அத்தியாயம் ஒன்று: அதிகாலையில் பூத்த மலர்!
நகரத்து வானமிருண்டு கிடந்தது. தான் வசிக்கும் தொடர்மாடியின் பல்கணியிலிருந்து வழக்கம்போல் நகரத்து வானை சாய்வு நாற்காலியிலிருந்து நோக்கிக்கொண்டிருந்தான் மணிவண்ணன். அவனுக்கு மிகவும் பிடித்தமான விடயங்களில் இயற்கையை இரசித்தல், குறிப்பாக இரவு வானை இரசித்தல் அடங்கும். அது அவனது சிறுவயதிலிருந்து அவனுக்கு ஏற்பட்ட பழக்கங்களிலொன்று. என்று முதன் முதலாக 'கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே! ' ('டுவிங்கிள்! டுவிங்கிள்! லிட்டில் ஸ்டார்' ) குழந்தைப்பாடலைக் கேட்டானோ அன்றிலிருந்து அவனை ஆட்கொண்ட விருப்புகளிலொன்று இவ்விருப்பு.
"கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே!
நீ என்னவென்று நான் வியப்புறுகின்றேன்.
அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது,
வானின் வைரம் போன்று விளங்குகின்றாய்."
அவனுக்கு 'அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது' என்னும் வரி மிகவும் விருப்பமானது. அவ்வரி அவனது கற்பனையை எப்பொழுதும் சிறகடிக்க வைக்கும் வரிகளிலொன்று. அங்கே உயரத்தில் விரிந்து , உயர்ந்து , பரந்து கிடக்கும் ஆகாயத்தில்தான் எத்தனை சுடர்கள்! எத்தனை நட்சத்திரக் கூட்டங்கள்! எத்தனை எத்தனை கருந்துளைகள்! எத்தனை பிரபஞ்சங்கள்! நினைக்கவே முடியாத அளவுக்கு விரிந்த பிரபஞ்சம்! அவனுக்குப் பல்விதக் கற்பனைகளை, கேள்விகளை அள்ளித்தருவது வழக்கம். அக்கேள்விகள் அவனது சிந்தனைக் குதிரைகளைத் தட்டிப் பயணிக்க வைக்கும் ஆற்றல் மிக்கவை. அச்சிந்தனைக் குதிரைப்பயணங்களிலுள்ள இன்பம் அவனுக்கு வேறெந்தப் பயணத்திலும் இருப்பதில்லை. முடிவற்று விரியும் சிந்தனைக்குதிரைகளின் பயணங்களுக்குத் தாம் முடிவேது? முப்பரிமாணச்ச்சிறைக்குள் வளையவரும் மானுட உலகின் பரிமாணங்களை மீறிய பரிமாணங்களை உள்ளடக்கியதாகப் புதிருடன் அவனுக்கு விரிந்து கிடக்கும் இரவு வானும், பிரபஞ்சமும், கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களும் தெரியும். 'டொரோண்டோ' நகரத்து வான் பூமத்திய ரேகைக்கு அருகிலிருக்கும் இரவு வானைப்போல் நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானல்ல. அதற்கு நகரிலிருந்து வெளியே செல்ல வேண்டும். நகரத்து ஒளிமாசிலிருந்து வெளியேற வேண்டும். இருந்தாலும் இருண்டு கிடக்கும் நகரத்து வானையும் கூர்ந்து நோக்கத்தொடங்கினால் ஒன்று, இரண்டு , மூன்று . .என்று இருட்டுக்குப் பழகிய கண்களுக்குத் தெரியத்தொடங்கிவிடும். அது போதும் அவனுக்கு.
மணிவண்ணனுக்கு நடுத்தர வயதைத்தாண்டிக்கொண்டிருக்கும் பருவம். இன்னும் திருமணம் செய்யவில்லை. தனித்து வாழ்கின்றான். நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள் எழுதிச் சுயதொழில் செய்பவன். அவனது திருமணச் சேவை இணையத்தளம் மூலம் அவனுக்கு நியாயமான அளவுக்கு மாத வருமானம் மேலதிகமாக வருவதால் , அவனது வாழ்க்கை அவன் நினைத்தவாறு, அவனது விருப்புக்கேற்ப நகர்ந்துகொண்டிருக்கின்றது. அவ்வப்போது தனிப்பட்ட சிலர் அவனை நாடி வருகையில் நியாயமான கட்டணத்தில் அவர்களுக்கு இணையத்தளம் அமைத்துத் தருகின்றான்; இணையத்தொழில் நுட்பம் அறிய விரும்பும் எவருக்கும் ஏற்ற நேரத்தில் தன் இருப்பிடத்தில் தனிப்பட்ட வகுப்புகள் அல்லது குழு வகுப்புகள் வழங்கி வருகின்றான். அவன் சுயதொழில் செய்யத்தொடங்கியதற்கு முக்கிய காரணம்.. ஆரம்பத்தில் அவனும் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவனே. ஆனால் அவனுக்குக் 'கார்ப்பரேட் கல்ட்சர்' பிடிக்கவேயில்லை. பரபரப்பும், உப்புச்சப்பற்ற ஒன்று கூடல்களும், நிறுவனக் கூட்டங்களும் அவனுக்கு வெறுப்பைத்தந்தன. அதிகாலை எழுந்தோடுவதும், மாலையில் வாகன நெரிச்சலில் அகப்பட்டு இருப்பிடம் வந்து சேர்வதிலுமே நாள் போய்விடும். அவனுக்குப் பிடித்த வேறெதனையும் செய்வதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஓரளவு பணம் வங்கியில் சேர்ந்ததும், அவன் சுயதொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினான். இன்று அவனது சுயதொழில் அவனுக்குரிய ஓய்வினைத் தருகின்றது. அண்மைக்காலமாக அவனது இணையத்தளத்தின் வருமானம் அதிகரித்திருப்பதால், அதனை நிர்வகிக்க டோனி ஃஃபங் என்னும் இளம் தகவற் தொழில் நுட்பவியலாளனைப் பகுதி நேரமாக நியமித்திருந்தான். -
மணிவண்ணனது சிந்தனை மீண்டும் இருண்டு , சுடர்விடும் நகரத்து வானில் நிலைத்தது; இலயித்தது. சிந்தனையும் பரந்து விரிந்தது.
'நான் இங்கு இங்கே தனிமையிலிருந்து நோக்கிக் சிந்தனையிலாழ்ந்துகொண்டிருப்பதைப்போல் அங்குமொன்றோ அல்லது பலவோ சிந்தனையிலாழ்ந்து கொண்டிருக்குமோ? அதுவும் என்னைப்போன்ற உடலமைப்பு கொண்டதாக, முப்பரிமாணச்சிறைக்குள் அடைக்கப்பட்டதொன்றாக இருக்குமோ? அல்லது பல்பாரிமாணங்கள் கொண்டவையாக அறிவில் சிறந்ததாக இருக்குமோ? அல்லது அறிவின் தொடக்கத்திலுள்ளவைதொன்றாக இருக்குமோ? எப்படியிருக்கும்? அலைவடிவமாக இருக்குமோ? கண்களுக்குத் தெரியாத சக்தி வடிவிலிருக்குமோ? எப்படியிருக்கும்? என்னை விட மேலான பல பரிமாணங்களில் இருப்பதால் என்னால் முடியாத பலவற்றை இலகுவாகச் செய்யுமாற்றல் மிக்கதாக இருக்குமோ? என்னைப்பொல் உணர்வுகள் கொண்டதாகவிருக்குமோ? உணவுண்பவையாக இருக்குமோ? அல்லது ஒளிச்சக்திபோல் , இயந்திர மனிதர்களைப்போல் ஏதேனுமொரு சக்திகொண்டு இயங்குமொன்றாகவிருக்குமோ?'
"இரவு வானில் நானிங்கிருந்து
இருப்பு பற்றிய சிந்தனையில் மூழ்கிக்கிடக்கின்றேன்.
அங்கு நீயும்
அவ்விதமே சிந்தனையிலாழ்ந்து கிடப்பாயோ?
நண்பனே!
நானிங்கு சிந்திப்பதைப்போல்
உனக்கும் சிந்தனையென்னும்
அமைப்புக்கொண்ட உடலமைப்பு
உண்டோ? அன்றி
வேறுவகையில் கணினியிலுள்ளதைப்போல்
சில்லுள்ள அமைப்புண்டோ?
அதுவுமற்று நாமறியா
அமைப்புண்டோ?
அறியத்தருவாயா நண்பனே!
எதற்கிந்த இருப்பு? எதற்கிந்த உலைச்சல்?
எதற்கிந்த அலைச்சல்?
எதற்கு? எதற்கு?
நிலையற்றதோரிருப்பு.
நிலையற்றதொன்றினிலேந்த
அலைச்சல்?
உலைச்சல்?
அர்த்தமற்ற இருப்பா? அல்லது
அர்த்தமென்றொன்றுண்டாவிந்த
இருப்புக்கு? இயம்பிடுவாய் நண்பனே!
இயம்பிடுவாய்!"
இவ்விதமே சிந்தனை விரிந்து கொண்டே சென்றது. நீண்டுகொண்டு சென்ற இவ்வகைச் சிந்தனைக்கு முடிவேதும் ஒருபோதுமிருக்கப்போவதில்லை. ஆனாலும் இவ்விதம் சிந்திப்பதிலோரின்பமிருக்கத்தான் செய்கிறது. இவ்விதம் இருந்தவரை சிந்தித்து மறைந்த மனிதர்களை , வாழும் மனிதர்களை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களது வாழ்க்கையை, எழுத்துகளை, சிந்தனைகளை அறிவதிலெப்போதும் அவனுக்கு அதிக ஆர்வமுண்டு. இவ்வகையில் அவனுக்கு மிகவும் பிடித்த மானுட ஆளுமைகளில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். அவனிடம் எப்போதும் பாரதியாரின் முழுக்கவிதைகளும் அடங்கிய தொகுதியொன்றிருக்கும். அவ்வப்போது அவன் அத்தொகுதியையெடுத்துப் பக்கங்களைப் புரட்டுவான். அப்பக்கங்களில் கொட்டிக்கிடக்கும் சிந்தனைச் சுடர்களில் அவன் மெய்ம்மறந்து விடுவான். குறுகிய இருப்பில் பாரதியாரால் எவ்விதம் அவ்விதம் வாழமுடிந்தது! எழுத முடிந்தது! பாரதியாரின் சிந்தனைத் தெளிவும் ,ஆழமும் அவனை மிகவும் கவர்தவை. இருப்பின் சவால்களோ, துயரங்களோ அவரை ஒருபோதுமே பாதித்தது கிடையாதோ என்று தோன்றும் வரிகள் அவருடையவை. அவரும் சாதாரண மானுடர்களிலொருவராகப் பிறந்து, வாழ்ந்து மறைந்து போனவர்களிலொருவரே. ஆனால் அவற்றை விபரிக்கையில்தான் எத்தனை துடிப்பு! சிலிர்ப்பு! களிப்பு! இயற்கையைப்பற்றி, மானுட உணர்வுகளைப்பற்றி, மானுட அவலங்களைபற்றி எத்தனை கவிதைகள்! அவ்விதம் சொற்கள் அவரிடமிருந்து வந்து விழுந்திருக்கின்றன! மழையைப்பற்றி, காற்றைப்பற்றி, காலையைப்பற்றி, அந்தியைப்பற்றி , முதற்காதலைப்பற்றி, குயிலைப்பற்றி, விண்மீனைப்பற்றி, வால்வெள்ளியைப்பற்றி.. எத்தனை கவிதைகள்! 'சாதாரண வருஷத்துத் தூமகேது' அவனுக்கு ஒருபோதில் அதிகாலையில் அப்பாவுடன் பார்த்த வால்வெள்ளியைப்பற்றிய நினைவுகளையேற்படுத்தும்.
'தினையின் மீது பனை நின்றாங்கு
மணிச்சிறு மீன்மிசை வளர்வா லொளிதரக்
கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மை கொண்டிலகுந்
தூம கேதுச் சுடரே, வாராய்!'
இதுபோல் அவனுக்குப் பிடித்த இன்னுமொரு பாட்டு அவரது 'மழை'ப் பாட்டு.
" வெட்டி யடிக்குது மின்னல் - கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது.
கொட்டி யிடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று."
அவரது அக்கினிக்குஞ்சு அவனுக்குப் பிடித்த இன்னுமொரு கவிதை. அற்புதமான படிமம். அக்கினிக்குஞ்சு. அவனுக்கு மிகவும் படித்த படிமங்களிலொன்று.
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன். - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்.
வெந்து தணிந்தது காடு. - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்'
மானுட குலத்தின் வளர்ச்சியிலொரு படிக்கட்டு முதற்காதல். அது அவரையும் விட்டு வைக்கவில்லை. அது பற்றியும் அவர் தன் கவிதைகளில் பதிவு செய்து வைத்திருக்கின்றார். அற்புதமான கவிதை வரிகள். அனுபவம் தோய்ந்த கவிதை வரிகள்.
"நீரெ டுத்து வருதற் கவள்மணி
நித்தி லப்புன் னகைச்சுடர் வீசிடப்
போரெ டுத்து வருமதன் முன்செலப்
போகும் வேளை யதற்குத் தினந்தொறும்
வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர்
வீழ்ந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீரெ டுத்த புலையியற் சாரர்கள்
தேச பக்தர் வரவினைக் காத்தல்போல்
காத் திருந்தவள் போம்வழி முற்றிலும்
கண்கள் பின்னழ கார்ந்து களித்திட
யாத்த தேருரு ளைப்படு மேழைதான்
யாண்டு தேர்செலு மாங்கிழுப் புற்றெனக்
கோத்த சிந்தையோ டேகி யதில்மகிழ்
கொண்டு நாட்கள் பலகழித் திட்டனன்"
"ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்."
பாரதியாரின் முதற்காதல் பற்றி எண்ணியதும் அவனது சிந்தனை அவனது பதின்ம வயதுக்காலகட்டத்தை நோக்கிச் சிறகடித்தது. முதற்காதல் அனுபவங்களை அனுபவிக்காத மானுடர் முழுமையான வாழ்க்கை அனுபவம் பெற்றவரல்லர் என்பது அவன் கருதினான். முதன் முறையாகக் குடும்பத்துக்கு அப்பால், எவ்விதம் பிரதியுபகாரத்தையும் வேண்டாது, அன்பையே மூலதனமாக்கி மானுடர் அடையும் உணர்வது. அதனை அடைவதும், கடப்பதும் முக்கியமானது. பெரும்பாலானவர்களுக்கு முதற்காதல் முழுமையடைவதில்லை, சிலருக்குத்தாம் முழுமையடைகின்றன. அவ்விதம் முழுமையடைந்து இன்று வரை அன்புகலந்து ஒருமித்து வாழும் அவனது நண்பர்களிலொருவனான சுந்தரத்தின் நினைவு தோன்றியது. போர்ச்சூழலிலும் நாட்டை விட்டு நீங்காது வாழ்ந்து வருபவன் அவன். அப்படியிருந்ததும் ஒருவிதத்தில் அவனுக்கு நல்லதாகப்போய்விட்டது. வீடு, வயலென்று காணிகள் அவனுக்குண்டு. ஒரு காலத்தில் போர்ச்சூழலால் மதிப்பிழந்து கிடந்த அவை இன்று நினைக்க முடியாத அளவுக்கு அதிக மதிப்பையும் வருவாயையும் அவனுக்கு ஈட்டித் தந்துகொண்டிருந்தன. ஆனால் அதற்காக அவனும், அவனது மனைவியும் தந்த விலைகள். அனுபவங்கள்.
போர்ச்சூழலின் கொடூரம் தாங்காமல் அவன் நாட்டை விட்டுப்புறப்பட்டு , பல்வேறு நாடுகளில் பல்வகை அனுபவங்களையடைந்து இறுதியில் கனடாவை அடைந்து நிலைத்திருந்தான். ஆனால் அவ்வப்போது அவனை இழந்த மண்ணும், மனிதர்களும் , நினைவுகளும் வாட்டத்தான் செய்தன. காலப்போக்கில் அவற்றுடன் வாழப்பழகிக்கொண்டான்.
முதற்காதல் பற்றி எண்ணியதுமே அவனுக்கு அவனது முதற்காதல் பற்றிய சிந்தனைகளும் கூடவே தோன்றின. யாழ்நகரில் சேவற்கொடியோன் மாஸ்டரின் உயர்தரக் கணித 'டியூசன்' வகுப்புக்காக அதிகாலை ஐந்து மணிக்குப் பெருமாள் கோவிலுக்கண்மையிலிருந்த அவரது இல்லத்துக்குச் சென்ற நாட்களின் நினைவுகளெழுந்தன. அதிகாலைப் பெருமாள் கோவில் மணியோசையும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் சுப்ரபாரதமும் காற்றில் இழைய வந்துகொண்டிருக்க அவன் அவரிடம் கணிதம் படித்த நினைவுகள் மேலெழுந்தன. அங்குதான் அவளை முதன் முதலாக அவன் கண்டான். சந்திரமதி சாதாரண மாநிறத்தில் , இரட்டைப்பின்னல்களும், சாந்துப்பொட்டுமாக புத்தகங்களை மார்புற அணைத்தபடி நடந்து வந்து அவன் இதயத்தினுள்ளும் புகுந்துகொண்டாள். எப்படி அவள் அவனது இதயத்துக்குள் நுழைந்து கொண்டாளென்று நினைத்துப்பார்ப்பதுண்டு. சில சமயங்களில் அவள் வகுப்புக்கு முதலிலேயே வந்து விடுவாள். அவன் வருகையில் மாஸ்டர் வீட்டு வாசற் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருக்கும், அவள் வந்து திறந்து விடுவாள். அவ்விதம் திறந்து விடுகையில் சில கணங்கள் அவன் அவள் கண்களை நோக்குவான்.அவளும் நோக்கித் தலை குனிந்துத் திரும்புவாள். அக்கணங்களில் அவன் சாதாரணமாக அவளை நோக்குகையில் அடைந்த உணர்வுகளைவிட அவளைப் பூரணமாக அறிந்துகொண்டவனைப்போலுணர்ந்தான். அதிகாலையில் பூத்த மலராக அவள் அவனுக்குத் தென்பட்டாள். அவளைக்காண்பதற்காகவே அவன் ஒரு நாள் கூட வகுப்புகளைத் தவறவிட்டதில்லை.
இந்நிலையில்தான் அவ்வகுப்பு முடிவடையும் காலம் அண்மித்துக்கொண்டிருந்தது. அச்சமயத்தில் அவனை அவளை விரைவில் பிரியப்போகின்றோமென்ற எண்ணம் ஆட்டிப்படைக்கத்தொடங்கியிருந்தது. வகுப்புகள் முடிவதற்குள் எப்படியாவது அவளுடன் கதைக்க வேண்டுமென்று எண்ணினான். ஆனால் அவனது சுபாவம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. என்ன செய்யலாமென்று தீவிரமாகச் சிந்தித்தான். இறுதியாக அவன் ஒரு முடிவுக்கு வந்தான். எப்படியாவது அவளுக்குத் தன் எண்ணத்தைத் தெரியப்படுத்திலானென்ன என்று தன்னையே கேட்டுக்கொண்டான். எப்படித்தெரியப்படுத்துவதென்று எண்ணமிட்டான். கடைசியில் அவளுக்குக் காதல் கடிதமொன்றை எழுதிக்கொடுப்பதுதான் சரியான வழியென்று முடிவு செய்தான். அவனால் ஒருபோதுமே நேரடியாக அவளைப்பார்த்து 'நான் உன்னைக் காதலிக்கின்றேன்' என்று கூறமுடியாதென்பது அவனுக்குத் தெரியும்.ஆனால் இவ்விதம் எழுதிக்கொடுப்பது அவனது சிக்கலைத் தீர்ப்பதாகவிருந்தது. ஏனென்றால் நேரில் கூறுகையில் ஏற்படப்போகும் படபடப்பை அவனால் இவ்வழியில் தவிர்த்துக்கொள்ள முடியும். அவளுக்குத் தன் எண்ணங்களைக் காதல் கடிதமாகத் தெரியப்படுத்துவதென்ற எண்ணம் தோன்றியதும் அவனுக்கு அடுத்து அதை எவ்விதம் செயற்படுத்துவது என்பதில் கவனம் சென்றது. எப்படிக் கடித்தத்தை அவளிடம் கொடுக்கலாம்? எப்பொழுது கொடுக்கலாம்? வகுப்பு தொடங்குவதற்கு முன் அவள் பொதுவாக வருவதால் , நேரத்துடன் வந்து கொடுக்கலாமா? அல்லது வகுப்பு முடிந்து செல்கையில் கொடுக்கலாமா? என்று எண்ணினான். வகுப்பின் ஆரம்பத்தில் கொடுத்தால், வகுப்பு முடியும் வரையில் அவள் என்ன செய்வாள்? ஆசிரியரிடம் கடித்தைக் கொடுத்து விடுவாளா? அப்படிக்கொடுத்து விட்டால் அனைவருக்கும் தெரிய வந்துவிடுமே என்று சிந்தனையோடியது. கடைசியில் வகுப்பு முடிந்து செல்கையில் கொடுப்பதாக முடிவு செய்தான். அப்படிக்கொடுத்தால் ஏனைய மாணவர்களும் கண்டு பிடித்து விடுவார்களே. என்ன செய்யலாமென்று சிந்தித்தான். இந்நிலையில் அதற்குமொரு வழியை அவன் கண்டு பிடித்தான். அவ்விதம் நண்பர்கள் கண்டாலும், அதற்குத் தகுந்த நல்லதொரு காரணத்தைக் கூறலாமென்று தோன்றியது. இறுதியில் டியூசன் வகுப்பு முடியும் காலமும் நெருங்கிக்க்கொண்டிருந்தது. அவனும் அவளுக்குக் காதல் கடிதமொன்றினை எழுதுவதில் கவனத்தைச் செலுத்ததொடங்கினான்.
அவனது தங்கை முறையிலான உறவுக்காரி காந்திமதி சந்திரமதி படிக்கும் பெண்கள் கல்லூரியில்தான் படித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கும் , சந்திமதிக்குமிடையில் ஓரிரண்டு வயது வித்தியாசம்தான். இருவருமே சில சமயங்களில் ஒன்றாகப் பாடசாலையிலிருந்து வருவதை அவன் கண்டிருக்கின்றான். தன் உள்ளத்துணர்வுகளைக்கொட்டிக் கடிதமொன்றினையெழுதி , 'கொப்பி'யொன்றுக்குள் வைத்து, காந்திமதி அவளிடம் கொடுக்கத்தந்ததாகக் கொடுத்து விடுவதாக முடிவு செய்தான். இவ்விதம் கொடுக்காவிட்டால் மாஸ்டரின் வகுப்பும் முடிந்து விடும். அதன் பிறகு சந்திரமதியை வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பம் கூட ஏற்படாமல் போய் விடலாம். அவள் அவனுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் அவளுக்கு அவன் அவளை விரும்பும் விடயத்தைக் கூற வேண்டுமென்று தோன்றியது. அவ்விதம் அவன் அவளை விரும்புவதை அறிந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. இவ்விதமாக வழியினைக் கண்டு பிடித்ததும் அடுத்து அவனது கவனம் கடிதத்தை எழுதுவதில் சென்றது.
[தொடரும்]
•<• •Prev• | •Next• •>• |
---|