எழுத்தாளர் அ.ந.கந்தசாமி சுதந்திரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியப்பீடத்தில் இருந்த காலகட்டம் சுதந்திரனைப் பொறுத்தவரையில் அதன் பொற்காலமென்றே கூறுவேன். அக்காலகட்டத்தில் அவர் எழுதிய படைப்புகளில் அ.ந.கந்தசாமி என்னும் பெயரில் எழுதிய படைப்புகள் , கவீந்திரன் என்னும் பெயரில் எழுதிய படைப்புகள் மற்றும் பண்டிதர் திருமலைராயர் ,கலையரசன் என்னும் பெயர்களில் எழுதிய படைப்புகள் கிடைத்துள்ளன. இவை அவர் எழுதிய முழுமையான படைப்புகள் என்று கூறுவதற்கில்லை. எமக்குக் கிடைத்த படைப்புகளிவை. அவர் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் 1949 தொடக்கம் 1952 வரையிலான காலகட்டத்திலிருந்ததாக அறியப்படுகின்றது. இக்காலகட்டத்தில் கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, இலக்கியக் கட்டுரைகள் மற்றும் அவரளித்த குயுக்தி பதில்கள் என்பவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
இது போல் அ.ந.க.வின் படைப்புகளை ஆராய்பவர்கள் தேசாபிமானி ஆசிரியராகவிருந்த காலகட்டம், சுதந்திரன் காலகட்டம், ஶ்ரீலங்கா காலகட்டம், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த காலகட்டத்தில் அவர் இலக்கியப்பங்களிப்பு மற்றும் ஏனைய காலகட்டங்கள் என விரிவாக ஆராய வேண்டும். இவை தவிர அவரது மாணவப்பருவத்தில் அவருக்குக் களமமைத்துக்கொடுத்த ஈழகேசரி காலகட்டம், மறுமலர்ச்சிக் காலகட்டம் ஆகியவையும் விரிவாக ஆராயப்பட வேண்டும். மறுமலர்ச்சிக் காலகட்டம் என்றவுடன் போதிய ஆய்வுகளற்ற பலரும் (பேராசிர்கள் பலருட்பட) மறுமலர்ச்சிச் சஞ்சிகை வெளிவந்த காலகட்டத்தை மையமாகக்கொண்டே அவரது பங்களிப்பை ஆராய முற்படுகின்றார்கள். இது தவறான அணுகுமுறை. அ.ந.க மறுமலர்ச்சி அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர். அதன் செயலாளராக இருந்தவர். எழுத்தாளர் பஞ்சாட்சர சர்மாவுக்குக் கடிதமெழுதி அவரை மறுமலர்ச்சிச் சங்கத்துக்குள் கொண்டு வந்தவர் அ.ந.கந்தசாமியே. இக்கடிதத்தை பஞ்சாட்சரசர்மாவின் நூலொன்றில் காணலாம். இதுபோல் மறுமலர்ச்சிச் சங்க அமைப்பினை உருவாக்கியவர்களில் அவர் ஒருவர் என்பதையும், அதன் செயலாளராக விளங்கியவர் என்பதையும் அவர் மல்லிகை சஞ்சிகைக்குத் தனது இறுதிக்காலத்தில் அனுப்பிய வில்லூன்றி மயானக் கவிதை உருவாகிய வரலாறு பற்றிய கட்டுரை தொடர்பாக எழுதிய கடிதத்தில் காணலாம். அதனையும் மல்லிகை சஞ்சிகையில் காணலாம்.
மறுமலர்ச்சி இதழ் ஆரம்பத்தில் பல இதழ்கள் கையெழுத்துப்பிரதிகளாகத்தாம் வெளியாகின. 24 பிரதிகள் வெளியானதாக அறிகின்றோம். அவற்றை யாரும் வைத்திருக்கின்றார்களா என்பது தெரியவில்லை. அல்லது அவற்றில் வெளியான படைப்புகள் பற்றி யாராவது அறிந்திருக்கின்றார்களா என்பது பற்றியும் தெரியவில்லை. அவ்விபரங்களை அறிந்துகொள்வது அ.ந.க அவற்றில் எழுதியிருக்கின்றாரா என்பது பற்றி அறிய உதவும். ஆனால் மறுமலர்ச்சி சஞ்சிகையாக வெளிவந்த காலகட்டத்தில் அவரது சிறு கட்டுரையொன்றே வெளியாகியிருப்பதை அவதானிக்கலாம். மறுமலர்ச்சி சஞ்சிகையாக அச்சில் வெளிவந்த காலகட்டத்தில் வரதரின் பங்களிப்பு அதிகமாகவிருந்தது. அக்காலகட்டத்தில் அ.ந.க கொழும்பு சென்று விட்டார். அதன் காரணமாகவே அவரது இலக்கியப்பங்களிப்பு அதில் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணமென்று நினைக்கின்றேன். ஆனால் மறுமலர்ச்சிக்காலகட்டமென்னும்போது மறுமலர்ச்சி அமைப்பின் உருவாக்கம், மறுமலர்ச்சிக் கையெழுத்துச் சஞ்சிகையின் காலகட்டம் & மறுமலர்ச்சி அச்சிதழ் காலகட்டம் என நோக்கப்பட வேண்டும். இவ்வகையில்தான் அ.ந.க எவ்வளவுதூரம் மறுமலர்ச்சி அமைப்பில் இயங்கினாரென்பதை விரிவாக அறிய முடியும். அப்பங்களிப்பின் முக்கியத்துவத்தை அறிய முடியும்.
சுதந்திரனில் வெளியான, எம்மிடமுள்ள அ.ந.க.வின் படைப்புகள் விபரங்கள் வருமாறு. இவற்றை நாம் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொண்டேன்.
அ.ந.கந்தசாமி என்னும் பெயரில் எழுதியவை:
1. சிறுகதை: ஐந்து சந்திப்பு (1.7.51)
2. சிறுகதை: பாதாள மோகினி
3. கவிதை: நகரம் (8.3.51)
4. நெடுங் கவிதை: கைதி (5.8.51)
5. கவிதை: துறவியும் ,குஷ்ட்டரோகியும் (14.1.51)
6. மொழிபெயர்ப்பு நாவல்: நாநா - எமிலி சோலா ; தமிழில் அ.ந.கந்தசாமி (19 அத்தியாயங்கள். மிகுந்த வரவேற்பைபெற்ற மொழிபெயர்ப்ப்பு. தமிழகத்திலிருந்தெல்லாம் ஆர்வத்துடன் வாசித்த நாவல்)
கவீந்திரன் என்னும் பெயரில் எழுதிய இலக்கியக் கட்டுரைகள். 'புதுமை இலக்கியப் பூங்கா'என்னும் பகுதியைத்தொடங்கி அதில் எழுதிய கட்டுரைகள் இவை.
7. காதலும் அறிவும் களி நடம் புரியும் 'சஞ்சீவி' பர்வதத்தின் சாரல். புதுவைப் பூங்குயிலின் தமிழிசையின் மகத்துவம். கொஞ்சும் தமிழிலே கொட்டும் பாரதிதாசனின் பைந்தமிழ்க் காப்பியம். (7.1.51)
8. அரசபோகத்தைத் துறந்து செல்லும் சித்தார்த்த குமாரன். தீண்டாமையைக் காய்ந்த மனித சமத்துவத்தை நிலைநாட்டும் பண்பு. புத்தேரிக் கவிஞர் செஞ்சொற் காவியத்தில் மேலும் சில காட்சிகள் (11.3.51) - கவிமணியின் 'ஆசிய ஜோதி' பற்றிய கட்டுரை.
9. 'தேவி'யின் அமைதி தரும் அருங்காப்பியம் ஆசிய ஜோதி. புத்தர் செழுங் கருணையை அன்பு ததும்ப வர்ணிக்கும் அரிய நூல். நாஞ்சில் கவிமணியிடம் நாம் காணும் கவி மாருதம் (18.2.51)
10. சஞ்சீவி மலையில் கண்டெடுத்த 'ரேடியோ டெலிவிஷன் மூலிகைகள்'; குப்பனும் வஞ்சியும் கேட்கும் அறிவுப் பிரசார நன்மொழிகள்; காதலர் காதுகளில் உலகக் கருதுகள் அலை மோதல்; நாட்டின் நிலைமையைச் சித்திரிக்கும் புதுவைச் செங்கரும்பின் கவிதைக் கண்ணாடி (14.1.51)
பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் எழுதிய சிலப்பதிகாரக் கட்டுரைகள் (இக்கட்டுரைகளைப் பெரியார் பாராடியதாகவும் தம் 'குடியரசு' பத்திரிகையில் மறு பிரசுரம் செய்ததாகவும் அறியப்படுகின்றது. எக்கட்டுரைகள் என்பது தெரியவில்லை):
11. கண்ணகி பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா? 'பெண்ணடிமையின் சிகரம்' என்பதே சாலப்பொருந்தும்; மன்னனின் தவறுக்காக மக்களைத் தீயிலிட்டுக் கொழுத்திய கொடுமை' புதிய கோணத்தில் சிலப்பதிகார ஆராய்சி(8.7.51)
12. பாண்டியன் நெடுஞ்செழியன் நீதி தவறிய கொடுங்கோல மன்னனன்று; நீதிக்காக உயிர் நீத்த தியாகச் செம்மலே மதுரை மன்னன்; சினத்தின் வயப்பட்டு மக்களைக் கொன்ற கண்ணகி தவறுடையவளே! (2.9.51)
13. பண்டிதர் திருமலைராயர் பதிலிறுக்கிறார்: கண்ணகி பாரபட்சம் காட்டியமை மறுக்க முடியாதது. பார்ப்பார் என்ற பதத்திற்கு புதிய விளக்கம் தருவது பொருந்தாது. சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் இச்சொல் கையாளப்பட்டுள்ள விதம் (26.8.51)
கலையரசன் என்னும் பெயரில் எழுதியது:
14. நானாக் கதை ஆபாசமே அல்ல.சிருங்காரம் ஆபாசமா? நைடதத்திலும் திருப்புகழிலும் காணப்படும் காதற்காட்சிகள் (30.12.51)
மேலுமொன்று: அ.ந.கந்தசாமி என்னும் பெயரில் எழுதியது:
15. வழுக்கி விழுந்த வடிவழகி நானா மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர். பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா; கோர்ட்டாரையும் கோடீஸ்வரரையும் அவமதித்துக் கல்லடியும் சொல்லடியும் பட்ட தியாகி. ( 14.10.51)
அன்பர்களே ! உங்களுக்கு யாராவது அ.ந.கந்தசாமி எழுதி தேசாபிமானி, பாரதி சஞ்சிகை, தினகரன், வீரகேசரி மேலும் வேறு பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான அவரது படைப்புகள் பற்றித் தெரிந்திருந்தால் அவை பற்றி அறியத்தாருங்கள். மேலும் அ.ந.க சாகித்திய விழாவொன்றில் ஓதிய 'கடவுள் என் சோர நாயகன்' என்னும் கவிதையையும் தேடிக்கொண்டிருக்கின்றோம். அது பற்றியும் யாராவது அறிந்திருந்தால், அல்லது அக்கவிதை உங்களிடம் யாரிடமாவது இருந்தால் எம்முடன் தொடர்புகொள்ளுங்கள். அனுப்பி வையுங்கள்.விபரங்களை •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நன்றி!
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|