பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

ஆய்வு: குறுந்தொகை காட்டும் பாலைத்திணைச் சமூகம்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -செவ்வியல் இலக்கியத்தின் செம்மாந்த வளம்பெற்ற நூல்களில்; குறுந்தொகை தனித்துவம் மிக்கது. குறுகிய அடிகளில்; செறிவான இலக்கிய நயம்கொண்ட பாடல்களைக் கொண்டது. தொல்காப்பியப் பொருளிலக்கண மரபுகளுக்கு இலக்கியமாகத் திகழும் பேறு பெற்றது.

சங்க காலத்தில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை இயற்கைப் புனைவுடன் இந்நூற்பாடல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. “குறுந்தொகையின் ஒவ்வொரு பாடலும் சங்கச் சமூக வாழ்வியலில் நிலைபெற்ற கூறுகளான நட்பு, காதல், கற்பு, இல்லறம், பண்பாடு, பொருளியல் வாழ்வு, சமூக மேம்பாடு ஆகியவற்றைப்; படம் பிடித்துக் காட்டுகின்றன” என்ற கருதுகோளை முன்வைத்து இக்கட்டுரை அமைகின்றது.

அகவாழ்விலும், புறவாழ்விலும் சமூகநெறிகள் ஓர் ஒழுங்குமுறைக்குட்பட்ட வரையறைக்குள் சமூகச் செயலாற்றியதைச் சங்கப் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன. குறுந்தொகையின் பாலைத்திணைப் பாடல்கள் தெளிவுறுத்தும் சமூகவியல் பண்புகள், அதன்வழி பெறப்படும் சங்ககால வாழ்வியல் சிறப்புகள், தமிழர் வாழ்வின் தனித்;தன்மை ஆகியனவற்றைக் கண்டறிதல் இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றன.

சங்க காலத்தில் திணைநிலைச்சமூகம் நிலைபெற்றிருந்தது. காடுகள், மலைகள், கழனிகள், கடற்கரைப் பகுதிகள் மக்கள் வாழிடங்களாக இருந்தன. இந்த நானிலத்திலும் வாழ்ந்த மக்கட் சமூகத்தில் பண்பாட்டு அடிப்படையிலான ஒற்றுமைக்கூறுகளும், நிலவியல் சார்ந்த சிறப்புக்கூறுகளும் நிலைபெற்றிருந்தன. குறுந்தொகையின் திணைநிலைப் பாடல்கள் அவ்வத்திணையின் இயற்கை இயங்கியலோடு பொருந்தவருமாறு படைப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன.

சங்க இலக்கியத்தில் பாலை

சங்க காலத்தில் மன்னர், மக்களின் வாழ்க்கை முறை இயற்கைப் புனைவுடன் சிறுசிறு பாடல்களின் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சங்கப் பாடல்களில் இயற்கையோடு இயைந்த மக்கள் வாழ்வியல் புனையப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் போர், கொடை, நட்பு, காதல், கற்பு, இல்லறம், பண்பாடு, வாழ்வியல் முதலானவற்றில் ஏதாவதொன்றை அறிவிப்பனவாக அமைந்துள்ளன.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களின் செய்யுள்கள் அவற்றுக்குரிய நிலங்களிலேயே வளர்ச்சிப் பெற்றனவாகும். மேலும் அத்திணைப் பாடல்கள் அந்நான்கு நிலங்களிலும் வாழும் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளாலும், பழக்கவழக்கங்களாலும் உருவாக்கப்பட்டனவாகும். சங்ககாலத்தில் பாலை ஒரு குடியிருப்பு நிலமன்று. அது பொருளீட்டுவதற்குப் பிரிந்து செல்லும் ஒரு நிலவழியாகவே கருதப்பட்டது. இதனை தமிழண்ணல், “பாலைத்திணைப் பாடல்கள் பாலை நில மக்களின் வாழ்க்கைப் படைப்போ, பாலைநில நாட்டுப் புறப்பாடல்களிலிருந்து விரிவுபடுத்தப்பட்டனவோ அல்ல. அவை ஏனைய நான்கு நிலத்தலைவர்களின் பிரிவு குறித்த பாடல்களாகும். பிற நான்கு நில மக்களுக்கும் பொதுவாக உள்ளமையால் பாலைப்பாடல்களின் எண்ணிக்கையும் மிகுதியாக உள்ளது” என்று விளக்கம் தருகின்றார். (225)

சங்க காலத்தில் குறிக்கப்பெறும் திணை என்னும் சொல் பண்டைத்தமிழர்களின் குடிமுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நானில வாழ்க்கை அகம் புறம் என்னும் இருபகுதிகளைக் கொண்டது. வீடு முதலான அகவாழ்க்கை ஒழுகலாறுகள் குறிஞ்சி முதலானவற்றைக் குறியீடாகக் கொண்டமைந்ததைப் போல, வெட்சி முதலானவை புறவாழ்க்கைக் குறியீடுகளாக அமையப் பெற்றனவாகும். இந்த அக, புற வாழ்வியல் ஒழுகலாறுகள் அனைத்தும் சங்க காலப் பொருளியல் வாழ்க்கையின், பொருளாதார உற்பத்தித் தேடலின் நெறிமுறைகளை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.

சமுதாயத்தின் பல்வேறுபட்ட பொருளாதார அடித்தளத்தில் அமைந்த நானில மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளையே சங்கத் திணைநிலைச் சமூகம் நமக்கு உணர்த்துகின்றது. இந்தப் பொருளாதார அடித்தளம் அந்நால்வகை நிலங்களின் இயற்கை வளத்தை ஆதாரமாகக் கொண்டமைந்தது. இயற்கைச் சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவாய் ஆதாரங்கள் குறைகின்றபோது வருவாய்ப் பெருக்கத்திற்கான வழிமுறைகளில் திணைநிலை மக்கள் ஈடுபட்டு நின்றதனையே சங்கப் பாடல்கள் பொருளாக்கியுள்ளன. இந்த வருவாய்ப் பெருக்கத்திற்கான முன்முயற்சிகளில் பெரிதும் ஈடுபட்டவர்கள் ஆண்களே. இதனால் அவர்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டுப் புலம்பெயர்ந்து வேற்றிடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைக்குள் தள்ளப்படுகின்றனர். இதன்பொருட்டே சங்கப் பாடல்களில் பிரிதல் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைகின்றது. இந்த இடப்பெயர்வை அடிப்படையாகக் கொண்ட பிரிதல் என்னும் உரிப்பொருளே சங்கப் பாலைத் திணைப்பாடல் மரபாகவும் அமைகின்றது. இது சங்க கால வாழ்விலும் அகத்திணைப் பாடல் மரபிலும் முதன்மையான இடத்தைப் பெறுகின்றது.

பாலை என்பது சமூக வாழ்வில் பெறும் பிரிதலின் குறியீடு. அவ்வகையிலேயே அது நான்கு நிலங்களுக்கும் பொதுவானதாக அமைந்திருக்கின்றது.

வேளாண்மையை நம்பித் தம் வாழ்க்கையைத் தொடரமுடியாத சூழலில் மக்கள் மன்னர்களின் ஏவலுக்கு ஆட்பட்டுப் போர்த்தொழிலில் ஈடுபட்டதைச் சங்கப் புறப்பாடல்கள் காட்டுகின்றன. சீறூர் மன்னர்கள் மக்களின் நலன்கருதி, வேந்துவிடு தொழிலில் ஈடுபட்டதைப் போல, குடும்பநலன், எதிர்கால வாழ்க்கைநலன் என்பன கருதிக் குடும்பத்தின் தலைவன் பொருளீட்டலில் ஈடுபட்ட வாழ்க்கை நிகழ்வுகளைப் பாலைத்திணைப் பாடல்கள் காட்டுகின்றன. சங்கப் பாலைத்திணைப் பாடல்கள் சமுதாய மரபினைக் காட்சிப்படுத்துகின்றன. பொருளியல் வாழ்க்கைச் செயல்பாடுகளில் எந்த அளவுக்குத் தாக்கம் பெற்றிருக்கின்றது என்பதனைக் காட்டுகின்றது. பாலைத்திணை என்பது சங்கக் கவிதை மரபு மட்டும் அல்ல. அது பொருளீட்டல் என்ற சமுதாயத் தேவையை அடிப்படையாகக் கொண்டது. இதன்பொருட்டே அது பொதுத்திணையாக வகுக்கப்பட்டது.

சமுதாயம்

இலக்கியமும் சமுதாயமும் பின்னிப்பிணைந்தவை ஆகும். இலக்கியத்தைச் சமுதாயமும், சமுதாயத்தை இலக்கியமும் காட்சிப்படுத்துகின்றன. படைப்பாளர்கள் சமூக வழக்காறுகளைக் கண்டும், கேட்டும், உணர்ந்தும், அறிந்தும் பெற்றவற்றைக் கலையாக்கித் தருகின்றனர். அவ்வகையில் சங்கச் சமூகத்தை அறிவதற்குச் சங்கப் பாடல்களே பெருந்துணை புரியும் திறன் தெளிவாகும்.

சமூகவியலும் குடும்பமும்

தனிமனித வாழ்வு சமூகத்தோடு இணைவதற்குக் குடும்ப வாழ்வு மிக முக்கியப் பங்காற்றுகின்றது. குடும்பத்தின்வழி ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் மனித சமூகத்தை இணைக்கும் பாலமாகச் செயல்பாடுகின்றன. இதை மனிதனுடைய சமூக இயல்பு (ளுழஉயைடிடைவைல) என்பர் சமூகவியலாளர். தனிமனிதன்; அரசு, ஊர், தெரு, சாதி, குலம், பால், தொழில் என்பன போன்றவற்றுள் ஏதாவது ஒன்றினால் சமூக அமைப்பில் பிணைக்கப் படுகின்றான். “மனிதனை அவனுடைய தனித்த நிலையிலிருந்து சமூக உறுப்பினனாக மாற்றும் பிணைப்புகளில் குடும்பமும் உறவுமுறைகளுமே தலைமை பெறுகின்றன” என்கிறார் கு.வெ.பாலசுப்பிரமணியன் (19:1994) இதனால் தனி மனிதன் சமூகத்தோடு ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகளில் குடும்ப உறவே முக்கியமானதாக அமைகிறது. மனிதனது உடலியல், உணவுத்தேவை, வாழ்க்கைப் பிடிப்பு ஆகியவற்றின் தேவைகளை உறவுகளே நிலைநிறுத்துகின்றன. இதன்பொருட்டே சங்க அகப்பாடல்கள் இல்லற வாழ்க்கையின் சமூகவியற் பண்புகளைப் பல்வேறு நிலைகளில் அலசுகின்றன.

குடும்ப வாழ்வு நிலைபெற்றுத் திகழ்வதற்கு கணவன்-மனைவி இருவருக்கிடையே புரிந்துகொள்ளும் தன்மையும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பாங்கும், ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் நம்பிக்கையும் முதன்மையானவையாக அமைகின்றன. இத்தகு குடும்ப வாழ்வின் சிறப்பு பாலைத்திணைப் பாடல்களில் வெகுவாகக் காட்டப்படுகின்றது.

“சங்க காலச் சமூக மதிப்புகளில் உயர்ந்த வாழ்க்கைக் கோட்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கிய அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் ஒப்புரவு, வாய்மை, மானம், பெருமை, குடிமை, ஈகை, விருந்தோம்பல் ஆகிய எல்லாவற்றையும் குறிக்கலாம். இம்மதிப்புகளைப் புலப்படுத்தும் அமைப்புகளாகக் குடும்பம், அரசு, சான்றோர் கூட்டம் ஆகியன இருந்தன” (111:1994) என்கிறார் கு.வெ.பாலசுப்பிரமணியன்.

சங்கப் பாலைத்திணைப் பாடல்கள் காமநுகர்வுக்கும், பொருள் தேடலுக்கும் இடையிலான சிக்கலையே மையப்படுத்தி அமைந்துள்ளன.

பொருள் தேடும் பொருட்டுத் தலைவியைப் பிரியக் கருதிய தலைவன், தனக்கு இன்பம் தரும் பொருள் தலைவியே அன்றி வேறு யார் உளர்? எனக் கருதி, தன் பிரிவினைத் தவிர்த்த நிகழ்வினை,

“மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலை
பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்
கல்கெழு கானவர் நல்குறு மகளே”    (குறு. பா. 71)

என்னும் பாடல் உணர்த்தி நிற்கக் காணலாம். தன்னுடைய பிணியை நீங்கச் செய்யும் அருமருந்தாகவும், வறுமையை நீக்கும் செல்வமாகவும் தலைவியே திகழ்கின்றாள் என்பதால் நான் ஏன் பொருளைத் தேடி வேறெங்கேணும் செல்ல வேண்டும் என்ற குறிப்பு இப்பாடல் உணர்த்தக் காணலாம்.

இன்பியல் வாழ்க்கை

இன்பம் என்பது எல்லாத்துறையிலும் எய்தும் மனமகிழ்ச்சி என்பர். அது அகத்திணையில் சிறப்புப் பற்றி காம இன்பத்தையே குறித்து வருகின்றது. காம இன்பம் குறித்த நுகர்ச்சியின் பெருமை சங்கப் பாடல்களின் பொருளாக அமைந்திருக்கக் காணலாம். இன்பம் என்பது அனைத்து உயிர்க்கும் உரியதாயினும், மனித இனம் பெறும் இன்பமே சிறப்புடையதாகக் கருதப்பெறும். உயிரின் இயற்கைப் பண்பாகிய இன்ப நுகர்வினைப் பெறுவதற்கு மனித சமூகம் சில கட்டுப்பாடுகளை அமைத்துக் கொண்டது.

இதனால் சங்கச் சமூகத்தில் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் தலைமை சான்ற சமூகவியற் பண்புகளாக விளங்கியமை புலனாகும். இவற்றுள்ளும் அறமே ஏனைய எல்லாவற்றினும் உயிர்மூலமாகக் கருதப்பெற்றது. இவ்அறமே சமூக வளர்ச்சிக்கும் ஒழுங்கமைவுக்கும் துணையாக நின்றது.

சமூக வாழ்வியலில் காதலுணர்வு மிக இன்றியமையாத ஒன்றாக அமைகின்றது. சமூகவாழ்வியலின் எல்லாக் காலங்களிலும் காதல் சிக்கலுக்குரிய ஒன்றாகவே அமைந்துள்ளதனைத் தமிழ்ச்சமூகப் பரப்பில் காணமுடியும். எனினும் சங்க இலக்கியங்கள் காட்டும் காதல் குறிக்கோள் நெறியினைக் கொண்டதாகவும், ஏனைய சமூகங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக அமைந்ததும் ஆகும். தலைவி மீது தலைவன் கொண்டுள்ள காதலுணர்வு,

“………நல்மா மேனி
புனற் புணை அன்ன சாய்இறைப் பணைத்தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே;
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.” (குறு;. 168)

என்னும் பாடலில் சுட்டப்படுகின்றது. தான் தலைவியைப் பிரிந்தால் அவள் மேனியின் எழில்நலம் வாடும்; அவளது தோள்கள் மெலியும் அத்தகு தன்மைகளைக் கொண்ட தலைவியைப் பிரிந்து வாழ்தல் இயலாத ஒன்று என்பதனைத் தலைவன் உணர்த்தக் காணலாம்.

“சமூக வாழ்வு மனிதனுக்கு ஓர் ஒழுங்கமைவைக் கற்பிக்கிறது. அது மனிதனுக்குள் உண்டாகும் குழப்பமான, வேண்டா எழுச்சிமிக்க, சமூக அமைப்பிற்கு மாறுபாடான உணர்வுகளைத் தடுக்கிறது. உறுதிப்பொருள்களை உணர்ந்து கொள்வதற்கு ஓர் ஒழுங்குமிக்க சமுதாயம் முற்றிலும் இன்றியமையாததாகும்” என்றுரைப்பர் சமூகவியலாளர். நல்லதோர் சமூக அமைப்பிலேயே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் தெளிவாகும். சங்கச் சமூகத்தில் இவற்றைக் குறித்த தெளிவான கருத்துக்கள் நிலவியிருந்தமை புலனாகும்.

சமூக வாழ்வில் காதல் உணர்வு

சமூகம் உறவுகளால் இடையறவுபடாமல் நீடித்துச் செல்வதற்கு உயிரினங்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் செலுத்திக் கொள்ளும் அன்புறவே அடிப்படையாக அமைகின்றது. இத்தகு அன்புறவே சங்கப் பாடல்களில் அன்பின் ஐந்திணை எனப்பட்டது. பாலைத்திணைப் பாடல்கள் அன்புறவு கொண்ட காதலர்களின் வாழ்வியல் தொடர்ச்சியை, இல்வாழ்க்கையின் இணைவினை உடன்போக்கு மேற்கொண்;டாயினும் தன் காதலை நிறைவேற்றிக் கொள்ளும் பாங்கினை,

“ஊர்அலர் எழ, சேரி கல்லென
ஆனாது அலைக்கும் அறன்இல் அன்னை
தானே இருக்க, தன்மனை; யானே
நெல்லிதின்ற முள்எயிறு தயங்க
உணல் ஆழ்ந்திசினால் அவரொடு-” (குறு. 262:1-5)

என்னும் பாடல் காட்டுகின்றது. உடன்போக்கினை மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளும் தலைவியின் நிலையினை இப்பாடலில் காணலாம்.

சமூகவியலில் ஒழுக்கம்-கற்பு

மனிதன் பின்பற்றி நடக்கும் ஒழுக்கவிதிகள், இரக்கம், ஒப்புரவு, ஈகை, முதலான மனிதப் பண்புகள் குடும்பம், சமூகம், அரசு ஆகிய சமூக அமைப்புகள் குலையாதிருப்பதற்குத் துணைநின்றுள்ளன. இவ்வாறான ஒழுக்க விதிகள்,

ஒருவன் பின்பற்றி நடக்கும் ஒழுக்கமே அவனது குடிமைக்கு அடையாளமாகும்.
ஒழுக்கமே அறத்திற்கு வித்தாகும்.
ஒழுக்கமுடையார் தீயவற்றைச் செய்யவும், சொல்லவும் மாட்டார்.
ஒழுக்கத்தைப் பின்பற்றி நடப்பவரே உயர்ந்தவர்

என்பனவாகச் சங்க காலத்தில் கட்டமைக்கப்பட்டிருந்தன. மனம், சொல், செயல் ஆகியன ஒழுக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தன. தனிமனிதத் தூய்மையும், குடும்பத் தூய்மையும் ஒழுக்க விதிகளுக்குள் அடக்கப்பட்டது.

ஒழுக்கமே கற்பாதல்

இல்லற ஒழுக்கம் ‘கற்பு’ என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது. “திண்ணிய ஒருமுக ஆற்றலை இது குறித்து வரினும், இதற்குக் கற்பித்தல், கற்பித்தவாறு நடத்தல் எனப் பொருள் கொள்ளலாம். மரபு வழியாக, தம் பெற்றோர் மூலமாகக் கற்றுக் கொள்ளுதலையே இது குறிக்கும். அது தந்தை, தாயர் கற்பியாமல், பார்த்தும், உணர்ந்தும், குருதி வழிப் பண்பாட்டினடிப்படையிலும் பெறும் கல்வி” என்றும் கூறுவார் கு.வெ.பாலசுப்பிரமணியன். ‘அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள்?’ என வியத்தல் இதனடிப்படையிலேயோகும்.

தாய் திகைப்பவும், புகழவும் அமைந்த குடும்ப ஒழுகலாறே கற்பு எனப்பட்டது. இதனால் ‘கற்பு’ என்பது ‘முன்னோர் சொல்நெறி பிழையாது நிற்றல்’ என்பதை உணர்த்துவதனைக் காணலாம்.

செம்பொன்னால் செய்த பாண்டத்திலே பொரியோடு கலந்த பாலைக் கொடுக்கும் போதெல்லாம் சரியாக அருந்தவும் செய்யாதாள்; அது அதிகம் என்று சொல்லி உண்ண மறுப்பவள். அத்தகைய வளம்பொருந்திய வாழ்க்கையினை மேற்கொண்டிருந்த தலைவி இப்போது சொல்லொணாத் துயரங்களைத் தரும் உடன்போக்குச் சென்றுவிட்டாள். நிழலே இல்லாத வழி, நீரும் அற்றுப்போன வறண்ட நெறி. இந்த வழியிலே வீரக்கழலை அணிந்த காவலன் காவலாக வர விரைந்துசென்றாள். நீர் வறண்ட சுனையிலே காய்ந்து சூடேறிப்போன கலங்கல் சேற்று நீரை நல்லென்னும் ஓசைப்படக் குடிப்பதற்கு எவ்வாறுதான் துணிந்தாளோ? வீட்டிலே பாலைக்குடிப்பதற்கு மறுப்பவள் பாலைநிலத்துச் சேற்றுத் தண்ணீரை எப்படித்தான் குடிப்பாளோ? என வியத்தலும், அது, அவள் கொண்ட கற்புநிலையின் தலையாய பண்பென வியந்து, விடையிறுத்தலுமாகிய நிலைப்பாட்டினை,

“நிழல்ஆன்று அவிந்த நீர்இல் ஆர்இடைக்
கழலோன் காப்பக் கடுகுபு போகி
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்கு வல்லுநள்கொல் தானே-ஏந்திய
செம்பொன் புனைகலத்து அம்பொரிக் கலந்த
பாலும் பல என உண்ணாள்;
கோல்அமை குறுந்தொடித் தளிர் அன்னோளே”    (குறு. 356:5-7)

என்னும் பாடல் வெளிப்படுத்தக் காணலாம். செல்வச் செழிப்பும், வளமையும் மிக்க தலைவி, பாலைநிலத்தில் கிடக்கும் சேற்றுத் தண்ணீரைக் குடிக்கவும் ஒருப்பட்டாள் என்பதில் அவள் தன் காதலின்மீது கொண்டுள்ள உள்ளத்திண்மையும், அவ்வாறு நிற்பதற்கு அவளது மரபுவழி வந்த கற்பு நிலையுமே சான்றாகத் திகழ்ந்ததை இப்பாடல் வெளிப்படுத்தக் காணலாம். உடன்போக்கில் சென்ற தலைவியை நினைந்து செவிலித்தாய் பாடும் பாடலாக இது அமைந்துள்ளது.

சங்கச் சமூகத்தில் உடன்போக்கு, தலைவன்மீது தலைவி கொண்டிருந்த கற்பு நிலைக்கு ஓர் உயரிய சான்றாக இருந்துள்ளது. அவை, தான்கொண்ட காதலில் கற்பின் நெறிநின்று உள்ளத்திண்மையுடன் எதிர்வரும் துன்பங்கள் யாவற்றையும் எளிதெனப் பொறுத்து, துன்பத்தை பொருட்டாகக் கருதாத நிலையினைத் தெளிவுறுத்துவனவாக உள்ளன.

தலைவியின் உள்ளத்திண்மை

சங்கச் சமூக வாழ்வியலில் மகளிர் கொண்டிருந்த உள்ளத்திண்மை அவர்தம் ஆற்றலுக்குச் சான்றாக அமைந்திருக்கின்றது. உயிரணைய தலைவன்மீது தலைவி கொண்டிருந்த நட்பினை மிக உயர்வானதாகக் கருதுகிறாள். தலைவன் பொய் வலாளன்; மெய்யானவன் என்ற நம்பிக்கை தலைவியின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளத. ஈருயிர் ஓருடல் என்ற நிலையில் வாழ்ந்த தலைமக்கள் பிரிவென வரும்போது படும் உள்ளத்துயரின்; வெளிப்பாடு,

“விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாம்; கைந்நூல் யாவாம்:
புள்ளும் ஓராம்: விரிச்சியும் நில்லாம்;
உள்ளலும் உள்ளாம் அன்றே-தோழீ?
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று
இமைப்புவரை அமையா நம்வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே.” (குறு. 218)

என்னும் பாடலில் எடுத்துரைக்கப்படுகின்றது. தலைவி, தலைவன் மீது கொண்ட அன்பு அளப்பரியது. தலைவி, தலைவனுக்கு உயிர் போன்றவள். இமைப்பொழுதும் நம்மால் பிரிந்திருத்தல் இயலாது. இவ்வியல்பையுடைய நம்மை மறந்து அவர் ஆங்குத் தங்குதலியே கருத்தினராக இருக்கிறார். ஆதலால் தலைவன் மீண்டு வருதல் வேண்டி கொற்றவைக்குப் பலியிடுதல், அதற்கு நோன்புகள் மேற்கொள்ளல், அது பற்றிப் புள்ளின் நிமித்தல் பார்த்தல், நற்சொல் கேட்டல் ஆகியன யாவும் செய்யோம். தலைவன் தன்னிடத்துத் திரும்ப வரும்வரை யாம் கொற்றவைக்குப் பலிக்கடன் நேர்ந்து கொள்ள மாட்டோம். அதற்கு நோன்புகள் எடுக்க மாட்டோம். கையில் காப்பாக நூல் யாத்தலையும் செய்யோம். அது பற்றிப் புள்ளின் நிமித்தங்களும் பார்க்கமாட்டோம். நற்சொல் கேட்டு நில்லோம்;.

தலைவன் தன்னை மறவாமை ஒன்றே தான் உயிர் தரித்திருப்பதற்கு ஏதுவாக உள்ளது. அவரும் மறப்பராயின் தான் உயிர்வாழ்தல் பொருளற்றது என்ற தலைவியின் நிலை இப்பாடலில் எடுத்துரைக்கப்படுகின்றது.

நம்மை மறவாதவர், நம்மை நினைந்து வருவர் என்ற நசையினால், தன்னைப் பிரிந்த பின்னரும் ஆற்றியிருப்பதாயினள். அவ்விருப்பம்கெட அவர் பிரிந்த இடத்திலேயே தங்குவர் ஆனதால், நாம் அவர் பொருட்;டுச் செய்யும் செயல்கள் வீணான முயற்சியாகவே இகழப்படும் என்ற தலைவியின் மனநிலையும், தலைவனின் இழிநிலையும் சமூக நோக்கில் இப்பாடலில் எடுத்துரைக்கப்படு கின்றன.

“நம் அன்பின் மிகுதியை அறிந்து திரும்பிவர வேண்டுவது தலைவர் கடமை. அதற்காக நாம் ஒன்றும் செய்ய வேண்டுவதில்லை. தலைவனிடம் அகலாத அன்புடையவர்கள் வேறு தெய்வங்களை வேண்டிக் கொள்ள மாட்டார்கள். தலைவனுடைய அன்பு ஒன்றையே எதிர்பார்த்து நிற்பார்கள். இதுவே உண்மையான காதலும் கற்பும் உள்ள பெண்களின் இயல்பாகும். இக்கொள்கையை விளக்கி நிற்கிறது இச்செய்யுள்” என்று இப்பாடலுக்குப் பொருள் தருவார் சாமி. சிதம்பரனார்.

சங்கச் சமூகத்தில் பரவலாக்கம் பெற்றிருந்த வழிபாடு, சடங்கு, நோன்பிருத்தல், விரிச்சி கேட்டல், நிமித்தம் பார்த்தல் முதலான செய்திகளை இப்பாடல் எடுத்துரைக்கக் காணலாம்.

பொருளியல் அறம்

சமூகக் கட்டுமானத்திற்குப் பொருளாதாரமே அடிப்படை அலகாக அமைந்திருக்கின்றது. ஆதலால் பொருளே எல்லாக் காலத்திலும் மதிப்புடைய பொருளாகத் திகழ்கின்றது. சங்க இலக்கியத்தில் பொருளின் இன்றியமையாமை வெகுவாகப் பேசப்பட்டுள்ளது. புகழ், இன்பம், கொடை ஆகிய மூன்றும் பொருள் தேடாதார்க்கு இல்லை. ஆதலால் பொருளீட்டுதல் வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வாறு ஈட்டிய பொருளைப் பிறர்க்கு அளித்தலுமே சமூகம் பயன்பெறத்தக்க வாழ்க்கையாகும். அதுவே சமூக அறமுமாகும். செய்பொருட்காகப் பிரிவது ஆடவர் பண்பென்றும், அவ்வாறு பிரிந்து சென்றவர்,; திரும்பவரும் காலம் வரை தலைவி ஆற்றியிருத்தல் அவளது கடமையென்றும் சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. தன் நலத்திற்காக மட்டுமன்றிப் பிறர்க்கு ஈதல் வேண்டியும் பொருளீட்டலைத் தலைவன் மேற்கொள்கின்றான்.

இல்லற வாழ்க்கை இனிதே முட்டின்றி நடப்பதற்குப் பொருள் தேவை. சமூகத்தின் வலிமையான அமைப்பு அது பெற்றிருக்கும் பொருட்பண்புகளை வைத்தே கட்டமைக்கப்படுகிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பதனைப் பண்டைத் தமிழ்ச் சமூகம் மிகத்தெளிவாகவே உணர்ந்திருந்தது. ஆதலால் பொருள், பொருள் ஈட்டும் வினை, ஈட்டிய பொருளைப் பிறர்க்கு அளித்து வாழும் வாழ்க்கை, அதன்வழிப் பெறும் பேரின்பம் ஆகியவற்றைத் தமிழ்ச் சமூகம் பிறருக்கு அறிவிக்கவும் அறிவுறுத்தவும் முனைந்தது. அதன்பொருட்டாகவே பொருளீட்டல் குறித்த பாடல்கள் சங்கப் பாடல்களில் வெகுவாக இடம்பெற்றன.

“பொருள் என்பது சங்க காலத்தில் பலராலும் போற்றத்தக்க ஒன்றாக மட்டுமன்றி அவ்வுடைமையால், அறம் என்னும் உயர்தகவினைப் புரியவும் அதன்வழிப் புகழ் பெறும் உயர் மதிப்பினை அடையவும் ஆகும் எனக் கருதப்பட்டது. நில்லா உலகத்திலிருந்து நில்லாப் பொருள்வழி நிலைத்த புகழ் பெறலாம் என எண்ணினர்” (122:1994) என்கிறார் கு.வெ. பாலசுப்பிரமணியன்.

தனிமனிதவாழ்க்கை மேம்படுவதற்குப் பொருள் முக்கியத் தேவை. இதனால் பொருள்தேடும் முயற்சியே போற்றப்பட்டுள்ளது. கூட்டுவாழ்வின்மூலம் ஈட்டும் பொருளினும் தனிமனித முயற்சியே பாலைத்திணைப் பாடல்களுக்குப் பொருளாகியுள்ளன. அதனால் பொருள்வயிற் பிரிவுக்குரிய பாடல்கள் பலவாக உள்ளன. வாழ்க்கையில் பொருள்தேடலும், ஈட்டிய பொருளைப் பகிர்ந்தளித்தலும், அதன்வழி இன்பம் துய்த்தலும் அறத்தின்வழி செய்யப்பெறுதல் வேண்டும் என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. தன் முயற்சியால் உழைத்துப் பொருள்தேடும் இடங்கள் பல உள்ளன. தாயத்தால் பெறும் பொருளினும் தன் முயற்சியால் பெறும் பொருள் சிறப்புடையதாகக் கருதப் பெற்றுள்ளது.

தன் செல்வத்தால் ஈட்டிய பொருளைக் கொண்டே தம் இல்லறவாழ்க்கையை நடத்துதல் வேண்டும் என்பது சங்ககாலத்தின் உயர்குறிக்கோள் நெறியாகும். முன்னோர் தேடிவைத்த செல்வத்தைக் கொண்டு வாழ்வதைக் காட்டிலும் பிச்சை ஏற்கும் சிறுமுயற்சியைக் கொண்டாவது பொருள் சேர்த்து இல்லறம் நடத்தி வாழ்வதே சிறந்ததாகும். இதுவே பண்டைத் தமிழர்கள் கொண்டிருந்த உயர்குறிக்கோள் நெறியுமாகும் என்பதனை,

உள்ளது சிதைப்போர் உளரெனப்படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு எனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி……..” (குறு. 283)

என்னும் பாடல்வழி தெளிவுறுத்தக் காணலாம். ஒருவன் தாளாற்றித் தந்த பொருளைப் பகுத்துண்டு வாழ்வதைத் தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ளுதல் வேண்டும். தாயத்தால் வரும் செல்வத்தைப் போற்றிக் காப்பது ஒன்றே தன் கடமை எனவும், அதனைக் குறைப்பதற்கோ, அழிப்பதற்கோ எவ்வகையிலும் தனக்கு உரிமை இல்லை எனவும் ஒருவன் அறிதல் வேண்டும். முன்னோர் தேடித் தொகுத்த பொருளை ஒருவன் தன் இன்பத்தின் பொருட்டுப் பயன்படுத்துவானாயின், அவன் இறந்தவனாகவே கருதப்படுவான். தாயத்தை அழித்து, உயிர் வாழ்தல், இரந்து உண்டு வாழ்வதைவிட இழிவானதாகும். இவ்வாறு முயற்சியின் அருமையும், இரத்தலின் இளிவரவும் இப்பாடலின்வழி உணர்த்தப்படுவதனைக் காணலாம்.

தனக்கு மட்டும் இன்பம் பயக்கும் தலைவியோடு வாழும் வாழ்க்கையைவிடப் பிறர்க்குப் பயன்பட்டு வாழ்வதற்கு இன்றியமையாதது பொருள். ஆதலால் பொருளீட்டுவதன் பொருட்டுத் தலைவன் பிரியத்தான் வேண்டும் என்று கூறுவதாக,

“நெடுங்கழை திரங்கிய நீர்இல் ஆரிடை
ஆறுசெல் மாக்கள் வம்பலர் தொலைய மாறுநின்று
கொடுஞ்சினை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் கானம் நீந்தி,
இறப்பர்கொல் வாழி தோழி-நறுவடிப்
பைங்கால் மாஅத்து அம்தளிர் அன்ன
நல்மா மேனி பசப்ப
நம்மினும் சிறந்த அரும்பொருள் தரற்கே”    (குறு. 331)

என்னும் பாடல் அமைந்துள்ளது. பொருள் ஈட்டுவது கடினம், அவ்வாறு ஈட்டிய பொருளைக் காத்தல் கடினம், அவ்வாறு காத்த பொருளைப் பிறர்க்குப் பயன்படுமாறு காத்திடுதல் அதனினும் கடிது என்ற கருத்தினை இப்பாடல் தெளிவுறுத்தக் காணலாம்.

தனிமனித வாழ்வில் பொருள் தேடலும், இன்பந்துய்ப்பும் ஆகிய இரண்டனுள் எதனை மேற்கொள்வதென்ற மனப்போராட்டத்தைப் பாலைத்திணைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. மனிதன் இவ்வாறு பொருள் தேடுவதற்கும், மனைவியோடு கூடி வாழ்வதற்கும் அடிப்படை அறவழி வாழ்வின் சிறப்பாலாகும். பொருளீட்டலும், மணத்தலும் புலனின்ப நுகர்ச்சிக்கு என்பது யாவரும் கூறும் செய்தியாகும். குறிக்கோள் மிக்க வாழ்க்கையில் இவ்வின்ப நுகர்வுக்கு அப்பாலும் விளங்கும் உயரிய சமூகக் கருத்தைச் சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

தான் பெற்ற பொருள்களை இரவலர்க்கு ஈவதால் நேரும் இன்பம் அளப்பரியதாகும். அதனைத் திருவள்ளுவர் ஈத்துவக்கும் இன்பம் என்று சிறப்பித்துரைப்பார். அத்தகு இரவலர்க்கு ஈந்து வாழும் பண்பே சமூக வளர்ச்சிக்கு எந்நாளும் துணைநிற்பதாகும்.

தன் உழைப்பால் விளைந்த பொருளைத் துய்த்து வாழ்வதே நிறைவான வாழ்க்கை என்ற சமூகவியற் பண்பாடு சங்க காலத்தில் நிறைந்திருந்தது. உழைக்காமல் பிறர் செல்வத்தைக் கொண்டு வாழ்வது என்ற வழக்கம் பண்டைக்காலத்தில் இல்லை. உழைத்துப் பொருள் சேர்த்தல் வேண்டும். அதன்வழி உயர வேண்டும் என்ற தனிமனிதச் சிந்தனை வலுப்பெற்றிருந்த காலம் அதுவாகும். அதனால் இல்வாழ்வான் இன்புறுவதற்கு உரிய வழி இல்லாதார்க்கு ஈதலே; தானும் விரும்பியவற்றை நுகர்வதற்குரிய வழி பொருளீட்டலே. இவ் உண்மையை அறிந்த தலைவனே சங்கப் பாடல்களுக்குத் தலைவனாக இடம்பெற்றுள்ளான். ஆதலால், ‘பொருள் இல்லாத வறியவனிடத்தில் இல்லாதவர்க்கு ஈதலும், அதனைத் துய்த்தலும் இல்லை’ என்பது அறமாக உரைக்கப்பட்டது.

“ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்’எனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி; அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ?” (குறு. 63:1-3)

சங்க கால மக்கள் தமக்கென வாழ்தலினும் பிறர்க்கென வாழ்தலையே பெரிதும் போற்றி ஒழுகினர். மனைவி மக்கள் என்று தம்மைச் சார் சார்ந்தோர் மாட்டும் அன்பு செய்யும் தலைவன், தன்னைச் சாராத மக்களிடத்தும் அருளுடன் நடந்துகொண்டான். அதுவே சமூக வளர்ச்சிக்குரிய அறம் என்பதனைத் தெளிந்திருந்தான். சங்கச் சமூகத்தில் கடையேழு வள்ளல்களின் செயல்பாடுகள் யாவும் இதன்பொருட்டே நிகழ்ந்தனவாகும்.

தமக்கு வரும் பயன்பாடு எதனையும் கருதாது, பிற உயிர்களுக்கு விளையும் நன்மைகளைக் கருதுதலே அறத்தின் அடிப்படைப் பண்பு. ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்பதே சங்கக் கொள்கைநெறி.

தலைவன் பொருளீட்டுவதனையே முதன்மையான கடனாகக் கொண்டு செயல்பட்ட நிலையினை,

“நசை நன்கு உடையர்”    (குறு. 213:1)

என்ற தொடர் வெளிப்படுத்துகின்றது. பொருள் ஈட்டும் கடன் ஒன்றையே அவர் நோக்கமாகக் கொண்டுள்ளமையால் இடைச்சுரத்தில் அவர் காணும் காட்சிகள் எவ்வகையிலும் அவர் கடமையைத் தடுப்பனவாக அமையா என்ற கருத்தினை இப்பாடல் வெளிப்படுத்துகின்றது.

உலக வாழ்க்கையின் இன்பந் துய்ப்பதற்குப் பொருள் தேவை. அத்தகைய பொருளை ஈட்டுவதற்காக அருளுடைய நெஞ்சத்தினராகிய நம் தலைவர், பொருள்மேல் கொண்ட வேட்கையால் அருளும் அன்பும் கொன்று சென்ற நிகழ்வினை,

“……….நந்துறந்து
பொருள் வயிற் பிரிவார் ஆயின், இவ்வுலகத்துப்
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆரும் இல்லதுவே”    (குறு. பா. 174:4-7)

என்னும் பாடல் எடுத்துரைக்கின்றது. அருட்செல்வத்தைவிடப் பொருட்செல்வமே உயர்ந்தது எனக் கருதும் உலகமக்களின் அறியாமையை இப்பாடல் தெளிவுறுத்துகின்றது.

சமூக வாழ்வும் இயற்கையின் இயங்கியலும்

சங்ககால வாழ்க்கை இயற்கை வழிப்பட்டது. இயற்கை நெறிப்பட்டது. இயற்கையின் செயலாக்கங்கள், வினைகளுக்கு முன்னால் மனிதனால் எதுவும் செய்ய இயலாது என்பதனைச் சங்கத் தமிழர்கள் நன்கறிந்திருந்தனர். இந்த இயற்கையின் ஓர் ஒழுங்கமைவான ஆற்றலையே ஊழ், விதி, வினைப்பயன் எனச் சமயவாதிகள் எடுத்துரைத்தனர். மக்களை ஒன்றிணைப்பதும், கூட்டுவிப்பதும், பிரிப்பதும் இந்த ஊழ்வினைதான் என்ற நம்பிக்கை பரவலாக்கம் பெற்றிருந்தது. இதனைக் கருத்தில் கொண்டே தொல்காப்பியர் ‘ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்றுரைத்தார.;

சிறுபருவத்தில் இவர்கள் இருவரும் இணைந்து விளையாடுவார்கள். அப்பொழுது இந்தக் குறும்புக்காரப் பிள்ளை இவளுடைய கூந்தலைப் பிடித்து இழுப்பான். இந்தச் சுட்டிப் பெண்ணும் அவனுக்குச் சளைத்தவலில்லை. இவனுடைய தலைமயிரைப் பிடித்து இழுப்பாள். இப்படி இவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும்போது செவிலித்தாயர் தடுப்பர். அவர்கள் தடுத்தாலும் இவர்கள் அடங்கமாட்டார்கள். மீண்டும் மீண்டும் இப்படியே சின்னச்சின்ன சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். இப்பொழுது அவர்கள் மலர் தொடுத்த இரட்டை மாலையைப் போன்று இணைந்துவிட்டனர். இவ்வாறு இவர்கள் மணம் புரிந்துகொள்வதற்கு விதிப்பயன்தான் காரணம் என்று, இயற்கையே நீ வாழ்க! என்று வாழ்த்துவதனை,

“இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள்இவன்
புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது
ஏதில் சிறுசெரு உறுப மன்னோ;
நல்லை மன்றம்ம பாலே-மெல் இயல்
துணைமலர்ப் பிணையல் அன்ன இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே”    (குறு. 229)

என்னும் பாடல் குறிப்பிடுகின்றது. காதலர்களைக் கூட்டுவிப்பதற்கும், பிரிப்பதற்கும், அவர்களை மணமக்களாக்கி வாழ்விப்பதற்கு அவர்தம் ஊழ்வினையே காரணம் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் வெகுவாக இருந்ததை இப்பாடல் தெளிவுறுத்தக் காணலாம்.

இளமைக்காலத்தில் நட்பாய் இருப்பவர்கள்கூட, மணம் முடித்துக் கொண்ட பின்னர் தம்முள் பகைத்துப் பிரிதல் இயல்பானது என்ற சமூக வாழ்வியல் நிலைப்பாடும், சிறுவயது முதல் இணைபிரியாத நட்பினர் இளமையில் நட்பாவதற்கு ஒவ்வாத சமூக நிலையால் உடன்போக்கினை மேற்கொண்டு இணையும் திறனும் சங்கச் சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுவது ஆகும். ‘நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர்’ என்பதே சங்ககாலக் கொள்கையாகும்.

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளாத இளமைப்பருவத்தில் நிகழ்த்திய விளையாட்டினையும் தற்போது அவர்கள் உடன்போக்கினை மேற்கொள்வதனையும் அறிந்த அவ்வூர் மக்கள், தம்முள் அயன்மை உடையவராக விளங்கிய இவர்கள் நல்ஊழின் பயனால் ஒன்றாயினர் என நினைந்து, அவ்வாறு அவர்கள் இணைவதற்குத் துணைபுரிந்த ஊழ்வினையை வாழ்த்தும் நிலை இப்பாடல் விளக்கிநிற்கிறது.

சமுதாயமும் பண்பாடும்;

மனிதன் பெறும் நாகரிகத்திற்கும், பண்பாட்டிற்குமான நுண்ணிய வேறுபாட்டினைத் தேவநேயப் பாவாணர், “நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவது. பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப் பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது. இலக்கணப் பிழையின்றிப் பேசுவதும், எல்லா வகையிலும் துப்புரவாயிருத்தலும், காற்றோட்டமுள்ளதும் உடல் நலத்திற்கு ஏற்றதுமான வீட்டில் குடியிருப்பதும், நன்றாகச் சமைத்து உண்பதும், பிறருக்குத் தீங்கு செய்யாமையும், நாகரிகக் கூறுகளாம்;; எளியாரிடத்தும் இனிதாகப் பேசுவதும், புதிதாய் வந்த ஒழுக்கமுள்ள அயலாரை விருந்தோம்புவதும், இரப்போர்க்கிடுவதும், இயன்றவரை பிறர்க்குதவுவதும், கொள்கையும், மானமும் கெடின் உயிரை விடுவதும் பண்பாட்டுக் கூறுகளாகும்” என்றுரைக்கின்றார். நாகரிகமில்லாதவர் -களிடத்தும் பண்பாடு நிறைந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். சங்கச் சமூகம் கொண்டொழுகிய பண்பாட்டின் ஒரு கூறாக விருந்தோம்பும் பண்பு நிறைந்திருந்ததைச் பாலைப்; பாடல்கள் தெளிவுறுத்துகின்றன.

பண்பாட்டு வளர்ச்சி

ஒவ்வொரு சமூகமும் அது பெற்றுள்ள பண்பாட்டு வளத்தால் மட்டுமே சிறப்புக்குரியதாக அமைகின்றது. பொதுநிலையில் மக்கட்பண்பு என்பது உலக நடைமுறையினை அறிந்து, அதன் வளத்திற்குத் துணைநிற்றலைக் குறிக்கின்றது. அவ்வகையில் ‘பண்பாடு’ என்ற சொல் ஆக்கநிலையை எடுத்துரைப்பதாய் அமைந்திருக்கின்றது. திருவள்ளுவர் நோக்கில் அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை முதலானவையே ‘பண்புடைமை’ ஆகும்.

தொல்லுயிர் நூல் அறிஞர் எட்வர்ட் டைலர் என்பார், “சமூக உறுப்பினன் என்ற நிலையில் மனிதன் பெற்ற அறிவு, நம்பிக்கை, கலை, சட்டம், ஒழுக்க நெறிகள், வழக்கங்கள், தகுதிகள், பழக்கங்கள் ஆகியவற்றின் திரட்சியே பண்பாடாகும்” என்கிறார்.
மக்கள் வாழ்கின்ற சூழலுக்கு ஏற்பவே அவர்தம் பண்பாடு அமையப் பெற்றிருக்கின்றது. வளமையான வாழ்க்கைச் சூழல் ஒருவகையினதான பண்பாட்டையும், வளமையற்ற வாழ்விடச் சூழல் இதற்கு நேர்மாறான வாழ்க்கைச் சூழலையும் உருவாக்குகின்றன.
சமூக வாழ்வின் வளர்ச்சிக்கு ஒப்புரவாக நின்று வாழும் பொதுநல வாழ்வினைத் திருவள்ளுவர்,

“தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு”    (குறள். 212)

என்று சிறப்பித்துரைப்பார். பொருளீட்டிப் பகிர்ந்து வாழும் வாழ்;க்கை சமூகப் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஒரு படிக்கல்லாக அமைந்திருக்கின்றது.

தலைவன் தலைவியை விட்டுப் பிரியக் கருதினான். பிரிதலால் தலைவி அஞ்சுவள் என ஐயுற்றான். அது தலைவனின் கடமை எனக் கருதினாள் தலைவி. இல் என இரந்தோர்க்கும், இடனின்றி இரந்தோர்க்கும் ஒன்று ஈயாமை இழிவினைத் தரும் என்னும் உலகியல் உண்மையை உணர்ந்து, வினைமேற்செல்லுதல் ஆடவர்க்கு உயிரினும் மேலானது என்பதை உணர்நது, வினைமேற் சென்ற இடத்தில் தன்னை நாடி இரவலர்கள் வாராத நாள்கள் உண்டாகுக! என வெகுண்ட நிகழ்வினை,

“மெல்இயல் அரிவை நின்நல் அகம் புலம்ப
நின்துறந்து அமைகுவென் ஆயின்-என் துறந்து
இரவலர் வாரா வைகல்
பலஆகுக! யான் செலவுறு தகவே”    (குறு. பா. 137)

என்னும் பாடலில் காணலாம். இல் என இரந்தோர்க்கும், இடனின்றி இரந்தோர்க்கும், தொலைவாகி இரந்தோர்க்கும் ஒன்று ஈயாமை இழிவினைத் தரும் என்பதனை உணர்ந்து வினைமேற் செல்லுதல் ஆடவர்க்கு உயிர் எனப் போற்றப்படுவதாயினும் தலைவன், தலைவியின் மெல்லிய இயல்பு கருதி, அவளிடம் நின்னிற் பிரியேன் என்றான். வினைமேற் சென்ற இடத்தில் தன்னை நாடி இரவலர் வாராத நாள்கள் எனப் பொருள்கொள்ளுதல் ஏற்புடைத்தன்று; இல்லற நெறி நிற்போர்க்கு இரவலர் வாரா வைகல் துன்பம் தருவது போல எனப் பொருள் கொள்வதே பொருட்சிறப்பாகும்” என்பார் உரையாசிரியர் வி. நாகராசன். (ப. 318)

அறிவர் சொற்கேட்கும் மாண்பு

அறிவர் என்போர் துறவியர் ஆவர். அவர்கள் வெயில், பனி, மழை ஆகிய முக்காலத்தின் இயல்பினை அறிந்து கூறுபவர். தலைமக்கட்டு நல்லவை உரைத்தலும், அல்லவை கடிதலும் அவர்தம் நோக்கமாகும். அவ்வாறு அறிவர்களின் ஏவல்வழி நிற்கும் தலைமக்கள் பற்றி,

“ஆசுஇல் தெருவின் ஆசுஇல் வியன்கடை
செந்நெல் அமலை வெண்மை வௌ;இழுது
ஓர்இல் பிச்சை ஆரமாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே”    (குறு. 277:1-5)

என்னும் பாடல் எடுத்துரைக்கின்றது. இப்பாடல் தலைவி அறிவரை ஆற்றுப்படுத்திய நிகழ்வினைக் கூறுகின்றது. தலைவன் குறித்த பருவத்தில் விரைந்து வருவன் எனக் கூறி அவளை ஆற்றுப்படுத்தியதால், தம் காதலன் வந்த பின்னர் அவருடன் கூடி துறவோர்க்கு எதிர்தலாகிய அறத்தைப் புரிவதாகத் தோழி கூறும் குறிப்பு இப்பாடலில் சுட்டப்பட்டுள்ளது. இல்லற வாழ்க்கையில் கணவன்-மனைவி இருவரும் இணைந்து அறங்களைச் செய்தலே முறைமை என்பதே தமிழ் மரபாகும். அவ்வகையில் இத்தலைவி தலைவனுடன் இணைந்து அறத்தை, விருந்தோம்புதலை மேற்கொள்வதாகக் கூறுவதனைக் காணலாம்.

நேர்ச்சிந்தனை மரபு

ஒரு சமூகம் பெற்றிருக்கும் மதிப்பு என்பது சமூக உறுப்பினர்களால் போற்றப்பட்டுத் தம் வாழ்வில் அதற்குரிய இடத்தைப் பெறும்;போதே சமூக மதிப்பினைப் பெறுகின்றது. பழந்தமிழச் சமூகம் தம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் மதிப்புமிக்க ஒன்றாக அறத்தையே கருதியிருக்கின்றது. சங்கச் சமுதாயம் உயர்ந்தவற்றையே பார்த்துள்ளது. உயர்ந்தவற்றையே பேசியுள்ளது. நேர்ச்சிந்தனை வளர்ச்சிக்கு அவை துணைசெய்யும் என்ற நோக்கிலேயே தான் காணும் எல்லாப் பொருளிலும் உயரிய குறிக்கோளை நெறிப்படுத்தியுள்ளது. சங்கச் சமுதாயத்தின் பண்பாட்டு அலகுகளைக் குறித்து அறிஞர் வ.சுப. மாணிக்கனார் தரும் கருத்து இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.

“உலகம் என்பது குடும்பங்களின் தொகுதி. வாழைத்தோப்பில் ஒரு மரம் நோயுற்றாலும் அந்நோய் ஏனையவற்றுக்கும் பரவுமாப் போல, ஓர் ஊரில் ஒரு குடும்பம் இயல்பான அறநெறி பிறழ்ந்தால் அத்தீ வளி எங்கும் பரவிவிடும். ஆதலின் நன்னெறியைப் போற்றுவது ஊரார் கடனாகும். இன்று எல்லாம் அரசின் பொறுப்பு என்று விட்டுவிட்டு அவரவர் காரியம் பார்ப்பது போன்ற தன்னலப் போக்கு சங்க காலத்து இருந்ததில்லை. ஊரின் ஒழுங்கு தன் பொறுப்பு என்று ஒவ்வொரு ஊராரும் கருதினர். குற்றம் இழைப்பாரை ஊர்ப்பெரியோர் தண்டித்தனர்” (சங்கநெறி, ப.3-7)

தனிமனித வாழ்வில் உவப்பும், சலிப்பும், நட்பும், பகையும், விருப்பும், வெறுப்பும், அன்பும், தெறலும் ஆகிய பல்வேறு உணர்ச்சிகள் சங்க காலச் சமூகத்தில் நிலவியிருந்தாலும் அவை, எஞ்ஞான்றும் சமூக அமைப்பை விட்டு விலகிநிற்கும் வாழ்க்கை முறை சங்க இலக்கியத்தில் இல்லை.

தனிமனித வாழ்க்கையில் அறக்கோணல் ஏற்படுமாயின் அது சமுதாயத்திற்கு ஊறு பயக்குமென்ற நம்பிக்கை அக்காலத்திலிருந்தது. மனைவியின்றிப் பிற ஒருத்தியைத் தலைவன் மணத்தலும், பரத்தையரோடு உறவு கொள்ளுதலும் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இவை மருதநில வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு வாழ்வியல் மாற்றமாகும்.

பண்பாட்டு வளர்ச்சியில் மகளிர்

சமூக வாழ்வின் வளர்ச்சிக்கும், அவர்தம் பண்பாட்டுச் சிறப்புக்கும் மகளிரே முதன்மையான காரணிகளாக அமைகின்றனர். பண்பாட்டு வளர்ச்சி, நாகரிகவாழ்வு, சுற்றம் ஓம்பல், நம்பிக்கை வளர்ச்சி, வழிபாடுகள், விழாக்கள் ஆகியன அனைத்தும் மகளிரால் மேம்பாடுற்றதனைப் பாலைத்திணைப் பாடல்கள்; தெளிவுறுத்துகின்றன.

சங்க கால் மகளிர் இயற்கை வழிபாட்டினை மேற்கொண்டு ஒழுகினர் என்பதற்குச் சான்றாகப் பிறைதொழும் பண்பாட்டினைக் காட்டலாம். மாலைப்பொழுதில் தோன்றும் பிறைச்சந்திரனை பலராலும் தொழப்பெறும் நிலை,

“வளை உடைத்தனையது ஆகி, பலர்தொழ
செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
இன்னாப் பிறந்தன்று, பிறையே…”    (குறு. பா. 307:2-3)

என்று புலப்படுத்தப்படுகின்றது.

இயற்கையை வாழ்த்தும் பண்பு

உடன்போக்கில், தன் மனம் நிறைந்த ஆடவனைக் கணவனாகப் பெற்று இல்லறம் ஏற்று வாழும் வாழ்வின் சிறப்புக்கு மகளிர் முழு ஆதரவினையும் தந்துள்ளனர். உடன்போக்குத் துறை குறித்த பாடல்கள் கொண்டு இதனைத் தெளிவாக அறியலாம். தன் மகளை உடன்போக்கில் அனுப்பி வைக்கும் தாய், அவள் எதிர்கொள்ளப்போகும் துயரங்களை அறியாதவள் அல்ல. எனினும் அவளது வாழ்க்கை ஒன்றிணைப்பு அவளுக்கு எல்லாவிதமான மனச்சுமைகளையும் போக்கும் அருமருந்தாக அமையும் என்ற நம்பிக்கை வெகுவாக இருந்துள்ளது. இதனை, மகட்போக்கிய செவிலித்தாய் தெய்வத்திற்குப் பராவியதாக அமைந்த,

“ஞாயிறு காணாத மாண்நிழற் படீஇய
மலைமுதல் சிறுநெறி மணல்மிகத் தாஅய்
தண்மழை தலைய வாகுக-நம்நீத்துச்
சுடர்வாய் நெடுவேற் காளையொடு
மடமா அரிவை போகிய சுரனே”    (குறு. பா. 378)

என்னும் பாடலில் காணலாம். தன் மகள் நிழலில்லாத இடைச்சுரத்தில் சென்றாள் என்ற செய்தியை அறிந்த தாய், அவள் எந்த இடையு+றும் இல்லாமல் செல்லுதல் வேண்டும் என இயற்கையை வழிபாடுகள் செய்கின்றாள். சுட்டெரிக்கும் சூரியன் தன்னுடைய கதிர்களைச் சினம் தணிந்து வழங்க வேண்டும் என்றும், மரங்கள் நிழலுடையனவாகத் தழைத்தல் வேண்டும் என்றும், வழி, நடத்தற்கு இனியவாய நெறியாதல் வேண்டும் என்றும், வழியில் அவர்கள் உண்பதற்கு இனிய நீர் கிட்ட வேண்டும் என்றும் தெய்வங்களைப் பராவுவதனை இதன்வழி அறியலாம்.

சமூக மேம்பாட்டில்; அருளுணர்வு

உடன்போக்கு, அதனால் நேரும் சிக்கல்கள் மனித மனங்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளன. தலைமக்கள் கொண்ட காதலை அம்பலும், அலருமாய் வெளிப்படுத்திப் பார்க்கும்; ஊரார்தான்; காதலர்களின் துயரநிலை கண்டு வருத்தமுறவும் செய்கின்றனர். உடன்போக்கினை மேற்கொண்ட காதலர்களை, விளித்து, தங்கள் ஊரில் தங்கி, பொழுது விடிந்த பின்னர் செல்லுமாறு அறிவுறுத்துவதனை,

“எல்லும் எல்லின்று பாடும் கேளாய்-
செல்லாதீமோ சிறுபிடி துணையே
வேற்றுமுனை வெம்மையின் சாத்துவந்து இறுந்தென
வளைஅணி நெடுவேள் ஏந்தி
மிளைவந்து பெயரும் தண்ணுமைக் குரலே”    (குறு. பா. 390)

என்னும் பாடலில் காணலாம். காதலனும் காதலியும் இடைச்சுரத்தில் வந்து கொண்டிருப்பதனைக் கண்ட ஊரார், நீங்கள் இனிப் பயணம் மேற்கொள்ள வேண்டாம். ஏனென்றால் சூரியன் ஒளி மறைந்துபோனான். அதோ வரும் ஓசையையும் கேட்பாயாக, கள்வர்களிடமிருந்து தம்மையும் தம் பொருளையும் காத்துக்கொள்வதற்காக வணிகர்கள், வேடர்கள் துணையுடன் தண்ணுமை என்னும் பறையை முடிக்கிக் கொண்டு வருகின்றனர். ஆதலால் நீவிர் இப்பொழுது செல்வதனை விடுத்து, காலையில் செல்வீராக! என்று ஆற்றுப்படுத்துவதனைக் காணலாம். கள்வர்களின் கொள்ளையடித்து வாழும் வாழ்வியலும், அவர்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள காப்பாளர்களை வைத்துக் கொண்டு பயணம் செய்யும் வணிகர்களின் வாழ்வியலையும் இப்பாடலடிகள் புலப்படுத்தக் காணலாம்.

சமூக வாழ்வில் போராட்டம்

எந்தவோர் உயிரினமும் பிறந்தது முதல் இறக்கும் வரை, தன் வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொள்ள பெரும்போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. உயிரின வாழ்க்கை கருவாவது முதல் கல்லறைக்குச் செல்வது வரை போராட்ட எதிர்ப்புணர்வால் நிலைபெறுகின்றது என்பதே சமூகவியல் கோட்பாடு ஆகும். இத்தகு சமூகவியற் போராட்டங்களைக் குறுந்தொகையின் பாலைத்திணைப் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன. பாலை நிலத்தில் வாழும் உயிரினங்கள், பறவைகள் வாழ்வியல் போராட்டங்களை எதிர்கொள்ளும் நிலைப்பாட்டினையும், பாலை நில எயினர்கள் தங்கள் வாழ்வியலுக்காக எதிர்கொள்ளும் போராட்டங்களும், பொருளீட்டும் காலகட்டத்தில்; தலைவன் எதிர்கொள்ளும் போராட்டங்களும் சமூகத்தில் போராட்டங்களின் நிலைப்பாட்டினை அறிவுறுத்துகின்றன.

பொருள் ஈட்டும் வினை அக்காலத்தில் எளிதானதாக அமையவில்லை. பொருளீட்டுவதற்காக அவன் தன் காதற்தலைவியைத் தனியே விடுத்து, தன் உறவுகளை மறந்து வெகுதூரம் செல்கி;ன்றான்; வேற்று நாடுகளுக்கும் செல்கிறான். தமிழகத்தைக் கடந்து சென்றதனையும் குறுந்தொகைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. அவ்வாறு சென்று பொருளீட்டி வருவதும், அவ்வாறு ஈட்டிய பொருளைப் பாதுகாப்பாகக்; கொண்டு வருவதும், அவ்வாறு கொண்டு வந்தவற்றை வைத்துக் காப்பதும் துயரம் தரத்தக்க செய்திகளாகவே உள்ளன. இந்நிகழ்வினை, குறுந்தொகையின்; 273வது பாடல் ‘தேன் கொள்ளும் வேட்கையால் கல் ஏணியில் ஏறிய மடமையோன் அதற்குமேல் ஏறினால் தன் உயிர்க்கே இறுதியாகும் என அஞ்சி அவ்ஏணியிலிருந்து கீழே இறங்கிவருதலை ஒக்கும்’ என்று காட்டுகின்றது.

பொருள் தேடும்; முயற்சி ஏணியாகவும், அவ்ஏணியில் ஏறும் மடவோனாகத் தலைவனும், பெருந்தேன் தலைவன் வேட்ட பொருளாகவும் விளங்குமாற்றை,

“பெருந்தேன் கண்படு வரையில் முதுமால்பு
அறியாது ஏறிய மடவோன் போல”    (குறு. 273:5-6)

என்று எடுத்துரைக்கின்றது. கிடைத்த இன்பத்தை விடுத்து கிடைக்காத இன்பமாகிய பொருளை நாடிச் செல்லும் தலைவனின் நிலைப்பாட்டினை,

“செய்பொருள் நரல்நசைஇ சென்றோர்
எய்தினரால்….” (குறு. 254:6-7)

என்னும் பாடற்பகுதி எடுத்துரைக்கின்றது. நிலையில்லாதவற்றை நிலைபெறச் செய்வது ஒருவர் செய்யும் செயல்களே. இவ்வுலகில் புகழ் பெற வாழ்பவர்களே வாழத்தக்கவர் ஆவர். அவ்வாறு வாழத் தகுதியில்லாதவர்கள் வாழ்வதினும் வீழ்வது நேரிது. நிலையில்லாத செல்வத்தை, நிலைத்த புகழ் பெறவேண்டி தேடிச் செல்லும் நிலைப்பாட்டினையே குறுந்தொகைப் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன.

“அவரே கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியம் காடு இறந்தோரே”    (குறு. 216:1-2)

என்பதில் ‘கேடு இல் விழுப்பொருள்’ என்றது நிலையில்லாத பொருள் என்ற கருத்தினைத் தருகின்றது. செல்வம் எப்போதும் அழியாதது. அச்சிறப்பு செல்வத்திற்கு உண்டு. செல்வத்தைப் பெற்றவர்தான் அழிவர்; செல்வம் என்றும் நிலைத்திருப்பது. இந்த உண்மையினையே கேடுஇல் விழுப்பொருள் என்ற தொடர் உணர்த்தி நிற்கின்றது.

சமூகவியல் ஆய்வாளர்கள், “சமூகம் என்பது உயிர்வாழ்வதற்காகப் போராடும் நம் மக்களினத்தின் தனித்தன்மையான ஒரு குழுவாகும். தமக்குத் தானே அமைத்துக் கொண்ட அக்குழுவின் தலைவிதியையே அக்குழுவைச் சார்ந்த ஒவ்வொரு தனிமனிதனும் பெற்றிருக்கின்றான். இவ்வமைப்பிற் குழந்தைகளிலிருந்து முதுமை வரையில் மனிதர்கள் மற்றவரைச் சார்ந்தும், மற்றவரின் கூட்டுறவோடும் வாழ வேண்டியவர்களாக உள்ளனர்” என்றுரைக்கின்றனர்.

எறும்பின் புற்றுக்களைப் போன்ற, குறுகிய தோற்றத்தையுடைய பல பாறைகள் நிறைந்தனவாக நிலத்தின் தன்மை உள்ளது. அவை கொல்லன் உலைக்களத்தில் உள்ள பட்டடைக் கல்லைப் போன்று சூடேறிக் கிடக்கின்றன. அங்கு வளைந்த வில்லினை ஏந்திய வேட்டுவர், அப்பாறையின் மீதேறித் தங்கள் அம்புகளைத் தேய்த்துக் கூர்மைப்படுத்திக் கொண்டிருப்பர். அவ்வழிச் செல்வோர்களின் மேல் அவ்வம்புகளை விடுப்பார்கள் என்ற தொழில்நிலைச் சமூக நிலை,

“எறும்பி அளையின் குறும்பல் கனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்   
கவலைத்து என்ப அவர்சென்ற ஆறே.” (குறு. 12)

என்று சுட்டப்படுகின்றது. பாலைநிலத்தில் வதியும் வழிப்பறிக் கள்வர்கள் தமது அம்புகளைச் சீர்செய்யும் பொருட்டு, அவற்றைத் தம் கூர்மையான நகங்களால் புரட்டிப்பார்க்கும் நிலையினை,

“………கள்வர்
பொன்புனை பகழி செப்பம் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை..” (குறு. 16)

என்னும் அடிகள் தெளிவுறுத்துகின்றன. பாலைநில மறவர்கள் கூற்றத்தை ஒத்த இயல்பினை உடையவர்கள். அவர்கள் வழிச்செல்வோர்களை மறித்து அவர்களைக் கொல்லவும் செய்வர். அவ்வாறு பலவாறு இரந்துபட்ட உடல்களை உண்பதற்காகப் பருந்துகள், அவை மிக்க நாற்றம் உண்டாகும்வரை காத்துநிற்கும் கொடிய வழியாகப் பாலைநில வழி இருப்பதனை,

“கூற்றத்தன்ன கொலைவேல் மறவர்
ஆற்றுஇருந்து அல்கி வழங்குநர்ச் செகுத்த
படுமுடைப் பருந்து பார்த்திருக்கும்
நெடுமூதிடைய நீர்இல் ஆறே.” (குறு. 283:5-8)

என்னும் பாடல் எடுத்துரைக்கின்றது. பாலைத்திணைப் பாடல்களில் வாழ்வியல் போராட்டம் தலைமைசான்ற ஒரு பண்பாக இடம்பெற்றுள்ளன என்பதற்கு இப்பாடல்களே சான்றாகும்.

சங்க இலக்கியத்தின் குறிக்கோள்நெறி

“இரண்டு மனித உயிர்களுக்கிடையே காதல் உறவின் இயக்கம் களவு, கற்பு எனும் இரு கூறுபட அமையும் அமைப்பினைப் படைப்பிலக்கியம் குறிக்கோள் நெறியில் எடுத்தியம்புகிறது. வடமொழி வடஇந்தியச் சார்புடைய இந்துப் பண்பாட்டின் தாக்கம் ஏற்படுவதற்கு முன்பாகத் தமிழ் மண்ணுக்கே உரிய எதையும் சாராத தமிழர்களுக்கே இயல்புரிமை கொண்ட தமிழ்ப்பண்பாடு தென்னிந்தியாவில் நிலவியது என்பது மறுத்துரைக்க முடியாத உண்மையாகும்” என்ற கமில்சுவலபில் அவர்களின் கூற்றின் மெய்ம்மைப்பாட்டினைக்; குறுந்தொகைப் பாலைத்திணைப் பாடல்களில் காணமுடிகின்றது.

சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் அக்காலச் சமூகம் வரையறுத்திருந்த சமூக அமைப்புகளின் சிறப்பினைக் காணமுடியும். அவ்வகையில் குறுந்தொகையின் ஒவ்வொரு பாடலும் சங்க காலத்தைப் பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன. குறிப்பாகப் பாலைத்திணைப் பாடல்கள் காட்டும் சமூகம் அன்பு, அருள், இரக்க உணர்வு, நேயச்சிந்தனை, பொருளீட்டும் வகை, ஈட்டியதை ஈயும் பண்பு, ஆண்-பெண் இணை வாழ்வின் மேன்மை ஆகியனவற்றைக் கட்டமைப்பனவாக அமைந்துள்ளன.

பாலைத்திணைப் பாடல்கள் பொருளீட்டச் செல்லும் பிரிவினை முதன்மைப்படுத்திப் பேசுகின்றன. தலைவன் பொருளீட்;டுதலை ஓர் கடமையாகக் மேற்கொள்ள வேண்டும் என்பதனையும், அவ்வாறு பெற்ற பொருளைத் தனக்கென வைத்துக் கொள்ளாமல் இரப்பவர்க்கு இன்முகத்துடன் ஈந்து அளித்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றன. எனவே இது ஒரு திணை மரபு என்று கொள்வதைவிட சமுதாய மரபு என்று கொள்வதே பொருத்தமானதாகும்.

பொருள் தேடும் முயற்சிக்குரிய காலம் இளமைப்பருவமே ஆகும். இளமைப்பருவம் இன்பந்துய்ப்பதற்கும் ஏற்ற பருவமாகும். தலைவி வருந்தவும், பிரிவாற்றியிருக்கவும், தலைவன் தேயங்கடந்தும் பொருள் தேடும் நிலைக்கு ஆளாகின்றான். இன்பம் துய்ப்பதற்குரிய பருவ இழப்பு பொருள் தேடலால் ஏற்படுகிறது. இன்பத்திற்கும் பொருளியல் தேடும் வாழ்க்கைக்கும் இடையே நிகழும் போராட்டமே குறுந்தொகை பாலைத்திணைப் பாடல்களுக்குப் பொருளாகியுள்ளன.

குறுந்தொகைப் பாடல்கள் சங்க காலச் சமூத்தில் நிலவிய ஒழுக்கநியதிகளை அறமாக எடுத்துரைக்கின்றது. சமூக வாழ்வின் மேன்மைக்குக் குடும்ப வாழ்வு சிறப்பாக அமைந்திடல் வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. குடும்ப வாழ்வின் இணைப்புக்கு ஒருவர் மீது மற்றவர்கள் கொள்ளும் காதலுணர்வு சிறப்பாகப் பேசப்படுகின்றது. காதலர்கள் தம்முள் கருத்தொருமித்து சமூகத்திற்குப் பயனுள்ள வகையில் வாழ்ந்திட வேண்டும் என அறிவுறுத்துகின்றது. தன் முயற்சியால் பொருள் சேர்க்கவேண்டும்; அவ்வாறு சேர்த்த பொருளை இரப்பவர்க்கு அளித்துக் காத்திடல் வேண்டும்;; விருந்தோம்புதலை எக்காலத்திலும் விடலாகாது; அதுவே சமூக அறமாகும் என்று அறிவுறுத்துகின்றது. பொருளுக்காகப் பிரிவதையும், அவ்வாறு பிரிந்து செல்லும் காலத்தில் அப்பிரிவை ஏற்று தலைவி ஆற்றியிருத்தலே சமூக வளர்ச்சிக்குத் துணைசெய்யும் என்று தெளிவுறுத்து -கின்றது. சங்கக் காலச் சமூகம் பண்பாட்டில் சிறந்து விளங்கியது என்பதற்கு அவர்தம் வாழ்வியல் நம்பிக்கைகள், வழிபாடுகள், சடங்குகள் ஆகியன துணைசெய்கின்றன. மனித வாழ்க்கை போராட்டம் நிறைந்தது என்பதனையும், அப்போராட்டத்தை எதிர்கொண்டு வெற்றிபெறுவதே சிறப்பான வாழ்வாகும் என்பதனையும் நேர்ச்சிந்தனையோடு புலப்படுத்துகின்றது.

சங்கச் சமூகம் எல்லாக் காலத்திற்கும் ஏற்றதும், பொருத்தமானதும், ஏற்கத் தக்கதுமான கூறுகளையே தன்னுள் பெற்றிருந்தது என்பதனை வெளிப்படுத்துவனவாகக் குறுந்தொகையின்; பாலைத்திணைப் பாடல்கள் அமைந்துள்ளன என்பது தெளிவு.

துணைநூல்கள் :

1. உ.வே.சாமிநாதையர், குறுந்தொகை, 1983
2. கு.வெ.பாலசுப்பிரமணியன், சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள், 1994
3. வி. நாகராசன், (ப.ஆ.) குறுந்தொகை, 2011
4. தமிழண்ணல், சங்க மரபு, 2009

E-mail: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

 

* கட்டுரையாளர் - - முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு, இந்தியா -


•Last Updated on ••Monday•, 13 •November• 2017 07:56••  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.021 seconds, 2.38 MB
Application afterRoute: 0.027 seconds, 3.13 MB
Application afterDispatch: 0.080 seconds, 6.06 MB
Application afterRender: 0.164 seconds, 7.16 MB

•Memory Usage•

7573904

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'em83rnl3up23mcohkm7evqbqa7'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1719969138' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'em83rnl3up23mcohkm7evqbqa7'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1719970038',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:10:{s:15:\"session.counter\";i:4;s:19:\"session.timer.start\";i:1719969980;s:18:\"session.timer.last\";i:1719969984;s:17:\"session.timer.now\";i:1719969987;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:16:\"com_mailto.links\";a:2:{s:40:\"37b49c8b4e7ebb9dbd0f82e19241d6e51e5a4f00\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1208:2012-12-08-05-00-04&catid=48:2012-06-19-04-13-01&Itemid=67\";s:6:\"expiry\";i:1719969980;}s:40:\"9acdf853869d03441144978a25062700234b4db6\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4911:2019-01-15-06-45-26&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82\";s:6:\"expiry\";i:1719969988;}}s:19:\"com_mailto.formtime\";i:1719969984;s:13:\"session.token\";s:32:\"b2b3b6dde07d3028c3d9296a49b1734c\";}'
      WHERE session_id='em83rnl3up23mcohkm7evqbqa7'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 82)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 4248
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:27:18' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:27:18' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='4248'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 65
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-03 01:27:18' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-03 01:27:18' )
      ORDER BY a.ordering
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 82 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 82
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 64
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:27:18' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:27:18' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு, இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு, இந்தியா -=- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு, இந்தியா -