உதித்தெழுந்தது அறிவென்னும் இரவி!
'எழும் பசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவென்னும் இரவி!' -பாரதியார் -
இத்தாரக மந்திரத்துடன் மே-யூன்1998, யூலை-ஆகஸ்ட் 1998 என இரு இதழ்கள் ,டொராண்டோ, கனடாவில், வெளிவந்ததொரு மாதப்பத்திரிகைதான் இரவி. அக்காலகட்டத்தில் தொடர்ந்தும் வெளிவராது நின்று போனாலும், என் ஆர்வம் இன்றுவரை நின்று விடவில்லை. என் ஆர்வத்தின் வெளிப்பாடுகள்தாம் 'கணினி உலகம்', 'நமது பூமி' ஆகிய செய்திக்கடிதங்களும், 'குரல்' கையெழுத்துச்சஞ்சிகையும், 'இரவி', 'கல்வி' ஆகிய பத்திரிகைகளும் பதிவுகள் இணைய இதழும்.
'இரவி' பத்திரிகையின் முதற் பக்கத்திலுள்ள இரவி என்னும் பத்திரிகையின் எழுத்துருவினை வடிவமைத்துத் தந்தவர் எழுத்தாளர் 'அசை; சிவதாசன். அதற்காக அவருக்கு நன்றி. அவரும் அக்காலகட்டத்தில் மறுமொழி சஞ்சிகையினை வெளிக்கொணர்ந்தவர். இன்று வெளிவரும் 'தாய் வீடு' பத்திரிகையின் தாயான 'வீடு' பத்திரிகையினைத்தொடங்கி வெளியிட்டவர். சிறுகதைகள், கட்டுரைகள் பல பல்வேறு சஞ்சிகைகளில் எழுதியவர். 'தாயகம்' சஞ்சிகையில் அவர் எழுதிய 'அசை மறுபக்கம்' பத்தியின் மூலம் 'அசை' சிவதாசன் என்று அழைக்கப்பட்டவர். தொலைக்காட்சி நிகழ்வுகளில் அரசியல் ஆய்வாளராக அடிக்கடி வலம் வருபவர்.
வெளிவந்த இரு இதழ்களுமே வடிவமைப்பிலிருந்து, தட்டச்சு செய்தது வரை என் பங்களிப்பே. அன்று கணினியில் தட்டச்சு செய்வதென்பது இன்று போல் அவ்வளவு இலகுவானதாக எனக்கிருக்கவில்லை. தமிழ் தட்டச்சுப்பலகையினைப்பாவிக்க வேண்டியிருந்தது. அந்த நிலையிலேயே என்னால் இரவியினைத்தட்டச்சு செய்து வெளிக்கொணர முடிந்தது இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியத்தைத்தருகின்றது. ஆனால் பத்திரிகையினை வெளிக்கொணர்வதிலிருந்த தீராத ஆர்வம்தான் அதனைச் சாத்தியமாக்கியது.
தற்போது மீண்டுமொரு ஆசை துளிர் விடத்தொடங்கியிருக்கிறது. ஏன் இரவியினை மீண்டுமொருமுறை உதிக்க வைக்கக்கூடாது? வைத்தாலென்ன? வரும் சித்திரை மாதமளவில் மீண்டும் இரவியினை மாதப்பத்திரிகையாக ஆரம்பிக்கலாமாவென்று எண்ணுகின்றேன். சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால் நிச்சயம் மீண்டுமொருமுறை 'இரவி' உதிக்கும். பார்ப்போம்.
மின்னூல்கள் பற்றிய எழுத்தாளர் மாலனின் கூற்றும், அது பற்றிய சில எண்ணங்களும்....
அண்மையில் சென்னையிலேற்பட்ட வெள்ளத்தால் நூல்கள் பல அழிந்துபோனதைப்பற்றிக்குறிப்பிடும் எழுத்தாளர் மாலன் மின்னூல்களின் முக்கியத்துவத்தைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார் தனது முகநூல் பதிவொன்றில். அதில் அவர் கூறியுள்ள இன்னுமொரு விடயமும் என்னைக் கவர்ந்தது. சின்னஞ்சிறு நாடான சிங்கப்பூர் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அச்சில் வெளிவந்த அனைத்து நூல்களையும் மின்னூலாகப்பதிப்பித்து விட்டது என்பதுதான் அது. உண்மையில் சிங்கப்பூர் நவீனத்தொழில் நுட்பத்தை எவ்வளவு திறமையாக , உடனுக்குடன் பாவிக்கத்தொடங்கி விடுகின்றது என்பதற்கு சிங்கப்பூரின் தேசிய நூலக இணையத்தளத்தைப்பார்த்தால் புரியும்.
மாலன் கூறியது போல், சிங்கப்பூர் செய்தது போல், ஏனைய நாடுகளும் இதுவரை அச்சில் வெளியான அனைத்து நூல்களையும் மின்னூல்களாக பதிப்பிப்பது பல்வேறு காரணங்களுக்காக நன்மை பயக்குமென்றே எண்ணுகின்றேன். அவற்றில் முக்கியமான சிலவாகக் கீழ்வருவனவற்றைக்குறிப்பிடலாம்"
1. இயற்கை அழிவுகள் மூலம் அச்சு நூல்கள் அழியும் அபாயமுண்டு. ஆனால் மின்னூல்களை அவ்விதம் அழியாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வைத்திருக்கலாம்.
2. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் எவராவது இணையத்தின் மூலம் அவற்றை எடுத்து வாசிப்பது இலகுவானதாகிவிடுகிறது. இது மின்னூல்களின் முக்கியமான பயன்களிலொன்று.
3. வெளிவந்த படைப்புகளை ஆவணப்படுத்த, அவற்றைப்பற்றிய விரிவான, சரியான, பூரணமான ஆய்வுகளைச்செய்ய மின்னூல்கள் வழி வகுக்கின்றன. பேராசிரியர்கள் சிலர் ஒரு சில படைப்புகளை மட்டும் படித்து விட்டு, தம் மேதா விலாசத்தைக் காட்டுவதுபோல் இனியும் காட்ட முடியாது. அதற்கு மின்னூல்கள் அனுமதிக்கப்போவதில்லை.
4. எழுத்தாளர்கள் அனைவருமே தம் படைப்புகளை நூல்களாகக்காணும் வசதியினை மின்னூல்கள் ஏற்படுத்தி, அவர்களது கனவுகள் நனவுகளாக வழி சமைக்கின்றன.
5. மிக இலகுவாக, வெளியான மின்னூல்களைச்சரி பிழை பார்க்க, திருத்தப்பட்ட மீள்பதிப்புகளை வெளியிட மின்னூல்கள் உதவுகின்றன. அச்சு நூல்களை இவ்விதம் இலகுவாக மீள்பதிப்புகளாக வெளியிட முடியுமா என்ன?
இவ்விதமாக மின்னூல்களின் பயன்கள் பல. எழுத்தாளர் மாலனின் மின்னூல்கள் பற்றிய கூற்று, தீர்க்கதரிசனம் மிக்கதாகவும், காலத்துக்கேற்ற அவசியமாகவும் (குறிப்பாக சென்னை வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகளின் மத்தியில்) அமைந்திருக்கின்றது.
இத்தருணத்தில் பல வருடங்களுக்கு முன்னர் (தொண்ணூறுகளின் ஆரம்பத்திலென்று எண்ணுகின்றேன்) எழுத்தாளர் மாலன் கனடா வந்திருந்தபொழுது ,நண்பர் எழுத்தாளர் ரதனின் இருப்பிடத்தில் அவரைச்சந்திக்கும் வாய்ப்பேற்பட்டது. அச்சமயம் எடுத்த புகைப்படமொன்றினை இப்பதிவுடன் ஒரு ஞாபகத்துக்காகப் பதிவு செய்துகொள்கின்றேன்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|