முன்னுரை
தன்னை அறிந்து கொள்வதில் ஒரு முறையான பயிற்சியும், முயற்சியும் ஒருபுறம் இருக்க இன்னும் பல்வேறு வழிகளில் பலர் தன்னை அறிந்துகொள்ளும் தேடலில் ஈடுபடுகின்றனர். இவர்களின் தேடல் என்பது புறத்தேடல் அதாவது வெளிவுலகத் தேடல் அல்ல அகத்தேடல், அதாவது மனதளவில் தேடுதல் ஆகும். இந்த அகத்தளவு தேடலில் அவர்கள் தேடியவை கிடைத்ததன் பயன்பாட்டை அவர்கள் பாடலின் மூலம் வெளி உலக மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பொறுத்திப்பார்த்து பயன்பெறும் வண்ணம் அமைத்திருப்பார், அந்த வகையில் தாயுமானவர் தன் அகத்தேடலின் பயனை அவர் பாடலின் மூலம் எடுத்துக் கூறுவதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தன்னையறிதல்
ஆன்மீக உலகத்தில் நான் யார்? என்ற கேள்வி மிகவும் முக்கியத்துவம் உள்ள ஒன்றாகும். எத்தனையோ அணுகு முறையில் பலரும் இந்தக் கேள்வியை அணுகியுள்ளார்கள். ஆனால் இது சம்மந்தமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறியிருந்தாலும் அடிப்படை உண்மை ஒன்றுதான். நாம் அறிந்துகொள்ளும் செய்திகளைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டுமானால்,அதனை சரியான கோணத்தில் விவாதித்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் என்பதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாக உள்ளது. நமது சமுதாயத்தில் எங்கு பார்த்தாலும் பிரச்சினைகளாகத்தான் இருக்கின்றன. உலகமே ஒரு யுத்தகளமாக அமைந்துள்ளது, போராட்டமும் வன்முறையும் தலை விரித்து ஆடுகிறது. எல்லாவற்றிற்கும் மூல காரணம் இந்த நான் என்னும் உணர்வுதான். ‘நான் சொல்வதுதான் சரி, நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும், என்று இந்த நான் எல்லா பிரச்சினைகளையும் கொண்டுவந்து விடுகிறது. இதுதான் அடிப்படை பிரச்சினையாக உள்ளது. இந்த நான் என்னும் உணர்வுதான் நமது செயல்களை ஊக்குவிக்கும் முக்கியமான அம்சமாகவும் உள்ளது. நமது செயல்களை நிர்ணயிக்கும் அம்சமாகவும் உள்ளது.
“தன்னைஅறி யாதுசகத் தானாய் இருந்துவிட்டால்
உன்னை அறிய அருள் உண்டோ பராபரமே”.
(தாயு. பு.க.பா.எ.289)
என்ற பாடலில் தன்னையறிந்தவருக்கே சுகம் கிடைக்கும் என்கிறார்.
நாம் விழித்திருக்கும் போதுதான் நான் என்ற உணர்வு நமக்கு இருக்கிறது. நமக்கு தூக்கத்தின் போது கனவு ஏற்பட்டால், அங்கேயும் இந்த நான் என்னும் உணர்வு ஏற்படுகிறது. கனவில் ஏற்படும் சிந்தனையில், காண்பான் - காணப்படும் பொருள் என்னும் இரட்டை உணர்வு இருந்து கொண்டிருக்கிறது. கனவில் மட்டும் அல்லாமல், நமது நனவு நிலையிலும், இதே தன்மைதான் ஏற்படுகிறது.
கனவும் நனவும் ஒரே தன்மையில் ஏற்படுகிறது. இந்த தன்மை நம் சிந்தனையால் ஏற்படுpறது. எப்படி சிந்தனையால் கனவும், நனவும் ஒரே தன்மையில் ஏற்படுகிறதோ, அது போலதான் அனுபவமும், அனுபவிப்பவன் என்னும் உணர்வும் சிந்தனையால் ஏற்படுகிறது.
“காண்பானும் காட்டுவதும் காட்சியுமாய் நின்ற அந்த
வீண்பாவம் போய் அதுவாய் மேவுநாள் எந்நாளோ”.
(தாயு.ப.க.பா.க.288)
காண்பவனும், காட்சியும், காணப்படும் பொருளும், வீணானவை என்கிறார். கனவும் நனவும் சிந்தனையால் ஏற்படுகின்றது என்று இப்பாடல் மூலம் விளக்குகிறார். “கனவு, நனவு இவை இரண்டும் நமக்கு ஏற்படும் சிந்தனையில்தான் இடம் பெறுகின்றன. நம்முடைய சிந்தனையில் அனுபவம் என்னும் உணர்வும் உள்ளது. அனுபவிப்பவன் என்னும் உணர்வும் உள்ளது. இப்படி நமது சிந்தனை அல்லது உணர்வு அனைத்திலும் இத்தகைய இரட்டைத் தன்மை இருந்து கொண்டே இருக்கிறது. இப்படி இரட்டைத் தன்மை இல்லாத சிந்தனை என்றோ, இரட்டைத் தன்மை இல்லாத உணர்வு என்றோ, எதுவுமே கிடையாது. அப்படி இரட்டைத் தன்மையுடன் இருப்பதுதான் அதன் இயல்பு. அதுதான் அதன் இயற்கை” (நான் யார், ஸ்ரீபகவத், ப23).
கண் இருந்தும் காணாமல் இருந்த எவையும் கனவு என்று அருள்புரியவும் என்கிறார். கண் திறந்தும் காணப்படா நின்றவையும் என்று நனவுநிலை அனுபவத்தை குறிப்படுகிறாhர். கனவும், நினைவும் எப்படி ஒன்றோ அதுபோல அனுபவமும் அனுபவிப்பவனும் ஒன்று என்கிறார் தாயுமானவர்.
“ஆங்காரம் அச்சம் அகற்றி அறிவினொடு
தூங்காமல் தூங்கிச் சுகம் பெற்றாய் நெஞ்சமே”!
(பட்..பா114.க.30)
நான் என்னும் ஆங்காரத்தை விட்டால் சுகம் பெறலாம் என்கிறார் பட்டினத்தார்.
நான் - மாயை
மாயை என்பது இருப்பது போல தோன்றும், ஆனால் இருப்பது இல்லை ‘நானும்’ நிரந்தரமாக இருப்பது போலத் தோன்றும், ஆனால் நிரந்தரம் இல்லை. தற்காலிகமானது. நூன் என்பது மாயை என்று குறிப்பிடப்படுகிறது.
“சிந்தனைபோய் நான் எனல் போய்த் தேக்க இன்ப மாமழை வந்து பொழிந்தனை”.
(தாயு.ப.க.பா.க.137)
உண்மையில் அனுபவத்தையும், அனுபவிப்பவனையும் பிரிக்க இயலாது. “கணந்தோறும் புதிது புதிதாக வரக்கூடிய அம்சம் உடையதுதான் சிந்தனை. ஊதுவத்தியிலிருந்து வெளிவரும் புகை புதிதுபுதிதாக வந்து கொண்டீருக்கிறதோ, அப்படிதான் நமது சிந்தனையும் புதிதுபுதிதாக வந்து கொண்டிருக்கிறது. சிந்தனை எப்படி ஒவ்வொரு கணந்தோறும் புதியதோ அப்படிதான் அதனால் உருவாக்கப்படும் அனுபவிப்பவனும் ஒவ்வொரு கணந்தோறும் புதியவன், அனுபவமும் ஒவ்வொரு கணந்தோறும் புதியது, அனுபவிப்பவனாகிய நாம் நிரந்தரமாக இருப்பதாக் கொள்ளலாம் ஆனால் உண்மையன்று” (கவலை அனைத்திற்கும் தீர்வு, பக்.99 – 100)
அனுபவிப்பவனாகிய நான் தற்காலமானது வந்து வந்து மறையக்கூடியது. மாயைப்போன்றது. மாயை எப்படி இல்லாத ஒன்று இருப்பது போல தோற்றம் தருமோ அதுபோல தான் நான் என்பதும். இதை தாயுமானவர்,
“எப்பொருளும் நீ எனவே எண்ணி நான் தோன்றாத
வைப்பை அழியா நிலையா வையாய் பராபரமே” (தாயு.ப.க.பா.எ.69)
இல்லாத ஒன்றை இல்லை என்று தெரிந்துகொள்வது இதயத் தெளிவு என்கிறார். நான் என்பதும் இல்லாத ஒன்று இதை அறிந்தால் தெளிவு என்கிறார். பெற்றோரைப் பார்க்கும்போது பிள்ளையாக, பிள்ளையைய் பார்க்கும்போது தாயாக, தகப்பனாக, வாழ்க்கைத் துணையைப் பார்க்கும் போது கணவராக, மனைவியாக அனுபவிப்பவனாக ஆகிய ‘நான்;’ தோன்றுகிறது.
“நான் நான் எனக்குளறும் நாட்டத்தால் என்னைவிட்டுப்
போனாலும் உன்னைவிட்டுப் போகேன் பராபரமே”.
(தாயு.ப.க.பா.எ.256)
என்ற பாடலில் பலருக்குள்ளும் பல விதமாய் பல நான் இருக்கிறது அது யாருக்கும் தெரியாமல் இருக்கிறது என்கிறார்.
எனவே நான் என்பது தோன்றித் தோன்றி மறையக்கூடியது. அது தற்காலிகமானது. நமது அனுபவமும், உணர்வும் மாற மாற நம்முடைய நான் என்பதும் மாறிக் கொண்டே இருக்கிறது. இப்படி மாறக் கூடிய ‘நானை’ நிலை என்று பிடித்து வைப்பதால் தான் பிரச்சினை ஏற்படுகிறது. அதை பிடித்து வைக்காமலும், தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாமலும் இருந்தால் நான் என்பது பிரச்சினைக்குரிய ஒன்றாக இருக்காது.
முடிவுரை
தன்னையறிதல் என்பது தெளிவைத் தரக்கூடியது. அதை அறியும் வழிமுறைகள் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளன. நூன் என்ற தேடுதலின் பயன்பாடாக நான் என்பது மாயை, அது தற்காலிகமானது என்றும் அதன் பயனை முடிவாகவும் கூறப்பட்டுள்ளது. ;நான்’ அகத்தளவில் பி0ரச்சினைக்குரிய ஒன்றும் அல்ல, அதை புரிந்துகொள்வது கடினமும் அல்ல. இது சுலபமானது, எளிமையாக புரிந்துகொள்ளக் கூடியது. ‘நான்’ என்பதை புரிந்து கொண்டாலே தன்னை அறிந்துகொள்ளலாம்.
உதவி நூல்கள்
1. தாயுமானவர் பாடல்கள் - மணிவாசகர் பதிப்பகம்
2. ஸ்ரீ பகவத் தியானத்தை விடு ஞானத்தைப் பெறு
3. பட்டினத்தார் பாடல்கள் - பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட்
4. சித்தர் களஞ்சியம் - கற்பகம் புத்தகாலயம்.
Email id :
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
*கட்டுரையாளர் - வை. சுதா -முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் லாஸ்பேட் - புதுச்சேரி. -
•<• •Prev• | •Next• •>• |
---|