- பதிவுகள் இணைய இதழ் புகலிடத் தமிழ் இலக்கிய இதழ்களில் நூற்றுக்கணக்கான கவிஞர்களின் நூற்றுக்கணக்கான கவிதைகளை இதுவரை பிரசுரித்துள்ளது. பெருமைப்படத்தக்க பங்களிப்பு அது. இப்பகுதியில் தொடர்ந்து வெளியாகும் கவிதைகள் வாசித்துப்பாருங்கள். புரிந்து கொள்வீர்கள். அவற்றை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பதிவுகள் இணைய இதழுக்குத் தம் கவிதைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள் கவிஞர்கள். - பதிவுகள் -
பதிவுகள் ஆகஸ்ட் 2004 இதழ் 56
1. எங்கள் தேசம் இந்திய தேசம்!
(NCERTவெளியிட்டுள்ள 'ஜிந்த் தேஷ்கீ நிவாஜி' எனும் இந்திப் பாடலின் 'இசைபெயர்ப்பு' )
பல்லவி
எங்கள் தேசம் இந்திய தேசம்
வாழ்க வாழ்க வாழ்கவே!
இந்து முஸ்லீம் கிறிஸ்துவர்கள்
எல்லாரும் சகோதரர்கள்!
சரணங்கள்
வேறு வேறு வண்ணப் பூக்கள்
சேர்ந்த வாச மாலை நாங்கள்!
வண்ணம் வேறு வேறென் றாலும்
வாசம் நெஞ்சில் ஒன்றுதான்! (எங்கள் தேசம்...
சிந்து கங்கை பிரம்ம புத்ரா
கிருஷ்ணா காவேரி
சென்று சேரும் கடலில் என்றும்
நீரின் தன்மை ஒன்றுதான்! (எங்கள் தேசம்...
பேசும் மொழியும் வாழும் இடமும்
வேறு வேறு ஆனால் என்ன?
பாச உணர்வும் பண்பும் அன்பும்
தேசம் முழுதும் ஒன்றுதான்! (எங்கள் தேசம்...
இமயத் தலையில் பனிப்பூ மேகம்
குமரி அலையில் கொலுசுகள் நாதம்
குஜரத் வங்கத் தோளில் மோதும்
கொஞ்சும் தாயின் ஒற்றுமை கீதம்! (எங்கள் தேசம்...
(இந்தப் பாடல், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., தமிழ் இலக்கிய வகுப்பிற்குப் பாட நூலாக வைக்கப்பட்டுள்ள கவிஞரின் "புதிய மரபுகள்" எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அருப்புக்கோட்டை ம.தி.தா. தேவாங்கா அரசுக் கலைக்கல்லூரி மாணவர்களால் பாடப்பட்டு, அனைத்துக்கல்லூரிப் பாடல் போட்டியில் முதல் பரிசு பெற்று, மதுரை வானொலியின் தேசபக்திப் பாடல் வரிசையில் அடிக்கடி இசைக்கப்பட்டு வருகிறது)
2. வறண்டது காவிரி மட்டுமா? - நா.முத்து நிலவன் -
வறண்டது காவிரி மட்டுமா? - மக்கள்
வாழ்க்கை நெறியும்,பண் பாடும்கிழிந்ததே ஒட்டுமா?
இருண்டது போலவும் தோணுதே! -அட
ஈராயிரத் தாண்டு, பாரம்பரியமும் நாணுதே!
எங்கெங்கு காணினும் சூழ்ச்சியா! - அதில்
ஏழை நிலைமையை மூடி மறைத்திடும் வீழ்ச்சியா!
அங்கங்கும் 'ஒளிர்கிற' காட்சியா! -அவை
அப்பாவி மக்களின் அம்மணத்தை விற்ற சாட்சியா!
அறிவியல் வளர்ந்ததே போதுமா? - அவை
அடிமட்ட ஏழையை அப்படியே விடல் நீதமா?
பொறியியல் வளர்ந்தென்ன லாபம்? - ஒரு
போக்கிலா மாந்தர்க்குப் புகலிடமில்லையே பாவம்!
பாவேந்தன் பாரதி தாச! - உன்
பாட்டு வழிஎங்கள் நாட்டுவழி' எனப் பேச -பல
நாவேந்தர் எம்மிடம் உண்டு!- எனில்
நாவேறு! செயல்வேறு என்பதே எம்மனோர் தொண்டு!
மலைவாழைக் கல்வி'யை உண்டோம்! - அறிவு
மட்டும் வளர்ந்தது, நாட்டையே காடாகக் கொண்டோம்!
விலைபேசி வாங்கினோம் வம்பை - உள்ள
வேற்றுமை யைஊதிப் பெரிதாக்கி விடுகிறோம் அம்பை!
கல்வியில் லாததோர் பெண்ணை - நீ
களர்நில மேயெனக் கவிபுனைந் தாய்,தஞ்சை மண்ணை
புல்விளை யாததோர் புதராய் - நாங்கள்
போட்டுவைத் தோம்,பெண்ணைப் போற்றிவைத் தோம்ஒருபுதிராய்!
'உலகமே உண்ண உண்' என்றாய்! - 'இந்த
உலகையே நானெடுத்(து) உண்பேன் தனியாக' என்றார்,
கலகமே நடத்திய போதும் -அதைக்
'காவல் பணி'யெனக் காட்டுவதே எங்கள் வேதம்!
வறண்டது காவிரி மட்டுமா? - இல்லை
வளத்தமிழ் நாட்டினில் பண்பாடும் கிட்டுமா?
இருண்டது போலவும் தோணுதே! - இதை
எப்படியும்,இனி மாற்றிடவே வழிகாணுவோம்!
பதிவுகள் செப்டம்பர் 2004 இதழ் 57
3. எங்கள் கிராமத்து ஞானபீடம்! - நா.முத்து நிலவன் --
காலை வணக்கத்தில்
'நேர் நில்' சொல்லியும்
நிமிர்ந்து பறக்கச் சக்தியற்று
தர்மசக்கரத்தை மறைத்து
தேசியக்கொடி தரை பார்க்க,
மாணவர் ஊர்வலம்
மரத்தடி வகுப்புக்கு
மவுனமாய்ச் செல்லும்.
ஐந்து வகுப்பிலும்
அறுபத்தேழு பேர்சொல்லி
வருகை பதிவதற்குள்
மணியடித்துவிடும்,
அடுத்த வகுப்பு துவங்கும்.
பெரியாரைப் பற்றிய
உரை நடைக்குமுன்
கடவுள் வாழ்த்தோடு
செய்யுள் தொடங்கும்
உலகப் படத்தில்-
பாற்கடலைத் தேடும்
இலக்கியம்.
ஆண்டவனைக் காப்பாற்றும்
அறிவியல்.
ஆள்பவரைக் காப்பாற்றும்
வரலாறு.
வறுமைக் கோடுகளை மறைத்து
வடஅட்சக் கோடுகளைக் காட்டும்
புவியியல்.
கடன்வாங்கச் சொல்லித்தரும்
கணக்கு.
கிழிந்த சட்டை,
நெளிந்த தட்டோடு
அச்செழுத்துக்களை மேய்ந்த
அf£ரணத்தில் மாணவர்.
'எலேய்! எந்திரிச்சு வாடா'
அவ்வப்போது வந்து
அழைக்கும் பெற்றோர்.
உபகரணங்கள் இல்லாமல்
பாவனையில் நடக்கும்
செய்ம்முறைப் பயிற்சி.
அவசரத்தில்
தின்றதை வாந்தியெடுக்கும்
தேர்வுகள்.
பழைய மாணவர் எம்.எல்.ஏ ஆகி
பள்ளிக்கு வந்தார்.
ஆசிரியர் கையை
ஆதரவாய்ப் பற்றி,
'கோரிக்கை ஏதுமுண்டா
கூறுங்கள்' என்றார்-
'நிரந்தரப் படுத்தணும்
நீயும் சொல்லணும்'
திறந்த உலகம்தான்
சிறந்த படிப்பாம்,
எங்கள் பள்ளிக்குக்
கதவே கிடையாது-
கட்டடம் இருந்தால்தானே?
'எங்கள் பள்ளி நல்ல பள்ளி
கட்டடம் இரண்டு பூங்கா ஒன்று'
-நடத்துவார் ஆசிரியர்.
'எங்கேசார் இருக்குது?'
மரத்தடி மாணவன்
எழுந்து கேட்பான்.
'புத்தகத்தைப் பார்ரா'
போடுவார் ஆசிரியர்.
போதிமரத்தடியில்
புத்தருக்கு ஞானம்,
புளியமரத்தடியில்
மாணவர்க்குப் பாடம்.
இதுவே-
எங்கள் கிராமத்து
ஞானபீடம்!
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|