பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

நூல்: இலங்கை வாழ் தமிழர் வரலாறு

•E-mail• •Print• •PDF•

- பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை. -முன்னுரை

- ஈழநாட்டின் வடபாகத்திலிருந்து செங்கோலோச்சிய அரசரின் வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக் கூறுகின்றது இந்நூல். கி. பி. 1519 முதல் கி. பி. 1565 வரை யாழ்ப்பாணத்தை அரசாண்ட சங்கிலி என்பவனைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட சங்கிலி என்னும் நாடக நூலின் ஒரு பகுதியாக அமைந்த இவ்வரலாறு பலர் வேண்டுகோளுக்கிணங்கத் தனிநூலாக வெளியிடப்படுகின்றது. ஈழத்துத் தமிழ் மக்களின் வரலாற்றைப் பற்றிய விரிவான நூல் ஒன்று மிகவும் விரைவில் வெளிவரும். இந்நூலை ஆக்குங்கால் உடனிருந்துதவிய நண்பர்க்கும் ஆயோலை தூக்கி ஆராய்ந்த அன்பர்க்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். நூலினை நல்ல முறையில் அச்சிட்டுதவிய சுதந்திரன் அச்சகத்தார்க்கும் எம்நன்றி உரித்து. குற்றம் களைந்து குணங்கொண்டு எம்மை ஊக்குவித்தல் பெரியோர் கடன்.                க. கணபதிப்பிள்ளை, பல்கலைக்கழகம், பேராதனை, 20-8-1956 -

சரித்திரகாலத்துக்கு முந்திய யாழ்ப்பாணம்

இராமாயணத்தினின்று இலங்கை இராவணனால் ஆளப்பட்டுவந்தநாடு என அறிகின்றோம். இராவணன் அசுரவமிசத்தைச் சேர்ந்தவன். ஆரியர் இந்தியாவுக்கு வந்த போது தாசர் என்னுஞ் சாதியாரோடு போராடினர் என இருக்குவேதம் முதலியவற்றால் அறிகின்றோம். அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த நாகசாதியினரையே ஆரியர், ‘அசுரர்’ என்றும் ‘தாசர்’ என்றும் அழைத்தனர் என்பது அறிஞர் கருத்து. நாகர் என்னும் பெயர் வேதங்களில் வழங்கப்படவில்லை. எனினும், இருக்குவேதத்தில் அசுரர் அல்லது தாசரைப்பற்றிப் பேசுமிடத்து, ‘அஹி’ (பாம்பு) என்ற சொல் வருகின்றது.

“விருத்திரனை இந்திரன் வச்சிராயுதத்தினால் அடித்தபோது, வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் போல் அஹி என்பான் வீழ்ந்து கிடந்தான்

இதினின்றும். பிறசான்றுகளினின்றும், நாகரை அசுரரென அழைத்தல் வழக்கமாய் இருந்ததெனத் தெரிகின்றது.

அடுத்து, புராண காலத்தில் நாக அரசர்கள் கடலுக்குக் கீழேயுள்ள பாதாளத்திலிருந்து அரசாண்டனர் எனப் புராணங்கள் கூறும். இக்குவாகுவின் மகனான அரியாசவன் என்பான் மகள் யாதுவை, தூயவர்மன் எனும் நாக அரசன் கடலுக்குக் கீழேயுள்ள நாட்டிற்குக் கொண்டு சென்றான் எனவும், அந்நாட்டின் பெயர் ‘இரதினத்துவீபம்’ எனவும், அந்நாட்டிலுள்ளோர் நாவாய் பல வைத்திருந்தனர் எனவும், அவர் கடல் வணிகஞ் செய்தனர் எனவும், முத்துக் குளித்தனர் எனவும் அரிவமிசம் என்னும் புராண நூல் நவிலும் அசுரர் என்பார் திராவிடரென ஆராய்ச்சியாளர் முடிபுக்கு வந்திருக்கின்றனர்.

கௌதம புத்தர் மூன்று முறை இலங்கைக்கு வந்ததாக மகாவமிசம் கூறும். முதன்முறை மகியங்கனை என்னும் இடத்திற்கும், இரண்டாம் முறை நாகதீபத்துக்கும், மூன்றாம் முறை கலியாணி என்ற பெயருடைய களனி என்னும் இடத்துக்கும் வந்தார் எனவும், நாகதீபத்திலும் கலியாணியிலும் நாகர்வசித்தனர் எனவும், நாகதீபத்திலுள்ள அரசகுடும்பத்தில் அரசுகட்டில் ஒன்றன் பொருட்டாக ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்ப்பதற்காக வந்தார் எனவும் அந்நூல் நவிலும். மேலும் நாகதீபத்தில் உள்ள அரச குடும்பத்தின் உறவினர் கலியாணியில் இருந்தனரெனவும் அப்பாளி நூல் கூறும்.

இதனின்றும், இலங்கையின் ஒரு பெரும் பிரிவில், பண்டைக்காலத்தில் நாகர்குடி பரவியிருந்ததெனத் தெரிகின்றது. இக்கருத்தினை, கி. பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டளவில் எழுந்த மணிமேகலையும் வலியுறுத்தும். வட இலங்கையிலுள்ள நாகர் குடியிருப்பிற்குப் பண்டைய நாட்களில் தலைநகராய் இருந்தது கந்தரோடை என்னும் நகர் என ஆராய்ச்சியாளர் கருதுவர். மேலும் இந்தியாவிலிருந்து சங்கமித்தை புத்தகாயாவிலிருந்த புனித வெள்ளரசக்கிளையை இலங்கைக்குக் கொண்டுவந்த போது இலங்கையின் வடபகுதியிலுள்ள சம்புகோளம் என்னுந் துறையில் வந்திறங்கினள் என மகாவமிசம் கூறும்.

பண்டைக்காலத்தில் வடஇலங்கை கிரேக்க உரோமர்களோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. இந்த உண்மை அங்கு கண்டெடுத்த கிரேக்க உரோம நாணயங்களினால் தெரிகின்றது.

நாகதீபமென்னும் பகுதி எங்குள்ளதெனச் சரித்திர ஆராய்ச்சியாளர் தடுமாறியிருக்கையில் வல்லிபுரக்கோயிலிலே செப்பேட்டு;ச்சாசனம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதின்படி வட இலங்கையையே பண்டைக் காலத்தில் நாகதீப மெனக் குறித்தனர் எனத் தெரிந்தது. விசயன் பிறப்பதற்கு முன்னரேயே நாகதீபம் (வடஇலங்கை) மிகவும் செழிப்புள்ள பெரிய வணிகத்தலமாக விளங்கியது. பின்னர் இவ்வடபகுதியில் வாழ்ந்த நாகசாதியினர் காலத்துக்குக் காலம் தமிழரோடு கலப்பாராயினர்.

அதனால் அண்மையிலிருக்கும் தமிழகத்திலிருந்து பலகுடிகள் வந்திறங்கின. காலப்போக்கில் வடஇலங்கை தமிழக் குடியிருப்பாக மாறியது. பல்லவ காலத்தில் வாழ்ந்த சைவநாயன்மார் இலங்கையின் வடபகுதியிலுள்ள திருக்கேதீச்சரம், திருக்கோணாமலை ஆகிய தலங்களைப் பாடியிருப்பதும் இங்கு நோக்கத்தக்கது. சைவசமயத்தை மேற்கொண்டொழுகிய தமிழர் இப்பகுதிகளில் வாழ்ந்தனர் என்பது இதனால் அறியப்படுமன்றோ!

இதுவரை பெரும்பாலும் புராணவரலாறுகளைக் கொண்டும் மகாவமிசத்தில் சொல்லப்பட்டவற்றைக் கொண்டும் கர்ணபரம்பரைக் கதைகளைச் சேர்த்தும் ஒருவாறு இப்பகுதியின் பழைய வரலாற்றைத் தொகுத்துக் கூறினோம். இனி, பிறசரித்திரச் சான்றுகளின் துணைக் கொண்டு பிற்கால வரலாற்றினை ஒருவாறு ஆராய்வாம்.

உக்கிரசிங்கன் தொடக்கம் பாணன் வரை

பண்டைக்காலத்திலே, வட இலங்கை நாகசாதியினர் குடியிருப்பாக இருந்த காலத்து, சிங்கைபுரம் அல்லது சிங்கைநகர் என்று பெயர் கொண்டு விளங்கிய நகரத்திலே கலிங்கதேசத்திலிருந்து வந்து குடியேறிய குடும்பங்கள் சில வாழ்ந்து வந்தன. உத்தரப் பிரதேசமென்று மகாவமிசம் குறிப்பிடும் இப்பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறிய தமிழ்க் குடும்பங்கள் பல வாழ்ந்து வந்தன. இக்காலப் பகுதியில் சிங்கள அரசர்கள் அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையின் பிற பகுதிகளை ஆண்டு வந்தனர்.

மகாவமிசம் எடுத்து மொழிந்த அரசபரம்பரையின் வரலாற்றைத் தொடர்ந்து கூறும் சூளவமிசம் மேலும் ‘ஆறு இராசாக்கள் காலம்’ என்னும் பிரிவில் இவ்வுத்தரப் பிரதேசத்தில் கலகங்கள் முறைக்கு முறையெழுந்தன வெனவும், அவற்றை அனுராதபுரத்திலிருந்தரசாண்ட அரசரி;ன் சேனைகள் அங்குப் போய் அடக்கி வந்தனவெனவும் இயம்பும். சீலமேகன் என்னும் சிங்கள அரசன் மகன் மகிந்தன் என்பான் மாதோட்டத்தில் எழுந்த புரட்சியை அடக்கி, உத்தரதேசத்தைத் தனது ஆணைக்குள் ஆக்கினான் என அந்நூல் கூறும்.

ஈண்டுக் குறிப்பிடு:ங் காலத்திலே கலிங்க தேசத்தினின்று வந்து வட இலங்கையிற் குடியேறிய குடும்பங்களுக்கு உக்கிரசிங்கனென்பான் தலைவனாக இருந்தான் என ஊகிக்கக் கிடக்கின்றது. இவனைக் குறித்து யாழ்ப்பாணவைபவமாலையும், கைலாய மாலையும் எடுத்து மொழியுமேயன்றித் தென்னிந்திய வரலாறோ, சூளவமிசமோ, கல்வெட்டுக்களோ யாதுங் கூறா குறித்த உக்கிரசிங்கன் தன் காலத்து வாழ்ந்த ஏனைய உத்தரதேசத் தலைவரோடு சேர்ந்து அனுராதபுரத்திலிருந்தாண்ட சிங்கள அரசருக் கெதிராகக் கலகங்கள் விளைத்துத் திரிந்தான் என எண்ண இடமுண்டு. சூளவமிசம் உத்தரப்பிரதேசத்தைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் தருங் குறிப்புக்களைப் பார்க்கும் பொழுது வட இலங்கைக்கும் தனியரசொன்று இருந்ததென நாம் ஊகிக்கக் கிடக்கின்றது.

அக்காலத்திலும் தமிழத் தலைவர்கள் அனுராதபுர அரசின்கீழ் மிகுந்த செல்வாக்குப் பெற்ற பிரதானிகளாயிருந்து ஆட்சி செலுத்தின ரென்பது சூளவமிசத்திற் காணப்படும் பொத்தக் குட்டன் என்பான் வரலாற்றினின்றும் தெரிகின்றது.

அன்றியும் அனுராதபுரம் சிங்கள நாட்டுத்தலைநகராய் விளங்கிய காலத்துத் தமிழ் அரசரும் காலத்துக்குக்காலம் அங்கு ஆண்டு வந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்னும் சிங்கள அரசர் சிலர் அரசியற் றொல்லைகள் ஏற்படுங்காலத்து வட இலங்கைக்குச் சென்று அங்கு தங்காலத்தை அமைதியாகக் கழித்தனர் என்றும் தெரியவருகின்றது.

பின்னர் மகிந்தன் அனுராதபுரத்து அரசபீடத்தேறி இரண்டாம் மகிந்தன் என்னும் பேருடன் ஆண்டு வருங் காலத்தில் அவ்வரசினுக்கு உரிமை கோரித் தப்புளன் முதலியோர் அவ்வரசினைக் கவரும் பொருட்டு மகிந்தனோடு போர் புரிந்து கலகம் விளைத்து வந்தனர். அக்காரணத்தால் நாட்டில் அமைதி குன்றியது. அந்நிலையைப் பயன்படுத்தி வட பகுதியில் வலிமையோடு விளங்கிய உக்கிரசிங்கன், வட பகுதியிலுள்ள தலைவர்களை யெல்லாம் அடக்கியபின், மாற்றார் கைக்கு இலகுவில் படக்கூடிய கடற்கரைப் பட்டினமாகிய சிங்கைநகரைத் தன்தலைநகராகக் கொள்ளாது அங்கிருந்து வெளியேறிப் பாதுகாக்கக் கூடியதும். மாற்றார் கைக்கு எளிதில் அகப்பட முடியாததும், நிலப்பிரப்பினால் சூழப்பட்டதும், பழைய நாகர் தலைநகராயிருந்ததுமான கந்தரோடை என்னும் நகரத்தினைத் தன் தலைநகராக்கினான். ஆளும் அரசனைத் தொலைத்து நாட்டிற் கலகங்கள் ஏற்படுங் காலங்களில் வலிமையுள்ளான் ஒருவன். தன் வலிமையினால் ஆங்குத் தன் ஆட்சியை நிறுவித் தானே அரசானதல் சரித்திரங் காணாத தொன்றன்று.

இவ்வாறு அரசுகட்டிலேறிய உக்கிரசிங்கன் “மாவிட்டபுரம்” என இப்பொழுது வழங்கும் ஊரில், தென்னிந்தியாவிலிருந்து உடல்நலங் காரணமாக வந்திருந்த “மாருதப்புரவீகவல்லி” என்னும் அரச கன்னிகையைக் கண்டு அவளைத் தன் வாழ்க்கைத் துணைவியாக ஆக்கிக் கொண்டான் என்று கூறும் வரலாறு இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தனர். அவர்களுள் ஒருவனாகிய சயதுங்கவரராசசிங்கன் தந்தையின் பின் செங்கோலோச்சினான்.

இஃது நிகழுங்காலையில் அனுராதபுரத்தினை முதலாஞ்சேனன் (கி. பி. 831 - 851) ஆண்டு கொண்டிருந்தான். இதே காலத்தில் தென்னிந்தியாவில் வலிமையோடிருந்த பல்லவ அரசு வலி குன்றியது. முதலாம் பாண்டியப் பேரரசு தலை தூக்கத் தொடங்கியது.

முதலாஞ்சேனன் காலத்துப் பாண்டிய அரசனொருவன் இலங்கை அரசினைக் கைப்பற்றும் நோக்கத்துடன் வட இலங்கையில் வந்திறங்கினானென சூளவமிசமெனும் பாளிநூல் கூறும். இப்பாண்;டிய அரசன், வரகுணபாண்டியனென்னும் பராந்தக நெடுஞ்சடைநன் மகன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் ஆவன். பாண்டியன் வந்திறங்கியதை அறிந்த சிங்கள அரசன் அவனுக்கெதிராகப் படையொன்றினை யனுப்பினான். இச் சிங்களப்படையைப் பாண்டியமன்னன் எளிதிற் தோற்கடித்து உத்தரதேசத்தைக் கைப்பற்றி “மகாதாலித்த காமம்” என்னம் ஊரில் பாடி வீடமைத்துத் தன்படையுடன் இருந்தான். உத்தரப்பிரதேசம் தமிழ்க்குடியிருப்பாக இருந்ததனால் அங்கு வாழ்ந்தோர் பாண்டியன் பக்கஞ்சோர்ந்தனர். அதனால் பாண்டியப்படை இருமடங்கு வலியுற்றது. இவ்வாறு தன்னொடு சேர்ந்த இலங்கைத் தமிழ்ப்படையின் உதவி கொண்டு, தட்டுத் தடக்கின்றி அனுராதபுரத்தேகி அந் நகரைத் கைப்பற்றினான்.

எனினும் பாண்டியப்படை வட இலங்கைக் கரையில் இறங்கியபோது, அக்காலத்து அங்கிருந்து ஆணை செலுத்திய தலைவனாகிய செயதுங்கவரராசசிங்கன் அவனை எதிர்த்தான் போலும் அதனால் போர் மூண்டது. அப்போரில் செயதுங்கவரராசசிங்கன் மடிந்திருக்க வேண்டும். பின்பு பாண்டியன் நாட்டைவிட்டுச் சென்றபோது கலகங்களும் குழப்பங்களும் இருந்து வந்தன. இதனைக் கண்ணுற்ற சூழ்ச்சித்திறனும் வலிமையும் படைத்த பாணன் ஒருவன் தருணத்தைத் தப்ப விடாது குடிகளை யடக்கித் தானே அரசனானான்.

செயதுங்க வரராசசிங்கன் வழித்தோன்றல்கள் விசயகூழங்கைச் சக்கரவர்த்p காலம் வரை நாட்டையாண்டு வந்ததாக யாழ்ப்பாண வைபவமாலை ஒன்றே கூறும். பாணனைப்பற்றிய பரம் பரைக்கதைகளை நவிலும் பிறசான்றுகள் எவையும் இதைப்பற்றி கூறிற்றில. சரித்திரத்தல் சடுதியில் பதவி பெற்று உயர்ந்தோர் போலவே இவனும் பெருமிதமுற்றுத் தன்பெயரையும் புகழையும் நிறுத்தும் வண்ணம், தன் பெயரினால் ஒரு சிறு பட்டினத்தை நிறுவி அதனை யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டனன் போலும். இதுவே பரம்பரைக் கதைகளினின்று நாம் எடுக்கக்கூடிய வரலாற்றுக்கிடக்கை.

பாணன் தொடக்கம் ஆரியச்சக்கரவர்த்தி வரை

ஒன்பதாம் நூற்றாண்டின் பி;ற்பகுதியில் இந்தியாவில், சோழப் பேரரசின் காலம் தொடக்குகின்றது. இது ஏறத்தாழ கி; பி. 840க்குப் பின்னாக இருக்கலாம். இக்காலத்துப் பராந்தக சோழன் (கி. பி. 907 - 956) இலங்கைக்குப் படையெடுத்து ஆண்டு வந்தவன் உதயன் (கி.பி.945 - 953) ஆவன். இச்சிங்கள அரசன் வடஇலங்கையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தினானோ தெரியவில்லை@ இதைப்பற்றிய குறிப்பேதும் சூளவமிசத்தில் இலது.

பாணனும் அவன் பரம்பரையினரும் யாழ்ப்பாணத்தில் ஒரு சிறு பாகத்தையே ஆண்டிருத்தல் வேண்டும். ஏனைய பகுதிகளை வேறு வேறு தமிழ்த்தலைவர்கள் ஆண்டனர் போலும். ஒரு குடைக்கீழ் ஒரு தனியரசன் யாழ்ப்பாணம் முழுவதையும் ஆண்டான் என்பதற்கு ஆதாரமெதுவும் இல்லை.

நிலைமை இவ்வாறிருக்க யாழ்ப்பாணக் கடலெங்கணும் சோழக்கடற்கரை உலாவித்திரிந்தது. யாழ்ப்பாணத்து நாகர் கோயிலுக்கு அண்மையிலுள்ள நெய்தற் கிராமம் ஒன்றிற்குச் ‘செம்பியன் பற்று’ என்ற பெயர் இன்றும் உளது. சோழப்படைகள் இப்பகுதியில் வந்திறங்கினர் என்பதை இது வலியுறுத்தும். கி. பி. ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டுகளில் சிங்கள மன்னர் அனுராதபுரத்தை விடுத்து புலத்திநகர் எனப்படும்; பொலநறுவையைத் தமது தலைநகராக்கிக் கொண்டனர். செம்பியன் பற்றிலிருந்து பொலநறுவைக்கு நேராகச் செல்லப்பெருந்தெரு ஒன்று அமைந்திருந்தது. ஆகையால் சோழர் தமது சேனைகளைச் செம்பியன் பற்றில் இறக்கி அத்தெருவினூடாகப் பொலநறுவைக்கு நடத்திச் சென்றனர் போலும் அன்றியும் மாவிட்டபுரப்பகுதியில் ஓரிடம் ‘வளவர் கோன் பள்ளம்’ என்னும் பெயரால் இன்றும் வழங்குகிறது. சோழர் இப்பகுதியில் பெரிதும் நடமாடினர் என்பதற்கு இதுவும் சான்று பகரும்.

இஃதிங்ஙனமிருக்க, இராட்டிரகூட அரசனான மூன்றாம் கிருட்டினன் (கி. பி. 940 - 967) என்பவன் தக்கோலம் என்னும் ஊரில் நடந்த போரில் பராந்தக சோழனை முறியடித்தான். அதனால் இதுகாறும் முன்னேறி வந்த சோழவரசு சிறுகாலந் தடையுற்றது. தக்கோலத்தில் வெற்றியீட்டிய கிருட்டினன் வெற்றிவிருதுடன் தன் புகழை நிலைநாட்டப் பெருமிதத்துடன் எங்கணுந் திரிந்தான் என்பதை இராமேச்சரத்தில் அவன் நாட்டிய கல்வெட்டுச் சான்றுபகரும். அவன் இராமேச்சரம் வந்த நாட்களில் இலங்கையின் வட கோடியிலுள்ள நாகதீபத்திற்கும் (நயினாதீவு) வந்தனனெனச் சூளவமி கூறும். இவ்வரசன் வெற்றி வருகையைக்கேள்வியுற்ற சி;ங்களவரசன் நான்காம் மகிந்தன் (கி. பி. 956 - 972) தனது சேனாதிபதி சேனன் என்பானை யனுப்பி அவனைத் தோற்கடித்தான் என்றும், பின்னர் குறிப்பிட்ட இராட்டிரகூட அரசனுடன் நட்புறவு பூண்டு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டான் என்றும், சரித்திரத்தை ஒருமுகமாய்க் கூறிச் செல்லும் தன் இயல்புக் கிணங்க மெழுகிக் கூறும் அந்நூல். இதுகாறும் பாண்டிய சோழ நெருக்கங்களினால் மிகத் தளர்ந்திருந்த சிங்கள அரசு இக்காலத்துச் சிறிது தழைக்கத் தொடங்கியது. அதனால் பழையபடி சிங்களவருடைய ஆதிக்கம் யாழ்ப்பாணத்திலும ஒருசிறிது பரவிற்று எனக் கொள்ளலாம்.

தக்கோலப் பெரும் போரின் விளைவாகச் சிலகாலம அடங்கிக் கிடந்த சோழப் பேரரசு. பின்பு சுந்தரச் சோழன் பட்டத்துக்கு வந்ததும் முன்னேறத் தொடங்கியது. கி;. பி. 1001ம் ஆண்டிற்கும் 1004ம் ஆண்டிற்கும் இடையில் முதலாம் இராசராசன் (கி.பி 985 - 1016) இலங்கைக்குப் படையெடுத்துவந்து வடபகுதியையும் தனதாட்சிக்குள்ளாக்கினான். இதனால இதுகாறுஞ் சிறிது சிறிதாக முன்னேறி வந்த யாழ்ப்பாண அரசு கி. பி. 1070 வரை, இலங்கையின் ஏனைய பாகங்களைப் போலவே, சோழப் பெருமன்னர் ஆட்சிக்குக் கீழ் இருந்து வந்தது. சோழப் படைவீரர் போய் பிசாசுகள் போல் இரத்த வெறி கொண்டு எங்குந் திரிந்து நாட்டிலுள்ள புத்தபள்ளிகளையும் தவச்சாலைகளையும் சூறையாடிப் பாழ்படத்தினரெனச் சூளவமிசம் புலம்பும். ஆனால் அண்மையில் திருக்கோணாமலையில் கண்டெடுத்த கல்வெட்டொன்றினால் இராசராசச் சோழன் காலத்து ‘இராசராசப் பெரும் பள்ளி’ என்னும் பெயருடன் ஒரு புத்தபள்ளி யமைத்து அதற்கு மானியமும் வழங்கப் பட்டது என அறிகிறோம். பின் முதலாம் குலோத்துங்கசோழன் (கி. பி. 1070 - 1120) ஆட்சிக்கு வந்த காலத்து அவன் தளபதி கருணாகரத் தொண்டைமான கலிங்கமெறிந்ததோடு அமையாது இலங்கையையும் கைப்பற்றினானெனக் கலி;ங்கத்துப்பரணி என்னும் நூல் இயம்பும் கருணாகரத் தொண்டைமானே தொண்டைமானாற்றை வெட்டியவனாவான். கரணவாய் வெள்ளைப் பரவை ஆகிய இடங்களில் விளையும் உப்பை இவ்வாற்றின் ஊடாகக் கொண்டு சென்று கப்பல்களில் ஏற்றிச் சோழநாட்டுக்கு அனுப்பினானென இராசநாயக முதலியார் கூறுவர்.

குலோத்துங்க சோழனுக்குப்பின் சிங்கள மன்னர்களாகிய முதலாம் விசயவாகு, முதலாம் பராக்கிரமபாகு ஆகியோர் காலத்தில் யாழ்ப்பாண அரசின் நிலையைப் பற்றிய செய்தி எதுவும் நன்கு தெரியவில்லை. இவ்விரு மன்னர் காலத்தும், இலங்கை முழுவதும், ஒரு முடிக்கீழ் இருந்து வந்தது எனினும் வட இலங்கையில், பராக்கிரமவாகுவின் ஆட்சிக் காலத்திலும் உரிமைப் போர் நடை பெறாமலில்லை. பராக்கிரமவாகு அரசுகட்டிலேறிய பதினாறாமாண்டிலே (கி. பி. 1168 - 1169) மாதோட்டப் பகுதியில் வாழ்ந்த தமிழர் இவ்வரசனின் ஆட்சிக்குக்கீழ் அடங்கி வாழ்வதிலும் இறந்து படுதலே நன்றெனத் துணிந்து புரட்சிக்கொடியை உயர்த்தினர். இப்புரட்சியினை யடக்க, வலிமிக்க மன்னனாகிய முதலாம் பராக்கிரமவாகு தன் ஆணைக்குட்பட்ட நாற்பெரும் படைகளையும் மாதோட்டத்திற்கு அனுப்பவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இவ்வாறு சூளவமிசம் கூறும். அஃதவ்வாறாயின் அப்புரட்சி எத்தணை வலிபடைத்ததாய் இருந்திருத்தல் வேண்டும்,?

முதலாம் பராக்கிரமவாகுவிற்குப் பின் இலங்கையில் அரசுரிமை பற்றிய குழப்பங்கள் இருந்தமையால் அங்கு நிலையான ஆட்சி இருக்கவில்லை. அவனுக்குப்பின் தளபதிகள் பலர் நாட்டை ஆண்டு வந்தனர். இதற்கிடையில் பாண்டிய பரம்பரையில் இருந்து வந்து சிங்கள அரச குடும்பத்தோடு தொடர்பு பூண்டிருந்த பராக்கிரம பாண்டியன் என்பானும் சில காலம் ஆண்டான். இவ்வாறு பராக்கிரம பாண்டியன் அரசாளுகையில் கலிங்க தேசத்திலிருந்து கேரளப் படையுடன் மாகன் என்பான் சிங்கள அரசுக்கு உரிமைகோரி வட இலங்கையில் வந்து இறங்கினான். இவன் செயவாகு என்பவனோடு சேர்ந்து முதல் வட இலங்கை முழுவதையும் தன் ஆணைக்குள் அடக்கிக் கோட்டை கொத்தளங்கள் அமைத்தனன். “கொட்டசார”, கங்காதளாக, காகாலய, பதீ, குறுந்தி, மனாமத்த. மாகிந்த. மன்னார், பலச்சேரித்துறை, வாலிகாகம, கோண, கோனுசு, மதுபாதவதித்த சூகரதித்த ஆகிய இடங்களில் அரண்கள் அமைத்து வட இலங்கை முழுவதையும் பல்லாண்டுகள் ஆண்டு வந்தனர். அதன் பின் புலத்திநகர் என்ற பொலநறுவையைக் கைப்பற்றி அதனைத் தனது தலைநகராக்கினான். இவன் காலம் கி.பி 1215 - 1235 ஆகும்.

இவனது ஆட்சிக்காலம் தொடக்கம் இலங்கையில் தமிழரசு வலியுறத் தொடங்கியது. புத்தளத்திலிருந்து திருக்கோணமலை வரைக்கும் ஒரு கோடு கிழித்தால் அக்கோட்டின் வடக்குப் பாகம் முழுவதும் தமிழ் இராச்சியமாக அமைந்திருந்த தென்பது மேற் கூறியவற்றால் விளங்கும். அன்றியும் தமிழர் ஆதிக்கமும் அவர்தம் அரசியற் செல்வாக்கும் ‘மாயரட்டை” எனப்படும் நீர்கொழும்பு சிலாபப் பகுதி வரையும் பரந்தது.

அதன் பின் பண்டித பராக்கிரமபாகு என்னும் இரண்டாம் பராக்கிரமவாகு என்னும் இரண்டாம் பராக்கிரமவாகு (கி. பி. 1236 - 1271) அரசினைக் கைப்பற்றினான். எனினும் வட இலங்கையில் நிறுவப்பட்;ட தமிழரசினை அவனால் அடக்க முடியாது போயிற்று. இப்பராக்கிரமவாகு காலத்தில் (கி. பி. 1244) மலாய தீபகற்பத்துத் தாம்பிறலிங்கம் என்னும் பகுதியை ஆண்ட புத்த அரசன் சந்திரபானு என்பான் அற்புதங்கள் நிகழ்த்தக் கூடிய புத்தசிலை ஒன்று இலங்கையில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அதனைக் கைப்பற்றும் நோக்கமாக இலங்கைக்குப் படையெடுத்து வந்தான். அப்பொழுது சிங்களப் படை இவனை முறியடித்தது. இவன் மீண்டும் நான்காம் விசயவாகு (கி. பி. 1271 - 1273) காலத்தில் படையெடுத்து வந்து வட இலங்கையிலுள்ள மாதோட்டத்தில் இறங்கினான். அங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்று சில இடங்களில் பாடிபோட்டிருந்தான். அவனுடைய சாவகப்படை தங்கியிருந்தபடியாலேயே சாவகச்சேரி, நாவற்குழியிலுள்ள சாவகன்கோட்டை ஆகிய இடங்கள் இப்பெயர்களைப் பெற்றன என்பர்.

இக்கலகம் அடங்கியபின்னர் யாப்பகுவையிலிருந்து அரசோச்சிய நான்காம் விசயவாகு காடடர்ந்து கிடந்த அனுராதபுரத்துக்கு வந்து அந்நகரிலுள்ள புத்தகோயில்களைத் திருத்துவித்தான்.

இக்காலத்தில் வன்னிப்பகுதி தமிழ்ச் சிற்றரசனின் கீழ் இருந்து வந்தது. குறிப்பிட்ட சிங்கள அரசன், இச்சிற்றிரசர் கையில். அனுராதபுரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்தான்.

இஃதிவ்வாறிருக்க கி. பி. 1216 ம் ஆண்டுக்குப் பின்னர் தென்னிந்தியாவில் இரண்டாம் பாண்டியப்பேரரசு உருப்பெறத் தொடங்கியது. இப்பேரரசு சடாவர்மன் சுந்தரபாண்டியன் (கி. பி. 1253 - 1270) காலத்தில் உயர்நிலை யடைந்தது. சடாவர்மன் இலங்கைக்குப் படையெடுத்து வந்து சிங்கள அரசனை வென்று திறை கொண்டு சென்றான். இப்பாண்டியன் ஈட்டிய வெற்றியைக் குறித்துப் புத்தசரித்திர நூலாகிய சூளவமிசம் எதுவும் கூறாது வாயடைத்து நிற்கும்.

சுந்தரபாண்டியன் வெற்றிகளிலும் கீர்த்திப் பிரவாகங்களிலும் நெருங்கிய தொடர்பு கொண்டவனாகிய அவன் மகன் சடாவர்மன் வீரபாண்டியன் (கி பி 1253 - 1268) இலங்கையைப் பாண்டிய சாம்ராச்சியத்தினுள் அடக்கும் பொருட்டு பூநகரிக்கு அண்மையில் வந்திறங்கினான். அவன் வந்திறங்கிய இடத்தை இன்றும் வீரபாண்டியன் முனை என அழைப்பர். தனது படையை எதிர்த்த அங்குள்ள அரசனைக் கொள்றொழித்தபின், பொலநறுவைக்குப் போகும் அரசப் பெருந்தெருவழியாகச் சென்று திருகோணமலையை யடைந்தான். அங்குத் தன் வெற்றிக்கறிகுறியாகப் பாண்டிய சின்னமான இருமீன் முத்திரையைப் பொறித்து மீனக் கொடியையும் உயர்த்தினான். இவன் வெற்றிச் செலவினை யறிந்த சிங்கள மன்னனாகிய இரண்டாம் பராக்கிரமவாகு அடிபணிந்து திறை கொடுத்தான். வீரபாண்டியன் பொறித்த வெற்றிச் சின்னத்தை “விறடறிக்கு” க் கோட்டை 24 வாயிலில் இன்றும் காணலாம். பின்பு பாண்டி நாட்டில் மாறவர்மன் குலசேகரன் (கி. பி 1268 - 1301) பட்டத்திற்கு வந்ததும் இலங்கைக்குத் தளபதியாக “ஆரியச்சக்கர வர்த்தி” என்னுந் தண்டத் தலைவனை அனுப்பினான். அவன் நாட்டை மேற்பார்வை இட்டுக்கொண்டு வட வடஇலங்கையிலேயே தங்கினான். இவனிலிருந்தே யாழ்ப்பாணத் தெழுந்த புதிய அரச பரம்பரை தோன்றியிருத்தல் வேண்டும். இவனுக்குப்பின் வந்த யாழ்ப்பாணத்து மன்னர் யாவரும் “ஆரியச்சக்கரவர்த்தி” என்னும் அரசபட்டப் பெயரைக் கொண்டு வளங்கினர்.

ஆரியச் சக்கரவர்த்திகள் முதலாம் பரம்பரை

வலிமைமிக்க தளபதிகள் தாஞ் சென்ற சென்ற இடங்களில் தருணம் வாய்க்கும் போது தம்மை அரசராக்கிக்கொள்ளும் வழக்கம் சரித்திரத்திற்குப் புதிய தொன்றல்ல

பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திலும், பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தென்னிந்தியாவில் நிகழ்ந்த இசிலாமியப் படையெடுப்பால் பாண்டிநாட்டில் கலகங்கள் மலிந்து கிடந்தன. அதனோடு அங்கு உள்நாட்டுக் கலகங்களும் இருந்துவந்தன. மேலும் இந்நாட்களில் சிங்கள இராச்சியம் வலிகுன்றியிருந்தது. இவற்றினைப் பாண்டியத்தளபதியாகிய ஆரியச் சக்கரவர்த்தி பெரிதும் பயன்படுத்தித் தன்னையே வட இலங்கைத் தமிழ்ப்பகுதிக்கு அரசனாக்கிக் கொண்டான் எனக் கருத இடமுண்டு.

இத்தொடர்பில் யாழ்ப்பாண வைபவமாலை கூறுவதையும் சிறிது நோக்குவோம். மயல்வாகனப் புலவர் யாழ்ப்பாண வைபவமாலையைப் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதினார். இவர் தமது நூலுக்குக் கையாண்ட முதனூல்கள் யாவும் புராண முறையில் அமைந்துள்ளனவேயன்றி மகாவமிசம், சூளவமிசம், இராசதரங்கிணி, கொங்குதேச இராசாக்கள், இராசாவளி (மைசூர்) ஆகிய நூல்களைப் போல ஓரளவிற்காவது சரித்திர ஒழுங்கில் எழுதப்பட்டனவல்ல. மயில்வாகனப்புலவர் தமது நூலைக் கைலாயமாலை, வையாபாடல், பரராசசேகரனுலா, இராசமுறை முதலிய நூல்களைக் கொண்டு எழுதிய தோடமையாது தாம் கர்ண பரம்பரையாக் கேட்ட கதைகளையும் கூட்டிப் புனைந்துள்ளார் எனத் தெரிகிறது. காலம் பொருந்தாமை தலைதடுமாற்றம் ஆகியவை இந்நூலில் மலிந்து கிடக்கின்றன.

சாசனச் சான்றுகளும் பிறசான்றுகளும் யாழ்ப்பாணச் சரித்திரத்துக்கு இதுகாறும் இல்லாமையினால் இவர் கூறும் உண்மையான சரித்திர சம்பவங்களைக்கூட வரலாற்று முறையில் வைத்து யாழ்ப்பாணச் சரித்திரத்தினை ஆராய்ந்து கொள்ள இயலவில்லை. யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் “யாழ்ப்பாணங் கொஞ்சக்காலம் தளம்பிக் கொண்டிருக்கையில் பொன்பற்றியூர் வேளாளன் பாண்டிமழவனென்னும் பிரபு மதுரைக்குப் போய் அவ்விடத்திலே, சோழநாட்டிலிருந்து வந்துஇராச உத்தயோகத்துக்கேற்ற கல்வி கற்றக்கொண்டிருந்த சிங்கையாரியன் என்னுஞ் சூரியவமிசத்து இராசகுமாரனைக் கண்டு யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்ய வேண்டுமென்று கேட்க அவன் தன் பரிவாரங்களுடன், பாண்டிராசன் வழிவிட்டனுப்பி வைக்க, யாழ்ப்பாணத்தில் வந்திறங்கி நல்லூரைத் தனது இராசதானியாக்கி யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்தான்” என்பர்.

மதுரைக்குச் சென்ற பாண்டிமழவன் சோழநாட்டிலிருந்து அங்கு வந்திருந்த சிங்கை யாரியனைக் கொண்டுவந்தான் எனவும், அவனைப் பாண்டியமன்னன் வழியனுப்பி வைத்தானெனவும் ஆசிரியர் கூறுகின்றார். அவனைப் பரிவாரங்களுடன் அனுப்பி வைத்தான் எனவும் அங்கு கூறுகின்றார். இஃது பாண்டியமன்னன் தன் சேனையோடு தளபதியைப் போருக்கு அனுப்பினான் என்னும் வரலாற்றைச் செய்தியைத் திரித்துக் கூறியதாய் இருத்தல் வேண்டும்.

இவ்வாரியச் சக்கரவர்த்தியைக் கூழங்கையாரியன். விசய கூழங்கைச் சக்கரவர்த்தி, சிங்கை யாரிய மகாராசன் என்னும் பெயர்களாலும் வைபவபமாலை அழைக்கும். இஃது தமிழ் நாட்டிலே பலப்பல காலங்களிலே உருப்பெற்ற அரச பரம்பரைக் கதைகளை இவ்வாரியச் சக்கரவர்த்தி மேலேற்றும் எண்ணத்தால் ஏற்பட்ட மயக்கம் எனக் கருதுதல் பிழையன்று.

பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் அரசு கட்டிலேறிய முப்பத்தேழாவது ஆண்டு (கி. பி. 1305) குறித்த இவ்வாரியச் சக்கரவர்த்தி இலங்கைமேற் படையெடுத்தான். சூளவமிசத்தின்படி இவன் தான் சூறையாடிய பொருட்களுடன் பாண்டி நாட்டிற்குத் திரும்பினான்.

ஆரியச் சக்கரவர்த்தி என்னும் இத்தண்ட நாயகன் கீழ் வந்த பாண்டியப் படையெடுப்பின் பின் யாழ்ப்பாணத்தினை யாண்ட ஒவ்வோர் அரசனும் தனக்கு ஆரியச் சக்கரவர்;த்தி யென்னும் பட்டப்பெயரைச் சூட்டிக் கொள்வது வழக்கமாயிற்று. தண்டநாயகன் ஆரியச்சக்கரவர்த்தி பாண்டிநாடு திரும்பினானெனச் சூளவமிசம் கூறும். ஆனால் ஆரியச்சக்கரவர்த்தி என்ற பட்டப் பெயருடன் அரசபரம்பரை யொன்று யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்தது என்பது வெளிப்படை. எனவே, இவ் வாரியச்சக்கரவர்த்தி பரம்பரை இக்காலத்திலே தொடங்கிய தென்பது சரித்திரஉண்மை.

கி. பி; 1344ல் இலங்கைக்கு வந்த புகழ் பெற்ற இசிலாமியப் பிரயாணியான இபுன் பத்தூத்தா வடஇலங்கையில் ஆரியச்சக்கரவர்த்தி என்னும் அரசன் ஆண்டதாகக் கூறுவான். இவன் வந்தபோது வடஇலங்கை அரசனாம் ஆரியச் சக்கவர்த்தி மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கினானெனவும் கூறுகின்றான். இத்தகைய வளமும் வலியும் ஓர் இராச்சியத்தில் ஏற்படுதற்குப் போதுமான காலந்தேவை. ஆகையால் இந்த அரசபரம்பரை கி. பி. 1305 - 1344 க்கு இடையில் தொடங்கியிருத்தல் வேண்டும். இப்பரம்பரை அரசினரின் தலைநகர் ‘சிங்கைநகர்’ என்பர் இதனைக்கோட்டமாகக் கல்வெட்டிலும். அரச கேசரி பராக்கிரமபாண்டியனின் தென்காசிக் கோயிற் கல்வெட்டிலும் காணலாம்.

இவ்வரசபரம்பரை யாழ்ப்பாணத்தை ஆளும் பொழுது (கி. பி. 1450) கோட்டை இராச்சியத்தை ஆறாம் பராக்கிரமவாகு ஆண்டான். அவன் காலத்திலே அவன் வளர்ப்புப் பிள்ளையாகிய சப்புமால் குமரையா யாழ்ப்பாணத்திற்குப் படையெடுத்துக்கோட்டை கொத்தளங்களையழித்துத் தமிழ்ப்பகுதியை ஆண்ட மன்னனைத் துரத்தித் தானே அரசாண்டான். சப்புமல்குமரையன் தொடுத்து வெற்றி கண்ட போரைத் தமிழ்மன்னருக் கெதிரான சிங்களக்கலகமென வைபவமாலை கூறும். மேலும் இப்போர் நடந்தது கனகசூரியன் என்னும் அரசன் காலத்திலே என்றும் அது நவிலும். ஆரியச்சக்கரவர்த்தியென்னும் பட்டப்பெயர் கொண்ட அரசபரம்பரையைத் தொடங்கியவனுக்கும் குமரையன் முறியடித்த கனகசூரியனுக்குமிடையில் ஒன்பது அரசர்கள் சிங்கை நகரிலிருந்து ஆண்டதாக வைபவமாலை கூறும். இவ்வரசர்களைப் பற்றிய செய்திகளொன்றும் தெளிவாகத் தெரியவில்லை. இவர் ஆண்ட ஒழுங்கு முறைகளைக் கால வரிசைப்படுத்திக் கூறவும் முடியவில்லை. வைபவமாலையின் படி குறித்த அரசபரம்பரை மேல் வருமாறு :-

1. விசய கூழங்கைச் சிங்கையாரியச் சக்கரவர்த்தி
2. குலசேகர ,, ,,
3. குலோத்துங்க ,, ,,
4. விக்கிரம ,, ,,
5. வரோதய ,, ,,
6. மார்த்தாண்ட ,, ,,
7. குணபூசன ,, ,,
8. வீரோதய ,, ,,
9. செயவீர ,, ,,
10. குணவீர ,, ,,
11. கனகசூரிய ,, ,,

இக்காலப்பகுதியில் தமிழ் இராச்சியம் மிகுந்த வலியோடு செல்வமும் செழிப்புமோங்கிக் கீர்;த்தியோடு விளங்கியது. மன்னார் சிலாபத்துறை முதலிய இடங்களில் நடந்த முத்துக் குளிப்பினால் செல்வங்கொழித்தது. பெரிய கடற்படை யொன்று ஆரியச்சக்கரவர்த்திகையில் இருந்தது. அதனால் ஈழத்தமிழர், மலையாளம் முதலிய இடங்களுக்குச் சென்று வாணிகம் வளர்த்து வந்தனர். இத்தகைய செவ்வி வாய்ந்த ஈழத்தமிழ்நாட்டிற்குப் பலர் பிற நாடுகளிலிருந்ததும் வந்தனர். அவருள் இபுன் பத்தூத்தா, மார்க்கோ போலோ என்போர் குறிப்பிடத்தக்கவர். இவ்வரசனையும் அரசினையும் பற்றி இபுன்பத்தூத்தா கூறுஞ் செய்திகள் கவர்ச்சிகரமானவை. “இவ்வரசனின் பெயர் ஆரியச்சக்கரவர்த்தி@ கடற்படை வலி கொண்டவன்@ மலையாளத்திலே யான் தங்கியிருந்த பொழுது இவன் நாவாய்கள், சிறியவும் பெரியவுமாக நூறுகப்பல்கள் நங்கூரமிட்டு;க் கெம்பீரமாய் அங்கு நின்றன@ அதிதிகளை உபசரிக்கும் அன்புசார்ந்த நெஞ்சினன்@ பாரசீகமொழியிலே வல்லுனன்@ அம்மொழியில் என்னுடன் உரையாடினான்@ எனக்கு நல்ல பரிசில்களை வாரிவாரியிறைத்தான். அவை மட்டுமோ, தன் இராச்சியத்தில் கிடைக்கும் திறமையான முத்துக்களையும் பரிசாக ஈந்தான். அன்றியும் யான் விரும்பியவண்ணம் ஆதாம் மலைக்கு யாத்திரைசெய்ய உதவியுஞ் செய்தான்” இபுன்பத்தூத்தாவின் கூற்றின்படி ஆரியச்சக்கரவர்த்தியின் தலைநகரம் “புத்தல” என்பதாகும். சரித்திர ஆசிரியர் பலர் இதனைப் புத்தளம் எனக்குறிப்பர். ஆனால். இவன் ஆதாம் மலைக்குப்போகும் பிராயாணத்தை விரித்துக்கூறுமிடத்து. “புத்தல” என்னுமிடத்திலிருந்துபாதை மூலம் ஆற்றைக்கடந்து மன்னாருக்குச் சென்றதாகவும் அதன்பின் சிலாபத்தை அடைந்ததாகவும் கூறுவான். ஆகவே “புத்தல” வென்பது புத்தளமாக இருக்கமுடியாது. “சிங்கை நகர்” எனக் கூறப்படும் வல்லிபுரக்குறிச்சிக்கு அணித்தாயுள்ள “புட்டளை” என இப்போது வழங்கும் கிராமமே இப் “புத்தல” வாகவிருக்கலாம். மேலும் இவ்வரசபரம்பரையினரைச் சிங்கையாரியச்சக்கரவர்த்திகள் என்றும் குறிப்பான். புட்டளை சிங்கையின் ஒருபகுதி. சிங்கையென்னும் பகுதி கி. பி. மூன்றாம் நூற்றாண்டளவில் கீர்;த்திவாய்ந்த இடமாயிருந்தது. இதற்குச் சான்று வல்லிபுரத்திற் கண்டெடுக்கப் பட்ட பொன்னேட்டுச்சாசனம். அன்றியும் அங்கு பல கட்டிடங்களும், கோட்டை கொத்தளங்களும் அழிந்தொழிந்து மண்ணால் மூடப்பெற்றிருப்பதை இன்றும் அங்குச் செல்வோர் காணலாம். அத்துடன் இதனருகே ஒருபெருந்துறையுமுளது. அங்கிருந்து கப்பல்கள் அக்காலத்தில் போக்குவரத்துச் செய்தன. இப்பொழுதும் அத்துறையைக் கப்பற்றுறையென அழைப்பர்.

பதினாலாம் நூற்றாண்டு முற்பகுதி தொடக்கம் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை சிங்கள அரசின்நிலை தலைகீழாயிருந்தது. இக்காலப்பகுதியில் சி;ங்களவரசின் தலைநகரம் அடிக்கடி இடத்துக்கிடம் மாற்றப்பட்டுவந்தது.

தென்னிந்தியப் படையெடுப்புகட்குப் பயந்து சிங்கள அரசர் அநுராதபுரப்பகுதியைக் கைவிட்டனர். அதனால் பொருள் வருவாயைக் கொடுத்த அப்பகுதியிலுள்ள நெல்வயல் முதலியன பாழடைந்தன. இதேகாலத்து அராபியவணிகர், காலிதொடக்கம் புத்தளம் வரையுள்ள சில இடங்களைத் தமது வணிகத்திற்கு நிலைக்களனாக ஆக்கிக்கொண்டனர். காலி, வெருவலை, கொழும்பு ஆகிய இடங்கள் அராபியரின் வணிகத்திற்குமிக முக்கிய இடங்களாக விளங்கின. அதனால், விவசாயத்துறையில் போதிய வருவாய் அற்றிருந்த சிங்கள அரசர், இவ்வணிகத்தைப் பயன் படுத்தி அராபிய வணிகருக்கு வேண்டிய கறுவா முதலிய பொருட்களை விற்பதற்காகத் தலைநகரைத் தென் மேற்குக் கரையோரமாக நிறுவினர். இதன் பயனாகப் பாணந்துறை, கொறளைப் பெருந்தெருவிலுள்ள இறாகம் கோறளை ஆகியவற்றிலிருந்து அரசர் சிலர் செங்கோலோச்சினர். இதன்பின் மூன்றாம் விக்கிரமவாகு காலத்தில் (கி. பி. 1357 - 1374) பேராதனையிலிருந்து அளகக்கோனார் என்னும் பெயருடைய சிங்களத் தலைவன் ஒருவன் செயவர்த்தனபுரத்தில் கோட்டை கொத்தளம் எழுப்பி ஒர் அழகிய நகரைக் கட்டினான். கி. பி. 1348ல் பாப்பரசரின் தூதன் மரிக்குநெல்லி 6 என்பாள் சீனத்துக்குச் சென்று இலங்கைவழியாக உரோமபுரிக்குத் திரும்புகையில் கொழும்பில் வந்திறங்கினான். அப்பொழுது அளகக்கோனார் கட்டியெழுப்பிய மாளிகையைக் கண்டு அதன் அமைப்புச்சிறப்பினை வியந்தான்.

அப்போது இலங்கையின் அரசியலமைப்பில் இருந்த தலைதடுமாற்றம் அக்கால வரலாற்றைக் கூறும் சிங்கள சரித்திரநூல்களிலும் பிரதிபலிக்கின்றது. எந்தச் சரித்திர நூலாவது இக்கால வரலாற்றைத் தெளிவாகக் கூறுவதாகத் தெரியவில்லை. அன்றியும் ஆரியச்சக்கரவர்த்தி பரம்பரையினரின் ஆட்சியில், இக்காலப்பகுதியதிலே, தமிழரசு மிகுந்த உச்சநிலையை அடைகின்றது. படிப்படியாகத் தமிழரசர் தங்கள் நாட்டெல்லையைப் பெருப்பித்து இலங்கையின் பெரும்பாலான பகுதியை ஆளத்தொடங்குகின்றனர்.

அன்றியும் தங்கள் அதிக்கத்தைச் சிங்கள ஆட்சிக்குக் கீழிருந்த பகுதிகளிலும் செலுத்தக்கூடியதாயிருந்தது. சிங்கள அரசனிடமிருந்து திறைபெறவுந் தொடங்கிவிட்டனர். அராபிய வணிகருடன் நடக்கும் கறுவாவணிகத்தில் பங்கெடுத்துக்கொள்ள நீர்கொழும்பு, வத்தளை முதலிய ஊர்களைப் பிடித்து அவற்றைச் சிலகாலம் தமது ஆதிக்கத்தில் வைத்திருந்தனர்.

ஒருமுறை தமிழரசின் வரி வாங்குவோர் சிலர் வரி வாங்கிய போது சிங்களச் சிங்காசனத்தில் கண்வைத்திருந்த அளகக்கோனார். இத்தருணத்தைப் பயன்படுத்தி இவ்வரிவாங்குவோரைப் பிடித்துத்தூக்கில் இடுவித்துக் கொன்றான். இதையறிந்த ஆரியச்சக்கரவர்த்தி சீற்றங்கொண்டு இரு பெருஞ் சேனைகளைச் சிங்கள அரசிற் கெதிராய் அனுப்பினான். ஒருபடை கரையோரமாக வந்து பாணந்துறையிற் பாடிபோட்டது. மற்றது பன்னாகம் (மாத்தளை) வழியாகக் கோட்டை நகர் நோக்கிச் சென்றது. கொழும்புக் கண்மையிலுள்ள கோட்டை, பாணந்துறை, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் தமிழப்படைக்கும் சிங்களப்படைக்குமிடையில் பெரும்போர் நிகழ்ந்தது. கோகாலைக் கண்மையிலுள்ள கோட்டகமக் கல்வெட்டு இப்போரை மேல்வருமாறு குறிக்கும்.

கங்கணம் வேற்கண்ணிணையாற் காட்டினார் காமர்வளைப்
பங்கயக் கைமேற் றிலதம் பாரித்தார் - பொங்கொலிநீர்ச்
சிங்கைநக ராரியனைச் சேரா வனுரேசர்
தங்கள் மடமாதர் தாம்.

இதன்படி இங்கு நடந்த போரில் தமிழப் படையே வெற்றிகண்டதெனத் தெரிகின்றது.

இவ்வாறு யாழ்ப்பாணத்தரசு வெற்றியோடு விளங்கியகாலத்து அதற்கும் விசயநகரப்பேரரசுக்குமிடையில் நல்லுறவு இருந்து வந்தது. இந்நிலையில் ஆறாம் பராக்கிரமபாகு என்பான் (கி. பி. 1412 - 1418) சிங்கள அரசுகட்டிலேறியதும் நிலைமை ஒருவாறு மாறத்தொடங்கியது. மங்கு திசையிலிருந்த சிங்களவரச இவ்வரசன் கீழ்த் தலை தூக்கத்தொடங்கியது. இலங்கை முழுவதையும் தனிச்சிங்கள இராச்சியமாக்க விரும்பினான். இக்குறிக்கோளோடு வேண்டிய ஏற்பாடுகளைப் படிப்படியாகச் செய்து கொண்டு வந்தான். தமிழரசன் வலியையுந் தனது வலியையும் செவ்வனே நோக்கித் தகுந்த தருணத்தில் போர் தொடுக்க வேண்டுமெனக் காத்திருந்தான். தன் வளர்;ப்பு மகனாகிய செண்பகப்பெருமாள் என்னும் சப்புமல்குமரையனைப் படையொன்றுடன் தருணம் பார்த்து யாழ்ப்பாணத்தரசனுக் கெதிராக அனுப்பினான். நடந்த போரில் அவன் தமிழரசனால் முறியடிக்கப்பட்டான். இதனால் பராக்கிரமபாகுவின் எண்ணம் கைகூடாது போயிற்று. சிறிதுகாலத்தில் இரண்டாம் முறையும், குமரையன் தமிழரசன் மீது படையெடுத்துச் சென்றான். இப்போரில் யாழ்ப்பாணத்தரசன் தோற்றான். அவன் தோற்றதற்கு, அவனுக்குதவக்கூடிய விசயநகர மன்னன் வராததும் ஒரு காரணமாகும். வெற்றி கொண்ட குமரையன் அக்காலத்து யாழ்ப்பாணத் தலைநராகிய சிங்கைநகரைக் கைப்பற்றி அதைக் கொள்ளையடித்து அழித்தான். அன்ற சிங்கையாரியனென யாழ்ப்பாண வைபவமாலை கூறும். கனகசூரியன் தென்னிந்தியாவிற்கு ஒளித்தோடினான்.

இவ்வாறு வெற்றிக்கொடி நாட்டிய குமரையன் பழைய இராசதானியாகிய சிங்கை நகரை விடுத்து, பாணன்கட்டிய யாழ்ப்பாணத்திற்கு அணித்தாயுள்ள நல்லூரிலே புகுநகர் ஒன்று கட்டினான். அங்குக் கந்தவேளுக்கு ஒரு கோயிலும் கட்டியெழுப்பினான். இன்றும் நல்லூர்க் கந்தசாமிகோயிற் றிருவிழாநாளில் உற்சவமூர்த்தி வீதிவலம் வரும்போதும், திரும்பிக் கோயிலினுட் புகும்போதும் கூறப்படுங் கட்டியங்களில் இவனுடைய பட்டத்துப் பெயராகிய “ஸ்ரீ சங்க போதி புவனேகவாகு” என்பதும் கூறுப்படுகிறது.

பிற்கால யாழ்ப்பாணத்தரசர்

குமரையன் யாழ்ப்பாணத் தமிழரசை ஆண்டுவந்த காலத்தில் கோட்டை இராச்சியத்தின் நிலைமை மாறிக்கொண்டுவந்தது. ஆறாம் பராக்கிரமவாகு இறந்ததும் அவனுடைய பேரப்பிள்ளையாகிய சயவாகு பட்டத்திற்கு வந்தான். அவன் ஒன்றரை ஆண்டுகள் ஆண்டபின் இறந்தான். அப்பொழுது அவன் உடன்பிறந்தாளாகிய மாணிக்கம் என்பாள் அரைப்பித்தனாகிய தன்மருகளை அரசுகட்டிலேற்றினளென டீ. கூட்டோ என்னும் போர்த்துக்கேயச் சரித்திராசிரியன் கூறுவான். ஆனால் இவன் அரசாளுந்திறன் அற்றவனெனக்கண்டு பெரிதுங்கவலையுற்று. அந்நாட்களில் வாழ்ந்த அரசகுமாரருட் பெருவலி செறிந்தவனாகிய குமரையனை உடனே வந்து அரசபொறுப்பை ஏற்கும் வண்ணம் வேண்டினள். இதை யறிந்ததும் குமரையன் யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டை நகர் நோக்தகிப் புறப்பட்டான். அங்குச் சென்றதும் புவனேகவாகு என்னும் பட்டப்பெயருடன் அரசுகட்டிலேறினான். எனினும் இவன் கோட்டைக்குச் சென்ற பிறகும் சிங்களப்பகுதியில் உள்நாட்டுக் கலகம் மலிந்து கிடந்தது.

யாழ்ப்பாணத்தில் அடங்கிக் கிடந்த தமிழரசு இக்குழப்பங்களைப் பயன் படுத்தியது. குமரையனால் கி. பி. 1450 - ல் முறியடிக்கப்பட்ட மன்னன் மகனாகிய பரராசசேகரன் (கி. பி. 1478 - 1519) யாழ்ப்பாண அரசைத் திரும்பப்பிடித்துத் தனிச் செங்கோலோச்சினான். (கி. பி. 1519 - 1561) அரசனானான்.

அக்காலத்திலே யாழ்ப்பாணம், மன்னார்க் கரைகளில் வந்து கரையேறிய கப்பல்களையும் அவற்றிலுள்ள பொருட்களையும், உரிமைப்படி யாழ்ப்பாண அரசர் எடுத்துக்கொள்வர். இவ்வழக்கத்தை யொட்டி அங்கு வந்தடைந்த பல போர்த்துக்கேயக் கப்பல்களைச் சங்கிலி கைப்பற்றினான்.

சங்கிலியின் இச் செயலைத் தடுப்பதற்காகக் கி. பி. 1543ல் மாட்டின் அல்பொன்சோ க சூசா என்பவன் போர்த்துக்கேய அரசின்கீழ் அடங்கியிருக்கும் வண்ணம் அவனைப் பணித்தான். கி. பி. 1544 ம் ஆண்டிற்கு முற்பட்ட சில காலங்களில் போர்த்துக்கேயரின் முயற்சியினால் மன்னாரில் வாழ்ந்த மக்களிற் சிலர் கத்தோலிக்கராய் மதமாறி வாழ்ந்தனர். கி. பி. 1544ம் ஆண்டு மட்டில அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் தூண்டுதலினால் மன்னார் மக்களுட் பெருந்தொகையானோர் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்டனர். இதையறிந்த சங்கிலி மன்னாருக்குப் படையனுப்பி மதம் மாறிய யாவரையுந் தண்டித்தான். இக் காலந் தொடக்கம் யாழ்ப்பாணத்தரசு போர்த்துக்கேயருக்கு எதிராகவே இருந்துவந்தது. சிங்கள நாட்டில் போர்த்துக்கேயருக்கு மாறான எழுச்சிகளின் முன்னணியில் நின்றவன் மாயாதுன்னை என்னும் சிங்கள அரசகுமாரன். இவனும் சங்கிலியும் போர்த்துக்கேயரை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்துகொண்டனர். 1547ல் சங்கிலி மாயாதுன்னையுடன் சேர்ந்து போர்த்துக்கேயருக்கெதிராகப் போர்புரிந்ததாகத் தெரிகிறது. இதற்கு இவரிருவரும் தஞ்சை அரசனான சேவப்பநாயக்கன் (கி. பி. 1532 - 1580) உதவியைப் பெற்றதாகவுந் தெரிகிறது.

கோட்டை அரசினை ஆண்ட எட்டாம் புவனேகவாகுவின் (கி. பி. 1521 - 1551) மருமகனான வீதியபண்டாரமென்பான் கோட்டை இரசாச்சியத்திற்கு அரசனாக ஆசைகொண்டான். ஆனால் தன்னெண்ணங் கைகூடாதது கண்டு பலப்பல இடங்கள் தோறும் சென்று உதவி கோரினான். எங்கணும் அவன் எண்ணங் கைகூடவில்லை. இறுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்டுகொண்டிருந்த சங்கிலி; செகராசசேகரனிடம் வந்து சேர்ந்தான்.

சங்கிலி போர்த்துக்கேயருக்கு மாறாகப் பொருதுகொண்டு நின்றானாகையால் வீதியபண்டாரத்தின் கோரிக்கைக்கு உடன்பட்டான். ஆனால் வீதியபண்டாரத்தின் திடீர்மரணத்தினால் போர்த்துக்கேயருக்கு மாறான இவ்வுடன்படிக்கை சிறிதும் பயன்படாது போயிற்று.

சங்கிலியைத் தண்டிக்கும் வகைதேடிக் காலம் பார்த்திருந்த போர்த்துக்கேயர் கி. பி. 1560 கொன்ஸ்தாந்தீன் தபிறகன்சாவின் 3 கீழ் கடல்வழியாக ஒரு பெரும் படையினை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினர். பிறகன்சா கொழும்புத்துறையில் இறங்கி நல்லூரையடைந்து சங்கிலியின் கோட்டை கொத்தளங்களை அழித்தான். இதைக் கண்ட சங்கிலி தன்மாளியையைத் தீக்கிரையாக்கிவிட்டுக் கோப்பாய்க்கு ஓடினான். அங்கும் போர்த்துக்கேயர் அவனைப் பின் தொடரவே வன்னிப்பகுதியில் போய் ஒளித்தான். அப்பொழுது தாம் புதிதாகக் கைப்பற்றிய யாழ்ப்பாணத்திலே போர்த்துக்கேயர் தலைவரும் அவர் அவர் சேனையும் வேட்டையாடுதல் விருந்தயருதல் முதலிய ஏகபோக சுகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அவற்றைக் கண்டு மனம் பொறாத நாட்டுமக்கள் அவருக்கு மாறாகப் புரண்டெழுந்து அங்கிருந்த போர்த்துக்கேயரை வெட்டி வீழ்த்திக் கலகம் விளைத்தனர். இத்தருணத்தைப் பயன்படுத்திச் சங்கிலிமன்னன் நல்லூர் வந்து சிதறுண்ட தன் படைகளைச் சேர்த்துப் போர்த்துக்கேயருக்கெதிராகப் பெரும்போர் நிகழ்த்தினான். இவ்வெதிர்ப்புக்கு நின்று பிடிக்க ஏலாது போர்த்துக்கேயர் கப்பலேறினர்.

சங்கிலிக்குப் பின் புவிராசபண்டார மென்பான். பரராசசேகரன் என்னும் பட்டப்பெயரோடு அரசுகட்டிலேறினான். அவனைப் போர்த்துக்கேயர் போரிலே கொன்று பெரியபிள்ளை என்பானை அரசுகட்டிலேற்றினர். அவன் பரராசசேகரன் என்னும் பெயருடன் கி. பி;. 1570ம் ஆண்டிலே போர்த்துக்கேயர் உதவியுடன் அரசு கட்டிலேறினானாயினும் அவனுக்குப் அவர்மேல் அடங்கிக் கிடந்த வெறுப்புணர்;ச்சி சிலவாண்டில் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. தஞ்சை மன்னனான அச்சுதப்பநாயக்கன் உதவியுடன் மன்னாரில் நிலைத்திருந்த போர்த்துக்கேயருக்கு எதிராகப் போர் தொடங்கினான். இப்போரில் இவன் வென்றதகாத் தெரியவில்லை.

இவனுக்குப்பின் புவிராசபண்டாரமென்பான் பரராசசேகரன் என்னும் பட்டப் பெயருடன் கி. பி. 1582ல் அரசனானான். இவனும் தன் முன்னோர் போலப் போர்த்துக்கேயரை எதிர்த்தான். மன்னாரை அவர் கையினின்றும் விடுவிக்க இருமுறை முயற்சித்துப் போர் நடத்தினான். இரண்டாம் முறையாக கி. பி. 1519ம் ஆண்டு மன்னாரைத் தாக்கியபோது போர்த்துக்கேயர் இவன் தாக்குதலைப் பொறுக்க முடியாது அந்திரே போர்த்தாடோ த மென்டோன்கா என்னும் தளபதியை யாழ்ப்பாணத்திற்குப் படையெடுத்துச் செல்லுமாறு கட்டளையிட்டனர். நடந்த போரில் பரராசசேகரன் இறந்துபட்டான். அப்பொழுது போர்த்துக்கேயர் பெரியபிள்ளை செகராசசேகரனின் மகனாம் எதிர்மன்னசிங்கனை அரசனாக்கினார். இவன் பரராசசேகரன் என்னும் பட்டப்பெயருடன் (கி. பி. 1519 - 1615) ஆட்சி செலுத்தினான்.

இவ்வரசன் போர்த்துக்கேயர் கைப்பொம்மையாக விளங்கினமை கண்டும். யாழ்ப்பாண அரசியல் அலுவல்களில் அவர் பெரும் பங்கெடுக்க விட்டமை கண்டும், மனம் பொறாத தமிழ்த்தலைவர்களான முதலிமாரும் தலைமைக் காரரும் மேற்படி நிலைமையை மாற்ற வழிவகை தேடினர். இந் நோக்கத்தைக் கொண்டு சோனகர், வடுகர், மறவர் ஆகியோர் உட்பட ஒரு சேனையைத் திரட்டிக்கெர்ணடு. தஞ்சைமன்னனாகிய அச்சுதப்பநாயக்கன் கண்டி மன்னனாகிய விமலதர்மசூரியன் ஆகியோரின் படையுதவியை நாடி நின்றனர். இத்திட்டங்களை ஏதோ ஒரு வகையாக அறிந்த எதிர்மன்னசிங்கன் மன்னாரிலுள்ள போர்த்துக்கேயத் தலைவனுக்கு அறிவித்தான். தஞ்சைநாயக்கன் கடற்படை மன்னாருக் கணித்தாய் வருகையில் போர்த்துக்கேயர் அதனை முறியடித்தனர். இதனோடு கலகம் அடங்கி எதிர்மன்னசிங்கன் கி. பி. 1615ல் இறக்கும்வரை அமைதி நிலவிற்று. அவன் இறக்குந் தறுவாயில் இருக்கும்போது மூன்று வயதுள்ள தன்மகனை அரசனாக்கி அவனுக்கு வயதுவரும்வரையும் தன் தம்பியாம் அரசகேசரி பண்டாரத்தை அரசபாதுகாவலனாய் நியமித்தான்.

எதிர்மன்ன சிங்கன் இறந்தபின்பு அரச குடும்பத்தினருள் ஒருவனான சங்கிலிகுமாரன் என்பான் அரசகேசரி பண்டாரத்தைக் கொன்று தானே அரசபாதுகாவலனானான். இச் செயலைக் குறித்துப் போர்த்துக்கேயர் எதிர்;ப்புக் கிளம்பிய பொழுது, அவருக்கு வேண்டிய திறையைக் கொடுத்து நாட்டை ஆள்வதாக வாக்குறுதி செய்தான். ஆனால் சிறிது காலத்தின் பின்னர் கண்டிக்குச் செல்லும் வடுகப்படையைத் தன் இராச்சியத்துக் கூடாகப் போக விடுத்ததாலும் தன் எண்ணப்படியே தன் மருமகனைத் தனக்குப்பின் அரசாள நியமித்ததாலும் போர்த்துக்கேயருக்கு முறைப்படி திறையைச் செலுத்தாததாலும், முன்கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் விட்டானெனத் தெரிகிறது. இதை யறிந்த போர்த்துக்கேயர் அவனை நெருக்கினர். அதனால், சிலகாலம் ஊராத்துறையில் ஒளித்திருந்தான். நெருக்கடியான இந்நிலையைக் கண்டு அவன் தேவியர் தஞ்சைப் பெருமன்னன் இரகுநாதநாயக்கனிடம் சென்று முறையிட்டனர். கேம்நாயக்கன் என்பான் தலைமையில் இரகுநாத நாயக்கன் அனுப்பிய தஞ்சைப் படையின் உதவிகொண்டு திரும்பவும் அரசைக் கைப்பற்றினான். இரகுநாதநாயக்கனே யாழ்ப்பாணம் வந்து போரிற் பங்கெடுத்துக் கொண்டதாகவும் கருதப்படுகின்றது. ஆனால் போர்த்துக்கேயர் வரலாற்று நூல்கள் இரகுநாதன் வருகை பற்றி எதுவுங் கூறிற்றில.

இன்னும் சங்கிலியின் அரச பரிபாலனத்தில் தமிழ் மக்கள் திருத்தியடைய வில்லை. அதனோடு தஞ்சை நாயக்கனின் உதவிப் பலத்தினால் போர்த்துக்கேயரை மதியாமலும் நடந்தான். போர்த்துக்கேயருக்கு மாறாகக் கண்டியரசனுக்கு உதவியளித்தான். அதனோடு போர்த்துக்கேயருக் கெதிராய் ஒல்லாந்தருடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினான். இதனால் சங்கிலி மீது சீற்றமும் ஆத்திரமும் கொண்ட போர்த்துக்கேயர் அவனை ஒழித்துக் கட்டப் பிலிப்பு த ஒலிவீரா என்னும் தலைவனின் கீழ் கி. பி. 1619ல் பெரும் படையொன்றை அனுப்பினர். சங்கிலியும் படை திரட்டினான். இரு படைகளும் பெரும்போர் நிகழ்;த்தின. எனினும் சங்கிலியின் படை தோற்கடிக்கப்பட்டது. சங்கிலி பிடிபட்டான். போர்த்துக்கேயர் சங்கிலியைக் கோவாவுக்கு அனுப்பினர். யாழ்ப்பாணத் தமிழரசு ஒலிவீராவின் கையிற் சிக்கியது. இதனோடு தமிழரசர் பரம்பரையும் முடிந்தது.

விடுதலைப் போராட்டம்

அரசபரம்பரை ஒழிந்தது. தன்மானம் என்னும் பெரிய தனத்தை இழந்து விட்டோமே யென்னும் மனப்பாரம் யாழ்ப்பாணத்து மகன் ஒவ்வொருவனது இதயத்தையும் அமுக்கியது. மதித்தற்கரிய மாணிக்கமாகிய சுதந்திரச் செல்வத்தை இழந்து விட்டோமே என்ற கவலை மக்களை வாட்டியது. விடுதலை வேட்கை பொங்கி யெழுந்தது. நாடு தொலைந்து பிறன் கைப்பட்ட ஈராண்டுக் கிடையில் ஆறுமுறை புரட்சி வெள்ளம் கான்யாறு போல் கரைபுரண்டோடியது. இதனைப் போர்த்துக்கேய வரலாற்றாசிரியரே கூறிப் போவார்.

முதல் முறை ‘கரையார்’ தலைவன் போர்த்துக்கேயருக் கெதிராய் படையோடெழும்பினான். நல்லூருக் கருகாமையில் நடந்த போர் ஒன்றில் ஒலிவீரா இவனை முறியடித்தான்.

அடுத்து, அரசகுமாரன் ஒருவனை யாழ்ப்பாணத்தரசனாக்க விரும்பி, சின்னமிக்கேல்பிள்ளை என்பவன் தஞ்சைக்குச் சென்ற ஆயிரம் போர்வீரரைப் பன்னிரண்டு தோணிகளில் ஏற்றி வந்து தலைமன்னாரை அடைந்து. அங்கிருந்து போர்த்துக்கேயரை எதிர்த்தான். ஒலிவீரா இம்முயற்சியையும் தோற்கடித்தான். பின்னர் முதலியார் ஒருவர் நடத்திய விடுதலைப் போரும் தோல்வியடைந்தது. சின்ன மிக்கேல்பிள்ளை தஞ்சை நாயக்கரிடம் திரும்பவுஞ் சென்று யாழ்ப்பாண அரசிற்குத் தன்னை அரசனாக்கும்படி வேண்டினான். தஞ்சைப் பேரரசின் கீழ் யாழ்ப்பாணத்தைக் கொண்டுவர ஆண்டு 1620 கார்த்திகைத் திங்கள் முயற்சிகள் தொடங்கின. யாழ்ப்பாணத்தையும் அடுத்துள்ள பகுதிகளையும் கைப்பற்றுவதற்குத் தஞ்;சைப்பெரும் படையொன்று வருவதாக ஒரு செய்தி நல்லூரிலிருந்த ஓலிவீராவின் காதுக்கெட்டியது. அந்தோனியோ த மோத்தாகல்வா ஒ என்பவன் கீழ் போர்த்துக்கேயப்படையொன்று பருத்தித்துறையில் தஞ்சை நாயக்கரின் படையைக் காத்;திருந்தது. நாயக்கரன் படை வந்ததும் பெரும் போர் நிகழ்ந்தது. மீண்டும் போர்த்துக்கேயர் கையால் தமிழர் சேனை முறியடிக்கப்பட்டது. இதுவே இலங்கைத் தமிழரின் கடைசி விடுதலைப் போராட்டம்;.

இதுகாறும் ஒருவாறு யாழ்ப்பாணத் தமிழரின் வரலாற்றைக் கூறினோம். இன்னும் திருக்கோணமலை மட்டக்களப்பு, வன்னி, மலைநாடு, முதலிய இடங்களில் வாழுந் தமிழர் வரலாற்றையும் இவ்வாறு ஆராய்ந்து வருகின்றோம். இவை யாவற்றையும் இறுதியில் ஒருங்குசேர்த்து இலங்கைத் தமிழர் வரலாறு என்னும் பெருநூலாக வெளியிடுதல் எனது நோக்கம். இந்நன்நோக்கத்துக்குச் சான்றுகள் தந்து உதவிபுரியும் அன்பர் தமக்கு ஆசிரியர் என்றும் கடப்பாடுள்ளவராய் இருப்பார்.

வாழ்க நற்றமிழ்

உசாத்துணை நூல்கள்:

கலிங்கத்துப்பரணி : பெ. பழனிவேல் பிள்ளை உரை@ கழகப்பதிப்பு 1950.
யாழ்ப்பாண வைபவமாலை: குல. சபாநாதன் பதிப்பு, சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு 1953.
Rama Bhadramba: Raghunathabhyudhyam. Ed. by. Dr. T. R. Chintamani. (Madras Uneversity)
Altekar, A. S.: Rashtrakutas and Their Times. Poona Oriental Book Agency, 1934
Annual Report of Epigraphy, Madras.
Archaeological Report of the Kegalle District H. C. P. Bell
Bothligk and Roth: Sanskrit Worterbuch, St, Peter Sburg 1855
Ceylon Histroecal Journal
Codrington, H.C.: Short History of Ceylon, Macmillan & Cl,. London, 1926
Epigraphica Zeylanica
Geiger, Wilhelm: (1) Culavamsa, Pali Text Society, London, 1929 & 193 (2) Mahavamsa, Ceylon Government Information Department. Colombo 1950
Harivamsa : Ed by M. N. Dutt, Calcutta. 1897
Ibn Batuta: The Rehla of Ibn Batuta, Baroda Oriental Ins titute, 1953
Journal of the Royal Asiatic Society (Ceylon Branch)
Krishnaswamy Aiyangar, S. K. Some Contributions of South India to Indian Culture, University of Calcutta, 1923.
Mendis, G. C. : Eauty History of Ceylon, Y. M. C. A Pubiishing House, Calcutta, Ninth Impression, 1948
Nilakanta Sastri, K, N. (1) Colas, University of Madras, 1935 (2) Pandyan Kingdom, Luzac & Co London, 1929
Obeyasekara, Donald: Outlines of Ceylon History Times of Ceylon, Colombo 1911
Oldham, C, F: The Sun and the Serpent. Arnhibald Constable & Co. Ltd. London, 1905
Rasanayagam, C: Ancient Jaffna, Everyman’s Pubilshers Ltd, Madras, 1926.
RgVedavyakhya: Ed. by C. K. Raja, Adyar Lebrary, 1939
Sewell, R,: A Forgotten Empire, George Allen & Unwin Ltd. London, Reprint 1924
South Indian Inscriptions.
Travancore Archaeological Series.
Vaidya, C. V: History of Medieval Hindr India, Oriental Book Agency, Poona, 1921 - 1924.
Vogel, J: Indian Serpent Lore. Arthur Probsthain, London 1926
Virddhagirisan,: The Nayaks of Tanjore, University Annamalainagar, 1942.

•Last Updated on ••Sunday•, 09 •September• 2012 18:03••  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.021 seconds, 2.39 MB
Application afterRoute: 0.027 seconds, 3.13 MB
Application afterDispatch: 0.069 seconds, 6.04 MB
Application afterRender: 0.164 seconds, 7.13 MB

•Memory Usage•

7544504

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'epa44okari4hd5fg7cr1nj6g66'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1716158780' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'epa44okari4hd5fg7cr1nj6g66'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1716159680',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:10:{s:15:\"session.counter\";i:25;s:19:\"session.timer.start\";i:1716159650;s:18:\"session.timer.last\";i:1716159679;s:17:\"session.timer.now\";i:1716159680;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:16:\"com_mailto.links\";a:8:{s:40:\"782397ee3265066cb93bbe22153088ff52e3fe78\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1086:2012-10-04-10-14-23&catid=53:2013-08-24-00-05-09&Itemid=69\";s:6:\"expiry\";i:1716159658;}s:40:\"839b289f43ce4e6bccb45785f9444d5c79b9b02e\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6289:2020-11-07-04-29-53&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23\";s:6:\"expiry\";i:1716159658;}s:40:\"34b0087837520d17c688814cadd6ca18dbccbfc1\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1967:2014-02-16-03-36-41&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44\";s:6:\"expiry\";i:1716159661;}s:40:\"2afc85ea1cacb5fa5ac2fe8a7ccad9ba202a62f0\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:127:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3978:-2-11-23-&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20\";s:6:\"expiry\";i:1716159662;}s:40:\"ecbbb1c01a11ead558d2fdd0ec8e708541446e6b\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1249:2012-12-30-03-04-32&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44\";s:6:\"expiry\";i:1716159668;}s:40:\"66013e706f3b13ac58cb5f19e43572d764c76408\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4170:2017-10-01-22-07-55&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23\";s:6:\"expiry\";i:1716159668;}s:40:\"616a0db1e4242b7385f36c47b56b3b536c5a24f1\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:122:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1125:102-&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44\";s:6:\"expiry\";i:1716159668;}s:40:\"9fd278ed03de45931ace685e39b9548b188cf103\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2544:5-&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44\";s:6:\"expiry\";i:1716159668;}}s:19:\"com_mailto.formtime\";i:1716159680;s:13:\"session.token\";s:32:\"01622b109fc2230ec4ae0777d6caec03\";}'
      WHERE session_id='epa44okari4hd5fg7cr1nj6g66'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 50)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 1039
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-05-19 23:01:20' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-05-19 23:01:20' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='1039'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 13
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-05-19 23:01:20' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-05-19 23:01:20' )
      ORDER BY a.ordering
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 50 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 50
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 35
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-05-19 23:01:20' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-05-19 23:01:20' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை. -=- பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை. -