உலக இயக்கமே இயற்கையை நோக்கிச் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த இயற்கையின் கொடையில்தான் உலக ஜீவராசிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய இயற்கையை காத்தலும் காத்த வகுத்தலும் நம் கடமை. உலக இயற்கை வளத்தில் நம் நாட்டின் பங்கு அளவிடற்கரியது. அத்தகைய இயற்கை வளத்தை நாம் பலவிதத்தில் அழித்து வருகிறோம். இயற்கை வளத்தின் இன்றியமையாமை பற்றி நம் வளரும் படைப்பாளர்கள் பல்வேறு விதங்களில் கூறியுள்ளனர். அவற்றை பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
ஐம்பூதங்கள் அனைத்தின் ஒட்டுமொத்த இயக்கமே இந்த உலகம். இவற்றில் ஏதேனும் ஒன்றின் இயக்கம் தடைபட்டாலும் இயற்கை பேரழிவுகள் நிச்சயம். அவற்றைப் போலவே ஒவ்வொரு பூதங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கின்றன. ஒன்றினுடைய பாதிப்பு மற்ற அனைத்தையும் முடக்குவதாகவே இயற்கை அமைந்துள்ளது. இத்தகைய இயற்கையில் இருந்து தோன்றியவை தான் பல உயிரினங்கள். அந்தந்த தட்பவெப்ப நிலைக்கேற்ப உயிரிகள் தாமாகவே தோன்றி மறைந்து வருகின்றன. அந்த இயற்கையின் படைப்பில் பகுத்தறியும் திறன் படைக்கப்பட்ட ஒரு உயிரினம் தான் மனித இனம். இவா்களிடம் சிக்கிக்கொண்ட இயற்கையானது படாதபாடுபடுகிறது. இதைத்தான் கவிஞர்,
இப்போது அடையாளங்களில்லை
அலங்காரங்களில்லை
அர்த்தங்களிலில்லை
(ந.ந ப 22)
என்ற கவிதையில் இயற்கையை அழிக்கும் மிகப் பெரிய சக்தி நம்மிடம் தான் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இப்படி காடுகளையும் மரங்களையும் நாம் நாள்தோறும் அழித்து வந்தால் கடைசியில் இந்த உலகத்தில் எஞ்சி இருப்பது ஒன்றும் இல்லை. அவ்வாறு மரங்களை அழித்தால் ஏற்படும் பாதிப்பினை,
நீரின்றி அமையாத
உலகத்தை
நினைப்பதில்லை
புவியரசி
(தெ.க ப 43)
என்று கூறுகிறார். எனவேதான் மேற்கூறியது போல இயற்கை ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கிறது. ஒன்றை அழித்தாலே மற்றவை அனைத்தும் அழிந்துவிடும்.
இந்தியா ஒரு விவசாய நாடு என்று நாம் மார்தட்டிக் கொண்டாலும் இன்று விளைபொருளுக்கு கையேந்தும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம். நாளுக்கு நாள் விலைவாசி ஏற்றம் ஏறிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. உதாரணமாக இத்தகைய ஏற்றத்திற்கு நாம் செய்யும் செயலும் ஒரு காரணியாக அமைகின்றன. பண முதலைகள் கொண்ட அரசாங்கம் காக்கவும் தடுக்கவும் முடியாமல் பணம் ஒன்றையே மையமாக நோக்கி நகர்கிறது. இன்று மணல் கொள்ளைகளும் இயற்கை அழிவுகளும் நாள்தோறும் நடந்து வந்து கொண்டே இருக்கின்றன.
ஆழமான ஆறு
இறங்கியது லாரி
மணல் எடுக்க
(கு நி வீ ப 52)
தினமும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையை அழித்து வருவதனால் அதனால் ஏற்படும் இயற்கை மாற்றத்தை நாம் உணர்வதில்லை. இனி உணர்ந்தால் மட்டுமே நம் உயிரினங்கள் வாழ முடியும் என்பதை,
பறவைகள் முகம்பார்க்க
கண்ணாடியின்றி திரும்பின
வறண்டு போன நதி
(கு நி வீ ப 30)
என்ற கவிதையின் மூலம் வெளிப்படுத்துகிறார். குளங்களையும் ஏரிகளையும் நாம் மாசு படுத்துவதோடு ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறோம். தற்போது ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டாலும் அதை மீட்டெடுப்பது என்பது பெரும் முயற்சியாகவே இருந்து வருகிறது. இந்த விழிப்புணர்வு என்றோ தோன்றியிருக்க வேண்டும், என்றாலும் கூட நாம் மனமுவந்து பாராட்டத்தான் வேண்டும். அத்தகைய இயற்கையை சூறையாடும் அவர்களை,
பரமபதத்தின்
சதுர கட்டங்களில்
பதுங்கிக் கொண்டவை
கொள்கைகள்
(பஞ் ப 59)
இக்கவிதையின் மூலம் வெளிப்படுத்துகிறார். மக்கள் தொகை அதிகம் சூழ்ந்துள்ள மாபெரும் நாடாக நம் நாடு இருக்கிறபோது சாதாரண அறிக்கையின் மூலம் நாம் ஒன்றும் செய்துவிடமுடியாது. கடுமையான சட்டங்கள் மூலம்தான் நாம் அதை பாதுகாக்க முடியும். இந்த இயற்கையை பாதுகாப்பதும் கூட அத்தகைய கடுமையான சட்டங்களால் மட்டும் முடியும். மனிதனிலிருந்து மாறிக்கொண்டிருக்கும் வளம் காக்கும் சூழல் பல்வேறு கவிஞருடைய கவிதைகளில் வெளிப்படுகிறது. அதனை,
நான் வெளியிடும்
கடைசி பிராண வாயுவை
அந்த மனிதனே
சுவாசிக்கட்டும்
(எ. க. பெ ப 19)
என்ற கவிதையின் மூலம் கவிஞர் வெளிப்படுத்துகிறார். மரங்கள் அனைத்தும் காடுகளில் வரண்டு நிற்கும் காட்சியை சொல்கிறது இக்கவிதை. இயற்கையோடு தொடர்புடைய அனைத்தையும் காக்க போராட வேண்டும் என்பதை கவிஞர் மறைமுகமாக வெளிப்படுத்துகிறார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இயற்கை காப்பதற்காகவும் இயற்கை பேரிடரில் இருந்து காப்பதற்காகவும் முன்வர வேண்டும். இவ்வாறு நாம் பல முயற்சிகள் எடுத்து வந்தாலும் அது போதாது. வளரும் எழுத்தாளர்களான பா.விஜய், நா.முத்துக்குமார், யுகபாரதி மற்றும் தபு சங்கரின் கவிதைகள் இதற்குச் சான்றுகளாக அமைகின்றன. இவர்களுடைய படைப்பில் சமூக சிந்தனையோடு அவற்றை காப்பதற்கான வேகமும் தெரிகிறது. எனவே படைப்பின் வழியாக மட்டுமல்லாமல் எல்லா விதத்திலும் இயற்கை காப்பதற்கு நம் கரங்கள் ஒன்றிணைய வேண்டும், ஒன்றிணைந்தால் மட்டுமே இந்த உலகம் உயிர் பெறும்.
பார்வை ஏடுகள்
1. நந்தவனத்து நட்கத்திரங்கள் - நா.முத்துக்குமார்
2. தெப்பக்கட்டை – யுகாபாரதி
3. குழந்தைகள் நிறைந்த வீடு - நா.முத்துக்குமார்
4. எனது கருப்புப் பெட்டி – தபு சங்கர்
5. பஞ்சாரம் – யுகாபாரதி
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
* கட்டுரையாளர்: - பொ.ஜெயப்பிரகாசம், கோவை -
•<• •Prev• | •Next• •>• |
---|