அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா வருவது அக்கட்சியினரின் பிரச்சினை. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இறுதிவரையில் எதற்காக யாரையும் சந்திக்காத வகையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்? எதற்காக அப்பலோ மருத்துவ நிலையம் அடிக்கடி அவரது உடல் நிலை பற்றி சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட வேண்டும். இச்சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் வகையில் அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமரர் ஜெயலலிதாவின் நிலையினை வெளிப்படுத்தும் காணொளிகள் வெளியிடப்பட வேண்டும். இச்சந்தேகங்கள் தீர்க்கப்பட்டால் மட்டுமே சசிகலா அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்களின் ஆதரவைப் பெற முடியும். ஜனநாயக நாடொன்றில் மாநிலமொன்றின் முதல்வர் இவ்விதம் நடத்தப்பட்டிருப்பது கேள்விக்குரியது மட்டுமல்ல கேலிக்குரியதுமாகும்.
பல சந்தேகங்களை ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்தியிருப்பதால் அவரது உடல் நிலை பற்றிய சந்தேகங்கள் தீர்க்கப்படாமல், அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்களைப்புறக்கணித்து அதிமுகவின் முக்கிய புள்ளிகள் செயற்படுவார்களென்றால் , எதிர்காலச்சட்டசபைத்தேர்தலில் அதிமுக பல பிரிவுகளாகப் பிரிபடுவது தவிர்க்க முடியாதது.
உண்மையில் ஜெயலலிதாவின் உடல் நிலை ஆரம்பத்திலிருந்தே மிகவும் ஆபத்தான கட்டத்திலிருந்திருக்கலாம். அவரது உண்மை நிலை மக்களுக்கூ தெரிந்தால் மக்கள் கொதித்தெழலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சிரமமாயிருக்கும். எனவே மக்களை ஜெயலலிதாவின் முடிவுக்குத் தயார் செய்து அவரது முடிவினை அறிவித்திருந்தால் மக்கள் பொங்கியெழ மாட்டார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்தால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி ஏற்படலாம். அதனைக்காரணம் காட்டி மத்திய அரசு அதிமுக அரசைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம். முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை நிலை பிரதமர் மோடிக்குத் தெரிந்திருந்த காரணத்தினால் போலும் அவர் ஜெயலலிதாவை அப்பலோ மருத்துவ நிலையத்துக்கு வந்து பார்க்கவில்லையோ தெரியவில்லையோ?
அப்பலோ மருத்துவர்கள், அங்கு பணி புரியும் 'கிங்காங்' தாதிகள், வைத்தியர்கள் எல்லோரும் அங்கு தங்கியிருந்த முதல்வர் ஜெயலலிதா பற்றிப்பல்வேறு கதைகளைக் கூறியுள்ளனர். இங்கிலாந்து வைத்தியரும் ஜெயலலிதாவின் நிலை பற்றி அறிக்கை விட்டிருக்கின்றார்.
இன்னுமொரு கதையும் நிலவுகின்றது. ஜெயலலிதா சசிகலாவால் தாக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அப்பலோவில் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்தக் கதை கூறுகிறது. ஒருவேளை ஜெயலலிதா யாரையாவது சந்தித்தால் அதுபற்றிய உண்மை வெளிப்பட்டுவிடலாம் என்ற அச்சம் காரணமாகவா அவர் யாரையும் சந்திப்பதிலிருந்து இறுதிவரையில் தனிமையில் வைக்கப்பட்டிருந்தார் ? அதனால்தானா அவரை வெளி நாடெதற்கும் மேலதிக மருத்துவச் சிகிச்சை எதற்கும் அனுப்பாமல் வைத்திருந்தார்கள்? என்றெல்லாம் நியாயமான கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்கான பதில்கள் கிடைக்க வேண்டும்.
இன்னுமொரு காரணமும் இருக்கலாமோ என்றொரு சந்தேகம் தோன்றுகின்றது. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய தொலைபேசி அழைப்பொன்று வந்ததாகவும் அதன் பின்னரே ஜெயலலிதாவுக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும் அறியப்படுகின்றது. சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தப்புவதற்கு ஜெயலலிதாவின் மரணம் ஏனையவர்களுக்கு உதவகூடுமோ என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் முடிவு அறிவிக்கப்பட்டு அவரது இறுதிக்கிரியைகளும் நடந்து முடிந்துவிட்டன. இனியாவது உண்மை வெளிப்பட வேண்டும். அவ்விதம் வெளிப்படாவிட்டால் சசிகலாவின் மேல் சந்தேகமே ஏற்படும். அவ்விதமான சந்தேகம் எதிர்காலத்தில் அரசியல்ரீதியிலான தோல்வியையே தரும்.. அப்பலோவில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இறுதியில் மரணித்தது வரையிலான ஜெயலலிதாவின் நிலை பற்றிய உண்மை வெளிப்பட வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணம் பற்றிய கேள்விகளுக்குரிய பதில்கள் எதனையும் வெளிப்படுத்தாமல் , சசிகலா அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக வந்தாலும், எதிர்காலத் தேர்தல்களில் தோல்வியைத்தழுவும் வாய்ப்புகளே உள்ளன. எதிர்க்கட்சிகள் குறிப்பாக திமுக ஜெயலலிதாவின் மரணத்தைக்காரணமாக வைத்து அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்களை மீண்டும் தன் பக்கம் இழுப்பதில் வெற்றியடையக் கூடும். பொறுத்திருந்து பார்ப்போம்.
•<• •Prev• | •Next• •>• |
---|