பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

'பதிவுகள்' விவாதம்: வெ.சா.வின் கனடா விஜயம்!

•E-mail• •Print• •PDF•

2004இல் எழுத்தாளரும் , கலையிலக்கிய விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்களது கனடா விஜயத்தையொட்டி டி.செ.தமிழன் 'பதிவுகள்' இணைய இதழின் விவாதத்தளத்தில் தனது கருத்துகளைப் பதிவுசெய்ததைத் தொடர்ந்து 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு விவாதமே நடந்தது. அதில் எழுத்தாளர்களான ஜெயமோகன், சுமதி ரூபன், மாலன், சூரியா ஆகியவர்களுடன் வெங்கட் சாமிநாதனும் கலந்து கொண்டார். ஒரு பதிவுக்காக அவ்விவாதத்தையொட்டிப் பதிவுகளில் வெளிவந்த கட்டுரைகளை  மீள்பதிவு செய்கின்றோம். - பதிவுகள் 2004இல் எழுத்தாளரும் , கலையிலக்கிய விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்களது கனடா விஜயத்தையொட்டி டி.செ.தமிழன் 'பதிவுகள்' இணைய இதழின் விவாதத்தளத்தில் தனது கருத்துகளைப் பதிவுசெய்ததைத் தொடர்ந்து 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு விவாதமே நடந்தது. அதில் எழுத்தாளர்களான ஜெயமோகன், சுமதி ரூபன், மாலன், சூரியா ஆகியவர்களுடன் வெங்கட் சாமிநாதனும் கலந்து கொண்டார். ஒரு பதிவுக்காக அவ்விவாதத்தையொட்டிப் பதிவுகளில் வெளிவந்த கட்டுரைகளை  மீள்பதிவு செய்கின்றோம். - பதிவுகள் -

வெங்கட்சாமிநாதனுடன் ஒரு (வெற்று) மாலைப்பொழுது!  

- டிசே தமிழன் -

எப்போதுமே இலக்கியக்கூட்டங்கள் வறட்சியாக இருக்கின்றபோதும், நேரங்கிடைக்கும் போதெல்லாம் இப்படியான கூட்டங்களிற்கு போகாமல் இருக்க மனம்விடுவதில்லை. இப்படியான ஒரு மனநிலையுடந்தான் வெங்கட்சாமிநாதனுடனான கலந்துரையாடலுக்கு சென்றிருந்தேன். போனதற்கு இன்னொரு காரணம், நிரம்ப புதுப்புத்தகங்கள் வாங்கலாமென்பது கூடத்தான்(எல்லாப்புத்தங்களையும் வாங்கிடவேண்டும் என்ற ஆசை ஏன் ஓர்போதும் நிறைவேறுவதில்லை? )  ஓவ்வொரு முறையும் தமிழகத்திலிருந்து இப்படியானவர்கள் வரும்போதெல்லாம், அவர்கள் ஈழத்தமிழர் இலக்கியம் பற்றி என்ன மதிப்பீட்டை வைத்திருப்பார்கள் என்ற curiosity எப்போதும் என் மனதில் அலைபாய்ந்தபடியிருக்கும். ஈழத்தமிழர்களின் படைப்புக்களை வாசிக்க வசதிகள், resources (வளங்கள்?) இல்லாதபோதும், இப்படி ஒரு புலம்பெயர்பயணம் வரும்போது, அங்கேயிருப்பவர்கள் ஏதாவது இவைபற்றி கேள்விகள் கேட்பார்களே என்று மனச்சாட்சி உறுத்த கொஞ்சம் home work செய்துவிட்டு விமானம் ஏறுவார்கள் என்னும் நம்பிக்கையை எவரும் இதுவரை பூர்த்திசெய்ததில்லை. அதற்கு விதிவிலக்குமல்ல வெ.சா.வும். 

ஒர் அறிமுகமும், அவரது பொழிப்புரையும் முடிய, வாருங்கள் எல்லோரும் சேர்ந்து கலந்துரையாடுவோம் என்று அழைப்பு விடுத்தாலும், வெ.சாமியிற்கு நல்ல நகைச்சுவை உணர்வு. ஒவ்வொரு கேள்வியிற்கும் பதில்களை கொஞ்சம் நக்கலும் நளினமாயும் வெட்டிபேசியபடி இருந்தார். அவரில் இரசித்த இரண்டு விடயங்கள், தனது கருத்தை மற்றவர்கள் ஓமோம் என்று சொல்லி தலையாட்டவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை மற்றது நாடகங்கள் பற்றிய அவரது ஆழந்த அனுபவங்கள்/அறிவு. வலசை தம்பிரான் மீது அவருக்கு இருக்கும் மதிப்பு அவரது பேச்சிடையே தெளிவாய்த்தெரிந்தது. ஆனால் 'கருஞ்சுழி' எழுதிய ஆறுமுகத்தையோ, ந.முத்துச்சாமியையோ அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று தமிழ்நாட்டில் அநேகர் foundations மூலம் fund எடுத்து எல்லாக்கலைகளையும் அழித்தபடியிருக்கிறாகள் என்று அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது போலத்தான் இருக்கிறது (கிட்டத்தட்ட இதேகருத்தைத்தான், முருகேசபாண்டியனுன், மு.ராமசாமியைப் பற்றி உயிர்மையில் எழுதும்போது குறிப்பிட்டிருந்தார் என்று நினைவு). வெ.சாமியின் ஒரு கருத்து சற்று நெருடலாயிருந்தது. கூத்தின் ஆழமான மரபிலிருந்து வரும் ஒருவர் இன்னொரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபடும்போது அவரால் ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது (அதிகம் படிக்காத, கூத்துக்கலையின் பின்னணியிலிருந்து வருபவர் நவீன நாடகங்களிற்கு செல்வதை (அவர் விரும்பித்தான் போகிறார் என்றால்) ஏற்றுக்கொள்ளாததில் வெ.சாமியின் சாதியபின்புலம் ஒரு காரணமாய் இருக்கக்கூடும்). தன்னைப் பாதித்ததைப் பற்றி மட்டும்தான் எழுதுவேன். சரியான விதத்தில் எழுதப்பட்டிருந்தால் மற்றையோரைப் போய்ச்சேரட்டும், இல்லாவிட்டால் காற்றில் போகட்டும், அதைப்பற்றி கவலையில்லை என்று வெ.சாமி சொன்னதில் ஒரு படைப்பாளியின் கம்பீரத்தைப்பார்க்கமுடிந்தது. ஈழத்தமிழ் இலக்கியங்கள் ஏன் அதிகம் தமிழகத்தில் பேசப்படவில்லை என்பதற்கு, வெ.சாமி அது arrogance என்று சொல்லப்போக இன்னொருவர் roughயாய் இருக்கிறது ignorance என்று மாற்றிச்சொல்லுங்கள் என்று மன்றாட இறுதியில் எந்த வார்த்தையில் சமரசம் செய்தார்கள் என்பதை யானறியேன் பராபரமே. ஆனால், கூட்டத்திலிருந்து ஒருவர் எழுப்பிய நுட்பமான கேள்வியை, 'நீங்கள் கூட ஈழத்தமிழர் இலக்கியம் பற்றி அந்தக்காலத்தில் கூட எழுதவில்லை' என்பதை வெ.சாமி சமார்த்தியமாய் தவிர்த்துவிட்டார். அது சரி, நீங்களெல்லாம் தமிழகத்து 'இலக்கிய ஜம்பவான்களில்' திருவாய்மொழி மலர்ந்து அங்கீகாரம் வரவேண்டும் ஏன் எதிர்பார்க்கிறியள் என்று கூட்டத்திலிருந்து இன்னொருவர் வீசிய கேள்வியில் நிரம்ப உண்மையிருக்கிறதுதானே.

வெ.சாமிநாதன், இன்றைய எழுத்தாளர்களில், யூமாவாசுகி, பெருமாள்முருகன், இமையம் பற்றி நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். முக்கியமாய் யூமாவாசுகியின் 'ரத்த உறவை' எல்லோரும் கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று சிலாகித்துச் சொன்னார். பெண்ணிய எழுத்துக்கள் பற்றியும் கேள்விகள் எழும்பின. வெ.சாமியிற்கு பெண்கள் இப்படி வெளிப்படையாக எழுவதில் எல்லாம் உடன்பாடிலை. Rice cooker ஆவி (நல்லவேளை பிரமீளின் ஆவியில்லை) மாதிரி எல்லாம் சீறிபாய்ந்து பின் தானாகவே எல்லாம் அடங்கிவிடும் என்றார். சரி நீங்கள் பெண்கள் எல்லாம் இப்படி எழுதுகிறார்கள் என்று ஆளுக்கொரு கருத்துக்களை சொல்கிறியள், ஜே.பி. சாணக்யா போன்றவர்கள் எழுதும்போது எந்த பேச்சுமூச்சையும் காணவில்லையே என்று கேட்க, அதையெல்லாம் வாசிக்கவில்லை என்றும் அவற்றையெல்லாம் புறத்தள்ளுங்கள் என்றார். ஜெயமோகனின் எழுத்துக்களில் கூட இப்படியான சித்தரிப்புக்கள் எல்லாம் இருக்கிறதே என்று யாரோ கூற, அப்படி என்றால் அவற்றையும் வாசிக்காமல் தூக்கியெறியுங்கள் என்று கொஞ்சம் உரத்தகுரலில் கூறினார். (ஜெயமோகன் கவனிக்க, நீங்கள் வெ.சாமி முன்னட்டையோடு ஒரு சிறப்பிதழே சொல்புதிதில் வெளியிட்டும் அவர் உங்கள் கட்சி இல்லையாம். இப்படி எல்லாம் சொல்லவில்லை என்று வெ.சாமி தமிழ்நாட்டை மிதிக்கும்போது சொன்னால், record செய்த tape யாரிடமாவது இருக்கும் வாங்கி அனுப்பிவிடுகிறேன். ஆனால் பதிவுக்கட்டணம் இலவசமல்ல. இப்படிக் இந்தக்கூட்டத்திலும், இன்னொரு பிம்பம் உடைந்துபோன அலுப்போடு வீடுசேர, நான் வாங்கிய புத்தகங்களின் பக்கங்களிலிருந்து வேறொரு உலகம் விரிவுகொள்கிறது. அவை ஒரு இலக்கியக்கூட்டத்தைவிடவும், ஒரு படைப்பாளியை விடவும் என்னுடன் அதிகம் நேசம் கொள்கின்றன.

பதிவுகள் ஜூன் 2004; இதழ் 54.


வெ.சாமிநாதன் விருது வழங்கல் பற்றி.....

- ஜெயமோகன் -

2004இல் எழுத்தாளரும் , கலையிலக்கிய விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்களது கனடா விஜயத்தையொட்டி டி.செ.தமிழன் 'பதிவுகள்' இணைய இதழின் விவாதத்தளத்தில் தனது கருத்துகளைப் பதிவுசெய்ததைத் தொடர்ந்து 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு விவாதமே நடந்தது. அதில் எழுத்தாளர்களான ஜெயமோகன், சுமதி ரூபன், மாலன், சூரியா ஆகியவர்களுடன் வெங்கட் சாமிநாதனும் கலந்து கொண்டார். ஒரு பதிவுக்காக அவ்விவாதத்தையொட்டிப் பதிவுகளில் வெளிவந்த கட்டுரைகளை  மீள்பதிவு செய்கின்றோம். - பதிவுகள் இவ்விதழில் வெ சாமிநாதனுக்கு விருது வழங்கும் விழா பற்றி டி செ தமிழன் என்பவர் எழுதிய குறிப்பு கண்டேன். அவரிடம் விவாதிக்க விரும்பவில்லை, முன்முடிவுகள் இல்லாத சில ஈழ வாசகர்களாவது இதைப்படிக்கக் கூடும். அவர்களுக்காக. இந்த அளவுக்கு சாதி நோக்கும் வன்மமும் கொண்ட ஓர் அணுகுமுறை எந்த ஈழ எழுத்தாளர் மீதாவது தமிழ் வாசகர்களாலோ திறனாய்வாளர்களாலோ காட்டப்பட்டுள்ளனவா என்பதை அவர்கள் யோசிக்கவேண்டும்.

1] சாமிநாதன் 'தயாரித்துக் கொண்டு' வரவில்லை என்பதைக் குறிப்பிடும் இந்த 'தமிழர்' சாமிநாதனைப்பற்றி எதையுமே அறியாமல் அந்த விழாவுக்குச்சென்றதை இங்கே பதிவு செய்கிறார். ஈழ எழுத்துக்களைப்பற்றி மிக அதிகமாக எழுதிய தமிழ்நாட்டு திறனாய்வாளர் மட்டுமல்ல சாமிநாதன், தமிழ் திறனாய்வாளரே அவர்தான். மு தளைய சிங்கம்  எஸ் பொன்னுத்துரை முதல் பா அகிலன் நட்சத்திரன் செவ்விந்தியன் வரை அவர் நாற்பதாண்டுகளாக விடாமல் எழுதிவருகிறார்.  அவர் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி எழுதிய அளவுடன் ஒப்பிட்டால் அதன் சதவீதம் அதிகமும்கூட. எதிர்மறையாகவும் கைலாசபதி சிவத்தம்பி பற்றி கடுமையாக எழுதியிருக்கிறார். அவை நூல்களாக பதிவும் பெற்றுள்ளன,அவரிடம் வாழ்நாள் சாதனைக்காக விருது வழங்கும் விழாவில் நீங்கள் ஈழம் குறித்து ஏன் எழுதவில்லை என்று கேட்டால்  அவர் என்ன சொல்ல முடியும்? மனதுக்குள் தலையிலடித்துக் கொண்டு ஏதாவது சிரிப்பாக சொல்லியிருப்பார், அதுதான் அவரது பாணி தமிழ் வாசகன் அவரிடம் ஆ மாதவனைப்பற்றி ஒரு கட்டுரை எழுதாத அவர் ஏன் வ அ ராசரத்தினம் பற்றி எழுதுகிறார் என்றுகேட்டால்கூட நியாயம் உள்ளது. தமிழில் தமி ழ் எழுத்தாளர்களைப்பற்றி எழுதப்பட்டவை மிக குறைவே. பல முக்கியமான படைப்பாளிகளைப்பற்றி -- உதாரணமாக ஜானகிராமன்- மொத்தம் நூறு பக்கம் கூட எழுதப்பட்வில்லை. இந்நிலையில் ஈழ எழுத்துக்களை பற்றி தமிழ்நாட்டில் எழுதிக்குவிக்கப்படவில்லை என்ற புகார் அசட்டுத்தனமானது. 

2. வெ சாமிநாதன் தமிழ் தெருக்கூத்தைப்பற்றி முப்பது வருடங்களாக ஆங்கிலத்தில் எழுதியும், டெல்லி அரங்குகளில் பேசியும் அக்கலையையும் அதன் கலைஞர்களையும் பெருமைப்படுத்தியவ்ர், அங்கீகரிக்கச் செய்தவர். அப்பெருமையினை இன்று அவருக்கு மறுக்கும் பொருட்டு நேற்றுவரை அக்கலையை ' மூடநம்பிக்கை பரப்பும் காட்டுக்கலை' என்று சொன்னவர்கள் முயலலாம். வெங்கட் சாமிநாதனைப்பொறுத்தவரை தெருக்கூத்துக்கு ஒரு புனிதமான இடம் அளிக்கிறார். அதில் உள்ள ட்ரான்ஸ் என்று அவர் கூறும் நிலை-- நடிகன் சாமியாக ஆகும் நிலை- எல்லா கலைகளுக்கும் இலக்கியத்துக்கும் அளவுகோல் என்கிறார். தெருக்கூத்தை பிற கலைகளுடன் இணைப்பதை, நவீனப்படுத்துவதை, தெருக்கூத்துக்கலைஞன் பிற வடிவங்களில் இற்ங்குவதை அவர் ஏற்பதில்லை. மேன்மையான ஒரு கலையிலிருந்து அதைவிட கீழான ஒரு கலைவடிவுக்குச் செல்வதாகவே அதை அவர் காண்கிறார். அதை அவரது சாதிய நோக்கு என்று போகிற போக்கில் அவதூறு செய்யும் கீழ்த்தரமான சாதிய நோக்கு ஈழ இலக்கியத்தின் இன்றைய அழுகிப்போன ஒரு தளத்தை அடையாளம் காட்டுகிறது

3 என் ஆக்கங்களில் அராஜகமும், மீறலும் கொண்ட ஒரு பகுதி வெ சாமிநாதனுக்கு என்றுமே உவப்பாக இருந்தது இல்லை. சாமிநாதன் அதை கலைக்கு எதிரானதாகவே காண்கிறார். அது அவரால் பல மதிப்புரைகளில் பதிவும் செய்யப்பட்டுள்ளது. அதை கற்பனாவாத நோக்கு என்று நான் சொல்லியிருக்கிறேன். என் நோக்கு செவ்வியல் சார்ந்தது. செவ்வியலில் உன்னதமும் அதை தலைகீழாக்குவதும் ஒரே சமயம் நிகழலாம். கடுமையான கருத்து முரண்பாடுகளுடந்தான் நான் சாமிநாதனை மதிக்கிறேன். என் திறனாய்வு நூல்களில் பக்கம் பக்கமாக அவரை மறுத்திருக்கிறேன். நேரில் கத்தி விவாதித்திருக்கிறேன், நாற்பதுவருடம் மிக எதிர்மறையான சூழலில் அஞ்சாமலும் தயங்காமலும் கருத்துச்சொன்ன சாமிநாதனைப்போன்ற ஒருவரை வெளிநாட்டில் ஒன்றும் தமிழ்நாட்டில் ஒன்றுமாக கருத்துச்சொல்ல்லும் அற்பர் என்று ஆதாரமின்றி அவதூறு செய்யும் மனநிலையை எப்படி வரையறை செய்வது ? ஈழ மனநிலையின் வக்கரித்த ஒரு பக்கத்தை இக்குறிப்பினூடாகக் காணமுடிகிறது. இலக்கியம் வாசிப்பும் சரி எழுத்தும் சரி தன் சாதி இன மத அடையாளங்களிலிருந்து சற்றேனும் வெளியே செல்ல முடிபவர்களுக்காக் உள்ளது. இம்மாதிரியான சாதிவெறிக்கசப்புகள் இன்றுவரை இலக்கியத்தை ஒன்றும் செய்ய முடிந்தது இல்லை என்பதே உண்மை. முடிந்திருந்தால் சாமிநாதன் இதற்குள் ஒழித்துக்கட்டப்பட்டிருப்பாரே.

பதிவுகள் ஜூலை 2004; இதழ் 55.


வெ.சாமிநாதன் விருது வழங்கல் பற்றி எதிர்வினை! 

- சுமதி ரூபன் -

2004இல் எழுத்தாளரும் , கலையிலக்கிய விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்களது கனடா விஜயத்தையொட்டி டி.செ.தமிழன் 'பதிவுகள்' இணைய இதழின் விவாதத்தளத்தில் தனது கருத்துகளைப் பதிவுசெய்ததைத் தொடர்ந்து 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு விவாதமே நடந்தது. அதில் எழுத்தாளர்களான ஜெயமோகன், சுமதி ரூபன், மாலன், சூரியா ஆகியவர்களுடன் வெங்கட் சாமிநாதனும் கலந்து கொண்டார். ஒரு பதிவுக்காக அவ்விவாதத்தையொட்டிப் பதிவுகளில் வெளிவந்த கட்டுரைகளை  மீள்பதிவு செய்கின்றோம். - பதிவுகள் பதிவுகளில் வெங்கட்சாமிநாதனுடன் ஒரு (வெற்று) மாலைப் பொழுது படித்தேன்.. அதன் பின்னர் அதற்கு எதிர்வினையாக ஜெயமோகன் எழுதியதையும் படித்தேன். வெ.சாமிநாதனுடனான மாலைப்பொழுதில் கலந்துகொண்டவள் என்ற முறையில் எனது கருத்து சிலவற்றை இங்கே கூற விரும்புகின்றேன். டி.செ. தமிழன் வெ.சாமிநாதனுடனான மாலைப்பொழுதில் நடந்ததை அப்படியே பதிவு செய்திருக்கின்றார்.

ஈழத்தமிழர்களின் படைப்புக்கள் ஏன் தமிழ்நாட்டில் பேசப்படுவதில்லை என்று ஒருவர் தொடுத்த கேள்விக்கு,> டி.செ. தமிழன் குறிப்பிட்டது போல் வெங்கட்சாமிநாதன் பதிலளித்திருந்தார்.. தொடர்ந்து நீங்களும் உங்கள் விமர்சனங்களில் ஈழத்தமிழர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லையே என்ற போது, அந்நிகழ்வில் பங்கு பற்றி உரையாற்றிய திரு. ஞானம் லம்பேட் அவர்கள் வெ.சாமிநாதன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எந்தெந்த ஈழத்தமிழர்களின் படைப்புகள் பற்றியெல்லாம் விமர்சித்திருக்கின்றார் என்பதைச் சுட்டிக்காட்டினார். ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து ஏன் தமிழ்நாட்டில் பேசப்படுவதில்லை என்ற கேள்வி, ஜெயமோகன் கூறியது போல் அசட்டுத்தனமானதுதான். இருந்தும் ஜெயமோகன் ஒன்றைக் கவனிக்க வேண்டும் ஒரு ஈழத்து எழுத்தாளர் தனது படைப்பு தமிழ்நாட்டில் பேசப்படவில்லை என்ற ஆதங்கத்துடன் வைத்த கேள்விக்கு "ஈழத்து எழுத்து பற்றி தமிழ்நாட்டில் எழுதிக்குவிக்கவில்லை" என்று கூறி ஒட்டு மொத்தமாக ஈழத்து இலக்கியவாதிகளை நீங்கள் கொச்சைப் படுத்த முனைந்திருக்கின்றீர்கள். "எதற்கு தமிழ்நாட்டு இலக்கியவாதிகளின் அங்கீகாரத்தை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?" என்று ஒருவர் குரல் கொடுத்தார் அதுவும் நியாயமானதே.

தொடர்ந்து டி.செ.தமிழனின் எழுத்தில் கூத்து பற்றிய வெ.சாமிநாதனின் கருந்து நெருடலாக இருந்தது என்றும், கூத்தின் ஆழமான மரபில் இருந்து வரும் ஒருவர், நவீன நாடகத்திற்குள் புகுந்து கொள்வதை ஏற்கமுடியாதது வெ.சாமிநாதனின் சாதிய பின்புலத்தைக்காட்டுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது டி.செ.தமிழனின் தனிப்பட்ட கருத்தே. வெ.சாமிநாதன் தனது கருத்து விமர்சனங்களைத் தருவது போலத்தான் டி.செயும் தனது கருத்தைக் கூறியுள்ளார். இருக்க, ஜெயமோகள் எதிர்வினையில் "சாதிய போக்கு என்று போகிற போக்கில் அவது¡று செய்யும் கீழ்த்தரமான சாதிய நோக்கு ஈழ இலக்கியத்தின் இன்றைய அழுகிப்போன ஒரு தளத்தை அடையாளம் காட்டுகின்றது" என்று மிகக்கடுமையான வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் ஒட்டு மொத்த ஈழ இலக்கியவாதிகளைத் தாக்கியிருப்பது, தமிழகத்தின் முன்னணி எழுத்தாளரான ஜெயமோகனிற்கு அழகல்ல. மேலும் வெ.சாமிநாதன் வெளிநாட்டில் ஒன்றும், தமிழ் நாட்டில் ஒன்றுமாக விமர்சனம் செய்கின்றார் என்ற டி.செ தமிழனின் கருத்திற்கு மீண்டும் ஜெஐயமோகன் "ஈழ மனநிலையின் வக்கரித்த ஒரு பக்கத்தை இக்குறியீடினு¡டாகக் காணமுடிகிறது"  என்று ஒட்டு மொத்த ஈழ இலக்கியவாதிகளைச் சாடியுள்ளார்.

ஜெயமோகன் ஒன்றை மறக்கக் கூடாது.. இந்திய இலக்கிய வாதிகள் வைரமுத்துப் போன்றோரிற்குக் விருதுகளை வழங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில், எங்கோ கனடாவில் இருக்கும் ஈழ இலக்கியவாதிகள் தன்னை தொலைபேசியில் அழைத்து உங்களிற்கு விருது வழங்க உள்ளோம் என்று கூறிய போது தான் புல்லரித்துப் போனதாக வெ.சாமிநாதன் அவர்கள் தமது உரையில் கூறியுள்ளார்கள். அது மட்டுமல்ல தாங்கள் கனடா வந்து உரை நிகழ்த்திய போது எனது படைப்புக்களுக்கு ஈழத்து இலக்கியவாதிகள் எவ்வளவு து¡ரம் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை, ஈழத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கிராமம் ஒன்றில் என் படைப்புக்களிற்கு விமர்சனக் கூட்டம் வைத்தார்கள் என்பதின்  மூலம் அறிந்து கொண்டேன் என்று கூறிப் புளங்காகிதம் அடைந்தீர்கள்.

மேலும் பெண்ணிலக்கியம், பெண்ணிலக்கியத்தில் ஆபாசம் என்று தற்போது எழுந்திருக்கும் சர்ச்சை பற்றி உங்கள் கருத்து என்ன என்று வெ.சாமிநாதனிடம் கேள்வி எழுந்த போது, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று கேள்வி கேட்டவரை அவர் திருப்பிக் கேட்டார், அப்படி ஆபாசம் ஒன்றும் எனக்குத் தெரியவில்லை.. அவர்களின் உணர்வை அவர்கள் எழுதுகின்றார்கள் என்ற போது, சரி அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.. எதற்காக என்னிடம் கேட்கின்றீர்கள் என்று வெ.சாமிநாதன் கூறிக் கேள்வியைத் தவிர்க்க முற்பட, இன்றுமொருவர் நீங்கள் அப்படிக் கூறக்கூடாது சாணக்கியா போன்றோரின் எழுத்திலும் ஆபாசம் இருக்கின்றது, ஆயினும் அது தரமான இலக்கியமாகவே உள்ளது, ஏன் பெண்களின் எழுத்தை மட்டும் ஆபாசம் என்கின்றீர்கள் என்ற போதுதான் அக்கேள்விக்குப் பதிலளித்தார்.

அது மட்டுமல்ல இது போன்ற பல கேள்விகளிற்கு, கேள்வி கேட்டவரையே வெ.சாமிநாதன் திருப்பிக் கேட்டு அப்படியாயில் நீங்கள் சொல்வது போலவே வைத்துக்கொள்ளுங்கள்.. நான் ஒரு சாதாரண மனு'ன் நான் சொல்வதை நீங்கள் ஏன் கேட்கவேண்டும் என்று கூறினார். இது அங்கு வந்திருந்த பலரிற்குக் குழப்பதை உண்டு பண்ணியது உண்மையே. 40 வருடங்களுக்கு மேலாக இலக்கிய உலகத்தில் இருந்து பல நல்ல எழுத்தாளர்களை எல்லாம் விமர்சனம் செய்த ஒரு பெரியவர் என்று எண்ணிக் கேள்வி கேட்டபோது திருப்தியாகப் பதில் கிடைக்காததால் "உங்களுக்குத்தானே விருது தருகின்றார்கள், எனக்குத் தரவில்லையே" என்று கேள்வி கேட்ட ஒருத்தர் புறுபுறுத்தார்.

வெங்கட் சாமிநாதன் அவர்கள் சிறந்த விமர்சகர் என்று ஏற்றுக்கொண்டதால் தான் ஈழத்து இலக்கிய வாதிகள் அவரை அழைத்துக் கனடாவில் கெளரவித்து விருதும் வழங்கினார்கள். இருந்தும் அவருடனான மாலைப்பொழுதில் வெ.சாமிநாதன் அவர்கள் இலக்கியவாதிகளின் கேள்விகளிற்கு தகுந்த பதில் அளிக்காமல் ஏனோ தானோ என்று பதிலளித்ததும் உண்மை. இதில் கலந்து கொண்ட யாருக்கும் அதனை விமர்சிக்கும் உரிமை இருக்கிறது. அதற்காகக் கோபம் கொண்டு கடுமையான வார்த்தைகளை ¦ஐயமோகன் பிரயோகித்திருப்பது எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது.!

பதிவுகள் ஜூலை2004; இதழ்  55


சுமதி ரூபனுக்கு!

- ஜெயமோகன் -

2004இல் எழுத்தாளரும் , கலையிலக்கிய விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்களது கனடா விஜயத்தையொட்டி டி.செ.தமிழன் 'பதிவுகள்' இணைய இதழின் விவாதத்தளத்தில் தனது கருத்துகளைப் பதிவுசெய்ததைத் தொடர்ந்து 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு விவாதமே நடந்தது. அதில் எழுத்தாளர்களான ஜெயமோகன், சுமதி ரூபன், மாலன், சூரியா ஆகியவர்களுடன் வெங்கட் சாமிநாதனும் கலந்து கொண்டார். ஒரு பதிவுக்காக அவ்விவாதத்தையொட்டிப் பதிவுகளில் வெளிவந்த கட்டுரைகளை  மீள்பதிவு செய்கின்றோம். - பதிவுகள் சுமதி ரூபனின் எதிர்வினை கண்டேன். வெங்கட் சாமிநாதனின் கூட்டம் எப்படி நடந்தது என்று எனக்குத்தெரியாது. எப்படியும் நடந்திருக்கலாம். அது தனக்கு ஏமாற்றமளித்தது என்று எழுதவோ அவர் அங்கே சொல்லியவற்றை முழுமையாக நிராகரிக்கவோ எவருக்கும் முழுமையான உரிமை உள்ளது. நான் எழுதவந்த பிரச்சினையே அது அல்ல தமிழ் எழுத்தாளார்களில் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், பிரபஞ்சன் போன்ற வெகுசிலர் தவிர பிறர் பொது நிகழ்ச்சிகளிலோ மேடைகளிலோ தங்களை குறைந்த அளவுக்குக் கூட வெளிப்படுத்தக் கூடியவர்கள் அல்ல. பலர் பொதுவான பார்வையாளனுக்கு மிக ஏமாற்றம் தருபவர்கள். எழுதுபவர்கள் பேசத்தெரியாமலிருப்பது உலகமெங்கும் உள்ள விஷயமும் கூட என்பதை ஓரளவு விபரமறிந்தவர்கள் அறிவார்கள்.  சினிமா அல்லது அரசியல் ஆசாமிகளின்  'ஷோ மேன்' தன்மையை அவர்கள் எழுத்தாளர்களிடம் எதிர்பார்க்கவும் மாட்டார்கள், ஏமாற்றமடையவும் மாட்டார்கள். எழுத்தாளர்களுக்கு இயல்பாக உள்ள சபைக்கூச்சம் , உட்சுருங்கும் தன்மை ஆகியவற்றை கடந்து அவர்களை நெருங்கி அறியும் முயற்சியை வாசகர்கள் தங்கள் தரப்பிலிருந்து எடுப்பதே வழக்கம். தமிழகத்தில் பொதுவாக இதுதான் நடந்தும் வருகிறது. ஆனால் அப்படி இல்லாவிட்டாலும் அது ஒரு குற்றம் அல்லதான். அதிலும் வெங்கட் சாமிநாதன் அவரது முதுமையின் விளைவான கனமின்மை மற்றும் எரிச்சலை வெளிப்படுத்துபவராக உள்ளார் என்பதும் என்றுமே அவர் சிறந்த பேச்சாளரோ வாதிடுபவராகவோ இருந்தது இல்லை என்பதும் உண்மை. அவரது தனித்தன்மை அவரது நட்பார்ந்த அந்தரங்க உரையாடலில் மட்டுமே வெளிப்படுவது. 

நான் இங்கே எதிர்வினையாற்றியது அதற்கு அல்ல. டி செ தமிழன் என்ற பேரில் எழுதுபவர் தன் முடிவுகளை வெங்கட் சாமிநாதனின் சாதி குறித்த தன் வெறுப்பிலிருந்து உருவாக்கி அதன் அடிப்படையிலேயே அனைத்தையும் காண்கிறார் என்பதே. அதன் அடிப்படையில் எதுவுமே தெரிந்துகொள்ளாமல், பொருட்படுத்தாமல் அவரை இளக்காரம் செய்ய, அவதூறு செய்ய அவர் மூற்படுகிறார். வாழ்நாள் சாதனைக்காக கௌரவிக்கப்பட்டு தன் முன் வந்த ஒருவரைப்பற்றி ஒரு மதிப்பீட்டை உருவாக்கி தூக்கிப்போட்ட அவருக்கு சில கணங்களே போதுமானதாக உள்ளது. இதிலுள்ள மனக்குறுகலை மட்டுமே சுட்டிக்காட்ட விழைகிறேன். அது இவரைப்பற்றியதுமட்டுமல்ல, இம்மாதிரி கூட்டம் எவரைப்பற்றி எவர் நடத்தினாலும் ஈழச்சூழலில் இப்படி ஒரு சில குரல்கள் எப்போதுமே எழுவதைக் கண்டபிறகு இதைசுட்டிக்காட்ட வேண்டும் என்றுதான் எழுதினேன்.  

இம்மனநிலையை ஈழ இலக்கியவிவாதங்களில் ஒரு சாராரிடம் எப்போதுமே கண்டு கொண்டிருக்கீறேன். படைப்பின் இலக்கியத்தகுதி ரசனை சார்ந்தோ கோட்பாடு சார்ந்தோ அலசப்படுவது இல்லை. தனிநபர் , அவரது சாதி மற்றும் ஊர் சார்ந்தே அலசப்படுகிறது.  சாதிக்கு நிகராகவே யாழ்ப்பாணத்தான், மட்டக்களப்பான், தீவுக்காரன் என்ற பிரிவினை. இதை இணைய விவாதங்களின் மூலம் திட்டவட்டமாகவே புரிந்துகொண்டிருக்கிறேன். சாதிகுறித்துக்கூட பேசப்படக்கூடாதென்றில்லை. அதை வெளிப்படையாக கோட்பாட்டு ரீதியாக ஆராயும் துணிவும் காணப்படுவதில்லை. ஆனால் வரிகளுக்கு இடையே அந்தக் காழ்ப்பு முடை நாற்றமெடுக்கிறது . அல்லது டி செ தமிழனின் வரிகள் போல் ஒற்றை வார்த்தையில் தவறிப்போய் வெளியே தலையோ வாலோ காட்டிவிடுகிறது. 

இதை ஈழ எழுத்தின் பொதுப்போக்காக நான் எண்ணவில்லை என்பதை முதலிலேயே சொல்லியுள்ளேன். சுமதி அவர்கள் அப்படி புரிந்துகொண்டிருக்கிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இது ஒரு முக்கியமான் முகமாக அங்கே உள்ளது என்பதே என் எண்ணம். அதை திட்டவட்டமாக பதிவுசெய்ய விரும்புகிறேன்.

ஓர் ஈழ எழுத்தாளன் தமிழ் நாட்டில் அங்கீகாரம் பெற எண்ணுவது ஒன்றும் பிழை அல்ல என்பதே என் எண்ணம். தமிழில் வாசிப்பவர்கள் இன்றும் இங்கேதான் அதிகம். ஈழ அரசியல் தருணங்கள் அளிக்கும் உடனடி முக்கியத்துவத்தைத் தாண்டி படைப்பின் சாராம்சம் எப்படி வாசகனைச் சென்று சேர்கிறது என்று அளப்பதற்கான அளவுகோல் அது. கண்டிப்பாக ஈழத்தை விட படைப்பின் கலைத்தன்மைக்கு அழுத்தமளித்துப் பார்க்கும் நோக்கு தமிழ்நாட்டில் அதிகம். முக்கியமான ஈழ எழுத்துக்கள் தமிழ் நாட்டில் இலக்கிய அங்கீகாரம் பெற்றும் உள்ளன. அனைத்துக்கும் மேலாக பிறிதொரு சூழலில் வாசிக்கப்படுவது எந்த எழுத்தாளனுக்கும் மகிழ்ச்சி தருவதே. எனக்கு ஈழவாசகர்கள் நிறையவே உண்டு.. அது குறித்த பெருமிதமும் உண்டு. அது தவறானதல்ல, இயல்பான உணர்வே. 

பதிவுகள் ஜூலை 2004; இதழ் 55. 


என் தரப்பிலிருந்து!

- வெங்கட் சாமிநாதன் -

2004இல் எழுத்தாளரும் , கலையிலக்கிய விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்களது கனடா விஜயத்தையொட்டி டி.செ.தமிழன் 'பதிவுகள்' இணைய இதழின் விவாதத்தளத்தில் தனது கருத்துகளைப் பதிவுசெய்ததைத் தொடர்ந்து 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு விவாதமே நடந்தது. அதில் எழுத்தாளர்களான ஜெயமோகன், சுமதி ரூபன், மாலன், சூரியா ஆகியவர்களுடன் வெங்கட் சாமிநாதனும் கலந்து கொண்டார். ஒரு பதிவுக்காக அவ்விவாதத்தையொட்டிப் பதிவுகளில் வெளிவந்த கட்டுரைகளை  மீள்பதிவு செய்கின்றோம். - பதிவுகள் 5.6.04 அன்று நடந்த சந்திப்பைப் பற்றி சுமதி ரூபனும் டி.செ.தமிழனும் வெளியிட்டுள்ள எதிர்வினைகளும், சந்திப்புக்குப் பின் டொராண்டோ தமிழ் பத்திரிகைகள் சிலவற்றில் வெளியாகின.  சில எதிர்வினைகளும் என்னை வருத்தப்படச் செய்தன. துவேஷம் நிறைந்தவையும் என்னையும் என் கருத்துக்களையும் முன் தீர்மானங்களின்றி, சந்திக்க மறுப்பவையும் அவை என்பது ஒரு புறம் இருக்க, 10-15 வருடங்களாகவே அல்லது அதற்குமேலாக முற்றிலும் அன்னிய கலாச்சார, அரசியல் சூழலில் வாழ்ந்தும் கூட தமிழகத்திலே மட்டுமே காணப்படும் சாதீய துவேஷத்தைச் சுமந்து கொண்டு, மாற்றுக் கருத்துக்களையும் பார்வைகளையும் எதிர் கொள்ளாது உதறி எறியும் மனப்போக்கையும் வேண்டாத சுமையாக,குடிபெயர்ந்த இடத்திலும், தமிழ் டி.வி. அப்பளம், குமுதம், இதயம்  நல்லெண்ணெய் போல் இக்கசடுகளையும் இவர்கள் சுமந்து திரிவதும் எனக்கு வருத்தம் தந்தன.  நாடு இழந்தும், மண் இழந்தும், அன்னிய கலாசாரம் சூழ்ந்தும், சாதீய கசடுகள் இவர்களை அட்டையாக ஒட்டிக்கொண்டுள்ளது. கழன்று விழுவதாகக் காணோம்.

என்னைப்பற்றி ஞானம் லம்பேர்ட் கொடுத்த அறிமுகம், எனக்கு வியப்பாக இருந்தது. தமிழ் நாட்டிலேயே யாரும் அறிய விரும்பாத என்னைப்பற்றி இவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாரா! என்று. அடுத்து நான் பேசியபோது, " நாம் கலந்து உரையாடுவோம். என்னைப்பற்றி நீங்களோ, உங்களைப்பற்றி நானோ எவ்வளவு அறிந்துள்ளோம் என்பது தெரியாது. உங்கள் கேள்விகளுக்கெல்லாம், நான் உடனுக்குடன் பதிலளித்துவிடுவேன் என்று சொல்ல முடியாது. காரணம், பதில் இருந்தாலும், அது இப்போதே, இங்கேயே எனக்குத் தோன்றாது போகலாம். கூட்டம் முடிந்ததும், அல்லது வேறு எப்போதோ, நாளையோ, அடுத்த வருடமோ தோன்றலாம். தோன்றாது போகலாம். பதில் எனக்குத் தெரியாது கூடப்போகலாம். இதற்கு அர்த்தம் ஒருவர் சரி என்றோ, இன்னொருவர் தவறு என்றோ ஆகிவிடாது. பதில் உங்களில் யாரிடமிருந்தாவது கூட வரலாம். ஆக, ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல, நாம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வோம். கேள்விகளைக் கேட்டுக்கொள்வோம். எல்லோரும் சேர்ந்தே பதில்களைக் காண்போம் என்று சொன்னதாகத் தான் ஞாபகம். இதைத் தான், டி. செ. தமிழன், ¡பொழிப்புரை" என்று சொல்லியிருக்கிறார். அவர் அன்று நடந்ததைச் சரியாகத்தான் பதிவு செய்துள்ளார் என சுமதி ரூபனும் சான்றுப் பத்திரம் வழங்கியுள்ளார். இப் பொய்யாடலின், திருகலின் பின்னுள்ள  நோக்கமும் முன் தீர்மானங்களும் ,இருவரின் மன அமைப்பும் என்னவாக இருக்கும்.?

முதலில் தொடங்கும் போதே, இருவருமே முன் கூட்டிய வெறுப்புடனும் ஒரு வித இளக்காரத்துடனும் தான் தம் எதிர்வினைகளைத் தொடங்குகின்றனர். முன் பின் அறியாத என்னுடன் இவர்கள் இத்தகைய உறவு கொள்வதற்கான காரணத்தை முன் சொன்ன சுமையைத்தான் காரணமாகச் சொல்ல வேண்டுமா? இப்படிப்பட்ட மன நிலைகளைத் தாம் கொண்டு இவர்கள் தம்மைத்தான் இழிவு படுத்திக்கொள்கிறார்கள். சாணி எறிபவன் மனத்தில் தானே முதலில் படியும்.பின் தேடும் கண்களில்,  பின் அவர்கள் கைகளில். கடைசியில் தானே அவர்கள் எதிரிகள் மீது. 

வந்திருக்கும் புதியவரைப்பற்றி கலந்துரையாடலில் அறிய விரும்புவது நியாயம், இயல்பு. அதை விட்டு, "ஈழத்தைப்பற்றி என்ன மதிப்பீட்டை இவர் வைத்துள்ளார்? அங்கே (கனடாவில்) ஏதாவது இதைப்பற்றி கேள்விகள் கேட்பார்களே என்று மனச்சாட்சி உறுத்த கொஞ்சம் ஹோம் வொர்க் செய்து வருவார்கள்" என்று தம் நம்பிக்கையை, எதிர்பார்ப்பைச் சொல்கிறார் டி.செ.தமிழன். ஈழத்தமிழ் எழுத்தைப் பற்றி கேள்வி கேட்பார்களே என்று தயார் செய்து கொண்டு வரும் மனிதர் அந்த ஈழத்து இலக்கியம் பற்றி என்ன இழவு மதிப்பு வைத்திருந்தால் தான் என்ன, வைத்திருக்காவிட்டால் என்ன, அது என்ன சுண்டைக்காய்க்கு உதவும்? என்று டி..செ.தமிழன் தனக்குள் கேட்டுக் கொண்டிருக்கவேண்டும். அது தான் சுய கெளரவம் உள்ள விஷயம். டி. செ. தமிழன் அந்த கூட்டத்திற்கு வந்த காரணங்கள் ஒவ்வொன்றும் அபஸ்வரங்களாகவே ஒலிக்கின்றன. அவை சரியானவே என்று சுமதி அம்மையாரும் ட்.செ.தமிழனுக்கு ஒத்து ஊதுகிறார். வில்லுப்பாட்டில், ¡ஆமாம், ஆமாம்¡ என்று சொல்ல இருவர் இல்லாவிட்டால் சுவாரஸ்யமாக இராது. புரிசை நடேசத்தம்பிரானின்கூத்தை நான் முதலில் கண்டது, தில்லியில், 1965-66 களில். அந்த நாள் மாலை ஒரு மணி நேர அனுபவம் மாத்திரமே எனக்கு அதன் தனித்துவத்தையும், வீர்யத்தையும் அறிந்து கொள்ள போதுமானதாக இருந்தது.  என் கலைகள் பற்றிய பார்வைகள் என் சொந்த அனுபவங்களால் மாத்திரமே ஆனவை.இது அப்போதே பதிவு செய்யப்பட்டு, ந.முத்து சாமியையும் தொற்றியது.

சுமார் பத்து ஆண்டுகள் முன்பு வரை, கூத்து, தம்பிரான்கள் பற்றிய அறிமுகத்திற்கும் , பின் அவர் தான் எழுதும் நாடகங்கள் பற்றிய ஆலோசனைகளுக்கும் என்னைத்தான் காரணஸ்தனாகச் சொல்வது அவர் வழக்கம். இப்போதெல்லாம், மறதி அவரை ஆட்கொண்டுள்ளது, தமிழகத்திற்கே பழக்கமாகியுள்ள அரசியல் . தமிழ் எழுத்தாளர்களும் இதன் உபயோகம் கண்டு, இக்குணத்தைச் சிக்கெனப்பற்றி யுள்ளார்கள். தெருக்கூத்து பற்றியும், தம்பிரான்கள் பற்றியுமான என் ரசனைகள் என என் எழுத்துக்கள் பற்றிச் சொல்வது ஒன்றைப்பற்றிப் பேசும்முன் எதும் முதலில் தெரிந்துகொண்டு பேசவேண்டும் என்னும் அடிப்படை தர்மங்கள் கூட இல்லாது தங்கள் அறியாமையிலேயே செளகர்யம் காண்பவர்களிடம் என்னை நிருபித்துக்கொள்ளும் அவசியம் எனக்கு என்ன? கருஞ்சுழியின் முக்கியத்துவம் பற்றி அதன் முதல் மேடையேற்றத்தின் பின் நான் அது பற்றி Indian Express-ன் Sunday Magazine section-ல் ஒரு daily paper-ன் அரைப்பக்கத்துக்கு விரிவாக பாராட்டி எழுதியது இந்தியா முழுதும் உள்ள 14- editions களிலும் வெளிவந்துள்ளது. கருஞ்சுழி நாடகத்தை இந்தியா முழுதும் ஐரோப்பிய கலை விழாக்களிலும் எடுத்துச் செல்ல உதவியுள்ளதை கருஞ்சுழி ஆறுமுகத்திடமிருந்தே டி.செ.தமிழன் அறிந்து கொள்ளட்டும்.  நான் அன்றைய சந்திப்பில் பேசியது நவீன நாடகம் என்று சொல்லி,  நாடகமும் இல்லாத, கூத்தும் இல்லாத, ஒரு கூத்தடிப்பைப்பற்றி. இது கலைத்தரம் பற்றிய, நாடகம் என்னும்  நிகழ் கலை பற்றிய எனது கருத்து. கூத்தையும் தம்பிரான்களையும் பற்றி நான் பெருமைப்பட்டுப் பேசுவதில்  நாடகங்கள் பற்றிய என் ஆழ்ந்த அனுபவங்களையும் அறிவையும் காணும் டி.செ. தமிழன், அதை நவீன நாடகம் என்று சொல்லி நிகழ்த்தப்படும் தரமற்றதை  நான் கண்டனம் செய்தால் அதில் டி.செ.தமிழன் காண்பது, என் சாதீய பின்புலம்.  எனக்குத் தெரிந்ததை நான் காண்கிறேன். அவருக்குத் தெரிந்ததை அவர் காண்கிறார். என் கலைப்பார்வை சாதீயத்தை ஒதுக்குகிறது. டி.செ.தமிழனின் சாதீயப் பார்வை, கலையை ஒதுக்குகிறது என்பது தெளிவு. எங்கு அவருக்கு உவக்காத கருத்தை நான் முன் வைக்கிறேனோ, அங்கு அவருக்கு அது சாதீய பின்புலமாகிப்போவதற்கான காரணத்தை டி.. செ.தமிழனும்  இன்னும் அவர் போன்று பேசுபவர்களும் தம் அறிவார்த்த நபும்ஸகத்திலேயே காணவேண்டும். இதே டி.செ. தமிழன், வெளி  நாட்டு நிறுவனங்களின் நிதி உதவி பெறும் நாடக நிகழ்வுகள் அத்தனையும் அழிவை நோக்கியே செல்வதாக மு.ராமசாமி சொன்னதாக அங்கீகாரத்துடன் சொல்லும் டி.செ.தமிழன், நான் சொன்னால் அது சாதீய பின்புலமாவது எப்படி? 

வ,அ,ராசரத்தினம், கலாநிதி கைலாசபதி பற்றியெல்லாம் நான் எழுதத்தொடங்கியது, 1962-ல் என்று என் ஞாபகம். அப்போது டி.செ.தமிழனும், சுமதி ரூபனும் இன்னும்  இப்பூதலத்தில் அவதாரம் கொள்ளவில்லை.என்று நம்புகிறேன். கடைசியாக போன வருடமோ என்னவோ, நான் எழுதியது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கவிதைத்தொகுப்பைப் பற்றி. அதற்கு முன் பா.அகிலன் பற்றி, சிவரமணி பற்றி. இடையில் நான் ஈழத்தமிழ் எழுத்து பற்றி, ஈழத்தமிழர் பற்றி எழுதியுள்ளது, வேறு எந்த தமிழக, ஈழத்தமிழ் எழுத்தாளரும் எழுதியதை விட அதிகமாகவே இருக்கும். சாதித்துவேஷாகள் என்றும் வாழ்வது இருட்டு உலகில் தான். அவர்களோடு நான் வாதிட வேண்டியது இல்லை. 

அடுத்து, சுமதி ரூபன் அம்மையார் கூறுகிறார், விருது பற்றி  தொலைபேசியில் சொல்லக்கேட்டதும்  நான் ¡புளகாங்கிதம்¡ அடைந்து விட்டதாக. அவருக்கு தூர த்ருஷ்டி வரமாகக் கிடைத்துள்ளதா, அல்லது, இப்படி வர்ணிப்பது அவர் வாதத்திற்கும், இளக்காரத்திற்கும் உதவும் என்றா? எனக்கு விருது அளிக்கப்பட்டது, தமிழக எழுத்தாளர் பலருக்கு உவக்காதது போலவே, இவருக்கும் உவக்காது இருந்தால்தான் இப்படிக் கற்பித்துக் கொள்வதற்கு இவருக்கு நியாயம் உண்டு. இதே மனம் தான், ஜெயமோகன் ¡புளகாங்கிதம்¡ அடைந்ததாக வர்ணிக்க இவர் ஆசைப்படுவதும். இப்படிப் பேச இவருக்கு என்ன ஆதாரம்? என் வார்த்தைகளில், என் எழுத்தில், என் நடத்தையில், மெய்ப்பாடுகளில்? ஆதாரம் அவர் மனத்தில் தான் என்று நினைக்கிறேன்.இதை நான் குறிப்பிடக்காரணம், டி.செ.தமிழனின் திருகல்களையெல்லாம், ¡சரியான பதிவு¡ என்று சா¡ன்றுப்பத்திரம் வழங்கும் போது, சுமதி ரூபனின் மன அவசங்கள் வெளிப்படுகின்றன. 

விருது  எனக்கு மகிழ்ச்சியையும், வியப்பையும் அளித்தது உண்மை. அதை நான் ஒப்புக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது  புல்லரிப்பு அல்ல. அந்த பருவத்தை நான் தாண்டி விட்டேன்.  பெண்ணீய கவிஞர்களின் சமீபத்திய கவிதைகளில் உள்ள மொழிப்பிரயோகம் பற்றிக் கேட்கப்பட்டது. இவை எனக்கு சம்மதமில்லை. எனக்கு உவக்காதவை. ஆயினும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதற்கான வாத்ங்களையும் வைக்கிறார்கள், "எங்கள் வேதனையைச் சொல்ல,திடுக்கிட வைக்க பச்சையாகத்தான் சொல்ல வேண்டும் "என்கிறார்கள். ஆக வாதம் விஷயம் பற்றி அல்ல. மொழி பற்றியது. இப்போது அவர்களுக்கு உள்ள ஆவேசமும், உணர்ச்சி வேகமும் இப்படி எழுதத்தூண்டுகிறது, இவை அடங்கியதும் இவர்கள் இம்மொழியைப் பயன்படுத்த மாட்டார்கள். அப்போது, இம்மொழியின் அதிர்ச்சி குணம் மறையும். அல்லது இவர்கள் இதைக் கைவிட்டிருப்பார்கள்.அவரவர் பார்வைகள் அவரவர்க்கு. அவர்கள் என்னையோ, நான் அவர்களையோ மதம் மாற்றும் அவசியம் இல்லை. கட்டாயம் ஏதும் கிடையாது. 

அவர்கள் என்னதான் வாதாடினாலும், அவர்களுக்கே இவை ஆபாசமாகத்தான் இருக்கும் என்பது என் எண்ணம். அதனால் தான் "உங்களுக்கு என்ன தோன்றுகிறது? என்று கேட்டேன். "எனக்கு ஆபாசமாக் இல்லை" என்றார், சுமதி ரூபன். வீம்புக்குத்தான் இப்படி சொல்கிறார் என்று எனக்குத் தோன்றியது. இப்போதும் என் எண்ணம் அதுவே. ஆனால் இதற்கு மேல் வாதமிட ஏதும் இல்லை. அதனால் தான் , ¡சரி அப்படி என்றால், சரி¡ என்றேன். ¡ஆபாசம் இல்லை என நீங்கள் நினைத்தால், அந்தக் கவிதைகளில் ஒன்றிரண்டைச் சொல்லுங்கள் " என்று கேட்டிருக்கலாம். அவர் நாணி முகம் சிவந்து, உடல் நெளிய மிகவும் அவஸ்தைப்பட்டிருப்பார் என்றே நினைக்கிறேன். இல்லை எனில் வீம்புக்கு கவிதை வரிகள் சிலவற்றைச் சொல்லியிருந்தால், அக்கணங்களை அவர் வெகு நாட்கள் மறக்க முடிந்திருக்காது. "இதெல்லாம் மனித உறுப்புக்கள் தானே, ஒன்று போல் மற்றொன்று" என  பெண்ணியமும் முற்போக்கும் கலந்த ஒருவர் எழுதி வாதிடினார். அப்போது அவர் தலை மட்டும் தெரிய உடை போர்த்தித்தான் வந்திருந்தார். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்க எனக்குத்தான் மனமில்லை. 

இதெல்லாம் சரி, இவர்கள் பார்வையை சரி என நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறார்கள்.? நான் இவர்களிடம் அதை எதிர்பார்க்கவில்லையே. ஒப்புக்கொள்ளாவிட்டால் அது  நழுவல் ஆகிவிடுமா? ஜே.பி. சாணக்யா எழுதுகிறாரே, அது இலக்கியமாகியுள்ளதே. அதை ஒப்புக்கொள்கிறீர்கள், இதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள்? என்று ஒரு கேள்வி. நான் சாணக்கியாவின் கதையைப் படிக்கவில்லை. அது இலக்கியம், இலக்கியம் இல்லை என்று ஏதும் சொன்னதில்லை. அதை ஏற்பதும் ஏற்காததுமான பிரச்னையே இல்லை. இங்கு ஒரு தவறு நிகழ்ந்துள்ளது.  பெண்ணிய வாதிகள் தாம் செய்வதற்கெல்லாம் அங்கீகாரம் பெறத்துடிக்கிறார்கள். கிடைக்காத பட்சத்தில் என்னென்னவெல்லாமோ விதண்டாவாதம் செய்கிறார்கள். பூமணியின், பெருமாள் முருகனின் எழுத்துக்களில் ஒரிரு சொற்கள் வருகின்றனதான். ஆனால் அவை விஸ்தாரமான் பெரிய படைப்பில் வரும் ஒரிரு சொற்கள். பெரும்பாலோர் இவற்றைக் கவனித்துக் கூட இருக்கமாட்டார்கள். நான் இவற்றைக் குறிப்பிடுவது அவர்களுக்கு வியப்பாகக்கூட இருக்கும். ஆனால் இவற்றை அவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. ஏதும் சித்தாந்த லேபிள் ஒட்டுவதில்லை. ஆனால், சாரு நிவெதிதா போன்றவர்கள் எழுத்தின் அடையாளமே இச்சொல்லாடல்கள் தான். ஆனால் அவர்கள் இவற்றை ஏதும் ஆணாதிக்க கொள்கை முழக்கமாக வைப்பதில்லை. இது அவர்கள் தனித்வம். சுதந்திரம் என்பார்கள். இவற்றை ஏற்பவர்கள் எதும் கொடி ஏந்தி முழக்கமிடுவதில்லை. ஏற்காதவர்கள் இவற்றை தனி மனித வக்கிரம் என்று ஒதுக்கிவிடுவார்கள்.  ஆனால் பெண்ணிய வாதிகளிடம் இது சித்தாந்தமாக வெளிப்படுகிறது. அவர்கள் இயக்கத்தின் manifesto வாகவே முன் வைக்கப்படுக்கிறது. அவர்கள் எழுத்தின் அடையாளமாகிறது.  இதை தனி மனித வக்கிரம் என்று யாரும் சொல்வதில்லை. அதனால் தான் தனி மனித வக்கிரம் எனப்படுவது உதாசீனப்படுத்தப்படுகிறது. ஆனால் சித்தாந்தம் கட்சியாடலுக்கு உள்ளாகிறது. சுமதி ரூபனும், டி.செ.தமிழனும் என் மீது ஒரு குற்றச்சாட்டை வீசியுள்ளனர்.கனடாவில் ஒன்றும், தமிழகத்தில் வேறொன்றுமாக நான் பேசியுள்ளதாக. இதை அவர்கள் நிரூபிக்க ஒரு அரிய வாய்ப்பைத் தரலாம் என்று எண்ணுகிறேன். அன்றைய நிகழ்வுகளின் பேச்சுக்கள், பரிமாறல்கள் பதிவாவதை நான் கவனித்தேன். அதை தருவதாக டி.செ.தமிழன் உறுதி அளித்துள்ளார்.  ஓலி நாடா வேண்டாம். அவரும் சுமதி ரூபனும் சேர்ந்து அப்பதிவினை எழுத்தில் வடித்து எனக்கு மின் அஞசல் மூலம் அனுப்பமுடியுமானால், அதை ஒரு முற்றுப்புள்ளி பிசகாது வெளியிட செளகர்யமாயிருக்கும். அவர்கள் தயை செய்ய வேண்டும். இப்போதுள்ள அவர்கள் எதிர்வினைகளில் உள்ளது போல திருகல்களை ஒலி நாடாவிலிருந்து எழுத்து வடிவத்துக்கு மாற்றும் போது செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.   

பதிவுகள் ஆகஸ்ட் 2004; இதழ் 56


சுமதிக்கு..

- ஜெயமோகன் -

2004இல் எழுத்தாளரும் , கலையிலக்கிய விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்களது கனடா விஜயத்தையொட்டி டி.செ.தமிழன் 'பதிவுகள்' இணைய இதழின் விவாதத்தளத்தில் தனது கருத்துகளைப் பதிவுசெய்ததைத் தொடர்ந்து 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு விவாதமே நடந்தது. அதில் எழுத்தாளர்களான ஜெயமோகன், சுமதி ரூபன், மாலன், சூரியா ஆகியவர்களுடன் வெங்கட் சாமிநாதனும் கலந்து கொண்டார். ஒரு பதிவுக்காக அவ்விவாதத்தையொட்டிப் பதிவுகளில் வெளிவந்த கட்டுரைகளை  மீள்பதிவு செய்கின்றோம். - பதிவுகள் 1] நான் ஈழ எழுத்தாளர் அனைவரும் என்று சொல்லவில்லை . வலிமையான ஒரு சாரார் என்றேன். அதை ஈழ எழுத்துக்கள் குறித்து இணையத்திலும் இதழ்களிலும் பேசப்படும் விஷயங்கள் மூலமே அறிந்தேன். ஈழ எழுத்துக்கள் பற்றியும் ஈழ வாசகர் பற்றியும் பெருமதிப்பும் கவனமும் கொண்டவன், தொடர்ந்து எழுதிவருபவன் என என்னை பலர் அறிவார்கள். முக்கியமான ஈழ படைப்புகள் பலவற்றை தமிழ்நாட்டில் விரிவாக அறிமுகம் செய்தவன் நான். ஆனால் இம்மனப்பதிவு எனக்கு மிக வலிமையாகவே இருக்கிறது. படைப்பை ஒரு கணிசமான தரப்பு படைப்பாக பார்க்க மறுக்கிறது என்ற எண்ணம் இம்மாதிரி விமரிசனம் செய்தால் யாருக்காவது கோபம் வந்தால் எனக்கு ஒரு கவலையுமில்லை. என் மீது இனிமேல்தானா ஜனங்களுக்கு கோபம் வரவேணும். எவரது கோபமும் என்னை தீண்டாது. சிறிய அளவில்கூட பத்து நிமிடம் கூட என்னை பாதிக்காது. பாதித்தால் நான் இதற்கு முன்னரே எழுத்தை நிறுத்தியிருக்கவேண்டியிருக்கும் இல்லையா? இந்த அளவுக்கு வசை தாங்கி எவராவது இன்று தமிழில் எழுதுகிறார்களா? நான் கலைஞன் என நானறிவேன். அது போதும் எனக்கு.  என்னை நிலைகுலையச்செய்வது கோபங்களல்ல. ஏழாம் உலகம் போல ஒன்றை எழுதிய பிறகு வரும் ஆழமான வெறுமைதான். அதை விட்டு மீளாவே போராடிக் கொண்டிருகிறேன்

2] ஈழத்தில் முகம் தெரியா மனிதர்களிடமிருந்து எனக்கு வாரம் ஒரு கடிதமாவது வருகிறது. நான் உச்சரிக்க முடியாத மூலைகளில், ஏன் பதுங்குகுழிகளில் என் நூல்கள் படிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட தகவல்கள் வருகின்றன. மிகக்கடுமையான போர்களின்போதுகூட என் நூல்கள் பலவழிகளில் ஈழத்துக்குச் சென்றுள்ளன. நான் ஒருபோதும் சந்தித்திராத - ஒருவேளை சந்திக்கவே முடியாத-- மாமனிதர்கள் என் வாசகர்களாக இருக்கிறார்கள். ஆம், அது குறித்து எனக்கு 'புளகாங்கிதம்' கண்டிப்பாக உண்டு. அதை எங்கும் சொல்ல தயக்கமில்லை.

பதிவுகள் ஆகஸ்ட் 2004; இதழ் 56


திரு. வெங்கட்சாமிநாதன், ஜெயமோகன் அவர்களுக்கு!

- சுமதி ரூபன் -

2004இல் எழுத்தாளரும் , கலையிலக்கிய விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்களது கனடா விஜயத்தையொட்டி டி.செ.தமிழன் 'பதிவுகள்' இணைய இதழின் விவாதத்தளத்தில் தனது கருத்துகளைப் பதிவுசெய்ததைத் தொடர்ந்து 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு விவாதமே நடந்தது. அதில் எழுத்தாளர்களான ஜெயமோகன், சுமதி ரூபன், மாலன், சூரியா ஆகியவர்களுடன் வெங்கட் சாமிநாதனும் கலந்து கொண்டார். ஒரு பதிவுக்காக அவ்விவாதத்தையொட்டிப் பதிவுகளில் வெளிவந்த கட்டுரைகளை  மீள்பதிவு செய்கின்றோம். - பதிவுகள் கடந்த சில வாரங்களாக பதிவுகள் இணையத்தளத்தின் மூலம் எமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு வருகின்றோம். இந்த எதிர்வினைகளை நாம் ஊன்றிக் கவனிப்போம் ஆனால் ஒரு விளக்கமற்ற தன்மையால் எங்கள் கருத்துக்கள் எங்கெல்லாமோ பரந்து சென்று காரசாரமான வார்த்தைப் பிரயோகத்திற்குள் எங்களைத் தள்ளி விட்டிருக்கின்றது. முதலின் ஜெயமோகன் அவர்கள் எனக்காக பதிவு செய்த எதிர்வினையை எடுத்துக்கொள்வோம் ஆனால், திரு.வெங்கட்சாமிநாதன் கனடா வந்திருந்த போது நடாத்தப்பட்ட கூட்டத்தில் இலக்கிய விரும்பிகளின் கேள்விகளிற்கு அவர் பதில் சொல்லாது நழுவி பலரின் சினத்திற்கு ஆளானதை டி.சே. தமிழன் பதிவுகளில் குறிப்பிட்டமையும் அவர் வெங்கட்சாமிநாதனைத் தாக்குகின்றார் என்பதால் ஜெயமோகன் தனது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட போது டி.சே.தமிழன் என்று குறிப்பிடாது ஈழத்தமிழர் என்று பொதுவாகக் குறிப்பிட்டு பல ஈழத்தமிழரின் சினத்திற்கு ஆளானதும், என்னை மிகவும் கவர்ந்த தமிழ் இலக்கியவாதியான ஜெயமோகன் அவர்கள் ஈழத்து நண்பர்கள் மேல் நன்மதிப்பு வைத்திருக்கின்றார் என்ற நம்பிக்கையில், அவர் ஈழத்தமிழர், ஈழத்தமிழர் என்று திரும்பத் திரும்பக் கூறியதைத் தவறு என்று சுட்டிக்காட்டும் வகையில் எனது முதல் எதிர்வினை ஜெயமோகனின்கு விலாசப்படுத்தியிருந்தேன். மாறாக நான் டி.சே.தமிழனிற்கு வக்காளத்து வாங்கவில்லை. டி.சே.தமிழன் 'வெங்கட்சாமிநாதன் அவர்களின் சாதியப்பின்புலன் இதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும"; என்று தனது எழுத்தில் குறிப்பிட்டதை நான் ஒரு போதும் ஏற்கவில்லை.. (முடிந்தால் எனது எதிர்வினையை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்) அது அவரின் தனிப்பட்ட கருத்து. அதற்காக ஜெயமோகன் ஈழத்தமிழர் எல்லோரிற்கும் அப்படியான கருத்து இருப்பதான நினைத்துவிடக்கூடாது என்பது தான் என் வாதம். மேலும் வெங்கட்சாமிநாதன் அவர்கள் கனடாவிலிருந்து தொலைபேசி மூலம் அவரிற்கு விருது வழங்க இருப்பதாக தகவல் கிடைத்த போது 'புளகாங்கிதம்" அடைந்தார் என்று நான் குறிப்பிட்டதை தவறு என்று ஒப்புக்கொள்கின்றேன். அவர் புளகாங்கிதம் அடையவில்லை மகிழ்ச்சி அடைந்தார். அப்படித்தான் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இது எனது தவறுதான். அதே போல் 'ஈழத்தில் எங்கோ ஒரு மூலையில் தனது நாவல்களை எடுத்து விமர்சனம் செய்தார்கள் என்று கேள்விப்பட்ட போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்" என்று ஜெயமோகன் கனடாவில் உரையாற்றியபோது குறிப்பிட்டிருந்தார். ஜெயமோகன் அவர்களும் புளகாங்கிதம் அடையவில்லை மகிழ்ச்சிதான் அடைந்தார். இதுவும் எனது தவறுதான் இதை ஜெயமோகன் மறுக்க மாட்டார் என்றே நம்புகின்றேன். 

அடுத்து பெண்களின் எழுத்து பற்றி எனது கேள்விக்கு நல்ல அனுபவம் வாய்ந்த ஒரு விமர்சகரிடமிருந்து அவருடைய கருத்தை நான் அறிந்து கொள்ள ஆசைப்பட்டது உண்மை. அதற்கான பெண்களின் எழுத்தில் இருக்கும் எனது தனிப்பட்ட ஆணித்தரமான கருத்தை நான் வேறு ஒருவரின் விமர்சனத்தைக் கேட்டு மாற்றிக்கொள்ளும் அளவிற்கு கோழை அல்ல நான். வெங்கட்சாமிநாதன் அவர்கள் கூறியது போல் அந்தக் கவிதைகளின் ஒன்றிரண்டைக் கூறுங்கள் என்று தாங்கள் கேட்டிருந்தால் நான் தயங்காமல் கூறியிருப்பேன். தங்களுக்கு எப்படி புளங்காகிதம் அடையும் வயது கடந்து விட்டதோ அதே போல் எனக்கும் நாணிக் கோணி முகம் சிவந்து நெளியும்; வயது கடந்து விட்டது. நல்ல இலக்கியத்தை நேசிப்பவள் நான். பாலியல் வார்த்தைகளை வேண்டுமென்றே தமது படைப்புக்குள் திணிப்பவர்களை என்னால் அடையாளம் காண முடியும். அதே போல் காத்திரமான படைப்புகளுக்குள் வரும் பாலியல் வார்த்தைகள் என்னை ஒரு போதும் சங்கடப்படுத்தியதில்லை.

மேலும் வெங்கட்சாமிநாதனை தனியே சந்தித்து உரையாடிய கனேடிய தமிழ் இலக்கியவாதிகள் பலர் அவரிடம் நல்ல பல கருத்துக்கள் இருக்கின்றன அவற்றை நாங்கள் தனியாக அவருடன் உரையாடும் போது பகிர்ந்து கொண்டோம் என்று சொன்ன போது எனக்கு மிகவும் வேதனையான இருந்தது. சிலவாரங்கள் மட்டும் கனடாவில் கழிக்க வந்திருக்கும் வெங்கட்சாமிநாதன் அவர்களை இலக்கியத்தில் நாட்டமுள்ள ஒவ்வொருத்தரும் தனியாகச் சந்திப்பது சாத்தியமாகாது. நான் முயன்று பார்த்தேன் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இருந்தும் இலக்கிய மாலைப் பொழுதிலும், பிரத்தேயகமாகச் சிலரை அழைத்துக்கொடுக்கப்பட்ட விருந்திலும் வெங்கட்சாமிநாதன் அதிகம் பேசவில்லை. இது எனக்கு முற்று முழுதான ஏமாற்றமாகவே இருந்தது. ஒரு நல்ல இலக்கியவாதியையோ, விமர்சகரையோ சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் நல்ல பல கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் நிறைவேறாமல் போய்விட்டது.

வெறுமனே சாப்பிட்டு, குடித்து, வம்பளந்து போவதை நான் விரும்பவில்லை. அதற்காக நான் என் நண்பர்களுடன் தனியாக நிறையவே சந்தித்துக் கொள்வதுண்டு. என் மனதுள் இருக்கும் பெண்ணியம் சம்பந்தமான கேள்விகளைப் பண்பட்ட இலக்கிய விமர்சகர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள முயலும் போது கனேடிய முற்போக்கு ஆண்கள் பலர் முகம் சுளிப்பது தெரிந்தும் அவர்களை அசட்டை செய்யும் பக்குவம் எனக்குள் வந்து விட்டது. இது இப்படி இருக்க பதிவுகளில் இடம் பெற்ற எதிர்வினைகளைத் தவறாகப் புரிந்து கொண்டு வெங்கட்சாமிநாதன் அவர்கள் தனது அனுபவம் வயது என்பனவற்றைக் கருத்தில் கொள்ளாது. நிதானம் இழந்து மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் என்னைத் தாக்கியிருப்பது எனக்கு மனவருத்தத்தையே தருகின்றது. ஜெயமோகன் அவர்களை நல்ல ஒரு இலக்கியவாதியாகவும்,  நல்ல ஒரு நண்பனாகவுமே நான் எப்போதும் எண்ணிக்கொண்டிருக்கின்றேன். அவரது ரப்பரில் இருந்து காடு, ஏழாம் உலகம் வரை வியந்து படித்தவள் நான். ஒரு சில ஈழத்தமிழரின் கருத்துக்களை கேட்டு விட்டு ஒட்டு மொத்த ஈழத்தமிழரையும் விமர்சிக்காதீர்கள். என்பதைக் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 

பதிவுகள் ஆகஸ்ட் 2004; இதழ் 56


வெ.சா.வுக்கான கேள்விகள்!

- மாலன் -

2004இல் எழுத்தாளரும் , கலையிலக்கிய விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்களது கனடா விஜயத்தையொட்டி டி.செ.தமிழன் 'பதிவுகள்' இணைய இதழின் விவாதத்தளத்தில் தனது கருத்துகளைப் பதிவுசெய்ததைத் தொடர்ந்து 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு விவாதமே நடந்தது. அதில் எழுத்தாளர்களான ஜெயமோகன், சுமதி ரூபன், மாலன், சூரியா ஆகியவர்களுடன் வெங்கட் சாமிநாதனும் கலந்து கொண்டார். ஒரு பதிவுக்காக அவ்விவாதத்தையொட்டிப் பதிவுகளில் வெளிவந்த கட்டுரைகளை  மீள்பதிவு செய்கின்றோம். - பதிவுகள் வெ.சாவின் எதிர்வினை படித்தேன். கனடா நிகழ்ச்சியில் என்ன நடந்தது அல்லது என்ன பேசப்பட்டது என்பது தெரியாத நிலையில் அதைக் குறித்துச் சொல்ல எனக்கு ஏதுமில்லை. ஆனால் அவர் எதிர்வினை சில கேள்விகளை எழுப்புகிறது. ஓர் இலக்கிய மாணவனாக அவற்றிற்கான விடைகளை வெ.சாவிடமிருந்து அறிந்து கொள்ள விரும்புகிறேன். "இப்படிப்பட்ட மன நிலைகளைத் தாம் கொண்டு இவர்கள் தம்மைத்தான் இழிவு படுத்திக்கொள்கிறார்கள். சாணி எறிபவன் மனத்தில் தானே முதலில் படியும்.பின் தேடும் கண்களில்,  பின் அவர்கள் கைகளில். கடைசியிவ் தானே அவர்கள் எதிரிகள் மீது."- இது வெ.சா. என் கேள்வி: எழுபதுகளில் வெ.சா. எழுதி வெளியிட்ட இலக்கிய ஊழல்கள் நூலையும் இதே போல புரிந்து கொள்ளலாமா? அல்லது இது வெ.சா பற்றிய விமர்சனங்களுக்கு மட்டும்தான் பொருந்துமா?

"முன் கூட்டிய வெறுப்புடனும் ஒரு வித இளக்காரத்துடனும் தான் தம் எதிர்வினைகளைத் தொடங்குகின்றனர்." - இது வெ.சா. என் கேள்வி: கைலாசபதி உள்ளிட்ட இடதுசாரி இலக்கியவாதிகளையும் பாரதிதாசன் உள்ளிட்ட திராவிட இயக்க இலக்கியவாதிகளையும் குறித்த வெ.சாவின் விமர்சனங்களில் இந்த முன்கூட்டிய வெறுப்பும் இளக்காரமும் தவிர்க்கப்பட்டிருக்கிறதா?

"வாதம் விஷயம் பற்றி அல்ல. மொழி பற்றியது". -இது வெ.சா. என் கேள்வி: மொழிக்கும் படைப்பாளிக்கும் உள்ள உறவைப் போன்று, மொழிக்கும் சமூகத்திற்கும்  இடையே ஓர் உறவு உள்ளதல்லவா? அந்த உறவுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதா? அல்லது சார்ந்து நிற்பதா? (complimentary) ஒரு படைப்பாளி தன் படைப்புக்கான மொழியைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளும் போது அது சமூகத்தின் மீது, குறைந்த பட்சம் தன் வாசகன் மீது, ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அக்கறை கொள்ள வேண்டுமா? அல்லது அதைப் பற்றிய உணர்வே (பிரஞ்கையே) இல்லாமல் இருக்க வேண்டுமா?

"இங்கு ஒரு தவறு நிகழ்ந்துள்ளது.  பெண்ணிய வாதிகள் தாம் செய்வதற்கெல்லாம் அங்கீகாரம் பெறத்துடிக்கிறார்கள். கிடைக்காத பட்சத்தில் என்னென்னவெல்லாமோ விதண்டாவாதம் செய்கிறார்கள்." - இது வெ.சா. என் கேள்வி: இது  70களிலிருந்து இலக்கியச்சிற்றேடுகள் உருவாக்கிய கலாசாரமல்லவா? அதைப் பெண்ணியவாதிகள் பின்பற்றத் தலைப்படும் போது அதில் என்ன பிழை காண்கிறார் வெ.சா?

கடைசியாக வெ.சா. தன் எதிர்வினையில் சொல்லாத ஒன்றைக் குறித்தும் ஓர் கேள்வி: தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழியைக் குறித்து வெ.சா. எப்போதாவது சிந்தித்திருக்கிறாரா?

அன்புடன்,
மாலன்

பதிவுகள் ஆகஸ்ட் 2004; இதழ் 56


சில மனப்பதிவுகளும்!  சில எதிர்வினைகளும்!

- சூரியா -

2004இல் எழுத்தாளரும் , கலையிலக்கிய விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்களது கனடா விஜயத்தையொட்டி டி.செ.தமிழன் 'பதிவுகள்' இணைய இதழின் விவாதத்தளத்தில் தனது கருத்துகளைப் பதிவுசெய்ததைத் தொடர்ந்து 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு விவாதமே நடந்தது. அதில் எழுத்தாளர்களான ஜெயமோகன், சுமதி ரூபன், மாலன், சூரியா ஆகியவர்களுடன் வெங்கட் சாமிநாதனும் கலந்து கொண்டார். ஒரு பதிவுக்காக அவ்விவாதத்தையொட்டிப் பதிவுகளில் வெளிவந்த கட்டுரைகளை  மீள்பதிவு செய்கின்றோம். - பதிவுகள் மாலன் எழுதிய சில கேள்விகள் கண்டேன். அவை கேள்விகள் அல்ல. கேள்வி வடிவில் அளிக்கப்பட்ட விஷமத்தனமான கரிப்புகள். இவற்றை மாலன் சில காலமாகவே வெளிபப்டுத்தி வந்திருக்கிறார். மாலனுக்கு என்னதான் வேணும்? என்ன பிரச்சினை அவருக்கு? சுந்தரராமசாமி சொன்னதுபோல இலக்கியம் பற்றியெல்லாம் இம்மாதிரி முடிவான கருத்துக்கள் சொல்ல மாலனுக்கு உள்ள தகுதிகள் என்ன அவர் எதையெல்லாம் எழுதி பேசி நிரூபித்திருக்கிறார் என்பதே முதல் கேள்வி. மாலன் ஒரு நல்ல எளிய வாச்காராக தன்னை முன்னிற்த்திக் கொள்ளவில்ல, ஒரு விமரிசகராஅ அல்லது இலக்கிய ஆளுமை 'மாதிரி' வெளிப்படுத்துகிறார் என்பதனால் தான் இப்படி கேட்கிறேன். இதே கேள்வியை இவரது கட்டுரைகளை படிக்கும் எவருமே கேட்டுக்கொள்வார் என்பதை மாலன் அறிவாரா? முதலில் இக்கட்டுரைகளை அதிகமாக எவரும் பெறுட்படுத்துவதில்லை என்பதனாலேயே இவர் சீரிய விவாதங்களில் நுழைந்து 'எனக்கு கேட்கமட்டும்தான் தெரியும்' பாணியில் கேட்டுக்கொண்டிருக்கிறார். 

இதுவரை இலக்கியம் என்று சொல்லப்பட்டு தேர்ந்த வாசகர் பல்லாயிரம் பேர் படிப்பதெல்லாம் குப்பை என்றும் கருணாநிதி சிவசங்கரி வகையறாக்கள் எழுதுவதே சமூக நோக்குள்ள பொக்கிஷம் என்றும் அவரது கோஷ்டியான ஆர் வெங்கடேஷ், பா ராகவன் , பாரதிபாலன் இன்னபிறர்தான் அமர இலக்கிய கர்த்தக்கள் என்றும் கருத மாலனுக்கு எல்லா உரிமையும் உண்டு. அதை அவர் விரிவாக நூல்கள் எழுதி நிறுவ முயலட்டுமே..... சிற்றிதழ் எழுத்தெல்லாம் புருடா என்ற தோரணையில் இம்மாதிரி கேள்விகள் கேட்டு ஏன் மெனக்கெட வேண்டும்?

இதை யார் சீரியஸாக பொருட்படுத்தப்போகிறார்கள்? 

பிரம்மராஜன் சொன்னது சரி என்றே எனக்கு படுகிறது. பெண் எழுத்தாளர்கள் பாலடையாளத்தை முன்னிறுத்துவதே இலக்கியம் என்று நம்பி எழுதுகிறார்கள். அதாவது பரபரப்புக்காக எழுதவில்லை என்று நம்பினால். இதிலே இரு தரப்பு இருக்கலாம். பெண் என்றால் அவளது யோனியும் முலையும்தான் என்று ஒருசாரார் சொல்லலாம். இல்லை அவளை மனிதாஅளுமையாக காண வேண்டும் என்று இன்னொரு சாரார் சொல்லலாம். இருதரப்புமே வாதிடலாம். இங்கே என்னவென்றால் இரண்டாவது தரப்பு பழைமைவாதிகள் , மக்குகள் என்றெல்லாம் வசைபாடப்படுகிறது. பெண்கள் எழுதினால் ஆகாஓகோ என்று சொல்லாதத அனைவருமே பிற்போக்கு முத்திரை குத்தப்படுகிறார்கள்.

துணிச்சலாக கருத்துசொல்பவரான ஜெயமோகனே இம்மாதிரி விஷயங்களில் மழுப்பும்போது [பார்க்க மரத்தடி பதில்கள்] பிரம்மராஜன் துணிவாக தெளிவாக சொல்லியிருப்பது நல்ல விசயம். 

அதற்கு நட்சத்திரன் அளித்த பதிலில் லதாவின் ஆங்கிலத்தை பழிசொல்வது சிறுபிள்ளைத்தனம். ஆங்கிலம் வாயால் பேசப்படும் ஊர்களில் உள்ள ஆங்கிலம் வேறு. படித்து எழுதும் ஊர்களில் உள்ள ஆங்கிலம் வேறு. ஆங்கிலம் அறிந்தவர்கள் இதை ஆங்கிலத்தின் ஒருவகை என்றே இன்று ஏற்கிறார்கள். இம்மாதிரி பம்மாத்துக்கள் மூலம் விவாதிப்பது அபத்தமான செயலே.

சுமதி சொன்னவற்றை ஏற்கிறேன். ஜெயமோகன் ஈழ எழுத்தாளர்கள் என்று சொல்லியிருக்கக் கூடாது. அது ஒரு மனப்பதிவே. அம்மனப்பதிவை அவருக்கு அளிக்க பல விஷயங்கள் உத்வியிருக்கலாம். அதே மனப்ப்திவு தமிழ் சூழல் சார்ந்தும் உருவாகலாமே.. 

பதிவுகள் ஆகஸ்ட் 2004; இதழ் 56 


வெ.சா. பற்றி தமிழனின் குறிப்பு...!

 - ஜெயமோகன் -

2004இல் எழுத்தாளரும் , கலையிலக்கிய விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்களது கனடா விஜயத்தையொட்டி டி.செ.தமிழன் 'பதிவுகள்' இணைய இதழின் விவாதத்தளத்தில் தனது கருத்துகளைப் பதிவுசெய்ததைத் தொடர்ந்து 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு விவாதமே நடந்தது. அதில் எழுத்தாளர்களான ஜெயமோகன், சுமதி ரூபன், மாலன், சூரியா ஆகியவர்களுடன் வெங்கட் சாமிநாதனும் கலந்து கொண்டார். ஒரு பதிவுக்காக அவ்விவாதத்தையொட்டிப் பதிவுகளில் வெளிவந்த கட்டுரைகளை  மீள்பதிவு செய்கின்றோம். - பதிவுகள் எதிராளியின் வாதங்களை தங்களுக்கு சாதகமாக திரித்துக் கொள்வதை ஓர் உத்தியாக இடதுசாரிகளில் ஒரு சாரார் கடைப்பிடிப்பதுண்டு. அவ்வுத்தி மூலமே தோற்கடிக்கப்பட்ட மனிதர் வெசா. அதே உத்தி தொடர்வதையே தமிழனின் குறிப்புகள் காட்டுகின்றன. ஒரு பெரிய சிந்தனையாளாராக மலர்ந்திருக்க வேண்டிய வெ சாவை குறுக்கியது எத்ரிகளின் இந்த உத்தியே. உதாரணாமாக வெசா 'உள்வட்ட சித்தாந்தம்' ஒன்றைக் கொண்டுவந்தார். அதாவது இலக்கியம் என்பது அனைவருக்கும் உரிய ஒன்றல்ல, அது அறிவார்ந்த தெரிவு ரசனை தேடல் கொண்ட சிறு உள்வடத்துக்கு உரியது, அந்த உள்வட்டமே இலக்கியத்தின் சாராம்சத்தை வெளியே கொண்டுசெல்லும் ஆகவே 'மக்கள் இலக்கியம்' என்று ஒன்று இருக்க முடியாது என்றார் அவர். இது மாத்யூ ஆர்னால்ட் காலம் முதல் உள்ள ஒரு முக்கியமான தரப்பு. இதில் எந்த வறக சாதிய அடையாளமும் அவரால் தரப்படவில்லை. இதை பிராமணார்களுக்கு மட்டுமே இலக்கியம் தேவை என்று அவர் சொல்வதாக திரித்து பதினைந்துவருடம் இங்கே பிரச்சாரம் நடைபெற்றாது. இப்போதும் நடக்கிறது. நான் என்றால் பேசாமல் இருந்துவிடுவேஎன். வெசா மீண்டும் மீண்டும் விளக்கம் சொல்ல முயன்று தன் வாழ்நாளை வீணாக்கிக் கொண்டார். தமிழனின் குறிப்பே உதாரணம். வெசா என்ன சொல்கிறார்? ஈழத்தமிழர் கூப்பிட்டர்கள் என்பதற்காக தயாரித்துக் கொண்டுவருபவன் ஈழ எழுத்தைப்பற்றி என்ன நினைத்தால் என்ன என்கிறார். தமிழன் எப்படி திரிக்கிறார்? தமிழ்நாட்டு விமரிசகன் ஈழ எழுத்தைப்பற்றி என்ன நினைத்தால் என்ன என்று வெ சா சொல்கிறார் என்ற தொனியில் இங்கேதான் சாதிவெறி போன்ற உள்நோக்கங்கள் உள்ளன. இதுவே தமிழில் உயரிய விவாதம் நிகழாமல் செய்து சிந்தனையை மழுங்கடிக்கிறது 

பதிவுகள் ஆகஸ்ட் 2004; இதழ் 56


எனக்கு அந்த வெற்றி வேண்டாம்!

- வெங்கட் சாமினாதன் -    

2004இல் எழுத்தாளரும் , கலையிலக்கிய விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்களது கனடா விஜயத்தையொட்டி டி.செ.தமிழன் 'பதிவுகள்' இணைய இதழின் விவாதத்தளத்தில் தனது கருத்துகளைப் பதிவுசெய்ததைத் தொடர்ந்து 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு விவாதமே நடந்தது. அதில் எழுத்தாளர்களான ஜெயமோகன், சுமதி ரூபன், மாலன், சூரியா ஆகியவர்களுடன் வெங்கட் சாமிநாதனும் கலந்து கொண்டார். ஒரு பதிவுக்காக அவ்விவாதத்தையொட்டிப் பதிவுகளில் வெளிவந்த கட்டுரைகளை  மீள்பதிவு செய்கின்றோம். - பதிவுகள் ''தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்னும் பழமொழி கேள்விப்பட்டதுண்டா? என்று மாலன், ஒரு தர்ம தேவனின் உயர்ந்த ஆசனத்தில் தான் அமர்ந்துள்ள நினைப்பில் தன் கடாட்சத்தைக் கீழ் நோக்கி அற்ப பாவ ஜீவனான என்னைக் கேட்கிறார். வேடிக்கையாக இருக்கிறது. இந்த ஆசனம், இந்த பாத்திரம் அவருக்கு உசிதமில்லை. இன்று எங்களைச் சுற்றியுள்ள தமிழக பொது வாழ்க்கை, அரசியல்,இலக்கியம், கலை, பத்திரிக்கை உள்ளிட்ட அத்தனையின் தலைமைகளும், குணங்களும், மாலன் சொல்லும் பழமொழியைக் கேலி செய்பவை. மாலன் தேர்ந்துள்ள பத்திரிகை,தொலைக்காட்சி உலகில், அவர் நிழல் தேடி அடைக்கலமாகியுள்ள நிறுவனம், அந்த நிறுவனத்தை ஆட்கொண்டுள்ள அரசியல் கட்சி, மாலனையும் சேர்த்து எல்லாமே ஒரு சிகர வெற்றிக்கான பளிச்சிடும் அத்தாட்சிகள். தோல்வியுற்றவர்களைக் கேலிப்புன்னகையுடன் நோக்கும் உயரத்தில்தான் எல்லாமே. மாலனையும் சேர்த்து. அந்த வெற்றியின் எக்களிப்புக்கு உரியவர்தான் மாலன், கட்டாயமாக. இவை சாத்தியமாகியுள்ளது, தினை விதைத்துத்தானா என்று அவர் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும். பொது வாழ்க்கையிலும் சரி, மற்ற நான் குறிப்பிட்ட தலைமைகளும் சரி, வெற்றி பெற்றுள்ளது தினை விதைத்ததனால் அல்ல. வினையே விதைத்து தினை அறுக்கும் சாமர்த்தியம் ஒவ்வொரு தலைமைக்கும், அதன் வெற்றிக்கும் பின்னுள்ளது. தமிழ் நாட்டில் எந்த மூலை முடுக்கிலும் உள்ள எந்த பாமரனைக் கேட்டாலும், "ஆமா, இதிலே யார் ஓழுங்கு, என்னமோ சொல்ல வந்துட்டீக" என்று அலுத்துக்கொள்வான். இந்த பண்பாட்டுச் சீரழிவு எங்கே தொடங்கிற்று மாலன்? பிரியமுடன் நீங்கள் எனக்குச் சொல்லும் இப்பழமொழி போல இக்காலகட்டத்தின் சில கோஷங்களைச் சொல்லட்டுமா? உங்களுக்குப் பழக்கமானவைதான். '" நாங்கள் என்றுமே நீதிமன்றங்களை மதிப்பவர்கள்'":" அண்ணா எங்களை இப்படி வளர்க்கவில்லை"; "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மூன்றும் எங்களுக்கு அண்ணா கற்றுத் தந்தவை'': "சாவு வாழ்விலே ஒரு முறைதான் வரும்." '"கண்ணகி சிலையைக் காப்பற்ற நான் உயிரையும் கொடுப்பேன்"; போதுமா, இன்னும் வேண்டுமா? தமிழ் நாட்டுக்காற்றில் இப்படி  கோஷங்கள் மிதக்கும். அவை மிக மலிவானவை. நிறைய கிடைக்கும். மாலன், கண்களை மூடிக்கொள்வது செளகரியமானது.உங்களுக்கே தெரியும்.  நீங்கள் இருக்கும் இடத்தில் யாரும் தினை அறுக்க தினை விதைப்பதில்லை. அவர்களுக்கு நன்றாக தெரியும். தினை விதைத்து தினை அறுக்கலாம் என்ற நினைப்பு தோல்வியையே தரும். இந்த பேருண்மையின் வாழும் சாட்சியம் இதோ நானே இருக்கிறேன். வெற்றி பெற அல்ல, நான் மடத்தனமாக தினை விதைப்பதையே தொடர்வது. என் இயல்பில் நான் ஏதோ செய்து வருகிறேன். நான் தொடர்ந்து தோற்று வருகிறேன். என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை.  அனுபவத்தில், அல்லது, தம் இயல்பில் பாடம் கற்று வெற்றி பெற்றவர் மாலன். எனக்கு அந்த வெற்றி வேண்டாம். நான் இப்படியே கேலிக்கு உரியவனாகவே இருந்து விட்டுப்போகிறேன்.

பதிவுகள் ஆகஸ்ட் 2004; இதழ் 56

•Last Updated on ••Saturday•, 31 •December• 2011 20:25••  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.021 seconds, 2.38 MB
Application afterRoute: 0.027 seconds, 3.12 MB
Application afterDispatch: 0.059 seconds, 6.12 MB
Application afterRender: 0.151 seconds, 7.23 MB

•Memory Usage•

7652360

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'g7uhpklgtl1gpuhneckefu49g4'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1719969063' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'g7uhpklgtl1gpuhneckefu49g4'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1719969963',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:9:{s:15:\"session.counter\";i:1;s:19:\"session.timer.start\";i:1719969962;s:18:\"session.timer.last\";i:1719969962;s:17:\"session.timer.now\";i:1719969962;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:19:\"com_mailto.formtime\";i:1719969962;s:13:\"session.token\";s:32:\"94bcd1f5139bff6e07884a79bfda977a\";}'
      WHERE session_id='g7uhpklgtl1gpuhneckefu49g4'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 56)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 553
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:26:03' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:26:03' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='553'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 43
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-03 01:26:03' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-03 01:26:03' )
      ORDER BY a.ordering
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 56 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 56
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 41
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:26:03' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:26:03' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

டிசே தமிழன், ஜெயமோகன், சுமதி ரூபன், சூர்யா, மாலன், வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

டிசே தமிழன், ஜெயமோகன், சுமதி ரூபன், சூர்யா, மாலன், வெங்கட் சாமிநாதன் -=டிசே தமிழன், ஜெயமோகன், சுமதி ரூபன், சூர்யா, மாலன், வெங்கட் சாமிநாதன் -