'அலை' சஞ்சிகையின் ஏழாவது இதழில் (2.1.77) 'பிராய்டின் பாலியல் நோக்கும் மாக்ஸிசமும்' என்னுமொரு ஒரு பக்கக் கட்டுரையை எழுத்தாளர் ஞானி எழுதியுள்ளார். சிறு கட்டுரையானாலும் நல்லதொரு கட்டுரை, ஏனென்றால் நவகால மார்க்சிய அறிஞர்களிலொருவரான ஹேபேட் மார்குஸ் என்பவரின் மார்க்சியச் சிந்தனைகளின் ஒரு பகுதியை அறிமுகம் செய்வதால் நல்லதொரு கட்டுரை. இவ்வறிஞர் செய்தது என்ன? சிக்மண்ட் பிராய்டின் பாலியல் நோக்கு பற்றிய சிந்தனைகளை மார்க்சியத்துடன் இணைத்துப்பார்த்து, இவ்விரு கோட்பாடுகளின் அடிப்படையில் அவர் ஒரு முடிவுக்கு வருகின்றார் என்பதைக் கட்டுரை விபரிக்கின்றது. இதைச் சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம்:
மார்க்சிய, பிராய்டிச சிந்தனைகளின் அடிப்படையில் இவர் இரண்டுக்குமிடையிலொரு தொடர்பினை ஏற்படுத்துகின்றார். இவரது கருத்துப்படி மனிதர் இரண்டு விதத்தாக்கங்களுக்கு ஆட்பட்டவர்கள். இன்பியற் போக்கு (Pleasure Principle) , யதார்த்தப்போக்கு (Reality Principle) ஆகியவையே இவை. ஆதியில் இன்பியற் போக்கினால் ஆட்பட்டிருந்த மனிதரை பின்னர் ஏற்பட்ட பொருளியற் சுரண்டல் சமுதாய அமைப்புகள் அந்நிலையிலிருந்து நீக்கி விட்டன. மனிதரை இன்பியற்போக்கிலிருந்து நீக்கி, யதார்த்தப்போக்குக்குள் பொருளியற் சுரண்டல் சமுதாய அமைப்புகள் தள்ளி விட்டன. மீண்டும் மனிதரை முன்பிருந்த இன்பியற் நிலைக்குக் கொண்டு செல்ல மீண்டும். மனிதரை வர்க்கபேதமற்ற சமுதாய நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு மார்க்சியம் உதவுகின்றது. இவைதாம் மார்க்சிய அறிஞர் ஹேபேட் மார்குஸின் சிந்தனைப்போக்கு. இதுதான் ஞானியின் கட்டுரையின் சாரமும் கூட.
இதற்கோர் எதிர்வினையொன்று 'அலை' சஞ்சிகையின் எட்டாவ(4.3.77) து இதழில் வெளியாகியுள்ளது. 'பிராய்டிசமும் மாக்ஸிசமும்' என்னும் தலைப்பில் வெளியான ஒரு பக்கக் கட்டுரையை எழுதியவர் யாரென்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
அவ்வெதிர்வினையில் "ஞானி தமது கட்டுரையில் பிராய்டும் ,மாக்சும் ஆதியில் புராதன மனிதன் இன்ப நிலையில் இருந்தான் என்ற கருத்தில் உடன்பாடு உடையவராய் இருந்தனர் என்ற பொருள்பட எழுதியுள்ளார். " என்று கூறப்பட்டுள்ளது. அப்படி எங்குமே ஞானியின் கட்டுரையில் கூறப்பட்டிருக்கவில்லை. அது ஹேபேட் மார்குஸ் என்னும் மார்க்சிய அறிஞரின் சிந்தனை. அவர் பிராய்டிசத்தையும் , மார்க்சியத்தையும் இணைத்துக்காணும் சிந்தனைப்போக்கில் அவ்விதம் காணுகின்றார் என்பதைத்தான் ஞானி அவர்கள் விபரிக்கின்றார். ஹெபேட் மார்குஸ் என்ன கருதுகிறாரென்றால் (ஞானியின் கட்டுரைப்படி) ஆதியில் மனிதர் இன்ப நிலையிலிருந்தார். பின்னர் பொருளியற் சுரண்டல் காரணமாக அந்நிலையிலிருந்து பொருளியற் பிரச்சினைக்குள் சென்று விட்டனர். மீண்டும் பழைய நிலையினை அடைவதற்கு மார்க்சிய தத்துவம் கூறும் வர்க்கமற்ற சமுதாய அமைப்பு தேவை. இவற்றைத்தாம் ஹேபேட் மார்குஸ் கூறுகின்றார்.
எதிர்வினைக் கட்டுரையில் முடிவில் "ஞானி இன்றைய மார்க்சிய அறிஞர்களில் ஒருவர் என வர்ணிக்கும் மார்குஸ் மார்க்சியத்தின் அடிப்படைகளையே நிராகரித்துள்ளார் என்பதையும் , அவர் ஒரு மார்க்சிஸ்ட் அல்ல என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்" என்று கூறப்பட்டுள்ளது. விரும்புகிறேன் என்று ஒருமையிலிருப்பதால் கட்டுரையாளர் ஒருவர் என்று புரிந்து கொள்ளலாம். அவர் ஆசிரியர் குழுவினரில் ஒருவரா அல்லது அலைக்கு அனுப்பிய எழுத்தாளர்களில் ஒருவரா என்பது தெரியவில்லை.
ஆனால் இவ்விதம் எதிர்வினையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப்போல் ஹேபேட் மார்க்குஸ் ஒருபோதுமே மார்க்சியத்தின் அடிப்படைகளை மறுக்கவில்லை, அவ்விதம் ஞானியும் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கவில்லை. ஹேபேட் மார்குஸ் மார்க்சியமே மானுடரை மீண்டும் இன்பநிலைக்குக் கொண்டு செல்லுமென்று கூறுகிறாரே தவிர மார்க்சியத்தின் அடிப்படைகளை மறுக்கவில்லை.
மேற்படி முகநூற் பதிவுக்கான எதிர்வினைகள்:
Sivananthy Ganesarayan: அருமை
Bharathi Nathan: மார்க்சியத்தையும் பிராய்ட் டையும் ஒன்றிணைத்தாரா? மிக பெரிய அயோக்கியத்தனம் இது.
Giritharan Navaratnam: நண்பரே ஹேபேட் மார்குஸ் எவ்விதம் ஒன்றிணைத்தாரென்பதை அவரது நூல்கள் மூலம் அறியாமல் இவ்விதம் ஒரு முடிவான கருத்துக்கு வருவது ஆச்சரியமளிக்கிறது. இங்குள்ள ஒரு குறுகிய கட்டுரையில் ஞானி அவர்கள் ஹேபேட் மார்குஸின் எண்ணங்களைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். இக்கட்டுரையின் அடிப்படையில் நான் புரிந்து கொண்டது: ஹேர்பேட் மார்குஸ் மார்க்சியத்தை ஒன்றிணைக்கவில்லை. அவர் கூறுவது மனிதர் ஆரம்பத்தில் இன்பநிலையிலிருந்தார்.பின்னர் பொருளியற் சுரண்டல் வந்ததால் அந்நிலை இழந்தார். மீண்டும் அந்நிலைக்குச் செல்வதற்கு மார்க்சியம் அவசியம் என்றுதான் கூறுகின்றார். இரண்டையும் இணைக்கவில்லை. இவ்விதமே நான் புரிந்துகொள்கின்றேன். மார்க்சியமும் அரசு உதிர்ந்து உலர்ந்து விடுகின்ற கம்யூனிச சமுதாயத்தையே இறுதி இலக்காகக் குறிப்பிடுகின்றது.
Bharathi Nathan: பொருள் முதல் வாதமும் கருத்து முதல் வாதமும் இணையாது தோழர்
Giritharan Navaratnam : இங்கு கருத்துமுதல்வாதமென்று நீங்கள் எதனைக் கருதுகின்றீர்கள்? பிராய்டின் சிந்தனைகளை அவரது அறிவியற் கோட்பாடுகள் என்று கூறலாம்.அவை கருத்துமுதல்வாதமல்ல. மார்க்சின் சிந்தனைகளை சமூக, அரசியல், பொருளியல் மற்றும் அறிவியற் கோட்பாடென்று கூறலாம். மார்க்சின் கோட்பாடு ஏற்கனவே அறிவியலை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இன்னுமோர் அறிவியற் கோட்பாட்டினை மார்க்சியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கருத்துகளைக் கூறுவதை எப்படி நீங்கள் பொருள்முதல்வாதத்துடன் கருத்து முதல்வாததுடன் சேராது என்று நீங்கள் கூறலாம்? சிறிது விளக்குங்கள்.
Bharathi Nathan : பிராய்ட் மானுட உளவியலில் இருந்து சமூகத்தை பார்த்தவர். மார்க்ஸ் சமூக சூழலில் இருந்து மானுட சிந்தனையை கண்டவர். இரண்டும் எதிர் எதிரான கருத்தோட்டங்கள். எப்படி இணையும்?
Giritharan Navaratnam : // பிராய்ட் மானுட உளவியலில் இருந்து சமூகத்தை பார்த்தவர். // பிராய்ட் மானுட உளவியலிலிருந்து மனிதரைப் பார்த்தார். மனித ஆளுமையைப் பகுப்பாய்வு செய்து மனிதரின் உளவியலை அறிவதற்குத் தன் சிந்தனையைச் செலுத்தினார். மார்க்ஸ் ஒட்டுமொத்த மானுட சமுதாயத்தை , அதன் பிரச்சினைகளை , நோக்கினார். மானுட உளவியல் மானுடப் புறச்சூழலின் தாக்கத்தின் விளைவு என்பதற்கப்பால் அவர் மானுட உளவியலைப் பகுப்பாய்வு செய்வும் அறிவியலில் அவர் கவனம் செலுத்தவில்லை. மார்க்ஸ் எந்த மானுடரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தன் கோட்பாட்டினை நிறுவினாரோ அம்மானுடரின் உளவியல் எவ்விதம் இயங்குகின்றது. அவற்றைப் பாதிக்கும் காரணிகள் எவையென்பதை ஆராய்வதில் கவனத்தைச் செலுத்தினார் பிராய்ட். சமூகங்களின் நிலவும் சிந்தனைகள், கருத்தோட்டங்களெல்லாம் மானுடரின் உளவியலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை அவரது ஆய்வுகள் வெளிப்படுத்தின. அவரது ஆளுமைக்கோட்பாட்டின் ஒரு கூறான 'அதியுயர் மனக் கூறு (Super Ego)' இவ்விதமாக மானுடர் வாழும் புறச்சூழல் (சமூக, அரசியல், கலாச்சாரச் சிந்தனைகள் போன்ற) ஏற்படுத்தும் பாதிப்புகளின் விளைவாக உருவாகுமொன்று.
Bharathi Nathan" அதாங்க நான் தான் தெளிவா சொல்லிட்டேனே. மார்க்சியம் என்பது சமூக அறிவியல். மனித சிந்தனைக்கு அடிப்படை புறநிலை. நீங்க சொல்ல வர்றது மானுட உளவியலில் இருந்து பிராய்ட் அனைத்தையும் ஆராய்ந்தார் என்பதுதானே. அப்புறம் எப்படி இரண்டையும் இணைக்க முடியும்?
Giritharan Navaratnam : //நீங்க சொல்ல வர்றது மானுட உளவியலில் இருந்து பிராய்ட் அனைத்தையும் ஆராய்ந்தார் என்பதுதானே.// அப்படி நான் கூறவில்லை. பிராய்ட் மானுட உளவியல் மூலம் மானுடரை ஆராய்ந்தார். பிராய்ட் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தைப் போதிக்கவில்லை.அது மார்க்சின் சிந்தனை. அது தனிப்பட்ட மானுடர்களை மையமாகக்கொண்டதல்ல. மொத்த மானுட சமுதாயத்தையும் மையமாகக் கொண்டது. ஒட்டுமொத்தமாக ஒரு சமூதாயம் இயங்குகின்றது எவ்விதம்? ஏன் அச்சமுதாயத்தில் வர்க்கங்கள், சாதி , மதம் போன்ற பல்வகைப்பிரிவுகள்? இவற்றை ஆட்டிப்படைக்கும் விதிகள் எவை என்பவை பற்றியது. (உற்பத்தி, உற்பத்தி சாதனங்கள், அவற்றுடனான மனிதரின் தொடர்பு பற்றிய). இயக்கவியல் விதிகளை (நியூட்டனின் இயங்கியல் விதிகளல்ல) பொருளுமுதல்வாதச் சிந்தனைகளுக்குப் பிரயோகித்துத் தன் கோட்பாட்டினை உருவாக்கினார் மார்க்ஸ். மார்க்ஸ் போன்ற அறிஞர் ஒருவருக்கு உளவியல் ரீதியிலான பிரச்சினைகள் ஏற்பட்டால் அவர் பிராய்ட் போன்ற உளவியல் மருத்துவரை நாடத்தான் வேண்டும். அங்கு இணைவார்கள். :-) //அப்புறம் எப்படி இரண்டையும் இணைக்க முடியும்?// அப்படிச் சிந்திப்பது நீங்கள். யாரும் இரண்டையும் இணைக்கவில்லை. இரண்டையும் வேறு வேறாகத்தான் பார்க்கின்றார்கள். ஒருவர் மானுட சமுதாயத்தைப்பற்றிக் கூறினார். அடுத்தவர் மானுடரின் உளவியலைப்பற்றிக் கூறினார். இரண்டையும் யாரும் இணைக்கவில்லை. ஆனால் சிந்தனையாளர்கள் இரு கோட்பாடுகளையும் உள்வாங்கிப் பல்வேறு சிந்தனைகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|