பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

ஏன் 'கிளாசிக்கு'களைப் படிக்க வேண்டும்?

•E-mail• •Print• •PDF•

Italo calvinoசில தெரிவிக்கப்பட்ட வரையறைகளிலிருந்து நாம் தொடங்கலாம்.

(1) கிளாசிக்குகள் என்னும் புத்தகங்கள் பற்றி நாம் பொதுவாக மக்கள் இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறோம்: “நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். . .” என்று சொல்வதற்குப் பதிலாக “நான் மறுபடியும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். . . ”     இது குறைந்த பட்சம் “மெத்தப் படித்தவர்கள்” என்று தங்களைக் கருதிக் கொள்பவர்களிடத்தில் நடக்கிறது. முதன் முதலாக இந்த உலகினை எதிர்கொள்ளும் நிலையிலிருக்கும் இளவயதுக்காரர்களுக்கு இது பொருந்தாது. மேலும் கிளாசிக்குகள் அவர்களின் அந்த உலகின் ஒரு பாகமாக இருக்கும். வாசித்தல் என்ற வினைச் சொல்லின் முன்னால் இடம் பெறும் அழுத்தத்திற்காக முன்னிடை வேண்டுமானால் ஒரு பிரபலமான புத்தகத்தினை படிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்வதற்கு அவமானமாக உணர்பவர்களின் பங்கில் இருக்கும் ஒரு சிறிதளவேயான பாசாங்காக இருக்கக் கூடும். அவர்களுக்கு மறுஉறுதிப்பாடளிக்க, நாம் அவதானிக்க வேண்டியது இவ்வளவுதான்: ஒரு மனிதனின் அடிப்படைப் படிப்பென்பது எந்த அளவு விரிவானதாக இருப்பினும் அவனால் படிக்கப்பட்டிராத அடிப்படைப் புத்தகங்கள் ஏராளமான எண்ணிக்கையில் இன்னும் பாக்கி இருக்கும்.

 தூஸிடைடிஸ்1 மற்றும் ஹெரோடோட்டஸ்2 எழுதியவற்றினை முழுமையாகப் படித்தவர்கள் யாராவது இருந்தால் கையை உயர்த்துங்கள். மேலும் செய்ன்ட்-சைமன்3? அப்புறம் கார்டினல் ரெட்ஸ்? அந்த மகத்தான பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல் தொடர்கள் கூட அடிக்கடி பேசப்படுகின்றனவேயொழிய படிக்கப்படுவதில்லை. பிரான்ஸ் தேசத்தில் அவர்கள் பால்ஸாக்கை பள்ளிக் காலங்களிலேயே படிக்கத் தொடங்கி விடுகின்றனர். சுற்றில் இருந்து கொண்டிருக்கும் பிரதிகளின் எண்ணிக்கையை வைத்துப் பேசும் பொழுது, பள்ளி முடிந்த பிறகும் அவர்கள் தொடர்ந்து படிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு அரசாங்க கணக்கெடுப்பு நடத்தப்படுமானால், பால்ஸாக்4 கடைசி இடத்தில்தான் இருப்பார் என்று நான் அஞ்சுகிறேன். டிக்கன்ஸின் விசிறிகள், இதாலியில் படித்தவர்களின் ஒரு சிறிய குழுவாக இருக்கின்றனர். அந்தக் குழுவின் அங்கத்தினர்கள் சந்திக்கத் தொடங்கிய உடனேயே பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் ஏதோ அவர்களுக்கு தெரிந்தவர்கள் போல பேசத் தொடங்கி விடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னால், மிஷல் ப்யூட்டர்5 (Michel Butor) அமெரிக்காவில் ஆசிரியராகப் பணியாற்றிய சமயம், எமிலி ஸோலா6 (Emile Zola)பற்றி திரும்பத் திரும்ப கேட்கப்பட்டதால் மிகவும் வெறுத்துப் போனார். ஸோலாவை அவர் அதுவரை படித்ததில்லை. ஆகவே ரூகன்-மாக்வா (Rougon-Macquart)7 தொடர்ச்சி முழுவதையும் படிக்க வேண்டுமென்று தீர்மானித்தார். அதைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருந்தாரோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அந்த அனுபவம் இருப்பதைக் கண்டார். ஒரு நம்புவதற்கியலாத புராணிக மற்றும் இயலுலகத் தோற்ற அமைப்பாக அது இருந்தது. பிறகு இதை ஒரு அற்புதமான கட்டுரையில் அவர் விவரித்தார்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு மகத்தான புத்தகத்தினை முதல் முறையாக ஒருவரின் முதிர் பிராயத்தில் படிப்பதென்பது அபாரமான சந்தோஷமாக இருக்கும். இது ஒருவருடைய இளவயதில் படித்திருப்பதற்கான அனுபவத்திலிருந்து (கூடுதலானது குறைச்சலானது என்று ஒரு கூற முடியாதெனினும்) வேறுபட்டது. வேறு எந்த அனுபவத்திற்கும் போலவே, வாலிபம் வாசிப்பிற்கும் ஒரு விதமான சுவையைக் கொண்டு வருகிறது. மாறாக முதிர் பிராயத்தில் ஒருவர் கூடுதலான பல நுண்தகவல்களையும் அர்த்த அடுக்குகளையும் சிலாகிக்கிறார் (அல்லது சிலாகிக்கத்தான் வேண்டும்). ஆகவே நாம் அடுத்த வரையறையினை முயன்று பார்க்கலாம்:

(2) சிலரால் படிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் அந்தப் புத்தகங்களைக் குறிப்பதற்காக நாம் கிளாசிக் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவற்றை முதல் தடவையாக மிகச் சிறந்த சூழ்நிலைகளில் படித்து சிலாகிக்க முடிந்தவர்களாலும் இதே அளவுக்கு அவை பாதுகாக்கப்படுகின்றன.

பொறுமையின்மையின் காரணமாக இளமையில் படிப்பதென்பது பயனற்றதாக இருக்கக் கூடும், கவனத் திசைதிருப்பல்களால், எப்படிப் படிப்பது என்ற நிபுணத்துவமின்மையால், அல்லது வாழ்வனுபவமே கூட குறைவாக இருப்பதால். அப்பொழுது படிக்கப்படும் புத்தகங்கள் (சாத்தியத்தில் ஒரே சமயத்திலேயே) எதிர்கால அனுபவங்களுக்கு ஒரு வடிவம் கொடுக்கின்றன என்ற அர்த்தத்தில், முன்னுதாரணங்கள், ஒப்பிடுதலின் வரையறைகள், வகைப்படுத்துதலின் திட்டங்கள், மதிப்பீடுகளின் அளவுகள், அழகின் உச்சபட்ச முன்னுதாரணங்கள்ஆகிவற்றைக் கொடுத்தபடி-இந்த எல்லா விஷயங்களும் தொடர்ந்து இயங்கும் ஒருவருடைய இளமையில் படிக்கப்பட்ட புத்தகம் முழுமையாக மறந்து போனாலும். ஒரு முதிர் பிராயத்தில் நாம் ஒரு புத்தகத்தை மறுவாசிப்பு செய்யும் போது, அப்பொழுது நாம் இந்த மாறாத மதிப்பீடுகள் இருப்பதைக் கண்டு பிடித்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது, இந்த காலகட்டத்திற்குள்ளாக நமது உள்ளியல் இயக்கத்தின் அங்கங்களாக மாறியிருக்கும் அவற்றின் தோற்றுவாய்கள் பற்றி நாம் நீண்ட காலத்திற்கு முன்னரே மறந்திருப்போம். அது இருக்கிறபடியே ஒரு இலக்கியப் படைப்பானது நம்மை வெற்றிகரமாக மறக்கச் செய்யும், ஆனால் அது நமக்குள் அதன் விதையை விட்டுச் செல்கிறது. ஆகவே நாம் இப்போது கொடுக்கும் வரையறை இதுதான்:

(3)கிளாசிக்குகள் என்பவை ஒரு விநோதமான தாக்கத்தினை ஏற்படுத்துபவை, மனதிலிருந்து அகற்றியழிக்கப்பட மறுக்கும் போதும், ஞாபக மடிப்புகளில் தங்களை மறைத்துக் கொள்ளும் சமயத்திலும், கூட்டு அல்லது தனிமனித நினைவிலி (collective and individual consciousness )என்று தங்களுக்கு மாறு வேடம் போட்டுக் கொண்டு உலவும் போதும். ஆகவே முதிர் பிராயத்தில் நமது வாலிப பருவத்தின் மிக முக்கியமான புத்தகங்களை மறு வருகை செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் ஒதுக்க வேண்டும். புத்தகங்கள் மாறுதலடையாமலிருந்த போதிலும் கூட(மாறுதலடைந்த வரலாற்று உள்பார்வையின் புதிய வெளிச்சத்தில் அவை கண்டிப்பாக மாறியிருப்பினும் கூட), நாம் கண்டிப்பாக மாறியிருப்போம், நம் எதிர்கொள்ளலும் முழுமையான புதிய விஷயமாக இருக்கும். எனவே, வாசிக்கிறேன் என்ற அல்லது மறுவாசிப்பு செய்கிறேன் வினைச்சொல்லைப் பயன்படுத்தினாலும் அது முக்கியமில்லை.  வாஸ்தவமாக நாம் இப்படிச் சொல்லலாம்:

(4)கிளாசிக்கின் ஒவ்வொரு மறுவாசிப்பும் முதல் வாசிப்பின் கண்டுபிடிப்பு பயணம் போன்றதே.

(5)கிளாசிக்கின் ஒவ்வொரு வாசிப்புமே நிஜத்தில் மறுவாசிப்பே. நான்காவது வரையறை இந்த அடுத்த வரைறைக்குப் பின்விளைவானதாக இருக்க முடியும்:

Italo Calvino(6) ஒரு கிளாசிக் என்பது தனது வாசகர்களுக்குச் சொல்ல வேண்டியதனைத்தையும் என்றுமே சொல்லித் தீர்க்காதிருப்பது. நம்முடையதிற்கு முந்தியதான வாசிப்புகளின் தடயங்களைத் தாங்கியபடி வந்து சேர்கின்ற புத்தகங்கள்தான் கிளாசிக்குகள். இந்தத் துலக்கமூட்டலின் சமயத்தில் அவை கலாச்சாரத்தின் மீது விட்டிருக்கிற தடயங்களை அல்லது அவை கடந்து வந்திருக்கின்ற கலாச்சாரங்களின் தடயங்களை (அல்லது மிக எளிமையாக, மொழியின் மீதும் பழக்கவழக்கங்களின் மீதும்) கொண்டு வருகின்றன. இது எல்லாமே புராதன மற்றும் நவீன கிளாசிக்குகளுக்கும் சரிசமமாகப் பொருந்தும். நான் ஒடிசியைப் படித்தால் ஹோமரின் பிரதியைப் படிக்கிறேன், ஆனால் இந்த நூற்றாண்டுகளின் காலத்தில் யூலிசிஸின் சாகசங்கள் என்ன அர்த்தம் கொடுக்க வந்திருக்கின்றன என்பதை என்னால் மறக்க முடியாது. மேலும் இந்த அர்த்தங்கள் மூலப் பிரதியிலேயே உள்தொனிக்கும்படி இருந்தவைதானா என்பதையும். அல்லது அவை பின் வந்த உறைபடிவுகளா, திரிபுகளா, அல்லது விரிவாக்கல்களா என்பதையும் என்னால் வியக்காமல் இருக்க முடியாது. காஃப்காவைப் படிக்கும் பொழுது, என்னால் காஃப்காத்தன்மையான என்கிற குணச்சொல்லின் நியாயத்தன்மையை நிராகரிக்கவோ அல்லது ஏற்கவோ செய்யாமலிருக்க முடியாது. தவறாகப் பிரயோகிக்கப்படும் இந்த அடைமொழியை ஒவ்வொரு கால் மணி நேரத்திற்குள்ளும் ஒருவர் கேட்க வாய்ப்பிருக்கிறது. நான் தாஸ்தாயெவ்ஸ்கி8யின் The Possessed அல்லது துர்கனேவின்9 Fathers and Sons நாவலைப் படித்தால் எப்படி அந்த பாத்திரங்கள் நமது காலம் வரை தொடர்ந்து மறு பிறப் பெடுத்திருக்கிறார் கள் என்பதை என்னால் சிந்திக்காமல் இருக்க இயலாது.

நாம் அது பற்றிக் கொண்டிருந்த கருத்திற்கு நேர் எதிராக ஒரு கிளாசிக்கை வாசித்தல் என்பது நமக்கு ஒன்று அல்லது இரண்டு ஆச்சரியங்களைத் தர வேண்டும். இந்த காரணத்திற்காக, என்னால் வேண்டிய அளவுக்கு பிரதியை நேரடியாகப் படித்தலை உயர்வாகப் பரிந்துரைக்க முடியாது. எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு உரைகளையும், குறிப்புகளையும், துணை நூற்பட்டியல்களையும் தவிர்த்துக் கொண்டு. வேறு ஒரு புத்தகத்தை விவாதிக்கும் ஒரு புத்தகம் விவாதத்திலிருக்கும் மூலப் புத்தகத்தை விட அதிகம் சொல்லி விட முடியாது என்பதை பள்ளிகளும் கல்லூரிகளும் நமக்கு உணர்த்த வேண்டும். ஆனால் இதற்கு மாறாகத்தான் அவை மெத்தவும் நம்மை முரணாகச் சிந்திக்க வைக்கின்றன. தலைகீழாக்கப்பட்ட மதிப்பீடுகளின் தன்மை மிகவும் பரவலாக நிலவுகிறது. அதன்படி முன்னுரை,

விமர்சன அணுகல், நூற்பட்டியல் போன்றவை பிரதி என்ன சொல்ல வருகிறதோ அதை மறைப்பதற்கான ஒரு புகைமூட்டத் திரையைப் போலப் பயன்படுத்தப்படுகின்றன. பிரதியை விடக் கூடுதலாகத் தங்களுக்குத் தெரியுமென்று கோருகிற இடையீட்டாளர்களின்றி பிரதி சொல்ல வந்ததை சொல்ல அனுமதிக்க வேண்டும். எனவே நாம் இப்படி முடிக்கலாம்:

(8)நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்காத எதையும் நமக்கு அவசியமாக கிளாசிக்குகள் சொல்லித் தருவதில்லை. ஒரு கிளாசிக்கில் நாம் எப்போதும் அறிந்திருந்ததை சில சமயம் கண்டுபிடித்துக் கொள்கிறோம் (அல்லது நமக்குத் தெரியும் என்று நாம் நினைத்ததை), ஆனால் இந்த ஆசிரியர்தான் முதலில் அதைச் சொன்னார் என்பது தெரியாமல், அல்லது குறைந்தபட்சம் அதனுடன் ஒரு பிரத்யேக வழியில் எப்படி சம்மந்தப்பட்டிருக்கிறார் என. மேலும், இதுவும் கூட, நமக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு ஆச்சரியம்தான், ஒரு தோற்றுவாயைக் கண்டுபிடித்ததில் நமக்கு எப்போதும் கிடைக்கும் சந்தோஷத்தைப் போல, ஒரு உறவினைப் போல, ஒரு பிணைப்பினைப் போல.

இவை எல்லாவற்றிலிருந்தும் நாம் கீழ்வரும் வரையறையினைப் போன்ற ஒன்றினைப் பெறலாம்:

(9)படிக்கப்படும் சமயத்தில் கிளாசிக்குகள் இன்னுமே கூட புத்துணர்ச்சி கூடியவையாக, அதிகம் எதிர்பார்த்திராத, மேலும் அவை பற்றி நாம் கேள்விப்பட்ட போது நாம் எண்ணியிருந்ததை விடவும் அதிகம் அற்புதமாமானவையாக இருக்கின்றன. இயல்பாக, ஒரு கிளாசிக் நிஜமாகவே, கிளாசிக் பிரதியாக இயங்கும்பொழுதுதான் நடக்கிறது அது-அதாவது, அது வாசகனுடன் ஒரு தனிப்பட்ட மனோபாலத்தை ஏற்படுத்தும்போதுதான். பொறி கிளம்பவில்லை என்றால், அது பரிதாபம். ஆனால் நாம் கடமையுணர்ச்சியினாலோ அல்லது மரியாதையினாலோ கிளாசிக்குளைப் படிப்பதில்லை. காதலினால் படிக்கிறோம். பள்ளிக்கூடத்தில் தவிர. சிறப்பாகவோ அல்லது மோசமாகவோ பள்ளிக்கூடம் குறிப்பிட்ட கிளாசிக்குகளை தெரிந்து கொள்வதற்கு ஏது செய்ய வேண்டும்,

அவற்றுடன் அல்லது குறிப்புகளை பிறகு நீங்கள் உங்கள் கிளாசிக்குகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரு தேர்ந்தெடுப்பினைச் செய்வதற்குத் தேவையான உபகரணங்களை உங்களுக்குத் தர வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது பள்ளிக் கூடம். ஆனால் நாம் கருதக்கூடிய தேர்ந்தெடுப்புகளெல்லாமே பள்ளிக் கூடத்திற்குப் பிறகும் வெளியிலும் நடப்பதுதான். ஒருபக்க மனச்சாய்வின்றிப் படித்தால் மாத்திரமே உங்களுடைய புத்தகமாகும் ஒரு புத்தகத்தினை நீங்கள் சந்திக்கும் சாத்தியமுள்ளது. மெத்தப் படித்த, ஒரு அபாரமான கலை வரலாற்றாசிரியர் ஒருவரை எனக்குத் தெரியும். இருக்கிற சகல புத்தகங்களிலும் அவர் தனது பிரத்யேகக் காதலை பிக்விக் பேப்பர்ஸ்10 மீது குவித்திருந்தார். அவருக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் டிக்கன்ஸின் புத்தகத்திலிருந்து ஒரு சொற்புதிரைக் கொணர்வார். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வினையுமே பிக்விக்தனமான வேறு சில நிகழ்வுகளுடன் இணைப்பார். சிறிது சிறிதாக அவரும், இந்தப் பிரபஞ்சமும் அதன் நிஜமான தத்துவமும், ஒரு முழுமையான அடையாளப்படுத்திக் கொள்ளல் எனும் வகையில் பிக்விக் பேப்பர்ஸின் வடிவத்தை எடுத்துக் கொண்டுவிட்டன. இந்த விதத்தில் நாம் மிகவும் உயர்வான, அதிகம் எதிர்பார்ப்புமிக்க கிளாசிக் பற்றிய கருத்துக்கு வந்து சேர்கிறோம்:

(10) பிரபஞ்சத்திற்கு இணையானதொரு வடிவத்தை எடுத்துக் கொள்ளக் கூடிய புத்தகம் ஒன்றுக்காக நாம் கிளாசிக் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம், புராதன காலத்து தாயத்துக்களுக்கு சமமாக. இந்த வரையறையுடன் நாம் முழுமுற்றான புத்தகம் என்னும் கருத்துருவாக்கலை நெருங்குகிறோம், மல்லார்மே11 கருக்கொண்டதைப் போல.
ஆனால் ஒரு கிளாசிக் ஒரே அளவுக்கு வலுவான மனோ பாலத்தை எதிர்ப்படுத்துதல் வகையில் அல்லது நேர்முறன் வகையிலும் நிறுவுகிறது. யான் யாக்விஸ் ரூஸோ* சிந்திக்கிற, செய்கிற சகலமும் என் மனதிற்கு இனிமையானதாய் இருக்கிறது. இருப்பினும் எல்லாமும் அவனை எதிர்க்க வேண்டும், விமர்சிக்க வேண்டும், அவனுடன் சண்டை போட வேண்டும் என்கிற அடக்க முடியாத ஆர்வத்தை எனக்குள் நிறைக்கிறது. மனரீதியான தளத்தில் ஏற்படும் தனிப்பட்ட எதிர்ப்புணர்வு இது. இதன் காரணமாக நான் அவனைப் படிப்பதைத் தவிர வேறு தேர்வுகள் எனக்கு இல்லாமல் போக வேண்டும். இருந்தாலும் என்னுடைய ஆசிரியர்கள் பட்டியலில் அவனை வைப்பதை என்னால் தவிர்க்க இயலாது. எனவே நான் சொல்வேன்:

(11)உங்களுடைய கிளாசிக் ஆசிரியர் யாரென்றால் நீங்கள் அவரிடம் பாராமுகமாக இருந்து விட முடியாத ஒருவர், உங்களை அவருடைய உறவின் வாயிலாக வரையறுக்க உதவுபவர், அவருடன் தகராறு செய்வதிலும் கூட. பழமை, மொழிநடை, அதிகாரத்துவம் இதில் எந்த விதமான வித்யாசப்படுத்தல்களுமின்றி நான் கிளாசிக் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயமில்லை. (இந்த சொல்லின் அனைத்து அர்த்தங்களின் வரலாற்றுக்கும் கிளாசிகோ (Classico)என்ற பிரிவில் ஃபிரான்கோ ஃபோர்ட்டினி என்பவரால் எழுதப்பட்ட வரையறை என்சைக்ளோபீடியா என்னவ்டி (Encyclopaedia Enaudi) யின் மூன்றாம் தொகுதியில் காணப்படுகிறது) நான் மேற்கொள்ளும் விவாதத்தில் ஒரு கிளாசிக்கை எது தனித்தன்மையுடையதாக ஆக்குகிறது என்றால் ஒரு விதமான எதிரொலி விளைவாகும். ஒரு கலாச்சாரத் தொடர்ச்சியில் தன்னுடைய இடத்தை ஏற்கனவே சாதித்துக் கொண்ட நவீனமானவற்றுக்கும் புராதனமானவற்றுக்கும் சரிசமமாக இது பொருந்தும். நாம் இப்படி சொல்லலாம்:

(12) ஒரு கிளாசிக் ஆனது மற்ற கிளாசிக்குகளுக்கு முன்னால் வந்து விடக் கூடிய புத்தகமாகும். மற்றவற்றினை முதலில் படித்து விட்ட ஒருவர் பிறகு இதைப் படிக்கும் போது, உடனடியாக அதனுடைய இடத்தினை குடும்ப மரத்தில் அடையாளம் கண்டு கொள்கிறார். இந்தப் புள்ளியில் கிளாசிக்குகளைப் படிப்பதை கிளாசிக்குகள் அல்லாத பிற நூல்களைப் படிப்பதுடன் எப்படித் தொடர்புபடுத்த வேண்டும் என்பதை நான் இனியும் தள்ளிப் போட முடியாது. “நமது காலங்களை மேலும் அதிக ஆழமாகப் புரிந்து கொள்வதற்கு உதவக்கூடிய நூல்களில் நாம் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு “ஏன் கிளாசிக்குகளைப் படிக்க வேண்டும்?” அல்லது “நாம் எங்கே போய்க் கண்டுபிடிப்பது காலத்தையும் மனஅமைதியையும் மலையளவு சரிந்து கொண்டிருக்கும் சமகால நடப்புகளினால் நாம் அமிழ்ந்து போயிருக்கும் போது?” போன்ற கேள்விகள் தொடர்பானது இந்தப் பிரச்சனை.

வாஸ்தவமாக, தன்னுடைய படிக்கும் நேரத்தை முற்றிலுமாக லூக்ரெஷியஸ்12, லூசியன்13, மான்டெய்ன்14, எராஸ்மஸ்15, க்வெவேடோ16, மார்லோ17, Discourses on Method, Wilhelm Meister18, கோல்ரிட்ஜ்19, ரஸ்கின்20, ப்ரூஸ்(ட்)21, மற்றும் வெலரி22 படிப்பதிலும் இவற்றுடன் துணிவான தாக்குதல்களை முராஸாகி23 மற்றும் ஐஸ்லாந்து சாகாக்களிலும்24 செய்யக் கூடிய ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனை நாம் கற்பனை செய்யலாம்தான். இது எல்லாமும் கூட சமீப காலத்து வெளியீடுகளுக்குப் புத்தக மதிப்புரை எழுத வேண்டிய கட்டாயமின்றி, அல்லது பல்கலைக் கழகப் பதவிக்குப் போட்டியிட ஆய்வுக்கட்டுரை எழுத வேண்டிய அவசியமின்றி, அல்லது பத்திரிகைகளுக்கு கறாரான காலக் கெடுவில் கட்டுரைகள் எழுத வேண்டிய அவசியமில்லாமல். எவ்வித தொற்றுக்களும் இல்லாத இப்படிப்பட்ட ஒரு உணவினை நிலையாக வைப்பதற்கு, இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர் செய்தித்தாள்கள் படிப்பதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள வேண்டியிருக்கும், என்றுமே ஒரு சமகால நாவலினாலோ சமீப சமூகவியல் ஆய்வுகளினாலோ சபலமடையக் கூடாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு கறார்த்தன்மை எந்த வகையில் நியாயப்படுத்தப்படக் கூடியது அல்லது பயனுள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். மிகச் சமீப செய்தியானது சாதாரணமானதாயும் இழிவுபடுத்தக்கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் அது நாம் நின்று முன்னும் பின்னும் பார்த்துக் கொள்ளக் கூடிய ஒரு முக்கியமான புள்ளியாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. கிளாசிக்குகளை படிக்க நீங்கள் எங்கிருந்து படிக்கிறீர்கள் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையானால் புத்தகமும் வாசகனும் ஒரு வித காலாதீத புகைமூட்டத்தில் மறைந்து போய்விடக் கூடிய ஆபத்திருக்கிறது. அப்படியானால், சமகால நடப்புகளைப் படித்தலையும் ஒரு சரியான அளவுக்கும் கிளாசிக்குகளைப் படித்தலையும் மாற்றி மாற்றி செய்யக் கூடிய ஒருவர் கிளாசிக்குகளைப் படிப்பதினால் கிடைக்கக் கூடிய மாபெரும் விளைச்சல்களை அடைகிறார். இது ஒரு இடைஞ்சலுறாத மனஅமைதியை அவசியமாக உள்ளுணர்த்துவதில்லை. அது நரம்புத் தளர்ச்சியின் பொறுமையின்மையின் கனியாகக் கூட இருக்கலாம், மனதின் தொடர்ந்த வெடுவெடுத்து சிடுசிடுக்கும் திருப்தியடையாத்தன்மையாகவும். லட்சியமானதொரு நடவடிக்கை எதுவாக இருக்குமென்றால், நிகழ்காலத்தை நம் அறையின் ஜன்னலுக்கு வெளியிலிருந்து கேட்கும் இரைச்சலைப் போல கேட்பது–இது நமக்கு போக்குவரத்து நெரிசல்களையும் தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாறுதல்களையும் பற்றி எச்சரிக்கும்–அதே சமயத்தில் கிளாசிக்குகளின் குரல் நம் அறைக்குள் தெள்ளத் தெளிவாக எதிரொலித்துக் கொண்டிருப்பதை நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால், அறைக்குள் நிகழ்காலமானது, முழு ஒலியில் வைக்கப்பட்ட டிவியைப் போல நிறைந்திருக்கையில் அறையின் வெளிப்புறத்திற்கு மிகவும் அப்பால் கிளாசிக்குகளின் குரலை ஒரு தூரத்து எதிரொலியாகக் கேட்பதென்பதே பலருக்கு ஒரு சாதனையாகத் தோன்றுகிறது.

ஆகவே நாம் இதைச் சேர்த்துக் கொள்வோம்:

(13) ஒரு கிளாசிக் என்பது எதுவென்றால் இந்த கணத்தின் பிரச்சனைகளை பின்னணி இரைச்சலின் நிலைக்குத் தள்ளிவிடக் கூடிய தன்மை வாய்ந்தது. ஆனால் அதே சமயம் இந்தப் பின்னணி இரைச்சல் இல்லாமல் நம்மால் இருந்து விட முடியாது.

(14) ஒன்றுபட்டுப் போகாத அந்த கணத்துப் பிரச்சனைகள் நமது சூழ்நிலையை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற சமயத்திலும் கூட ஒரு கிளாசிக் என்பது பின்னணி இரைச்சலாக தொடர்ச்சியாய் இருக்கக் கூடிய ஒன்று.

(15) இனியும் நீண்ட காலப் பொழுதுகளையோ, விஸ்தாரமான மனிதத்துவ ஓய்வு நேரங்களையோ அளிக்காத நமது அன்றாட வாழ்வின் லயங்களுடன் கிளாசிக்குகளைப் படிப்பதென்பது மோதுகிறது என்ற உண்மை நிலவுகிறது. அது நமது கலாச்சாரத்தின் விரிந்த மனப்பாங்குடன் முரண்படுகிறது. இக்கலாச்சாரம் என்றைக்குமே நமது காலத்தின் தேவைகளுக்கேற்ற கிளாசிக்கலான விஷயங்களைப் பற்றிய ஒரு அட்டவணையை தொகுத்துத் தர தகுதியற்றதாகவே இருக்கும். மாறாக இரண்டாவதாகக் குறிப்பிட்ட அம்சங்கள் லியோபார்டி25யின் வாழ்க்கையில் முழுமையாக உணரப்பட்டிருந்தன. அவரது தந்தையின் வீட்டில் (patermo ostello)இருந்த தனிமையான வாழ்க்கையை வைத்துப் பார்க்கும் போது, அவரது கிரேக்க மற்றும் லத்தீன் தொடர்பான பழமை குறித்த ஆராதனை, மற்றும் அவருடைய விருப்பத்திற்கு அவரது தந்தை மோனால்டோவால் விடப்பட்டிருந்த ஒரு வலுவான நூலகம் ஆகியவற்றுடன் இதாலி மற்றும் பிரெஞ்சு இலக்கியங்களின் முழுமையான தொகுதிகளை நாம் சேர்க்கலாம்–நாவல்களையும், பொதுவான ‘லேட்டஸ்ட் ஹிட்’களையும் தவிர்த்து. இவை அவருடைய சகோதரி பாவோலினா (அவளுக்கு அவர் ஒரு முறை எழுதினார் உன்னுடைய ஸ்டெந்தால்26 என்று) வின் ஓய்வு நேரத்தை திசைதிருப்ப விடப்பட்டன. அறிவியலிலும் வராலாற்றிலும் அவருக்கிருந்த உக்கிரமான ஈடுபாட்டினை மிஞ்சியும் கூட அவர் முழுமையாய் அந்த நிமிஷம் வரை நவீனமாக்கப்படாத பிரதிகளின் மீது சார்ந்திருக்கத் தயாராக இருந்தார். ஃபூஃபனிடமிருந்து27 பறவைகளின் பழக்கங்கள் பற்றியும், Fontanelle28 இடமிருந்து Frederik Ruysch யின் மம்மிகளைப் பற்றியும் ராபர்ட்ஸனிடமிருந்தும் கொலம்பஸின் பயணங்களைப் பற்றியும் வாசித்துக் கொண்டார்.இன்றைய நாட்களில் லியோபார்டி அனுபவம் கண்டதைப் போன்ற பேரிலக்கியப் படிப்பு நினைத்துப் பார்க்கவே முடியாதது. குறிப்பாக, பிரபு மோனால்டோவின் நூலகமானது மிகவும் பாழாகிவிட்ட நிலையில். பழைய தலைப்புகளின் தலைமைகள் அழிக்கப்பட்டுவிட்டன. எல்லா நவீன இலக்கியங்களிலும், கலாச்சாரங்களிலும் புதியன பல்கிப் பெருகிவிட்டன. நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடியதெல்லாம் அவரவருடைய கருத்தியலான கிளாசிக்குகளின் நூலகத்தினைக் கண்டுபிடிப்பதுதான். அதன் ஒரு பாதி நாம் படித்துவிட்ட புத்தகங்களை கொண்டதாகவும், மறுபாதி நாம் படிக்க நினைத்திருக்கும் புத்தகங்களாலும் நிரம்பியிருக்க வேண்டும். நாம் காலிப் பகுதிகள் நிறைந்த ஒரு பிரிவினை ஆச்சரியங்களுக்கும், தற்செயலான கண்டுபிடிப்புகளுக்குமாக விட்டு வைக்க வேண்டும்.

லியோபார்டியின் ஒரு பெயரை மாத்திரமே இதாலிய இலக்கியத்திலிருந்து குறிப்பிட்டிருக்கிறேன் என்பதை என்னால் கவனிக்க முடிகிறது. இதுதான் நூலகம் சீரழிந்ததன் விளைவு. இப்பொழுது நான் இந்தக் கட்டுரையை மறுஆக்கம் செய்ய வேண்டும். செய்து நாம் யார் என்பதையும் நாம் எந்தப் புள்ளியை சென்றடைந்திருக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்வதற்கு கிளாசிக்குகள் உதவும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். மேலும் இதன் விளைவாக இதாலிய கிளாசிக்குகள் வேற்று நாட்டு கிளாசிக்குகளுடன் ஒப்புமைப்படுத்த தவிர்க்க முடியாத தேவையாக இருக்கின்றன. அந்நிய கிளாசிக்குகள் சரிசமமான முக்கியத்துவமுள்ளவையாகின்றன இதாலிய கிளாசிக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு.

அதன் பிறகு நான் நிஜமாகவே அதை மூன்றாவது தடவையாக திருத்தி எழுத வேண்டும்–ஏதோ ஒரு காரியத்திற்குப் பயன்படுவதால் கிளாசிக்குகளைப் படிக்க வேண்டும் என்பதை மக்கள் நம்பாமலிருக்கும் பொருட்டு. அவற்றின் சார்பாக எடுத்துச் சொல்லக் கூடிய ஒரே காரணம் என்னவென்றால் கிளாசிக்குகளைப் படிப்பதென்பது அவற்றைப் படிக்காமலிருப்பதை விட மேலானது.

மேலும் எவர் ஒருவராவது அந்த அளவுப் பிரயத்தனங்களுக்கு அவை தகுதியற்றவை என்று ஆட்சேபித்தால் நான் சியோரான் என்பவரை மேற்காட்டுவேன். (ஒரு கிளாசிக் அல்ல, குறைந்தபட்சம் இன்னும் அப்படியாகவில்லை, ஆனால் தற்போது இதாலிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமகால சிந்தனையாளர்) : ஹெம்லாக் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது புல்லாங்குழலில் சாக்ரடீஸ் ஒரு புதிய மெட்டினைக் கற்றுக் கொண்டிருந்தார். “அதனால் என்ன பயன் வரும் உனக்கு?” அவர்கள் கேட்டனர்: “குறைந்தபட்சம் நான் இறக்கு முன்னர் இந்த மெட்டினை கற்றுக் கொண்டிருப்பேன்.” •

குறிப்புகள்

1.தூசிடைடிஸ் (471?-400கி.மு)

கிரேக்க வரலாற்றாசிரியர். தூசிடைடிஸ் தளபதியாக இருந்த கடல் படை ஆம்ஃபியோபோலிஸ் என்னுமிடத்தில் தோற்கடிக்கப்பட்டவுடன் அவர் நாடுகடத்தப்பட்டார். அவரது நாடுகடத்தப்பட்ட 20 வருடங்களை பெலோப்னீசியப் போர் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். அவருடைய ஒரே நூல் History of the Pelopnnesian War. “I lived through the whole war”என்று அந்தப் புத்தகத்தில் அவர் எழுதினார். போர்களின் காரணங்களையும், கிரேக்க வரலாற்றினையும், அதில் வேண்டிய ஆவணங்களை ஆராய்ந்தும், நேரில் பார்த்தவர்களைச் சந்தித்தும், வருடாந்திர ஒழுங்கில் கோடை காலங்களையும் குளிர் காலங்களையும் அலசி அவரது தோல்விக்கான காரணங்களுக்கு வந்து சேர்கிறார். போரின் முழு 27 வருடங்களையும் History of the Pelopnnesian War இல் அவர் எடுத்துக் கொண்டிருந்த போதிலும் நூல் முடிவுக்கு வருமுன் இறந்து போனார்.

2.ஹெரோடோட்டஸ்(484-425 கி.மு)

கிரேக்க வரலாற்றாசிரியர். வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படுகிறார். ஏறத்தாழ கி.மு 457இல் பாரசீக ஆட்சிக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டவர். ஆசியா மைனர், பாபிலோனியா, எகிப்து வழியாக கிரேக்க நாடுகளைச் சென்றடைந்திருக்க வேண்டும். ஏதென்ஸ் நகரில் இறுதியாகக் குடியேறினார். வாழ்நாள் முழுவதையும் ஹிஸ்டரி என்ற தலைப்பிலான தனது உன்னதப் படைப்பை எழுதுவதில் செலவிட்டார். உரைநடையில் எழுதப்பட்ட முதல் படைப்பாக்கம் ஹிஸ்டரி என்று சொல்லலாம். எல்லாக் காலத்திய விமர்சகர்களின் பாராட்டினைப் பெற்ற இந்தப் படைப்பை பின்னாளில் வந்த புத்தகாசிரியர்கள் ஒன்பது பகுதிகளாகப் பிரித்தனர். முதல் ஆறு தொகுதிகள் உலக மக்களின் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள், மற்றும் வீரதீரக் கதைகள், சரித்திரம் மற்றும் கலாச்சாரங்களைப் பற்றிப் பேசுகின்றன. கடைசி மூன்று தொகுதிகள் கி.மு. 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரேக்க நாட்டிற்கும் பாரசீகத்திற்கும் நடந்த ஆயுதப் போர்களைப் பற்றிப் பேசுகின்றன.

3.ஸெய்ன்ட் சைமன் (1675-1755)

பாரிஸ் நகரில் பிறந்த பொதுவுடைமைவாதி. பதினாறாவது வயதில் அமெரிக்கப் புரட்சியில் பங்கேற்றுப் போரிட வேண்டி அமெரிக்க நாட்டிற்குச் சென்றார். மீண்டும் பிரான்சுக்குத் திரும்பியவர் தனது பட்டத்தைத் துறந்து பிரெஞ்சுப் புரட்சியை ஆதரித்தார். நவீன பொதுவுடைமைக் கோட்பாட்டின் நிறுவனர்களில் ஒருவராகக் கருதப்படும் இவரது படைப்பாக்கங்கள் அறிவியல் துறையிலும், பிற அறிவுத் துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களால் மொத்த சமூகத்தின் நலனுக்காகவூமாய் வழிநடத்தப்படும்ó ஒரு சமூக அமைப்பை ஆதரித்து அதற்கான வாதப் பிரதிவாதங்களை முன் வைக்கின்றன. “தொழில்மயமாதல் (Industrialization) என்ற பதம் அவர் அறிமுகப்படுத்தியதுதான். போர் ஒழிப்பு, வறுமை நீக்குதல், சமூகத்தை மேம்படுத்துதல் ஆகிவற்றுடன் கிறித்துவத்தையும் தொழில்மயமாக்கலையும் இவரால் இணைத்துச் சிந்திக்க முடிந்தது. ஸெயின்ட் சைமனின் மாணவர்கள் அவர் இறந்த பிறகு அவரது கருத்துக்களை ஒன்று திரட்டி பிரபலப்படுத்தினார்கள். புதிய கிறித்தவம் (Le Nouveau Chritianisme)1825 அவரது முக்கிய படைப்பாகும்.

4.பால்ஸாக் ஹொனொரே த ( 1799-1850 )

பிரெஞ்சு நாட்டு யதார்த்த நாவலாசிரியர். அவரது வாழ்க்கை புதினம் போலவும் புதினம் வாழ்க்கை போலவும் சில சமயங்களில் அமையப் பெற்றது. பால்ஸாக்கின் புதின உலகம் அவரது நிஜ உலகம் தரத்தவறியவற்றுக்கான ஒரு பதிலீடாக இருந்தது. பணம் பற்றிய கருத்தோட்டம் நாவல்கள் முழுக்கவும் இடம் பெறுகிறது-பிரதான பாத்திரங்கள் அவரைப் போலவே பணத்தையும் சமுதாய அந்தஸ்தைத் தேடியபடியும் சென்று கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர். கடன் பட்டு கடன்காரர்களுக்குப் பணம் தர வேண்டியிருக்கும் பொழுது எழுதும் பழக்கம் பால்ஸாக்கிடம் உண்டு. ஒரு வார்த்தை கூட எழுதாமல் வெளியீட்டாளர்களிடமிருந்து பெருந்தொகையை முன்பணமாக வாங்கிவிடுவார். வியாபாரம் குறித்து தனது நாவல்களில் எல்லோரும் நம்பும்படியாக சிறப்பித்து எழுதியபோதிலும் அவரது தனிப்பட்ட பண விவகாரங்களை அவரால் சமாளிக்க இயலவில்லை. அவரது முதல் நாவலான The Last Chouan, The Human Comedy என்ற நாவல் தொடரின் முதல் நாவலாக அமைந்தது. The Human Comedy என்கிற தலைப்பே மறுமலர்ச்சிக்கால இதாலியக் கவிஞர் தாந்தேவின் டிவைன் காமெடி என்ற காவியத்திற்கு எதிரிடையாகத் தலைப்பிடப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். The Human Comedyயின் பல கதைகள் 1820களில் பாரிஸ் நகரப் பின்னணியில் அமைந்துள்ளன. பல கதாபாத்திரங்கள் நாவல் தொடர்களில் மறுபடி வருகின்றன. அவை இந்தத் தொடர்ச்சியின் வேறு ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரங்களை அறிந்து வைத்திருப்பது நாவல்களுக்கிடையேயான ஒருமையைத் தருகிறது. இமானுவெல் ஸ்வீடன்போர்க் என்ற ஸ்வீடன் தேசத்திய விஞ்ஞானி-இறையியல்வாதியின் கோட்பாடுகளினாலும், ஆஸ்திரிய நாட்டு மனோவியல் அறிஞரான ஃபிரான்ஸ் மெஸ்மர் என்பவரின் கோட்பாடுகளினாலும் பால்ஸாக்குக்கு ஏற்பட்ட பாதிப்பு அவரது தாயாரிடமிருந்து பெறப்பட்டதாக இருக்கலாம். பால்ஸாக் படிப்பில் நாட்டமில்லாதவராகயிருந்தார். தத்துவார்த்த விசாரணை மிக்க புத்தகங்களைப் படிப்பதில் மனதைப் பறிகொடுத்தார். யதார்த்த இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கிய பால்ஸாக் அறிவியலில் மிகுந்து ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பிரெஞ்சு விஞ்ஞானிகளின் மிகச் சீரிய விஞ்ஞானக் கோட்பாடுகளின் தாக்கத்தினை அவரது படைப்புகள் எடுத்துரைக்கின்றன. Madame Hanska என்ற போலந்து நாட்டு சீமாட்டி அவர் வாழ்வில் அவருக்குக் கிடைத்த காதலிகளில் சிறந்தவராகத் திகழ்ந்தார். இறுதியாக அவரது மரணத்திற்கு சிறிது காலம் முன்பாக அவர்கள் மணம் புரிந்து கொண்டனர். பிரெஞ்சு சமூகத்தை விவரிப்பதாகவும், பிரதிபலிப்பதாகவும் தனது புதினங்கள் அமைய வேண்டுமென பால்ஸாக் விரும்பினார். அதற்கேற்ற வகையில் 17 நாவல் தொகுதிகளாலான படைப்பொன்றை உருவாக்கினார். அவரது காலகட்டத்தினைச் சேர்ந்த மனிதர்களின் வகைமாதிரிகளையும், பழக்க வழக்கங்களையும் பதிவு செய்யும்படி தனது புதினங்களை அமைத்தார் பால்ஸாக்.

5.மிஷல் ப்யூட்டர்(1936-)

நவீன பிரெஞ்சு புனைகதையாளர். மரபுசார்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பாணி புதின இலக்கியத்தை மாற்றியமைப்பதற்கு பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தவர்களில் மிக முக்கியமானவர். சோதனைப் புதின எழுத்துக்களில் அதிகம் ஈடுபட்டவர். சார்ஸ் பாதெலர் பற்றியும் மாண்ட்டெய்ன் பற்றியும் நீண்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மிக இறுக்கமாகவும், புறவய வஸ்துக்களை மையப்படுத்தியும் (Object-Centereed), மானுடஉருவியல் எதிர்ப்புமிக்க (Anit-Anthropomorphic)சிக்கனத்துடன் எழுதிய பிரெஞ்சு நிவோவ் ரொமான்ஸ் வகைநாவல்களை எழுதிய அலென் ராப்கிரியே, நதாலி சரோ ஆகியோரின் வரிசையில் முக்கிய இடத்தைப் பெறுகிறார் மிஷல் ப்யூட்டர்.

6.ஸோலா, எமில் (1840-1902)

பிரெஞ்சு நாவலாசிரியர், கட்டுரையாளர் மற்றும் விமர்சகர். பிரான்ஸ் தேசத்தில் தோன்றிய நேச்சுரலிசம் என்ற இலக்கிய இயக்கத்தை ஆதரித்துப் பின்பற்றியவர்களில் முதன்மையானவர். பால்ஸாக் எழுதிய The Human Comedy அளித்த தூண்டுதலில் அதைப் போலவே 20 நாவல்கள் அடங்கிய ஒரு தொடரினை Le Rougan Macquart தனது நேச்சுரலிச கோட்பாட்டின் பின்னணியில் உருவாக்கினார். ஸோலாவின் நேச்சுரலிஸம் பற்றிய கருத்துக்களை The Fortune of the Rougans(1871)என்ற நாவலுக்கு எழுதிய முன்னுரையிலும் The Experimental Novel (1880) என்ற புத்தகத்திலும் காணலாம். ஒரு ஆய்வுக் கூடத்தின் அணுகல்களையும் ஆய்வுகளையும் நாவலானது பிரதிபலிக்க வேண்டும் என்றார் ஸோலா. கதாபாத்திரங்கள்சமூகவியல், மனோவியல் மற்றும் பாரம்பரியத்தின் விதிகளை அனுசரித்து படைக்கப்பட வேண்டுமென்றார். தன்னுடைய புத்தகங்களில் இடம்பெறும் பகுதிகளுக்கு நேரில் சென்று மனிதர்களின் நடத்தைகளை ஆராய்ந்து குறிப்பெடுத்துக் கொள்வது இவர் வழக்கம். Le Rougan Macquartதொடரில் உள்ள நாவல்களில் The-Dram Shop (1877) Germinal(1885)ஆகிய இரண்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த புதினங்களாகக் கருதப்படுகின்றன. Nana என்கிற நாவல் அதன் போர்னோகிராஃபித் தன்மைகளுக்காகப் அவர் காலத்தின் பெரிது படுத்தப்பட்டாலும் இன்று அது சாதாரணமாகத்தான் தெரிகிறது. ஒரு வேசியின் வாழ்க்கையை மிகவும் கருணைமிக்க புரிதலுடன் இதில் ஸோலா படைப்பாக்கினார். இதுவும் 1928இல் எழுதப்பட்ட உழ்ன்ய்ந்ஹழ்க் நாவலும் பாரிஸ் சேரி வாழ்க்கையை தத்ரூபமாகப் பிரதிபலிக்கிறது.

7.ரூகன்-மாக்வா (Rougon-Macquart) தொடர்ச்சி

எமிலி ஸோலாவின் நாவல் தொடர்ச்சியான Rougon-Macquart (1871-93)பிரெஞ்ச நேச்சுரலிச இயக்கத்தின் பிரதான நினைவுச் சின்னமாக விளங்குகிறது. நாவலுக்கு அவர் அளிக்க நினைத்த அறிவியல்பூர்வமான கண்ணோட்டமும், மனித நடத்தையை பாரம்பரியம் மற்றும் சூழ்நிலைகளால் தீர்மானித்து கணிக்கும் விதமும் இதில் ஸோலாவின் பிரதான அக்கறைகளாக இருந்தன.

8.தாஸ்தாயெவ்ஸ்கி ( 1821-1881 )

தலைசிறந்த ரஷ்ய நாவலாசிரியர். அவரது மரணத்திற்குப் பிறகே அவரை ஆங்கிலம் பேசும் உலகம் அவரை அறிந்து கொண்டது. இலக்கிய உலகில் அவரது தாக்கம் நின்று நிலைத்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் உலகத்தை, லட்சியக் கனவிற்கு எதிரிடையான பூமியை இவரது எழுத்துக்கள் தீர்க்கதரிசமாக முன்வைக்கிறார். பெயர் பெற்ற உளவியல் நிபுணர் ஸிக்மண்ட் ஃபிராய்ட் தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் முன்வைக்கும் நனவிலி மனதின் இயக்கங்கள், மற்றும் மனித மனதின் நுட்பங்கள், சிடுக்குகள் முதலியவற்றால் ஈர்க்கப்பட்டவர் என்பவர் மிக முக்கியமான செய்தி. எங்ஙனம் ஒரு அறிவுத்துறையை ஒரு படைப்பாளனின் எழுத்துக்கள் பாதிக்கச் செய்ய முடியும் என்பதற்கு மிக முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றன தாஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துக்கள். கடவுளில்லாத உலகத்தின் இன்னொரு பரிமாணமும் இவரது எழுத்துலகில் காணக்கிடைக்கிறது. 19ஆம் நூற்றாண்டினைப் பின்னணியாக வைத்து உருவானவை என்ற போதிலும் அவரது எழுத்துக்கள் 20ஆம் நூற்றாண்டிற்கும் பொருந்தக் கூடியவையாக இன்றும் விளங்குகின்றன என்பது அவரது படைப்பாக்கத்திற்கு ஒரு சான்று. அந்நியமாதல், சமூகம்சார்ந்த சீர்குலைவுகள், யதேச்சதிகாரம், மனித விடுதலை மீதான அதன் தாக்கங்கள் என அவருடைய படைப்புகள் தற்காலத்திய வாழ்வுச் சிக்கல்கள் பலவற்றை அலசுவதாகத் தெரிகின்றன. The Crime and Punishment, The Posseseed, Brothers Karamazov ஆகியவை அவரது முக்கிய நாவல்களாகும். சிறு கதை எழுத்துக்களிலும் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் தாஸ்தாயெவ்ஸ்கி. பெரும்பாலும் மிகுந்த நெருக்கடியில்தான் அவரது எழுத்துக்கள் உருவாயின. கடன்காரர்கள் நெட்டித் தள்ளும் போதுதான் அவர் எழுத்தை உத்வேகத்துடன் எழுதத் தொடங்கினார். பண நெருக்கடியில் எழுதப்பட்டவை என்ற காரணத்தினால் அவை என்றும் கிஞ்சித்தும் தரம் தாழ்ந்து போய்விடாதவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பணத்துக்காக எழுதுதலும் பணநெருக்கடியில் எழுதுதலும் ஒன்றல்ல.

9.துர்கனேவ், இவான் ஸெர்கயேவிச் (1818-1883)

ரஷ்ய எழுத்தாளர், ரஷ்ய எழுத்து நடைக்குப் பெயர் பெற்றவர். தனித்துவமிக்க பாணியின் முன்னோடி என்று கூறலாம். அவருடைய புதினங்கள், கவிதைகள், நாடகங்கள் எல்லாமே நயங்கூடிய செய்நேர்த்தியாலும், விரிந்த, சமனப்பட்ட கண்ணோட்டத்தினாலும், தெளிவான புரிதலாலும் சிறப்புப் பெறுகின்றன. 1818ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி மத்தியா ரஷ்யாவில் உள்ள ஓரெல் பகுதியில் பிறந்த துர்கனேவ், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் மற்றும் பெர்லின் பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றார். தனது பிள்ளைப் பிராயத்தில் அடிமைத் தொழிலாளிகளின் கஷ்டங்களை நேரில் பார்த்ததால் அதுவே அவரது பெரும்பாலான படைப்புகளின் முக்கியக் கதைக் கருவாகியது. முழு நேர இலக்கியவாதியாக மாறுவதற்கு முன் சிறிது காலம் அரசுப் பணியில் இருந்தார். முதலில் கவிஞராக அறிமுகமாகிய துர்கனேவ் நாடகங்களையும் எழுதியிருக்கிறார். பிறகுதான் புதின எழுத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். First Love (1850), Torrents of Spring.(1872) ஆகிய நாவல்கள் காதலைப் போற்றிப் பரவும் அற்புதப் படைப்புகள். எனினும் அவரது தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுவது 1862ஆம் ஆண்டு வெளிவந்த Fathers and Sons.. 1883ஆம் ஆண்டு காலமான துர்கனேவின் அனைத்துப்படைப்புகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

10.மார்லார்மே, ஸ்டெபன் (1842-1898)

பிரெஞ்சு சிம்பாலிஸக் கவிஞர்களில் (ஆர்தர் ரைம்போ, பால் வெலேரி, பாதெலர்) மிக முக்கியமானவர். எட்கர் ஆலன் போ என்கிற அமெரிக்க எழுத்தாளரின் எழுத்துக்களைப் படிப்பதற்கு வேண்டி ஆங்கிலம் கற்றுக் கொண்டார். அவரது பிரதான வாழ்க்கையை இங்கிலாந்தில் ஒரு ஆசிரியராகக் கழித்தார். 1800ஆம் ஆண்டு காலத்தில் சிறிய இலக்கியக் குழுக்களில் குரு ஸ்தானம் தரப்பட்டவர். பாதெலெர் என்ற பிரெஞ்சுக் கவிஞரின் பாதிப்பலிருந்து மீண்டு தனக்கான ஒரு கவிதை எழுதுதல் முறையை உருவாக்கிக் கொண்டார். குறிப்பாக கவிதையின் மொழிக்கும் இசையின் மொழிக்குமான சில இடைவெளிகளில் தனது கவிதைகளில் முழுமுற்றாக அகற்றப்பார்த்தார். எனவே அவரது கவிதைகள் பல புரியாமல் போயின. அவரது கொள்கைப்படி வார்த்தைகளுக்கான பிரத்யேக இசையை ஒரு கவிஞன் கண்டடைய வார்த்தைகளையும் இசையையும் அவன் தெரிந்திருத்தல் வேண்டும் என்று நினைத்தார் மல்லார்மே. அவரது கருத்துக்களுக்கு விளக்கமூட்டும்படி சிறிய கட்டுரைகளையும் எழுதினார். Afternoon of a Faun (1876) க்கு டெபுஸி என்ற இசை மேதை ஒரு சாகியத்யத்தை எழுதியதை இங்கு குறிப்பிட வேண்டும்.

11.பிக்விக் பேப்பர்ஸ்

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில நாவலாசிரியரான சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய மிகவும் நகைச்சுவையான நாவல். திருவாளர் பிக்விக் என்பவரின் சாகசங்களை விரிவாகச் சொல்லும் நாவல் இது.

12.லுக்ரெஷியஸ் (95- 55.கி.மு)

ரோமானியக் கவி. அவரது On the Nature of Thing ஆறு தொகுதிளாலான கவிதைகள். கிரேக்க நாட்டு தத்துவாதியான டெமாக்கிரட்டஸ் மற்றும் எப்பிக்யூரஸ் ஆகிய இருவரின் தத்துவார்த்த மெய்ம்மைகளை விரித்துரைக்கிறது. லுக்ரெஷியஸ் கடவுள்களின் இருப்பை மறுக்கவில்லை என்றாலும் கூட அவர்களுக்கு மனிதர்களின் விவகாரங்களிலோ அல்லது வாழ்வுப் போக்குகளிலோ அக்கறையில்லை என்று கருதினார். On the Nature of Thing என்ற அவரது படைப்பின் மிகப் பெயர் பெற்ற பகுதிகளில் ஒன்று கற்கால மனிதனின் வாழ்க்கையையும் படிப்படியான மனித நாகரீக வளர்ச்சியையும் பதிவு செய்கிறது.

13.லூஸியன் (120 -180 ஏறக்குறைய)

கிரேக்க எழுத்தாளர் மற்றும் பேச்சாளர். அங்கதச் சுவை மிகுந்த உரையாடல் பாணியை கிரேக்க இலக்கியத்தில் கொண்டு வந்ததற்காக பெயர் வாங்கியவர். துருக்கியலுள்ள ஸமோஸோட்டாவில் பிறந்தவர். பேச்சாற்றல் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆரம்பத்திலிருந்து தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அவரது அங்கதச் சுவை மிகுந்த எழுத்துக்கள் குறிப்பாக மூடநம்பிக்கைகளயும், போலியான தத்துவார்த்தப் போதனைகளையும் நையாண்டி செய்தன. Dialogue of the Gods , Dialogues of the Dead The Sale of Lives முதலியவை அவரின் மிகச் சிறந்த படைப்புகள். லூஸியனின் எழுத்து ஆற்றொழுக்கான, மணிப்பிரவாளமான கிரேக்க உரைநடையாகத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

14.மாண்ட்டெய்ன் மிஷல் எக்வீம் (1553-1592)

கட்டுரையை ஒரு இலக்கிய வடிவமாக அறிமுகப்படுத்தி அதற்குரிய இலக்கிய அந்தஸ்தத்தைப் பெற்றுத் தந்தவர் மாண்ட்டெய்ன். அவரது இலக்கியப் பங்களிப்பின் பெரும்பகுதி கட்டுரைகளாகவே இருக்கின்றன. 1580இல் அவரது எழுத்துக்களின் முதல் இரண்டு தொகுதிகள் வெளியாகின. பிறகு மூன்றாவது கட்டுரைத் தொகுதி ஒன்றையும் வெளியிட்டார். இவை யாவும் ஊள்ள்ஹஹ்ள் தலைப்பிலான அவரது நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

15.எராஸ்மஸ், டெஸிடெரியஸ் (1466? -1563)

டச்சு நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், அறிஞர் மற்றும் மனிதநேயவாதி மற்றும் இதாலிய மறுமலர்ச்சியின் முக்கிய அறிவார்த்தப் போக்குகளை வடக்கு ஐரோப்பாவிற்கு பொருள்பெயர்த்துத் தரும் பிரதான மொழிபெயர்ப்பாளரும் கூட. எராஸ்மஸின் எழுத்துக்கள் வட ஐரோப்பா முழுவதிலுமாய் வழக்கத்திலிருந்து வந்த கலாச்சாரத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வந்தது. The Praise of Folly (1509),Quentin Massys என்ற Flemish ஓவியரின் ஓவியத்திற்குத் தூண்டுகோலாய் அமைந்தது. இது எராஸ்மஸ் பிற படைப்பாளிகளிடம் ஏற்படுத்திய பாதிப்பிற்கு ஒரு சிறந்த உதாரணம்.

16.க்யூவெடோ, வில்லாகாஸ் ஃபிரான்சிஸ்கோ (1580-1645)

ஸபெயின் தேசத்து எழுத்தாளர். 1613 முதல் 1620 வரை இத்தாலிக்கான ராஜதந்திர பணிகளில் ஈடுபட்டிருந்தார். 1623 இல் ஸ்பெயினுக்குத் திரும்பி வந்ததும் 1632இல் நான்காவது ஃபிலிப் மன்னரின் செயலராக நியமிக்கப்பட்டார். ஆனால் மன்னருக்கு எதிராக அரசியல் அங்கத எழுத்துக்களை எழுதியதற்காக 1639 முதல் 1643வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவருடைய காலத்தின் மிகச் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராய்த் திகழ்ந்த க்யூவெடோ அங்கதச் சுவை மிகுந்த எழுத்துக்களுக்கும் ஒழுக்கவியல் சார் எழுத்துக்களுக்கும் பெயர் பெற்றவர். .. என்றழைக்கப்படும் அணியலங்கார எழுத்து நடையில் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருந்தார். இதில் முரண்களும் சிலேடைகளும் கலந்திருóதன. Life and Adventures of Buscon(1626) மற்றும் Visions(1657) ஆகியவை க்யூவெடோவின் முக்கியப்படைப்புகளில் சிலவாகும்.

17.மார்லோ, கிறிஸ்டோபர் (1564-1693)

ஷேக்ஸ்பியரின் சமகாலத்தவர், ஆங்கிலக் கவி, நாடகாசிரியர். ஒரு நாடகாசிரியராக ஆறு வருடங்கள் மாத்திரமே இயங்கி வாழ்ந்த போதிலும் அவருடைய அளப்பரிய படைப்பாற்றல் காரணமாக தலைசிறந்த நாடகாசிரியராகக் கருதப்படுகிறார். அவருக்கு முந்திய நாடகாசிரியர்கள் நகைச்சுவையில் கவனம் செலுத்தினார்கள். ஆனால் மார்லோ அவலச்சுவையைக் கையிலெடுத்துக் கொண்டு அதை சிறந்த நாடக ஊடகமாக வளர்த்தெடுத்தார். Doctor Faustus என்ற அவருடைய நாடகத்தில் வரும் கதாநாயகன் சகல துறை அறிவினையும் அடைவதற்காய் சாத்தானிடம் தனது ஆன்மாவை அடகு வைக்கிறான். எல்லாவற்றையும் கண்டு, அனுபவிப்பவன் இறக்கும் தருணம் நெருங்க நெருங்க, உயிர் வாழும் ஆசையில் துடித்துப் புலம்புகிறான். இந்தப் பின்புலத்திலான நாடகத்தில் வாழ்க்கை பற்றி தத்துவங்களும் விசாரணைகளும் மிக நுட்பமான கவித்துவத்தோடு இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் படைப்பு மார்லோவின் எழுத்தாற்றலின் உச்சமாகக் கருதப்படுகிறது.

18.ரஸ்கின், ஜான்(1819-1900)

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில விமர்சகர் மற்றும் உரைநடை எழுத்தாளர். ஆங்கில ஓவியரான வில்லியம் டர்னர் என்பவரின் ஓவியங்களால் பாதிக்கப்பட்டவர். காந்தியைப் பாதித்த பொருளாதார சிந்தனையாளர். கலையை மதத்திற்கு பதிலியாக ஆக்க முயன்றவர்களில் முக்கியமானவர் ரஸ்கின். அவரது முக்கியமான உரைநடை Modern Painters, The Seven Lamps of Architecture, The Stones of Venice, Unto this Last.

19.சாமுவெல் டேலர் கோல்ரிட்ஜ் (1772-1834)

ஆங்கிலக் கவி, விமர்சகர், மற்றும தத்துவவாதி. ரொமாண்டிக் இலக்கியத்தின் தந்தை என்று இவரைக் கூறலாம். 1795இல் வொர்ட்ஸ்வொர்த் மற்றும் அவரது சகோதரி டோரதியுடன் ஏற்பட்ட நிலைத்த நட்பு காரணமாக இரு கவிஞர்களுமாக Lyrical Ballads என்ற பின்னாளில் ஆங்கில கவிதை வராலாற்றில் மைல்கல்லாக மாறிய கவிதைத் தொகுதியை வெளியிட்டனர். 1797-98 வருடங்களின் காலகட்டத்தில் குப்லைகான் மற்றும் கிரிஸ்டபல் போன்ற அற்புதமான கவிதைகளை எழுதினார். இலக்கியம் மற்றும் தத்துவம் சார்ந்த சொற்பொழிவுகளையும் 1808-1819 வருடங்களின் போது ஆற்றினார். போதைப் பொருள் சாப்பிடும் பழக்கத்தால் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ நேர்ந்த போது தனது வாசகரும் மருத்துவருமாகிய ஜேம்ஸ் கில்மேன் வீட்டில் தங்கி Biographia Literaria(1817) என்ற அற்புதப் படைப்பை எழுதினார். ஏறத்தாழ மிகச் சிறந்த சமூகவியல் விமர்சனம் முதன் முதலாக இங்கிலாந்தில் உருவாவாதற்கு இந்த நூலே காரணமாக இருந்தது எனலாம்.

20.Wilhelm Meister ஜான் கதே(1749-1832) என்ற பத்தொன்பதாம் நுற்றாண்டு ஜெர்மானியக் கவிஞரின் அதிகம் சுயசரிதமாகத் தெரியக் கூடிய முக்கியமான நாவல். வெளிவந்த வருடம் 1795.

21.மார்செல் ப்ரூஸ்(ட்) (1871-1922)

பிரெஞ்சு நாவலாசிரியர். பல தொகுதிகளால் ஆன, சோதனைப் புதினத்திற்கு எடுத்துக் காட்டாகக் காட்டப்படும் Remembrance of Things Pastஎன்ற படைப்பை எழுதியவர். இந்த பலதொகுதி நாவல் உலக இலக்கியத்தின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1871ஆம் ஆண்டு பிரான்சில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த ப்ரூஸ்ட் சட்டம் பயின்றாலும் இலக்கியத்தையே தனது முழு நேர வேலையாக எடுத்துக் கொண்டார். சிறு வயதிலிருந்தே ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 35வது வயதில் நோய் முற்றி படுத்த படுக்கையாகினார். எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவரது மகோன்னத படைப்பான Remembrance of Things Past எழுதுவதில் முனைந்தார். உயர் சமூகத்தில் ஓய்வாக இருக்கும் ஒரு மனித மூளையின் இயக்கங்கள் மிக நுண்மையாக இவரது படைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏழு தொகுதிகளான இந்த படைப்பில் உளவியல் மற்றும் தத்துவார்த்த கண்ணோட்டங்கள் முனைப்பட்டுத் தெரிகின்றன. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது இந்தப் புதினம். 1922ஆம் ஆண்டு ப்ரூஸ்ட் இறந்த போது மேற்சொன்ன படைப்பின் இறுதி மூன்று புத்தகங்கள் கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தன.

22.பால் வெலேரி (1871-1945)

நவீன பிரெஞ்சுக் கவிஞர் மற்றும் விமர்சகர். கவிதைக் கொள்கையாளர். கவிதை வடிவிலும் சரி, உரைநடையிலும் சரி, மிகச்சிறந்த நவீன தத்துவார்த்தப் படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படுபவர். சிந்தனைக்கும் செயலுக்குமிடையிலான மோதல் கலாபூர்வமாக தீர்க்கப்படுவதன் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தை நாம் பெறும் விதத்தில் அவருடைய படைப்புகள் இயங்குகின்றன. வெலேரி 1892இல் பாரிசில் குடியேறினார். அங்கே சிம்பாலிசக் கவிஞர்களில் முக்கியமானவரான ஸ்டெபென் மல்லார்மே என்பவரின் வட்டத்தில் இணைந்து கொண்டார். 1889-1898 ஆகிய வருடங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்ட வெலேரியின் கவிதைகளில் சிம்பாலிஸ்டுகளின் தாக்கத்தைக் காண முடிகிறது. கவிதையை மிகச் சிறந்த படைப்பாக்க உத்தியாக வெலேரி கருதினார். அரூப சிந்தனைகளுக்கு தனது கவிதைகளில் உருவம் தர முயன்றார். எனவே வெலேரியின் எழுத்துக்கள் அடர்வு கூடியதாய், எளிய புரிதலுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன.

23.லேடி முராஸாகி (அ) முராஸாகி ஷிபுகு (978? -1026)

ஜப்பானியப் பெண் எழுத்தாளரான முராஸாகி ஷிபுகு உலகின் முதல் நாவல் என்று கருதப்படுகிற The Tale of Genji எழுதியவர். இந்த நாவல் 1925-32விற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஆர்தர் வாலே என்பவரால் முதன் முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. முராஸாகியின் வாழ்க்கை பற்றி அதிக விவரங்கள் அறியக் கிடைப்பதில்லை. ஃப்யூஜிவாரா நோபுடாக என்பவரை மணந்திருந்தார் என்பதும் அரசவை வாழ்க்கை பற்றிய விவரங்களடங்கிய நாட்குறிப்பு ஒன்றை பராமரித்து வந்திருந்தார் என்பதும், தன் கணவரின் இறப்புக்குப் பிறகுஅந்த விவரங்களை புதினமாக வடிவமைத்ததாகவும் தெரிய வருகிறது. அரசி அகிகோவின் ஆட்சிக் காலத்திலான அரசவை வாழ்க்கையைப் பற்றிய துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நாவல். இளவரசர் ஜெஞ்சியின் வாழ்க்கையில் இடம் பெறும் பெண்கள் தனித்தனியளவில் நுட்பமாகப் படம் பிடித்துக் காட்டப்படுகிறார்கள். நாவல் இறுதிப் பகுதியை நோக்கி வர வர கதையின் தொனி முதிர்வும், தீவிரமும் கூடியதாகிறது. இகவாழ்க்கையின் கணநேர சந்தோஷங்களைப் பற்றிய பௌத்தமதக் கண்ணோட்டங்கள் கதையின்பிற்பகுதியில் இடம் பெறுகின்றன. இன்றளவும் முராஸாகி ஜப்பானிய இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

24.சாகாக்கள் (Sagas)

சாகாஸ் என்பவை மத்தியகால கட்டத்தில் ஐஸ்லாந்தில் நூற்றுக் கணக்காகத் தோன்றிய வாய்மொழிக் கதைகள். சாகா என்ற வார்த்தைக்கு “சொல்லுதல்” என்று பொருள். நார்வீஜிய மன்னர்கள் மற்றும் வீரபராக்கிரமங்கள் நிறைந்த நிஜ அல்லது கற்பனைக் கதை மாந்தர்கள், ஐஸ்லாந்து மற்றும் ஸ்காண்டிநேவியாவைச் சார்ந்த மன்னர்களைப் பற்றி உரைநடையில் எழுதப்பட்டவை. இவற்றின் ஆசிரியர்கள் அடையாளம் காணப்படவில்லை. பல கதை சொல்லிகளின் மூலமாகக் சொல்லப்பட்ட பிறகே இவை எழுத்து வடிவத்திற்கு வந்திருக்க வேண்டும். மூலக் கையெழுத்துப் பிரதிகள் ஒன்று கூடி மிஞ்சவில்லை. திருத்தங்களும், இடைச்செருகல்களும் கூடிய பிரதிகள் 13ஆம் நூற்றாண்டிலிருந்து பெறக் கிடைக்கின்றன

25.லியோபார்டி, கியோகோமா (1798-1837)

இதாலியக் கவிஞர், அறிஞர் மற்றும் மாபெரும் படிப்பாளி. இவரது படைப்பாக்கங்களில் நம்பிக்கையின்மை என்கிற அம்சம் தீவிரத்தன்மையுடன் இடம் பெறுகிறது. கூடவே இவரது கவிதைகளில் கச்சிதமான வடிவமைப்பும் நுட்பமான அறிதலும் காணக்கிடைக்கின்றன. ரெக்காண்ட்டி என்னுமிடத்தில் பிறந்த லியோபார்டி பள்ளிக்கு அனுப்பப்படாமல் வீட்டிலேயே ஆசிரியர் வரவழைக்கப்பட்டு கல்வி கற்பிக்கப்பட்டார். ஒரு எல்லைக்குப் பிறகு தனக்குத் தானே லியோபார்டி பயிற்றுவித்துக் கொண்டார். அவரது பலவீனமான உடல்நலம் எல்லையற்ற படிப்பினால் மேலும் சீர் குலைந்தது. லியோபார்டியை தாமதமாக ரொமாண்டிக் காலத்தில் வந்து சேர்ந்த கிளாசிசிஸ்ட் என்று கூறுவது பொருந்தும். காரணம் அவரது எழுத்துக்களில் கட்டுப்பாடும், தெளிவும், உத்திரீதியான பூரணமும் இருந்தது. இவர் தனது தேசப்பற்று மிக்க கவிதையான All Italia (1818) மூலம் எழுத்துலகத்தின் கவனத்தை ஈர்த்தார். பின் தனது கவித்துவத்தின் மூலம் 19ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த உணர்வெழுச்சிக் கவிஞராக உயர்ந்தார். இடைக் கால கவிதையமைப்பை ஒற்றி எழுதப்பட்ட அவரது தீர்க்கதரிசனக் கவிதையான Approach of Death (1816) அவரது மகிழ்ச்சியற்ற குழந்தைப் பிராயத்தின் அவலமான தனிமையை வெளிப்படுத்துகிறது. காதலில் ஏற்பட்ட ஏமாற்றம் ‘ஸில்வியாவுக்கு’ என்ற ஆரம்பகாலக் கவிதையைத் தோற்றுவித்தது. காதலில் ஏற்பட்ட தோல்வி பின்னாளில் அவரது மிகத் துயரமான கவிதைகளுக்குக் காரணமாகியது. கவிதைகளில் வெளிப்படுத்திய சிந்தனைகளையே சற்றும் குறைக்காமல் தனது கட்டுரைகளிலும் வெளிப்படுத்தினார். அவை ஞல்ங்ழ்ங்ற்ற்ங் ம்ர்ழ்ஹப்ண் (1827) என்ற பெயரில் வெளிவந்தன.

26.ஸ்டெந்தால் (1783-1842) (Stendhal)

இது மேரி-ஹென்ரி பெய்ல் என்ற பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகரின் புனைப் பெயராகும். 1800களின் மிக முக்கிய பிரெஞ்சு நாவலாசிரியர்களில் ஸ்டெந்தாலும் ஒருவர். அவரது முக்கிய ஆக்கங்களாக The Red and the Black (1830) மற்றும் The Charter House of Parma(1839) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இரண்டிலுமே அந்நியமாக்கப்பட்ட கதாநாயகர்கள் ஒடுக்குமுறை கூடிய சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்களை எதிர்த்தபடியே மகிழ்ச்சியைத் தேடிச் செல்கின்றனர். ரொமாண்டிக் இயக்கத்தின் ஒரு அங்கத்தினராக ஸ்டெந்தால் கருதப்பட்டாலும் இந்த இரு படைப்புகளும் அவரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் வரிசை யதார்த்தவாதிகளில் ஒருவராக நிறுவுகின்றன. பெரும் சக்திகளுக்கு எதிராய் தனிமனினின் கையறுநிலை பற்றிய அவரது சிந்தனைகள் அவரது படைப்புகளை செழுமைப் படுத்தின. நீட்ஷே முதலான தத்துவவாதிகள், மார்ஸெல் ப்ரூஸ்ட், ஆல்பெர் காம்யூ முதலான படைப்பாளிகளும் ஸ்டெந்தாலின் எழுத்துக்களாலும் சிந்தனைகளாலும் பெரிதும் எழுச்சியூட்டப்பட்டவர்கள். ஸ்டெந்தாலின் கதாபாத்திரங்கள் அவர் வாழ்ந்த காலத்தை பிரதிபலிப்பபவையாக அமைந்தன.

*ரூஸோ ழீன் ழாக் (1712-1778)

பிரெஞ்சு தத்துவஞானி, சமூக மற்றும் அரசியல் கருத்தியலாளர், இசைக் கலைஞர், தாவரவியலாளர். என்லைட்டன்மென்ட் காலகட்டத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். பிரதானமாக ரூஸோ அரசியல் சிந்தனைப் பாங்கான எழுத்துக்களுக்கு பெயர் பெற்றவர் On Social Contract (1762)என்ற நூலில் மக்கள் தங்களுக்கிருக்கும் சுதந்திரத்திற்கான, பிரிக்கவியலாத உரிமைகளைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரடி ஜனநாயக ஆட்சி நிலவும் ஒரு கற்பனை உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். எமிலி(1762) என்ற சீரிய நாவலில் சுய சிந்தனையும், மனச் சமன்நிலையும் உள்ள குழந்தைகளை உருவாக்கவென ஒரு புதிய கல்விக்கோட்பாட்டினை முன் வைக்கிறார். அவருடைய புதுமையான கருத்துக்கள் அவரை பிரெஞ்சு மற்றும் ஸ்விஸ் நாடுகளின் அதிகார வர்க்கதினரின் அதிருப்திக்கு ஆளாக்கின.

27.ஃபொன்டெனெல், பெர்னார்ட் (1657-1757)

பிரெஞ்சு எழுத்தாளர், விஞ்ஞானி. சட்டம் பயின்ற போதிலும் இலக்கியத்தை தனது முழு நேரப் பணியாகத் தெரிவு செய்து கொண்டார். முப்பது வயதை எட்டுவதற்குள் அவர் பல நாடகங்கள், இசைநாடகங்கள், சிறுகதைகள், உரையாடல்கள் மற்றும் விஞ்ஞானம் மீதான ஆய்வலசல் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியிருந்தார். Dialogues of the Dead(1683)என்ற அவரது படைப்பு அவரை எழுத்துலக மேதையாக நிறுவியது. 1699 முதல் 1739 வரை அறிவியல் கழகத்தின் செயலராகப் பணிபுரிந்த ஃபான்டெனெல் அகாதெமியின் வரலாறு சம்மந்தமான பல ஆக்கங்களை எழுதினார். Discourses on the Plurality of Worlds(1686) என்ற அவரது மிகச்சிறந்த படைப்பில் அவர் கோபர்னிக கோளியங்கு கோட்பாட்டினை மிகச்சிறந்த இலக்கிய வடிவில் வழங்கியிருந்தார்.

28.பஃபன், ஜார்ஜ் (1707-1788)

பிரெஞ்சு நாட்டின் இயற்கையியல்வாதி. (Naturalist)பைபிளை அடிப்படையாகக் கொள்ளாத, உடலியல் மற்றும் பூமி அமைப்பியல் பற்றிய உலகளாவிய வரலாற்றின் மிக ஆரம்பகால எழுத்துக்களை எழுதியவர். மருத்துவம், தாவரவியல் மற்றும் கணிதம் பயின்றவர். 1749க்கும் 1789க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பிரசுரமான 36 தொகுதிகள் கொண்ட அவரது History Naturelle (Natural History) பஃபனின் தலை சிறந்த படைப்பாகும். பூமியின் வரலாறு பற்றிய முதல் நேச்சுரலிச விவரணைக் குறிப்பேடு இது. தாவரவியல், கனிமவியல், விலங்கியல் போன்றவற்றின் உற்பத்திகளை முழு விவரங்களை இந்தப் புத்தகம் அகல்விரிவாகத் தருகிறது

நன்றி: http://brammarajan.wordpress.com

•Last Updated on ••Wednesday•, 31 •August• 2011 19:17••  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.023 seconds, 2.37 MB
Application afterRoute: 0.029 seconds, 3.12 MB
Application afterDispatch: 0.100 seconds, 6.05 MB
Application afterRender: 0.182 seconds, 7.15 MB

•Memory Usage•

7562216

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'fnqc5nal9ol62v0lvfge7s9d96'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1719968879' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'fnqc5nal9ol62v0lvfge7s9d96'
  4. INSERT INTO `jos_session` ( `session_id`,`time`,`username`,`gid`,`guest`,`client_id` )
      VALUES ( 'fnqc5nal9ol62v0lvfge7s9d96','1719969779','','0','1','0' )
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 27)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 340
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:22:59' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:22:59' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='340'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 9
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-03 01:22:59' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-03 01:22:59' )
      ORDER BY a.ordering
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 27 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 27
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 17
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:22:59' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:22:59' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

இடாலோ கால்வினோ;தமிழில் பிரம்மராஜன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

இடாலோ கால்வினோ;தமிழில் பிரம்மராஜன்=இடாலோ கால்வினோ;தமிழில் பிரம்மராஜன்