பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

நாவல்: மனக்கண் 9 & 10

•E-mail• •Print• •PDF•

9-ம் அத்தியாயம்  அதிகார் அம்பலவாணர்

அறிஞர் அ.ந.கந்தசாமி -அறிஞர் அ.ந.கந்தசாமி[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள்]

காதலுக்கு இருக்கும் புதுமையான பண்புகளில் ஒன்று, அது ஆண்களைப் பெண்மை நிறைந்தவர்களாகவும், பெண்களை ஆண்மை நிறைந்தவர்களாகவும் ஆக்கிவிடுவது தான். காதலின் வயப்பட்ட ஆண்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும் சிறு விஷயங்களைப் பற்றிக் கூட அதிகமாக எண்ணி எண்ணிக் கலங்குபவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். பெண்களோ காதலின் உச்சத்திலே சத்தியவானை நேசித்த சாவித்திரியைப் போல் எமனையும் எதிர்த்துப் போராடத் துணிந்து விடுகிறார்கள். கல்கிசை என்னும் இலங்கையின் மிகப் பிரசித்தி பெற்ற மவுண்ட் லவீனியாக் கடற்கரையில்லே தன்  காதற்கிளி பத்மாவைப் படமாக வரைய விரும்பிய ஸ்ரீதர் அடுத்த நாள் முழுவதும் அது பற்றிச் சிந்தப்பதிலேயே செலவிட்டான். அவளை எப்படி உட்கார வைக்க வேண்டும், என்ன உடையை அணியச் செய்ய வேண்டும்.

அமைதியான உயர்குல யாழ்ப்பாணக் குடும்பப் பெண்ணைப் போலச் சேலையால் உடம்பை நன்கு போர்த்தச் செய்து, தலையில் பூவுடனும், நெற்றியில் செஞ்சாந்துத் திலகத்துடனும் தங்கள் வீட்டிலே மாட்டியிருக்கும் அம்மாவின் படத்தைப் போல எழுதுவோமா, அல்லது அவளது அலையலையாக அவிழும் மேகக் கூந்தலை, ஒரு புறத் தோள் வழியாக அவள் எடுப்பான மார்பில் ஏறி இறங்க வைத்து, சினிமா நடிகை போல சிங்காரமாக எழுதுவோமா என்பது போன்ற பல பிரச்சினைகளை ஆராய்ந்து கொண்டிருந்தான் அவன்.

இளமையில் கனவிலே மிதக்கும் ஓர் ஆடவனுக்குத் தன் காதலி கண்ணகி போல் பத்தினியாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் மாதவி போல் மனதுக்குக் கிளர்ச்சி தரும் மாயக்காரியாகவும் இருக்க வேண்டும். இது இன்றைய நேற்றைய கனவல்ல. முற்காலத்திற் கூட இலட்சிய மாது, அன்னை தயையும், அடியாள் பணியும் கொண்ட பத்தினிப் பெண்ணாக இருந்தால் மட்டும் போதாது. “வள்ள முலை மாது” போல் பஞ்சனையில் இன்பத் துயில் தருபவளாகவும் இருக்க வேண்டுமென்றே கருதப்பட்டது. அதனால் தான் ஸ்ரீதரும் பத்மாவை வெவ்வேறு விதமாகக் கற்பனை செய்து பார்த்தான் அன்று.

பத்மாவைப் பொறுத்த வரையில் கொடி போன்ற பெண்மையும்  சித்திரப்பாவை போன்ற கட்டும் கொண்ட அவளது வண்ண உடல் எந்தப் “போசி”ற்கும் பொருத்தமானதே. நீச்சலுடையில் கூட நேர்த்தியாகத் தானிருப்பாள். மேல் நாட்டு நடிகையர் கூட அவளிடம் தோற்கும்படி ஏற்படும். ஆனால் இந்த விதமான செயற்கைப் ‘போஸ்’களை விட்டு விட்டு வேறு விதமாகவும் அவளை எழுதலாம். பல்கலைக் கழக மாணவி என்ற அவளது  தினசரி கோலத்தில் கூட அவள் அழகாய்த் தான் இருப்பாள். ஏன் சில சமயம் அவள் வீட்டிலிருப்பது போல் அவள் சிற்றிடையை அழுத்திக் காட்டும் அவளது பெரிய பூவிட்ட ‘கவுனை’யோ, பாவாடை சட்டையையோ அணியச் செய்து, அந்தத் தோற்றத்தில் கூட அவளைத் தீட்டலாம். இன்னும் குற்றமற்ற மலர் போல் அவள் தோன்ற வேண்டுமாயின் தாவணி அணியச் செய்து அந்தத் தோற்றத்தில் நாலைந்து வர்ணங்களில் அவளை வானவில் போல் கூட வரைந்து விடலாம். ஏன், காலோடு காலாக ஜட்டி, உடம்பின் மேடு பள்ளங்களையும், வளவு நெளிவுகளையும் கவினுறக் காட்டும் ‘ஜீன்ஸ்’ என்னும் மெல்லியலார்  காற்சட்டையை அணியச் செய்தும் அவளை எழுதலாம். “ஆனால் இவற்றில் எவ்வாறு நான் அவளைத் தீட்டப் போகிறேன்? அவளுக்கு எல்லம் அழகாய்த் தானிருக்கும். என்னால் இதில் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லையே! என்ன செய்வேன்?” என்று சிறிய பிரச்சினைகளை எல்லாம் பெரிதுபடுத்திக் கொண்டு, சிறு பெண் போல் கவலைப் பட்டான் அவன். இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகள் எழும்போது, அவன் கலந்தாலோசிக்கும் அவனது நண்பன் சுரேஷிடம் இதைப் பற்றிக் கலந்தாலோசிக்கலாமென்றாலோ, சில காலமாகச் சுரேஷைச் சந்திப்பதே அரிதாகிவிட்டது. சீமைக்கு மேல் படிப்பிற்காகப் போவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த அவன் விசா கந்தோருக்கும் தானாதிபதி காரியாலயங்களுக்கும் வெள்ளவத்தையிலிருந்த அவனது உறவினர் கடைக்குமிடையே பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருந்தான். அத்துடன் இது போன்ற சின்ன விஷயத்தை அவனிடம் பேச ஸ்ரீதருக்கு முன்னில்லாத வெட்கங் கூட இப்பொழுது பிறந்திருந்தது!

இவ்வாறு ஸ்ரீதர் கலங்கிக் கொண்டிருக்க, பத்மாவோ தான் அண்மையில் சில விஷயங்களில் எவ்வளவு துணிவாக நடந்து கொண்டாள் என்பதை நினைந்து நினைந்து வியந்து கொண்டிருந்தாள். பெண்களுக்கு இயல்பாயில்லாத ஆண்மையுணர்ச்சியுடன் தான் காரியங்களைச் செய்து வருவதாக அவளுக்குப்பட்டது. உதாரணமாக அவள் ஸ்ரீதருடன் இரண்டு தடவைகள் தந்தைக்குத் தெரியாமல் கள்ளமாக வெளியே போய்விட்டு வந்தமை அவளுக்கே அளவிட முடியாத ஆச்சரியத்தைத் தந்திருந்தது. ஒன்று ஐஸ்கிறீம் பார்லருக்குப் போய் வந்தமை, மற்றது தெகிவளை மிருக வனத்துக்குப் போய் வந்தமை. “அதுவும் சும்மா போய் விட்டு வந்தேனா? பார்ப்பவர்கள் புதிதாக மண முடித்த இளம் ஜோடிகள் என்று எண்ணும்படி உடலோடு உடல் உராய, மிருக வனத்தில் என்னென்னவெல்லாம் செய்து, எதை எதை எல்லாம் பேசி, எப்படி எப்படி எல்லம் நடந்துகொண்டோம்!” என்று சிந்திந்தாள் அவள். “ஆனால் நான் இப்படி அப்பாவுக்குத் தெரியாமல் நடந்தது சரியா? அது அவரை ஏமாற்றியது போலத்தானே? என்றாலும் காதல் விஷயங்களைப் பெற்றோரறியும்படியாகச் செய்ய முடியுமா? இந்தச் சிக்கலால் தான் பல பெண்களும் ஆண்களும் காதல் புரிவதற்கே அஞ்சிக் காதல் புரியாமலே இருந்து விடுகிறார்கள். ஆனால் அதுவும் தப்புத்தான். வாழ்க்கையின் முக்கியமான அனுபவமொன்றைப் பெறாவிட்டால் அந்த வாழ்க்கையின் பயன் தான் என்ன? அதனால் தான் அந்தக் காலத்திலிருந்தே காதலருக்குக் களவு முறைகளை அனுமதித்துள்ளார்கள் நமது முன்னோர்கள். பழைய காலத்திலும் களவு காதலில் ஈடுபட்ட தலைவி தன் பெற்றோரை ஏமாற்றத் தானே செய்தாள்? இன்று நான் அப்பாவை ஏமாற்றுகிறேன். நிச்சயம் எனக்குப் பிறக்கும் மகனும் மகளும் கூட எனக்குத் தெரியாமலே இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யத்தான் செய்வார்கள். அவர்கள் என்னை ஏமாற்றுவார்கள். இதுதான் உலக நியதி போலும்” என்று கூட நினைத்தாள் அவள்.

ஆனால் ஸ்ரீதருடன் படமெழுதுவதற்காகக் கடற்கரைக்கு மேற்கொள்ளவிருந்த பிரயாணத்தையும் மிருகவனத்துக்குச் சென்றது போலவே கள்ளத்தனமாகத் தந்தைக்குத் தெரியாமல் செய்வது சரியா? -  தற்செயலாக அப்பாவுக்குத் தெரிந்த யாராவது தன்னை ஸ்ரீதருடன் அங்கே கண்டுவிட்டு, அதை அப்பாவிடம் வந்து சொன்னால் நிலைமை என்ன? விஷயங்கள் எவ்வளவு குளறுபடியாகி விடும்? உண்மையில் அப்பா நான் ஸ்ரீதருடன் அளவாக ஊர் சுற்றுவதையோ, நெருங்கிப் பழகுவதையோ ஆட்சேபிக்கா மாட்டாரென்றாலும், இன்னும் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் படிப்பென்ன ஆகும் அன்று அஞ்சமாட்டாரா? மேலும் மண முடிக்காது ஆணோடு நெருங்கிப் பழகும் பெண் தன்னைப் பெரிய ஆபத்துகளுக்கு ஆளாக்கிக் கொள்ளவும் கூடும். நெருங்கிப் பழகும் ஆண் பெண்கள் எவ்வளவு நாட்களுக்குக் களவொழுக்கத்தில் ஈடுபடாமல் இருக்க முடியும்? அவ்வித விஷப் பரீட்சைகளினால் முடிவில் பெண் தாய்மை நிலையை அடைந்து விட்டால், அதனால் ஏற்படும் சமுதாய அபவாதத்தையும் சிறுமையும் எப்படிச் சமாளிப்பதென்ற கவலையும் பொறுப்புள்ள தந்தை என்ற முறையில் அப்பாவுக்கு இருக்குமல்லவா? - இவ்விதம் பலவாறு சிந்தித்த பத்மாவுக்கு நிலைமையைச் சமாளிக்க ஒரே ஒரு வழிதான் தென்பட்டது. அடுத்த வீட்டு அன்னம்மாவைத் துணைக் கொண்டு பிரச்சினையைத் தீர்க்க முயல வேண்டுமென்பதே அது.

அன்னம்மா அடுத்த வீட்டு அன்னம்மா என்றே பரமானந்தர் வீட்டிலும், அன்னம்மா வீட்டுக்கு அந்தப் புறமிருந்த அவிஸ் நோனா வீட்டிலும் அழைக்கப்பட்ட போதிலும் பரமானந்தர் வீட்டைப் பொறுத்த வரையில் அவள் உண்மையில் ஓர் உள் வீட்டு உறவுக்காரியாகவே இருந்தாள். நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் பத்துத் தடவைகளாவது பின்புற வாயில் வழியாகப் பரமானந்தர் வீட்டுக்கு வந்து போகும் பழக்கத்தையுடைய அன்னம்மா புருஷனை இழந்து விதவையான காலம் தொட்டு, அந்த முழுத் தோட்டத்துக்கும் கொலீஜ் ரோட் தபால் கந்தோருக்குப்  பக்கத்தேயிருந்த அந்தோணியார் போசன சாலைக்கும் உருசியான தோசைகளைச் சுட்டுக் கொடுத்துத் தனக்கென்று பெரும் புகழ் சம்பாதித்துக் கொண்டவள். அது மட்டுமல்ல, பரமானந்தர் வீட்டுக்கும், 48/33ம் இலக்க வீட்டிலிருந்த பாடசாலை வாத்தியார் மூவருக்கும் வெற்றிலைக் கடை வேலாயுதக் கிழவனுக்கும் அவள் தான் மத்தியான உணவு கொடுத்துக் கொண்டிருந்தாள். இவற்றால் கிடைக்கும் வருமானத்தை வைத்தே அவளது செலவுகளும், அவளது வேலையில்லாத் ஒரே மகனான ‘திராவிடதாசன்’ என்று தன் பெயரை ‘ரிப்பெயர்’ செய்திருந்த சிங்கார வேலுவின் சினிமாச் செலவுகளும் தடங்கலில்லாமல் நடைபெறக் கூடியதாயிருந்தன.

பத்மா அன்னம்மா வீட்டுக்குப் பின்புற வாசல் வழியாகப் போன போது அன்னம்மா அடுப்பு வெக்கையில் உட்கார்ந்து தோசைகளைத் தடவைக்கு இவ்விரண்டாகச் சுட்டு அடுக்கிக் கொண்டிருந்தாள். புகைக்கும் நல்லெண்ணெய்த் துணியால் தோசைக் கல்லை அழுத்தித் துடைத்து, அகப்பையால் அதில் தோசை மாவை ஊற்றிச் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தபோதிலும், வாய்க்கு ஓய்வு கொடுக்காமல் அடுப்புக்குப் பக்கத்தில் ஒரு பலகையில் உட்கார்ந்திருந்த அவிஸ் நோனாவுடன் ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தாள் அவள். அந்தோணியார் போசன சலைக்கு அனுப்ப வேண்டியதை நன்றாக விடியு முன்னரே அவள் சுட்டு அனுப்பி விடுவது வழக்கம்.

இப்போது அவள் சுட்டுக் கொண்டிருந்தது தோட்டத்து “ஓடர்”களுக்காகவும் மகன் திராவிடதாசன் உண்பதற்காகவும் தான். தோசைக் கல்லில் ‘சொய்’யென்று சுடுபட்டுக் கொண்டிருந்த அன்னம்மாவின் இரட்டைத் தோசைகளின் வாசம் தோட்டத்திற் பாதி தூரமாவது வியாபித்துக் கொண்டிருக்க, அரட்டைக்கார அவிஸ், தோட்டத்துப் புதினங்களைப் பற்றித் தனது காலை விமர்சனத்தை அப்பொழுது நடத்திக் கொண்டிருந்தாள்.

அன்னம்மாவின் சூடான தோசைகளின் உருசிக்கு எவ்விதத்திலும் அவிசின் சூடான விமர்சனக் குறிப்புகளின் உருசி குறைந்ததென்று சொல்ல முடியாது. அவள் தனக்குத் தெரிந்த சிங்களத் தமிழில் தனது பேச்சுகளை நிகத்திக் கொண்டிருக்க, அன்னம்மாவும் தனக்குத் தெரிந்த தமிழ்ச் சிங்களத்தில் தன் கருத்துகளை இடையிடையே கூறிக் கொண்டிருந்தாள். அவர்கள் உண்மையில் அங்கே ஒருவர் மொழியை ஒருவர் கொலை செய்து கொண்டிருந்தார்கள். ஒருத்தியின் மொழிக் கொலையை மற்றவள் பழிவாங்குவது போல இருந்தது அவர்கள் பேசிக் கொண்டிருந்த தோரணை. அன்னம்மா தனக்குச் சிங்களம் தெரியுமென்பதைப் பிரகடனம் செய்யவும், அவிஸ் தனக்குத் தமிழ் தெரியும் என்பதை அறிவிக்கவும் அவ்வாறு ஒருத்தி மொழியில் மற்றவள் பேசிக் கொண்டாள் போலும்!

குசுமா வீட்டுக்கு எதிர் வீட்டிற்குப் புதிதாக வந்திருக்கும் ஓர் இ. போ. ச. பஸ்கண்டக்டர் குசுமாவுக்கு வலை வீசுவதாகக் கூறிய அவிஸ், “பாவம், அவனுக்குக் குசுமாவுக்கு ஒரு கள்ளப் பிள்ளை இருப்பது இன்னும் தெரியாது போல” என்று குறிப்பிட்டாள். “ஆனால் அந்த இளந்தாரி தான் என்ன செய்வான்? குசுமா தங்கள் வீட்டு வாசலிலே எந்த நேரமும் நின்று கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தால் ஆண் பிள்ளையால் சும்மா இருக்க முடியுமா?” என்று கேட்டாள் அவிஸ். அன்னம்மா அவிஸ் காதில் குனிந்து “குசுமாவுக்குச் சரியான மோகினிப் பிசாசுதான் பிடித்திருக்கிறது. முந்தா நாள் சிங்காரம் குளிக்காம்பரைக்குக் குளிக்கப் போன போது, வழியிலே இரண்டு பேரும் ஏதோ சிரித்துச் சிரித்துப் பேசுவதை நான் இங்கே வாசலிலே இருந்தே பார்த்து விட்டேன். அவர் குளிச்சிட்டு வந்ததும் “உனக்கென்னாடா குசுமாவோடு பேச்சு! மற்றவன் பிள்ளையை வளர்க்கப் போகிறாயா?” என்று சரியாகக் கொடுத்தேன். “ஆள் இப்போது பயந்து போய் விட்டார். அடங்கிப் போயிருக்கிறார்” என்று இரகசியமாகக் குசுகுசுத்தாள்.

பத்மா அன்னம்மாவின் வீட்டின் உட்புறத்தில் திராவிடதாசன் இருக்கிறானா என்று பார்த்த போது முன்னாள் இரவு எம்.ஜி.ஆர். படம் இரண்டாம் காட்சி பார்த்த களைப்பால் அவன் அங்கே இருந்த ஒரு சாக்குக் கட்டிலில் இன்னும் நீண்டு படுத்துக் குறட்டை விட்டுக் கொண்டிருந்ததைக் கண்டாள். இதற்கிடையில் அவிஸ் பிற்காளில் தோசையோடு புறப்படத் தயாராகிவிட்டாள். அவள் அங்கிருந்து போகு முன்னர் பத்மாவின் கன்னத்தைத் தன் கைகளால் கிள்ளி, “பெம்ப்பிளை பெரிய பெம்பிளையா வளர்ந்திட்டா, எப்போ கலியாணம்” என்று வேடிக்கையாகக் கூறி விட்டுப் போனாள். பத்மா பதிலுக்கு அவளைத் தன் கைகளால் குட்ட்ப் போவது போல் பாசாங்கு செய்தாள்.

அன்னம்மாவுடன் தனிமையில் விடப்பட்டதும் பத்மா “அன்னம்மாக்கா நீங்கள் ஒரு பெரிய உதவி எனக்குச் செய்ய வேண்டும். செய்வீர்கலா?” என்றாள்.

“என்ன உதவி தங்கச்சி! சொல்லு, செய்கிறேன்.” என்றாள்.

“எனக்குச் சொல்ல வெட்கமாயிருக்கிறது!”

"அப்படியானால் எனக்கு விஷயம் என்னவென்று தெரியும். ஸ்ரீதரைப் பற்றி அப்படித்தானே?”

“முற்றிலும் சரி. உங்களுக்குச் சாஸ்திரம் கூடத் தெரியும் போல்!”

“தெரியும். தோசைச் சாஸ்திரம். தோசை ‘சொய்’யென்று சப்தம் போட்டால் அது ஸ்ரீதரைப் பற்றி என்று அர்த்தம்.”

தோட்டத்திலே அன்னம்மா ஒருத்திக்குத் தான் ஸ்ரீதர்-பத்மா பற்றிய விஷயங்கள் முற்றிலும் தெரியும். பரமானந்தரும் பத்மாவும் அவற்றை அவளுக்கு மறைக்க முயற்சி செய்யாமல், எல்லாவற்றையும் கூறியிருந்தார்கள். ஒரு நாள் அன்னம்மா ஸ்ரீதரைப் பார்த்துவிட்டு “மாப்பிள்ளை என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும்! சினிமா நடிகன் தோற்றுப் போவான் உன் ஸ்ரீதரிடம்.” என்று கூடக் கூறியிருக்கிறாள். அன்று தொடக்கம் பத்மாவுக்கு அன்னம்மா மீதுள்ள அன்பும் மதிப்பும் பல நூறு மடங்கு அதிகரித்துவிட்டன!

பத்மா அன்னம்மாவிடம் “அக்கா! நாளை என்னைத் தன்னோடு கடற்கரைக்குப் ‘பிக்னிக்’ போக அழைத்திருக்கிறார் ஸ்ரீதர். எப்படியும் போக வேண்டும். நான் நினைத்தால் அப்பாவுக்குத் தெரியாமல் போய் விடலாம். ஆனால் அது சரியில்லை. அப்பாவைக் கேட்டால் நிச்சயம் மறுக்க மாட்டார். ஆனால் எப்படியக்கா வெட்கமில்லாமல் நான் இது பற்றி அப்பாவிடம் பேசுவேன்? நீ சொல்லி விடுகிறாயா?” என்றாள்.

“ஆ, இது தானா? நீ போ. தோசை சுட்டு முடித்ததும் நான் வந்து பேசுகிறேன். எப்படியாவது நாளைக்கு ஸ்ரீதரோடு உன்னை ஊர் சுற்ற அனுப்பினால் சரிதானே?”

பத்மா திருப்தியோடு புன்னகை செய்து “ஆம்” என்று தலை அசைத்தாள்.

“ஆனால் ஒன்று. குசுமா போல் தெரியாத்தனமாக நடந்து கொள்ளாதே. கல்யாணம் ஆகும் வரை ஆண் பிள்ளைகளோடு பழகுவதே ஆபத்து. ஆனால் இப்போதெல்லாம் புது மாதிரி. என்றாலும் புத்திசாலித் தனமாக நடந்து கொள்.” என்றாள் அன்னம்மா.

பத்மா அங்கிருந்த சூடான தோசை ஒன்றில் ஒரு துண்டைப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு “வருகிறேன்” என்று புறப்பட்டாள்.

அன்று மத்தியானம் வழக்கம் போல் பத்மா வீட்டுக்கு உணவு கொண்டு வந்த அன்னம்மா சுருட்டுப் பிடித்துப் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த பரமானந்தரிடம் விஷயத்தை மெல்ல ஆரம்பித்தாள்.

“ஸ்ரீதர் பத்மாவை நாளைக்கு எங்கோ ‘பிக்னிக்’ போக அழைத்திருக்கிறானாம். அதை உங்களிடம் பேச பத்மாவுக்கு வெட்கம். தாயில்லாத பிள்ளை. என்ன செய்யும்.? என்னிடம் வந்து சொல்லிற்று. நான் உங்களிடம் பேசி நாளைக்கு எப்படியும் அவளை ஸ்ரீதருடன் அனுப்பி வைப்பதாகச் சொன்னேன்.”

“ஓ, அப்படியா? தாயில்லாத பிள்ளைக்கு நீதான் அப்போ தாய். சரி, போகச் சொல்லு. ஆனால் ஓர் ஆண் பிள்ளையோடு எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று புத்தி சொல்லிக் கொடுக்க மட்டும் மறக்க வேண்டாம். ஸ்ரீதர் யோக்கியமான பையன். ஆகவே இதில் நாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்றார் பரமானந்தர்.

அன்னம்மா “நான் பத்மாவுக்கு இந்த விஷயங்களை பற்றி எவ்வளவோ புத்திமதிகள் முன்னரே சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அத்துடன் நல்ல பெண். இல்லாவிட்டால் உங்களுக்குத் தெரியாமலே பள்ளிக்குப் போவது போல் கள்ளத்தனமாகப் போயிருக்கலாமல்லவா? அப்படித்தானே இந்தக் காலத்தில் ஆணென்ன, பெண்ணென்ன,  பிள்ளைகள் செய்கின்றன?” என்றாள்.

பரமானந்தர் “அது எனக்குத் தெரியும் அன்னம்மா. இல்லாவிட்டால் நான் ஒரு பெரிய குழந்தைக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்திருப்பேனா என்ன? பத்மாவுக்கு மிகவும் நிதான புத்தி” என்றார்.

அன்னம்மா போனதும் பரமானந்தர் பத்மாவின் புத்திசாலித்தனத்தையும் களவின்மையையும் வியந்து கொண்டார். மற்றப் பெண்கள் போல் சுதந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, ஊர் சுற்றாமல் பத்மா எவ்வளவு அடக்கமாக நடந்து கொள்கிறாள் என்று அவர் மெச்சினார்! பாவம் பரமானந்தர், இளமையின் சூழ்ச்சிகள் அவருக்கு என்ன தெரியும்? ஐஸ்கிறீம் பார்லரிலும், மிருக வனத்திலும் பத்மாவும் ஸ்ரீதரும் செய்து கொண்ட காதற் செய்கைகளை அவர் கண்டிருந்தால், அவர் அப்படி நினைத்திருப்பாரா, என்ன?

அடுத்த நாட் காலை பத்மா குளித்து முழுகி அரம்பை போல் அலங்காரம் செய்து கொண்டு அப்பாவிடம் வந்து “அப்பா! நான் போய் வருகிறேன். மூன்று மணிக்கு வந்து விடுவேன்” என்ற பொழுது அவர் தாராளமான மனதோடு “இருட்டு முன் வந்தால் போதும். ஸ்ரீதரிடம் நேரமிருக்கும்போது இங்கு வரச் சொல்” என்று குறிப்பிட்டார்.

பத்மா துள்ளூம் நெஞ்சுடன் வீதியின் இறங்கி நடக்க, மலர்ந்து மணம் வீசும் சிவந்த ரோஜா போல் விளங்கும் தன் பருவ மகளின் இன்றைய நிலையைக் காண அவளது  அன்புத் தாய் இப்பொழுது தன் அருகில் இருக்க, தான் கொடுத்து வைக்கவில்லையே என்று கவலையடைந்த பரமானந்தர், ஈரமாகி வந்த தன் கண்களிரண்டையும் தனது விரல்களால் கசக்கிக் கொண்டார்.

ஸ்ரீதரும் பத்மாவும் ஏறக்குறையப் பத்து மணிக்குச் சூரிய ஒளியில் பளிச்சென்று விளங்கிய கல்கிசைக் கடற்கரையை அடைந்த போது, ஸ்ரீதர் அங்கே காணப்பட்ட திரளான ஜனங்களைக் கண்டு திகைத்து விட்டாள். அவனுக்கு அங்குள்ள ஹோட்டல் நன்கு பழக்கப்பட்ட இடமாதலால், நேரே காரை ஹோட்டல் வளவுக்குள் கொண்டு போய் அங்கு நின்ற பெருந் தொகையான கார்களுக்கு நடுவே எப்படியோ ஓரிடத்தைப் பிடித்து நிறுத்தி விட்டு, பத்மாவைத் தன் ஒரு கரத்தால் அணைத்த வன்ணம், ஹோட்டல் நந்தவனத்தில் மெத்தென்ற மரகதப் புற்றரையில் தென்னை மரங்களுக்கு இடையே இடப்பட்டிருந்த மேசைகளை நோக்கி நடந்தான். கடலில் நீந்துவதில் பிரியமுள்ள ஸ்ரீதர் வாரத்துக்கு ஒரு தடவையோ, இரு தடவையோ ஹோட்டலிலிருந்த ஸ்நான மண்டபத்துக்கு வருவது வழக்கமானதால், அங்குள்ள ஊழியர் பலருக்கு அவனை நன்கு தெரிந்திருந்தது. ஸ்ரீதரையும் பத்மாவையும் கண்டதும் அவர்களிலே மிகவும் வயோதியனான அல்பேர்ட் ஸ்ரீதரை நோக்கி வந்து, பெரிய பூக்குடை ஒன்று பொருத்தப்பட்டிருந்த ஒரு மேசைக்கு அவனை வழிகாட்டிச் சென்றான். பத்மாவுக்கோ இவை எல்லாம் புதிய அனுபவங்கள். உண்மையில் இப்படிப்பட்ட பெரிய ஹோட்டலுக்கு அவள் போனது இதுவே முதல் தடவை. இருந்த போதிலும், எந்த இடத்துக்கும் ஏற்பப் புத்திசாலித்தனமாகவும் சலனமில்லாமலும் நடக்கும் நாகரிகப் பண்பு என்றுமே அவளுக்கு இயற்கையாக அமைந்திருந்ததால், அவள் மிக நாசுக்காகவே நடந்து கொண்டாள். இன்னும் அவளது பேரெழில் அவள் நாகரிகமாக நடக்காவிட்டால் கூட நாகரிகமாக நடப்பது போன்ற பிரமையை யாருக்கும் ஏற்படுத்தவே செய்யும். இந்த வகையில் தேக வனப்பு ஆணுக்கென்ன பெண்ணுக்கென்ன, பல இடங்களில் பல செளகரியங்களைத் தரத் தான் செய்கிறது.

பத்மா கம்பீரமாக உயர்ந்து தோன்றிய ஹோட்டலையும் , அதைச் சுற்றியிருந்த தென்னைகள் நிறைந்த சோலையையும், சிமெந்தினால் அழகுற அமைக்கப்பட்டு, நிலத்துக்குத் தக்கபடி உயர்ந்தும் தாழ்ந்தும் சில இடங்களில் படிக்கட்டுகளுடனும் விளங்கிய நடைபாதைகளையும், அவற்றின் ஓரங்களை அலங்கரித்த மலர்ப் பாத்திகளையும் ஹோட்டலுக்குப் பின்னே மல்லிகை மலர் போன்ற நுரையோடு கரை நோக்கித் திரண்டு வந்து வெடித்துக் குமுறிய அலைகளினால் உயிரோட்டம் கொண்டு விளங்கிய நீலக் கடற் படுதாவையும் பார்த்துப் பார்த்துப் புளங்காகிதமடைந்தாள். போதாதற்குக் கடற்காற்று வேகமாக வீசி வந்து உடல் முழுவதையும் தழுவி,

தலை மயிரை முன்னும் பின்னும் அலைய வைத்து, உள்ளத்துக்கும் உடம்புக்கும் தென்பையும் இன்பச் சிலிர்ப்பையும் அளித்து இது பூலோகமோ அன்றிச் சுவர்க்க பூமியோ என்ற ஐயப்பட்டை அவளுக்கு ஏற்படுத்தியது.

ஆனால் இயற்கையும் செயற்கையுமான இந்தக் காட்சிகளை விட அந்த ஹோட்டலில் அப்பொழுது காணப்பட்ட மனிதர்களும் அவர்களது நவ நாகரிகப் போக்கும் தான் அவளை அதிகமாக கவர்ந்து ஒருவித மயக்கத்தை அவளுக்குக் கொடுத்தன. பல நூற்றுக் கணக்கான கவலையேயற்ற கந்தர்வர், கின்னர்கள், கிம்புருடர் போல் அங்கு திரிந்து கொண்டிருந்தார்கள். பல ஆண்களும் பெண்களும் குறுகிய நீச்சலுடைகளை அணிந்து சிரித்துப் பேசிக் குறும்புகள் செய்து குதூகலித்த காட்சி, தான் இருப்பது இலங்கையா அல்லது ‘மியாமி’ அல்லது ‘பிரைட்டன்’ கடற்கரையா என்று அவளை எண்ண வைத்தது. உண்மையில் இப்படிப்பட்ட காட்சிகளை மேற்சொன்ன கடற்கரைகள் பறிய ஆங்கில சினிமாப் படங்களில் தான் அவள் இதுவரை கண்டிருக்கிறாள். இலங்கையிலேயே அவை போன்ற இடங்கள் இருக்கின்றன என்பது அவளுக்கு இது வரை தெரியாது. பார்க்கப் போனால் கொட்டாஞ்சேனைக்கும் கல்கிசைக்கும் வெகு தொலைவில்லை. இருந்த போதிலும் இவற்றை எல்லாம் இதுவரை அறியாது, கொழும்பிலேயே ஓர் அசல் பட்டிக்காடு மாதிரித் தானே நான் இருந்திருக்கிறேன் என்று வெட்கமும் அதிசயமும் அடைந்தாள் அவள். ஸ்ரீதரிடம் “இந்த இடம் எந்த நாளும் இப்படிக் கோலாகலமாகத்தான் இருக்குமோ?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் அவள். ஸ்ரீதர் புன்னகையோடு, “இல்லை, இன்று இங்கே ஒரு கார்னிவல் அல்லது களியாட்டு நடக்கிறது. கடற்கரைக் களியாட்டு எனது அதற்குப் பெயர். அதனால் தான் இவ்வளவு ஜனங்கள். இல்லாவிட்டால் குறைவுதான்” என்றான்.

பத்மா இப்பொழுது கண்களை நாலு புறமும் செதுக்கி நீச்சலுடையிற் சென்ற ஆண்களையும் பெண்களையும் அவர்களறியாமலே நன்கு அவதானிக்கலானாள். அவர்களில் சிலர் ஐரோப்பியர், சிலர் பறங்கியர், சிலர் சிங்களவர்கள், சிலர் மலாயர்கள். தமிழர்கள், தென்னிந்தியரும் சரி, இலங்கையரும் சரி அங்கு இருக்கிறார்களா என்பதை அவள் ஆவலுடன் அவதானித்தபோது ஒரு சிலர் மட்டும் அங்குமிங்கும் காணப்படவே செய்தார்கள். ஓர் இளம் ஜோடி அவளுக்கும் சமீபமாகச் சென்ற போது அவர்கள் தமிழர்கள் என்பதை எப்படியோ தெரிந்து கொண்டு அவர்களை மிகவும் கவனமாக அவதானித்தாள் பத்மா. அவர்களில் ஆண் கம்பீரமாகவும் மா நிறமாகவும் காணப்பட்டான் என்றாலும் அவனால் ஸ்ரீதருக்குக் கிட்ட வர முடியாது. பகட்டான பச்சை நிற ஸ்நான உடையும், கண்களில் கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருந்தால் அவனுக்குப் பக்கத்திற் சென்ற பெண்ணோ மிகவும் கறுப்பு. ஓரளவு பத்மாவின்  தோழி தங்கமணியைப் போலத் தோன்றிய அவளது விட்டுப் போன்ற உடலை ஒரு மஞ்சள் நிற நீச்சலுடை இறுகப் பற்றியிருந்தது. அது அவளுக்கு ஒரு சொகுசான தோற்றத்தைத் தந்த போதிலும் அவள் மட்டும் சிவப்பாகவும் அழகாகவும் இருந்திருந்தால், எவ்வளவு நன்றாயிருக்கும் என்று யோசித்தாள் பத்மா.

அந்த யோசனையைத் தொடர்ந்து தானும் தனது கட்டழகன் ஸ்ரீதரும் நீச்சலுடை அணிந்து கடல் மண்ணில் துள்ளி விளையாடித் திரிவது போன்ற கவின் மிக்க கனவொன்றும் அவள் மனதில் மிதந்து வந்தது!

ஹோட்டல் நந்தவனத்தில் பல இடங்களில் ‘டைகர் கிளப் பீச் கார்னிவல்’ என்ற சிவப்புக் கொட்டை எழுத்துகளில் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக் கொடிச் சீலைகள் மரங்களுக்கு இடையே உயரமான இடங்களில் இறுக இழுத்துப் பாதைகளின் குறுக்கே கட்டப்பட்டிருந்தன.

அவற்றையும் கவனித்தாள் பத்மா. சில சோப்புக் கம்பெனிகளும், குளிர்பானக் கம்பெனிகளும் அங்குமிங்கும் தமது விளம்பரங்களையும் கொடிச் சீலைகளிலே பொறித்துக் கட்டியிருந்தன.

பத்மாவுக்கு அவள் கண்ட காட்சிகள் பெரிய கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தன. அவளது மறைந்த கிடந்த ஆசைக் கனவுகள் பல உயிர்க் கொண்டு மனதில் கூத்தாடத் தொடங்கியிருந்தன! ஆனால் ஸ்ரீதருக்கோ அவ்வித அனுபவம் ஏற்படவில்லை. அவன் அடிக்கடி இப்படிப்பட்ட களியாட்டுகளில் கலந்து அனுபவப்பட்டவனாதலால், அவன் உணர்ச்சிகள் கட்டுக்குள்ளேயே இருந்தன. அவனுக்கு அப்போதிருந்த கவலை ஒன்றே ஒன்றுதான். இந்தச் சந்தடியில் எப்படிப் பத்மாவைப் படம் எழுதும் தனது திட்டத்தை நிறைவேற்றுவது என்பதே அது. கிழவன் அல்பேர்டிடம் உண்பதற்குச் சில காரமான சிற்றுண்டிகள். ஐஸ்கிறீம், கொக்கோக் கோலா ஆகியவற்றைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டு, பத்மாவின் செங்காந்தள் விரல்களைத் தன் விரல்களால் வருடியவாறு “பத்மா! என்ன கனவு காண்கிறாய்” என்றான் புன்னகையோடு.

ஸ்ரீதரும் பத்மாவும் வீற்றிருந்த மேசை மேட்டுப் பாங்கான ஓர் இடத்தில் இருந்தது. அங்கிருந்தவாறு அவர்களால் மக்கள் திரண்டு குதூகலித்துக் கும்மாளமடித்துக் கொண்டிருந்த கடல் ஓரத்தை நன்கு கவனிக்கக் கூடியதாயிருந்தது. ஸ்ரீதர் நீலக் கல் போல் வீசிய கடலைப் பத்மாவுக்குச் சுட்டிக் காட்டினான். அங்கே பெரிய ஒலிபரப்பிகள் ஆங்கில படப் பாப் பாட்டுகளை முழங்கிக் கொண்டிருந்தன. அதில் திருப்தியுறாதவர்கள் போன்று சில இளைஞர்கள் கையில் வாத்தியங்கள் ஏந்திப் பாட்டுகள் பாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர்  ஸ்நான  உடைகளிலும் மற்றும் சிலர் அழகான புஷ் ஷேர்ட்டுகளிலும் காணப்பட்டார்கள். ஒரு யெளவனப் பெண் ‘ஜீன்ஸ்’ அணிந்து கொண்டு ஓர் ஆடவனுடன் ஜோடியாக ‘டுவிஸ்ட்’ என்னும் நடனத்தை ஆடிக் கொண்டிருந்தாள். சிலர் கடலில் குளித்து விட்டு ‘பாத்’ கவுன் அல்லது பெரிய வர்ணக் கோடுகளிட்ட  துவாய்களால் உடல்களைப் போர்த்திக் கொண்டு ஸ்நான மண்டபத்துப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள். நீச்சலுடை அணிந்த ஒரு சில ஆண்களும் பெண்களும் வெண்மணலில் நீண்ட வர்ணத் துவாய்களை விரித்துக் கண்களைக் கறுப்புக் கண்ணாடியாலோ, கைக் குட்டைகளாலோ மறைந்துக் கொண்டு சூரிய ஸ்நானம் செய்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் சிவப்பு, பச்சை, மஞ்சள் என்ற வர்ணங்களுடன் கூடிய பெரிய குடைகளை விரித்து, அவற்றின் கீழே நிழலில் படுத்துக் கிடந்தார்கள்.  பிஞ்சுக் குழந்தைகளும் சிறு பிள்ளைகளும் கடற்கரை மணலில் வீடு கட்டியும் வண்ண வண்ண வாளிகளில் மணலையும் கடல் நீரையும் அள்ளித் தெளித்தும் விளையாடிக் கொண்டிருக்க, ஏராளமான ஆண், பெண்கள், குமிறி நிமிர்ந்து குதிரைகள் போல் வந்து கொண்டிருந்த அலைகளுக்கிடையே துள்ளி எழுவதும் நீந்துவதும் நீந்த முயல்வதுமாகக் காணப்பட்டார்கள்.

பத்மா தன் முன் விரிந்து கிடந்த இவ்வின்ப உலகத்தின் மாயையில் தன்னை மறந்து சொக்கிக் கிடந்தாளாயினும், அவள் முன்னே நடந்து சென்ற பெண்களும் ஆண்களும் அணிந்திருந்த நீச்சலுடைகளின் ரகங்களை கவனிக்கத் தவறவில்லை. ஒரு சில பெண்கள் ‘உவன் பீஸ்’ - ஒற்றை ஆடை நீச்சலுடைகளை அணிந்திருந்தார்கள். மற்றவர்களோ  மார்புக்கு வேறு, இடைக்கு வேறென்று ‘டூ பீஸ்’ - இரட்டை ஆடை நீச்சலுடைகளை அணிந்திருந்தார்கள். இந்த இரட்டை ஆடை நீச்சலுடைகளில் சில மிகவும் குறுகியனவாகவும்  சிறியனவாகவும், இறுக்கமாகவும் காணப்பட்டன. இவற்றை அவள் பத்திரிகைகளில் வெளியிடப்படும் பெண்களின் கவர்ச்சிப் படங்களில் தான் முன்னர் பார்த்திருக்கிறாள். அவற்றின் பெயர் கூட அவளுக்கு நன்கு தெரியும். மூன்று நான்கங்குல அகலமே கொண்டன போல் காட்சி தரும் அவற்றின் பெயர் ‘பிக்கினி’- அவ்வித உடையணிந்து ஈரக் கடல் மண்ணில் உற்சாகமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பருவப் பெண்ணை அவள் ஸ்ரீதருக்குச் சுட்டிக் காட்டி “அதோ ஒரு பிக்கினி அணிந்த பெண்” என்றாள், சிரிப்போடு. ஸ்ரீதருக்கு அவளது குறிப்பு வேடிக்கையாயிருந்தது. அவன் புன்னகையோடு “இன்று உன்னை ஒரு பிக்கினி நீச்சலுடையில் தான் நான் படமெழுதப் போகிறேன்” என்றான் அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு.

பத்மா திடுக்கிட்டு விட்டாள். “என்ன நீச்சலுடையா? என்னால் முடியாது. நான் ஒரு போதும் அணியாத உடையை அணிய எனக்கு வெட்கமாயிருக்காதா? அத்துடன், நீச்சலுடை எங்கேயிருக்கிறது?” என்றாள் வியப்போடு.

இதற்கிடையில் அல்பேர்ட் உணவு வகைகளை மேசையில் கொண்டு வந்து வைக்க இருவரும் அவற்றை உண்டு கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்கள்.

“உடை கிடைக்குமா என்ற கவலை உனக்கு வேண்டாம். அவசிய்மானால் இங்கேயே எனது பத்மாவுக்கு நான் ஒரு நீச்சலுடையை தைத்துக் கொடுக்க மாட்டேனா, என்ன?” என்றான் ஸ்ரீதர் குறும்பாக.

பத்மா அவனது பகடி தனக்குப் பிடிக்கவில்லை என்பது போல் தன் முகத்தால் அழகு காட்டினாள். ஸ்ரீதரோ ஹோட்டலில் தங்களுக்கு வேண்டிய நீச்சலுடைகளை விலைக்கோ வாடகைக்கோ பெறலாம் என்று விளக்கினான். பத்மா ஆச்சர்யத்தோடு  “அப்படியா!” என்று வினவினாளானாலும், “நான் அவற்றை அணிய மாட்டேன்” என்று அடம் பிடித்தாள். வாய் தான் அடம் பிடித்தது. மனமோ தனக்கு முன்னே விரிந்து வரும் சந்தர்ப்பத்தை வரவேற்கவே செய்தது. என்றாலும் நீச்சலுடையை அணிந்து கொண்டு எவ்வாறு நாணமின்றி இவ்வளவு ஆட்களிடையே நடமாடுவது என்ற அச்சமும் அவளுக்கு இருக்கவே செய்தது. இருந்த போதிலும் நீச்சலுடையை அணிய ஆசை இருந்தால் எப்போதோ ஒரு நாள் நாணத்தைக் கட்டுப்படுத்தி அதை அணிந்து பார்க்கத்தானே வேண்டும்? அதற்கு இன்று ஒரு நல்ல ஆரம்ப நாளாகவே அவளுக்குத் தோன்றியது. இவ்வளவு பேர் அணிந்திருக்கும் ஓர் உடையைத் தானே நாம் அணியப் போகிறோம் என்ற எண்ணம் ஒரு புறமும், தனக்கு முன்னே பல பெண்கள் தங்கள் பெற்றோர் அண்ணன் தம்பிமார் முன்னிலேயிலேயே அணிந்து கொண்டு நடமாடுகின்ற ஓர் உடையாக அது காட்சியளித்ததும், அவளுக்கு தனது இயற்கையான நாணத்தைத் தான் வென்று விடலாமென்ற தைரியத்தைக் கொடுத்தது. இன்னும் இவ்வளவு கூட்டத்தில் நான் நீச்சலுடையில் செல்வதை மட்டும் யார் விசேஷமாகக் கவனிக்கப் போகிறார்கள் என்ற எண்ணமும், அப்படிக் கவனிப்பவர்களும் அதை அங்கீகரிப்பவர்களே  அல்லாமல் வெறுத்துக் கண்டிப்பவர்களல்லவே என்ற நினைவும் அவளது அச்சத்தைப் படிப்படியாகப் போக்கின. மேலும் ஸ்ரீதர் போன்று ஓர் ஆள் பக்கத்திலிருந்து வற்புறுத்தினாலொழியத் தான் ஆசையோடு விரும்பிய காரியந்தான் என்றாலும் நீச்சலுடையைத் தானே அணியும் தைரியம் தனக்கு ஒரு போதும் வராது என்பதும் அவளுக்குத் தெரியும். ஆகவே ஸ்ரீதர் இன்னும் இரண்டோர் தடவை வற்புறுத்தியதும் சந்தர்ப்பத்தை நழுவ விடாது நீச்சலுடையை அணியச் சம்மதிப்பதென்று தனக்குள்ளே தான் தீர்மானித்துக் கொண்டாள் அவள்.

இதற்கிடையில் ஸ்ரீதர் “பத்மா! இந்தச் சந்தை இரைச்சலில் வைத்து உன்னைப் படமெழுதுவது முடியாத காரியம். நாங்கள் கடற்கரை ஓரமாக நடந்து சென்றால் ரெயில் பாதைக்கருகில் ஒரு தென்னை மரக் கூட்டத்துக்குப் போகலாம். ஸ்நான உடை வாங்கிக் கொண்டு அங்கு புறப்படுவோமா?” என்றாள்.

பத்மா ஒரு பதிலும் சொல்லாமல் பேசாமலிருந்தாள். அது சம்மதத்தின் அறிகுறியே என்பது ஸ்ரீதருக்கு நன்கு தெரியும். ஆகவே அல்பேர்டிடம் ‘பில்’ பணத்தையும் மேலதிகமாக ரூபா ஐந்தைப் பரிசாகவும் வழங்கி விட்டு, ஹோட்டலில் இருந்த காளிதாஸ் துணிக் கடைக்குப் பத்மாவை இழுத்துக் கொண்டு சென்றான் அவன்.

துணிக் கடையிலிருந்த வட இந்திய விற்பனையாளன் ஸ்ரீதர்-பத்மா ஜோடியை மிகவும் மரியாதையுடன் வரவேற்று “என்ன வேண்டும் சார்” என்று விநயமாகக் கேட்டான்.

“இதோ என் பெண்மணிக்கு ஒரு நீச்சலுடை வேண்டுமாம்” என்றான் ஸ்ரீதர்.

பத்மாவுக்கு அவன் பேச்சு வெட்கத்தை உண்டு பண்ணியதாயினும், ஒருவாறு சமாளித்துக் கொண்டாள்.

விற்பனையாளன் உடனே கடையிலிருந்த பல ரகமான நீச்சலுடைகளையும் காட்சிப் பெட்டிக் கண்ணாடி மீது பரப்பினான். பல நாகரிகமான ஒற்றை ஆடை, இரட்டை ஆடை நீச்சலுடைகளை எடுத்ததுப் பத்மா முன்னர் போடுவிட்டுக் குறும்பாக “மற்ற ஆடைகளைப் போலல்ல நீச்சலுடை விஷயம். அவை எவ்வளவுக்குச் சிறிதாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அவற்றின் விலை அதிகம்” என்று குறிப்பிட்டான்.

ஸ்ரீதர் சிரித்தான்.

விற்பனையாளன் மேலும் தொடர்ந்து பேசினான்: “இதோ இது மொத்தம் இரண்டவுன்ஸ் எடைதான். விலை ரூபா எழுபத்தைந்து. இதோ இது ஆறு அவுன்ஸ் எடை, விலை ரூபா இருபது..”

“அப்படியானால் இது ஒன்றுமே நமக்குச் சரிப்படாது. அரை அவுன்ஸ், முக்கால் அவுன்சில் ஏதாவது இல்லையா? ரூபா நூற்றைம்பது என்றாலும் பரவாயில்லை” என்றான் ஸ்ரீதர்.

விற்பனையாளனுக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. சிரித்துக் கொண்டே பத்மாவைப் பார்த்தான். அவள் முகம் இரத்தமேறி ரோஜா மலர் போல் குப்பென்று சிவந்து கிடந்தது. “எனக்கு எதுவும் வேண்டாம்” என்று ஸ்ரீதரைப் பார்த்துச் சிணுங்கினாள் அவள். ஆண்களின் இந்த நகைச்சுவை அவளுக்கு உண்மையாகவே பிடிக்கவில்லை. விவேகமான விற்பனையாளனுக்கு நிலைமை தெரிந்து விட்டது. ஆகவே மிகுந்த பணிவோடு “இதோ இந்தத் தங்க நிற ‘உவன் பீஸ்’ நீச்சலுடைதான் இங்குள்ளவற்றிலேயே  ஆக உயர்ந்தது” என்று கூறிக்கொண்டடு அதனைக் காட்சிப் பெட்டியின் கண்ணாடி மீறிட்டான்.

பின்னர் ஏதோ நினைத்துக் கொண்டவன் போல் “சரியான ‘வைட்டல் ஸ்டாட்டிக்ஸ்டிக்ஸ்’களைக் கூறினால் அளவும் பொருத்தத்தில் எவ்வித குறைபாடுமில்லாத உடையை உடனேயே எடுத்துத் தந்து விடுவேன்” என்றான் அவன்.

பெண்களைப் பொறுத்தவரையில் ‘வைட்டல் ஸ்டாட்டிக்ஸ்டிக்ஸ்’ அல்லது ‘ஜீவாதாரப் புள்ளிகள்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு மேல்-இடை-கீழ் உடலளவுகள் என்று அர்த்தம்.

பத்மாவுக்கு இவ்வார்த்தைகளின் பொருள் நன்கு தெரியும். ஆகவே பளிச்சென்று “எனது அளவுப் புள்ளிகள் 36:24:38” என்று பதிலளித்தாள்.

விற்பனையாளன் அதைக் கேட்டதும் அசந்து போய்விட்டால், அவனால் தன் காதுகளை நம்ப முடியவில்லை. “உண்மையாகவா சொல்லுகிறீர்கள்? இவை இந்த ஆண்டு உலக அழகியின் புள்ளிகளல்லவா?” என்றான் ஆச்சரியத்துடன்.

பத்மாவுக்கோ பெருமை தாங்க முடியவில்லை. ஸ்ரீதருக்கோ அதை விட மேலே.

விற்பனையாளன் பணிவோடு “நான் சொன்னால் தப்பர்த்தம் செய்ய மாட்டீர்களென்றால் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்,” என்றான்.

ஸ்ரீதர் “சொல்லு” என்றான். பத்மா “அவன் என்ன சொல்லப் போகிறான்” என்று ஆவலுடன் காத்து நின்றாள். “அடுத்த வருடம் உலக அழகிப் போட்டியில் நீங்கள் கட்டாயம் பங்குபற்ற வேண்டும். நிச்சயம் முதலிடம் கிடைத்தே தீரும்” என்றான் அவன். ஸ்ரீதரும் பத்மாவும் சிரித்தார்கள்.

முடிவாக எழுபத்தைந்து ரூபாவுக்கு இளம் பச்சை வர்ணத்தில் ஓர் ஒற்றை ஆடை நீச்சலுடையைத் தெரிந்தெடுத்துக் கொண்டாள் பத்மா. எடுத்த எடுப்பில் ‘பிக்கினி’யை அணிய அவளுக்குத் துணிவு பிறக்கவில்லை!

சரியாகப் பதினொன்றே கால் மணியளவில் ஸ்ரீதர் கடற்கரை ஓரத்தில் தென்னை மர நிழலில் பத்மாவைப் படத் தீட்ட ஆரம்பித்தான். அதற்கென உள்ள ஒரு ‘ஸ்டாண்டி’ல் பெரிய சித்திரக் காகிதத்தை விரித்து வண்ண மைகளால் படத்தைத் தீட்ட தொடங்கினான் அவன். பத்மா நீலத்தில் விழ்ந்து கிடந்த ஒரு தென்னங் குற்றியில் தன் நீச்சலுடையில் ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தாள். பத்மாவுக்கோ இந்தப் படம் எழுதும் விஷயமே பெரும் வேடிக்கை போலிருந்தது. மெளனமாக ஓர் இடத்தில் பொம்மை போல் ஆடாது அசையாது வீற்றிருப்பது அவ்வளவு இலேசாகவோ இன்பமாகவோ தோன்றவில்லை அவளுக்கு. ஒரு சில நிமிடங்கள் கழிவதற்குள்ளேயே “ஸ்ரீதர்! முடிந்துவிட்டதா?” “இது என்ன கரைச்சல்” இப்போது முடியாதா?” “எப்போது முடியும்?” “கடலிலே போய்க் குளிப்போம். நீங்களும் ஸ்நான  உடையை அணிந்து கொண்டு கிளம்புங்கள்.” “ஐயோ தென்னங் குற்றியில் எறும்பிருக்கிறது” “ஆ... கடித்துவிட்டது!” என்று ஏதாவது பேசிக் கொண்டேயிருந்தாள் அவள். ஸ்ரீதர் வாயில் கையை வைத்து, “பேசாதே!” என்று கூறிக் கூறிப் பத்மாவை நன்கு அவதானித்து, படத்தை வரைந்து கொண்டிருந்தான்.

பத்மாவுக்கோ இந்தப் படம் எழுதும் விஷயமே பெரும் வேடிக்கை போலிருந்தது. மெளனமாக ஓர் இடத்தில் பொம்மை போல் ஆடாது அசையாது வீற்றிருப்பது அவ்வளவு இலேசாகவோ இன்பமாகவோ தோன்றவில்லை அவளுக்கு. ஒரு சில நிமிடங்கள் கழிவதற்குள்ளேயே “ஸ்ரீதர்! முடிந்துவிட்டதா?” “இது என்ன கரைச்சல்” இப்போது முடியாதா?” “எப்போது முடியும்?” “கடலிலே போய்க் குளிப்போம். நீங்களும் ஸ்நான  உடையை அணிந்து கொண்டு கிளம்புங்கள்.” “ஐயோ தென்னங் குற்றியில் எறும்பிருக்கிறது” “ஆ... கடித்துவிட்டது!” என்று ஏதாவது பேசிக் கொண்டேயிருந்தாள் அவள். ஸ்ரீதர் வாயில் கையை வைத்து, “பேசாதே!” என்று கூறிக் கூறிப் பத்மாவை நன்கு அவதானித்து, படத்தை வரைந்து கொண்டிருந்தான்.

பத்மாவுக்கோ இந்தப் படம் எழுதும் விஷயமே பெரும் வேடிக்கை போலிருந்தது. மெளனமாக ஓர் இடத்தில் பொம்மை போல் ஆடாது அசையாது வீற்றிருப்பது அவ்வளவு இலேசாகவோ இன்பமாகவோ தோன்றவில்லை அவளுக்கு. ஒரு சில நிமிடங்கள் கழிவதற்குள்ளேயே “ஸ்ரீதர்! முடிந்துவிட்டதா?” “இது என்ன கரைச்சல்” இப்போது முடியாதா?” “எப்போது முடியும்?” “கடலிலே போய்க் குளிப்போம். நீங்களும் ஸ்நான  உடையை அணிந்து கொண்டு கிளம்புங்கள்.” “ஐயோ தென்னங் குற்றியில் எறும்பிருக்கிறது” “ஆ... கடித்துவிட்டது!” என்று ஏதாவது பேசிக் கொண்டேயிருந்தாள் அவள். ஸ்ரீதர் வாயில் கையை வைத்து, “பேசாதே!” என்று கூறிக் கூறிப் பத்மாவை நன்கு அவதானித்து, படத்தை வரைந்து கொண்டிருந்தான்.

இவ்வாறு அவர்கள் படம் வரைவதில் ஒத்துழைப்பதும் போராடுவதுமாக இருந்த போது தான், அங்கு வந்து சேர்ந்தார் அதிகார் அம்பலவாணர். தலையில் வெள்ளைத் தலைப்பகை, வெள்ளைக் குளோஸ் கோட், நீண்ட வெள்ளைக் காற்சட்டை ஆகியவற்றுடன் அதிக பருமனும் உயரமும் இல்லாமல் காட்சியளித்த அவர், இப்பொழுது யாழ்ப்பாணத்தில் முற்றாக மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையின் கடைசிப் பிரதிநிதிகளில் ஒருவராக விளங்கினார். நெற்றியில் சந்தனப் பொட்டு ஒளி வீசக் கம்பீரமாக நடந்து வந்த அவரது பக்கத்தில் அவரது தர்ம பத்தினி வள்ளியாச்சி பின் கொப்பகம் வைத்த சேலையுடனும் நீண்ட கை வைந்த இரவிக்கையுடனும், நெஞ்சினிலே பெரிய பதக்கம், கழுத்தை நெரித்தாற் போன்ற தங்க அட்டிகை, கையில் பெரிய தங்க கொலுசுகள் ஆகியவற்றுடனும் வந்து கொண்டிருந்தாள். சேவலின் வாலைப் போன்று அவளுக்குப் பின்னால் துள்ளி எழுந்த காட்சியளித்த அவளது சேலையின் முகதலை இன்றைய பரம்பரையினருக்கு  விநோதப் பொருளாகத் தோன்றினாலும், அதிலும் ஓர் அழகும் கம்பீரமும் இருக்கத்தான் செய்தன!

தற்செயலாகக் கடலோரத்தைப் பார்த்த ஸ்ரீதர் அதிகார் அம்பலவாணரையும் அவர் மனைவியையும் கண்டதும் அதிர்ச்சியடைந்து விட்டான். உண்மையில் அவர்கள் ஸ்ரீதர் இருக்கும் திசையை நோக்கியே வந்து கொண்டிருந்தார்கள். ஸ்நான உடையில் ஒரு பெண் தென்னங்குற்றியில் வீற்றிருப்பதும் அவளை ஓர் ஓவியன் படமாகத் தீட்டிக் கொண்டிருப்பதும்தான் அவர்களைஅங்கே அழைத்து வந்தன.

அதிகார் முக மலர்ச்சியோடு மனைவியிடம் ஏதோ பகடியாகச் சொல்ல அவள் பின்னால் தனது ஸ்தூல சரீரத்தை இழுக்க முடியாமல் கால்களால் இழுத்து வந்த காட்சி வேறு நேரங்களில் என்றால் ஸ்ரீதருக்கு நல்ல வேடிக்கையாய்த் தோன்றிருக்கும். ஆனால் இப்போது அவ்வாறு தோன்ற வில்லை. தனது தந்தை சிவநேசருக்கு மிகவும் நெருங்கிய நண்பரான அதிகாரை எவ்வாறு சமாளிப்பதென்ற நினைவு ஒன்றே அவன் மனதில் விஸ்வரூபம் எடுத்தது. என்றாலும் அதை வெளிக்காட்டாது படம் தீட்டுவதில் தன்னை முற்றாக மறந்தவன் போல் நடிக்க ஆரம்பித்தான் அவன்.

பத்மாவோ அதிகார் மனைவி வள்ளியாச்சி வால் வைத்த சேலைக் கட்டைச் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இதற்கிடையில் ஓர் எறும்பு அவள் காலில் ஏறி விட்டதால், “எறும்பு, எறும்பு” என்றும் சப்தமிட்டாள் அவள். பின்னர், “ஸ்ரீதர், அதோ பாருங்கள்! எங்களை நோக்கி வால் முளைத்த பெண்பிள்ளை ஒன்று வந்துக் கொண்டிருக்கிறது” என்றும் சிரிப்பு முழக்கத்தோடு கும்மாளம் போட்டாள். பத்மா கடற் காற்றும் நீச்சலுடையுமாக அவளுக்கு ஒரு வெறியின்பத்தைத் தந்திருந்ததே, அவளது அசாதாரண கலகலப்புக்குக் காரணம். இன்னும் கொழும்பிலேயே பிறந்து வளர்ந்திருந்த பத்மாவுக்கு, பின் கொப்பகம் வைத்த அந்த யாழ்ப்பாணச் சேலைக்கட்டு உண்மையில் புதுமையாகத்தான் தோன்றியது. ஸ்ரீதரோ வாயில் வைத்து, “பேசாதே” என்று சைகை செய்தான் பத்மாவைப் பார்த்து.

அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.


10-ம் அத்தியாயம்: நீச்சல் அழகி

தண்ணீரில் இறங்க அஞ்சிய பத்மாவை ஸ்ரீதர் "பயப்படாதே பத்மா! நான் உனக்கு நீந்தப் பழக்குகிறேன். இறங்கு" என்று பல தடவை சொல்லியும் அவள் கேட்காமல் போகவே, ஸ்ரீதர் அவளை முரட்டுத்தனமாகத் தன் கரத்தால் பற்றித் தண்ணீருள் இழுத்துச் சென்று விட்டான். முதலில் பத்மா இதனை எதிர்த்துச் சிணுங்கிக் கூச்சலிட்ட போதிலும், பின்னால் சிரித்த முகத்துடன் அவன் தோள்களைப் பற்றிக் கொண்டு, "எனக்குப் பயமாயிருக்கிறது! நீந்தச் சொல்லித் தாருங்கள்" என்று உற்சாகமாகச் சப்தமிட்டாள்.

அழகான யுவதி ஒருத்தி கண்ணைக் கவரும் பகட்டான நீச்சலுடையில் இளமையின் பூரிப்புடனும், சதைப் பிடிப்புடனும் விளங்கும் தனது பெரும்பகுதியை வெளிக்காட்டியவண்ணம், சோவென்றும் காற்று வீசும் தென்றல் கூடலிலே கடற்கரை மணலில் தென்னங்குற்றி ஒன்றில் ஒயிலாக வீற்றிருக்க, அவளை நாகரிகமான காற்சட்டையும் பல வர்ண புஷ் சேர்ட்டும் அணிந்த இளமை ததும்பும் ஆடவனொருவன் கூர்ந்து கவனித்து வண்ண ஓவியமாக வரைந்து கொண்டிருப்பதைக் கண்ட யாருக்குத்தான் அதை நெருங்கிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஏற்படாது? ஆனால் ஸ்ரீதரும் பத்மாவும் படமெழுதுவதற்காகத் தெரிந்தெடுத்திருந்த தென்னங்கூடல், கடற்கரைக் களியாட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்த கல்கிசை ஹோட்டல் பிரதேசத்துக்கு ஏறக்குறைய அரை மைல் தூரத்தில் இருந்ததால், அவ்வளவு அதிகமான பேர் அன்று அக் காட்சியைப் பார்ப்பதற்காக மொய்க்கவில்லை. கடற்கரைக்கு வந்திருந்தவர்களில் பெரும்பகுதியினர் களியாட்டப் பிரதேசத்துள் சுற்றிச் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததே இதற்குக் காரணம். பாட்டும் கூத்தும், குதூகலப் பேச்சும் ஆரவாரமாய்ப் பிரவகித்துக் கொண்டிருந்த களியாட்டு விழா அவர்களை முற்றாக ஆட்கொண்டிருந்தது. ஓரிருவர் மட்டுமே இதற்கு விதி விலக்காகக் கடற்கரையோரமாக உல்லாச நடை போட்டுக் கொண்டிருந்தனர். நீண்ட நேர ஆரவாரத்தாலும் ஜன சந்தடியாலும் ஏற்படும் அமுக்கத்திலிருந்து விடுபட்டு, பரந்த கடற்கரையில் வெண் மணல் விரிவிலே சுத்தமான பிராண வாயுவை உட்கொண்டு, ஓரளவு தனிமையை அனுபவித்தவண்னம் நீலக்கடலின் ஓங்கார கீதத்தை அமைதியாக செவிமெடுக்க விரும்பிய கலையுள்ளம் படைத்த மிகச் சிலரே அவ்வாறு கிளம்பி வந்தனர்.

அவ்வாறு கிளம்பி வந்தவர்களும் நீண்ட விழி நீச்சலுடை மோகினியையும், அவளைத் தூரிகையால் தீட்டிக் கொண்டிருந்த ஓவியனையும் தூரத்திலிருந்தவாறு பார்த்தார்களேயல்லாமால் நெருங்கி வந்து தொல்லை கொடுக்கவில்லை. இதற்குக் காரணம் அவர்களது பண்பு அல்லது நாசுக்கு மட்டுமல்ல. இப்படிப்பட்ட காட்சிகளைத் தாமாகத் தனித்துச் சென்று பார்க்கப் பலருக்கு இயற்கையாகவே ஒரு வெட்கம் இருக்கிறது. கூட்டத்தோடு கூட்டமாகத்தான் இவர்களால் இத்தகைய காட்சிகளைக் கூசாது பார்க்க முடியும். இன்னும் சிலருக்கோ பயம்.

படமெழுதிக் கொண்டிருக்கும் ஆஜானுபாகு அல்லது ‘தடியன்’ "என்ன ஏதோ கண்டறியாததைக் கண்ட மாதிரி வாயைப் பிளந்து கொண்டு நிற்கிறாய்?" என்று கேட்டு விட்டால் என்ன செய்வது என்ற அச்சம். மற்றும் சிலருக்கோ அந்தத் தடியன் தங்களை அடிக்கக்கூட வந்து விடலாம். வம்பில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம். இக் காரணங்களில் ஒன்றோ பலவோ எல்லாமோ சேர்ந்து, ஸ்ரீதர் பத்மா ஜோடிக்கு அன்று ஓரளவு சுதந்திரத்தை அக்கடற்கரையில் அளித்திருந்தது. இதனால் அவர்கள் இஷ்டம் போல் பேசவும் சிரிக்கவும்,

ஆறுதலாகத் தாம் நினைத்தது போல் படத்தை எழுதவும் வசதியாயிருந்தது. இருந்த போதிலும் ஒரு சில வேலையற்ற இளைஞர்கள் வாலிபத்தின் குறு குறுப்பால் உந்தப்பட்டு அங்குமிங்கும் நின்றும் நடந்தும் தாங்கள் அவதானிக்கப்படாமல் தாம் அவர்களை, முக்கியமாக ஸ்நான உடையணிந்து காற்றில் அலைந்து கொண்டிருந்த கேசத்தை கைகளால் அடிக்கடி ஒதுக்கி விட்டுக் கொண்டு சிரித்துப் பேசி நின்ற சிற்றிடைச் சிங்காரி பத்மாவை அவதானிக்கவே செய்தார்கள்.

அதிகார் அம்பலவாணரைப் பொறுத்தவரையில் அவர் எப்பொழுதுமே நாசுக்குக்குப் பெயர் பெற்றவர். சில சமயங்களில் சற்றும் நாகரிகமற்றவர் என்று மற்றவர்கள் சொல்லும்படியாகக் கூட அவர் நடந்துக் கொள்வதுண்டு. அவர் மனதில் ஓர் எண்ணம் தோன்றி விட்டால், அதை வெளியில் பேசுவது அழகா அல்லவா, என்பது பற்றி யோசிப்பதில் காலம் கடத்தாமல் படாரென்று அதை வெளியிலே பேசி விடுவது அவர் வழக்கம். பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் அவர் அப்படித்தான். விருந்துகளுக்குப் போனால், தமக்கு விருப்பமான பதார்த்தம் என்றால் நாகரிகம் பாராமல் அதை அப்படியே எடுத்து வாயில் போட்டு மென்று விடுவார். அப்படிப்பட்டவர், பத்மாவையும் ஸ்ரீதரையும் முன்னே கூறிய நிலையில் கண்டதும் அடக்க முடியாத அவாவுடன் அவர்களை நெருங்கிப் பார்க்க விரைந்து சென்றதில் ஆச்சரியமில்லையல்லவா?

அம்பலவாணர் அவர் மனைவி வள்ளியாச்சியுடன் களியாட்டுப் பிரதேசத்தில் கன்னியரும் காளையரும் கடலாடிக் களிப்பதைக் காலையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பின்னர் "வா டார்லிங்! கடற்கரையில் சிறிது நேரம் நடந்து விட்டு வருவோம். பிராண வாயு உடம்புக்கு நல்லது. அத்துடன், சிறிது நடப்பது உமது கொழுப்பையும் கொஞ்சம் கரைக்கும்" என்று கூறிக் கிளம்பி வந்த போதே ஸ்ரீதர்-பத்மா ஜோடியை அவர் கழுகுக் கண்கள் கண்டு பிடித்தன. அதிகாரி அவர்கள் தமது அன்பு மனைவியைத் தனித்திருக்கும் நேரங்களில் எப்போதும் "டார்லிங்" என்ற ஆங்கில வார்த்தையால் அழைக்கத் தவறுவதேயில்லை. அந்த வார்த்தையில் தம்பதிகள் இருவருக்கும் தனியின்பம்! அதிகாருக்கு வயது அறுபத்தைந்து. ஆனால் என்ன தான் வயதானவராயிருந்தாலும் இன்னும் அவருக்கு அழகுச் சுவை அதிகமாகத்தானிருந்தது. அதிலும் அழகான பெண்களைக் கண்டுவிட்டால் இன்றும் அவரால் திக்குமுக்காடாமல் இருக்க முடியாது. அப்படிப்பட்டவர் பத்மாவின் பேரழகைக் கண்டு பரபரப்படைந்ததைப் பற்றி யார் தான் வியப்படைவர்? இன்னும், இன்று பத்மா தன் முழு எழிற் கோலத்தில் நூற்றுக்கு தொண்ணூற்றைந்து பங்கையும் சற்றும் மறையாது வெளிக் காட்டிக் கொண்டல்லவா நிற்கிறாள்?

அதிகாரி தமது சட்டைப் பைகளிலிருந்த வெள்ளி பிரேமிட்ட மூக்குக் கண்ணாடியை எடுத்து அதைத் துடைப்பதற்கென வைத்திருந்த விசேஷ கைக்குட்டையால் அதனைத் துடைத்து, தமது கண்களில் அணிந்து கொண்டார் மனைவி பக்கத்திலிருந்தாற் கூட, தாம் பார்க்க விரும்பிய ‘பொருளை’ அவர் சரிவர அவதானித்துப் பார்க்க நினைத்து விட்டாரானால் அவரை அவளாலும் தடுத்துவிட முடியாது. இளம் வயதில் அவர் மனைவி வள்ளியாச்சி இதற்காக அவருடன் பல தடவை சண்டை போட்டிருந்தாலும், இப்பொழுது இது பழம் பாடமாகி விட்டது. எந்தப் பெண்ணை எப்படி மூக்குக் கண்ணாடி போட்டுப் பார்த்தாலும் முடிவில் தான் கிழித்த கோட்டை அவர் மீற மாட்டார் என்பது அவளுக்கு நன்கு தெரியும்.

மூக்குக் கண்ணாடியைத் துடைத்து மாட்டிக் கொண்ட அம்பலவாணரின் கண்களுக்கு நல்ல விருந்து காத்துக் கிடந்தது. பத்மா அணிந்திருந்த இளம் பச்சை நிற நீச்சலுடை அவள் உடலோடு ஒட்டிக் கொண்டு அவளது மறைந்திருந்த அழகை எல்லாம் வெளியே வழிந்தெடுத்து ஒரு வட்டிலிலே கொட்டிக் காட்டுவது போல் காட்டிக் கொண்டிருந்தது. அந்தப் பேரழகை கண்டு அவ்வழகுக்குப் பழக்கப் பட்டுப்போன அவள் காதலனான ஸ்ரீதரனே அன்று திகைத்துப் போயிருந்தான். இவ்வளவு அழகும் அவளது ஆடைகளுக்குள்ளே எப்படி ஒளிந்திருந்ததோ என்று அதிர்ச்சியும் வியப்பும் அடைந்திருந்தான் அவன். இந்நிலையில்அப்பேரெழில், அதிகார் அம்பலவாணரை ஒரு குலுக்குக் குலுக்கி விட்டதில் ஆச்சரியமென்ன?

நாம் அழகிகள் என்று நினைக்கும் பெண்களில் பலர், உண்மையில் பொருத்தமான ஆடைகளால் நமது அவலட்சணத்தை மறைப்பதில் சாமர்த்தியம் வாய்ந்தவர்கள மட்டும் தான், அவர்களின் உண்மையழகு எவ்வளவு என்பதை அவர்களை ஒரு நீச்சலுடையில் போட்டுப் பார்த்தால் தான் தெரியும்! பத்மாவோ அப்படிப்பட்ட அழகி அல்ல. உடைகள் அவள் அழகை வெளிக் காட்டுவதற்குத் தடையாக இருந்தனவே அல்லாமல், துணை புரியவில்லை. அவற்றைக் குறைக்கக் குறைக்க வளவளப்பான அவளது இயற்கை மேனி வெளியே தெரிய, அவள் அழகும் அதிகரித்தது.

பத்மா தன் ஒளி மயமான நீச்சலுடையில் ஒரு தங்கப் பதுமை போல் பிரகாசித்தாள். அவளது சிற்றிடை உருக்குப் போல் ஒடுங்கித் தோன்ற, அவளது எலுமிச்சம் பழ நிறக் கால்களும், வாளிப்பான பொற்றோள்களும் பரிசுத்தமாக விளங்கிய கழுத்தும் வெறுமையாகத் தோன்றிக் காண்பவர் கண்களைப் பறித்தன. அவளது முகிற் கூந்த தோள் வழி தவழ்ந்து வந்து, அவளது கீற்றுப் போல் விளங்கிய அவளது சின்னஞ் சிறு செந்துவர் வாய்க்கருகாமையில் அவளது மாம்பழக் கன்னங்களில் அவளது வழமையான புன்னகைச் சுழி உயிர் பெற்று விளையாடியது. பளபளவென்று ஒளி வீசிய அவள் நீண்ட கண்களோ மின்வெட்டுப் போல் வெட்டிக் கொண்டிருந்தன.

உண்மையில், அதிகார் அம்பலவாணர் அவளைப் பார்த்ததும் அவளை மட்டுமே தான் பார்க்கலானார். பக்கத்திலிருந்த ஆடவன் நினைவு அவருக்கு அற்றுப் போயிற்று. அவர் மனதில் முதலில் எழுந்த நினைவு அவள் சிங்களப் பெண்ணா அல்லது தமிழ்ப் பெண்ணா என்பதுதான். அந்தப் பிரச்சினயை அவளைப் பார்த்துத் தீர்த்துக் கொள்ள முடியாது போகவே, படம் வரைந்துக் கொண்டிருந்த அவளது தோழனைப் பார்த்தாவது அதனைத் தீர்க்க முயல்வோம் என்று அவர் தன் கண்களை ஸ்ரீதர் மீதிட்டதும், "ஆ! இது சிவநேசர் மகன் ஸ்ரீதரல்லவா?" என்று திகைத்து விட்டார் அவர்.

ஸ்ரீதரோ அதிகாரி அம்பலவாணரைக் கண்டதும் கூடிய வரை முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டு படத்தைத் தீட்டுவதில் தன்னை முற்றாக மறந்தவன் போல் நடித்துக் கொண்டிருந்தான். பத்மாவுக்கோ என்ன செய்வதென்றே தோன்றவில்லை. தன்னைச் சிறிதும் கூச்சமின்றி அங்கமங்கமாய்ப் பிய்த்துப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த தலைப்பாகைக் கிழவனின் பரந்த பொட்டு வைத்த முகத்தையும், கொழுத்த உடலோடு அவருக்கு பக்கத்தில் பூதாகாரமாகக் காட்சியளித்த அவர் மனைவியின் வால் வைத்த "கொர நாட்டுச்" சேலையையும் அவளது கழுத்தை இறுக்கிய தங்க அட்டிகையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு மெளனமாக உட்கார்ந்திருந்தாள் அவள். இடையிடையே செல்லமாகத் தன் செவ்விதழ்களைக் குவிப்பதும் விரிப்பதுமாக அவள் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அம்பலவாணர் ஸ்ரீதரை யாரென்று அடையாளம் கண்டு கொண்டதும் படாரென்று "தம்பி ஸ்ரீதர்! என்ன எங்களை அடையாளம் தெரியவில்லையா? எப்படிச் சுகம்?" என்று முக மலர்ச்சியோடு கேட்டார். வள்ளியாச்சியும் "ஓ எங்களுடைய சேர் நமசிவாயத்தின் பேரன் ஸ்ரீதரல்லவா இது? சிவநேசரின் மகன்" என்று ஆச்சரியந் தாங்காமல் கூறினாள்.

ஆனால் ஸ்ரீதரோ அவர்கள் பேச்சுத் தனக்குப் புரியாதது போல "என்ன? என்னை உங்களுக்குத் தெரியுமா? என்னுடைய ஊர் உடுவில். நான் சிவநேசர் மகனல்ல. சின்னப்பா வாத்தியாரின் மகன்" என்று சாவதானமாகக் குறிப்பிட்டான்.

பத்மா திகைத்துப் போய் விட்டாள். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்றாலும் சிரிப்பு வந்தது. ஆனால் அதனை ஒருவாறு அடக்கிக் கொண்டாள். அம்பலவாணரோ அப்படியே அசந்து போய் விட்டார். மூக்குக் கண்ணாடியை மீண்டும் ஒரு முறை துடைத்து மாட்டிக் கொண்டு ஸ்ரீதரை உற்றுப் பார்த்தார். வள்ளியாச்சி புன்னகையோடு, "என்ன தம்பி, பொய் சொல்கிறீர்கள்! நீங்கள் வந்து... பயப்படுகிறீர்கள் போலே" என்றாள்.

ஸ்ரீதர் வள்ளியாச்சியை முகத்தை நிமிர்த்தி ஒரு தரம் பார்த்துவிட்டு, "என்ன? நீங்கள் சொல்வது விளங்கவில்லையே! நான் எதற்குப் பயப்பட வேண்டும்? யாருக்கு? இங்கு சிங்கம், புலி, கரடி போன்ற மிருகங்கள் எதையும் நான் காணவில்லையே. நடுப் பகல் நேரமானால் பேய், பிசாசு, பூதங்களைக் கூட இங்கு காணவில்லையே!" என்றான்.

"வந்து... வந்து... நாங்கள், தம்பி இங்கே செய்கிறதை அப்பாவிடம் சொல்லி விடுவோமோ என்று பயப்படுகிறீர்கள்."

"நான் என்ன அப்படிப் பயப்படும்படியான காரியத்தைச் செய்கிறேன்? கொலை, களவு எதையும் நான் இங்கு செய்யவில்லையே! படம் வரைந்து கொண்டிருக்கிறேன். படம் வரைவதற்கு யாரும் பயப்பட வேண்டுமா?" என்றான்.

"இல்லை வந்து.. வந்து.." என்று மேலும் இழுத்தாள் வள்ளியாச்சி.

"நான் படம் வரைவது அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். உண்மையில் அவரது படத்தைக் கூட அவர் இருப்பதிலும் பார்க்க அதிகம் அழகாகவே அவரது பெரிய தலைப்பாகையுடன் நான் வரைந்திருக்கிறேன். நீங்கள் கூட அதை வீட்டில் பார்த்திருப்பீர்கள். இது "என் மகன் வரைந்த படம்" என்று வாறவர் போறவர் எல்லாருக்கும் அதை அவர் காட்டுவது வழக்கம்." என்று ஸ்ரீதர் பதிலளித்தான். அவர்களிடம் பொய் சொல்வதில் பலனில்லை என்று அவனுக்குத் தெரிந்து விட்டது.

அதிகார் அம்பலவாணர் பத்மாவின் மேல் வைத்த தம் கண்களை வலிந்திழுத்து அவற்றைச் ஸ்ரீதர் மீது செலுத்திய வண்ணம், "அப்போது நீங்கள் சிவநேசரின் மகன் தான். தம்பி சரியான பகடிக்காரன் போல் தெரிகிறது!" என்று கூறிச் சிரித்தார். அவன் தோள்களைத் தம் கைகளால் பிடித்துத் தட்டினார்.

இதற்கிடையில் வள்ளியாச்சி பெரிய கேள்வி ஒன்றைத் தூக்கிப் போட்டுவிட்டாள். "தங்கச்சி யார்?" என்பதே அது. அப்படி அவள் கேட்டதும் சமாளித்துக் கொண்டு "உண்மையில் எனக்கு இந்தத் தங்கச்சி யாரென்பது தெரியாது. ஒரு "வட இந்தியப் பெண்ணாம்.

பணக்காரி. தன்னைப் படமெழுதிக் கொடுத்தால் ஆயிரம் ரூபா தருவதாகப் பேசி என்னைப் படம் எழுதும் படி கேட்டாள். அது தான் படமெழுதிக் கொண்டிருக்கிறேன். அவள் பெயர் "பத்மா பரமானந்த்." அவள் தகப்பனார் கொழும்பிலே பெரிய ஜவுளிக் கடை வைத்திருக்கிறாராம். என்றாலும் துணி விலை அதிகம் என்பதாலே தனது மகளுக்கு மிகவும் குறைவாகவும் சிக்கனமாகவும் தான் உடைகளை உடுக்க வேண்டுமென்று அவர் புத்திமதி சொல்லிக் கொடுத்திருக்கிறாராம். பெண்ணும் புத்திசாலிதான். அதனாலேதான் இந்தச் சின்னஞ் சிறு ஸ்நான உடையை அவள் அணிந்திருக்கிறாள்!" என்று வேடிக்கையாகக் கூறினான் அவன்.

அதிகாரும் வள்ளியாச்சியும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பத்மாவுக்கும் அடக்க முடியாத சிரிப்பு. ஆனால் ஸ்ரீதரோ அவளைப் பார்த்து, "சிரிக்காதே" என்று மிகவும் கண்டிப்பாகத் தனது கண்ணால் ஜாடை காட்டிக் கொண்டிருந்தான் என்றாலும் அவளால் சிரிக்காதிருக்க முடியவில்லை. இடையைக் கைகளால் தாங்கிக் கொண்டு துடி துடித்துச் சிரித்தாள் அவள். "ஐயோ... ஐயோ..." என்று பெருமூச்சு வாங்கவும் செய்தாள்.

இப்படி அவர்கள் அவிட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருக்க, கடற்காற்றில் அவர்களது நகையொளியின் கிண்கிணி நாதம் கலந்து கொண்டிருக்க, மேலே வானத்திலே இடியேறு போல் ஓவென்று சீறி முழங்கிக் கொண்டு பதிவாகப் பறந்தது ஓர் "ஏயர் சிலோன்" விமானம். விநாடிக்கு விநாடி அதிகரிக்கும் ஓசையோடு மின்னல் வேகத்தில் "விர்"ரென்று பறந்து, மறைந்து, மீண்டும் தோன்றிப் பறந்த இவ்விமானத்தைக் கண்டதும் சிரிப்பை நிறுத்தி எல்லோரும் ஆகாயத்தைப் பார்க்கலானார்கள். முழுக் கல்கிசைக் கடற்கரையும் ஆகாயத்தை நோக்கியது. களியாட்டக்காரர்களெல்லரும் வானத்தை நோக்கினர். கடலில் நீந்திக் கொண்டிருந்தவர்களும் நீச்சலை நிறுத்தி அண்ணாந்து பார்த்தனர். அதிகார் அம்பலவாணர் கூட பத்மாவின் அழகுடலைப் பார்ப்பதை நிறுத்தித் தமது மூக்குக் கண்ணாடிக் கூடாக விண்வெளியைப் நோக்கலானார்.

அப்பொழுது விமானத்திலிருந்து பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் என்ற வர்ணங்களில் நோடீசுகள் மழைபோல் பொழிய ஆரம்பித்தன. ஒரு புறம் ஒரு சப்பாத்துக் கம்பெனியின் விளம்பரத்தைத் தாங்கிய அந்த நோட்டீசுகளின் மறுபுறத்தில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது.


நீச்சலழகிப் போட்டி
களியாட்ட வீரர்களே! இப்பொழுது மணி சரியாக மு.ப. 11.30. நண்பகல் 12 மணிக்கு நீச்சலழகியைத் தெரிந்தெடுக்கும் நடுவர்கள் அழகிகளைப் பொறுக்க அலையோரம் வருவார்கள். அவர்களுடன் ஒத்துழைக்கும்படி எல்லாக் கணவான்களையும் சீமாட்டிகளையும் நாம் கேட்டுக் கொள்ளுகிறோம். 2 மணிக்கு நீச்சலழகிப் போட்டி கல்கிசை ஹோட்டல் நந்தவனத்தில் நடைபெறும். முதலிடம் பெறும் நீச்சல் ராணிக்கு ரூபா 1000 பரிசு வழங்கப்படும். -இப்படிக்கு-கொழும்பில் டைகர் கிளப்

ஸ்ரீதர் ஓடிச் சென்று இந்த நோட்டீசுகளில் ஒன்றைக் கைப்பற்றினான். ஆனால் அதற்கு முன்னரே அதிகார் அம்பலவாணர் ஒரு நோட்டீசைப் பிடித்துவிட்டதோடு, அதில் சொல்லப்பட்ட நேரம் சரியா என்பதைத் தமது கைக் கடிகாரத்துடன் ஒப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அதன்பின் பத்மாவை நெருங்கி "உண்மைதான். சரியாக 11.30 மணி தான் இப்போது" என்று குறிப்பிட்டார். பத்மா பதிலுக்கு ஒன்றும் பேசாது தன் அரிசிப் பல் வரிசையை இலேசாகக் காட்டிச் சிரித்து விட்டு "ஸ்ரீதர்! வாருங்கள். படத்தை இவ்வளவுடன் நிறுத்திக் கடலில் குளிக்கப் போவோம்" என்று கூறினாள். ஸ்ரீதரும் "ஆகட்டும்" என்று கிளம்பினான்.

பத்மா தென்னங் குற்றியிலிருந்து துள்ளி எழுந்து தன் தலைமயிரைச் சரி செய்தாள். மண்ணில் கால்களை அகல ஊன்றிக் கொண்டு கீழே குனிந்து தன் இடக் காலில் முழந்தாளுக்குச் சமீபமாக மெல்ல ஊர்ந்து மேலேறிக் கொண்டிருந்த எறும்பொன்றைத் தன் செவ்விரல்களால் பிடித்தெடுத்த ஸ்ரீதரிடம் "இதை உங்களைக் கடிக்க விடவா?" என்று சிரித்துக் கொண்டு கேட்டாள்.

அதன் பின் பின்புறமாகத் திரும்பி நின்று கொண்டு தென்னங்குற்றியில் வீற்றிருந்ததால் நீச்சலுடையின் பின்புறத்தில் ஒட்டிக் கொண்டிருந்த மணலைத் தன் இரு கரங்களாலும் மெல்லத் தட்டினாள். பின்னர் தனது கழுத்தை உயர்த்தித் தலையைத் திருப்பிப் புருவங்களை உயர்த்திக் கண்களை இயன்ற வரை கீழ் நோக்காகப் பின்னால் செலுத்தி இன்னும் மணல் ஒட்டிக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு மேலும் ஓரிரு தடவை மணல் முற்றிலும் போகும்படியாகக் கையால் மணல் படிந்திருந்த இடத்தைத் தடவி விட்டாள். மணல் சொரசொரவென்று கொட்டியதும் மணல் படிந்திருந்ததால் ஒளி குன்றியிருந்த அவளது இளம்பச்சை நீச்சலுடையின் அப்பாகம் மீண்டும் ஒளி வீசியது!

ஸ்ரீதரோ அவள் செயலெதையும் இலட்சியம் செய்யாது படத்தில் பிரஷால் ஏதோ செய்து கொண்டிருந்தாள். ஆனால் அதிகார் அம்பலவாணரோ கண்ணாடியை நன்கு அணிந்துகொண்டு அவள் பின்னழகை இரசிப்பதில் மூழ்கியிருந்தார். அப்போது அவரது கழுகுக் கண்களுக்கு அவள் முதுகில் ஓர் எறும்பு ஏறிக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனே "அதோ அதோ எறும்பு-முதுகில்" என்றார் பதைபதைத்து. பத்மா அவளது முகிற் கூந்தல் குதிரையின் பிடரி மயிர் போல் துள்ளி அசையப் படக்கென்று தன் தலையைப் பின்னே திருப்பினாள். அவர் எறும்பைத் தட்டி விடுவதற்கு முன்னர் அவளாகவே அதைத் தட்டிவிட்டுக் கொண்டாள்.

வள்ளியாச்சி அதிகாரை ஒரு முறை தன் கண்களால் முறைத்துப் பார்த்தாள். ஆனால் அதிகாரா அதை இலட்சியம் செய்பவர்? பத்மாவின் உடலில் இன்னும் எறும்புகளிருந்து அவளது மெல்லுடலைக் கடித்துவிட்டால் என்ன செய்வது என்றஞ்சி அவர் தம் மூக்குக் கண்ணாடியால் மேலும் எறும்புகள் அவள் உடலிலோ நீச்சலுடையிலோ நடமாடுகின்றனவா என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரீதர் படத்தில் தான் செய்து கொண்டிருந்த வேலையை முடித்ததும் அதிகார் அம்பலவாணரிடமும் வள்ளியாச்சியிடமும் "ஹோட்டலில் இரண்டு மணிக்கு உங்களைச் சந்திக்கிறேன்" என்றான். அவ்வாறு கூறிக் கொண்டே பத்மாவிடமும் ஓவியப் பொருள்களை எல்லாம் எடுத்துக் காருக்குக் கொண்டு போகும்படி சொன்னான். அத்துடன் தானும் சில பொருள்களைத் தூக்கிக் கொண்டு கடற்கரை ரெயில் பாதையின் மறு புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் காரை நோக்கி நடந்தான் அவன். சில நிமிஷங்களில் அவன் அங்கிருந்து தனது செந்நிற ஸ்நான உடையில் பத்மாவுடன் கடலை நோக்கி மீண்டும் வந்த பொழுது பத்மா இவ்வுலகில் இல்லை. முதன் முதலாக ஸ்ரீதரை வெறும் மேலுடன் அவள் கண்டது இதுவே முதல் தடவை. பொன் போன்ற அவன் பூரித்த தேகமும், கன்னங்கரேலென்ற அவன் நெஞ்சின் அடர் மயிரும் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டன. தன் காதலனின் கட்டழகிலே அவளுக்குத் தாங்கொணாத பெருமை.

அர்ச்சுன ராஜன் பக்கத்தில் நின்ற அல்லிராணி கூட அவ்வளவு பெருமைப்பட்டிருப்பாளோ என்னவோ? கடற்கரையில் இவ்வளவு ஆட்கள் மட்டுமில்லாவிட்டால் ஸ்ரீதரின் பரந்த நெஞ்சைத் தன் இரு கரங்களாலும் ஆசை தீரத் தடவி மகிழ்ந்திருக்கலாமே என்று எண்ணினாள் அவள். அவன் நெஞ்சின் மயிர்களுள் தனது விரல்களை மறைக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. கடலில் குளிக்க வேண்டுமென்று பத்மா வெறுமனே மனதால் ஆசைபட்டாளே தவிர, கடலலைகளுக்குச் சமீபமாகச் சென்றதும், கடலில் இறங்க அச்சமேற்பட்டு விட்டது அவளுக்கு. உண்மையில் அவள் கடலில் இறங்கி நீராடிச் சுமார் பத்து வருடங்களாவது இருக்கும்.

கொலீஜ் ரோட்டிலிருந்து சுமார் ஒன்றரை மைல் துரத்திலிருந்த முகத் துவாரம் சங்கமுகக் கடலில் அவள் தந்து சிறு வயதில் சில தோழிகளுடன் நீராடி இருக்கிறாள். அப்போது அவளுக்கு நீச்சலுடை என்று ஒன்று இருப்பது கூடத் தெரியாது. மேற்சட்டையைக் கழற்றிவிட்டுத் தொள தொளவென்ற பாவாடையை நெஞ்சுக்கு மேல் உயர்த்திக் குறுக்குக் கட்டாகக் கட்டிக் கொண்டு அன்று நீராடியதற்கும், இன்றைய கல்கிசை நீராட்டத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்? உடலை இதமாக இறுக்கிக் கொண்டிருக்கும் நீச்சலுடையில் மேல்நாட்டு நங்கையர் போல ஆணழகன் ஒருவனுடன் ஒரு நாள் இப்படி உல்லாசமாகக் கடலாடும் வாய்ப்புத் தனக்கு வரும் என்று கூட அப்பொழுது அவள் எண்ணியிருக்க முடியுமா? அவள் பெரிய பிள்ளையாகி ஒரு சில மாதங்களில் ஒரு சினிமா படத்திற்குப் போன போது தான் முதன் முதலாக நீச்சலுடைச் சிங்காரிகளை அவள் அப்படத்தில் பார்த்தாள். அதன் பயனாக அன்றிரவு வெகு நேரம் வரை அவளுக்கு நித்திரை வரவில்லை. தானும் நீச்சலுடை அணிந்துக் கொண்டு எங்கெங்கோ போய் வருவது போலவும் பல ஆடவர்கள் தன்னைத் தொடர்ந்து திரிந்து மொய்த்துக் கொண்டிருப்பது போலவும் மனத் திரையில் பகற் கனவுகள் தோன்றித் தோன்றி வந்து கொண்டிருந்தன. அவர்களில் ஒரு சிலருடன் தான் உல்லாசமாகப் பேசி மகிழ்வது போலவும் மற்றும் சிலரை ஏசி விரட்டுவது போலவும் காட்சிகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இந்தப் பகற் கனவு அனுபவம் அன்றிரவோடு முடிவடைந்து விடவில்லை. அன்று ஆரம்பித்த இக்கனவுகள் பின்னர் அடிக்கடி அவள் நேரத்தைப் பிடிக்க ஆரம்பித்தன. ஓய்வு நேரங்களிலெல்லாம் கட்டிலிலே படுத்துக் கண்ணை மூடிக் கொண்டு தானாகவே வலிந்து பகற் கனவு காணும் பழக்கத்தை மேற் கொண்டாள் அவள். இந்தப் பழக்கம் ஒரு நாள் கொள்ளுப்பிட்டிக் கடற்கரையில் அவள் நேரில் சில பெண்கள் நீச்சலுடையில் குளித்துக்கொண்டிருப்பதைக் கண்டதால் மேலும் வலுப்பெற்றது. உள்மனதின் ஆசையில் பிறந்த இக்கனவு எவ்வளவு சீக்கிரமாகவும் இலகுவாகவும் இன்று நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இவை எல்லாம் வெறும் கனவாகவே முடியும் என்று தான் அவள் எண்ணியிருந்தாள். ஆனால் அவை இப்பொழுது உண்மையாகவல்லவா நடந்து கொண்டிருக்கின்றன? பத்மாவால் அன்று காலையிலிருந்து நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகளை உண்மை என்றே நம்ப முடியவில்லை. ஏதோ சினிமாப் படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரமைதான் அவளுக்கு ஏற்பட்டது. வாழ்க்கை இவ்வளவு இனிமையானதா என்று ஆச்சரியப்பட்டாள் அவள்.

தண்ணீரில் இறங்க அஞ்சிய பத்மாவை ஸ்ரீதர் "பயப்படாதே பத்மா! நான் உனக்கு நீந்தப் பழக்குகிறேன். இறங்கு" என்று பல தடவை சொல்லியும் அவள் கேட்காமல் போகவே, ஸ்ரீதர் அவளை முரட்டுத்தனமாகத் தன் கரத்தால் பற்றித் தண்ணீருள் இழுத்துச் சென்று விட்டான். முதலில் பத்மா இதனை எதிர்த்துச் சிணுங்கிக் கூச்சலிட்ட போதிலும், பின்னால் சிரித்த முகத்துடன் அவன் தோள்களைப் பற்றிக் கொண்டு, "எனக்குப் பயமாயிருக்கிறது! நீந்தச் சொல்லித் தாருங்கள்" என்று உற்சாகமாகச் சப்தமிட்டாள்.

ஸ்ரீதரும் அவளுக்கு நீச்சற் கலையைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினான். பத்மாவும் வெகு விரைவாகவும் கவனமாகவும் அவன் சொல்லிக் கொடுத்தபடி நீந்தும் கலையைக் கற்க ஆரம்பித்தாள். ஸ்ரீதர் நீந்துவதை முறையாக ஒரு நீச்சல் வாத்தியாரிடம் கற்றிருந்தபடியால் பத்மாவுக்கு நீந்தச் சொல்லிக் கொடுப்பது அவனுக்குக் கஷ்டமாக இருக்கவில்லை. பத்மாவோ வெகு விரைவில் நீந்தத் தொடங்கி விட்டாள். எவரும் தான் ஆசைப்படும் எதையும் மிகவும் விரைவில் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு அவள் நீந்தக் கற்ற வேகம் நல்ல நிரூபணமாய் இருந்தது.

"பத்மா, நீ மிகவும் கெட்டிக்காரி. நீ நீச்சலை விரைவாகக் கற்கும் வேகத்தைப் பார்த்தால் சில நாட்களில் நீ மீன்களை விட நன்றாக நீந்தத் தொடங்கி விடுவாய்!" என்றான் ஸ்ரீதர்.

"அப்படித்தான் என் வேலை எல்லாம்! என்ன நீனைத்தீர்கள் பத்மாவைப் பற்றி? எதில் ஈடுபட்டாலும், அதை விரைவில் பயின்று விடுவேன். அப்பா கூட என்னை அப்படிச் சொல்லி மெச்சியிருக்கிறார்." என்றாள் பத்மா பெருமையாக.

"நிறுத்து. நீ நீந்தப் பழகியது உன்னுடைய கெட்டித்தனமல்ல. வாத்தியார் ஸ்ரீதர் நன்றாகச் சொல்லிக் கொடுத்தார். அதுதான் மாணவி இவ்வளவு விரைவில் கற்றுக் கொண்டாள்" என்றான் ஸ்ரீதர்.

"ஆனால் மாணவி மக்காய் இருந்தால் எப்படிக் கற்றுக் கொள்ளுவாளாம்" என்றாள் பத்மா. இவ்வாறு கூறிக் கொண்டே கைகளையும் கால்களையும் ஸ்ரீதர் சொல்லிக் கொடுத்த பிரகாரம் முறையாக அசைந்து நீரின் மேல் மிதந்தாள் பத்மா. பின்னர் நீச்சலை நிறுத்தி விட்டு அவன் தோள்களை ஆசையோடு கட்டிக் கொண்டாள் அவள்.

அதிகார் அம்பலவாணரும் வள்ளியாச்சியும் அவர்களின் உல்லாசக் கோலத்தைத் தூரத்திலே நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வள்ளியாச்சிக்கு ஸ்ரீதர் - பத்மாவின் போக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. "பாருங்கள் ஸ்ரீதராவது பரவாயில்லை. அந்தப் பெண்ணுக்குத் தான் கொஞ்சமும் வெட்கமேயில்லை. தேகமெல்லாம் தெரியும் நீச்சலுடை. அவனும் அப்படி. இந்த நிலையில் அந்த முத்தின குமரி எப்படி அவனைக் கட்டிப் பிடித்துக் கொட்டம் போடுகிறாள். பாருங்கள்!" என்றாள் எரிச்சலுடன்.

அம்பலவாணர் புன்னகை பூத்தார். சமீப காலமாக அவர் தமிழிலக்கியப் படிப்பில் ஈடுபட்டிருந்ததால் பழைய காலத்து நீர் விளையாட்டைப் பற்றியும் புகார் நகரத்து இந்திர விழாவைப் பற்றியும் கூற ஆரம்பித்தார் அவர்.

"உனக்குத் தெரியுமா டார்லிங். சிலப்பதிகாரத்திலே இந்திர விழா என்று ஒன்று வருகிறது! இந்திர விழாவென்றால் என்ன? - ’பீச் கார்னிவல்’, கடற்கரைக் களியாட்டு. இந்த டைகர் கிளப் இன்று நடத்துகிற களியாட்டு மாதிரி. அன்று அரசர்கள் ஆதரவில் நடந்த பீச் கார்னிவல் அது. அதில் முக்கிய வைபவம் இன்று இங்கு நடப்பது போலக் கன்னியரும் காளையரும் கடலாடுவதுதான். கடலாடு காதையில் கோவலனும் மாதவியும் இந்திர விழாவுக்குப் போனது சொல்லப்பட்டிருக்கிறது. எங்களுடைய ஸ்ரீதரையும் இந்தப் பெட்டையையும் போல அன்றைக்கும் எத்தனை ஜோடிகள் இப்படிக் கும்மாளமடித்ததோ யாருக்குத் தெரியும்?"

"ஆம் கழிசடை வேலைகளுக்கு இந்தக் காலம் அந்தக் காலமென்று இருக்குதா? நடந்திருக்கும்" என்றாள் வள்ளியாச்சி.

"என்ன அப்படிச் சொல்கிறாய் டார்லிங்! நீ மறந்திட்டாயா, நாங்கள் இங்கிலாந்துக்குப் போனபோது அங்கே பிரைட்டன் கடற்கரையில், ஈர மணலில், ஸ்நான உடையில்..."

வள்ளியாச்சி அதிகாரைக் கடைக் கண்னால் பார்த்துவிட்டுச் சிரித்தாள். "அதை ஏன் இப்போது ஞாபகமூட்டுகிறீர்கள்? அப்படியானால் வாருங்கள். நாங்களும் ஜோடியாக தண்ணீரில் இறங்குவோம்"

அம்பலவாணருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. புன்னகை செய்து கொண்டே கம்ப ராமாயணத்திலிருந்து நீர் விளையாட்டைப் பற்றிய ஒரு பாட்டை எடுத்து விட்டார்.

"தாளையே கமலத்தாளின் மார்புறத் தழுவுவாரும்
தோளையே பற்றி வெற்றித் திருவெனத் தோன்றுவாரும்
பாளையே விரிந்ததென்னப் பாந்தநீர் உந்துவாரும் 
வாளைமீன் உகள அஞ்சி மைந்தரைத் தழுவுவாரும்"

என்று இப்படிப் போகிறது பாட்டு. பொருளென்ன தெரியமா? சில பெண்கள் தமது தலைவர்களின் மார்பைத் தழுவுகிறார்களாம். இன்னும் சிலர் தோள்களைத் தழுவுகிறார்கள். மற்றும் சிலர் தண்ணீரைக் கமுகம் பாளை போல் விரியும்படி எற்றி விளையாடுகிறார்கள். ஒரு சில பெண்கள் வாளை மீன்களைக் கண்டு பயந்து தம் காதலரைக் கட்டிக் கொள்கிறார்களாம். தோளையே பற்றி வெற்றித் திருவெனத் தோன்றுவாரும்- என்பது இப்பொழுது நீ கண்ட காட்சியைத் தான். அதாவது அந்தப் பெட்டை ஸ்ரீதரின் தோளைப் பிடித்துக் கொண்டு ஆடிய ஆட்டத்தைத் தான் குறிக்கிறது. தோளைப் பற்றிக் கொண்டு இலட்சுமி போல் தோன்றினார்களாம். பல பெண்கள், நீர் விளையாட்டின் போது, நீர் விளையாட்டுப் படலத்தில் வருகிறது. கம்பர் பாடியிருக்கிறார்" என்று பேசிக் கொண்டே போனார் அதிகார்.

இதற்கிடையில் பத்மாவும் ஸ்ரீதரும் கடலாடிய அலுப்பு நீங்க, கடற்கரை மணலுக்கு ஓடி வந்து மணலில் சிறிது சாய்ந்தனர். நிலத்தோடு நிலமாக மணலில் வீழ்ந்து கிடந்தமை பத்மாவுக்கு மிருகங்கள் அனுபவிப்பது போன்ற ஒரு புதுமையான உடலின்பத்தைத் தந்தது. அதில் மெய் மறந்த பத்மா, "ஸ்ரீதர் டார்லிங்! நாங்கள் என்றுமே இப்படி இன்பக் கடலிலே திளைத்திருப்போமா?" என்று போதை நிறைந்த குரலில் கேட்டாள்.

"சந்தேகமா? நாம் எப்பொழுதும் இப்படித்தான் இருப்போம்" என்று முனகினான் ஸ்ரீதர்.

இவ்வாறு அவர்கள் தம்மை மறந்து இருந்த வேளையில் விமானத்திலிருந்த வீசப்பட்ட நோட்டீசில் கூறப்பட்ட பிரகாரம் நீச்சலழகி ஆரம்பத் தேர்வு நீதிபதிகள் கிளம்பி வந்து கொண்டிருந்தார்கள். ‘புல் சூட்’ அணிந்திருந்த அவர்களின் கோட்டில் காகிதத்தில் அச்சிடப்பட்ட புலிப் படமும் ‘டைகர் கிளப்’ என்ற ஆங்கில வார்த்தைகளும் காணப்பட்டன.

அவர்கள் ஸ்ரீதர் - பத்மா ஜோடியைக் கண்டதும் தம் முன் ஏதோ பேசிவிட்டு அவர்களை நோக்கி வந்தார்கள். அந்த நடுவர்களில் ஒருவர் ஸ்ரீதரைப் பார்த்துவிட்டு "எவ்வளவு அழகான ஜோடி! உம்முடைய தோழி நிச்சயம் முதற் பரிசைப் பெறுவார். அவர் கட்டாயம் நீச்சலழகிப் போட்டியில் பங்குபற்ற வேண்டும். உங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள்." என்றார்.

ஸ்ரீதர் திடுக்கிட்டுவிட்டான். பத்மாவும் அப்படியே. என்ன சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. இருந்த போதிலும் பத்மாவைப் பொறுத்த வரையில் அவள் எதற்கும் தயாராகவே இருந்தாள். சிறு வயதிலிருந்தே எந்தப் புதிய நாகரிகச் செய்கையையும் செய்து பார்ப்பதில் அவளுக்கு ஆசை. தலை மயிரைக் கூடக் குட்டையாக வெட்டி "பொப்’ செய்து கொள்ள வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள். ஆனால் சந்தர்ப்ப சூழல்கள் சரியாக வாய்க்க வேண்டுமே? நீச்சலுடைகளைப் பொறுத்த வரையில் சந்தர்ப்ப சூழல்கள் சரியாக வாய்த்துவிட்டன. இப்பொழுது அதைத் தொடர்ந்து அழகு ராணிப் போட்டிக்கும் சந்தர்ப்பம் வந்து வாசலில் தட்டுகிறது. இருந்தாலும் பெண்மைக்கு இயற்கையான நாணமும், ஸ்திரீகளுக்கே இயற்கையான சாகசமும் அவளை அவளது சம்மதத்தை உடனடியாகத் தெரிவிக்கக் கூடாதென்று தடுக்கின்றன. ஆகவே தனக்கு அப்போட்டியில் பங்குபற்றச் சிறிது கூடவிருப்பமில்லை என்பது போன்ற ஒரு குறிப்பை முகத்தில் படர விட்டு, மெளனமாயிருந்தாள் அவள்.

நடுவர்களில் ஒருவர் மீண்டும் ஸ்ரீதரைப் பார்த்து "உண்மையில் உங்கள் தோழி முதலிடம் பெறுவது நிச்சயம். நீங்கள் தான் அவரைப் போட்டியில் பங்குபற்ற வற்புறுத்த வேண்டும்" என்றார்.

ஸ்ரீதர் பத்மாவை நோக்கி "பத்மா! நீ என்ன சொல்கிறாய்" என்று கேட்டான். அவளோ பதிலுக்கு "முடியாது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டாள். அவள் பேசிய தோரணையில் பத்மாவுக்குப் போட்டியில் பங்குபற்ற ஆசைதான் என்பது ஸ்ரீதருக்குப் புரியவில்லை.

என்றாலும் ஸ்ரீதர் சிறிது நேரம் யோசித்துவிட்டு நடுவர்களிடம் "போட்டி இரண்டு மணிக்குத்தானே? அதற்கிடையி எங்கள் முடிவை அறிவிக்கிறோம். சிறிது யோசிக்க அவகாசம் தாருங்கள்." என்றான். அவர்களோ "இதில் என்ன யோசிக்க இருக்கிறது. கட்டாயம் பங்குபற்ற வேண்டும்." என்று கூறிவிட்டுச் சென்றார்கள். போகு முன்னர், பத்மா பரமானந்த் என்று அவளது பெயரை ஒரு காகிதத்தில் எழுதிக் கொண்டார்கள்.

ஸ்ரீதருக்கு தலை சுற்றியது. பத்மாவிடம் "பொதுவாகத் தமிழ்ப் பெண்கள் இப்படிப்பட்ட அழகு ராணிப் போட்டிகளில் பங்குபற்றுவது குறைவு. மேலும், அவர்கள் நீச்சலுடையை அணியலமா, அது தமிழ்ப் பண்பா என்பது பற்றி இன்று பத்திரிகைகளில் கூட விவாதம் நடக்கிறது. அதுதான் நான் யோசிக்கிறேன். எதற்கும் சுரேஷிற்கு டெலிபோன் செய்து, வீட்டிலிருந்தால் அவனை உடனே வரவழைத்து, விஷயத்தை அவனுடன் கலந்தாலோசிப்போம்," என்று சொல்லிக் கொண்டே அவளையும் அழைத்துக் கொண்டு ஹோட்டலை நோக்கி நடந்தான் அவள்.

அதிர்ஷ்டவசமாக சுரேஷ் "கிஷ்கிஷ்ந்தா"வில் இருந்தான். "சுரேஷ்! உடனே டாக்சி எடுத்துக் கொண்டு கல்கிசை ஹோட்டலுக்கு வா. அவசரமான விஷயம்." என்றான் ஸ்ரீதர்.

"என்ன அவ்வளவு அவசரம்?"

"வா சொல்லுகிறேன். உடனே கிளம்பு"

இவ்வாறு சொல்லி டெலிபோனை வைத்துவிட்டு மத்தியான உணவருந்துவதற்காக ஹோட்டல் நந்தவனத்தில் தென்னை மரங்களின் கீழ் இடப்பட்டிருந்த மேசைகளை நாடிச் சென்றான் ஸ்ரீதர். அல்பேர்ட் கிழவன் ஓடோடி வந்து மத்தியான உணவுக்கு ஏற்பாடு செய்யலானான்.

பத்மாவும் ஸ்ரீதரும் ஹோட்டல் ஸ்நான மண்டபத்துக்குப் போய் உப்புத் தண்ணீரின் பிசுபிசுப்பைக் கழுவ அங்கிருந்த சுத்த நீர் ‘ஷவர் பாத்’தில் குளித்த பின்னர், துவாய்களால் உடம்பைத் துடைத்து விட்டுக் கொண்டே, ஈர ஸ்நான உடைகளை மாற்றிக் கொள்ளாமலேயே மேசையில் வந்து உட்கார்ந்தார்கள் கடலாடிய ஆடவர் அரிவையரில் பலர் அவ்வாறு ஈர உடையிலேயே பானங்களையும் உணவையும் அருந்திக் கொண்டிருந்தார்கள்.

பத்மா கழுவிவிடப்பட்ட ஒரு தந்தப் பொம்மை போல நாற்காலியில் செளகரியமாகச் சாய்ந்து கொண்டு வானத்தை நோக்கியவண்ணம் அன்றைய நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக இரை மீட்க ஆரம்பித்தாள். "எத்தகைய இன்பமான நாள்! ஸ்ரீதரும் நானும் எவ்வளவு களிப்பாகக் காலத்தைக் கழித்தோம்! நீச்சலுடை அணிந்து கொண்டதுடன் நீந்தவுமல்லவா கற்றுக் கொண்டேன்? இனி ஒவ்வொரு நாளுமே இப்படிச் செய்ய வேண்டும் போலிருக்கிறது. ஸ்ரீதரும் நானும் என்றென்றும் நீச்சலுடையில் கடற்கரை மணலில் புரள்வதும், அம்மணலைக் கழுவக் கடலில் நீந்துவதும், உப்பு நீரின் பிசுபிசுப்பைப் போக்க ஷவர் பாத்தில் குளிப்பதும், வாய்க்கினிய உணவுகளை உன்பதும் கடற்காற்று உடல் முழுவதையும் தழுவிச் செல்ல இப்படி வீற்றிருப்பதுமாகா... ஆகா இப்படியே காலம் போய்க் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? என் இன்பத்துக்கு ஓர் எல்லையே இல்லை போலிருக்கிறது. காளிதாஸ் கடை விற்பனையாளன் என்னை உலக அழகி ராணியோடு ஒப்பிட்டான். இப்பொழுது நீச்சல் ராணிப் போட்டிக்கே அழைக்கப்பட்டு விட்டேன். ஆனால் ஒன்று நான் இதில் பங்குபற்றினால் அச்செய்தி பத்திரிகைகளில் கட்டாயம் வெளிவரும். அவ்விதம் வெளி வந்தால் நான் அது பற்றி அப்பாவுக்கு என்ன சொல்வது? தோட்டம் முழுக்க எனது நீச்சலுடைக்காக என்னைக் கண்டிக்கும். அன்னம்மாக்கா கூடக் கண்டிப்பாளோ? என்னவோ? அப்பாவை எப்ப்டியோ சமாளித்துவிடலாம். ‘ஸ்ரீதர் சொன்னான் நான் செய்தேன்’ - என்றால் அவர் அதற்கு மேல் ஒன்றும் பேசமாட்டார்.  நமது தமிழர்கள் தமிழ்ப் பண்பு, தமிழ்ப் பண்பு என்று ஏதோ பேசுகிறார்கள். அவர்களைப் போன்ற புதுமையான சமுதாயத்தினர் வேறு எவருமே இவ்வுலகில் இல்லை. தங்கள் வீட்டுப் பெண்ணிடம் அப்படி உடுத்தாதே, இப்படி உடுத்தாதே, கழுத்தைத் தாழ்த்தி வெட்டாதே, இடையை இவ்வளவுக்கு மேல் காட்டாதே என்றெல்லாம் கூறும் அவர்கள் தங்கள் சினிமாக் கதா நாயகிகள் மட்டும் எப்படி உடுத்தினாலும் மெச்சிக் கொள்ளூகிறார்கள். தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் சினிமா நடிகையரின் கவர்ச்சிப் படங்களில் அவர்கள் எப்படி எப்படி எல்லாம் நீச்சலுடைகளில் பாம்பு போல் நெளிந்து கொண்டு நிற்கிறார்கள். வீட்டிலுள்ள இளம்பெண் இதில் நூறில் ஒரு பகுதி செய்துவிட்டால் போதும். கோபித்துக் கொள்கிறார்கள்" என்றெல்லாம் யோசித்தாள்.

ஸ்ரீதர் எதிர்பார்த்திருக்கும் அவனது நண்பனான டாக்டர் சுரேசைப் பற்றி அவன் எப்படிப்பட்டவனோ, என்ன ஆலோசனை கூறுவானோ என்று கூடப் பத்மா பயப்பட்டாள். "ஒரு வேளை வாழ்க்கையைச் சுவைக்கத் தெரியாத இன்றைய இலட்சிய இளைஞர்கள் பலரைப் போல அவனும் பெண்களைப் பிற்போக்கான நிலையில் வைத்திருக்க விரும்பும் ஒரு மடையனாய் இருந்தால் என்ன செய்வது?" என்று கூட அவள் எண்ணினாள். இருந்தாலும் தனது சிந்தனைகள வெளிக் காட்டாமல் ஸ்ரீதரின் அழகிய முகத்தைப் பார்த்து அதன் கவர்ச்சியைத் தன் மனதால் பருகிக் கொண்டிருந்தாள் அவள்.

ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் அவன் கண்களை மூடிக் கொண்டு காற்றில் அலையாடிய தென்னங் கீற்றுகளின் ‘உர்’ரென்ற சப்தத்தையும், களியாட்டக்காரர்கள் எழுப்பிய பல்வேறு ஓசைகளையும், கடலின் ஓங்கார நாதத்தையும் மனமார அனுபவித்துக் கொண்டிருந்தான். சுரேஷ் வரும் வரை அப்படியே இருப்பதென்று முடிவு கட்டிவிட்டான் அவன்.

பத்மா திடீரென, "ஸ்ரீதர்! இதோ பாருங்கள் தென்னங் குற்றியிலிருந்த எறும்புகள் செய்த வேலையை!" என்று கொண்டே எறும்புக் கடியால் தன்னுடம்பில் இரண்டு இடங்களில் ஏற்பட்டிருந்த சிவந்த தழும்புகளைத் தன் கால்கால் ஸ்ரீதருக்குத் தொட்டுக் காட்டினாள்.

ஸ்ரீதர் "பேசாமலிரு பத்மா. இல்லாவிட்டால் இன்னும் சில எறும்புகளைக் கொண்டு வந்து கடிக்க விட்டுவிடுவேன்" என்றான். தன் அமைதியை அவள் குலைப்பது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. "தென்னங்குற்றியிலிருந்த எறும்புகள் சிறியவை. நான் கட்டெறும்புகளைக் கொண்டு வந்து கடிக்க விடுவேன்" என்றான் அவன்.

பத்மாவுக்கு ஸ்ரீதர் தன் எறும்புக் கடித் தழும்புகளைப் பார்க்க மறுத்ததும், கோபத்தை உண்டு பண்ணியது. தன் காதலிக்குச் சிறிது நோவென்றால் கூடத் துள்ளி எழுந்து பார்ப்பவனல்லவா உண்மைக் காதலன் என்று நினைத்துக் கொண்டே அவள் பேசாது மெளனமாயிருந்தாள்.

அவள் இவ்வாறு அமைதியுற்றதைக் கண்ட ஸ்ரீதருக்கு அவள் மீது அனுதாபம் ஏற்பட்டது. கண்ணை விழித்துக் கொண்டு "எறும்பு எங்கே கடித்தது?" என்று கேட்டுக் கொண்டு அவள் சுட்டிக் காட்டிய இடங்களை எல்லாம் தன் கரங்களால் தடவி விட்டான். அவளுக்குத் தாங்க முடியாத கூச்சம். என்றாலும் ஸ்பரிச சுக அனுபவத்தினால், மேலும் மேலும் கடிக்காத இடங்களையும் கடித்ததாகக் காட்டிக் கொண்டிருந்தாள். ஸ்ரீதர் அவளது பொய்யைப் புரிந்து கொண்டானாயினும் ஒன்றுமறியாதவன் போல் அவள் காட்டிய இடங்களை மேலும் மேலும் தடவி கொண்டேயிருந்தான். இடையிடையே அவளை மெல்ல துள்ளவும் அவன். "கட்டெறும்பு கடிகிறது" என்று செல்லமாக வாயைக் குவித்து முனகினான் அவன்.


10-ம் அத்தியாயம்: நீச்சல் அழகி

ஒரு சில நிமிஷ நேரத்தில் பத்மா தன் முகத்தையும் தலையையும் சரி செய்து கொண்டு புதிய நீச்சலுடையில் போட்டி நடக்கும் இடத்துக்கு ஸ்ரீதருடன் சென்ற போது, உண்மையில் ஒரு மாய மோகினியாக, அதிசய கவச்சிப் பாவையாகக் காட்சியளித்தாள். அவள் இப்போது அணிந்திருந்த நீச்சலுடை ‘பிக்கினி’ அல்லாவிட்டாலும் பார்க்க மிகக் குறைந்த துணியில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். சற்று மேலேறிய கால்களுடனும், முன்னால் இன்னும் அதிகமாகத் தாழ்த்திறங்கிய கழுத்துடனும் பின்னால் முதுகுப் புறத்தின் பெரும் பகுதியை நன்கு காட்டுவதாகவும் மிகவும் நாகரிகமாகவும் அழகாகவும் அமைந்திருந்தன. அதிகார் அம்பலவாணர் முன் வரிசை ஆசனத்தில் தமது வெள்ளி மூக்குக் கண்ணாடியை நன்றாகத் துடைத்து மாட்டிக் கொண்டு நடுவர்களுக்கு நாயகமாக வீற்றிருந்தார். ஒவ்வோர் அழகியும் தனியாகப் பவனி வந்த காட்சியைப் பார்த்து, தம்மிடம் கொடுக்கப்பட்ட காகிதத்தில் புள்ளி போட்டுக் கொண்டிருந்த அவர் ஐந்தாவது அழகி பத்மாவைக் கண்டதும் "ஓஹோ! ஸ்ரீதரின் சரக்கு! இவள்தான் மிக அழகாயிருக்கிறாள்" என்று புள்ளிகளை மிகவும் அதிகமாகவே அவளுக்குக் கொடுத்துவிட்டார். உண்மையில் கடற்கரையில் பார்த்ததை விட இப்பொழுது அவளது எழில் இன்னும் பல மடங்காகவே அவருக்குத் தெரிந்ததுஇதற்கிடையில் அல்பேர்ட் புகை கிளம்பிக் கொண்டிருந்த சூடான நண்டுணவை மேசை மீது கொண்டு வந்து பரப்பினான். இருவரும் ஆசையோடு அதனை உண்ண ஆரம்பித்தனர். அவர்கள் சாப்பாட்டை முடித்துப் பழக்கலவையை அருந்திக் கொண்டிருந்த போது, சுரேஷ் அங்கு திடீரெனத் தோன்றினான். "வா சுரேஷ்! இது தான் என் காதலி பத்மா. உனக்குத் தெரிந்த என் சகுந்தலை! இது தான் டாக்டர் சுரேஷ். நான் உன்னிடம் அடிக்கடி குறிப்பிட்டுப் பேசுவேனே அந்த நண்பன்!" என்று சுரேஷையும் பத்மாவையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் பண்ணி வைத்தான் ஸ்ரீதர்.

இருவரும் ஒருவர் கையை ஒருவர் குலுக்கிக் கொண்டார்கள்.

பின் சுரேஷிடம் நீச்சல் அழகிப் போட்டி விவரங்களையும் தன் முன்னிருந்த பிரச்சினையையும் கூறினான் ஸ்ரீதர். சுரேஷ் எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"தமிழ்ப் பெண்கள் நீச்சலுடையை அணிவது தமிழ்ப் பண்புக்கு இழுக்கென்கிறார்களே, அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்றான் ஸ்ரீதர்.

"என்னைப் பொறுத்த வரையில் இந்தத் தமிழ்ப் பண்பு என்ற சொற்கள் இருக்கின்றனவே அவை மிகவும் ஆச்சரியமான வார்த்தைகள் என்று நான் கருதுகிறேன். என்னுடைய பாட்டனார் சிங்கப்பூருக்குப் போய்விட்டு வந்த போது, தன் குடுமியை வெட்டிவிட்டு வந்ததால் அவர் தமிழ்ப் பண்பை முற்றாகாக் கொன்றுவிட்டார் என்று கருதிய அவரது தகப்பனார் அதன் பின், சாகும்வரை அவருடன் பேசியதே இல்லையாம். அதன்படி இச்சந்தர்ப்பத்தில் தமிழ்ப் பண்பென்பது தலைமயிர் விவகாரம். ஒருவனது குடுமிக்குள் அடங்கும் விவகாரம். ஆனால் நீயோ அதை இப்பொழுது ஒரு நீச்சலுடை விவ்காரமாக்கப் பார்க்கிறாய்! சொல்லப் போனால் குடுமி இல்லாத எங்களுக்குத் தமிழ்ப் பண்பைப் பற்றிப் பேசக் கூட அருகதையுண்டா? என்னுடைய பூட்டனார் கருத்துப்படி தலைமயிர் வெட்டியவன் "முழிவியழத்து"க்குக் கூட அருகதையற்றவன்" என்றான் சுரேஷ் சிரித்துக் கொண்டு.

"உன் பகடிப் பேச்சை விட்டுவிட்டு இப்போது கைமேலுள்ள பிரச்சினைக்குப் பதில் சொல்லு" என்றான் ஸ்ரீதர்.

"அதுதான் சொல்லுகிறேன். இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. இன்று தலைமயிர் வெட்டுவதும் தமிழ்ப் பண்பாகிவிட்டது - ஆண்கள் விஷயத்திலாவது! கொஞ்ச நாளில் பெண்கள் விஷயத்திலும் அது சரியாய்ப் போய்விடும். அது போல் தான் நீச்சலுடையும்! இப்பொழுது நீச்சலுடை அணிவது தமிழ்ப் பண்பல்ல. ஆனால் கொஞ்ச நாள் போனதும் அது தமிழ்ப் பண்பாகிவிடும். அதாவது எல்லோரும் அணிய ஆரம்பித்ததும்!" என்றான் சுரேஷ்.

ஸ்ரீதருக்கு இந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை. ஆகவே சுரேஷை மேலும் பேசும்படி ஊக்கிக் கொண்டேயிருந்தான்.

"என்னைப் பொறுத்தவரையில் உடைகள் உடம்பின் எந்தப் பாகத்தையும் மற்றவர்கள் பார்க்காமல் இருக்க வேண்டுமென்பதற்காக மட்டும் அணிபவையல்ல. குளிர், வெப்பம் என்பவற்றிலிருந்து உடம்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கே உடைகள். இதில் நாம் பார்க்க வேண்டியது தமிழ்ப் பண்பல்ல. சுகாதாரப் பண்பு. நீச்சலுடையைப் பொறுத்தவரையில், அது நீந்தும்போது அணியப்படுகிறது. நீந்தும் போது நீச்சலுடையை அணிய வேண்டாமென்பவர்கள் ஒன்றுமே அணிய வேண்டாமென்றால், அது பொருத்தமே. ஏனெனில் குளிக்கும்போது ஒன்றுமணியாமல் குளிப்பது உடம்பை நன்கு சுத்தம் செய்து கொள்வதற்கு உதவியாயிருக்கும். ஆனால் நீச்சலுடையை அணிய வேண்டாம், பதினாறு முழச் சேலையைதான் நீந்தும்போது அணிய வேண்டும் என்பவர்கள் என்ன பண்பு பேசினாலும் சுகாதாரப் பண்புக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்" என்றான் சுரேஷ்.

பத்மா, சுரேஷின் வார்த்தைகளைச் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"சிலர் இந்தத் தொல்லையான பிரச்சினையைத் தீர்ப்பது கடினமாயிருப்பதால் பெண்கள் நீந்தவே கூடாது என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் அப்படி மனித இனத்தின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துவது, அவர்களது சுதந்திரத்தை மறுப்பதாகும்."

ஸ்ரீதர், "நீ சொல்வது நியாயமாகத்தான் படுகிறது. ஆனால் பெண்கள் நீச்சலுடையை அணிந்து கொண்டு நீந்தப் போவதற்குப் பதிலாக மேடைகளில் ஆண்களின் முன் தம் அங்கங்களைக் காட்டுவதற்காகப் போவது சரியா? அது தவறுதானே?" என்றான்.

சுரேஷ் அதனை ஒப்புக் கொண்டான். "பெண்கள் தங்கள் அங்கங்களைக் காட்டி ஆண்களைக் கவர முயல்வது தப்புத்தான். ஆனால் வேறு கவர்ச்சிக்கரமான பண்புகளில்லாதவர்கள் அந்தக் காரியங்களில் ஈடுபடுவார்கள். சிந்தனா சக்தியோ, பேச்சுத் திறனோ, அறிவாற்றலோ, கலைத் திறனோ உள்ள பெண் அவற்றால் தான் ஆணையோ பெண்ணையோ கவரப் பார்ப்பாள்" என்றான்.

ஸ்ரீதர், "நீ சொல்வதெல்லாம் சரி சுரேஷ். ஆனால் போட்டிக்குரிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது பத்மா என்ன செய்ய வேண்டும்? நீச்சலுடையை அணியலாமா" என்று கேட்டான், அவசரமாக.  சுரேஷ், பத்மாவை ஒரு தரம் ஏற இறங்கப் பார்த்து அவள் அழகை இரசித்தவண்ணமே, "இது என்ன கேள்வி ஸ்ரீதர்! பத்மா ஏற்கனவே நீச்சலுடையில்தானே இருக்கிறாள்?" என்றான்.

ஸ்ரீதருக்குக் கோபம் வந்தது. "நீ என்ன சொல்கிறாய் சுரேஷ்? அவள் இது வரை நீச்சலுடை அணிந்தது நீந்துவதற்கு. இப்பொழுது அழகுப்

போட்டிக்கு அதை அணியலாமா என்பதுதான் கேள்வி?" என்றான்.

"அதற்கு நான் ஏற்கனவே பதிலளித்துவிட்டேன். கூடாது. ஆனாலும் அது உலகில் ஒரு நாகரிகமாகப் பரவிவிட்டபடியால் அதைச் செய்வதில் பிழையுமில்லை. ஊர் செய்வதை நாமும் செய்யலாம். இன்னும் இந்த விஷயத்தைப் பத்மாவும் நீயும் தீர்ப்பதுதான் சரி"என்றான் சுரேஷ்.

"அது கஷ்டமாயிருப்பதனால் தானே உன்னை அழைத்தேன். உன் தீர்ப்பே முடிவானது. சொல்லு" என்றான் ஸ்ரீதர்.

சுரேசுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனுக்கு மகா அலெக்ஸாந்தரின் ஞாபகம் வந்தது.

"ஸ்ரீதர்! நான் ஒரு கதை சொல்லட்டுமா? இந்தியாவை வெற்றிக் கொண்ட கிரேக்க மன்னனான மகா அலெக்ஸாந்தர் தன் பிரயாணங்களின் போது கோர்டியஸ் என்ற மன்னனைச் சந்தித்தானாம். அவள் அலெக்ஸாந்தருக்கு முன் ஒரு பெரிய கயிற்று முடிச்சை வைத்து ‘இந்த முடிச்சை உன்னால் நீக்க முடியுமா?’ என்றானாம். அலெக்ஸாந்தர் "ஏன் முடியாது? இதோ பாருங்கள்" என்று சொல்லி முடிச்சைத் தன் கரங்களால் விடுவிக்க முயன்றான். முடியவில்லை. உடனே தன் வாளை உறையிலிருந்து நீக்கிக் கயிற்றை அதனால் ஒரே வெட்டாக வெட்டி முடிச்சை அவிழித்தான். இதே முடிச்சு முன்னரும் பல பேரிடம் இதே மன்னனால் அவிழ்ப்பதற்காகக் கொடுக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் முடிச்சை முறையாக அவிழ்க்க முயன்று தோல்வி அடைந்தார்களேயல்லாமல், ஒருத்தராவது அலெக்ஸாந்தர் கையாண்ட குறுக்கு வழியை அனுஷ்டிக்கவில்லை. அலெக்ஸாந்தரின் துரித முடிவுக்காகவும் செயல் திறமைக்காகவும் எல்லோரும் அவனைப் பாராட்டினர். பார்த்தாயா, ஆளப் பிறந்தவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் உள்ள வித்தியாசத்தை? அலெக்ஸாந்தரின் செயல் அவன் ஆளப் பிறந்தவன் என்பதைக் காட்டுகிறது. இதை நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா?"

"தெரிகிறது. நாமும் ஏதாவது குறுக்கு வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்கிறாய்."

"சரி. நான் ஒரு வழி சொல்லட்டுமா?"

பத்மா, சுரேஷின் வக்கணை நிறைந்த பேச்சை மிக்க சுவையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். அவன் கூறிய அலெக்ஸாந்தரின் கதை அவளுக்கு மிகவும் பிடித்தது. சுரேஷ் நேரத்துக்கும் இடத்துக்கும் தக்கவாறு எவ்வளவு அழகாகக் கதை சொல்லுகிறான் என்றும், மிகவும் தர்க்க ரீதியாகப் பேசுகிறானே என்றும் தனக்குள் தானே அவனை மெச்சிக் கொண்டாள். அவள் தன் பாராட்டைத் தன் கண்களின் மூலமும் புன்னகை பூத்த அதரங்களின் மூலமும் அவள் வெளியிட்டுக் கொண்டிருந்தாள். அவள் கரங்கள் மேசையைத் தட்டிக் கொண்டிருக்க, அவன் என்ன ஆலோசனை கூறப் போகின்றான் என்றறியத் தன் காதுகளைத் தீட்டிக் கொண்டிருந்தாள், அவள்.

சுரேஷ் தன் ஆலோசனையைச் சொல்ல ஆரம்பித்தான்.

"இதோ என்னிடம் இருக்கும் காசைப் பூவா தலையா போட்டுப் பார்ப்போம். தலை கிடைத்தால் பத்மா போட்டியில் பங்கு பற்றட்டும். பூ கிடைத்தால் வேண்டாம்."

"இது பிரச்சினைக்கு நாம் அளிக்கும் தீர்ப்பாகாதே! குருட்டுச் சம்பவமொன்றுக்கு நாம் அடிபணிவதாக அல்லவா முடியும்?"

"அது சரிதான். என்றாலும் இப்பொழுதே ஒரு மணியாகிவிட்டது. பிரச்சினையை நாம் முறையாக அலசித் தீர்ப்பெடுக்க நேரம் போதாது. அதனால் தான் இந்தக் குறுக்கு வழியை நான் சொன்னேன். செய்து பார்ப்போமா?"

ஸ்ரீதர் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டான். சுரேஷ் காசை மேலே சுண்டிப் புல் தரையில் விழச் செய்தான். தலை விழுந்தது. ஸ்ரீதர் உடனே "அப்படியானால் போட்டியில் பங்கு பற்ற வேண்டியது தான். மாரியம்மனின் விருப்பமது!" என்று கூறிக் கொண்டே எழுந்தான். பின்னர் பத்மாவைப் பார்த்து, "காலையில் வாங்கிய நீச்சலுடையை எவ்வளவு கசக்கி விட்டாய், பார். பரவாயில்லை. காளிதாஸ் கடைக்குப் போய் புதிய நீச்சலுடையொன்று வேண்டுவோம்." என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். அல்பேர்ட்டைக் கூப்பிட்டு "இதோ இந்தத் துரைக்கு வேண்டியதெல்லாம் கொண்டு வந்து கொடு. சுரேஷ்! நன்றாய்ச் சாப்பிடு" என்று சொல்லி விட்டுப் பத்மாவுடன் ஹோட்டலை நோக்கி நடந்தான். பத்மாவின் நீண்ட கால்கள் அவளுக்கு தனி அழகைக் கொடுக்க அவள் ஒய்யார நடை போட்டுச் சென்றதைப் பின்னாலிருந்த பார்த்த அல்பேர்ட் சுரேஷிடம், "நோனா மிச்சம் அழகு. இன்று அவர் தான் வெற்றி எடுப்பார்" என்று கூறினான். சுரேசும் "ஆம்" என்று தலையை அசைத்துப் புன்னகை செய்தான்.

ஒரு சில நிமிஷ நேரத்தில் பத்மா தன் முகத்தையும் தலையையும் சரி செய்து கொண்டு புதிய நீச்சலுடையில் போட்டி நடக்கும் இடத்துக்கு ஸ்ரீதருடன் சென்ற போது, உண்மையில் ஒரு மாய மோகினியாக, அதிசய கவச்சிப் பாவையாகக் காட்சியளித்தாள். அவள் இப்போது அணிந்திருந்த நீச்சலுடை ‘பிக்கினி’ அல்லாவிட்டாலும் பார்க்க மிகக் குறைந்த துணியில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். சற்று மேலேறிய கால்களுடனும், முன்னால் இன்னும் அதிகமாகத் தாழ்த்திறங்கிய கழுத்துடனும் பின்னால் முதுகுப் புறத்தின் பெரும் பகுதியை நன்கு காட்டுவதாகவும் மிகவும் நாகரிகமாகவும் அழகாகவும் அமைந்திருந்தன. செம்மை கலந்த பொன் வர்ணத்தில் அமைந்திருந்த அந்த உடையில் அவள் போட்டி நடக்க வேண்டிய இடத்துக்கு அன்னம் போல் ஒயிலாக நடந்து சென்ற பொழுது, ஆண் பெண் சகலரது கண்களும் அவளையே மொய்த்தன. பத்மாவைப் பொறுத்த வரையில் காலையில் முதன் முதலாக நீச்சலுடையை அணிந்ததும், மற்றவர்கள் அவளை உற்றுப் பார்த்த பொழுது, அவளுக்குச் சிறிது வெட்கமாகத்தானிருந்தது. ஆனால், அவள் அதை எதிர்த்துப் போரடித் தொடர்ந்தாற் போல பல மணி நேரம் நீச்சலுடையிலேயே இருந்துக் கொண்டிருந்ததால் அந்த வெட்கம் இப்பொழுது எப்படியோ மறைந்துபோய்விட்டது. உண்மையில் அவள் மனது அப்போது ஆனந்தத்தில் மிதந்தது. வேகமாக ஸ்நான உடையில் ஏறு போல் வீசிய கடற்காற்று உடம்பில் சகல இடங்களிலும் பட்டு, இன்பச் சிலிர்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, இன்னமும் இன்பத்தால் சிலிர்த்துக் கொண்டிருந்தது. தன் பக்கத்தில் நிமிர்ந்து பெருமையோடு நடந்து வந்து கொண்டிருந்த ஸ்ரீதரைப் பார்த்துப் புளகித்துக் கொண்டிருந்தது, அவள் நெஞ்சம். உணவை முடித்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற சுரேஷின் முகத்தில் இலேசான குறும்புப் புன்னகை ஒன்று தவழ்ந்து கொண்டிருந்தது. தூரத்திலிருந்து அதனைக் கவனித்த ஸ்ரீதருக்கு அதன் பொருள் என்ன என்பது சற்றும் விளங்கவில்லை. போட்டியிலே தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளில் ஒருவர், கடைசி நிமிஷத்தில் தம்மால் வர முடியவில்லை என்று தந்தி அடித்துவிட்டதால் புதிய நீதிபதி ஒருவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ‘டைகர் கிளப்’ தலைவர் திரு. ஜயசிங்காவின் கண்களில் தமது அசாதாரண உடையில் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்த அதிகார் அம்பலவாணரின் உருவம் அகப்பட்டது! திரு. ஜயசிங்கா அவரை அணுகி, "நீங்கள் யார்? பார்ப்பதற்கு மிகக் கம்பீரமாகத் தோன்றுகிறீர்களே!" என்று விநயமாகக் கேட்டதும், தாம் தான் அதிகார் அம்பலவாணர் என்று உண்மையை மிக்க பெருமையோடு வெளியிட்டார் அவர். தலைப்பாகைக்காரர் ஒரு முக்கியமான பிரமுகரே என்று தெரிந்து கொண்ட திரு. ஜயசிங்கா அவரை நீச்சலழகியைத் தெரிந்தெடுக்கும் நீதிபதிகளின் தலைவராக இருக்க வேண்டுமென்று தாழ்மையாகக் கேட்டுக் கொண்டார். அதிகாரின் வெள்ளைத் தலைப்பாகை களியாட்டச் சூழலின் விநோதத்தையும் வேடிக்கையையும் பல மடங்கு அதிகரிக்கும் என்பது திரு. ஜயசிங்கா கருதியதே அவரை அவ்வளவு விரும்பிகப்பதவியை ஏற்கும்படி அவர்  கேட்டுக் கொண்டதற்குக் காரணம்.

சரியாக இரண்டு மணிக்கு நீச்சல் மோகினிகள் தென்னை மரங்களிடையே மலர்ப்பாத்திகளின் நடுவில் புல் தரையில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்குச் சமீபமாக வந்தார்கள். பல மேசைகளை ஒன்றுடன் ஒன்று பொருந்திச் சிவப்புக் கம்பளம் விரித்து அமைக்கப்பட்டிருந்த மேடையில் நீராமகளிர் போல் விளங்கிய நீச்சலழகிகள் ஒன்று, இரண்டு, மூன்று என்று இலக்கங்கள் எழுதப்பட்ட அட்டைகள் குத்திய நீச்சலுடைகளுடன் ஒவ்வொருவராக ஏறி நடக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த ஏற்பாடுகளை ‘டைகர் கிளப்’ தலைவர் திரு. ஜயசிங்கா அழகிகளுக்கு எடுத்துக் கூறினார்.

பத்மா அவற்றைக் கேட்டு விட்டு ஸ்ரீதரின் பக்கத்தில் வந்து நின்று கொண்டாள். அவளுக்கு இப்பொழுது ஒரு பயம் ஏற்பட்டிருந்தது. என்ன தான் மற்றவர்கள் தன்னை அழகி, அழகி என்று போற்றியபோதிலும் தான் உண்மையில் அழகிதானா என்பதே அப்பயம். "ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அவ்வாறு போற்றப்படுகிறேனா அல்லது அது நூற்றுக்கு நூறு முற்றிலும் உண்மைதானா?" என்று தன்னைத்தானே வினவிக் கொண்ட அவன் ஸ்ரீதரிடம் இரகசியமாக "நான் உண்மையில் அழகாயிருக்கிறேனா? எனக்கு வெற்றி கிடைக்குமா?" என்று கேட்டாள். ஸ்ரீதர் அவள் தோள்களைப் பற்றி அவள் முகத்தை அன்போடு பார்த்து, "நிச்சயமாக உனக்குத்தான் வெற்றி. உன்னைப் போன்ற அழகி இந்த உலகிலேயே இல்லை. காலையில் காளிதாஸ் கடைக்காரன் சொன்னது ஞாபகமில்லையா?" என்றான். இவ்வார்த்தைகள் அவளுக்கு ஊக்கத்தை அளித்த போதிலும் ஆங்காங்கு காணப்பட்ட மற்ற அழகிகளின் மதர்த்த உடலங்கங்களையும், அழகு முகங்களையும் பார்த்தபோது அவன் மனதில் "நான் தோற்றுக் கடைசியாகக் கூட வந்து விடலாம்" என்ற அச்சம் ஏற்படவே செய்தது. அப்பொழுதுதான் அவளுக்குத் திடீரென கொழும்பு சுந்தரேஸ்வரர் கோவிலில், காமாட்சி சமேதரராக வீற்றிருக்கும் மணவாள சுந்தரேஸ்வரர் மூர்த்தியின் நினைவு வந்தது. "அப்பனே சுந்தரேசா! நான் வெல்ல வேண்டும். வென்றால் ஸ்ரீதருடன் உன்னை வந்து வணங்குவேன். காணிக்கை தருவேன்" என்று மனதுள் சொல்லிக் கொண்டு ஸ்ரீதரிடம் "ஸ்ரீதர்! நான் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு நேர்த்திக்க்டன் வைத்துவிட்டேன். ஆகவே நிச்சயம் வெல்லுவேன். நான் தான் ‘பேதிஸ் பியூட்டி!’ நீச்சல் ராணி!" என்றாள் முகமலர்ச்சியுடன்.

ஸ்ரீதர் புன்னகையுடன் "என்ன, நீச்சலழகிப் போட்டியில் வெற்றி பெற சுந்தரேஸ்வரருக்கு நேர்த்திக் கடனா? பார்ப்போம். சுந்தரேஸ்வரர் கோவில் எங்கள் பரம்பரைக் கோவில். அப்பாவுக்குப் பின்னால் அது என்னுடைய கோவில் என்பது உனக்குத் தெரியுமல்லவா?" என்று கேட்டான்.

"தெரியும், நன்றாய்த் தெரியும்" என்று தலையை ஆட்டினாள் பத்மா.

"எனக்கென்னவோ சுந்தரேஸ்வரரிலும் பார்க்க, கொட்டாஞ்சேனையில் சிறிய முடுக்குக் கோவிலில் இருக்கும் மாரியம்மன் மீதுதான் நம்பிக்கை. அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள்" என்றான் ஸ்ரீதர்.

பத்மா, "உங்களுக்குத் தெரியாது. சுந்தரேஸ்வரர் தான் சக்தி வாய்ந்தவர். நான் பல்கலைகழக 'என்ரன்ஸ்' பரீட்சையில் வெற்றி பெற்றதற்கும் நான் அங்கு உடைத்த தேங்காய்களே காரணம். அடுத்த வீட்டு அன்னம்மா அக்காவைக் கேட்டால் தெரியும் சுந்தரேஸ்வரரின் பெருமை!" என்று சொல்லிக் கொண்டே போனாள்.

ஸ்ரீதர் "யார், நீ சொல்வாயே, ஒரு திராவிடதாசனைப் பற்றி. அவனுடைய தாய் அன்னம்மாதானே!" என்றான்.

பத்மா "ஆம். திராவிடதாசன் நாஸ்திகன்." அவள் கூறிக் கொண்டிருக்க, ஒலிபெருக்கியில் வாத்திய சங்கீதம் முழக்க ஆரம்பித்தது. திடீரென அது நிற்க, ‘டைகர் கிளப்’ தலைவர் பேசத் தொடங்கினார்.

"சகோதர டைகர்களே, அன்பர்களே, நீச்சலழகிகளே, நீச்சல் போட்டி நீதிபதிகள்! வாழ்த்துகள். இப்பொழுது நீங்கள் எதிர்பார்த்திருக்கும் நீச்சல் ராணிப் போட்டி நடைபெறப் போகிறது. நீச்சல் ராணிகள் உடனே மேடைக்கருகில் வீற்றிருக்கும் அழகுப் போட்டி அமைப்பாளர் ஸ்ரீமதி சீதா ஜயசிங்காவை வந்து காணும்படி கோரப்படுகிறார்கள். நீச்சலுக்கு நீதிபதிகள் மேடைக்கு முன்னாலுள்ள நாற்காலிகளில் வந்து அமரும்படி அழைக்கப்படுகிறார்கள் எங்கே கைதட்டுங்கள் பார்க்கலாம்!"

‘டைகர் கிளப்’ தலைவரின் இப்பேச்சு நின்றதும் சீன வெடி போல் கைதட்டல் நாலா திசையிலிருந்து வெடித்துக் கிளம்பியது. மெல்லிய வாத்திய இசை பின்னால் இசைந்துக் கொண்டிருக்க, அழகிகளின் மேடைப் பவனி ஆரம்பித்தது. தேவகன்னிகைகள் போல் அவர்கள் இரத்தினக் கம்பளத்தில் நடந்து செல்லத் தொடங்கினார்கள். போட்டியில் மொத்தம் பதினோரு அழகிகள் பங்குபற்றினார்கள். ஒவ்வோர் அழகியும் மேடை மீதேறித் தனியாக அதன் எல்லை வரை மெல்ல நடந்து சென்று, பின்னர் திரும்பி வர வேண்டும். இது நடுவர்களுக்கு அழகிகளைப் பல் கோணங்களிலிருந்தும் அவதானிப்பதற்கு வாய்ப்பளித்தது. இவ்வாறு ஒவ்வொருவராக அழகிகள் மேடையில் ஏறி இறங்கிய பின்னர் எல்லோரும் ஒரு தடவை வரிசையாக மேடையில் கூட்டாகக் காட்சியளிப்பர். அதன்பின் அவர்கள் மேடையில் நின்று கொண்டிருக்கும் பொழுதே நடுவர்களின் தீர்ப்பு ஒலி பெருக்கிகள் மூலம் ஒலிபரப்பப்பட, நீச்சல் ராணிக்கு முடி சூட்டு விழா நடைபெறும். மற்ற அழகிகள் பின்னணியில் நிற்க முதலாம் இடம் பெற்ற நீச்சல் ராணியும் இரண்டாம் மூன்றாம் இடம் பெற்ற அழகிகளும் முன்னணியில் காட்சியளிப்பர். இவைதாம் ஏற்பாடுகள்.

அதிகார் அம்பலவாணர் முன் வரிசை ஆசனத்தில் தமது வெள்ளி மூக்குக் கண்ணாடியை நன்றாகத் துடைத்து மாட்டிக் கொண்டு நடுவர்களுக்கு நாயகமாக வீற்றிருந்தார். ஒவ்வோர் அழகியும் தனியாகப் பவனி வந்த காட்சியைப் பார்த்து, தம்மிடம் கொடுக்கப்பட்ட காகிதத்தில் புள்ளி போட்டுக் கொண்டிருந்த அவர் ஐந்தாவது அழகி பத்மாவைக் கண்டதும் "ஓஹோ! ஸ்ரீதரின் சரக்கு! இவள்தான் மிக அழகாயிருக்கிறாள்" என்று புள்ளிகளை மிகவும் அதிகமாகவே அவளுக்குக் கொடுத்துவிட்டார். உண்மையில் கடற்கரையில் பார்த்ததை விட இப்பொழுது அவளது எழில் இன்னும் பல மடங்காகவே அவருக்குத் தெரிந்தது.

அரை மணி நேரத்தில் வைபவங்கள் முடிந்தன. நடுவர்களின் நாயகமான அதிகார் அம்பலவாணர் ஒலி பெருக்கியில் தீர்ப்பை அறிவிக்கலானார். களியாட்ட விநோதர்களிடையே ஒரே ஆரவாரம். அதிகாரின் தலைப்பாகை அவர்களுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஒரே கைதட்டல், ஒரே கூச்சல், சிலர் சீழ்க்கை அடித்தார்கள். அதிகாரைப் பற்றித் திரு. ஜயசிங்கா மூலம் தெரிந்து கொண்ட ஒருவர் "கம் ஓன் அதிகார்!" என்று சப்தமிட்டார். அதிகாருக்கு ஒரே ஆனந்தம். வள்ளியாச்சிக்கும் அப்படியே. அவளுக்குப் பெருமை தாங்க முடியவில்லை. ஆனால் ஒரே ஓர் அபசுரம். யாரோ ஒருவன் ‘பனங்கொட்டை’ என்று சப்தமிட்டான். அதிகாரின் தலைப்பாகை அவனுக்கு யாழ்ப்பாணத்தின் பனை வடலிகளை ஞாபகப்படுத்திவிட்டது. ஆனால் இந்த அவமரியாதைப் பேச்சு அதிகாரை ஒன்றும் செய்துவிடவில்லை. அவர் ஒலி பெருக்கியில் கம்பீரமாய் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.

"இந்த நீச்சல் ராணித் தெரிவுக்கு என்னை நீதிபதியாகத் தெரிந்தெடுத்த பிரபல டைகர் திரு. ஜயசிங்காவுக்கு எனது நன்றி உரியது. நான் ஒரு கடலாடு விழாவில் பங்குபற்றுவது இதுவல்ல முதற் தடவை. பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து சென்றிருந்த போது அங்குள்ள பிரைட்டன் கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் கடற்கரைக் கார்னிவலில் நான் கலந்து கொண்டுள்ளேன் . இப்பொழுது பெண்கள் நீச்சலுடை அணியலாமா கூடாதா என்பது பற்றி இங்கு பேசப்படுகிறது. சுமார் இருபத்தைந்து வருடங்களின் முன்னர் நான் என்னுடன் இங்கு வந்திருக்கும் எனது மனைவியுடன் பிரைட்டன் கடற்கரை விழாவில் கலந்து கொண்ட பொழுது என் மனைவியார் உண்மையில் நீச்சலுடை அணிந்து கொண்டார் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் இதோ, இங்கே இருக்கும் அவர் அதற்குச் சாட்சி சொல்லுவார்."

இவ்வாறு அவர் கூறியதும் எல்லார் கண்களும் ஸ்ரீமதி வள்ளியாச்சி அமர்ந்திருந்த திக்கை நோக்கின. அழகிகள் உட்பட யாவரும் பழைய நீச்சலழகியின் இன்றைய உருவைக் கண்டதும் கலகலவென்று சிரித்துவிட்டார்கள். வள்ளியாச்சியோ இளம் பெண் போல் வெட்கப்பட ஆரம்பித்தாள்! சபையோரின் சிரிப்போசை அடங்கியதும் அதிகார் தமது பேச்சை மேலும் தொடர்ந்தார்.

"இதிலிருந்து அந்தக் காலத்திலிருந்தே நீச்சலழகிகளின் மேல் எனக்கு எவ்வளவு அக்கறை இருந்ததென்பதையும், அவர்களோடு எத்தகைய தொடர்பு எனக்கு இருந்தது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்விர்கள் என்று நினைக்கிறேன். அந்த அக்கறைதான் இன்று என்னை இக்கடற்கரை விழாவுக்கு எனது அன்புக்குரிய மாஜி பிரைட்டன் நீச்சலழகியோடு வரும்படி செய்தது. துரதிர்ஷ்டவசமாக பிரைட்டன் கடற்கரை மாஜி நீச்சலழகி இங்கு தனது நீச்சலுடையைக் கொண்டு வராததாலும் இவ்விடத்தில் அவரது ஜீவாதாரப் புள்ளிகளுக்குத் தக்க நீச்சலுடை கிடையாததாலும் அவர் இந்தப் போட்டியில் பங்குபற்ற முடியாது போய்விட்டது. அவரது ஜீவாதாரப் புள்ளிகள் உண்மையில் உங்களைத் திகைக்க வைக்கவே செய்யும். 55-42-33 என்பனவே அவை. பிரபல சினிமா நடிகையான சா-சா-கபோர் என்பவர் தமது மேலிடப் புள்ளி 40-க்கு மேல் என்று பெருமையுடன் கூறியுள்ளதாக நான் பத்திரிகைகளில் வாசித்திருக்கிறென். நீங்களே சொல்லுங்கள்! ஸ்ரீமதி வள்ளியாச்சியின் 55க்கு முன் சா-சா-கபோரின் 40 எம்மாத்திரம்!"

(சபையில் ஒரே ஆரவாரம்! சிரிப்பு! ‘டைகர் கிளப்’ தலைவர் தலைப்பாகையாரைத் தான் நீதிபதியாகத் தெரிந்தெடுத்ததற்காகத் தன்னைத் தானே மெச்சிக் கொள்கிறார்.)

"சரி. இப்பொழுது இன்றைய விஷயத்துக்கு வருவோம். நீச்சல் ராணியாக நீதிபதிகளால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டவர் ஐந்தாம் இலக்க அழகி பத்மா பரமானந்த். (இவ்வாறு அவர் சொல்ல, பத்மா பதைபதைத்து அழகிகள் வரிசையை விட்டுப் பிரிந்து தனியாக முன்னால் வந்து சபையைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். ஒரே கைதட்டல்.)

"இரண்டாவது இடம் மூன்றாம் இலக்க அழகி விமலா ஹேட்டியாராச்சிக்கு அளிக்கப்படுகிறது. மூன்றாம் இடம் நாலாம் இலக்க அழகி நந்தனி ஸ்ரீ நிசங்காவுக்கு அளிக்கப்படுகிறது. (அவர்கள் இருவரும் பத்மாவின் இருபுறமும் வந்து நிற்கிறார்கள். கைதட்டல் கடல் முழக்கத்தையும் மீறி ஒலிக்கிறது.)

களியாட்ட விநோதர்களுக்கு முக்கியமாக அங்கிருந்த ஆண்களுக்கு ஒரே உல்லாசம். பதினொரு பேரழகிகளின் பூரித்த எழிலுடங்களை ஒன்றாகக் காண யாருக்குத் தான் உல்லாசமாக இருக்காது?

சுரேசும் ஸ்ரீதரும் ஒருவருக்கொருவர் சமீபமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். "பத்மா வெற்றி பெற்றுவிட்டாள். பலே" என்று சொல்லி சுரேஷ் ஸ்ரீதரின் கையைப் பிடித்துக் குலுக்கினான். முதுகில் தட்டினான். ஸ்ரீதரோ வாயைப் பிளந்து கொண்டு நின்றான்!

"நீச்சலுடை எவ்வளவு அழகென்றாலும் அதற்குள் இடப்படும் பொருளின் அழகுதான் அதன் உண்மையழகை நிர்ணயிக்கிறது. அதிகார் அம்பலவாணர் மனைவியைப் பத்மாவின் நீச்சலுடைக்குள் போட்டால் எப்படியிருக்கும்?" என்று சொல்லிச் சிரித்தான் சுரேஷ்.

சுரேஷின் நகைச்சுவையை அப்போது ஸ்ரீதர் இரசிக்கவில்லை. அவனுள்ளத்தில் ஒரே பரபரப்பு! மேடையில் நின்றவாறு பத்மா அவனை நோக்க, ஸ்ரீதரும் அவளை நோக்கினான். இருவர் கண்களும் ஒன்றையொன்று தழுவ உள்ளங்களும் இறுகத் தழுவிக் கொண்டன. போட்டியைத் தொடர்ந்து பரிசளிப்பு வைபவம் ஆரம்பித்தது. பலர் மேடை மீது பாய்ந்து அழகிகளின் கைகளைக் குலுக்க ஆரம்பித்தனர். அவர்களைக் கீழே இறக்குவது அழகுப் போட்டி அமைப்பாளர் திருமதி ஜயசிங்காவுக்குப் பெரிய பாடாய்ப் போய்விட்டது!

பத்மாவுக்குத் திருமதி ஜயசிங்கா நீச்சல் ராணிக்குரிய முடியைச் சூட்டிக் கையில் ஒரு செங்கோலையும் கொடுத்தார். ‘டைகர் கிளப்’ தலைவர் ஆயிரம் ரூபா ‘செக்’கையளித்தார். அதன் பின் சப்பாத்துக் கம்பெனிகள், சோப்புக் கம்பெனிகள், நகை வியாபாரிகள், உடுதுணி வியாபாரிகள் என்போர் பாதரட்சைகளையும், வாசனைப் பொருளகளையும் நகைகளையும் சேலைகளையும் பரிசாக அளித்தார்கள். சபை முழுவதும் ஒரே கரகோஷம்! ஆரவாரம்! அதைத் தொடர்ந்து ஆட்டம், பாட்டு, வாத்திய சங்கீதம் எழுந்தது. பைலா நடனம், டுவிஸ்ட், ரொக் அண்ட் ரோல் எல்லாம் அல்லோலகல்லோலப்பட்டன. களியாட்டக்காரர்கள் தம்மை மறந்து வெறியாட்டம் போட்டார்கள். உலகமே இன்பமயமாகிவிட்டது. பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் அங்குமிங்கும் நின்றிருந்த அழகு மோகினிகளை முக்கியமாகப் பத்மாவைப் படம் பிடித்துக் கொண்டு நின்றார்கள். பத்மா, யாரோ அவள் கையில் கொண்டு வந்து திணித்த சொக்கலேட்டுகளைச் சுவைத்துக் கொண்டு நின்றாள். வாழ்க்கையே கரும்பாகச் சுவைத்தது அவளுக்கு!

சரியாக நாலு மணிக்கு ஸ்ரீதரும் பத்மாவும் தங்கள் நீச்சலுடைகளைக் களைந்து சாதாரண உடைகளை உடுத்துக் கொண்டு ஜனசந்தடியற்ற ஹோட்டல் மேல்மாடி நிலா முற்றமொன்றில் டாக்டர் சுரேசுடன் தேநீர் அருந்த உட்கார்ந்தார்கள். அல்பேர்ட் கிழவன் சிற்றுண்டி பரிமாறி விட்டு, பத்மாவுக்குக் கிடைத்த பரிசுகளை ஸ்ரீதரின் காரில் கொண்டு போய் ஏற்றினாள்.

அவ்வேளையில் அங்கு அழையா விருந்தாக வந்து சேர்ந்தனர் அதிகார் அம்பலவாணரும் மாஜி பிரைட்டன் நீச்சலழகி வள்ளியாச்சியும். அதிகார், "தம்பி ஸ்ரீதர்! பத்மாவுக்கு எப்படியும் முதலிடம் கொடுக்க வேண்டுமென்று அவளைப் பார்த்ததும் நான் தீர்மானித்துவிட்டேன் . அப்படியே கொடுத்தும் விட்டேன். பார்த்தாயா?" என்றார் பெருமையோடு. "அவள் தானே எல்லோரிலும் அழகி. ஆகவே நீர் அப்படிச் செய்ததில் தப்பில்லை. உங்களது அழகுச் சுவையை யாரும் குறைத்துக் கூற முடியாது." என்றான் சுரேஷ் சிறிது விஷமமாக. அதிகார் சுரேஷைப் பார்த்து "நீர் யார்?" என்று கேட்டு விட்டு "ஸ்ரீதருக்காக நான் செய்தது இது!" என்றார்.

"இல்லவே இல்லை. பத்மாவைத் தெரிந்தெடுக்காமல் நீங்கள் வேறு யாரையாவது தெரிந்திருந்தால் எல்லோரும் உங்களைப் பரிகாசம் செய்திருப்பார்கள். "உங்கள் கண் பொட்டையா?" என்று கூடக் கேட்டிருப்பார்கள். நீங்கள் முறையாக நடந்து உங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொண்டீர்கள்," என்றான் ஸ்ரீதர். பக்கத்திலிருந்த பத்மாவுக்கு இவற்றைக் கேட்கக் கேட்கப் பெருமையாக இருந்த போதிலும் சிறிது வெட்கமாகவும் இருந்தது. அதிகாரால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை. பத்மா, ஸ்ரீதர் கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டு அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு வள்ளியாச்சியுடன் வெளியேறினார்.

ஏறக்குறைய நாலரை மணியளவில் பத்மாவும் ஸ்ரீதரும் நண்பன் சுரேசுடன் தங்கள் காரை நோக்கிச் சென்றார்கள். களியாட்ட விநோதர்களின் கூட்டம் பெரிதும் கலைந்து போய் விட்டதென்றாலும் ஒரு சிலர் மட்டும் அங்குமிங்கும் இன்னும் நீச்சலுடைகளில் திரிந்து கொண்டே இருந்தார்கள்.

சுரேஷ் அப்பொழுது திடீரென்று, "பத்மா இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு நான் தான் காரணம். பூவா தலையா போட்டுப் பார்த்தபோது தலை விழுந்திருக்காவிட்டால், பத்மா போட்டியில் கலந்து கொண்டிருக்கா மாட்டாளல்லவா?" என்றான்.

ஸ்ரீதர் "தலை விழுந்ததற்கு நீ எப்படிக் காரணம்? அதிர்ஷ்ட நிலையின் படி அது விழுந்தது." என்றான்.

சுரேஷ் "அது தான் இல்லை. இதோ பார் நான் நினைத்த நேரமெல்லாம் தலையையே விழச் செய்கிறேன்." என்று சொல்லிவிட்டுத் தன்னிடமிருந்த காசை மேலே சுண்டினான். கீழே புல்லில் அது விழுந்தது. தலையே வீழ்ந்திருந்தது. சுரேஷ் அதை எடுத்து மீண்டும் மேலே சுண்டினான். தலையே மீண்டும் விழுந்தது.

"இது என்ன ஆச்சரியம். உங்கள் நண்பர் சுரேஷ் மிகவும் கெட்டிக்காரர்!" என்றாள் பத்மா.

சுரேஷ் "அதுதான் இல்லை. இதோ காசைக் கையிலெடுத்துப் பாருங்கள்." என்று சொல்லிக் காசைப் பத்மாவின் கையில் கொடுத்தான். காசின் இரண்டு பக்கமும் தலை! அவள் "ஓ! அப்படியா சங்கதி" என்று சொல்வதற்கிடையில் மற்றொரு காசை எடுத்து ஸ்ரீதரின் கையில் கொடுத்தான் சுரேஷ். அதன் இரண்டு புறமும் பூ! ஸ்ரீதருக்கு ஒரே வியப்பு.

"இவை இரண்டையும் நீங்கள் என் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள். நான் இப்பொழுது எனது ஓய்வு நேரத்தில் மந்திர விந்தை படிக்கிறேன். ஜயசேகர் மாயாஜாலப் பள்ளியில். அங்கு நான் கற்ற வித்தைகளில் இது ஒன்று" என்றான் சுரேஷ். பிற்பகல் முழுதும் சுரேஷ் ஏன் சிரித்துக் கொண்டேயிருந்தான் என்று இப்பொழுதுதான் ஸ்ரீதருக்குப் புரிந்தது.

ஸ்ரீதரின் கார் காலி ரோட்டில் ஏறிக் கொட்டாஞ்சேனையை நோக்கிப் பிய்த்துக் கொண்டு போக ஆரம்பித்த போது பத்மாவின் மனதில் புதிய பயங்கள் பிறந்தன. அப்பாவுக்கு நீச்சலழகிப் போட்டியைப் பற்றி எப்படி விளக்கம் தருவது என்பதே அது. ஸ்ரீதரிடம் " நீங்கள் இன்று என்னுடன் வீட்டுக்கு வர வேண்டும். இந்தப் போட்டி பற்றி நீங்கள் தான் அப்பாவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னை கோபித்துக் கொள்வார்" என்றாள் பத்மா. "ஆகட்டும்" என்றான் ஸ்ரீதர். சுரேஷை கூடவே தங்கள் வீட்டுக்கு வர வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள் அவள். அதன் பின் அன்றைய நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட உடற் களைப்புத் தீர "அம்மாடி" என்று கார் ஜன்னலோடு சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் அவள். அதே நேரத்தில் பம்பலம்பிட்டிக்குத் தாம் தங்கியிருந்த தமது மருமகள் வீட்டுக்கு ‘டாக்சி’யில் போய்க் கொண்டிருந்த அதிகார் அம்பலவாணர், வள்ளியாச்சியிடம் "டார்லிங் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் சிவநேசரைக் கண்டு இந்த ஸ்ரீதரின் விஷயத்தை அவரோடு பேச வேண்டும். அவன் இங்கே பெண் பிள்ளைகளுக்குப் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறான் போல் தெரிகிறது." என்றார்.

"பணக்கார ஆண்பிள்ளை. கொழும்பிலே எடுபட்ட பெட்டைகளுக்கும் குறைவில்லை பொலிருக்கிறது. உங்களுக்கேன் இந்த வம்பு! பேசாமலிருங்கள்" என்றாள் வள்ளியாச்சி.

அதிகார் அதற்குப் பதிலொன்றும் சொல்லவில்லை.

•Last Updated on ••Tuesday•, 30 •October• 2018 23:06••  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.023 seconds, 2.38 MB
Application afterRoute: 0.029 seconds, 3.13 MB
Application afterDispatch: 0.068 seconds, 6.54 MB
Application afterRender: 0.154 seconds, 7.76 MB

•Memory Usage•

8202344

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '1u6t74egkh07d3rnopgls4kpk0'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1719969287' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '1u6t74egkh07d3rnopgls4kpk0'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1719970187',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:10:{s:15:\"session.counter\";i:3;s:19:\"session.timer.start\";i:1719970153;s:18:\"session.timer.last\";i:1719970168;s:17:\"session.timer.now\";i:1719970179;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:16:\"com_mailto.links\";a:2:{s:40:\"f47c9c0355ef9a80bbec94228d7d8af27667f99a\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=281:2011-07-14-04-32-30&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47\";s:6:\"expiry\";i:1719970153;}s:40:\"c4b1879809b97596b2c8efe8b200a875c50f1540\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:121:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1881:-qq&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47\";s:6:\"expiry\";i:1719970168;}}s:19:\"com_mailto.formtime\";i:1719970179;s:13:\"session.token\";s:32:\"ae687dcfe9ba5b6e927e9113831372a0\";}'
      WHERE session_id='1u6t74egkh07d3rnopgls4kpk0'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 47)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 532
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:29:47' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:29:47' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='532'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 25
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-03 01:29:47' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-03 01:29:47' )
      ORDER BY a.ordering
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 47 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 47
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 33
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:29:47' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:29:47' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- அ.ந.கந்தசாமி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- அ.ந.கந்தசாமி -=- அ.ந.கந்தசாமி -