வாழும் வரை போராடு!
- வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -
நீளும் உந்தன் வாழ்வினிலே
நாளும் பல ஆசைகளின்
ஆளுமைக்குச் சிம்மாசனமிடு!
மாளும் துன்பச் சைகைகள்
மீளும் கீழ் வானிலே…..
சூழும் வரை பார்த்திராதே!.
கோளும் கிரகணமான வாழ்விது!
வாழும் வரை போராடு!
கீழும் மேலுமாய் வலையிடும்
பாழும் சமுதாயச் சிலந்திகளை
தோளினை உயர்த்தித் தட்டிடு!
முழுகிடு! சோம்பல் கழுவிடு!
விழுது விடும் முயற்சியின்
முழு அலை வரிசையால்
மூளும் இலட்சிய முன்னுரையை
எழுது! மௌனம் கலைத்திடு!
உயிர் துளியின் ஈரம்
புயலான வக்கிரத்தால் உலராது
சுயமெனும் இராசாங்கம் காத்திடு!
உன் நன்நிறம் மாற்றி
உலகின் வெறுப்பிற்கு ஆளாகி
உன்னத பரிமாணம் இழக்காதே!
வன்முறை வார்த்தையிலும் இன்றி
வளமாக வீறுடன் போராடு!
26-3-2007.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
இயற்கையே இன்னுமா நீ உறங்குகிறாய் ????
- செந்தமிழன் -
உன் காட்டை இடித்து கட்டிடம் வளர்க்கிறார்கள்,
பூமியின் போர்வையிலே ஓட்டையிட்டு சிரிக்கிறார்கள்,
இயற்கையே இன்னுமா நீ உறங்குகிறாய் ????
ஓராயிரம் காரியம் செய்துன்னை சூடாக்கி,
பனிப்பாறை கரைத்துன்னை அழவைத்த போதிலும்,
இயற்கையே இன்னுமா நீ உறங்குகிறாய் ????
காற்றையும் கெடுத்து, கடலையும் கெடுத்து,
மண்ணையும் விண்ணையும் புண்ணாக்கிய பின்னும்,
இயற்கையே இன்னுமா நீ உறங்குகிறாய் ????
வேட்டையாடி கொண்டு வந்து உன் பிள்ளைகளை,
கொன்று தின்று கொழுத்த பின்னும்,
இயற்கையே இன்னுமா நீ உறங்குகிறாய் ????
நீ வாழக் கொடுத்த இடத்தையெல்லாம் வாடகைக்கு விட்டுவிட்டு,
உன்னையே இடம் பெயர்க்க பார்க்கிறார்கள் ...
இயற்கையே இன்னுமா நீ உறங்குகிறாய் ????
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
கண்களின் இரு துளி...!
- கலைமகள் ஹிதாயா றிஸ்வி (இலங்கை) -
பிறப்பின் ஆரம்பம்
அழுகுரல் விசும்பலுடன்
மண்ணின் இருப்பிடத்தை நிச்சயப்படுத்தும்!
வாழ்க்கை என்ற பயணத்துக்கு
நிம்மதியான வழிகாட்டலும்
தூங்காத மனதுக்கு வாழ்கையின் எதிர்பார்ப்புக்களும்
சுருங்கியிருக்கும் வயிறின் முடிச்சுக்களாய்
பிறப்பின் முகவரி தொலைத்து
தொலைப்பில் உழலும் அறிமுகம்.
அழுக்கு குப்பையில் கிடக்கும்
கசங்கிய துணித் துண்டுகளாய்
புதைகுழியில் தள்ளப் ப்பட்டு
உணவற்ற வதனத்தோடு
மரண உறக்கம் மாறாத உணர்வுக்கு
துறு நாற்றம் வீசுகின்ற உலகில்
மணந்து கொள்ள ஏதும் வாசம் உண்டோ ..?
இருளாய் போகும் உலகமும ...,
தூசாப் பறக்கும் காலங்களும் ...,
மூச்சுக்களாய் போகும் சுவாசமும் ...,
வெள்ளையாய் மாறும் முடிகழும் ...,
காணாமல் போகும் நாட்களும் ...,
இழந்து போகும் வாழ்க்கையும் ..,
கரைந்து போகும் நினைவுகளும் ...,
கண்களின் இரு துளி
ஈரமாய் என் மடியில் விழும் ......!
மனம் பதறி அழும் ...!
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
கருஞ்சுவரில் குழாய் வரைந்து..
- எஸ்.பாயிஸா அலி -
ஆவலை மின்னவிட்டவாறே
இடியாய் வந்திறங்கியிருக்கிறது பெறுபேறு.
எப்போதும் போலே
எனக்கு மட்டுமில்லை நூறு விழுக்காடு
முழுமைக்கான கரகோஷங்களுக்காய்
நடனமாடிய விரல்களிலிருந்தே
எனை நோக்கியும் நீள்கின்றன
சுட்டு விரல்கள்
இனியுமென்ன
சுரண்டித் தெரியும்
கடைக் கத்தரிக்காய் ஆகிற்றென்
கற்பித்தல்.
இல்லா இடைவெளி வேண்டி
கிளறப் படுகின்றன
ஆவணக் கோப்புகள்.
துவக்க வருஷத்தின்
பேறு கால விடுமுறை நாட்களோ
இல்லை
நிறைந்து
முந்தானைக்கு மேலாயும் கசிந்த
செல்லக் குழந்தையின் கதறல்
துடைத்த நிமிஷத் துளிகளோ
மிகப் பெரும் நேரத் திருட்டாய்
உணரப் படுகிற
இக்காலங்களுக்குள்
கணக்கில் வருவதேயில்லை
அதற்கான பதிலீடுகள்.
உண்ணப் படாமலேயே குவிந்தழுகும்
பணக்கார வீட்டுச் சமையலறைபோலே
பல ஆய்வறைகள்
தூசித்துத் தூங்கையிலே
கருஞ் சுவரில் குழாய் வரைந்து……
காற்றிலேதான் செய்துவித்த
பரிசோதனைகள் யாவுமே
பயணப் பட்டிருக்குமா
பரீட்சை விடைத்தாள் வரைக்குமென்ற
வினாவுக்கு மட்டும்
யாரிடமுண்டு விடை.
இது எனக்கான நேரம்
இரைச்சலாய் மேலெழும் கோபமாயோ
இல்லை
கண்ணீராய் வழியும் சாபமாயோ
பதிலை எதிர்பார்த்திருந்த
பதட்டமான கணங்களுக்குள்
மிக மௌனமாகவே
மீட்டிக் கொண்டிருக்கிறேன்
பேரறியா அந்தச் சீனக் கவிஞனின் வரிகளை..
நான் கேட்கிறேன் -மறக்கிறேன்.
நான் பார்க்கிறேன்- உணர்கிறேன்
நான் செய்கிறேன்- விளங்கிக்கொள்கிறேன்.....
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
மெய்யன் நடராஜ் (இலங்கை) கவிதைகள்!
1. ஏன்?
காதலெனும்
பூவெனக்கு தந்தாய்.
சுகந்தம் கமழ்ந்தது
என் வாழ்வில்.
அழுக்குகளை அகற்றும்
சவர்க்காரம்போல்
அன்பால் என்
இதயத்தை சுத்தமாக்கினாய்.
என் சோகங்களின்
பட்டை நீக்கிய
உன்னால்தான் என்
சந்தோசங்கள்
பட்டை தீட்டப்பட்டன..
என் கருப்புகளின் மேல்
உன் புன்னகையின்
தூரிகைகள் பூக்கள்
வரைந்தபோதுதான்
என் சிறகுகள்
வண்ணாத்திப்பூச்சியாகின
நரக வாழ்வியலில்
சொர்க்கப் பார்வை வீசிய
உன் விழிகளால்தான்
என் பாலைவனம்
சோலையானது
என் கற்பனைகளின்
கால் தடங்களுக்கும்
காலணி பூட்டிய
கற்பகதரு உனக்காய்
எனது ஜீவனில் ஒரு
மாளிகை கட்டினேன்
எத்தனை மாளிகைகள்
இம் மண்ணிலிருந்து
விண்ணை தொட்டாலும்
நீ வாழுமென்
மனமாளிகைபோல் ஒரு
மாடமாளிகை இல்லை
என்பது நீ அறியாத நிஜம்
நீளும் உன் அன்பின்
பிரவாகம் என்
ஆத்மாவை தாலாட்டும்
சந்தோசங்களின் சங்கீதம்
காலங்கள் தாண்டி
எனக்காக மட்டும்
ஒலிக்கட்டும் எனும்
சுயநலங்களை ஒரு தாய்
மழலையை சுமப்பதுபோல்
மனசுக்குள் சுமக்கிறேன்
எனக்காக என்
மழலையை உன் மடியில்
பத்து மாதம்
சுமக்காவிட்டலும்
எனை உன் மனதில்
பத்திரமாய் சுமப்பாயா
அன்பே..என நான் கேட்டது
மட்டும் எனக்குள் பத்திரமாய்
இருக்கின்றபோது
நீ மட்டும் ஏன்..
பற்றி எரியும் திரவமாய்
எனக்குள் வீழ்ந்து
சாம்பலாக்கினாய்?
2. வேள்விகளாய் ஒரு பிரார்த்தனை
வார்த்தைகளை கோர்த்தெடுத்து
வாழ்த்துப் பா புனைவதற்கு
காத்திருந்த வேளையிலே
காலனவன் உம்முயிரை
ஈர்த்தெடுத்து போனதனால்
இயற்றிவைத்த பாடலது
நீர்த்தழுவும் விழிவழியே
நெஞ்சதனை நனைக்குதம்மா
கழுதைக்கு புரியாத
கற்பூர வாசனையாய்
எழுத்தறிவு இல்லாத
எமனுக்கு புரியலியோ
செழுமையை கொண்டிருக்கும்
செங்கரும்பு உம்குரலின்
அமுதம்தான். அதனால்தான்
அபகரித்துக் கொண்டானோ?
வானொலி கேட்காதோர்
வரிசையிலே முன்னணியில்
தானொருவன் எமன்தானோ?
தாயுங்கள் இதழ்சுரக்க
தேனொழுகும் குரல்கேட்கா
திருந்திட்ட செவிடனோ?
மரணங்கள் பலவற்றை
மனமுருகி அறிவித்த
தருணங்கள் தனைகூட
தான்ரசிக்க வைத்தஉம்
மரணத்தின் சேதிவந்து
மனம்கலங்க விட்டபோதும்
மரணமில்லா உமதுகுரல்
மனசுக்குள்ளே வாழுமம்மா..!
கண்ணீரில் நாம்குளிக்கும்
காலமது தந்துவிட்டு
மண்விட்டு சென்றுவிட்ட
மணிக்குயிலே ராஜேஸ்வரி
பண்பான பண்பாடும்
பவ்வியமாம் உம்குரலை
விண்வழியே இனிகேட்கும்
வழியற்று விசும்புகின்றேன்
இன்னோரு ஜென்மமென்று
இருந்துதான் பிறந்தெங்கள்
இலங்கையின் வானொலியில்
இசைக்கவரும் வரையிலுமே
இன்னொருவர் உமதிடத்தில்
இருக்கமுடி யாதம்மா.
இன்னமுதம் உமதுகுரல்
இனிஎன்று கேட்போமம்மா ?
கண்வழியே கசிந்துவிழும்
கண்ணீர்வழி உமதாத்மா
பண்ணிசையில் மறைந்த்ருக்கும்
பவித்திரமாய் சாந்திபெற
தண்மனதின் துயரங்களால்
தான்வடித்த இரங்கற்பா
விண்சென்ற உமக்கெனது
வேள்விகளாய் பிரார்த்திக்கும்.
அண்மையில் காலமான எங்கள் இலங்கை வானொலியின் வானொலிக்குயில் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் அவர்களுக்கான
இரங்கற்பா..
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
கவிஞர் அஸ்மின் கவிதைகள்!
1. பாம்புகள் குளிக்கும் நதி
விண்ணில் இருப்பதனால்
சூரியன் பெறுமதி தெரிவதில்லை
மண்ணில் விழுவதினால்
மழையின் மதிப்பு குறைவதில்லை
அன்பை கொடுப்பதற்கு
அழகிய கைகள் தேவையில்லை
இன்பம் சுவைப்பதற்கு-வெறும்
உடலால் மட்டும் முடிவதில்லை
அருகில் இருப்பதனால்
காதலி அருமை புரிவதில்லை
தூரம் விலகுவதால்
காதலும் தூர்ந்து போவதில்லை
பாம்புகள் குளிப்பதினால்
நதிநீர் விஷமாய் போனதில்லை
பொறாமை இருப்பதினால்
இறைவன் எதையும் கொடுப்பதில்லை
உலகை படைப்பதற்கு
மனிதர்கள் எம்மால் முடியாது...
உலகை உடைப்பதற்கு-ஒரு
வார்த்தை மட்டும் போதுமென்பேன்
2. கடலும் கடவுளும்
நண்பர்கள் உணவுக்குள்
நஞ்சூற்றி தரும்போது...
அன்பென்று சொன்னவர்கள்
அழிப்பதற்கு வரும்போது...
பெற்றவனே பிள்ளையினை
போதையிலே தொடும்போது...
கற்றவனே மனசுக்குள்
கழிவுகளை நடும்போது...
உறவென்று வந்தவர்கள்
உதடுகளால் சுடும்போது...
வரவுக்காய் சேர்ந்தவர்கள்
வாய்க்கரிசி இடும்போது....
பொன்விளைந்த தேசத்தில்
பிணவாடை எழும்போது....
உணவின்றி ஒரு ஏழை
உலகத்தில் அழும்போது....
கடலே நீ தந்த
காயமொன்றும் பெரிதில்லை....
கடவுளே நீ எம்மை
கொன்றாலும் தவறில்லை....
இதை நீங்கள்
3. மாட்டுக்கு மாலை போடு..
காலினைப் பிடித்தேன் என்றன்
கழுத்துக்கு மாலை வேண்டாம்!
எழுத்திலே காணின் ஏதும்
எழுதுவீர் அதுவே போதும்!
வாலினை பிடிப்ப வர்தான்
வாழுவர் தெரியும் கெட்ட
தேளினை பிடித்தோர் கூட
தேம்புவர் எனவே உங்கள்
காலினைப் பிடித்தே னையா
கழுத்துக்கு மாலை வேண்டாம்!
கழுதையும் குரங்கும் மாடும்
கழுத்திலே மாலை பூண்டு…
மூலைக்கு மூலை கூடி
“முதுகினை சொரிந்து” எங்கும்
“போட்டோக்கு” பல்லைக் காட்டி
“போஸினை’’ கொடுத்து பின்னர்
எங்களை வெல்லும் கொம்பன்
எவனடா இங்கு உண்டு…?
என்றுதற் புகழ்ச்சி தன்னில்
எம்பித்தான் குதிக்கும் போது
அற்பன்நான் அவைகள் பாத
அடியிற்கு இன்னும் கீழே
ஆகையால் மாலை வாங்க
அடியேனுக் காசை யில்லை
காலினைப் பிடித்தேன் ‘வாப்பா’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!
மாண்டுநாம் மடிந்த பின்தான்
மனதினால் மாலை இடுவர்
ஈண்டிவர் போடும் மாலை
இதயத்த லல்ல வேசம்..
மாலையில் மாலை போட்டு
மாலைதான் மறையுமுன்னே
கூழையன் நாங்கள் போட்ட
“கூழுக்கு” ஆடிப் போனான…
ஆளினைப் பிடித்து வைத்தால்
ஆளலாம் என்பீர் உங்கள்
காலினைப் பிடித்தேன் ‘’வாப்பா’’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!
எலும்புக்காய் எச்சிலைக்காய்
எங்கள்நாய் வாலை ஆட்டும்
பிணமான பின்தான் உண்மை
பிரியத்தை அதுவும் காட்டும்
ஆகையால் மாலை சூட்ட
ஆருமே வராதீர் தேடி!
எழுத்திலே ஏதும் காணின்
எழுதுவீர் அதுவே கோடி!!
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
ஜுமானா ஜுனைட், இலங்கை. கவிதைகள்!
1. பேனா பேசிடும்…
காற்றில் இடைவெளிகள் தேடி
அங்கே ஓரிடம் கண்டுபிடிப்போம்
அணுக்களாய் நாமும் மாறி
அங்கு சென்று வாழ்ந்திடுவோம்…
ஆறு குளங்களும் வேண்டாம்
ஆறு சுவைகளும் வேண்டாம்
ஆறாம் விரலொன்றே போதும்
ஆறாக் காயங்கள் ஆறும்…
ஆறு நதிகளும் மற்றும்
ஓடை வயல்களும் வற்றும்
ஆறுதலாய் நாமிருக்க
ஆறாம் அறிவொன்றே போதும்…
ஆண்டுகள் நூறு செல்லும் தூரத்தை
அடைவோம் நொடி ஒன்றில் சென்று..
ஆரும் காணாத தேசத்தை
ஆள்வோம் ஒன்றாக இணைந்து…
“காலவெளிகளை”க் கடந்து செல்லுவோம்
யுகங்கள் பலவற்றைக் கண்டு கொள்ளுவோம்…
தீய வார்த்தையை விட்டு விலகுவோம்..
தூய பூமியை கட்டியெழுப்புவோம்…
கால யந்திரம் அதிலே ஏறி யாம்
“கடந்த காலங்கள்” சென்று வருவோம்…
முடிந்தால் மூன்று லட்சம் மைல்
செல்வோம் நொடியொன்றில்..
வேண்டாம் பாரபட்சங்கள்
இனியும் இந்த உலகத்தில்…
2. பீதி
யுகாந்திரமாய்த் தோன்றிய
அந்த நிமிடங்களை
நினைத்துப் பார்க்கிறேன்.
ஓவ்வொரு சுவாசங்களும்
ரணமாகச் சுட்ட
அந்த இரவு நேரத்தை
எண்ணிப் பார்க்கிறேன்..
ஓரடிக்கு முன்னால் நின்ற
ஓவ்வொரு ஜீவனும்
பார்வைகளால் சந்திக்க முடியாத
தூரங்களில்
நிற்பதைப் போல
இயற்கை
பாவனை செய்தது…
சுனாமி என்ற பீதியால்
பீடிக்கப்பட்ட
ஒவ்வொரு ஆத்மாவும்
ஒப்பாரி வைத்ததை
எண்ணிப் பார்க்கின்றேன்…
3. வாழ்த்துக்கள் கூறி….
நீ
வாழ வேண்டும்
நூறாண்டுகள்
ஆனந்தமாக –
நீ
வாழ வேண்டும்
பூக்களாக –
தினம்
பூக்கவேண்டும்
புன்னகையாக..
நீ
வாழ வேண்டும்
யாதாக –
என்றும்
சந்தோஷப்
பூவாக..
இறவா
உன் மனம் -
எதற்கும் நகை
ஒரு கணம் -
அடடா
ஏன் பணம்
என்று
நினைக்கும்
உன் குணம் -
சிறு பிள்ளை போல்
குழந்தைத் தனம் -
இவை
உனது
அணி கலன்கள்..!
நீ
வாழ வேண்டும்
நூறாண்டுகள்
ஆனந்தமாக…
நீ
ஆசை கொண்ட
கனவுகள்
பூப்பூக்க –
என்றும்
எனது
மனது
வாழ்த்துக் கூறும்..!
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடிஇராமநாதபுரம் மாவட்டம்,தமிழ்நாடு) கவிதைகள்!
1. ஊற்றாகும் மின்சாரம்
விலைவாசி உயர்வாலே
விழிபிதுங்கி நிற்குதய்யா
ஏழைபாழை – இங்கு
தொல்லையான மின்தடையால்
தூங்கித்தான் போனதய்யா
தொழிற்சாலை
நாள்முழுதும் மின்தடையால்
நகரங்கள் கூடஇப்போ
நரகமடா! – இங்கு
நாளெல்லாம் யுகமாக
நிமிடமிங்கு வருசமாக
நகருதடா!!
தொழிலெல்லாம் முடங்கிடவே
தொழிலாளி வருந்திடவே
மின்தடை – இங்கு
ஏழைகளின் உதடுகளில்
இல்லாமல் போனதய்யா
புன்னகை
சந்தையிலே கிடைக்கின்ற
சரக்காகிப் போனதய்யா
மின்சாரம்! – ஆட்டு
மந்தையைப்போல் நாமெல்லாம்
மாக்களாகிப் போனதென்ன
சமாச்சாரம்!!
மரங்களையே வெட்டுகின்றோம்
மழைபெய்ய வேண்டுமய்யா
மரநேயம்! – இனி
மரம்வெட்ட வேண்டாமே
மதம்வெட்ட வளர்ந்திடுமே
மனிதநேயம்!!
மரங்களையே வளர்த்திட்டால்
மழையிங்கு வீசுமய்யா
காற்றாக! – இனி
மரம்சிரிக்கும் மழைகுதிக்கும்
மழைநீரில் மின்சாரம்
ஊற்றாக!!
2. புத்தாண்டே வருக!
சத்தான புத்தாண்டே! – நித்தமும்
முத்தான புத்தாண்டே!!
வருகவருக நீ! – புத்துணர்வைத்
தருகதருக நீ!!
சித்திரைமாதத்தை முதலாய்க் கொண்டு – உன்
முத்திரைப்பாதத்தை தடம்பதிக்க – தமிழ்ப்
புத்தாண்டே வருகவருக! – நித்தம்
புத்தொளியைத் தருகதருக!!
இருள்விலக்கும் ஒளியாய் – வாழ்வின்
பொருள்விளக்கும் மொழியாய் – தமிழ்ப்
புத்தாண்டே வருகவருக! – நித்தம்
புத்தொளியைத் தருகதருக!!
எத்தனை மொழிகள் வந்தாலும்
பத்தரைமாற்றுத் தங்கம்போல்
மாசுமறுவற்று மங்காப்புகழுடன் – தமிழ்ப்
புத்தாண்டே வருகவருக! – நித்தம்
புத்தொளியைத் தருகதருக!!
3. தமிழ்மகளே வா!
சங்கத்தமிழ் மூன்றுபடைத்தும் – தமிழன்
தங்கச்சிமிழால் சீராட்ட – உனைத்
தரணியெல்லாம் பாராட்ட...
நீ நீடூழி வாழ்வாய் தமிழ்மகளே!
பிரபஞ்சத்தில் மாறாது உன்புகழே!!
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|