்சி செய்து தோற்பார்கள், ஆனால் அருச்சுனன் அதைத் தூக்குவதில் வெற்றியடைந்து இலக்கையும் அடித்து விடுவான். கூத்து நிகழ்ச்சி திரௌபதியின் திருமணத்துடன் நிறைவடையும். மறுநாள் திரௌபதியின் திருமணம் மீண்டும் கொண்டாடப்படும், அதாவது தென்னிந்தியக் கோவிலில் இத்தகைய கோவில் விழாக்களில் நடக்கும் அனைத்து சடங்கு முறைகளுடனும் அது நடைபெறும். கோவிலின் கர்ப்பக்கிருகத்தில் திரௌபதியின் சிலைக்கருகே அருச்சுனன் சிலையும் வைக்கப்படுகிறது.அனைத்துத் திருமணச் சடங்குகளும், அம்மனின் கழுத்தைச் சுற்றித் தாலி கட்டுவது உட்பட அனுஷ்டிக்கப்படுகின்றன.மறுபடியும் அந்தச் சிலை கிராமத்தை சுற்றி எடுத்துச் செல்லப்பட்டு, கிராமம் முழுவது விழாக்கோலம் கொள்கிறது.பிறகு அம்மன் கோவிலுக்குத் திரும்புகிறாள்.இங்கே பண்டைய காலத்து அம்மன் மற்றும் காவல் தெய்வத்தை திரௌபதி அம்மனுடன் இணைப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.காவியம் (பிரசங்கி), நாடகம் (தெருக்கூத்து) மற்றும் சடங்கு (அம்மன்) என்பவற்றின் ஒருங்கிணைப்பும் இங்கே நடக்கிறது.ஒவ்வொன்றும் அவற்றின் தனி அடையாளத்தைக் கைக்கொண்டிருக்கையிலேயே, அவற்றிடையேயான உறவுடன் ஒன்றிணைவது இது.

•Last Updated on ••Monday•, 06 •July• 2015 23:34•• •Read more...•
 

வெங்கட் சாமிநாதன் பக்கம்: தெருக்கூத்து (2)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -

தமிழ்நாட்டின் கிராமீய நாட்டார் நாடகக்கலையும் இன்று தர்மபுரி, வட,தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் என்று தொணடைமண்டலம் சார்ந்த அண்மைப்பகுதிகளுக்குள் உட்பட்டுள்ள கலையான தெருக்கூத்து தனித்தன்மை வாய்ந்த ஒன்று, இதற்கு இணையானது நம் உபகண்டத்தில் வேறெங்கிலும் இல்லை. அப்படி இன்னொன்று இருந்தாலும், அதைப்பற்றி நாம் கேள்விப்படவில்லை. இப்படிச் சொல்வது தமிழ் மீதுள்ள அதீத பற்றின் வெளிப்பாடு எனத் தோன்றக்கூடும். இதை நம்புவது கடினமாக இருப்பதற்கு சில காரணங்கள் உண்டு.

இக்கலையின் பல பரிமாண விஸ்தாரமும், அந்த விஸ்தாரம் இயங்கும் பல தளங்களும் இன்னும் தமிழர்களாலேயே அறியப்படவில்லை, அல்லது அவர்களுக்கே பரிச்சயப் படுத்தப்படவில்லை, வெளி உலகத்துக்கோ, இதைப் பற்றிய பரிச்சயம் இன்னும் குறைவானது. அதன் மண்ணைவிட்டு, அது இயங்கும் சூழலைவிட்டு இக்கலை வெளியே எடுத்துச்செல்லப்பட்ட அரிய தருணங்களிலும், இதர பிராந்தீயங்களின் வெகுவாய் விளம்பரப் படுத்தப்பட்ட நாட்டார் நாடக வடிவங்களோடு ஒப்பிடுகையில், தலைநகர் தில்லியில் நிகழ்த்தப்படும்  நாட்டார்கலை விழாக்களிலாகட்டும், பாரிஸில் ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியாவிலாகட்டும், அது நிகழ்த்தப்படும் ஒரு மணிநேர நிகழ்வில், தெருக்கூத்து பரிதாபகரமாய் ஏற்றுமதிக்கான ஒரு தயாரிப்பாய், ப்ரயாகையில் சிலர்    குளிப்பதைக் காட்டி இதுதான் கும்பமேளா என்று சொல்லும் விடியோ துணுக்குகளைப் போன்று குறுகிச் சிறுத்துவிடும் பரிதாபகரம் தான். இதனால் இயற்கையாகவே தெருக்கூத்தின் பலவண்ணக் கோலம் பற்றிய அதன்  பரந்த வீச்சைப் பற்றிய  விவரம் அறியாத  வாசகர்களிடம் (கவலையற்று அறியாமையில் திளைக்கும் தமிழ் பண்பாட்டுச் சூழலும், நகர்புற மக்கள்திரளும் இதில் அடங்குவர்) நான் பேசுகையில் என் நம்பகத்தன்மையும் பலத்த அடி வாங்கும்.

•Last Updated on ••Thursday•, 25 •June• 2015 20:24•• •Read more...•
 

வெங்கட் சாமிநாதன் பக்கம்: தெருக்கூத்து (1)

•E-mail• •Print• •PDF•

தொடங்கும் முன் சில வார்த்தைகள்......

- வெங்கட் சாமிநாதன் -

எனக்கு பல விஷயங்களில் தொடர்பும்  பிடிப்பும் பின் ரசனை உணர்வும் ஏற்பட்டது வேடிக்கையாக இருக்கும். தமிழ் நாட்டில் இருந்த வரை, எனது பதினெட்டாம் பிராயம் வரை நான் தெருக்கூத்து பார்த்தவனுமில்லை. அப்படி ஒன்று இருப்பதாக அறிந்தவனுமில்லை. தமிழ் நாட்டிலிருந்து ஒரிஸ்ஸா வுக்கும் பின்னர் தில்லிக்கும்  சென்று பத்து வருடங்களுக்குப் பின் தான் தெருக்கூத்து என்ற சமாசாரத்தின் ஒர் சிறு சாம்பிள் முப்பது நாற்பது நிமிஷ துண்டுக் காட்சி அனுபவம் கிடைத்தது. அது 1966 அல்லது 1967- ஆக இருக்கக் கூடும்  அது ஒரு குறுகிய நேரக் காட்சியே ஆனாலும், அது ஒரு மின் வெட்டாக இன்றும் மனதில் ஓடும் நிரந்தர பதிவாக ஆகிவிட்டது. அது பற்றி எழுதியதும்  என்  நினைவில் இருக்கிறது.  எழுதியது அந்த வருடத்தின் பின் மாதங்களில் தீபம் இதழில் என்பதும் நினைவில் இருக்கிறது. ஆனால் இப்போது அது கைவசம் அகப்பட  மறுக்கிறது. தில்லி ரவீந்திர பவன் புல்வெளியில் சங்கீத நாடக் அகாடமியின் அந்நாளைய செயலாளர், பெயர் சுரேஷ் அவஸ்தி என்று நினைக்கிறேன், அவருடைய நாடகம் என்ற கருத்தாக்கத்தில் இந்தியா முழுதும் பரவிக் கிளைத்துள்ள கிராமீய கலைகள், பூர்வீக குடிகளின் கலைகள் எல்லாமும் அடங்கும். வருடா வருடம் Folk Arts Festival ஒன்றை அவர் நடத்துவார். அவர் நடத்திய அந்த விழாக்களிலிருந்து தான் அவற்றை ஒன்று விடாமல் பார்த்து அனுபவித்தபின் தான்  அந்த பார்வையை நானும் ஸ்வீகரித்துக் கொண்டேன். என் ரசனைக்கும் அது ஏற்புடையதாக இருந்தது. தெருக்கூத்து பார்த்த முதல் அனுபவமும் ரசனையும் அது பல தளங்களில் இயங்கும் ஒன்று  என்ற அறிவும் அன்றைய சங்கீத் நாடக் அகாடமியின் செயலாளர் சுரேஷ் அவஸ்தியின் உபயம்.

•Last Updated on ••Sunday•, 14 •June• 2015 18:10•• •Read more...•
 

இங்கே எதற்காக - ஜெயபாரதியின் திரையுலக வாழ்க்கைக் குறிப்புகள்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -

இங்கே எதற்காக என்று ஒரு புத்தகம் திரைப்பட இயக்குனர் ஜெயபாரதியினது ஒரு புது வரவு சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. மிகப் பழைய நினைவுகள் சில, அதிகம் இல்லை. எப்போதோ எழுபதுகளின் ஆரம்ப வருஷங்களில், நான் தஞ்சையில் விடுமுறையில் இருந்த போது ஒரு கடிதம் வந்தது. சினிமா பற்றி ஏதாவது எழுதும்படி. அது மாலனோ அல்லது ஜெயபாரதியோ அல்லது இருவருமே அடுத்தடுத்தோ, சரியாக நினைவில் இல்லை. என்ன எழுதினேன் என்று நினைவில் இல்லை. என்ன எழுதக்கூடும் நான் என்ற தயக்கத்தோடு தான் எழுதிய ஞாபகம். ஏதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எதுவும் இல்லை. இதை நினைவு கூறக் காரணம், நான் என்ன எழுதினேன் என்பது அல்ல. இப்போது தனக்கு அறுபத்து மூன்று வயதாவதாகச் சொல்லும் ஜெயபாரதி அப்போது 22 வயதினராக இருக்க வேண்டும். ஒரு பத்திரிகை, சினிமா பற்றி, அதுவும் தமிழில் சினிமா பற்றி மிகவும் வித்தியாசமாக, சிந்திக்கும் மனதில் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஜெயபாரதி. சத்யஜித் ரே, மிருணால் சென், ரித்விக் காடக்,  என பலர் அகில இந்திய தளத்திலும் உலக சினிமா தளத்திலும் புதிய சரித்திரம் படைப்பவர்களாக, உலவத் தொடங்கிய பிறகு, தமிழ் நாட்டிலும் ஒரு ஜெயகாந்தன் ஒரு எளிய தொடக்கமாக உன்னைப் போல் ஒருவனைத் தந்து விட்ட பிறகு, ஒரு சில நூறு பேராவது, சரி ஒரு சில ஆயிரம் பேர்களாவது முற்றிலும் வேறு பாதையில் தமிழ் சினிமாவைப் பற்றி சிந்திக்கவாவது தொடங்கியிருந்திருக் கிறார்கள். இதனால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை ஆகிவிடவுமில்லை.

•Last Updated on ••Tuesday•, 09 •June• 2015 22:55•• •Read more...•
 

பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -

கன்னட சினிமாவில் பி. சேஷாத்ரி என்று ஒரு இயக்குனர். அவரை அறிமுகம் செய்து வைத்துத் தான் ஆகவேண்டும். நம் தமிழரில் நல்ல சினிமாவை ரசிப்பவர்கள் ஒருசில ஆயிரமாவது இருப்பார்கள் என்று நம்ப விரும்புகிறேன். அது பற்றிப் பேசுபவர் தெரிந்ததாக சொல்லிக்கொள்பவர்கள் இதைவிட ஒன்றிரண்டு மடங்கு  கூடவே இருக்கக் கூடும் தான். நான் ரசிப்பவர்களைப் பற்றி மாத்திரமே பேச விரும்பு கிறேன். நம்மூர் சிவாஜி கணேசன், சிம்பு வகையறா போன்று அங்கும் ராஜ்குமார் போன்றாரை விட்டு ஒதுங்கி தனிப்பாதையிட்டுச் செல்லத் தொடங்கியவர்கள், கிரீஷ் கர்நாட், காஸரவல்லி, பி.வி. காரந்த் போன்றாரைத் தெரிந்திருக்கலாம். எம்.எஸ் சத்யு, ஜி.வி. ஐயர் போன்றார், தெரிந்த பெயர்களாக இருக்குமா என்பது தெரியாது. அதிலும் கிரீஷ் கர்நாட் தெரிந்திருப்பது, அவர் நடித்த சம்ஸ்காரா ,எழுபதுகளில் பெரும் சச்சரவில் சிக்கியது காரணமாகவே இருக்கக் கூடும்.

கொஞ்சம் காட்டமாகவே நான் எழுதுவதாகத் தோன்றலாம். எனக்கான நியாயங்கள், சரியோ தவறோ இரண்டு மூன்று இருக்கத் தான் செய்கின்றன. நல்ல சினிமா பயிற்சி பட்டறைகள் ஒன்றிரண்டு, அதில் ஒன்றில் என் கன்னட நண்பர் ஒருவர், சினிமா ரசிகர் வகுப்பெடுக்கச் சென்றார். எடுத்த உடனேயே அந்த பயிற்சி மாணவர்கள் சொன்னது, “ஐயா நீங்கள் எல்லாம் உடனே இத்தாலி சினிமா, ப்ரெஞ்ச் சினிமா என்று பேச ஆரம்பித்து விடுகிறீர்கள். நீங்களும் உங்கள் நண்பர் சாமிநாதனும். நம்ம ஊரைப் பத்திப் பேசுங்க. இந்த மண்ணைப் பத்திப் பேசுங்க” என்பது அவர்களது ஏகோபித்த வேண்டுகோள். இவர்கள் ஏற்கனவே பயிற்சியில் இருப்பவர்கள். முதல் நாள் முதல் ஷோ பார்க்க சென்னை வெயிலில் டிக்கட் வாங்க நிற்பவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் பயிற்சியில் என்ன எதிர்பார்த்தார்களோ தெரியாது.

•Last Updated on ••Tuesday•, 02 •June• 2015 17:53•• •Read more...•
 

யாமினி கிருஷ்ணமூர்த்தி – (7 , 8 & 9)

•E-mail• •Print• •PDF•

யாமினி கிருஷ்ணமூர்த்தி – (7 )

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)- வெங்கட் சாமிநாதன் - குச்சிபுடி நடனத்தில் யாமினி கற்றுத்தேர்ந்திருந்தது குறுகிய, மரபுக்குட்பட்ட பாமா கலாபம், கிருஷ்ண சப்தம், க்ஷேத்ரக்ஞ பதங்கள் மேலும் குச்சிப்புடி நிகழ்ச்சியில் தவிர்க்கமுடியாத தரங்கம் போன்றவைதான்., அவரது பரதநாட்டியப் பயிற்சியில் அவர் கற்றுத் தேர்ந்திருந்தது போல் பலதரப்பட்டதும், வளமானதுமாய் அவரது குச்சிபுடி பாடாந்திரம் இருக்கவில்லை. வேறெந்த கலைஞரின் நடனக்கலைத் தேர்ச்சியும், பாலசரஸ்வதியினுடையது கூட, யாமினியின் பாடாந்திரம்   பலவகைப்பட்டதும், வளமுடையதாகவும் இருந்ததில்லை. பாலசரஸ்வதியின் பாடாந்திரத்துக்கு எண்ணிக்கையில் ஈடு இணை கிடையாதுதான். ஆனால் அதன் எண்ணிக்கைப் பெருக்கம்  முழுவதுமே இரட்டை முகம் கொண்ட ரோமானியக் கடவுள் ஜேனஸைப் போல சிருங்காரம்/பக்தி என்றே இரண்டு பாவங்களின் ஆதிக்கமாகவே இருந்தது. அவர் அவற்றை விட்டு வெளியே வரவே இல்லை .இருப்பினும் பாலா முழுமையாய் செவ்வியல் மரபையொட்டியவராகவே இருந்தார். சிருங்கார பாவம் என்றால் அவற்றில் என்னென்ன நுண்ணிய நிறபேதங்கள் இருக்கலாம், கூடாது என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் துணிச்சலும், சாகஸமும் நிறைந்த யாமினிக்கோ, செவ்வியல் மரபையொட்டியதும் அவருடைய தந்தையின் பாண்டித்தியத்தால் வழிநடத்தி ஒழுங்குபடுத்தப்பட்டதுமான தனது கலையின் மேலிருந்த பிடிப்பில் பிறந்த தன்னம்பிக்கையாலும், அவருக்கே இயல்பாய் இருந்த கலையுணர்வின் காரணமாகவும், அதிகம் யோசனையின்றி எங்கும் நுழைய முடிந்தது. எப்படிப்பட்ட கலவையாய் இருப்பினும் அதில் தன்னை வசீகரித்தவற்றை ஏற்கவும், அல்லாததை நிராகரிக்கவும் செய்து, அதை தனக்குரியதேயாக்கி, அவரது ஆளுமையின் தனி முத்திரையை அதில் பதிக்கவும் முடிந்தது. யாமினியின் பரதநாட்டியத்தைப் பற்றியும், ஓரளவுக்கு அவரது ஒடிஸ்ஸியைப் பற்றியும், இதைச் சொல்லலாம். ஒடிஸ்ஸியை பற்றியவரை ஓரளவுக்கே. ஏனெனில் அவருக்கு அக்கலையுடனான தொடர்பு குறைந்த காலமே நீடித்தது. குச்சிபுடியுடன் அவருக்கிருந்த காதலும்  ஊடலும், ஒரு மணவாழ்க்கையிலுள்ள காதல்-ஊடலைப் போலவே இருந்தது. அவரால் குச்சிபுடியை முழுமையாய் அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியவில்லை. அவருள் இயல்பாயிருந்த கலையுணர்வும், கற்றுத் தேர்ந்திருந்த செவ்வியல் கலைவடிவம் ஒருபக்கமும், மறுகோடியில் அவரது தாய்மண்ணின் நடனவடிவத்தின் மேலிருந்த உணர்ச்சிசார்ந்த பாசத்துக்குமான போராட்டத்தில், நாசூக்கும் நுட்பமுமாய் கோடிகாட்டிப் புரியவைக்கும் செவ்வியல் வடிவத்துக்கும், இன்னொருபக்கம் மிகை வெளிப்பாடு கொண்டதும், மக்களிடையே செல்வாக்குள்ளவற்றைத் தேடி அணைக்கும் இயல்புடையுதுமான கட்டற்ற கற்பனை மரபுடைய ஒரு வடிவத்துக்கும் இடையே அவர் அதை எத்தனை சுத்திகரித்தாலும், அணைபோட முயன்றாலும், யாமினியின் இயல்பான விளையாட்டுத்தனமும், குறும்பும் அவரை வென்று அவரது ப்ரயத்தனங்களைத் தடுமாறச் செய்தன.

•Last Updated on ••Friday•, 01 •May• 2015 18:49•• •Read more...•
 

வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம். ஆவணமாகிவிட்ட அரசியல் இதழொன்றின் எளிய ஆரம்பங்கள்.

•E-mail• •Print• •PDF•

1_vijaya-bhaskaran5.jpg - 27.90 Kb- வெங்கட் சாமிநாதன் -சரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் (1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவர் என்றே நான் அறிந்திருந்த, வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும்  கூட நடத்தி வந்திருக்கிறார். சுமார் இரண்டு வருஷங்கள். தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது. தமிழக அரசியலில் மாத்திரம் இல்லை. இந்திய அரசியலிலும் தான்.  இந்திய அரசியல் கட்சிகள் பெரும் சவால்களை எதிர்கொண்ட கால கட்டமும் அது. அவற்றின் நம்பிக்கை களுக்கும் , கொள்கைகளுக்கும் எழுந்த  பெரும் சவால்கள். அவை தேசீய தளத்திலும் சர்வ தேசீய தளத்திலுமான சவால்கள். தமிழக அரசியலிலோ எழுந்த சவால்கள் அதன் பண்பாட்டு, வரலாற்று, தார்மீக சவால்களாக இருந்தன.  இரண்டு தளங்களிலும் ஒரு பெரும் திருப்பு முனையாக முன்னின்ற கால கட்டம் அது.

தேசீய தளத்தில் முன் நின்ற பெரும் சவால், சீன ஆக்கிரமிப்பும் அதன் வரலாற்றிலேயே பதிந்திருந்த ஏகாதிபத்ய முனைப்புகளும் கனவுகளும். இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை தீர்மானிக்கும் நிபுணத்வமும் உலக வரலாற்று அறிவும் நிறைந்த பெட்டகமாக தன்னை நினைத்துக்கொண்டிருந்த நேருவுக்கு கிடைத்த பலத்த அடி. அதை சீனாவின் நயவஞ்சகமாக, துரோகமாக நேரு பிரகடனம் செய்தார்.  நேரு போன்ற சீனாவின் வரலாறு அறிந்த, ஒரு தேசத்தை ஆளும் பொறுப்பேற்ற, தலைவர்களுக்கு, அதன் ஏகாதிபத்ய குணங்களும் வல்லரசு ஆசைகளும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஏமாந்தது நேருதானே ஒழிய, சீனா நட்புத் துரோகம் செய்ததாகச் சொல்ல முடியாது. அது தன் வரலாற்றில் அனேக நூற்றாண்டுகளாக பதிந்திருந்த தன் தேசீய குணத்தின் படி செயல்பட்டது. எப்பொழுதெல்லாம் சீனா ஒன்றுபட்டதோ, அப்போதெல்லாம் அதன் ஆக்கிரமிப்பு குணம் வெளிப்படும். திபெத்தை விழுங்கியதிலிருந்து இன்று ஜப்பானிலிருந்து ஒரு பெரும்  அரைவட்டமாக அஸ்ஸாம் வரை, பின்னும் நீண்டு லதாக் வரை அதன் ஆக்கிரமிப்பு 60 வருடங்களுக்கு மேலாக தொடர்வதைக் காணலாம். நேருவின் வரலாற்று அறிவுக்கும் வெளிநாட்டு உறவு பற்றிய பரிச்சயத்துக்கும் நேருவுடன் போட்டியிடாத, வல்லபாய் படேல், சைனா திபெத்தை ஆக்கிரமித்த அந்த ஆரம்ப கட்டத்திலேயே நேருவை எச்சரித்தும் அதை அலட்சியம் செய்தவர் நேரு.

•Last Updated on ••Monday•, 13 •April• 2015 03:50•• •Read more...•
 

(6) யாமினி கிருஷ்ணமூர்த்தி

•E-mail• •Print• •PDF•

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)- வெங்கட் சாமிநாதன் -யாமினி தன் நடன வாழ்க்கையைத்  தொடங்கிய ஆரம்ப வருடங்களிலேயே, எவ்வளவு  சிக்கலான தாளக் கட்டுகள் கொண்ட ஜதிகளாகட்டும், மிக அனாயாசமாக துரித கதியில் ஆடும் திறமை தனக்குண்டெனக் காட்டியவர் பின் வருடங்களில் அத்திறமை வளர்ந்து கொண்டுசென்றதைக் கண்டார். அது அவருடைய ஆளுமையின் ஒரு அம்சமாக விருந்தது. அவரது மெல்லிய மென்மையான தேகம் அவர் இஷ்டத்துக்கு சிறுத்தையென பாயும், தன் பலத்தைக் காட்ட விரும்பினால்.  தன் சலனத்தில் ஒரு அழகைக் காட்ட விரும்பினால், அந்தப் பாய்ச்சல் மானைப் போன்று ஒரு அழகு கொள்ளும். மானின் அழகான துள்ளலில் கவிதை காணும். யாமினி தன் நடனத்தில் இவற்றைப் பிரதிபலிக்கும் போது அவர் தன்னை வருத்திக்கொள்வதில்லை. வியர்த்து விறுவிறுத்து மூச்சிறைக்கும் காரியமாக இராது. தன்னை மறந்த நிலையின் உற்சாக வெளிப்பாடாகவே அது இருக்கும். இது அவரது நடன நிகழ்ச்சியின் புகைப்படங்களைப் பார்த்தால் தெரியும்.  அவரது சலனத்தில் ஒரு கண்ணிமைக்கும் நேரக் காட்சியே உறைந்து காணும் புகைப்படங்களில், யாமினியின் மகிழ்ச்சி ததும்பும் தோற்றமே பதிவாகியிருக்கும். அவரது முகத்தில் அயர்வின், களைப்பின் சுவடே காணமுடியாது அப்பதிவில். அவரது உற்சாகம் ததும்பும் சிருஷ்டி மனத்தின் ஜீவத் துடிப்பு தான் அவரது அயர்வற்ற நடனத்தை இயக்குகிறது. அதன் பின் மறைந்திருப்பது  ஒரு அசாதாரண ஒழுங்கு, கட்டுப்பாடு, பின், நடனத்துக்கான அர்ப்பணிப்பு உணர்வு எலலாமே தான். இவையெல்லாம் தான் அவரது நடனக்கலையின் குணத்தை உருவாக்கியிருக்கின்றன. அவர் விரும்பினால், அவரது நடனம் மெதுவான இயக்கமும் பெறும். அது அவரது விருப்பத்தையும் நடனத்துக்கு தேர்ந்தெடுக்கும் பதத்தையும் பொருத்தது. தியாகராஜரின் “சாதிஞ்சினே …. ஓ.. மனஸா….”வுக்கு ஆடத்தொடங்கினால், அவரது ஆட்டம் விளம்ப அல்லது மத்திம காலத்துக்கு மாறும். “அதை நான் ஒரு சவாலாகவே எடுத்துக் கொள்வேன்.” என்கிறார் அவர். காரணம் அவரது தன்னியல்பான சலனம் துரித காலத்திலேயே வெளிப்பாடு பெறும். இதைச் சொல்லும் போது அவர் தனது உள்ளார்ந்த இயல்பையும், தேர்ந்த விருப்பையும் தன்னை மறந்து சொல்லிவிட்டார் என்றே சொல்லவேண்டும். பூணை மூட்டைக்குள்ளிருந்து வெளியே குதித்துவிட்டது. அவரது இயல்பானதும் விருப்பமும் துரித கதியில் தான். அவரது அரங்கேற்றத்தின் போதும் நடந்தது இது தான். அன்றிலிருந்து நாம் பார்த்து வந்த நடன நிகழ்ச்சிகள் எல்லாமே இதைத்தான் நமக்குச் சொல்கின்றன, ஒரு வேளை அவர் குரு எல்லப்ப பிள்ளையும், அவர் நடனம் பயின்ற பந்தநல்லூர் பத்ததியும் கூட காரணமாக இருக்கலாம்.. ஆனால், விளம்ப காலத்தில் இருக்கும் எதுவும் அவரது இயற்கைக்கும், இயல்புக்கும் விரோதமானது தான். ஆனால், அவரால் அதையும் ஏற்று, தடையில்லாது, பிசிரற்று, தடுமாற்றம் இல்லாது ஆடிவிடமுடியும்.

•Last Updated on ••Tuesday•, 10 •March• 2015 01:49•• •Read more...•
 

(5) யாமினி கிருஷ்ணமூர்த்தி

•E-mail• •Print• •PDF•

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)- வெங்கட் சாமிநாதன் -பின் வந்த வருடங்களில், யாமினியும் அவரது தந்தையாரும் நடனத்துக்கு எடுத்துக்கொண்ட பதங்கள் பாரம்பரிய பரத நாட்டியம் காலம் காலமாக எடுத்துக்கொண்டு வரும் பதங்கள் அல்ல. முதலில் அவை சிருங்காரம் சார்ந்ததாக இல்லை. சிருங்காரத்தை ஒதுக்கி விட்டால், நவரசங்களின் பாவங்களை  தம் நடனத்தில் வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களை அந்த நடனம் தனக்கு மறுத்துக்கொள்வதாகும். யாமினிக்காக பேராசிரியர் தயாரித்துக் கொடுக்கும் பாடாந்திரம் (  repertoire)  பெரும்பாலும் ஆண், பெண் தெய்வங்களின் குணங்களை அல்லது தெய்வச் செயல்களை விதந்து போற்றுவனவாக இருக்கும். அடுத்து, அந்த பதங்களின் ஒவ்வொரு சொல்லும் தெய்வங்களைப் போற்றுவனவாகவும் மிக நெருக்கமான அடுக்கடுக்கான குணசித்திர மகிமைகளைச் சொல்வனவாகவும் இருப்பதால்,  சாவகாசமான நீண்ட பரதக் கலை வெளிப்பாட்டுக்கு வாய்ப்பு தராதவையாக இருக்கும். இந்தப் பதங்கள் பெரும்பாலும் சங்கீத வெளிப்பாட்டுக்கெனவே இயற்றப் பட்டவையாக, முத்துசாமி தீக்ஷிதர், தியாகராஜர் போன்றோரின் கீர்த்தனைகளாகவும் ( உதாரணமாக நவரத்தினக் கீர்த்தனைகள், பஞ்சரத்தின கீர்த்தனைகள்) பின்னும் பாடுவதற்கென்றே இயற்றப்பட்ட தில்லானாக் களாகவும் இன்னும் சில வேதங்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளாகவும், ஆதி சங்கராச்சாரியாரின் பஞ்சாக்ஷர ஸ்லோகங்களாகவும் இருக்கும். சங்கீத வெளிப்பாட்டுக்கும், நடனவெளிப்பாட்டுக்கான பதங்களின் இலக்கணமும் தேவையும் வேறாக இருக்கும். ஆனால் யாமினியின் பார்வை வேறாக இருந்தது அது அவருடைய தந்தையாரின் பாண்டித்யத்தாலும், புதியவை நாடும் மனத்தாலும் உருவாக்கப் பட்டவை.. அது வரை  வேறு யாரும் பார்வை செலுத்தாத விஷயங்களைத் தான் ஆராய்ச்சி மனம் கொண்ட பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் கண்கள் தேடும். ”நமது பாரம்பரியமும், இலக்கியமும் மிக அகண்டதும் விஸ்தாரமானதுமாகும். நம் கால்பதித்திராத, பார்வை பட்டிராதவை அனேகம். நாம் அவற்றில் தீவிர கவனம் செலுத்தினால், நாம் இன்று காணும் இன்றைய  நவீன இலக்கியத்தைப் போலவே நவீன பார்வையும் சிந்தனையும் ஆழமும் கொண்டவையாக இருப்பதைக் காணலாம் என்று சொல்கிறார் யாமினி.

•Last Updated on ••Tuesday•, 10 •March• 2015 01:35•• •Read more...•
 

மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு!

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -சரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன. இமையத்தின் எழுத்துடன் முதல் பரிச்சயம் நிகழ்ந்து. கோவேறு கழுதைகள் நாவல் இமையத்தின் எழுத்துடனான முதல் பரிச்சயத்தைத் தந்தது. தலித் சமூகத்திடமிருந்து இன்னம் ஒரு சிறப்பான எழுத்தின் வருகையைக் கண்டு எனக்கு மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும். வெகுஜன கவர்ச்சியை மீறி தனித்தடம் ஒன்று தனக்கென வகுத்துக்கொண்டு தம் பயணத்தைத் தொடங்கியவர்கள் கணிசமாக வந்துகொண்டிருந்த காலம் அது, கவனிக்கப் பட்டுக்கொண்டிருந்த கால கட்டமும்/. தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்ட கால கட்டம். ஆனால் வெகு ஜன கவர்ச்சியை ஒதுக்கியது ஒன்று தான் அவர்களை ஒன்று படுத்தியதே தவிர, அதில் உரத்த கோஷங்களும், பிரசாரமும், மிகைப் படுத்தல்களூம், கொள்கைகளே அனுபவங்களாக உருவாக்கப்பட்டவையாகவும் இருந்தவை ஒரு சுவடாகவும், இன்னொரு சுவடு இதுவரை சொல்லப்படாத அனுபவங்களுக்கு எழுத்துரு கொடுக்கப்பட்டனவாகவும், வரத் தொடங்கின. இந்த இரண்டாம் சுவட்டில் தான்  பூமணி, சிவகாமி, சோ தருமன் போன்றோருடன் இமையமும் சேர்ந்து கொண்டது தெரிந்தது.

•Last Updated on ••Monday•, 12 •January• 2015 01:15•• •Read more...•
 

யாமினி கிருஷ்ணமூர்த்தி – (4)

•E-mail• •Print• •PDF•

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)- வெங்கட் சாமிநாதன் -சொல்லப்போனால், யாமினி மனித ரூபத்தில் வந்துள்ள மான் தான். மானின் அத்தனை குணங்களையும், அதன் துள்ளலும் வேகமும், கண்களின் மிரட்சியும், யாமினியிடம் காணலாம். எவ்வளவு வேகத்தில் வெகு இயல்பாக முக பாவங்கள் மாறுகின்றன, எத்தனை உணர்வுகளை அவை சட்டென மாறி மாறிக் காட்டுகின்றன. அத்தனை அழகுடனும் துவளும் கைகள், விரல்கள், வித வித அழகான தோற்றங்களில் காட்சி தரும் உடல்வாகு, சட்டென அழகாக வடித்த சிலையென சலனமற்று உறைந்து காட்சி தரும் பயிற்சியின் லாகவம், அதே போல் மீண்டும்  சட்டென சிலையென உறைந்த நிலையிலிருந்து விடுபட்டு ஒரு துள்ளலில்   மேடையை தன்னதாக்கிக் கொள்ளும் தடையற்றுப் பெருகும் ஆற்றல், எல்லாம் வருஷங்கள் செல்லச் செல்ல, திறனும் வருஷங்களோடு வளர்கின்றன

ஆனால் யாமினியின் ஆரம்ப கட்டத்தில் கண்ட திறனே, அவர் காலத்திய மற்ற நடன கலைஞர்களிடையே, பரத நாட்டியம் மட்டும் அல்ல, மற்ற குச்சிபுடி போன்ற வடிவங்களிலும்கூட  அவர் தனித் திறமையும்  கலை நோக்கும் கொண்டவர் என்ற நமபிக்கையைத் தோற்றுவித்துவிட்டது இங்கு யாமினியின் திறன்கள் அத்தனையையும் கொண்டு யாமினியும் வளர்கிறார். பரதமும் யாமினியின் வளரும் திறன்களுக்கும் கற்பனை வீச்சுக்கும், அவரது தனித்த பார்வைக்கும் ஏற்ப பரதமும் தன் எல்லைகளை விஸ்தரித்துக் கொள்கிறது.

•Last Updated on ••Friday•, 02 •January• 2015 03:00•• •Read more...•
 

(3) - யாமினி கிருஷ்ணமூர்த்தி

•E-mail• •Print• •PDF•

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)- வெங்கட் சாமிநாதன் -டாக்டர். சார்ல்ஸ் ஃபாப்ரி, ஹங்கரிய நாட்டவர். தில்லி கலை விமர்சகர்களில் மூத்தவர் எல்லோராலும், ஒரு மூத்தவருக்குரிய, ஆசானுக்குரிய மரியாதையுடன், பெரிதும் மதிக்கப்படுபவர், மேற்கத்திய கலை உணர்வுகளில் பிறந்து வாழ்ந்தவராதலால் அதிலேயே ஊறியவர், பரத நாட்டியத்தின் இலக்கணத்துக்கும் நடன வெளிப்பாட்டு நுட்பங்களுக்கும் தொடர்பற்றவர். அவ்வளவாக ஆழ்ந்த பரிச்சயம் இல்லாதவர்.  ஒரு வேளை அந்த பரிச்சயமற்று இருந்ததே கூட ஒரு நல்லதுக்குத் தானோ என்னவோ, ஒரு கலைஞரை எதிர்கொள்ளும்போது கலைஞராக இனம் காண்பது அவருக்கு எளிதாகிறது. அப்படித்தான் அவர் 1959-ல் யாமினியை இனம் கண்டதும். அப்பொழுதே, அந்த முதல் சந்திப்பிலேயே அவர் எழுதினார்: “மிகுந்த  திறமையும், அழகும் மிக்கவர் யாமினி.  தன் நடனத்தின் திறன் கொண்டே உலகையே வெற்றி கொள்ளும் உன்னத ஆற்றல் மிக்க வெகு சிலரில் யாமினியும் ஒருவர்”. டாக்டர் ஃபாப்ரி மிக தாராள மனம் கொண்டவர் என்பதும், எங்கு யார் புகழுக்குரியவரோ அங்கு தன் மனதார பாராட்டுக்களைச் குறைவின்றி தருபவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். சரி. எவ்வளவு தான் ஒருத்தர் தாராளமாகப் புகழ்பவர் என்றாலும், “தன் நடனத்தின் திறன் கொண்டே உலகையே வெற்றி கொள்ளும் உன்னத ஆற்றல் மிக்க வெகு சிலரில் ஒருவர்” என்றா  அளவுக்கு மீறி ஒரு புதிய இளம் நடன மங்கையை ஒருவர் புகழ்வார்?. டாக்டர் சார்ல்ஸ் ஃபாப்ரி யாமினியை  அப்படித் தான் பாராட்டினார். அது ஏதும் தன் குழந்தையின் அதிசய திறனைக்கண்டு அப்பா அம்மா முதுகில் தட்டிக்கொடுக்கும் விவகாரமாக இருக்கவில்லை. இப்போது  ஒரு இளம் பெண்ணிடம் முகிழ்த்து வரும்  கலைத் திறனைக் கண்டு மதிப்பிட்டு விட்ட தீர்க்க தரிசனம். அப்பெண்ணின் ஆளுமையில் பொதிந்திருக்கும் சாதனைத் திறன்களைத் தன் உள்ளுணர்வு கண்டு சொன்ன தீர்க்க தரிசனம்.

•Last Updated on ••Tuesday•, 10 •March• 2015 01:49•• •Read more...•
 

வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்!

•E-mail• •Print• •PDF•

உமாமஹேஸ்வரி- வெங்கட் சாமிநாதன் -உமா மஹேஸ்வரியின் அஞ்சாங்கல் காலம் முழுக்க முழுக்க வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய, சிறைப்பட்ட, சில சமயம் சுவர்களில் பதிந்த ஜன்னல் வழி வெளியே எட்டியும் பார்க்கும் பெண்களின் உலகம் தான். அனேகமாக, அவர் எழுதும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எல்லாமே இம்மாதிரி அடைபட்ட பெண்களின் உலகத்தைத் தான் நமக்குச் சொல்கிறது. அவர்களின் யதார்த்த உலகம் தான் சம்பிரதாய, சமூக கட்டுப்பாடுகளில் கட்டுப் பட்டதே ஒழிய, அவர்களில் சிலரது மனஉலக வியாபகம் அப்படி சிறைப்பட்டதில்லை. அந்த ஜன்னல் மூலம் காணும் காட்சிகள் தரும் அர்த்தங்கள் நமக்குச் சொல்லப்படுவதில்லை. காட்சிகளின் சித்திரத்தோடு நிற்பவை உமா மஹேஸ்வரியின் எழுத்துக்கள். அவை சொல்லாமல் சொல்லும் அர்த்தங்களை உணர்வது நம்மைப் பொறுத்தது.

நான் உமா மஹேஸ்வரியை முதலில் அறிந்தது யாரோ ஒரு மஹி என்னும் புதிய வருகையாகத் தான். 2000 ஆண்டிலோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டிலோ தில்லியிலிருந்து சென்னைக்குக் குடிமாறிய புதிது.  கதா பரிசுக்கான சிறுகதையைத் தேர்வு செய்ய பணிக்கப்பட்டு ஒரு வருடத்திய எல்லா தமிழ்ப் பத்திரிகைகளும் என் முன் குவிக்க;ப்;பட்டன. மலையைக் கெல்லும் விவகாரம் தான். இதை ரொம்ப தூரம் நீட்ட வேண்டாம். அகப்பட்டது பழமொழி சொல்லும் எலி அல்ல. இப்போது உமா மஹேஸ்வரி என்னும் பொருட்படுத்த வேண்டிய பெண் எழுத்தாளராக வளர்ந்து முன்னிற்கும் அன்றைய மஹி. அன்று யாரோ ஒரு மஹி. கணையாழியில் வெளிவந்த ஒரு கதை என்று நினைவு.  தலைப்பு மறந்துவிட்டது. கதை வீட்டின் மலக்கிடங்கை சுத்தப்படுத்த அழைக்கப்பட்டவர்கள் அவர்கள் காரியத்தைக் காணும், அவர்கள் வாழ்க்கையின் அவலம். பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை தலித் மக்களை இந்த அவலத்துக்குத் தள்ளிய சமூகத்தின் கொடூரத்தை கன்ணாடி போல பிரதிபலித்து சமூகத்தின் முன்னிறுத்திய பணியைச் செய்த முற்போக்கு எழுத்தாளர் போராட்டமாக மஹியோ, இதை வெளியிட்ட பத்திரிகையோ (கணையாழி தானா?) அல்லது இதைக் கதா பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நானோ, பரிசு அளித்த கதா நிறுவனமோ முரசு கொட்டி, பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை, மஹிக்கு இது ஒரு நாள் அனுபவம். நன்றாகச் சொல்லத் தெரிந்திருக்கிறது. எழுதவும் தெரிந்திருக்கிறது. இதுவும் ஒரு கதைப் பொருளா? என்று தயங்கி யோசிக்கவும் இல்லை. இதைக் கதையாக எழுதினால் முற்போக்கு அணியில், அல்லது தலித் அணியில் சேர தகுதிப் பத்திரமாகும் என்றும் தயார்படுத்திக் கொள்ளவுமில்லை. தனக்கு தெரிந்த ஒரு அனுபவம். இப்படியும் ஒரு பிழைப்பா, வாழ்க்கையா என்று  அடி மனம் வருந்தியது. அவ்வளவே. கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டிக்காரர் முல்க்ராஜ் ஆனந்த் முதன் முதலாக எழுதுவது Untouchable. என்ன பெருமை தேடி? முன்னணி கலா ரசிகர், தன் இயல்பில் தான் உணர்ந்ததை எழுதுகிற காரியம். இருவரும் குழந்தைகள் உலகையும் எழுதியிருக்கிறார்கள். மஹிக்கோ இதுவும் சுவர்களுக்குள் அடைபட்டு இருந்தே பார்த்து அறிந்த உலகம் தான்.

•Last Updated on ••Monday•, 08 •December• 2014 22:02•• •Read more...•
 

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)

•E-mail• •Print• •PDF•

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)- வெங்கட் சாமிநாதன் -எனவே, இத்தகைய மாறுபட்ட பத்ததிகள், மரபுகள் கொண்ட ஒரே வேரிலிருந்து கிளர்ந்த பல நாட்டிய ரூபங்களைப் பார்க்கும் போது, பரத நாட்டியம் அதன் கண்டிப்பும் நுணுக்கமும் நிறைந்த விஸ்தாரமான, கண்கள், முகம், கைகள் என எல்லா  அவயவங்களும்  கொண்டு வெளிப்படுத்தப் படும் முத்திரைகள், அபிநயங்கள், பின் சாரிகள், அடவுகள் அவை தரும் எண்ணற்ற வேறுபட்ட பாவங்கள், செய்திகள் எல்லாம் சங்கீதத்தோடும், அவற்றுக்குரிய தாளத்தோடும் அவ்வப்போது தாளம் கொள்ளும் வேறுபடும் கால ப்ரமாணங்கள் எல்லாம் ஒத்திசைந்து ஓருருக்கொண்டு நம் முன் காட்சி தரும்போது, இது எத்தகைய ஈடு இணையற்ற கலை வெளிப்பாடு, இதற்கு ஒத்த நடனக்காட்சி வேறு எங்கு காண்போம் என மலைக்க வைக்கும் ஒன்று பரதம். இன்னமும் சொல்லப் போனால், இதன் தொன்மை, இடையறாது, தொடர்ந்த மரபு இந்திய கலைகள் பலவற்றைத் தன்னுள் இணைத்துக் கொண்டு ஓருருப் பெற்றுள்ளது என பரதத்தைச் சொல்ல முடிவது போல வேறு ஒன்று இல்லை என்று  நான் சொன்னால் அது தமிழ் வெறியிலோ, பிரதேசப் பற்றினாலோ, சொல்லப்படுவது அல்ல. ஒரு தீர்க்கமும், ஆழமும் கொண்ட கலைப்பார்வை, அது மொழி இன, பிரதேசப் பற்று எதனாலும் அலையாடப்படாத உணர்வு கொண்டதென்றால், அதன் முன் காட்சி தரும் பரதமும் அதன் முழு அழகிலும் வெளிப்படுத்தப்படும் ஒன்றெனில், நான் சொல்வதன் பொருளை அப்பொருளின் உண்மையைப் புரிந்து கொள்ளும். அப்படி ஒரு காலத்தில், ஒவ்வொரு சமயங்களில் அது இருந்தது. அது பற்றிச் சற்றுப் பின்னர்.

•Last Updated on ••Thursday•, 04 •December• 2014 22:35•• •Read more...•
 

யாமினி கிருஷ்ணமூர்த்தி (1)

•E-mail• •Print• •PDF•

கொஞ்சம் பின்  கதை
யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)- வெங்கட் சாமிநாதன் -நான் தில்லி வாசியானது, வேடிக்கையாக இருக்கும், 1956-ம் வருடம் டிஸம்பர் மாதம் 30 அல்லது 31-ம் தேதி முதல். இது வருடக் கடைசி மாதக் கடைசி என்ற சுவாரஸ்யத்துக்காகவே இதைக் குறிப்பிடுகிறேன். தில்லி வந்த முதலே எனக்கு தில்லி வாழ்வின், அதன் கலைமுகங்களின், அதன் பத்திரிகைகளின் பங்களிப்பு மிக சந்தோஷம் தருவதாக இருந்தது. நான் கண்விழித்ததும், எனக்கான விருப்பங்களை நான் தேர்ந்துகொள்ள உதவியதும், அல்லது நான் என்னை உணர்ந்து என் தேர்ந்த வழிச்செல்ல உதவியது என்று சொல்லலாம் தில்லைவாழ்க்கை தான். காலையில் எழுந்ததும் எந்த தினசரிப் பத்திரிகை யானாலும் மூன்றாம் பக்கத்தில் அதற்கு முதல் நாள் மாலை அல்லது இரவு நடந்த கலை நிகழ்ச்சிகளின் ரெவ்யூ கட்டாயம் வந்துவிடும். எங்கும் வெள்ளிக்கிழமை தான் புதிய படங்கள் திரைக்கு வரும் நாளாக இருக்கும். மறு நாள் சனிக்கிழமை காலை பத்திரிகைகளின் மூன்றாம் பக்கம் அந்த புதுப்படத்தின் ரெவ்யூ எழுதப்பட்டிருக்கும். அது பெரும்பாலும் ஒரு informed தரத்தில் இருக்கும். கொஞ்சம் தரவேறுபாடு இந்த ரெவ்யுக்களில் இருந்த போதிலும் அது கட்டாயமாக வியாபார வெற்றிக்கு உதவுவதாக இராது சரி நல்ல ரெவ்யூ வந்திருக்கு. பார்க்கலாம் என்று ரசனை உள்ளவன் தேர்ந்து கொள்வதாக இருக்கும்.  இது சினிமாவோ, நடனமோ, ஓவியக் கண்காட்சியோ, ஒரு நாடகமோ எதுவானாலும். அனேகமாக தியேட்டரில் பார்க்கும் சினிமாவைத் தவிர மற்றது எல்லாமே விருப்பமுள்ளவருக்கு இலவச அனுமதி தான்.  தில்லிக்கு வந்த உலகின், இந்தியாவின் எந்த மூலையிலும் காணும்  கலைகள் பெரும்பாலான வற்றோடு நான் பரிச்சயம் பெற்றது தில்லி தந்த வாய்ப்புக்கள் தான். எனக்கு மட்டுமல்ல. செல்லப்பாவின், இ.பா.வின் கே.எஸ் ஸ்ரீனிவாசனின் புதிய நாடக முயற்சிகளும் அவை நிகழ்ந்த அடுத்த நாள் காலை பத்திரிகைகளில் வரவேற்பு பெற்றன. இதற்கு ஈடான ஒரு நிகழ்வை சென்னை ஆங்கில தமிழ்ப் பத்திரிகைகளில் நிகழ்ந்ததை யாரும் சொல்ல முடிந்தால் நான் நன்றியுடையவனாக இருப்பேன். ஒரு நாள் மாலை நிகழ்வு மறு நாள் காலை பத்திரிகையில் ரெவ்யூ எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த தில்லிக்கே உரிய சிறப்பு இது கடந்த அறுபது எழுபதுக்கள் வரை கூட தொடர்ந்தது. பின்னர். எண்பதுக்களின் பின் பாதியிலிருந்து இந்த நிலை மாறிவிட்டது.

•Last Updated on ••Tuesday•, 10 •March• 2015 01:48•• •Read more...•
 

நூல் அறிமுகம்: தேவதாசியும் மகானும் - பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும் (3)

•E-mail• •Print• •PDF•

(3)  பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!

நூல் அறிமுகம்: தேவதாசியும் மகானும் - பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!- வெங்கட் சாமிநாதன் -கர்நாடக சங்கீத உலகில், பக்தி உணர்வும் செல்வாக்கும் நிறைந்தோர் உலகில் வேறு யாரும் செய்யாத, செய்யத் தோன்றாத ஒரு மகத்தான சேவையை, தியாகராஜ தாசி என்று தன்னைச் சொல்லிக்கொண்ட, எந்தக் கோவிலுக்கும் பொட்டுக் கட்டாதே தேவதாசியாகிவிட்ட நாகரத்தினம்மாளுக்கு அவர் தியாக ராஜருக்கு கோவில் எழுப்பிய பிறகு பாராட்டுக்கள் குவிந்தன தான். அதற்கெல்லாம் சிகரமாக, எனக்குத் தோன்றுவது, கீர்த்தனாச்சார்யார் சி.ஆர். சீனுவாச அய்யங்கார் எழுதிய கடிதம். தங்களது சூழலையும், தாங்கள் கற்பிக்கப்பட்ட ஆசாரங்கள், நியமங்களையெல்லாம் மீறி, எழச் செய்து விடுகிறது, ஆத்மார்த்தமாக உள்ளோடும் அர்ப்பணிக்கப்பட்ட சங்கீதமும், தார்மீகமும்.. அவர் எழுதுகிறார்:

”தென்னிந்தியாவின் லட்சக்கணக்கான் சங்கீத ஆர்வலர்களிடையே நீங்கள் தான் உண்மையான தியாகராஜருடைய சிஷ்யை என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்களுக்கு அமைந்த வாய்ப்பை உபயோகித்து நீங்கள் தியாகராஜருக்கு நினைவுச் சின்னத்தை எழுப்பி விட்டீர்கள். ஒரு அரசனும், ஜமீந்தாரும், பாடகரும் செய்யாத ஒன்றை நீங்கள் செய்துவிட்டீர்கள். அதற்காக நாங்கள் எல்லோரும் உங்களை வாழ்த்துகிறோம்.”

•Last Updated on ••Thursday•, 16 •October• 2014 05:31•• •Read more...•
 

நூல் அறிமுகம்: தேவதாசியும் மகானும் - பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும் (1 & 2)

•E-mail• •Print• •PDF•

(1)  பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!

நூல் அறிமுகம்: தேவதாசியும் மகானும் - பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!- வெங்கட் சாமிநாதன் -எப்படியெல்லாமோ என்னென்னமோ நேர்ந்து விடுகிறது. எதுவும் திட்டமிடாமலேயே. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் தான் உருப்படுவதில்லை. தேவதாசியும் மகனும் புத்தகம் பற்றிப் படித்ததும் தற்செயலாக நேரீட்டது. வல்லமை இணைய தளத்தில் புத்தக மதிப்புரை பரிசுக்காகத் தேர்வு செய்யப் பணிக்கப்பட்டபோது கவனத்தில் பட்ட புத்தகம் இது. என்ன அழகான ஆனால் அர்த்தமும் தகுதியும் பெற்ற தலைப்பு. தேவதாசி குடும்பத்தில் பிறந்து விட்ட காரணத்தால் தேவதாசியாக அறியப்பட்டு தன் தேர்வினாலும் தளராத முனைப்பினாலும் வாழ்ந்த வாழ்க்கை மகானாக உயர்த்தியுள்ளது. புத்தக மதிப்புரையைப் படித்ததும் அது தன்னையே பரிசுக்கு உயர்த்திக்கொண்டது, பரிசும் கிடைத்தது. எல்லாம் சரி. அது படித்தாக வேண்டும். காலச்சுவடு பதிப்பித்தது தான் என்றாலும் ஏதோ சுற்று வழியில் தான் என் கவனத்திற்கு வந்து சேர்ந்தது தற்செயலாக. பின் அதைத் தவறவிடுவார்களா?  நாகரத்தினம்மா கேள்விப்பட்ட பெயர் தான். பங்களூரிலிருந்து வந்த ஒரு தேவதாசி. சங்கீதம் தெரிந்தவர். தியாகராஜரிடம் அதீத பக்தி கொண்டவர். பிருந்தாவனம் என்று சொல்லப்பட்டாலும் புல்லும் புதரும் மண்டிக்கிடக்கும் தியாகராஜர் சமாதி கண்டு வேதனைப் பட்டு இன்று நாம் அறிந்த தியாக ராஜர் விக்கிரஹமும் கோவிலும் ஆராதனை விழாக்களும் நடக்கக் காரணமானவர் என்ற அளவுக்குத் தான் எனக்கு அவர் பற்றிய விவரங்கள் தெரியும். 

•Last Updated on ••Thursday•, 16 •October• 2014 05:28•• •Read more...•
 

பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு!

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -நான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் பற்றி மற்றவர்கள் எத்தனையோ குணம் கண்டு சொல்வார்கள். எனக்கு அது என்னவென்று யாழ்ப்பாணம் சென்ற பிறகு தான் தெரிந்தது. யாழ்ப்பாண அன்பர்கள் பேசும்போது கமழும் யாழ்ப்பாணப் புகையிலை மணம் தான் அது” என்பார் அவர். கி.வா.ஜகன்னாதன் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. அங்கு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நல்ல மார்க்கெட். அங்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த தம் பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்வார்கள். ஒரே ஒரு வேண்டுகோள். ”எம் வாசகர்களுக்கு புரியும் தமிழில் எழுதுங்கள்,” என்பது தான் அது. அவர்களும் எழுதியிருப்பார்கள்.

என் நினைவில் நான் படித்த எதிலும் அவர்கள் வாழும் இடத்தின், மொழியின் , வாழ்க்கையின் பரிச்சயம் கிடைத்ததில்லை. மெரினா பீச்சில், காதல் புரியும் கதைகளாகவே, அன்றைய பத்திரிகைக் கதைத் தமிழில் பேசுவார்கள் காதல் செய்வார்கள். தமிழ் வாசகர்களுக்கு புரியும் விதத்தில் அவர்கள் விரும்பும் உலகைச் சொன்னார்கள். பத்திரிகைகள் அப்படி வேண்டின. லக்ஷ்மி என்று ஒருவர் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் தொடர்ந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக எழுதி வந்தார்.  அவர் இங்கு மருத்துவ கல்வி பெற்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கிருந்து அவர் நிறைய எழுதினார். என் நினைவில் லட்சியவாதி, காஞ்சனா,  மிதிலா விலாஸ் என பல தொடர்கதைகள்.  அவ்வளவுதான்  என் நினைவில் இருப்பது. அவ்வளவு கதைகளும் நடப்பது தமிழ் நாட்டில். ஊர் பேர் தெரியாத ஊரில். தென்னாப்பிரிக்க வாழ்க்கையோ அனுபவங்களோ எட்டிப் பார்த்ததே இல்லை. கடைசியாக எழுதிய, சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஒரு நாவல், ”காவிரியைப் போல,” என்று நினைவு. அதில் தான் தென்னாப்பிரிக்கா எட்டிப் பார்க்கிறது. தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை.

•Last Updated on ••Sunday•, 21 •September• 2014 19:47•• •Read more...•
 

ரேமண்ட் கார்வருடனோர் அறிமுகம்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -ரேமண்ட் கார்வர் என்னும் அமெரிக்க சிறுகதை எழுத்தாளரை அவரது சிறுகதைகள் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வீட்டின் மிக அருகில் மிகப் பெரும் நீர்ப்பரப்பு என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பை நமக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் செங்கதிரும் அவரது நண்பர்களும்   செங்கதிர் தாம் சில கதைகளை மொழிபெயர்த்ததோடு  ரேமண்ட் கார்வரின் வாழ்க்கை விவரங்களோடு தன் ரசனை சார்ந்த ஒரு நீண்ட முன்னுரையும் தந்துள்ளார். எனக்கு ரேமண்ட் கார்வர் புதிய அறிமுகம். இதற்கு முன் படித்திராத, கேள்விப்பட்டும் இராத பெயர். ரேமண்ட் கார்வரின் வாழ்க்கையைப் பற்றியும் அவரது எழுத்து பற்றியும் எழுதும் செங்கதிர், காலாவதியாகிப் போனதாகக் கருதப்பட்ட யதார்த்த வாத எழுத்தின் மீது திரும்ப கவனம் விழக் காரணமானவர் என்று சொல்கிறார். சாதாரண மனிதர்களை பற்றி, அலங்காரமற்ற எளிய சொற்களில் அவர்கள் வாழ்க்கையை, வீட்டுக்குள் அடைபட்ட நிகழ்வுகள் சார்ந்தே அவர் கதைகள் எழுதப்பட்டுள்ளன. சுயசரிதத்தன்மை கொண்ட படைப்புகளை அவர் விரும்பியதில்லை என்று சொல்லப்பட்டாலும், அவர் கதைகளில் கார்வரின் வாழ்க்கை அனுபவத்துக்கு அன்னியமான சம்பவங்களோ மனிதர்களோ காணப்படுவதில்லை. பெரும்பாலும் அவர் வாழ்க்கை அனுபவங்களை ஒட்டிய, அவற்றையே பிரதிபலிக்கும் சம்பவங்களும் மனிதர்களும் தான் அவர் கதைகளில் காணப்படுகின்றனர். இது  இத்தொகுப்பில் தரப்பட்டுள்ள அவர் கதைகள் முழுதையும் படித்த பிறகுதான் தோன்றுகிறது.

•Last Updated on ••Sunday•, 13 •July• 2014 20:31•• •Read more...•
 

தி.க.சி. யின் நினைவில்

•E-mail• •Print• •PDF•

தி.க.சி. யின் நினைவில்என்னை மிகவும் திகைப்புக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கிய மனிதர் சமீபத்தில் மறைந்த தி.க.சி. அறுபதுகளின் இடை வருடங்களிலிருந்து தான் தி.க.சி. எனக்குத் தெரிய வந்ததே.  தாமரை என்னும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகையின் ஆசிரியராக. தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களுக்கு ஆதரவாளராக, கட்சிக் கோட்பாடுகளுக்கு , பிரசாரகராக, வழிகாட்டியாக. இவையெல்லாம் அவரது வெளித்தெரிந்த ரூபங்கள் பலவென்றாலும் அதிகம் கேட்கப்படும் குரல் ஒன்று தான். பின்னிருந்து தூண்டும் சக்தியும் ஒன்றுதான்.  இவை எதுவும் எனக்கு பிடித்தமான காரியங்கள் அல்ல.  அதே காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த, எழுத்து, இலக்கிய வட்டம் போன்ற பத்திரிகைகள் எனக்குப் பிடித்தமானவையாக, என் பார்வைக்கு ஒத்திசைவு கொண்டவையாக இருந்தன. தாமரை அல்ல. ஆனால், இந்த முற்போக்கு முகாமில் இருப்பவர்கள் பற்றியோ அவர்கள் செயல்பாடுகள் பற்றியோ எதுவும் கறாராகச் சொல்லி விட முடிந்ததில்லை. முற்போக்கு கூடாரத்திலிருந்தவர்களோடு மிக நெருக்கமாக இருந்த வல்லிக்கண்ணன், தாமரை இதழ் கட்சிக்கென தொடங்கப் பட்டதே விஜய பாஸ்கரன் நடத்தி வந்த சரஸ்வதியின் திறந்த மனப்போக்கும் செயல்பாடுகளும் ஜீவாவுக்குப் பிடிக்காமல் போய்விடவே,  கட்சியின் குரலை முழுக்க பதிவு செய்வதற்கென்றே தொடங்கப்பட்டது தான் தாமரை என்று சொல்லியிருக்கிறார். இதை அவர் சொன்னது, தாமரை தொடங்கப்பட்ட போது அல்ல.  வெகு காலம் பின்பு. அனேகமாக, என் நினைவு சரியெனில், தீபம் பத்திரிகையில், சரஸ்வதி காலம் என்னும் தொடரின் கடைசி பக்கங்களில் அதன் மரணத்தைப் பற்றிச் சொல்லும் போது இந்த திரைக்குப் பின் நடந்த கதையைச் சொல்கிறார். சரஸ்வதி பத்திரிகை  அச்சாகி வந்த ஜனசக்தி பிரஸ்ஸில் அதைத் தாமதப் படுத்தியே ஜீவா சரஸ்வதியை கடை மூட வைத்தாராம். அவர் சொல்லியிராவிட்டால் இந்த ரகசியங்கள் வெளிவராமலே போயிருக்கும். வல்லிக்கண்ணன் தைரியமாக தன் மனதில் பட்டதை, தான் பார்த்த உண்மைகளைப் பதிவு செய்த மிக அரிதான  சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. இன்னொன்றையும் சொல்லி விடுகிறேனே. விஜய பாஸ்கரனின் சமரன் என்ற இதழில் திமுகவையும் அதன் தலைவர்களையும் சாட்டையடி என்று தான் அந்த விளாசலைச் சொல்ல வேண்டும். அப்படி விளாசியவர் தான் அதற்கு முன்னரும் மௌனம். பின்னரும் சுமார் 50 வருடங்களுக்கு வாயைத் திறக்கவில்லை. இவை யெல்லாம்  எப்படி நிகழ்கின்றன என்பது எனக்கு இன்னமும் புரியாத புதிராக, ஆச்சரியமாக இருந்து வருகிறது.

•Last Updated on ••Friday•, 04 •July• 2014 18:42•• •Read more...•
 

மல்லாங்கிணறு தந்த தமிழச்சி தங்கபாண்டியனும் கவிதையும்!

•E-mail• •Print• •PDF•

தமிழச்சி தங்கபாண்டியனின் - வெங்கட் சாமிநாதன் -தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது எனக்கு அவரை அவரை அறிமுகப்படுத்தியது கணையாழியில் அப்போது இருந்த யுகபாரதி. அதற்கு முன்னர் அவரை ஒரு இலக்கிய விழாவில் நிகழ்ச்சிகள் அறிவிப்பாளராகப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவ்விழாவில் அவரது பிரசன்னம் அவருக்குத் தரப்பட்ட பொறுப்பிற்குள் அடங்கியதாக இருக்கவில்லை. எந்த கட்டத்துக்குள்ளும் அடங்காத ஆளுமை அவரது. காரணம் அவரது இயல்பான எப்போதும் காணத்தரும் சிரித்த முகம், தடையில்லாது சரளமாகப் பிரவாஹிக்கும்  வாசாலகம், துடி;ப்பான செயல் திறன் எல்லாம் ஒருவரிடத்தில் காணும் முதல் அனுபவம். பேச்சுத் திறன் என்பது,  அனேகமாக மேடை ஏறும் எல்லாத் தமிழரிடமும் காணும் ஒன்றுதான் என்றாலும் இங்கு தமிழச்சியிடம் கொஞ்சம் அதிகமாக, நயத்துடனுன் அழகுடனும்  வாய்த்துள்ளது என்று எண்ணி மறந்து விட்டது இப்போது திரும்ப நினைவில் தலை தூக்கியது. இந்த குணங்களில் பெரும்பாலானவை நகரத்து, அதிலும் சென்னையின் விளைச்சல் அல்லவா? இது எப்படி ஒரு மல்லாங்கிணற்றுப் பயிரில் காண்கிறது என்று ஒரு கேள்வி,  தமிழச்சியின்  எஞ்சோட்டுப் பெண் தொகுப்பின் ஒவ்வொரு கவிதையைப் படிக்கும் போதும் எழுந்து நெற்றி சுருங்கியது. அதே சமயம் அது சந்தோஷமாகவும் வியப்பாகவும் இருந்தது. பட்டம் பெற்ற ;பெண், கல்லூரியில் ஆங்கிலம் போதிக்கும் பெண், உலகம் சுற்றும் பெண் தான் சிறு பிராயத்தில் வாழ்ந்து அனுபவித்த தோழிகளையும், அப்பத்தாவையும்,  வரப்புச் சண்டையில் கால் வெட்டுப்பட்ட சித்தப்பாவையும், மெதுவடையை புடவைத் தலைப்பில் முடிந்து வைத்துக்கொடுத்த முனியனூர்க் கிழவியையும், எள்ளுருண்டை கடித்துப் பகிர்ந்து கொண்ட எஞ்சோட்டுத் தோழியையுமா கவிதை எழுதுவார்கள்? எழுத எத்தனை இல்லை? பெண்ணீயம், முற்போக்கு, கண்ணகி, ஆணாதிக்கம், போஸ்ட் மாடர்னிஸம், ஸ்ட்ரக்சுரலிஸ்ம், தமிழ் எனது மூச்சு, படிமம் கல்தோன்றி…….இத்யாதி எத்தனையொ கொட்டிக்கிடக்கும் போது? கோவில் பட்டிக் காரர்கள் கூட மாந்த்ரீக யதார்த்தம், பேப்பரில் கை வைத்தால் தானே ப்ளாஞ்செட் மாதிரி எழுதிக்கொள்ளுமாமே. ஆனால், எஞ்சோட்டுப் பெண் தொகுப்பில் உள்ள கவிதைகள் அத்தனையும் தமிழச்சியின் இதயத்திலும் நினைவுகளிலும் இன்னமும் நிறைந்திருப்பது மல்லாங்கிணற்று கிராமத்தின் தன் இளம் பிராய அனுபவங்களும், அங்கு தன்னிடம் இயல்பான பாசம் காட்டிய மனிதர்களும் தான். அந்த வாழ்க்கை தான். நகரப் பூச்சு அற்ற சக மனித பாசம்  தான். இளம் பிராய அனுபவங்களும், வாழ்க்கையும் மல்லாங்கிணற்று கோடை வெயிலின் பொசுக்கலையும் மீறி இனிமையானவைதான்

•Last Updated on ••Saturday•, 28 •June• 2014 20:55•• •Read more...•
 

வாஸந்தியின் நாவல் “விட்டு விடுதலையாகி”

•E-mail• •Print• •PDF•

வாஸந்தியின் நாவல் “விட்டு விடுதலையாகி”- வெங்கட் சாமிநாதன் -வாஸந்தியின் நாவல்,  “விட்டு விடுதலையாகி” ஒரு நாவல் என்பதற்கும்  மேல்,  நம் வாழ்க்கை மாற்றங்களையும் அவ்வப்போது மாறும் நம் பார்வைகளையும், மதிப்பீடுகளையும், ஸ்தாபன தோற்ற காலத்து தர்மங்கள் நம்மின் குணம்  சார்ந்து, மாறுவதையும் பற்றியெல்லாம் சிந்திக்கத் தூண்டும் களமுமாகிறது தேவதாசி என்றும் தேவரடியாள் என்றும் அழகான பெயர் சூட்டி நடனத்தின், சங்கீதத்தின் பக்தியின் உறைவிடமாக உருவாக்கப்பட்ட ஒரு ஸ்தாபனம் தேவடியாளாகச் சீரழிந்தற்கு, அல்ல, சீரழிக்கப் பட்டதற்கு நம் குணமும் பார்வையுமே தான் காரணமாகியுள்ளன என்பதை நாம் ஒரு போதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. சீரழிவைப் பார்த்து பொறுக்காத சீர்திருத்த மனம் கொண்டவர்கள் தேவதாசி முறையை ஒழிக்கச் சட்டம் கொண்டு வந்த காலத்திலும் கூட ஸ்தாபனம் நிறைய உன்னத கலைஞர்களை பிறப்பித்து பாதுகாத்து வந்திருந்தது. நம் சங்கீதமே அவர்களிடமும் வாழ்ந்திருந்து வந்திருக்கிறது. தீக்ஷிதரும் சியாமா சாஸ்திரிகளும் சங்கீதம் பெற்றதும், பகிர்ந்து கொண்டதும், கொடுத்ததும் தேவதாசிகள் பாதுகாத்து வந்த அந்த சூழலில் தான். அவர்களுடன் சங்கீதம் கற்றதும், தீக்ஷிதரிடமிருந்து சிக்ஷை பெற்றதும் தேவதாசிகளும் தான். படித்திருக்கிறேன். உலகம் முழுதும் தன் நாட்டியத்தை எடுத்துச் சென்ற உதய் சங்கர் ஏதும் முறையாக நாட்டியம் பயின்றவர் அல்லர். அவருக்குக் கிடைத்தது ஆனந்த குமாரஸ்வாமி எழுதிய Mirror of Gestures புத்தகம். ஆனந்த குமாரஸ்வாமிக்கு அந்த புத்தகம் எழுத அபிநயங்கள் பற்றிச் சொன்னது மைலாப்பூர் கௌரி அம்மாள் என்ற தேவதாசி.

•Last Updated on ••Sunday•, 11 •May• 2014 19:41•• •Read more...•
 

சில நினைவுகள் – குஷ்வந்த் சிங் மறைவைத் தொடர்ந்து.

•E-mail• •Print• •PDF•

khuswant singh- வெங்கட் சாமிநாதன் -சில உறவுகள், சந்திப்புகள், நிகழ்வுகள் எப்படியெல்லாம் நேர்ந்து விடுகின்றன என்று பின்னர் நினைவுக்கு வரும்போது எண்ணிப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பின்னர் என்று சொன்னேன். அதுவும் இரண்டு தலைமுறைகளுக்குப் பின் எண்ணிப்பார்க்க சந்தர்ப்பங்கள் நிகழ்ந்தாலோ, வியப்புதான். இரண்டு நாட்களாக இப்படித்தான் மனம் ஒரு சுழலுக்குள் ஆட்பட்டு சலித்து வருகிறது. அது எந்த நி்கழ்வு பற்றி, யாரைப் பற்றி என்பதைப் பின்னர் சொல்கிறேன். இந்த சமயத்திய சந்தர்ப்பத்தில், இப்போதே சொல்லிவிட்டால், ஏதும் சொல்ல இருப்பவர்கள் எல்லாம் தனக்குத் தெரிந்ததைச் சொல்வதை ஒரு வழக்கமாகவோ, கடமையாற்றலாகவோ சொல்வதாக வாசிப்பவர் களுக்குத் தோன்றிவிடும். எனக்கு அந்த தகுதி இல்லாததால், என் விஷயத்தில் அப்படி அல்ல இது. இதில் என் சுபாவமும், அன்றைய என் கோபமும், அன்று சற்றுப் பொறுமை காத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்றும் தோன்றினாலும், இதன் விளைவு இப்படி இருக்கும் என்று யாருக்குத் தெரிந்திருக்கும்? என்றும், ஒரு வேளை என் எதிர்வினை வேறு எப்படியாக இருந்திருக்கக் கூடும், நான் நானாகத் தானே இருந்திருக்க முடியும் என்றும் தோன்றுகிறது. மனம் இப்படியெல்லாம் சலனிப்பதையும் இப்போது தவிர்க்க முடியாது தான். ஆனாலும் என் மனத்தில் கொஞ்சம் வருத்தம் இருந்தது தான். லாபிரிந்த் என்பார்களே அப்படித்தான். இது ஒன்றும் அப்படி எண்ணற்ற சிக்கலான பாதைகள் கொண்டதல்ல. ஆனால் இது எங்கு இட்டுச் செல்லும் என்று தெரியாத இடத்திற்கு இட்டுச் சென்றது அதிக சிக்கல் இல்லாமல்.

•Last Updated on ••Sunday•, 06 •April• 2014 23:13•• •Read more...•
 

பயணத்தின் அடுத்த கட்டம்!

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -இது நினைவுகளின் சுவட்டில் இரண்டாம் பாகம். ஹிராகுட் அணைக்கட்டில் கழிந்த ஆறுவருட வாழ்க்கை. 1950 மார்ச்சிலிருந்து 1956 டிஸம்பர் வரை. எப்படியோ இது எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது. இரண்டு அன்பர்களின் தூண்டுதல் என் சிந்தையில் விதைத்தது. எழுதி வருகிறேன். இருப்பினும், என் வாழ்க்கை அப்படி ஒன்றும் வீர தீரச் செயல்கள் நிறைந்ததல்ல. பின்  நிறைந்தது தான்  என்ன? ஒன்றுமில்லை தான்.  எந்த பெரிய வரலாற்றினதும் ஒரு சின்ன அங்கமாகக் கூட இருக்கும் தகுதி பெற்றதல்ல இந்த என் வாழ்க்கை எவரது சுய சரிதமும் பதிவு பெறும் தகுதி தான் என்ன? அவரவரே தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான்.  உதாரணமாகச் சொல்லப் போனால், ராஜாஜி இந்த தேசத்தின் வரலாற்றில் கணிசமான பங்காற்றியவர். அவர் அது பற்றி எழுதியவரில்லை. தமிழ் சமூகத்தின் வரலாற்றையே கிளறி வைத்துவிட்டவர்கள் பெரியாரும் அண்ணாவும். இவர்களும் கூட தம் சுயசரிதத்தை எழுதியவர்கள் இல்லை. காந்தியும் நேருவும் எழுதத் தொடங்கி பாதியில் நிறுத்தி தேசத்தின்  வரலாறு ஆகி மறைந்துவிட்டார்கள். இப்படி இருக்க,  தமிழ் எழுத்துலகில் கூட ஒரு பொருட்டாக இல்லாத நான் என் வாழ்க்கையை எழுதப் புகுந்தது ஏதோ சுயபிரமையில் ஆழ்ந்து செறுக்கு மிகுந்த காரியமாகப் படும். அது ஒரு பார்வை. அத்தகைய செறுக்கு மிகுந்த எழுத்துக்கள்தாம் பெரும்பாலும் இங்கு தமிழ் சமூகத்தில் உண்டு. அவர்கள் தமக்கு உகந்த ஒரு சித்திரத்தை தாமே உருவாக்கித் தமிழ் சமூகத்துக்குத் தந்து செல்கிறார்கள். எது தன்னைப் பற்றி அறியப்பட வேண்டும் என்று தானே எழுதிக் குவித்துவிடும் காரியங்கள் நடக்கின்றன. பெரிய பெரிய காரியங்கள் படைத்தவர்கள், தேசத்தின் போக்கையே நிர்ணயித்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அது பற்றி எழுதாவிட்டாலும் எழுதுபவர்கள் ஒரு மாதிரியான பக்தி நிறைந்தவர்கள். அவர்கள் எழுத்தில் வெட்டலும் கூட்டலும் நிறைந்திருக்கும். அவர்கள் வரம் வேண்டி நிற்பவர்கள். அல்லது வரங்கள் பல பெற்றதன் நன்றிக்கடன் செலுத்துபவர்கள். இன்றைய மாறிய சமூக அரசியல் சூழலில் இம்மாதிரி நிறைய நடந்தேறி வருகின்றன. பக்தியின் பிறழ்ச்சி.

•Last Updated on ••Monday•, 24 •March• 2014 03:36•• •Read more...•
 

புலம் பெயர் வாழ்க்கை (கே.எஸ்.சுதாகர் சிறுகதைகளைப் பற்றி...)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -ஈழத் தமிழர் வாழ்க்கையில் 1983 ஒரு பெரிய திருப்பம். பிறந்த மண்ணைவிட்டு வெளியேறுவது அப்படி ஒன்றும் சாதாரணமாக எதிர்கொள்ளும் முடிவு அல்ல. நிர்ப்பந்தமாகிப் போகும்போது தாய் மண்ணைத் திரும்பப் பார்க்கப் போகிறோமா? இல்லையா? என்ற நிச்சயமின்றி எங்கு போகப் போகிறோம்? எப்படி வாழப் போகிறோம்? என்ற நிச்சயமுமின்றி சொந்த மண்ணை விட்டு பிரிவதும், பின் எங்கெங்கோ உலகப் பரப்பெங்கும் அலையாடப்படுவதும், ஒரு பயங்கர சொப்பனம் நிஜமாகிப் போகிற காரியம் தான். இப்போது முப்பது வருடங்கள் அலைக்கழிக்கப்பட்ட பிறகு கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இன்று ஒரு நிம்மதியுடன் வெளிமண்ணில், சூழலில் கலாசாரத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை ஒருவாறான அலையாடல் ஓய்ந்த  அமைதி பெற்றுள்ளது, இழப்புகளின் நினைவுகள் சிலரை வருத்த, சிலர் விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கையுடன் சமாதானம் கொள்ள.  அயல் மண்ணில் முதலில் வாடி வதங்கிப் பின் வேர் கொண்டு முளை துளிர்த்து வாழும் வளர்ச்சி கொள்ளும் இயல்பில் அல்ல.

•Last Updated on ••Saturday•, 15 •February• 2014 22:40•• •Read more...•
 

ஒரு நிஷ்காம கர்மி

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -நினைவுகொள்வது சற்று முன் பின்னாக இருக்கும். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன். ஒரு சாலை விபத்தில் திடீரென்று திலக் ரோடு போலீஸ் காவல் நிலையத்திலிருந்து வந்த போலீஸ் ஜீப் (ஆமாம், போலீஸ் ஜீப் தான்) மோதி என் கால் முறிந்தது. இத்தோடு இரண்டு முறை ஆயிற்று. முறிந்த கால் எலும்பு மறுபடியும் ஒன்று சேர மறுத்து வந்த சமயம். வீட்டில் படுக்கையிலேயே தான் வாசம்  படிக்கலாம். பக்கத்தில் தொலைக்காட்சிப் பெட்டி. அக்காலத்தில் தொலைக்காட்சி அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்ததில்லை. மாலை ஆறு மணிக்குத் தான் அது விழித்தெழும். எழுந்ததும் சித்ரஹாரும் காந்தான் ஹிந்தி சீரியலும் தான் கதி என்றிருக்க வேண்டும். உலகம் முழுதும் அப்போது பெட்டியின் முன் கண்கொட்டாது அமர்ந்திருக்கும். ஆதலால் டேப் ரிகார்டர் தான் வேண்டும்  சமயத்தில் எல்லாம் உயிர்த் தெழும். கிட்டப்பாவிலிருந்து குமார் கந்தர்வா வரைக்கும் எனக்கு வேண்டும் பாட்டைப் பாடுவார்கள். அந்த 1988=ம் வருடத்தில் தான், ஏதோ ஒரு மாதம். ஒரு நாள். சங்கீத் நாடக் அகாடமியிலிருந்து நண்பர் கே.எஸ் ராஜேந்திரன் வந்திருந்தார். அந்நாட்களில் அவ்வப்போது வந்து என் தனிமையை மறக்கச் செய்த நண்பர்களில் அவரும் ஒருவர். அந்த பாபா ஹிந்து ராவ் ஹாஸ்பிடலில் சிகித்சை தொடங்கிய நாட்களிலிருந்து தொடக்கம். ஹாஸ்பிடல் தில்லியின் வடக்கு ஓரம்.. என் வீடு தில்லியின் தெற்கு ஓரம். விபத்துக்கு முந்திய காலங்களில் சினிமாவோ, நாடகமோ, நாட்டியமோ விழாக்களோ எதுவானாலும் மையம் கொள்வது அந்த மண்டி ஹௌஸ் சந்திப்பில் தான். சங்கீத நாடக் அகாடமியும் அங்கு தான். ஆக, என் மாலைப் பொழுதுகள் எப்படிக் கழியும் என்பது என் எல்லா நண்பர்களைப் போல அவருக்கும் தெரியும். வந்தவர் சங்கீத நாடக் என்னும் அகாடமியின் பத்திரிகைக்காக இந்திய நடனங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தரவேண்டும் என்றார். கால் முறிவானதால் நான் நீண்ட விடுமுறையில் இருந்தேன். படிக்க எழுத நிறைய நேரம் கிடைத்த ஒரு சௌகரியம். கால் எலும்பு முறிந்து நடக்க முடியாது போனாலும் ஒரு அசௌகரியத்தை ஈடு செய்ய ஒரு சௌகரியம் பிறந்து விடுகிறது. கையெழுத்துப் பிரதியாகக் கொடுத்தாலும் எடுத்துக்கொள்ள, தெரிந்தவர்கள் தயங்குவதில்லை. அது சாஹித்ய அகாடமியின் என்சைக்ளோப்பீடியாவோ, பத்திரிகைகளோ, அல்லது பேட்ரியட் லிங்க் போன்ற தனியார் பத்திரிக்கைகளோ, எதாக இருந்தாலும், அதில் இருந்தவர்கள் என் நிலை தெரிந்தவர்கள்.

•Last Updated on ••Monday•, 27 •January• 2014 21:54•• •Read more...•
 

முன்னுரையாகச் சில வார்த்தைகள் மறுபடியும்.

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -புத்தகத்தைத் திறந்த உடனேயே சில வார்த்தைகள் மறுபடியும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இந்த மறுபடியும் என்ற வார்த்தை இப்போது இந்த புத்தகத்தைத் திறந்த உடனேயே என்ற சந்தர்ப்பத்தில் அல்ல. அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். அது இப்போது படிக்கத் தொடங்கியவர்களுக்கு. இதன் முதல் பக்கத்தின் முதல் கட்டுரையிலேயே நான் எழுதத்தொடங்கிய 1960-ல் சொன்ன சில கருத்துக்களைத் திரும்ப நினவு படுத்தித்தான் தொடங்குகிறேன். வேறு யாருக்கும், இந்தியாவில் உள்ள எந்த மொழி பேசும் மக்களுக்கும், நம் தமிழ் மக்களுக்கு சொல்லவேண்டியிருப்பது போல, ஒரே விஷயத்தைப் பன்னிப் பன்னி சொல்ல வேண்டியிருக்கிறதா என்று தெரியவில்லை. பல விஷயங்களில், பல வாழ்க்கை அம்சங்களில். எனக்கு வயது எண்பது தாண்டியாகிவிட்டது.  என் ஏழு வயதிலிருந்தோ அல்லது இன்னும் தாராளமாக பத்து வயதிலிருந்து என்று வைத்துக்கொள்ளலாம, சரி பத்து வயதிலிருந்து என்னைச் சுற்றியுள்ள உலகை, மக்களை வாழ்க்கையை ஒரு வாறாக விவரம் அறிந்து பார்த்ததை நினைவில் கொண்டிருப்பேன் என்று கொள்ளலாமா? ஒரளவுக்கு நான் அப்போது வாழ்ந்த ஒரு சிறிய 'டவுன்' மக்களையும், அவர்கள் வாழ்க்கையையும், ஊரையும் மக்கள் மனப் போக்கையும் பற்றி என் நினைவில் பதிந்தவற்றை இப்போது நினைவுக்குக் கொண்டு வந்தால், இப்போது அது ஒவ்வொன்றும் படிப்படியாகச் சீரழிந்து கொண்டு தான் வந்துள்ளது என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

•Last Updated on ••Sunday•, 05 •January• 2014 23:19•• •Read more...•
 

முதுவேனில் பதிகம்: திருமாவளவனின் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிஞன் திருமாவளவன்- வெங்கட் சாமிநாதன் -ஈழத்தமிழ் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் அந்த சமூகம் தான் வதைபடவே சபிக்கப் பட்டது போன்று தொடரும் வாழ்வை, அன்றாடம் அனுபவிக்கும் அவல வாழ்வைப் பற்றியே பேசுகின்றன. நான் முதலில் பார்த்த சிவரமணியின் கவிதையிலிருந்து தொடங்கி. அந்த வாழ்வின் வதையை எல்லோருமே பகிர்ந்து கொண்டாலும், அந்தத் தொடக்கம் சிவரமணியின்  

அழகு கண்டு
அதிலே மொய்க்கும் வண்டின்,
மோக ஆதவனின் ஒளி கண்டு மலரும்
ஆம்பலின் நிலை கண்டு
கவிதை வரைவதற்கு
நான்
நீ நினைக்கும்
கவிஞன் அல்ல.

வரிகள் போல, மற்ற பலரின் கவிதைகள் அனுபவ சத்தியமும் கொண்டதல்ல. கவிதையாவதும் இல்லை. மாதிரிக்கு இதோ ஒன்று.

தென்கடல் ஓரம்,
திகழும் நிலாக்கொழுந்தே
துரத்தே எம் தீவு இன்று
துயராடும் தனித் திடல். 

•Last Updated on ••Saturday•, 14 •December• 2013 18:40•• •Read more...•
 

ஆல விருட்சமொன்றின் ஆழ் விழுதுகள்!

•E-mail• •Print• •PDF•

பூரணி அம்மாள்- வெங்கட் சாமிநாதன் -தனக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வைப் பூரணமாக வாழ்ந்த பூரணி அம்மாள் தன் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது கூட தெரியாது மறைந்து விட்டார்கள். அமைதியாக. 1913-ம் ஆண்டு தமிழ் நாட்டின் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த, ஒன்பது பேரில் ஒருவராகப் பிறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? ஆனால், இப்போது அவரைப் பற்றி எண்ணும் போது, தெரிந்த ஒரு சில தகவல்களோடு தெரியாதவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது தன்னை மீறி, தன் சூழலை மீறி, தன் காலத்திய வாழ்க்கைக் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்தே அவற்றை மீறி தன்னை விகசித்துக்கொண்டு தன் இரண்டு தலமுறை சந்ததிகளுக்கும் வாழ்ந்து காட்டிய ஆதர்சமாக இருந்தவர் தன் நூறாவது ஆண்டு பிறந்த தினத்தில் மறைந்த செய்தி கேட்டு 40 ஆண்டுகளூக்கு முன், தற்செயலாக சற்று நேரம், ஒரு இரவுச் சாப்பாட்டு நேரம் கொடுத்த ஒரு தற்செயலான அறிமுகம் தொடர்ந்த சந்திப்பு என வளர்க்கப்படாவிட்டாலும் அடிக்கடி நினைவு படுத்தி வியந்து, மனதுக்குள் சந்தோஷப்படும் கணங்கள் வந்து சென்றனதான். அது ஒரு எதிர்பாராத சந்திப்பு, அறிமுகம். 1973 என்றுதான் நினைவு. அது அப்போது உருவாகி வந்த ஒரு இலக்கியச் சிறு பத்திரிகைச் சூழலில், உருவாகி வந்த சிறுபான்மை இலக்கியச் சூழலில், நான் அனேகமாக எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகியிருந்த நாட்கள் அவை. என் இயல்பில் எனக்கு மனதில் தோன்றியவற்றை தயக்கமில்லாது எழுதி சம்பாதித்துக்கொண்ட பகை நிறையவே. மனதில் பட்டதை எழுதாது வேறு என்ன எழுதுவதாம் என்ற சாதாரண பொது அறிவின்பால், தர்மத்தின்பால் பட்ட விஷயங்கள் அவை. தாக்கப்பட்டது ஒரு சிலரே என்றாலும் அவர்களுக்கு வேண்டியவர்களும் எனக்கு பகையானார்கள். ஏதோ ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடு போலத் தான் இருந்தது. ராஜதர்பாரில் ஒரு குழுவின் ஒருத்தரை ஏதும் சொல்லிவிட்டால் தர்பார் முழுதுமே மேலே விழுந்து புடுங்கும் இல்லையா? கடைசியில் அது ராஜத்வேஷமாக வேறு பிரசாரப்படுத்தப்பட்டது. நிறையவே எழுத்திலும் காதோடு காதாகப் பேச்சுப் பரவலிலும் எனக்கு எதிராக நிறைய பிரசாரம் நடந்தாலும், என் கருத்துக்கு மாற்றுக் கருத்து வைக்கப்படாமலேயே, தனி மனித உறவுகள் துண்டிக்கப்பட்டன. இன்னமும் என் கருத்துக்கள் அப்படியே தொடர்ந்தாலும், எனக்கு எதிரான பகைகள் கூர் அற்றுப் போனாலும் அவை தொடர்கின்றன தான், இன்னும் பரவலாகின்றனதான்.

•Last Updated on ••Sunday•, 08 •December• 2013 20:45•• •Read more...•
 

மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வை

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -சில மாதங்களுக்கு முன் அருண், மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தைப் பற்றி நான்  பேசாமொழிக்கு எழுதவேண்டும் என்று சொன்னார். அது மகேந்திரனின் முதல் படம் என்றும் தகவல் ஒன்று சொன்னார். எனக்கு சந்தோஷம் தான். ஆனால் முள்ளும் மலரும் நான் பார்த்தில்லை. தில்லியை விட்டு சென்னைக்கு மாறிக் குடி வந்த போது இங்கு முதன் முதலாக பொதிகை தொலைக்காட்சியில் மாறுதலாக பழைய தமிழ்ப் படங்களும் சில வித்தியாசமான தமிழ்ப் படங்களையும் பார்க்க முடிந்திருந்தது. விளம்பர வருமானத்தையே குறியாகக் கொள்ளாமல் மாறுபட்ட நடைமுறைகளை பொதிகை கைக்கொள்ள முடிந்திருக்கிறது காரணம், அது மத்திய அரசின் பொறுப்பில் இருந்தது தான். இப்படித்தான் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படம் பார்த்து, ‘பரவாயில்லையே, இப்படியும் தமிழ்ல படங்கள் வருகின்றனவே” என்று சந்தோஷப்பட்டேன். அதை நான் பொதிகையில் பார்த்தேனா, இல்லை லோக்சபா தொலைக்காட்சியிலும் க்ளாஸிக்ஸ் என்று சொல்லி அனேக சிறப்பான படங்களையும் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களே, அதிலா? நினைவில்லை. ஒரு வேளை லோக் சபா தொலைக் காட்சியிலும் பார்த்திருக்கக் கூடும். எதானால் என்ன, விளம்பர வருமானத்தையே நம்பியிருக்காத, அதையே குறியாகக் கொள்ளாத ஒரு தொலைக்காட்சி ஸ்தாபனத்தில் தான் இவற்றைப் பார்த்திருக்க முடியும். பார்த்தேன். இடையிடையே பழைய விஜயகாந்தின் பழைய படத்தையும் க்ளாஸிக்ஸ் என்று சொல்லிக் காட்டுவார்கள் லோக்சபா சானலில்.  பழசானால் க்ளாஸிக்ஸ் தானாமே.

•Last Updated on ••Sunday•, 24 •November• 2013 20:36•• •Read more...•
 

இரு ஓவியர்களின் உரையாடல்கள்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -இரு ஓவியர்கள், நெடு நாள் நண்பர்கள் தம் சாவகாசமான பேச்சில் என்ன பேசிக்கொள்வார்கள்? தில்லி மும்பை ஒவியர்களாக இருந்தால் சர்வ தேச தளங்களில் தம் ஒவியங்களுக்கு திடீரென கிடைத்துவரும் திடீர் மவுஸ் பற்றி, ஹுஸேனும் ரஸாவும் டி சோஸாவும் இந்திய ஒவியங்களுக்கு ஏற்படுத்தியுள்ள கவனிப்பு பற்றி, பேசியிருக்கக் கூடும்.  ஆனால் தமிழகத்து ஒவியர்களுக்கு அப்படியான சிந்தனைகள் செல்ல வாய்ப்பில்லை. இன்னம் அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிட்டியிருக்க வில்லை. ஒவியங்கள் பற்றி, தம் புதிய முயற்சிகள் பற்றி, அவற்றைச் சந்தைப் படுத்துவது பற்றி.  தம் குடும்ப சுக துக்கங்கள் பற்றி, தமிழக சூழலில் தாம் ஓவியராக வாழ்வது பற்றி? அத்தோடு அவர்கள் போராட முடியாது. எத்தகைய சூழலிலும் தாம் ஒவியராக துணிந்து வாழ்வதன் மூலமாகவே தம் இருப்பை அவர்கள் ஸ்தாபித்துக்கொள்ள முடியும். அதிகார மையங்கள், அரசு நிறுவனங்கள் சார்ந்து வாழவேண்டிய நிர்பந்தங்கள் ஏற்படலாம். ஆனால் அவற்றையும் மீறி தம் இருப்பை சிலர் நிலை நிறுத்திக்கொள்ள முடியும். திருக்குறள் அத்தியாயம் ஒவ்வொன்றுக்கும் ஒரு படம் போட்டுக்கொடு என்று வேண்டுகோள் பிறக்கலாம். எதிர்ப்பது பகையை வளர்க்கும். கிடைக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு ஏதோ படம் போட்டுக்கொடுத்து விட்டு அதை மறந்து விடலாம். அது தனது என்று அவர்கள் பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டாம். போட்டுக்கொடுத்த படம் தானே மறைந்து விடும். ஒரு குறுகிய கால விளம்பரத்துக்கு வேண்டப்பட்டது அது.

•Last Updated on ••Saturday•, 16 •November• 2013 23:57•• •Read more...•
 

தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை

•E-mail• •Print• •PDF•

தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை- வெங்கட் சாமிநாதன் -கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து  தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வளர்ச்சி, இந்திய படித்த இளைஞர்களிடையே ஒரு பெரிய கனவுலகத்தைச் சிருஷ்டித்தது. அவர்கள் என்றும் நினைத்தும் பார்த்திராத பொருளாதார வளத்தையும் அவர்கள் காண்பது கனவல்ல என்ற நினைப்பையும் தந்தது. தகவல் தொழில் நுட்பம் நுழையாத துறை இல்லை என்று ஆகியது. அது இல்லாது வளர்ச்சி அடையும் துறை இல்லை என்றாகியது. எல்லா பொறியியல் துறைகள் மாத்திரமல்ல, கல்வியிலிருந்து தொடங்கி பலசரக்கு வியாபாரம் வரை அதன் வியாபகம். ஒரு காலத்தில் நமக்குத் தெரிந்த சிவில், எலெக்ட்ரிகல், மெக்கானிகல் கல்லூரிகளுக்கு இருந்த மவுசும், தலைநிமிர்வும் குறைந்து தகவல் தொழில் நுட்பத்துக்குத் தாவியது. கல்லூரி வாசலில் வேலை வாய்ப்புகள் தேடி வந்தன. படிப்பு முடிந்ததும் நாலு அல்லது ஐந்து இலக்க சம்பள வாய்ப்புக்களைத் தேடி அலைந்த காலம் போய் கல்லூரி வாசலில் ஆறு இலக்க வாய்ப்புக்கள் தேடி வந்தன. செங்கல் புழுதி முகத்தில் படிய வெயிலில் நிற்க வேண்டாம். கை கரியாகாது, உடையில் எண்ணைக் கரை படியாது.  பிரம்மாண்ட குளிர் பதன கட்டிடங்களுக்குள் தூசி படியாது வியர்க்காது உடையின் மடிப்பு கலையாது வேலை. அலுவலகத்தில் இருப்பு ஒரு சின்ன தடுப்புக்குள் தான், இருந்தாலும் என்ன! அமெரிக்காவும், ஜெர்மனியும் ஃபின்லாந்தும் தில்லியோ சென்னையோ என ஆயிற்று. சென்னை பெண்ணுக்கு அமெரிக்காவிலிருந்து வரும் மாப்பிள்ளை, புதிதாகத் தோன்றும் முப்பது மாடி, கட்டிடத்தில் ஒரு ஃப்ளாட். பழசாகிவிட்டது என்று எண்ணி அடிக்கடி மாற்றும் புது மாடல் கார்கள். திடீரென தகவல் தொழில் நுட்பம் படித்தவர்கள் எங்கோ ஒரு உச்சத்தில் தான் உட்கார்ந்து கொண்டார்கள்.

•Last Updated on ••Tuesday•, 05 •November• 2013 23:54•• •Read more...•
 

தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்!

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும். மிகுந்த சோகத்துடனும் இழப்பின் வலியுடனும் பாச உணர்வுடனும் இளமையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு கலைஞனுக்கு அவரது தோழமையும் உடன் செயலாற்றும் வாய்ப்பும் பெற்றவர்கள் தங்கள் நினைவுகளை அஞ்சலியாகத் தந்துள்ளதன் தொகுப்பு இது. மறைந்த கலைஞனின் ஆளுமையையும் நேர்மையையும் பிரதிபலிப்பதே போல, மிக எளிமையான மிகுந்த தன்னடக்கம் கொண்ட, எவ்வித பகட்டும் அற்ற அவருடன் கொண்ட தங்கள் பாசத்தையும் அவரது ஆளுமையும் செயலும் தங்களுக்குத் தந்த வியப்பையும் பதிவு செய்துள்ள அஞ்சலி இது. வேலாயுதம் அந்தக் கலைஞனின் பெயர்.  தன்னடக்கம், எளிமை என்றேன். ஆளுமையும் செயல் திறனும்  தந்த  வியப்பு என்றேன். இவையே அவரை அந்த சோக முடிவுக்கு இழுத்துச் சென்றதோ என்னவோ.

•Last Updated on ••Monday•, 21 •October• 2013 22:17•• •Read more...•
 

(2) எண்பதுகளில் தமிழ் இலக்கியம்!

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -நாஞ்சில் நாடன் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் அரசியல் வாதிகள், மற்றும் பிரமுகர்களின் வேஷதாரித்தனத்தை தனக்கே உரிய கேலியுடன் சித்தரிக்கிறார். வாக்குப் பொறுக்கிகள் என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பு ஒரு உதாரணம். தன் மிதவை என்னும் நாவலில் தான் பிறந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து வேலை தேடி பம்பாய் வந்த கதையைச் சொல்கிறார். அதில் தான் சந்திக்க நேர்ந்த அரசியல் பிரமுகர்களின் வெளி வேஷங்களையும், சாதி உணர்வுகளையும் பற்றி கொஞ்சம் விரிவாகவே எவ்வித தயக்கமின்றி கேலியுடன் தான் எழுதுகிறார். கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களில் தான் (அதைக் கதை என்பதா, இல்லை சிறுகதை என்பதா, அல்லது குறிப்புகள் என்பதா, எந்த வகைப்படுத்தலுக்கும் இயைவதாக, ஆனால் அதே சமயம் முழுவதும் அந்த வகைப்படுத்தலுக்கு அடங்காததாக இருப்பவை), ஒவ்வாத உணர்வுகள் என்ற தொகுப்பில் அவற்றைப் பார்க்கலாம், அவருடைய நடையும், எழுத்து பெறும் வடிவமும், கிண்டலும், சுய எள்ளலும் தனி ரகமானவை. தன்னைச் சுற்றியிருக்கும் வாழ்வை, நடை முறையை, மதிப்புகளை, சமூகத்தை அவர் செய்யும் கிண்டல், அதில் அவரது சுய எள்ளலும் சேர்ந்தது, எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கும் ரகம். இன்றைய தமிழ் சமூகத்தின் மதிப்புகளின் அது எதையெல்லாம் தன் வெற்றியாகக் கருதி வியக்கிறதோ அந்த அலங்கோலங்கள், கீழ்த்தரங்கள், ஆபாசங்களையெல்லாம் மதிப்புகள், வாழ்க்கைத் தர உயர்வு, வெற்றி என்று சொல்லிப் பெருமைப் பட்டூக் கொள்வது, தமிழ் மொழியையே கொச்சைப்படுத்துவதும் ஆபாசமாக்குவதும் ஆகும். கோபிகிருஷ்ணன் தனக்கென தனி ஒரு நடையையும், எழுத்து வடிவையும், உருவாக்கிக்கொண்டுள்ளார், தன்னையே கிண்டல் செய்து கொள்ளும் பாணியில் சமூகத்தைக் கிண்டல் செய்வதற்கு. அவர் போல ஒரு நடை, எழுத்து பாணி, கிண்டல், அவரதேயான ஒரு பார்வை கொண்ட இன்னொரு எழுத்தாளர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவரைப் பற்றிய எதுவும் அவரது தனித்துவத்தையே சொல்லும்.

•Last Updated on ••Sunday•, 06 •October• 2013 22:06•• •Read more...•
 

எண்பதுகளில் தமிழ் இலக்கியம்!

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -(தில்லியிலிருந்து அன்று வெளிவந்துகொண்டிருந்த BOOK REVIEW என்ற ஆங்கில இதழ், தமிழ் எழுத்துக்கு என ஒரு தனி இதழ் வெளியிட்டது. அந்த இதழுக்காக தமிழ் இலக்கியத்தின் எண்பதுக்களில் வெளிவந்த தமிழ் எழுத்துக்கள் பற்றி நான் எழுதியது பின் வரும் கட்டுரை. From the Eighties to the Present  என்ற தலைப்பில் Book Review-வின் நவம்பர்-டிஸம்பர் 1992 இதழில் வெளியான கட்டுரைதான் இங்கு தமிழில் தரப்பட்டுள்ளது. அந்தச் சிறப்பிதழில் பிரசுரமான இரண்டு மற்ற கட்டுரைகள் ராஜீ நரஸிம்ஹன் A Telescopic Arousal of Time என்ற தலைப்பில் அம்பையின் சிறுகதைத் தொகுப்பு Lakshmi Holmstrom-ன் மொழிபெயர்ப்பில் A Purple Sea என்ற தலைப்பில் வெளி வந்த புத்தகத்தைப் பற்றியது. அடுத்தது வாஸந்தியின் காதல் பொம்மைகள் பற்றி எம். விஜயலக்ஷ்மி எழுதிய Indian Feminism – Vaasanti style என்ற கட்டுரையும் தான் இப்போது என் கட்டுரையின் மற்ற பக்கங்களிலிருந்து நான் இப்போது பெறக்கூடியவை. இந்த இதழுக்கு பின் வரும் கட்டுரை தவிர, அ.க. பெருமாளின்  தோல் பாவைக் கூத்து பற்றிய புத்தகம் ஒன்றுக்கும் மதிப்புரை ஒன்றை நான் எழுதித்தந்திருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் அது இப்போது கிடைப்பதாயில்லை.  கிடைப்பது பின் வரும் கட்டுரை ஒன்றுதான்.)

•Last Updated on ••Tuesday•, 01 •October• 2013 22:09•• •Read more...•
 

ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் (3)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -இந்த இடத்தில், சந்தர்ப்பத்தில் சல்மா என்னும் கவிஞரைப் பற்றிப் பேசுவதும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை பல. சல்மா தன் கவிதைகளில் தன் சொந்த துயரங்களையும் இழப்புகளையும் பற்றித் தான் பேசுகிறார் என்று தோன்றும். ஆனால் அவை உண்மையில் அத்தோடு நிற்பதில்லை. இறக்கை முளைத்துப் பறக்கத் தொடங்கி விடுகின்றன. அக்கவிதைகள் வேறு நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. தன்  சொந்த துயரங்கள், தன் குடும்பத் துயரங்களாக, ஒரு சமூகத்தின் துயரங்களாக, அவர் சார்ந்திருக்கும் மதத்தின் நிலைப் பாட்டிலிருந்து பெறும் துயரங்களாக விரிவடைகின்றன, அவரை  மட்டிலும் ஒரு பெண்ணாக, தனிப்பட்ட வியக்தியாகத் தாக்கி வதைக்கும் துயரமாக நின்றுவிடாது பெண் சமூகம் முழுதையும், தான் சார்ந்த இஸ்லாமிய பெண் சமூகம் முழுதும் ஆழ்த்தியிருக்கும் துயரமாக, இழப்புக்களாக விரிவு படுகிறது. மதம் மாத்திரமல்ல, ஆண் வர்க்கமே தன் மதத்தின் துணை கொண்டு தன் மேலாண்மைக்கு தன் மதத்தையே ஆயுதமாக, சமூக நியாயமாக பயன்படுத்திக்கொள்கிறது. சல்மாவின் சொந்த துயரங்களும் இழப்புக்களும் பெண்சமூகத்தின் துயரங்களுக்கும் இழப்புக்களுக்கும் metaphor ஆகிறது. அவரது குரல் பெண்சமூகமே, குறிப்பாக இஸ்லாமிய பெண் சமூகமே அதை அழுத்தி வதைக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிராக எழுப்பும் குரலாகிறது. சல்மாவுக்கு அவரது கவிதைகள் விடுதலைக்கான மொழியாகிறது.

•Last Updated on ••Tuesday•, 17 •September• 2013 23:07•• •Read more...•
 

தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -கடந்த சனிக்கிழமை செப்டம்பர் மாதம் 7-ம் தேதியன்று பி.என். ஸ்ரீனிவாசன் தனது 85-ம் வயதில் காலமானார் என்ற செய்தியை நான் இணையத்தில் தான் படித்தேன். அவ்வப்போது இலங்கைத் தமிழர் பற்றிய செய்திகளை, தமிழ் நாட்டுச் செய்திகளைத் தொகுத்து திருவள்ளுவர் இலக்குவனார் அனுப்பும் மடல் ஒன்றில் இந்த செய்தியும் இருந்தது. தமிழ்த் தினசரிப் பத்திரிகை எதிலும் இந்த செய்தி வந்துள்ளதா என்பது எனக்குத் தெரியாது. வாரப் பத்திரிகைகள் எதுவும் இதை ஒரு பொருட்டாகக் கருதுமா என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு இந்தப் புறக்கணிப்பு அதிர்ச்சி தரவில்லை. இது இந்தக் காலத்தில் நடப்பது தான், ஒன்றும் புதிதல்ல என்ற காலத்தை ஒட்டி உணரும் புத்தி இருந்தாலும், வேதனையாகத்தான் இருந்தது. இப்போது இது குறித்து நான் எழுதும் போது எந்தனை பேர் தமிழர்கள், இணையங்களில் தொடர்பு கொண்டவர்கள் என் வேதனையைப் பகிர்ந்து கொள்வார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஒரு வேளை நான் யாரையும் குற்றம் சொல்ல முடியாது என்பதும் தெரிகிறது. பி.என். ஸ்ரீனிவாசனும் இது பற்றியெல்லாம் கவலைப் பட்டவரில்லை. ஆனால் தனக்கு எது சரி, எது நடப்பது சரியல்ல, எது சரி செய்யப் படவேண்டும் என்று தோன்றுகிறதோ அதைச் செய்வதில் முனைப்புக் கொண்டு செயல்பட்டு வந்தார். அது என்ன பலனைத் தருகிறது, யார் தனக்கு துணைவருவார்கள் என்பது பற்றியும் அவர் கவலைப் பட்டவர் இல்லை. அப்படி ஒரு ஜீவன், அப்படி ஒரு வாழ்க்கை. தான் வாழும் காலத்தின் தர்மங்களை, வாழ்க்கை முறைகளை, நம்பிக்கைகளைப் பற்றிக் கவலை கொள்ளாது தன் வழியில் தான் நினைத்ததை முடிந்த அளவில் செயல் படுத்தி வந்தவர். அவர் வேறு ஒரு யுகத்தில், யுக தர்மத்தில் வாழ்ந்தவர். அந்த தர்மங்கள் இப்பொது அழிந்து விட்டன். செலவாணி அற்றுப் போய்விட்டன. அவரது மரணத்தைப் பற்றி அடுத்த நாளே தனது மடலில் எழுதிய திருவள்ளுவர் இலக்குவனார் பின் வரும் செய்தியையும் உடன் தருகிறார்.

•Last Updated on ••Tuesday•, 17 •September• 2013 04:53•• •Read more...•
 

மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்

•E-mail• •Print• •PDF•

இப்போது நம் முன் நிற்கும் செழியன் சென்னை மனிதர். கோடம்பாக்கத்தில் தன் அதிக நேரத்தைச் செலவிடுகிறவர். திரைப் பட ஒளிப்பதிவாளர்.- வெங்கட் சாமிநாதன் -செழியன் என்ற பெயரில் எனக்குத் தெரிந்தவர். இருவர் ஒருவர் கனடாவில். கவிதை, நாடகங்கள் எழுதுகிறவர். யாழ்ப்பாணத்தவர். புலம் பெயரும் முன் தன் ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி சுய சரிதையாக, வானத்தைப் பிளந்த கதை என்று நாட்குறிப்புகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். எவ்வளவு நிச்சயமற்ற வாழ்க்கையிலும் தன் நகைச்சுவை உணர்வை இழக்காதவர். இன்னொருவர், இப்போது நம் முன் நிற்கும் செழியன் சென்னை மனிதர். கோடம்பாக்கத்தில் தன் அதிக நேரத்தைச் செலவிடுகிறவர். திரைப்பட ஒளிப்பதிவாளர். சும்மா படமெடுப்பவர் இல்லை. தன் தொழிலைக் கலையாக உணர்பவர். அத்தகைய பதிவுகள் இவர் பொறுப்பேற்ற படங்களில் நமக்குக் காணக்கிடைக்கும். ஆனாலும், இவர் எப்படி தமிழ்த் திரைப்படத்துக்குள் நுழைந்தார்? நுழைந்து எப்படி காலம் தள்ளுகிறார்? என்ற எண்ணம் என்னில் முழுமையாக முதலிலும், “எப்படியும் எங்காவது தொடங்கத் தானே வேண்டும்?” என்ற சமாதானத்தோடு இப்போதும் உணர்ந்து வருகிறேன். சென்னைக்கு நான் குடி வந்த முதல் வருடத்திலேயே (கி.பி. 2000) செழியன் எனக்கு அறிமுகமானார். யாரோ என்னவோ என்று தான் நான் நினைத்தேன். கணையாழியில் இருந்த கவிஞரும் என்னை ஆத்மார்த்தமாக நேசித்த நண்பருமான  யுகபாரதி என்னை செழியனிடம் அழைத்துச் சென்றார். அந்த முதல் சந்திப்பில் செழியனை மிகவும் கஷ்டப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். ஸ்டுடியோக்குள் என்னை என்னென்னவோ செய்து பார்த்தார். ஒன்றும் சரிப்படவில்லை என்று நினைக்கிறேன். பின்னர் அவர் ஸ்டுடியோவின் மாடி வெராண்டாவின் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, என்னிடம் pose வேண்டாமல், அவர் பாட்டில் குனிந்தும் சாய்ந்தும் தூர நின்றும், கிட்டத்தில் மண்டியிட்டும் என்னென்னவோவெல்லாம் கரணங்கள் செய்து படமெடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். என்னை முதன் முதலாக இன்னொருவர் முகம் சுளிக்காது பார்க்கக் கூடும் படங்களை எடுத்தவர் செழியன்தான். மற்றதெல்லாம் ஒருமாதிரிதான். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்[பது போலவும், எதையோ உற்றுக் கவனிப்பது போலவும், “பரவாயில்லையே நான் கூட இப்படி பார்க்கும்படியான தோற்றத்தில் உள்ள கணங்களை, அவை மறையும் முன் பிடித்து உறைய வைத்துவிட்டாரே. என்று மகிழ்ந்தேன். ஒரு மோசமான subject- ஐ வைத்துக்கொண்டு கூட பரவாயில்லை என்று சொல்லத் தக்க படைப்பைத் தந்துவிடுவது பெரிய விஷயம் தான்.. அப்போ, தமிழ் சினிமாவுக்கு ஒளிப்பதிவாளராக சேரத் தக்க நிபுணத்துவம் உள்ளவர் தானே, சந்தேகமில்லை. தமிழ் சினிமாவில் கிடைப்பதை வைத்துத் தானே ஒப்பேத்தவேண்டும்?

•Last Updated on ••Thursday•, 12 •September• 2013 22:40•• •Read more...•
 

ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -ஆர் ஷண்முக சுந்தரம் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு திறன் வாய்ந்த எழுத்தாளர். அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பு அதிகம் பெறாதவர். இலக்கிய சர்ச்சைகள், நகர வாழ்க்கையின் சந்தடி, இவற்றில் எதிலும்  சிக்கிக்கொள்ளாத தூரத்தில் அமைதியாக வாழ்ந்தவர். அவருக்கு பணம் தேவைப்பட்டபோதெல்லாம் தன்னுடைய நோட்புக்கில் ஒரு குறு நாவல் எழுதி முடித்துவிடுவார். அதற்கு அவருக்கு ஏதோ சில நூறு ரூபாய்கள் கிடைத்துவிடும். இப்படித்தான் நாகம்மாள், சட்டி சுட்டது (1965), அறுவடை (1960) போன்ற நாவல்கள் எழுதப்பட்டன. இவை அந்நாட்களில் குறிப்பிடத் தக்க எழுத்து என்று சொல்லவேண்டும். இன்று நாகம்மாள், அறுவடை போன்றவை க்ளாஸிக்ஸ் என்றே சொல்லவேண்டும். அவரது நாவல்கள் கோயம்புத்துர் மாவட்டத்து விவசாயிகளின் வாழ்க்கையைச் சுற்றி எழுந்தவை. கிரேக்க அவல நாடகங்களின் மைய இழையோட்டத்தை அவற்றில் காண்லாம். எதிலும் ஒரு மகிழ்ச்சி தரும் முடிவு இருப்பதில்லை. இன்னும் இரண்டு முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லவேண்டும். அவர்கள் இருவரும் ஒரு குறுகிய ஆரம்ப கால கட்டத்தில் இடதுசாரி கூடாரத்தைச் சேர்ந்தவர்களாக விருந்தனர். ஆனால் அதிக காலம் அந்த கூடாரத்தில் தங்கவில்லை. பின்னர் அந்தக் கட்டுக்களைத் தாமே தகர்த்து  வெளியே வந்துவிட்டனர்.  ஒருவர் நாம் சற்று முன்னர் பசுவய்யா என்ற பெயரில் கவிஞராக அறிமுகம் ஆன சுந்தர ராமசாமி (1931). சுந்தர ராமசாமி அதிகம் எழுதிக்குவிப்பவரில்லை. அவருக்கு தன் எழுத்தின் நடை பற்றியும் அதன் வெளிப்பாட்டுத் திறன் பற்றியும் மிகுந்த கவனமும் பிரக்ஞையும் உண்டு. இரண்டாமவர் த. ஜெயகாந்தன் (1931) இதற்கு நேர் எதிரானவர். ஏதோ அடைபட்டுக்கிடந்தது திடீரென வெடித்தெழுவது போல, அணை உடைந்த நீர்ப்பெருக்கு போல, மிகுந்த ஆரவாரத்துடன், நிறைய எழுதித் தள்ளிக் கொண்டிருப்பவர். நிகழ்கால தமிழ் இலக்கியத்தின் ஒரு அடங்காப் பிள்ளை. அவருக்கென ஒரு பெரிய, மிகப் பெரிய விஸ்வாஸம் கொண்ட ரசிகக் கூட்டமே உண்டு.

•Last Updated on ••Thursday•, 12 •September• 2013 05:15•• •Read more...•
 

ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் (1)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -(1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில மாதிரி படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று Indian Horizons என்ற தலைப்பில் 500 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு ஜனவரி-ஜூன், 1999-ல் வெளியானது. இந்திய மொழிகள் அனைத்திலிருந்துமான (டோக்ரி, கஷ்மீரி, ஸிந்தி, உருது மொழிகள் உட்பட) இலக்கிய வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகளுடன், அந்தந்த மொழிகளின் சில கதைகள், கவிதைகளும்  மொழி பெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டன. இவற்றில் தமிழ் மொழிக்காகச் சேர்க்கப்பட்டவை, ஜெயமோகனின் மாடன் மோட்சம் என்ற கதையும் சல்மாவின் சில கவிதைகளும். எனது தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய  கட்டுரைக்கு Engma of Abundance என்று தலைப்பு கொடுத்திருந் தார்கள். Enigma of Abundance………..!!! தலைப்பு என்னமோ வசீகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் இதை நியாயப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆகவே இப்போது எனக்குள்ள சுதந்திரத்தில் மிகச் சாதாரண மொழியில்,

•Last Updated on ••Friday•, 06 •September• 2013 22:07•• •Read more...•
 

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று

•E-mail• •Print• •PDF•

பி.பி. ஸ்ரீனிவாஸ்- வெங்கட் சாமிநாதன் -இவ்வளவு மாதங்களுக்குப் பிறகு போன வருடம் டிஸம்பர் மாதத்திலிருந்து நடந்த நிகழ்வுகளை அவற்றின் தொடர்ச்சியில் சொல்லாம் தான். ஆனால் இவற்றின் தொடக்கம் எங்கு எப்போதிலிருந்து என்பதெல்லாம் எனக்கு தெரியாத காரணத்தால் சொல்வது கடினம். ஒருவாறாக யூகிக்கலாம். அது தவறாகவும் இருக்கலாம். சரி இப்படித்தான் தொடங்குகிறது. அம்ருத வர்ஷினி என்ற பங்களூரிலிருந்து செயல்படும் ஒரு ஸ்தாபனத்திலிருந்து கே.எஸ்.எல் ஸ்வாமி என்பவர் கையெழுத்திட்டு 5.12.2012 தேதியிட்ட கடிதம் இரண்டு நாட்களுக்குப் பிறகு எனக்கு வந்தது. அந்த ஸ்தாபனம் 22.12.2012 அன்று டாக்டர் பி.பி. ஸ்ரீனிவாஸ் என்னும் பிரபல சினிமா பின்னணி பாடகருக்கு  82 வயது பூர்த்தி யாகிறது (பி. 22.9.1931) அன்று அவரது ஸ்ஹஸ்ர சந்திர தர்ஸனமும் பூர்த்தி ஆவதால் அந்த வைபவத்தைக் கொண்டாடவும்  அவரை கௌரவிக்கவும் ஒரு பெரும் விழா ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம், அந்த சந்தர்ப்பத்தில் பி.பி ஸ்ரீனிவாஸ் கன்னட சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி சினிமா படங்களிலும் ஆயிரக்கணக்கான பாட்டுக்கள் பாடி இரண்டு தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்துள்ளவர். இந்த அனைத்து மொழிகள் தவிர, ஆங்கிலம், உருது சமஸ்கிருதம் மொழிகளிலும் அவர் வல்லுனராக இருந்தவர். எனவே, 22.12.2012 அன்று அவரைக் கௌரவிக்கும் போது இந்த அனைத்து மொழிகளிலும் தம் பங்களிப்பைத் தந்துள்ள, பி.பி ஸ்ரீனிவாஸ் போல 80 வயது நிறைந்த, அறிஞர்களையும் கௌரவிக்கத் திட்டமிட்டுள்ள்தாகவும், அவ்வகையில் தமிழ் மொழிக்குத் தாங்கள் செய்துள்ள பாராட்டத்தக்க சேவையைக் கருத்தில் கொண்டு பி..பி.ஸ்ரீனிவாஸை கௌரவிக்கும் அதே மேடையில் தங்களையும் கௌரவிக்க விரும்புகிறோம். இது பி.பி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் மகிழ்ச்சி தரும். எனவே இந்த கௌரவத்தை ஏற்க, தங்கள் ஒப்புதலை உடன் தெரிவிக்க வேண்டுகிறோம், என்று கண்டிருந்தது.

•Last Updated on ••Wednesday•, 04 •September• 2013 22:31•• •Read more...•
 

ஆகஸ்ட் 15!

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -ஆகஸ்ட் 15 என்று ஒரு புத்தகம். குமரி எஸ். நீலகண்டன் எழுதியது. இந்த மாதிரி தலைப்புகள் கொண்ட நாவல்கள் புதிதல்ல. வெகு அபூர்வம் என்று சொல்லவேண்டும். 1984 என்று அறுபது வருடங்களுக்கு முன் ஜியார்ஜ் ஆர்வெல் எழுதியது ஸ்டாலினின் கொடூர யதேச்சாதிகாரமும் கம்யூனிஸ சித்தாந்தமும் உலகை, மனித சமுதாயத்தை எங்கு இட்டுச் செல்கின்றன என்று அவர் 1949- ல் எழுதியது. அது ஒரு anti-utopia என்று வகைப்படுத்தினாலும், அது நம் மனித துயரைத் துடைக்க வந்த சித்தாந்தம் பேசினாலும், ஒரு யதேச்சாதிகாரரின் கீழ் மனித சமுதாயத்தின் சுதந்திரத்தை பறித்து அழிவுக்கு இட்டுச் செல்லும் ஒரு பயங்கர சொப்பனம், அது சொப்பனமல்ல, நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம் என்பதைச் சித்தரித்தது. அது கையாண்ட பல புதிய சொல்லாக்கங்கள் இன்று எந்த அரசினதும் ஆயுதங்களாகி அன்றாட புழக்கத்தில் வந்துள்ள மொழியாகியுள்ளது. (ஜியார்ஜ் ஆர்வெல்லுக்கும் முன்னால் கி.பி. 2000 என்று 1940களில் எப்போதோ வருங்கால கனவாக ஒரு உடோப்பியாவை போன நூற்றாண்டில் ஐம்பதுக்களிலிருந்து எழுபதுக்கள் வரை பெரிதும் கொண்டாடப்பட்ட மு. வரதராசனார் எழுதியது ஒன்றும் தமிழில் உண்டு. அதற்கும் முன்பாக கோதைத்தீவு என்று வ.ரா. ஒரு உடோப்பியா எழுதியிருக்கிறார்.

•Last Updated on ••Wednesday•, 21 •August• 2013 18:55•• •Read more...•
 

இரு துருவங்களை இணைக்கும் கவித்துவம்!

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -ஒரு துருவம் மனுஷி. இளம் பெண். புதுவை பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பு முடிந்து இப்போது ஆராய்ச்சி மாணவி என்று நினைக்கிறேன்.  குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்புடன் நம் முன் அறிமுகம் ஆகிறார். தன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில், ஒரு நாள் கவிதை எழுதத் தொடங்கியதாகச் சொல்கிறார். கவிதை அன்றிலிருந்து அவரது பிரக்ஞையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அந்தக் கவிதை, பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் சக பயணிகள் அனைவரையும் கவர்ந்த, ஒரு ஆறுமாதக் குழந்தையின் சிரிப்பு எழுதத் தூண் டியது. ஆனால் தன் வார்த்தைகளால் அந்த அனுபவம் முழுதையும் சொல்ல முடியவில்லை என்கிறார் மனுஷி. புரிகிறது. அந்தத் தொடக்கத்திலிருந்து பின் எழுதிய கவிதைகளை தோழிகள், நண்பர்கள் கவிதை நன்றாக இருப்பதாகவும் ஆனால் ”ஏன் விரக்தி, வெறுமை, கண்ணீர் பற்றியதாகவே இருக்கிறது?” என்று கருத்து சொன்னதாகச் சொல்கிறார் மனுஷி. முன்னுரை எழுதி வரவேற்றுள்ள அவரது ஆசிரியரும் துயரங்களின் அழகியல் என்றே மனுஷியின் கவிதைத் தொகுப்பு பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். ஒர் இளம் வயதுப் பெண், குழந்தையின் சிரிப்பை கவிதையாகத் தந்த ஒரு பெண்ணின் கவிதை துயரங்களின் தொகுப்பாகவா இருக்கும்?. அந்த வயதின் ஏக்கங்களும், அவ்வப்போதைய தனிமையும் இருக்கும் தான். ஆனால் அவையே எல்லாமுமல்ல. வேர்த்துக் கொட்டிய வானம் என்று ஒரு கவிதையைத் தொடங்க விரும்பினாலும் அது  என்னை நனைத்து போனது என்று தான் அடுத்த வரி எழுத வருகிறது. ஏன்? வேர்த்துக் கொட்டியது வானத்திற்கு. அதுக்கு என்ன பயமோ, கஷ்டமோ?. ஆனால் மனுஷி நனையத்தான் செய்கிறார். ஏன்? இருவர் மனங்களும் ஆட்பட்டிருப்பது வெவ்வேறு உணர்வுகளில். திரும்பவும்
 

•Last Updated on ••Sunday•, 11 •August• 2013 20:54•• •Read more...•
 

விட்டல் ராவின் 'கூடார நாட்கள்'

•E-mail• •Print• •PDF•

விட்டல் ராவ்- வெங்கட் சாமிநாதன் -விட்டல் ராவின் தாய் மொழி கன்னடம் ஹோசூர் காரர். கற்றது தமிழ்.  வாழ்ந்த பள்ளி நாட்கள் சேலம் மாவட்டத்தில்  தந்தையாரின் அலுவலக மாற்றலுக்கு ஏற்ப சேலத்தின் ஊர்கள் பலவற்றில் வாசம்.  கர்நாடகத்திலிருந்து அதிக தூரம் தள்ளி வந்துவிடவில்லை.  தமக்கை கன்னட நாடகக் குழுக்களிலும் ஆரம்ப கால தமிழ் சினிமாக்களிலும் நடித்தவர். அதிகம் கன்னட நாடக குழுக்களில்.  சங்கீதமும் நாடக நடிப்பும் மிக பரிச்சயமானவை விட்டல் ராவின் சகோதரிக்கு.  இதன் காரணமாகவும், விட்டல் ராவுக்கு கன்னட தமிழ் நாடகச் சூழலும்  சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் மூலம் கிடைத்த சினிமாச் சூழலும் தந்த பரிச்சயம்  அந்த ஆரம்ப பரிச்சயம், கன்னட நாடகத்தின் குப்பி வீரண்ணா காலத்திலிருந்தும், தமிழ் நாடகத்தின் சேலம் நாட்களிலிருந்தும், அதன் சினிமாவாக உருமாற்றம் பெற்று இன்று வளர்ந்துள்ளது வரை.  அதுவே கன்னடம் தமிழ் ஹிந்தி, வங்காளி, மலையாளம், மற்றும் ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ரஷ்யன் என  உலக மொழிகளில் வளர்ந்துள்ள சினிமா முழுதையும்  தன்  ரசனை வட்டத்துக்குள் கொணர்ந்துள்ளது,   ஒரு தரத்த ரசனையும் ஆர்வமும் விட்டல் ராவுக்குள்ளது போன்றோருக்கே வாய்க்கும்.  அது மட்டுமல்ல. விட்டல் ராவின் ஆளுமையும் ரசனையும் இன்னும் பரவலாக விரிந்துள்ளது . அது போன்ற வளர்ச்சியை நான் வெகுசிலரிடமே காண முடிந்துள்ளது. .

•Last Updated on ••Saturday•, 06 •July• 2013 21:27•• •Read more...•
 

தென்மேற்கு பருவக் காற்று – புதிய முயற்சிகளில் ஒன்று

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -கடைசியாக தமிழ் சினிமா கிராமத்தையும் கிராமத்து மக்களையும் தனதாக்கத் தொடங்கியுள்ளது. சந்தோஷமான விஷயம். கவனிக்கவும், “தனதாக்கத் தொடங்கியுள்ளது” என்று தான் சொல்கிறேன். கிராமத்துப் பக்கம் பார்வை செல்லத் தொடங்கிய பெருமை பாரதி ராஜாவுக்கு நாம் தந்து வெகு வருஷங்களாயிற்று. நாம் தமிழ் சினிமாவில் பார்க்கும் எந்த ஒரு சிறு மாற்றத்தையும் கண்டு பரவசமாகிவிடுகிறோம். இவையெல்லாம் தானாக தன் இயல்பில் நம் வாழ்க்கையின் இயல்பில், நம் ஒவ்வொருவரின் வளர்ச்சியின் இயல்பில் நிகழ்வேண்டியது அனைத்தும் நம் சினிமாவில் அந்த ஒழுங்கில் நிகழ்ந்திருக்க வேண்டும். இங்கு வரலாறு தலைகீழாகவே நம் முன் விரிந்து கொண்டு இருக்கிறது. நம் வளர்ச்சியின் உடன் நிகழும் இயல்புக்கு மாறாக, அபத்தமான செயற்கையை முதலில் வரிந்து கட்டிக்கொண்டு வளர்த்துவிட்டு பின் இயல்புக்கு படிப்படியாக ரொம்பவும் தட்டுத் தடுமாறி திரும்புவது நமக்கு பெரிய பிரயாசையான காரியமாகிக்கொண்டிருக்கிறது.

•Last Updated on ••Monday•, 01 •July• 2013 19:25•• •Read more...•
 

நா. ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்

•E-mail• •Print• •PDF•

[ நா.ரகுநாதன் வெங்கட் சாமிநாதனுக்கு எழுதிய கடிதங்கள - இங்கே ]

- வெங்கட் சாமிநாதன் -எனக்கு முதலில் தெரியவந்தது விக்னேஸ்வரா வா, ரசிகனா என்பது இப்போது நினைவுகொண்டு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அனேகமாக ரசிகன் தான் என்று நினைக்கிறேன். 1957 லிருந்து 1966 வரை தில்லியில் கரோல் பாகில் அடிக்கடி தங்கும் அறையையும் சாப்பிடும்  ஹோட்டலையும் மாற்றிக்கொண்டு வாழவேண்டி வந்த காலத்தில் ஒரு சௌகரியமும் இருந்தது.  எல்லாவற்றிற்கும் எங்கு போனாலும் குறுக்கே போகும் ஒரு ரோடு உண்டு ஒரிஜினல் ரோடிலிருந்து ராமானுஜம் மெஸ்ஸைத் தாண்டி நான் இலவசமாக டைம் ந்யூஸ்வீக் பத்திரிகைகளை அவை வந்த மாலையே எடுத்துச் சென்று, படித்துத் திரும்ப மறு நாள் மாலை கொடுக்கச் செல்லும்  ராய் புக் செண்டர் வரை செல்லும் ரோடு அது. வழியில் ஒரு இடத்தில் இடது பக்கம் திரும்பினால் நாயர் மெஸ் வலது பக்கம் திரும்பினால் வைத்தியநாத அய்யர் மெஸ். இவையெல்லாம் இன்று மறைந்து விட்ட புராதன சரித்திரச் சின்னங்கள். அந்த ரோடில் 1962-ல் ஒரு நாள் மாலை ஒரு பஞ்சாபி கடையில் வாங்கியது தான் ரசிகன் கதைகள் – நா ரகுநாதன் என் நினைவில் இது தான் முதல் அறிமுகம். பின்னர் சில வருடங்கள் கழிந்து ரசிகன் நாடகங்கள் – நா ரகுநாதன். 1965-ல் வெளிவந்தது.  அது பின்னர் எழுத்து பத்திரிகையிலும், தினமணி, சுதேசமித்திரன் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளிலும் மெயில், ஹிந்து, ஸ்வராஜ்யா போன்ற பத்திரிகைகளிலும் மதிப்புரைகளில் கண்டு கொள்ளப் பட்டுள்ளன என்று ரசிகன் நாடகங்கள் புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

•Last Updated on ••Wednesday•, 26 •June• 2013 17:27•• •Read more...•
 

அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்!

•E-mail• •Print• •PDF•

தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ரஎப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை.  தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை  74 ஆண்டுகள் வாழ்ந்தவர்.  நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர்.  தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர்.  தேசீய போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர்.  எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர்.  அடக்கம் மிகுந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக, மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். பட்டங்களோ, விருதுகளோ பணமுடிப்புகளோ அவரை வந்தடைந்ததில்லை. அவர் எதிர்பார்த்ததுமில்லை. அக்காலத்தில் அவரைச் சூழ்ந்த பலரையும் போல தம் இயல்பில் இயல்பில் வாழ்ந்தவர். நாடு சுதந்திரம் பெற்றதும் தியாகிகளுக்கு ஐந்து ஏக்கம் நிலம்  மாதாந்திர ஊதியம் என்றெல்லாம் தரப்பட்ட போதிலும், காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் எல்லோரையும்  நன்கு தெரிந்த போதிலும் தம் இயல்பில் வாழ்ந்த வாழ்வுக்கு தியாகம் என்று பெயர் சூட்டி அங்கீகாரமும் பிரதிபலனும் கோரவில்லை.

•Last Updated on ••Wednesday•, 05 •June• 2013 19:02•• •Read more...•
 

காந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்

•E-mail• •Print• •PDF•

காந்தி மேரியை நான் முதலில் பார்த்தது தில்லியில் 1987-ல். இருபத்தாறு வருடங்களுக்கு முன். தில்லியில் நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் கண்காட்சித் திடலில் (Exhibition Grounds). நான்கைந்து நிரந்தர திறந்த வெளி  அரங்குகள் உண்டு. அவற்றில்  ஒன்றான, மன்ஸார் அரங்கில், - வெங்கட் சாமிநாதன் -காந்தி மேரியை நான் முதலில் பார்த்தது தில்லியில் 1987-ல். இருபத்தாறு வருடங்களுக்கு முன். தில்லியில் நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் கண்காட்சித் திடலில் (Exhibition Grounds). நான்கைந்து நிரந்தர திறந்த வெளி  அரங்குகள் உண்டு. அவற்றில்  ஒன்றான, மன்ஸார் அரங்கில், பேராசிரியர் ராமானுஜம் ஒரு நாடகத்தை மேடையேற்றியிருந்தார். வெறியாட்டம் என்ற பெயரில். எனக்கு ராமானுஜத்தைத் தெரியும். மற்றும் மு.ராமசாமியைத் தெரியும். ராமானுஜம் தில்லி தேசீய நாடகப் பள்ளியில் அல்காஷியிடம் நாடகம் பயில வந்த காலத்திலிருந்தே நண்பர். தமிழ் நாட்டின் வளமுறைக்கு மாறாக நாங்கள் ஒருவரை ஒருவர் மதித்தவர்கள். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் வியந்து கொண்டவர்கள். தில்லி நாடகப் பள்ளிக்குப் பிறகு அவரை திருச்சூர் சங்கரப் பிள்ளையின் நாடகப் பள்ளி தான் அவரை ஏற்றுக் கொண்டது. தமிழ் நாடு கவலைப் பட்டதில்லை. அங்கிருந்து அவர் ஜி. சங்கரப் பிள்ளையின் ஒன்றிரண்டு நாடகங்களை தில்லிக்கு வந்து மேடையேற்றினார்  கறுத்த தெய்வத்தைத் தேடி அவற்றில் ஒன்று என் நினைவில் இருப்பது. ஆனால் சங்கரப் பிள்ளை நாடகாசிரியராக, என்னை அவ்வளவாக ஈர்த்தவரில்லை, இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனாலும் சங்கரப்பிள்ளைக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை, மரியாதையை நான் கொடுக்க வேண்டும். ஜி. சங்கரப் பிள்ளை கேரள நாடக இயக்கத்தில் ஒரு முக்கிய புள்ளி. நாடக பள்ளி ஸ்தாபகராக, நாடகாசிரியராக, நாடக இயக்குனராக. மேலும் நாடகம் பயின்று வந்தவருக்கு நாடக வாழ்வு கொடுத்தவர். ராமானுஜத்தின் மேடை இயக்கம் என்னைக் கவர்ந்த போதிலும். அந்த நாடகம் பற்றி ஏதும் பெரிதாக எனக்குச் சொல்லத் தோன்றவில்லை. இந்த பிரசினை எங்களிடையே இன்று வரை தொடர்ந்து வருவது. நாடக இயக்குனராக, எந்த நாடகம் என்று எதைக் கொடுத்தாலும் அவர் அதை கேள்வி எழுப்பாது ஏற்பார். உழைப்பார். அதற்கு ஏதாவது சிகை அலங்காரம், உடை அலங்காரம் செய்து ஒப்பேத்தலாமா என்று முயல்வார். இதில் தான் எங்களுக்குள் பிரசினை எழும். நான் நாடக இயக்குனன். மேடையேற்றுவது என் வேலை என்பார். என்னவாக இருந்தாலும்,  எங்கள் mutual admiration-க்கு அதனால் ஏதும் பாதகம் விளைந்ததில்லை. இது தமிழ் மரபுக்கு முற்றிலும் மாறான விஷயம். . ஒரு வேளை தில்லியில் தொடங்கிய உறவாதலால் இது சாத்தியமாயிற்றோ என்னவோ. நான் முக்கால் தில்லி வாசி. அவர் பாதி கேரள வளர்ப்பில் வளர்ந்தவர். காரணங்கள் தேடினால் இப்படி ஏதாவது கிடைக்கலாம்.

•Last Updated on ••Wednesday•, 29 •May• 2013 05:18•• •Read more...•
 

(10) – சி. சு. செல்லப்பா: தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு–

•E-mail• •Print• •PDF•

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் - வேடிக்கையாகத் தான் இருக்கிறது.  இன்று செல்லப்பா காலமாகி பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, அவரைப் பற்றி நினைப்பவர்கள் – நினைப்பவர்கள் இருக்க மாட்டார்களா என்ன? எட்டு கோடி தமிழரில் அவரிடம் பழகிய அவருக்கு பத்திருபது வயது இளையவர்கள், அந்த தலைமுறையில் அவர் பெயரைக் கேள்விப்பட்டவர்கள் சிலராவது இருக்க மாட்டார்களா என்ன?, இருப்பார்கள் தான் - அவர்கள் முதலில் அவரை விமர்சகராகத் தான் நினைவு கூறுவார்கள். அவர் சுதந்திரப் போராட்ட உணர்வு கொண்டதும் சிறை சென்றதும் கடைசி வரை காந்தி பக்தராகவே இருந்ததும் தவிர அவர் வாழ நினைத்தது ஒரு எழுத்தாளராக. எழுத்தாளராக வாழ்வது சாத்தியமாகத்தான் அவர் சென்னைக்கு வந்ததும். அவர் பழகியதும் உடன் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்ததும் எழுத்தாளர்களோடு தான். சிறு கதைகள் அவர் மனத்தை ஆக்கிரமித்திருந்தன. க.நா.சு. அந்த காலகட்டத்தில் விமர்சனத்தின் தேவையை வலியுறுத்திப் பேசி வந்த காலத்தில் எல்லாம் அவர் பிச்ச மூர்த்தி போல், இன்னும் மற்ற சக எழுத்தாளர்கள் போல் அதை ஏற்க மறுத்தே வந்திருக்கிறார். க.நா.சு. குளவியாகக் கொட்டிக் கொட்டித் தான் செல்லப்பாவும்  குளவியானார். க.நா.சு.வுக்கு அவர் படிப்பினூடேயே, எழுத்தினூடேயே, விமர்சனப் பார்வை என்பது உடன் வளர்ந்தது. விருப்புடன் வளர்த்துக்கொண்டது. ஆனால் செல்லப்பா அப்படியில்லை. விமர்சனம் தேவை என்ற நினைப்பு கடைசியில் க.நா.சுவுடனான பழக்கத்தில் தோன்றியதும், 

•Last Updated on ••Sunday•, 19 •May• 2013 23:25•• •Read more...•
 

ஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -க. சட்டநாதன், தன் மூன்று சிறுகதைத் தொகுதிகளை சில மாதங்கள் முன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் எழுபதுகளிலிருந்து எழுதிவருபவர், யாழ்ப்பாணக்காரர். இது காறும் இவரது சிறுகதைகள் ஐந்து தொகுப்புகளாக வெளிவந்துள்ளன எனத் தெரிகிறது. எனக்கு அவர் அனுப்பி வைத்தவை சமீத்திய மூன்று தொகுப்புகள்,  2010-ல் வெளியான முக்கூடல் என்னும் தொகுப்பையும் சேர்த்து. நாம் அறுபதுகளில் முதன் முதலாக சரஸ்வதி பத்திரிகையில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய மௌனிவழிபாடு என்ற கட்டுரை மூலம் தெரிய வந்த ஏ.ஜெ. கனகரத்னா சட்டநாதன் கதைகளைப் பாராட்டி எழுதியிருக்கிறார். சட்ட நாதனின்  புதியவர்கள் என்னும் தொகுப்பு ஒன்றும் நான் பத்து வருடங்களாகத் தங்கியிருந்த சென்னைப் புறநகர் மடிப்பாக்கத்தின் பொன்னி என்னும் பிரசுரம் 2006 – ல் வெளியிட்டுள்ளது. ஆனால் எனக்கு அந்த பிரசுரத்தின் இருப்பே தெரிந்திருக்க வில்லை.  சட்டநாதனும் அவர் சிறுகதைத் தொகுப்புகளை அனுப்பி வைத்த பிறகுதான் எனக்கும் சட்டநாதனையே தெரியவந்துள்ளது. சட்ட நாதனின் சமீபத்திய தொகுப்பான முக்கூடலுக்கு குப்பிழான் ஐ சண்முகம் என்னும் இன்னொரு சிறுகதை எழுத்தாளர் சட்டநாதனின் படைப்பு வெளி என்ற தலைப்பில் ஒரு பாராட்டுரையையும் அறிமுகமாகத் தந்திருக்கிறார். குப்பிழான் ஐ சண்முகமும் 1946- பிறந்த, எழுபதுகளிலிருந்து சிறுகதைகள் எழுதிவரும் அறுபத்து ஏழு வயதினர். அவருடைய தொகுப்பு ஒன்றை, ஒரு பாதையின் கதை, காலச்சுவடு வெளியிட்டுள்ளது சில மாதங்கள் முன்பு. சொல்லி வைத்தாற்போல் அதுவும் ஓரிரு மாதங்கள் முன்பு எனக்குக் கிடைத்துள்ளது. நாற்பது வருடங்களுக்கு மேலாக எழுதி வரும் இவ்விருவரை பற்றி நான் அறிந்தவனில்லை. நாம் அறிந்தவர் இல்லை என்று என் அறியாமையைப் பொதுமைப் படுத்த முடியுமோ என்னவோ தெரியவில்லை. உலகில் எது ஒன்று பற்றியும் அறியாதவர் களேயாயினும், அறியாதவர்கள் என்று யாரும் சொல்லி விட்டால் நம்மவர்களுக்கு அசாதாரண கோபம் வருமாதலால், இந்த அறியாமையை என்னுடனேயே நிறுத்திக்கொள்கிறேன். இவ்விருவர் பற்றியுமோ, அவர்கள் எழுத்துக்கள் பற்றியுமோ இங்கு எந்த தமிழ் பத்திரிகையிலும் படித்ததாக எனக்கு நினைவில்லை. இருந்தாலும். ஒரு பெரும் குற்றச் சாட்டு அறுபதுக்களில் எழுந்ததுண்டு. இலங்கை தமிழ் எழுத்தாளர்களை நாம் அங்கீகரிப்பதில்லை என்று. நியாயமான குற்றச் சாட்டு தான் என்று நான் அப்போது நினைத்ததுண்டு. அதற்குப் பதில் சொல்லும் வகையில் தானோ என்னவோ அறுபதுகளிலிருந்து கலாநிதிகள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, பின் இவர்களுக்கு எதிர்முனையாக, எஸ் பொன்னுத்துரையும்  ஒரு பெரும் புயலாக நீண்ட காலம் தமிழ் இலக்கிய வெளியில் மிகுந்த  செல்வாக்குடன் பவனி வந்தார்கள்.  அனேகமாக இன்னமும் கூடத்தான்.

•Last Updated on ••Monday•, 13 •May• 2013 03:23•• •Read more...•
 

(9) – செல்லப்பா: தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு!

•E-mail• •Print• •PDF•

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -நான் முதன் முதலாக 1961-ல் செல்லப்பாவைப் பார்க்கச் சென்ற போது, அங்கு திரிகோணமலையிலிருந்து வந்திருந்த தருமு சிவராமுவை, செல்லப்பாவின் வீட்டில் சந்தித்ததைப் பற்றிச் சொன்னேன். அது எனக்கு எதிர்பாராத  மகிழ்ச்சி தந்த ஒரு சந்திப்பு. திரிகோணமலையிலிருந்து வந்தவருக்கு தமிழ் நாட்டில், சென்னையில் யாரைத் தெரியும்? எழுத்து பத்திரிகையைத் தெரியும். அதன் ஆசிரியர் செல்லப்பாவைத் தெரியும். செல்லப்பா அப்போது என்ன, எப்போதுமே சம்பாத்தியம் என்பது ஏதும் இல்லாத மனிதர். வத்தலக்குண்டுவிலிருந்து சென்னைக்கு எழுத்தாளராகவே வாழ வந்தவர். க.நா.சு பத்திரிகை ஒன்று வெளியிட்டுக் கொண்டிருந்த போது அவருக்கு உதவியாக ஆசிரியர் குழுவில் இருந்தவர். சிறு பத்திரிகைகள் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்? தினமணி கதிரில் சில காலம் வேலை செய்து வந்தார். பின்னர் அங்கு ஆசிரியராக இருந்த துமிலனோடு ஒத்துப் போக முடியவில்லை என அதையும் விட்டு வெளியே வந்தவர். அப்போது பிறந்தது தான், “நமக்கு மரியாதை இல்லேன்னா, ஒருத்தர் வீட்டு வாசற்படியை என்னத்துக்கு மிதிக்கறது?” என்ற மந்திரச் சொல் அறச்சீற்றமாக அவ்வப்போது அவரிடமிருந்து வெளிவரும். அந்த சமயத்தில் தான் சிவராமூவை, செல்லப்பா தன்னுடனேயே வீட்டில் தங்கச் செய்தார்.  சிவராமூ தான் வேறு எங்கு செல்லக் கூடும்!

•Last Updated on ••Sunday•, 05 •May• 2013 19:52•• •Read more...•
 

சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்!

•E-mail• •Print• •PDF•

[ பதிவுகள் இணைய இதழின் நவம்பர் 2005 இதழ் 71 இல் வெளியான கட்டுரை. ஒரு பதிவுக்காக ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. -பதிவுகள் ]  

- வெங்கட் சாமிநாதன் -முதலில் என்னுடைய அறியாமையை ஒப்புக்கொள்ள வேண்டும். சிங்கப்பூர் பார்க்கப்போனால் ஒரு நகரமே.. அந்த நகரம் தான் ஒரு நாடாக, மலேயாவிலிருந்து பிரிந்த நாடாக, கொஞ்ச காலம் முன் தன் இருப்பை மேம்படுத்திக் கொண்டுள்ளது. லீ க்வான் யூ வின் தலைமை வழிகாட்டுதலில் வியக்கத் தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்து Asian Tiger-ல் ஒன்றாக ஆகியுள்ளது.. அந்த அரசில் ஒரு தமிழர் அயல்நாட்டு உறவு அமைச்சராகும் அளவிற்கு தமிழர்களின் இடம் அந்நாட்டில் சிறப்புப் பெற்றுள்ளது. தமிழ் அந்நாட்டின் அரசு மொழிகளில் ஒன்று. சரி. இதெல்லாம் சரி. ஆனால் இலக்கியம்?  தென் ஆப்பிரிக்கா, ·பிஜி, மாரிஷஸ், மலேசியா, கயானா இலங்கை, இப்படி பல நாடுகளுக்கு 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்கள் லக்ஷக்கணக்கில் கரும்பு, ரப்பர் தோட்டங்களில் கூலிகளாக தங்கள் வயிற்றுப் பாட்டிற்கு சென்றனர். அவர்கள் ஏழைகள். படிப்பற்றவர்கள். பல இடங்களில் அவர்கள் தம் தாய் மொழியையும் மறந்தவர்கள் தான். அப்படி இருக்க இலக்கியம் என்று அவர்களிடமிருந்து என்ன எதிர் பார்க்க முடியும்.? அதிகம் அவர்கள் ஒரு முருகன் கோயில் அல்லது மாரியம்மன் கோயில் எழுப்பி காவடி, தீமிதி என்று தம் தமிழ் அடையாளத்தை நினைவுறுத்திக் கொண்டிருக்கலாம். மலேசியாவில் இது வெகு சிறப்பாக நடை பெறுகிறது. தமிழ் சினிமாவில் நேற்றைய தீபாவளி ரிலீஸ் வரை அப்டுடேட்டாக இருக்கலாம். சரி. அதற்கு மேல்? ஒர் விதி விலக்கு. இலங்கை. ஆனால் அங்கு இலக்கியப் படைப்புகளில் ஆழ்பவர்கள், தேயிலை ரப்பர் தோட்ட தொழிலாளிகள் அல்ல. சரித்திர காலத்திலிருந்தே அங்கு வாழ்ந்து வரும் ஈழத் தமிழர் தான். 50 களிலோ என்னவோ கு. அழகிரிசாமி மலேயா சென்று சிறுகதை வகுப்புகள் நடத்தியதாக படித்த ஞாபகம். வகுப்பு  நடத்தி, யாரும் சிறுகதைக்காரராகும் வாய்ப்பு இருக்கிறதா? யாரும் அந்த வகுப்பிலிருந்து சிறுகதைக்காரராக வெளியேறியிருக்கிறார்களா? தெரியாது. 

•Last Updated on ••Wednesday•, 24 •April• 2013 21:10•• •Read more...•
 

ஹெக்கோடு சுப்பண்ணா (1932-2005)! இருப்பு தெரிந்தாலல்லவா இழப்பு வருத்தும்

•E-mail• •Print• •PDF•

[ பதிவுகள் இணைய இதழின் செப்டம்பர் 2005 இதழ் 69 இல் வெளியான கட்டுரை. ஒரு பதிவுக்காக ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. -பதிவுகள் ]  

ஹெக்கோடு சுப்பண்ணா (1932-2005)!- வெங்கட் சாமிநாதன் -போனமாதம் மூன்றாம் வாரமோ என்னமோ ஒரு நாள் வெளி ரங்கராஜனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. இரங்கல் கூட்டம். ஹெக்கோடு சுப்பண்ணா (1932-2005} மறைந்து விட்டார். திகைப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. எப்படி இந்தச் செய்தியை பத்திரிகையிலிருந்து என் பார்வை தவறவிட்டது? வெளி ரங்கராஜனைக் கேட்டேன். பங்களூரிலிருந்து வந்த நஞ்சுண்டன் மூலம் தான் தனக்கு இந்தச் செய்தி தெரிந்ததாகவும், உடனே அவசர அவசரமாக ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று என்றார். அடுத்த இரண்டாம் நாள் நஞ்சுண்டனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சென்னை பதிப்பை விட்டுத்தள்ளுங்கள், பங்களூர் பதிப்பில் கூட ஹிந்துவில் இந்த செய்தி வரவில்லை என்று அவர் சொன்னார். சரிதான் தமிழ் மரபு காப்பாற்றப் பட்டு விட்டது என்று நினைத்துக் கொண்டேன். சென்னையிலிருக்கும் லா.ச.ரா வே யாரென்று தெரிந்திராத, பைத்தியக்காரக் கூத்தாட்டத்திற்கும், சினிமாவுக்கும் வித்தியாசம் தெரியாத ஹிந்துவுக்கு, யாரும் அதற்கு எடுத்துச் சொன்னாலும்,  கர்னாடகாவில் ஏதோ ஒரு ஒதுங்கிய கிராமத்தில் நாடகம் போடும் பாக்குத் தோட்டக் காரராகத்தான் ஹிந்து பத்திரிகை அதைப் புரிந்து கொண்டிருக்கும்.. ஹிந்துவின் முகச்சித்திரமே இது வென்றால், மற்ற தமிழ் பத்திரிகைகளைப் பற்றிப் பேசுவது வீண். அந்த காலத்தில், சோழ நாட்டுத் தூதுவன் குதிரையேறி பாண்டி நாட்டுக்கு ஓலை கொண்டுவந்தால் தான் சோழநாட்டு செய்தி தெரியும் என்ற கதையாயிற்று இன்று. கர்னாடகாவிலிருந்து வந்த தூதுவர் சொல்லித்தான் நமக்குச் செய்தி தெரிகிறது. 

•Last Updated on ••Wednesday•, 24 •April• 2013 20:52•• •Read more...•
 

(8) – சி. சு. செல்லப்பா: தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு!

•E-mail• •Print• •PDF•

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -முப்பதுகளிலிருந்து எழுத்தாளனாக வாழ விரதம் பூண்டு சென்னைக்கு வந்து விட்ட செல்லப்பாவுக்கு இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக தான் விரும்பிய இலக்கிய வாழ்க்கை வாழ்ந்துவிட்ட பிறகு, இனி சென்னையில் வாழ வழியில்லை என்று தோன்றிவிட்டது ஒரு சோகம் தான். சோக உணர்வு நமக்கு. ஆனால் அவருக்கு, வத்தலக்குண்டுக்கு குடிபெயர நினைத்தது இயல்பான விஷயம் தான். சொந்த மண். பிறந்த மண். வத்தலக்குண்டு செல்லப்பாவின் பாசம் நிறைந்த ஊர். அவரது பிள்ளைப் பிராயம் கழிந்த ஊர். அந்த ஊர் மாத்திரமா? அந்த மண்ணின் மனிதர்களும், பேச்சும், வாழ்க்கையும் பண்பாடும் அவரது இதயத்தை நிறைக்கும் சமாசாரங்கள். அவரது எழுத்து அத்தனையும் அந்த மண்ணையும் மக்களையும் வாழ்க்கையையும் பற்றியுமே இருக்கும். கதை, நாடகம், நாவல் எல்லாமே, பால்ய கால நினைவுகள் அத்தனையும்,  அம்மண்ணையும்  மக்களையும் பற்றியே இருக்கும். மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையே ஆன  வீர விளையாட்டுக்கூட ரத்தம் படிந்ததாக இராது. அது சார்ந்த தர்மங்களைப் பேசுவதாக இருக்கும். குற்ற பரம்பரையினராக ஆங்கிலேயர் காலத்திலிருந்து பேசப்பட்ட, அவ்வாறே அதற்கான கடுமையுடன் நடத்தப்பட்ட தேவர் மக்களிடம் கூட, அவர்களில் இன்னமும் குற்றம் புரியும் பழக்கம் விடாதவர்களிடம் கூட நிலவும் தர்மங்களைப் பற்றித் தான் அவர் கதைகள் பேசும்.

•Last Updated on ••Monday•, 22 •April• 2013 05:21•• •Read more...•
 

செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (7)

•E-mail• •Print• •PDF•

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -செல்லப்பா, தன் சிஷ்யர்கள் எல்லோரையும் தன் அச்சில் வார்க்கப் பார்க்கிறார் என்று க.நா.சு. சொன்னாலும், அப்படிச் சொல்வதில் ஒரு சந்தோஷம் அவருக்கு இருந்தாலும், அதற்கு ஆதாரம் ஏதும் யதார்த்த நிகழ்வுகளில் இல்லை. அவர் எழுத்து பத்திரிகையில் வெளித்தெரிந்த, அவருக்கு மிக சந்தோஷம் அளித்த எவரும் அவரவர் தம் தனி வழியில் சென்றார்களே தவிர அவர் அடிச்சுவட்டில் சென்றவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தம் இலக்கிய ஜீவிதம் எழுத்து இதழில் தான் பிறந்தது என்பதில் மாறுபட்ட எண்ணம் இல்லை.  தருமு சிவராமு ஒருவர் தவிர. எழுத்து பத்திரிகையில் வெளிவந்த தம் கவிதைகளைப் பார்த்துத்தான் தான் சி.சு. செல்லப்பாவுக்கு  புதுக்கவிதை பற்றிய ஞானமே செல்லப்பாவுக்கு சித்தித்தது என்று பேச எழுத ஆரம்பித்தார். அன்றைய சிற்றிதழ் சூழலின் கவனம் அவர் பக்கம் திரும்பியதும் தம் பின்னால் ஒரு ஒளிவட்டம் பிரகாசிக்கத் தொடங்கியதாக அவர் நம்பினார். 

•Last Updated on ••Monday•, 25 •March• 2013 22:34•• •Read more...•
 

(6) - சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு

•E-mail• •Print• •PDF•

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும் கணத்தில் அந்தக் கட்டத்தை நினைத்துப் பார்த்தால், அப்படியெல்லாம் “ஒருத்தர் இடம் கொடுத்தால் எதையும் எழுதிவிடுவதா?” என்று கேட்டாரே செல்லப்பா, அந்த மனநிலையைக் கொடுத்ததே அவரும் அவரது எழுத்து பத்திரிகையும் தான். அதற்கும் மேல், எங்கள் மனம் நடமாடிய அந்தச் சின்ன இலக்கிய சூழலில் இதைத் தானே நான் கற்றுக்கொண்டேன். எழுத்து, இலக்கிய வட்டம், அதைத்தொடர்ந்து தேவசித்திர பாரதியின் ஞானரதம் எல்லாம் என்னிடம், மனம் விட்டு எந்தத் தடையும் உணராது பேசும் எழுதும் உணர்வு கொண்டவர்களிடம் இதைத் தானே எதிர்பார்த்தது. வேறு கால கட்டங்களில் எழுத்து பத்திரிகையும் தோன்றியிருக்காது. அங்கு ஒரு செல்லப்பாவும் எங்கள் முன் இருந்திருக்க மாட்டார். செல்லப்பா எழுத்துக்கு வகுத்துள்ள எல்லைக்கோட்டுக்குள் நான் எழுத ஆரம்பித்த எந்த கட்டுரையும், எல்லாக் கலைகளையும், இலக்கியத்தை பாதிக்கும் அறிவுத்துறைகளையும் உள்ளடக்கிய ஒரு பார்வை, எதையும் தனித்துப் பார்க்க இயலாது என்ற பார்வை, ஒன்றின் வறட்சியோ, வளமோ தனித்து எந்தத் துறையிலும் வரம்பு கட்டிக்கொண்டு இருப்பது சாத்தியமில்லை என்பது போன்ற அணுகுமுறை எல்லாமே எழுத்து பத்திரிகைக்கு அப்பாற்பட்டது. ஆனால் அதை செல்லப்பா வரவேற்றார்.

•Last Updated on ••Monday•, 25 •March• 2013 22:30•• •Read more...•
 

(5) - செல்லப்பாவின் தமிழகம் உணராத வாமனாவதாரம்!

•E-mail• •Print• •PDF•

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -எழுத்து பத்து அல்லது பன்னிரண்டு வருஷங்களோ என்னவோ நடந்தது. எழுத்து மாதப் பத்திரிகையாக, பின்னர் காலாண்டு பத்திரிகையாக, பின்னர் எழுத்தை நிறுத்தி விட்டு பார்வை என்ற பெயரில்… இப்படி செல்லப்பாவின் பிடிவாதமும் மன உறுதியும், எவ்வளவு நஷ்டங்கள் வந்தாலும், உழைப்பு வேண்டினாலும், மனம் தளராது முனைப்புடன் செயலாற்றுவது என்பதை செல்லப்பாவிடம் தான் பார்க்கவேண்டும்.  அவர் எழுத்து நடத்திய காலத்தில், சில வருஷங்கள் கழித்து க.நா.சு. இலக்கிய வட்டம் என்ற மாதமிருமுறை பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். அதிலோ இல்லை நேர்ப்பேச்சிலோ அவர் சொன்ன ஒரு ஆணித்தரமான கருத்து, இந்த மாதிரியான சிறு பத்திரிகைகள் எல்லாம் அதிகம் போனால் இரண்டு வருஷங்கள் தன் ஆரம்ப உயிர்ப்புடன் இருக்கும். அதன் பிறகு அது ஆரம்ப உற்சாகத்தையும், உத்வேகத்தையும் இழந்துவிடும். பின்  அது ஏதோ பத்திரிகை நடத்துவதாகத் தான் இருக்கும். ஆகையால் இரண்டு வருஷங்கள் நடத்தி எப்போது அதன் புதுமையை இழக்கிறதோ நிறுத்தி விட வேண்டும் என்று சொல்வார். அப்படித்தான் அவர் நடத்திய சூறாவளி போன்றவையும் மணிக்கொடியும் (இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை நின்று புது ஆசிரியத்வத்தில் பின் மறு அவதாரம் எடுக்கும்) தேனீ, போன்றவை எல்லாமே. அப்போது க.நா.சு போன்று மலையாளத்தில் இளம் எழுத்தாளருக்கு ஆதர்சமாக இருந்த கோவிந்தன் சமீக்‌ஷா என்ற அவர் ப்ராண்ட் பத்திரிகையை தன் இஷடம் போல், அவ்வப்போது மலையாளத்திலோ, ஆங்கிலத்திலோ பிரசுரித்து வந்தார். அவரும் இதே அபிப்ராயத்தைத் தான் சொல்லி வந்தார். ஒரு சலனத்தை ஏற்படுத்த வேண்டும். புதிய உத்வேகத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வளவோடு ஒரு சிறு பத்திரிகையின் காரியம் முடிந்து விடுகிறது. பின் அதை நிறுத்தி விட வேண்டும். அதற்கு ஏதும்  வணிக, ஸ்தாபன உத்தேசங்கள் இருக்கக் கூடாது. என்பார். அப்படித் தான் அவர் வெளியிட்ட பத்திரிகைகளும் இயங்கின. அவர் இயக்கம் மலையாள இலக்கிய, கலை உலகில் மையம் கொண்டிருந்தது. அவர் எனக்கு அறிமுகமானதும், என்னையும் சமீக்‌ஷாவுக்கு எழுதச் சொன்னார். மலையாள சமீக்‌ஷாவுக்கு தமிழ் இலக்கியச் சிறு பத்திரிகைகள் பற்றியும், ஆங்கில சமீக்‌ஷாவுக்கும் ஒரு மௌனி கதை மொழிபெயர்ப்பும், மௌனி பற்றியும், பின் மற்றொன்றுக்கும் ஆங்கிலத்தில் கஷ்மீரி இலக்கியம் பற்றிய புத்தகம் ஒன்று பற்றிய மதிப்புரையும் எழுதச் சொன்னார். எழுபதுகளில் தமிழ் இலக்கியச் சிறு பத்திரிகைகளில் தெரிய வந்த புதியவர்கள் பெரும்பாலோரை அவர் அறிவார்.

•Last Updated on ••Tuesday•, 19 •March• 2013 23:06•• •Read more...•
 

நானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்

•E-mail• •Print• •PDF•

மலர்மன்னன்- வெங்கட் சாமிநாதன் -கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமாக எதுவுமே சரியில்லை. உத்பாதங்கள் ஏதும் நிகழ்வதற்கும் அதற்கு அறிகுறியாக  “கரு மேகங்கள் சூழுமாமே’ அப்படித்தான் கருமேகங்கள்: வெளியில் அல்ல, வீட்டுக்குள்.: எனக்கும் உடம்பு சரியில்லை. இரவெல்லாம் மார்பில் கபம், கனத்து வருகிறது. இருமல். உடம்பு வலி. போகட்டும் இது பருவகால உபத்திரவம். சரியாப் போகும் நாளாக ஆக என்று நினைத்து காலத்தைக் கடத்தினால், அது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு வருகிறது. மருமகளுக்கும் அதே சமயத்தில் உடல் நிலை சரியில்லை. வீட்டில் இருக்கும் நான்கு பேரில் இரண்டு பேருக்கு அவஸ்தை என்றால். இதே சமயத்தில் நெட் இணைப்பு எங்கோ போய்விட்டது. அதை உடன் சரி செய்ய முடியாது. இணைப்பு திரும்பக் கிடைப்பதற்கு ஆறு நாட்களாயின.

•Last Updated on ••Tuesday•, 05 •March• 2013 04:25•• •Read more...•
 

அவநம்பிக்கையிலும் கேலியிலும் பிறக்கும் கவிதை

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -ஐம்பது வருடங்களாயிற்று. தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு பெரும் புரட்சியே நிகழ்ந்துள்ளது. வேறு எதில் புரட்சி நிகழ்ந்துள்ளதோ இல்லையோ, தமிழ்க் கவிதை என்று இப்போது சொல்லப்படுவதில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழ்க் கடற்கரையோரங்களில், கிழக்கு இந்திய தீவுகளில், சுமத்ராவில் சுனாமி வீசிய காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தோமே. கடற்கரையோர சாலைகளில் கார்கள் மிதந்து கொண்டிருந்தன. காவிரியில் வெள்ளம் வந்தால் ஒரு வருடம் தான் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் நாசமாகும். ஆனால் அடுத்த வருடங்களில் விளைச்சல் அமோகமாக இருக்கும். வெள்ளம் கொண்டு சேர்த்த வண்டல் மண்ணின் கொடை. ஆனால் தமிழ்க் கவிதையில் நிகழ்ந்துள்ளது சுனாமியா, காவிரி வெள்ளத்தின் ஆரம்ப நாசமா, என்று கேள்வி எழுந்தால், அவரவர் கவித்வ உணர்வைச் சார்ந்து தான் பதில் வரும்.. அதுவும் முடிவற்று வாதிக்கப்படும். ஒரு காலத்தில் ஏதும் திருமணமோ, பொங்கலோ, வாழ்த்துச் செய்தி அனுப்ப வெண்பா எழுதாத தமிழ்ப் பண்டிதர்களே கிடையாது. வெண்பா தான் மிகக் கஷ்டமான வடிவம் என்பார்கள். பண்டிதர்களுக்கும் வாழ்த்துப் பெற்றவர்களுக்கும் அது பற்றிக் கவலையில்லை. வந்தது கவிதைதானா என்பது பற்றியும் யாரும் கவலைப்பட்டதில்லை. அது உணரப்படுவது மாத்திரமே. சீரும் தளையும் ஒழுங்காக இருந்தால் அது கவிதை தான். அங்கு கவி பாடுதலும் அரங்கேற்றமும் சுலபமாக இருந்த காலம். இலக்கண அமைதி இருந்தால் போதும். அதிகம் போனால் பொருட் குற்றம் பார்த்த காலத்தில் நக்கீரர்கள் இருந்தார்கள். இப்போது பொருட் குற்றம் பார்ப்பது கருத்து சுதந்திரத்தில் கற்பனையில் கை வைப்பதாகும். இருந்தாலும் அந்தக் காலத்தில் ஏதோ ஒரு வரைமுறை இருந்தது.

•Last Updated on ••Tuesday•, 26 •February• 2013 23:39•• •Read more...•
 

(4) - சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!

•E-mail• •Print• •PDF•

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -ஒரு முறை செல்லப்பா என்னை பி.எஸ் ராமையாவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அந்தக் காலத்தில் நான் ராமையாவின் எழுத்து அதிகம் படித்ததில்லை. அவருடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மலரும் மணமும் என்ற தலைப்பு என்று நினைவு, அதைப்  படித்திருக்கிறேன். அதில் நிறையப் பேர்களால் பாராட்டப் பெற்ற நக்ஷத்திரக் குழந்தைகள் என்ற கதையில் குழந்தையின் கேள்வியும் அதன் துக்கமும் மிகவும் செயற்கையாகத் தோன்றியது. எந்தக் குழந்தை, ”நக்ஷத்திரம் விழுந்துடுத்து, யாரோ பொய் சொல்லீட்டா அதனாலே தான்”, என்று அழும்? ஆனால் அவர் எந்தக் காரியத்தைத் தொட்டாலும் அதில் மற்ற எவரையும் விட அதிகம் சாகஸம் காட்டக் கூடியவர் என்பதில் எனக்கு பிரமிப்பு. மணிக்கொடிக்கால எழுத்தாளர் எவரையும் விட அக்கால மோகமான சினிமாவில் அதிகம் தன் சாமர்த்தியத்தைக் காட்டியவர். ஜெமினியின் படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். சினிமாவைப் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனல் அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. பிச்சமூர்த்தி, வ.ரா பி.எஸ் ராமையா, ச.து.சு. யோகியார் எல்லோரும் சேர்ந்து ஒரு திரைப்படம் எடுக்க முயன்றாரகள் என்று கூட கேள்விப்பட்டிருக்கிறேன். ஏதோ சொன்னதை, தனக்குத் தெரிந்ததைச் செய்வதற்கும் மேலாக அந்தத் துறையே தனக்கு அத்துபடி ஆகிவிட்டது போல ஒரு புத்தகமே எழுதும் சாகஸம் பி.எஸ் ராமையாவின் ஆளுமையைச் சேர்ந்தது தான். ஆனந்த விகடனோ இல்லை குமுதமோ நினைவில் இல்லை, ஒரு தொடர் கதை எழுதச் சொன்னால் அதற்கும் அவர் ரெடி. குங்குமப் பொட்டு குமாரசாமி என்ற அந்த தொடர்கதை ஒரு வருட காலமோ என்னமோ வந்தது. கதைக்கான பாத்திரங்களையும் சம்பவங்களையும் கணக்கின்றி கற்பனை செய்து கொள்வதில் மன்னன் தான். மாதிரிக்கென்று அவர் கதைகள் சில படித்திருக்கிறேன். அப்போது அவர் வாரம் ஒரு கதை எழுதித் தருகிறேன் என்று சொல்லி ஒரு வருடத்துக்கும் மேலாக தவறாது வாரம் ஒரு கதை எழுதித் தந்தவர். அந்தக் கதைகளில் நான் மாதிரிகென்று ஒரு சில படித்ததில் அவரது ஒரு கதையில் நாலு கதைகள் பிய்த்து எழுதத் தேவையான சம்பவங்களும், திருப்பங்களும், தேவையான கதா பாத்திரங்களும் இருக்கும்.

•Last Updated on ••Friday•, 22 •February• 2013 18:14•• •Read more...•
 

(3) - சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!

•E-mail• •Print• •PDF•

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -சொல்லாமல் கொள்ளாமல் முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் தான் போனேன்.  இருந்தாலும், போனபோது செல்லப்பா வீட்டில் இருந்தார் சந்தோஷமாக இருந்தது. அப்போதெல்லாம் அந்த மாதிரி முன்னாலேயே சொல்லி நேரம் குறித்து வாங்கிக்கொண்டு போவது எனபது தெரியாத காலம். அத்தோடு அவர் இருந்தது மட்டுமல்லாமல் அங்கேயே நான் போன தருணத்தில் இலங்கையிலிருந்து சிவராமூவும் அங்கு இருக்க நேர்ந்தது, என்ன சொல்ல.. எல்லாம் நேர்ந்து கொள்கிறதே. தருமு சிவராமுவின் கவிதைகளும் சொல்லும் நடையும் போன்ற தமிழ்மொழி, உரை நடை பற்றிய எழுத்துவில் வந்த கட்டுரைகளும் ஒரு புதிய குரலை, ஆளுமையின் தோற்றத்தைச் சொல்லின.  என் பாராட்டைச் சொன்னேன் சிவராமுவிடம். ”எதிர்பாராத ஒரு ஆச்சரியம் தரும் சந்திப்பு (a very pleasant surprise!) இல்லையா> என்றேன். சிவராமுவுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. பேசிக் கொண்டி ருந்தோம். என்ன என்று இப்போது நினவிலில்லை. அப்போது எழுத்து வர ஆரம்பித்து இரண்டு வருஷங்கள் முடிந்து இருக்கும். செல்லப்பாவின் வாடிவாசல் ஒரு சிறு புத்தகமாக, எழுத்துச் சந்தாதாரர்களுக்கு அன்பளிப்பாகவும், எழுத்து பத்திரிகையில் ஜீவனாம்சம் என்று அவரது புதிய நாவல் தொடராகவும் வெளிவந்து இருந்தது. கணவன் இறந்ததும் இனி தன் வாழ்க்கை ஆதரவற்ற கணவனின் பெற்றோருடன் தான் என்று தீர்மானித்து தன் அன்ணா ஜீவனாம்சத்துக்காகத் தொடர்ந்த வழக்கை உதறு, கணவன் மறைவுக்குப் பிறகும், அண்ணா சொல்லையும் மீறி, கணவனின் பெற்றோர்களுக்கு உதவியாக அவர்க்ளுடன் இருக்க முடிவு செய்கிறாள். மிகவும் வித்தியாசமான வாழ்நெறி.  வாடிவாசல் மதுரை மாவட்டத்தில் காணும் ஜல்லிக்கட்டு என்ற ஒரு வீர விளையாட்டை ஆயுதமின்றி காளையை அடக்குவது ஒரு அறம், மரபு, விளையாட்டு. தேவர் வகுப்பினரின் விளையாட்டு. இரண்டும் ஒரு ஆவணம் என்றே கூடச் சொல்லப்படத் தகுந்த பதிவு. படைப்பு. இரண்டும் இரண்டு வித்தியாசமான வாழ்க்கை அறங்களைச் சொல்லும் வித்தியாசமான நடையில். இவை இரண்டும் செல்லப்பாவை நாவலாசிரியராகவும் ஒரு புதிய அறிமுகத்தைத் தந்திருந்தன.

•Last Updated on ••Monday•, 11 •February• 2013 23:08•• •Read more...•
 

(2) - சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு

•E-mail• •Print• •PDF•

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -இப்போது இரண்டு தலைமுறைக்காலம் கடந்த பிறகும் கூட நினைத்துப் பார்க்கும்போது, மிக வேதனையாகத் தான் இருக்கிறது.  இன்று அது பற்றிப் படித்து அறிந்து கொள்கிறவர்களுக்கு அது புரியப் போவதில்லை. பண்டிதர்கள் போகட்டும். பிரபலமாகிவிட்ட வெகுஜன எழுத்தாளர்கள் போகட்டும். அவர்களுக்கு  இருக்கக் கூடும் எரிச்சலும் பகைமை உணர்வும் இருக்கும் தான். எதிர்பார்க்க வேண்டியதும் கூடத் தான்.  இருக்காது  என்று  நினைப்பது அறியாமை.  ஆனால் யார் யார்  எல்லாம் செல்லப்பாவுடன் தோளோடு தோள் உரசி நிற்கக் கூடும் என்று நாம்  எதிர்பார்ப்போமோ அந்த  மணிக்கொடிக் கால சகாக்களும்,  தம்மை நவீன சிந்தனையும் புதுமை நோக்கும் கொண்ட  தலைமுறை யைச் சேர்ந்த எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களும் கூட புரிந்து கொள்ள மறுத்தனர். கேலி செய்தனர்.  ஒரு  பல்கலைக்கழக பேராசிரியர், நாவலாசிரியர், சிறுகதைக்காரர் தில்லி எழுத்தாளர் கூட்டத்தில்,  “ஆசிரியப்பா, கலிப்பா போல இப்பொது ஒரு புது பாவகை தோன்றியுள்ளது. அது செல்லப்பா” என்றார்.  அவர் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. அவர் கூட்டத்துக்கு தலைமை வகித்தவர். அவர் யாப்பிலக்கணம் படித்திருப்பார். பல்கலைக் கழகத்தில் வகுப்பும் எடுப்பார் தானே. சங்க கால அகவல் தொடங்கி புரட்சிக் கவி என்று புகழப்படும் பாரதி தாசனின் எண் சீர் விருத்தம் வரை மாற்றங்கள் வருமானால் அதை அவர் கேள்வி இல்லாது ஏற்றுக் கொள்வாரானால், இன்று ஏன் இன்னொரு மாற்றம் பாவகையில் நிகழக் கூடாது என்று எந்த தமிழ் பேராசிரியரும் யோசிக்கவில்லை. இப்போது இந்தப் பேராசிரியர்கள் எல்லாம்  செல்லப்பாவுக்கு அஞ்சலி செலுத்துவதென்றால் அவர்கள் சொரியும் புகழுரைகள் சொல்லி மாளாது. செல்லப்பா என்றால்  ஒரு இளப்ப உணர்வு  அன்று இவர்களிடமெலலாம் காணப்பட்டது.  இதை யெல்லாம் கண்டு கொள்ளாது தன் காரியமே கண்ணாகயிருந்தார் செல்லப்பா என்றும் சொல்ல முடியாது.  அன்று செல்லப்பா  இவர்களையெல்லாம் பொருட்படுத்தி சத்தம் போடுவார். சண்டைக்கு வருவார். வாதம் செய்வார்.  அனேகமாக தினந்தோறும் அந்நாட்களில் நடந்து வந்த இந்தக் காட்சிகளில் சிலவற்றை,  நான்  விடுமுறையில் சென்னை வரும்போது நேரில் கண்டிருக்கிறேன். அவரைச் சுற்றி இருந்தவர்கள் ஒரு சில இளைஞர்களே. பின் பிச்சமூர்த்தி தந்த தார்மீக ஆதரவும் அவர் கவிதையும். அதற்கு அவர் அளித்த விளக்கங்களும். மூங்கில் காட்டினூடே பாய்ந்து ஓயும் ஒலி” என்று புதுக்கவிதையின் சொல்லப்படாத சந்தம் எந்த தமிழ்ப் பண்டிதருக்குப் புரியும்? சூத்திரங்களாக ஆக்கி, புலவர் வகுப்புக்கு பாடமாக வைத்தால் புரியலாம். . “ஓடாதீர் உலகத்தீரே” என்று புதுமைப் பித்தன் எழுதினால் அதற்கு நீண்ட விளக்கம் தரும் சிதம்பர ரகுநாதன். அது புதுக்கவிதைக்கும் பொருந்தும் என்பதை அவர் உணரவில்லையா?, மறுத்தாரே?  இவர்கள் எல்லோரிடமும் இரட்டை நாக்கு பேசியது.

•Last Updated on ••Monday•, 04 •February• 2013 03:54•• •Read more...•
 

(1) சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!

•E-mail• •Print• •PDF•

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -நான் கும்பகோணம் பாணாதுரை ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது தான் (1947-49) செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மணல் வீடு என் கையில் அகப்பட்டது. செல்லப்பா என்ற பெயரும் எனக்கு அதற்கு முன் அறிமுகம் இல்லை. அதில் சிறுகதைகள் உண்டு படிக்க வேண்டும் என்றும் அதை நான் கையிலெடுக்கவில்லை. எதாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தால் படிக்கத் தொடங்கிவிடும் ஆர்வமும் சுபாவமும் ஐந்தாறு வருடங்களாகவே இருந்து வந்தது. அனேகமாக அது தான் நான் படிக்கும் முதல் சிறு கதைத் தொகுப்பாக இருக்க வேண்டும். அதில் எனக்கு இப்போது நினைவில் இருப்பது ஒரே ஒரு கதை தான்.  ஒரு தாசில்தார் அவருடைய மனைவி, பின் வீட்டுக்கு வந்து போகும் ஒரு பண்ணையார்.. தாசில்தார் தம்பதியருக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை. ஏக்கத்தில் என்னென்னவோ வேண்டுதல்கள் பிராயச்சித்தங்கள் பலன் இருக்கவில்லை. இடையே ஒரு ஜோஸ்யர் எதிர்ப்படுகிறார். அவர் சொன்ன தோஷப் பரிகாரம், ”ஒரு ஏழை பிராமணனுக்குக் கோ தானம் ஒன்று செய்தால், தோஷம் நிவர்த்தியாகும், தானம் செய்த பலன் அந்த வருஷ முடிவிற்குள் தெரியும்” என்று சொல்கிறார். வீட்டுக்கு வரும் பண்ணையாரிடம்  தாசில்தார் மனைவி தன் வழக்கமான புலம்பல்களுக்கிடையில் இதையும் சொல்லி தானம் செய்ய ஒரு பசுவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறாள். பண்ணையாரும் ஒரு பசுமாட்டை ஒட்டிவந்து தாசில்தார் வீட்டில் கட்டி விடுகிறார். பின் என்ன? பசு தானம் ஏற்க ஒரு ஏழைப் பிராமணனுக்கும் ஏற்பாடு செய்து பசுவும் தானம் செய்யப்பட்டு விடுகிறது. தாசில்தாரும் அவர் மனைவியும் அந்த நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறார்கள். நாட்கள், மாதங்கள் கடந்து ஒரு நாள் பண்ணையார் ஒரு தட்டில் பட்டுப்புடவை வேஷ்டி, பழம் பாக்கு வெத்திலை சகிதம் தாசில்தாரையும் அவர் மனைவியையும் பார்த்து நமஸ்கரித்துச் சொல்கிறார். “ ”ஆசீர்வாதம் செய்யுங்கள். ரொம்ப காலம் கழித்து எனக்கு புத்திர பாக்கியம் கிடைத்துள்ளது ஆண்டவனோட  அனுக்கிரஹம். இப்பவாவது அவனுக்கு கண் திறந்ததே”

•Last Updated on ••Monday•, 04 •February• 2013 03:50•• •Read more...•
 

தமிழ்த் திரைப் பாலைவனத்தில் துளிர்த்த ஒரு தளிர் – பாலு மகேந்திராவின் ’வீடு’

•E-mail• •Print• •PDF•

பாலு மகேந்திரா- வெங்கட் சாமிநாதன் -ஆங்கிலத்தில் motion picture, film, cinema என்று பல பெயர்களில் குறிப்பிடப்படுவதை தமிழில் திரைப்படம், சினிமா, சலனப்படம் என்று பல பெயர்களில் குறிப்பிடுவது வழக்கமாகியுள்ளது. நாம் பேசும் இந்தப் புதிய 20- நூற்றாண்டு கலைக்கு, புதிதாகத் தோன்றிய தொழில் நுட்பத்திலிருந்து பிறந்த ஒரு கலைக்கு, திரும்பவும் தொழில் நுட்பமும் கலையாகப் பரிணமித்துள்ள ஒன்றைச்  சினிமா என்ற பெயரிலேயே, அதன் தனித்வத்தைத் தனித்துக்காட்ட,  குறிப்பிட வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. பொது வழக்கில் இந்தப்பெயர்கள் எல்லாம் அதிகம் சிந்தனையில்லாது பயன்படுத்தப் படுகின்றன. தமிழில் திரைப்படங்கள் தான் வந்துள்ளனவே தவிர சினிமா என்று தொழில் நுட்பம் சார்ந்த கலைப் படைப்பு வெகு அரிதாகவே, ஒன்றிரண்டே தேடினால் கிடைக்கிறது என்று சொன்னால், திரைப்படங்களுக்கும் சினிமா என்று சொல்லத் தகுந்த ஒன்றிற்கும் நான் அர்த்த வேறுபாட்டோடு இச்சொற்களைப் பயன்படுத்துகிறேன் என்பதைப் புரிய வைக்க நான் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. சுமார் எண்பது வருட கால தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தமிழ் மக்களுக்கு பல்லாயிரக் கணக்கில் தரப்பட்டுள்ள, திரைப்படங்கள், சலனப் படங்கள், films எனப்பட்டவை மட்டுமே தெரிந்திருக்கும், ஆனால் சினிமா என்ற கலையை அறியாதவர்கள் என்று தான்  சொல்ல வேண்டும். நானும்  சொல்லி வருகிறேன். ஆனால் திரைப்படத்துக்கும் சினிமா என்ற ஒரு தொழில் நுட்பம் தந்த கலைக்கும் இடையேயான பாகுபாட்டை திரைப்படம் ஒரு வெறியே ஆகிவிட்ட தமிழ் நாட்டில் புரிந்து கொண்டுள்ளார்கள் என்று சொல்ல முடியாது.

•Last Updated on ••Sunday•, 20 •January• 2013 23:52•• •Read more...•
 

தேவமுகுந்தன் – ஒரு புதிய வரவு! ஒரு புதிய குரல்!

•E-mail• •Print• •PDF•

தேவமுகுந்தன் – ஒரு புதிய வரவு ஒரு புதிய குரல்- வெங்கட் சாமிநாதன் -தேவமுகுந்தன் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்தில் 1972 –ல் பிறந்தவர் வயது 40. இப்போது கொழும்புவில் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாளராகப் பணியாற்றுகிறவர்.  கொழும்புவிலும் மலேசியாவிலும் மேற்படிப்பைப் பெற்றவர். சற்றுக்காலம் கல்வி அதிகாரியாகவும் கொழும்புவில் பணியாற்றியவர். ஆக தன் சிறுவயதுப் பிராயம் தவிர, பின்னர், அவரது வாழ்க்கை பெரும்பாலும் சிங்களவர்களிடையே ஒரு தமிழராகத் தான் கடந்து வந்துள்ளது. இப்போதும். இலங்கை பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற 1949 லிருந்து தமிழரை அன்னியராக பாவிப்பது வெளிப்படையாக, அரசுக் கொள்கையாக வரித்துக்கொண்டது கடந்த முப்பது வருடங்களாக தொடர்ந்த உள்நாட்டுப் போராக வெடித்து மூன்று வருடங்களுக்கு முன் அது அரசின் சிங்கள வெற்றியாக, தமிழரின் இன அடையாளமும் ஈழ அடையாளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் கட்டத்தில் கொழும்புவில் சிங்களவரிடையே வாழும் தமிழரின், மொழி, இன உணர்வுகள் எத்தகைய வாழ்வு பெறும், எழுத்தில் வடிவம் பெறும்? அது இதுகாறும் நமக்குத் தெரியவராத ஒரு புதிய குரலாகத் தான் இருக்கும்.

•Last Updated on ••Friday•, 11 •January• 2013 23:56•• •Read more...•
 

என் பார்வையில் தமிழ் சினிமா!

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -தமிழ் சினிமாவில் இலக்கியம் எழுத்து பற்றி எழுதச் சொல்லி எனக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது சைனாவில் இட்லியும் தேங்காய்ச் சட்னியும் தேடினால் கிடைக்கலாமோ என்னவோ. லாப்லாந்தில் மொந்தன் பழம் எங்கே கிடைக்கும் என்று தேடலாம். இர்குட்ஸ்க் நகரில் காலையில் எழுந்ததும் இடியாப்பமும் குருமாவும் தேடலாம். நாமும் கடந்த 90 வருட காலமாக தமிழுக்கு ஒரு ஆவேசத்தோடு தொண்டை வரள கோஷமிட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். தமிழ் வளர்ச்சியே தன் கொள்கையாகக் கொண்ட இயக்கம் அரசுக்கு வந்து இரண்டு தலைமுறை ஆன பிறகும், தமிழ் சினிமாவுக்குத் தமிழ்ப் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று ஆசை காட்ட வேண்டியிருக்கிறது. ஒரு தமிழனுக்கு தன் இயல்பில் பேச, வாழ, வரிவிலக்கு என்ற ஆசை காட்ட வேண்டுமென்றால், தமிழ் வாழ்க்கை தன் இயல்பில் இல்லாத ஒரு போலியைத் தானே ஃபாஷனாகக் கொண்டு வாழ்கிறது என்று அர்த்தம்? அதுவும் தமிழினத் தலைவர் ஆட்சி நடக்கும் போது?. ஒரு நீண்ட காலமாக தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் தமிழ் பேசும் கதாநாயகியைத் தேடும் முயற்சி ஒரு தொடராக வந்து கொண்டிருக்கிறது. தமிழ்ப் பெயர்கள் இப்போது ஃபாஷனில் இல்லை. தன் தமிழ்ப் பற்றை உலகுக்கு பறை சாற்றும் நோக்கில், ஒரு காலத்தில் தம் பெயரையே ஒரு மாதிரியாக தமிழ்ப் பெயர்களாக மாற்றி வந்தார்கள் நம்மில் பலர்.  தமிழ்ப்பெயர் என்றால் அது சங்க காலத்தில் புழங்கிய பெயர்களாக இருக்கவேண்டும் என்பது சொல்லப்படாத விதி. ஆனால் இப்போது ஸ்ரேயா, நமீதா, ;பூஜா, அபூ, தமன்னா, டாப்ஸி, ஹன்சிகா மோட்வானி அனூஷ்கா, ரீமா சென், குஷ்பு, ஆண்ட்ரியா என்ற பெயர்களில், தமிழ் தெரியாத வடநாட்டு நங்கைகளிடம் தான் நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கவர்ச்சி. தமிழ் நடிகர்கள் பெயர்கள் கூட இப்போது ரொம்ப ஃபாஷனோடு, பரத், அஜீத், தனுஷ், விஜய் காந்த், ஸ்ரீகாந்த் இப்படித்தான் யாரையும் குறை சொல்லிப்பயனில்லை. பேச்சில் தான் தமிழ்ப்பற்று இருந்ததே தவிர, உள் மனசு என்னவோ முற்றிலும் வேறாகத் தான் ஆசை கொண்டிருந்தது.

•Last Updated on ••Friday•, 04 •January• 2013 23:00•• •Read more...•
 

என் வியப்பும் சந்தோஷங்களும்

•E-mail• •Print• •PDF•

கமலா தேவி அரவிந்தன்- வெங்கட் சாமிநாதன் -கமலா தேவி அரவிந்தன் பேசும் மொழி மலையாளம்.  மூன்று தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை வழித் தாத்தா பாட்டி கொல்லத்திலிருந்து வந்தவரகள். தாய்வழித் தாத்தா பாட்டி பாலக்காட்டின் ஒட்டப் பாலத்திலிருந்து வந்தவர்கள். கமலா தேவி குட்டிப் பெண்ணாக ஆரம்பப் பள்ளியிலிருந்து கற்றது தமிழ். வாழ்க்கை முழுதும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும். கணவர் மலையாளி. பிரமிப்பாகவும் இருக்கிறது. தொடக்க காலத்தில் மலையாளத்தில் எழுதினாலும் பின்னர் தமிழிலும் எழுதத் தொடங்கி இப்போது சிறுகதைகள், நாவல், ரேடியோ நாடகங்கள் இத்யாதி இத்யாதி என 160 சொச்சம் புத்தகங்கள் (எண்ணிக்கையை, ஒட்டு மொத்தமாகச்  சொல்லி மிகக் குறைத்துச்  சொல்லி விட்டேனோ, கமலாதேவி?) வெளியாகியுள்ளன. இப்போது நான் இது பற்றி எழுதும் இடைவேளையில் அவர் இன்னும் ஒன்றிரண்டு புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கக் கூடும். எழுதி முடித்திருக்கும் வேளையில் எண்ணிக்கை இன்னும் ஒன்றிரண்டு கூடியிருக்கக் கூடும் சாத்தியம் உண்டு. பிரமிப்பு தான எனக்கு, ஆனால் எனக்கு அவர் பெயர் கேட்டதும் எழுதியதைப் படித்ததும் வெகு சமீபத்தில், வல்லமை என்னும் தமிழ் இணையத்திலிருந்து தான் தமிழ் முரசு, போன்ற மலேசிய சிங்கப்பூர்  பத்திரிகைகளில் அவர் நிறைய எழுதி பரிசுகளும் பெற்றிருக்கிறார்.   அவர் நம்மூர் கணையாழியிலும்,  அமெரிக்க  தென்றல் பத்திரிகையிலும்  எழுதியிருப்பதைத் தெரிந்து கொண்டதெல்லாம் இருக்கட்டும். அதிகம் இல்லை. நூற்றுக் கணக்கில் எழுதியவரைப் பற்றித் தெரிந்து கொண்டது   இவ்வளவு தான் என்றால் அது பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயம் இல்லை. ['பதிவுக'ளில் 2009 -2012 காலப்பகுதியில் கமலாதேவி அரவிந்தனின் நுவல், நுகத்தடி, மின்மினி, முகடுகள், உற்றுழி, தாகம், புரை, சூரிய கிரகணத்தெரு, ஒரு நாள் ஒரு பொழுது, நாசிலெமாக் மற்றும் திரிபு எனப் பதினொரு சிறுகதைகள் வெளிவந்திருப்பதை மறந்து விட்டீர்களே திரு.வெ.சா. அவர்களே! - ஆசிரியர், பதிவுகள்]

•Last Updated on ••Saturday•, 29 •December• 2012 22:16•• •Read more...•
 

சாஹித்ய அகாதமியில் கிடைத்த ஒரு நட்பு (2)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -மிகுந்த சாமர்த்திய சாலி என்று நினைத்துக்கொண்டேன். நிர்வாகத்தையும் அவர் புறக்கணிக்க வில்லை. அதே சமயம் தன் வழியில், தன் முறையில் தன் பொறுப்புக்களையும் எதிர் கொண்டார். நிர்வாகத்தோடும் மோதாமல், தனக்களிக்கப்பட்ட பணியையும் சிறப்பாகச் செய்வதற்கும் வழிமுறைகள் தெரிந்திருப்பது சாமர்த்தியம் தானே. பதினெட்டாம் நூற்றாண்டு சாந்தலிங்க சுவாமிகள் யாரா யிருந்தால் என்ன? அவரைப் பற்றி எழுதியுள்ள ஆர். பங்காருசாமி என்பவருக்கு அந்த ஸ்வாமிகள் முக்கியமானவராகத் தெரிந்திருக்கிறார். தெரியாதவரைத் தெரிய வைப்பதும் ஒரு தொண்டு தானே. தமிழ் ஆலோசனைக் குழுவுக்கு இது போன்று பலர் தகுதியுடையவர் களாகப் பட்டிருக்கிறார்கள். ஆனந்த விகடன் மணியன், கே. மீனாட்சி சுந்தரம்(?) எழில் முதல்வன், முடியரசன்(?), தண்டாயுதம். சுகி சுப்பிரமணியம், மீ.ப..சோமசுந்தரம், சஹானே(?), மஸ்கரானஸ்(?) (இப்பெயர்கள் உதாரணத்துக்காகச் சொல்லப்படும் சிலரே) போன்றார் இதில் இடம் பெறும் தகுதியை, தமிழ் ஆலோசனைக் குழு தீர்மானித்து சிபாரிசு செய்ய  என்ஸைக்ளோபீடியா வின் அவ்வப்போதைய எடிட்டர் அதன்படி செயலாற்றியிருக்கிறார். இதில் யாரைக் குறை சொல்ல முடியும்? என்ஸைக்ளோபீடியா எடிட்டர் என்ன செய்ய முடியும்? பொறுப்பு ஆலோசனைக் குழுவினரது தான். சரி, ஆலோசனைக் குழுவினரைத் தீர்மானித்தது யார்? இந்தப் பண்டிதர்கள் தான் எல்லாம் வல்ல, அறிந்த ஞானிகளாக பெயர் பெற்றிருக்க, இவர்கள் தான் சாஹித்ய அகாடமியின் கண்களுக்கு தெரிந்திருக்கிறார்கள்.

•Last Updated on ••Monday•, 24 •December• 2012 00:02•• •Read more...•
 

சாஹித்ய அகாடமியில் கிடைத்த ஒரு நட்பு - பேராசிரியர் மோஹன்லால் (1)

•E-mail• •Print• •PDF•

'Literature is what a man does in his lonelinessDr. S. Radhakrishnan

'இலக்கியம் ஒரு மனிதன் தன் தனிமையில் கொள்ளும் ஈடுபாடு' - 1956-லோ என்னவோ அகாதமிகளைத் தொடக்கி வைத்துப் பேசிய டாக்டர். எஸ் ராதாகிருஷ்ணன் -

- வெங்கட் சாமிநாதன் -எனக்கும் சாஹித்ய அல்லது எந்த அகாடமிகளுக்குமே (நிறுவனமாகி பூதாகரித்து முன் நிற்கும் இலக்கியத்துக்கும்) என்ன சம்பந்தம்?. ஒரு சம்பந்தமும் இல்லையென்று தான் நான் தில்லியில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து (1956 டிஸம்பர் 29 ) தோன்றியது. சாஹித்ய அகாடமி இருப்பது ஒரு அழகான கட்டிடத்தில். அந்த கட்டிடத்தை நிர்மாணித்தவர்  ரஹ்மான் என்னும் ஒரு கட்டிட கலைஞர்.. இந்திராணி ரஹ்மான் என்னும் அன்று புகழ்பெற்றிருந்த நடனமணியின் கணவர். வாசலில் ரஷ்ய எழுத்தாளர் புஷ்கினின் சிலை வரவேற்கும், மிக அழகான கம்பீரமான தோற்றம் கொண்டது அந்த சிலை. எழுத்தாளன் என்றாலே ஒரு பஞ்சபரதேசி உருவம் நம் கண்முன் நிற்குமே. அப்படி அல்ல.   ஏழு வீதிகள் பிரியும் ஒரு போக்குவரத்து வட்டத் தீவினைப் பார்த்து நிற்கும். கட்டிடத்தின் பெயர் ரவீந்திர பவன். உள்ளே நுழைந்ததும் தலைகுனிந்து இருக்கும் தாகூரின் மார்பளவுச் சிலை ஒன்றைப் பார்க்கலாம். வேத காலத்து ரிஷிபோல. அக்காலத்தில் கவிகளும் ரிஷிகளாகத் தான் இருந்தார்கள். வால்மீகி, வியாசர், அதனால் தானோ என்னவோ வள்ளுவருக்கும் ஒரு ரிஷித் தோற்றம் கொடுத்து இருக்கிறோம். எல்லாம் அழகானவைதான். மூன்று காரியா லயங்களை அது உள்ளடக்கியது. லலித்கலை, சாஹித்யம் பின் சங்கீதமும்  நாடகமும். எல்லாம் ஒன்றேயான தரிசனத்தின் மூன்று தோற்றங்கள் என்ற சிந்தனையை உள்ளடக்கியது போல். ஆனால், உள்ளே நடமாடியவர்களுக்கு அது பற்றிய பிரக்ஞை இருந்ததாகத் தெரியவில்லை. ஒருவர் மற்றவரோடு சந்தித்துப் பேசி நான் பார்த்ததில்லை. காண்டீனைத் தவிர என்று சொல்ல வேண்டும்.

•Last Updated on ••Saturday•, 15 •December• 2012 23:47•• •Read more...•
 

(105) – நினைவுகளின் சுவட்டில்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -கொஞ்ச நாட்கள் கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது ஏதும் ஆர்டர் வருமா என்று காத்திருப்பு. இன்னும் wanted column-ல் ஏதும் எனக்கு ஏற்ற விளம்பரங்கள் வருமா என்ற காத்திருப்பு. ஒரு மாதம் இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். முதலில் வந்தது Northern Railway-யிலிருந்து. எனக்கு வேலை கிடைத்துவிட்டது. சந்தோஷமாக இருந்தது. முதல் தடவையாக நானே முயன்று பெற்ற வேலை அல்லவா? இங்கு யாரும் ராஜாவோ, செல்ல ஸ்வாமியோ சொல்லி ஒரு முரளீதர் மல்ஹோத்ரா கருணை மனம் கொண்டு, ”boys service-ல் எடுத்துக்கொள்,” என்று தனிச் சலுகை காட்டிப் பெறவில்லையே. எத்தனையோ பேருடன் போட்டி போட்டல்லவா கிடைத்திருக்கிறது. அந்த சமயத்தில் அந்த சந்தோஷம் தகுதியில் பெற்றதாகத்தான் தோன்றியது. எல்லோரிடமும் சொல்லிச் சந்தோஷப்பட்டேன். அவர்களுக்கும் சந்தோஷம் தான். ஆனால், ”இன்னம் பொறு. மூன்று இடங் களுக்குப் போய் வந்திருக்கிறாயே, அவை என்ன ஆகிறது என்று பார்க்கலாம்,” என்று மிருணாலும், என் செக்‌ஷன் அதிகாரி தேஷ் ராஜ் பூரியும் சொல்லவே, அது சரியாகத்தான் பட்டது. இரண்டாவது நான் வேலைக்குச் சேர பிக்கானீர் போகவேண்டும். பாலைவனம். வெயில் வறுத்து எடுக்கும். இங்கேயே ஆறு வருடங்கள் அஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட கூரையில் காய்ந்து வரண்டாயிற்று. பிக்கானீர் போவதா என்ற தயக்கம் ஒரு மூலையில் எட்டிப் பார்த்தது. இங்காவது ஆறு வருடங்களோடு போயிற்று. பிக்கானீர் போனால் ஆயுள் முழுக்க அல்லவா கஷ்டப் படவேண்டும். இந்த நினைப்பு மற்ற இடங்களிலிருந்து என்ன வருகிறது என்று பார்க்கலாம் என்று ஆலோசனை சொன்னதால் வந்ததா இல்லை, பிக்கானீர் பாலைவன தகிப்பின் காரணமாக மற்றவர்கள் சொன்ன ஆலோசனைப்படி காத்திருக்கத் தீர்மானித்தேனா தெரியவில்லை. இரண்டுமே இருக்கலாம்.

•Last Updated on ••Thursday•, 06 •December• 2012 23:22•• •Read more...•
 

(104) - நினைவுகளின் சுவட்டில்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -புர்லா திரும்பியதும் மறுபடியும் பழைய அன்றாட பாட்டை நடைதான். அலுவலகம், தினசரி பத்திரிகையில் wanted column-ல் எனக்கு என்ன இருக்கு என்ற தேடல். இருந்தால் ஒரு மனு போட வேண்டியது. இதில் ஏதும் சுவாரஸ்யம் இல்லை என்றாலும், இவ்வளவு நெருக்கமாக பழகியவர்களை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற ஒரு வருத்தம் ஒரு மூலையில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு சமயம் இந்த நினைப்பு வந்ததும் சக்கரவர்த்தியைப் பார்க்கப் போய் விடுவேன். மஞ்சு சென்குப்தாவுக்கும் வேறு செக்‌ஷனுக்கு மாற்றலாகி விட்டது. அங்கு கொஞ்ச நேரம் கழிப்பேன். சில சமயங்களில் மிருணாலும் சேர்ந்து கொள்வான். அவன் இருக்கும் போது மஞ்சு சொல்வாள்: “எங்களை விட்டுப் போய் விடுவீர்கள் இல்லையா?” என்பாள் இது கட்டாயம் இண்டர்வ்யூவுக்குப் போகும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் கேட்கப் படும் கேள்வி. மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம். சாதாரணமாகக் கேட்பது போலும் இருக்கும். குற்றம் சாட்டுவது போலும் இருக்கும். வருத்தத்துடன் தனக்குள் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது போலும் இருக்கும். என்ன என்று பதில் சொல்வது? எங்கோ பார்வை செல்லும். ஒரு வெறுமை முகத்தில் படரும். எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இந்த வருத்தம் சொல்லப்படும். பகிர்ந்து கொள்ளப்படும். எல்லோருமே வாய்ப்புக்காகத் தான் காத்திருந்தார்கள். வாய்ப்புக் கிடைத்ததும் சென்று கொண்டிருந்தார்கள். இங்கு தான் அணைக்கட்டு வேலை முடிந்து கொண்டிருக்கிறதே. உள்ளூர்வாசிகள், ஒடியாக்கள் தவிர மற்ற எல்லோருக்கும் இதே கவலை தான். வேலை நீக்க உத்தரவு தரப்படுவதற்கு முன் கிளம்பிவிடவேண்டும். FA & CAO அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கவலை இல்லை. அப்படியே கூண்டோடு அவர்கள் பிலாய்க்குப் போகக் காத்திருந்தார்கள்.

•Last Updated on ••Friday•, 30 •November• 2012 02:30•• •Read more...•
 

க.நா.சு நூற்றாண்டு நினைவு தினக் கட்டுரை: க.நா.சு.வும் நானும் (3)

•E-mail• •Print• •PDF•

க.நா.சு- வெங்கட் சாமிநாதன் -1956 – தான் அவரது விமர்சனப் பயணத் தொடக்கமாக எனக்குத் தெரிய வந்த வருஷம். அதிலிருந்து அவர் கடைசி மூச்சு பிரியும் வரை அவர் விமர்சகராகவே  முத்திரை குத்தப் பட்டு ஒதுக்கப் பட்டு விட்டார்.  நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என எல்லா வடிவங்களிலும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார். பெரிய மனிதன், ஆட்கொல்லி, ஏழு பேர், அசுர கணம், நளினி, மயன் கவிதைகள், சமூக சித்திரம், அவரவர் பாடு மாதவி,  வள்ளுவரும் தாமஸ் வந்தார்,, அவதூதர்,. தெய்வ ஜனனம், அழகி, என நிறையவே அவருடைய நாவல்கள் கவிதைகள், சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன, அவரை விமர்சகராகவே உலகம் சுருக்கி விட்ட காலத்தில். இத்தோடு நான் பார்க்க அவர் ஜார்ஜ் ஆர்வெல்லின் மிருகங்களின் பண்ணை,, நட் ஹாம்சனின், நிலவளம், பாரபாஸ், ஜாக் லண்டன் உள்ளடக்கிய பலரின் சிறுகதைகள். இவை தவிர தமிழ் எழுத்தாளர் பலரின் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள். பின் கிறித்துவ மிஷனரிகளைப் பற்றிய ஒரு ஆங்கில புத்தகம், இப்படி நான் சொல்லிக் கொண்டே போகலாம்.

•Last Updated on ••Friday•, 30 •November• 2012 02:26•• •Read more...•
 

க.நா.சு நூற்றாண்டு நினைவு தினக் கட்டுரை: க.நா.சு.வும் நானும் (2)

•E-mail• •Print• •PDF•

க.நா.சு- வெங்கட் சாமிநாதன் -ஆனால் அந்த நாட்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் நிறைந்த நாட்கள். க.நா.சுவின் எழுத்துக்களை தமிழ் பத்திரிகைகளிலோ ஆங்கிலப் பத்திரிகைகளிலோ பார்க்கும் போது நான் அடைந்த உற்சாகம்  சொல்லித்தீராது. அவர் எழுத்து மாத்திரம் அல்ல. தில்லியில் எனக்குப் பார்க்கக் கிடைத்து வந்த நாடகம், சினிமா, நாட்டிய நிகழ்ச்சிகள். மற்ற மொழிக்காரர்கள் பங்கு கொள்ளும் கருத்தரங்குகள் எல்லாம் தமிழை ஆக்கிரமித்திருந்த வெகுஜன கலாச்சாரத்தை நிராகரிப்பதாகவும், இதற்கு எதிரான க.நா.சு. வின் எழுத்தையும் குரலையுமே எதிரொலிப்பதாகவும் இருந்தது. அதை நான் ஒவ்வொரு கணமும் அனுபவித்து வந்தேன் என்று தான் சொல்லவேண்டும். சுற்றிலும் கவிந்திருக்கும் இருட்டிலிருந்து வெளிச்சத்தில் கால் வைத்து முன் செல்லும் அனுபவம் அது. மிக முக்கியமான காலகட்டத்தில், தமிழ் இலக்கியம் ஒரு புதிய பாதையில் பயணிப்பதான உணர்வு. இந்த உணர்வு எனக்கு மட்டுமல்ல, பரவலாக, என்னைப் போல தனித் தனி நபர்களாக தமிழ் நாட்டில் பல இடங்களிலிருந்தும் வெளித்தெரிவதையும் காணமுடிந்தது.

•Last Updated on ••Tuesday•, 27 •November• 2012 00:37•• •Read more...•
 

க.நா.சு நூற்றாண்டு நினைவு தினக் கட்டுரை: க.நா.சு.வும் நானும் (1)

•E-mail• •Print• •PDF•

க.நா.சு- வெங்கட் சாமிநாதன் -நான் க.நா.சுப்ரமண்யம் என்ற பெயரையே முதன் முதலில் அறிந்தது தமிழ் நாட்டில் அல்ல. ஒரிஸ்ஸாவில். ஹிராகுட் அணைக்கட்டில் வேலைக்குச் சேர்ந்த ஒரு சில மாதங்களி.ல். 1950-ன் ஆரம்ப மாதங்களிலோ அல்லது சற்றுப் பின்னோ. அப்போது எனக்கு வயது 17. எனக்கு ஆறு அல்லது ஏழு வயது மூத்தவரும், எனக்கு அந்த புதிய மண்ணில் புதிய வாழ்க்கையின் ஆரம்பத்தில் வழிகாட்டியாக இருந்த செல்லஸ்வாமி என்பவரின் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவருக்கு அடுத்த வீட்டில் இருந்த ஜனார்தனம் என்பவர் தன் விதவைத் தாயுடனும் பத்து வயதுத் தங்கையுடனும் இருந்தார். அவர்களுடனும் பேசிக்கொண்டிருப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். அவருடைய விதவைத் தாயும்  என்னிடம் பிரியமாக இருப்பார்.  ஜனார்தனம் வீட்டிற்கு அமுதசுரபி வந்து கொண்டிருந்தது. அவ்வப்போது அங்கு செல்லும்போது அமுதசுரபியும் எனக்குப் படிக்கக் கிடைக்கும். ஒரு முறை ஒரு வருட சந்தா கட்டினால் ஒரு புத்தகம் இலவசம் என்று விளம்பரம் வந்ததன் பயனாக வந்த இலவச புத்தகம், க.நா.சு. எழுதிய 'ஒரு நாள்' என்ற நாவல்

•Last Updated on ••Wednesday•, 14 •November• 2012 02:04•• •Read more...•
 

(103) – நினைவுகளின் சுவட்டில்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும் தான் பத்திரமாகத் தான் இருந்தன. பூட்டு உடைக்கப்படவில்லை. உடைப்பதற்கு அறையில் ஏதும் இல்லை. முதல் தடவையாக தனியாக வந்துள்ள அனுபவமும் தான் சற்று பயப்பட வைத்துள்ளது என்று மனம் சமாதானம் சொன்னாலும் ஹோட்டல் ஒன்றும் அப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. இருப்பினும் படுத்துக்கொண்டேன். இரவு முதலில் கொஞ்ச நேரம் மனம் அமைதியின்றி கழிந்தாலும் எப்படியோ தூக்கம் வந்து கவலையைத் தீர்த்தது. தூங்கினால் காட்டில் தனிமையில் இருந்தாலும் நகரச் சந்தடியில் கூட்டத் தோடு இருந்தாலும் தூக்கம் எல்லாவற்றையும் அழித்து விடுகிறது. சுய நினைவே இல்லையென்றால் எது எப்படி இருந்தால் என்ன?  காலையில் எழுந்ததும் காசிக்குப் போனால் என்ன என்று தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து விட்டு காசிக்குப் போகவில்லையென்றால்…? பின், எப்போது இந்தப் பக்கம் வரும் காசிக்கு இவ்வளவு அருகில் வரும் சந்தர்ப்பம் ஏற்படுமோ? அதிலும் என் காசியாத்திரைக்காகும் செலவு அலாஹாபாதில் லிருந்து காசிக்குப் போய் வரும் செலவு தான். யார் யாரெல் லாமோ நிறைய பணம் வாழ்நாளெல்லாம் சேர்த்துக்கொண்டு, சொத்துக்களை நிர்வகிக்க ஏற்பாடு செய்து,  உயில் எழுதி வைத்து விட்டுப் போவார்களாம். எனக்கு அந்த கஷ்டம் இல்லையே. அதோடு அப்பா அம்மாவுக்கு காசியிலிருந்து கங்கை ஜலச் செம்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் இன்னும் சந்தோஷப்படுவார்களே. அத்தோடு புள்ளையாண்டானுக்கு அபூர்வமா காசிக்குப் போகணும், கங்கை ஜலம் வாங்கிக் கொடுக்கணும்னு அக்கறையும் பக்தியும் வந்து விட்டது என்றால் சந்தோஷம் தானே. நான் சொன்னால் நம்ப மாட்டார்கள். ஆனால் கங்கைச் செம்பு சாட்சி சொல்லுமே.

•Last Updated on ••Monday•, 05 •November• 2012 20:55•• •Read more...•
 

தீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்

•E-mail• •Print• •PDF•

வாழ்வின் சில உன்னதங்கள்: விட்டல் ராவ்- வெங்கட் சாமிநாதன் -இப்படியும் ஒரு புத்தகம் இந்நாட்களில் தமிழில் எழுதப்படும், அதுவும் அதற்குரிய கௌரவத்தோடும் ஆர்வத்தோடும் பிரசுரிக்கப்படும் என்பதைப் பார்க்க மிகவும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது. கண்முன் இருப்பது விட்டல்ராவ் எழுதியுள்ள  வாழ்வின் சில உன்னதங்கள் என்னும் பழம் நினைவுக் குறிப்புகள். மூர்மார்க்கெட் தீக்கு இரையானதோடு (அல்லது இரையாக்கப்பட்டதோடு?) கருகிச் சாம்பலானது, பழையன கழிதல் ஆகாது, அந்த இடத்தை  ஒரு புதிய ரயில் நிலையம்தான்  பறித்துக் கொண்டது என்றாலும், மூர்மார்க்கெட் தன் நிழலில் வாழ்வு கொடுத்தது பழம் புத்தகக் குவியல்களுக்கும், கிராமஃபோன் ரிகார்டுகளுக்கும் மட்டுமல்ல. பழம் தட்டு முட்டு சாமான்களின் குவியல் அல்ல அவை. அப்படியான தோற்றத்தின் பின் அதைத் தேடுபவர்களுக்கும், பார்க்கத் தெரிந்தவர்களுக்கும் உணர்ந்தறிகிறவர்களுக்கும், அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்துத் தரக் காத்திருக்கும் பாரம்பரியம் அது... இன்றைய சந்தை ஏற்க மறுத்த பாரம்பரியம் அது. தமிழர்களும் சென்னையும் இப்படியும் ஒரு ஸ்தாபனத்தை, மனிதர்களை உருவாக்கியிருக்கிறதே என்று மலைக்கத் தோன்றுகிறது. அது இப்போது இல்லை. தமிழன் திரும்ப தன் இயல்பு நிலைக்கு வந்துவிட்டான்.

•Last Updated on ••Sunday•, 28 •October• 2012 18:46•• •Read more...•
 

102) – நினைவுகளின் சுவட்டில்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -தினசரி செய்தித் தாள் வாங்கிப் படிக்கும் பழக்கம் இங்கு ஹிராகுட் அணைக்கட்டுக்கு வேலைக்கு சேர்ந்து நானே சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டது. இருந்த போதிலும், அதில் Wanted பகுதியையும் படிக்கும் கால கட்டம் ஒன்று புதிதாக ஆரம்பித்துவிட்டது. வேலை தேடவேண்டும் என்ற முனைப்பு இருந்தாலும் அது எத்தகைய கவலையும் தோய்ந்ததாக என்ன ஆகுமோ, என்னவோ, வேலை கிடைக்குமோ கிடைக்காதோ, கிடைக்காவிட்டால் என்ன செய்வது, பெற்றோருக்கு எப்படி பணம் அனுப்புவது என்ற கவலைகளில் பீடிக்கப்பட்டதாக உணரவே இல்லை. எப்படி நான் அதை ஏதோ சினிமா விளம்பரம் பார்ப்பது போல எவ்வித கலவரமும் இல்லாது வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன் என்பது தெரியவில்லை. அதிக நாட்கள் இங்கு இருக்கப் போவதில்லை, ஒரு சில மாதங்கள், அல்லது அதிகம் போனால் ஒரு வருடம் இங்கு காலம் தள்ள முடியும். அதன் பின்? சிக்கல் தான். நிச்சயமின்மை தான். ஆனாலும் எப்படி ஒரு அமைதியான மனத்துடன் அந்த நாட்களில் இருந்தேன் என்பது இப்போது எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏதோ வீரன், தீரன் என்றும் மனத்திடம் என்றும் எல்லாம் என்னைச் சொல்லிக் கொள்வதற்கும் இல்லை.

•Last Updated on ••Saturday•, 20 •October• 2012 21:46•• •Read more...•
 

சாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி (2)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -டண்டனுக்கு இந்த கூட்டம், இந்த சலசலப்பு பிடிக்கும். தூர இருந்து வேடிக்கை பார்க்க. ஒரு குழந்தையின் உற்சாகம் அவர் முகத்தில் காணும். அவர் இதைப் பற்றியெல்லாம் பேசிக் கேட்க  வேண்டுமானால், கிஷோரி அமோன்கர் கச்சேரி துவங்கக் காத்திருப்பது  மாதிரி தான். கூட்டம் சேர, அமைதியாக இருக்க வேண்டும். வந்து உட்கார்ந்தால் ஒரு பார்வை சுற்றுமுற்றும் ஒருத்தரும் எழுந்து போகக் கூடாது. ஒரு இருமல், தும்மல் கூடாது. பின் சுருதி சேர வேண்டும். தம்பூரா ஸ்ருதி மாத்திரம் இல்லை. மனத்தின், ஹாலின், சுற்றுச் சூழலின்,. சுருதி கூட சுத்தமாக இருக்க வேண்டும். அப்பத் தான் கிஷோரிக்கு இங்கு பாடலாம் என்ற நிம்மதி பிறக்கும்.  பின் மெதுவாக ஒரு இழை சன்ன குரலில் எழும்.  இதே மாதிரி இல்லை. கிட்டத்தட்ட இதே காத்திருத்தல் டண்டன் வாய் திறக்கவும் வேண்டும். ஏதும் அபஸ்வரம் யாரிடமிருந்தும் வராது என்ற நம்பிக்கை அவரிடம் துளிர்க்க வேண்டும். பின் ஏதோ சொல்லியும் சொல்லாமலும் ஒரு இழை சன்னமாக வெளிப்படும். அது தான் அவரும் சகயாத்திரிகர் தான் என்று நமக்குச் சொல்லும். இவரைப் போய் எங்கள் சைபர் செக்‌ஷன் அதிகாரி பி.எஸ். ஸின் முன்னிலையில் மணிக்கணக்காக உட்கார வைக்கும் கொடுமையை என்ன சொல்வது? அதையும் டண்டன் அமைதியாக சகித்துக் கொண்டிருக்கும் அந்தக் கொடுமையை என்ன சொல்வது?

•Last Updated on ••Sunday•, 14 •October• 2012 19:36•• •Read more...•
 

சாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி!

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -அது 1964-ஓ அல்லது 1965-வது வருடமாகவோ இருக்கவேண்டும். சரியாக நினைவில் இல்லை. உயர் அதிகாரிகளுடன் எனக்கு எப்போதும் ஒரு  உரசல், ஒரு  மோதல் இருந்து கொண்டே இருக்கும். அது எனக்கோ அதிகாரிகளுக்கோ பொறுத்துக் கொள்ளும் அளவில் இருந்தால் சரி. பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் எனக்கு அந்த இடத்தை விட்டு மாற்றல் கட்டளை பிறந்து விடும். மாற்றல் தான் நிகழுமே தவிர அலுவலக வாழ்க்கைக்கு உலை வைக்கும் தீவிர நடவடிக்கை ஏதும் இராது. இருந்ததில்லை. என் ஜாதகம் அப்படி. பெரிய சந்தோஷங்களும் இருந்ததில்லை. பெரிய துக்கங்களும் இருந்தத்டில்லை என் வாழ்க்கையில். அப்படி ஒரு ஜாதகம் என்னது. இப்போது நினைத்து பார்க்கும்போது அவ்வித தீவிர தவறுகள் ஒன்றிரண்டு  என் தரப்பில் நிகழ்ந்த போதும் நான் தப்பியிருக்கிறேன். என்னிடம் அக்கறை கொண்ட உயர் மட்ட மேல் அதிகாரி எவராவது ஒருவர் அத்தவற்றை ஒன்றுமில்லாமல் ஆக்கியிருககிறார். “அதை விடச் சிறிய தவற்றுக்கெல்லாம் ,”நீங்கள் இப்போதே வீட்டுக்குப் போகலாம், வேலை செய்த நாட்களுக்கு சம்பளம் வீடு வந்து சேர்ந்துவிடும்” என்று வேலைக்குச் சேர்ந்த ஒரு சில நாட்களுக்குள் திருப்பி அனுப்பப்பட்ட நபர்களை நான் வேலையில் சேர்ந்த புதிதில்  பார்த்திருக்கிறேன். போலீஸ் விசாரணையெல்லாம் முடிந்த் பின் தான் வேலைக்குச் சேரமுடியும் என்றாலும், பின்னர் ஏதும் விவரம் தெரிய வந்திருக்கும்.

•Last Updated on ••Sunday•, 07 •October• 2012 05:36•• •Read more...•
 

(101) – நினைவுகளின் சுவட்டில்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -நான் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்த போது சீஃப் என்சினியாரக இருந்தது ஆர். பி வஷிஷ்ட் என்பவர். அனேகமாக எல்லோருமே பஞ்சாபிகள். சீஃப் என்சினியரிலிருந்து கீழ்மட்ட சூபர்வைசர் வரை. எல்லோரும் அதற்கு முன் சக்கர் என்ற அணைக்கட்டில் வேலை பார்த்தவர்கள். அது இப்போது பாகிஸ்தானின் சிந்து பிராந்தியத்தில் இருக்கிறது. அனேகர் இப்போது பாகிஸ்தானில் சேர்க்கப்பட்டுவிட்ட சிந்து, பஞ்சாப் பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். வேலையில் சேர்ந்த போது அவர்கள் நினைவுகளில் பாகிஸ்தானின் பஞ்சாப் வாழ்க்கையும் பின்னர் நடந்த கலவரங்களில் உயிர் தப்பி கால் நடையாகவோ ரயில் பெட்டிகளில் அடைந்தோ ரயில் பெட்டியின் மேலே உட்கார்ந்தோ வந்த ஆபத்தும் அவதியும் நிறைந்த கதைகளைச் சொன்ன ஹரிசந்த், உத்தம் சந்த் எல்லாம் என் செக்‌ஷனின் வேலை செய்கிறவர்கள். ஒரு எக்ஸிக்யூடி என்சினீயர், கேவல் கிஷன் என்பவர் தனியர். அவர் பெற்றோர்கள் கூடப் பிறந்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்தை தன் கண்களாலேயே பார்த்தவர். அவர்கள் ஒரு புதிய வாழ்க்கையை இங்கு தொடங்கியுள்ளதைப் பார்க்கும் போது எவ்வளவு மனத்திடம், முனைப்பு என்று நினைப்பேன். அவர்கள் அந்த சோகத்திலேயே ஆழ்ந்து விடவில்லை.

•Last Updated on ••Tuesday•, 02 •October• 2012 04:44•• •Read more...•
 

(100) - நினைவுகளின் சுவட்டில்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -1956 – இது எவ்வளவு முக்கியத்வம் பெறும் என்று அப்போது தெரிந்ததில்லை. திடீரென்று என்னை இன்னொரு செக்‌ஷனுக்கு மாற்றினார்கள். சொல்லலாம் தான், ஊரை விட்டுப் போய்விட வில்லை. அலுவலகமும் அதேதான். அதே கட்டிடம் தான். இருந்தாலும் அலுவலகத்தில் இருக்கும் நேரம் எல்லாம் உடனிருந்து என்னேரமும் பார்வையின் வட்டத்துக்குள் இருந்து கொண்டிருந்த சோப்ரா, மிருணால், மஞ்சு சென்குப்தா, எல்லோரையும் விட்டு வேறு தளத்துக்கும் வேறு அறைக்கும் செல்வதென்றாலும் எந்த அளவுக்கு இழப்பு இருந்ததோ அது இழப்பு தானே. அந்த வயதில் இந்த இழப்பும் இழப்பாகத் தான் மனத்தை வருத்தியது. மஞ்சு சென்குப்தாவும் மிக அன்புடன், அன்னியோன்யத்துடன் இருந்தாள். காரணம் என் சினேக சுபாவம் மட்டுமல்ல, மிருணால் அவளிடம் என்னைப் பற்றி என்னென்னவோ புகழ்ந்து பேசியிருப்பதும் காரணம் என்பது எனக்குத் தெரியும். அவளிடம் மட்டுமல்ல. தன் எல்லா வங்காள நண்பர்களிடமும் தான். போகும் செக்‌ஷனில் எல்லோரும் புதியவர் அல்லர் தான். சக்கர் அணைக்கட்டில் வேலை பார்த்துவந்தவர்கள் உத்தம் சந்த்தும், ஹரி சந்த்தும்  ஓய்வு பெற்று இப்போது இங்கும் வேலைக்குச் சேர்ந்தார்கள். ஒய்வூதியம் பெறுகிறவர்கள். எனக்கு அப்போது வயது 22-23 என்றால் அவர்கள் அறுபதைத் தாண்டியவர்கள். மிக அனுபவஸ்தர்கள். அவர்கள் இப்போது இந்த புதிய செக்‌ஷனில் இருந்தார்கள். பழையவர்களோடு மீண்டும் நெருக்கம் ஏற்பட்டது.

•Last Updated on ••Wednesday•, 19 •September• 2012 00:17•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் .. (99)

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்இந்த நினைவுகளை எழுதும் போது, 60 வருஷங்களுக்கு முந்திய அந்தக் காலமும் மனிதர்களும் வாழ்க்கையும் கொஞ்சம் வினோதமாகத் தான் தோன்றுகின்றன. அப்படியும் இருந்ததா என்று. அப்படித்தான் இருந்தன. நான் வாழ்ந்து பார்த்து அனுபவித்த அனுபவங்களாயிற்றே. -  ஹிராகுட்டிலிருந்து புர்லாவுக்கு போய்க்கொண்டிருக்கிறேன். நடந்து. ஹிராகுட்டிலிருந்து சம்பல்பூர் பத்து மைல் தூரம். அந்த ரோடிலேயே சுமார் மூன்று மைலோ அல்லது நாலோ நடந்து பின் வலது பக்கம் கிளை பிரியும் ரோடில் போகவேண்டும் அதில் சுமார் இர்ண்டு மைல் தூரம் போனால் மகா நதி. மகா நதிப் பாலத்தைக் கடந்து இன்னும் மூன்று மைல் தூரம் நடந்தால் புர்லா. விடுமுறையில் ஊருக்குப் போக ரயில் பிடிக்க சம்பல்பூர் ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். சைக்கிள் ரிக்‌ஷாவில் போய்க்கொண்டிருக்கிறேன். மகாநதியைக் கடந்து விட்டான். ஆனால் நான் ரயிலைப் பிடிக்க நேரத்துக்குப் போய்ச் சேர்வேன் என்ற நம்பிக்கையில்லை. பின்னாலிருந்து ஒரு லாரி வருவதைப் பார்தேன். சைக்கிள் ரிக்‌ஷாவிலிருந்து இறங்கி, அந்த லாரியை நிறுத்தி, ”ரயிலைப் பிடிக்க வேண்டும்,. சம்பல்பூரில் விட்டு விடுவாயா?” என்று கேட்கிறேன். ”ஏறிக்கொள்,” என்கிறான். திரும்பி வந்து சைக்கிள் ரிக்‌ஷாக்காரனுக்கு பேசிய காசைக் கொடுத்து விட்டு லாரியில் ஏறிக்கொள்கிறேன். இன்னொரு சமயம் சம்பல்பூரிலிருந்து ஹிராகுட்டுக்கு ஒரு லாரி போகிறது. இப்போது புர்லா போகும் ரோடு வந்ததும், ”இங்கு இறக்கிவிடு, நான் நடந்து போய்க்கொள்கிறேன்,” என்று சொன்னேன். அவன் நிறுத்த வில்லை.” எவ்வளவு தூரம் நடப்பாய்”, என்று சொல்லி, புர்லா ரோடில் மகா நதியைத் தாண்டி, அவன் வழியை விட்டு எனக்காக லாரியைத் திருப்பி ஐந்து மைல் தூர என் நடையை மிச்சப்படுத்திக் கொடுத்துவிட்டு பின் தன் வழியில் செல்கிறான். என்னிடம் இதற்கு ஒரு பைசா காசு கேட்கவில்லை. யாருமே கேட்டதில்லை. அவ்வப்போது நினைப்பு வந்ததைச் சொல்லிச் செல்கிறேன்.

•Last Updated on ••Monday•, 03 •September• 2012 22:30•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் (98)

•E-mail• •Print• •PDF•

(98) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -எனக்கு புர்லாவில் வீடு கிடைத்த 1950-ன் ஆரம்ப நாட்களிலேயே பணியில் சேர வந்திருந்த நாஸரத் காரர் தேவசகாயத்தை, “உங்களுக்கென வீடு கிடைக்கும் வரை நீங்கள் என்னோடு தங்கிக் கொள்ளலாம்,” என்று சொல்லிக் கூட்டி வந்ததிலிருந்து, ஒரு சில மாதங்களில் தேவசகாயமும் தன் ஊர் நண்பர் என்று சொல்லி  வேலுவை அழைத்து வந்தாரா? அதிலிருந்து அனேகமாக புர்லா வரும் தமிழர்களுக்கு வீடு கிடைக்காதவருக்கு என் வீடு முதல் தங்குமிடமாயிற்று. இப்போது அரை நூற்றாண்டுக்கும் மேல் காலம் கடந்துவிட்ட பிறகு யார் எப்போது எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று நினைவு படுத்திச் சொல்வது கடினம். வந்தார்கள். பிறகு வேறு வீடு கிடைத்ததும் சென்றார்கள். சிலர் தேவசகாயம் போல் தமக்கென வீடு கிடைத்த பிறகும், “என்னத்துக்கு அங்கே போய்க் கிடந்துக்கிட்டு..” என்று அலுப்புடன் என்னுடனேயே தங்கினார்கள். இந்த வீட்டில் கிடைக்கும் நண்பர்கள் குழுவையும் அது தந்த கலகலப்பையும் ஆனந்தத்தையும் வீட்டு தனியே போய் எங்கோ முடங்கிக் கிடப்பானேன்.

•Last Updated on ••Friday•, 24 •August• 2012 22:56•• •Read more...•
 

என் ஆரம்ப ஆசான்கள் இருவர்

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்மகாநதியின் இரு கரையிலும் இருந்த இரண்டு முகாம்களில், முதலில் ஹிராகுட்டிலும்  பின்னர்  புர்லாவிலும்  நான்  கழித்த, 1950 முதல் 1956 வரையிலான ஆறு வருடங்களில், நான் பழகி அறிந்த என்னிடம் அன்பு செலுத்திய நண்பர்களில் நான் மிகவும் வியந்த மனிதர் சீனிவாசன். ஹிராகுட் அணைக் கட்டில் இருந்த குத்தகைக் காரர் ஒருவரிடம் அக்கௌண்டண்ட் ஆக வேலை பார்த்து வந்தார். எப்படி அவருடன் பரிச்சயம் ஏற்பட்டது, எப்படி அவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது, என்பதெல்லாம் இப்போது என் நினைவில் இல்லை. முதலில் அவருடன் பரிச்சயம் ஏற்பட்ட போது, அவர் வேலை பார்த்து வந்த குத்தகைக் காரர், அணைக்கட்டின் தேக்கத்திலிருந்து தண்ணீரைப் பாசனத்துக்கு எடுத்துச் செல்ல இரு பெரிய கால்வாயகள் தோண்டிக்கொண்டிருந்தனர். அதில் ஒரு கால்வாய் குத்தகையை சீனிவாசன் வேலை பார்க்கும் குத்தகைக்கார எஞ்சினீயர் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் புர்லா விலிருந்து இருபது முப்பது மைல் தூரத்திலிருந்த ஒரு கிராமத்தில், சிப்ளிமாவோ அல்லது பர்கரோ தெரியவில்லை, அந்த கிராமத்தில் இருந்து வந்தார். அவ்வப்போது புர்லாவில் இருந்த தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டியிருந்த சமயங்களில் தான் அவர் எனக்கு பரிச்சய மானார். இந்த பரிச்சயத்தால், அவர் புர்லா வருங்காலங்களில் என்னோடு தங்குவது என்ற பழக்கம் ஏற்பட்டது. மிகவும் சுவாரஸ்யமான மனிதராகவும் வித்தியாசமான சிந்தனைகளும் கொண்டவராகவும் என் அறை நண்பர்கள் அவரைக் காணவே, அவர் வரவும் எங்களால் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப் பட்டது. பின்னர் அவர் வேலை பார்த்த குத்தகைக்காரர் புர்லாவிலேயே தன் அலுவலகத்தை மாற்றிக்கொள்ளவே, அவர் நிரந்தரமாக எங்களுடனேயே தங்கத் தொடங்கினார்

•Last Updated on ••Sunday•, 19 •August• 2012 21:07•• •Read more...•
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (35 & 36)

•E-mail• •Print• •PDF•

(35) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

வெங்கட் சாமிநாதன்இப்போதும் நினைவிலிருந்து இன்னும் இரண்டு படங்களைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். இம்மாதிரி படங்கள் தயாரிக்கவேண்டும், தம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையை, மனிதர்களைப் பற்றிச் சொல்லவேண்டும், அதுவும் சினிமாவாக உருப் பெறவேண்டும் என்ற நினைப்பு தமிழில் இது வரை எவருக்கும் வராத காரணத்தால், நம்மிலிருந்து அதிகம் வேறுபடாத, அதாவது வாழ்க்கை அம்சங்களில், சினிமா உலக வசதிகளில் அதிகம் வேறுபடாத என்று அர்த்தப் படுத்திக்கொள்கிறேன், அப்படி வேறுபடாத, நாமும் நம் வாழ்க்கை போலத்தான் இவர்களதும், நம்மைப் போன்றவர்கள் தான் இவர்களும் என்று நாம் இனம் காணக்கூடிய கன்னட, மலையாள படங்களிலிருந்தே உதாரணம் எடுத்துக்கொள்கிறேன். நான் ஏதும் இத்தாலிக்கும் ஜெர்மனிக்கும் போகவில்லை. நமக்குள்ள சுதந்திரம் தரப்படாத, மதக் கெடுபிடிகளும், அரசியல் கெடுபிடிகளும் நிறைந்த, அரசு ஏற்றுக்கொள்ளாத (அப்படி ஏற்றுக்கொள்ளாத அம்சங்கள் படத்தில் என்ன என்பதும் எனக்குத் தெரியவில்லை) படங்களைத் தயாரித்ததற்காக சிறைவாசம் செய்யும் இயக்குனர்களைக் கொண்ட இரான் நாட்டிலிருந்தும் கூட நான் உதாரணங்களைத் தேடவில்லை. நமக்கு நயனதாராவையும் அசீனையும்  பிரித்வி ராஜையும், இன்னும் பல டஜன் கனவுக் கன்னிகளையும் நக்ஷத்திர நாயகர்களையும் தந்த மலையாளத்திலிருந்தும், நம் உலகத் தமிழினத் தலைவரும் புராணப் படங்களில் மூழ்கித் தோய்ந்திருந்த தமிழ் சினிமாவை மீட்டெடுத்து பகுத்தறிவுப் பாதைக்கு இழுத்து வந்து விமோசனம் அளித்த கலைஞர் அவர்கள் கன்னடத்துப் பைங்கிளி என்று அழைத்து மகிழ்ந்திடும் சரோஜா தேவி, கனவுக்கன்னி ரம்யா, இப்படி நாயகிகளும், பிரகாஷ் ராஜ், ஆக்‌ஷன் கிங், அர்ஜுன், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், நூற்றுக் கணக்கீல் உள்ள இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு நம் தமிழ் சினிமா என்னவெல்லாம் சாத்தித்துள்ளது, அதே மலையாளமும் கன்னடமும் வளர்க்கும் சினிமா கலாசாரம், நமக்குத் தெரியாத, அல்லது நமக்கு வேண்டாத, தெரிந்து கொள்ள விருப்பமுமில்லாத அந்த கலாச்சார உலகத்திலிருந்து சில உதாரணங்களைத் தரலாம் என்று எனக்கு எண்ணம்.

•Last Updated on ••Monday•, 13 •August• 2012 21:09•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில்... (96 & 97)

•E-mail• •Print• •PDF•

நினைவுகளின் சுவட்டில் ... (96)

வெங்கட் சாமிநாதன்எனக்கு இப்போது நினைத்துப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து….” என்று எதற்கெடுத்தாலும் கோஷமிட்டு தன் தாய் நாட்டுப் பற்றையும் தமிழ் பற்றையும், தம் பெருமையையும் இரைச்சலிட்டுச் சொல்லும் அந்த கோஷத்திலேயே எல்லாம் முடிந்து விட்டதாக நினைக்கும் ஒரு இயக்கம் முளை விட்டு இன்று ஒரு பலத்த சக்தியாக விளங்கும் நிலையில் தமிழும் தமிழ் நாடும் எந்த நிலையில் இருக்கிறது எனபது நமக்குத் தெரியும். ஒரு கலாசார வறுமை. சிந்தனை வறுமை. இதை நான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே சொல்லி வருகிறேன். ஆனால் இன்றும் கூட அந்த கோஷங்களைக் கற்காத ஒடிஷாவில் பழ்ம் குடிகள் வசிக்கும் பிராந்தியத்தில் ஒரு முகாமில், பல பிராந்தியக் காரர்களும், பல மொழி பேசுபவர்களும் ஒரு சில வருட பிழைப்பிற்காகக் குழுமியுள்ள அந்த முகாமில், கலை என்றும், இலக்கியம் என்றும் சிந்தனை உலகம் என்றும் என்ன சாத்தியம்? ஆனால் ஆச்சரியப் படும் வகையில் கலை, இலக்கியம், சினிமா பற்றியெல்லாம் எனது ஆரம்பப் பாடங்களைக் கற்றதும், அவற்றில் அன்றைய சிகரங்களை அறிமுகப்படுத்திக்கொண்டது, பின் என் வாழ்க்கை முழுதுமான தேடலின் பாதையை நிர்ணயித்ததும் அந்த முகாமில் கழித்த ஆறு வருடங்களில் தான்.

•Last Updated on ••Sunday•, 12 •August• 2012 04:02•• •Read more...•
 

(95) – நினைவுகளின் சுவட்டில்

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்ஹிராகுட் போனதுமே எனக்கு உதவியாக இருந்தவர் செல்லஸ்வாமி என்று சொல்லியிருக்கிறேன். எங்கோ தமிழ் நாட்டு மூலையில் இருக்கும்  கிராமத்திலிருந்து இங்கு வேலை பார்க்க வந்திருக்கும் 16 வயதுச் சிறுவனுக்கு வயதில் konjam மூத்த நண்பனாக சொல்லாமலேயே வழிகாட்டியாக இருந்தவர்களில் செல்லஸ்வாமி முக்கியமானவர். வயதில் நாற்பதைத் தாண்டிய எஸ். என். ராஜாவுக்கு அடுத்த படியாக என்று சொல்ல வேண்டும். அவர் இருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருக்கும் ஜனார்த்தனன் என்பவரின் வீட்டில் இருந்த அவருடைய விதவைத் தாய்க்கும் சின்ன குட்டித் தங்கைக்கும் நான் பிரியமானது போல, அங்கு வந்த அமுத சுரபி பத்திரிகை மூலம் க.நா.சுப்பிரமணியத்தின் ஒரு நாள் தெரிய வந்தது போல, செல்லஸ்வாமி வீட்டில் நான் முதன் முதலாகப் படித்த ஆங்கிலப் புத்தகம் Andre Maurois என்னும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளரின் சுயசரிதமாகிய   Call No Man Happy என்னும் புத்தகம் அதில் என்ன படித்தேன் என்பது இப்போது அனேகமாக  மறந்துவிட்டது. என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அது தான் புத்தகமாக ஒரு தொடக்கம். எனக்கு இப்போது வெகு மங்கலாக நினைவில் இருப்பதெல்லாம் அவரது இளம் வயது காதல்களைப் பற்றியும் ஷெல்லி, பைரன் போன்ற ஆங்கில கவிஞர்கள் மீது அவருக்கு இருந்து பிடிப்பு பற்றியும், அவர் பின்னர் French Academy யால் கௌரவிக்கப்பட்டது பற்றியும் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். இது ஒன்றும் எனது தேர்வு இல்லை. செல்லஸ்வாமி வீட்டில் இருந்தது, எளிதாகக் கிடைத்த முதல் புத்தகம். படித்தேன்.  

•Last Updated on ••Tuesday•, 31 •July• 2012 23:22•• •Read more...•
 

(94) – நினைவுகளின் சுவட்டில்

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்அந்தக் காலத்தில் ஹிராகுட்/புர்லா முகாம்களில் என்ன தமிழ் தினசரி பத்திரிகை வந்தது, எது எனக்குப் படிக்கக் கிடைத்தது என்று நினைவில்லை. அங்கு யாரும், என்னையும் சேர்த்து, தமிழ் தினசரி பத்திரிகை எதுவும் வாங்கியதாக நினைவில்லை. ஆயினும் நான் ஒரு தமிழ் தினசரி பத்திரிகையின் மதிப்புரை பக்கத்தில் தான் இரண்டு புத்தகங்களின் மதிப்புரைகளைப் படித்துப் பார்த்த பின் தான்  அவற்றை வரவழைத்தேன்.என்ற நினைவு என்னவோ மறையவில்லை. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள். ஒன்று ரகுநாதன் கதைகள். மற்றது, கு. அழகிரிசாமி கதைகள். ரகுநாதன் எனக்கு பள்ளி நாட்களில் எனது நண்பன் ஆர். ஷண்முகம் கொடுத்த ஓர் இரவு என்ற தடை செய்யப்பட்ட புத்தகம் மூலமும் பின் இங்கு புர்லா வந்த பிறகு ரகுநாதன் ஆசிரியத்வத்தில் வெளிவந்த சாந்தி பத்திரிகை மூலமும். முன்னரே பரிச்சயம் ஆன பெயர் தான். சாந்தி பத்திரிகை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது பற்றி முன்னரே சொல்லியிருப்பேன் கட்டாயம். இந்த இரண்டு புத்தகங்களும் வந்தன. மூன்று  ருபாய் விலை ஒவ்வொன்றும். மிக அழகான அச்சில், பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள். சக்தி காரியாலயம் வெளியிட்டவை. இருவரையும் பாராட்டி கொண்டாடும் நோக்கத்துடன் வெளியானவை மாதிரி இருந்தன இரண்டு புத்தகங்களின் வெளியீடும். மிக அழகாக அச்சிடப்பட்டிருந்தன இரண்டுமே அது போல அச்சிடப்பட்ட தமிழ்ப் புத்தகங்களை நான் பார்த்ததில்லை.

•Last Updated on ••Thursday•, 26 •July• 2012 03:48•• •Read more...•
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆருடம் (33 & 34)

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் 33

வெங்கட் சாமிநாதன்கடைசியில் கடம்மாவைக் கூட்டிவர அவள் வேலை செய்யவிருக்கும் ஷேக் வீட்டிலிருந்து ஷேக்கின் அப்பனும் அந்த வீட்டு ட்ரைவரும் வந்து அழைத்துச் செல்கிறார்கள். போகும் வழியில் சேக்கின் அப்பனான கிழவன் அஸ்வினியைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே வருகிறான். அவ்வப்போது தன் கைத்தடியால் டிரைவரைக் குத்திக்கொண்டே வருகிறான். ட்ரைவர் உஸ்மானும்  மலையாளிதான் முஸ்லீம். முஸ்லீமேயானாலும் அவன் அங்கு வயிறு பிழைக்க வந்தவன். வேலைக்காரன் தான். அயல் நாட்டு வேலைக்காரன். ஆனால் ஷேக் ஒரு சௌதி. கொள்ளை பணக்காரன். பெட்ரோல் தரும் பணம். அதில்லாத ஒரு காலத்தில் சௌதிகள பழங்குடி இன  மக்களைப் போல வாழ்ந்தவர்கள். அந்த பழங்குடி இனத்தின் வாழ்க்கைக் கூறுகள் இன்னமும் தொடர்ந்து வரும் விந்தையான நாகரீகம் அவர்களது எந்தத் தண்டனையும் சாட்டையடிகள் இத்தனை என்று தான் ஆரம்பிக்கும்.  கொள்ளையாகக் குவியும். பணம் இன்னும் கொடூரத்தை அதிகரிக்கவே செய்யும். டிரைவர் மலையாளத்தில் தன் கிழட்டு முதலாளியைப் பற்றிக் கேவலமாகவும் கேலியாகவும் காரில் வரும் போது அவ்வப்போது அஸ்வினிக்குச் சொல்லிக்கொண்டு வருவான். அவர்களது மாளிகை வந்ததும் இளைய ஷேக் அஸ்வினி உள்ளே நுழையும் முன் அவளிடமிருந்து பாஸ் போர்டை வாங்கி வைத்துக்கொள்வான். இனி அவன் அனுமதி இன்றி அவள் வீட்டுக்கு வெளியே காலெடுத்து வைக்க முடியாது. அவனுக்குத் தெரியாமல் ஓடிவிடமுடியாது. இனி அவள் அந்த வீட்டுக்கு  வந்து சேர்ந்துள்ள ஒரு அடிமை தான்.

•Last Updated on ••Wednesday•, 25 •July• 2012 16:56•• •Read more...•
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (32)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -இங்கு நான் எழுதிவருவதையும் தொடர்ந்து  அதற்கு வரும் எதிர்வினைகளையும் பார்த்து வருபவர்க்கு இதற்கெல்லாம் அப்பால் வெளி உலகில் இந்த சினிமாக்களையும் அதன் ரசிகர் களையும் இவை பத்திரிகைகளில் பெறும் எதிர்வினைகளையும் பார்ப்பவர்களுக்கு  ஒரு சில விஷயங்கள் தெளிவாகலாம். ஏற்றுக்கொள்கிறார்களோ என்னவோ. எனக்குள் ஏற்கனவே தெளிவானது இங்கு வலியுறுத்தப் படுகிறது என்றே தோன்றுகிறது. வணிகச் சூழல் அவ்வப்போது ஒரு ரசனையை மக்களிடையே திணித்து லாபம் பெறுகிறது. அதை மக்கள் தாமறியாதே தம்முள் திணிக்கப்பட்ட ரசனையை தமது ரசனையாகவே தாம் வளர்த்துக்கொண்ட ரசனையாகவே நினைத்து மாய்ந்து போகிறார்கள். திணிக்கப்பட்டதை தாமாகவே உணர்ந்து ஏற்கவோ மறுக்கவோ செய்வதில்லை.

•Last Updated on ••Saturday•, 14 •July• 2012 19:43•• •Read more...•
 

அறுபது வருடங்களுக்கு முந்திய ஒரு கணம்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -நான் 1950 களின் ஆரம்ப வருடங்களின் நிகழ்வுகளைப் பற்றி எழுதுகிறேன். மார்ச் 19-ம் தேதி ஹிராகுட் அணைக்கட்டின் நிர்வாக அலுவலகத்தில் ஆரம்பித்தது என் வெளி உலகத் தொடர்பு. ஒரிஸ்ஸாவின் சம்பல்பூர் ஜில்லாவின் ஹிராகுட்டில். அது ஒரு கிராமமாக இருந்திருக்க வேண்டும். மகாநதி என்னும் மிக பிரம்மாண்ட அகலமும் பனைமரங்களையே முழ்கடித்து விடும் ஆழமும் கொண்ட நதி அது. உண்மையிலேயே மகா நதி தான். அதன் குறுக்கே தான் அணை கட்டும் திட்டம். முதல் சில மாதங்களுக்குப் பிறகு ஹிராகுட்டில் சில தாற்காலிக ஷெட்களில் இருந்த அலுவலகம் ஆற்றின் மறுகரையில் இருந்த புர்லாவில் கட்டப்பட்டு முடிந்த நிரந்தர கட்டிடத்துக்கு  மாறியது. அத்தோடு வசிக்க எங்களுக்கு புதிய வீடுகளும் கிடைத்தன. எனக்கு ஒரு வீடு கிடைத்தது. நான் தனி ஆள். அந்த வீடு ஒரு குடும்பம் இரண்டு குழந்தைகளுடன் ஒரு தம்பதியர் இருக்க வசதியான வீடு. வாடகை ரூபாய் ஐந்து. வேறு எந்த செலவும், மின்சாரத்துக்கு, தண்ணீருக்கு என்று ஏதும் கிடையாது. எல்லாம் இலவசம். இது அப்போதே தொடங்கியாயிற்று. தமிழ் நாட்டுக்கு வரத்தான் தாமதம்.

•Last Updated on ••Saturday•, 14 •July• 2012 14:19•• •Read more...•
 

அன்னியமாகிவரும் ஒரு உன்னதம் – பழகி வரும் ஒரு சீரழிவு

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -நா. விச்வநாதனை எத்தனை பேர் அறிவார்களோ, படித்திருப்பார்களோ, படித்து ரசித்திருப்பார்களோ தெரியாது. இன்றைய எழுத்து வானில் ஒளிரும் தாரகைகளில் அவர் இல்லை. நிச்சயம்.  அவர் எழுத்தும், அவர் நம் முன் நிறுத்தும் உலகமும் அவ்வுலக மனிதரும் வாழ்க்கையும் இன்று ஃபாஷனபிளாகக் கருதப்படுபவை அல்ல. இதுவும் நிச்சயம். இவை கூகிள் தந்தவையோ, கட்சிக்கொள்கைகள் தந்தவையோ அல்ல. லத்தீன் அமெரிக்க தந்ததும் அல்ல. தஞ்சை கிராமம் தந்தவை.   அவர் அதிகம் எழுதுபவரும் அல்ல. இதையும் சேர்த்து மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள். பத்து வருடங்களுக்கு முன் அவர் கவிதைத் தொகுப்பின் தட்டச்சுப் பிரதி அச்சுக்குப் போகும் முன் எனக்குத் தரப்பட்டது. அதன் கவித்துவமும், அலட்டலற்ற இயல்பும் எனக்குப் பிடித்துப் போயின. அதற்கு முன்னுரை ஒன்று எழுதிக் கொடுத்தேன். அத் தொகுப்பு பிரசுரமாயிற்றா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அவர் போலவே அவர் எழுத்தும் கவிதையும். அது பாட்டிலே அது இருக்கும். அவரைத் தேடித்தான், ”நல்லா இருக்கீங்களா?” என்று நாம் போய்க் கேட்கவேண்டும். இல்லையெனில் அவர் இருக்குமிடம் தெரியாது. ஆனால் அதிசயமாக, இன்று, நிகழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் புத்தாண்டு விழாவில் பரிசு பெறும் 27 தமிழ்ப் புத்தகங்களில் நா.விசுவநாதனின் நிரம்பித் ததும்பும் மௌனம் என்னும் இப்போது பேசிக்கொண்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பும் ஒன்று. அவரும் அவர் எழுத்தும் எப்படி பரிசுக்கும் பாராட்டுக்கும் உரியதாயின என்று எனக்குத் தெரியாது. இன்றைய இலக்கிய சூழலில் ஓர் அரசு பரிசு பெற தேர்வு பெறக் கூடும் மனிதர் அவரல்ல. எழுத்து அவரதல்ல. இருப்பினும் நடப்பு உண்மை நம் எதிரில் செய்தியாகியுள்ளது.

•Last Updated on ••Saturday•, 30 •June• 2012 20:20•• •Read more...•
 

உமர் கய்யாமின் ருபாய்யத்

•E-mail• •Print• •PDF•

ருபாய்யத் பற்றி எனக்கு முதலில் தெரிய வந்தது  ஃபிட்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பில். அடுத்து தேசிக விநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் 1950- களின் ஆரம்ப வருடங்களில் எப்போதோ. அப்போதே உடன் பின் தொடர்ந்தது ச.து.சு. யோகியின் மொழிபெயர்ப்பும். எனக்கு நினைவில் இருப்பது என்னவோ தேவியின் ஒரு பாடலின்  வரிகள் மாத்திரமே. “வெயிலுக்கேற்ற நிழலுண்டு, கம்பன் கவியுண்டு” என்று நீளும் அது. பாரசீக வாசனையற்ற தமிழ்க் கவிதையாக. ஆனாலும் மிக இனிமையான கவிதைகள் அவை. தேவியின் ஆளுமையே அவர் கவிதையிலும், இனிமை, மென்மை, சாந்தம். வி. ஆர். எம் செட்டியார் என்ற பெயர் கூட எனக்கு ருபாய்யத் மொழிபெயர்ப்பு என்று பேசும்போது நினைவுக்கு வருகிறது. இந்த நினைப்பு பிரமையாகக் கூட இருக்கலாம். ஏனெனில், வி.ஆர். எம். செட்டியார் என்ற ஒரு கவிஞர் இருந்தார் என்ற பிரஸ்தாபம் கூட இப்போது இல்லை. - வெங்கட் சாமிநாதன் -ருபாய்யத் பற்றி எனக்கு முதலில் தெரிய வந்தது  ஃபிட்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பில். அடுத்து தேசிக விநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் 1950- களின் ஆரம்ப வருடங்களில் எப்போதோ. அப்போதே உடன் பின் தொடர்ந்தது ச.து.சு. யோகியின் மொழிபெயர்ப்பும். எனக்கு நினைவில் இருப்பது என்னவோ தேவியின் ஒரு பாடலின்  வரிகள் மாத்திரமே. “வெயிலுக்கேற்ற நிழலுண்டு, கம்பன் கவியுண்டு” என்று நீளும் அது. பாரசீக வாசனையற்ற தமிழ்க் கவிதையாக. ஆனாலும் மிக இனிமையான கவிதைகள் அவை. தேவியின் ஆளுமையே அவர் கவிதையிலும், இனிமை, மென்மை, சாந்தம். வி. ஆர். எம் செட்டியார் என்ற பெயர் கூட எனக்கு ருபாய்யத் மொழிபெயர்ப்பு என்று பேசும்போது நினைவுக்கு வருகிறது. இந்த நினைப்பு பிரமையாகக் கூட இருக்கலாம். ஏனெனில், வி.ஆர். எம். செட்டியார் என்ற ஒரு கவிஞர் இருந்தார் என்ற பிரஸ்தாபம் கூட இப்போது இல்லை. இப்போது க்ரியா ராமகிருஷ்ணன் முனைப்பில் இன்னொரு மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. முன் வந்துள்ள மொழிபெயர்ப்புகளெல்லாம் ஃபிட்ஜெரால்டின் ஆங்கில மொழி பெயர்ப்பின் வழி வந்தவை. அதில் ஒன்றும் தவறு சொல்வதற்கில்லை. மிகப் பிரபலமாகத் தெரியவந்த நமக்குத் தெரிய வந்த ஒரே மொழிபெயர்ப்பு அது. ஆனால் கிடைக்கும் நிறைய ஆங்கில மொழிபெயர்ப்புகளில் பீட்டர் அவெரி –ஜான் ஹென்ரி ஸ்டப்ஸின் மொழிபெயர்ப்பை ஆதாரமாகக் கொண்டது ஆசை, தங்க ஜெயராமனின் துணையோடு மொழி பெயர்த்துள்ளது இது. இன்னொரு முக்கியமான விஷயம் நமக்கு ஃபிட்ஜெரால்டு மூலமும் இன்னும் பல தமிழ் மொழிபெயர்ப்புகள் மூலமும் கிடைத்த ருபாய்யத் பாடல்கள் முழுமையானவை அல்ல. அவெரி-ஸ்டப்ஸின் மொழிபெயர்ப்பில் இருக்கும் 235 பாடல்களில் இப்போது 215 ஆசையின் மொழிபெயர்ப்பில் கிடைத்துள்ளன. ஃபிட்ஜெரால்ட் நமக்குத் தந்ததை விட இரண்டு மடங்குக்கும் மேல். ஆனால் ஐம்பதுகளில் இது படிக்கக் கிடைத்த போது பெரும் மயக்கத்தைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும். தேவி அதை மிக நன்றாகவே தமிழ்ப் பாடல்களாக்கி யிருந்தார். எட்வின் அர்னால்டின் லைட் ஆஃப் ஏஷியா வையும் தான். ஆசிய ஜோதி என்று.

•Last Updated on ••Friday•, 22 •June• 2012 23:37•• •Read more...•
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (30 & 31)

•E-mail• •Print• •PDF•

(30) மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

- வெங்கட் சாமிநாதன் -இன்று இங்கு (பெங்களூருவில்) பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்துள்ளது. எனக்குப் பிடித்த ஒரு நடிகர் ஓம் பூரி பெங்களூருவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் International Film Festival – ல் பேசியிருக்கிறார்.  Art film – ம்  commercial film - ம் ஓரிடத்தில் சந்திக்க வேண்டும் என்று. ஷ்யாம் பெனிகல், கோவிந்த் நிஹலானி போன்றாரால் சினிமா உலகத்துக்கு அறிமுகப் படுத்தப்பட்டவர். சினிமாவுக்கு வரும் முன் National School of Drama, Delhi யில் பயின்றவர். நாஸருதீன் ஷா போன்று நாடகம் பயின்றவர் சினிமாவுக்கு வந்ததும் தன்னை மிக வியந்து பாராட்டும் வகையில் ஆச்சரியப்படும் வகையில் சினிமாவுக்கு ஏற்ற வகையில் தன் நடிப்பை மாற்றிக்கொண்டவர். இன்று ஹிந்தி சினிமா உலகில் மிகச்சிறந்த நடிகர் என்று நாம் அங்கீகரித்தகுந்த மிகச் சிலரில் ஒருவர் இந்த ஓம் பூரி.

•Last Updated on ••Saturday•, 16 •June• 2012 00:04•• •Read more...•
 

(93) - நினைவுகளின் சுவட்டில்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -இன்னொரு நண்பரைப் பர்றிச் சொல்லவேண்டும் என்று இருந்தேன். அவர் பெயர் நினைவுக்கு வருவதாயில்லை. இப்போது தான் என்ன மாயமோ திடீரென்று  மின்னல் அடிப்பது போல் நினைவில் பளிச்சிட்டது. அவர் பெயர் சிவ கோபால கிருஷ்ணன்.  “வாரும். உங்களுக்கு வீடு கிடைக்கிற வரையில் நம்மோடு தங்கலாம்,” என்று அழைத்து வரப்பட்டவர். இங்கே எங்கோ வேலை செய்யறது கிடக்கட்டும். உங்களுக்கு எதிலே இண்டெரெஸ்ட் என்று எங்களில் ஒருவர் கேட்க “பாட்டு” என்றார். அவர். “அடி சக்கை, எங்களுக்கு யாருக்குமே பாடத் தெரியாது. ஒரு குறை தீர்ந்ததுன்னு வச்சுக்குவோம். என்ன பாட்டு? சினிமாவா, இல்லே பாட்டு கத்துட்டிருக்கிங்களா? என்று கேட்க,, சிவ கோபால கிருஷ்ணன், மிகவும் வெட்கப்பட்டு பவ்யமா, “ பாட்டு எழுதுவேன்.” என்று சொல்லி சில பத்திரிகைகளை தன் பெட்டியிலிருந்து எடுத்து தான் எழுதியது வெளியாகிருக்கும் பக்கத்தைப் பிரித்துக் காண்பித்தார். பாட்டுக்கள் அல்ல. கவிதைகள். .பிறகு தான் புரிந்தது அவர் பாட்டு என்று எதைச் சொன்னார் என்று.. அந்தக் காலத்திலே பாட்டுன்னுதானே சொல்றது வழக்கம்?. சங்கப் பாடல்கள் தானே. சங்கக் கவிதைன்னா சொல்றோம்?. சரி. அதுவும் குறை தீர்க்கிற சமாசாரம் தான். இங்கே யார் கவிதை எழுதறா?.

•Last Updated on ••Monday•, 11 •June• 2012 03:52•• •Read more...•
 

(29) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -சமீபத்திய இரு தமிழ்ப் படங்களைப் பற்றி எழுதுவதாகச் சொன்னேன். அந்த இரண்டையும் பார்த்து வெகு நாட்களாகி விட்டன. ஆகவே சிறு சிறு தகவல்களுக்கு விரிவாகச் செல்ல முடியாது. அவசியமும் இல்லை. இங்கு எந்தப் படத்தைப் பற்றியும் கதா பாத்திரங்கள் ஒவ்வொருவராக, அல்லது காட்சிகள் எது பற்றியும் விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது மனதில் தோன்றியதையும் இப்போது அந்த இரு படங்கள பற்றி மனதில் படிந்துள்ள எண்ணங்கள் பற்றியும் சொன்னாலே போதும். அவற்றைச் சொல்லி நகர்வது தான் என் உத்தேசமும். யாரையும் என் தரப்புக்கு மனமாற்றம் செய்யும் நோக்கமில்லை. எது பற்றியும் அவரவர் தம் எண்ணங்களைச் சொல்லி சர்ச்சித்து ஒருவர் மற்றவர் எண்ணவோட்டங்களைப் புரிந்து கொள்வது என்பது இன்றைய தமிழ்ச் சூழலில், சினிமா பற்றியும் அரசியல் பற்றியும் சாத்தியமில்லை. அம்மாதிரியான ஒரு கலாசாரத்தை, சூழலை நாம் வளர்த்துக்கொள்ளவில்லை. தனக்குப் பிடிக்காத அல்ல்து  தாம் வணங்கித் தொழும், போற்றித் தோத்திரம் பாடும் நக்ஷத்திரங்களையோ, அரசியல் தலைமைகளைப் பற்றியோ ஒரு மாறிய அபிப்ராயத்தைச் சொல்லி விட்டாலே, உடனே ஜாதிக்குண்டாந்தடியை எடுத்து வீசும் மூர்க்கத்தனம் இங்கு பரவலாக வளர்ந்து முற்றிக் கிடக்கிறாது. தனக்குப் பிடிக்காதது எதுவும் பேசப்படக் கூடாது என்ற மூர்க்கத் தனம் இங்கு ஆட்சி செலுத்துகிறது. அவர்களுக்கு ஆண்டவன் அறிவையும் உணர்வுகளையும் எதற்குக் கொடுத்துள்ளான்? சரி ஆண்டவன் கொடுக்கவில்லை, தந்தை பெரியார் சொல்லிவிட்டார். இந்த சமாசாரங்கள் இவர்கள் மண்டையிலும் இதயத்திலும் எதற்கு இருக்கிறது?, இவர்கள் யாராலோ பிடித்து வைக்கப்பட்ட களிமண் பொம்மைகளாக, சூளையில் சுட்டு இறுகிவிட்டவையாக இருந்தால் அவற்றை நாம் என்ன செய்ய முடியும்?

•Last Updated on ••Monday•, 04 •June• 2012 00:37•• •Read more...•
 

(92) – நினைவுகளின் சுவட்டில்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -ராஜ்காங்பூர், கல்கத்தா சுற்றிவந்த புராணத்தை இவ்வளவு தூரம் நீட்டி முழக்கி சொன்னதில் ஒரு விஷயம் தவறி விட்டது. அது எங்களுடன் இருந்த ஜியார்ஜின் பிரசன்னத்தை. மறந்து தான் போனேன். எங்களுடன் அவரது பிரசன்னத்தை நான் மறந்த போதிலும் அவரது பிரசன்னத்தை மாத்திரம் கவனித்தவர்கள் உண்டு. நாங்களும் அவருடன் இருப்பது அந்த ஜீவன்களுக்கு எப்படி தெரியாமல் போகிறது?, ஜியார்ஜி மாத்திரமே அவர்களுக்கு தெரிவது எப்படி? என்பது எனக்கும் சரி மற்ற நண்பர்களுக்கும் புரிந்ததில்லை.  அது மாலை நேரம். ஜெர்ஸகுடா ஜங்ஷனிலிருந்து சம்பல்பூருக்கு ஒரு ஷட்டில் போய்வரும் என்று சொல்லியிருக்கிறேன். அந்த ஷட்டில் சம்பல்பூர் ரோட் என்ற ஸ்டேஷன் வந்ததும் இறங்கிவிட வேண்டும். ஸ்டேஷன் வாசலில் கொஞ்ச தூரம் நடந்தால் ஹிராகுட்டுக்கோ, புர்லாவுக்கோ போகும் பஸ் காத்திருக்கும். அது மாலை நேரம் என்பது எனக்கு மிக நன்றாக நினைவில் இருக்கிறது. மாலை நேரம் என்றால் கலுங்கா ராஜ்காங்க்பூர் போய்த் திரும்பிவரும் சமயத்தில் தானாக இருக்கும். கல்கத்தாவிலிருந்து திரும்பிய சமயம் என்றால் அது காலை நேரமாக இருக்கும். ஆக இந்த ஜியார்ஜ் ஹீரோவாக வாழ்ந்த சம்பவத்தை ராஜ்காங்பூர் போய்வந்த கதையின் முடிவில் சொல்லியிருக்க வேண்டும். மறந்து விட்டேன். நினைவு வந்ததும் இப்போதாவது சொல்கிறேனே.

•Last Updated on ••Sunday•, 03 •June• 2012 18:17•• •Read more...•
 

திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -நூறாண்டு விழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் இன்றைய திராவிட இயக்க கட்சிகளில் ஒன்றின் தலைவர். இககட்சிகளில் பிரதானமானதும், திராவிட என்ற பெயருக்கு உரிமை கோரும்  கட்சிகளில்  மூத்ததுக்கு , முக்கிய  வாரிசாக தன்னைக் காண்பவரும், தமிழ் நாடும் அவ்வாறே அங்கீகரிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவரும் அவர் தான். இப்படியெல்லாம் சொல்வதற்குக் காரணம் அவரது சிந்தனைகளோ செயல்களோ இவற்றோடு உறவு கொள்ளாதவை. சொல்லப் போனால், திராவிட என்னும் அடை மொழிதான் தொடர்ந்து வருகின்றதே அல்லாது, தொடக்கம் முதலே இதன் வரலாற்றில் இந்த அடைமொழி களுக்கெல்லாம் ஏதும் அர்த்தம் இருந்ததில்லை. இவை எதுவும் தமிழ் நாட்டைப் பற்றியோ தமிழ் மக்களைப் பற்றியோ சிந்தித்தவை இல்லை. ஆரம்பத்திலிருந்தே இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் நோக்கங்கள் ஒன்றாகவும் ஆனால் முன் வைத்த கொள்கைகளும் கோஷங்களும் பிறிதாகவுமே இருந்து வந்துள்ளன

•Last Updated on ••Thursday•, 03 •May• 2012 03:29•• •Read more...•
 

(28) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -நம்மவர்களுக்கு அவர்கள் இஷ்டத்துக்கு தரமும், பண்புமற்ற வியாபாரிகளின் சந்தைப் பொருட்கள் காலம் காலமாக பழக்கி விட்ட ரசனையை யாரும் கேள்வி எழுப்பாமல் இருந்தால் சுகமே இருப்பார்கள். அந்த கனவு சுகத்தைக் கலைத்து விட்டால் அவர்களிடமிருந்து தங்கள் ரசனை சார்பான வாதங்களோ பதில்களோ வருவதில்லை. சீற்றம் தான் கனல் அடிக்கிறது. அன்பர் பிரபாகர் என்னை மன்னிக்கவேண்டும்.  நான் மேற்சொன்ன இந்த தரமற்ற ரசனைக்குப் பழக்கப்பட்ட கூட்டத்தில் அவர் தனித்தவரல்லர். எத்தனியோ கோடிகளில் அவர் ஒருவர்.. அவர்களால் தான் தமிழ் சினிமா தொடர்ந்து ஜீவிக்கிறது, இன்னும் கீழ் நோக்கிய பயணத்தில். நான் மாதிரிக்காக ஒருவர் பெயரை, நான் எழுதியதுக்கு பதில் தராது தான் சொன்னதையே சொல்லும் எதிர்வினையைத் தான் குறித்துச் சொன்னேன். அதைச் சுட்டிய பிறகும் அவர் நான் கேட்ட கேள்விக்கு, சுட்டிய அவர் சொன்னதைச் சொல்லும் குணத்திற்கு பதில் சொல்லவில்லை.  ஆடுகளம் படத்தை குறைந்த சமரசங்கள் கொண்ட, மறு[படியும் சொல்கிறேன், குறைந்த சமரசங்கள் கொண்ட, அதிக அளவு யதார்த்த முயற்சி என்றேன். காரணங்களையும், காட்சிகளையும் குறிப்பிட்டேன் உதாரணத்திற்கு. ஆனால் இதை அன்பர் தனது காரணங்களைச் சொல்லி மறுத்திருக்க வேண்டும். இல்லை. மாறாக, இதைப் போய் யதார்த்தம் என்றும், தனுஷைப் போய் பெருமைப் படுத்துவதற்கு என்ன காரணம் என்றும் கேட்கிறார்.

•Last Updated on ••Tuesday•, 01 •May• 2012 16:52•• •Read more...•
 

(91) – நினைவுகளின் சுவட்டில்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -நாங்கள் அடுத்து பயணம் சென்றது கல்கத்தாவுக்கு. பஞ்சாட்சரம், மணி, இருவரைத் தவிர எங்களில் வேறு யாரும் பெரிய நகரத்தைப் பார்த்திராதவர்கள். அந்த நாட்களில் அப்படித்தான். எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் தஞ்சாவூர், திருநெல்வேலி, மாயவரம் போன்ற டவுன்கள் தான். வாஸ்தவம். சென்னை என்ற பெரு நகரம்  ஹிராகுட்டுக்கும் எங்கள் அவரவரின் சொந்த கிராமம் அல்லது ஊருக்குமான இடையில் இருந்தது தான். அதைக் கடந்து தான் ஹிராகுட் வந்தோம். ஆனால் யார் சென்னையைக் கண்டது? எக்மோர் ஸ்டேஷன் தெரியும், செண்ட்ரல் ஸ்டேஷன் தெரியும். அதிகம் போனால்  மாம்பலத்திலோ தாம்பரத்திலோ பயணத்தின் இடையே ஒரு நாள் தங்கியிருந்திருப்போம். ஆனால் கல்கத்தா..? ஆக, கல்கத்தா போய் பார்த்துவிட வேண்டும். ரொம்ப பெரிய நகரம். டபுள் டெக்கர் பஸ் ஓடும் நகரம். . இன்னமும் ட்ராம் ஓடிக்கொண்டிருக்கும் நகரம். எல்லாவற்றுக்கும் மேல், மிருணால், ரஜக் தாஸ், செக்‌ஷன் ஆபீஸர் பாட்டாச்சார்யா, புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் இரண்டு பெண்கள், இருவரும் வங்காளிகள், மணமானவர்கள். அவர்களில் ஒருத்திக்கு மஞ்சு சென் குப்தாவுக்கு என்னிடம் மிகுந்த ஒட்டுதலும் மரியாதையும் (இதற்கு மிருணால் தான் காரணமாக இருக்க வேண்டும். அவன் அவளிடம் என்னைப் பற்றி ஏதோ நிறைய அளந்து வைத்திருக்க வேண்டும், ஒரு புகழ் மாலையே பாடியிருப்பான்) – இவர்களிடம் எல்லாம் நானும்  கல்கத்தா போய் வந்திருக்கிறேன். எனக்கும் கல்கத்தா தெரியுமாக்கும்  என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாமே. ஒருத்தனுக்கு கல்கத்தா தெரியாவிட்டால் அவன் பின் தங்கியவன் தான். இந்தியாவிலேயே பெரிய நகரம். இலக்கியத்தில், கலைகளில் இந்தியாவில் முன் நிற்கும் நகரமாயிற்றே.

•Last Updated on ••Tuesday•, 01 •May• 2012 16:48•• •Read more...•
 

இப்படியும் ஒருவர், ஓர் எழுத்து தமிழ் நாட்டில்

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -'இங்கே திரைக் கதைகள் பழுது நீக்கித் தரப்படும்' என்பது புத்தகத்தின் தலைப்பு. அதற்கு ஒரு உபதலைப்பும் உண்டு.  (ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்) என்று. இது ஏதோ அந்தக் காலத்தில் சின்ன கடைகளில் காணும் சைக்கிள் ரிப்பேர் ஷாப், பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் விளம்பர பலகைகள் மாதிரி இருந்தாலும்,  இது தமிழகம் முழுதும் பரவசத்தில் ஆழ்ந்திருக்கும் சினிமா பற்றியது.  தமிழ் சினிமாவை கலையென்றல்லவா ஏகோபித்த தமிழ் நாடே மொட்டையடித்து, மண்சோறு தின்று, பாலாபிஷேகம் செய்து முரசறைவித்துக் கூவும்?. ஏழாரைக் கோடிப் பேர் மதிமயங்கிக் கிடக்கும் ஒரு கலையைப் போய், ஏதோ ஈயம் பூசுகிற, சைக்கிள் ட்யூப் பங்க்சரை அடைக்கிற சமாசாரமாகக் கீழிறக்கலாமா? செய்திருக்கிறார் ஒரு தமிழர்.  பி.எம். மகாதேவன் என்பது அவர் பெயர்.  புத்தகத்தைப் படித்தால் அவர் ஒரு கலை நயம் படைத்த தமிழ்ப் படம் ஒன்றுக்கு இயக்குனர் ஆகும் தம் தகுதியையும் ஆசையையும் உலகுக்குச் சொல்வது போல இருக்கிறது. தவறில்லை. ஆனால் இது பலனளிக்குமா என்பது தெரியாது. இருந்தாலும் அவர் சொல்லும் விஷயங்கள் சொல்லப்பட வேண்டும்.   தமிழ்த் திரைத் துறையில் இருப்பவர்கள், உள்ளே நுழைய கதவு திறக்க வெளியே காத்திருப்பவர்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்.

•Last Updated on ••Tuesday•, 01 •May• 2012 17:00•• •Read more...•
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (26 & 27)

•E-mail• •Print• •PDF•

(26) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

- வெங்கட் சாமிநாதன் -பொய்யான கற்பனைகளிலும், மாயா ஜாலக் காட்சிகளிலும், மனம் குதூகலித்து, நம் மண்ணுக்கோ, அன்றாட வாழ்க்கைக்கோ, நம் அனுபவங்களுக்கோ உறவில்லாத, அர்த்தமற்ற குப்பைகளையே பார்த்துப் பழகிய காரணத்தால், இவையல்லாத எதையும் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. இது வரை எந்த தமிழ் சினிமா நம் வாழ்க்கையோடு ஒட்டி உறவாடி, நாம் அந்த வாழ்க்கையின் அவதியில் ஆழ்ந்திருக்கும்போது பார்த்திராத, பார்க்கத் தவறிய உண்மைகளைச் சொன்னது? வெகு அபூர்வமாக ஒன்றிரண்டு சொல்லலாம். வீடு என்று ஒரு படம். பிறகு? பூமணி எடுத்த ஒரு படம். தலைப்பு மறந்து விட்டது. கருவேலம் பூக்களா? நினைவில்லை. கிட்டத் தட்ட இம்மாதிரித் தான் ஒரு பெயர்.

•Last Updated on ••Friday•, 13 •April• 2012 22:52•• •Read more...•
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (24 & 25)

•E-mail• •Print• •PDF•

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (24)

- வெங்கட் சாமிநாதன் -பன்றியாக மாறி வாழ்ந்து அந்த வாழ்க்கையில் சுகம் காணும் இன்றைய பன்றி முன் ஜன்மத்தில் ரிஷியாக இருந்த  கதையைச் சொன்ன போது அதை மறுத்தவர் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. அல்லது மறுத்தவர்களின் வாதங்களையும் பெயர்களையும் அருண் தணிக்கை செய்துவிட்டாரோ?. அப்படி இராது என்று தான் நினைக்கிறேன். பன்றிக்கு பன்றியாக சுகமே வாழ்வதில் மறுப்பிராது .ஆனால் அதைப் பன்றி என்று நாம் அழைத்தால் அது கட்டாயம் அதன் வழியில் சீறும். ஏனெனில் அதற்கு தான் முன் ஜன்மத்தில் ரிஷியாக இருந்தது நினைவில் இருக்கக் கூடும். . சுகம் கண்டாயிற்று. இதுதான்  சுகம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாயிற்று. அது ஆழமாகப் பதிந்தும் போய்விட்டது. பில்ம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து, அவ்வப்போது உலகத் திரைப்பட விழாவுக்கெல்லாம் தவறாமல் போய் வந்தும், தமிழ்த் திரைப்படங்களை தராசில் எடை போட வரும்போது ஹாசினிக்கு தமிழ் சினிமாக் கலாசாரமும் அதில் தான் வாழ்வேண்டிய நிர்ப்பந்தங்களும் தான் அழுத்துகின்றன. அழுத்துகின்றன என்று சொல்வது கூட தவறு என்று நினைக்கிறேன்.

•Last Updated on ••Tuesday•, 10 •April• 2012 21:39•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் (89 & 90)

•E-mail• •Print• •PDF•

(89) -  நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -காலையில் எழுந்து பார்த்தால் கம்பும் கழியுமாக ரயில் நிலைய ப்ளாட்ஃபாரத்தில் இருந்த கூட்டம் இல்லை. ஆனால் ரயில் நிலையத்துக்கு வெளியே சுற்றிலும் அவர்களின் நடமாட்டம் இருந்தது. இரவில் பார்த்த பத்துப் பதினைந்து பேருக்கு மேலாக நிறையப் பேரின் நடமாட்டம் இருந்தது. இவர்கள எல்லாம் சுற்று வட்டார கிராமத்து ஜனங்கள். என்றார் ஜார்ஜ்.  சரி வாங்க காலைக் கடனெல்லாம் முடித்துவிட்டு குளித்து ஏதாச்சும் சாப்பிடலாம் என்று கிளம்பினோம். ஸ்டேஷனில் தான் எல்லா வசதிகளும் இருக்குமே. அது ஒரு சின்ன ஸ்டேஷன் தான். அதிகம் கிராமத்து ஏழை ஜனங்களின் நடமாட்டம் தான். ஸ்டேஷனில் உள்ள பொது இடங்களில், உள்ளே இருக்கும் கழிவறை, பளாட்பாரத்தில் இருக்கும் தண்ணீர்க் குழாய் எதானாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். பெரிய ஸ்டேஷன்களில் தான் அனாவசிய கெடுபிடி, அதிகாரத்தைக் காட்டும் பெருமைக்காகவே அதிகாரம் செலுத்துவார்கள். சாதாரணமாகவே ஒடியா மக்கள் சாதுக்கள். கிராமத்து ஜனங்கள் படிப்பில்லதவர்கள். அதிலும் ஹிராகுட், கலுங்கா போன்ற ஆதிகுடிகள் வசிக்கும் இடங்களில் அவர்கள் சினேகமாகவே இருப்பார்கள். சாதுக்களைப் பார்த்து நமக்கும் அதிகார தோரணை மேலிட்டால் ஒழிய வம்பில்லை

•Last Updated on ••Saturday•, 07 •April• 2012 21:50•• •Read more...•
 

திலகபாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்!

•E-mail• •Print• •PDF•

திலகபாமா- வெங்கட் சாமிநாதன் -திலகபாமா ஒரு கவிஞர். இதோடு நான் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் சமீபகாலமாக இது சாத்தியமில்லாது போய்க்கொண்டு இருக்கிறது. நான் கவிஞர் என்று சொல்வதோடு நிறுத்திக்கொண்டாலும், பெயரைப் பார்த்து பெண் கவிஞர் என்றும் சேர்த்துப் படித்துக்கொண்டு, அதற்கான இன்றைய தமிழ்ச் சூழலின் அர்த்தங்களையும் தானே தந்து படித்துக்கொள்ளும் இன்றைய தமிழ் வாசக மனம். பெண் கவிஞர் என்றால் பெண்ணீயக் கவிஞர் என்று படிக்கப் படும். பெண்ணீயக் கவிஞர் என்றால் அதற்கான குண வரையரைகள் தரப்பட்டு தயாராக உள்ளன. அதற்கான பெண்ணிய மொழியும் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது, அந்த பெண்ணிய மொழியின் அகராதியை நான் இங்கு சொல்ல முடியாது. தெரிந்தவர் தெரிந்து கொள்வார்கள்.  இதெல்லாம் போக, பெண்ணிய கவிதைகளுக்கு இலக்கணம் வகுக்கும் ஒரு வழிகாட்டியாக தன்னை வரித்துக்கொண்டுள்ள ஒரு பத்திரிகாசிரியர்,  ”உங்க கவிதையிலே கொஞ்சம் பெண்ணிய மொழியும் தூவிக்கொண்டாங்க போட்டிரலாம்” என்று தன் பங்குக்கு உதவுவதாகவும் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் ”சம்மதம் இல்லை என் கவிதையில் என் மொழியும் என் பார்வைகளும் அனுபவங்களும் தான் இருக்கும்”, என்றால், பெண்ணியம் பேசாத பெண் கவிஞர் கவிஞராகவே அங்கீகரிக்கப்படமாட்டார். சங்கப் பலகையில் இடம் கிடைக்காது தான்.

•Last Updated on ••Friday•, 30 •March• 2012 19:16•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் - (87 & 88)

•E-mail• •Print• •PDF•

(87) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -இல்லஸ்ட்ரேட்டட்  வீகலி ஆஃப் இந்தியா எனக்குப் பரிச்சயம் ஆகி நான் படிக்கத் தொடங்கியபோது சி.ஆர்.மண்டி என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். பொதுவான அரசியல் சமூகம் பற்றிய கட்டுரைகளும் அது சம்பந்தமான படங்கள் நிறைந்தும் அதில் இருந்தன. அது போக, இந்தியாவில் அப்போது தெரியவந்த ஓவியர்களின் ஓவியங்களூம் அவ்வப்போது முழுப்பக்க அளவில் அதில் வந்தன. அது மாத்திரமல்ல.இன்னம் இரண்டு விஷயங்கள் வீக்லியை ஒரு பகுதி மக்களின் அபிமான பத்திரிகையாகவும் ஆக்கின. ஒன்று அதில் அந்தக் காலத்து ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்த ,கல்கிக்குப் பிடிக்காது போய் பிரச்சினைக்கு காரணமாகிய குறுக்கெழுத்துப் போட்டி போன்ற (Crossword Puzzle) சமாசாரமும் வீக்லியில் வந்து கொண்டிருந்தது. இரண்டாவது ஒவ்வொரு வாரமும் ஒரு பக்கம் முழுவதும் பிரசுரமான புதுமணத் தம்பதிகளின் படங்கள். தம்பதிகளின் பெயர்களுடன். இது இப்போது பைத்தியக் காரத்தனமாகத் தோன்றலாம். ஆனால் அன்று இது மிகுந்த வரவேற்பைப் பெற்றதாக இருந்திருக்க வேண்டும்.. 

•Last Updated on ••Saturday•, 17 •March• 2012 22:00•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் (86)

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்நான் Illustrated Weekly of India வுடன் பரிச்சயம் கொண்டிருந்த காலத்தில் அதற்கு  C.R.Mandy  என்பவர் ஆசிரியராக இருந்தார். அதன் பெயருக்கு ஏற்பவே எந்தக் கட்டுரையானாலும் நிறைய படங்கள் உடன் பிரசுரமாகி இருக்கும்.  படங்கள் இல்லாத பக்கமோ கட்டுரையோ அதில் பார்க்கமுடியாது. நான் வாங்கத் தொடங்கிய போது அது 12 அணாவுக்கு விற்று வந்தது. 12 அணா என்பது முக்கால் ரூபாய். படம் என்றதும் ஓவியங்களின் கலர் பதிவுகளையும் முக்கிய மாகச் சொல்ல வேண்டும். நான் 1950 களில் தெரிய வந்த, வாழ்ந்த முக்கிய இந்திய ஓவியர்களையும் அவர்கள் ஒவியங்களையும் அறிமுகம் செய்து கொண்டதற்கும் மேலாக அவரகளது பாணியையும் பற்றி அதற்கான பின்னணி பற்றியும் தெரிந்து கொண்டதும், அந்தப் பத்திரிகை மூலம் தான். அந்தப் பத்திரிகை தவிர இது பற்றி எனக்குச் சொல்லும் பத்திரிகை அப்போது வேறு ஒன்றும் இருக்கவில்லை. இதன் தொடர்ச்சியாகத் தான் MARG  என்ற காலாண்டு கலைப் ப்த்திரிகையும் எனக்கு தெரிய வந்தது. Two Leaves and a Bud, Untouchable போன்ற நாவல்கள் மூலம் பிரசித்தி பெற்ற ஆங்கில நாவலாசிரியரான முல்க் ராஜ் ஆனந்த்தின் ஆசிரியத்வத்தில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகை அது. அது பற்றித் தெரிய வர எனக்கு அதிக காலம் ஆகவில்லை. ஏதோ ஒன்றின் இழை கிடைத்தால் அதைப் பற்றிக்கொண்டு நகர்ந்தால் மற்றவையும் பரிச்சயம் கொள்ளும்.  மார்க், கலைத்துறையின் எல்லா விகாசங்களையும் தன் அக்கறையாகக் கொண்டிருந்தது. ஓவியம், சிற்பம், கலம்காரி, கோவில்கள், நடனம், சங்கீதம் வங்க காலிகாட், ஒரிய பட்கதா காங்கரா, பஹாரி, ராஜஸ்தானி, மொகல் என்று பலவும் எனக்கு அறிமுகமாகின.

•Last Updated on ••Monday•, 27 •February• 2012 22:31•• •Read more...•
 

ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்: அ.முத்துலிங்கத்தின் 'அமெரிக்காக்காரி'

•E-mail• •Print• •PDF•

ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்: அ.முத்துலிங்கத்தின் 'அமெரிக்காக்காரி'- வெங்கட் சாமிநாதன் -ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல் தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத் தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இன்றும் சரி, இலங்கை சுதந்திரம் பெற்று, சேனனாயக தமிழருக்கு குடியுரிமை மறுக்கத் தொடங்கி, பின் வந்த பண்டாரநாயக சிங்களத்திற்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கி, பின் அடுத்தடுத்து வந்த தமிழ் இனத்தையே குறி வைத்த அடக்கு முறை அடுத்தடுத்து தொடர்ந்த பின் வருடங்களில் யாழ்ப்பாண நூலக எரிப்பும் வன்முறைகளும் 1983 லிருந்து ஈழத்தமிழர் புலம் பெயரத்தொடங்கிய வரலாறும், பின் வந்த போரின் பயங்கரங்களும் படு கொலைகளும் இன்று இன்னும் குறைந்தது ஒரு தலைமுறைக் காலத்துக்கு தம் குரல் இழந்து, செயல் இழந்து கண்ணியமும் சம உரிமையும் இழந்து தம் வாழ்ந்த மண்ணிழந்து வாழும் நிர்ப்பந்தத்துக்குள்ளாயிருக்கும்  ஈழத் தமிழர் தம்மைப் பற்றி உற்சாகத்துடன் வாழும் எதிர்கால நம்பிக்கையுடன் சொல்ல ஏதும் அற்றிருக்கும் போது அவரகள் எழுத்து புலம் பெயர்ந்த நாட்டிலிருந்தும் கூட ஒரு சோகக் கதையாகத்தான் இருக்க முடியும்.  பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் ஒரு இடத்தில் இதற்கு எதிராகச் சொல்வது போலத்தோன்றும். வார்த்தைகள் சரியாக நினைவில் இல்லை. ஆனால் இப்படித்தான் அது அர்த்தப்படும். “அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி: Will there be singing and dancing in times of war? அதற்கு ப்ரெக்டின் பதில்: Yes. There will be singing and dancing: but that will be about War

•Last Updated on ••Friday•, 24 •February• 2012 20:03•• •Read more...•
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் 21, 22 & 23

•E-mail• •Print• •PDF•

(21) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

- வெங்கட் சாமிநாதன் -இதுகாறும் நான் எழுதிவருவனவற்றைப் படிப்பவர்களிடமிருந்து வரும் எதிர்மறையான கருத்துக்கள் ஒரு சில வகைகளுள் அடங்கும்.

1. தங்களுக்குப் பிடித்த, ஏதோ கலைமேதையென தமக்குள் கற்பித்துக்கொண்டு பாலாபிஷேகம்ம் செய்து பூசிக்கும் சில நடிகர்களை அவர்கள் நடித்த படங்களை, சில இயக்குனர்களையெல்லாம்  குறிப்பிட்டு அவர்கள் இயக்கிய படங்களையும்  பட்டியலிட்டு, ”இவையெல்லாம் நல்ல படங்கள் இல்லையா?” என்று தம்முள் பொங்கி எழும் சீற்றத்தை அல்லது தமக்குள் வதைபடும் மிகுந்த மன வேதனையைக் கொட்டிக் கேட்கிறார்கள். இவர்களுக்கு நான் முன் வைக்கும் கருத்துக்கள் பார்வைகள் எதையும் எதிர்கொள்ளும் மனமிருப்பதில்லை. அவற்றையெல்லாம் படித்தும், அது பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல், தம் கையிலிருக்கு விளக்குமாற்றால் ஒரே வீச்சில் அவ்வளவையும் துடைத்து எறிந்து விட்டு,  தாம் முன் கொண்டிருந்த மனநிலைக்கே திரும்பி இதெல்லாம் நல்ல படமில்லையா, அதெல்லாம் நல்ல படமில்லையா? என்று தொண்டை அடைக்கக் கேட்கும் போது, அதை ஒரு வேதனைக் குறல் என்றே சொல்லவேண்டும், குரல் கம்மிக் கம்மி, கதற ஆரம்பித்துவிடுகிறார்கள். இதுகாறும் தம் சொப்பன சுகத்தில் ஆழ்ந்திருந்ததெல்லாம் பொய் எனச் சொல்லப்பட்டால் நிலை குலைந்து போவதைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை.. இல்லையெனில் திடீரென ஒரு அதிர்ச்சியும் கையாலாகாச் சீற்றமும். பத்து வயது அண்ணனுக்கு வீட்டில் அடி விழுந்தால் ஆறு வயது தம்பி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிடுவான். அண்ணன் எதற்கு அடிபடுகிறான், என்ன சொல்லி அப்பா அடிக்கிறார் என்பதெல்லாம் அவனுக்குப் புரிவதேயில்லை. அன்ணன் அடி படுவது தெரிகிறது. அது அவனால் தாங்க இயலாது. இரண்டாவது தான் தனித்து விடப்பட்ட துக்கம் வேறு. தாங்கத் தான் முடிவதில்லை. தம்பிப் பையனுக்கு

•Last Updated on ••Saturday•, 18 •February• 2012 23:29•• •Read more...•
 

(85) – நினைவுகளின் சுவட்டில் ...

•E-mail• •Print• •PDF•

வெ.சா.வுடன் ஒரு நாள் மாலை அளவளாவல்!புர்லாவுக்கு வந்த பிறகு (1951) தான் தினசரி பத்திரிகை படிப்பது என்ற பழக்கம் ஏற்பட்டது. அதாவது ஆங்கில தினசரிப் பத்திரிகை. தினசரிப் பத்திரிகை படிக்கும் பழக்கம் கும்பகோணத்திலேயே, மகாமகக் குளத்தெருவில் குடியிருந்து படித்த காலத்தில் ஆரம்பித்தது என்றாலும் அது பக்கத்துத் தெருவில் இருந்த திராவிட கழக ரீடிங் ரூமுக்கு பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டதிலிருந்து தொடங்கியது. அது திராவிட கழகப் பத்திரிகைகளுக்கிடையே கிடந்த விடுதலையையும் படிக்கத் தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட பழக்கம். திராவிட கழக படிப்பகத்தில் அப்போது வந்து கொண்டிருந்த தினசரி, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகள் எதுவும் கிடைக்காது. கழக பிரசார பத்திரிகைகள் தவிர வேறு எதற்கும் அங்கு இடம் இருந்ததில்லை. அந்த பழக்கத்தில் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்ததும் விடுதலை பத்திரிகைக்கு பணம் கட்டி வரவழைத்தேன். கண்ணில் பட்ட அதைப் பார்த்த செல்லஸ்வாமி. அவர்தான் ஹிராகுட்டில் எனக்கு போஷகர் மாதிரி, “என்ன இதையெல்லாம் படிக்கிறாய்? என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அவருக்கு அது தான் விடுதலை பத்திரிகையோடு முதல் பரிச்சயம். நான் அப்போது விடுதலைப் பத்திரிகையை மீறி வளர்ந்து விட்ட போதிலும், ஏதோ பழக்க தோஷத்தில் ஒரு தினசரி என்று தான் அதை வரவழைத்தேன். அந்த முதல் மாசத் தோடு விடுதலையை நிறுத்தினேன்.  

•Last Updated on ••Sunday•, 12 •February• 2012 20:03•• •Read more...•
 

(84) – நினைவுகளின் சுவட்டில் ...

•E-mail• •Print• •PDF•

வெ.சா.வுடன் ஒரு நாள் மாலை அளவளாவல்!ஸ்டாலின் சம்பந்தப்பட்ட The Great Purges -  பற்றி எழுதிக்கொண்டு வரும்போது கம்யூனிஸக் கொள்கைகளால் கவரப்பட்டு பின்னர் ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளிலும், ஸ்டாலினின் கோடூர யதேச்சாதிகாரத்திலும் வெறுப்புற்று வெளியேறியவர்கள் எழுதிய The God that Failed  புத்தகத்தைப் பற்றிச் சொல்லி வந்தேன். அதில் சில பெயர்கள் என் மறதியில் விட்டுப் போயின. அதன் பின் எனக்கு ஒரே ஒரு பெயர்தான் நினைவுக்கு வந்தது. ஆர்தர் கெஸ்லர் என்னும் ஹங்கரியர் பெயர்தான் மறந்து போனது. அவர் பின்னர் இந்தியாவுக்கும் வந்திருந்தார். அவரோடு நிகழ்ந்த ஒரு எழுத்தாளர் கூட்டத்தில் நம் க.நா. சுப்ரமணியம் கலந்து கொண்டது பற்றி Quest என்னும் காலாண்டு பத்திரிகையில் படித்திருக்கிறேன். அதற்கும் முன் The God That Failed – ல் தன் அனுபவங்களை எழுதியவர்களில் இன்னொருவரான, Stephen Spender, Iஇவர் ஒரு ஆங்கில கவி, Encounter  என்னும் ஒரு மிகச் சிறந்த மாதப் பத்திரிகையை நடத்தி வந்தார் அது எனக்கு 1950 களில். எனக்கு புர்லாவில் ஒரு ரூபாய்க்குக் கிடைத்தது. அவரும் இந்தியாவுக்கும் சென்னைக்கும் வந்திருந்தார். அவரையும் சந்தித்து அவர் சென்னையில் இருந்தவரை அவரோடு உடன் இருந்தவர் க.நா. சுப்ரமண்யம், அது பற்றி (கொஞ்சம் மூச்சை நிறுத்திக் கேட்டுக் கொள்ளலாம்) ஆனந்த விகடனில், ஆமாம் ஆனந்த விகடனில்தான்,  எழுதியிருந்தார். ஆனந்த விகடனில் க.நா.சு. எப்படி எழுத நேர்ந்தது? அவர் எழுதுவது ஒரு ஆங்கில கவிஞர் பற்றியல்லவா? புதுமைப் பித்தனைப் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தால் இடம் கிடைத்திருக்குமா, சந்தேகம் தான்.

•Last Updated on ••Friday•, 03 •February• 2012 22:26•• •Read more...•
 

வெ.சா.வுடன் ஒரு நாள் மாலை அளவளாவல (2)!

•E-mail• •Print• •PDF•

வெ.சா.வுடன் ஒரு நாள் மாலை அளவளாவல்!ராஜே: நீங்கள் படைப்பிலக்கியத்தில் ஏன் ஈடுபடவில்லை? இதே தானே அதுவும். யாரோ எழுதியதைப் பார்த்துவிட்டு ,அந்த சந்தோஷத்தை, அனுபவத்தை வெளியில் சொல்கிற உங்களால்…..

வெ.சா: எழுதினது மாத்திரம் இல்லை. நடக்கிறது எதுவுமே அது எனக்கு சந்தோஷத்தை இல்லை ஏதோ தாக்கத்தைத்  தந்தால், அதைப்பற்றி சொல்லணும் என்று தோன்றினால் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், யாரும் கேட்டால் சொல் கிறேன். அவ்வளவு தான்.

ராஜே: உங்களை யாரும்  சிறுகதை எழுதுங்க என்று கேட்கவில்லையா? நாங்கள் கேட்கிறோம் ஒரு சிறு கதை கொடுங்க என்று.

வெ.சா எழுத்தாளர் ஆகணும் என்கிற விருப்பமே எனக்கு இருந்த தில்லை. ஆசை ஏற்பட்டது கிடையாது. நான் தான் கொஞ்ச நேரம் முன்னாலேயே சொன்னேனே. அந்தக் கதையைப் படித்ததும் எரிச்சலாக இருந்தது. “செல்லப்பா ஏன் தான் அந்தக் கதையைப் போட்டார்” என்று. ஆகையால் எழுதினேன். நான் கெட்டிக்காரன். அவரைத் திருத்தணும் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.

•Last Updated on ••Tuesday•, 31 •January• 2012 17:14•• •Read more...•
 

நூல் அறிமுகம்: பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்!

•E-mail• •Print• •PDF•

பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்வெங்கட் சாமிநாதன்சென்னை வந்தாயிற்று. வீட்டின் முகப்பில் உள்ள மூன்று புறமும் காற்றுக்கு வழிவிட்டுத் திறந்து ஆனால் கம்பி கிராதிகளால் அடைபட்டிருக்கும் வாசலை நோக்கிய இடம் தான் நான் விருப்பத்துடன் பகல் நேரம் முழுதையும் செலவிடும் இடம். வீட்டின் முன் இருக்கும் வெளியிடத்தில் பவளமல்லி, செம்பருத்தி, மரங்கள். அந்தி நேரத்தில் பூத்துக் குலுங்கும் செம்பருத்தி மறுநாள் காலையை வசீகரமாக்கும். பவளமல்லி மரம் பூத்து  தரையெல்லாம் கொட்டிக் கிடக்கும். வெண்ணிற இதழ்களும் செந்நிறக் காம்புகளும் கொட்டிக்கிடக்கும் அந்த மலர் பரப்பைக் காண்பதே ஒரு சுகம். விடி காலையில் பூத்து முடிந்து காலை ஏழு எட்டு மணி வரை மணம் பரப்பி, உதிர்ந்து கொண்டே இருக்கும். நந்தியா வட்டை பூக்க ஆரம்பித்தால் முற்றும் மலரவும் பின் வாடவும் வெகுநாட்கள் ஆகும். பூக்களுக்காக வரும் வண்ணத்திப் பூச்சிகள் வானில் மிதக்கும் பூக்களாகவே வரும் போகும் அவற்றின் இஷ்டத்துக்கு. நான் இதுகாறும் பார்த்திராத வெகு சின்ன குருவி, மிக அழகான குருவி, நீலமும், கரும்பச்சையுமாக சூரிய ஒளி படுவதும், அது அமர்ந்திருக்கும் திசையும் பொருத்து அது நிறம் மாறி மாறி மின்னும் சிறகுகளோடு கீச் கீச் என்று ஓயாது கூவிக்கொண்டே வரும் ஜோடியாக. எப்போதும் அவை ஜோடியாகத் தான் வரும். ஆனால் அவை மரத்தின் கிளைகளுக்குள் எங்கெங்கோ உட்காரும். பிறகு வேறு கிளைக்குத் தாவும். ஓரிடத்தில் அவை ஒரு சில கணங்களே இருக்கும். கிளைக்குக் கிளை தாவிக்கொண்டே இருக்கும். ஒரு இலையடர்ந்த கிளையிலிருந்து இன்னொரு இலையடர்ந்த கிளைக்கு எப்படித்தான் எப்படியோ குண்டு பாய்வது போல சட்டென பாய்ந்து பறக்கும். இடைப்பட்ட வெளியில் அதை பறக்கும் ரூபத்தில் காணமுடியாது. ஒரு கணத்தில் ஒரு கிளையில். மற்ற கணத்தில் இன்னொரு கிளையில்.

•Last Updated on ••Saturday•, 28 •January• 2012 00:46•• •Read more...•
 

வெ.சா.வுடன் ஒரு மாலை அளவளாவல் - 1!

•E-mail• •Print• •PDF•

வெ.சா.வுடன் ஒரு நாள் மாலை அளவளாவல்!கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெங்கட் சாமிநாதனை ஒரு நாள் மாலை கே.எஸ் சுப்பிரமணியம் வீட்டில் சந்தித்து அளவளாவியதில் ஒரு பின் மாலை கழிந்தது. கலந்து கொண்டவர்கள் திலீப் குமார், எம்.ராஜேந்திரன், கே. எஸ். சுப்பிரமணியம், எஸ் சாமிநாதன், வெ.சா வின் நெடு நாளைய நண்பர் துரை ராஜ். அந்த அளவளாவலின் ஒரு பகுதியைக் கீழே காணலாம்.

திலீப் குமார்: சாமிநாதன், நேற்று நீங்க பேசினபோது, ஒரு விஷயம் சொன்னீங்க. எப்போதுமே, என்ன சொன்னாலும் என்னைக் விமரிசகன்னே பாக்கறாங்க. ஆனால் நான் என்னை விமர்சகன்னு நினைத்துக்கொண்டு எதுவுமே சொன்னதில்லை. எழுதினதில்லை. ஒருத்தனின் பொது அறிவுக்கு என்ன படுமோ அதைத் தான் சொல்லி வந்திருக்கிறேன் எனக்கு ஏதும் extraordinary intellectual brilliance-ஓ அல்லது  artistic sensibility-ஓ இருப்பதாக நான் நினைக்கவில்லை………

•Last Updated on ••Wednesday•, 11 •January• 2012 23:06•• •Read more...•
 

நன்றி உரை

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்[ 30.4.2011 அன்று மாலை வாதங்கள் விவாதங்கள், தொகுப்பு  வெளியிடப்பட்ட தருணம் கடைசியில் நான் நன்றி கூறு முகமாகச் சொன்னது, இங்கு சற்று ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ] முஸிபத் கபீ அகேலே நஹி ஆத்தி என்பார்கள். நம்மூரிலெ கூட கேட்டை மூட்டை செவ்வாய் என்று ஏதோ சொல்வார்கள். கஷ்ட காலம் என்று வந்தால் அது தனியாக வராது. நீங்கள் எல்லாம் மூன்று மணி நேரமா உட்கார்ந்திருக்கிறீர்கள். கடைசியில் நான் நன்றி சொல்ல வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது. இவ்வளவு பெரிய நல்ல பேச்சாளர்களை இவ்வளவு நேரமாகக் கேட்டீர்கள். அவர்கள் பேச்சு உங்களைக் கவர்ந்திருக்கிறது. கடைசியாக நான். இவ்வளவு கஷ்டங்கள்  போறாதா? சரி, நான் ரொம்ப காலமாக நான் ஒரு எழுத்தாளனே இல்லை என்று நானே சொல்லி வந்திருக்கிறேன். உங்களுக்கெல்லாம் தெரியும். அத்தோடு இன்று நான் ஒரு பேச்சாளனும் இல்லை என்பதை நானே இங்கு நிரூபிக்கப் போகிறேன். ஒரு மேடை கிடைத்து மைக்கையும் கையிலே கொடுத்துவிட்டால் பேச ஆசைப்படாத தமிழன் யாராவது இருப்பானா என்பது சந்தேகம் தான். நான் இருக்கேன். இந்த விதத்தில்  பார்த்தாலும் நான் தமிழனே இல்லை என்பதற்கான சான்று  கிடைத்து விடும். இது இன்னம் ஒரு  சான்றுதான்.. இன்னும் நிறைய எத்தனையோ சான்றுகள் என்னைத் தமிழனே இல்லை என்று ஒதுக்கித் தள்ளக் காத்திருப்பவர்கள் கையில் தயாராக  இருப்பதும் வாஸ்தவம் தான். சரி போகட்டும். இது உண்மை. என்னைப் பற்றிய உண்மை எதையும் சொல்வதில் தவறு ஏதும் இல்லை.

•Last Updated on ••Sunday•, 01 •January• 2012 23:54•• •Read more...•
 

(83) – நினைவுகளின் சுவட்டில்

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்Life பத்திரிகையில் அன்னாட்களில் வெளிவந்த இன்னொரு கட்டுரைத் தொடர் மிக முக்கியமானதும், அதிர்ச்சி தருவதுமாக இருந்தது,. அது நான்கைந்து இதழ்களுக்கு வந்தது என்று நினைவு. ஒவ்வொரு இதழிலும், அந்த பெரிய அளவிலான பத்திரிகையிலும் ஆறேழு பக்கங்களுக்கு அக்கட்டுரை நீண்டது. தலைப்பு எனக்கு நினைவில்லை.  The Great Purges, என்று இருக்கவேண்டும். அல்லது The Great Stalinist Trials என்றும் இருக்கலாம். இன்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. இந்தத் தொடர் வந்தது ஸ்டாலினின் மறைவுக்குச் சற்று முன்னரா அல்லது சற்றுப் பின்னரா என்று.  பின்னர் என்றாலும் ஓரு வருடத்துக்குள்ளாக  இருக்கவேண்டும். ஸ்டாலின் இறந்தது 1953-ல். ஸ்டாலினின் புகழ் பாடப்படுவது நின்றது செர்ஜி க்ருஷ்சேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாம் காங்கிரஸ் கூட்டத்தில் தான். அப்போதிருந்து ஸ்டாலினிஸத்தை மறுப்பதும், ஸ்டாலினை அவர் நின்றுகொண்டிருந்த பீடத்திலிருந்து அகற்றும் காரியங்கள் தொடங்கிவிட்டன். ஸ்டாலின் இறந்ததும் ஒரு சில நாட்களுக்குள்ளேயே ரஷ்யாவின் ரகசிய போலீஸ் படைகளைத் தன்  அதிகாரத்தில் வைத்திருந்த லாவ்ரெண்டி பெரியா (இவர் ஸ்டாலினைப் போல ஜியார்ஜியா வைச் சேர்ந்தவர்) கொல்லப் பட்டார். அவரை ஒழித்துக்கட்டுவது தான் தம் முதல் காரியமாக, ஸ்டாலினின் அடுத்தபடியிலிருந்த தலைவர்கள் தீர்மானித்தனர். அதைச் சொன்னதும் செர்ஜி க்ருஷ்சேவ் தான். க்ருஷ்சேவ் லாவ்ரெண்டி பெரியாவைப் பற்றி அப்போது சொன்ன கதை மிக சுவாரஸ்யமானது. சோஷலிஸ்ட் பாட்டாளி வர்க்க சொர்க்கத்தின் அதிகார மையத்தில் நடக்கும் விசித்திரங்கள் யாரும் கற்பனை கூட செய்ய முடியாதது. ஆனால் இதெல்லாம் பின்னால் வெளிவந்து நான் படித்தவை. ஆனால் இப்போது Life  பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைத் தொடரைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

•Last Updated on ••Tuesday•, 27 •December• 2011 22:59•• •Read more...•
 

இரு வேறு நகரங்களின் கதை!

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்கவிதை என்ற சொல் உச்சரிக்கப்பட்ட கணமே அது மொழியின், கற்பனையின், வாழ்வின் முக மலர்ந்த தோற்றத்தைத் தான் நம் மனதில் எழுப்பும். ஈழ வாழ்க்கையில் அது அப்படியாக இருக்க வில்லை. ஈழத் தமிழர் கவிதை முக மலர்ச்சியை, வாழ்வின் குதூகலத்தைப் பேசி தலைமுறைகள் பலவாகிக்கொண்டு வருகின்றது. . இன்றைய ஈழத் தமிழ்க் கவிதை தமிழகக் கவிதையிலிருந்து முற்றிலும் வேறு பட்ட முகத்தைக் காட்டுகிறது. மாறுபட்ட மொழியை,  மாறுபட்ட விதி வசத்தை, மாறுபட்ட வரலாற்றை,ப் பேசுகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையும் அனுபவங்களும் தமிழக வாழ்க்கை என்ன, வரலாற்றின் எந்த நாட்டு மக்கள் தொகையின் வாழ்க்கையைப் போலும், வரலாற்றைப் போலும் அல்ல. நாடிழந்து, மொழியிழந்து, வாழும் யூத மனிதக் கூட்டம் தான் ஈழத்தமிரை நினைவூட்டும். இன்று ஈழத் தமிழர் வாழ்வையும் இழந்து நிற்கின்றனர்.

•Last Updated on ••Tuesday•, 20 •December• 2011 23:32•• •Read more...•
 

அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்!

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்1999-ம் வருடம். டிஸம்பர் மாத முதல் வாரத்தில்  ஒரு நாள் காலை. தில்லியில் கழித்த ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கை அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு, தில்லியை விட்டுப் பிரிய மனமில்லாது சில வருடங்கள் கழிந்தன. இருந்தாலும் சிறு வயதில் பதிந்திருந்த தமிழ் வாழ்க்கையின் காட்சிகள், மனிதர்கள், உறவுகள் மனதில் அவ்வப்போது திரையோடும். இழந்து விட்டவை அவை. நினைவுகளாகவே ஜீவிப்பவை. இருப்பினும் தமிழ் நாடு இழந்துவிட்ட தாயின் மடியைப் போல சோகத்தோடு தான் நினைவுகளைக் கிளறும். தாயின் மடி தரும் வாத்சல்யமும் சுகமும் வேறு எங்கு கிடைக்கும்? அந்நாட்களில் நான் விழித்தெழுவது மிதந்து வரும் கோயில் மணியோசை காதில் விழ. வீட்டு வாசல் நீர் தெளித்து கோலமிட்டிருக்கும். கொஞ்சம் தள்ளிப் பார்த்தால் குனிந்து கோலமிட்டுக்கொண்டிருக்கும் தெருப் பெண்களைப் பார்க்கலாம்.  சிலர் காவிரியில் குளித்து ஈரப்புடைவையோடு நீர் நிரப்பிய குடத்தை இடுப்பின் சுமந்து வரும் பெண்கள். முழங்கால் உயரத்துக்கு பிழிந்து கட்டிய ஈரவேட்டியுடன் வருபவர்கள் ஏதோ ஜபத்தை வாய் முணுமுணுக்கும். ஊரில் நுழையும் முன் காவல் தெய்வம் போல சென்னை ஒற்றை அறை வாசம் போல,  ஒரு சின்ன கோயிலில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருப்பவர்களையும் பார்க்கலாம்.

•Last Updated on ••Saturday•, 17 •December• 2011 22:36•• •Read more...•
 

(82) - நினைவுகளின் சுவட்டில்..

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்ஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், அந்த அணைக்கட்டின் தற்காலிக முகாமில் கிடைத்திருக்கக் கூடிய பரிச்சயங்கள் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் நேரில் எதிர்ப்படும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் அந்த முனைப்பு ஏற்படுத்தும் பரிச்சயங்கள் சாதாரணமாக அந்தந்த சூழல்களில் எதிர்ப்படாத பரிச்சயங்களையும் கூட முன் கொண்டுவந்து நிறுத்தும் என்று தான் சொல்ல வேண்டும். ஹிராகுட்டுக்கு வந்த முதல் வருடம் 1950-ல் புத்தகம் வாங்க என்றால் பக்கத்தில் 10 மைல் தூரத்தில் இருக்கும் ஜில்லா தலைநகரமாகிய சம்பல்பூருக்கு சினிமா பார்க்கப் போகும் போது அங்குள்ள கடைத் தெருவுக்கும் போய் அங்குள்ள ஒரே ஒரு சின்ன கடையையும் எட்டிப் பார்த்து வருவேன்.

•Last Updated on ••Tuesday•, 06 •December• 2011 22:05•• •Read more...•
 

(81) - நினைவுகளின் சுவட்டில்..

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஹோட்டலின் உள்ளே நுழைந்தவர்கள் மூன்று நான்கு பேர் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தது கேட்டு எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தனர். புதிதாக தமிழ் நாட்டில் ஏதோ ஊரிலிருந்து புதிதாக வந்திறங்கிய தோற்றம் தெளிவாகத் தெரிந்தது. வந்தவர்கள் எங்களைப் பார்த்து முகம் மலர புன்னகை ஒன்றை வீசினர். “ஏதோ பேச்சுக்கு, “புதுசா வந்திருக்கீங்களா?” என்று எங்களில் ஒருவர் கேட்க, “ஆமாங்க, இங்க நிறைய நம்மாட்கள் இருக்காங்களாங்க? என்று கேட்டார் வந்தவர்களில் பெரியவர். “நிறைய இருக்காங்க. ஆபிஸ்ல வேலை செய்யறவங்களும் சரி, அணைக்கட்டிலெ வேலை செய்யறவங்களும் சரி, நிறையவே இருக்காங்க. அணை கட்டி முடியற வரைக்கும் இருப்பாங்க. அப்பறம் எங்கேயோ யார் என்ன சொல்ல முடியும்? வேறே எங்கே வேலை கிடைக்கும்னு தேடிப் போகணும்” என்றோம்.

•Last Updated on ••Sunday•, 27 •November• 2011 20:49•• •Read more...•
 

தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில்: ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை

•E-mail• •Print• •PDF•

சில ஆச்சரியகரமான நிகழ்வுகள் இன்றைய தமிழ்ச் சூழலில் கூட நிகழ்ந்துவிடுகின்றனதான். இவையெல்லாம் நாமறிந்த தர்க்கத்தின் வட்டத்திற்குள் அகப்பட்டு விடுவதில்லை. சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை,, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன் நான் சென்னை வந்ததும் எனக்கு அறிமுகமானவர். அதற்கு முன் இருபது வருடகாலமாக மணிலாவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனராக பணியாற்றியவர். அவர் இங்கு வந்ததும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக தில்லியில் இருந்த, இங்குள்ளவர்களே மறந்திருந்த, யாரென்று தெரிந்து கொள்ள விரும்பாத என்னை வழிமறித்து சினேகம் கொள்வார் என்ற எதிர்பாராத ஆச்சரியம்.வெங்கட் சாமிநாதன்சில ஆச்சரியகரமான நிகழ்வுகள் இன்றைய தமிழ்ச் சூழலில் கூட நிகழ்ந்துவிடுகின்றனதான். இவையெல்லாம் நாமறிந்த தர்க்கத்தின் வட்டத்திற்குள் அகப்பட்டு விடுவதில்லை. சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை,, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன் நான் சென்னை வந்ததும் எனக்கு அறிமுகமானவர். அதற்கு முன் இருபது வருடகாலமாக மணிலாவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனராக பணியாற்றியவர். அவர் இங்கு வந்ததும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக தில்லியில் இருந்த, இங்குள்ளவர்களே மறந்திருந்த, யாரென்று தெரிந்து கொள்ள விரும்பாத என்னை வழிமறித்து சினேகம் கொள்வார் என்ற எதிர்பாராத ஆச்சரியம்.

•Last Updated on ••Saturday•, 19 •November• 2011 19:28•• •Read more...•
 

நூல் அறிமுகம்: ஒரு வித்தியாசமான குரல்!

•E-mail• •Print• •PDF•

நூல்:  கருணாநிதி என்ன கடவுளா?வெங்கட் சாமிநாதன்தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்து சில மாதங்களாகிவிட்டன. கடந்த பத்து வருடங்களாக இடைவிடாது கேட்டு வந்த இரைச்சல், நாமாவளி தமிழினத் தலைவா போற்றி, கலைஞரே போற்றி, முத்தமிழ்க் காவலரே போற்றி, இன்னும் எத்தனை போற்றிகளோ, மாதிரிக்கு ஒன்றிரண்டு தந்தால் போதாதா, அந்த இரைச்சல், தமிழகம் முழுதும் கேட்டு வந்த அந்த இரைச்சல் இப்போது கழகக் கூட்டங்களோடு, அறிவாலயத்தோடு முடங்கிக் கிடக்கிறது. முன்னரோ கம்யூனிஸ்ட் கட்சியினரும் அதிமுகவினரும் தவிர மற்ற எல்லோரும் ஏகோபித்து எழுப்பிய இரைச்சல் இதன் உச்ச கட்டம், காமராஜர் ஒரு சகாப்தம் என்று காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கோபண்ணா, என்னும்  காங்கிரஸ் காரர், அந்த புத்தகத்தை  வெளியிட கருணாநிதியை விட வேறு தகுதியானவர் இல்லை என்று தேர்ந்தது தான். காமராஜரை, கருணாநிதியைவிட கேவலமாகப் பேசிய இன்னொரு தமிழக அரசியல் தலைவர் இருப்பாரா தெரியவில்லை. இருப்பினும் கோபண்ணாவுக்கு காமராஜர் விருதும் கலைஞர் கையால் வழங்கப்பட்டது கோபண்ணாவின் புதிய விசுவாசத்துக்கு பரிசாக. பீடர் அல்ஃபான்ஸ் என்ன, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு என்ன எல்லோரும் அவர்கள் சார்ந்த கட்சியின் கொள்கையில் பாரம்பரியத்தில் கருணாநிதிக்கு எதிர் முனைகளானாலும், கருணாநிதியின் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் தான்.

•Last Updated on ••Tuesday•, 13 •December• 2011 22:06•• •Read more...•
 

தமிழ்மகனின் 'வெட்டுப்புலி'

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்தமிழ் மகனின் 'வெட்டுப் புலி' தமிழ்மகன்திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில் , கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில்இல்லாத எதுவும் இலக்கியமாக கலைகளாக மலர்வது சாத்தியமில்லை. குறிப்பாக 1916—ல் பிரகடனப் படுத்தப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் பிறந்து, பல அவதாரங்களில் பல்கிப் பெருகி, இன்று தமிழ் நாட்டின் பெரும் அரசியல் சமூக சக்தியாக விளங்கும் திராவிட இயக்கமும் சரி, அதற்குச் சற்றுப் பின் தோன்றி இன்று வரை சமூகத்திலும் சரித்திரத்திலும் எந்த வித பாதிப்பையும் விளைவித்திராத பொது உடமை இயக்கமும் சரி, கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால இவற்றின் தொடர்ந்த் இருப்பில்  இவ்விரண்டின் கூச்சல், மேடைப் பேச்சுக்களிலும், பத்திரிகைப் பிரசாரங்களிலும் மிக உரக்க இருந்த போதிலும், இவை பிரசாரமாகவே நின்றுவிட்டன, ஆதியிலிருந்து இன்று வரை .இவையெல்லாம் என்னதான் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா என்று எல்லா இலக்கிய, கலை வடிவங்களிலும் எழுதிக் குவிக்கப் பட்டுக்கொண்டே இருந்தாலும், அவை குப்பைகளாகத் தான் மலையென பெருகிக் கிடக்கின்றன.

•Last Updated on ••Saturday•, 19 •November• 2011 20:32•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் (79 & 80)

•E-mail• •Print• •PDF•

(79) – நினைவுகளின் சுவட்டில்

வெங்கட் சாமிநாதன்மிருணாலைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நினைவுகள் அத்தனையும் அவனைச் சுற்றித் தான் சுழலும். அந்த இனிய நினைவுகளைக் கொஞ்சம் தள்ளிப் போடவேண்டும். இடையில் மற்ற நண்பர்களையும், அவர்களோடு பெற்ற பல புதிய அனுபவங்களையும் பற்றிப் பேசவேண்டும். அவர்களில் பஞ்சாட்சரம் பற்றி முன்னரே பேசியிருக்கவேண்டும். மறந்து விட்டது பர்றிச் சொன்னேன். பஞ்சாட்சரம் F.A. & CAO (Financial Adviser and Chief Accounts Officer)-ன் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ரோடைத் தாண்டி இரண்டு மூன்று ப்ளாக் வீடுகளைக்கடந்தால் அவன் வீடும்  வரும். ஒழிந்த நேரங்களில் அவன் வீட்டில் தான் என் பொழுது கழியும். அவனோடு ஆர். சுப்பிரமணியன் என்னும் உறவினனும் அந்த வீட்டில் இருந்தான். அக்கா மகன் என்றோ ஏதோ உறவு. இரண்டு பேருக்கும் வீடு சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இருந்தது. சிந்தாதிரிப் பேட்டை என்றாலே எப்படியோ பெரியார், திராவிட கழகம் என்று தான் சிந்தனை தொடர்கிறது.

•Last Updated on ••Friday•, 28 •October• 2011 20:07•• •Read more...•
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (17, 18, 19 & 20)

•E-mail• •Print• •PDF•

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்  (17)

பராசக்தி படத்தை இன்றும்  ஒரு மைல்கல்லாக, ஒரு க்ளாசிக் என்று தான் மதிப்பிடுகிறார்கள். அந்தப் படம், கோர்ட்டில் சிவாஜி கணேசனின் உரத்த வாக்குமூலம்  சினிமாவா, அரசியலா? அதை எழுதிய போது கருணாநிதி அரசியல் வாதியாக தன்னை எண்ணிக்கொண்டாரா, இல்லை சினிமா கதையாசிரியராகவா? இன்று வெங்கட் சாமிநாதன்சினிமாவில் பரவலாக அதன் தொடக்கத்திலிருந்தே காணும் பல அவலங்களை, அதன் குணத்தையே தொடர்ந்து நிர்ணயித்து வரும் அவலங்களைக் கண்டாலும் அவை பற்றி நினைத்தாலும்  நான் மிகவும் சுருங்கிப் போகிறேன். மனத்தளவிலும் நினைப்பளவிலும். இது எனக்கு நேர்ந்துள்ள எனக்கே நேர்ந்துள்ள மனவியாதி அல்ல. இன்னமும் தமிழ் சினிமாவும் அரசியலும் பாதிக்காது மன ஆரோக்கியமோ உடல் ஆரோக்கியத்தையமோ க்ஷீணித்துப் போகாது பார்த்துக்கொள்ளும் ஜீவன்கள் யாரும் மனம் சுருங்கி உடல் குறுகித் தான் போவார்கள். கூவத்தின் கரையில் வாழ்வதற்கும் உடல், மனப் பயிற்சி வேண்டும் தானே.. அது டிவி செட்டும் வோட்டுப் போட ஆயிரங்கள் சிலவும் கிடைத்துவிட்டால் அது அந்த பயிற்சி பெற்றதற்கான பரிசு என்று தான் சொல்லவேண்டும்.  தமிழ் சினிமா பற்றியோ, அரசியல் பற்றியோ பேசும்போது இந்த மொழியில், படிமங்களில் தான் நான் பேசத் தள்ளப்படுகிறேன்.  ஆனால் இந்த சாக்கடையில் உழன்று சுகம் காணும் ஜீவன்கள்  அவரவர் ஆளுமைக்கும் பிராபல்யத்துக்கும் ஏற்ப இந்த சமூகத்தையும் ஆபாசப்படுத்தி வருகிறார்கள்.

•Last Updated on ••Friday•, 14 •October• 2011 20:21•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் (76, 77 & 78)

•E-mail• •Print• •PDF•

நினைவுகளின் சுவட்டில் .. 76

வெங்கட் சாமிநாதன்மிருணால்தான் எனக்கு ஆத்மார்த்தமாக மிகவும் நெருங்கிய நண்பன். இப்படியெல்லாம் இப்போது சுமார் 60 வருடங்களுக்குப் பிறகு சொல்கிறேனே, ஆனால் அவனோடு பழகிய காலத்தில், ஒரு சமயம், நானும் அவனும் மிகுந்த பாசத்தோடு குலாவுவதும், பின் எதிர்பாராது அடுத்த எந்த நிமடத்திலும் ஏதோ ஒரு உப்புப் பெறாத விஷயத்துக்கு கோபங்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் வருத்துவதுமாகவே பழகினோம். பின் எந்த நிமிடமும் அடுத்த நாள் எதுவுமே நடக்காதது போல குலாவிக்கொள்வோம். இந்த ஊடலும் கூடலும் பக்கத்திலிருக்கும் எவருக்கும் தெரிய வராது. இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் சிறுபிள்ளைத் தனம் என்று தான் சொல்லவேண்டும். அனேகமாக இந்த மாதிரி அடிக்கடி நிகழும் ஊடலுக்குக் காரணம் நானாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் எந்த ஒரு கோபத்துக்கும் காரணமாக அவன் என்ன செய்தான் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றும் நினைவுக்கு வருவதில்லை. ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. நாங்கள் இருவரும் ஏதோ காரணத்துக்காக பிரிந்து விட்டோம். பின் பார்த்தால் அவன் என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறான். வீட்டுக்குள் கூடியிருந்த என் நண்பர்களில் யாரோ எனக்கு, சக்கரவர்த்தி வெளியே நின்றுகொண்டிருக்கிறான் என்று சொல்ல, எனக்கு எப்படி இதை எதிர்கொள்வது என்று தெரியாது, வெளியே வந்து “ என்ன விஷயம்? என்ன வேண்டும்?” என்று ஏதோ அன்னியனை விசாரித்தது போல் அவனைக் கேட்டது மனத்திரையில் ஓடுகிறது. நானாக இருந்தால், முதலில் அப்படி கோவித்துக்கொண்டவன் வீட்டுக்குப் போய் நின்றிருக்க மாட்டேன். மற்றதெல்லாம் பின் வருவது தானே. பின் எப்படி சமாதானம் ஆகி நாங்கள் பேச ஆர்ம்பித்தோம் என்பது நினவில் இல்லை. எந்தனையோ நூறு பிரிதல்களில் பின் ஒன்று சேர்தலில் இது ஒன்று. பத்து வயதுப் பையன்களிடம் இருக்கும் உணர்ச்சி வேகம், அசாதாரண பாசம் கோபம் எல்லாம் எங்களுக்கு என் இருபது வயதிலும் நீடித்திருந்தது தான் கோளாறாகிப் போனது.

•Last Updated on ••Thursday•, 06 •October• 2011 17:31•• •Read more...•
 

ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு

•E-mail• •Print• •PDF•

ஸிந்துஜா சிறுகதைகள்இரண்டு வாரங்களுக்கு முன் ஸிந்துஜாவின் சிறுகதைகள் 18 கொண்ட முதல் தொகுப்பு கைக்கு வந்தது. வெளியிட்டிருப்பது நன்னூல் அகம், மந்தைவெளி, சென்னை. நன்னூல் அகம் என்று சொன்னால் புரியாது. இது பாவை சந்திரனின் பொறுப்பில் இருக்கும் புத்தக வெளியீட்டு நிறுவனம். அதிகம் தெரியவராத சின்ன அளவிலான தனிமனித முயற்சி. இரண்டு பேரையும் சேர்த்து பிரஸ்தாபிப்பதற்கான காரணம் இருவருக்கும் சற்றுப் பொதுவான ஒன்று உண்டு,. சொல்கிறேன். கடைசியில். ஸிந்துஜாவை இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியாக வேண்டும் என்று நினைக்கிறேன். போன நூற்றாண்டின் எழுபதுகளின் முற்பாதியில் பத்திரிகைப் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். குறிப்பாக இலக்கியச் சிறுபத்திரிகைளின் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்கு, “டாகூர் சுடலைமாடன் தெருவுக்கு வருகிறார்” என்றோ, இல்லை ”சுடலை மாடன் தெருவில் டாகூர்” என்றோ திருநெல்வேலி சுடலைமாடன் தெருவில் வசிக்கும் கலாப்ரியா தாகூர் கவிதைகள் சிலவற்றைத் தழுவி தன் பெயரில் வெளியிட்டதைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரை ஸிந்துஜாவின் ஆளுமையைப்  பற்றியும் சொன்னது. பெரும் பரபரப்பைக் கிளப்பிய எழுத்து அது. அப்போது கலாப்ரியா ஒரு நல்ல கவிஞராக கவனம் பெற்றுக் கொண்டிருந்த சமயம்.  ”டாகூர் கவிதைகள் பிடித்துப் போனதால் நான் திரும்பி எழுதிப் பார்த்தேன். எனக்கு தாகூர் கவிதைகள் என்றால் ரொம்பப் பிடிக்குமாக்கும். எனவே தாகூர் சுடலை மாடன் தெருவுக்கு மறுபடியும் வருவார்” என்ற ரீதியில் கலாப்ரியா பதில் அளித்திருந்தார். அது பெரும் பரபரப்பான கால கட்டம். ஜாக் லண்டன் அசோக மித்திரன் கதைத் தொகுப்பில் புகுந்து கொண்ட காலம்.  ஒரு கட்டத்தில் பேசித் தன் தரப்பை உரத்த குரலில் சொல்ல வேண்டிய சமயத்தில், “மௌனமாக இருப்பதுதான் பலம் வாய்ந்தது. அதில் தான் ஒரு கலாசாரத்தின் மலர்ச்சி காப்பாற்றப் படுகிறது” என்று ந.முத்துசாமி தனக்கு சௌகரியத்துக்கு  ஒரு புதியதும் வேடிக்கையானதுமான  சித்தாந்தத்தை சிருஷ்டித்து ஒரு புத்தகத்தின் பின் அட்டையில் பிரகடனம் செய்த போது ஸிந்துஜா, “To sin by silence, when they should protest, makes cowards of men” என்று  Abraham Lincoln. சொன்னதை மேற்கோளாக்கி அதே புத்தகத்துக்கு  தன் முன்னுரையைத் தொடங்கியவர் ஸிந்துஜா. இது 1973-ல்.

•Last Updated on ••Friday•, 16 •September• 2011 19:37•• •Read more...•
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (14, 15 & 16)

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பித்ததே 1961- ல் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் தமிழ் சமூகம் என்றைக்காவது ஒரு கலை உணர்வு கொண்ட சமூகமாக இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் என்ற எழுதியிருந்ததையும் அந்த மிகக் கசப்பான ஆரூடம் போன்ற தமிழ் சமூகத்தின் குணச்சித்திரம் அன்று என் மனத்தில் பட்டது இன்று வரை மெய்யாகிக் கொண்டிருக்கும் அவலத்தைச் சுட்டிக் காட்டிச் சொல்லியே ஆரம்பித்தேன். அறுபது வருடங்கள் கடந்து விட்டன. அது பற்றி இன்று மறுபடியும் யோசிக்கும்போதுகூட அந்த ஆரூடம், இனியாவது என்றாவது பொய்த்துப் போகக்கூடும் என்று சொல்லுவதற்கான சூசகங்கள் ஏதும் அடி வானம் பூமியைத் தொடும் எல்லையில் கூட, ஒரு சிறு கரும்புள்ளியாகக் கூடத் தென்படுவாதாயில்லை. 

•Last Updated on ••Tuesday•, 13 •September• 2011 20:31•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் – (74 & 75)

•E-mail• •Print• •PDF•

நினைவுகளின் சுவட்டில் – (74)

வெங்கட் சாமிநாதன் ரஜக் தாஸ் வந்துவிட்டாலே செக்‌ஷன் கலகலப்பாகி விடும். அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் தமாஷாகத் தான் இருக்கும். அவன் இதற்காக ஏதும் சிரமப் பட வேண்டியதில்லை. ஒன்றுமில்லாத எதுவும், ஒன்றுமில்லாத சப்பென்று நமக்குத் தோன்றும் எதுவும் அவனிடத்தில் உயிர் பெற்றுவிடும். தமாஷ் செய்வதற்கு, அமைதியாக இருக்குமிடத்தில் கலகலப்பூட்டுவதற்கு ஏதும் சம்பவங்கள், கிறுக்குத் தனமான சேஷ்டைகள், அல்லது சிரிப்பூட்ட வென்றே யோசித்துத் தயார் செய்யப்பட்ட ஹாஸ்யப் பேச்சுக்கள், இப்படியெல்லாம் அவனுக்கு எதுவும் தேவையில்லை. சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்போம். இடையில் ரஜக் தாஸ் ஏதாவது சொல்வான். அது மற்றவர்களுக்கு தெரியாத, அவர்கள் பங்கு பெற்றிராத சம்பவமோ, பேச்சோ இப்படி ஏதோ ஒன்று இருக்கும். ரஜக் தாஸ் சொல்லிக்கொண்டிருப்பான். நடுவில் சற்று நிறுத்தி எல்லோரையும் பார்ப்பான். இனி நடக்கும் நாடகத்தை தமிழில் எப்படி சரிவரச்  சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு சாதாரண “ஹை” என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு அவன் செய்யும் ரகளை அனுபவித்தால் தான் தெரியுமே ஒழிய சொல்லிப் புலப்பட வைக்கமுடியாது.  ”ஹை” என்ற வார்த்தையின் பொருளும் அது வெவ்வேறு கட்டங்களில் சொல்லும் தொனி மாற்றத்தில் பெறும் பொருள் மாற்றத்தையும் தமிழில் எப்படி சொல்வது? சரி, ஏதோ முடிந்தவரை சொல்லிப் பார்க்கவேண்டியது தான்.

•Last Updated on ••Wednesday•, 31 •August• 2011 22:28•• •Read more...•
 

பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் - இரண்டு புத்தகங்கள்

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்தம் தமிழ் நாட்டு எல்லைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்கள், அன்னிய சூழலில் வாழப் பிரியமில்லாதவர்கள் என்று தமிழர்களைக் குற்றம் சாட்டமுடியாது. அவர்கள் தம் உடலைத் தாங்கிக் கொண்டு  எங்கும் செல்லத் தயங்க மாட்டார்கள்.. உலகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் அவர்கள் வயிறு பிழைக்க வேலைக்குச் செல்வார்கள். ஆனால் அவர்கள் மனம் அங்கு இராது. தலைமுறை தலைமுறையாக அவர்கள் ரத்தத்தில் ஊறித் தொடரும் ஒரு மன நிலை, உலகில் எங்கு சென்றாலும், அந்த அன்னிய தேசத்தின் சமூகத்தை, சூழலை, எதையுமே அறிந்து கொள்ளும் ஆர்வமோ, துடிப்போ இல்லாது, தன்னுள் சுருங்கிக் கொள்ளும் சௌபாக்கிய மன நிலையை வரமாகப் பெற்றவர்கள்.  இந்த அன்னிய மண்ணின்  மக்களின் வாழ்க்கை என்ன, அவர்கள் கொண்டுள்ள மதிப்புகள் என்ன என்பதை அறிந்து கொள்ளும் அறிவுத் தாகம் வெளிநாட்டில் வாழும் தமிழ்ர்களிடையே கிடையாது. அவர்களது மனமும் ஈடுபாடும் தமிழ் நாட்டின் எல்லையோடேயே சுருங்கி வேலிகட்டி முடக்கப்பட்டவை. அன்னிய நாட்டில் சூழலில் வாழும் நிர்ப்பந்தங்கள் கூட அவர்கள் மனவெளியை பாதிப்பதில்லை விரிவு படுத்துவதில்லை. ஏனெனில், அவர்கள் நினைப்பில், தமிழ் நாடு, இலக்கியம்,, கலாச்சாரம், கலைகள், அறிவு விகாசம், என்று எதைத் தொட்டாலும் அதில் தமிழன் லிப்னிட்ஸின் Best of all possible-ஐச் சாதித்துவிட்டவன். Best of all possible – உலகில் வாழ்பவன். அதாவது தமிழன். தமிழ் நாட்டில் பிறந்தவனாயிற்றே அவன். அப்படியிருக்க இந்த அன்னிய நாட்டில் அன்னிய மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள, அவர்களைப் பற்றித் தான் தெரிந்து கொள்ள என்ன இருக்க சாத்தியம்? அவர்களும் இவன் சாதனையை மீறி எதுவும் செய்திருக்கப் போவதில்லை.  செய்துவிடப்போவதில்லை. ஆக, வேறு எதுவும் தெரிந்து கொள்ளும் தேவையும் இல்லை.

•Last Updated on ••Wednesday•, 17 •August• 2011 16:26•• •Read more...•
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் – (12 & 13)

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்எந்திரன் பற்றி எழுதியது போதும், இனி மற்ற விஷயங்களைப் பற்றி எழுதலாமே என்று சில அன்பர்கள் இங்கு எழுதியிருக்கிறார்கள்.  வாஸ்தவம். ஒரு ஆரோக்கியமான சமூகத்தில், எந்திரன் பற்றிப் பேச்சே எழுந்திராது. ஆனால் அது ரஜனி காந்த், ஸார், சன் டிவி என்ற இரு பிரம்மாண்ட சக்திகள் கையில் ஒரு மகத்தான சினிமாவாக ஒரு சூறாவளி விளம்பரத்தின் தயவில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அது திரும்பத் திரும்ப, சன் தொலைக்காட்சியின் டாப் டென்னில் இன்னமும் முதலிடம் வகிப்பதாக தர நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தர நிர்ணயம் என்பது நம் தமிழ் சினிமா உலகில் ஒட்டு மொத்தமாக எல்லோராலும் வரும்படியை வைத்துத்தான் தரம் பற்றி முடிவு செய்யப்படுகிறது. வரும்படி என்கிற சமாசாரம்  நிதர்சனமாகக் காணக்கூடிய ஒன்று.நிரூபிக்கப்படக்கூடிய ஒன்று.  ஆனால் தரம் என்கிற உணர்வு இருக்கிறதே அது, நிதர்சனமற்றது. ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். ஆனால் சன் தொலைக்காட்சி ஆட்சி செய்யும், தமிழ் பேசும் உலகில், வரும்படி கூட கட்டாயத் திரையிடல் மூலம் அறிவிக்கப்படுகிறது.  ஆக ஒரு கால கட்டத்திற்குப் பிறகு இப்படி கட்டாயமாக வெற்றி திணிக்கப்பட்ட ஒன்றை தரம் பற்றி பேசுவோரே இல்லாமல் செய்துவிட்ட தமிழ் சமூகத்தில் அது பற்றிப் பேசித் தான் உதறித் தள்ள வேண்டியிருக்கிறது. காரணம், எந்திரன் ஒரு உச்சத்தின் குற்யீடாகிவிட்டது. இனி அந்த எவெரெஸ்டை நோக்கித் தான் எல்லோரும் பயணிக்கும் கனவு காண்பார்கள். செயல்படுவார்கள்.

•Last Updated on ••Wednesday•, 17 •August• 2011 16:21•• •Read more...•
 

நூல் மதிப்புரை: பாகிஸ்தான் சிறுகதைகள்!

•E-mail• •Print• •PDF•

[பாகிஸ்தான் சிறுகதைகள்; தொகுப்பு இந்தஜார் ஹுஸேன். தமிழாக்கம் மா. இராமலிங்கம் “எழில் முதல்வன்” வெளியீடு சாகித்ய அகாடமி, [பாகிஸ்தான் சிறுகதைகள்; தொகுப்பு இந்தஜார் ஹுஸேன். தமிழாக்கம் மா. இராமலிங்கம் “எழில் முதல்வன்” வெளியீடு சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, சென்னை-600 001 பக்கங்கள் 503 விலை ரூ 220  ] பாகிஸ்தான் சிறுகதைகள் தொகுப்பு இது. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து மத அடைப்படையில், பிரிந்து அறுபது வருடங்களுக்கு மேலாகிறது.  முஸ்லீம்கள் மத அடிப்படையில் மாத்திரம் ஹிந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை என்றும். அவர்கள் கலாசாரமும் ,வாழ்நோக்கும், சரித்திரமும் வேறு. என்றும் அவர்கள் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு அவர்களது வாழ்வையும் அடையாளங்களையும் காத்துக்கொள்ள முடியாது என்றும் வாதித்து கலவரங்கள் செய்து பிரிந்து சென்றார்கள். அறுபது வருட காலம் இரண்டு தலைமுறைக்கும் மேற்பட்ட காலம் தான். இன்று அறுபது வயதாகிவிட்ட எந்த பாகிஸ்தானியும் அவன் பயந்த ஹிந்து அரசின் கீழும் வாழாதவன் தான். தன் சக மதத்தினராலேயே ஆளப்படுகிறவன். தான் அந்த வாழ்க்கை, அந்த மனிதர்கள் உலகம் அவன் கண்ட கனவுகள் பற்றி இந்தக் கதைகள் சொல்லும் அல்லவா?

•Last Updated on ••Tuesday•, 09 •August• 2011 18:33•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் – (73)

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளரும், விமர்சகருமான வெங்கட் சாமிநாதன்சோப்ராவின் தங்கையுடன் பேசிக்கொண்டிருக்கலாம் கொஞ்ச நேரம் என்ற நினைப்பில் நான் சீக்கிரமே அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். அண்ணனிடம் அவ்வளவு பிரியம் அவளுக்கு. அவன் இல்லாது இருக்க முடியவில்லை அந்த 10 – 11 வயது தங்கைக்கு. திருட்டுத் தனமாக கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு கிளம்பிவிட்டால், ரோஹ்தக்கிலிருந்து. இது என்ன தில்லியிலிருந்து காஜியாபாத் போகிற மாதிரியா இல்லை க்ரோம்பெட்டிலிருந்து மாம்பலம் போகிற சமாசாரமா? இல்லை நான் அவள் வயதில் வீட்டிலிருந்து ஓடி நிலக்கோட்டை பார்க் கட்டிட தாழ்வாரத்தில் படுத்துத் தூங்கிய சமாசாரமா? ரோஹ்தக்கிலிருந்து பஸ்ஸில் ரயிலில் தில்லி வந்துவிடலாம் தான். ஆனால் தில்லியிலிருந்து ஒரிஸ்ஸாவிலிருக்கும் புர்லா காம்ப்புக்கு வருவது வயதானவர்களுக்கே சிரமம் தரும் காரியம். வழி சிக்கலானது. அங்கங்கே கேட்டு விசாரித்துக்கொண்டு வரவேண்டும் இது அந்நாட்களின் (1950) சமாசாரம். தில்லியில் அவள் இறங்குவது பழைய தில்லி ரயில் நிலையமாக இருக்கும். அங்கிருந்து புது தில்லி  நிலையம் வந்து ரயில் ஏறவேண்டும். தில்லியிலிருந்து 'பீனா'வில் இறங்க வேண்டும். பின் பீனாவிலிருந்து கட்னி வரை பயணம். பின் மறுபடியும் இறங்கி கட்னியிலிருந்து ஜெர்சகுடா.  வண்டி ஜெர்ஸகுடா வரை நேரே போகுமா இல்லை பிலாஸ்பூரில் இறங்கி கல்கத்தா மெயில் பிடித்து ஜெர்ஸகுடா போகணுமா என்பது இப்போது நினைவில் இல்லை. ஜெர்சகுடாவில் இறங்கி ஒரு பாஸஞ்சர் வண்டி சம்பல்பூருக்குப் போக. சம்பல்பூர் ரோட் (சம்பல்பூர் மெயின் அல்ல) நிலையத்தில் இறங்கி புர்லாவுக்கு பஸ் பிடிக்க வேண்டும். இந்த நாலைந்து இடங்களில் ஏறல் இறங்கல்; பதினோரு வயசுப் பெண், ரோஹ்தக்ககைத் தாண்டி அறியாதவள், கையில் காசில்லாமல் வந்து சேர்ந்து விட்டாள்.  சாதாரண காரியமா?. சாப்பாட்டுக்கு அங்கங்கே என்ன செய்தாள்? என்னவோ வந்து சேர்ந்து விட்டாள் பத்திரமாக. தன்னைச் செல்லம் கொஞ்சும் அண்ணனைத் தேடி. அம்மா அப்பா வேண்டாம். ரோஹ்தக் தோழிகள் வேண்டாம். அண்ணன் போது.ம்.

•Last Updated on ••Tuesday•, 09 •August• 2011 18:13•• •Read more...•
 

தி ஜானகிராமனின் அம்மா வந்தாள்

•E-mail• •Print• •PDF•

தி.ஜானகிராமன்அம்மா வந்தாள் இன்றைய தமிழ் இலக்கியத்தில் தி.ஜானகிராமன் ஒரு தனித்த, விதிவிலக்கான நிகழ்வு.. அவர் ஒரு முதல் தர இலக்கியத் தரமான எழுத்தாளர் அதே சமயம் மிகப் பிரபலமான எல்லோரும் விரும்பி வாசிக்கும் எழுத்தாளரும் கூட. இவரைப் போன்று இலக்கியத் தரமும் பிராபல்யமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற  இன்னொரு எழுத்தாளர் இன்று தமிழ் எழுத்துலகில் இல்லை. அவருடைய எழுத்தின் குணங்கள் மிக நுண்ணிய ரசனை கொண்ட விமர்சகனையும் வியக்க வைக்கும். வெகு சாதாரண வாசகனையும் கவர்ந்து கொள்ளும். அவருடைய சம்பிரதாய கட்டுப்பாடுகளை மீறும் கதைகளில் காணும் ஆழம்,, கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் உருவாக்கப்படும் தீவிரம், எல்லாம் ஒரு விமர்சகனை வியக்க வைக்கும் அதே சமயம்   அவரது சொக்க வைக்கும் நடையழகும், வெகு சுலபமாக எவ்வித சிரமமும் கொடுக்காமல் எத்தனை நூறு பக்கங்களானாலும் அலுக்காமல் படிக்க வைக்கும் எளிய சின்ன சின்ன சம்பாஷணைகளாலேயே ஆன கதை சொல்லும் நேர்த்தி எல்லாம் எந்த சாதாரண வாசகனையும் மனம் கவரும்.. சாதாரணமாக நம்மில் பெரும்பாலாருக்கு வார்த்தைகளில் அடைபட மறுக்கும் எந்த சிக்கலான சம்பவமுமோ, அல்லது  சிந்தனையுமோ வெகு எளிதாக அன்றாடம் நாம் புழங்கும் வார்த்தைகளில் ஜானகிராமனால் சொல்லிவிட முடிகிறது. தன்னை அதிகம் சிரமப்படுத்திக்கொள்ளாத சாதாரண கதை படிக்கும் வாசகன் இத்தகைய எழுத்தின் ஆழத்தை உணர்த்து கொள்ளாமல் படித்துச் செல்லக்கூடும் தான். ஆனால் ஜானகிராமன் எழுத்து தரும் சுகானுபவத்தில் அவன்  தீவிர ஜானகிராமன் ரசிகனாகிவிடுகிறான் இதெல்லாம் போக, ஜானகிராமனின் எழுத்தில் காணும் பரிகாசமும் கேலியும்  யாரையும் துன்புறுத்தாத மென்மையும் விடம்பன குணமும் கொண்டது. இது எந்த ரக வாசகனையும் கவர்ந்து ரசிக்க வைக்கும்.

•Last Updated on ••Saturday•, 16 •July• 2011 21:30•• •Read more...•
 

மெய்த்து விட்ட ஒரு கசப்பான ஆரூடம் – (9 , 10 & 11)

•E-mail• •Print• •PDF•

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (9)

வெங்கட் சாமிநாதன்இது காறும் நான் எழுதியவற்றையும் எதிர்கொண்டு அபிப்ராயம் தெரிவித்தவர்களில் பெரும்பாலோர் தமிழ் சினிமா எப்படி இவ்வளவு வருஷங்களாக செயல்பட்டு வந்துள்ளதோ, அதன் அபத்த சம்பிரதாயங்கள் அத்தனையையும் எவ்வித கேள்வியும் ஒன்றுகூட எழுப்பாமல் அவ்வளவு அபத்தங்களையெல்லாம் சினிமாவுக்கு இயல்பானவையாக ஏற்று தம் பொதுப்புத்தியைத் தொலைத்துவிட்டவர்களாக இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அந்த அபத்தங்களைக் கொண்டாடும் சிறப்பிக்கும் பின்னர் அவை பற்றி இறுமாந்து ஆகாயத்தை நோக்கி மூக்கை உயர்த்தும் மன நிலையில் இருப்பது தெரிகிறது. இவர்கள் மட்டுமல்ல. இவர்கள் தமிழ் சமுதாயத்தின் மாதிரிகள் தானே. இணையத்திற்கென்று சமுதாய குணத்தை மீறிய குணம் கொண்டவர்களா இங்கு வந்துவிடப் போகிறார்கள்? அது மட்டுமல்ல. அந்த அபத்தங்கள் அத்தனையையும் நியாயப்படுத்தும் ஆவேசமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். “நீங்கள் சொல்றதெல்லாம் சரிதான். ஆனால் படம் எடுக்கும் சிரமங்களும், போட்ட பணத்தை எடுத்து பின் லாபம் பண்ணும் சிரமங்களும் உங்களுக்கென்ன தெரியும்?” என்ற கேள்வி அடிக்கடி முன் வைக்கப்படுகிறது. “சினிமான்னா அப்படித்தாங்க இருக்கும்? வாழ்க்கை அவதிகள் தான் எப்போதும் இருக்கே. அதை மறந்து இரண்டு மூணு மணி நேரமாவது ஜாலியா பொழுது போக்கத்தானே சினிமாவுக்கு போறோம்.” என்று ஒரு நியாப்படுத்தல். “சினிமாங்கறது மக்களுக்காகங்க. மக்களை ஒதுக்கிட்டு நாம வாழ்முடியாதுங்கறத் நாம் புரிஞ்சிக்கணும்.

•Last Updated on ••Wednesday•, 13 •July• 2011 22:44•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் (71 & 72)

•E-mail• •Print• •PDF•

அத்தியயயம் 71

வெங்கட் சாமிநாதன்சீனுவாசன் மாத்திரமில்லை.எனக்கு ஒரு பரந்த உலகம் வெளியே விரிந்து கிடப்பதைக் காட்டியவர்கள். மற்றவர்களைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேன்.  சீனுவாசன் என் அறையில் வசித்த காலத்தில். வெளியூரில் வேலை பார்த்திருந்த காலத்திலும் அவர் அவ்வப்போது வந்து போவார். அவருடைய பாதிப்பு என்னை மாத்திரமல்ல.  என்னோடு அறையில் இருந்த நண்பரகள் அனைவரையும், அவர் தன் அன்பாலும் அக்கறையினாலும் பாதித்தார். வெளித் தோற்றத்தில் அவர் கொஞ்சம் பேச்சில் கடுமை காட்டுபவராக, கிண்டல் நிறைந்தவராக, கட்டுப்பாடுகள் மிகுந்தவராக, ஒரு அலட்சிய மனோபாவம்  மிகுந்தவராகத் தோற்றம் அளித்தாலும், அவர் போல் நண்பர்களின் கஷ்டங்களில், நட்புறவுகளில் பங்கு கொண்டு ஆழ்ந்த ஈடுபாடு காட்டியவர் இல்லை. வீட்டில் ஒரு பெரியண்ணாவின் கண்டிப்பும் வெளிக்காட்டாத பாசமும் அவரிடம் இருந்தன. அவரது கண்டிப்பில், கேலியில் மனம் கசந்திருந்த வேலுவுக்கு ஆலிவ் ஆயில் ஏதோ கொஞ்சம் தேவை அது கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், ரொம்ப அமைதியாக எதுவும் சொல்லாமல் கொள்ளாமல், அதைத் தேடி ஒரு காலன் டின்னில் கொண்டு வந்து, அல்ட்டல் எதுவும் இல்லாமல், “இந்தாய்யா, வேலு, இனி உங்களுக்கு ஆலிவ் ஆயில் கவலை தீர்ந்தது” என்று ஆலிவ் ஆயில் டின்னை எங்கள் முன் வைத்து  எங்களை யெல்லாம் திகைப்பில ஆழ்த்தியது ஒரு உதாரணம்

•Last Updated on ••Wednesday•, 13 •July• 2011 21:46•• •Read more...•
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் - (8)

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்இது காறும் நான் முழுவதுமாகப் பார்த்த படங்களைப் பற்றியே பேசி வந்திருக்கிறேன். சில பழைய படங்கள், நினைவிலிருப்பவை. அனேகமாக புதியவை மிகக் குறைவாகவே பார்த்திருக்கிறேன். தியேட்டருக்குப் போய்ப் படம் பார்ப்பது என்ற பழக்கம் விட்டு நாற்பது வருடங்களுக்கு மேலாயிருக்கும். ஃபில்ம் சொஸைடி திரையிடும் படங்களையோ அல்லது உலகத் திரைப்பட விழாக்களிலோ கிடைப்பது அவ்வளவையும் ஒரு வெறி  பிடித்துப் பார்ப்பதில் தான் பின் வந்த வருடங்கள் கழிந்தன. ஒரு விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதிலி ருந்து தமிழ்ப் படங்கள் அவ்வப்போது என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்ற காரணத்திற்காக தொலைக் காட்சியில் வருவனவற்றை மாதிரிக்கு அவ்வப்போது பார்ப்பதுண்டு. அப்படிப் பார்த்த அனுபவத்தில் தான் எண்பதுக்களுக்குப் பிறகு வெகுவாகப் பேசப்பட்ட நக்ஷத்திரங்கள், சூப்பர் ஸ்டார்கள், வெற்றிப் படங்கள், கலைத்தரம் மிக்கவை என்று சொல்லப்பட்டவை எல்லாம் பார்த்தது. வெகு சமீபத்தில் வந்த, புதிய பாதையில் செல்வனவாகச் சொல்லப்படும் படங்கள் பெரும்பாலானவற்றை நான் அவ்வப்போது தொலைக்காட்சியில் உதிரியாகக் காட்டப்படும் காட்சிகளைப் பார்த்த்தோடு சரி. ஒரு சிலவற்றை முழுதுமாகப்    பார்த்திருக்கிறேன். அவை சந்தர்ப்பத்தைப் பொறுத்து என்று சொல்ல வேண்டும். ஆதலால் முழுதுமாகப் பார்த்த சிலவற்றை வைத்தும், மற்றவற்றை படத் துணுக்குகளாகப் பார்த்ததையும் வைத்துத் தான் நான் பேசுகிறேன்.

•Last Updated on ••Friday•, 08 •July• 2011 22:15•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் .. (69 & 70)

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் 69

வெங்கட் சாமிநாதன் நண்பர்கள் திரும்பக் கூடத் தொடங்கிவிட்டார்கள். நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு குணச் சித்திரம். என்னையும் சேர்த்து. எல்லோரும் அலுவலக நேரம் போக மிகுந்த நேரத்தில் சேர்ந்து நெருக்கமாகப் பழகிக்கொண்டிருப்பது எனக்குப் பிடித்தது. வேலுவுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது எனக்குப் பெருமை சேர்த்தது. இதெல்லாம் தற்செயலாக நேர்ந்தது தான். இதே போல இன்னொருவருக்கு நான் வேலை வாங்கிக் கொடுத்துவிட முடியாது. செல்வாக்கே ஏதும் இல்லாத எனக்கு, சந்தர்ப்பங்கள் கூடி வந்ததால் கிடைத்த ஒன்றே அது அல்லாது என் சாமர்த்தியத்தால் அல்ல. இருந்தாலும் தேவசகாயத்துக்கும் வேலுவுக்கும் என்னிடம் சினேகம் நெருக்கமானது. இதனால் அல்ல. இதில்லாமலேயே அவர்கள் நல்ல நண்பர்களாகத் தான் முதலிலிருந்தே இருந்தார்கள் .உண்மையில் சொல்லப் போனால், அங்கு புர்லாவில் 1951லிருந்து 1956 வரை இருந்த அந்த ஆறு வருடங்களில் அந்த வீட்டில் என்னோடு குடியிருக்க வந்தவர்கள் எல்லோரும் நல்ல நண்பர்களாகத் தான் இருந்தார்கள். சுமார் இருபது பேர்கள் அவ்வப்போது வருவதும் பின்னர் இடம் மாறிப் போவதுமாக இருந்தாலும், யாருடனும் மனக்கசப்பு இருந்ததில்லை. யாரையும்  ”இனி நமக்கு ஒத்துவராது, நீங்கள் வேறிடம் பார்த்துப் போகலாம்” என்று சொல்ல நேர்ந்ததில்லை. கேலிகள் உண்டு. சில சமயங்களில் தெரியாது மனம் வேதனைப் படச் செய்ததுண்டு. அப்படியும் ஒரு தடவை நேர்ந்தது. ஆனால் அதைச் சொன்னால் படிப்பவர்களுக்கு சிரிப்பாகத் தான் இருக்கும்..

•Last Updated on ••Tuesday•, 28 •June• 2011 15:00•• •Read more...•
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் – (7)

•E-mail• •Print• •PDF•

- வெங்கட் சாமிநாதன் -மிக நல்ல படங்களாக, தமிழ் சினிமாவில் மாற்றங்களைக் கொண்ரந்த் படங்களாக்க் கொடுக்கப்பட்டுள்ள பட்டிய்லில் பல படங்களை நான் பார்த்ததில்லை. பழ்சிலிருந்து சிலவும், புதியனவற்றில் பலவும் நான் பார்த்ததில்லை.  அந்த நாள் படம் பார்த்திருக்கிறேன். அது ஒரு புதுமையான சோதனை முயற்சி என்றே எடுக்கப்பட்ட படம். அது சம்பிரதாயமான பாட்டு நடனம் போன்ற மசாலாக்களையும், நீண்ட கனல் கக்கும், அல்லது கத்திப் புலம்பி கண்ணீர் மல்கும் வசன்ங்களையும் தவிர்த்த ஒரு படம். கதை ஒரு துப்பறியும் கதை என்று ஞாபகம். அது சோதனை என்று பேசப்பட வாய்ப் பளிக்கும், இயக்குனருக்கு ஒரு வரி பெருமையாகப் பேச வாய்ப்பளித்த படம் என்பதற்கு மேல் அது தமிழ் சினிமாவில் எதையும் சாதிக்கவில்லை. தமிழ் சமூகம் சாதிகக விடவில்லை. மசாலாக்கள் தான் வீர் தீர வசன்ங்கள் தான் வேணும் என்று சந்தைத் தீர்ப்பைத் தந்தது. அது ஒரு நீர்க்குமிழியாக தோன்றி அடுத்த க்ஷணம் மறைந்துவிட்டது. ஒரு சின்ன ஓடையாகக் கூட அது தன்னை ஸ்தாபித்துக்கொள்ளவில்லை.

•Last Updated on ••Saturday•, 11 •June• 2011 20:47•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் (67 & 68)

•E-mail• •Print• •PDF•

(67) - நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் ஒரு நாள் ராஜா வந்திருந்தார் ஹிராகுட்டிலிருந்து. எப்போதாவது வந்து என்னைப் பார்த்து, எப்படி இருக்கிறேன் என்று விசாரித்துவிட்டுப் போவார். இப்படி அவ்வப்போது வரும்போது ஒரு நாள் சொன்னார், நான் ஒருத்தரை அனுப்பரேன். இங்கே ஹிராகுட்டில் வேலை கிடைச்சிருக்கு. அவரோட அவர் மனைவியும் இரண்டு சின்ன குழந்தைகளும். அவருக்கு இப்போதைக்கு வீடு கிடைக்காது போல இருக்கு. கொஞ்ச நாள் ஆகும். நீ இங்கே அவங்களை வச்சுக்கோயேன். வீடு கிடைக்கற வரைக்கும். அவர் பேர் கிருஷ்ணமூர்த்தி. இங்கேயிருந்து ஹிராகுட்டுக்கு பஸ்ஸில் போய்ட்டு வரலாம். அங்கே வீடு கிடைக்கலாம். இல்லையானால், அவர் இங்கே எந்த டிவிஷனுக்காவது மாத்திக்கலாம். என்ன சொல்றே?” என்று கேட்டார். அவர் என்னைக் கேட்பானேன்? நான் இங்கே ஊர் பேர் தெரியாத போது என்னை பஸ் ஸ்டாண்டிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து ஒரு மாதம் எனனை அவர் வீட்டிலேயே சப்பாடும் போட்டு ஆதரித்தவர். “நீங்க எப்ப வேணும்னாலும் யாரை வேணும்னாலும் அனுப்பலாம் எவ்வளவு  நாள் வேணும்னாலும் இருக்கட்டும். என்னைக் கேட்கவே வேண்டாம். இவருக்கு இடம் கொடுன்னு ஒரு சீட்டு எழுதி அனுப்புகிறவர் கையில் கொடுத்தால் போதும்.” என்றேன். இல்லடா சாமா உன்னோட இன்னும் நாலு பேர் இருக்காளே, என்றார். அது பரவாயில்லே பாத்துக்கலாம் என்றேன். அவருக்கு மெனக்கெட்டு இதுக்காக ஹிராகுட்டிலிருந்து வந்த காரியம் நடந்தது. இதுக்காக அவர் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கிறார் என்றால், நிஜமாகவே சிரமத்திலிருக்கும் மனிதராகத்தான் வருகிறவர் இருப்பார் என்பது நிச்சயம்.

•Last Updated on ••Friday•, 10 •June• 2011 17:48•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் (65 & 66)

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் 65

வெங்கட் சாமிநாதன் புர்லா வந்த பிறகு ஏற்பட்ட புதிய ஈடுபாடுகளில் ஒன்று, ஆங்கில தினசரி பத்திரிகை படிப்பதும், பத்திரிகைகள் வாங்குவதும். ஆங்கில தினசரி பத்திரிகை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். புர்லாவுக்கு வந்த ஆங்கில தினசரி பத்திரிகைகள் கல்கத்தாவிலிருந்து வரும். புர்லாவுக்கு வந்தவை அம்ரித் பஜார் பத்திரிகாவும், ஸ்டேட்ஸ்மன் –னும் ஸ்டேட்ஸ்மன் ஆங்கிலேயர் நடத்தும் பத்திரிகையாச்சே என்று அம்ரித் பஜார் பத்திரிகை பக்கம் மனம் சென்றது. அது ஒரு பெரிய ஸ்தாபனம். அனேகமாக ஆனந்த பஜார் பத்திரிகா என்னும் வங்காளி மொழி பதிப்பையும் அது வெளியிட்டு வந்தது. பெரும்பாலும் வங்காளிகள் இந்த் இரண்டு பத்திரிகைகளில் ஒன்றைத்தான் விரும்பிப் படிப்பார்கள்.  துஷார் காந்தி கோஷ் அதன் ஆசிரியர். அது நம்மூர் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், சுதேசமித்திரன், தினமணி, தினசரி போன்று தேசீய உணர்வு மிக்க பத்திரிகை சுதந்திர போராட்டத்தோடு தம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டவரகள். ஜுகாந்தர் என்று ஒரு வங்காளி பத்திரிகையும் கூட வந்தது. இன்னொரு பத்திரிகையும் ஆங்கில பத்திரிகை தான், கல்கத்தாவிலிருந்து வந்து கொண்டிருந்தது. பெயர்சரியாக நினைவில் இல்லை. ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்டாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதை இப்போது நினைவு கொள்ளக் காரணம் இடையிடையே அந்தப் பத்திர்கையும் வாங்கிக்கொண்டிருந்தேன் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில் அதில் எம்.என். ராய் தன் நினைவுகளை அவ்வப்போது எழுதிக்கொண்டிருப்பார். எம்.என். ராய் லெனின் காலத்திலிருந்து அவர் காலத்திய தலைவர்களுடன் உறவாடியவர். கம்யூனிஸ்ட் கட்சி தொடங்குவதற்கு என்று அல்லது கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் கொமின்டெர்ன் சார்பில் தொடர்பு வைத்துக் கொள்ள அனுப்பப் பட்டவர் என்று படித்த ஞாபகம். எந்த நாட்டுக்கு அவ்வாறு அனுப்பப் பட்டார் என்பது நினைவில் இல்லை.

•Last Updated on ••Tuesday•, 03 •May• 2011 20:39•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் 63 & 64

•E-mail• •Print• •PDF•

நினைவுகளின் சுவட்டில் – (62)

வெங்கட் சாமிநாதன்உடையாளூரை விட்டு வேலை தேடி வெளியேறி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். இரண்டு வருடங்களில் ஏதும் உடையாளூரில் மாற்றங்கள் இல்லை. விடுமுறையில் வந்து மறுபடியும் நிலக்கோட்டை மாமாவை, பாட்டியை எல்லாம் பார்த்ததில் எனக்கு சந்தோஷமாக இருந்தது. என் தம்பி கிருஷ்ணன் நிலக்கோட்டையில் என் இடத்தை எடுத்துக் கொண்டிருந்தான். கற்பரக்ஷையின் வளர்ப்புத்தாயாரைப் பார்த்தது, ஷண்முகத்தை மீண்டும் சந்தித்தது எல்லாம் மனதுக்கு நிறைவாக இருந்தது. இதை எழுதும்போது நினைத்துக்கொள்கிறேன், ஷண்முகத்தை அதற்குப் பிறகு நான் பார்க்க நேரவே இல்லை. இப்;போது (2010 வருடக் கடைசியில்) ஷண்முகம் எங்கே இருக்கிறானோ, என்ன செய்கிறானோ, தெரியவில்லை. இவ்வளவு அன்னியோன்யமாக வும், பல விஷயங்களில், ஒத்த அக்கறையும் பார்வையும் கொண்டவர்களாக் இருந்த ஒரு நண்பனை பார்க்கவோ நட்பைத் தொடரவோ இல்லாது போகும் என்று அன்று  நினைக்கவில்லை. ஆனால் இப்போது அது பற்றி நினைக்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது. 

•Last Updated on ••Tuesday•, 19 •April• 2011 21:30•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் (60 & 61)

•E-mail• •Print• •PDF•

நினைவுகளின் சுவட்டில் – (60)

வெங்கட் சாமிநாதன்அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னுடன் பேச நிறைய இருந்தது. கேட்க ஆயிரம் கேள்விகள். ஊர் எப்படி இருக்கிறது.? தமிழ் பேசறவா இருக்காளா? நான் எங்கே சாப்பிடுகிறேன்?. சாப்பாடு நன்றாக இருக்கிறதா? கூட யாராவது பெரியவா துணைக்கு இருக்கிறார்களா? நன்றாக ஒழுங்காக வேலை செய்கிறேனா? பெரிய அதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டு அவர்களிடம் நல்ல பெயர் வாங்குகிறேனா? இங்கே ஊரில் அப்பா அம்மாவிடம், மாமாவிடம் எப்படி இருந்தாலும், முன்னே பின்னே இருந்தாலும் பரவாயில்லை. பாஷை தெரியாத ஊரில், எல்லோரும் அவர்கள் காரியத்தைத் தான் பார்த்துக்கொள்வார்களே தவிர நமக்கு ஒரு கஷ்ட காலத்துக்கு எப்பவாவது உதவ வருவார்களே தவிர நாம் தான் நல்லபடியா அனுசரிச்சு நடந்துக்கணும்”….. இந்த மாதிரி தான் அப்பாவும் அம்மாவும் மாறி மாறி எனக்கு புத்திமதி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

•Last Updated on ••Friday•, 01 •April• 2011 16:05•• •Read more...•
 

நூல் அறிமுகம்: யாழ்ப்பாணப் புகையிலை: காக்க நாடனின் சிறுகதைத் தொகுப்பு!

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்காக்க நாடன் பெயரைக் கேட்டது முப்பது முப்பதைந்து  வருஷங்களுக்கு முன். எழுதுபதுகளின் பின் பாதியில் ஓவியர்கள் தாமோதரன், முத்துக்கோயா, இன்னும் சி.ராமச் சந்திரன் போன்ற சில அன்று தில்லியில் வாழ்ந்த மலையாள எழுத்தாளர்களும் பேசக்கேட்டு.  அவருடைய எழுத்தில் காணப் படும்  ஃப்ரெஞ்சு பாதிப்பு பற்றி அவர்கள் சொல்லிக் கேட்டதாக நினைப்பு. ஆனால் காக்கநாடனைப் படிக்கக் கிடைத்தது இப்போது தான். சாகித்ய அகாடமிக்காக நிர்மால்யா தமிழில் மொழிபெயர்த்துள்ள சிறு கதைகள் சிலவற்றின் தொகுப்பு “யாழ்ப்பாணப் புகையிலை” மலையாளத்திலிருந்து தமிழுக்கு நிர்மால்யா நிறையவே மொழி பெயர்த்து வந்துள்ளார். காக்க நாடன் கேரள சாகித்ய அகாடமி விஸ்வரூப பரிசு போன்றவை மட்டுமல்ல, தில்லி சாகித்ய அகாடமி பரிசும் பெற்றவர். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற மலையாள சிறு கதைத் தொகுப்பு என்று  இப்புத்தகத்தின் அட்டையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.

•Last Updated on ••Thursday•, 18 •October• 2012 21:40•• •Read more...•
 

நூல் அறிமுகம்: சீனா – விலகும் திரை

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்சைனா நமக்கு ஒரு வேண்டாத ஆனால் விலக்க முடியாத அண்டை ராக்ஷஸன். அசோகன் காலத்திலிருந்து தொடங்கலாம் அத்துடனான நம் நட்புறவை என்று ஒரு ரொமாண்டிக் கனவு கொண்டவர்கள் சொல்லலாம். நேரு போல. ஆனால் அது எப்போதுமே ஏகாதிபத்ய கனவுகளையே தன் பாரம்பரியமாக தன் தேசீய உணர்வாகக் கொண்ட நாடு என்பதையும் வரலாற்றுப் பிரக்ஞை கொண்டவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். 1962-ல் சைனா எல்லை தாண்டி வந்து ஆக்கிரமித்த பின்பும் நேரு சொனார்: சைனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 2000 வருஷங்களுக்கும் மேலாக எந்த சச்சரவும் இருந்ததில்லை என்று. நேருவுக்கும் தெரியும்  சைனா ஒரு ஆக்கிரமிப்பு மனம் கொண்ட நாடு என்று. ஆனால் அவரது ரொமாண்டிக் கனவுகள் அவர் கண்களுக்குத் திரையிட்டு விட்டன. சைனா தான் அதை நமக்கு நினைவுறுத்தியது. அதிலிருந்து அதனுடன் வம்புக்குப் போகாது ஒதுங்கி பயந்தே இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது. “ அவன் தான் மகா துஷ்டன்னு தெரியுமோல்யோடா, அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை. ஆனால் அதை நாம் இப்படி வெளிப்படையாகச் சொல்வதில்லை. என்னமோ சமாதான வார்த்தைகள் சொல்லி மூடி மறைத்து வருகிறோம். அதையே சிறந்த கொள்கையாக வழிமொழிய இரண்டு அரசியல் கட்சிகள் நம் மண்ணிலேயே வளர்ந்து வந்துள்ளன. நாட்டுப் பற்று உள்ளவர்களாக அவர்கள் என்றுமே தம்மைக் காட்டிக் கொண்டதில்லை. 

•Last Updated on ••Thursday•, 18 •October• 2012 21:40•• •Read more...•
 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்!

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் 1

வெங்கட சாமிநாதன்வருடங்களுக்கு மேலாயிற்று. நான் எழுதிய முதல் கட்டுரையிலே நாம் தமிழ் சமூகத்திலிருந்து என்னென்ன எதிர்பார்க்க்லாம். எது அறவே தமிழ்னுக்கு சித்திக்க இயலாத குண்ங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தான், திரும்பச் சொல்கிறேன்,. நான் எழுத முயன்ற முதல் முயற்சி. சித்திக்க இயலாத குண்ங்கள் என்றால் இனி வருங்காலத்தில் என்றுமே தமிழ்னுக்கு சித்திக்க இயலாது என்று நான் கருதுவதைச் சொன்னேன். நான் ஏதும் மரத்தடி கிளி ஜோஸ்யம் பார்த்தோ, ஆரூடம் பார்த்தோ, கை ரேகை சாஸ்திரம் படித்தோ, ஜாதகம் கணித்தோ, பூஜை அறையில் விளக்கேற்றி பூ போட்டுப் பார்த்தோ அல்லது ஏதோ பூசாரியைக் கூப்பிட்டு அவனை சாமியாட வைத்துக் கேட்ட சமாசாரமோ அல்ல. எனக்குக் கிடைத்த அனுபவத்தின் கசப்பில் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.

 

•Last Updated on ••Friday•, 08 •July• 2011 22:13•• •Read more...•
 

நினைவுகளின் சுவட்டில் (58 & 59 ) ....

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் 58

வெங்கட் சாமிநாதன்நாக்பூர் வந்து சேரும் வரை பயணம் எவ்வித விக்கினமும் இல்லாது இருந்தது. என்னை அவர்கள் துணைக்குச் சேர்த்துக் கொண்டது, “சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை” என்ற வாசகத்தை நம்பித்தான். ஜனங்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார். நாக்பூர் போய்ச் சேர மணி சாயந்திரம் நாலு ஆகிவிடும். இவர்களை அழைத்துக்கொண்டு, நாக்பூர் ஸ்டேஷனில் காத்திருக்கும் க்ராண்ட் எக்ஸ்ப்ரேஸோடு சேர்க்கப்படும் வண்டியைத் தேடி இடம் பிடிக்கவேண்டும். இந்த பாதையில் வருவது இது தான் முதல் தடவை. பிலாஸ் பூர் வரைக்கும் ஒரு தடவை வ்ந்திருக்கிறேன் தான். அது ஜெஸகுட்டாவில் இறங்க மறந்து தூங்கிவிட்டதால். என்னைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்த ஊர் பற்றி யெல்லாம் கேட்டு வந்தார் திருமதி கிருஷ்ணஸ்வாமி. எப்போதும் புதிதாகப் பழக நேரும்போது நடக்கும் பரிச்சயம் தான். ஆனால் அவரிடம் ஒரு சின்னப் பையனிடம் காட்டும் கரிசனத்தையும் உணர முடிந்தது. குழந்தை வேறு. அது அதிகம் பழக மறுத்தது. அன்றைய தினத்துக்கான சாப்பாடு உடன் கொண்டு வந்தத்தை நானும் பகிர்ந்து கொண்டேன். எல்லாம் ந்ன்றாகத் தான் இருந்தது.

•Last Updated on ••Monday•, 18 •April• 2011 17:39•• •Read more...•
 



'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

வெங்கட் சாமிநாதன் பக்கம்: கடந்தவை

வெங்கட் சாமிநாதன் பக்கம்

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.001 seconds, 0.39 MB
Application afterInitialise: 0.070 seconds, 2.37 MB
Application afterRoute: 0.083 seconds, 3.11 MB
Application afterDispatch: 1.272 seconds, 25.43 MB
Application afterRender: 1.362 seconds, 27.44 MB

•Memory Usage•

28840024

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'glk2dmh3rm5kltnb9qd7fm1db2'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1715168588' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'glk2dmh3rm5kltnb9qd7fm1db2'
  4. INSERT INTO `jos_session` ( `session_id`,`time`,`username`,`gid`,`guest`,`client_id` )
      VALUES ( 'glk2dmh3rm5kltnb9qd7fm1db2','1715169488','','0','1','0' )
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 44)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT c.*, s.id AS sectionid, s.title AS sectiontitle, CASE WHEN CHAR_LENGTH(c.alias) THEN CONCAT_WS(":", c.id, c.alias) ELSE c.id END AS slug
      FROM jos_categories AS c
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = c.SECTION
      WHERE c.id = 23
      LIMIT 0, 1
  11. SELECT cc.title AS category, a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON a.catid = cc.id
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE 1
      AND a.access <= 0
      AND a.catid = 23
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-05-08 11:58:08' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-05-08 11:58:08' )
      ORDER BY  a.created DESC,  a.created DESC
      LIMIT 0, 1500
  12. SELECT cc.title AS category, a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON a.catid = cc.id
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE 1
      AND a.access <= 0
      AND a.catid = 23
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-05-08 11:58:08' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-05-08 11:58:08' )
      ORDER BY  a.created DESC,  a.created DESC
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 44 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 44
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 31
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-05-08 11:58:08' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-05-08 11:58:08' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

 - வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வெங்கட் சாமிநாதன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
)- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கணையாழி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கணையாழி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட் சாமிநாதன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெங்கட்சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வெங்கட் சாமிநாதன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வெங்கட் சாமிநாதன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வெங்கட் சாமிநாதன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வெங்கட் சாமிநாதன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வெங்கட் சாமிநாதன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வெங்கட் சாமிநாதன் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வெங்கட் சாமிநாதன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- வெங்கட் சாமிநாதன் -= - வெங்கட் சாமிநாதன் -
- வெங்கட் சாமிநாதன் -= - வெங்கட் சாமிநாதன் - 
வெங்கட் சாமிநாதன் -= வெங்கட் சாமிநாதன் -
)- வெங்கட் சாமிநாதன் -=)- வெங்கட் சாமிநாதன் -
- கணையாழி -=- கணையாழி -
- வெங்கட் சாமிநாதன்=- வெங்கட் சாமிநாதன் 
- வெங்கட் சாமிநாதன்  -=- வெங்கட் சாமிநாதன்  -
- வெங்கட் சாமிநாதன் -=- வெங்கட் சாமிநாதன் -
- வெங்கட் சாமிநாதன் -=- வெங்கட் சாமிநாதன் - 
- வெங்கட்சாமிநாதன் -=- வெங்கட்சாமிநாதன் -
வெங்கட் சாமிநாதன்=வெங்கட் சாமிநாதன்
வெங்கட் சாமிநாதன்=வெங்கட் சாமிநாதன் 
வெங்கட் சாமிநாதன் -=வெங்கட் சாமிநாதன் -